– 2014 – October | தன்னம்பிக்கை

Home » 2014 » October (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    இயற்கை

    இயற்கை என்றவுடன் நினைவிற்கு வருவது கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம்) சாரலும் ஆகாய கங்கையின் அழகும்தான். சோளக்காடு செம்மேடு என்று அழகழகான சிற்றூர்கள் கொல்லிமலை மீது அமர்ந்து கொண்டு வருடந்தோறும் வந்து போகும் பலருக்கு இயற்கையைக் குறித்து சளைக்காமல் பாடமெடுத்துக் கொண்டே இருக்கின்றன.  இக்கட்டுரைத் தொடரில் கொல்லிமலை குறித்து ஏற்கனவே எழுதப்பட்டு இருக்கின்றது.  நிறைய கட்டுரைகள் இத்தகைய இயற்கையைப் பாடப்பொருளாக கொண்டு வந்துள்ளன. கடந்த இரண்டாயிரத்து ஒன்றில் ‘ரிவரி’ (Reverie) என்ற ‘கர்னால்’ (ஹரியானா) நகரில் கல்லூரிகளுக்கு இடையேயான இரங்கோலி போட்டியில் ‘இயற்கை’ என்று தலைப்பு கொடுத்திருந்தார்கள். முதல் பரிசு பெற்ற அணித் தலைவரை இந்த எழுத்தாளர் பிரத்யேகமாக அறிவார். என்ன படம் வரையப்பட்டது என்று வழக்கம் போல இந்த கட்டுரை நடக்கின்ற வழியில் காண்போம்.

    இயற்கை கவிஞன் என்று வோர்ட்ஸ்வொர்த்தை சொல்கின்றனர். அவன் இயற்கையை குறித்துப் பாடுங்கள் என்று கேட்டுக் கொண்டான். ரொமான்டிக் லிட்ரேச்சர் என்று தலைப்பை பார்க்கையில் காதல் கவிதைகளாக இருக்கும் என்றே தோன்றும், நிறையப் பேருக்கு. ஆனால், அது அப்படி அல்ல. இயற்கையை இரசிப்பதுதான் ரொமான்டிக் என்று சொன்னார்கள். முதன்முதலாக ஆங்கில இலக்கியத்திற்குள் நுழைகின்ற எல்லோருக்குமே இப்படி இயற்கை ஒரு சின்ன ஏமாற்றத்தை வழங்கி இருக்குமோ? என்று நண்பன் கேட்கின்றான்.

    வோர்ட்ஸ்வொர்த் அந்தக் காலத்திலேயே, சாதாரண, அறிமுகமில்லாத முதன்முறையாக படிக்கின்ற ஒரு வாசகருக்கும் கூட புரிகின்ற மொழியில் கவிதை இருக்க வேண்டும் என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சொல்லியுள்ளதைக் கேட்ட பொழுது இயற்கை குறித்த கட்டுரையையாவது இயற்கையாக இல்லாமல் புரிகின்ற மாதிரியே எழுதி விட வேண்டும் என்று தோன்றியது.  ஏனென்றால் இயற்கையாகவே, எழுதுகையில் அங்குமிங்கும் அலைபாய்ந்து மேற்கோள்கள் மீதேறி கிரகங்களை தாண்டியும் சஞ்சரித்து விடுகின்றது நம் கற்பனை. இந்த முறை அவ்வாறின்றி இயற்கையாகப்பட்டது என்ன என்று பிட்டுப்பிட்டு வைக்கப்படப் போகின்றது. ஹெர்மன் மெல்வில் என்று ஒரு அமெரிக்க எழுத்தாளர். ‘மோபி டிக்’ என்று ஒரு புத்தகம் எழுதினார். இந்தக்கட்டுரை ஆரம்பிப்பது போல பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஆழ்கடலில் நிகழும் நிகழ்வுகளையெல்லாம் தெளிவாக நீளமாக எழுதினார் இவர். சக எழுத்தாளரான நண்பர் ஒருவருக்கு கடிதம் வேறு, என் புத்தகம் பல பாராட்டுக்கள் பெறும் என்று. அந்த நண்பரே நந்தானியல் என்னும் பெரிய எழுத்தாளர்தான்.

    புத்தகம் வெளிவந்தவுடன் அது தலைக்குப்புற விழுந்து படுதோல்வியைச் சந்தித்தது. சொல்லப் போனால், ஹெர்மன் மெல்வில்லிற்கு, அதற்கு முன்பாக எழுதிய புத்தகங்களே பெரிய பெயரெடுத்து கொடுத்திருந்தன. ஆனால் எழுத்தாளர் என்னவோ! ‘மோபி டிக்’ தான் தனது மிகச்சிறந்த படைப்பு என்று புலம்பிக் கொண்டே இருந்திருக்கின்றார். அந்தப்புத்தகம் பசிபிக் பெருங்கடலில் வசிக்கின்ற ஒரு பெரிய வெள்ளை திமிங்கிலத்தைப் பற்றி தத்ரூபமாக எழுதப்பட்டது. அதன் பெயர் ‘மோபி டிக்’ ஆயிரத்து எண்ணூறுகளில் திமிங்கிலங்களைப் பற்றியும், ஆழ்கடல் வேட்டையைப் பற்றியும் மக்கள் மறந்து ‘கோல்டு ரஷ்’ என்னும் அமெரிக்க தங்க வேட்டை ஆரம்பிக்கும் பொழுது வந்ததாலோ? என்னவோ? புத்தகம் சோபிக்கவில்லை.

    அமெரிக்க எழுத்தாளரின் இந்தப் புத்தகம் இங்கிலாந்தில் முதலில் வெளியிடப்பட, பத்திரிக்கைகள் விமர்சனம் எழுதின. மிக பிரபலமானப் பத்திரிக்கை ஒன்று பைத்தியம் பிடித்த மோசமான எழுத்து என்று எழுத அவ்வளவுதான், காணாமலே போய்விட்டது.

    நியாயமே! நீங்கள் வழக்கம் போல் யோசிப்பதும் நியாயமே. இயற்கை என்கின்ற தலைப்பில் கட்டுரையே முடிகின்ற நேரம் வரை கிட்டத்தட்ட எழுதிவிட்டு காணாமல் போய் விட்ட ஒரு புத்தகத்தைப் பற்றி ஏன் எழுத வேண்டும்? என்று யோசிப்பது நியாயமே!

    அடுத்து வருகின்றது காரணம். “ஆழ்கடல் குறித்து மட்டுமல்ல கடல் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களிலேயே மிகவும் சிறந்தது ‘மோபி டிக்’ தான் என்று டி.எச். லாரன்ஸ் என்கின்ற பிரபல எழுத்தாளர் ஹெர்மன் மெல்வில்லி எல்லாம் இறந்து போன பிறகு பல வருடங்கள் கழித்து போற்றி பாராட்டி இருக்கின்றார். அவ்வளவுதான், நவீன உலகம் விழித்துக் கொண்டது, பல்கலைக்கழகங்கள் ‘மோபி டிக்’கை, மோப்பம் பிடித்துப் படித்தன. எண்ணற்ற பதிப்புக்கள் பதியத் தொடங்கின. கடல், திமிங்கிலம் என்றாலே ஆங்கில உலகில் ‘மோபி டிக்’ என்று மனதில் தோன்றும் வண்ணம் மிகப் பிரபலமாகிப் போயுள்ளது.

    நிற்க… நீங்கள் நினைப்பது போல கட்டுரை புரியாமலேயே, தேவையில்லாத திசையிலேயே நகர்ந்து முடிந்து போய்விட விட்டுவிடப் போவதில்லை. இயற்கை குறித்த கட்டுரைதான் இது. மோபி டிக்கில் எழுத்தாளர் ஹெர்மன் மெல்வில்லியும் அதைப்பற்றித்தான் எழுதி இருக்கின்றார். மனிதர்கள் மனிதர்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்ற உலகாயுத வாதத்திலிருந்து வெகுதொலைவு அழைத்துச் செல்ல வேண்டும் என்கின்ற ஆணித்தரமான நோக்கத்தின் காரணமாக ‘மோபி டிக்’ கதையை தீவிரமாக எழுதிவிட்டார்.

    “என்னை இஸ்மாயில் என்று அழையுங்கள்” என்று தொடங்கும் இந்த புத்தகம் மட்டுமல்ல எழுத்தாளரது வாழ்க்கையும் ஏராளமான திருப்பங்கள் நிறைந்ததுதான். ஏனென்றால் அவரது நிஜத்தின் சாரம் எடுத்து உருவான கதாபாத்திர பிரதிபலிப்புதான் இஸ்மாயில் என்கின்ற கதாநாயகன். வெள்ளை திமிங்கிலம் இவரைத்தவிர படகில் சென்ற எல்லாரையும் கொன்று விடுவதாக முடிந்துள்ளது கதை. இதில் இஸ்மாயில் தப்பிப்பது ஒரு சவப்பெட்டிக்குள் விழுந்துவிடுவதால்! மோபி டிக்கை பிடிக்க போவது ஆபத்தானது என்று பலர் எச்சரிக்கிறார்கள். கப்பல் கேப்டன் அஹாப் அதை நம்பவில்லை. அவரது காலை முதலில் ‘மோபி டிக்’ ஒருமுறை பதம் பார்த்து விடுகின்றது. அதனால் கட்டைக் காலோடு கேப்டன் பயணிக்கின்றான். கடலில் ‘மோபி டிக்’ எந்தப்பக்கம் இருந்து எப்படி வரும் என்பதே தெரியாமல் எங்கேயிருந்து வேண்டுமானாலும் வரலாம்! என்று எண்ணிக்கொண்டு பயணிக்கின்ற கடற்பயணம் இந்தக் கதையினுடைய மையப்புள்ளி.

    சில விமர்சகர்கள் “மோபி டிக்கை” இயற்கை?!? என்று குறிப்பிடுகின்றனர்.  ஆமாம் ஆச்சரியமாகவும் ஒப்புக்கொள்ள முடியாமலும் தான் இருக்கின்றது. புத்தகம்தான் இப்படியென்றால் புத்தகத்தை எழுதியவர் வாழ்வில் தன் புத்தகம் உலகப்புகழ் பெற்று, கோடிக்கணக்கில் பொருள் ஈட்டித் தரப்போகின்றது என்பது தெரியாமல் போனதும் ஒரு இயற்கையின் அம்சம்தான். எமிலி டிக்கின்ஸன் எனும் எழுத்தாளர் “வெற்றி மிக இனிப்பானது என்று கருதப்படுகிறது” அதனால், வெற்றி இனிப்பானதுதானா? என்கின்ற சந்தேகமே வந்துவிடும்.  தாகத்தில் இருப்பவனுக்குத்தான் அமுதம் நிறைய இனிக்கும் என்று சொல்லியிருப்பார். தான் எழுதிய 1800க்கும் மேற்பட்ட புத்தகங்களில் 57-ஐ மட்டுமே பிரசுரிக்க அனுமதித்த பெண்மணி இவர். அவரது இயற்கை அப்படி. ஆக மொத்தமாகப் பார்த்தால் இயற்கைக்கு நிச்சயம் இல்லாத தன்மை என்றே பெயரிட்டு விடலாம் போலுள்ளது. இயற்கையை மனிதன் வழிபட தொடங்கிய பொழுது சூரியன், இடி, மின்னல், மரம், பாம்பு என அச்சத்தில் ஆரம்பித்தான் என்று கூட வரலாறு கூறுகின்றது. அப்படியே, “அன்பே சிவம்’ என்று பக்தி இலக்கியம் தொடங்கி விடுகின்றது.

