கோவையின் வரலாற்று வேர்கள்
இன்றைய திருப்பூர் மாவட்டம் 2009ல் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து உருவானது. திருப்பூர் மாவட்டம் திருப்பூர், தாராபுரம் ஆகிய இரண்டு வருவாய்க் கோட்டங்களை உள்ளடக்கியது. இதில் அவினாசி, திருப்பூர், பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய 6 தாலுக்காக்ககள் உள்ளன.
எந்நேரமும் விழித்திருக்கும் நகரம் என்ற பெருமையும் திருப்பூருக்கு உண்டு. இடைவெளி இல்லாமல் 24 மணி நேரமும் உற்பத்தி நடந்து கொண்டிருப்பதால் நகரம் எப்போதும் விழித்துக் கொண்டுதான் இருக்கும். திருப்பூர் நகரில் ஒரு சிறிய கட்டிடத்தில் நடக்கும் உற்பத்தி கூடப் பல கோடி அன்னியச் செலாவணியை ஈட்டித்தரக்கூடியதாக இருக்கும்.
வேலைவாய்ப்பின் காரணமாகத் திருப்பூரில் தனிநபர் வருமானம் அதிகம். ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்திக்கான அனைத்து நிலைகளிலும் பெருமளவில் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. என்றாலும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் பருவ நிலைக்கு ஏற்ப வேலைவாய்ப்பின் அளவு மாறுபடும். ஏற்றுமதிதான் திருப்பூரின் வர்த்தகம் என்பதால் டாலர் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும் வேலைவாய்ப்பில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
‘பனியன் நகரம்’ என்றழைக்கப்படும் திருப்பூர் ஆடை உற்பத்தியில் ஆசியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. பின்னலாடைத் தொழிலால் உலகளவில் உயர்ந்து நிற்பது திருப்பூர். ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி மதிப்பிற்கு அன்னியச் செலாவணியை ஈட்டிக்கொடுத்து, உலக வரைபடத்தில் தனக்கெனச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ள தொழில் நகரமான திருப்பூர் மாநிலம் மற்றும் தேசிய வளர்ச்சியில் முன்னிலை வகித்து வருகின்றது.
ஆரம்பத்தில் பருத்தி வர்த்தக நகரமாக விளங்கி வந்த திருப்பூர் நகரம், பின்னர் பருத்தி அரைவை ஆலைகள் துவக்கப்பட்டு தொழில் நகரமாக மாறத் துவங்கியது. திருப்பூரில் 1923 24ம் ஆண்டு வாக்கில் வெங்கிடுசாமி, அப்துல் கரீம் என்ற இரு நண்பர்கள் கூட்டாக இணைந்து இந்நகரில் முதன்முதலாகப் பனியன் தொழிலைத் துவங்கினர். 1930 32ம் ஆண்டு வாக்கில் திருப்பூரில் ஒரு நிறுவனத்தைச் செல்லம்மாள் என்ற பெண் நிர்வகித்து வந்தார். ஜப்பான் நாட்டிலிருந்து தையல் இயந்திரத்தை இறக்குமதி செய்தவர் அவர். திருப்பூர் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயக் குடும்பத்தினர் 1953 54ம் ஆண்டு வாக்கில் பனியன் தொழிலில் ஈடுபடத் துவங்கினர்.
1923 24ல் ஒரே பனியன் நிறுவனம் இருந்தது. 1932ல் 4 நிறுவனங்கள் இருந்தன. சைமா சங்கம் துவங்கிய காலத்தில் 90 நிறுவனங்களாகப் பெருகியது. 1972 73ல் சுமார் 1200 நிறுவனங்கள் என்ற நிலையை அடைந்தது. இப்போது பனியன் உற்பத்தி நிறுவனங்கள், அதைச் சார்ந்த சாயமிடும் தொழில், பனியன் துணியைச் சுருக்கம் நீக்கம் காம்பேக்டிங் நிறுவனங்கள், பனியன் ஆடைகளுக்கு மதிப்புக் கூட்டும் எம்ராய்டரிங் நிறுவனங்கள், பிரிண்டிங் நிறுவனங்கள் என 5000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
பொள்ளாச்சி
இயற்கை வளம் கொழிக்கும் சொர்க்க பூமி பொள்ளாச்சியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும். இப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு நல்ல மழை பெய்கிறது. மலைப்பகுதியான வால்பாறைக்கும், கேரளா எல்லைக்கும் நடுவில் உள்ளது பொள்ளாச்சி. பொள்ளாச்சிக்கு ‘தென்னை நகர்’ என்ற பெயருமுண்டு.
