மாற்றி யோசிக்கலாம் வாங்க
மாரிமுத்துராஜ் A.G on Mar 2012
யோசித்தல் என்பது ஒருவகை திறமை. அதிலும் வித்தியாசமாக யோசித்தல் என்பது மிகச்சிறந்த திறமையாகும். நாம் விரும்பினால் அதை வளர்த்துக் கொள்ள முடியும் என்கின்ற உண்மையை முதலில் நாம் மனதார நம்ப வேண்டும். அப்போது நிச்சயமாக நம்மாலும் மிகச்சிறந்த அசத்தலான யோசனையை வழங்கமுடியும். அதற்கான வழிமுறையைப் பற்றி இனிபார்ப்போம்.
யோசனை அல்லது சிந்தனை எங்கு தேவைப்படும். செக்குமாடு போல வாழ்க்கை என்பது ஒரே திசையில் பல்லாண்டு காலமாக போய்க்கொண்டு இருந்தால், அங்கே சிந்தனையின் அவசியம் தேவைப்படும். வழக்கமான வாழ்க்கைத் தரத்தை மாற்றி அமைக்க, மாற்றி யோசிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. மேலும் ஒரு குழுவின் மத்தியில் செயல்படும்போது நாம் மட்டும் தனித்து தெரிய வேண்டும் என்றால், நாம் வித்தியாசமாக சிந்தித்து செயல்பட வேண்டும். மற்றும் நாம் ஏற்றிருக்கும் தலைமைப் பொறுப்பிலும், அது குடும்பமாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் அவ்விடத்தில் நம்மை நாம் வித்தியாசமாக வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் நமக்கு கீழ் பணியாற்றுபவர்கள், நம்முடன் முழுமனதுடன் இணக்கமாக பணியாற்றுவார்கள்.
இப்படி மாற்றி யோசிக்கும் திறமையானது வாழ்வில் மிக மிக தவிர்க்க முடியாதபடி, ஒரு அவசியமான செயலாகிப் போய்விட்டது இன்று. ஆகையினால் அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இன்று அனைவருமே உள்ளோம்.
எப்படி அந்தத் திறனை வளர்த்துக் கொள்வது? என்று பார்க்கப்போனால், முதலில் நாம் ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்ப்பதற்கு தெரிந்திருக்க வேண்டும். அதாவது, ஒரு விஷயத்தை நேர்மறையாகச் சிந்திக்கத் தொடங்கினால், அதன் உச்ச எல்லையை தொட்டுவிட வேண்டும். அதுபோல் அதன் எதிர்மறை சிந்தனையிலும் அதன் உச்சநிலை வரை சென்றுவிட வேண்டும்.
நேர்மறைத் தன்மையை (சாதகத்தை) யோசிக்கின்றபோது, எதிர்மறைத் தன்மைக்கு (பாதக நிலைக்கு) கொஞ்சமும் இடம் அளிக்கக்கூடாது. அதுபோல் எதிர்மறையாக சிந்திக்கின்றபோது, நேர்மறைக்கு துளியும் இடம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு சிந்தித்த இரு யோசனைகளிலும் இருந்து, எந்தவித விருப்பு, வெறுப்பு இன்றி, அதன் உள்ளே உள்ள உண்மைத் தன்மையைப் புரிந்து, இதன் முடிவு இப்படி இருந்தால் இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டாக இருக்குமே என்ற முடிவை எடுக்க பழகிக் கொள்ள வேண்டும். இத்தகைய முடிவுகள் எப்போதும் வியப்பூட்டக் கூடிய வகையிலே அமையும். இதனால் நம் யோசனையின் எல்லை விரிவடைவதுடன், ஒரு யோசனையில் இருந்து இன்னொரு யோசனைக்கு செல்லும் முறை வளர்ச்சியடைகிறது.
ஆக ஒரு விஷயத்திற்கான வித்தியாசமான தீர்வு என்பது, அதை நாம் பார்க்கின்ற தன்மையைப் பொறுத்து அமைகின்றது என்பது தெளிவாகிறது. பார்க்கின்ற தன்மை என்பது எதைப் பொறுத்து உருவாகின்றது என்றால், பல்வேறுபட்ட சூழலில் நாம் பெற்ற அனுபவம், கற்றகல்வி, எடுத்த சுயமுடிவுகளின் அடிப்படையிலே அமைகின்றது. மேலும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ளும் தன்மை, விளங்கிக் கொள்ளும் விதம், அதை கவனிக்கும் பாங்கு முதலானவை கூட பார்க்கும் பார்வையைப் பொறுத்துத்தான் அமைகின்றது. ஆகையினால் நம் பார்வையை கூர்மையாக்கிக் கொள்வோம்.