    பெரியபுராணம் போன்ற புத்தகங்களில் நாயன்மார்கள் சந்தித்த சோதனைகள் அவலச்சுவை நிறைந்தவைகளாகவும் அதைத்தொடர்ந்த நற்பயன் கொண்டவைகளாகவும் அமைந்துள்ளன. நன்மை தீமைகளை ஒரே மாதிரியாக பார்ப்பதும், எதிர்பாராத விளைவுகளை உள்ளன்போடும் புன்முறுவலோடும் ஏற்றுக் கொள்கின்ற மனப்பாங்கு வர வேண்டும். மாறாகப் புண்பட்டுவிட கூடாது. எட்டு வயதுப் பெண் தீபிகா பிள்ளைக்கறி படைத்த சிறுத்தொண்டரது புராணம் கேட்டபொழுது கண்களில் நீரோடு தொண்டை அடைத்துப்போய் கால் மணி நேரம் கலங்கிப் போய்விட்டாள். ‘மோபி டிக்’ பெரியபுராணத்தில் சங்கமமானது சரிதான். இரங்கோலியில் எந்த இயற்கை எல்லோரையும் இழுத்து வந்தது? என்று கேட்பவர்களுக்காக, இயற்கை என்றாலே இரண்டு மரம், ஒரு ஓடை, சில பறவைகள் என்று யோசிக்கின்ற நண்பர்கள் மத்தியில் பசு மாட்டின் வயிற்றில் கன்றோடு உள்ள பாடப்புத்தகப் படத்தை கருப்பு வெள்ளை நிறத்தில் உருவாக்கியதற்குத்தான் உயர் மதிப்பு.

    தாய்மை… இயற்கை என்று தலைப்பு வரைந்தோர்… கால்நடை மருத்துவ மாணவர்கள் ஆயிற்றே. நிறையக் கூட்டம் அப்படத்தை சுற்றி. கருப்பு நிறம் கொண்ட கோல பொடி போட்டியாளர்களுக்கு, ஏற்பாட்டாளர்களால் கொடுக்கப்படவில்லை என்று காகிதத்தை எரித்து கரியாக்கி கோலப்பொடியோடு கலக்கிய அனுபவம் வேறு.  பல நேரங்களில் பல வண்ணங்களை காட்டிலும், எல்லா நிறமுமான வெள்ளையும், எதுவுமே இல்லாத கருப்பும் கண்களைக் கட்டிப் போடுகின்றன. (கண்ணே – கருப்பு வெள்ளைதானே?!) எல்லோரும் பல நிறங்கள் தேடி பயணிக்கையில் பாதி நேரம் எதுவுமே செய்யாமல் பேப்பரை எரித்துக் கொண்டிருந்தது… வென்றஅணி. இயற்கை நிறைய ஆச்சரியங்களை வைத்துள்ளது. நம்பிக்கை கூட இயற்கைதான். மீண்டும் அடுத்த வருடம் கொல்லிமலை மாசிலா அருவியை பார்ப்போம் என்பதும் நம்பிக்கைதான்.  ஏனெனில் தோல்வி அடைந்த ஒருவனால்தான் வெற்றி என்பதன் முழு பரிமாணத்தையும் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கையில் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக பாவிக்கும் மனப்பாங்கு வந்துவிடும்.

    அதுவும் – இயற்கைதான்!

    இந்த இதழை மேலும்

    முயற்சி திருவினையாக்கும்

    அருமை யுடைத்தென்று  அசாவாமை வேண்டும்

    பெருமை முயற்சி தரும்

     முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

    இன்மை புகுத்தி விடும்

     பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

    ஆள்வினை இன்மை பழி

     தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்

    மெய்வருத்தக் கூலி தரும்

     ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

    தாழா துஞற்று பவர்

    என்பன வள்ளுவம்

    “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பது நன்னூல் வரி

    “நான் வெற்றியைக் கண்டு பயப்படுகிறேன். ஒருவர் வெற்றி அடைந்து விட்டார் என்றால் அவருடைய வேலை பூமியில் முடிந்து விட்டது என்று பொருள்.  ஆண் சிலந்திப் பூச்சி பெண் சிலந்திப் பூச்சியுடன் கூடிக் கலந்து வெற்றி அடைந்ததும் பெண் சிலந்திப் பூச்சி ஆண் சிலந்திப் பூச்சியைக் கொன்று விடுகிறது.  அதுபோல வெற்றியை அடைந்து முடிவதை விட  எப்போதும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதையே நான் விரும்புகிறேன். நான் அடைய நினைப்பது என் முன்னே இருந்து கொண்டே இருக்கவேண்டும், பின்னால் அல்ல” பெர்னாட்ஷா

    நம்மில் பலர் மற்றவர்களுக்கு யோசனை சொல்வதற்கும், அறிவுரை சொல்வதற்கும், விமர்சிப்பதற்கும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு செயலைச் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும்போது தயங்கி ஒதுங்குவார்கள். அந்தச் செயலை முனைப்போடு செய்வதற்கு முன்வரமாட்டார்கள். மற்றவர்களுக்கு யோசனை சொல்வதற்கு விரும்புகிற அவர்கள், செய்ய வேண்டிய காரியத்தை செய்யத் துணியாமல் பின் வாங்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். இது ஒரு வகையான முனைப்பில்லாத வாய்ச்சவடால் பழக்கம். குரைக்கின்ற நாய் கடிக்காது, நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் ஆடும் என்பன போன்ற பழமொழிகள் இவர்களுக்கு சாலப்பொருந்தும். தங்களுடைய செயல்திறனையும், ஈடுபாட்டையும் முயற்சியையும், குறிக்கோளை அடைகிற நோக்கமும் இல்லாமல் மற்றவர்களை விமர்சிப்பதைப் பழக்கமாக கொண்டவர்கள் சமுதாயத்தின் பாவச்சின்னம் ஆவார்கள்.

    உலகை தன்னுடைய குடையின்கீழ் கொண்டு வரவேண்டுமென்று விரும்பியவனும், உலகின் மகா கொடியவன் என்றும் பேசப்பட்ட ஹிட்லர் தன் மக்களிடம், “பறக்க முயற்சி செய், முடியாவிட்டால் ஓடிக் கொண்டிரு, ஓட முடியாவிட்டால் நடக்க முற்படு. நடக்க முடியாவிட்டால் தவழ்ந்து செல். ஒரு பொழுதும் நிலையாக நிற்காதே, இலக்கை நோக்கி முன்னேறு” என்று முழங்கினான். அந்த இலக்கை நோக்கி முன்னேறுகிற முனைப்பு ஒவ்வொருவருக்கும் இருத்தல் வேண்டும்.

    மக்கள் நடமாடும் முக்கிய வீதியில் மிகப்பெரிய கல் ஒன்று கிடந்தது. பலர் இவ்வளவு பெரிய கல்லை யார் இங்கு போட்டது? என்று கல் போட்டவனைப் பழித்து விட்டுச் சென்றனர். சிலர் “என்ன இது? இவ்வளவு பெரிய கல்லை பொறுப்பில்லாமல் போட்டுவிட்டு சென்றிருக்கிறார்களே, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் அக்கல்லை ஏன் யாரும் அப்புறப்படுத்தவில்லை, யாருக்கும் இங்கு பொறுப்பில்லை என்று புலம்பி விட்டு சென்றார்களே தவிர, அந்தக் கல்லை எடுத்து அப்புறப்படுத்த யாரும் முன்வரவில்லை. அந்த வழியாக ஒரு குருட்டு பிச்சைக்காரன் தன் கையிலே இருக்கிற கோலை வீதியிலே தடவித் தடவி நடந்து வந்தான். அப்போது அவன் வைத்திருந்த கோலுக்கு கீழே கிடந்த கல் தட்டுப்பட்டது. இவ்வளவு பேர் நடமாடுகிற வீதியிலே இப்படி ஒரு பெருங்கல்லா? என்று எண்ணி குனிந்து மெதுவாக உருட்டி அந்த வீதியின் ஓரத்திற்கு தள்ள முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றான்.

    கண்கள் இருந்தும் வீதியிலே அந்தப் பெருங்கல்லை பார்த்தும் பாராமல் போய் அதை எடுத்து அப்புறப்படுத்த முயற்சிக்காமல் மற்றவர் மேல் பழியையும் பாவத்தையும் சுமத்தி விட்டு சென்றவர்கள் குருடர்களா? அல்லது கண் இழந்த ஒருவன் அந்தப் பெருங்கல்லை மற்றவர்களுக்கு இடைஞ்சல் என்று எண்ணி அதை அப்புறப்படுத்த முயற்சித்தவன் குருடனா? என்ற கேள்வி நம் மனதை குத்திக் கிழிக்கிறது. நம்மில் பலர் இதுபோல கண்ணிருந்தும் குருடர்களாக இருக்கிறோம். பார்த்தும் பார்க்காமலும் விமர்சனங்களை மட்டுமே வீசி விட்டுச் செல்கிறோம். தீர்வு காண எந்த விதமான முயற்சியும் செய்ய தயாராக இருப்பதும் இல்லை. மற்றவர்களுக்கு போதனை கூறுவதோடு நின்று விடாமல் தானே அதற்கு ஏற்றாற்போல் வாழ்ந்து காட்டுபவர்களின் வழியில் தான் உலகம் பின் செல்லும்.

    முயற்சி இல்லாமல் போனால் வளர்ச்சி இருக்காது. ஒரு இளைஞன்  காரியத்தைத் தள்ளிப் போடுவதிலே முதன்மையானவன். ஒரு செயலை ஒத்திப் போடுகிற குணம் கொண்டவன். நாளை அதைச் செய்யலாம் என நினைத்துக் கொண்டிருப்பவன். அந்த இளைஞன் பக்கத்து கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாயின் மகளை திருமணத்திற்கு பெண் கேட்கச் சென்றான். அந்த விவசாயி பெண் கொடுக்க ஒரு நிபந்தனை விதித்தார். “உனக்கு ஒரு போட்டி உண்டு, நாளை நடக்கும் இப்போட்டியில் என் தோட்டத்தில் உள்ள மூன்று காளைகளில் ஏதாவது ஒரு காளையின் வாலைப் பிடிக்க வேண்டும், அவ்வாறு வாலைப் பிடித்து விட்டால் என் பெண்ணை உனக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு அந்த இளைஞனும் ஒப்புக்கொண்டான். மறுநாள் காலை போட்டி தொடங்கியது. முதலில் ஒரு காளை விடப்பட்டது. அந்தக் காளை வரும் வேகத்தைப் பார்த்து அடுத்தக் காளையைப் பிடித்துக் கொள்ளலாம் என்று ஒதுங்கி நின்று கொண்டான். இரண்டாவது காளை விடப்பட்டது. அது இளம் காளை. துள்ளிக் குதித்து வந்தது. அதன் கொம்பு சீவப்பட்டிருந்தது அந்த இளம் காளை துள்ளி வரும் வேகத்தைப் பார்த்து அடுத்ததைப் பிடித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அதையும் விட்டு விட்டான். மூன்றாவது காளை விடப்பட்டது, அது வயதான நோஞ்சான் காளை, மெலிந்து போய் தொத்தலாக இருந்தது. நடக்க முடியாமல் தள்ளாடி வந்தது, இந்தக் காளையை எளிதாகப் பிடித்து விடலாம் அன்று மகிழ்ச்சியுடன் தயாரானான். அந்தக் காளையின் வாலைப் பிடிக்க வேகமாகச் சென்றான். அவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி, அந்தக் காளைக்கு வாலே இல்லை. இப்படித்தான் நம்மில் பலர் அடுத்து வரும் பார்க்கலாம் என்றும், நாளை செய்யலாம் என்று ஒத்தி வைத்தும் அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்கலாம் என்று கனவு கண்டும் வாலில்லாத காளையைப் பார்ப்பதைப் போல வாய்ப்புகளை தவறவிட்டு வாடிக் கொண்டிருக்கிறோம். முயற்சிக்காமலே ஒதுங்கிக் கொள்பவர்கள் அந்த இளைஞனைப் போன்றவர்கள்.

