– 2011 – December | தன்னம்பிக்கை

Home » 2011 » December (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வெற்றிக்கான தலைமை பண்பு

    தலைவர் என்பவர் மாற்றத்திற்கு வித்திடுபவர். அந்த மாற்றம் தன்னை சார்ந்தவர்களிடையே ஒரு பெரிய சலனத்தை ஏற்படுத்திவிடும். ஒரு செயலை செய்ய, செய்து முடிக்க மற்றவர்களுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருப்பார். அந்த தூண்டுதல் அந்த குழுவின் வளர்ச்சிக்கும் நன்மதிப்பிற்கும் வித்தாக இருக்கும். ஒரு உண்மையான தலைவன், தான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதனை மற்றவர்களிடம் இருந்து பெற்றிடுவார். ஆனால் நினைப்பது மற்றவர்களின் நலன் நன்மதிப்பிற்கான இலக்காகத்தான் இருக்கும்.

    இலக்கில்லா தலைவன் திறம்பட செயல்பட முடியாது. இது அரசியல் கட்சியாகட்டும், ஒரு நிறுவனத்தின் சிறு பிரிவாகட்டும் அல்லது குடும்ப தலைவனாகட்டும் இலக்கில்லா தலைவன் கவலைக்கிடமாவான். இலக்கை அடைவதில் தலைவன் அக்கறை, உறுதிப்பாடு, பேச்சு சாதுரியம், விடாமுயற்சி, தைரியம், வித்தியாசமான அணுகுமுறை, புதிய கோணத்தில் சிந்தித்தல் இவற்றோடு வெற்றி பெற்றிடுவோம் என்ற தன்னம்பிக்கைமிக்கவராக இருத்தல் வேண்டும். இலக்கில்லா தலைவர்கள் மற்றவர்களுக்கு நிச்சயம் இலக்கினை நிர்ணயிக்க முடியாது. சொல்லப்போனால் இலக்கில்லா தலைவன் மற்றவர்களின் இழுக்கான பேச்சுக்கு இலக்காகி விடுவான் என்பது மட்டுமே நிச்சயமானது.

    தலைவனுக்கு சுயதூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சொல்லாமலே தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கெர்ணடு தன்னை வெளிக்கொணர வேண்டும்.

    ஏமாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும்.

    ஒரு விடிவெள்ளியைப் போல, வெற்றியின் அடையாளமாக, கைகாட்டி மாதி, டார்ச் லைட் மாதிரி அருகில் மட்டுமல்ல தூரத்தில் உள்ளதையும் அதன் வழித்தடத்தையும் வெளிச்சமிட்டு வழிகாட்டுபவராக இருக்க வேண்டும்.

    ஒரு தலைவனின் வீட்டுக்கு உள்ளே – வெளியே நடத்தைகள் பின்பற்றுபவர்களின் ஏமாற்றத்திற்கு இலக்காகிவிடக்கூடாது. மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக எப்போதும் இருக்க வேண்டும்.

    தலைவனுடைய பலம் தலைவனுக்குத் தெரிய வேண்டும். நான் என்பதை நானேற்ற வேண்டும்.

    ஒற்றுமை உணர்வுகளை ஒரு உறவுபோல வளர்த்திட வேண்டும். விரிசல் இல்லா உறவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

    பேச்சாற்றல் – தலைவனின் விளம்பர பலகை மாதிரி – பேசுவது மற்றவர்களை கவர்வது மட்டுமல்லாமல் கவலையிலிருந்து விடுவிக்கும். பயத்தை விலக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்க வேண்டும் அல்லது அப்படிப்பட்ட ஆற்றலை வளர்த்துக்கொள்பவராக தலைவன் இருக்க வேண்டும் தற்போதைய அரசியல் தலைவர்களை கவனித்தால் அவர்களின் இயலாமை, தலைமை தன்மையிலிருந்து எவ்வளவு தூரம் விலகி ஓடிவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். காரணம் கருத்து வேறுபாடல்ல; கலந்துரையாட (தன்னலம் கருதி) தயாராக இல்லாததால் தலைவனின் பண்புகளை வெகுவாக இழந்திருக்கிறார்கள். அதனால் நல்ல தலைமைகளை மக்கள் இழந்து தவிக்கிறார்கள். மேலும் தலைமைப் பண்புகளை குழு உறுப்பினர்களே தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். வீதியில் கொஞ்சம் பேர் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் பேச்சு என் கவனத்தை ஈர்த்தது. ஒருவர் சொன்னார், “தேர்தலில் நின்றால் தினமும் நிறைய செலவு செய்யனும் அவர் அப்படியா செய்கிறார். அப்புறம் எப்படி ஓட்டு வாங்க முடியும்”, பார்த்தீர்களாÐ தலைவனுக்குரிய தகுதிகளை பொதுமக்கள் எப்படி கணித்து வைத்திருக்கிறார்கள் என்று. பிறகு எப்படி நல்ல தலைமையை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்.

    மேலாளர்களின் திறமை மட்டும் தலைவனுக்குரிய குணாதிசயங்கள் அல்ல. மேலாளர்களையும் தங்கள் பக்கம் செவிசாய்த்திட செய்பவர்களே தலைவர்கள்.

    சந்தர்ப்பவாதியாக இல்லாமல் கிடைத்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொள்ள – தன்னைச் சார்ந்தவர்களுக்கு சாதகமாக்கி கொள்ள தெரிந்திருக்க வேண்டும். இப்போதுள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கி கொள்ளவே பார்க்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாமல் இல்லை.

    தலைவன் தவறு செய்யாதவன் அல்ல. தவறிலிருந்து கற்றுக்கொள்ளாதவன் ஒருபோதும் தலைவனாக இருக்க முடியாது.

    எல்லாவற்றிற்கும் மேலாக தான் ஒரு தலைவன் என்ற நம்பிக்கையை முழுமையாக மனதிற்குள்ளும் செயல்பாடுகளிலும் விதைக்க வேண்டும்.

    இதை எழுதி முடிக்கும் பொழுது என் காதில்

    உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
    இந்த உலகத்தில்…

    என்ற பாடல் ஒலிபரப்பு ரிங்காரமிட்டது. உங்களின் காதுகளுக்கும் இதைப்படிக்கும் போது கேட்கும் என நம்புகிறேன். நல்ல தலைவனை தேர்ந்தெடுத்திட அல்லது நல்ல தலைவனாக திகழ வாழ்த்துகிறேன்.

    சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள்

    44. பன்முக வெற்றிக்கு பாதைபோடும் படைப்பாற்றல்

    சாதனைகளை சாத்தியமாக்கி சரித்திரத்தில் முத்திரை பதித்த வரலாற்று நாயகர்களின் வரலாற்றை புரட்டி பார்த்தால், அவர்கள் வெற்றிக்கு அடிப்படையாக இரண்டு காரணிகள் காரணமாக இருந்துள்ளதை காணலாம்.

    ஒன்று : இடர் ஏற்பு
    மற்றொன்று : படைப்பாற்றல்

    ரோஜர்வோன் ஓயெச் கூற்றுப்படி இறைவன் படைப்பால் அனைத்து மனிதர்களும் சிறந்த படைப்பாற்றலுக்கு சொந்தமானவர்களே. மழலை பருவத்தில் திறந்த மனதோடு இயல்பாகவே நம்மில் இருக்கும் படைப்புதிறனை முழுமையாக பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளை, விடைகளை, வழிமுறைகளை படைக்கும், சிந்திக்கும் குழந்தைகள், வளர்ந்த பின் தங்கள் தனித்தன்மையான படைப்பாற்றலை இழந்து தாங்கள் அறிந்த, விரும்பும், கருத்துக்களிலேயே திடமாக (அடமாக) நின்று முடிவுகளை எடுக்கின்றனர். விளைவு சாதாரண செயல்திறன், பலன்கள் மற்றும் விளைவுகள். இவை நம் வாழ்வை அன்றாடங்காய்ச்சி வாழ்வாக மாற்றிவிடுகின்றது. நம் வாழ்நாளில், நம் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்க முடியாமல் போய் விடுகின்றது.

    ஆகவே, சாதிக்க வேண்டுமானால், சரித்திரம் படைக்க வேண்டுமானால், நம்மில் இயற்கையாகவே காணப்படும் படைப்புத்திறனை, மாற்றியோசிக்கும் திறனை மெருகேற்றியே ஆக வேண்டும்.

