புனித யாத்திரை – கயிலயங்கிரி
பன்னீர் செல்வம் Jc.S.M on Feb 2013
சைனாவில் சாலைப்பயணம்:
சைனாவுக்குள் நுழைந்து நாம் கைலயாத்துக்குப் பயணிக்கும் லேண்ட் குரூசர் கார்களைப் பார்த்து வியந்தோம். காரணம் ஓட்டுநர் இருக்கை காரின் இடதுபுறம் உள்ளது; நம் நாட்டில் வலதுபுறம் உள்ளது. சாலைகளில் நம் நாட்டில் இடதுபுறம் (Keep Left) செல்ல வேண்டும். ஆனால் சீனாவில் வலதுபுறம் (Keep Right) செல்கின்றனர்.
அங்கும் சில இடங்களில் வாகனத் தணிக்கை, பாஸ்போர்ட் தணிக்கை செய்கின்றனர். விசா எத்தனை நாட்களுக்கு என்று பணம் செலுத்துவதை சுற்றுலா ஏற்பாட்டாளர் முடித்துவிடுகிறார்.
ஆனால், விசா காலம் முடியும் முன் சைனாவிலிருந்து திரும்பினால், விசா ரத்துக் கட்டணம் என 160 யுவான் வசூலிக்கின்றனர். உதாரணமாக, UK அல்லது USAவுக்கு ஆறு மாத விசாவில் செல்லும் பலர், ஆறு மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம். விசாவை ரத்து செய்ய எந்த நாட்டிலும் கட்டணம் வசூலிப்பதில்லை.
சீன அரசின் இந்த நடவடிக்கை வித்தியாசமாக உள்ளது.
நான்கு நாட்கள் பயணம்:
சீன நாட்டில் முதல் நாள் நியாளம் என்ற ஊரில் தங்கினோம். காஷாவிலிருந்து நியாளம் வரை சுமார் 50 கி.மீ. அருமையான பாதை. இரு மருங்கிலும் பசுமையான மரங்கள், மலைகள், ஒருபுறம் ஆறு; பாதை மலை மீது உயர்ந்து கொண்டே சென்றது.
நியாளத்தின் உயரம் சுமார் 12500 அடியாகும். குளிர் என்பதால் கட்டாயம் உல்லன் ஸ்வெட்டர் அணிய அறிவுறுத்தினர். கைகளில் உல்லன் கையுறை, கால்களில் ஷாக்ஸ் அணிந்து ஷு போடுமாறு கூறினர். காதுகளுக்கு பஞ்சு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். ஷீ ஷா பாங்க்மா ஓட்டல் என்ற விடுதியில் நியாளத்தில் தங்கினோம்.
ஒவ்வொரு அறையிலும் 5 படுக்கை அல்லது 6 படுக்கை என இருந்தது. பொதுவான பாத்ரூம் வசதி. ஒவ்வொரு குழுவுக்கும் தனி கிச்சன் அறை ஒதுக்குகின்றனர். சமையல் பாத்திரங்கள், மளிகை சாமான்கள், அடுப்பு, சமையல் எரிவாயு (Gas) ஆகியவைகளை லாரியிலிருந்து இறக்கி, விரைவில் சமைத்துவிடுகின்றனர்.
மேலும் ஒருநாள் எல்லா யாத்ரிகர்களும் அந்த ஊரில் தங்க வைக்கப்படுகின்றனர். கடைவீதிக்கு நடைபயணம், மலைமீது ஏறிப்பழகும் பயிற்சி என அந்தக் குளிர்ப்பகுதிக்கு நம் உடலைத் தயார்படுத்தினர்.
அன்பர்கள் சிவபூஜை செய்வது, சிவபுராணம் படிப்பது (ஒரு குடும்பம் சீட்டு விளையாண்டது) கடை வீதிக்கு ஷாப்பிங் எனப் பொழுது கழிந்தது.