    “போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து” என்று சொல்வார்கள். ஒரு நிலையில் திருப்தி அடைந்து விட்டால் வளர்ச்சி அதோடு நின்று முற்று பெற்று விடும். ஒன்று பத்தாக, பத்து நூறாக வளர வேண்டுமானால் இன்னும் இதை பெருக்க வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டும், இன்னும் இந்த நிறுவனம் பல கிளைகளுடன் வளர வேண்டும் என்ற ஆர்வமும், அதற்கேற்ற முயற்சியும் உழைப்பும், தன்னம்பிக்கையும், ஈடுபாடும், இலக்கை நோக்கி முன்னேறுகிற ஒரு இலட்சிய வெறியும் இருத்தல் வேண்டும். சாதிக்க வேண்டும், வரலாற்றிலே தன் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. இந்த ஆசை ஒரு வளர்ச்சிக்கு வித்தாக அமைகிறது. வாழ்வின் மலர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது.

    ஒவ்வொரு தனி மனிதனுடைய வளர்ச்சியும் நாட்டினுடைய வளர்ச்சியாகும். ஒரு தனிமனிதனுடைய முன்னேற்றம் ஒரு நாட்டின் முன்னேற்றமாக கருதப்படும்.

    வரப் புயர நீர் உயரும்

    நீர் உயர நெல் உயரும்

    நெல் உயர குடி உயரும்

    குடி உயர கோன் உயரும்.

    என்பது பழம் பாடல்.

     ஒரு வயலில் வரப்புகள் உயர்ந்தால் தான் நீர்மட்டம் உயரும். நீர்மட்டம் உயர்ந்தால் தான் நெல் விளைச்சல் அதிகமாகும். நெல் விளைச்சல் அமோகமாக இருந்தால் தான் குடிமக்களின் வாழக்க்கைத்தரம் உயரும். குடிமக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தால் தான் அரசு உயரும். தனி மனித வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாகும். ஆதலின் தனிமனித வளர்ச்சிக்கும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், இலக்கை நோக்கி முன்னேறுகிற ஒரு ஆசை, ஒரு முனைப்பு, ஒரு ஊக்கம், அதற்கேற்ற உழைப்பு அதற்கேற்ற முயற்சி, அதற்கேற்ற தன்னம்பிக்கை இருந்தால் அங்கே வெற்றி அரங்கேறும்.

    இந்த இதழை மேலும்

    ஸ்வீட் கார்ன்

    ஸ்வீட் கார்ன் என்பதை இனிப்பு மக்காச்சோளம் என்று அழைப்பர். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் தான் இதன் பூர்வீகம். ஸ்வீட் கார்ன் மலைப்பிரதேசங்களில் இயற்கையாகவே விளையும் ஒரு அறியவகை தாவரமாகும். இதை மலைப்பிரதேசங்களில் வாழும் பழங்குடியின மக்கள் விருப்ப உணவாக உட்கொள்கின்றனர்.

    1779ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் குடியேறி மக்கள் இந்த மக்காச்சோளத்தை முதன்முதலில் உணவு தானியங்களாப் பயன்படுத்தி இருக்கிறார்கள். காலப்போக்கில் அமெரிக்கா எங்கும் பரவி மக்களிடையே ஒரு பிரபலமான உணவாக இது மாற்றமடைந்தது. இன்று உலகளவில் பிரபலபமான உணவு வகைகளில் ஸ்வீட் கார்னும் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது.

    இதற்கென தனி மண் வளத்தை எதிர்பார்க்க வேண்டியதில்லை. எங்கு பயிரிட்டாலும் நல்ல மகசூல் தரக்கூடிய பயிராகவே இது உள்ளது. இதனை விளைவிப்பதும் சுலபம்.

    இனிப்பு மக்காச்சோளம் இளம்பருவத்தில் கதிர்கள் மென்மையாகவும், இனிப்பாகவும் இருக்கும்போது அறுவடை செய்யப்பட்டு உணவாகவும், மாட்டுத் தீவனமாகவும், கோழிப் பண்ணைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.இவ்வகை மக்காச்சோளமானது பிரஞ்சு ஆதிக்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியாவில் பயிரிடப்பட்டு, தற்போது இந்தியா மற்றும் இதர ஆசிய நாடுகளில் வேகமாக பிரபலமடைந்து சிறந்த முறையில் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது.

    மகரந்தச் சேர்க்கைக்கு 18 21 நாட்களுக்குப் பின்னர் இனிப்பு மக்காச்சோளத்தின் மணிகள், மக்காச்சோளத்தின் மணிகளைக் காட்டிலும் மிகவும் இனிப்பாக உள்ளது. இதன் மொத்த இனிப்புத் தன்மை 25  30 சதவீதமாகும். இனிப்பு மக்காச்சோளம் மிகக்குறைந்த வயதுடையதால் (75  80 நாட்கள்) பல பயிர் மற்றும் ஊடுபயிராகப் பயிரிட மிகவும் உகந்ததாகும்.

    சூப்பர் ஸ்வீட்

    •       சூப்பர் ஸ்வீட் இரகங்கள் 2 , 3 மடங்கு இனிப்புடையது.
    •       சூப்பர் ஸ்வீட் இரகங்களின் சர்க்கரை அளவு 22  40% ஆகும்.
    •     இனிப்புச் சத்து மாவுச்சத்தாக மாறுவது மிகமிகக் குறைவு.
    • சூப்பர் ஸ்வீட் கதிர்களை 10 நாட்கள் வரை இனிப்பு தன்மை மாறாமல் மிகக்குறைந்த வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம்.

    ஆனால் இக்கதிர்களின் மணிகளில் மாவுச்சத்து குறைவாக இருப்பதால் விதைகளின் முளைப்புத்திறன் காரிப்பருவத்தில் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் காரிப்பருவத்தில் சூப்பர் ஸ்வீட் இனிப்பு மக்காச்சோளம் சாகுபடி செய்ய சூப்பர் ஸ்வீட் இரகத்துடன் இனிப்பு மக்காச்சோள இரக விதைகளைக் கலந்து விதைத்தால் இனிப்புத் தன்மை சிறிது மாறுபட்டாலும் செடி எண்ணிக்கையை ஓரளவு பின்பற்றி அதிக மகசூல் பெறும் வாய்ப்பு அதிகமாகும்.

    100 கிராம் இனிப்புவகை மக்காச்சோளத்தின்

    ஊட்டச்சத்துக்கள்:

    சக்தி 360 ஜூல் (86 கிலோ)
    கார்போஹைட்ரேட் 19.02 கிராம்
    சர்க்கரைகள் 3.22 கிராம்
    நார்ப்பொருள் 2.7 கிராம்
    கொழுப்பு 1.18 கிராம்
    புரதம் 3.2 கிராம்
    டிரிப்டோபான் 0.023 கிராம்
    திரியோனின் 0.129 கிராம்
    ஐசோலியூசின் 0.129 கிராம்
    லூசின் 0.348 கிராம்
    லைசின் 0.137 கிராம்
    மெத்தியோனின் 0.067 கிராம்
    சிஸ்டைன் 0.026 கிராம்
    பினைல் அலனின் 0.150 கிராம்
    டைரோசின் 0.123 கிராம்
    வாலின் 0.185 கிராம்
    அர்ஜினைன் 0.131 கிராம்
    ஹிஸ்டிடின் 0.089 கிராம்
    ஆலனைன் 0.295 கிராம்
    அஸ்பார்டிக் அமிலம் 0.244 கிராம்
    குளுடாமிக் 0.636 கிராம்
    கிளைசின் 0.127 கிராம்
    புரோலீன் 0.292 கிராம்
    செரின் 0.153 கிராம்
    வைட்டமின் ஏ 1 (%) 9 மைக்ரோ கிராம்
    தயாமின் (பி1)  (17%) 0.200 மிகி
    நியாஸின் (பி3)   (11%) 1.700 மிகி
    ஃபோலேட் (பி9)(12%) 46 மைக்ரோ கிராம்
    வைட்டமின் சி (8%) 6.8 மிகி
    இரும்பு (4%) 0.52 மிகி
    மெக்னீசியம்     (10%) 37 மிகி
    பொட்டாசியம் (6%) 270 மிகி
    நீர் 75.96 கிராம்

    குறிப்பு:

    ஸ்வீட் கார்னை கடைகளில் வாங்கிச் சாப்பிடும் பொழுது இனிப்பில் வித்தியாசம் தெரிவதற்குக் காரணம் இரண்டு நாட்களுக்கு மேல் ஸ்வீட் கார்னை வைத்துப் பயன்படுத்தினால் அதன் இனிப்புச்சுவை குறைந்துவிடும் என்பது தான்.

    இந்த இதழை மேலும்

    பிரச்னைகளுக்கான LSD தீர்வுகள்

    லட்சுமி (L)

    லட்சுமி என்ற தெய்வத்தை செல்வத்திற்கு அதிபதியாகச் சொல்கிறோம். செல்வம் என்பது பணம் மட்டுமே அல்ல. மனதுக்கு நிறைவான நிலை. எப்போது நிறைவு கிடைக்கும்? உடலில் நோய் உபாதைகள் இல்லாதபோது, பணத்தட்டுப்பாடு இல்லாத போது, குடும்ப உறுப்பினர்கள் அன்பாக இருக்கும்போது, நியாயமான தேவைகளும் விருப்பங்களும் நிறைவேறும்போது மனம் நிறைவாய் இருக்கும்.

    இந்த நிலைக்குச் செல்வதே பிரச்னைகள் சிலவற்றுக்கான நிரந்தரத் தீர்வு.

    உடல் நோய்கள் முழுதும் எப்போது குணமாவது? தேவையான பணம் பெற எத்தனை ஆண்டுகள் ஆகும்? குடும்பத்தில் சண்டை, சச்சரவே இல்லாத நிலை சாத்தியமா? இதுபோன்ற கேள்விகள் வரும்.

    கவலைப்படாதீர்கள்.

    உடல் என்றால் நோய் இருக்கத்தான் செய்யும் என்பதை ஏற்றுக்கொண்டு, அதன் தாக்கம் மேலும் அதிகமாகாமல் இருக்குமாறு எச்சரிக்கையாக இருப்பது தான் நிறைவு.

    பணத்தைப் பொறுத்தவரை, கூடுதலாகப் பெறாவிட்டாலும், செய்யும் செலவுகளை வருமானத்துக்குள் செய்தாலே பழகினாலே நிறைவு தான்.

    குடும்பத்திலுள்ளவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதுடன், நாம் சூழ்நிலைக்கேற்றவாறு மாறிவிட்டால் போதும். அவர்கள் மீது கோபமோ, சங்கடமோ உண்டாகாது. சிறு குழந்தை வீட்டில் உள்ளது. அதன் குறும்புத்தனத்தை ரசித்துச் சிரிக்க வேண்டும். அதுபோன்ற மனநிலைக்குச் செல்வது தான் முக்கியம்.

    எந்த ஒன்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ, அப்போது அது நமக்குத் துன்பம் தராது. உதாரணத்துக்கு வயிற்றுவலி என்று எடுத்துக் கொள்வோம். பொதுவாக வயிற்றுவலி வந்த எல்லோருமே, இந்த வலி ஓடிவிட்டால் தேவலை என்று வேண்டா வெறுப்பாய் சிகிச்சை மேற்கொண்டால், குணமாகாது.

