– 2014 – December | தன்னம்பிக்கை

Home » 2014 » December (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பெர்னார்டு

    ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கிறிஸ்டின் பெர்னார்டு. இவர் மாற்று இருதயம் பொருத்தி உலகப்புகழ் பெற்றார். இதனை அறிந்த ஒவ்வொரு நாடும் தங்களுடைய நாட்டிற்கு வந்து சேவை செய்யும்படி அழைத்தன.

    கனடா இவருக்கு ஒரு லட்சம் டாலர் வருட வருமானம் தரக்கூடிய பதவி அளிப்பதாக வாக்குறுதி தந்தது. இங்கிலாந்து மூன்று லட்சம் தருவதாகக் கூறியது. பிரான்ஸ் ஐந்து லட்சம் கொடுப்பதாகச் சொன்னது. அமெரிக்கா பத்து லட்சம் டாலர் தருவதாகக் கூறி அவரை அழைத்தது. ஒவ்வொரு நாடும் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தது. அது என்னவென்றால்…பெர்னார்டு அந்த நாட்டில் குடியேறி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் கட்டளை விதித்தது. இதனை அறிந்ததும் அழைப்பு கொடுத்த அத்தனை நாடுகளுக்கும் பதில் அளித்தார்.

    “என்னுடைய தாய் நாடு தான் எனக்கு முக்கியம். எனக்கு சாம்ராஜ்யத்தையே எழுதிக்கொடுத்தாலும் என் நாட்டை விட்டு போக மாட்டேன். நான் என்ன ஆடா, மாடா விலை பேசுவதற்கு என்னுடைய பணி தாய்நாட்டுக்குச் சேவை செய்வது தான்” என்று விளக்கமாகக் கூறினார்.

    நம்முடைய நாட்டு நலம் தான் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். யார் அதை நல்லமுறையில் அபிவிருத்தி செய்கிறார்களோ அவர்கள் சிறந்த முறையில் கடமை செய்தவர்கள் ஆவார்கள்.

    இறைவனுக்கு அடுத்ததாக என்னுடைய நாட்டின் மீது அன்பும், மரியாதையும் வைப்பது போன்றபுனிதமானதும், அன்பானதுமான செய்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

    இந்த உண்மையான வரலாற்று நிகழ்ச்சியை அறிந்து கொண்ட படியினால் நாமு நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும் என்ற தாக்கம் ஏற்படுவது அவசியம்.

    இந்த இதழை மேலும்

    வெற்றியின் மறுபக்கம்

    நம் அனைவரின் வாழ்வில் சந்திக்க விரும்பாத நபர், ஆயின் அனைவரும் பல சந்தர்ப்பங்களில் சந்திக்கும் நபரே “வெற்றியின் மறுபக்கம்”. வெற்றியின் சுவை, தோல்வி என்ற வெற்றியின் மறுபக்கத்தை சந்தித்த நபருக்கே தெரியும்.

    இன்றைய எந்திர மயமான உலகில் ஒவ்வொரு துறையிலும் முன்னணியில் உள்ள நபரையே அனைவரும் எடுத்துக்காட்டாகக் கூறுவர். இதையே ஆங்கிலத்தில் “There is no place for runners up” என்று கூறுவர். நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், குத்துச்சண்டையில் வெற்றி மாலை சூடிய மேரிகோம் அவர்களைப் பாராட்டி பரிசு அளிக்கும் அவையில், வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்த நங்கை சரிதாவை யாரும் பாராட்டவில்லை. அவருக்கு அனுதாபமே கிடைத்தது. மற்றவரின் அனுதாபங்கள் சரிதா போன்ற தோல்வியை சந்தித்த நபருக்கு ஆறுதல் மட்டுமே தரும். சில சமயம் அவரின் திறமையில் சந்தேகத்தை ஏற்படுத்தி தன்னம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.

    வெற்றியின் மறுபக்கத்தை சந்திக்கும் நபர் அதற்கான காரணத்தை செவ்வனே ஆராய்ந்து, புதியதொரு திட்டத்துடன், தன்னம்பிக்கையை இழக்காமல் செயல்பட்டால், தோல்வியின் மறுபக்கமான வெற்றியை சந்திப்பார்கள். ஒரு குழந்தை பலமுறை நடக்க முயன்று, விழுந்து மீண்டும் மீண்டும் விடாமுயற்சி செய்வதன் பலனே அதன் முதல் வெற்றி. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நாம் சந்திக்கும் முதல் பக்கமே வெற்றியின் மறுபக்கம். வாழ்க்கை என்பது ஒரு காட்டு ஆற்றின் வெள்ளம். அதில் எதிர்நீச்சல் போடுபவரே சாதனையாளர் ஆகின்றனர். சாதனையாளர்கள் பிறப்பதில்லை. அவர்களின் வழிகாட்டியே “வெற்றியின் மறுபக்கம்”.

    என் சுயவாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை வாசகருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1971ம் வருடம் பள்ளிப்பருவத்தை முடித்துவிட்டு கல்லூரியில் காலடி எடுத்துவைத்த நேரம் இந்தியாவை நமது அண்டை நாடான பாகிஸ்தான் தாக்கிய நேரம். திறமை மிக்க நமது விமானப்படையின் விமான ஓட்டிகளின் திறமை, விமானத்தில் பயணிக்கும் “Air Crew” என்று அழைக்கப்படும் வல்லுனர்களின் திறமையினால் டாக்க நகரம் தாக்கப்பட்டு கடைசியில் பாகிஸ்தான் படைகள் சரணாகதி அடைந்தது. அதன் விளைவினால் பங்களாதேசம் உதயம் அடைந்தது. அவ்வமயம் நானும் என் நண்பரும் விமான ஓட்டியாக பயிற்சி பெறவிரும்பி கோவையில் உள்ள விமானப்படையின் அலுவலகத்திற்குச் சென்றோம். அங்கு இருந்த இடைநிலை அதிகாரி எங்களிடம் வினாவினார். நாங்களும் சென்று இருந்த காரணத்தைக் கூறினோம். அவர் கூறிய வார்த்தைகள் “தம்பி, பத்தாயிரம் நபர்களில் ஒருவர் மட்டுமே விமான ஓட்டியாக தேர்வு செய்யப்படுவர். இந்த எண்ணத்தை விட்டுவிட்டு படிப்பில் கவனத்தை செலுத்துங்கள்’ என்ற இலவச அறிவுரை வழங்கினார். சாதிக்கத் துடித்த அந்த இளைஞர்களுக்கு அவர் காட்டியதோ “வெற்றியின் மறுபக்கம்”. எனது பதில், “ஐயா, அந்த பத்தாயிரத்தில் ஒருவரைத்தான் நீங்கள் பார்க்கின்றீர்” எனக் கூறியபடி நடந்தேன். அதன் விளைவு 1972ம் ஆண்டு இக்கட்டுரையின் ஆசிரியர் கர்னல் ஜெயவேல் இந்திய வான்படையில் விமானப் பயிற்சி எண் 111ல் தேர்வு அடைந்தார். உடன் வந்த நபர் அடுத்த ஆண்டே “தனியார் விமானப் பயிற்சி பள்ளி” பீளமேட்டில் சேர்ந்தார்.

    நமது அனைவரின் வாழ்க்கையிலும், ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி, தோல்வி என்ற இரு நபர்களையும் சந்திப்போம். வெற்றியின் மறுபக்கம் தன்னம்பிக்கை இழந்தவர்களையும், சோம்பேறிகளையும், எதிர்நீச்சல் போட விரும்பாத சாதாரண மானுடப் பிறவிகளை தன்பக்கம் ஈர்த்துவிடும். வெற்றி என்றதோல்வியின் மறுபக்கம், சோதனைகளையும், வேதனைகளையும், மனச்சோர்வையும் தாராளமாக அளிக்கும். இதனை கடந்து விடாமுயற்சி செய்யும் நபரே வெற்றி வாகையை சூட தேர்வு அடைவர். ஆகவே நண்பர்களே, சாதனையாளர்களே,

    “தெய்வத்தினால் ஆகா தெனினும் முயற்சி

    தன் மெய்வருத்தக் கூலி தரும்”

    என்ற வள்ளுவர் வாக்கினை தாரக மந்திரமாக எண்ணி செயல்படுங்கள். தோல்வியின் மறுபக்கத்தை சந்திக்க வல்லுநர்களாக மாறுங்கள். இளையோருக்கு வழிகாட்டுங்கள். இந்த எண்ணங்களின் சிற்பி கர்னல் சின்னாமி ஜெயவேல், மூன்றாம் தலைமுறை ராணுவ அதிகாரி, டிபென்ஸ் அகாதமியின் இயக்குனராக பணி ஆற்றுகிறார். வழிகாட்டியின் கைபேசி எண் 95003 67072. www.ssbcoaching.com,sainikcoach@gmail.com

    முத்திரை

    விஉஷ்க் ………உஷ்க் ….கேக் …………கெக்…………

    என்றசத்தம் கேட்டதா?!?
    கேட்டது போலத்தான் இருந்தது.
    திரும்பினால் நின்று விடுகின்றது.

    சிரிப்புக்கும், அழுகைக்கும் சமதூரத்திலிருந்து சொந்தம் கொண்டாடும் வகையில் எழும் சத்தம் அது.

    முத்திரை விழுகின்ற சந்தர்ப்பங்கள் பெரும்பாலும் சிரிப்பொலியாலும், அழுகையாலும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

    சுமைகள் உருகி வழிந்தோடும் ஆறாக அழுகை உருவகப்படுத்தப்பட்டால் ஆச்சரியம் அடைவது நியாயமேஙு சுமைகள் தாங்கப்படும் பொழுதுதான் பயணம் அர்த்தமுள்ளதாகிறது. அழுகைக்கான சந்தர்ப்பங்கள் பின்காலத்தில் எண்ணி வெட்கப்பட்ட தருணங்களாக பலமுறைமாறிவிட கேள்விபட்டுள்ளோம்.

    இந்தமுறை அழுகை எதற்காக எங்கிருந்து இந்த இரவு நேர கதைக்காலத்தில் விசும்பல் வெளிப்பட்டது குட்டிப் பெண்ணிடமிருந்து.

    காரணம் ஜீலியஸ் சீசர் குத்துப்பட்டது.

    எப்போதோ? ஜீஸஸ் பிறப்பதற்கு 50 வருடங்கள் முன்பு, சீசர், நண்பன் கைகளால் “புரூட்ஸ் நீயும் குத்திவிட்டாய் என்றால், சீசர் வீழ்ந்து உயிர் விட வேண்டியதுதான்” என்று சொல்லி குத்து வாங்கி வீழ்ந்த காட்சி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்கள் ஆகிவிடினும், ஏதோ, நேற்று நடந்த விஷயம் போல, மனதில் முத்திரை பதித்ததன் விளைவே அந்தச் சத்தம். கதை சொல்லிக்கொண்டிருந்த ஆர்வத்தில் அந்த ஒலியை முதலில் கவனிக்காவிட்டாலும் பிறகு ஆச்சரியத்தோடு ஆழமான முத்திரையின் பிரதிப்பலிப்பை கவனிக்க முடிந்தது.

    நான்கு வயது குழந்தைக்கு புரூட்டஸின் கோணத்தில் இது சரியே என்று நினைத்த அளவிற்கு புரிந்து கொள்ள முடிகின்றது என்றால் ஆச்சரியமே!

    Google மற்றும் You Tube-ல் தேடினால் ‘மர்லன் பிரேண்டோ’-வின் ஆக்ரோஷமான, ஹானரபில் மேனஞ் என்று ரோமானியர்களை மனதினைத் தொட்டு உணர்ச்சி ஊட்டுகின்ற வசனம் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளிலான படத்திலிருந்து கிடைக்கின்றது. அதையும் பார்த்து கதை பாத்திரங்களை அடையாளம் கூறவும் சின்னப் பெண்ணால் முடிகின்ற அளவு ஷேக்ஸ்பியர் கதை வடித்திருக்கின்றாரா? அல்லது கதை சொல்லியிருந்த உயிரோட்டமா? அல்லது இரண்டுமா? என்கின்ற கேள்விக்கு பிரச்சனை வராத பட்டிமன்ற தலைவர் பதில் போல மூன்றாவது Choice-னை பயன்படுத்திவிடலாம்.

