– 2013 – February | தன்னம்பிக்கை

Home » 2013 » February (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    புனித யாத்திரை – கயிலயங்கிரி

    சைனாவில் சாலைப்பயணம்:
    சைனாவுக்குள் நுழைந்து நாம் கைலயாத்துக்குப் பயணிக்கும் லேண்ட் குரூசர் கார்களைப் பார்த்து வியந்தோம். காரணம் ஓட்டுநர் இருக்கை காரின் இடதுபுறம் உள்ளது; நம் நாட்டில் வலதுபுறம் உள்ளது. சாலைகளில் நம் நாட்டில் இடதுபுறம் (Keep Left) செல்ல வேண்டும். ஆனால் சீனாவில் வலதுபுறம் (Keep Right) செல்கின்றனர்.
    அங்கும் சில இடங்களில் வாகனத் தணிக்கை, பாஸ்போர்ட் தணிக்கை செய்கின்றனர். விசா எத்தனை நாட்களுக்கு என்று பணம் செலுத்துவதை சுற்றுலா ஏற்பாட்டாளர் முடித்துவிடுகிறார்.
    ஆனால், விசா காலம் முடியும் முன் சைனாவிலிருந்து திரும்பினால், விசா ரத்துக் கட்டணம் என 160 யுவான் வசூலிக்கின்றனர். உதாரணமாக, UK அல்லது USAவுக்கு ஆறு மாத விசாவில் செல்லும் பலர், ஆறு மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம். விசாவை ரத்து செய்ய எந்த நாட்டிலும் கட்டணம் வசூலிப்பதில்லை.
    சீன அரசின் இந்த நடவடிக்கை வித்தியாசமாக உள்ளது.

    நான்கு நாட்கள் பயணம்:
    சீன நாட்டில் முதல் நாள் நியாளம் என்ற ஊரில் தங்கினோம். காஷாவிலிருந்து நியாளம் வரை சுமார் 50 கி.மீ. அருமையான பாதை. இரு மருங்கிலும் பசுமையான மரங்கள், மலைகள், ஒருபுறம் ஆறு; பாதை மலை மீது உயர்ந்து கொண்டே சென்றது.
    நியாளத்தின் உயரம் சுமார் 12500 அடியாகும். குளிர் என்பதால் கட்டாயம் உல்லன் ஸ்வெட்டர் அணிய அறிவுறுத்தினர். கைகளில் உல்லன் கையுறை, கால்களில் ஷாக்ஸ் அணிந்து ஷு போடுமாறு கூறினர். காதுகளுக்கு பஞ்சு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். ஷீ ஷா பாங்க்மா ஓட்டல் என்ற விடுதியில் நியாளத்தில் தங்கினோம்.
    ஒவ்வொரு அறையிலும் 5 படுக்கை அல்லது 6 படுக்கை என இருந்தது. பொதுவான பாத்ரூம் வசதி. ஒவ்வொரு குழுவுக்கும் தனி கிச்சன் அறை ஒதுக்குகின்றனர். சமையல் பாத்திரங்கள், மளிகை சாமான்கள், அடுப்பு, சமையல் எரிவாயு (Gas) ஆகியவைகளை லாரியிலிருந்து இறக்கி, விரைவில் சமைத்துவிடுகின்றனர்.
    மேலும் ஒருநாள் எல்லா யாத்ரிகர்களும் அந்த ஊரில் தங்க வைக்கப்படுகின்றனர். கடைவீதிக்கு நடைபயணம், மலைமீது ஏறிப்பழகும் பயிற்சி என அந்தக் குளிர்ப்பகுதிக்கு நம் உடலைத் தயார்படுத்தினர்.
    அன்பர்கள் சிவபூஜை செய்வது, சிவபுராணம் படிப்பது (ஒரு குடும்பம் சீட்டு விளையாண்டது) கடை வீதிக்கு ஷாப்பிங் எனப் பொழுது கழிந்தது.
    சாகா:
    மறுநாள் காலை பல்துலக்கி முகம் கழுவித் தயாரானோம். அந்த விடுதியிலேயே ரூ. 150 கொடுத்து இரண்டுபேர் வெந்நீர் ஷவரில் குளித்தனர். காலை உணவு முடித்து பயணம் ஆரம்பித்தது. வழியில் 100 கி.மீ. தூரத்துக்கொருமுறை வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுத்து, சிரம பரிகாரம் (யாத்ரிகர்கள் சிறுநீர் கழிப்பது, வாகன ஓட்டுனர்கள் புகைபிடிப்பது) செய்து புறப்படுகின்றனர்.
    தயார் செய்து எடுத்து வந்த மதிய உணவை ஓர் ஊரில் பரிமாறினர். நன்றாக இருந்தது. நீலக்கலர் ஏரி ஒன்றை வழியில் பார்த்தோம். ஏரியின் பெயர் பிக்கு (Pickoo) என்றனர். அதன்பின் 70 கி.மீ. மண்சாலை; புழுதி பறந்தது. அதன் முடிவில் பிரம்மபுத்திரா (திபேத்தியர்கள் சாங்போ என்று அழைக்கின்றனர்) நதி சிறிய அளவில் ஓடுகிறது. தாண்டிய உடனே சாகா நகரம். உயரம் சுமார் 15,000 அடி.
    கடைவீதி – இரு தெருக்கள் தான். காவல் நிலையம், மருத்துவமனை, பல டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், தனியார் குளிக்குமிடங்கள் எனப் பலவும் கண்ணில்பட்டன. சாகா ஓட்டல் என்ற விடுதியில் தங்கினோம்.
    அறைக்கு 4 பேர்; 2 கட்டில்; கீழே இரு கூடுதல் படுக்கை வசதி. கட்டிலில் மின் இணைப்பு கொடுத்து சூடாக இருக்குமாறு செய்துள்ளனர். குளிருக்கு இதமாக இருந்தது. அட்டாச்டு பாத் ரூம். ஆனால் சீன நேரப்படி காலை 8 – 12.30 மணி இரவு. 8 – 10 மணி ஆகிய நேரங்களில் மட்டும் பாத்ரூமில் தண்ணீரே வரும். வெந்நீரும் வரும்.
    சாகாவில் தனியார் நெட்போன்கள் உள்ளன. நிமிடத்துக்கு ரூ. 40 – சாகாவில் சீனா மிலிட்டரி கேம்ப் நாங்கள் தங்கிய அறைக்கு அருகில் இருந்ததால் ஜன்னல் வழியாக போட்டோ எடுத்தால் ஆபத்து என்று எச்சரித்தனர். தங்கிய அறையில் பாத்ரூமில் உள்ள துண்டுகளை முதலில் சரிபார்க்கச் சொன்னார்கள். கறை இருந்தாலோ, கிழிந்திருந்தாலோ முன் கூட்டியே தகவல் கூறிவிட வேண்டும்.
    இல்லாவிட்டால் ரூமைக் காலி செய்யும்போது சோதனை செய்து, அந்தத் துண்டின் விலையை அபராதமாக வசூலித்து விடுவார்களாம். உஷாராக ஒவ்வொரு அறைக்கும் 100 யுவான் அந்த அறையில் தங்குவோரிடம் டெபாசிட்டாக லாட்ஜில் வசூலிக்கின்றனர். காலி செய்தபின், சரியாக இருந்தால், அத்தொகையைத் திருப்பிக் கொடுப்பார்கள். எங்கள் குழுவினர் அனைவருமே டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற்றோம்.
    மூன்று பேர் உடல்நிலை மோசமாக இருந்ததால், உள்ளூர் டாக்டரை வரவழைத்து, அறையில் டிரிப்ஸ் ஏற்றி, உடல் குணமாக 10 சிறு பாட்டில் (ஊசி மருந்து போன்றது) கொடுத்தார்கள். தினமும் 2 முறை அதைக் குடிக்க வேண்டுமாம். மருத்துவர் கட்டணம் 450 யுவான் தான். டிராவல் இன்சூரன்ஸ் செய்திருந்தால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். உரிய பில்கள் தருகின்றனர்.
    பர்யாங்:
    காலை உணவுக்குப் பின் அவரவர் காரில் அமர்ந்து பயணம் துவங்கினோம். சுமார் 285 கி.மீ. தூரம். வழியில் மணல் குன்றுகள். காற்றில் அலை அலையாக மணல் துகள்கள் தார்ச்சாலைகளில் பறந்தன. ஆங்காங்கே ஒரு வீடும் யாக் எருமைக் கொட்டிலும் இருந்தன. சில இடங்களில் குதிரைகளும் மேய்ந்தன.
    வழியில் மதிய உணவு கொடுத்தனர். விரைவில் பர்யாங் என்ற இடம் சென்றோம். உயரம் சுமார் 15,000 அடி. சிறிய ஊர், மின்சார வசதி இல்லை. சீ சா பங்கா ஓட்டல் என்ற கட்டிடத்தில் தங்கினோம். ஓர் அறையில் நான்கு கட்டில்கள், மெத்தை, தலையாணை, போர்த்திக் கொள்ள கெட்டியான ரசாய் ஒன்று இருந்தன. அறையில் ஒரு சிறு ஸ்டூல் இருந்தது.
    பாத்ரூம் எல்லாம் பொதுவில் இருந்தது. சரியாகப் பராமரிப்பதில்லை. இருட்டு இரவு 8 மணியளவில் பரவுகிறது. சுமார் 3 மணிநேரம் மட்டும் ஜெனரேட்டர் மூலம் மின்விளக்கு வசதி செய்து தருகின்றனர். அதன்பின் நாம் கையில் எடுத்துச் சென்றுள்ள டார்ச் லைட் தான் துணை.
    அதிகாலை 3 மணிக்கு எழுந்து ஆகாயத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மிக அருகில் இருப்பது போல் ஜொலித்தன. அதிகாலை நேரம் மின்விளக்கு வசதி வழங்குவதில்லை. இங்கு மணல் குன்றுகள் உள்ளன. சென்று ஏறி இறங்கி வந்தோம். உள்ளூர் முதியவர்கள் அறைக்கு வந்து காசு கேட்கின்றனர்.
    மானஸரோவர் ஏரி:
    மறுநாள் காலை பயணத்தைத் துவங்கினோம். வழியில் செக்போஸ்ட். வாகனங்கள் ஏராளமாய் நின்றிருந்தன. பாஸ்போர்ட் சோதனை செய்து அனுப்பினர். அதன்பின் ஓர் ஓடை அருகில் மதிய உணவு சாப்பிட்டோம். அரைமணி நேரப் பயணத்தில் மானஸரோவர் ஏரியும், அதன் பின்புலத்தில் கைலாய மலையையும் பார்த்து மகிழ்ந்தோம். இது தென்முக தரிசனம் என்றனர்.
    மானஸரோவர் ஏரிக்குச் செல்லும் மண்பாதையில் ஒரு பேரியர் வைத்துள்ளனர். சோதனை முடித்து உரிய கட்டணம் வசூலித்த பின்னரே திறந்துவிடுகின்றனர். மணல் பாதையில் லேண்ட் குரூசர் கார்கள் ஏரிக்கரைக்கு அருகில் சென்றன. அந்த இடத்திலிருந்து ஏரி ஒரு கடல்போல் கரையே இல்லாமல் தெரிந்தது. வலதுபுறம் மலை அடுக்குகளின் பின்னால் ஒரு கோன் ஐஸ்கிரீமின் மேற்பகுதியிலுள்ள சிறிய கோன் போல் கையிலயங்கிரி தெரிந்தது.

