ஆசிரியர்களுடன் ஒரு வார்த்தை
2000 வருடத்திற்கு முந்தைய வரலாற்றைப் பார்த்தால், சாக்ரடீஸ் ஒரு சிந்தனையாளர். அவர் தான் முதலில் பூமி உருண்டையா தட்டையா என்று கேள்வி கேட்டவர். அவருடைய மாணவன் பிளேட்டோ, ‘தி போலட்டிக்’ என்ற நூலை எழுதியவர். பிளேட்டோவின் மாணவான் அரிஸ்டாட்டில். அரிஸ்டாட்டிலின் மாணவன் தான் மாவீரன் அலெக்ஸாண்டர், உலகத்தை ஆட்சி செய்தவர்.
ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சாதனை புரியவேண்டும் என்ற தணியாத தாகத்தை ஏற்படுத்த வல்லவர்கள். ஆசிரியர்களின் வேலை கற்பிப்பது மட்டும் என்று சொல்வது சரியன்று. ஆசிரியர் ஒருவரால் மட்டுமே மாணவனுக்குக் கற்றுக் கொடுக்க முடியாது. மாணவனும் சேர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே கல்வி பெற முடியும். ஆசிரியர் மட்டும்தான் சொல்லிக் கொடுக்க முடியும் என்றில்லை. புத்தகம் படித்துக் கற்றுக்கொள்ளலாம். ஆசிரியருக்கு ஒரு குறிப்பிட்ட பாடம் தெரியுமென்றால், அது தன்னிச்சையாகவே மாணவனைச் சென்றடைவதில்லை.
உதாரணமாக, ‘சைபர் கிரைம்ஸ்’ பற்றி எனக்குத் தெரியும். என்னுடைய சைபர் கிரைம் குறித்த அனைத்து அறிவும் இம்மாணவிக்குப் போய்ச் சேர்வதாக என்று ஒரு மாணவியை நான் ஆசிர்வதித்தால் அது அம்மாணவிக்குப் போய்ச்சேருமா? சேராது. அதே வேளையில் பல ஆண்டுகள் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தும் வராத ஆங்கிலம் பேசும் திறமை, பத்து ஆங்கில புத்தகங்களைப் படித்தால் வந்து விடுகிறது. மாணவர்கள் தான் கற்க வேண்டும். மற்றவர்கள் அவர்களுக்குள் கல்வியைப் புகுத்த முடியாது.
ஓர் ஆசிரியரின் எல்லா அறிவும் நேரடியாக மாணவனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்றால் அனைத்து மாணவர்களும் 100க்கு 100 மார்க் வாங்க முடியுமே. ஏன் வாங்க முடியவில்லை. சில மாணவர்கள் கற்கத் தயாராக இல்லை. சிலர் மெதுவாகக் கற்றுக்கொள்கின்றனர் (Slow Learners). மிகச்சிலர் தான் வேகமாகவும், விவேகமாகவும் கற்றுத் தேர்ச்சியடைகின்றனர்.
ஓர் ஆசிரியரின் பணி ஒரு மாணவனுடைய மனதில் படிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். கல்வி பயிலும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் ஓர் ஆசிரியருடைய பணி. கரும்பலகையில் படம் வரைந்து, இதுதான் சி.பி.யு, இதுதான் அவுட்புட் டிவைஸ், இதுதான் இன்புட் டிவைஸ் என்றால் மாணவனுக்கு ஒன்றும் புரியாது. ஒரு கம்ப்யூட்டரைக் கொடுத்து இதுதான் கம்ப்யூட்டர். இவைதான் அதன் பாகங்கள் என்று சொல்லுங்கள். படிப்பையே விளையாட்டாகப் பாருங்கள். கம்ப்யூட்டரில் விளையாட விடுங்கள். ஓரிரு நாட்களில் மாணவனே உங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பான்.
இந்திய நாட்டில் தான் மிகப்பெரிய ஆசிரியர்களெல்லாம் உருவானார்கள். கௌதம புத்தர், கௌடில்யர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இவர்களெல்லாம் ஆசிரியர்கள். மாணவர்கள் மனதில் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய அற்புத மனிதர்கள்.