    இளம் வயதில் பசுமரத்தாணி பதிப்பது மிகவும் முக்கியமான விஷயம்.  அனைத்தும் அவ்வப்போது தேவையான பொழுது அவரவர்களுக்குக் கிடைக்கும் வண்ணமே இயற்கை அமைந்திருக்கின்றதோ? என்று ஐயம் திருநாவுக்கரசரின் கீழ்கண்ட பாடல் படிக்கையில் வந்தது.

    ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடா தாரோ

    பாட்டுவித்தால் யாரொருவர் பாடா தாரோ

    காட்டுவித்தால் யாரொருவர் காணாதாரோ

    காண்பார் யார் கண்ணணுதலாய் காட்டாக் காலே?

    என்று அருமையான வாய்ப்பு என்று நாம் கருதுவதெல்லாம் அவன் செயல் என்று அப்பர் சொல்லிவிட்டார் என ஆஃப் ஆகிவிட முடியாது. களம் நன்றாக தயார் செய்யப்பட வேண்டும் என்றால் மழலைகளின் வாழ்வு கதைகளால் நிறைந்திருக்க வேண்டும். “குண்டவ்வா” என்று எமது கிராமத்து உறவு, நட்பு வட்ட வாண்டுகளால் செல்லமாக அழைக்கப்பட்ட பாட்டி, வெத்திலை, பாக்கு, சுண்ணாம்பு என மினியேச்சர் உரல் மாதிரியான (பேர் மறந்து போயிற்றே) எக்யுப்மென்ட் ஒன்றில் டாங், டாங் என்று அடித்துக் கொண்டே கதை சொல்கையில் ‘ஒற்றைக்கண் மந்திரவாதி’ ஏழுகடல் தாண்டிய ஒத்தைப் பனைமர பொந்தில் அரக்கனுடைய உயிரை பொதிந்து வைத்துள்ள கிளி. அங்கே போய்ப் பார்த்தா காலைச் சுற்றி சீறும் ஆறு தலை நாகம் என்பது போன்ற விசித்திரமான பாத்திரங்கள் மற்றும் பரபரப்பான திருப்பங்கள் நிறைந்த கதையைச் சொல்லும் பொழுது வெற்றிலை நசுக்குகின்ற வேலை நம் கைகளுக்கு வந்திருக்கும். வெற்றிலை மசிந்து மாதுளை முத்து நிறத்தில் திரண்டு நின்றிருக்கும்.

    அவள்தான் முதன் முதலில் இந்த உலகைவிட்டு விடை பெறப்போகின்றேன் என்ற செய்தியை கூட, ஏதோ, மேகங்கருத்திருக்கு, மழை வரப்போகின்றது என்ற எளிமையான பேசக்கூடிய செய்தி போல எந்தவித சலனமுமின்றி சொல்லவோ, கேட்கவோ முடியும் என்று நிரூபித்தவள். அந்தப் பாட்டியின் ரவிக்கையில்லாத பச்சைநிற காட்டன் புடவையில் முடிந்து வைத்திருந்த நாலனா நாணயங்கள் இன்றைய ஷேர் மார்க்கெட் விலை மதிப்பைக் காட்டிலும் அதிக பிரமிப்பை கொடுத்தனவே?

    வெற்றிலை பாக்கும் உழைத்த வேர்வையும் கலந்த பாட்டியின் வாசனை அளித்த சுகந்தம் எவ்வளவு? என்று இன்றைய பார்க் அவென்யூவும், யுடி கோலனும் ஞாபகப்படுத்துகின்றன. முத்திரை ஆழமாக விழுந்திருக்கும் பொழுது பின்னால் தொடரும் அனுபவங்கள் தனித்தனியாக முகத்திரைகள் அணிந்து கொண்டு அணிவகுப்புத் தொடங்குகின்றன. எல்லாமே ஒரு அனுபவம் தான் எனும் வேதாந்தம் முப்பது வருடத்து அவள் நினைவில் பரிமளிக்கின்றது. முத்திரை நாட்கள், கழிய, கழிய ஆழமாகிக் கொண்டுதான் செல்லும் போல.

    புத்தகங்கள் ஆழ்மனதில் நிறைய பதிவுகளை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் ஒரு மலையாள நாவலின் தமிழாக்கம் படித்தேன். அதில் வரும் பாத்திரங்கள் உடன் வாழ்ந்து வருவது போல ஒரு பிரமை. அது தான் முத்திரை.

    அதை அடுத்து படித்து, முடித்த, தமிழில் ஒன்று, ஆங்கிலத்தில் ஒன்று என கீழே முத்திரைகளின் வகைப்பாடு தொடர்கிறது. பறவைகள் பலவிதம்.

    இப்பொழுதுதான் ஒன்று ஞாபகம் வருகின்றது. கட்டுரை எழுதுவதற்கு இடைப்பட்ட நாட்களில் மலையாளத்து மூலம். மலையாற்றூர் இராமகிருஷ்ணன், இ.ஆ.ப என்பவரது “இயந்திரம்’ என்கிறநாவல் இரசிக்கும் வண்ணம் கிடைத்தது.  இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் வாழ்வைச் சுற்றிச் சுழலும் கதை. இதை சிலாகித்து நினைவில் வைக்கலாம்.

    அசோக மித்திரன் அவர்களின் “மானசரோவர்” சினிமா உலகம் மட்டும் அல்ல எண்ணற்ற நதிகளில் உள்ள பல சுழல்களைத் தாங்கிக் கொண்டு வெளியே சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கின்ற நதிபோன்ற கதாபாத்திரங்களின் படைப்பும், கதையை இருவர் கோணத்திலிருந்து மாற்றி மாற்றி சொல்லி நகர்த்திச் செல்கின்ற அழகும் என்ன சொல்வது.

    இராபர்ட் லுட்லம் அவர்களின் “ஆம்ப்ளர்” வார்னிங் மிக மிக வேகமாக ஓடியது. சின்னச்சின்ன  திருப்பங்கள் வரும்போதெல்லாம் ஓவின் (‘ஞ’ – ஆங்கில எழுத்து) மத்தியில் புள்ளல் வைப்பதுபோல ஒரு சின்னமிட்டு படித்துக் கொண்டே போனால், இடையிலான ஒரு டெல்லி பயணத்தின் பொழுது இந்தப்புத்தகம் முடிந்து போனது. எது எதற்காகவோ, நிறைய முறை, காத்திருக்கும் பொழுது, காத்திருக்கும் அறைகளில் எல்லாம் கற்பனையில், ஆம்ப்ளர், பிறர் பேசுவது உண்மையா இல்லையா?  என்னும் பொய் கண்டறியும் (இது மூன்றாவது சலனம்) திறமையை சிலாகித்துக் கொண்டே கழிந்தது.

    இவர் எழுதிய மற்றொரு கதையை வைத்து போர்ன் ஐடென்டிடி என்கின்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் கதை அமைப்பு ஆழ் மனதில் பதிந்து போய் பின்னாளில் அது படம் பார்த்து முடித்துவிட்டோம் என்கின்ற முத்திரையாக பிறழ், பதிவாகிப் போனது. பின்னொரு நாளில்தான் நானும், திருச்சி நண்பனும் சேர்ந்து தேடி புத்தகங்களிடையே கண்டுபிடித்த பொழுது நாவலின் பக்கங்களில் வரைந்து வைத்திருந்த வட்டப் புள்ளிகள் ‘ஸக்கலாஜிகல் ப்ரெயின் ரிடிசைனிங்’ மாதிரியான டெக்னிக்கல் பதங்கள் என்று பரபரப்பாக கழிந்தது.

    இந்தக் கட்டுரையும் மற்றொரு டெல்லி பயணத்தில் அறைஎண் 214ல் கடவுள் என்று எண்ணிக் கொண்டே எழுதிக் கொண்டிருக்கிற பொழுது, திரும்பி ஊருக்குப் போய் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் அல்லது இணையதளத்தை அலசி எழுதலாமா என்று யோசித்தால், அப்படி செய்தால், அது ஆராய்ச்சிக் கட்டுரையாகிவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆழ்மனதிலிருந்து வருகின்றசங்கதிகளை, முத்திரை பதித்த விஷயங்களை மட்டுமே எழுதினால்தான் ஃப்ளோ சரியாய் வரும் என்று முத்திரையைச் சுற்றி நினைவலைகள் பின்னப்பட்டுள்ளன.

    முத்திரை என்பது ஒரு ஞாபகக் கீற்றுத்தானே, மனத்திரையின் ஒரு சிறிய மின்னல்.

    உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

    நில்லாமல் நீங்கி விடும்

    – 592 அதிகாரம் 60 ஊக்கம் உடைமை என்றே இருந்தது.

    நில்லாமல் என்பதும் நில்லாது என்பதும் அப்படியொன்றும் இரண்டு வாரங்கள் தேடி கண்டுபிடிக்க வேண்டிய அளவு முக்கியமில்லாமல் தோன்றலாம். ஆனாலும் இந்தக் கட்டுரையை படிக்கின்றவர்களில் சிலர் மாணவர்களாக இருந்தால் இந்தத் தேடலை கற்றுக் கொடுக்கின்றதொரு முயற்சியாக இத்திருப்பம் ‘முத்திரை’ பதிக்கக் கூடும்.  ஏற்கனவே மனதிலிருக்கும் ஒரு குறளை, பொருளை, முத்திரையை சரிபார்த்தல் அதிலும் அச்சில், அச்சாக சரிபார்த்தல் நினைவலையை வலிமையாக்குகின்ற ஒரு செயல்பாடு.  இது பள்ளி நாட்களில் வகுப்பறையில் படித்த மன பதிவு ‘முத்திரைகளை’ அன்றன்றே வீட்டில் வந்து சரிபார்ப்பதில் ஆரம்பித்தால் முத்திரைகள் வாழ்வின் வளங்காட்டும் வழிகாட்டிகளாகும். ‘நில்லாது’ என்பதில் உள்ள ‘தளை, தொடை’ வகைபாட்டை ‘குறள்’ வெண்பாவிற்குப் பொருத்திப் பார்த்தோமேயானால், அவ்வளவு ஆழம் சென்றோமேயானால் இன்னும் ஆச்சரியங்கள் வெளிப்படும் ஆகா என்னே முத்திரை.

    சரியாய் இருக்கின்ற பட்சத்தில், என்ன பொருத்தமான குறள் இந்த தலைப்பிற்கு எவ்வளவு நாட்கள் சென்றாலும் மனது மகிழ்ச்சியினை உள்ளேயிருந்து உற்பத்தி செய்வது போன்ற திறமையினை உருவாக்கிக் கொள்ளுமேயானால் அது ஒப்பற்ற சொத்து. ரிச் டாட் புவர் டாட் என்கின்ற புத்தகத்தில், பொருள் உருவாக்குகின்ற மனப்பாங்கை உருவாக்குவது எப்படி? என்றுதான் பேசியிருப்பார்கள். மனமே விதைக்கின்றது எனும் பொருளில்.

    “உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்” என்று திருமூலர் செல்வது யதார்த்தம் என்றால் கருவறையில் நிற்கும் தெய்வமாகவே முத்திரைகளைச் சொல்ல வேண்டும்.

    நாம் ஒவ்வொருவரும் உலகை, உலகு எப்படியிருக்கின்றதோ? அப்படி பார்ப்பதில்லை, நாம் எப்படி இருக்கின்றோமோ? அப்படிப் பார்க்கின்றோம் என்றொரு பொன்மொழி உண்டு. பால்சூடு பட்டுக் கொண்ட பூனையின்  நிலையோ, வெளுத்ததெல்லாம் பால் என்று உயர்வாக மதிப்பிட்டுக் கொள்கின்ற அப்பாவியின் மனமோ?  என்று அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.