    உனக்குள்ளே உலகம்-33

    பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

    “நீ எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் சேரப்போகிறாய்”.
    “சென்னையிலுள்ள இந்தக் கல்லூரிதான் சிறந்தது”.
    “அந்தக் கல்லூரியில் படித்தால் நிச்சயமாக வேலைவாய்ப்பு கிடைக்கும்”.
    “எந்தக் கல்லூரி வேலை தருமோ அந்தக் கல்லூரியில்தான் நான் சேர்ந்து படிப்பேன்”.

    இப்படி பல்வேறு உரையாடல்களை பிளஸ் 2 தேர்வு முடிந்தபின்பு அதிகமாகக் கேட்கலாம். குறிப்பாக – பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ – மாணவிகள் பலர் பொறியியல் படிப்பில் எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பது எப்படி? எந்த கல்லூரியில் சேர்ந்து படிப்பது? என்ற குழப்ப மனநிலையோடு இருப்பார்கள். அவர்களின் நண்பர்கள் சில குறிப்பிட்ட பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும்படி ஆலோசனை சொல்வார்கள். பெற்றோர்களில் சிலர் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவைத்தான் பிள்ளைகள் தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். தான் படித்த பள்ளியின் ஆசிரியர்களும், உடன்படித்த மாணவர்களும் இன்னொரு பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கும்படி வற்புறுத்துவார்கள். இந்தநிலையில் மனகுழப்பம் அதிகமாகிவிடும்.

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தபின்பு இந்தக் குழப்பம் அதிகமாகிவிடும். எனவே பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான தகவல்களையெல்லாம் சேகரித்து வைத்துக்கொண்டால் இந்தக் குழப்பத்தை எளிதில் தவிர்த்துவிடலாம். அதுமட்டுமல்லாமல் மாணவ – மாணவிகளின் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப சிறந்த கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கவும் நல்ல வாய்ப்புகள் உள்ளது.

    சிறந்த பொறியியல் கல்லூரியையும், பாடப்பிரிவையும் தேர்ந்தெடுப்பது எப்படி? என்பதைப்பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

    1. ஆர்வத்தை அதிகமாக்குங்கள்

    நீங்கள் எந்தப் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க விரும்புகிறீர்களோ அந்தப் பாடப்பிரிவை பற்றிய தகவல்களைச் சேகரிப்பதில் ஆர்வத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் மெக்கனிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க விரும்பினால் அந்தப் பாடப்பிரிவில் இடம்பெறும் பாடங்கள் என்னென்ன? என்பதை முதலிலேயே தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். மெக்கனிக்கல் இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட பாடப் புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். சில முக்கிய இணையதளங்களில் இந்தப் பாடபுத்தகம் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொள்ளலாம். இதுதவிர மெக்கனிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரிகள் ஆண்டுதோறும் தமிழகத்தில் எத்தனைபேர் உருவாகுகிறார்கள். எந்தெந்த கல்லூரிகளில் இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது என்ற தகவல்களையும் சேகரிக்கலாம்.

    2. தகுதியைத் தெரிந்துகொள்ளுங்கள்
    ஒரு பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே அந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதி நம்மிடம் இருக்கிறதா என்பதைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டும். பொறியியல் படிப்பில் சில பாடப்பிரிவுகள் எளிதாகத் தோன்றலாம். வேறுசில பாடப்பிரிவுகள் கடினமாக இருக்கும். எனவே உங்கள் தகுதியை நீங்கள் தெரிந்துகொள்ளாமல் கடினமான பாடத்தைத் தேர்ந்தெடுக்கவா? எளிமையான பாடத்தைத் தேர்ந்தெடுக்கவா? என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

    உதாரணமாக – தாங்கள் போட்டிருக்கும் ஆடைகள் அழுக்காகாமல் பொறியியல் பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்று சிலர் நினைக்கலாம். அவர்கள் குளுகுளு ஏ.சி. அறையில் இருந்து கற்பிக்கப்படும் பாடங்களான கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜியிரிங், டெலி கம்யூனிகேஷன் போன்ற பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

    உடல் உழைப்புடன் கடின உழைப்புக்குத் தயாராக இருக்கும் மாணவர்கள் இயந்திரங்களுடன் அதிகநேரம் செலவிடும் வகையில் அமைக்கப்பட்ட மெக்கானிக்கல் இன்ஜினியரிங், புரொடக்ஷன் இன்ஜினியரிங், மெட்டீரியல் இன்ஜினியரிங், மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங் – போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.