எப்போது நம் யோசனை ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். இதுவரை நடைமுறையில் உள்ள பொதுவிதியை மீறிச் செல்கின்ற போது, அந்த முடிவு சரியான முறையில் சாத்தியம் ஆகக்கூடிய வழிமுறையில் அமைந்திருந்தால் நிச்சயம் அந்த முடிவு ஆச்சரியத்தை உருவாக்கி, மற்றவரை அசத்திவிடும்.
எடுத்துக்காட்டாக, ஒரு புதிய கண்டுபிடிப்பு, அந்தக் கண்டுபிடிப்பை செய்துகாட்டும் போது பார்ப்பவர்க்கு ஜுஜுபியாகத் தோன்றும். அதையே அவர்களை செய்யச் சொன்னால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அவர்களால் அதுபோல் ஒரு வேளை செய்து காட்ட முடியாமலும் போகும். உடனே என்ன சொல்வார்கள், என்னடா இது லாஜுக்குÐ ஒன்னும் புரியலÐ அவன் செய்யும்போது சுலபமாக இருந்தது, நாம செஞ்சா வரமாட்டுங்கிதுÐ என்று உடனே கண்டுபிடிப்பாளரைப் பார்த்து சார், சார், எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்Ð அது எப்படி சார் என்று கேட்போம். அதை அவர் விளக்கமாக, நம்முன் செய்து காட்டிய உடன், அடÐ ஆமாÐ இது இவ்வளவுதானாÐ எப்படியா உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது என நாம் வியந்து போகின்ற விஷயங்கள் தான் எத்தனை, எத்தனை.
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் ஒரு வயது முடிவுக்கும், ஒன்பது வயது முடிவுக்கும் வேறுபாடு இருப்பது போல, இருபது வயது முடிவுக்கும், அறுபது வயது முடிவுக்கும் வித்தியாசம் இருக்கும். அதுபோல் எண்பது வயது முடிவுக்கும், நூறுவயது முடிவுக்கும் கூட பல்வேறு முரண்பாடுகள் இருக்கக்கூடும். என்றாலும், அந்தந்த காலகட்டதடதில் நம்முடைய முடிவுகள் மிகச் சிறந்தவையாக அமைய வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியையும், முயற்சியையும் நாம் மேற்கொள்கின்ற போது அது நிச்சயமாய் சாத்தியமாகும்.
சிறந்ததிழும், மிகச் சிறந்தது இருக்கும் என்கின்ற எண்ணமே, மாற்றுவழி தேடி மனதை உந்தித்தள்ளும். மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பது பெரிய விஷயமல்ல, மாற்று வழிகளைத் தேட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுதான் பெரிய விஷயம். பொறுமையாக, மனதை அதற்கேற்றவாறு பக்குவப்படுத்தி விட்டால் அது எளிதாகிவிடும்.
சில நேரங்களில் மாற்று வழிகள் சிறப்பாக அமையாமல் போகக்கூட சாத்தியம் உண்டு. அப்போது நாம் பிடிவாதம் பிடிக்காமல், நம்மை மாற்றிக் கொள்ளத் தயாராகிக் கொள்ள வேண்டும். அதுமட்டும் போதாது நாம் மாற்றுவழி முறையைத் தேடுவதையும் நிறுத்திவிடக் கூடாது.
மோசமான நிலைக்கு மட்டுமே, மாற்று யோசனை வேண்டும் என்றில்லை. வெற்றிகரமான செயல்பாடு கொண்டிருக்கும், ஒரு செயலுக்கும் கூடத் தேவைப்படும். எப்படி என்றால் இதை இன்னும் எளிமையாக்க, திறன்மிக்கதாக்க, இதைவிட சிறந்த வேறு முறையில் எப்படி செய்ய முடியும். இன்னும் ஒருபடி மேலே போக முடியுமா? என்பதற்கும் அது தேவைப்படும்.
மாற்று யோசனையைப் பொறுத்தமட்டில், எந்த அளவுக்கு தகவல்கள் (தரவுகள்) இருக்கின்றதோ, அந்த அளவுக்கு சிறப்பாக நம் சிந்தனை அமையும். கைவசம் இருக்கும் விவரங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு என்ன இல்லை என்பது பற்றிய அறிவும் முக்கியமாகும். தேவையான தகவல் இல்லை என்றால், சிலவற்றை ஊகித்தும், நமது மதிப்பீடுகளை, உணர்ச்சிகளை எல்லாம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். சின்னஞ்சிறு தகவல் கூட முடிவு எடுக்க பேருதவியாக இருக்கும். எனவே கொஞ்ச நேரம் கிடைத்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள முன் வர வேண்டும்.
