தேசிய இளைஞர் தினம் – ஜனவரி 12
உலகிற்கே ஒரு விடிவெள்ளியாகத் திகழ்ந்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்த 2013ம் ஆண்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ‘உலக இளைஞர் ஆண்டு’ உலகெங்கும் கொண்டாடப்பட்ட 1985ம் ஆண்டு முதல் பாரதத் திருநாட்டின் புகழைப் பாரெல்லாம் பரவச் செய்த ஆன்மீகச் செம்மல் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான (1863) ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
விவேகானந்தர் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், அவரது உலகப் புகழ் பெற்ற சிகாகோ சொற்பொழிவு இந்தியர்களின் இறை உணர்வையும், ஒழுக்க நெறிகளையும் உலகுக்கு எடுத்துக் காட்டியது. அந்த சர்வதேச அனைத்து சமய மாநாட்டில் ‘சகோதரர்களே, சகோதரிகளே’ என்று அவர் விளித்துப் பேசியது உலக சரித்திரமாகி விட்ட ஒன்று.
மனவலிமையும், உடல் உரமும் கொண்ட இளைஞர்களால்தான் புதிய இந்தியாவை படைக்க முடியும் என்பது அவர் நம்பிக்கை. ‘எனது வீரக் குழந்தைகளே! நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்று இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டியவர்.
இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். ‘ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்கு தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே வளர்ந்து தனக்கு வேண்டிய எரு, தண்ணீர் ஆகியவற்றையே எடுத்துக் கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது’. அதுபோல கற்றுக் கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி காட்டியவர்.
அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் பெரிய காரியங்களை செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால லட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். வயதாகி சலித்துப் போன பிறகு உங்களால் எக்காரியத்தையும் செய்ய முடியாது’ என்று கூறி தன்னம்பிக்கையை விதைத்தவர்.
இளைஞர்களுக்கு கல்வி என்பதன் பொருள் கூறுகையில் கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல செய்திகளை திணிப்பதன்று. வெறும் செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால் புத்தகச் சாலைகள் மகான்களாக மாறியிருக்கும். அகராதிகள் மகரிஷிகளாக ஆகி இருக்கும். கற்ற கல்வி மற்றவர்களுக்கு உயிர் ஊட்டுவனவாய், ஊக்கம் அளிப்பனவாய், மனிதத் தன்மை தருவனவாய் இருக்க வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
எழுமின்! விழிமின்! உழைமின்! என்று இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பிய விவேகானந்தர் இளைஞர்களுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கம்.
பொங்கல் திருவிழா – ஜனவரி 13 – 16
தமிழர் திருநாளான தைப்பொங்கல் சங்க காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்ற சொல்லுக்கு நான்கு எழுத்து. பொங்கல் விழா நடக்கும் நாட்களும் நான்கு.
முதல் நாள் போகிப் பொங்கல;. இது மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுவது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப அன்றைய தினம்தான் வீட்டில் உள்ள வேண்டாத பொருட்களை குப்பைக் கூளங்களோடு தீயிட்டுப் பொசுக்குவார்கள். மார்கழி மாத குளிரில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடி, நம்மைப் பிடித்த பீடைகள் ஒழிய இறைவனை வழிபட்டு மங்கள வாழ்வுதனை மகிழ்ச்சியோடு துவங்கும் நாள் போகித் திருநாள்.
இரண்டாம் நாள் தைப் பொங்கல். தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் வேளாண் பெருமக்களுக்கு உதவி புரியும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்;கல் என்றால் பொங்கி வழிதல் என்பது பொருள். அதுபோல நம் வாழ்வும் பொங்கி சிறக்கும் என்பது தொன்றுதொட்டு நிலவும் நம்பிக்கை. புதிதாக விளைந்த நெல்லை அரிசியாக்கி பொங்கலிட்டு ‘பொங்கலோ பொங்கல்’ என்று உற்சாக குரலில் உரக்கச் சொல்லி பொங்கல் தயாரித்து அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு வழங்கி உற்றார் உறவினரோடு உண்டு மகிழும் தினம்.
மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல;. உழவர்களின் உற்ற நண்பர்களான கால்நடைகளை கௌரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, நெற்றியில் திலகமிட்டு,; கொம்புகளை சீவி வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் கட்டி, கழுத்தில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். உழவுக் கருவிகளை, அது டிராக்டராக இருந்தாலும், மரக்கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம், திருநீறு இட்டு மகிழ்வார்கள்.
நான்காம் நாள் காணும் பொங்கல;. இந்த தினத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று பல்வேறு வீர சாகசப் போட்டிகள் நடைபெறும். இரவில் இசைக் கச்சேரி, தெருக்கூத்து, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று ஊருக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகள் இருக்கும். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக் கட்டு நடைக்ஷறும். ரேக்ளா ரேஸ் எனப்படும் ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டிப் பந்தயம் நடைபெறும். சேவக்கட்டு என்றழைக்கப்படும் கோழிச்சண்டைகளும் நடைபெறும்.
திருவள்ளுவர் தினம் – ஜனவரி 15
‘உலக மகாகவி’ என்று போற்றப்படுபவர் திருவள்ளுவர். ‘உலகப் பொதுமறை’ என்று புகழப்படுவது அவர் படைத்த திருக்குறள். மதநூல் வரிசையில் இடம்பெறாத ஒரு மறை நூல் திருக்குறள். அது வாழ்வியல் நெறிகளை வகுத்துக் காட்டுவது, ஆட்சியாளர்களின் பண்பு நலன்களை பட்டியலிட்டுக் காட்டுவது, தனிமனித, ஒழுக்கத்தையும், அறச்சிந்தனைகளையும் அறிவுறுத்துவது.
இறைவன் மனிதனுக்குச் ஙசொன்னது பகவத்கீதை. மனிதன் இறைவனுக்குப் பாடியது திருவாசகம். மனிதன் மனிதனுக்கு வழங்கியது திருக்குறள். ‘வள்ளுவரின் குறளை அவர் எழுதிய தமிழ் மொழியில் படிப்பதற்காகவே நான் தமிழ் கற்க விரும்புகிறேன்’ என்றார் மகாத்மா காந்தியடிகள். ‘திருவள்ளுவரின் சிந்தனைகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே பொருந்தக் கூடியது’ என்கிறார் ரவீந்திரநாத் தாகூர். ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று மனநிறைவோடு பாடுகிறான் மகாகவி பாரதி. எக்காலத்தவரும், எந்நாட்டவரும், எம்மொழியினரும், எம்மதத்தவரும் ஏற்றுப் போற்றும் பொதுமறையாய் விளங்கும் திருக்குறள் 90க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பொதுமை நோக்கு: வள்ளுவர் ‘கருவி’ என்ற சொல்லை பல இடங்களில் பயன்படுத்துகிறார். ஆனால் என்ன கருவி என்று எந்த இடத்திலும் கூறவில்லை. கருவி என்று சொல்லி அத்துடன் விட்டுவிட்டார். கருவி என்ற இடத்தில் அன்றைய கலப்பையைக் கூறலாம். அல்லது இன்றைய கணிப்பொறியைக் கூறலாம். அல்லது நாளை வரக்கூடும் இன்னொன்றைக் கூறலாம். ஆக எக்காலத்துக்கும் ஏற்ற வகையில் பொருள் கொள்ளும் வகையில் இடம் வைத்து விட்டுப் போனதுதான் வள்ளுவரின் சிறப்பு.
கல்வி: எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்றைய காலகட்டத்தை ‘கல்வி யுகம்’ என்கிறோம். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேகன் ‘அறிவே ஆற்றல்’ என்றார். ஆனால் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே ‘அறிவே அனைத்தும்’ என்று கூறியிருக்கிறார் வள்ளுவர். அறிவைப் பற்றிக் கூற வந்த வள்ளுவர் ‘அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்’ என்கிறார்.