    3. பெர்சனாலிட்டியைப் புரிந்துகொள்ளுங்கள்

    உங்களின் பெர்சனாலிட்டி எனப்படும் ஆளுமைத் தன்மையை புரிந்துகொள்வதன்மூலம் சரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் குண நலன்கள் என்னென்ன? உங்கள் திறமைகள் என்னென்ன? – என்பதை புரிந்துகொண்டால் இந்தப் படிப்பு என் குணத்திற்கு ஏற்றாற்போல அமையுமா? என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளலாம். சிலருக்கு ‘ஒவ்வாமை’ எனப்படும் ‘அலர்ஜி’ இருக்கலாம். இவர்கள் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்தால் இவர்களுக்கு அந்தப் படிப்பும் அலர்ஜியாகிவிடும் அல்லவா!

    4. தகவல்கள் கேட்கத் தயங்காதீர்கள்

    புதிய பொறியியல் பட்டதாரிகள்
    எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்ற தகவல்களை நீங்கள் சரியான நபர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் குறிப்பாக புதிதாக வேலையில் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளுடன் கலந்து பேசலாம். ஏனென்றால் நீங்கள் விரும்புகின்ற பாடப்பிரிவு வேலையைப் பெறுவதற்கு ஏற்றவகையில் அமைகிறதா? என்பதைத் தெளிவாக சொல்ல இயலும். அதுமட்டுமல்லாமல் கல்லூரியில் நடத்தப்படும் சிறப்பு பயிற்சிகள் ஸ்பெஷல் டிரெயின் (Special Training), ஆளுமை வளர்ச்சி பயிற்சிகள் (Personality Development Course) மற்றும் வளாக நேர்முகத் தேர்வு (Campus Interview) ஆகியவற்றைப் பற்றிய தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் விரும்பும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து படித்து பட்டதாரிகளாகி இன்று நிறுவனங்களில் சுமார் 7 வருடங்களுக்கும்மேல் அனுபவமிக்க பொறியாளராக பணிபுரிபவர்களைச் சந்தியுங்கள்.

    அனுபவம் வாய்ந்த பட்டதாரிகள்

    அவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது புதிதாய் பணியில்சேரும் பொறியாளர்களுடன் என்னென்ன? தகுதிகளையும், திறமைகளையும் தொழில் நிறுவனங்களில் எதிர்பார்க்கிறார்கள்? என்பதைத் தெளிவாக உங்களுக்கு விளக்குவார்கள். இதன்மூலம் நீங்கள் உங்களது திறமைகளைப் பகுத்தாய்வுசெய்து அந்தப் பாடப்பிரிவிற்கு ஏற்றவகையில் உங்கள் மனப்பாங்கை மாற்றிக்கொள்ள இயலும்.

    கல்வி ஆலோசகர்கள்

    தரமான கல்வி ஆலோசகர்களைச் சந்தித்து பொறியியல் படிப்பு பற்றிய தரமான தகவல்களை சரியான முடிவுகள் எடுப்பது எளிதாகும்.

    5. கல்லூரிகளைத் தேர்ந்தெடுங்கள்

    தமிழகத்தில் சுமார் 500 க்குமேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பொறியியல் படிப்புகளை நடத்திவருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் உங்களுக்குப்பிடித்த சுமார் 20 கல்லூரிகளைத் தேர்ந்தெடுங்கள் அந்தக் கல்லூரிகளின் தரம் பற்றியும், கட்டமைப்பு பற்றியும் தீவிரமாக விசாரித்து தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

    கல்லூரி நகரத்தில் இருக்கிறதா? அல்லது கிராமபுரத்தில் அமைந்திருக்கிறா என்பதைப்பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். கல்லூரி நகரத்தைவிட்டு பல கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்தால் கல்லூரிக்கு தினமும் சென்றுவருவதற்கே தினமும் சுமார் 4 அல்லது 5 மணி நேரத்தை நீங்கள் செலவழிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும். இந்தச் சூழலில் பாடத்தைப் படிப்பதற்கான நேரம் மிகவும் குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல் பாடத்தோடு தொடர்புடைய பிற செயல்களில் (Extra Curricular Activities) பங்குபெறுவதற்கும் வாய்ப்புகள் குறைந்துவிடும். எனவே நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உங்கள் கல்லூரி அமையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அல்லது அந்தக் கல்லூரியிலுள்ள விடுதி வசதியைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

    6. தரமதிப்பீடு (Accreditation)

    நீங்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளை தரமதிப்பீடு செய்யும் அமைப்புகளான “நேஷனல் போர்டு ஆஃப் அக்ரிடேஷன்” (National Board of Accreditation-NBA), “நேஷனல் அசெஸ்மெண்ட் அன்ட் அக்ரிடேஷன் கவுன்சில்” (National Assessment and Accreditation Council-NAAC), “ஆல் இன்டியா கவுன்சில் ஃபார் டெக்னிக்கல் எஜூகேஷன்” (All India Council for Technical Education) போன்ற அமைப்புகளின் அங்கீகாரத்தை முறைப்படி பெற்றிருக்கிறார்களா என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இதற்கு நீங்கள் இணையதள உதவியுடன் தகவல்களைச் சேகரிக்கலாம். NBA பற்றித் தெரிந்துகொள்ள www.nba-aicte.ernet.in என்ற இணையதள முகவரியிலும், NAAC பற்றித் தெரிந்துகொள்ள பற்றித் தெரிந்துகொள்ள http://naacindia.org/ என்ற இணைய தள முகவரியிலும் AICTE பற்றித் தெரிந்துகொள்ள www.aicte.ernet.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

    7. கட்டமைப்பு வசதிகள் (Infrastructure Facilities)

    நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொறியியல் கல்லூரியின் உள்கட்டமைப்பு பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். அந்தக் கல்லூரியின் வகுப்பறைகள், நிர்வாகத்திற்கு பயன்படும் கட்டிடங்கள், கம்ப்யூட்டர் வசதிகள், நூலக வசதிகள் போன்றவற்றை விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள். இணையதளத்தில் கல்லூரிகள் வெளியிடும் வண்ணமயமான கட்டிடங்களையும் சிறிய குறிப்பேடுகளில் கல்லூரி வெளியிடும் கட்டிட படங்களையும் பார்த்து முடிவுக்கு வருவது நல்லதல்ல. நேரில் சென்று பார்ப்பதுதான் நல்லது.

    8. தரமிக்க ஆசிரியர்கள்

    நீங்கள் விரும்பும் கல்லூரியில் தரமிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பணிபுரிகிறார்களா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். அந்தக் கல்லூரிக்குவந்து சிறப்பு ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். சில கல்லூரிகளில் சில பாடப்பிரிவில் மட்டும் சிறந்த ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள். நீங்கள் விரும்பும் பாடப்பிரிவில் அனுபவமிக்க ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்களா என்பதைப்பற்றியும் தீர விசாரியுங்கள்.

    9. வேலைவாய்ப்பு

    எங்கள் கல்லூரியில் படித்த இத்தனைபேருக்கு நாங்கள் வேலை கொடுத்திருக்கிறோம் என்று சில கல்லூரிகள் பட்டியல் தருவார்கள். அவை உண்மைதானா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். தரமிக்க ஆசிரியர்கள் இருந்தால்தான் தரமான பொறியாளர்களை உருவாக்கமுடியும் என்பதால் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் பயிற்சிதரும் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது சாலச்சிறந்ததாகும்.