மாற்றி யோசிப்பவர்கள், அதிகமாகவே கேட்பார்கள். ஒரு விஷயம் சொல்லப்படும் விதத்தை வைத்தும், வார்த்தைகளை பயன்படுத்தும் முறையை வைத்தும், வார்த்தைகளுக்கு இடையே இருக்கும் அர்த்தத்தை வைத்தும், பல விஷயங்களை கிரகித்துக் கொள்ளுவார்கள். அதாவது சொல்லப்படுவதைத் தவிர வேறு என்ன அதில் இருக்கலாம், இருக்க முடியும் என்ற தீவிரமான கற்பனை ஆற்றல் கைவரப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
மாற்று யோசனை, மகிமையுடையதாக இருக்க வேண்டும் என்றால், அதன் கருத்து நல்ல முறையில் உரிய இடம் சென்று சேர வேண்டுமானால், அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால், மாற்று யோசனையை கேட்பவரின் மொழியில் அது அமைந்திருக்க வேண்டும். இதுதான் மிக மிக முக்கியம்.
மாற்று யோசனை முடிவு எடுக்கும் முன் கவனிக்க வேண்டியது
பிரச்சனைதான் என்ன?
என்ன சூழ்நிலையில் முடிவு எடுக்க வேண்டி இருக்கியது? இப்போது இருக்கும் நிலைமைதான் என்ன? முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இப்போது எடுக்க வேண்டிய அவசியம் என்ன? பிரச்சனையை ஆறப்போட்டால் தானாகவே முடிந்து போக வாய்ப்புள்ளதா? அல்லது பிரச்சனை, தீவிரமாகுமா? முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கிறதா? நமது நிர்பந்தமா, வேறு யாராவது நிர்பந்திக்கின்றார்களா? முடிவு எடுக்க எவ்வளவு நேரம் இருக்கியது? விளைவுகள் எப்போது தெரியும்? முடிவை எப்போது எடுக்க வேண்டும்? இன்று, நாளை அல்லது ஒரு மாதத்திற்குள் ஒரு ஆண்டுக்குள்… எப்போது? எடுத்த முடிவு சரியா? தவறா? என்று எப்போது தெரியும்? முடிவு அதிரடி ஆனதா? அட்ஜெஸ்ட்மெண்ட் முடிவா? ஒன்றை நிறுத்தப்போகிறோமா? தொடங்கப் போகிறோமா? முடிவு தவறானால் மாற்ற வழி இருக்கிறதா?
அடேயப்பாÐ இத்தனை கேள்வியா? மலைப்பாக இருக்கிறதா? மனம் தளர வேண்டாம். சித்திரமும் கைப்பழக்கம்Ð செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல, இந்த முறையில் சிந்திக்கச் சிந்திக்க மனம் அந்த நிலைக்குத் தயாராகிவிடும். பின்பு நாமும் மிக விரைவாக வியக்கத்தகும் மாற்று வழிகளை கொடுக்கக்கூடிய மிக முக்கிய நபராகிப் போவோம். முயற்சிப்போம். முடியாதது எதுவுமில்லை.
மாற்று யோசனை முடிவிற்குப் பிறகு என்ன நடக்கும்?
நம்முடைய பாணி என்ன? நம்மைப் பற்றிய அடையாளம் எல்லாம் இங்கு தான் வெளிப்படுகின்றது. எனவே நம்முடைய இமேஜிற்கு சரியான முடிவை எடுக்கப் பழகுவோம். இல்லையென்றால், நீயா இப்படிச் செய்தாய்Ð என்கின்ற ஆச்சரியத்திற்கு ஆளாகிப்போவோம். எந்த முடிவாக இருந்தாலும் அதில் ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். எதையும் கவனமாகக் கையாண்டோம் என்றால் காரியச்சித்தி கைகூடும். நாம் என்ன அடைய விரும்புகிறோம் என்பதில் தெளிவு இருந்தால் எது முக்கியம் என்று தெரிந்திருந்தால் ஒரு விசயத்தை திட்டமிட்டுச் சிந்தித்து மனத்தை ஒருமுகப்படுத்தி நம்பிக்கையுடன் ஜாலியாக சுலபமாக ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்து மகிமை பெறலாம். வாருங்கள். மாற்றி யோசிக்கலாம். மகிழ்வோடு.