டாக்டர் K. செந்தில்குமார், MS, FICS, FACS (USA), DNB (Surg.Gastro)
லேப்ராஸ்கோபிக் மற்றும் குடல்நோய் அறுவைசிகிச்சை நிபுணர்
நிறுவனர், கேட்வே கிளினிக், கோவை & சென்னை
கிராமப் பின்னணியில் பிறந்து தமிழ் வழிக் கல்வி பயின்று இன்று மருத்துவ உலகில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருபவர்,
- உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப உயர்வான சிந்தனை, உயர்வான செயல்பாடு என தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு பலருக்கும் பயன்பாடாய் இருந்து வருபவர்,
- ஏழ்மையானவர்கள் பலர் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி மற்றவர் நலனில் அக்கறையோடும், மனித நேயத்தோடும் பல சேவைகள் செய்து வருபவர்,
- கடந்து வந்த பாதையில் பல மேடு பள்ளங்களைக் கண்டாலும் அவற்றால் சற்றும் மனம் தளராமல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்,
- உழைப்பு… உழைப்பு… உழைப்பு இதனையே தாரக மந்திரமாய் கொண்டு செயல்படும் இவருக்கு கிடைத்த பட்டங்களும், பாராட்டுக்களும் அனேகம் என்ற சிறப்பிற்குரியவர்,
இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட டாக்டர் செந்தில்குமார் அவர்களை நாம் சந்தித்தபோது……
உங்களின் பிறப்பும் கல்வியும் பற்றி?
ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் அருகிலுள்ள கே. மேட்டுப்பாளையம் என்ற குக்கிராமத்தில் பிறந்தேன். சாலை வசதி, பேருந்து வசதி, பள்ளி வசதி என எந்த வசதியும் இல்லாத எளிமையான கிராமம். ஊரிலிருந்து ஆரம்பப் பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். பள்ளிக்குச் செல்ல ஆர்வம் மிகுந்திருந்ததால் நடந்து சென்றதில் எனக்கு சிரமம் ஏதும் தெரியவில்லை.
என் பெற்றோருக்கு தொழில் விவசாயம் தான். அப்பா விவசாயம் செய்து கொண்டே நிலக்கடலை வியாபாரமும் செய்து, மிகுந்த சிரமங்களுடன் தான் எங்களைப் படிக்க வைத்தார்.
பள்ளிக் காலமும், அந்தக் காலம் தந்த பசுமையான நினைவுகளும் குறித்து?
முதல் நாள் என்னை மேல்நிலைப் பள்ளியில் சேர்த்த அனுபவத்தை என்னால் என்றும் மறக்க முடியாது. பள்ளியில் சேர்வதற்கு முன்பே பள்ளியைப் பற்றிய பயத்தை சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனால் பயத்துடனே பள்ளிக்குச் சென்றேன்.
கிராமப்புறபள்ளி என்பதால் கிராமத்தைச் சுற்றியுள்ள குழந்தைகள் தான் பள்ளிக்கு வருவார்கள். அக்காலகட்டத்தில் படிப்பு என்பது இரண்டாம் பட்சம் தான். குடும்பத் தொழில் என்னவோ அதற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் நான் படித்த ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மொத்தமாக 15 மாணவர்கள் மட்டுமே படித்தனர். அனைத்துக்கும் சேர்ந்து ஒரு ஆசிரியர் மட்டுமே.
இப்பள்ளியில் படிக்கும் போது இலவச சத்துணவு வராத காலகட்டம் என்பதால் எங்களுக்கு சாப்பாடு நாங்களே (5ம் வகுப்பு மாணவர்களே) சமையல் செய்து உண்ணும் சூழ்நிலை தான் இருந்தது. சுற்றுப்புறச் சூழல் குறித்து அவ்வப்போது எங்களுக்கு நிறைய விழிப்புணர்வு கொடுத்தார்கள். அதனை இன்றுவரை நான் பின்பற்றி வருகிறேன்.