    படைப்புத்திறனை வளர்ப்பதனால் நம் வாழ்வில் விளையும் நன்மைகள் எண்ணிலடங்கா. படைப்பாற்றல் நம் கற்பனாசக்தியை வளப்படுத்துகிறது. பிரச்சனைகளுக்கு விரைவான, தரமான விடைகளை, மாற்றுக்கருத்துகளை வழங்குகின்றது. வாழ்வில், தொழிலிலில் வெற்றிபெற தேவையான புதுமையான யுக்திகள், வழிமுறைகள், தொழில்நுட்பம் மற்றும் கருத்துகளை தருகின்றது. உறவுகளை மேம்படுத்துவது, சமயோஜித அறிவை வளப்படுத்துவது, ஊக்குவிக்கும் திறனை அதிகரிப்பது, ஏற்றம்தரும் மாற்றத்திற்கு வழிவகுப்பது என எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்தி தருகின்றது படைப்புத்திறன்.

    இயல்பான படைப்பாற்றல் எங்கே போனது ?

    சந்தோஷ சாதனை வாழ்விற்கு அடிப்படையான படைப்பாற்றல் என்பது மனிதனின் இயல்புகளில் ஒன்று. பிறப்பின்போது படைப்பாற்றலோடு பிறக்கும் குழந்தை, தொடர்ந்து படைப்புத்திறனோடும், ஊக்கத்தோடும், ஏற்றத்தோடும் வாழ்வதோ (அல்லது) சாதாரணமாக வாழ்வதோ, அந்தக் குழந்தையின் வளர்ப்பு முறை மற்றும் வளரும் சூழலை பொறுத்தே அமைகின்றது. தாய் தந்தையரின் வளர்ப்புமுறை, ஆசிரியர்களின் கல்விமுறை, வளரும் சூழல் போன்ற எண்ணற்ற காரணிகள் மூலம் படைப்பாற்றலை இழந்துவிடுவதனாலேயே நம்மில் பலரும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்து வருகிறோம். ஆகவே, நம்முள் மறைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டுவருவோம். வாழ்வை வளமிகுந்த சாதனை பாதையில் திசை திருப்புவோம்.

    படைப்பாற்றலை வெளிக்கொண்டுவரும் வழிமுறைகள்

    1. கனவு காணுங்கள், கற்பனை செய்யுங்கள். தினமும் உங்கள் கற்பனா சக்தியை வளர்க்க ஒரு பதினைந்து நிமிடமேனும் (உங்களுக்கு உகந்த நேரத்தில்) ஒதுக்குங்கள். கற்பனை குதிரையை தட்டிவிடும்போது எந்தக் கட்டுப்பாடும் இருக்கவேண்டாம். எதைப்பற்றி வேண்டுமானாலும் கற்பனை செய்யுங்கள். எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்யுங்கள். கற்பனை, வானம் எனும் எல்லையை தாண்டி செல்லட்டும், உலகமெனும் கட்டுப்பாட்டை கடந்து போகட்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்கள் படைப்பாற்றல் உறுதியாக ஊக்கம் பெறும்.

    2. படைப்பாற்றல் சிறப்படைய வேண்டுமானால் நம்மில், நம் படைப்புத்திறனில் நமக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். நண்பர்களே நாம் ஒவ்வொருவரும் உலகின் எந்த ஒரு சிறப்பான கணினியிடமும் இல்லாத ஒப்பற்ற அறிவாற்றலுக்கு சொந்தக்காரர்கள். நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். “நம்பிக்கையே வாழ்வு’. உங்கள் படைப்புத்திறனில் முழு நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் படைப்பாற்றல் நீங்களே வியக்கும் வண்ணம் சிறந்த படைப்புக்களை உங்களுக்கு நல்குவது நிச்சயம்.

    3. தோல்விகளைக் கொண்டாடுங்கள். அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் துறைகளில் இன்று வரை ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு காரணம், சாதனையாளர்களுக்கு அவர்கள் சாகசப்பயணங்களில் ஏற்பட்ட தோல்விகளே. தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் அவர்கள் வெகுண்டெழுந்து, வெற்றியை நோக்கி புறப்பட அவர்களுக்கு உதவியது நேர்மறை மனோபாவமே. சாதனையாளர்களுக்கு சரித்திரம் படைக்க உதவிய ஆயுதம் தோல்வியை வெற்றியாக எண்ண உதவிய நேர்மறை மனோபாவமே. ஆகவே, உங்கள் படைப்பாற்றல் மூலம் கிடைத்த கருத்துக்கள் அல்லது வழிமுறைகள் தோல்வியில் முடியுமானால், சோர்ந்து விடாதீர்கள். அது வெற்றியின் அறிகுறி என அறிந்து மேலும் முயற்சியை தொடருங்கள்.

    4. ஓய்வு: உங்கள் படைப்பாற்றல் சிறப்படைய வேண்டுமானால், தேவையான அளவு ஓய்வு நேரத்தை உருவாக்கி, படைப்புப்பணிக்காக ஒதுக்கி வருவது நல்லது. ஓய்வு நேரம் மணித்துளிகளில் இருந்து மாதங்கள் மற்றும் வருடங்களாக கூட இருக்கட்டும். படைப்புக்காக ஒதுக்கும் ஓய்வு நேரத்தை முழுமையாக (கைபேசி, வலைதளம், தொலைக்காட்சிப்பெட்டி போன்றவற்றை அணைத்து வைத்து) பயன்படுத்துவது, படைப்புத்திறனை மேலும் அதிகரிக்க உதவும்.

    5. மனிதரோடு இணைந்து வாழுங்கள். ஏனென்றால் மனிதர்களே படைப்பாற்றலுக்குத் தேவையான கருத்துக்கள், அனுபவங்கள், பிரச்சனைகள், கேள்விகள் போன்றவற்றை வழங்குகிறார்கள்.

    6. உங்களுக்குள் இருக்கும் குழந்தையை தட்டி எழுப்பிவிடுங்கள். நமக்குள் இருக்கும் குழந்தை மனமே நம் இயல்பான மனம். அதுவே, படைப்புத்திறனின் ஊற்றுக்கண். அந்தக் குழந்தைப் பகுதியை குழந்தைகளோடு விளையாடுவது, குழந்தைபோல் செயல்படுவது, பகல் கனவு காண்பது, இயற்கையோடு ஒன்றி வாழ்வது, மிருகங்கள், மீன்கள், மற்றும் காட்டுப்பகுதிகளை ரசிப்பது போன்ற செயல்கள் மூலம் வெளிக்கொண்டுவர முடியும். அப்படி உங்கள் குழந்தை மனதோடு உறவைபுதுப்பிக்க துவங்குங்கள். சந்தோஷ சாதனை வாழ்வு வருவது நிச்சயம்.

    7. பதிவு செய்யுங்கள்: படைப்பாற்றலோடு புதிய பிறவி எடுக்கும், தாங்கள் எப்போது விழிப்புணர்வுடன் கைபேசி, டைரி, குறிப்புப் புத்தகம், கணினி போன்றவற்றின் உதவியுடன், உங்கள் படைப்பு மனம் தரும் அரிய கருத்துக்களை பதிவு செய்யுங்கள். பதிவு செய்வது மட்டுமல்ல நம் படைப்பு மனம் தரும் அரிய கருத்துக்களை அவ்வப்போது செயல்படுத்துவது அதைவிட முக்கியம்.

    செயல்படுத்த துவங்கும்போது தான், கருத்துக்களை மேம்படுத்தி மேலும் சிறந்த படைப்புக்களை உருவாக்க முடியும். மட்டுமல்ல, செயல்பாடு மூலம் ஒரு சில படைப்புக்கள் வெற்றி அடையும் போது தான் மீண்டும் மீண்டும் படைப்புத்திறனை அதிகப்படுத்த நமக்கு தேவையான உற்சாகமும், உத்வேகமும் நம்மில் ஊற்றெடுக்கும்.

    இலக்கை எட்டுவது எளிது

    1987ம் ஆண்டு என்னுடன் டிப்ளமோ படித்தவர்கள் 50 பேர். இதில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கலந்துரையாடுகின்ற வாய்ப்பு கிடைத்தது. அதிலே, பெரும்பாலானவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பரவாயில்லை, ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் இதுவரைக்கும் பிரச்சனை இல்லாமல் ஓடிக்கிட்டே இருக்கிறது என்றார்கள். ஒருசிலர் மட்டும்தான் வசதியாக, வளமுடன், நலமுடன் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

    ஒரு சிலருக்கு மட்டுமே கிட்டிய வெற்றி, ஏன் அனைவருக்கும் சாத்தியப்படவில்லை என எண்ணிப்பார்க்கின்ற போது, கிடைத்த பதில் சரியான இலக்கு அவர்களிடம் இல்லை என்பது தான். இந்த உலகத்தில் அன்று முதல் இன்று வரை வெற்றியாளர்களாக திகழ்ந்தவர்கள் அனைவருமே அளப்பரிய இலக்கை நிர்ணயித்து அதன் வழியே இடையறாது பயணித்து வென்றவர்கள் தான் என்றால், நாமும் ஏன் அத்தகைய இலக்கை நிர்ணயிக்கக்கூடாது?

