டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் “மங்கள்யான்” விஞ்ஞானிகள்
டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், இந்தியா முதன்முதலில் நிலவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பியபோது அத்திட்டத்தின் இயக்குனராக இருந்தவர்.
- இவரின் பொழுதுபோக்கே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தான் பெற்ற, கற்ற அனுபவங்களையும், அறிவுரைகளையும் எடுத்துச்சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதாகும்.
- இந்திய விண்வெளியில் ஒரு அடிமட்ட ஆய்வாளராக இருந்து தன்னுடைய தளராத முயற்சியாலும், நம்பிக்கையாலும் படிப்படியாக உயர்ந்து இன்று இந்தப் பாரையே தன்பக்கம் பார்க்க வைத்த தன்னம்பிக்கை தமிழர்.
- இவரின் நோக்கமெல்லாம் இளைஞர்களுக்கு நல்வழி காட்டவேண்டும் என்பதே. இவர் “கையருகே நிலா” என்னும் தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். “மங்கள்யான்’ பற்றி இவர் எழுதியுள்ள “கையருகே செவ்வாய் என்னும் நூல் வெளிவர உள்ளது.
- இவர் நான்கு இந்திய விண்வெளி ஆய்வு விருதுகள். சந்திராயன் 1 திட்டத்திற்காக சர்வதேச விருதுகள் என்று பல விருதுகளைப் பெற்ற சிறப்புக்குறியவர்.
இவர் கோவை கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடியில் 1958ம் ஆண்டு பிறந்தவர். அப்பா மயில்சாமி. அம்மா பாலசரஸ்வதி. இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள். அப்பாவின் அப்பாவுக்கு தொழில் நெசவு. அப்பா கோதவாடி ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றியவர். குழந்தைகள் ஐந்து பேரையும் நல்ல முறையில் அவர் வளர்த்திட அதிகம் சிரமம் எடுத்துக் கொண்டவர்.
ஆசிரியப் பணிபோக மாலை மற்றும் விடுமுறை நாட்களில் தையல் தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவர்.
தமிழ்வழிக் கல்வியில் அப்பாவின் அறிவுரையில் ஐந்தாம் வகுப்பு வரை கோதவாடி அரசுப் பள்ளியில் படித்தவர். அதற்குப் பின்பு கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து, தினமும் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்துதான் பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார். அரசு உதவித் தொகையில் தான் இவரின் கல்விப் பயணமே தொடர்ந்திருக்கிறது.
கல்வி ஒன்று மட்டுமே பெரிய மூலதனம் என்று நன்கு படித்து SSLC-யில் முதல் மதிப்பெண் எடுத்து தங்கப்பதக்கம் பெற்றவர். மேற்கொண்டு மென்மேலும் கல்வியில் ஆர்வம் செலுத்தி கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் B.E படிப்பையும், நாள்தோறும் வந்து போவதற்கு பணம் கேட்டு அப்பாவை துன்புறுத்தக்கூடாது என்று, மற்ற தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்தும் தங்கிப் படிப்பதற்கான வசதி ஒன்றைக் கருத்தில் கொண்டு கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்து பி.இ. முடித்தவர். அதற்குப் பின்பு பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் எம்.இ. (Applied Electronic communication) நிறைவு செய்தவர்.
1982ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுமையத்தில் ஒரு சாதாரண அறிவியல் ஆய்வாளராக சேர்ந்த இவர், கடின உழைப்பாலும், புதிய புதிய கண்டுபிடிப்புகளாலும் தன்னை படிப்படியாக உயர்த்திக் கொண்டவர்.
இந்திய நுண்ணுனர் மற்றும் அறிவியல் செயற்கைக் கோள்களுக்கான தலைமைத்திட்ட இயக்குனராக தற்பொழுது இருந்து வருகிறார். சந்திரயான்-2, ஆதித்யா, அஸ்ட்ரோசாட், ரிசாட் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட திட்டங்கள் அதில் அடங்கும். மங்கள்யானும் அதில் ஒன்று. அதன்படி மங்கள்யான் செயற்கைக் கோள்களின் வடிவமைப்பு, பட்ஜெட், மேலாண்மை மற்றும் அவற்றின் விண்பயணச் செயல்பாடுகள் சார்ந்த பணிகளைக் கவனித்து வருகிறார். இன்று நாடே போற்றும் நற்றமிழரான அவரையும், சக விஞ்ஞானிகளையும் நாமும் வாழ்த்தி மகிழ்கிறோம்.