6ம் வகுப்பிற்கு மலையப்பாளையம் அரசுப்பள்ளியில் சேர்ந்தேன். இப்பள்ளி வாழ்க்கை எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. திரு. அய்யாமுத்து மற்றும் திரு. இராமலிங்கம் போன்றவர்களின் அன்பும், மற்ற ஆசிரியர்களின் அரவணைப்பும் படிப்பின் மீதிருந்த ஆர்வத்தை எனக்கு அதிகப்படுத்தியது.
10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கக் காரணமாக அமைந்தது. நம்பியூர் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். இப்பள்ளி எனது நற்பண்புகளை மேலும் வளர்த்தது. அங்கு திரு. ஆசைத்தம்பி ஆசிரியர் எனக்கு இலவசமாகப் புத்தகங்கள் எல்லாம் வாங்கித்தந்து படிக்க ஊக்கமளித்தார். அப்பள்ளியிலும் தேர்வில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றேன். பள்ளிக்கல்விக்குப் பின் என்ன படிக்கலாம் என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.
நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு முதன்முதலாக என் கிராமத்திலிருந்து கோவை பகுதிக்கு வந்த போது அங்கு பார்த்த மிகப்பெரிய கட்டிடங்கள், கடைகள், இடைவிடாத வாகன அணிவகுப்பு இவை அனைத்தும் புதியதாக இருந்தது. வியப்பு ஒருபுறமும், தயக்கம் ஒருபுறமும் நுழைவுத் தேர்வு அறைக்குச் செல்வதற்கு காலதாமதத்தை உண்டாக்கிவிட்டது. ஆனாலும் அத்தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றுவிட்டேன்.
கிராமப்புற தமிழ்வழியில் பயின்று மருத்துவத்துறையில் சாதிப்பு… எப்படி முடிந்தது?
நிச்சயம் இந்தச் சாதிப்பு எனக்கு பெரிய சவால் நிறைந்ததாகத் தான் இருந்தது. கிராமப்புறமாணவன் என்பது மட்டுமில்லாமல் பள்ளிப்படிப்பு முழுவதும் அரசு பள்ளியில் தமிழ் வழிக்கல்வி என்பதால் சற்று பயமும் குழப்பமும் இருக்கத்தான் செய்தது. நான் படித்த சமயம் என்னுடன் படித்த 100 மாணவர்களில் என்னைப் போலவே கிராமப்புற மாணவர்கள் பலர் இருந்தனர். மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்தி படித்ததால் படிப்பதில் இருந்த தயக்கம் குறைந்தது. மருத்துவக் கல்லூரியில் திருமதி. முத்து மீனாட்சி அவர்கள் எங்களுக்கு தெளிவான ஆங்கிலச் சொற்களோடு பாடம் நடத்தும்போது புரிந்து கொள்வதில் முதலில் சற்று சிரமம் இருந்தது. பழகப்பழக ஆங்கிலமும் பழகிய மொழியாக அமைந்தது.
கல்லூரியில் சேர்ந்த ஆறுமாதத்திற்குப் பின்னர் பிசியாலஜி என்றபாடத்திலிருந்து தேர்வு வைத்தார்கள். அப்பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்தேன். இது என் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியது. எனது திறன்களை மேலும் மேம்படுத்திக் கொண்டு என்னை தயார்படுத்திக் கொண்டேன்.
இந்திய அளவில் ‘National Board of Examination’ என்ற தேர்வு உண்டு. இதை எதிர்கொள்வது கடினம். நாங்கள் குடல் நோய்க்கான மேல்படிப்பிற்கு 14 பேர் இந்தத் தேர்வை எழுதினோம். இதில் நான் மட்டுமே தேர்ச்சி பெற்றேன். மருத்துவத்துறையில் எதையும் சாதிக்கலாம் என்ற மகத்துவம் அப்போது தான் எனக்கு புரிந்தது.