    இலக்கு என்றால் என்ன?

    நம்மிடத்திலே இருக்கக்கூடியதும், சிறு வயது முதல் நம்முடனே வளர்ந்து வரக்கூடியதுமான எண்ணத்தை வெளிக்கொண்டுவரும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பது இலக்கு ஆகும். இத்தகைய இலக்குதான், மற்றவர்களிடம் இருந்து நம்மை தனித்துவம் மிக்கவராக அடையாளப்படுத்தும்.

    இன்று நீங்கள் இந்த நிலையை அடைந்திருப்பது உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பாலே தவிர திடீர் என்று அது வானத்தை பொத்துக்கொண்டு வந்தது அல்லÐ எனவே, இதைவிட இன்னும் உயர்வான நிலையை அடைய உங்களால் முடியும் என்கிற எண்ணத்தை முதலில் உங்களிடம் மேம்படுத்துங்கள்.

    இதுபோதும் என்று நினைத்திருந்தால்
    யாரும் வளர்ந்திருக்க முடியாதுÐ
    இன்னும் வேண்டும் என்றதால் தான்
    வளர்ந்து கொண்டே இருக்கின்றார்கள்
    என்பதை மனதில் பதிய வைப்போம்

    இலக்கை நாம் எப்படிப்பட்டதாக அமைக்க வேண்டும்

    “SMART” ஆக

    S – Specific குறிப்பிடும் படியானதாக
    (இந்த ஆண்டு கார் வாங்க வேண்டும்)
    M – Measurable அளவிடக்கூடியதாக
    (அது 5 லட்சம் மதிப்புள்ளதாக இருக்கும்)

    A – Achievable சாத்தியப்படக் கூடியதாக
    (என் தகுதிக்கு மீறியதாக இல்லாமல் இருப்பது)

    R – Realistic நடைமுறைக்கு ஏற்றதாக
    (நம்மை சுற்றி உள்ளவர்கள் அங்கீகரிக்கும் அளவு
    படைத்ததாக)

    T – Time Bound கால எல்லைக்கு உட்பட்டதாக
    (ஒரு வருடத்தில் வாங்கிவிட வேண்டும்)

    இத்தகைய ‘Smart’ஆன இலக்கை அமைத்துக் கொண்டு அதற்கு மேலும் சக்தியூட்டப்படும்போது அதை அடைவது எளிதாகின்றது. எப்படி அதை சக்தி ஊட்டுவது என்றால், அதற்கு ‘5D’ தேவைப்படுகிறது.

    1. Direction: தன்னைச் சுற்றி உள்ளவர்களுடன் இலக்கை பகிர்வதால், அவர்கள் அதற்கான வழியைக் காட்டுகின்றார்கள்.

    2. Dedication: முழு ஈடுபாட்டுடனும், கண்ணும் கருத்துமாக காரியம் ஆற்றுவது.

    3. Determination: என்னால் முடியும், எந்தத் தடையையும் கடந்து சாதிக்க முடியும் என்கின்ற மனஉறுதி.

    4. Discipline: ஒழுங்குமுறை, முன்னுக்குப்பின் முரண்படாத ஒன்றன்பின் ஒன்று என்கின்ற கட்டுப்பாடு.

    5. Deadline: காலக்கெடு. இந்தத் தேதி, இன்ன நேரம் இதைச் சாதித்துவிட வேண்டும் என்கின்ற திட்டம்.

    இத்துடன் முடிந்துவிடுவதல்ல இலக்கு. அதை மூன்று விதமாக பிரிக்க வேண்டும். அவை நீண்டகால இலக்கு, இடைக்கால இலக்கு, உடனடி இலக்கு. நீண்டகால இலக்கு என்பது மூன்று முதல் பத்து ஆண்டு கொண்டது. இடைக்கால இலக்கு என்பது நீண்டகால இலக்கை நோக்கி எப்படி முன்னேறிச் சென்றுகொண்டு இருக்கின்றோம் என்பதை மையப்படுத்தியது. இங்குதான் நாம் சரியாக செயல்பட வேண்டும். இலக்கில் ஏதாவது காலதாமதம் ஏற்பட்டால், உடனே அதற்கான மாற்று வழியைப் பயன்படுத்த வேண்டும். உடனடி இலக்கு என்பது, ஒவ்வொரு நாளும், நாம் மேற்கொள்ளும் முயற்சி. இப்படி மிகப்பெரிய இலக்கை சிறுசிறு பகுதியாகப் பிரித்து, ஒன்றன்பின் ஒன்றாக எட்டுவது எளிதாகி விடுகின்றது.

    இலக்கை எட்டக்கூடிய எளிய வழிமுறைகள்

    1. இலக்கை பெரிய எழுத்துக்களில் எழுதி நம் கண் முன்னால் எப்போதும் படும்படியாக வைத்து, அதைத் திரும்பத்திரும்ப படித்து உள்வாங்கிக் கொள்வது.

    2. நம்மை சுற்றி உள்ளவர்களிடம் எல்லாம் சொல்லிவிடுவது. இதில் இரண்டு நிகழ்வுகள் நடக்கும். ஒன்று, நமக்காக அவர்கள் உதவுவார்கள். மற்றொன்று, அவர்களிடம் சொல்லிவிட்டாமே என்று அதற்காக நாம் இயங்குவது.

    3. இலக்கை எட்டிவிட்டது போலவும், அதனால் ஏற்படும் சந்தோசத்தை அனுபவிப்பது போலவும் அடிக்கடி மனக்காட்சி காண்பது.

    4. ஒவ்வொரு நாளும், வழக்கத்தைவிட கூடுதலாக, நம் இலக்குக்காக 0.3% கூடுதலாக உழைக்க முடிந்தால், ஓராண்டில் 100% நம் இலக்குக்காக நாம் கூடுதலாக உழைத்துவிடுவோம் இல்லையா? 100% உழைப்பு இருக்கும்போது 100 சதவிகித உயர்வு என்பது உறுதிதானேÐ

    விருந்தும் விரயமும்

    நெஞ்சிற்கினிய நண்பர்க்கு,

    நலமே மலர்க! நண்பரே! உங்களோடு உரையாடி நீண்டநாள் ஆகிவிட்டது!. இதோ உங்கள் இல்லம் தேடி …..உள்ளம் நாடி ஓடி வருகிறது இந்த மடல். வரலாற்றை புரட்டிப் போட்ட கடிதங்கள் உண்டு . ஆனால் இதோ வாழ்க்கையைப் புரட்டிப்போடக்கூடிய தன்னம்பிக்கை ஊட்டும் வாழ்வியல் கடிதங்கள் இனி உங்களோடு உறவாடும்.

    நண்பரே! இப்பொழுதெல்லாம் திருமணக் காலமென்றால் மண்டபங்கள் கிடைப்பதே அரிது மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டியுள்ளது. மாநகரங்களில் உள்ள மண்டபங்களுக்கான கட்டணம் இலட்சங்களில். ஒரே நாளில் பல திருமணங்களுக்கு சென்று வர வேண்டியுள்ளது. ஓவ்வொரு மணவிழா விருந்திலும் கை நனைக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் கோபித்துக் கொள்வார்களே! வயிறு இடம் தரவில்லையென்றாலும் விருந்தில் உட்கார்ந்து எழ வேண்டியுள்ளது.

    பல திருமணங்களில் நாம் அமரும் முன்பே இலையில் உணவை பறிமாறி விடுகிறார்கள். இரண்டொரு வாய் உண்டு இலையை மூடிவிட்டுப் போகிறார்கள் பலர். இன்னும் சிலர் இனிப்பைத் தொடமாட்டார்கள் அப்படியே குப்பை கூடைக்குப் போகும். இன்னும் சிலர் எண்ணெய் பதார்தங்களைத் தீண்டமாட்டார்கள். சர்க்கரையும், கொழுப்பும் மிகுந்துவிட்டதின் அடையாளம் இது. இவர்கள் திருமண விருந்துகளில் பரிமாறப்பட்ட உணவுகளை அப்படியே ஒதுக்கிவிட்டு எழுவார்கள். இன்னும் சிலர் தன் தேவைக்கு அதிகமாக உணவை போடச்சொல்லி உண்ணமுடியாமல் இலையில் உணவை அப்படியே விட்டுச் செல்வார்கள். சில விருந்துகளில் பரிமாறுகிறவர்கள் அளவாக பரிமாறாமல் உணவை மலைபோல இலையில் சரித்துவிட்டுச் செல்வார்கள்.