‘பொள்ளாச்சி சந்தையிலே’ என்ற திரைப்படப் பாடலைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்குப் பிரபலமானது பொள்ளாச்சி சந்தை. பொள்ளாச்சி சந்தை 1919ல் ஆரம்பிக்கப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. இந்தச் சந்தைதான் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரியது. அந்தக்காலத்தில் வால்பாறைக்குச் செல்ல சரியான சாலை வசதி கிடையாது. அதனால் அப்போது போக்குவரத்துக்கு யானைகளும், குதிரைகளும் பயன்படுத்தப்பட்டன. இதனால் பொள்ளாச்சி சந்தையில் யானைகளும், குதிரைகளும் கூட விற்கப்பட்டிருக்கின்றன.
பொள்ளாச்சி சந்தையின் இன்றைய பெயர் ‘காந்தி வாரச் சந்தை’. இப்பகுதி விவசாயிகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ‘கால்நடைச் சந்தை’ இன்றும் பிரம்மாண்டமாய் நடைபெற்று வருகிறது. கால்நடைகளை ஏற்றிச்செல்ல நூற்றுக்கணக்கான லாரிகளும், லாரிப்பேட்டைகளும் உள்ளன. இந்தச் சந்தை ஆண்டொன்றுக்கு பொள்ளாச்சி நகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை ஈட்டித் தருகிறது.
பொள்ளாச்சி அருகே 958 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது இந்திராகாந்தி வனவிலங்குச் சரணாலயம். இங்கு 72 சதுர கி.மீ. பரப்பளவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் போர்வையைப் போர்த்தினாற் போல உள்ள ‘புல்மலை’ மிகப்பெரிய அதிசயம். கடல் மட்டத்தில் இருந்து 2483 மீட்டர் உயரத்தில் உள்ள அக்காமலை, 2513 மீட்டர் உயரத்தில் உள்ள தனக்காமலை ஆகியவையும் இச்சரணாலயப் பகுதியில் உள்ளன. இங்கு ஒருபுறம் ஓங்கி உயர்ந்து விண்ணை முட்டும் மலை, மறுபுறம் கிடுகிடுக்க வைக்கும் அதல பாதாளம்.. இந்த இரண்டும் இணைந்த நிலப்பகுதி இங்குள்ளது.
பொள்ளாச்சி இப்போது வெளிப்புற படப்பிடிப்பு நிலையாக மாறிவருகிறது. இங்கு அனைத்து மொழித் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெறுகின்றன. மலைக்கள்ளன் படத்துக்காகத்தான் இங்கு முதன்முதலில் படப்பிடிப்பு துவங்கியது. எம்.ஜி.ஆரில் துவங்கி சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களும் நடிகைகளும் இங்கு படப்பிடிப்புக்காக வந்து சென்றுள்ளனர். இப்பகுதியில் தயாரிக்கப்பட்ட முழு நீளத் திரைப்படம் தான் ‘காதலிக்க நேரமில்லை’.