மங்கள்யான் விண்கலம் உருவாக்கத்தில் இடம் பெற்ற சாதனை விஞ்ஞானிகள்…
இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணனின் வழிகாட்டல் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட இந்தக் குழுவில் இடம் பெற்ற சாதனை விஞ்ஞானிகள் மொத்தம் 14 பேர் ஆவார்கள். அவர்கள் முறையே…
1. கே. ராதாகிருஷ்ணன் – இஸ்ரோ தலைவர்
2. மயில்சாமி அண்ணாதுரை – மிஷன் திட்ட இயக்குநர்
3. அருணன் – மங்கள்யான் பிராஜக்ட் இயக்குநர்
4. கிரண்குமார் – செயற்கைக் கோள் அப்ளிகேஷன் மையத்தின் இயக்குநர்
5. எஸ். ராமகிருஷ்ணன் – விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர்
6. எஸ்.கே. சிவக்குமார் – இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநர்
7. பி. குஞ்ஹிகிருஷ்ணன் – பி.எஸ்.எல்.வி. திட்ட இயக்குநர்
8. சந்திரதத்தன் – திரவ எரிபொருள் திட்ட இயக்குநர்
9. பிரசாத் – சதீஷ் தவன் விண்வெளி மைய இயக்குநர்
10. ஜெயக்குமார் – பி.எஸ்.எல்.வி. திட்ட உதவி பிராஜக்ட் இயக்குநர்
11.பன்னீர் செல்வம் – ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் மையத்தின் தலைமைப் பொது மேலாளர்
12.ஆதிமூர்த்தி – ராக்கெட் தொழில் நுட்பம் & விண்வெளி இயக்கவியல் பிரிவு
13.கேசவராஜு – மிஷன் இயக்குநர்
14.கோட்டீஸ்வர ராவ் – அறிவியல் செயலாளர்
மங்கள்யான்…
செவ்வாய் சுற்று வட்ட திட்டம் (Mars Orbiter Mission) என்பதன் சுருக்கமே MOM. மங்கள்யான் என மக்கள் கூறினாலும் விஞ்ஞானிகள் இதனை MOM என்றே அழைக்கிறார்கள்.
செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலைநிறுத்தும் பணி, செப்டம்பர் 24 (புதன் கிழமை) காலை வெற்றிகரமாக நடந்தது.
ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்த மங்கள்யான் விண்கலத்தின் பின்னணியில் மிகப் பல இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பு பொதிந்திருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ரூ. 460 கோடி செலவில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு 2013, நவம்பர் 5ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி செப்டம்பர் 24ந் தேதி காலை செவ்வாய் கிரகத்திற்கு அருகில் 1800 கி.மீ தொலைவை அடைந்தது.
அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு செயற்கைகோளின் வேகம் வினாடிக்கு 1.098 கி.மீ என்ற அளவிற்கு வேகத்தை குறைத்து செவ்வாய் கிரகத்தைச் சுற்றிய நீள் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.
குறைந்த செலவில் ஒரு விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கே செலுத்தி அதில் வெற்றியும் கண்டு உலகையே தம் பக்கம் திசைதிருப்பி உள்ளனர் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் மட்டுமே சாத்தியமாகக் கொண்டிருந்த பெருமைகளை முறியடித்து முதல் முயற்சியில் சாதித்த நாடு என்ற புதிய சாதனையை இந்தியா படைத்திருக்கிறது
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை உலக நாடுகள் அனுப்ப முயற்சிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. 1960ல் இருந்து சுமார் 40 முயற்சிகள் நடைபெற்று அதில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வியிலேயே முடிந்துள்ளன. இதற்கு முன் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற 20 நாடுகளை உள்ளடக்கிய ‘ஒன்றிணைந்த ஐரோப்பா விண்வெளிக்கழகம்’ அனுப்பிய ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ விண்கலம் மட்டுமே முதல் முயற்சியில் வெற்றி கண்டது.