    முத்திரைகள், மனசை எந்த திசையில் நாம் செலுத்தப் போகின்றோம் என்று தீர்மானித்து விடுகின்றன. அதிலிருந்து விலகி நடுநிலை தவறாது, பகுத்தறிவைப் பயன்படுத்தி ஒரு பாதிப்பில்லாத முடிவெடுக்கின்ற பக்குவத்தை அடைதல், ஞானப் பழமாகிற வளர்ச்சி.

    லோகாயதவாதத்தினூடே, ஆன்மீகமும், மாயாவாதமும் சேர்ந்ததொரு படிவங்கள் இயலக்கூடியவையே. இதுவரை முத்திரை வாங்கிய மனதுகளின் பிரதிபலிப்பைப் பார்த்தோம். இனி முத்திரை பதிக்கும் ஆளுமை கொண்ட தனித்தன்மை குறித்துப் பார்த்தால், நாணயத்திற்கு இரு பக்கங்களும் உருவாகிவிடும்.

    MBL படிப்பு முடிந்து போனதும் ஒரு வெற்றிடம் உருவானது போல பிரமை.  அதாவது, இலக்கு கொண்டு இயங்குதல், உயர் குறிக்கோள்களைக் கொண்டிருத்தல், என்று சில பல உன்னதமான நோக்கங்கள் இருப்பின், உள்ளம் செப்பனிடப்படுகின்றது.  படித்தல் அமைதியாகத்தான் நிகழவியலும். படித்த ஆசிரியரைவிட படித்துக் கொண்டிருக்கின்ற ஆசிரியரிடத்தில் பையனை விடுங்கள் என்றொரு ஆங்கில அறிஞரின் பொன்மொழி உண்டு. படித்தல் தவத்திற்கு ஒப்பாகும்.

    தர்மபுரியின் ஆசிரிய நண்பரொருவர் குறள் ஒன்றை அதன் எண்ணோடு எஸ்.எம்.எஸ் அனுப்பி ‘இலர் பலர்’ என்ற நிலைமைக்கு காரணம், தவம் செய்வோர் குறைவாக இருப்பதுவே என்று பொருள்படும் குறளை அன்றைய சிந்தனை ஆக்கி இருந்தார். லண்டனில் ஷேக்ஸ்பியரை குறித்து மட்டுமே நூலகம் ஒன்று இருப்பதாகவும், அதில் ஹேம்லட்டை குறித்து மட்டும் ஐம்பதினாயிரம் புத்தகங்கள் இருப்பதாகவும் பெரியவர் சொல்லக் கேட்டோம். செய்யவா? வேண்டாமா? என்ற தயக்கம் தானே, முத்திரை பதிப்பதை முடிவு செய்கின்றது? இந்தக் கேள்வியைப் பிரபலமாக்கியவர் ஹேம்லட்; இந்தக் கதையைக் கேட்ட சின்னப் பெண் இதுதான் அப்பாவின் ஆவியா என பல கேரக்டர்களைப் பார்த்து கேள்வி கேட்கும் வண்ணம் கதை சொல்வது ஒரு முத்திரை பதிக்கும் கனவு.

    இதுபோல வரலாற்றில் வராத எண்ணற்றபாட்டிகளின் மொத்த ஆளுமையால்தான், முத்திரையால் தான் உலகம் முழுதாகச் சுற்றிக்கொண்டு இருக்கின்றது. கதை சொல்லுதல் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது.

    கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும்

    வேட்ப மொழிவதாம் சொல்

     (இந்த முறை ஒரே குறள் பொலிவான பொழிவா இருக்கே)

    என்றபடி திருவள்ளுவர் சொல்லியது போல் கேட்டவங்க உட்கார்ந்து மெய்மறக்கக் கேட்கவும் கேள்விப்பட்டவுங்க கேட்க வரிசையா வந்து நிக்கவும் மாதிரி கதையைச் சொல்லுவதுதாங்க முத்திரைக்காரவங்க சொலவடை.

    இந்தக்கட்டுரையைக்கூட ஷேக்ஸ்பியர் கதை சொன்னேன்னு ஆரம்பிச்சிருக்கலாம்.

    ஆனா மறுபடி திரும்ப முதல்வரி பாருங்க கதை தொடங்குறது எப்படின்னு, ஏன்னாக்க காலம் ஓடணணும்லங்க.

    எப்படி ஆனாலும், முத்திரையின் ஒரு முக்கியமான Component  பகுதிப்பொருள் உண்மை ஆக இருக்க வேண்டும். அஃது இல்லையானால்,  தனது Dale Carnegle  ஒப்பற்ற  How To Win Friends and influence என்ற புத்தகத்தில் சொல்வது போல சில நாட்களில் கதை சொல்லிகள் மிகச் சரியாக அடையாளம் காணப்படுகின்ற வாய்ப்பு ஏராளமாக, தாராளமாக இருக்கின்றது.

    முத்திரை பதிப்பது கதை வடிவில் மட்டும் அன்றி, அமைதி வடிவிலும் இருக்கலாம். மௌனம் சரியான நேரத்தில் அனுஷ்டிக்கப்படும் பொழுது ஒப்பற்ற ஆயுதமாகிவிடுகின்றது. குறைவாகப் பேசுபவர்கள் நிறைவாக  கவனிக்கப்படுகின்றவர்கள் என்றொரு பொன்மொழி உண்டு.

    ”The Kings Speech” என்றோரு சமீபத்திய ஆஸ்கார் பரிசுபெற்ற படத்தைப் பார்த்தது பற்றி இங்கே சொல்லியாக வேண்டும்.  பால்ய கால முத்திரைகள் ஒரு அரசனை பேச விடாமல் மூடி திரை போட, துணிச்சலை முறைப்படி, கதை பேசி கதை பேசி, ஊட்டி அழகாகப் பேச வைத்த அற்புதமான தன்னம்பிக்கை முத்திரை மட்டுமே உள்ள ஒரு ஒலி ஆசிரியரைப் பற்றிய கதை அது.

    நிறைய வகையான நகைச்சுவை நட்சத்திரங்களின் வசனங்கள் ‘டவுன் லோடு’ செய்யக் கிடைக்கின்றன. அவை வாழ்வை சந்தர்ப்பங்களை ரம்மியமாக்கித் தருகின்றன. அழச்செய்வது மிக எளிது ஆனால் யாரையும் சிரிக்கச் செய்வது அரிது; அரிது. இதில் முத்திரை பதிப்பவர்கள் வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் மகிழ்சியைப் பரவச் செய்பவர்கள்.

    முத்திரை இந்தத் துறைதான் என்று இல்லை, அன்பே சிவம் என்றுணரும் எல்லோரும் அவரவர் வாழ்வின் முத்திரை பதிப்பது வாஸ்தவமே, விசும்பல் ஒலி வெளிப்பாடுதான், சந்தர்ப்பங்களும் ஒருவகை முத்திரையேஙு

    இந்த இதழை மேலும்

    நம்பிக்கை இழக்காமல் இருப்போம்

    சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்திக்க காஞ்சிபுரம் சென்றிருந்தேன். நான் மூன்று வருடங்கள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் படித்திருக்கிறேன். காஞ்சிபுரம் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். காரணம் நிறையக் கோயில்கள். மற்ற ஊர்களைக் காட்டிலும் விலைவாசி குறைவு. நானும் எனது நண்பன் இராமமூர்த்தியும் விடுமுறைநாட்களில் கோயில்களுக்குச் செல்லுவோம். நண்பனுக்கு வெளிநாட்டுக்காரர்களிடம் பேசி அவர்களின் நாணயங்களைச் சேகரிப்பது பொழுது போக்கு. படிக்கும்போதே நிறைய வெளிநாட்டு நாணயங்களை சேகரித்து வைத்திருந்தான். எனக்கு அதிலெல்லாம் பெரிதாக ஆர்வமில்லை. படிக்க வேண்டும் என்ற ஆர்வமே பத்தாம் வகுப்பிற்கு வந்த பின்னால்தான் தோன்றியது.

    என் நண்பரைச் சந்தித்து முடித்து கோயிலுக்கெல்லாம் சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். நல்ல பசி. ஏதாவது ஒரு நல்ல ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டே ஆகவேண்டும் என்று தோன்றியது. காஞ்சிபுரத்தில் இருந்த பிரபலமான அந்த ஓட்டலுக்குள் நுழைந்து அமர்ந்தேன். உணவை ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்தேன். அந்த ஓட்டலில் ஸ்வாமி கிருபானந்த வாரியரின் புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தார்கள்.

    கிருபானந்த வாரியார் மீது எனக்கு எப்போதுமே ஒரு பெரிய பற்று உண்டு. நான் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது எங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு அவரைத்தான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். வழக்கம்போல பிரமாதமாகப்பேசி எங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். எனது முதல் கவிதைப்புத்தகத்தை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்தபோது ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது.

    ஒருநாள் சிறுவன் ஒருவன் தனது வீட்டில் உட்கார விரும்பினான். அவன் உட்கார விரும்பிய இடத்தில் தூசுகள் படிந்திருந்தன. உடனே அதை சுத்தம் செய்துவிட்டு அந்த இடத்தில் உட்கார்ந்தான். இதை கவனித்துக் கொண்டிருந்த அவனது தாயார் மகனிடம் விசாரித்தார்.

    “சற்று முன்னர் நீ என்ன காரியம் செய்தாய்?”

    “அம்மா. தரை தூசியாக இருந்தது. அதனால் அந்த தூசியைத் தட்டிவிட்டு உட்கார்ந்தேன்”.

    இப்போது அந்த அம்மையார் தனது மகனிடத்தில் சொன்னார்.

    “இறைவனும் அப்படித்தானப்பா. நம்முடைய மனசுக்குள் அழுக்கு இருந்தால் அவர் அங்கே வந்து உட்காரமாட்டார்.  நாம் நம்முடைய மனத்தினுள் நிறைந்திருக்கும் பொறாமை மற்றும் பல தீய எண்ணங்களை துடைத்து சுத்தம் செய்து மனத்தை மிகத்தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இறைவன் அங்கே வந்து உட்காருவார்”.

    தாயார் சொன்ன இந்த அறிவுரை அந்த சிறுவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அறிவுரையை பின்பற்றி வாழ ஆரம்பித்தான் அந்த சிறுவன். அச்சிறுவனே பிற்காலத்தில் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

    தாயார் சொன்னது ஒரு சிறிய விளக்கம்தான். அதையும் முழுமையாக நம்பி பின்பற்றியதாலேயே வாரியார் சுவாமிகள் உயர்ந்த நிலையை அடைந்தார். அம்மாவையும் அப்பாவையும் நாம் எப்போதும் மறக்கக் கூடாது. அவர்கள் சொல்வதை நாம் அப்படியே கேட்டு நடக்க வேண்டும். தற்காலத்தில் பணமிருந்தால்தான் அம்மா அப்பாவை கொஞ்சமாவது மதிக்கிறார்கள். அதையும் எழுதிக் கொடுத்துவிட்டால் அந்நியராக்கி விடுகிறார்கள்.

    நான் ஆர்டர் செய்த உணவு வந்தது. பசி அதிகமாக இருக்கவே மடமடவென்று சாப்பிட ஆரம்பித்தேன்.

    இரண்டு மூன்று காய்கறிகளை வைத்திருந்தார்கள். அதில் ஒரு காயை எடுத்துச் சாப்பிடும்போது திடீரென்று லால்பகதூர் சாஸ்திரி ஞாபகத்திற்கு வந்தார்.

    நம்முடைய முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் இது. சாஸ்திரி இந்தியாவின் ரயில்வே துறைஅமைச்சாராக பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் அரியலூரில் மிகப்பெரிய ரயில் விபத்து ஒன்று நடைபெற்றது. அதற்கு தார்மீகல் பொறுப்பேற்று தனது ரயில்வே அமைச்சர் பதவியை சாஸ்திரி ராஜினாமா செய்துவிட்டார்.