    இதையே தனக்கு வயிறு வலிக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு, அது குணமாக என்ன செய்ய வேண்டும் என யோசித்தால், சரியான தீர்வு கிடைத்துவிடும்.

    எனவே, லட்சுமி என்பது மனசு நிறைந்த நிலை, இந்த நிலைக்கு உற்ற துணையாக இருப்பது அகக்காட்சிகள் (Inner Vision) தான். மனநிறைவை அகக்காட்சியாய் காணுங்கள். விரைவில் அவை உங்களுக்கு நிறைவான நிலையைத் தரும்.

    சரஸ்வதி (S)

    கல்விக்கு அதிபதி சரஸ்வதி. வீணை செய்யும் ஒலியிலிருப்பவளே தான்.

    “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

    எழுமையும்ஏமாப்புடைத்து”

    -குறள் 398

    ஒரு பிறவியில் படித்ததே ஏழு பிறவிக்கும் உதவி செய்யும் என்பதால் பள்ளிக்கல்வி, தொழிற்கல்வி இவையெல்லாம் இப்பிரிவில் வராது. நல்ல பண்புகளும் பழக்கமுமே இங்கே கல்வி எனப்பட்டது.

    “கற்க கசடற கற்பவை கற்றபின்

    நிற்க அதற்குத் தக”                                           –                                              – குறள் 391

    தகுதியானவைகளைத் தேவையின் அடிப்படையில் குற்றமறக் கற்று, அவைகளை கடைபிடித்து வாழவேண்டும் என்பதே பொருள்.

    நல்ல பழக்கங்கள், நேர்மையான வழியில் பொருளீட்டுவதற்கான திட்டமிட்ட செயல்பாடுகள், எளிமையான வாழ்க்கை முறையால், மற்றவர்களுக்கு சிறந்த உதாரண மாக இருத்தல் ஆகியன தான் சரஸ்வதி இருப்பதின் வெளிப்பாடு.

    நம்மிடமிருந்து வெளிச்செல்லும் அலைகளே நல்ல ஆன்மீக நாட்டமுள்ள அன்பர்களைத் தேர்வு செய்து கொள்ளும். நல்லோர் இணக்கம் பிரச்னைகளைத் துரத்தியடிக்கும்.

    எனவே, உயர்கல்வி என்பதை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நல்ல பண்புகளும் மனித நேயமுமே அத்தியாவசியக் கல்வி என உறுதியாக இருந்தால், பல பிரச்னைகளுக்கு எளிதில் நிரந்தரத் தீர்வு வந்துசேரும்.

    துர்கா (D)

    வீரத்துக்கு அதிபதி துர்கா. மனிதனுக்கு பயம் இயல்பாகவே உள்ளது; காரணம் மிருக குணம் இருப்பது தான். பொதுவாக எல்லோரும் சாவுக்கு பயந்து கொள்கிறோம்.

     “தினம் தினம் செத்துச்செத்துப்

    பிழைப்பவன் மனிதனா?” இல்லையே!

    சாவு ஒருமுறை தான்;

    பிறந்தவர் அனைவரும் ஒருநாளில் கட்டாயம் இறந்தே ஆக வேண்டும்.

    இதையெல்லாம் நினைவில் கொண்டு, எவர் ஒருவர் மரண பயத்தை விரட்டி விடுகிறாரோ, அவரிடம் துர்கா வாசம் செய்வாள்.

    தைரியம் இருந்தால், எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் ஆபத்திலிருந்து மீண்டுவர முடியும். பயத்தைப் புறம் தள்ள ஒருமுத்திரையும் ஓர் அக்குபிரசரும் போதும்.

    முஷ்டி முத்திரை அல்லது தன்னம்பிக்கை முத்திரை காலை, மாலை தலா 5 நிமிடம் இரு கைகளிலும் செய்தால் தைரியம் அதிகரிக்கும்.

    உள்ளங்கையில் நான்கு விரல்களை மடக்கிவைத்து, அவற்றின் மீது கட்டை விரலை வைத்து இறுக்கமாய் பிடிக்கவும். இதுதான் முஷ்டி முத்திரை.

    உள்ளங்கையில் ஆட்காட்டிவிரல், நடுவிரல் இரண்டும் சேருமிடத்திலிருந்து சுமார் ஒரு இஞ்ச் கீழே உள்ள புள்ளி அட்ரினல் என்ற நாளமில்லாச் சுரப்பி மையமாகும். இதை நன்கு அழுத்தி அழுத்திவிட்டால் பயம் குறைந்துவிடும். இதுதான் அக்குபிரசர். மனதில் துணிச்சல் மட்டும் இருந்தால், எந்தச் சூழ்நிலையையும் சுலபமாகக் கடந்துவந்து விடலாம். எந்தச் சூழ்நிலைகளில் பயம் வருகிறது எனக் கண்டுபிடித்து, அந்தச் சூழ்நிலைகளைத் தவிர்ப்பதும், அவைகளை ஏற்றுக்கொள்வதும் பயத்தைப் போக்கி, தைரியத்தை உருவாக்கும்.

    பிரச்னைகளே வராமலிருக்க வழிகள்

    இதுவரை வந்துவிட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பல வழிகளை விரிவாய் பார்த்தோம். சிறந்த, உயர்ந்த நிலை என்பது பிரச்னைகளே வராத நிலை அல்லது பிரச்னைகளே இல்லை என்ற மனநிலை தான்.

    இந்த நிலைக்குச் செல்ல பநட முறை உபயோகமாகும். நாம் தனித்து வாழ முடியாது. நம்முடன் இணைந்து வாழ்பவர்கள், நாம் வாழும் காலத்தில் வாழ்பவர்கள் ஆகியோரிடமிருந்து நாம் பலவகையில் உதவி பெற்றுக் கொண்டிருப்பதை நினைவு கூர்ந்து, அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இதை Thanks  என்று கூறுகிறோம்.

    நாம் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், மற்றவர்கள் மனம் புண்படுமாறு ஏதாவது பேசியோ, செய்தோ விடுவோம். தவறு எனத் தெரிந்த உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இதை Sorry என்கிறோம்.

    குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோருமே மரியாதையை எதிர்பார்க்கிறோம். னவே, எல்லோரிடமும் ப்ளீஸ்  என்று கூறப் பழக வேண்டும்.

    இந்த மூன்று சொற்களின் முதல் எழுத்துக்கள் தான் TSP. இதைச் சொன்னால் எவ்வளவு பெரிய பிரச்னையும், சூரியனைக் கண்ட பனிபோல் உருகி ஓடிவிடும். LSD என்பது வந்த பிரச்னைகளுக்குத் தீர்வு. TSP என்பது பிரச்னைகளே வராத நிலைக்குத் தீர்வாகும். பிரச்னைகளைத் தீர்த்து வாழ்வோம்; ஆனந்தமாய் இருப்போம்.

    இந்த இதழை மேலும்

    வாழ்க்கை

    புத்தாடையால் போர்த்திக் கொண்டே வரவேற்கிறது

    கொழுந்து விட்டு எரியும் மனப்பான்மையுடன் விடாமுயற்சிக்காரர்கள் வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வெற்றிக்கொடி கட்டுகிறார்கள். சிறுசிறு முயற்சிகள்தான், நம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்தும்.

    பெஞ்சமின் டிஸ்ரேலி ‘இங்கிலாந்து பாராளுமன்றத்தில்’ பேசுவதற்கு எழுந்தால் உடனே அவரைக் கேலிசெய்து ‘பேசாதே பேசாதே’ என்று கத்தி உட்கார வைத்து விடுவார்கள். இன்றைக்கு உட்காருகிறேன். இதே சபையில் என் பேச்சை  நீங்கள் கேட்கும் நாள் விரைவில் வரும் என்று கூறி உட்கார்ந்து விடுவார். பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமரானார் பெஞ்சமின் டிஸ்ரேலி. அஞ்சாமையும், விடாமுயற்சியும் தான் இவரது வெற்றிக்கு உதவின. சிறுசிறு முயற்சிகளும் வெற்றிக்கு உதவும். அதுவே பெரிய குறிக்கோள்களை விடாமுயற்சியுடன் அடைய நம்மைத் தயார்படுத்திவிடும்.

    ‘மந்தமாகவும், செயல்முனைப்பு இல்லாமலும் வாழும் நூற்றாண்டுகளைவிட, ஊக்கத்துடனும், உறுதியுடனும் உழைத்து வாழும் ஒருநாளே உயர்ந்தது’ என்கிறது புத்தரின் தம்மபதம்.

    நாம் வெற்றி பெற்றவர் என்ற நினைப்புடன் வாழும்போது நம்முடைய ஆழ்மனம் கலக்கமின்றி இருப்பதால், அது பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டு ஆழ்மனதில் ஆழமாக, அழுத்தமாக, ஆர்வமாக நாம் பதிந்துள்ள லட்சியங்களை நிஜத்தில் கிடைக்க தக்க சூழ்நிலைகளை வெளி உலகில் ஏற்படுத்தித் தருகிறது. எனவேதான், எப்போதும், எல்லா சூழ்நிலைகளிலும் உற்சாகமாக வாழுங்கள். நம்பிக்கையுடன் வாழுங்கள்  என்று நீதி நூல்களும், மனோத்துவ அறிஞர்களும் கூறுகின்றனர். ஒருபடி மேலே போய் ‘வெற்றி கிடைத்துவிட்டது’ என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தால், இதனால் கிடைக்கும் பலன்கள் பிரமிக்கத்தக்கவையாக இருக்கும்.

    வெற்றி பெற்றவர் என்ற நினைப்புடன் வாழ டபிள்யூ கிளமென்ட் ஸ்டோன் கூறும் சுயஒழுக்கம், ஊக்கம், நல்லதே நடக்கும் என்ற மனோபாவம், தீர்மானிக்கப்பட்ட இலட்சியம், மிகச்சரியாக சிந்திக்கும் பழக்கம், நேர்வழியில் செல்லுதல், தோல்வி பாடத்தை வைத்து முன்னேறுதல், உடலையும், மனதையும் ஆரோக்கியமாகப் பராமரித்தல், நேரம், பணத்தை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளல், ஒரே முனைப்புடன் செயல்படுதல் போன்றவைகளைப் பின்பற்றி பார்க்க வேண்டும். மேற்கண்டவைகளைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    எப்போதும் நேர்வழியில் ‘நன்மையே நல்லதே நடக்கும்’ என்று சிந்தித்து நேர்வழியிலேயே லட்சியத்தை அடைய முயற்சி செய்வதுதான் வெற்றியையும், வாழ்க்கைக்கு பாதுகாப்பையும் தரும். இதுவே வாழ்க்கையின் மாபெரும் அரிய இரகசியம்.

    எழுத்தாளர் ராஜேஸ்குமாருக்கு குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகள் தொடர்ந்து வாய்ப்பளிக்கவில்லை. இவர் ஆபாசமாகவோ, கள்ளக்காதலையோ எழுதவில்லை. 18 ஆண்டுகளில் 1000 நாவல்களை எழுதினார். இவற்றில் குமுதம், ஆனந்தவிகடன் ஆகிய வார இதழ்களில் தலா நான்கு தொடர்கதைகள் மட்டுமே வெளிவந்தன.

