– 2014 – October | தன்னம்பிக்கை

Home » 2014 » October (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    ஏற்றம் தரும் எண்ணங்கள்

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 19.10.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை,

    இடம்: ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்

    ஜோதி தியேட்டர் அருகில்,  திருச்செங்கோடு.

    தலைப்பு:  ”ஏற்றம் தரும் எண்ணங்கள்”

    நாள் : 19.10.2014; ஞாயிற்றுக்கிழமை

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc .HCF.Pro.வைரமணி, M.A.,M.Ed.,M.Phil.

    சுயமுன்னேற்ற பயிற்சியாளர், பெரம்பலூர

    போன்: 94420 82152

    தொடர்புக்கு:

    தலைவர்: JCI.Sen.G. கோவிந்தசாமி  98427 96868

    செயலாளர்: Jc.A. திருநாவுக்கரசு – 99429 66554

    ஒருங்கிணைப்பாளர்: Jc.Dr.S. சரவணகுமார் 94423 83833

    இருக்கு ஆனா இல்ல

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்  இணைந்து வழங்கும் 310 – வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 19.10.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்,

    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,

    ஆர்.எஸ். புரம் (மேற்கு),

    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், கோவை.

    தலைப்பு: “இருக்கு ஆனா இல்ல”

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. R. ராஜா  மேலாளர்,

    ஹெலிக்ஸ் பயிற்சி மையம், சேலம்.

    போன்: 95248-63670, 90036-71434

    தொடர்புக்கு:

    தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் 98422 59335

    செயலாளர்  திரு. E. விஜயகுமார்  94426 10230

    பொருளாளர் திரு. AD. A.  ஆனந்தன்  74026 10108

    என் பள்ளி

    கோவை  சென்னை தொடர்வண்டிப் பாதையில் திருப்பூருக்கு முந்தைய தொடர்வண்டி நிலையம் வஞ்சிபாளையம் என்பது. மரங்களும், தூய்மையான பாதைகளும் அமைந்துள்ள ஊர். கிழக்கே 9வது கி.மீட்டரில் திருப்பூர் நகரமும் வடக்கே 9வது கி.மீட்டரில் தேசிய நெடுஞ்சாலை எண் 47ல் அமைந்துள்ள அவினாசி நகரமும் அமைந்துள்ள சிறப்பை உடையது. 1962ல் இங்கு அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் பயின்றேன். எந்த வசதிகளும் அற்ற ஒரு வீட்டைப் பள்ளிக்காக வாடகைக்கு எடுத்து 8வது வகுப்பு வரை நடைபெற்றது. முதல் வகுப்பு அரையாண்டு வரையில் ஆசிரியர் அ, ஆ, இ, ஈ என்று தமிழ் நெடுங்கணக்கைச் சொன்னாலும், 1, 2, 3 என எண்களை எழுதச் சொன்னாலும், 0, 0, 0 என ஸ்லேட் முழுதும் எழுதுவேன். ஊரில் மதிப்பு மிக்க குடும்பமாக இருந்ததாலும், பெற்றோர்களுக்கு செல்ல மகனாக இருந்ததாலும், யாரும்  அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முழு ஆண்டுத் தேர்வு வரும் சமயத்தில் தான் தமிழ் அரிச்சுவடியே எழுதப் பழகினேன். இரண்டு மாத காலத்தில் தமிழ் எழுத்துக்கள் நூறு வரை எண்கள் எழுதப் பயின்று ஆசிரியரின் அன்பையும், மதிப்பையும் பெற்றேன்.

    தந்தையார் 1920களில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர். தாயார் பள்ளி சென்றதில்லை. தமையனார் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். வேளாண் குடும்பம். வளமான நீரும் மண்ணும் வேளாண்மையை ஏற்றம் பெறச் செய்தன. சிறு வயது முதலே எதையும் கற்றுக்கொள்ள வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தீராத வேட்கையும், ஆர்வமும் இருந்தது. தந்தையார் வேளாண் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயங்களில் அருகிருந்து ஒவ்வொரு பணியையும் கற்கும் வாய்ப்பு கிட்டியது.