“கேட்வே கிளினிக்” தொடங்கியதன் நோக்கம்…
நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் மருத்துவ வசதி கிடைப்பது அவ்வளவு எளிதான விசயமல்ல. எனவே மருத்துவத்தின் அவசியம் என்னவென்பது எனக்கு நன்றாக புரிந்தது. நகரம் என்றாலும், கிராமம் என்றாலும் எந்தப் பிரச்சனை வந்தாலும் மருத்துவ வசதி நிச்சயம் கிடைக்கப் பெறவேண்டும். அதற்கு நம்மால் முடிந்ததை மருத்துவத்திற்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இந்த கேட்கே கிளினிக் தொடங்கியதன் நோக்கம் ஆகும். ஏழை எளிய மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் பயன்படும் வகையில் சேவை செய்ய வேண்டும் என்பதே எங்கள் முதல் நோக்கம்.
நோய் என்று வருபவர்களை குணப்படுத்தியும், நல்வழிப்படுத்தியும் மனநிறைவுடன் அவர்களைக் காக்க வேண்டி மருத்துவ முறைகளை காலத்திற்கேற்ப நவீனப்படுத்திக் கொண்டே வருகிறோம். ஆரம்பகால கருவிகளைக் கொண்டு இப்போதும் சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும், தற்போது சிறந்த சிகிச்சையளிக்க நவீன கருவிகள் வந்துள்ளன. அதன்மூலம் சிகிச்சையின் போது ஏற்படும் தழும்புகள் கூடத் தெரியாத அளவிற்கு சிகிச்சைகளைச் செய்ய முடியும். மிகச்சிறிய அளவு மட்டுமே துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யுமளவிற்கு மருத்துத்துறை நவீனமடைந்துவிட்டது.
உங்களின் எந்த நிலை உங்களை அடுத்த நிலைக்கு உயர்த்தியது என்று நினைக்கிறீர்கள்?
14 ஆண்டுகளாக புகழ்பெற்றமருத்துமனை ஒன்றில் பணியாற்றி வந்தேன். அங்கு கிடைத்த அனுபவமே என்னை மருத்துவத் துறையில் மேலும் உயர்த்தியது. அங்கு குடல் அறுவை சிகிச்சை சம்பந்தமான உயர் படிப்பினைப் பெற்றேன். 3 ஆண்டுகள் மற்றொரு மருத்துவமனையில் பணியாற்றினேன். படிக்கின்றகாலம் முதலே எந்த செயலைச் செய்தாலும் அதில் தனிப்பட்டு தெரிய வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பமுடையவன் நான். அதுபோலவே மருத்துவத்துறையிலும் அறுவைசிகிச்சையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்த முயற்சிகள் பல மேற்கொண்டேன்.
இந்த கிளினிக் தொடங்கியதற்குப் பின்னர் நேரடியாகவே நோயாளிகளிடம் சென்று குறைகளைக் கேட்டு அதை சிறந்த முறையில் நிவர்த்தி செய்ய போதுமான அளவில் நேரத்தை ஒதுக்கி அவர்களுக்கென சேவை செய்து வருகிறேன்.
குடல்சார்ந்த மருத்துவம் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன?
அறுவை சிகிச்சை சம்பந்தமான எம்.எஸ். அறுவை சிகிச்சைப் படிப்பின் போது கோவை மருத்துவக் கல்லூரியின் முதல் யூனிட் பிரிவில் பணியில் சேர்ந்தேன். அப்பொழுது கோவை மருத்துவக்கல்லூரியில் Dr.C. பழனிவேலு அவர்கள் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள் மதியத்திற்கு மேல் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை வேலை உள்ளது, நீ வந்து அதைப் பார் என அழைத்தார். அப்போது அந்த அறுவைசிகிச்சை முறை என்னை வெகுவாக கவர்ந்தது. அதில் ஆர்வமும் ஏற்பட்டது.
வயிற்றில் ஒரு சின்ன கருவியைக் கொண்டு நுணுக்கமான அறுவை சிகிச்சையை மிகவும் கவனமாகவும், துல்லியமாகவும் செய்வதால் அந்த முறை எனது அறுவை சிகிச்சையின் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை முறை கோவை பகுதியில் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். அதன் காரணம் என்னவென நினைக்கிறீர்கள்?