    தன்னம்பிக்கை நிறுவனர் இல.செ.கந்தசாமி அவர்கள் திருமண விழாக்களில் பேசும் போது விருந்தில் உணவை வீணாக்குவது குறித்து வன்மையாக கண்டிப்பார். அய்யா பேசிய அந்தக் காலத்தை விட இப்போது திருமண விழாவிற்கு வரும் கூட்டமும் வீணாகும் உணவின் அளவும் மிகுதி.

    இந்த ஊரிலே இதுவரை இவ்வளவு கூட்டம் எந்த திருமணத்திற்கும் வந்ததில்லை நம்ம வீட்டுத் திருமணத்திற்கு தான் இவ்வளவு பேர் வந்தனர். இன்று மட்டும் காலை மதியம் மொத்தம் 6000 இலை என்று பெருமை பேசிக் கொள்கிறவர்கள் உண்டு. இன்னும் சிலர் காலையில் 10 அயிட்டங்கள், மதியம் 21 அயிட்டங்கள் பரிமாறப்பட்டது. இவ்வளவு சிறப்பான விருந்தை இதுவரை இந்தப்பகுதியில் கண்டதில்லை என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறவர்களும் உண்டு. திருமண விழாக்கள் தங்கள் செல்வத்தையும், செல்வாக்கையும், வெளிக்காட்டும் விழாக்களாக மாறி வருகின்றன.

    திருமண விழாக்களில் இதுபோன்ற சமூக விருந்துகளில் உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். சராசரியாக 15 முதல் 20 விழுக்காடு உணவு இத்தகைய விழாக்களில் வீணாவதாக கணக்கிடப்படுகிறது. கிராமங்களை விட நகரங்களில் இந்த விரையம் கூடுதலாக இருக்கும்.

    வெறும் சட்டங்களால், அரசு ஆணைகளால் விளையும் மாற்றங்களை விட மக்களுக்கு விழிப்புணர்வை, சமூக சிந்தனையை உணவின்றி வாடும் சகமனிதனை நினைத்துப் பார்க்கிற மனித நேயத்தை உருவாக்குவதே மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்பது எமது எண்ணமாகும்.

    ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாதவர்கள் பலர் வாழ்கிற நாட்டில் இப்படியெல்லாம் உணவு விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். இப்படி விழாக்களில் உணவு வீணாவதைக் தடுக்க உணவு மற்றும் நுகர்வோர்துறை ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இத்தகைய விரயங்களைத் தடுக்க 1960 களில் தீவிரமாக இருந்த விருந்தினர் கட்டுப்பாடு ஆணையை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று சிந்திப்பதாக அறிய முடிகிறது.

    நண்பரே!இந்த உணர்வுகளை முதலில் நமது குடும்பத்தில் வளர்ப்போம். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் குழந்தைகளின் மனவயலில் விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். குழந்கைளுக்கு சொல்லும் முன்பு அறிவுறை கூறும் தகுதியுள்ளவர்களாக முதலில் பெற்றோர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் நாகரீகம் என்பதை உணர வேண்டும்.

    சென்னை போன்ற மாநகரங்களில் மாறிவருகிற சூழலில், ஓட்டலில் சென்று சாப்பிடுகிறவர்கள் அதிகரித்து வருகிறார்கள். சென்னைக்கு ஒரு நாளைக்கு 10 இலட்சம் பேர் வந்து போகிறார்கள். நாள்தோறும் 35 இலட்சம்பேர் உணவகங்களில், சாலையோர கடைகளில் உண்ணுகிறார்கள். அவசியம் கருதி உணவகங்களில் உண்பவர்களை விட ஆடம்பரம் கருதி உண்பவர்கள் பெருகிவருகிறார்கள். இந்த உணவகங்களில் வீணாகிற உணவு முறையாக பயன்படுத்தாமல், அப்புறபடுத்தாமல் சாலையோரங்களில் அங்குமிங்குமாக கொட்டப்படுவதால், அதை உண்டு வளரும் தெருநாய்கள் பெருகி வெறிநோய் பெருகி மனிதர்களை பாதிக்கிறது, பெருச்சாளிகள், எலிகள், ஈக்கள் பெருகி சுதாரக்கேடும், நோய்கள் பரவிடவும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

    உணவை விரயம் செய்வது தேசிய குற்றமாக கருதப்பட வேண்டும். ஜெர்மனியைப் போன்ற தொழில் துறையில் வளர்ந்த நாடுகளிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இதோ ஒரு சான்று. நம்ம ஊர்காரர் ஜெர்மன் போயிருக்கிறார். அங்கிருந்த நண்பர் வந்தவர்க்கு விருந்தளிக்க உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்குள்ள மேசையொன்றில் இவர்கள் அமர்ந்து தங்களுக்கு வேண்டிய உணவை ஆர்டர் செய்திருக்கிறார்கள். அப்போது பக்கத்து மேசையில் வயதான மூத்த இரண்டு வயதான தாய்மார்கள். அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அவ்விருவரும் தங்கள் தட்டுகளில் ஒரு சிறு பருக்கைகூட விடாது சுத்தமாக சாப்பிட்டு முடித்திருக்கிறார்கள்.

    நம்மவர்கள் இருவருக்கமான உணவும் வந்தது. சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள் – இவர்கள் தட்டுகளில் கால்பகுதிக்குமேல் உணவு சாப்பிடப்படாமல் அப்படியே விடப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் எழுந்து தொகையை செலுத்த முயன்றபோது, தீடிரென்று அவர்களை கூப்பிட்ட அந்த மூதாட்டிகள், உணவக உரிமையாளரிடம் இவர்களை அழைத்துச் சென்று சாப்பிடாமல் உணவை விரயம் செய்து விட்டுச் செல்வதற்கு தங்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும், வருத்ததையும் தெரிவித்திருக்கிறார்கள்.

    அந்த கடை உரிமையாளர், “ஏன் உணவை இப்படி விரயம் செய்தீர்கள்?” என்று மென்மையாக கேட்க, உடனே நம்மவர்கள் “ நாங்கள் —- ஆர்டர் செய்ததற்கு கட்டணத்தை செலுத்திவிட்டோம், அதுபற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது எங்கள் உரிமை” என்று பேசியிருக்கிறார்.

    அந்த வயதான மூதாட்டிகளுக்குக் கோபம் வந்து , உடனே யாருக்கோ தொலைபேசியில் பேச, சில மனித்துளிகளில் சீருடையில் வந்த அதிகாரி (50 மார்க்) அபராதம் (ரூ. 3300) விதித்திருக்கிறார். ஜெர்மனியில் வேலை பார்க்கும் நம்மவர் அபராதம் செலுத்திவிட்டு, மன்னிப்பு கேட்டிருக்கிறார். கடுமையான குரலில் அந்த அதிகாரி சொன்னாராம் “ எப்போதும் உங்கள் தேவைக்கேற்ப ஆர்டர் செய்யுங்கள் – பணம் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் அந்த உணவுப் பண்டங்கள் இந்த நாட்டின் தேசியச் சொத்து, உலகம் பல பற்றாக்குறைகளைக் காணும் இக்காலகட்டத்தில் இப்படி விரயம் செய்வது பகுத்தறிவுக்கு முரண் அல்லவா? எனவே இனி எங்கும் இப்படிச் செய்யாதீர்கள்”. (விடுதலை, 3.5.11)

    நண்பரே! ஜெர்மன் அதிகாரி சொன்னது உணவை விரயம் செய்கிற எல்லோருக்கும் பொருந்தும். எனவே “பணம் நம்முடையதாக இருக்கலாம் ஆனால் உணவு நாட்டின் சொத்து” என்றே கருத்து விதை நம் இல்லங்கள் தோறும் உள்ளங்கள் தோறும் விதைக்கப்பட வேண்டும். இதை யாருக்குச் சொல்வது. முதலில் நமக்கு நாமே! மற்றவர்களுக்கு சொல்வதற்கு உரிய தகுதியை உடையவர்களாக நாம் மாறுவோம.; ஆடம்பரத்தால் உணவு வீணாவதையும், அலட்சியத்தால் விரயமாவதையும் தவிர்ப்போம். பொருள் ஈட்டுவது வளமான வாழ்வுக்கு வழியமைத்துவிடாது, பொருளை விரயமாக்காமல் இருப்பதும் வளமான வாழ்வுக்கு நம்மை ஆற்றுப்படுத்தும்.

    வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு
    வாழும் மனிதருக் கெல்லாம்!

    ஆடம்பரம் அழிவைத் தரும்

    ஆடம்பர வரி:

    மனிதனாய் பிறந்த எல்லோருமே மகிழ்ச்சியாக சொகுசாக வாழவே விரும்புகிறோம். சொகுசு என்றால் ஆடம்பரம் என்று பொருள். LUXURY என ஆங்கிலத்தில் கூறுகிறோம். டாம்பீகம், தேவைக்கும் அதிகம் என்று அகராதியில் உள்ளது.

    அரசாங்கம் கூட சொகுசு வரியை வசூல் செய்கிறது. யாரிடம்?… லாட்ஜ்களில் அறை எடுத்து தங்குபவர்களிடம் குறிப்பிட்ட தொகை வரை வரி கிடையாது. அதற்கு மேல் வரி உண்டு. வாடகைத் தொகை அதிகமாகும்போது வரியும் அதிகரிக்கிறது.

    இங்கு மட்டுமில்லை; பொருட்களில் கூட, விலை உயர்ந்த, சாதாரண மக்களால் வாங்க முடியாதவைகளுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. வரிக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு விடை இதோ.

    பொறாமை:

    அத்தியாவசியத் தேவைகள் அனைவருக்கும் பொதுவானது. இதில் பொறாமைப்பட ஏதுமில்லை. ஆனால் அளவுக்கு மீறும்போது (இந்த அளவு என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்) மற்றவர்கள் மனதில் பொறுக்க முடியாத எண்ணம் உருவானால், அது பொறாமை ஆகும். அதற்கு உதவும் பல காரணங்களுள் ஆடம்பரமும் ஒன்று.

    அத்தியாவசியம்:

    காலால் நடந்தால் காத தூரம் போகலாம்; கையால் நடந்தால்…? என்ற பழமொழி நமக்கு உணர்த்துவது, அதிக ஆட்டம் போடாமல் இயல்பாக இருங்கள் என்பது தான்.

    திருவள்ளுவரும்,

    ‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து’ (குறள் 978)

    என்ற குறள் மூலம் பணிவே எக்காலத்திலும் பெருமை சேர்க்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    உயர்ந்த எண்ணம்:

    “உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்”
    “பெரிதினும் பெரிது கேள்”
    “அத்தனைக்கும் ஆசைப்படு”
    “வெற்றி உன் கையில்”
    “தன்னம்பிக்கையால் எதையும் சாதிக்கலாம்”

    இதுபோன்ற மந்திரச் சொற்களைத் தவறாக எடுத்துக்கொண்டு, சொகுசாக வாழ்ந்து, இயற்கைச் சட்டத்தாலும், நடைமுறையிலுள்ள பல சட்டங்களாலும் தண்டிக்கப்பட்டுள்ள பலரை நாம் அறிவோம். இதுதான் ஆடம்பரம் வழங்கிய அழிவாகும்.

    மனிதன் என்றாலே ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுவதும் சரிதான். அந்த முன்னேற்றம் சக மனிதர்களுக்குத் துன்பம் தருமானால், அது தவிர்க்கப்பட வேண்டும். நன்றாகப் பொருள் ஈட்டி வாழும் வாழ்க்கையிலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது ஆடம்பரத்துக்குத் துணை போகாத செயலாகும்.

    அன்றும் இன்றும்:

    மனிதனுக்குத் துன்பம் வருவது இருவழிகளில். ஒன்று தானாக வருவது. அவ்வகையான துன்பங்கள் சரியான தீர்வுகளுடனேயே வரும். இது சரித்திரம். மற்றது நாமாக உருவாக்கிக் கொள்வது.

    மக்கள்தொகை குறைவு; அதிக அளவு வீட்டு உபயோகப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படவில்லை; இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ்ந்தனர்; போட்டி, பொறாமை கிடையாது; உதவியும் வழிகாட்டுதலுமே இருந்தன. மொத்தத்தில் மனிதநேயம் ஓங்கியிருந்தது. இது அன்றைய நிலை.

    இன்றோ மக்கள்தொகை அதிகம். ஏராளமான, வகைவகையான வீட்டு உபயோகப்பொருட்கள்; இன்னும் வேண்டும்…இன்னும் வேண்டும்… என்று இருப்பதையும் அனுபவிக்காத மனநிலை; பக்கத்து வீட்டாருடன், உடன் பணிபுரிவோருடன் ஒப்பிட்டு, கடன் பெற்றாவது, தவணை முறையிலாவது பொருட்களை வாங்கும் ஆசை, மனிதநேயத்தைச் சிறிது சிறிதாக மறந்து சுயநலத்துடன் வாழும் மக்கள் கூட்டம். இது இன்றைய நிலை.

    இலவசங்கள்:

    எரியும் நெருப்பில் எண்ணெய்விட்டது போல், இலவசங்கள் என்ற மாயையில் பெரும்பாலான மக்கள் சிக்கிக்கொண்டு வெளியில் வர மனமில்லாமல் வாழ்கின்றனர். இன்று டி.வி. இல்லாத வீடுகளே இல்லை. வாஷிங்மிஷின் கூட ரூ.1500க்கு கிடைப்பதால், பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் நிலை உருவாகிவிட்டது.

    இலவச அரிசி, உண்மையிலேயே இயலாதவர்களுக்கு, காமதேனு தான். ஆனால், பாதிக்கு மேற்பட்டவர்கள் வாங்குவதில்லை; வாங்கி கிலோ ரூ. 5க்குள் விற்றுவிடுவதாய் செய்திகள் வருகின்றன. கிராமங்களில் கால்நடைகளுக்கும் நகரங்களில் இட்லி, தோசை மாவுடன் இணைப்பதற்கும் உபயோகமாவதாய் கூறுகின்றனர்.

    வேலை:

    வாழ்வதற்குப் பொருள் தேவை. அதைப்பெற ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். இதைச் செய்வதில் தான் எத்தனை விதம்.

    பாரம்பரியமாக உடல் உழைப்பின் மூலம் பொருள் ஈட்டி வாழும் எளிமையானவர்கள்;

    ஓரளவு படித்து, வேலையில் சேர்ந்து மாதச் சம்பளம் பெற்று வாழும் வகையினர்;

    நன்கு படித்து, அதிகச் சம்பளம் பெறும் வேலைபார்த்து, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டோர்;

    அரசியலை ஒரு தொழிலாகவே செய்து அபரிமிதமான பொருள் ஈட்டுவோர்;

    கான்ட்ராக்ட் என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தில் ஒரு பகுதியைத் தனதாக்குவோர்;

    என்னதான் சம்பளம் வாங்கினாலும், ஊழல் லஞ்சத்தில் ஊறித்திளைக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள்;

    சொந்தமாகத் தொழில் நடத்தும் சிறிய, பெரிய தொழில் அதிபர்கள்;

    நேர்மையாக வாழ நினைத்தாலும், எங்கும் கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் (White Money) என்ற பிடியில் சிக்கித் திடுமாறும் நேர்மையானவர்கள்;

    எனப் பல நிலையிலும் இன்று நம் நாட்டில் மக்கள் வலம் வந்து கொண்டுள்ளனர்.

    வேலைக்கு ஆட்கள் தேவை என்ற போர்டுகள் ஒருபுறம்; வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பும் படித்த குழுவினர் ஒருபுறம்; வேலைக்குச் செல்ல மனமின்றி சோம்பித்திரியும் கூட்டம் ஒருபுறம் என இன்று எல்லாம் கலந்த சூழல் நிலவுகிறது.

    தேவைக்கும் மேலே…

    தேவை என்பதும், மனிதனுக்கு மனிதன் மாறுபடும் என்பது மாற்றமுடியாத உண்மை. உங்கள் தேவைகளை, நீங்கள் ஈட்டும் வருமானத்துக்குள் வைத்துக்கொண்டு சேமிப்பதற்கும், சிறுபகுதியை ஒதுக்குவது தான் அடிப்படைத் தேவையாகும்.

    ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
    போகாறு அகலாக் கடை குறள் 478

    என்று குறள் மூலம் துன்பமில்லாமல் வாழும் எளிய வழியாக வரவுக்குள் செலவு என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

    மீறினால் என்னாகும்?