    10. கல்விக் கட்டணங்கள்

    நீங்கள் விரும்பும் கல்விக் கட்டணம் எவ்வளவு? இதர கட்டணங்கள் எவ்வளவு? என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். சில கல்லூரிகள் மிக குறைந்த கல்விக்கட்டணத்தை தாங்கள் வசூலிப்பதாக விளம்பரம் செய்வார்கள். ஆனால் 2 மாதத்திற்கு ஒருமுறை அந்தக் கட்டணத்தை வசூலித்து பெருந்தொகையை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்பதை பாதிக்கப்பட்ட சில பொறியியல் பட்டதாரிகள் தெரிவிக்கிறார்கள். எனவே கல்விக் கட்டணம் பற்றி தெளிவான தகவல்களை திரட்டிக்கொள்ளுங்கள்.

    11. உங்கள் திறமைகளை கணித்துக்கொள்ளுங்கள்

    பொறியியல் பாடம் படிப்பதற்கு அடிப்படையாக கணிதத்திறன் (Mathematical Skills), விரைவில் கற்றுக்கொள்ளும் திறன் (Quick Learning Skills), பகுத்தாய்வு செய்யும் திறன் (Analytical Skill), தகவல்தொடர்பு திறன் (Communication Skill), காரணம் அறியும் திறன் (Reasoning Skill), பகுத்தறிவு திறன் (Common Sense) போன்ற திறமைகள் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். அதன்பின்பு பொறியியல் படிப்பில் சேர்வது நல்லது.

    மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளின்படி அனைத்து தகவல்களையும் சேகரித்து நல்ல முடிவை எடுத்துக்கொண்டால் நல்ல பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நல்ல பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம். கல்லூரிக் கட்டண செலவையும் மிச்சப்படுத்தலாம்.

    எந்த கல்லூரியில் சேர வேண்டும் என்று முடிவெடுத்தாலும் அந்த முடிவு நல்ல முடிவாக அமையவேண்டுமென்றால் பெற்றோர் – மாணவ – மாணவிகள் ஆகியோர் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.

    நான் ஏன் வாழக்கூடாது?

    தன்னம்பிக்கையே வாழ்க்கையில் நம்மை அடுத்த உயரத்துக்கு அழைத்துச் செல்வது..
    “தற்கொலை செய்துகொள்வதற்கு
    வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்?
    வாழ்ந்துதான் பாரேன்..” என்ற தன்னம்பிக்கை வரிகள் சிந்திக்கத்தக்கன.

    Continue Reading »

    விரிந்த உள்ளம் வேண்டும்…

    நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற ஆற்றலும், தூய்மையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கின்றன. என்னால் முடியும் என்று நினைத்து செயலாற்றினால் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள்.

    Continue Reading »

    Protected: February 2013

    This content is password protected. To view it please enter your password below:

    நாமே பெரியவர்கள்

    வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு, நாம் செய்யும் தவறுகள் தான் காரணமாக அமைகின்றன. இவை இரண்டு விதங்களில் வருகின்றன. ஒன்று தெரிந்தே செய்வது. மற்றொன்று தெரியாமல் செய்வது.
    முதல் வகைச் சிக்கல் கண்ணைத் திறந்து கொண்டே பள்ளத்தில் விழுவது. அடுத்தது நம்முடைய அறிவு அறிவுறுத்திய போதும் அதனை அலட்சியப்படுத்திவிட்டு செயலைச் செய்வது. அலட்சியப்படுத்தாமல் அறிவுடன் மனச்சாட்சியின்படி நடந்தால் இந்த தவறு ஏற்படாமல் தடுத்துவிட முடியும்.
    அடுத்தது நம்மை அறியாமலே செய்கின்ற தவறு. இதனை உடனடியாக மாற்றிக்கொள்ள முடியும். அறியாமல் செய்யப்படும் தவறுகளை நல்ல அறிவுரை கேட்டு, பெரியவர்களின் அனுபவங்களை அறிந்து திருத்திக் கொள்ள முடியும்.
    வாழ்க்கையில் ஏற்படும் தவறுகளில் இருந்து விடை பெற முடியும். அதற்கு ஆன்றோர்களின் அறிவுரையை அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களுடைய கருத்துப்படி நடந்தால் சிக்கல்கள் வரவிடாமல், வளரவிடாமல் தடுத்துவிட முடியும். நம்முடைய கவனத்தையும் மீறி சிக்கல் தோன்றிவிட்டால் துணிவுடன் சமாளிக்க முன்வர வேண்டும்.
    ஒன்றை மட்டும் நினைவில் வைக்க வேண்டும். அது என்னவென்றால், சிக்கல் இல்லாத வாழ்க்கையே கிடையாது என்பதை உணர்ந்து கொள்வது அவசியம். அதனை எதிர்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
    முடிந்தால் அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். நம்முடைய சிக்கல் எல்லாம் தீர்வு காணக்கூடியவை தான். அவற்றை சமாளிக்கும் விதமும் நம்முடைய மனதிற்குத் தெரியும். நம்மைவிட சிக்கல் பெரியது அல்லÐ நாம் மனம் வைத்துச் செயல்பட்டால் சிக்கலை ஒரே அடியாக அடித்து சிக்கலை விரட்டிவிட முடியும்.
    நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஒருபோதும் நம்மைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது. அப்படித் தங்களை உயர்த்திக் கொண்டவர்கள் தான் மகத்தான சாதனையைச் செய்து இருக்கிறார்கள். “சிறுகதை இலக்கணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால், என்னுடைய சிறுகதைகளைப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்” என்றார் புதுமைப்பித்தன். தன்னை உயர்வாக எண்ணியபடியால் தான் இந்த வார்த்தைகள் அவரிடமிருந்து வந்தன.
    “சிறுகதை மன்னன்” என்ற சிறப்புப் பெயர் அவருக்குக் கிடைத்தது. தன்னைத் தான் உயர்த்திக் கொள்பவன் நிச்சயம் வெற்றி அடைவான். மலையின் மேல் நின்று கொண்டிருப்பவனைப் பார்த்துக் கொண்டே ஏறுபவனுக்கு அதிகமான களைப்பு ஏற்படாது. அவனுக்கு மேலே நின்று கொண்டிருப்பவர் வெற்றியைத் தரும் சக்தியாக தோற்றம் அளிக்க முடியும்.
    வெற்றியாளராக வர வேண்டும் என்ற குறிக்கோளை முதலில் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அதனையே தொடர்ந்து மீண்டும் மீண்டும் நினைப்பதே வெற்றியின் படிக்கட்டாக அமையம். கஷ்டத்தோடு ஒரு காரியத்தைத் தொடங்குபவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்கிறது ரஷ்யப் பழமொழி.
    வெற்றிக்கு எது முக்கியம் என்ற தெளிவு வேண்டும். வெற்றியை அடைய முடியாமல் தடுப்பது எது என்று கண்டறிய வேண்டும். நான் இன்னும் அதிகமாக வெற்றியைப் பெற என்ன செய்ய வேண்டும். என்னுடைய பணியை இன்னும் சிறப்பாகச் செய்வது எப்படி என்று சிந்திக்க வேண்டும்.
    எந்த நேரத்தில் எதைப் புரிந்து கொள்ள வேண்டுமோ, அதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதை எப்பொழுது செயல்படுத்த வேண்டுமோ அந்தத் தருணத்தில் தவறாமல் காலத்தோடு செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்கிறார் நெப்போலியன் ஹில்.