சாகா:
மறுநாள் காலை பல்துலக்கி முகம் கழுவித் தயாரானோம். அந்த விடுதியிலேயே ரூ. 150 கொடுத்து இரண்டுபேர் வெந்நீர் ஷவரில் குளித்தனர். காலை உணவு முடித்து பயணம் ஆரம்பித்தது. வழியில் 100 கி.மீ. தூரத்துக்கொருமுறை வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுத்து, சிரம பரிகாரம் (யாத்ரிகர்கள் சிறுநீர் கழிப்பது, வாகன ஓட்டுனர்கள் புகைபிடிப்பது) செய்து புறப்படுகின்றனர்.
தயார் செய்து எடுத்து வந்த மதிய உணவை ஓர் ஊரில் பரிமாறினர். நன்றாக இருந்தது. நீலக்கலர் ஏரி ஒன்றை வழியில் பார்த்தோம். ஏரியின் பெயர் பிக்கு (Pickoo) என்றனர். அதன்பின் 70 கி.மீ. மண்சாலை; புழுதி பறந்தது. அதன் முடிவில் பிரம்மபுத்திரா (திபேத்தியர்கள் சாங்போ என்று அழைக்கின்றனர்) நதி சிறிய அளவில் ஓடுகிறது. தாண்டிய உடனே சாகா நகரம். உயரம் சுமார் 15,000 அடி.
கடைவீதி – இரு தெருக்கள் தான். காவல் நிலையம், மருத்துவமனை, பல டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், தனியார் குளிக்குமிடங்கள் எனப் பலவும் கண்ணில்பட்டன. சாகா ஓட்டல் என்ற விடுதியில் தங்கினோம்.
அறைக்கு 4 பேர்; 2 கட்டில்; கீழே இரு கூடுதல் படுக்கை வசதி. கட்டிலில் மின் இணைப்பு கொடுத்து சூடாக இருக்குமாறு செய்துள்ளனர். குளிருக்கு இதமாக இருந்தது. அட்டாச்டு பாத் ரூம். ஆனால் சீன நேரப்படி காலை 8 – 12.30 மணி இரவு. 8 – 10 மணி ஆகிய நேரங்களில் மட்டும் பாத்ரூமில் தண்ணீரே வரும். வெந்நீரும் வரும்.
சாகாவில் தனியார் நெட்போன்கள் உள்ளன. நிமிடத்துக்கு ரூ. 40 – சாகாவில் சீனா மிலிட்டரி கேம்ப் நாங்கள் தங்கிய அறைக்கு அருகில் இருந்ததால் ஜன்னல் வழியாக போட்டோ எடுத்தால் ஆபத்து என்று எச்சரித்தனர். தங்கிய அறையில் பாத்ரூமில் உள்ள துண்டுகளை முதலில் சரிபார்க்கச் சொன்னார்கள். கறை இருந்தாலோ, கிழிந்திருந்தாலோ முன் கூட்டியே தகவல் கூறிவிட வேண்டும்.
இல்லாவிட்டால் ரூமைக் காலி செய்யும்போது சோதனை செய்து, அந்தத் துண்டின் விலையை அபராதமாக வசூலித்து விடுவார்களாம். உஷாராக ஒவ்வொரு அறைக்கும் 100 யுவான் அந்த அறையில் தங்குவோரிடம் டெபாசிட்டாக லாட்ஜில் வசூலிக்கின்றனர். காலி செய்தபின், சரியாக இருந்தால், அத்தொகையைத் திருப்பிக் கொடுப்பார்கள். எங்கள் குழுவினர் அனைவருமே டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற்றோம்.
