பயறு வகைகளின் விலையேற்றம் ஏன்?
சராசரி ஒவ்வொரு இந்தியர்களும் பருப்பு வகைகளைத் தவிர்க்கமுடியாத உணவாக கொண்டுள்ளார்கள். நாம் ஏதோ ஒரு வகையில் பருப்பு வகைகளை நம் உணவில் கலாச்சாரத்துடன் கலந்து உட்க்கொண்டு வருகிறோம்.
நமது பயறு வகைப் பயிர்களின் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளாக ஒரே நிலையில் தான் உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதம் ஒவ்வொரு ஆண்டும் இருக்கும் என எடுத்துக்கொண்டால் நம்முடைய பருப்பு வகைகளின் தேவை இன்னும் பத்தாண்டுகளில் இருமடங்காக உயரும். தற்போதைய (2011ல்) பருப்பு வகைகளின் உற்பத்தி 19.5 மில்லியன் டன் என்று எடுத்துக்கொண்டால் அதுவே 2026ல் 36.1 மில்லியன் டன் (சுரபி மிட்டல், ICRIER 2011). எனவே, பருப்பு வகைகளின் தேவை இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது.
உலக அளவில் பருப்பு வகைகளின் உற்பத்தி பெரியதாக அதிகரிக்கவில்லை. மேலும் இந்தியாவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுதான் பருப்பு வகைகளின் விலையேற்றத்துக்கு பிரதான காரணமாக உள்ளது.
மத்திய அரசு சார்ந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்து 15 சதவிகிதம் இறக்குமதி செலவுகளை ஏற்று இந்தியா தன் பருப்பு தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு இருந்தது. ஆனால் 2007 முதல் இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளின் விலை சுமார் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது. உதாரணமாக, துவரம் பருப்பு 2007ம் ஆண்டில் விற்ற விலையான 27 33 ரூபாய் / கிலோவுடன் ஒப்பிடும்போது, தற்பொழுது 45 / கிலோவாக உயர்ந்துள்ளது.
இந்தியா பெரும்பாலான பயறு வகைகளை மியான்மார் (பர்மா) நாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. மியான்மரில் உலக சந்தையில் உள்ள தேவைக்கு ஏற்ப பருப்பு விலையில் மாற்றம் ஏற்படும். மேலும், ஆப்ரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பருப்பு வகைகளின் இருப்பு மற்றும் அங்குள்ள உற்பத்தியைப் பொறுத்து மியான்மரர் பருப்பு விலையைத் தீர்மானிக்கிறது.
இந்திய அரசு நிறுவனங்கள் 2010 செப்டம்பர் முதல் 15 சதவிகிதம் மானிய விலையில் கொடுக்கும் வழக்கத்தை வெளிநாட்டில் வாங்கும் பருப்பு வகைகளுக்கு கைவிட்டது. இதன் மூலம் மற்ற தனியார் நிறுவனங்கள் பெருமளவில் பருப்பு கொள்முதல் வர்த்தகத்தைத் தொடங்கின. இதுவே தற்போதைய பருப்பு விலையின் ஏற்றஇறக்கத்திற்கு ஒரு காரணமாகும். வெளிநாட்டுச் சந்தையில் ஏற்படும் ஏற்றஇறக்கங்கள் நமது பருப்பு வகைகளின் விலையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவின் பருப்பு உற்பத்தியில் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன.
2007ல் இந்தியாவின் பருப்பு வகைத் தேவை 18 மில்லியன் டன். இதில் 15.11 மில்லியன் டன் இந்தியாவில் மேற்சொன்ன மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டது. எஞ்சிய அனைத்து தேவைக்குமான பருப்பு வகைகள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து பூர்த்தி செய்யப்பட்டது.
மேலும், 1958 59ம் ஆண்டுகளில் ஒரு தனி நபர் உட்கொள்ளும் பருப்புகளின் அளவு 27.3 கிலோ. ஆனால் 2008ல் தனி நபர் உட்கொள்ளும் பருப்புகளின் அளவு 12.7 கிலோவாகக் குறைந்துள்ளது. இந்த தேவையின் குறைவுக்கு மற்ற புரதங்களை உண்பதன் மூலம் ஈடுகட்டப்படுகிறது.
இப்படி தனி மனித புரத உண்ணும் அளவு குறைந்திருந்தாலும் பருப்பு வகைகளின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அரசு பயறு வகைகளின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவின் பயறு வகைப் பயிர்களின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது நல்ல நிலையில் தான் உள்ளது.
கடந்த 25 – 30 ஆண்டுகளில் 10-12 சதவிகிதம் பயறு வகைப் பயிர்களின் நிலப்பரப்பு அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தி 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் உற்பத்தி திறன் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு பல முன்னேற்றத்தை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் இந்தியா அடைந்திருந்தாலும் தற்போது பருப்பு வகைகளின் தேவை மிக அதிக அளவில் உருவெடுத்துள்ளதால் உள்நாட்டில் உற்பத்தி அளவைப் பெருக்குவதில் மிகவும் சிரமத்தில் உள்ளது.
இதற்கு முக்கிய காரணங்கள் இந்தியாவில் பயிரிடப்படும் பயறு வகைப் பயிர்கள் 85 – 90 சதவிகிதம் பருவ மழையை நம்பியே இருக்கின்றது. எனவே சரியான அளவில் பருவ மழை கிடைக்கவில்லை என்றால் பயறு வகைப் பயிர்களின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகின்றது. மேலும் பயறு வகைப் பயிர்கள் மற்ற பணப் பயிர்கள் விளைவிக்க உபயோகமில்லாத பகுதிகளில் விளைவிக்கப்படுவதும் விளைச்சல் குறைபாட்டிற்கு ஒரு காரணமாகும்.
விவசாயிகளுக்கு எப்போதும் சீரான, கட்டுபடியான கொள்முதல் விலை, தரமான சேமிப்புக் கிடங்குகள், உலக சந்தையில் பருப்பு வகைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய சரியான தகவல்கள் போன்றவை விவசாயிகளுக்கு கிடைத்தால் பயறு வகைப் பயிர்கள் பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
உற்பத்தி பெருக்குவதற்கான சில வாய்ப்புக்கள்:
1. உயர் விளைச்சல் ரகங்களை பயிரிடுவதன் மூலம் 25 சதவிகிதம் உற்பத்தியைப் பெருக்கலாம்.
2. பருப்பு வகைகளில் பூச்சிகள் மற்றும் நோய்களினால் ஏற்படும் சேதங்களைத் தவிர்ப்பதன் மூலம் 25 சதவிகிதம் உற்பத்தியைப் பெருக்கலாம்.
3. சரியான முறையில் நீர் பாசனம் மற்றும் தேவையான உரங்களை வினியோகிப்பதன் மூலம் 20 சதவிகிதம் விளைச்சலை அதிகரிக்கலாம்.
4. சரியான முறையில் பருப்பு வகைகளைச் சேமிப்பதன் மூலம் சேதாரத்தைத் தவிர்த்து 15 சதவிகிதம் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
5. பயறு வகைப் பயிர்கள் தற்போது உள்ள நெல் தரிசுகள் மற்றும் ஊடு பயிர்கள் மூலம் மீதமுள்ள உற்பத்தியை அடையலாம்.
0 comments Posted in Articles