சுவாமி விவேகானந்தர் உலக சர்வ சமயக் கூட்டத்தில் பேசுவதற்காக அமெரிக்கா சென்றார். அப்போது அவரை பலருக்கும் தெரியாது. 1893ல் “சகோதர சகோதரிகளே” என்று அவர் பேசத்தொடங்கியதும் தான் உலகம் அவரைத் திரும்பிப் பார்த்தது. விவேகானந்தரின் மாணவர்கள் “விவேகானந்தர் பேசுகிறார்” என்ற விளம்பரத்தை அவரது படத்துடன் வைத்திருந்தார்கள். இதைக் கண்ட விவேகானந்தர் அவர்களை அழைத்து, என்னுடைய புகைப்படத்தை வைக்க வேண்டாம்; நான் பெரிய ஞானி கிடையாது. என்னுடைய குரு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருடைய படத்தை வையுங்கள். அதன் கீழே “இவருடைய மாணவர் பேசுகிறார்” என்று எழுதுங்கள் என்றார். குரு மீது விவேகானந்தருக்கு எவ்வளவு மரியாதை என்று பாருங்கள். ஆசிரியர் ஒரு மாணவனிடம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று பாருங்கள்.
ஆசிரியர்களேÐ உங்களுடைய மாணவர்களிடத்தில் உங்களுக்கென்று ஒரு மரியாதையை ஏற்படுத்துங்கள். ஆசிரியர்கள், மாணவர்களுக்குக் கல்வி கற்கத் தேவைப்படும் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கற்பிக்க வேண்டும். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பது போல நீங்கள் பாடம் நடத்த வேண்டும். உங்கள் சொற்பொழிவை ஏ.ஆர். ரஹ்மான் பாடலைப் போல மாணவர்கள் ரசிக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை நேசிக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். தங்களுடைய சொந்த மகன், மகளிடம் நடந்து கொள்வதுபோல் அனைத்து மாணவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
நான் காவல்துறை அதிகாரிகளுக்கு தரும் அறிவுரைகள் இவைதான். “காவல் நிலையத்திற்கு வருபவர் யாராக இருந்தாலும், அவர்கள் உங்கள் சகோதரர்கள் அல்லது சகோதரிகள் என்று பாவித்து நடவடிக்கை எடுங்கள். உங்கள் சகோதரி வீட்டில் நகை திருட்டுப்போனால் எப்படி துடித்துப் போவீர்கள். உடனே கண்டுபிடித்துக் கொடுக்க முற்படுவீர்கள் அல்லவா. அதுபோல் செயல்படுங்கள்”. ஒரு பெண் காவல் நிலையத்திற்கு வந்து, “நான் வாழவில்லை. என் கணவன் என்னைக் கைவிட்டுவிட்டான்” என்றால், அப்பெண் உங்கள் சகோதரி என்றால் என்ன நடவடிக்கை எடுப்பீர்களோ, அதே நடவடிக்கையை எடுங்கள்”. ஆசிரியராக இருப்பது என்பது ஒரு மிகப்பெரிய கௌரவம். ஒரு தனியார் நிறுவனத்தில் வாங்குவதைவிட சம்பளம் குறைவாகப் பெறலாம். ஆனால், அது ஒரு விஷயமில்லை. ஓர் ஆசிரியருக்கும், ஒரு தனியார் அதிகாரிக்கும், ஒரு காவலருக்கும், மகிழ்ச்சி என்பது சம்பளத்திலிருந்து மட்டும் வந்துவிடாது. நான் காவல்துறைக்கு வருவதற்கு முன்னர் வங்கி அதிகாரியாக இருந்தேன். அங்கு சம்பளம் ரூபாய் 4000. காவல்துறையில் எனது சம்பளம் ரூபாய் 2000. வாங்கிய சம்பளத்தில் பாதி சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தேன். சம்பளம் குறைவாக இருக்கிறதே என்று நான் வருந்தவில்லை. என்னைப் பொறுத்தவரை சம்பளமே இல்லாவிட்டாலும் நான் ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்திருப்பேன். ஐ.பி.எஸ். பணியில் கௌரவம் உண்டு. செய்யும் பணியில் தான் மகிழ்ச்சி தேவை. கிடைக்கும் சம்பளத்தில் அல்ல.