    காலையில் 5.30 மணிக்கு எழுந்து 7.30 வரை பாடங்களைப் படிக்கும் பழக்கம் சற்றும் குறையவில்லை. வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ வேண்டும் என்ற அவா, ஆர்வம் ஒரு சிறிதும் எந்தச் சூழலிலும் குறையவில்லை. எனவே எட்டாவது வரை இருந்த அந்தப் பள்ளியில் படித்த காலங்களில் எல்லாப் பாடங்களிலும் 98, 99 மதிப்பெண் பெற்று வந்தேன். பின் வீட்டிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் பல்லடம் பாதையில் அமைந்திருந்த அரசுப்பள்ளியில் 8வது வகுப்பிலேயே சேர்ந்து படித்தேன். பள்ளிப்பாடங்களின் மீது இருந்த அக்கறை, ஈடுபாடு, வேட்கை அனைத்துமே திருப்பூர் கல்வி மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மைய அரசால் நடத்தப்பட்ட தேசிய மாணவர் திறனறி தேர்வில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்றில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. பல்லடத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருந்த வதம்பச்சேரி என்றஊரில் அமைந்திருந்த சொக்கன்செட்டியார் மல்லம்மாள் உயர்நிலைப் பள்ளியில் 10, 11ம் வகுப்புகள் பயின்றமை. வீட்டாரைப் பிரிந்து விடுதியில் தங்கும் நிலை. பிரிவு வருதம் இருப்பினும் பாடங்கள் மற்றும் விளையாட்டில் மிக்க ஈடுபாட்டுடன் செயல்பட்டமை. மாவட்ட அளவில் மட்டைப்பந்தில் முதலாவதாக. கைப்பந்தில் முதலாவதாக வந்தமை.

    பின்னர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் PUC முதல் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி. பின்பு என்ன படிப்பது, எப்படிப் படிப்பது என்று திசை தெரியாமல் தனித்து இறுதியில் இளமறிவியல் (கணிதம்) கிடைத்தும் இளங்கலை தமிழ் விருப்பப்பாடமாக எடுத்துப் படித்தமை. வகுப்பில் ஒரே ஒரு மாணவனாக மூன்றாண்டுகள் படித்தமை. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை தமிழ் வகுப்பில் சேர்ந்தமை. தமிழறிஞர்கள் ம.ரா.போ. குருசாமி, கே.எஸ். கமலேசுவரன் போன்றவர்களின் அன்பும் அரவணைப்பும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறச் செய்தது. அவர்களது சுண்டுவிரலைப் பிடித்து வளர்ந்த நிலையிலும் செல்ல வேண்டும்  செல்லும் தைரியம் தந்தது. பின்பு மண வாழ்க்கை, ஊர் மாற்றம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முதலணி மாணவராக M.Phil., Ph.D. படித்தமை. பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய தேசிய அளவிலான தேர்வில் பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாகத் தேர்ச்சி பெற்று உதவித்தொகையுடன் முனைவர் பட்டம் பெற்றமை. பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் ஆசிரியப் பணி. அதை அரைப்பணியாக ஏற்காமல் அறப்பணியாக ஏற்றல். மாணவர் நலன் கருதி பல வழிகளில் அவர்களுக்கு உதவுதல். ஒவ்வொரு மாணவனுக்கும் குரு என்பவர் இரண்டாவது பெற்றோர் என்பதை உணர்த்துதல். என்னிடம் பயின்றஆயிரக்கணக்கான மாணவர்கள் அனைவரும் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், “ஐயா! நான் உங்கள் மாணவன். இந்த ஆண்டு இந்த வகுப்பில் படித்தேன்” என்று சொல்லும்போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு எல்லையும் இல்லை; அளவும் இல்லை. மனிதப் பிறவியின் முழுப்பயனை அடைதல். கல்லூரியில் முக்கிய பொறுப்புகள் என்னுடைய நேர்மை, ஒழுக்கம், ஒழுங்கு, சீர்மை கருதித் தானாகவே வந்தன. அனைத்தையும் ஏற்றுச் சிறப்பாகச் செயல்பட்டு நிர்வாகம், மாணவர்களின் பாராட்டைப் பெற்றமை. 16 ஆண்டுகள் கல்லூரிப் பணி. முழு மனநிறைவுடன் பிறவிப்பயனை அடைந்த ஒரு புத்துணர்வு.