உடுமலை வட்டத்தில் நூற்றுக்கணக்கான நூற்பாலைகள், காகித ஆலைகள், பின்னலாடை நிறுவனங்கள், காற்றாலை நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் இயங்கி வந்தாலும் இன்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் இப்பகுதியில் பிரதானமாக விளங்கி வருகிறது. இங்குள்ள திருமூர்த்திமலை தமிழக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
உதகை
கோவை மாவட்டத்திலிருந்து 1868ல் நீலகிரி மாவட்டம் உருவானது. நீலகிரி ஒரு அழகுச் சோலை. குளிர்ந்த காற்றும், விண்ணை முட்டும் மரங்களும் பேரானந்தம் அளிப்பன. கூடலூர், குன்னூர் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களை உள்ளடக்கியது நீலகிரி மாவட்டம். இதில் பந்தலூர், கூடலூர், உதக மண்டலம், கோத்தகிரி, குன்னூர், குந்தா ஆகிய 6 தாலுக்காக்கள் உள்ளன. 18ம் நூற்றாண்டில் சர் ஜான் சலிவனால் கண்டறியப்பட்ட நீலகரி பகுதி தொடக்கத்தில் கோவை மாவட்டத்துடன் சேர்ந்த பகுதியாகவே கணக்கிடப்பட்டு வந்தது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாவின் பங்கு மிகவும் இன்றியமையாதது. உலக அளவில் எண்ணெய் வளத் தொழிலுக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் முக்கியத் துறையாகக் கருதப்படுவது சுற்றுலாத்துறை. சுற்றுலாத்துறை வளர்ந்து வரும் ஒரு துறையாகும். பல இடங்களை நேரில் பார்த்து அறிவை விருத்திச் செய்து கொள்ள வேண்டும் என்ற மக்களின் எண்ணங்களும் விழிப்புணர்வுமே சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது. 2002ம் ஆண்டை ‘சர்வதேச சூழியல் சுற்றுலா’ மற்றும் ‘மலைகளின் ஆண்டாகக்’ கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சுற்றுலா என்றாலே உடனே நினைவுக்கு வருவது ‘மலைகளின் ராணி’ என்றழைக்கப்படும் உதகமண்டலமே. இங்குள்ள அரசினர் தாவரவியல் பூங்கா வரலாற்றுப் புகழ் பெற்றது. 1897ம் ஆண்டில் 55 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காவில் உலகிலுள்ள பெரும்பாலான மலர் வகைகளும், அபூர்வமான மரவகைகளும் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உலகின் தாவரவியல் ஆராய்ச்சியாளர்களும் இப்பூங்காவிற்கு வருகின்றனர்.
மே மாதத்தில் நடத்தப்படும் மலர்க்காட்சித் திருவிழா காணக்கிடைக்காத ஒன்றாகும். உலகிலுள்ள 16 ரோஜா பூங்காக்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ரோஜா மலர் ரகங்கள் உள்ளன. நீலகிரி மலை முழுவதுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரிலிருந்து 6 மாதத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் வரை சுமார் 32 வகையான குறிஞ்சி மலர்கள் மலர்வது இம்மலைக்கே உரிய சிறப்பம்சம். நீலநிறத்திலான இந்த குறிஞ்சி மலர்களைக் கண்டுதான் நீலகிரிக்கு ஆங்கிலேயர்கள் ‘புளூ மவுண்டன்’ என்று பெயர் வைத்தார்கள் போலும்!
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த உதகை மலை ரயில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. மலை ரயில் இயங்கும் பல் சக்கரப்பாதை ஆசியாவின் ஒரே பல்சக்கரப் பாதை என்ற பெருமை பெற்றது. உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இம்மலை ரயில் இடம் பெற்றுள்ளது.
குன்னூர்
குன்னூரைப் பொறுத்தவரையில் இங்குள்ள ‘சிம்ஸ் பூங்கா’ அனைவரையும் கவரும் பூங்காவாகும். குறிப்பாக ‘ருத்ராட்ச மரம்’ காணக்கிடைக்காத மர வகையாகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இப்பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சி நடைபெறும். குன்னூரிலிருந்து உதகை செல்லும் வழியில் உள்ளது வெலிங்டன் நகர். வெலிங்டன் என்றாலே ராணுவம் நினைவுக்கு வரும். ஆம், இங்கு தான் (ஙதஇ) எனப்படும் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரின் தலைமையகம் உள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் கல்லூரி இங்குள்ளது. ‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ என்றழைக்கப்படுவது ‘கோத்தகிரி’ பகுதி. கோத்தகிரியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொடநாடு காட்சி முனை. இங்கிருந்து பார்த்தால் தமிழக கர்நாடக மாநில எல்லைகளைக் காணமுடியும். நீலகிரியின் முழு அழகையும் இங்கிருந்து காணலாம். கோத்தகிரியில் லாங்வுட் சோலை என அழைக்கப்படும் வனப்பகுதி இயற்கை வனப்புகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட பகுதியாகும்.
உதகையிலிருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ளது முதுமலை வனவிலங்குச் சரணாலயம். ‘தென்னிந்தியாவின் முதல் வனவிலங்குச் சரணாலயம்’ என்ற பெருமையும் இதற்கு உண்டு. சிறுத்தை, புலி, நரி, யானை, புள்ளிமான், கஸ்தூரிமான், காட்டெருமை, பறக்கும் முயல்கள் போன்ற அரியவகை விலங்கினங்களை இங்கு காணலாம். ஆசிய யானைகளின் வாழ்விடங்களில் முக்கிய பகுதியான முதுமலை வனச்சரணாலயத்தில் யானைச்சவாரி செய்வதும், வாகனங்களின் மூலம் வனத்தின் உட்பகுதிகளுக்குச் சென்று வனவிலங்குகளைப் பார்ப்பதும் வியப்பூட்டும் அனுபவங்களாகும். வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் முக்குருத்தி தேசிய பூங்கா, வெஸ்டர்ன் கேட்ச்மென்ட், அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய சுற்றுலா மையங்கள் உள்ளன.
ஈரோடு
1979ல் கோவை மாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டம் உருவானது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் ஈரோடு ஆகிய இரண்டு வருவாய்க் கோட்டங்களைக் கொண்டது. சத்தியமங்கலம், பவானி, கோபிசெட்டிபாளையம், பெருந்துறை மற்றும் ஈரோடு ஆகிய தாலுக்காக்களை உள்ளடக்கியது.
ஜவுளி உற்பத்தியில் பாரம்பரியம் மிக்கது ஈரோடு மாவட்டம். ஈரோடு, சென்னிமலை, பவானி, கவுந்தப்பாடி, காஞ்சிக்கோயில், திங்களூர், வெள்ளகோயில், மூலனூர் உள்ளிட்ட இடங்களில் கைத்தறி மற்றும் விசைத்தறி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தமிழக அரசு மூலம் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை, மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள் போன்றவற்றில் 80 சதவீதத்திற்கு மேல் ஈரோடு மாவட்டத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்குள்ள பவானிசாகர் அணையைக் கட்டும் பணி 1948ல் துவக்கப்பட்டு 1955ல் முடிக்கப்பட்டது. கோபி, பவானி, ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்கள் இந்த அணை மூலம் பாசன வசதி பெறுகின்றன.
பவானிசாகர் அணையிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ளது ஈரோட்டின் குற்றாலம் எனப்படும் கொடிவேரி அணை. இது 17ம் நூற்றாண்டில் மைசூர் மன்னரால் கட்டப்பட்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 900 சதுர மைல்கள்.
எண்ணெய் உற்பத்தி ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள், சாயப்பட்டறைகள், விசைத்தறிக் கூடங்கள் போன்றவை அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை அளிக்கின்றன. பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
ஈரோடு மஞ்சள் உலக அளவில் பிரசித்தி பெற்றது. ஆசிய அளவில் 2வது பெரிய சந்தையாக இது விளங்குகிறது. தமிழகத்தில் விளையும் மஞ்சளில் 65 சதவீதம் ஈரோடு மாவட்டத்தில் தான் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டில் இரண்டாவது பெரிய மஞ்சள் சந்தையாக ஈரோடு விளங்குகிறது. இங்கிருந்து அரபு நாடுகளுக்கு முதல்தர மஞ்சள் ஏற்றுமதியாகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் குதிரைச் சந்தை புகழ் வாய்ந்தது. திப்பு சுல்தானும், ஹைதர் அலியும் அந்தியூர் காட்டுப் பகுதியில் தனது போர்ப்படைத் தளபதிகள், வீரர்கள் அகியோருக்கு சண்டைப்பயிற்சி அளித்து வந்துள்ளனர். அதற்காகத் தமிழகம் முழுவதும் இருந்து குதிரைகளை வரவழைத்து விலைக்கு வாங்கி உள்ளனர். இது நாளடைவில் குதிரைச் சந்தையாக மாறிவிட்டது. ஆண்டுதோறும் இந்தச் சந்தை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குதிரைகள் சந்தையில் விற்கப்படுகின்றன.