    வீட்டிற்குத் திரும்பியதும் தனது துணைவியாரை அழைத்தார். அவர் வீட்டில் எப்போதும் இரண்டு காய்கறிகள் செய்வது வழக்கம்.

    “நான் எனது பதவியை இராஜினாமா செய்துவிட்டேன். நமது குடும்பச் செலவை குறைத்தாக வேண்டும். எனவே இனி ஒரு காய்கறியை செய்தால் போதும்”

    இந்த காலத்தில் இப்படி யாரையாவது ஒருவரை நாம் பார்க்க இயலுமா?  யோசித்துப் பாருங்கள்.

    பில்லுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்து நின்று கொண்டிருந்தேன். சற்று நேரம் அங்கேயே நின்று ஓய்வெடுக்க வேண்டும் என்று என் மனசு கட்டளையிட்டது. அதை ஏற்று நானும் அங்கேயே நின்று கொண்டு வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

    நான் பச்சையப்பன் பள்ளியில் படித்த நாட்கள் என் நினைவிற்கு வந்து மனதுள் நிழலாடின.எவ்வளவு இனிமையான நாட்கள் அவை. எத்தனை நண்பர்கள். எனது நண்பர்கள் எல்லோருமே வேறுவேறு மாதிரியான மனநிலையில் இருப்பார்கள். ஆனால் இப்போது  படிக்கும் மாணவர்கள் அனைவருமே ஒரே மாதிரியான மனநிலையில்தான் இருக்கிறார்கள். அது அவர்களின் பெற்றோர் அவர்களுக்குச் செய்த போதனை. ஒன்று ஐஐடி இல்லையேல் டாக்டர். மற்றபடிப்பெல்லாம் வேஸ்ட். எல்கேஜியில் இருந்தே பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஒரு விஷயம் என்னவென்றால்  அமெரிக்காவிற்கு சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்து  இலட்சலட்சமாய் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். எப்போது நம் பிள்ளைகள் எடுத்த எடுப்பிலேயே நாம் இப்போது வாங்கும் சம்பளத்தைவிட ஐந்து மடங்கு அதிகம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்களோ அப்போதே அவர்கள் நம்மைவிட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்கள் என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் உணர்வதே இல்லை. நம் அப்பா இத்தனைக்காலம் குப்பை கொட்டி என்ன பிரயோஜனம். இருபது வருடங்களாக குப்பை கொட்டியும் வெறும் இருபதாயிரம் தானே சம்பாதிக்கிறார். நான் எடுத்த எடுப்பிலேயே எண்பதாயிரம் சம்பாதிக்கிறேனே. என் அப்பாவை விட நான் தானே உயர்ந்தவன். இந்த நினைப்பு ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் வருவது இயற்கை. இதுதான் மனித மனசு. அந்த இருபதாயிரம் சம்பளத்தில் தானே அப்பா பலப்பல  தியாகங்களைச் செய்து தன்னை படிக்க வைத்து இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறார் என்பதை ஒருகணம் நினைத்துப் பார்க்க மறந்து போகிறது மனசு.

    நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் எங்களுக்கென எந்த கொள்கையும் கிடையாது. அப்போதெல்லாம் ஊரில் யாரோ நான்கு அல்லது ஐந்து மாணவர்கள் மட்டுமே எஞ்சினியரிங் அல்லது மருத்துவம் படிப்பார்கள். மற்றவர்கள் பள்ளிப்படிப்பை முடித்ததும் டைப்ரைட்டிங் ஷார்ட் ஹேண்ட் கற்றுக் கொள்ள வேண்டும். முடிந்தவர்கள் கல்லூரிக்குச் சென்று டிகிரி முடித்து விட்டு  எம்ப்ளாயிண்ட்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்து விட்டு காத்திருக்க வேண்டும். எப்போதாவது நடத்தப்படும் சர்வீஸ் கமிஷன் பரிட்சையை எழுதிவிட்டு நிச்சயம் வேலை கிடைக்காது என்று தெரிந்தும் காத்திருக்க வேண்டும். சாமர்த்தியம் உள்ளவர்கள் சிபாரிசு அல்லது பணம் கொடுத்து வேலையை வாங்கி விடுவார்கள்.

    மூதறிஞர் இராஜாஜிக்குப் பழக்கமான ஒருவர் தன் பையனை அழைத்துக் கொண்டு வந்தார்.

    “இவன் என்னோட பையன். பி.எஸ்சி.  படிச்சிருக்கான். ஒரு இன்டர்வியூ வந்திருக்கு. நீங்க ஒரு வார்த்தை சொன்னால் இவனுக்கு வேலை குடுத்துடுவாங்க”

    இதைக் கேட்ட இராஜாஜி அந்த பையனை அருகில் அழைத்து ஒரு விஷயத்தைச் சொன்னார்.

    “உங்கப்பாவுக்கு உன் மேலேயோ உன்னோட படிப்பு மேலேயோ நம்பிக்கை இல்லை. அதனாலேதான் சிபாரிசை நம்பறாரு. நீ இனி எங்கே வேலை தேடிப் போனாலும் உன்னோட படிப்பையும் திறமையையும் மட்டும் நம்பிப் போ. நிச்சயம் உனக்கு வேலை கிடைக்கும்”

    இராஜாஜியின் பேச்சைக் கேட்ட அந்த இளைஞனின் மனதில் புதிய நம்பிக்கை பிறந்தது.

    அந்த காலத்திலேயே அந்த நிலை என்றால் இப்போது கேட்கவே வேண்டாம். இராஜாஜியைப் போன்ற தலைவர்களை இப்போது பார்ப்பது அபூர்வம். இராஜாஜியின் பேச்சைக் கேட்டு நடந்த அந்த நம்பிக்கை இளைஞனும் இப்போது இருப்பதாய் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் நாம் நம்பிக்கை இழக்காமல் இருப்போம். நாட்டில் இன்னமும் நல்லவர்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    இப்படியெல்லாம் யோசித்தபடி ஓட்டல் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் பிச்சை கேட்டு ஒரு நடுத்தர வயதுக்காரன் வந்து நின்றான். பார்ப்பதற்கு உடலில் எந்த குறையும் இல்லை. நன்றாகத்தான் இருந்தான். பின் எதற்காக இந்த புரொபஷனைத் தேர்ந்தெடுத்தான் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை இது சுயதொழில் என்பதால் இருக்கலாம் என்று தோன்றியது.

    இந்த சமயத்தில் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.

    தன்னிடம் பிச்சை கேட்டு வந்த ஒரு இளைஞனை நோக்கினார் நபிகள் நாயகம். அந்த இளைஞன் நல்ல உடல் பலத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பதை அறிந்தார். நபிகள் அந்த இளைஞனிடம் உன் வீட்டில் பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்று விசாரித்தார். அதற்கு அவன் தன்னிடம் ஒரு பாத்திரமும் போர்வையும் இருப்பதாய் பதில் சொன்னான். சரி உடனே சென்று அவற்றைக் கொண்டுவா என்று அனுப்பி வைத்தார். சற்று நேரத்தில் அந்த இளைஞன் இரண்டு பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்தான்.

    நபிகள் அங்கிருந்தவர்களிடம் அந்த இரண்டு பொருட்களையும் ஏலத்தில் விடுவதாய் கூறினார். இதன்மூலம் இரண்டு திர்ஹம் நாணயங்கள் கிடைத்தன. அதில் ஒரு திர்ஹம் நாணயத்திற்கு உணவைச் சாப்பிடுமாறு கூறினார். மற்றொரு நாணயத்தை அவனிடம் கொடுத்து நல்ல கோடாரி ஒன்றைவாங்கி வரும்படியும் கூறினார். அந்த இளைஞன் நபிகள் சொன்னது போலவே செய்தான்.

    “இந்த கோடாரியை வைத்து காட்டிற்குச் சென்று மரங்களை வெட்டி விற்று பிழைத்துக் கொள். பத்து நாட்கள் கழித்து வா”

    நபிகள் சொன்னது போலவே செய்தான். பத்துநாட்கள் சென்றபின்னர் ஒருநாள் அவன் நபிகளை வந்து மகிழ்ச்சியோடு சந்தித்தான்.

    “தாங்கள் சொன்னது போலவே செய்தேன். பத்து திர்ஹம் நாணயங்கள் இப்போது என்னிடம் இருக்கின்றன. யாரிடமும் பிச்சை கேட்டுப் பிழைக்கும் நிலை இப்போது இல்லை. எனவே மகிழ்ச்சியோடு நான் வாழ்க்கையை நடத்துகிறேன்”

    இரந்து உண்பவர்களை இறைவன் ஒருபோதும் விரும்பமாட்டான். உழைப்பிற்குத் தகுந்த பலனை அவன் எப்போதும் நமக்குத் தர தயாராய் இருக்கிறான்.

    நபிகள் நாயகம் அந்த இளைஞனை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

    நானும் அந்த இளைஞனுக்கு நபிகள் சொன்னதைப் போல அறிவுரை சொல்லலாமா என்று ஒருகணம் யோசித்தேன். எதற்கு வம்பு. நல்லதைச் சொன்னால்தான் யாருக்கும் பிடிக்கமாட்டேன் என்கிறதே. இவனிடம் வாயைக் கொடுத்து எதற்கு வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து அவனைப் பார்க்காதது மாதிரியே அங்கிருந்து மெல்ல நழுவினேன். வெளியே வந்தேன். ஒரு ஷேர் ஆட்டோ தயாராய் இருந்தது. ஏறி பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினேன்.

    இந்த இதழை மேலும்

    வைகறை உன் வாசலில் பூக்கோலம் போடுவதைப் பார்!

    வாழ்க்கை பலநேரங்களல்ல் தன்னோடு மோதுகிறவர்களை உடைத்துப் போட்டு விடுகின்றது. யார் உடைந்தே கிடக்காமல் மீண்டும், மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு முன்னோக்கிச் செல்கிறார்களோ அவர்கள்தான் வெல்கிறார்கள். பக்கம் பார்க்காமல், பின்னோக்கி நகராமல் தொலைநோக்கி கருவியைத் தொட்டுப் பார்க்கிறவர்களையே அதுதன் வரவில் வைத்துக் கொள்கிறது.

    “வாழ்க்கை எனக்கு ஒரு சிறு மெழுகுவரத்தி அல்ல. அது ஒரு வகையான சிறந்த கைப்பந்தம். தற்சமயத்திற்கு அதனை உயரே தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறேன். அதனை எவ்வளவு பிரகாசமாய் எரியச் செய்ய முடியுமோ, அப்படிச் செய்து, பிறகு அதனை வருங்கால தலைமுறையினரிடம் கொடுக்க விரும்புகிறேன்” என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுவார்.
    வைகறை உன் வாசலில் பூக்கோலம் போடுவதை பார்க்க வேண்டாமா? தூங்கிச் சுகம் பெறுவதற்காகவா பூமிக்குப் பிறப்பெடுத்து வந்திருக்கிறாய்… போதும் எழுந்திரு; வாழ்க்கை வாழ்ந்திடு!