    பின்பு பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணி. படித்த இடம்  பழகிய மனிதர்கள். அனைவரும் எங்கு கண்டாலும் பேசாமல் செல்ல முடியாத அன்புப்பிணைப்பு. கருத்தரங்குகள் நடத்துதல், கல்லூரி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி, மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள், அஞ்சல் வழிப் பாடங்கள் நடத்தல், பல பல்கலைக்கழகங்களுடன் துறைரீதியான தொடர்பு – ஆய்வுப் பணிகள்  ஓய்வில்லாத மனநிறைவான பணி.

     இதை எண்ணும் பொழுது என்னை நானே அகமாக நோக்கிக் கொள்கிறேன். என் வளர்ச்சிக்கு  உயர்வுக்கு என்ன காரணம்? என்னை நானே அளந்து பார்த்து எடைபோடும் போது மனத்தில் நிறைந்தவை. எல்லோரிடமும் உண்மையான அன்பு காட்டல்; நேர்மையாக, உண்மையாக அடுத்தவர் வளர்ச்சியில் அக்கறை; முடிந்தால் உதவுவது; முடியவில்லை எனில் வழிகாட்டல்; அதுவும் முடியாதபோது மௌனமாக ஒதுங்கிவிடல்; எந்தச் செயல் செய்தாலும் அதில் அக்கறை, ஈடுபாடு, உழைப்பு; பிறருக்கு நாமாக உதவும்போது இறைவன் நமக்காக உதவுவான்; செய்யும் செயலில் ஒன்றிப் போதல்; சரியான வழியில் செல்லல்; எல்லோரையும் நம் குடும்பத்தினராக எண்ணுதல்; தன்னலம் பேணாமை; மனிதநேயத்துடன் செயல்படல். இத்தகைய அருட்குணங்களால் இயல்பாகவே என் தந்தையாரிடமிருந்து பெற்றவை ரோல் மாடல்  என்பார்களே அது என் தந்தையார் தான். எந்தச் செயல் செய்தாலும் ஆழ்ந்த ஈடுபாடு, அக்கறையுடன் செய்யும் பாங்கு; மனிதனாகப் பிறந்துள்ளோம், மனிதர்களுக்கு உதவுவோம் பயனுள்ளபடி என்பதுதான் என் தாரக மந்திரம்.

    எனவே ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துச் செயல்பட்டால் மலையையும் புரட்டலாம். மணலையும் திரிக்கலாம். செய்யும் செயலில் பிடிப்பு, ஈடுபாடு, அக்கறை, ஒழுங்கு இருப்பின் இறைவன் எல்லா வளத்தையும் தானாக மனமுவந்து நல்குவான் என்பது நான் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.

    இந்த இதழை மேலும்

    எழுந்து வா… இளையவனே!

    வண்ணக்கனவுகளை நாளும் கண்களில், நெஞ்சங்களில் சுமப்பவர்கள் இன்றைய இளைஞர்கள். வாலிபம் எனும் தோணியில் பயணம் செய்பவர்கள். காட்டாற்று வெள்ளமாய் ஆற்றலை தன்னகத்தே கொண்டவர்கள். போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகில் ஒரு சிறந்த வெற்றியாளனாக, சாதனையாளனாக, இலட்சியவாதியாக மாறத்துடிப்பவர்கள்.

    இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள்?

    தாழ்வு மனப்பான்மையுடன் சிலர்…

    விரக்தி மனப்பான்மையுடன் சிலர்…

    கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனச் சிலர்…

    தோல்வி மனப்பான்மையில் சிலர்…

    தீவிரவாதிகளாக மாறுபவர் சிலர்…

    போதைகளில் புகைகிறவர்கள் சிலர்…

    பாட்டில்களுக்குள் அடங்கியவர்கள் சிலர்…

    இலட்சிய வாழ்வுக்காக போராடுகிறவர்கள் சிலர்…

    “நூறு இளைஞர்களைத் தாருங்கள். இந்த நாட்டை உயர்த்திக் காட்டுகிறேன்” என்றாரே விவேகானந்தர். இதை சிந்திக்கிறீர்களா?

