வெற்றிக்கான தலைமை பண்பு
தலைவர் என்பவர் மாற்றத்திற்கு வித்திடுபவர். அந்த மாற்றம் தன்னை சார்ந்தவர்களிடையே ஒரு பெரிய சலனத்தை ஏற்படுத்திவிடும். ஒரு செயலை செய்ய, செய்து முடிக்க மற்றவர்களுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருப்பார். அந்த தூண்டுதல் அந்த குழுவின் வளர்ச்சிக்கும் நன்மதிப்பிற்கும் வித்தாக இருக்கும். ஒரு உண்மையான தலைவன், தான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதனை மற்றவர்களிடம் இருந்து பெற்றிடுவார். ஆனால் நினைப்பது மற்றவர்களின் நலன் நன்மதிப்பிற்கான இலக்காகத்தான் இருக்கும்.
இலக்கில்லா தலைவன் திறம்பட செயல்பட முடியாது. இது அரசியல் கட்சியாகட்டும், ஒரு நிறுவனத்தின் சிறு பிரிவாகட்டும் அல்லது குடும்ப தலைவனாகட்டும் இலக்கில்லா தலைவன் கவலைக்கிடமாவான். இலக்கை அடைவதில் தலைவன் அக்கறை, உறுதிப்பாடு, பேச்சு சாதுரியம், விடாமுயற்சி, தைரியம், வித்தியாசமான அணுகுமுறை, புதிய கோணத்தில் சிந்தித்தல் இவற்றோடு வெற்றி பெற்றிடுவோம் என்ற தன்னம்பிக்கைமிக்கவராக இருத்தல் வேண்டும். இலக்கில்லா தலைவர்கள் மற்றவர்களுக்கு நிச்சயம் இலக்கினை நிர்ணயிக்க முடியாது. சொல்லப்போனால் இலக்கில்லா தலைவன் மற்றவர்களின் இழுக்கான பேச்சுக்கு இலக்காகி விடுவான் என்பது மட்டுமே நிச்சயமானது.
தலைவனுக்கு சுயதூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சொல்லாமலே தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கெர்ணடு தன்னை வெளிக்கொணர வேண்டும்.
ஏமாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும்.
ஒரு விடிவெள்ளியைப் போல, வெற்றியின் அடையாளமாக, கைகாட்டி மாதி, டார்ச் லைட் மாதிரி அருகில் மட்டுமல்ல தூரத்தில் உள்ளதையும் அதன் வழித்தடத்தையும் வெளிச்சமிட்டு வழிகாட்டுபவராக இருக்க வேண்டும்.
ஒரு தலைவனின் வீட்டுக்கு உள்ளே – வெளியே நடத்தைகள் பின்பற்றுபவர்களின் ஏமாற்றத்திற்கு இலக்காகிவிடக்கூடாது. மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக எப்போதும் இருக்க வேண்டும்.
தலைவனுடைய பலம் தலைவனுக்குத் தெரிய வேண்டும். நான் என்பதை நானேற்ற வேண்டும்.
ஒற்றுமை உணர்வுகளை ஒரு உறவுபோல வளர்த்திட வேண்டும். விரிசல் இல்லா உறவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
பேச்சாற்றல் – தலைவனின் விளம்பர பலகை மாதிரி – பேசுவது மற்றவர்களை கவர்வது மட்டுமல்லாமல் கவலையிலிருந்து விடுவிக்கும். பயத்தை விலக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்க வேண்டும் அல்லது அப்படிப்பட்ட ஆற்றலை வளர்த்துக்கொள்பவராக தலைவன் இருக்க வேண்டும் தற்போதைய அரசியல் தலைவர்களை கவனித்தால் அவர்களின் இயலாமை, தலைமை தன்மையிலிருந்து எவ்வளவு தூரம் விலகி ஓடிவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். காரணம் கருத்து வேறுபாடல்ல; கலந்துரையாட (தன்னலம் கருதி) தயாராக இல்லாததால் தலைவனின் பண்புகளை வெகுவாக இழந்திருக்கிறார்கள். அதனால் நல்ல தலைமைகளை மக்கள் இழந்து தவிக்கிறார்கள். மேலும் தலைமைப் பண்புகளை குழு உறுப்பினர்களே தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். வீதியில் கொஞ்சம் பேர் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் பேச்சு என் கவனத்தை ஈர்த்தது. ஒருவர் சொன்னார், “தேர்தலில் நின்றால் தினமும் நிறைய செலவு செய்யனும் அவர் அப்படியா செய்கிறார். அப்புறம் எப்படி ஓட்டு வாங்க முடியும்”, பார்த்தீர்களாÐ தலைவனுக்குரிய தகுதிகளை பொதுமக்கள் எப்படி கணித்து வைத்திருக்கிறார்கள் என்று. பிறகு எப்படி நல்ல தலைமையை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்.
மேலாளர்களின் திறமை மட்டும் தலைவனுக்குரிய குணாதிசயங்கள் அல்ல. மேலாளர்களையும் தங்கள் பக்கம் செவிசாய்த்திட செய்பவர்களே தலைவர்கள்.
சந்தர்ப்பவாதியாக இல்லாமல் கிடைத்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொள்ள – தன்னைச் சார்ந்தவர்களுக்கு சாதகமாக்கி கொள்ள தெரிந்திருக்க வேண்டும். இப்போதுள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கி கொள்ளவே பார்க்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாமல் இல்லை.
தலைவன் தவறு செய்யாதவன் அல்ல. தவறிலிருந்து கற்றுக்கொள்ளாதவன் ஒருபோதும் தலைவனாக இருக்க முடியாது.
எல்லாவற்றிற்கும் மேலாக தான் ஒரு தலைவன் என்ற நம்பிக்கையை முழுமையாக மனதிற்குள்ளும் செயல்பாடுகளிலும் விதைக்க வேண்டும்.
இதை எழுதி முடிக்கும் பொழுது என் காதில்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
இந்த உலகத்தில்…
என்ற பாடல் ஒலிபரப்பு ரிங்காரமிட்டது. உங்களின் காதுகளுக்கும் இதைப்படிக்கும் போது கேட்கும் என நம்புகிறேன். நல்ல தலைவனை தேர்ந்தெடுத்திட அல்லது நல்ல தலைவனாக திகழ வாழ்த்துகிறேன்.
3 comments Posted in Articles