    துடிப்பு

    சார்……ரொம்ப கஷ்டமா இருக்குமே சார்? நமக்கு எதுக்கு? அப்படீன்னு நினைக்கிறேன் சார்…..
    படிக்கிறது அவ்ளோ சிரமம் கிடையாதும்மா! IAS ஆவதற்கு ஸ்கூல் காலேஜிலெல்லாம் முதல் மதிப்பெண் வாங்கித்தான் பாஸ் பண்ணியிருக்கணும் என்கின்ற அவசியம் இல்லை. இப்போ என்னை எடுத்துக்கிட்டா தேசிய சட்ட பள்ளியில பி.எல்., எல்.எல்.பி., படிச்சதுல இருபத்தி மூணாவது ஆளாய்தான் வந்தேன் என்று அருண் இராய், இ.ஆ.ப., உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் சொல்ல, IAS ஆகிறதுக்கு முன்னாடி சொல்ல வில்லை சார், ஆன பிறகும் கஷ்டம்தானே சார் அதைச் சொன்னேன் என்றாள் மாணவி.

    சென்னை மாநகராட்சியின் உன்னதமான முயற்சியாக, 470 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றிருந்த பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான ஊக்குவிப்பு தனிப்பயிற்சி வகுப்பிற்குச் சிறப்பு பயிற்சியாளர்களாக நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். அறுபத்திரண்டு பேர் கொண்ட வகுப்பில் மாணவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில்கூட இல்லை. மாணவியர் ஆதிக்கம் தெரிகின்றது. என்னப்பா? செய்யறீங்க ? என்று கேட்கலாம்போல் தோன்றுகின்றது.

    இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பினை அடைந்திருக்கும் இந்த 62 பேரில் நான்கைந்து பேர்தான் இ.ஆ.ப., தேர்வு எழுதுவோம் என்று கூறினர். அதன்பிறகு தேர்வு மிக எளிது என வைத்துக் கொண்டால், எவ்வளவு பேர் எழுதுவீர்கள் என்று கேட்டபோதும், இன்னும் கொஞ்சம்பேர் யோசித்து தயக்கமாக கை உயர்த்தினர். நீங்கள் எல்லோரும் இ.ஆ.ப., அதிகாரி ஆகுங்கள் என்று கூற நாங்கள் வரவில்லை என்று கூறிய பிறகு…. சினிமாலெல்லாம், காட்றாங்களே சார்… ரொம்ப அடிதடி…. சிரமம், கஷ்டம் சார் என்றாள் மெதுவாக, சுகன்யா என்றொரு மாணவி….

    அதெல்லாம்… நூறு சதவிகிதம் சரி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறிய பொழுது… படிப்பவர்கள் டி.வி., சினிமா இதெல்லாம் பார்க்கலாமா? கூடாதா? என்றொரு சுவாரஸ்யமான கலந்துரையாடலுக்கு விவாதம் திரும்பியது. வாழ்வில் வெறும் படிப்பு மட்டுமே! போதும் என்று இருந்து விடக் கூடாது…. ‘பன்முக ஆளுமை’ என்கிற ‘மல்ட்டி பெர்ஸனாலிடி டெவலப்மன்ட்’ இருக்க வேண்டும். (இதை குறித்து விளக்கமாக, விஷயந்தெரிந்தவர்கள் என்று நீங்கள் நினைப்பவர்களிடம் தேவைப்பட்டால் கேட்டுக்கொள்ளலாம்) என்று பதில் கூறினோம். அப்படியானால் எல்லாம்தானே தேவை.

    அப்படியா சொல்றீங்க, எங்கப்பா… வீட்டில, டி.வி. கனெக்ஷன் கட் பண்ணிட்டாங்க சார், நீங்க கொஞ்சம் சொல்லுங்களே! என்ற பெண்ணுக்கு, “அப்பா, உங்களுக்கு நல்லது செய்யணும் என்ற எண்ணத்துலதான் இதைச் செஞ்சிருக்கார் என்று யோசித்துப் பாருங்க”, என்று பதில் சொன்னோம்.

    அந்தக் கேள்விக்குள் இருப்பது டி.வி. பார்த்தால் படிக்க முடியுமா? முடியாதா? என்கின்ற ஒரு பொருள் மட்டும் இல்லையே? ‘டி.வி. பார்த்தாலும் நன்றாகப் படிக்க முடியும் என்கின்ற கருத்தில் தந்தை மகள் இருவருக்கும் இருக்கின்ற, நம்பிக்கை எவ்வளவு? என்கின்ற கேள்வியும் அல்லவா இருக்கின்றது. மிக அதிகமான மதிப்பெண் நீ எடுத்துக் கொடுத்தால், தந்தை ஒருவேளை, மறுபடி டி.வி. கனெக்ஷன் திருப்பி கொடுத்துவிடலாம் என்கின்ற ரீதியில் பதில் சென்றது. ஆக மொத்தம் டி.வி. படிப்பின் எதிரி என்று உறுதியிட்டு சொல்லிவிட இயலாது. சினிமா பார்க்காமல்தான் படிக்க வேண்டும் என்று கட்டளை இட்டு கட்டுப்படுத்துவதும் முற்றிலும் சரியென்று வரையறுக்கவும் முடியாது. இயல்பான மனிதப் பண்பு மற்றும் உணர்வு வளர்ச்சியை கால சூழ்நிலை தீர்மானிக்கின்றது.

    ஏழாம் நூற்றாண்டில் இருந்த பேரரசர்கள் கூட ஐந்து பத்து கிலோமீட்டர்கள் தூரத்தில் இருந்து வருகின்ற செய்தியை குதிரை மெஸன்ஜர் மூலமாக மெதுவாக தான் தெரிந்து கொண்டிருக்க முடியும். கால சூழலில் அவர்கள் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாத வசதிகளை இன்றைய சாதாரண வசதியுள்ள மாணவன் அனுபவிக்கிறான். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள கிரிக்கெட் பந்தை கூட நேர்த்தியாக படம் பிடித்து அப்போதைக்கப்போதே தெரிந்துகொள்ள முடிகின்றது. ஊடகங்கள் அனைவரையும் காலகட்டத்தோடு வளரச்செய்கின்றன.

    சிந்தனையை மட்டுப்படுத்துகின்ற எதுவும் ஆரோக்யமானதாக இருந்துவிட முடியாது. மதிப்பெண் பெறுவதற்குத் திட்டமிடுதல் அவசியம். கடின உழைப்பு வெளியிலிருந்து திணிக்கப்படாமல் இருப்பதும் அவசியமான அவசியம். அப்பொழுதுதான் உழைப்பு சுகமானதாக மாறும். ஆர்வம் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி தத்துவம் சொல்வது போல் கல்வி கற்கின்ற கெபாஸிடியைப் பலமடங்காக அதிகரித்து விடுகின்றது. படிப்பதில் இலயிப்பு இருக்கவேண்டும். துடிப்பு, படிக்கவேண்டுமென்றே இருக்கவேண்டும் இதயத் துடிப்பு டி.வி. பார்க்க முடியலியே என்கின்ற ஏக்கத் துடிப்பாக இல்லாமல், அப்பா எதிர்பார்க்கின்ற மாதிரி, அவர் மேலிருக்கின்ற பிடிப்பு, படிப்பைப் பிடித்துப்போகச் செய்கின்ற மாதிரியான ஆக்கத் துடிப்பாக இருக்க வேண்டும். கட்டுப்பாடுகள், நம்மை கட்டிப்போட வந்தவை அன்று, கட்டுக்கோப்பாக்க வந்தவை. கடுப்பேற்ற வந்தவை அல்ல. கட்டுறுதி செய்ய வைப்பவை என்று எல்லைக் கோடுகளை ஆராதிக்கின்ற மனசு மாணவர்களுக்கு வரவேண்டும்.

