நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள் – 7
குழந்தை மிகவும் செழிப்பான முறையில் வளரவேண்டும் என்று, இத்துறை சார்ந்த அறிவியலாளர்கள், பலவாறான ஆராய்ச்சிகளைச் செய்து, ‘பச்சிளங் குழந்தைகளுக்குப் பொருத்தமான உணவு’ எனும் பொருள்படத்தக்க, “Infant Formula” என்று ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் தயாரிக்கப்படுவதுதான் குழந்தைகளுக்கான இந்தச் செயற்கை முறையிலான மாவுப்பால்.
“சுண்ணாம்புச் சத்து மிகுதியாக இருந்தால், குழந்தை மிக நன்றாக வளர்ச்சி அடையும்” என்ற நம்பிக்கையில், இவர்கள், அந்தப்பாலில், அளவுக்கு மிஞ்சி அந்தக் கேல்சியம் எனும் சுண்ணாம்புச் சத்தைச் சேர்க்கிறார்கள்.
உங்கள் குழந்தைக்குக் கொடுப்பதற்காகவோ, அல்லது, நீங்கள் உட்கொள்ளுவதற்காகவோ மாவுப் பால் வாங்கி வீட்டில் வைத்திருப்பீர்களானால், அதில் எழுதப்பட்டுள்ள விவரங்களை இப்போதே படித்துப் பாருங்கள். அதில் உள்ள சுண்ணாம்புச் சத்து எவ்வளவு என்று அறியும்போது, பெரும்பாலும், உங்களுக்கு மனப் பதைப்பு ஏற்படும்.
அதிக அளவிலான சுண்ணாம்புச் சத்தைப் பாலில் சேர்ப்பதற்கு அவர்கள் சொல்லும் மற்றொரு காரணம், “பாலில் இருக்கும் அவ்வளவு சுண்ணாம்பும் உடம்பினுள் உறிஞ்சிக் கொள்ளப்படுவதில்லை. எனவே, அதற்கு ஈடுகட்டுவதற்காகவாவது கூடுதலாகச் சுண்ணாம்புச் சத்தைச் சேர்க்கத்தான் வேண்டும்” என்பதே.
யாவருடைய குடலிலும் இயற்கையாகவே அமிலம் சுரக்கின்றது. அந்த அமிலமானது, நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சுண்ணாம்பை உறிஞ்சிக் கொள்ளப் பெரிதும் உதவுகிறது என்ற உண்மையை நாம் மறந்துவிடலாகாது.
இத்தருணத்தில், மற்றொரு தகவலை உங்களுக்கு உணர்த்தவிரும்புகிறேன். அது என்னவெனில்:
“புட்டிப் பால்” எனும் மாவுப்பாலில் ஒவ்வொரு சத்தும் எவ்வளவு இருக்கவேண்டும் என்று ஆராய்ச்சி செய்து முடிவெடுப்போர் பெரும்பாலும் மேலைநாட்டாராகவே இருந்துள்ளனர்.
பெருத்த உடலை உடைய மேலைநாட்டோர், கடுங்குளிர் உட்படப் பலதரப்பட்ட தட்பவெப்ப நிலையில் வளரும், பெருத்த அளவிலான தங்களுடைய குழந்தைகளுக்குத் தேவைப்படக்கூடிய அளவுகளை அடிப்படையாக வைத்தே இந்த மாவுப்பாலைத் தயாரிக்கிறார்கள்.
சூடான சூழ்நிலையில் வளரும், சற்று சிறிய உருவமுள்ள நமது குழந்தைகளுக்கு அந்த அளவுகள் எப்படிச் சரிப்பட்டு வரும்?
அவர்கள் பரிந்துரைக்கும் அளவுப்படி, பெரும்பாலான தாய்கள், ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் பால் மாவினையும் நீரையும் கலந்து கொடுப்பார்களானால், குழந்தைக்கு அது ஒத்துக்கொள்ளாமல் போகக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
இதுபோன்ற காரணங்களாலும் குழந்தைக்கு நீர்ப்பதமாகவும், குழகுழப்பாகவுமுள்ளவாறு மலம் வெளியேறும் வாய்ப்புமிருக்கிறது. இதனால், குழந்தையின் உடல் எடை மிக அதிகமாகக் கூடிவிடவும் முடியும்.
எனவே, மாவுப்பாலூட்டும் தாய்கள், அல்லது, மாவுப்பாலைக் குடித்துவரும் ஆண்களும் பெண்களும் சிந்தித்துச் செயல்படவேண்டியது மிகவும் முக்கியம் எனக்கொள்ளுக.
இயற்கையாகவே, குழந்தைகளுக்குத் தேவைப்படும் அளவிற்குச் சுண்ணாம்புச் சத்து உடம்பினுள் உறிஞ்சப் படாது போனாலும், அல்லது மிகமிக அதிகமாக – நாள் ஒன்றுக்கு 15 தடவைகளைப்போலச் சிறுநீர் வெளியேறினாலும், உடம்பினுள் உள்ள சுண்ணாம்புச் சத்து வெளியேறி, அதன் காரணமாகக் குழந்தை மிகவும் மெலிந்துபோய்விடும்.
இத்தகைய குழந்தை, தனது குழந்தைப் பருவத்திலேயே, “எலும்புந் தோலுமாய் உள்ளோர்” என்ற பிரிவைச் சார்ந்தது ஆகிவிடும்.
சென்ற தன்னம்பிக்கை இதழில், இந்த ‘மிக-மிக மெலிந்தவர்களைப் பற்றி மிக விரிவாக எழுதியிருந்தேன். அவற்றில் பெரும்பகுதியானவை இந்தமாதிரியான குழந்தைகளுக்கும் பொருந்துந்தான்.
எலும்புந்தோலுமாய் உள்ளோர் என்ற பிரிவிற்கு அடுத்தபடியாக உள்ளோர், “ஒல்லியாய் உள்ளோர்”.
அதற்கும் அடுத்த நிலையில் உள்ளோர், “செம்மையானோர்.
அதன் பின்னர் வருவோர்தாம் தடிப்பு வரிசையினர். இத்தகையோருள் முதல் நிலையினர், இரண்டாம் நிலையினர், மூன்றாம் நிலையினர் என்றவாறு உள்ளோர்களையெல்லாம்விட மிகவும் பெருத்துத் தடித்த உடலை உடையோர்தாம் நான்காம் வகையினர்.
நமது இவ்வெழுத்து வரிசையில், அடுத்து வரும் இதழில் நான் எழுதவிருப்பது, இந்த நான்காம் வகையினரைப்பற்றியே.
எதற்காக இவ்வாறு திடீரெனத் தாவப் போகிறேன் என்ற விளக்கத்தையும், ஏனையவற்றையும்பற்றி அடுத்த திங்களின் தன்னம்பிக்கை இதழில் காணலாம்.
Subscribe for new post
0 comments Posted in Articles