    காத்திருங்கள்…

    தாயுமானவர்

    அந்த நிகழ்வு ஆறுமாடி கட்டிடங்களில் அண்ணாந்து பார்க்க வேண்டிய மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான மருந்து மாத்திரைகளின் உதவியோடு பல நூறு யுத்திகளுக்கு மத்தியில் முயன்றால் கூட கைகூடாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்ற ஒன்று, ஒரு உயிர் உருவாவது!

    ஒரு உயிர் உருவாவதை கண்ணில் பார்ப்பது ஆச்சரியகரமானது. அதை பாதுகாத்து பராமரித்து ஆளாக்கி வளர்ப்பது அதிசயமானது. மனிதரில் ஒரு வாழ்நாள் இதற்காக செலவிடப்படுகின்றது. தாய்மார்கள், “பத்துமாதம் சுமந்து பெத்து”, என்று பேசினால் கண்கள் நமக்கு குளமாக வேண்டிய அளவு கண்ணியமும், புரிந்துகொள்ளும் தன்மையும் நமக்குள் வரவேண்டுமானால், தாய்மை கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காரணிகள் சேர்ந்து நிர்ணயிக்கப்படும் விசயம் என்பதை அந்த க்ஷணத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டுமே!

    டாக்டர் திருமுருகன் முகமும் புன்னகையும் ஒட்டிப் பிறந்தவை. வர்ணக்கிளிகளுடன் கொஞ்சி உணவினை மாற்றி விட்டு அவற்றின் உடல்நிலை பரிசோதித்துவிட்டு வெளியே வரும் ஐந்தரை மணி அரையிருட்டில் இவர் வேலை ஆரம்பித்து குட்டியானைக்கு புட்டிப்பால் கொடுத்து தாலாட்டுப் பாடாத குறையாக, அம்மா இல்லாத குறை தெரியாமல் அதனுடைய வலது முன்கால் காயத்திற்கு மருந்தைத் தடவி, தூக்கத்தில் ஆழச் செய்யும் பதினோரு மணி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவராக இவர் வேலை அழகாக நடைபெறுகிறது.

    இங்கிலாந்தில், இருக்கின்றதா? என்று ஆச்சரியப்படுகின்ற காட்டுப் பகுதிகளில் யானைகளின் பராமரிப்பு குறித்து பயிற்சி எடுத்துக்கொண்டோரில் ஒருவராகவும் அதற்கும் முன்பே அஸ்ஸாமின் அடர்ந்த வனப்பகுதிகளில் மூன்று வருடங்கள் இயற்கையைப் பல்வேறு கோணங்களிலும் இருந்து படித்துப் பார்த்துவிட்டு வந்தவர். பச்சை நிறம் இவர் இரத்தத்திலும் கலந்து போயிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுமளவு வண்டலூரின் “ஹார்ன் பில்” என்கிற பறவையைக் குறித்தும் அதன் ‘காஸ்க் (Casque) என்கின்ற மூக்குக்கு மேலே மற்றுமொரு மூக்கு மாதிரி அமைந்திருக்கின்ற ஒரு வளர்ச்சியை நேர்த்தியாக நாகர்கள் என்னும் பழங்குடியினர் வெட்டி எடுத்துத் தங்களை அலங்கரித்துக்கொள்வது குறித்தும், அதே பறவையின் மற்ற பகுதிகளின் பயன்பாடு குறித்தும் இறகுகளை திருமண அலங்காரத்தில் நேர்த்தியாக அணிவது குறித்தும் இந்தக் கால்நடை மருத்துவர் பேசினால் கால் கடுக்க நின்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.

    இன்றைக்கு நெருப்புக் கோழிக் குஞ்சுகளை பொறித்தெடுத்தோம் பார்க்கின்றீர்களா? என்று கேட்டபொழுது இவர் கண்ணில் மின்னியது தாய்மை உணர்வா! மழலையைக் கண்ட பூரிப்பா! சில இடங்களில் மட்டுமே வெற்றிகரமாய் செய்ய இயல்கின்ற விஷயமான ஒரு ‘ஆஸ்ட்ரிச்‘ பறவையின் உயிரை உருவாக்கி, கருவாக்கி காப்பாற்றி வளர்த்து, முட்டையிலிருந்து வெளிவரச் செய்த நிகழ்வு வெற்றிகரமாய் நிகந்துவிட்டது. என்கின்ற பெருமிதமா? என்று தாயுமானவியாய் நின்ற இந்த சற்று மாறுபட்ட மருத்துவரைப் பார்த்து வியந்தேன். பொறித்தெடுத்தோம் என்று நெருப்பை சேர்த்து ஒரு வரி எழுதினால், வேறு ஏதோ ஞாபகம் பலபேருக்கு வரலாம்…..அது அல்ல விஷயம்.

    கால்நடை மருத்துவக்கல்லூரியிலேயே மென்மைக்குப் பெயர் போன பண்பாட்டுக்குப் பதக்கம் வைக்கின்ற பழக்க வழக்கம் இவருக்கிருந்தது. வாழ்க்கையை வசந்த காலமாகவே நகர்த்திக்கொண்டு போகின்ற செப்படி வித்தையை இவரிடமிருந்து கற்றுக்கொள்வது எப்படி என்று அநேக சமயங்களில் யோசித்திருக்க வேண்டியிருந்தது.

    இன்றைக்கு இவரோடிருந்த பரவசத்தை அப்படியே காகிதத்தின் மீது பரப்பிவைத்து பார்த்தால் எப்படியிருக்குமோ? அப்படியே இருக்க வேண்டுமென்று ஆவல் கொண்டு அவரே அவசரமாய் வேலைகளை முடித்துக்கொண்டு நோட்டுப் புத்தகத்தை விரவி விரவி எழுதிக்கொண்டு தூரத்தில் வைத்து பார்க்க ஆசைப்பட்டது தான் உங்கள் கண்களில் பரவிக்கொண்டிருக்கின்றது.

    ஒரு புத்தம் புது மலரின் மகரந்த தாளிலிருந்து மொசு மொசுவென பட்டு இழைகள் கருப்பிலும், வெள்ளையிலும், மா நிறத்திலும் கலந்து அரை அங்குல நீளத்தில் கைகளுக்கு கிடைத்து கண்களுக்குத் தட்டுப்பட்டால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது அந்த நெருப்புக்கோழியின் நான்கு நாள் குஞ்சு. முக்கால் கிலோவிற்கு முழுதாய் இருந்தது. பல வீடுகளில் நாலுமாதக் கோழிதான் இந்த உருவம் வருமாம். பார்த்ததில் ஒரு குஞ்சுகூட தலையை வெளியே காட்டவில்லை. இதனால் நெருப்புக்கோழி பாலைவனத்தில் செல்வது ஞாபகம் வந்தது. ஒட்டகம் கூடாரத்திற்குள் தலை நுழைத்த கதையும் ஞாபகப்படுத்தியது. இது இரண்டுமே இல்லை……. தலையைத் தண்ணீர் தட்டுக்கடியில் “கேமாஃப்ளேஜிங்” (Camouflage) என்று மறைந்து வாழும் பாதுகாப்பு உத்திக்காக மறைந்துகொண்டிருந்த இவ்வகை கோழிகள் பெயர் பெற்றதே இதனால்தான். சின்னக் குஞ்சாக இருக்கும் பொழுதே அதே பாதுகாப்பு உணர்வோடு தட்டின் அருகில் சென்று ஒளிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த குஞ்சை அள்ளி எடுக்கலாம் என்கின்ற அனுமதி கேட்டபொழுது, பழம் நழுவி பாலில் விழுவது போல, அள்ளிக் கையில் கொடுத்தார்.

    கால்களில் இரண்டே விரல்கள், ஒன்றில் நகம் வளர்ந்திருந்தது. ஏழு அடிவரை வளரும் இவை சர்வசாதாரணமாக மனிதரின் நெஞ்சகப் பகுதிவரை காலை அலட்சியமாக வீசும் உயரமடைகின்றனவாம், மிக வலிமையான கால்களால் சில சமயங்களில் குறிப்பாக இனப்பெருக்க காலங்களில் ஆட்களைத் தாக்கிவிடும் என்று கூறினார். இங்கு கூட ஒரு பறவை மிதித்துப் பணியாளர் ஒருவரின் இரு கரங்களும் முழங்கைகளுக்குக் கீழ் முறிந்து போனது ஒரு அசம்பாவிதம்.