    “சொன்னது என்ன சொன்னது
    என் வாழ்க்கை என்ன சொன்னது
    மோதிப்பார்க்க அலைகள் சொன்னது
    முட்டிப்பார்க்க விதைகள் சொன்னது
    தொட்டுப் பார்க்க வானம் சொன்னது
    தோண்டிப்பார்க்க தண்ணீர் சொன்னது
    மவுனம் காக்க மலைகள் சொன்னது
    காயம் கற்க கலைகள் சொன்னது
    மாயம் கற்க வானவில் சொன்னது
    இதுதான் வாழ்க்கை எனக்கு சொன்னது”

    வாழ்க்கையின் சராசரிகளோடு வாழ்வது வாழ்க்கையல்ல. தூசிப்படிந்த ஒட்டடைக் குச்சியோடு உயரம் தொடவும் சம்மதம் இல்லை. நெருப்பாற்றில் நீந்த வேண்டும். அலையோடு புரளும் அனுபவத்தைக் கற்க வேண்டும். அன்பையே அரவணைக்க வேண்டும். காலம் தருகின்ற கனிவான செய்திகளை கூர்ந்த நல் அறிவோடு உற்று நோக்கியே உணரவேண்டும். அப்போதுதான் ஆழமும் புரியும். அர்த்தமும் தெரியும்

    வருணபகவான் சங்கு ஊதினால்தான் மழை பெய்யும் என்பது புராண காலத்து நம்பிக்கை. மாதம் மும்மாரி பொழிய வேண்டும் என்பது இந்திரன் வருணனக்கு இட்ட கட்டளை. வருணனுக்கு ஒருநாள் வருத்தம் ஏற்பட்டது. தான் மட்டும் கடமையைச் செய்ய இவன் மட்டும் எப்படி ரம்பா, மேனகா, ஊர்வசி இவர்களோடு சல்லாபிக்கிறானே என்ற நெருடல். வருணன் வேறொரு முடிவெடுத்தான். இன்று முதல் ஓராண்டிற்கு மழை பெய்விக்க சங்கெடுத்து ஊதுவது இல்லை. இதைக் கண்டு உலகத்து உழவர்கள் எல்லாம், உழவுக்கருவிகளை ஓரிடத்தில் வைத்து விட்டு வருத்தத்தோடு வான்பார்த்து உட்கார்ந்து விட்டனர்.

    ஒரே ஒரு விவசாயி மட்டும் தினமும் நிலத்தை உழுது வருவதை பார்த்து ஆடிப்போனான் வருணன். அவனிடம் ஊரே உட்கார்ந்திருக்கையில் நீ மட்டும் ஏன் உழுது கொண்டிருக்கிறாய்? மழை இல்லாமல் உழுவதால் என்ன பயன்? எனக் கேட்டான் வருணன். மேலும் ஓராண்டுக்கு மழையும் பெய்விக்க மாட்டேனே எனக் கேட்டான் வருணன்.

     உன் பேச்சைக் கேட்டு ஓராண்டுக்கு உழாமல் விட்டு வைத்தால் இந்த நிலத்தின் மண் கடினமாகி, காலப்போக்கில் கல்லாக, பாறையாக மாறிவிடும். அது மட்டுமில்லாமல் இன்னும் ஓராண்டுக் காலம், நான் இந்த உழவுத் தொழிலை செய்யாமல் இருந்து விட்டால் இந்த உழவுத் தொழிலே எனக்கு மறந்து விடும். அதனால் நான் தினமும் உழுது வருகிறேன் என்றான்.

    உழவனின் வார்த்தை வருணனின் உள்ளத்தை வருடியது. நாம் ஓர் ஆண்டுகாலம் சங்கு ஊதுவதை நிறுத்தி விட்டால் உழவன் சொல்வது போல் நமக்கும் சங்கு ஊதுவது தெரியாமல் போய் விடும். தற்போது சங்கை ஊதிப் பார்ப்போம் என்று வாயில் வைத்து ஊதினான். மழை கொட்டியது.

    உழவுத் தொழில் செய்யாதவர்கள் திகைத்தார்கள். எடுத்துக் கொண்ட தொழிலை எத்தகைய இடையூறு வரினும் இடைவிடாது செய்து வந்த அந்த ஓர் உழவன் மட்டுமே உழுதான், விதைத்தான், அறுத்தான், மகிழ்ச்சியில் திழைத்தான்.

    ஒருபோதும் ஆடிமாதம், திருவிழாக் காலம், தேர்தல் காலம், வெயில் காலம், மழைக் காலம் என்று நினைத்து உங்கள் தொழிலுக்கு தற்காலிக விடுமுறைவிட்டுவிடாதீர்கள், தொடர்ந்து கடமையைச் செய்து வரும் போது பலன் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

    வாழ்க்கைப் பட்டறையில் தோல்வியையே தோல்விடையச் செய்து சிகர சிம்மாசனத்தில் நின்றவர் ஆபிரகாம் லிங்கான். தோல்வியிலேயே துவளாமல் தன்னம்பிக்கையே அணிந்து கொண்டு, சோர்வை தூக்கியெறிந்து, துணிவை மட்டும் துணைகொண்டு உச்சம் தொட்ட மாமனிதர். இவருடைய வாழ்வில் எத்தகைய புயல்! எத்தனை இடி! எத்தனை தடை!

    இளவயதில் லிங்கனுக்கும் எல்லோரும் ஆசைப்படுவதைப் போல் படிக்க ஆசை, கொள்ளைப் பிரியம். புத்தகங்கள் வாங்க அவருக்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லையே! பழகாத தூரம் சென்று இரவல் புத்தகம் வாங்கி இரவே படித்துவிடும் அறிவு ஜீவி. இரவுப்பொழுதின் ஒருநாள் அதிகமாய் பெய்த பனியில் புத்தகம் நனைந்து விட்டது. புத்தக உரிமையாளரோ பணம் கொடு, இல்லையேல் பண்ணையில் வேலை செய் என்ற படியே வேலையும் செய்தார். இப்படியாய் தோல்வி இவரை துவட்டி எடுத்தது.

    22 வயதில் வணிகம் செய்ய முயன்று தோற்றுப் போனார். 22 வயதில்  மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். 24 வயதில் மீண்டும் வணிகம் செய்ய முயன்று தோற்றார். 26-ஆம் வயதில் வாலிபத்தின் வசந்தம், அவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆன்ரட்லஜை உயிருக்குயிராய் காதலித்தார். அவளையே கரம் பிடிக்க விரும்பினார். ஆனால் அவளோ காலத்தின் கரத்தையல்லவா பிடித்துக் கொண்டாள்! சோகச் சுமை அழுத்த ஓராண்டு காலம் நோயிலே கிடந்தார். காங்கிரஸில் நடந்த தேர்தலில் 34 வயதில் தோல்வி. செனட்டிற்குப் போட்டியிட்டு 45வது வயதில் தோல்வி. உப ஜனபாதிபதி தேர்தலில் தன் 47வது வயதில் தோல்வி. மீண்டும் 49-ஆம் வயதில் செனட் தோல்வி.

    புகழ்பெற்ற இல்லினாய்ஸ் பத்திரிக்கை அன்று எழுதிய தலையங்கம். லிங்கனின் நிலையினை வெளிச்சம் போட்டு காட்டிற்று. அவருடைய அரசியல் வாழ்வுதான் இத்தனை அவலங்களுக்கு ஆளாக்கப்பட்டது என்றால் அவருடைய குடும்பச் சூழல் அவரைச் சோகத்தின் பெரும் சுமைதாங்கியாக்கிற்று. அவருடைய மனைவி மேரிடோடு அந்த சிறப்பான சிந்தனையாளரை, மனித நேயமிகு மாண்பாளரை சூடான தேனீரை முகத்தில் கொட்டி, துடைப்பத்தால் துவைத்தெடுத்த நிகழ்ச்சிகள் நிறையவே உண்டெனக் குறிப்பிடுகின்றார். என்னுடைய சோக சுமையினை உலகில் வாழும் அத்தனை ஜீவன்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தால் ஒரு முகத்தில் கூட புன்னகையினை காண முடியாது என லிங்கனே கூறியுள்ளார்.

    தோற்றுப் போவதற்கே தோன்றியவர் எனக் கருதப்பட்ட லிங்கன் தமது 52 வது வயதில் அமோக வெற்றி பெற்று ஜனாதிபதியானார். வெள்ளை மாளிகை அவரை கைகொட்டி வரவேற்றது!

    ஒரு கட்டுரையில் ஒரு பெண்மணி “சருகாய் விழுந்தேன், மரமாய் எழுந்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார். தோல்வியையும், சறுக்கலையும் யார் கவனத்தோடு கையாள்கிறார்களோ அவர்களுக்கு சிகர சிம்மாசனம் காத்திருக்கிறது.

    இந்த இதழை மேலும்

    நம்மை நாமே வெல்வோம்! உயர்வின் பாதையில் செல்வோம்!!

    டாக்டர் K. செந்தில்குமார், MS, FICS, FACS (USA), DNB (Surg.Gastro)
    லேப்ராஸ்கோபிக் மற்றும் குடல்நோய் அறுவைசிகிச்சை நிபுணர்
    நிறுவனர், கேட்வே கிளினிக், கோவை & சென்னை

    கிராமப் பின்னணியில் பிறந்து தமிழ் வழிக் கல்வி பயின்று இன்று மருத்துவ உலகில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருபவர்,

    • உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப உயர்வான சிந்தனை, உயர்வான செயல்பாடு என தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு பலருக்கும் பயன்பாடாய் இருந்து வருபவர்,
    • ஏழ்மையானவர்கள் பலர் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி மற்றவர் நலனில் அக்கறையோடும், மனித நேயத்தோடும் பல சேவைகள் செய்து வருபவர்,
    • கடந்து வந்த பாதையில் பல மேடு பள்ளங்களைக் கண்டாலும் அவற்றால் சற்றும் மனம் தளராமல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்,
    • உழைப்பு… உழைப்பு… உழைப்பு இதனையே தாரக மந்திரமாய் கொண்டு செயல்படும் இவருக்கு கிடைத்த பட்டங்களும், பாராட்டுக்களும் அனேகம் என்ற சிறப்பிற்குரியவர்,

    இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட டாக்டர் செந்தில்குமார் அவர்களை நாம் சந்தித்தபோது……

    உங்களின் பிறப்பும் கல்வியும் பற்றி?

    ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் அருகிலுள்ள கே. மேட்டுப்பாளையம் என்ற குக்கிராமத்தில் பிறந்தேன். சாலை வசதி, பேருந்து வசதி, பள்ளி வசதி என எந்த வசதியும் இல்லாத எளிமையான கிராமம். ஊரிலிருந்து ஆரம்பப் பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். பள்ளிக்குச் செல்ல ஆர்வம் மிகுந்திருந்ததால் நடந்து சென்றதில் எனக்கு சிரமம் ஏதும் தெரியவில்லை.

    என் பெற்றோருக்கு தொழில் விவசாயம் தான். அப்பா விவசாயம் செய்து கொண்டே நிலக்கடலை வியாபாரமும் செய்து, மிகுந்த சிரமங்களுடன் தான் எங்களைப் படிக்க வைத்தார்.

    பள்ளிக் காலமும், அந்தக் காலம் தந்த பசுமையான நினைவுகளும் குறித்து?

    முதல் நாள் என்னை மேல்நிலைப் பள்ளியில் சேர்த்த அனுபவத்தை என்னால் என்றும் மறக்க முடியாது. பள்ளியில் சேர்வதற்கு முன்பே பள்ளியைப் பற்றிய பயத்தை சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனால் பயத்துடனே பள்ளிக்குச் சென்றேன்.

    கிராமப்புறபள்ளி என்பதால் கிராமத்தைச் சுற்றியுள்ள குழந்தைகள் தான் பள்ளிக்கு வருவார்கள். அக்காலகட்டத்தில் படிப்பு என்பது இரண்டாம் பட்சம் தான். குடும்பத் தொழில் என்னவோ அதற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் நான் படித்த ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மொத்தமாக 15 மாணவர்கள் மட்டுமே படித்தனர். அனைத்துக்கும் சேர்ந்து ஒரு ஆசிரியர் மட்டுமே.

    இப்பள்ளியில் படிக்கும் போது இலவச சத்துணவு வராத காலகட்டம் என்பதால் எங்களுக்கு சாப்பாடு நாங்களே (5ம் வகுப்பு மாணவர்களே) சமையல் செய்து உண்ணும் சூழ்நிலை தான் இருந்தது. சுற்றுப்புறச் சூழல் குறித்து அவ்வப்போது எங்களுக்கு நிறைய விழிப்புணர்வு கொடுத்தார்கள். அதனை இன்றுவரை நான் பின்பற்றி வருகிறேன்.