    முழுவதும் ஆங்கிலத்திலா சார் கேள்விகள் இருக்கும்? பயாலஜி முடித்துவிட்டு டாக்டரைத் தவிர நல்லதாக என்ன படிக்கலாம்? பி.டெக்(ஐ.டி.), பி.இ(இ.சி.இ) இதில் எது நல்லது? என்று தினுசு தினுசாகக் கேள்விகள் வந்தன. அனைத்திற்கும் நம் சுற்று வட்டத்தில், சரியாக வழிகாட்டக்கூடியவர்களைக் கேட்டுப் பதில் தெரிந்துகொண்டு… இறுதி முடிவை எடுக்கவேண்டும். இதையே “இன்ஃபார்ம்டு டெஷிஸன்” என்று சொல்வார்கள். முடிவுகள் நல்ல, சரியான தகவல்களின் அடிப்படையிலேயே எடுக்கப்படல் வேண்டும் என்றெல்லாம் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.

    இளமைத் துடிப்பு ஆரோகணத்தில் இருக்கும் இந்தப் பருவம்… வழிதேடக் கூடிய வலிமையான மனதுகளின் வழிகாட்டுதலில்தான் செல்கின்றது என்கின்ற சமாதானம் நெஞ்சில் வந்தது. சில பேர் வாழ்வில், செல்வம் தேடுதல்! அல்லது மற்றவர்களுக்காக!! என்கின்ற குறுகியகால குறிக்கோள்களோடு ஒருவேளை ஏதாவதொன்றைப் படித்து எதிலாவதொரு இடத்தில் பணியில் சேர நேரிடுகிறது. திருப்தி இல்லாத பணி வெற்றி தருவதில்லை. இதயத் துடிப்பில் நாம் நேசிக்கின்ற பணி முழுமை அடைவதில்லை. பூரண திருப்தியுடன் இதயத் துடிப்போடு மகிழ்வாக சரியாக அடையாளம் கண்டுகொள்ள பாட புத்தகங்களைத் தவிர நூலகங்களில் குவிந்து கிடக்கின்ற ஃபிக்ஷன் வகையிலான புத்தகங்கள், பயோகிராபியில் சேர்ந்த நூல்கள் ஆகியவற்றையும் படியுங்கள். அதிலுள்ள பாத்திரங்களின் ‘துடிப்பை’ தெரிந்துகொள்ளலாம்.

    அவுட் ஆஃப் ஆஃப்ரிக்கா என்கின்ற கரென் ஃபிளிக்ஷனின் புத்தகமும், அதே பெயரில் வந்த மெரில் ஃஸ்ட்ரீஃப் நடித்த திரைப்படமும் ஒரு டென்மார்க் பெண்மணியின் மனத்துடிப்பைக் காட்டுகிறது. இப்புத்தகம் மாணவர்களுக்கு மட்டுமின்றி எல்லோரும் மாணவர்களாவதற்காகப் பரிந்துரைக்கப்படுகின்றது.

    வகுப்பெடுத்து வெளியே வந்தபிறகும்…. என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் சார்… என்கின்ற கேள்விகளோடு வந்த படிப்பாளிகள் இதயத் துடிப்பிற்கு, நம்பிக்கை வலிமை சேர்த்தனர்… நன்றி.

    சாதிக்கலாம் வாங்க… – செல்வி. ரஞ்சனா

    சாதனை செய்ய நினைப்பவர்களுக்குத் தடையாக எதுவுமே இருக்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நெஞ்சில் நம்பிக்கையை வைத்து, தன்னுடைய திறமையைக் கொண்டு ஈடுபாட்டுடன் உழைத்தால் எவரும் ஜெயிக்கலாம் என சாதித்துக் காட்டியிருக்கிறார் ரஞ்சனா என்ற பார்வையற்ற பெண். தடைகளை உடைத்தெரிந்து முன்னேறுபவர்கள் தான் சாதனையாளர்கள் என்பதற்கு மிகச்சரியான உதாரணமாகக் கண்முன் நிற்கும் செல்வி. ரஞ்சனா அவர்களின் வாழ்க்கையை அவர் மொழியிலேயே பார்ப்போம்.
    சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் உள்ள மணக்காடு தான் என் சொந்த ஊர். என் அப்பா சதாசிவம். அம்மா புஷ்பலதா. நான் பிறந்ததில் இருந்து இரண்டரை வயது வரை தலை தொங்கிய நிலையிலேயே இருந்ததைப் பார்த்த அனைவரும் நான் தேறமாட்டேன் என்றே கூறியிக்கிறார்கள். இந்த பிள்ளை வேண்டாம் என்று உறவுகள் கூறியபோது, ‘10 மாதம் சுமந்து பெற்றெடுத்த மகளை மண்ணுக்கு அனுப்ப மாட்டேன். நான் அவளைக் காப்பாற்றுவேன்’ என்று கூறி வீட்டிற்கும், மருத்துவமனைக்குமாக அலைந்து என்னை மீட்டெடுத்தவர் என் அன்னை.
    மருத்துவ உதவியுடன் மீண்டெழுந்த நான் பள்ளியில் சேர்ந்து படித்தேன். அதீத ஈடுபாட்டுடன் பாடங்களைப் படித்த என்னால் தொடர்ந்து அவ்வாறு படிக்க முடியாத அளவிற்கு என் கண்ணில் வலி ஏற்பட்டது. கண்ணில் ஏற்பட்ட வலியின் கொடுமையால் பார்க்கும் சக்தியை இழந்த நான் மேற்கொண்டு செய்வதறியாது தவித்தேன். கடவுளின் படைப்புகள் எப்போதும் வீணடிக்கப்படுவதில்லை. எதையாவது சாதிக்கத்தான் கடவுள் நம்மை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்று நம்பிக்கையுடன் படித்தேன். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 338 மதிப்பெண்களும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 954 மதிப்பெண்களும் பெற்றேன். பிளஸ் 2-ல் அதிக மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகச் சாதனை படைத்தேன்.
    மேற்படிப்பு படிக்க விரும்பிய நான் என்னுடைய சிறுவயது கனவான ஆசிரியையாக வேண்டும் என்பதை நனவாக்க முனைந்தேன். கனவை நனவாக்கும் பயணத்தில் பி.ஏ. பட்டமும் பி.எட். ஆங்கிலப் பாடப்பிரிவில் பட்டமும் பெற்றேன். ஆசிரியர் பணிக்குத் தேவையான தகுதிகளைப் பெற்றுவிட்ட சமயத்தில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு என்னுடைய இலக்கான ஆசிரியை என்ற கனவை நனவாக்கி நாமும் ஆசிரியராகிவிடுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. டி.இ.டி. தேர்வுக்குத் தயாராகும் விதத்தில் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டேன்.
    முதல் முறையாக நடைபெற்ற தேர்வில் நான் தோல்வியையே பரிசாகப் பெற்றேன். ஆனாலும் மனம் தளரவில்லை. தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டேன். முன்பைக் காட்டிலும் அதிக ஈடுபாட்டுடன் உழைத்தேன். இதோ இப்போது இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்வில் மொத்தமுள்ள 150 மதிப்பெண்களுக்கு 95 மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறேன்.
    இந்த வெற்றியானது நான் இழந்த கண்கள் மீண்டும் வந்ததைப்போல் இருக்கிறது. என்னுடைய ஆசிரியை கனவு நிறைவேறியிருக்கிறது இன்று. என்னுடைய இத்தனை வெற்றிக்கும் பக்கபலமாக இருந்தவர் என்னுடைய அம்மா. அவர்கள் இல்லை என்றால் இப்போது இங்கு நான் இல்லை. கண் பார்வைக் குறைபாட்டுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த என்னை மருத்துவமனைக்கு மிகுந்த சிரமங்களுக்கு இடையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வார். கண் மருத்துவமனையிலும் என் பார்வையை மீட்டெடுக்க முடியாது என்று கூறியபோதிலும் மனம் கலங்காமல் எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்தவர்.
    என் அம்மா, தம்பி விஜயன், தங்கை பிரவீணா மற்றும் என்னுடைய தோழிகள் அனைவருக்கும் என்னுடைய வெற்றியில் பங்களிப்பு உண்டு. அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறிய ரஞ்சனா மருத்துவர்கள் முழுமையாக கைவிரித்துவிட்ட பின்னர் முழுமையாக தெரியாத போதிலும் கூட ஓசை வரும் திசையை வைத்து எங்கே ஆட்கள் நிற்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு தன்னை உருவாக்கிக்கொண்டார். பிரெய்லி முறையில் பி.எட். படித்த இவர் ஆடியோ மூலமாக தகுதித்தேர்வுக்குத் தயாராகி எழுதியவர். கலந்தாய்வில் வெற்றிபெற்று தற்போது வலசையூர் அரசு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்துள்ளார்.
    நம்மால் முடியாது என்று சோர்ந்து போய் உட்காராமல் முயற்சித்து சாதனை புரிந்துள்ள ரஞ்சனா ஒவ்வொரு மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
    பார்வையிழந்த நிலையிலும் ஆசிரியராக உயர்ந்துள்ள ரஞ்சனாவை காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டு சோம்பித்திரியும் இன்றைய இளைஞர்கள் கூட்டம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.