    நீருக்குள்ளே இரண்டு கண்ணாடிக் குண்டுகள் போட்டு வைத்திருந்தார்கள். என்னது? என்று கேட்ட பொழுது, இக்குஞ்சுகளுக்கு நீர் குடிக்கத் தெரியாது? நீர் குடிக்க வேண்டும் என்பதும் தெரியாது? அதுமட்டுமின்றி நீர் என்றால் என்ன என்பதும் தெரியாது? அதனால் பளபளப்பாக ஏதாவது தெரிந்தால் அதை தொட நாவால் அலகால் முயற்சிக்கையில் நீர்ச்சுவைபடும்………அதைத் தொடர்ந்து நீரினை சுவைக்கக் கற்றுக்கொள்ளும் என்று விளக்கம் கொடுத்தார். நாம் குழந்தைகளாக இருக்கையில் அம்மா எவ்வளவு விளையாட்டு காட்டி உணவுண்ண வைத்தார்களோ? மங்கலாக முதுகலை கால்நடை மருத்துவத்தில் படித்த பொழுது ஒரே நேரத்தில் ஐந்நூறு, அறுநூறு என கோழி முட்டைகள் பொறித்துக் கொண்டிருந்த பெரிய ‘இன்குபேட்டர்’ குறித்த ஞாபகம் வந்தது. நெருப்புக் கோழி முட்டைகளுக்கு மங்கூஸ்களின் தாக்குதல் குறித்த பயத்தால் இந்தியாவில் இயற்கை அடைகாத்தலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிந்து கொண்டேன்.

    இளம் வயதில் ஒரு வார காலத்தில் மனிதக் கைகளை பறவைக்குஞ்சுகள் தாய் என மனதில் புரிந்து கொள்வது உண்டு. அதனை “இம்பிரன்டிங்” என்று சொல்வர். இந்த நிகழ்வு இயல்பானது. ஒரு சில சமயங்களில் ஒரு அசையும் மரக்கட்டையைக் கூட அம்மா என இளநெஞ்சங்கள் முடிவு செய்துவிடும். அதன்பிறகு அத்தகைய அசையும், அசையா பொருட்களின் மீது நேசம் பாராட்டத் தொடங்கிவிடுவார்கள் இச்சிறார்கள். இத்தகைய நிகழ்வைக் கண்டறிந்தவர் கோன்ராடு லாரென்ஸ் என்னும் அறிவியல் அறிஞர். விலங்கியலில் அவற்றின் நடத்தை, அசையும் ஜீவராசிகளின் ‘மனது’ குறித்த படிப்பிற்கு ‘எதாலஜி’ என்று பெயர். இந்த பிரிவின் தந்தை எனப் பெயர் பெற்றவர் நாம் கண்ட அறிஞர் எவ்வளவு கூர்ந்து கவனிக்க வேண்டியிருந்திருக்கும்? எவ்வளவு நேரம் அமைதியாய்க் கழிந்திருக்கும்? என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன்.

    ஆரினித்தாலஜி என்னும் பறவை இன அறிவியலைப் பற்றி
    அடுத்த இதழில் தொடர்வோம்…

    கேளுங்கள் கொடுக்கப்படும்

    கேளுங்கள் கொடுக்கப்படும்.
    தட்டுங்கள் திறக்கப்படும்.
    தேடுங்கள் கிடைக்கப் பெறும்.
    – பைபிள்

    உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பளித்து, பொது சட்ட ஒழுங்கைப் பேணுவது ஒரு காவல்துறை அதிகாரியின் வேலையாகும். இவர் தன் பணியின்போது சில வீர தீர செயல்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

    தக்க நேரத்தில் சிகிச்சை அளித்து, நோயாளியின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது ஒரு மருத்துவரின் வேலை. இந்த மருத்துவத் துறையில் ஈடுபடுவோருக்கு சேவை செய்யும் மனப்பாங்கு அதிகம் தேவை.

    கல்வியையும், ஒழுக்கத்தையும் போதித்து வருங்கால சமுதாயத்தை அறிவு, திறமை நல்ல மனப்பான்மை உள்ளவர்களாக உருவாக்கும் புனிதப் பணி ஆசிரியப் பணியாகும். ஆசிரியப் பணி அறப்பணி. அதற்கே உன்னை அர்ப்பணி.

    சுனாமியாலும், நில நடுக்கத்தாலும் சேதமுறாத கட்டிடங்களைக் கட்டுவது கட்டுமானப் பொறியாளரின் கடமையாகும்.

    நிறுவனத்தின் வரவு செலவுகளை ஆய்வு செய்து, தக்க குறிப்புரைகளை வழங்குவது தணிக்கையாளரின் வேலையாகும்.

    இப்படிப் பரவிக் கிடக்கும் பல துறைகளில், ஒன்றை நீ தேர்வு செய்ய வேண்டும். உன் இலக்கை வடிவமைப்பதற்கு முன்னால், பல துறைகளைப் பற்றியும் நன்கு கேட்டு அறிய வேண்டும். இல்லையேல் பின்னாளில் வருத்தப்பட நேரிடும். எனவே அந்தந்தத் துறை சார்ந்தவர்களிடம் அணுகிக் கேள்.

    இந்தியக் குடிமைப் பணி (Indian Civil Services) பற்றிய சரியான தகவல்களைப் பெற, ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை அணுகிக் கேள்.

    ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு பற்றி அறிந்து கொள்ள, அத்தேர்வில் வெற்றி பெற்று படித்துக் கொண்டிருக்கும் ஒருவரை அணுகிக் கேள்.

    ஒரு வங்கியில் கல்விக் கடன் பெற வேண்டுமாயின் வங்கி மேலாளரை அணுகிக் கேள். அந்த வங்கியின் வாயிற்காப்பாளரிடம் கேட்காதே.

    ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் சேர விரும்பினால், அத்தகைய கல்லூரியில் சேர்க்குமாறு உன் அப்பாவை அணுகிக் கேள், தயக்கம் வேண்டாம். முடியாது என்று சொல்லி விடுவாரோ என நினைத்துக் கேட்காமல் இருந்து விடாதே.

    கேட்பது என்பது கலை. பிறருடைய மனங்கோணாமல் கேட்க வேண்டும்.

    “தம்பி, இந்த ஊரின் அரசு கலைக் கல்லூரிக்கு எப்படிச் செல்ல வேண்டும்?” என்று கேட்டால் சரியான தகவல் கிடைக்கும். அதை விடுத்து, “டேய் பையா, கல்லூரிக்கு எப்படிப் போக வேண்டும்?” என்று கேட்டால், சரியான தகவல் கிடைக்குமா? “காலால் நடந்து போக வேண்டும்”; என்று எகத்தாளமாகச் சொல்லிவிட்டுதான் போவான்.

    கேள்வி கேட்கத் தயங்காதே, கேள்வி கேட்க வெட்கப்படாதே, கேட்ட ஒருவர் ஏடாகூடமாகப் பதில் சொன்னார் என்பதற்காக மற்றவரிடம் கேட்காமல் இருந்து விடாதே. கேட்ட தகவல்கள் கிடைக்கா விட்டாலும் மனந்தளராதே. சரியான ஒருவரை அணுகினால் தான் சரியான தகவல் கிடைக்கும்.

    ஒன்று மட்டும் உறுதி. கேட்க எள்ளளவும் தயங்காதே. நீ என்னை சென்னையில் என் வீட்டில் சந்திக்க வருகிறாய் – முதல் முறையாக வருகிறாய். வீட்டு இருப்பிடத்தைக் கேட்டு தானே ஆக வேண்டும்?

    என்னைப் பொறுத்த வரையில், ஆங்கில அகராதியில் உள்ள சக்தி வாய்ந்த சொல் ASK என்பதாகும்.

    லுட்யிஸ் ப்ரெயில் – இவர் யார் தெரியுமா? கண் பார்வை அற்றோருக்கு, படிப்பதற்கு உதவி செய்யும் ப்ரெயில் முறையைக் கண்டுபிடித்தவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

    நான்கு வயது சிறுவனாய் இருந்தபோது, செருப்பு தைக்கும் தனது தந்தையின் பெரிய ஊசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த தடிமனான குத்தூசி அவர் கண்ணைக் குத்தி விட்டது. ஒரு கண் பார்வை போயிற்று, சில மாதங்கள் கழித்து மற்ற கண்ணும் பாதித்து முழுப் பார்வையும் போய்விட்டது.