    6ம் வகுப்பிற்கு மலையப்பாளையம் அரசுப்பள்ளியில் சேர்ந்தேன். இப்பள்ளி வாழ்க்கை எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. திரு. அய்யாமுத்து மற்றும் திரு. இராமலிங்கம் போன்றவர்களின் அன்பும், மற்ற ஆசிரியர்களின் அரவணைப்பும் படிப்பின் மீதிருந்த ஆர்வத்தை எனக்கு அதிகப்படுத்தியது.

    10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கக் காரணமாக அமைந்தது. நம்பியூர் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். இப்பள்ளி எனது நற்பண்புகளை மேலும் வளர்த்தது. அங்கு திரு. ஆசைத்தம்பி ஆசிரியர் எனக்கு இலவசமாகப் புத்தகங்கள் எல்லாம் வாங்கித்தந்து படிக்க ஊக்கமளித்தார். அப்பள்ளியிலும் தேர்வில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றேன். பள்ளிக்கல்விக்குப் பின் என்ன படிக்கலாம் என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

    நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு முதன்முதலாக என் கிராமத்திலிருந்து கோவை பகுதிக்கு வந்த போது அங்கு பார்த்த மிகப்பெரிய கட்டிடங்கள், கடைகள், இடைவிடாத வாகன அணிவகுப்பு இவை அனைத்தும் புதியதாக இருந்தது. வியப்பு ஒருபுறமும், தயக்கம் ஒருபுறமும் நுழைவுத் தேர்வு அறைக்குச் செல்வதற்கு காலதாமதத்தை உண்டாக்கிவிட்டது. ஆனாலும் அத்தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றுவிட்டேன்.

    கிராமப்புற தமிழ்வழியில் பயின்று மருத்துவத்துறையில் சாதிப்பு… எப்படி முடிந்தது?

    நிச்சயம் இந்தச் சாதிப்பு எனக்கு பெரிய சவால் நிறைந்ததாகத் தான் இருந்தது. கிராமப்புறமாணவன் என்பது மட்டுமில்லாமல் பள்ளிப்படிப்பு முழுவதும் அரசு பள்ளியில் தமிழ் வழிக்கல்வி என்பதால் சற்று பயமும் குழப்பமும் இருக்கத்தான் செய்தது. நான் படித்த சமயம் என்னுடன் படித்த 100 மாணவர்களில் என்னைப் போலவே கிராமப்புற மாணவர்கள் பலர் இருந்தனர். மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்தி படித்ததால் படிப்பதில் இருந்த தயக்கம் குறைந்தது. மருத்துவக் கல்லூரியில் திருமதி. முத்து மீனாட்சி அவர்கள் எங்களுக்கு தெளிவான ஆங்கிலச் சொற்களோடு பாடம் நடத்தும்போது புரிந்து கொள்வதில் முதலில் சற்று சிரமம் இருந்தது. பழகப்பழக ஆங்கிலமும் பழகிய மொழியாக அமைந்தது.

    கல்லூரியில் சேர்ந்த ஆறுமாதத்திற்குப் பின்னர் பிசியாலஜி என்றபாடத்திலிருந்து தேர்வு வைத்தார்கள். அப்பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்தேன். இது என் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியது. எனது திறன்களை மேலும் மேம்படுத்திக் கொண்டு என்னை தயார்படுத்திக் கொண்டேன்.

    இந்திய அளவில் ‘National Board of Examination’ என்ற தேர்வு உண்டு. இதை எதிர்கொள்வது கடினம். நாங்கள் குடல் நோய்க்கான மேல்படிப்பிற்கு 14 பேர் இந்தத் தேர்வை எழுதினோம். இதில் நான் மட்டுமே தேர்ச்சி பெற்றேன். மருத்துவத்துறையில் எதையும் சாதிக்கலாம் என்ற மகத்துவம் அப்போது தான் எனக்கு புரிந்தது.

    “கேட்வே கிளினிக்” தொடங்கியதன் நோக்கம்…

    நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் மருத்துவ வசதி கிடைப்பது அவ்வளவு எளிதான விசயமல்ல. எனவே மருத்துவத்தின் அவசியம் என்னவென்பது எனக்கு நன்றாக புரிந்தது. நகரம் என்றாலும், கிராமம் என்றாலும் எந்தப் பிரச்சனை வந்தாலும் மருத்துவ வசதி நிச்சயம் கிடைக்கப் பெறவேண்டும். அதற்கு நம்மால் முடிந்ததை மருத்துவத்திற்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இந்த கேட்கே கிளினிக் தொடங்கியதன் நோக்கம் ஆகும். ஏழை எளிய மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் பயன்படும் வகையில் சேவை செய்ய வேண்டும் என்பதே எங்கள் முதல் நோக்கம்.

    நோய் என்று வருபவர்களை குணப்படுத்தியும், நல்வழிப்படுத்தியும் மனநிறைவுடன் அவர்களைக் காக்க வேண்டி மருத்துவ முறைகளை காலத்திற்கேற்ப நவீனப்படுத்திக் கொண்டே வருகிறோம். ஆரம்பகால கருவிகளைக் கொண்டு இப்போதும் சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும், தற்போது சிறந்த சிகிச்சையளிக்க நவீன கருவிகள் வந்துள்ளன. அதன்மூலம் சிகிச்சையின் போது ஏற்படும் தழும்புகள் கூடத் தெரியாத அளவிற்கு சிகிச்சைகளைச் செய்ய முடியும். மிகச்சிறிய அளவு மட்டுமே துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யுமளவிற்கு மருத்துத்துறை நவீனமடைந்துவிட்டது.

    உங்களின் எந்த நிலை உங்களை அடுத்த நிலைக்கு உயர்த்தியது என்று நினைக்கிறீர்கள்?

    14 ஆண்டுகளாக புகழ்பெற்றமருத்துமனை ஒன்றில் பணியாற்றி வந்தேன். அங்கு கிடைத்த அனுபவமே என்னை மருத்துவத் துறையில் மேலும் உயர்த்தியது. அங்கு குடல் அறுவை சிகிச்சை சம்பந்தமான உயர் படிப்பினைப் பெற்றேன். 3 ஆண்டுகள் மற்றொரு மருத்துவமனையில் பணியாற்றினேன். படிக்கின்றகாலம் முதலே எந்த செயலைச் செய்தாலும் அதில் தனிப்பட்டு தெரிய வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பமுடையவன் நான். அதுபோலவே மருத்துவத்துறையிலும் அறுவைசிகிச்சையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்த முயற்சிகள் பல மேற்கொண்டேன்.

    இந்த கிளினிக் தொடங்கியதற்குப் பின்னர் நேரடியாகவே நோயாளிகளிடம் சென்று குறைகளைக் கேட்டு அதை சிறந்த முறையில் நிவர்த்தி செய்ய போதுமான அளவில் நேரத்தை ஒதுக்கி அவர்களுக்கென சேவை செய்து வருகிறேன்.

    குடல்சார்ந்த மருத்துவம் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன?

    அறுவை சிகிச்சை சம்பந்தமான எம்.எஸ். அறுவை சிகிச்சைப் படிப்பின் போது கோவை மருத்துவக் கல்லூரியின் முதல் யூனிட் பிரிவில் பணியில் சேர்ந்தேன். அப்பொழுது கோவை மருத்துவக்கல்லூரியில் Dr.C. பழனிவேலு அவர்கள் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள் மதியத்திற்கு மேல் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை வேலை உள்ளது, நீ வந்து அதைப் பார் என அழைத்தார். அப்போது அந்த அறுவைசிகிச்சை முறை என்னை வெகுவாக கவர்ந்தது. அதில் ஆர்வமும் ஏற்பட்டது.

    வயிற்றில் ஒரு சின்ன கருவியைக் கொண்டு நுணுக்கமான அறுவை சிகிச்சையை மிகவும் கவனமாகவும், துல்லியமாகவும் செய்வதால் அந்த முறை எனது அறுவை சிகிச்சையின் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

    லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை முறை கோவை பகுதியில் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். அதன் காரணம் என்னவென நினைக்கிறீர்கள்?

    இந்திய அளவிலேயே கோவையில் தான் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையை அதிக அளவில் செய்கிறார்கள். தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு இங்கு அதிகளவில் உள்ளதும் காரணமாக அமைகிறது. கோவைப் பகுதி எல்லா தொழில் முறையிலும் வளர்ந்துள்ளது இதன் தனிச்சிறப்பு. பல்வேறு மருத்துவப் பிரிவில் அகில இந்திய அளவில் கோவை முதலிடத்தில் உள்ளது.

    வெளிநாடுகளில் பயன்படுத்தும் கருவிகள் தான் இங்கும் செயல்பாட்டில் உள்ளதா? அல்லது மாறுபாடுகள் ஏதும் உள்ளதா?

    வெளிநாடுகளில் பயன்படுத்தும் அனைத்துவிதமான கருவிகளையும் இங்கு பயன்படுத்துவதில்லை. அங்கு பயன்படுத்துவதில் எது சிறப்பாக இருக்கிறதோ அதை மட்டுமே தேர்ந்து சிகிச்சைகள் செய்து வருகிறோம்.

    புதுமையான கருவிகள் எது வந்தாலும் அவற்றை பயன்படுத்துவதால் சிகிச்சை முறைகளிலும் மாறுதல்கள் ஏற்படும். ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை செய்தால் 2 மணி முதல் 5 மணிநேரம் என ஆகும். ஆனால் அதே சிகிச்சை இன்று நவீன சிகிச்சைகளின் மூலம் 1 மணிநேரத்தில் செய்து ஒரே நாளில் சிகிச்சையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து செல்லும் அளவிற்கு தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டன.

    இந்தத் துறையில் மிகப்பெரிய சவாலாக இருந்தது என்றால் எதைச் சொல்வீர்கள்?

    லேப்ராஸ்கோப்பியின் தொடக்க காலம் முதல் வளர்ச்சி நிலையின் மதிப்பீட்டை பலவாறாக அறிந்திருக்கிறேன். முதலில் சிங்கிள் சிப் கேமரா மூலம் RGB (Red Green Blue) மூன்று வண்ணங்களையும், ஒரே கம்ப்யூட்டர் சிப் கவனித்தது. ஆனால் அதன் பின்பு 3 சிப் கேமரா மூன்று வண்ணங்களையும் தனித்தனியாகக் கையாண்டது. இப்போது High Definition  கேமரா மற்றும் 3D கேமரா தொழில்நுட்பம் வந்துவிட்டது.

    ஆரம்பகாலத்தில் இருந்த சாலிடர் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் சிகிச்சை செய்து வந்தோம். மோனோபோலார் டயோதெர்மி என்ற ஒரே இயந்திரம் தான் அப்போது இருந்தது. அப்போது அறுவை சிகிச்சை செய்யும் போது மிக நுண்ணிய அளவில் தவறு செய்தாலும் அந்தப் பகுதி முழுவதும் அடர்த்தியான வண்ணமாக மாறிவிடும். அது பெரும் சவாலாகவே அமையும். ஆனால் இப்போதுள்ள நவீனக் கருவிகள் மூலம் சாதாரணக் கண்கள் மூலம் பார்ப்பதைவிடத் துல்லியமாகப் பார்க்க முடிகிறது.

    தொடக்கத்தில் இருந்த கருவிகள், இப்போதுள்ள கருவிகள் இவற்றிற்கிடையே சிகிச்சை முறையின் மாறுதல்களைப் பற்றி சொல்லுங்கள்?

    நிறைய மாறுதல்கள் தொழில்நுட்பம் காரணமாக ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனில் வயிற்றுப் பகுதியில் பெரிய அளவிலான கத்தி, கத்திரி என கருவிகளைப் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்போது அக்கருவிகளுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. கண்ணிமை வடிவிலான சிறிய அளவில் ஒரு துளையிட்டு அறுவை சிகிச்சைகள் செய்தால் போதுமானது. விலையுயர்ந்த தொழில் நுட்பங்களைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்கையில் பணச்செலவும் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் அந்தக் காலத்தில் செய்யும் அறுவை சிகிச்சையின் காரணமாக ஏற்படும் உடல் வலியும், உடல் சோர்வும் நவீன சிகிச்சையில் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அறுவை சிகிச்சைக்குப் பின்பு வேலைக் கெடுதல்கள் இருக்காது.