    தனது குடியரசுத்தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கு நூறு இளைஞர்களை அழைத்துச் சென்றாரே அப்துல்கலாம், அதை சிந்தித்து பார்த்தீர்களா?

    இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்களை சந்தித்துவிட்டேன். இவர்களை சந்திப்பதும், ஆற்றுப்படுத்துவதும் என் கடமைகளில் ஒன்று என்று செயல்படும் அப்துல்கலாமின் சொற்கள் உள்ளத்தை தொடவில்லையா?

    யானைக்குத் தன் அசுர பலம் தெரியாமல் சங்கிலிகளுக்குள் பிணைந்து, நின்றஇடத்திலேயே நின்று செக்குமாடு போல சுற்றிக்கொண்டிருப்பது போல, சாதி, சமயம், இனம், மொழி, கொள்கைகள் என பல சங்கிலிகளால் உங்களைப் பிணைத்து ஏன் காலத்தைக் கேவலம் ஆக்குகிறீர்கள்? ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாயிடம் ஓர் இளைஞர் ரூபிள் (ரஷ்ய நாணயம்) கேட்டுச் சென்றார். டால்ஸ்டாய் “நூறு ரூபிள் தருகிறேன். ஒரு விரலைத் தருவாயா?” என்று கேட்டர்.

    ஒரு விரலா? அது எப்படி தர முடியும்?” “ஆயிரம் ரூபிள் தருகிறேன் ஒரு கண்ணைத் தருகிறாயா?”

    டால்ஸ்டாயிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயன்றான் இளைஞன். அவர் சொன்னார், “தம்பி! உன்னிடம் விலை மதிக்க முடியாத சக்தி இருக்கிறது. அதைப் புரியாமல் ஏன் அலைகிறாய்?” என்று அனுப்பி வைத்தார். உடல் பலத்தையும், உள்ள பலத்தையும் ஆண்டவன் தந்திருக்கிறான்.

    மூளையின் ஆற்றலை மனிதன் இன்னமும் அறியவில்லை. மிகப்பெரிய அறிஞர் கூட 40 விழுக்காடு மூளையின் ஆற்றலை பயன்படுத்தவில்லை என்றசெய்தி வியப்பை தரவில்லையா? மூளையின் ஆற்றல் இலைமறைக் காயாக இறைவன் வைத்திருக்கிறான். அதை பயன்படுத்தாமல் சோம்பேறியாக வாழ்ந்து, இறைவனையே குறைசொல்வது ஏன்?

     உன் மனதின் ஆற்றல் உனக்கு புரிகிறதா? உன் மனது ஒரு பூந்தோட்டம். அதில் எண்ணங்கள் விதைகள்  உயிருள்ள விதைகள். சக்தி வாய்ந்த விதைகள். ஒரு மனிதன் எண்ணங்களாலே உருவாக்கப்படுகிறான். அவனது எண்ணமே அவனது வாழ்க்கை. உடல் பகுதியில் எந்த இடத்திலும் ஊனம் ஏற்படலாம். தீர்த்து விடலாம். ஆனால் உள்ளத்தில் ஊனம் ஏற்பட்டால்…?

    உடல் பலம்  மூளை பலம்  மன பலம் என்றமூன்று பலங்களும் அடங்கியதே சக்தி அல்லது வலிமை என்கிறான் ஓர் அறிஞன். இத்தனை பலத்தையும் ஒருங்கே பெற்றநீ முடங்கிக் கிடந்தால், சிலந்தி வலையும் உன்னை சிறைபிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழிவிடும்.

    உன்னிடம் இருக்கும் இறகுகளை சுருக்கிவிட்டு, வேறு இறகுகளைத் தேடி ஏன் அலைகிறாய்? கண்களை கூராக்கி, கால்களை நேராக்கி பறக்க முயற்சிசெய்.