    பள்ளிக்குச் சென்று படிக்க முடியாமல் இருந்த லுட்யிஸ் பிரெயில், ஒரு புது முறையைக் கண்டுபிடித்துப் படிக்க விரும்பினார். பலரையும் கேட்டார். ஒரு நாள் போர் வீரரிடம் பேசிய போது, ஒரு தகவல் கிடைத்தது. போரின் போது எழுதிய தகவல்களைப் பரிமாற்றம் செய்தால், விளக்கொளியில் தான் அதைப் படிக்க முடியும். விளக்கொளியை ஏற்றினால் எதிரிகள் இருப்பிடத்தை அறிந்து விடுவர். எனவே இருட்டில் தொட்டுப் பார்த்துப் படித்தறியும் முறையில் குறியீட்டு எழுத்துகளை அனுப்புவோம் என்று அந்த வீரர் கூறியதைக் கேட்ட லுட்யிஸ் தன் வீட்டுக்கு ஓடினார். எந்தக் குத்தூசி தன் கண்ணைக் குத்தியதோ அதே ஊசியை அப்பாவிடம் கேட்டு வாங்கினார்.

    ஒரு தாளை எடுத்து அதன் மீது நெருக்கமாக ஆறு துளையிட்டார். தொட்டுப் பார்த்தார். இதுதான் ‘அ’ என்னும் எழுத்து என்றார். இன்னொரு விதமாக 6 துளையிட்டு மறுபக்கத்தில் தடவிப்பார்த்தார். இதுதான் ஆ என்னும் எழுத்து என்றார். இப்படிதான் ப்ரெயில் முறை – இன்றும் பார்வையற்றோர் முனைவர் பட்டம் வரையில் படிக்க உதவும் முறை – அன்று தோன்றியது.

    லுட்யிஸ் ப்ரெயில் மற்றவரைக் கேட்டதால் தோன்றியது. எனவே, கேள், நிச்சயம் கிடைக்கும்.

    சரியானவரிடம் கேள்

    வளர் இளம் பருவத்தில் (Adolescence) உள்ள உனக்கு உன் உடல் வளர்ச்சி குறித்த பல ஐயங்கள் எழலாம். யாரிடம் கேட்பது? பெற்றோரிடம் கேள். ஆசிரியரிடம் கேள். மாணவியர் ஆசிரியைகளிடமும், மாணவர்கள் ஆசிரியர்களிடமும் கேட்க வேண்டும்.

    மேற்படிப்பு தொடர்பாக, சரியான தகவல்களைப் பெற வல்லுநர்களை நாட வேண்டும். இஅப நுழைவுத் தேர்வு பற்றி அறிய, ஒரு பயிற்சி மையத்தின் அலுவலரிடம் கேட்கலாம். IAS தேர்வு பற்றி அறிய, மாவட்ட ஆட்சியரிடமோ, மாவட்ட காவல்துறை அதிகாரியிடமோ கேட்கலாம். இவர்களை அணுகி கேட்பதற்குத் தயங்காதே.

    கேட்கக் கூடாதவர்களிடம் கேட்டு விடாதே. போட்டித் தேர்வுகள் பற்றி எதுவும் தெரியாத அல்லது தெரிந்தவர்போல் காட்டிக் கொள்ளும் அரைவேக்காட்டு மனிதர்களிடம் கேட்டுவிடாதே.

    இன்னும் சிலர் இருப்பார்கள். அவர்கள் வேலையே முட்டுக் கட்டை போடுவதுதான். “IAS படிச்சவன் பாடுதான் தெரியுதே, தறிபடாத பாடு” என்று எதிர்மறையாகப் பேசுவோரிடம் கேட்டால், உன்னுடைய ஆர்வம் குன்றி விடும், கனவு சிதைந்து விடும்.

    பணிவாகக் கேள்

    உன் அப்பாவிடம் கூட அதிகாரத் தோரணையில் கேட்டால் எதுவும் கிடைக்காது. பணிவாகக் கேள் – கிடைக்கும். வல்லுநர்களைச் சந்திக்க செல்லும் போது ஒரு குறிப்பேட்டில் வினாக்களை வரிசையாக எழுதி எடுத்துச் செல். நிமிர்ந்து நில். உட்காரச் சொன்னால் நிமிர்ந்து உட்கார். வினாக்களைக் கேள். அவர்கள் பேசும்போது கண்களைக் கவனி, கவனம் எல்லாம் அவர்கள் சொல்வதில் இருக்கட்டும். குறுக்கே குறுக்கே பேசாதே, அவர்களுடைய பொன்னான நேரத்தை வீணடிக்காதே. வேண்டிய தகவல்களைக் கேட்டு, நோட்டில் குறித்துக் கொள். நன்றி சொல்லி, வணங்கி, விடைபெறு.

    கல்விக் கடன் பெறுவதற்காக ஒரு வங்கி மேலாளரை அணுகும் போது, ஏதோ யாசிக்கும் தோரணையில் பேச வேண்டாம். கல்விக் கடன் வழங்கி மாணவர் வாழ்வில் வசந்தத்தை வரவழைக்கும் அவர்களுடைய சேவையைப் பாராட்டி விட்டு, நேரடியாக கடன் பெறும் விவரம் பற்றிக் கேள்.

    ஒருவரைப் பாராட்டி உதவி கேட்டால் உதவி கிடைக்கும். ஆனால் உதட்டளவில் பாராட்டினால் கிடைக்க வேண்டிய உதவியும் கிடைக்காமல் போய்விடும்.

    கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய நாடு காணும் முயற்சிக்காக, நிதி உதவி கேட்டு எத்தனை பேரிடம் சென்றான் தெரியுமா? போர்ச்சுகீசிய அரசன் இரண்டாம் ஜானிடம் மூன்று கப்பல்கள் கேட்டு நான்கு ஆண்டுகள் காத்திருந்தான். கடைசியில் இல்லை என்று தான் பதில் வந்தது. ஆனாலும் மனம் தளராமல் இங்கிலாந்து, பிரான்சு நாட்டின் அரண்மனைக் கதவுகளைத் தட்டினான் என்றாலும் பயனில்லை. மன உறுதியை இழக்காமல் இராணி இசபெல்லாவிடம் மீண்டும் சென்று கேட்டான். உதவி கிடைத்தது. மூன்று கப்பல்களில் நெடும் பயணத்தைத் தொடங்கினான். 1492 அக்டோபர் 12ம் நாள் நாடு காணும் கனவு நனவானது. ஆம் இந்தியா என நினைத்து புதிய நிலப்பரப்பான அமெரிக்காவைக் கண்டுபிடித்தது அன்றுதான்.

    கேள். பணிவாகக் கேள். மீண்டும் கேள், கிடைக்கும்.

    உடுமலைப்பேட்டை வாசகர் வட்டம்

    உடுமலைப்பேட்டை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 24.12.2011, சனிக்கிழமை
    நேரம் : மதியம் 2 மணி
    இல்ம் : R.K.R. Grks. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
    தாராபுரம் ரோடு
    உடுமலைப்பேட்டை.
    தலைப்பு : “சந்திப்போம் – சிந்திப்போம் – சாதிப்போம்Д
    தொடர்புக்கு:
    உடுமலை P.S.K. செல்வராஜ் – 98430 87561

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம்

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம், இன்டக்ரல் யோகா மையம் மற்றும் கோவை தீபம் கலர் லேப் & ஸ்டுடியோ இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள் : 18.12.2011; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இல்ம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,
    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
    ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
    கோவை.
    தலைப்பு : “தன்னம்பிக்கை படமும் பாடமும்”
    சிறப்புப் பயிற்சியாளர் :
    திரு. ந. சிவகுமார், ‘Softskills Trainer’, சென்னை.
    தொலைபேசி: 99621 87272
    தொடர்புக்கு:
    தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் – 98422 5933
    செயலாளர் திரு. A. சரவணகுமரன் – 9092092080
    PRO திரு. விக்டரி விஸ்வநாதன் – 9787744533

    ஈரோடு வாசகர்வட்டம்

    நாள் : 25.12.2011, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
    இல்ம் : மாயா பஜார் A/C ஹால்,
    Opp. E.B. அலுவலகம் எதிரில்,
    E.V.N. ரோடு, ஈரோடு.
    தலைப்பு : “எண்ணங்களே நம் எதிர்காலம்”
    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. ந.ட. மாரிமுத்து, M.A., B.Ed., M.B.A. (HR)
    Right Learning Systems, பெரம்பலூர்
    தொலைபேசி: 98946 55079
    தொடர்புக்கு
    தலைவர் Jc. அ. குப்புசாமி 98432 69931
    செயலாளர் Jc. நூர்முகம்மது 99945 00575
    பொருளாளர் Jc. ந. சையது ஜைனலாபுதீன் 99942 29080