சந்திரயான் செயற்கைக் கோள் கொடுத்த வெற்றி மங்கள்யான் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. மங்கள்யான் குறித்த அறிவிப்பை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் வெளியிட்டார். அதில் இருந்து சுமார் 15 மாத இடைவேளையில் முழு விண்கலத்தையும் உருவாக்கி கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ஆந்திரப்பிரதேசத்தில் இருந்த ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் உதவியுடன் மங்கள்யான் ஏவப்பட்டது.
மங்கள்யானின் பயணம்…
கவுண்ட் டவுன் ஆரம்பிக்கும் நொடியில் இருந்தே விண்கலம் எந்த நிமிடத்தில் எங்கு இருக்கும்; எந்த நாள் இலக்கை சென்றடையும் என அனைத்திற்கும் நாள் குறிக்கப்பட்டன. ராக்கெட் விண்ணில் பாயத் துவங்கியதும் ஸ்ரீ ஹரிகோட்டா, அந்தமானில் உள்ள போர்ட் ப்ளேர், ப்ருனே, பியாக் போன்ற ஊர்களில் உள்ள நான்கு மையங்களில் இருந்து கண்காணித்தார்கள். அந்தமான் தாண்டி ராக்கெட் செல்ல துவங்கியதும் 10 நிமிடங்களுக்கு எந்த மையத்துடனும் தொடர்பில் இருக்காது. பின்னர் மேற்கு பசிபிக் பெருங்கடன் மேல் பாயும்பொழுது அங்கு இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரு கப்பல்கள் ராக்கெட்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டன.
ஒரு கட்டத்தில் ராக்கெட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் பிரிந்துசெல்ல மங்கள்யான் விண்ணில் பாய்ந்து, தனது சூரியத்தகடுகளை விரித்தது. பூமியை சுமார் 6 முறை சுற்றியபின் பூமியின் பாதையை விட்டு விலகி செவ்வாயை நோக்கி சீறிப்பாயத் துவங்கியது. இதற்காக விண்கலத்தில் உள்ள 440 நியூட்டன் திறன் கொண்ட எல்.ஏ.எம் மோட்டார் இயக்கப்பட்டது. விண்கலம் தேவையான வேகம் எடுத்தவுடன் இந்த மோட்டார் நிறுத்தப்பட்டது.
சுமார் 10 மாத காலம் ஒரு நொடிக்கு சராசரியாக 22 கிலோமிட்டர் என்ற வேகத்தில் பயணித்து செவ்வாய் கிரகத்தின் அருகில் சென்றடைந்தது. செவ்வாய் கிரகத்தின் புவியிர்ப்பு விசைக்குள் நுழையும் பொழுது இதன் வேகம் குறைக்கப்பட வேண்டும். இதை குறைக்க முதல் 10 மாதங்கள் இயங்காமல் இருந்த அந்த எல்.ஏ.ம்.. மோட்டார் இயங்குகிறதா என்று சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை சுமார் 4 வினாடிகள் நீடித்தது. மோட்டார் சரியாக இயங்க துவங்கியதும் இஸ்ரோவிற்கு நாலாபுறமும் வாழ்த்துக்கள் குவியத்தொடங்கின.
இந்தியாவின் மங்கள்யான் சோதனை நடத்திய அதே வேளையில் நாசாவின் (அமெரிக்கா) மேவன் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைக்குள் நிறுத்தப்பட்டு அதன் ஆராய்ச்சிப் பணிகளைத் துவங்கியது. ஆனால் அமெரிக்காவை விட இந்திய விஞ்ஞானிகள் குறைந்த செலவில் மங்கள்யானை அனுப்பி புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
செவ்வாயில் மங்கள்யானின் வேலைகள்…
தனது பணிகளை துவங்கும் மங்கள்யான், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கும். அப்படி மீத்தேன் வாயு இருக்கும் பட்சத்தில் அது உயிர்கள் வாழ்ந்ததால் உருவானதா அல்லது இயற்கை பேரழிவுகளின் விளைவால் உருவானதா என்று ஆராயும். அது மட்டுமின்றி அதனுள்ளே பொருத்தப்பட்டுள்ள கலர் கேமரா தொடர்ந்து படங்களை எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கும். இது வருங்காலத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற நடைபெறும் ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் மங்கள்யான்…
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மிகவும் நம்பகமானது என்பது 25 முறைகளுக்கும் மேல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்து நாம் உருவாக்கிவரும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் நம்பகத்தன்மை இனிதான் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டினால் பொதுவில் ஒரு விண்கலத்தை மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வரும்படி செலுத்த இயலும். ஒரு விண்கலம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு, செவ்வாய் நோக்கிச் செல்ல வேண்டுமானால், அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும்.