இந்திய அளவிலேயே கோவையில் தான் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையை அதிக அளவில் செய்கிறார்கள். தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு இங்கு அதிகளவில் உள்ளதும் காரணமாக அமைகிறது. கோவைப் பகுதி எல்லா தொழில் முறையிலும் வளர்ந்துள்ளது இதன் தனிச்சிறப்பு. பல்வேறு மருத்துவப் பிரிவில் அகில இந்திய அளவில் கோவை முதலிடத்தில் உள்ளது.
வெளிநாடுகளில் பயன்படுத்தும் கருவிகள் தான் இங்கும் செயல்பாட்டில் உள்ளதா? அல்லது மாறுபாடுகள் ஏதும் உள்ளதா?
வெளிநாடுகளில் பயன்படுத்தும் அனைத்துவிதமான கருவிகளையும் இங்கு பயன்படுத்துவதில்லை. அங்கு பயன்படுத்துவதில் எது சிறப்பாக இருக்கிறதோ அதை மட்டுமே தேர்ந்து சிகிச்சைகள் செய்து வருகிறோம்.
புதுமையான கருவிகள் எது வந்தாலும் அவற்றை பயன்படுத்துவதால் சிகிச்சை முறைகளிலும் மாறுதல்கள் ஏற்படும். ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை செய்தால் 2 மணி முதல் 5 மணிநேரம் என ஆகும். ஆனால் அதே சிகிச்சை இன்று நவீன சிகிச்சைகளின் மூலம் 1 மணிநேரத்தில் செய்து ஒரே நாளில் சிகிச்சையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து செல்லும் அளவிற்கு தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டன.
இந்தத் துறையில் மிகப்பெரிய சவாலாக இருந்தது என்றால் எதைச் சொல்வீர்கள்?
லேப்ராஸ்கோப்பியின் தொடக்க காலம் முதல் வளர்ச்சி நிலையின் மதிப்பீட்டை பலவாறாக அறிந்திருக்கிறேன். முதலில் சிங்கிள் சிப் கேமரா மூலம் RGB (Red Green Blue) மூன்று வண்ணங்களையும், ஒரே கம்ப்யூட்டர் சிப் கவனித்தது. ஆனால் அதன் பின்பு 3 சிப் கேமரா மூன்று வண்ணங்களையும் தனித்தனியாகக் கையாண்டது. இப்போது High Definition கேமரா மற்றும் 3D கேமரா தொழில்நுட்பம் வந்துவிட்டது.
ஆரம்பகாலத்தில் இருந்த சாலிடர் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் சிகிச்சை செய்து வந்தோம். மோனோபோலார் டயோதெர்மி என்ற ஒரே இயந்திரம் தான் அப்போது இருந்தது. அப்போது அறுவை சிகிச்சை செய்யும் போது மிக நுண்ணிய அளவில் தவறு செய்தாலும் அந்தப் பகுதி முழுவதும் அடர்த்தியான வண்ணமாக மாறிவிடும். அது பெரும் சவாலாகவே அமையும். ஆனால் இப்போதுள்ள நவீனக் கருவிகள் மூலம் சாதாரணக் கண்கள் மூலம் பார்ப்பதைவிடத் துல்லியமாகப் பார்க்க முடிகிறது.
தொடக்கத்தில் இருந்த கருவிகள், இப்போதுள்ள கருவிகள் இவற்றிற்கிடையே சிகிச்சை முறையின் மாறுதல்களைப் பற்றி சொல்லுங்கள்?
நிறைய மாறுதல்கள் தொழில்நுட்பம் காரணமாக ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனில் வயிற்றுப் பகுதியில் பெரிய அளவிலான கத்தி, கத்திரி என கருவிகளைப் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்போது அக்கருவிகளுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. கண்ணிமை வடிவிலான சிறிய அளவில் ஒரு துளையிட்டு அறுவை சிகிச்சைகள் செய்தால் போதுமானது. விலையுயர்ந்த தொழில் நுட்பங்களைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்கையில் பணச்செலவும் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் அந்தக் காலத்தில் செய்யும் அறுவை சிகிச்சையின் காரணமாக ஏற்படும் உடல் வலியும், உடல் சோர்வும் நவீன சிகிச்சையில் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அறுவை சிகிச்சைக்குப் பின்பு வேலைக் கெடுதல்கள் இருக்காது.