    மருத்துவமனைகள் பெருகிக் கொண்டே போனாலும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததாகவே தெரியவில்லை அதற்குக் காரணம்?

    இதற்குப் பெரிதும் காரணம் சுற்றுச்சூழல் தான். சுற்றுச்சூழல் மாறுபாடு என்று ஏற்பட்டதோ அன்று முதல் மனித வாழ்வில் மாறுதல்களும் நிறைய ஏற்பட்டுவிட்டன. உணவு முறையில் நிறைய மாறுபாடும் ஏற்பட்டு விட்டன. ஆரம்பத்தில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 90ஆக இருந்தது. நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இப்போது 60 வயதைக் கடக்கும்போதே பல நோய்கள் வாட்டுகிறது. காரணம் இயற்கை உணவில் நிறைய மாறுதல்கள் வந்து செயற்கை உணவைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டோம்.

    சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவில் கலப்படம், முதல்நாள் சமைத்த உணவைச் சேமித்துவைத்து உண்பது, செயற்கை பூச்சி மருந்துகள் போன்றவை நம்முடன் ஒன்றாகி இருப்பதை தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். இதில் மாறுதல் வந்தால் மட்டுமே நோயில்லாத சமுதாயம் உண்டாகும்.

    கடந்த 10 ஆண்டுகளில் குடல் சார்ந்த பிரச்சனைகளில் அதிக மக்கள் பாதிப்படைந்துள்ளனர். தங்களின் கருத்து?

    இப்பிரச்சனை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் உள்ளது. உண்ணும் உணவை முறையாக கையாளாமல் இருப்பதே இதற்குக் காரணம்.

    முன்பெல்லாம் புற்றுநோய் என்பது 60 வயதைக் கடந்தவர்களுக்குத் தான் வந்தது. இப்போது 30 வயதிலும் கூட புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சிறு வயதில் இப்பிரச்சனை ஏற்படக் காரணம் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை தான். தீயபழக்கங்களுக்கு பெரிதும் தற்போதைய மக்கள் அடிமையாகி உள்ளனர். வயிற்றில் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று புகைப்பிடித்தல் தான்.

    கேட்வே கிளினிக் நிறுவியதன் நோக்கம் வெற்றி அடைந்துவிட்டதா? மேலும் மாறுதல்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா?

    கிளினிக் நிறுவியதன் நோக்கம் பெரும்பாலும் வெற்றி அடைந்திருக்கிறது. எங்களிடம் வந்த நோயாளிகள் நோயின் தாக்கம் முற்றிலும் குணம் அடைந்த பிறகு தான் செல்கிறார்கள்.

    கிளினிக் நிறுவியதில் பெரிய இலக்குகள் இன்னும் இருக்கவே செய்கிறது. வெளிநாடுகளுக்கும் நோய்களைப் பற்றிய கருத்தரங்கம் செய்து வருகிறோம். மற்ற மருத்துவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களும் சிறந்த முறையில் சேவை செய்ய வேண்டும் என்றஎண்ணமும் உள்ளது. இதுபோன்றமாறுதல்கள் தேவை என நினைக்கிறோம்.

    கடந்துவந்த பாதையில் உங்களின் பயணங்கள் எவ்வாறு மாறுபாடு அடைந்துள்ளது என நினைக்கிறீர்கள்?

    எனது கடந்தகால பாதை மேடு பள்ளங்கள் பல நிறைந்ததாகத் தான் அமைந்தது. கிராமப்புறத்தில் கல்வியறிவே இல்லாத இடத்தில் இருந்துவந்து இன்று ஒரு கிளினிக் நிறுவி மருத்துவத்துறையில் பல சாதனைகள் செய்து வருகிறேன் என்பதே எனது வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப்பெரும் மாறுதலாகும்.

    தமிழ் மொழியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கல்வி பெற்ற நான், இன்று நியூயார்க் நகரம் சென்று கருத்தரங்குகளில் தலைமை ஏற்று நடத்துமளவிற்கு கடின உழைப்புடனும், ஈடுபாட்டுடனும் செயலாற்றி வருமளவிற்கு எனது வாழ்க்கையில் சிறந்த மாறுதல்கள் கிடைக்கப்பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் வழிக்கல்வி ஒருபோதும் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது.

    நம் நாட்டிலும், வெளி நாடுகளிலும் நிறைய நல்ல பல மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெற்றுள்ளேன். அவர்களின் நட்பை பெரிதும் மதிக்கிறேன்.

    படிக்கின்ற காலத்தில் உங்களது எதிர்காலம் மருத்துவத் துறையில் தான் அமையும் என எதிர்பார்த்தீர்களா?

    பள்ளிக்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்று எதிர்பார்த்ததே இல்லை. படித்தவுடன் என்னவாக வேண்டும் என்று ஆலோசனைக்கு ஆளில்லாமல் தான் இருந்தேன். பள்ளிக்கல்வியை முடித்தவுடன் அருகிலுள்ள கோபி அரசுக்கல்லூரியில் சேர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் எனக்கிருந்தது.

    கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் சுயமாக சிந்திக்க ஆரம்பித்தேன். மருத்துவத்தின் மீதும் அப்போது தான் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.

    மற்ற மருத்துவமனையில் பணியாற்றியதற்கும், சொந்த மருத்துவமனையில் பணியாற்றுவதற்கும் உள்ள வேறுபாடு?

    மருத்துவம் செய்வதில் என்று பார்த்தால் பெரிய வேறுபாடு இருக்காது. ஆனால் தலைமைக்குக் கீழ் பணி செய்யும் போது எல்லா நோயாளிகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. நமக்கென ஒதுக்கும் வார்டு நோயாளிகளை மட்டும் தான் கவனிக்க முடியும்.

    தனியாக மருத்துவமனையைத் தொடங்கி தலைமைப் பண்பு வகிக்கும் பொழுது ஒவ்வொரு நோயாளியையும் நேரடியாக சந்திக்க முடிகிறது. அவர்களின் பிரச்சனைகளை அறிந்து அதற்குத் தேவையான ஆலோசனைகளைக் கூறமுடிகிறது. என்ன மாதிரியான சிகிச்சைகளை மேற்கொண்டால் அவர்கள் குணமடைய முடியும் என்பதை உடனுக்குடன் சொல்ல முடிகிறது.

    உடன் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் கருத்தரங்கம், ஆலோசனை என்று சொல்வதின் மூலம் அனுபவத்தை அவர்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிகிறது.

    உங்களுடைய இந்த வெற்றிக்கு உங்களின் பெற்றோர்களின் ஆதரவு எப்படி அமைந்தது?

    எல்லா பிள்ளைகளைப் போலவே நானும் எனது பெற்றோரின் கஷ்டங்களைப் பார்த்தே வளர்ந்தேன். விவசாயம் பார்த்து எங்களைப் படிக்க வைத்தார்கள். எனது அப்பா விவசாயம் செய்து இந்த அளவில் எங்களை உயர்த்தி இருக்கிறார் என்றால் அதற்கு அவர் உழைப்பு மட்டுமே முக்கிய காரணம். அவரிடமிருந்து நான்  கடின உழைப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன்.

    அம்மாவிற்கு அபரிமிதமான ஞாபக சக்தி உண்டு. அது இப்போதும் எனக்குக் கை கொடுக்கிறது. எனது அம்மாவிடம் சேமிப்பைப் பற்றி கற்றுக்கொண்டேன். வீண் செலவு எதையும் அவர் செய்ய மாட்டார். ஒரு குடும்பத்தை எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டும், வீட்டு மேலாண்மை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றி அவரைப் பார்த்து கற்றுக்கொண்டேன்.

    குடும்பப் பின்னணி

                எனது அப்பா திரு. கருப்புசாமி. தாயார் திருமதி. தனலட்சுமி. என் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். என் மனைவி இல்லத்தரசி. எனது இரண்டு மகள்களும்  மருத்துவம் படிக்கிறார்கள்.

    படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்தது?

    பள்ளிக்காலம் முதலே புத்தகம் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மருத்துவம் மற்றும் சுயமுன்னேற்றம் சார்ந்த புத்தகங்கள் எது மாதிரியானாலும் உடனே படித்துவிடுவேன். ஒவ்வொரு புத்தகமும் அழியாப் பொக்கிஷம். தன்னம்பிக்கை கருத்துக்கள், சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் போன்றவற்றை படிக்கப் பிடிக்கும்.

    மருத்துவர்களின் வாழ்க்கை முறைகுறித்து?

    ஒரு மருத்துவராக வந்துவிட்டால் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தான் இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் நேரத்தை இயல்பாக கழிக்க முடியாது. தீபாவளி, பொங்கல் விடுமுறைநாட்களும் கூட விதிமுறைகளில் தான் விடுமுறைஎடுக்க வேண்டும்.

    இரவு நேர அறுவை சிகிச்சைகளும் சில சமயங்களில் இருக்கும். இரவு, பகல் என்ற வேலை நேரம் கிடையாது. மருத்துவ விடுமுறை நாட்களில் அத்தியாவசிய மருத்துவ வசதிகளே இல்லாத கிராமத்தில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டியிருக்கும்.

    நகர்புறத்தில் பெரிய மருத்துவமனை கட்டுவதைப் போல கிராமப்புறங்களில் அந்த அளவிற்கு மருத்துவமனைகள் கட்டமுடியாததற்குக் காரணம்?

    நகர்ப்புறத்தில் கிடைக்கும் மருத்துவ வசதிகள் கிராமப்புறத்தில் கிடைப்பதற்குக் காலத்தாமதங்கள் ஏற்படும். பெரிய மருத்துவமனைகள் கிராமப்புறங்களில் அமைந்தால் நோயாளிகளுக்கு சிரமங்கள் குறையும்.

    ரத்த வங்கி, CT ஸ்கேன், லேபாரட்டரி போன்றவை அவசரத் தேவைகளுக்கு ஏற்றமாதிரியாக உடனடியாக கிடைக்கும் விதத்தில் மருத்துவமனை அமைய வேண்டும். 100ல் 75% வசதிகள் செய்துவிடலாம். ஆனால் முழுமையாக செய்வதில் காலதாமதம் ஆகும். அதி நவீன கருவிகள் அமைக்கும்போது அதற்கேற்ப நோயாளிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதைக் கையாள்வது சிரமம்.

    நல்ல உடல் நலத்துடன் வயிற்றையும், குடலையும் பாதுகாக்க தங்களின் ஆலோசனைகள் என்ன?

    உடலில் ஜீரண மண்டலம் மிகவும் முக்கியமானது. இதயத்திற்கும், நுரையீரலுக்கும் முக்கியத்துவம் கொடுக்குமளவிற்கு வயிற்றுப்பகுதிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

     நம்மில் பலருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. உணவு குழாயிலிருந்து வரும் அமிலம் மேலே வரும்போது இது ஏற்படுகிறது. இதைத்தடுக்க வேண்டுமென்றால் காரம், புளிப்பு, மசாலாப்பொருட்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    உணவை உட்கொள்ளும் போது வேகமாக சாப்பிடக் கூடாது. மெதுவாகத்தான் மென்று சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடுவதற்கும், சாப்பிட்ட பிறகும் 1 மணி நேரம் கழிந்த பின்னரே தண்ணீர் குடிக்க வேண்டும்.

    இரவு நேர உணவிற்கு பின் உடனே உறங்கச் செல்லக்கூடாது. 2 மணிநேரம் கழிந்தபிறகு தான் தூங்க வேண்டும்.