அறிவியல்: அறிவியல் அணுகுமுறைக்கு இலக்கணமே வகுக்கிறார் வள்ளுவர். ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு‘, ‘எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு‘. உண்மைகளை அறிவதுதான் அறிவியல். திருக்குறளில் காண்கின்றபடி வாழ்வில் செம்மையுற நடந்தால் அறிவியலான் வெற்றி பெறுவான், அறிவியலும் வளர்ச்சி பெறும்.
திட்டமிடுதல-: இந்தப் பணியை, இந்தக் கருவியால், இவர் முடிக்கிற வல்லமை உடையவரா என்று ஆராய்ந்து, அந்தப் பணியை அவரிடம் ஒப்படைந்தால் அப்பணி சிறப்பாக நடக்கும் என்பதை ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்கிறார்.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்ற தன் குறளுக்கே இலக்கணமாய் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகையின் ஒப்பற்ற திருக்குறளை பெருமிதத்தோடு நினைவு கூர்ந்து தமிழர் ஒவ்வொருவரும் உள்ளம் மகிழ்ந்து போற்ற வேண்டிய நாள் இது.
குடியரசு தினம் – ஜனவரி 26
நம் பாரத நாடு ஒரு குடியரசு நாடாகத் திகழ்கின்றது. விடுதலைக்குப் பின் இந்தியத் திருநாடு தனக்கென்று ஒரு அரசியல் சாசனத்தை வகுத்துக் கொண்டு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாடானது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நம் நாட்டில் பண்டைக் காலத்தில் முடியாட்சியே நிலவியது. மன்னன் ஒருவன் நீதிநெறி வழுவாமல் மக்கள் நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்வான். அவனுக்குப் பின் அவன் மகன் ஆட்சி பீடத்தில் அமர்வான். இவ்வாறு வழிவழியாக ஆட்சிமுறை அம்மன்னன் மரபுக்கே உண்டு. ஆற்றல் மிக்க மன்னர் சிலர், மெலியவர் சிலரை வென்று ஆட்சியைக் கைப்பற்றுவதும் உண்டு. எந்நிலையிலும் ஆட்சி, மன்னர் கைக்கு மாறுமே தவிர மக்கள் கைக்குக் கிட்டாது. இவ்வாட்சி முறையில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.
ஒரு புறாவிற்காகத் தன் இன்னுயிர் ஈந்த சிபியும், பசுவின் கன்றுக்காக தன் அரும்பெறல் புதல்வனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மாமன்னன் மனுநீதிச் சோழனும் இந்நாட்டு நீதிமுறை தவறா நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டு.
தனித்தே செயல்புரிய இயலுமெனினும் அறிவுசான்ற அமைச்சரவை கூறும் அறிவுரையை மேற்கொண்டு அறம் பிறழாமல் ஆட்சிபுரிந்த அசோகன், சிவாஜி, நெடுஞ்செழியன், கரிகாலன் போன்ற மன்னர்களை மறக்கஇயலாது. எனினும் காலம்மாற கருத்துவளர ஆட்சி மக்கள் கைக்கு மாறி விட்ட நிலையைக் காண்கிறோம்.
இன்று உலகில் பல நாடுகளில் மக்களாட்சி மலர்ந்து உள்ளது. மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களின் அரசே குடியரசாகும். குடியரசில் ஆண்டான் அடிமை வேறுபாடு இல்லை. ‘எல்லோரும் ஒரு குலம் எல்லோரும் ஓரினம்’ என்ற அடிப்படையில் இயங்குவது. அனைவர்க்கும் சம உரிமை அளிப்பதே இவ்வாட்சியின் அடிப்படை ஆகும்.
இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை, “நாம், இந்திய மக்கள், இந்தியாவில் பெருமை மிக்க தீர்மானறா;களை ஏற்படுத்தி அதன் வழியில் மக்களாட்சி சார்ந்த குடியரசை உருவாக்க வேண்டும். குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை வழங்கி எல்லோரிடமும் தோழமை உணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறுகிறது.