மருத்துவமனைகள் பெருகிக் கொண்டே போனாலும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததாகவே தெரியவில்லை அதற்குக் காரணம்?
இதற்குப் பெரிதும் காரணம் சுற்றுச்சூழல் தான். சுற்றுச்சூழல் மாறுபாடு என்று ஏற்பட்டதோ அன்று முதல் மனித வாழ்வில் மாறுதல்களும் நிறைய ஏற்பட்டுவிட்டன. உணவு முறையில் நிறைய மாறுபாடும் ஏற்பட்டு விட்டன. ஆரம்பத்தில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 90ஆக இருந்தது. நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இப்போது 60 வயதைக் கடக்கும்போதே பல நோய்கள் வாட்டுகிறது. காரணம் இயற்கை உணவில் நிறைய மாறுதல்கள் வந்து செயற்கை உணவைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டோம்.
சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவில் கலப்படம், முதல்நாள் சமைத்த உணவைச் சேமித்துவைத்து உண்பது, செயற்கை பூச்சி மருந்துகள் போன்றவை நம்முடன் ஒன்றாகி இருப்பதை தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். இதில் மாறுதல் வந்தால் மட்டுமே நோயில்லாத சமுதாயம் உண்டாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் குடல் சார்ந்த பிரச்சனைகளில் அதிக மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தங்களின் கருத்து?
இப்பிரச்சனை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் உள்ளது. உண்ணும் உணவை முறையாக கையாளாமல் இருப்பதே இதற்குக் காரணம்.
முன்பெல்லாம் புற்றுநோய் என்பது 60 வயதைக் கடந்தவர்களுக்குத் தான் வந்தது. இப்போது 30 வயதிலும் கூட புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சிறு வயதில் இப்பிரச்சனை ஏற்படக் காரணம் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை தான். தீயபழக்கங்களுக்கு பெரிதும் தற்போதைய மக்கள் அடிமையாகி உள்ளனர். வயிற்றில் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று புகைப்பிடித்தல் தான்.
கேட்வே கிளினிக் நிறுவியதன் நோக்கம் வெற்றி அடைந்துவிட்டதா? மேலும் மாறுதல்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா?
கிளினிக் நிறுவியதன் நோக்கம் பெரும்பாலும் வெற்றி அடைந்திருக்கிறது. எங்களிடம் வந்த நோயாளிகள் நோயின் தாக்கம் முற்றிலும் குணம் அடைந்த பிறகு தான் செல்கிறார்கள்.
கிளினிக் நிறுவியதில் பெரிய இலக்குகள் இன்னும் இருக்கவே செய்கிறது. வெளிநாடுகளுக்கும் நோய்களைப் பற்றிய கருத்தரங்கம் செய்து வருகிறோம். மற்ற மருத்துவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களும் சிறந்த முறையில் சேவை செய்ய வேண்டும் என்றஎண்ணமும் உள்ளது. இதுபோன்றமாறுதல்கள் தேவை என நினைக்கிறோம்.
கடந்துவந்த பாதையில் உங்களின் பயணங்கள் எவ்வாறு மாறுபாடு அடைந்துள்ளது என நினைக்கிறீர்கள்?
எனது கடந்தகால பாதை மேடு பள்ளங்கள் பல நிறைந்ததாகத் தான் அமைந்தது. கிராமப்புறத்தில் கல்வியறிவே இல்லாத இடத்தில் இருந்துவந்து இன்று ஒரு கிளினிக் நிறுவி மருத்துவத்துறையில் பல சாதனைகள் செய்து வருகிறேன் என்பதே எனது வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப்பெரும் மாறுதலாகும்.
தமிழ் மொழியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கல்வி பெற்ற நான், இன்று நியூயார்க் நகரம் சென்று கருத்தரங்குகளில் தலைமை ஏற்று நடத்துமளவிற்கு கடின உழைப்புடனும், ஈடுபாட்டுடனும் செயலாற்றி வருமளவிற்கு எனது வாழ்க்கையில் சிறந்த மாறுதல்கள் கிடைக்கப்பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் வழிக்கல்வி ஒருபோதும் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது.