ஆகவே, மங்கள்யான் திட்டம்பற்றி ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டபோது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை மேலும் சில முறைகள் செலுத்தி, அதன் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்ட பின்னர் அதைக் கொண்டு மங்கள்யானைச் செலுத்தலாம் என்று யோசிக்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு பிரச்சனை இருந்தது. செவ்வாய் கிரகத்துக்கு நினைத்த நேரத்தில் விண்கலத்தைச் செலுத்த இயலாது. பூமியும் செவ்வாயும் இருக்கும் நிலைகளைப் பொறுத்து 26 மாதங்களுக்கு ஒரு முறைதான் வாய்ப்பான சமயம் கிட்டும். 2013-ம் ஆண்டு நவம்பர் முதல் 2014 ஜனவரி வரையிலான காலம் வாய்ப்பான காலமாகும். அதை விட்டால் 2016 ஜனவரி வரை காத்திருந்தாக வேண்டும். இஸ்ரோ அதுவரை காத்திருக்க விரும்பவில்லை. மிக நம்பகமான பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டையே பயன்படுத்த முடிவுசெய்தது. அது உண்மையில் துணிச்சலான முடிவாகும்.
பூமியிலிருந்து செலுத்தப்பட்ட மங்கள்யான் பலமுறை பூமியைச் சுற்றிய பின் செவ்வாய் நோக்கிச் சென்ற விதம்…
2008-ம் ஆண்டில் சந்திரனுக்கு இந்தியாவின் சந்திரயான் அனுப்பப்பட்டபோது இதே உத்திதான் பயன்படுத்தப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 2013 நவம்பர் 5-ம் தேதி மங்கள்யான் உயரே செலுத்தப்பட்டது. அத்தோடு அந்த ராக்கெட்டின் வேலை முடிந்துவிட்டது. மங்கள்யான் பூமியைச் சுற்றி வர ஆரம்பித்தது. எல்லா விண்கலங்களிலும் அவசியமானபோது அவற்றின் வேகத்தை அதிகரிக்க ‘லாம்’ எனப்படும் இன்ஜின் இடம்பெறுவது உண்டு. மங்கள்யானில் அவ்வித இன்ஜின் இடம்பெற்றிருந்தது. 2013 நவம்பர் கடைசி வரை மங்கள்யான் பூமியை ஆறு முறை சுற்றியது. அந்த ஆறு முறைகளிலும் மங்கள்யானில் இருந்த இன்ஜின் அவ்வப்போது சிறிது நேரம் இயக்கப்பட்டது. ஆகவே, ஒவ்வொரு முறையும் பூமியை நெருங்கும்போது மங்கள்யானின் வேகம் அதிகரித்துக்கொண்டே போயிற்று. மங்கள்யான் ஏழாவது முறை சுற்ற முற்பட்டபோது அதன் வேகம் மணிக்கு 38 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்துவிட்டிருந்தது. ஏழாவது முறை இன்ஜினை இயக்கியபோது வேகம் மணிக்கு 42 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்து மங்கள்யான் டிசம்பர் முதல் தேதி சூரியனைச் சுற்றிய ஒரு நீள்வட்டப் பாதையில் செவ்வாயை நோக்கிப் பயணித்தது.