நிறைவாக
நதி அதன் பிறப்பிடத்தில் சிறியதொரு ஓடை போலத்தானிருக்கும். அதுவே ஆயிரக்கணக்கான மைல்கள் ஓடி ஆடி, விழுந்து வளைந்து வெள்ளம் கரைபுரள ஓடும்போது பார்த்தால் மலைப்பாக இருக்கும். அதுபோல அன்று ‘கோயன்பதியாக’ உருவெடுத்தக் கோவை இன்று தென்னிந்தியாவின் ‘மான்செஸ்டராக’ உயர்ந்து நிற்கிறது.
பஞ்சாலைகள், ஆயத்த ஆடைகள், ஜவுளி எந்திரங்கள் மற்றும் உதிரிப் பாகங்கள், கிரைண்டர், எலக்ட்ரிக் பொருள்கள் ஆகியவற்றில் கோவை முன்னணியில் உள்ளது. பேடண்ட் ரைட் எனப்படும் காப்புரிமை சட்டத்தின் கீழ் இர்ண்ம்க்ஷஹற்ர்ழ்ங் ரங்ற் எழ்ண்ய்க்ங்ழ் என்பதற்கு புவியியல் குறியீடு பெறப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்தத் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு வெட்கிரைண்டர் கோவையில் தயாரிக்கப்படுகிறது.
மாருதி உத்யோக மற்றும் டாடா மோட்டர்ஸ் தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்களை சுமார் 30 சதவீதம் கோவைதான் அளிக்கிறது. தங்கநகை ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குகிறது. கோவையிலுள்ள கொடிசியா திடலை இந்தியாவின் மிகப்பெரிய “தூண் இல்லா திடலாக” லிம்கா புத்தகப் பதிவேடு அறிவித்துள்ளது.
அண்மைக் காலத்தில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து கோவை ஐப மற்றும் ஆடஞ நகரமாக முன்னேறி வருகிறது. உலகளவில் அவுட் சோர்சிங் சேவையில் 17வது இடத்தை வகிக்கிறது. அன்று 1831ல் கோவையில் ஒரே ஒரு பள்ளி, 3 ஆசிரியர்கள், 100 மாணவர்கள். இன்று கோவை மாவட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட பள்ளிகள், 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 9 லட்சம் மாணவர்கள்.
உயர்கல்வியை எடுத்துக்கொண்டால் 7 பல்கலைக்கழகங்கள், 2 மருத்துவக் கல்லூரிகள், ஒரு சட்டக்கல்லூரி, 50க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள், 35க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள்… இப்படி ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றன. வேளாண்மை, மென்பொருள், தகவல் தொடர்பு, பாலிடெக்னிக், ஐடிஐ, பாராமெடிகல் என அனைத்து அறிவுத்துறைகளும் செழித்து வளர்ந்த நிலையில் உள்ளது இன்றையக் கோவை.
என்ன வாசக நண்பர்களே! பரண்மேல் கிடந்த பழைய பெட்டியில் எங்கோ ஒரு மூலையில் அழுக்கடைந்து பூச்சரித்துப் போன புகைப்பட ஆல்பத்தை பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுகிறதல்லவா? ஆம், இந்த உரைச்சித்திரத்தைப் படித்த பிறகு கோவையைப் பார்க்கும்போது மனநிலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும். விடுதலைப் போராட்டத்தின் வீர வரலாற்றை அறிந்த பிறகு மேலோங்கி நிற்கும் தேசபக்தியைப் போல இந்த மண்ணின் வளர்ச்சிப் பாதையை அறிந்த பிறகு நம் பகுதியின் மீது நம்மை அறியாமலேயே ஒரு ஈடுபாடு தோன்றுவது இயற்கை.
2020ல் வல்லரசாக உருவாக இலக்கு வைத்து முன்னேறும் இந்தியா. அந்த வெற்றிப்பாதையை எட்ட கோவை வலிமையோடும் உறுதியோடும் துணை நிற்கும். பட்ண்ய்ந் எப்ர்க்ஷஹப்ப்ஹ் அஸ்ரீற் கர்ஸ்ரீஹப்ப்ஹ் என்ற வாசகத்துக்கு இணங்க உலகளவில் சிந்தித்து, ஊரளவில் செயல்பட்டு, நம் கோவை பாரளவில் புகழ்பெறப் பாடுபடுவோம்!
Subscribe for new post
0 comments Posted in Articles