நம் நாட்டிலும், வெளி நாடுகளிலும் நிறைய நல்ல பல மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெற்றுள்ளேன். அவர்களின் நட்பை பெரிதும் மதிக்கிறேன்.
படிக்கின்ற காலத்தில் உங்களது எதிர்காலம் மருத்துவத் துறையில் தான் அமையும் என எதிர்பார்த்தீர்களா?
பள்ளிக்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்று எதிர்பார்த்ததே இல்லை. படித்தவுடன் என்னவாக வேண்டும் என்று ஆலோசனைக்கு ஆளில்லாமல் தான் இருந்தேன். பள்ளிக்கல்வியை முடித்தவுடன் அருகிலுள்ள கோபி அரசுக்கல்லூரியில் சேர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் எனக்கிருந்தது.
கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் சுயமாக சிந்திக்க ஆரம்பித்தேன். மருத்துவத்தின் மீதும் அப்போது தான் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.
மற்ற மருத்துவமனையில் பணியாற்றியதற்கும், சொந்த மருத்துவமனையில் பணியாற்றுவதற்கும் உள்ள வேறுபாடு?
மருத்துவம் செய்வதில் என்று பார்த்தால் பெரிய வேறுபாடு இருக்காது. ஆனால் தலைமைக்குக் கீழ் பணி செய்யும் போது எல்லா நோயாளிகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. நமக்கென ஒதுக்கும் வார்டு நோயாளிகளை மட்டும் தான் கவனிக்க முடியும்.
தனியாக மருத்துவமனையைத் தொடங்கி தலைமைப் பண்பு வகிக்கும் பொழுது ஒவ்வொரு நோயாளியையும் நேரடியாக சந்திக்க முடிகிறது. அவர்களின் பிரச்சனைகளை அறிந்து அதற்குத் தேவையான ஆலோசனைகளைக் கூறமுடிகிறது. என்ன மாதிரியான சிகிச்சைகளை மேற்கொண்டால் அவர்கள் குணமடைய முடியும் என்பதை உடனுக்குடன் சொல்ல முடிகிறது.
உடன் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் கருத்தரங்கம், ஆலோசனை என்று சொல்வதின் மூலம் அனுபவத்தை அவர்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிகிறது.
உங்களுடைய இந்த வெற்றிக்கு உங்களின் பெற்றோர்களின் ஆதரவு எப்படி அமைந்தது?
எல்லா பிள்ளைகளைப் போலவே நானும் எனது பெற்றோரின் கஷ்டங்களைப் பார்த்தே வளர்ந்தேன். விவசாயம் பார்த்து எங்களைப் படிக்க வைத்தார்கள். எனது அப்பா விவசாயம் செய்து இந்த அளவில் எங்களை உயர்த்தி இருக்கிறார் என்றால் அதற்கு அவர் உழைப்பு மட்டுமே முக்கிய காரணம். அவரிடமிருந்து நான் கடின உழைப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன்.
அம்மாவிற்கு அபரிமிதமான ஞாபக சக்தி உண்டு. அது இப்போதும் எனக்குக் கை கொடுக்கிறது. எனது அம்மாவிடம் சேமிப்பைப் பற்றி கற்றுக்கொண்டேன். வீண் செலவு எதையும் அவர் செய்ய மாட்டார். ஒரு குடும்பத்தை எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டும், வீட்டு மேலாண்மை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றி அவரைப் பார்த்து கற்றுக்கொண்டேன்.
குடும்பப் பின்னணி
எனது அப்பா திரு. கருப்புசாமி. தாயார் திருமதி. தனலட்சுமி. என் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். என் மனைவி இல்லத்தரசி. எனது இரண்டு மகள்களும் மருத்துவம் படிக்கிறார்கள்.
படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்தது?