    ராஜேஸ்குமார் ஆபாசமின்றி சுவையாக, விறுவிறுப்பாக எழுதியதால் மற்றவார, மாத இதழ்கள் இவரை எழுதச் சொல்லி ஊக்குவித்தன. நாம் நல்லதையே அறிவுடன் எண்ணி அதையே செய்ய ஆரம்பித்தால் எத்தனை தடைகள் இருந்தாலும் நமது வலிமையான எண்ணங்களின் சக்தி அவற்றைத் தகர்த்து நம்மை வெற்றி பெறச் செய்யும். இவர்தம் வெற்றி என்பது அவரது வலிமையான எண்ணங்களுக்கும் ‘என்னால் முடியும்’  என்ற உறுதியுடன் செயல்பட்ட அவரின் கடின உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியாகும்.  நீங்கள் துணிவுடன் இறங்கினால் உங்களின் தீவிர நம்பிக்கை, வியக்க வைக்கும் அற்புத வெற்றிகளைத் தொடர்ந்து உங்களுக்குத் தரும் என்பார் நார்மன் வின்சென்ட் பீல்.

    அமெரிக்க மனோத்துவ அறிஞர்களாக எஸ்டீவன்ஸ் மற்றும் ஜோன் ஸ்டீவன்ஸ் ஆகியோரின் ஓர் அரிய ஆலோசனை இது. ‘நம்பிக்கையுடன் கற்பனை செய்யுங்கள், கார், வீடு, மனைவி, கணவன், தொழிற்சாலை என அனைத்தும் உங்களுக்கு எந்த நிறத்தில் வேண்டுமோ, அந்த நிறத்தில் கற்பனை செய்யுங்கள். பச்சை, மஞ்சள், நீலம் என எந்த நிறம் உங்களுக்கு பிடித்ததோ, அந்த நிறத்தில் உங்களுக்குப் பிடித்த எதிர்காலக் காட்சிகளைப் படமாக மனதில் பதியுங்கள். இப்படி வண்ணத்துடன் மனதில் பார்ப்பது அதிக சக்தியை உற்பத்தி செய்யும்’.

    புல்வெளியைப் போல உங்கள் வீட்டு டேபிள், கிளாத், ஜன்னல் திரை இருக்கலாம். தொலைபேசியை மஞ்சள் நிறத்திலும், ரெப்ரிஜிரேட்டர், லெட்டர் பேடு போன்ற பிரத்யேகப் பொருட்களை உடனே மஞ்சள் நிறமாக மாற்றுங்கள். உங்களின் செயல்படும் ஆற்றல் இதனால் அதிகரிக்கும்.

    உங்களுக்கு 50 இலட்சம் ரூபாய் தேவை. இதைப் பெற தினமும் காலையில் எழுந்ததும் 1000 ரூபாய் நோட்டுக்கட்டை கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு நோட்டாக ஆயிரம் ரூபாய் கட்டை ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று தொடர்ந்து எண்ணுங்கள். 100 நோட்டுகள் ஒரு இலட்ச ரூபாய், அடுத்த 49 கட்டுகளையும் ஒவ்வொரு கட்டாக எடுத்து உங்கள் பீரோவில் வையுங்கள். 50 இலட்சம் ரூபாய் இப்போது உங்களிடம் இருக்கிறது. இரவில் படுக்கப் போகும்போது ஆயிரம் ரூபாய் நோட்டை மனதில் நன்கு பார்த்தபடியே ஒவ்வொரு நோட்டாக எண்ணுங்கள்.  100 வரை எண்ணியதும் மற்ற49 கட்டுகளும் சரியாக இருப்பதைப் பாருங்கள்.  இப்போது ஐம்பது ஆயிரம் ரூபாய் கட்டுகளையும் உங்கள் பீரோவில் எடுத்து வைத்து விட்டுத் தூங்குங்கள். நம்பிக்கையுடன் 1000 ரூபாய் நோட்டை அப்படியே கட்டுக் கட்டாக பார்ப்பது ஆழ்மனதில் பதிவதால் நிஜத்தில் நேர்வழியில் நீங்கள் பார்த்த பணம் கிடைக்க சூழ்நிலை உருவாகும். காலையும், மாலையும் உண்மையுடன் நம்பிக்கை குறையாமல் பணத்தை எண்ணி மனதில் லட்சாதிபதி என்னும் உணர்வை உறுதியாக பதிவு செய்து விடுங்கள். இது சக்தி வாய்ந்த வழி. தொடர்ந்து தேவையான பணத்தை கற்பனையில் பார்த்து அதை நிஜத்தில் பெறுங்கள்.

    1928லிருந்து 2002 வரை எட்டு கறுப்பர் இன கலைஞர்கள்தான் ஆஸ்கர் பரிசை வென்றுள்ளனர். அவர்களில் ய்மூலி பெர்ரி நடிப்பிற்கான சிறந்த நடிகை முதல் கறுப்பர் இன நடிகையான அவர் ஆஸ்கர் பரிசை பெறும்போது மகிழ்ச்சியில் அழுது, “இந்த நிமிடம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய நேரம் என்றார். எனக்குக் கிடைத்த இந்த விருதை  வீடில்லாத, முகம் தெரியாத, வழி தெரியாத கறுப்பர் இனப்பெண்களுக்கு சமர்ப்பிக்கிறேன். என்னைப் போலவே அந்தப் பெண்களுக்கும் உலகம் வழிவிடும் என்று உறுதியாக தெரிவிக்கின்றேன்“ என்றார்.

    ஜனாதிபதி பதவி ஏற்றதும், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அங்குள்ள குழந்தைகளிடம் பேசியது சாதனைப் புரிய விரும்பும் அனைவரும் நினைவில் வைத்திருந்து பின்பற்ற வேண்டிய  ஒன்றாகும். அவை இந்த உலகில் முடியாது என்று எதுவுமே இல்லை.  அப்படி யாராவது சொன்னாலும் அதை நம்பாதீர்கள். உங்கள் பெற்றோர், ஆசிரியர், நண்பர் அல்லது மாநில முதலமைச்சரே கூட ‘இது உங்களால் முடியாது’ என்று எதைச் சொன்னாலும் அதை நம்பாதீர்கள், ஏற்றுக் கொள்ளாதீர்கள். உலகில் முடியாதது  என்று எதுவுமே கிடையாது. முடியாது என்பதை என்னால் ‘சாத்தியம்’  ஆக்க முடியும்  என்றே நினைக்க வேண்டும். வலிமையான எண்ணம் உங்களை செயல்வீரராக உயர்த்தி விடும் என்பார். இங்கே மரியாதைக்குரிய கலாம் 2020ல் இந்தியா வல்லரசாகும் என்று வரலாற்றின் மீது சத்தியம்  அடித்து கூறுவதை கற்பூரம் கொழுத்தி ஆரத்தி செய்யும் அதிசயம் நடைபெறத்தான் போகிறது. இதை இன்றைய இளைய சமுதாயம் அசை போட ஆரம்பித்து விட்டது.

    “ஒரே ஒரு கருத்தையே – லட்சியத்தையே – தேர்வு செய்யுங்கள். அதையே உங்கள் வாழ்வாகத் தீர்மானியுங்கள். அது பற்றியே ஆழ்ந்து சிந்தியுங்கள். அதைப் பற்றியே கனவு கண்டு அதை நிறைவேற்றுவதற்காகவே வாழுங்கள். உங்கள் மூளை, தசைகள், நரம்புகள் இப்படி உடம்பின் ஒவ்வொரு சொல்லிலும் உங்கள் இலட்சியமே அடங்கி நிரம்பியிருக்கட்டும். மற்ற எல்லாக் கருத்துகளையும் ஒதுக்கிவிடுங்கள். இதுவே வெற்றிக்கான வழி” என்று சுவாமி விவேகானந்தர் கூறுவதே சிறப்புடையது.

    “வாழ்க்கை தன்னை எப்பொழுதும் புத்தாடையால் போர்த்திக் கொண்டேயிருக்கிறது” என்பார் ஜோஸஃப் மர்ஃபி. மனிதன் வெல்ல வேண்டுமாயின் அவன் இயங்க வேண்டும், செயல்பட வேண்டும், உழைக்க வேண்டும். ஒரு குறிக்கோளை உண்டு பண்ணிக்கொண்டு அதை அடைவதற்காக முயல வேண்டும். முயற்சியே உலகின் முகத்தையே மாற்றி அமைத்தது. முயற்சியை முழுமூச்சோடு நீ செய்தால், சிகரமே உனக்கு சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகுபார்க்கும், அதிசயம்… நடக்கும்.

    இந்த இதழை மேலும்

    உலகமே வியந்தது! மங்கள்யான் செவ்வாயை அடைந்தது!!

    டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் “மங்கள்யான்” விஞ்ஞானிகள்

    டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், இந்தியா முதன்முதலில் நிலவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பியபோது அத்திட்டத்தின் இயக்குனராக இருந்தவர்.

    • இவரின் பொழுதுபோக்கே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தான் பெற்ற, கற்ற அனுபவங்களையும், அறிவுரைகளையும் எடுத்துச்சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதாகும்.
    • இந்திய விண்வெளியில் ஒரு அடிமட்ட ஆய்வாளராக இருந்து தன்னுடைய தளராத முயற்சியாலும், நம்பிக்கையாலும் படிப்படியாக உயர்ந்து இன்று இந்தப் பாரையே தன்பக்கம் பார்க்க வைத்த தன்னம்பிக்கை தமிழர்.
    • இவரின் நோக்கமெல்லாம் இளைஞர்களுக்கு நல்வழி காட்டவேண்டும் என்பதே. இவர் “கையருகே நிலா” என்னும் தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். “மங்கள்யான்’ பற்றி இவர் எழுதியுள்ள “கையருகே செவ்வாய் என்னும் நூல் வெளிவர உள்ளது.
    • இவர் நான்கு இந்திய விண்வெளி ஆய்வு விருதுகள். சந்திராயன் 1 திட்டத்திற்காக சர்வதேச விருதுகள் என்று பல விருதுகளைப் பெற்ற சிறப்புக்குறியவர்.

    இவர் கோவை கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடியில் 1958ம் ஆண்டு பிறந்தவர். அப்பா மயில்சாமி. அம்மா பாலசரஸ்வதி. இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள். அப்பாவின் அப்பாவுக்கு தொழில் நெசவு. அப்பா கோதவாடி ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றியவர். குழந்தைகள் ஐந்து பேரையும் நல்ல முறையில் அவர் வளர்த்திட அதிகம் சிரமம் எடுத்துக் கொண்டவர்.

    ஆசிரியப் பணிபோக மாலை மற்றும் விடுமுறை நாட்களில் தையல் தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவர்.

    தமிழ்வழிக் கல்வியில் அப்பாவின் அறிவுரையில் ஐந்தாம் வகுப்பு வரை கோதவாடி அரசுப் பள்ளியில் படித்தவர். அதற்குப் பின்பு  கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து,  தினமும் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்துதான் பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார். அரசு உதவித் தொகையில் தான் இவரின் கல்விப் பயணமே தொடர்ந்திருக்கிறது.

    கல்வி ஒன்று மட்டுமே பெரிய மூலதனம் என்று நன்கு படித்து SSLC-யில் முதல் மதிப்பெண் எடுத்து தங்கப்பதக்கம் பெற்றவர். மேற்கொண்டு மென்மேலும் கல்வியில் ஆர்வம் செலுத்தி கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் B.E படிப்பையும், நாள்தோறும் வந்து போவதற்கு பணம் கேட்டு அப்பாவை துன்புறுத்தக்கூடாது என்று, மற்ற தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்தும் தங்கிப் படிப்பதற்கான வசதி ஒன்றைக் கருத்தில் கொண்டு கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்து பி.இ. முடித்தவர். அதற்குப் பின்பு பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் எம்.இ. (Applied Electronic communication) நிறைவு செய்தவர்.