சூரியனைப் பூமி சுற்றுவதுபோல மங்கள்யான் அதன் பின்னர் இன்ஜின் உதவியின்றி விண்வெளியில் சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது. பூமி சூரியனை மூன்றாவது சுற்றுவட்டப் பாதையில் சுற்றுகிறது. செவ்வாய் கிரகம் நான்காவது வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே, மங்கள்யான் மூன்றாவது வட்டப் பாதையிலிருந்து நான்காவது வட்டப் பாதைக்கு மாற வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் நெடுஞ்சாலையில் ஒரு லேனிலிருந்து அடுத்த லேனுக்கு மாற மெல்ல ஓரங்கட்டுவதுபோல மங்கள்யானின் பயணப் பாதையை அவ்வப்போது ஓரங்கட்ட வேண்டியிருந்தது. இறுதியில், செவ்வாயை நெருங்கிய கட்டத்தில் மங்கள்யானின் வேகம் குறைக்கப்பட்டு, அது கடந்த 24-ம் தேதி செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்தது.
முதல் முயற்சியிலேயே வெற்றிக்குக் காரணமான முறை…
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ள ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், மேலே பார்த்தபடி சிறிதுசிறிதாக செயற்கைக் கோளின் வேகத்தைக் கூட்டியும் பாதையை மாற்றியும் மிக நுட்பமாக முதல் முயற்சியிலேயே பயன்படுத்தி செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பியுள்ள ஒரேநாடு இந்தியாதான்.
சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்ப சீனா, அமெரிக்கா ஆகியவை கடந்த காலத்தில் கிராவிடி அசிஸ்ட் முறையைப் பயன்படுத்தியுள்ளன. வேறு கிரகங்களுக்கு விண்கலத்தை அனுப்பவும் பிற நாடுகள் இந்த உத்தியைப் பயன்படுத்தியது உண்டு. ஆனால், எந்த நாடும் செவ்வாய்க்கு செயற்கைக் கோளை அனுப்ப இந்த உத்தியைப் பயன்படுத்த முற்படவில்லை.
அதற்குக் காரணம் உண்டு. செவ்வாய்க்கு நேரடியாக விண்கலத்தை அனுப்புகிற அளவுக்கு அந்த நாடுகளிடம் சக்தி மிக்க ராக்கெட்டுகள் உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவின் நாஸாவினால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மாவென் விண்கலம் பூமியை ஒரு தடவை சுற்றிவிட்டு நேரே செவ்வாய்க்குக் கிளம்பியது.
இனி, இந்த நாடுகள் குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதற்கு இந்தியா காட்டிய வழியைப் பின்பற்ற முற்படலாம். ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஜப்பான், சீனா ஆகியவற்றிடம் உள்ள ராக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஓரளவில் சிறிய ராக்கெட் என்றே சொல்ல வேண்டும். ஆனால், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல அந்த சிறிய ராக்கெட்டைப் பயன்படுத்தி செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை இந்தியா அனுப்பியிருப்பது என்பது மிகப் பெரிய சாதனையே. ஆகவேதான், இந்தியாவால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது என்று உலக நாடுகள் வியந்து நிற்கின்றன.
இதற்கிடையே இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி-2 வகை ராக்கெட் கடந்த ஜனவரியில் செலுத்தப்பட்டபோது சுமார் இரண்டு டன் கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக மேலே செலுத்தியது. அது தொடர்ந்து மேலும் சில முறை சோதிக்கப்பட இருக்கிறது. அடுத்தபடி யாக நாம் புதிதாக உருவாக்கிவரும் ஜி.எஸ்.எல்.வி-3 வகை அநேகமாக அடுத்த மாதக் கடைசியில் முதல் தடவையாக உயரே செலுத்திச் சோதிக்கப்படவிருக்கிறது. அது, மூன்று டன் எடையைச் சுமந்து செல்லக்கூடியது. அது வெற்றிபெற்றுவிட்டால் ராக்கெட் விஷயத்தில் இந்தியா சுயசார்பு நிலையை எட்டிப் பிடித்துவிடும்.
அடுத்து, 2018-ம் ஆண்டில் செவ்வாய்க்கு மேலும் ஒரு விண்கலத்தைச் செலுத்தத் திட்டம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி-3 ராக்கெட் மூலம் அனுப்புவதானால் நிறைய ஆராய்ச்சிக் கருவிகளுடன் கூடிய பெரிய விண்கலத்தை அதனுடன் அனுப்ப இயலும்.