    box news:
    ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை சேலம் சாரதா வித்யா மந்திர் பள்ளியிலும் பின்னர் செவ்வாய்பேட்டையில் உள்ள அரசு விழியிழந்தோர் படிக்கும் பள்ளியில் ‘பிரெய்லி’ முறையில் தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தார்
    ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிய மதுரையில் உள்ள இந்திய பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளியிலும்.
    சேலம் சாரதா கல்லூரியில் பி.ஏ. படித்து பட்டம் பெற்ற பிறகு குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் சேர்ந்து பி.எட். படிப்பை முடித்தார்.

    வேகமாய் வருகிறது வெற்றி – 4

    ‘வெற்றியை வேகமாய்ப் பெற குறுக்கு வழி உண்டா?’ என்ற நண்பரின் கேள்வி என் உள்ளத்தில் ஏற்படுத்திய சலனங்களால் மூன்று வினாக்களை விளக்கம் தேடும் நோக்கில் தேர்வு செய்து பதில் தேடிக் கொண்டிருக்கிறோம்.

    ‘வெற்றி என்பது என்ன?’ என்ற முதல் கேள்வியையும் ‘வெற்றியை அடைவதற்கு வயது வரம்பு உண்டா?’ என்ற இரண்டாவது கேள்வியையும் சந்தித்து விளக்கம் பெற்றோம். இனி, மூன்றாவது கேள்விக்கு வருவோம். வெற்றியை அடைய நாம் கைகொள்ள வேண்டிய பண்புகள், தகுதிகள் என்னென்ன?

    இவற்றைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டாலே இலக்கினை அடையும் பாதையைப் பாதி தூரம் கடந்த மாதிரி தான். ஏனென்றால் பலருக்கும் புரியாத இரகசியம் என்பது “வெற்றியைத் தொட வேண்டுமென்றால் நாம் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் என்னென்ன?” என்பது தான். வெறும் இளங்கலை பட்டமோ, முதுகலைப் பட்டமோ, பொறியியல் பட்டமோ, மருத்துவப் பட்டமோ தகுதிகள் ஆகிவிடாது. இதற்குமேல் நாம் பெறக்கூடிய தகுதிகளும், நாம் பெறக்கூடிய பண்புநலன்களும் தான் நம்மை உயர்த்தும்.

    “நாளை உலகம் நல்லோரின் கையில்” என்று பாடினார் பட்டுக்கோட்டையார். அவர் கண்ட கனவு அது. “நல்லோர்க்கு வெற்றிகள் வந்து சேரும். எனவே இவ்வுலகம் அவர்கள் வசமாகும்” என்பது அவரது நம்பிக்கை.

    அது உண்மை தான். இந்த உலகை வெல்லக்கூடிய ஆற்றல் நல்லோர்க்கே சாத்தியமாகும். “சில தீயவர்கள், சில சுயநலமிகள், சில கொள்ளைக்காரர்கள் அரசியலில் வெற்றி பெற்று ஏகப்பட்ட கோடிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகியிருக்கிறார்களேÐ இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இதற்கான சான்றுகள் உள்ளனவே. இந்த நாட்டின் ஆயிரக்கணக்கான மக்களை தம் வசப்படுத்தி அரசியலில் வென்று ஆதிக்கம் செலுத்துகிறார்களேД என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

    அவர்கள் எப்பொழுதும் வெற்றி பெற்றவர்களாக, எல்லோரும் பாராட்டும் விதமாக வாழ்க்கை நடத்துபவர்களாக இருக்கிறார்களா? இல்லை. வெற்றியும், தோல்வியும் அவர்களை அடுத்தடுத்து தாக்குகின்றன. ஒருமுறை எழுகிறார்கள். மறுமுறை வீழ்கிறார்கள். அவர்கள் நல்லது செய்யும்போது பாராட்டும் பத்திரிக்கைகள், அவர்கள் அல்லது செய்யும்போது அவர்களைக் கேவலப்படுத்தி வசைபாடுகின்றன. புகழ்ச்சியும் இகழ்ச்சியும் அவர்களுக்கு மாறி மாறி வருகின்றன. அவர்களும் அதைப் பொருட்படுத்துவதில்லை. ‘யாரேனும் நம்மை இகழ்ச்சியாக பேசிவிடுவார்களோ? எழுதி விடுவார்களோ?’ என்கின்ற அச்சவுணர்வு அவர்கட்கு இல்லை. ‘பழி நானும் தகைமை’ அவர்கட்கு அறவே இல்லை. எனவே இப்படிப்பட்ட கீழ்மக்களின் பெருஞ்செல்வ உடைமையை வெற்றியாகக் கணக்கிட முடியாது.

    சமூக வாழ்வில் அண்ணல் காந்தி அடிகளும், டாக்டர் ராதாகிருஷ்ணனும், ஜவஹர்லால் நேருவும், லால்பகதூர் சாஸ்திரியும், பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், கர்ம வீரர் காமராஜ் அவர்களும் அடைந்த புகழே வெற்றியின் அடையாளம் என்று கருதுங்கள்.

    அவர்கள் தன்னலம் மறுத்து பிறர்நலம் பேணிய பண்புடையவர்கள். நாட்டுக்காக எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர்கள். இதன்பொருட்டு தமது வாழ்க்கையைப் பளிங்குக் கண்ணாடிபோல அமைத்துக் கொண்டு செல்வம் தேடி சொத்து சேர்க்கும் இயல்பற்றவர்களாய் வாழ்ந்தவர்கள். எனவே சரித்திரத்தில் இடம்பெற்று, மக்கள் மனங்களில் புகழ்பெற்று, மறுக்க முடியாத மாபெரும் வெற்றியாளர்களாய் போற்றப்படுகிறார்கள்.

    எனவே நமது கேள்விக்கு ஒரு விடை தெளிவாகக் கிடைத்துவிட்டது. சொத்து சுகமும், பெரும் செல்வமும், மாட மாளிகைகளும் நவீன சொகுசு சாதனங்களும் சேர்த்துக் கொண்டவர்கள் வெற்றியாளர் பட்டியலில் இடம் பெற இயலாது. அவர்கள் பெற்றுள்ள செல்வ வளமெல்லாம் தற்காலிக வெற்றிகளே. அவை சீட்டுக்கட்டு மாளிகை போல் உடைந்து விழும் தன்மை படைத்தவை. செய்தித்தாள்களில் தினமும் இடம் பெற்றாலும் அவர்கள் வசைச் சொல்லுக்கும், பழிச் சொல்லுக்கும் ஆளானவர்களே தவிர நாளைய உலகு போற்றும் நாயகர்களாக ஆகிவிட முடியாது. எனவே வெற்றியாளர் பட்டியலிலிருந்து அவர்கள் நீக்கப்படுவார்கள். அவர்கள் தற்போது அடைந்துள்ள வெற்றி குறித்து செல்வச் செழுமை குறித்தும் நாம் கவலைப்படத் தேவையில்லை. காலம் அவர்கள் புகழைக் கரைத்துவிடும்.