    1982ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுமையத்தில் ஒரு சாதாரண அறிவியல் ஆய்வாளராக சேர்ந்த இவர், கடின உழைப்பாலும், புதிய புதிய கண்டுபிடிப்புகளாலும் தன்னை படிப்படியாக உயர்த்திக் கொண்டவர்.

    இந்திய நுண்ணுனர் மற்றும் அறிவியல் செயற்கைக் கோள்களுக்கான தலைமைத்திட்ட இயக்குனராக தற்பொழுது இருந்து வருகிறார். சந்திரயான்-2, ஆதித்யா, அஸ்ட்ரோசாட், ரிசாட் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட திட்டங்கள் அதில் அடங்கும். மங்கள்யானும் அதில் ஒன்று. அதன்படி மங்கள்யான் செயற்கைக் கோள்களின் வடிவமைப்பு, பட்ஜெட், மேலாண்மை மற்றும் அவற்றின் விண்பயணச் செயல்பாடுகள் சார்ந்த பணிகளைக் கவனித்து வருகிறார். இன்று நாடே போற்றும் நற்றமிழரான அவரையும், சக விஞ்ஞானிகளையும் நாமும் வாழ்த்தி மகிழ்கிறோம்.

     மங்கள்யான் விண்கலம் உருவாக்கத்தில் இடம் பெற்ற சாதனை விஞ்ஞானிகள்…

    இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணனின் வழிகாட்டல் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட இந்தக் குழுவில் இடம் பெற்ற சாதனை விஞ்ஞானிகள் மொத்தம் 14 பேர் ஆவார்கள். அவர்கள் முறையே…

    1.  கே. ராதாகிருஷ்ணன் – இஸ்ரோ தலைவர்

    2. மயில்சாமி அண்ணாதுரை – மிஷன் திட்ட இயக்குநர்

    3. அருணன் – மங்கள்யான் பிராஜக்ட் இயக்குநர்

    4. கிரண்குமார் – செயற்கைக் கோள் அப்ளிகேஷன் மையத்தின் இயக்குநர்

    5. எஸ். ராமகிருஷ்ணன் – விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர்

    6. எஸ்.கே. சிவக்குமார் – இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநர்

    7. பி. குஞ்ஹிகிருஷ்ணன் – பி.எஸ்.எல்.வி. திட்ட இயக்குநர்

    8. சந்திரதத்தன் – திரவ எரிபொருள் திட்ட இயக்குநர்

    9. பிரசாத் – சதீஷ் தவன் விண்வெளி மைய இயக்குநர்

    10. ஜெயக்குமார் – பி.எஸ்.எல்.வி. திட்ட உதவி பிராஜக்ட் இயக்குநர்

    11.பன்னீர் செல்வம் – ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் மையத்தின் தலைமைப் பொது மேலாளர்

    12.ஆதிமூர்த்தி –  ராக்கெட் தொழில் நுட்பம் & விண்வெளி இயக்கவியல் பிரிவு

    13.கேசவராஜு – மிஷன் இயக்குநர்

    14.கோட்டீஸ்வர ராவ் – அறிவியல் செயலாளர்

    மங்கள்யான்…

    செவ்வாய் சுற்று வட்ட திட்டம் (Mars Orbiter Mission) என்பதன் சுருக்கமே MOM. மங்கள்யான் என மக்கள் கூறினாலும் விஞ்ஞானிகள் இதனை MOM என்றே அழைக்கிறார்கள்.

    செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலைநிறுத்தும் பணி, செப்டம்பர் 24 (புதன் கிழமை) காலை வெற்றிகரமாக நடந்தது.

    ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்த மங்கள்யான் விண்கலத்தின் பின்னணியில் மிகப் பல இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பு பொதிந்திருக்கிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ரூ. 460 கோடி செலவில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு 2013, நவம்பர் 5ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி செப்டம்பர் 24ந் தேதி காலை செவ்வாய் கிரகத்திற்கு அருகில் 1800 கி.மீ தொலைவை அடைந்தது.

    அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு செயற்கைகோளின் வேகம் வினாடிக்கு 1.098 கி.மீ என்ற அளவிற்கு வேகத்தை குறைத்து செவ்வாய் கிரகத்தைச் சுற்றிய நீள் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

    முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

    குறைந்த செலவில் ஒரு விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கே செலுத்தி அதில் வெற்றியும் கண்டு உலகையே தம் பக்கம் திசைதிருப்பி உள்ளனர் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் மட்டுமே சாத்தியமாகக் கொண்டிருந்த பெருமைகளை முறியடித்து முதல் முயற்சியில் சாதித்த நாடு என்ற புதிய சாதனையை இந்தியா படைத்திருக்கிறது

    செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை உலக நாடுகள் அனுப்ப முயற்சிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. 1960ல் இருந்து சுமார் 40 முயற்சிகள் நடைபெற்று அதில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வியிலேயே முடிந்துள்ளன. இதற்கு முன் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற 20 நாடுகளை உள்ளடக்கிய  ‘ஒன்றிணைந்த ஐரோப்பா விண்வெளிக்கழகம்’ அனுப்பிய ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ விண்கலம் மட்டுமே முதல் முயற்சியில் வெற்றி கண்டது.

    சந்திரயான் செயற்கைக் கோள் கொடுத்த வெற்றி மங்கள்யான் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. மங்கள்யான் குறித்த அறிவிப்பை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் வெளியிட்டார். அதில் இருந்து சுமார் 15 மாத இடைவேளையில் முழு விண்கலத்தையும் உருவாக்கி கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி  ஆந்திரப்பிரதேசத்தில் இருந்த ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் உதவியுடன் மங்கள்யான் ஏவப்பட்டது.

    மங்கள்யானின் பயணம்…

    கவுண்ட் டவுன் ஆரம்பிக்கும் நொடியில் இருந்தே விண்கலம் எந்த நிமிடத்தில் எங்கு இருக்கும்; எந்த நாள் இலக்கை சென்றடையும் என அனைத்திற்கும் நாள் குறிக்கப்பட்டன. ராக்கெட் விண்ணில் பாயத் துவங்கியதும் ஸ்ரீ ஹரிகோட்டா, அந்தமானில் உள்ள போர்ட் ப்ளேர், ப்ருனே, பியாக் போன்ற ஊர்களில் உள்ள நான்கு மையங்களில் இருந்து கண்காணித்தார்கள். அந்தமான் தாண்டி ராக்கெட் செல்ல துவங்கியதும் 10 நிமிடங்களுக்கு எந்த மையத்துடனும் தொடர்பில் இருக்காது. பின்னர் மேற்கு பசிபிக் பெருங்கடன் மேல் பாயும்பொழுது அங்கு இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரு கப்பல்கள் ராக்கெட்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டன.

    ஒரு கட்டத்தில் ராக்கெட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் பிரிந்துசெல்ல மங்கள்யான் விண்ணில் பாய்ந்து, தனது சூரியத்தகடுகளை விரித்தது. பூமியை சுமார் 6 முறை சுற்றியபின் பூமியின் பாதையை விட்டு விலகி செவ்வாயை நோக்கி சீறிப்பாயத் துவங்கியது. இதற்காக விண்கலத்தில் உள்ள 440 நியூட்டன் திறன் கொண்ட எல்.ஏ.எம் மோட்டார் இயக்கப்பட்டது.  விண்கலம் தேவையான வேகம் எடுத்தவுடன் இந்த மோட்டார் நிறுத்தப்பட்டது.

    சுமார் 10 மாத காலம் ஒரு நொடிக்கு சராசரியாக 22 கிலோமிட்டர் என்ற வேகத்தில் பயணித்து செவ்வாய் கிரகத்தின் அருகில் சென்றடைந்தது. செவ்வாய் கிரகத்தின் புவியிர்ப்பு விசைக்குள் நுழையும் பொழுது இதன் வேகம் குறைக்கப்பட வேண்டும். இதை குறைக்க முதல் 10 மாதங்கள் இயங்காமல் இருந்த அந்த எல்.ஏ.ம்.. மோட்டார் இயங்குகிறதா என்று சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை  சுமார் 4 வினாடிகள்  நீடித்தது. மோட்டார் சரியாக இயங்க துவங்கியதும் இஸ்ரோவிற்கு நாலாபுறமும் வாழ்த்துக்கள் குவியத்தொடங்கின.

    இந்தியாவின் மங்கள்யான் சோதனை நடத்திய அதே வேளையில் நாசாவின் (அமெரிக்கா) மேவன் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைக்குள் நிறுத்தப்பட்டு அதன் ஆராய்ச்சிப் பணிகளைத் துவங்கியது. ஆனால் அமெரிக்காவை விட இந்திய விஞ்ஞானிகள் குறைந்த செலவில் மங்கள்யானை அனுப்பி புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.

    செவ்வாயில் மங்கள்யானின் வேலைகள்…

    தனது பணிகளை துவங்கும்  மங்கள்யான், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கும். அப்படி மீத்தேன் வாயு இருக்கும் பட்சத்தில் அது உயிர்கள் வாழ்ந்ததால் உருவானதா அல்லது இயற்கை பேரழிவுகளின் விளைவால் உருவானதா என்று ஆராயும். அது மட்டுமின்றி அதனுள்ளே பொருத்தப்பட்டுள்ள கலர் கேமரா தொடர்ந்து படங்களை எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கும். இது வருங்காலத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற நடைபெறும் ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

    பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் மங்கள்யான்…

    இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மிகவும் நம்பகமானது என்பது 25 முறைகளுக்கும் மேல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்து நாம் உருவாக்கிவரும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் நம்பகத்தன்மை இனிதான் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டினால் பொதுவில் ஒரு விண்கலத்தை மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வரும்படி செலுத்த இயலும். ஒரு விண்கலம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு, செவ்வாய் நோக்கிச் செல்ல வேண்டுமானால், அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

    ஆகவே, மங்கள்யான் திட்டம்பற்றி ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டபோது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை மேலும் சில முறைகள் செலுத்தி, அதன் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்ட பின்னர் அதைக் கொண்டு மங்கள்யானைச் செலுத்தலாம் என்று யோசிக்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு பிரச்சனை இருந்தது. செவ்வாய் கிரகத்துக்கு நினைத்த நேரத்தில் விண்கலத்தைச் செலுத்த இயலாது. பூமியும் செவ்வாயும் இருக்கும் நிலைகளைப் பொறுத்து 26 மாதங்களுக்கு ஒரு முறைதான் வாய்ப்பான சமயம் கிட்டும். 2013-ம் ஆண்டு நவம்பர் முதல் 2014 ஜனவரி வரையிலான காலம் வாய்ப்பான காலமாகும். அதை விட்டால் 2016 ஜனவரி வரை காத்திருந்தாக வேண்டும். இஸ்ரோ அதுவரை காத்திருக்க விரும்பவில்லை. மிக நம்பகமான பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டையே பயன்படுத்த முடிவுசெய்தது. அது உண்மையில் துணிச்சலான முடிவாகும்.

    பூமியிலிருந்து செலுத்தப்பட்ட மங்கள்யான் பலமுறை பூமியைச் சுற்றிய பின் செவ்வாய் நோக்கிச் சென்ற விதம்…

    2008-ம் ஆண்டில் சந்திரனுக்கு இந்தியாவின் சந்திரயான் அனுப்பப்பட்டபோது இதே உத்திதான் பயன்படுத்தப்பட்டது.