நமது அரசியலமைப்பின்படி, இந்தியா குடியரசுத் தலைவரை முதன்மையாகக் கொண்ட குடியரசு நாடாகும். எல்லா நிர்வாக அதிகாரங்களும் குடியரசுத் தலைவருக்கே வழறா;கப்பட்டுள்ளன. இவர் பெயராலேயே எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. முப்படைகளுக்கும் இவரே தலைமை அதிகாரியாகவும் செயல்படுகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சிமுறையின் அடிப்படையை பின்பற்றியே மத்தியிலும் மாநிலத்திலும் இந்திய அரசியலமைப்பு செயல்பட்டு வருகிறது. நீதிமன்றங்களின் அமைப்பைப் பொறுத்தவரை நாம் பிரிட்டிஷ் அமைப்பு மற்றும் அமெரிக்காவின் நீதிமன்ற அமைப்பு ஆகிய இரண்டு சட்ட வடிவங்களின் மையத் தொகுப்புகளையும் பின்பற்றுகிறோம். இந்தியாவில் நாடாளுமன்றமும், உச்சநீதி மன்றமும் அவற்றின் அதிகாரத்தில் மிக உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்படுகின்றன.
தியாகிகள் தினம் – ஜனவரி 30
இந்திய விடுதலைக்காக இன்னுயிரை சூந்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அணு;சலி செலுத்தும் வகையில் தேசந்தந்தை மகாத்மா காந்தியடிகள் மறைந்த (1948) ஜனவரி 30ஆம் தேதி ஆண்டுதோறும் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாம் விடுதலைக் காற்றை சுவாசிக்கக் காரணமாக இருந்த ஒவ்வொரு தியாகியின் நினைவாகவும் தேசத்தந்தை மகாத்மாவின் நினைவு தினம் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
தேச விடுதலைக்காக உயிர் நீத்த லட்சக் கணக்கான ‘வீரத்தியாகி’களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு அவர்களின் வீரச்செயல்களை நினைவு கூர்ந்து விடுதலை வரலாற்றை இளம் நெஞ்சங்களில் விதைக்க வேண்டிய உன்னத தினம் தியாகிகள் தினம்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மகாகவி பாரதி, பாலகங்காதர திலகர், தீரர் சத்தியமூர்த்தி, சுப்பிரமணிய சிவா, கோபால கிருஷ்ண கோகலே, பகத் சிங், அன்னிபெசன்ட் அம்மையார், தாதாபாய் நௌரோஜி, வல்லபாய் பட்டேல், மௌலானா அபுல்கலாம் ஆசாத், விபின் சந்திர பாலர், இரவீந்திரநாத் தாகூர், கவிக்குயில் சரோஜினி நாயுடு, வ.வெ.சு.ஐயர், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர் போன்ற எண்ணற்ற தலைவர்களின் தியாகத்தால் விளைந்தது இந்திய தேசத்து சுதந்திரம்.
விடுதலைப் போருக்கு ஆயுதம் எடுக்காமல் அகிம்சை என்னும் தியாகத் தத்துவத்தோடு புறப்பட்ட ஒரே நாடு இந்தியா. நல்ல நோக்கத்திற்காக, கைம்மாறு கருதாமல் செய்யும் அர்ப்பணிப்பே தியாகம். வாழ்வின் எல்லாத் தியாகங்களையும் விட இந்திய விடுதலைக்காக மக்கள் செய்த தியாகமே உயர்ந்தது, உன்னதமானது.
‘பெற்ற தாயும் பிறந்த நாடும் ஒன்று’ என்பதால் இரண்டையும் பாதுகாக்கத் தியாகம் புரிவது ஒவ்வொரு இந்தியனின் கருவோடு வளரும் கடமையாகிப் போனது. ‘உடல், பொருள், உயிர்’ என்று இந்திய விடுதலைக்காகத் தியாகம் செய்த ஒவ்வொரு தியாகியும் வீர வணக்கத்திற்குரியவர்கள்.