    வெற்றி அடைவதற்கான ‘பண்பு நலன்கள், தகுதிகள்’ வரிசையில் முதலில் நிறுத்தப்பட வேண்டிய பண்பு ‘நல்லவர்களாக இருங்கள்’ என்பதே ஆகும். நல்லவர்களாக இருத்தல் என்ற ஒற்றைச் சொல்லிலேயே எல்லாம் அடங்கி விடுகின்றன. ‘நல்லவர்களாக இருப்போம்Ð’ என்று நாம் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழியிலேயே பல சோதனைகளை, துன்பங்களை, துயரங்களை வென்று விடுகின்றோம். நாம் யாருக்கும், எந்தத் துன்பமும் இழைப்பதில்லை என்றால் நமக்கு ‘பகையினால் வரும் துன்பம் இல்லை’ என்று பொருளாகின்றது. நமக்குப் பகைவர்களாக யாரும் இருக்கமாட்டார்கள் என்றால் பகையாளிகளால் ஏற்படும் இடுக்கண்கள், துயரங்கள், காயங்கள் நமக்கு வராது என்று பொருளாகின்றது. இது சுயநலம் கருதிய, தற்காப்பு எச்சரிக்கையுடன் கூடிய பண்பாகக் கூட சிலர் நல்லவர்களாக இருந்து விடுவதுண்டு. அது தவறில்லை. திருவள்ளுவரும், காந்தியடிகளும் வற்புறுத்திய அறப்பண்புகளை தன்னலம் கருதியாவது நீங்கள் கடைபிடித்தால் அது உங்களுக்கு நன்மை பயக்கும் கருவியாக செயல்படுமே அல்லாமல் பழி ஒன்றும் இல்லை.

    தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

    மார்ச் 2013ல், 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர் படித்துப் பயன்பெற சில ஆலோசனைகள்…
    நாற்பது வருடங்களுக்கு முன்பிருந்த கல்விமுறை, தேர்வு முறை, பெற்றோரின் நிலை இன்று இல்லை. இன்று மதிப்பெண்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் அன்று இல்லை. பொதுத் தேர்வில் வெற்றி பெற்றாலே போதும் என்ற நிலை தான் அன்று இருந்தது. முதல் வகுப்பில் தேர்ச்சி என்றால் அந்த ஊரே கொண்டாடும். ஆனால் இன்று நிலைமையோ வேறு. முதல் வகுப்பு மதிப்பெண் என்பது மதிப்பெண்ணாகவே கருதப்படுவதில்லை. ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளைகள் மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில் அதுவும் இல்லாவிட்டால் பள்ளியிலாவது முதலிடம் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதற்கான முயற்சியாக காலையில் டியூசன், மாலையில் டியூசன் என்று பணத்தைச் செலவிடுகின்றனர். மொத்தத்தில் இன்று பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரமாகவே பார்க்கப்படுகின்றனர்.
    இப்படி மதிப்பெண்களே ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணியாக ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் பெற்றோருக்கு இருக்கும் இந்த ஆர்வத்தையும், அக்கரையையும் நாம் குறைசொல்ல முடியாது தான். நல்ல கல்லூரியில் சேர்வதற்காக மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் இக்காலத்தில் மதிப்பெண் பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் மாணவர்களும், மதிப்பெண் வாங்க வைக்க வேண்டும் என்ற கடமையில் பெற்றோர்களும் உள்ளனர்.
    நல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். மாணவன், ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆகிய மூவரும் சேர்ந்து அமைக்கும் முக்கோணம் தான் மாணவனின் மதிப்பெண். ஆசிரியர்கள் வழிநடத்த, பெற்றோரின் துணையுடன் மாணவர்களின் முயற்சியும் இருந்தால் அதிக மதிப்பெண் பெற முடியும். எனவே இங்கு நாம் கல்வித் துறையில் முன்னேறத் தேவையான அதிக மதிப்பெண்ணைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்…
    மாணவர்களின் முயற்சி:
    ஒரு செயல் எவ்வாறு அமைகிறதோ அதை வைத்தே இறுதி வெற்றி தீர்மானிக்கப் படுகிறது. படிப்பதைப் பற்றி யோசிக்கும் முன்பாக அதற்கான திட்டமிடலை மேற்கொள்வது முக்கியம். உங்களின் நேரம், சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். தினமும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும், ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை முன்பே திட்டமிட வேண்டும்.
    திட்டமிட்ட குறிப்பிட்ட நேரத்திற்குள் படித்து முடிக்க வேண்டும். அதற்கு நாள் வாரியாக, பாட வாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். அப்போது எளிதான பாடத்திற்கு குறைந்த நேரமும், கடினமான பாடத்திற்கு அதிக நேரமும் ஒதுக்கித் திட்டமிட்டுக் கொள்ளவும்.
    எந்த பாடத்திற்கு எத்தனை மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப படிக்க வேண்டும். தினமும் படித்தவற்றை எழுதிப் பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒருமுறை எழுதுவது ஏழுமுறை படிப்பதற்குச் சமம்.
    எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படிப் படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தைப் படிக்கும்போது அந்தப் பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும் எப்படிக் கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகே அடுத்த பாடத்திற்குச் செல்ல வேண்டும்.
    படிப்பதைத் தள்ளிப் போடாதீர்கள். படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்து விடுங்கள். பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதைத் தள்ளிப் போடாதீர்கள். இப்படித் தள்ளிப்போட்டுக் கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும். எனவே எப்போதும் சுறுசுறுப்பாகப் படியுங்கள்.
    பெற்றோரின் ஊக்கம்:
    குழந்தைகள் பெற்ற மதிப்பெண்களை அவர்களின் நண்பர்களின் மதிப்பெண்களோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். உங்கள் பிள்ளையும் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். உன் நண்பனைவிட அதிக மதிப்பெண் உன்னால் எடுக்க முடியும். அந்தத் திறமை உன்னிடம் உள்ளது என்று நேர்மறையாகப் பேசி ஊக்கப்படுத்த வேண்டும்.
    படி படி என நாள் முழுவதும் விரட்டாதீர்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 நிமிடம் ஓய்வு கொடுங்கள். முடிந்த வரை அவர்களை உங்கள் கண்பார்வையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களுடன் அமர்ந்து புத்தகம் படிக்கலாம். அல்லது அவர்கள் விடைகளை எழுதிப் பார்ப்பதற்கு வசதியாக வினாக்களை எழுதித் தரலாம். விடைகளைத் திருத்தியும் தரலாம்.
    ஆசிரியரின் தூண்டுதல்:
    எதில் வெற்றி பெறுவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். படிக்கும்போது ‘இந்தப்பாடம் கடினமானது’ என்று மாணவர்கள் நினைப்பது தான் அவர்களுடைய ஆர்வத்தைக் குறைக்கின்றது என்பதை எடுத்துக் கூறி ‘கடினமான பாடம்’ என்று எதுவும் இல்லை. சில பாடங்கள் ஒருமுறை படித்தால் புரியும், சில பாடங்கள் பலமுறை படித்தால் தான் புரியும் என்பதையும், அவர்கள் கடினமான பாடங்கள் என நினைக்கும் பாடத்தில் தான் ஆயிரக்கணக்கானோர் சென்டம் (100%) எடுக்கின்றனர். எனவே முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் படித்தால் கடினமான பாடங்களும் எளிதாகிவிடும் என்பதை எடுத்துக் கூற வேண்டும்