சவால்கள் நிறைந்த பயணத்தை சமாளித்த விதம்…
பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து, செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 440 நியூட்டன் என்ஜின் எரிபொருள் மொத்தம் 23 நிமிடங்களுக்கு எரிக்கப்பட்டது. அதன்மூலம், திட்டமிட்டவாறு விண்கலத்தின் வேகம் விநாடிக்கு மேலும் 648 மீட்டர் அதிகரிக்கப்பட்டது.
இதன் மூலம், புவி ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் செல்வதற்குத் தேவையான மணிக்கு 41 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் விண்கலம் செலுத்தப்பட்டது.
மங்கள்யான் விண்கலம் மிகத் துல்லியமாக சூரிய வட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து புறப்பட்ட 500 விநாடிகளில் மங்கள்யான் விண்கலத்தை பெங்களூரில் உள்ள இஸ்ரோ தொலைதூர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (இஸ்ட்ராக்) கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.
அடுத்த 300 நாள்களுக்கும் விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையமாக இது செயல்பட்டது. ஆஸ்திரேயாவின் கேன்பெர்ரா, அமெரிக்காவின் க-ஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கோல்ட் ஸ்டோன், ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் விண்கலத்தில் இருந்து சிக்னல்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.
இந்த மையங்களில் 32 மீட்டர் முதல் 70 மீட்டர் வரை விட்டம் கொண்ட மிகப்பெரிய ஆன்டெனாக்கள் உள்ளன. பெங்களூரில் சந்திரயான் விண்கலத்தைக் கண்காணிப்பதற்காக நிறுவப்பட்ட மையமும், மங்கள்யான் விண்கலத்துக்காகப் பயன்படும்.
திட்டமிட்ட பாதையை விண்கலம் அடைந்த முறை…
செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும் விண்கலம் சூரிய வட்டப்பாதையிலும், செவ்வாய் கிரகத்தின் பாதையிலும் செல்லும்போது விண்கலத்தில் உள்ள எரிபொருளை பயன்படுத்தும் தேவை இருக்காது. இயற்கை விதிகளின்படி, விண்கலம் மிதந்து செல்லும்.
சூரிய ஈர்ப்பு விசை, ஒளி போன்ற காரணங்களால் விண்கலம் பாதை மாறிச்செல்ல வாய்ப்புள்ளது. இடையில் பாதை மாறிவிட்டால் அதிகளவு எரிபொருள் வீணாகும். அதோடு, திட்டமிட்ட பாதையிலும் விண்கலத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். வேற்று கிரகத்துக்குப் பயணிக்கும்போது கதிர்வீச்சு காரணமாக விண்கலத்தில் உள்ள எலெக்ட்ரானிக் கருவிகள் பாதிக்கப்படலாம். இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பாதிப்பு ஏற்படாத வகையில் எலெக்ட்ரானிக் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மங்கள்யானின் கண்காணிப்பு
பெங்களூரில் உள்ள இஸ்ரோ தொலைதூர கண்காணிப்பு மையத்தில் (இஸ்ட்ராக்), இந்த விண்கலத்தைக் கண்காணிக்கும் பணியில் 24 மணி நேரமும் 75 பேர் ஈடுபட்டார்கள்.
விண்கலத்தில் உள்ள எரிபொருள் செவ்வாய் கிரகத்தை நெருங்கும் பொழுது மீண்டும் இயக்கப்பட வேண்டும். இந்த நீண்ட பயணத்தில் விண்கலமும், திரவ எரிபொருள் என்ஜினும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். இவை பாதிக்கப்பட்டிருந்தால், அந்தச் சூழலை எதிர்கொள்ள 8 துணை இன்ஜின்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
செவ்வாய் கிரகத்திருந்து அதிகபட்சம் 78 ஆயிரம் கிலோமீட்டர், குறைந்தபட்சம் 427 கிலோமீட்டர் கொண்ட பாதையில் மங்கள்யான் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது
இன்சாட், ஐஆர்எஸ் ஆகிய செயற்கைக்கோள்கள் செய்யும் பணியை மங்கள்யான் ஒரே விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளும். இந்தத் திட்டத்தில் செவ்வாய் கிரகத்தை 6 மாதங்கள் மங்கள்யான் சுற்றி வந்தாலே ஆய்வுக்கான தகவல்கள் கிடைக்கும்.
இந்த இதழை மேலும்