மூன்று பேர் உடல்நிலை மோசமாக இருந்ததால், உள்ளூர் டாக்டரை வரவழைத்து, அறையில் டிரிப்ஸ் ஏற்றி, உடல் குணமாக 10 சிறு பாட்டில் (ஊசி மருந்து போன்றது) கொடுத்தார்கள். தினமும் 2 முறை அதைக் குடிக்க வேண்டுமாம். மருத்துவர் கட்டணம் 450 யுவான் தான். டிராவல் இன்சூரன்ஸ் செய்திருந்தால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். உரிய பில்கள் தருகின்றனர்.
பர்யாங்:
காலை உணவுக்குப் பின் அவரவர் காரில் அமர்ந்து பயணம் துவங்கினோம். சுமார் 285 கி.மீ. தூரம். வழியில் மணல் குன்றுகள். காற்றில் அலை அலையாக மணல் துகள்கள் தார்ச்சாலைகளில் பறந்தன. ஆங்காங்கே ஒரு வீடும் யாக் எருமைக் கொட்டிலும் இருந்தன. சில இடங்களில் குதிரைகளும் மேய்ந்தன.
வழியில் மதிய உணவு கொடுத்தனர். விரைவில் பர்யாங் என்ற இடம் சென்றோம். உயரம் சுமார் 15,000 அடி. சிறிய ஊர், மின்சார வசதி இல்லை. சீ சா பங்கா ஓட்டல் என்ற கட்டிடத்தில் தங்கினோம். ஓர் அறையில் நான்கு கட்டில்கள், மெத்தை, தலையாணை, போர்த்திக் கொள்ள கெட்டியான ரசாய் ஒன்று இருந்தன. அறையில் ஒரு சிறு ஸ்டூல் இருந்தது.
பாத்ரூம் எல்லாம் பொதுவில் இருந்தது. சரியாகப் பராமரிப்பதில்லை. இருட்டு இரவு 8 மணியளவில் பரவுகிறது. சுமார் 3 மணிநேரம் மட்டும் ஜெனரேட்டர் மூலம் மின்விளக்கு வசதி செய்து தருகின்றனர். அதன்பின் நாம் கையில் எடுத்துச் சென்றுள்ள டார்ச் லைட் தான் துணை.
அதிகாலை 3 மணிக்கு எழுந்து ஆகாயத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மிக அருகில் இருப்பது போல் ஜொலித்தன. அதிகாலை நேரம் மின்விளக்கு வசதி வழங்குவதில்லை. இங்கு மணல் குன்றுகள் உள்ளன. சென்று ஏறி இறங்கி வந்தோம். உள்ளூர் முதியவர்கள் அறைக்கு வந்து காசு கேட்கின்றனர்.
மானஸரோவர் ஏரி:
மறுநாள் காலை பயணத்தைத் துவங்கினோம். வழியில் செக்போஸ்ட். வாகனங்கள் ஏராளமாய் நின்றிருந்தன. பாஸ்போர்ட் சோதனை செய்து அனுப்பினர். அதன்பின் ஓர் ஓடை அருகில் மதிய உணவு சாப்பிட்டோம். அரைமணி நேரப் பயணத்தில் மானஸரோவர் ஏரியும், அதன் பின்புலத்தில் கைலாய மலையையும் பார்த்து மகிழ்ந்தோம். இது தென்முக தரிசனம் என்றனர்.
மானஸரோவர் ஏரிக்குச் செல்லும் மண்பாதையில் ஒரு பேரியர் வைத்துள்ளனர். சோதனை முடித்து உரிய கட்டணம் வசூலித்த பின்னரே திறந்துவிடுகின்றனர். மணல் பாதையில் லேண்ட் குரூசர் கார்கள் ஏரிக்கரைக்கு அருகில் சென்றன. அந்த இடத்திலிருந்து ஏரி ஒரு கடல்போல் கரையே இல்லாமல் தெரிந்தது. வலதுபுறம் மலை அடுக்குகளின் பின்னால் ஒரு கோன் ஐஸ்கிரீமின் மேற்பகுதியிலுள்ள சிறிய கோன் போல் கையிலயங்கிரி தெரிந்தது.
0 comments Posted in Articles