    இந்தப் பின்னணியில்தான் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 2013 நவம்பர் 5-ம் தேதி மங்கள்யான் உயரே செலுத்தப்பட்டது. அத்தோடு அந்த ராக்கெட்டின் வேலை முடிந்துவிட்டது. மங்கள்யான் பூமியைச் சுற்றி வர ஆரம்பித்தது. எல்லா விண்கலங்களிலும் அவசியமானபோது அவற்றின் வேகத்தை அதிகரிக்க ‘லாம்’  எனப்படும் இன்ஜின் இடம்பெறுவது உண்டு. மங்கள்யானில் அவ்வித இன்ஜின் இடம்பெற்றிருந்தது. 2013 நவம்பர் கடைசி வரை மங்கள்யான் பூமியை ஆறு முறை சுற்றியது. அந்த ஆறு முறைகளிலும் மங்கள்யானில் இருந்த இன்ஜின் அவ்வப்போது சிறிது நேரம் இயக்கப்பட்டது. ஆகவே, ஒவ்வொரு முறையும் பூமியை நெருங்கும்போது மங்கள்யானின் வேகம் அதிகரித்துக்கொண்டே போயிற்று. மங்கள்யான் ஏழாவது முறை சுற்ற முற்பட்டபோது அதன் வேகம் மணிக்கு 38 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்துவிட்டிருந்தது. ஏழாவது முறை இன்ஜினை இயக்கியபோது வேகம் மணிக்கு 42 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்து மங்கள்யான் டிசம்பர் முதல் தேதி சூரியனைச் சுற்றிய ஒரு நீள்வட்டப் பாதையில்  செவ்வாயை நோக்கிப் பயணித்தது.

    சூரியனைப் பூமி சுற்றுவதுபோல மங்கள்யான் அதன் பின்னர் இன்ஜின் உதவியின்றி விண்வெளியில் சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது. பூமி சூரியனை மூன்றாவது சுற்றுவட்டப் பாதையில் சுற்றுகிறது. செவ்வாய் கிரகம் நான்காவது வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே, மங்கள்யான் மூன்றாவது வட்டப் பாதையிலிருந்து நான்காவது வட்டப் பாதைக்கு மாற வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் நெடுஞ்சாலையில் ஒரு லேனிலிருந்து அடுத்த லேனுக்கு மாற மெல்ல ஓரங்கட்டுவதுபோல மங்கள்யானின் பயணப் பாதையை அவ்வப்போது ஓரங்கட்ட வேண்டியிருந்தது. இறுதியில், செவ்வாயை நெருங்கிய கட்டத்தில் மங்கள்யானின் வேகம் குறைக்கப்பட்டு, அது கடந்த 24-ம் தேதி செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்தது.

    முதல் முயற்சியிலேயே வெற்றிக்குக் காரணமான முறை…

    செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ள ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், மேலே பார்த்தபடி சிறிதுசிறிதாக செயற்கைக் கோளின் வேகத்தைக் கூட்டியும்  பாதையை மாற்றியும் மிக நுட்பமாக   முதல் முயற்சியிலேயே பயன்படுத்தி செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பியுள்ள ஒரேநாடு இந்தியாதான்.

    சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்ப சீனா, அமெரிக்கா ஆகியவை கடந்த காலத்தில் கிராவிடி அசிஸ்ட் முறையைப் பயன்படுத்தியுள்ளன. வேறு கிரகங்களுக்கு விண்கலத்தை அனுப்பவும் பிற நாடுகள் இந்த உத்தியைப் பயன்படுத்தியது உண்டு. ஆனால், எந்த நாடும் செவ்வாய்க்கு செயற்கைக் கோளை அனுப்ப இந்த உத்தியைப் பயன்படுத்த முற்படவில்லை.

    அதற்குக் காரணம் உண்டு. செவ்வாய்க்கு நேரடியாக விண்கலத்தை அனுப்புகிற அளவுக்கு அந்த நாடுகளிடம் சக்தி மிக்க ராக்கெட்டுகள் உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவின் நாஸாவினால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மாவென் விண்கலம் பூமியை ஒரு தடவை சுற்றிவிட்டு நேரே செவ்வாய்க்குக் கிளம்பியது.

    இனி, இந்த நாடுகள் குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதற்கு இந்தியா காட்டிய வழியைப் பின்பற்ற முற்படலாம். ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஜப்பான், சீனா ஆகியவற்றிடம் உள்ள ராக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஓரளவில் சிறிய ராக்கெட் என்றே சொல்ல வேண்டும். ஆனால், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல அந்த சிறிய ராக்கெட்டைப் பயன்படுத்தி செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை இந்தியா அனுப்பியிருப்பது என்பது மிகப் பெரிய சாதனையே. ஆகவேதான், இந்தியாவால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது என்று உலக நாடுகள் வியந்து நிற்கின்றன.

    இதற்கிடையே இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி-2 வகை ராக்கெட் கடந்த ஜனவரியில் செலுத்தப்பட்டபோது சுமார் இரண்டு டன் கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக மேலே செலுத்தியது. அது தொடர்ந்து மேலும் சில முறை சோதிக்கப்பட இருக்கிறது. அடுத்தபடி யாக நாம் புதிதாக உருவாக்கிவரும் ஜி.எஸ்.எல்.வி-3 வகை அநேகமாக அடுத்த மாதக் கடைசியில் முதல் தடவையாக உயரே செலுத்திச் சோதிக்கப்படவிருக்கிறது. அது, மூன்று டன் எடையைச் சுமந்து செல்லக்கூடியது. அது வெற்றிபெற்றுவிட்டால் ராக்கெட் விஷயத்தில் இந்தியா சுயசார்பு நிலையை எட்டிப் பிடித்துவிடும்.

    அடுத்து, 2018-ம் ஆண்டில் செவ்வாய்க்கு மேலும் ஒரு விண்கலத்தைச் செலுத்தத் திட்டம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி-3 ராக்கெட் மூலம் அனுப்புவதானால் நிறைய ஆராய்ச்சிக் கருவிகளுடன் கூடிய பெரிய விண்கலத்தை அதனுடன் அனுப்ப இயலும்.

    சவால்கள் நிறைந்த பயணத்தை சமாளித்த விதம்…

    பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து, செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 440 நியூட்டன் என்ஜின் எரிபொருள் மொத்தம் 23 நிமிடங்களுக்கு எரிக்கப்பட்டது. அதன்மூலம், திட்டமிட்டவாறு விண்கலத்தின் வேகம் விநாடிக்கு மேலும் 648 மீட்டர் அதிகரிக்கப்பட்டது.

    இதன் மூலம், புவி ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் செல்வதற்குத் தேவையான மணிக்கு 41 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் விண்கலம் செலுத்தப்பட்டது.

    மங்கள்யான் விண்கலம் மிகத் துல்லியமாக சூரிய வட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து புறப்பட்ட 500 விநாடிகளில் மங்கள்யான் விண்கலத்தை பெங்களூரில் உள்ள இஸ்ரோ தொலைதூர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (இஸ்ட்ராக்) கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.

    அடுத்த 300 நாள்களுக்கும் விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையமாக இது செயல்பட்டது. ஆஸ்திரேயாவின் கேன்பெர்ரா, அமெரிக்காவின் க-ஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கோல்ட் ஸ்டோன், ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் விண்கலத்தில் இருந்து சிக்னல்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.

    இந்த மையங்களில் 32 மீட்டர் முதல் 70 மீட்டர் வரை விட்டம் கொண்ட மிகப்பெரிய ஆன்டெனாக்கள் உள்ளன. பெங்களூரில் சந்திரயான் விண்கலத்தைக் கண்காணிப்பதற்காக நிறுவப்பட்ட மையமும், மங்கள்யான் விண்கலத்துக்காகப் பயன்படும்.

    திட்டமிட்ட பாதையை விண்கலம் அடைந்த முறை…

    செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும் விண்கலம் சூரிய வட்டப்பாதையிலும், செவ்வாய் கிரகத்தின் பாதையிலும் செல்லும்போது விண்கலத்தில் உள்ள எரிபொருளை பயன்படுத்தும் தேவை இருக்காது. இயற்கை விதிகளின்படி, விண்கலம் மிதந்து செல்லும்.

    சூரிய ஈர்ப்பு விசை, ஒளி போன்ற காரணங்களால் விண்கலம் பாதை மாறிச்செல்ல வாய்ப்புள்ளது. இடையில் பாதை மாறிவிட்டால் அதிகளவு எரிபொருள் வீணாகும். அதோடு, திட்டமிட்ட பாதையிலும் விண்கலத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். வேற்று கிரகத்துக்குப் பயணிக்கும்போது கதிர்வீச்சு காரணமாக விண்கலத்தில் உள்ள எலெக்ட்ரானிக் கருவிகள் பாதிக்கப்படலாம். இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பாதிப்பு ஏற்படாத வகையில் எலெக்ட்ரானிக் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மங்கள்யானின் கண்காணிப்பு

    பெங்களூரில் உள்ள இஸ்ரோ தொலைதூர கண்காணிப்பு மையத்தில் (இஸ்ட்ராக்), இந்த விண்கலத்தைக் கண்காணிக்கும் பணியில் 24 மணி நேரமும் 75 பேர் ஈடுபட்டார்கள்.

    விண்கலத்தில் உள்ள எரிபொருள் செவ்வாய் கிரகத்தை நெருங்கும் பொழுது மீண்டும் இயக்கப்பட வேண்டும். இந்த நீண்ட பயணத்தில் விண்கலமும், திரவ எரிபொருள் என்ஜினும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். இவை பாதிக்கப்பட்டிருந்தால், அந்தச் சூழலை எதிர்கொள்ள 8 துணை இன்ஜின்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

    செவ்வாய் கிரகத்திருந்து அதிகபட்சம் 78 ஆயிரம் கிலோமீட்டர், குறைந்தபட்சம் 427 கிலோமீட்டர் கொண்ட பாதையில் மங்கள்யான் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது

    இன்சாட், ஐஆர்எஸ் ஆகிய செயற்கைக்கோள்கள் செய்யும் பணியை மங்கள்யான் ஒரே விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளும். இந்தத் திட்டத்தில் செவ்வாய் கிரகத்தை 6 மாதங்கள் மங்கள்யான் சுற்றி வந்தாலே ஆய்வுக்கான தகவல்கள் கிடைக்கும்.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    IPS அதிகாரியாக வர விரும்புவோருக்கு உடல்நலம் காக்க நீங்கள் தரும் யோசனைகள்

    எ. செல்வரத்தினம்,

    திருப்பூர்

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நம் நாட்டில் வழங்கும் முதுமொழி. ஒரு IPS அலுவலருக்கு உடல் நலம் எந்த அளவிற்கு அவசியமோ அந்த அளவிற்கு IPS அதிகாரியாக வர விரும்புவோருக்கு அது அவசியமாகும். நோயற்ற உடல் நலமே மனவளத்திற்கு அடிப்படை. நல்ல உடல் நலத்துடன் திகழ்ந்தால் தான் நீங்கள் தேர்வுக்கு நன்கு படிக்க முடியும்.