    மாமிசம், பேக்கரி பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

    நார்ச்சத்து மிக்க உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

    நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை எதுவாக இருந்தாலும் அதில் நீங்களே முதல்வனாக வர வேண்டும் என்றஎண்ணத்துடன் செயல்புரிய வேண்டும். உங்களின் செயலாக்க முறை, திறன், முயற்சி போன்ற எல்லாவற்றையும் அந்தக் குறிக்கோளை நோக்கியே செயல்படுத்த வேண்டும்.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    ஒரு வெற்றியாளனின் வாழ்க்கைப் பாதையைப் பின்பற்றலாமா?

    சுப்புராஜ்
    உடற்கல்வி ஆசிரியர்
    சாவறா மேல்நிலைப் பள்ளி

    முன்னேறத் துடிக்கும் இளைஞர்களாகிய நீங்கள் ஒரு ரோல்மாடலைத் தேடுகிறீர்கள். ரோல்மாடல் என்றவார்த்தையைத் தோற்றுவித்தவர் ராபட் கெ. மெர்டன் என்னும் சமூகவியல் அறிஞர் ஆவார். ஒரு வெற்றியாளராக, உதாரண புருஷனாக அல்லது உயர் பண்புகள் கொண்ட மற்றவர் பின்பற்றத் தகுந்த நபரையே ரோல்மாடல் என்கிறோம். ஏதாவது ஒரு துறையில் சாதனை புரிந்தவர்களுடைய வாழ்க்கைப் பாதையை பின்பற்றிவிட்டால் நாமும் வெற்றியாளராகலாம் என்றேமுடிவு செய்து விடுகிறீர்கள். அப்படியே அந்த வெற்றியாளர் செய்த காரியத்தை எல்லாம் செய்து விடுகிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த வெற்றியாளனைப் போலவே உடை அணிவதும், பேசுவதும், நடந்து கொள்வதும் செய்கிறீர்கள். இப்படி வெற்றி பெற்றுவிட்ட அல்லது சாதனை புரிந்துவிட்ட அல்லது சாதனை புரிந்தவராகக் கருதிக்கொண்ட ஒரு நபரின் வாழ்க்கை முறையைப் பின்பற்றியவர்கள் பலர் வெற்றி அடையவில்லை.

    அதற்கு பல காரணங்கள் உண்டு.

    வெற்றியாளன் என்று சொல்லக்கூடிய ஒரு நபர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக தனது வெற்றிப் பயணத்தை ஆரம்பித்து இருப்பார். அன்றைய சூழ்நிலை வேறு, இப்போதைய சூழ்நிலை வேறு. அந்தக் காலத்தில் பாட்டு பாடத் தெரிந்தவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் சினிமாவில் நடிப்பதற்கு பாட்டுப்பாடத் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு கலைஞனாக வெற்றிபெற அன்றைய காலத்தில் வெற்றி பெற்றவரின் வாழ்க்கையைப் பின்பற்றவேண்டியது இல்லை.

    சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இல்லை என்ற சூழ்நிலையில் சிலர் தனியார் பொறியியல் கல்லூரியை ஆரம்பித்தனர். அவர்களுக்கு உடனடியாக வெற்றியும் கிடைத்தது. இன்று பல கல்லூரிகளை நிறுவியும் இருக்கிறார்கள். அவர்களது வெற்றிப்பாதையைப் பின்பற்ற துணிந்த ஒரு இளைஞன் ஒரு பொறியியல் கல்லூரியை இன்று ஆரம்பிப்பதாக இருந்தால் வெற்றி கிடைக்குமா? என்றால் அவர் அதற்கு மிகப்பெரிய அளவில் போராடி வேண்டியிருக்கும். ஏனென்றால் அவர் இன்று 600 தனியார் பொறியியல் கல்லூரிகளுடனும் போட்டியிட வேண்டும். அதில் அவருக்கு வெற்றி கிடைக்காமலும் போய்விடலாம்.

    ஏதாவது ஒரு துறையில் சாதித்துக் காட்டியவர்கள் வாழ்க்கையில் மிகக் கடினமான சூழ்நிலையை, அதாவது உண்ண உணவும், இருக்க இருப்பிடமும், உடுத்த உடையும் இல்லாமல் சிரமப்பட்டவர்களாகவும், அதன் காரணமாக மிகத்தீவிர சாதனை வெறியுடன் தொழிலில் ஈடுபட்டவர்களாக இருக்கக்கூடும். அத்தகைய ‘சாதனை வெறி’ உங்களுக்கு இல்லாமல் போயிருக்கலாம். எனவே அவர் பயணித்த பாதையை உங்களால் பயணிக்க முடியாமலும் போய்விடும். அவருக்கு இருந்த நெருக்கடி, கடினமான சூழ்நிலை, உங்களிடத்தில் இருக்கவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது. உயிரே போனாலும் ஒன்றைசெய்து முடிக்க வேண்டும் என்றவெறி வாழ்வில் நிறைய இருக்கும். அது வெற்றிக்கு திறவுகோல் ஆகும்.

    வாழ்க்கையில் வெற்றி பெற்றஒரு மாமனிதனிடம் என்ன திறமைகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியாமல் போய்விடும். எனவே ஒரு குறிப்பிட்ட துறையில் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்காக நீங்களும் அவரையே பின்பற்றிப் போனாலும் ஒருவேளை அத்தகைய திறமைகள் உங்களிடத்தில் இல்லாமல் போயிருந்தால் அவர் போல் உங்களால் பிரகாசிக்க முடியாமல் போய்விடும். ஒருவேளை நீங்கள் ரோல்மாடலாக கருதும் ஒரு நபரைப் போல உங்களிடத்தில் தனித்திறமை இருக்கிறது என்றாலும் கூட அவர் செய்ததையே நீங்கள் செய்தால் உங்களை ஒரு டூப்ளிகேட்டாகவே கருதுவார்கள். டூப்ளிகேட்டுகளுக்கு (போலிகளுக்கு) என்றும் மரியாதை இருக்காது. ஒரிஜினலுக்குத்தான் என்றும் மதிப்பும் மரியாதையும்.

    எடுத்துக்காட்டாக ஒரு முன்னணிப் பாடகர் போல் நீங்கள் பாடுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதும் கூட உங்களை, ‘இவரைப் போல் பாடுகிறீர்’ என்று சொல்லி ஒரு கச்சேரியில் தான் உங்களைப்பாட வைப்பார்களே தவிர உங்களுக்கு ஒரு புதுப்பாடல் பாட வாய்ப்புத் தரமாட்டார்கள். உங்களது ரோல்மாடலைப் போல உங்களால் பிரகாசிக்கவோ, சோபிக்கவோ முடியாது.  உங்களது பாணியிலே பாடிக் கொண்டிருந்தால் உங்களது பாட்டுகள் ஒரு தனிப்பாணி என்று மக்கள் உங்களது பாடல்களை வரவேற்பார்கள். நீங்களே முன்னணி பாடகர் ஆவீர்கள்.

    எப்பொழுதுமே உங்களிடம் மிக அதிக அளவிலான தனித்திறமைகள் இருக்கும். இந்த தனித்திறமைகள் உங்கள் ரோல்மாடலாக இருக்கும் அந்த வெற்றியாளரிடம் சுத்தமாக இல்லாமல் கூட இருக்கும். எடுத்துக்காட்டாக ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்றஎண்ணம், அவதிப்படும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருக்கக்கூடும். எனவே அக்குழந்தைகளைக் காப்பாற்றி கல்வி பெற, உங்களது வாழ்நாளை அர்ப்பணித்து நீங்களும் பெரிய ஒரு சாதனை படைக்க முடியும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை ஏற்படுத்தித் தரமுடியும். ஒரு நோபல் பரிசு கட்டாயம் உங்களுக்குக் கிடைக்கும்.

    ஒரு ரோல்மாடலின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியம் இல்லை என்று சொல்லிக் கொள்ளும் அதே வேளையில், சாதனை படைத்த பெரியவர்கள் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்வது மிகமிக அவசியம் என்றேகருதுகிறேன். எவ்வளவோ தடைகளையும், துன்பங்களையும் தாண்டி பெரிய சவால்களை எல்லாம் சமாளித்து இவர்கள் தங்கள் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து சாதித்திருக்கிறார்கள் என்பது அவர்களைப் பற்றி படிக்கும் போது தான் நமக்குத் தெரியவரும்.

    குறிப்பாக, சாதனையாளர்களின் சுயசரிதைகளைப் படிக்க வேண்டும். நெப்போலியன், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, விவேகானந்தர், ஆப்ரஹாம் லிங்கன், ஹெலன் கெல்லர், பில்கேட்ஸ், ஒபாமா ஆகியோரது சுயசரிதைகள் படிக்கும் பொழுது இவர்களது சிறந்த குணங்கள் நமக்கு புலப்படும். அவற்றை நாமும் பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம். அவர்களது வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளும்போது நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள், சங்கடங்கள், தோல்விகள் ஆகியவற்றை அவர்களும் சந்தித்திருக்கிறார்கள் என்ற தெளிவு பிறக்கும்.

    இறுதியாக நான் சொல்ல விரும்புவது சாதனை படைத்த மனிதர்களை கண்டுகொள்ளுங்கள். அவர்களைப் பற்றி நிறைய படியுங்கள். அவர்கள் வகுத்த வழிமுறைகள், முன்னேற்றப் பாதையின் மைல் கல்கள் ஆகியவற்றைஆராய்ந்து பாருங்கள். ஆனால் அவர்களை அப்படியே பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் உங்களிடம் இருக்கின்ற தனித்திறன், அறிவு, நல்லெண்ணம், நல்ல குணம் ஆகியவற்றை பயன்படுத்தி நீங்களே ரோல்மாடலாகக் கருதும் மனிதரை விட உயர்ந்த நிலைக்கு உங்களால் வர முடியும். நீங்கள் ரோல்மாடலாகக் கருதும் நபரே உங்களை வியந்து பார்க்கும் ஒரு உயரத்திற்கு நீங்கள் வரவேண்டும்.

    “உங்களது கையொப்பம் ஒரு ஆட்டோகிராப் ஆகட்டும்” என்பதே எனது விருப்பம்.

    இந்த இதழை மேலும்

    உள்ளதோடு உள்ளம்

    ஒரு மன்னன் வித்தியாசமான போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகளும் கூடவே அறிவாளிப்பட்டமும் கிடைக்கும் என்றும் அறிவித்தார்.

    போட்டி இதுதான். மன்னன் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு வழங்குவார். அதனை அவர்கள் நன்றாக வளர்க்க வேண்டும். ஒரு வருடம் கழித்து ஒப்படைக்க வேண்டும். அப்போது ஆட்டின் எடை கூடியோ, குறைந்தோ இருக்கக்கூடாது. நீ.. நான்.. என்று பலரும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தார்கள்.

    ஒரு வருடம் கழிந்தது. போட்டியில் கலந்து கொண்டவர்கள் ஆடுகளை ஒப்படைத்தார்கள். எடை பார்க்கப்பட்டது. எல்லா ஆடுகளும், எடை கூடியோ, குறைந்தோ தான் இருந்தது. ஒரு இளைஞனின் ஆடு மட்டும் எடை கூடாமலும், குறையாமலும் இருந்தது. மன்னருக்கு ஆச்சரியம். எப்படி இது சாத்தியமானது என்று அவனிடம் கேட்டார்.

    இளைஞன் சொன்னான், கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலிக்கு முன்னால் ஆட்டைக் கட்டி இலை தழையைப் போட்டேன். ஆடு சாப்பிட்டாலும் புலி பயத்தில் கிலி பிடித்து எடை கூடவே இல்லை என்றார்.

    பயம் வாழ்க்கையில் என்றுமே வெற்றியைத் தராது. மாறாக தவறுகளையும், தோல்விகளையும் தான் தரும். வெற்றிக்குத் தடை போடும் பயத்தை விட்டு, இயலாமையை விட்டு வரும் புத்தாண்டை வரவேற்க இப்போதிருந்தே திட்டமிட்டு செயல்பாட்டிற்கு கொணர்வோம்! சாதிப்போம்!!