பள்ளிக்காலம் முதலே புத்தகம் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மருத்துவம் மற்றும் சுயமுன்னேற்றம் சார்ந்த புத்தகங்கள் எது மாதிரியானாலும் உடனே படித்துவிடுவேன். ஒவ்வொரு புத்தகமும் அழியாப் பொக்கிஷம். தன்னம்பிக்கை கருத்துக்கள், சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் போன்றவற்றை படிக்கப் பிடிக்கும்.
மருத்துவர்களின் வாழ்க்கை முறைகுறித்து?
ஒரு மருத்துவராக வந்துவிட்டால் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தான் இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் நேரத்தை இயல்பாக கழிக்க முடியாது. தீபாவளி, பொங்கல் விடுமுறைநாட்களும் கூட விதிமுறைகளில் தான் விடுமுறைஎடுக்க வேண்டும்.
இரவு நேர அறுவை சிகிச்சைகளும் சில சமயங்களில் இருக்கும். இரவு, பகல் என்ற வேலை நேரம் கிடையாது. மருத்துவ விடுமுறை நாட்களில் அத்தியாவசிய மருத்துவ வசதிகளே இல்லாத கிராமத்தில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டியிருக்கும்.
நகர்புறத்தில் பெரிய மருத்துவமனை கட்டுவதைப் போல கிராமப்புறங்களில் அந்த அளவிற்கு மருத்துவமனைகள் கட்டமுடியாததற்குக் காரணம்?
நகர்ப்புறத்தில் கிடைக்கும் மருத்துவ வசதிகள் கிராமப்புறத்தில் கிடைப்பதற்குக் காலத்தாமதங்கள் ஏற்படும். பெரிய மருத்துவமனைகள் கிராமப்புறங்களில் அமைந்தால் நோயாளிகளுக்கு சிரமங்கள் குறையும்.
ரத்த வங்கி, CT ஸ்கேன், லேபாரட்டரி போன்றவை அவசரத் தேவைகளுக்கு ஏற்றமாதிரியாக உடனடியாக கிடைக்கும் விதத்தில் மருத்துவமனை அமைய வேண்டும். 100ல் 75% வசதிகள் செய்துவிடலாம். ஆனால் முழுமையாக செய்வதில் காலதாமதம் ஆகும். அதி நவீன கருவிகள் அமைக்கும்போது அதற்கேற்ப நோயாளிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதைக் கையாள்வது சிரமம்.
நல்ல உடல் நலத்துடன் வயிற்றையும், குடலையும் பாதுகாக்க தங்களின் ஆலோசனைகள் என்ன?
உடலில் ஜீரண மண்டலம் மிகவும் முக்கியமானது. இதயத்திற்கும், நுரையீரலுக்கும் முக்கியத்துவம் கொடுக்குமளவிற்கு வயிற்றுப்பகுதிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
நம்மில் பலருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. உணவு குழாயிலிருந்து வரும் அமிலம் மேலே வரும்போது இது ஏற்படுகிறது. இதைத்தடுக்க வேண்டுமென்றால் காரம், புளிப்பு, மசாலாப்பொருட்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உணவை உட்கொள்ளும் போது வேகமாக சாப்பிடக் கூடாது. மெதுவாகத்தான் மென்று சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடுவதற்கும், சாப்பிட்ட பிறகும் 1 மணி நேரம் கழிந்த பின்னரே தண்ணீர் குடிக்க வேண்டும்.
இரவு நேர உணவிற்கு பின் உடனே உறங்கச் செல்லக்கூடாது. 2 மணிநேரம் கழிந்தபிறகு தான் தூங்க வேண்டும்.
மாமிசம், பேக்கரி பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
நார்ச்சத்து மிக்க உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை எதுவாக இருந்தாலும் அதில் நீங்களே முதல்வனாக வர வேண்டும் என்றஎண்ணத்துடன் செயல்புரிய வேண்டும். உங்களின் செயலாக்க முறை, திறன், முயற்சி போன்ற எல்லாவற்றையும் அந்தக் குறிக்கோளை நோக்கியே செயல்படுத்த வேண்டும்.
இந்த இதழை மேலும்