    சிலர் தேர்வு நாளன்று உடல்நலம் கெட்டு படாதபாடுபடுவதைப் பார்க்கிறோம். சளிப்பிடித்தல், மஞ்சள் காமாலை, தலைவலி, கிருமிசார் காய்ச்சல், நஞ்சுணவு முதலிய நோய்கள் உடலையும் உள்ளத்தையும் பலவீனப்படுத்தும். எனவே படிக்கும் காலத்திலும், தேர்வு எழுதும்போதும், நேர்முகத்தேர்வின் போதும், இந்நோய்கள் தாக்கா வண்ணம் உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    உடல்நலம் குறித்து பல நல்ல நூல்களை ஆழ்ந்து படித்ததன் பயனாக, சில குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    • அளவாக உண்க; ஆற்றலுடன் வாழ்க

    அளவான உண்ணுங்கள். அதுவே ஆரோக்கியத்தின் திறவுகோல். ‘மீதூண் விரும்பேல்’ என்பது ஒளவை வாக்கு. மிகுதியாக உண்பதால் சீரண உறுப்புகளுக்கும் கேடு நேரும். மிகுதியாக உண்டல் தூக்கத்திற்கும் சோம்பலுக்கும் வழி வகுக்கும். பொன்னான நேரம் வீணாயிற்றே எனப்பின்னர் வருத்தப்படுவீர்கள். எனவே அளவோடு உண்ணுதல் சக்தி தரும், நலம் தரும், படிப்பில் ஒருமுகப்படுத்தக் கூடிய மனம் தரும். அதே வேளையில் மிகக்குறைவான உணவோடு நிறுத்தவும் கூடாது. அது உடலைப் பலவீனப்படுத்தி விடும். எனவே அளவான சத்தான தூய்மையான உணவை மட்டும் உண்ண வேண்டும்.

    • இனிப்பெனும் எதிரி

    இனிப்பான சர்க்கரை தான் நோய்களை வரவேற்கும் கட்டியங்காரன். மிகுதியான சர்க்கரையை எந்த வடிவத்தில் உட்கொண்டாலும் தவறு. அதிக இனிப்பு உண்பதால், கணையம் (Pancreas) எனும் நாளமில்லா சுரப்பி அளவுக்கு மீறி வேலை செய்கிறது. உண்ட சர்க்கரை முழுவதும் எரிக்கப்படுகிறது. இதனால் உடலுக்குத் தேவையான அளவுக்கு கீழ் சர்க்கரை குறைகிறது. மூளை சோர்வடைகிறது. நரம்பு மண்டலம் பலவீனமாகிறது. இந்நிலையை Hypoglycoemia  என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    தொடர்ந்து மிகுதியாக இனிப்பை உண்டால், கணையம் செயலிழந்து இன்சுலின் சுரப்பது குறைகிறது. எனவே இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி நீரிழிவு  என்னும் புதிய நோய்க்கு ஆளாக வேண்டியிருக்கும். எனவே தேர்வுக்குப் படிக்கும்போது அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உண்டால் சக்தி  குறைவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியும் குறையும்; இந்நிலையில் சளிப்பிடித்தால் கூட குணமாக கால தாமதம் ஆகும்.

    •      நீர் அமுதம்

    ஒரு நாளைக்கு 200 மில்லி கொள்ளளவுள்ள ஒரு குவளை நீரை எட்டுமுறை (அதாவது 1.6 லிட்டர் தண்ணீரை) அருந்துங்கள். இது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்; உடல் நீர் வற்றலைத் தடுக்கும்; சேமிப்பில் உள்ள கொழுப்பைக் கரைக்கும்; ஈரலின் பணியையும் எளிதாக்கும்; மற்றும் தசைநார்களை வலுப்படுத்தும்; அஜீரணம் என்பதும் அறவே ஒழியும்.

    நீங்கள் படித்தது நினைவில் நிற்க வேண்டுமானால் பல்வேறு சுரப்பிகள் சீராக செயல்பட வேண்டும். அதற்கு அதிக நீரை அருந்த வேண்டும். தூய்மையான பாதுகாக்கப்பட்ட நீரை அருந்துங்கள். இல்லையேல் கிடைக்கும் நீரை 100 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு கொதிக்க வைத்து, பின்பு ஆறவைத்து வடிகட்டி அருந்துங்கள்.

    •       காயும் கனியும் ஆயுளைப் பெருக்கும்

    உயிர்ச்சத்துக்களும், தாதுப் பொருள்களும் நிறைந்து கிடப்பது காய்கனிகளில் தான். உங்களுக்குப் பலத்தை நல்கி, நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் நார்ப்பொருள் காய்கனிகளில் உள்ளது. வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, தக்காளி ஆகிய பழங்களையும், வெள்ளரி, முட்டைக்கோஸ், காரட் ஆகிய காய்களையும் நன்கு கழுவியபின் சமைக்காமல் அப்படியே உண்ணலாம். இதன் மூலம் பெறப்படும் உயிர்சத்துக் குறைநோய்  இல்லாமலும் வாழலாம்.

    •     தேநீர், காபி தேவையில்லை

    தேநீர், காபி இவைகளைத் தவிர்ப்பது நல்லது. தேர்வுக்குப் படிக்கும்போது நீங்கள் அடிக்கடி தேநீர் அல்லது காபி அருந்த நேரிடும். அந்த நேரத்திற்கு சுறுசுறுப்புத் தருவதாக இருக்கும். ஆனால் பின்விளைவு மோசமானது. உடலில் சோர்வு மிகும். இவற்றிலுள்ள காபின் என்னும் நச்சுப்பொருள் உடல்நலத்தைக் கெடும்.

    தேநீர் காபியைத் தவிர்க்க முயலுங்கள் அல்லது ஒருநாளைக்கு இருமுறைமட்டும் எனக் குறைத்துக் கொள்ளுங்கள்.

    • உடற்பயிற்சியால் உற்சாகம் மிகும்

    உடற்பயிற்சி என்பது ஓர் இயற்கை மருத்துவம். உடற்பயிற்சி உங்களுக்குத் தோற்றப் பொலிவையும் உற்சாகத்தையும் அளிக்கும். ஆற்றலை அதிகரிக்கும். மொத்தத்தில் ஒரு மனநிறைவைத் தரும்.

    உடற்பயிற்சி செய்வதால் உடலும் உள்ளமும் உங்கள் வசப்படும். நோயிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும். தேர்வுக்குத் தீவிரமாகப் படிக்கும்போது உடற்பயிற்சியைச் செய்தல் நன்று. காலையில் அரைமணி நேரம், மாலையில் அரைமணி நேரம் உடற்பயிற்சிக்கு ஒதுக்கலாம். உங்கள் விருப்பத்திற்கேற்ப உடற்பயிற்சியினைச் செய்யலாம். நடக்கலாம்; ஓடலாம்; நீந்தலாம்; அறையில் இசைக்கேற்ப நடனம் கூட ஆடலாம். பிறகென்ன, சோர்வு என்பது சொல்லாமலேயே ஓடிவிடும். இந்த நூலைப் படித்து முடித்ததும், உடற்பயிற்சியைச் செய்து, சற்று ஓய்வுக்குப்பின்னர், ஒரு குளியல் போட்டுப் பாருங்கள். ஒரு புத்துணர்வு உடலிலும் உள்ளத்திலும் அலைஅலையாய் பரவுவதை உணர்வீர்கள்.

    ஆர்வமிகுதியால், கடுமையான உடற்பயிற்சிகளை, உடனே செய்யத் தொடங்குதல் கூடாது. முதலில் சற்றேகை கால்களை விரித்தல், உயர்த்துதல், சுழற்றல் என முன் தயார்நிலைப் பயிற்சியை  செய்துவிட்டு உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும். 5 நிமிட உடற்பயிற்சி எனத் தொடங்கி, தினம் 2 நிமிடம் அதிகரித்து நாளடைவில் 30 நிமிட பயிற்சியைச் செய்தால் “வாள்கொண்டு பிளப்பினும் ஓர் கட்டுமாறாத உடல் வேண்டும்” என்று பாரதியார் கேட்ட உடற்கட்டு உங்களுக்குக் கிட்டும்.

    •       அளவான உறக்கம்

    ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின் உணரப்படும் சுகமே தனிதான். வேறு எதற்கும் அது ஈடாகாது. இரவில் படித்து முடித்ததும் தூங்கச் செல்லுங்கள். அதைவிடுத்து பின்னிரவு திரைப்படக் காட்சிக்குச் செல்வது, தொ(ல்)லைக்காட்சியில் தொடர்களைப் பார்ப்பது போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

    அதிகமாக இனிப்பைத் திண்பது, அடிக்கடி காபி அருந்துவது, சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது முதலான கெட்ட பழக்கங்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் உறங்க விடாமல் தடக்கும்.

    என்னைக் கேட்பின், இரவு பத்து மணிக்குப் படுப்பது நல்லதென்பேன். காலையில் 5 மணிக்கு எழுவது நன்று. ஓர் இரவில் குறைந்தது 7 மணிநேரம் தூங்க வேண்டும்.

    நிறைவாக ஒன்று. தூக்கம் குறையினும் தீமை, மிகினும் தீமை.

    தேநீர், காபி இவைகளைத் தவிர்ப்பது நல்லது. தேர்வுக்குப் படிக்கும்போது நீங்கள் அடிக்கடி தேநீர் அல்லது காபி அருந்த நேரிடும். அந்த நேரத்திற்கு சுறுசுறுப்புத் தருவதாக இருக்கும். ஆனால் பின்விளைவு மோசமானது. உடலில் சோர்வு மிகும். இவற்றிலுள்ள காபின் என்னும் நச்சுப்பொருள் உடல்நலத்தைக் கெடும்.

    தேநீர் காபியைத் தவிர்க்க முயலுங்கள் அல்லது ஒருநாளைக்கு இருமுறைமட்டும் எனக் குறைத்துக் கொள்ளுங்கள்.

    மேலும் பல விபரங்களுக்கு முனைவர் சி. சைலேந்திரபாபு அவர்கள் எழுதிய நீங்களும் “ஓர் IPS அதிகாரி ஆகலாம்” என்ற நூலினை படித்துப் பயன்பெறுங்கள்.

    இந்த இதழை மேலும்

    உள்ளதோடு உள்ளம்

    ஊர்ப் பெரியவர் அவர். பலரின் கவலைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் நல்ல ஆலோசனைகளையும், நல்ல தீர்வுகளையும் வழங்கக் கூடியவர். ஒருநாள் ஓர் இளைஞன் அந்தப் பெரியவரைச் சந்தித்து, “ஐயா! நான் எந்தத் தவறும், பிறருக்கு எந்தக் கெடுதியும் செய்ததில்லை. என் மனதை தூய்மையாகவே வைத்துள்ளேன். எனக்கு நீங்கள் ஆலோசனை சொல்ல ஏதாவது இருக்குமா?” என்றான்.

    பெரியவர் உடனே, “தம்பி! நீ எந்த வேலையும் செய்யாமல் ஓர் இடத்தில் அமைதியாக இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வா அப்போது உனக்கு ஆலோசனை தேவைப்படுமா? இல்லையா?” என்று சொல்கிறேன் என்றார்.

    இளைஞனும் இரண்டு நாட்கள் கழித்து பெரியவர் சொன்னபடியே திரும்பி வந்தான்.

    பார்த்தார் பெரியவர். “தம்பி! உன் உடைகளில், உன் முகத்தில் அழுக்கு இருக்கிறதே கவனித்தாயா?” என்றவர், “எந்த வேலையும் செய்யாமல் ஓர் இடத்தில் உட்கார்ந்திருக்கும்போதே உன் மேல் இவ்வளவு அழுக்கு படிகிறபோது, மனதிலும் அப்படித்தான் அழுக்குபடியக் கூடும். அதனால் மனதுக்குள் எப்போதும் நல்ல எண்ணங்களை நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைக்கு நல்லவர் என்று பெயரெடுத்துவிட்டு நாளைக்கும் நல்லவர் என்று பெயரெடுக்க வேண்டுமென்றால் அனுதினமும் நற்செயல்கள், நற்சிந்தனைகள் நம்மோடு இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

    இடைவிடாது மனதுக்குள் நல்ல சிந்தனைகள் எழ வாழ்ந்தால் மட்டுமே மண்ணில் நல்ல வாழ்வு வாழ முடியும்!

    அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!