    சாதனைக்கு வயதில்லை. வயது ஒரு தடையில்லை. வீரசிவாஜி எதிரியின் கோட்டையைக் கைப்பற்றியபோது வயது 13. இரவீந்திரநாத் தாகூர் ஷேக்ஸ்பியரின் மாக்பெக் நாடகத்தை வங்க மொழியில் மொழி பெயர்த்தபோது வயது 14. விக்டர் ஹீயுகோ என்றபிரபல எழுத்தாளரின் முதல் புத்தகம் வெளிவந்தபோது வயது 15. ஆதிசங்கரர் இந்தியா முழுவதும் சுற்றி பல அறிஞர்களை வாதத்தில் வென்றபோது வயது 16. மார்க்கோபோலோ உலகப்பயணத்தை தொடங்கியபோது வயது 17.

     ஒரு அறிஞர் கூறுகிறார், “நேற்று என்றசொல்லை மறந்துவிடுங்கள்; நாளை என்றசொல்லை நம்பிவிடாதீர்கள்; இன்று என்றசொல்லை இனிமையாக சுவையுங்கள்”

    இளைஞர்களிடம் சக்தி மறைந்திருப்பது போல, திறமையும் மறைந்திருக்கிறது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் திறமை இருக்கிறது. அதை உணர்ந்து கொள்ளுங்கள். வெளிக் கொணருங்கள்.

    சாதனையாளர்கள் வித்தியாசமான செயல்கள் எதையும் செய்வதில்லை. சாதாரண செயல்களையே சற்று வித்தியாசமாக செய்கிறார்கள் என்கிறார் ஷிங்கெரோ.

    மாவீரன் நெப்போலியன் இவ்வாறு கூறுகிறார். “எனது படையில் என்னைச் சேர்க்காமல் 50 ஆயிரம் பேர். என்னைச் சேர்த்தால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர்” – இதுவே தன்னம்பிக்கை.

    உலகை மாற்றவேண்டும் என்று புலம்பும் இளைஞர்களே, முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.

    வரலாறு படிப்பதைவிட்டு நிறுத்திவிட்டு, வரலாற்றைஎழுதுங்கள். வரலாற்றைஉருவாக்க ஆரம்பியுங்கள்.

     சக்தியை தெய்வமாக வழிபடும் இந்த நாட்டில்… இளைஞர்கள் தங்கள் சக்தியை உணர்ந்து செயல்பட்டால் என்ன பெரிய மாற்றம் ஏற்படும்Ð

    இளைய சூரியனே எழுந்து வா! விடியலை நோக்கி உன் கதிர்கள் வேகமாக பாயட்டும். வானமும் எல்லை இல்லை.

    பிறக்கும்போது நீ அழ வேண்டும். அது உன் ஆரோக்கியத்தின் அடையாளம். இறக்கும்போது ஊர் உனக்காக அழ வேண்டும். அது உன் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு அடையாளம். விட்டுச்செல் இளைய சகோதரா, நல்லதொரு அடையாளத்தை.

    தொலைக்காட்சியில் தொலைந்து போகாமல் தொலைநோக்கு பார்வையை வை.

    காதல் தீயில் கருகிப்போகாமல் சாதனைகள் பல செய்.

    வெற்றியின் வாசல்கள் பல உண்டு. அவற்றின் சாவிகள் ஒரே கொத்தாக நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சாவி எதற்குப் பொருந்தும் என்று புரிந்துவிட்டால் போதும்.

    வெற்றி நமதே.

    வாழ்க்கை என்பது ஓவியமல்ல

    மாற்றி மாற்றி வரைய

    வாழ்க்கை என்பது சிற்பம்

    செதுக்கியதும் நானே

    செதுக்குபவனும் நானே

    உளியை மெதுவாக அடி

    உடைந்த துண்டுகளை ஒட்டமுடியாது…

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை உள்ளத்தின் உறுதியே வெற்றியின் பாதை

    தன்னம்பிக்கை என்பது ஆற்றல் வாய்ந்த நமது சிறப்பு இயல்பாகும். அது நம்மை ஊக்குவிக்கும். நமது உள்ளுரத்தை (Stamina) மேம்படுத்தும். தன்னம்பிக்கை என்பது நம் மீதும், நம்முடைய திறமையின் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கை தான்.

    நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு முறையும் தோல்வி எனும் பாறையால் இடறி வீழ்கிறபோது, நம்மை எழுந்து நிற்கச் செய்வது நம்முடைய தன்னம்பிக்கை தான்.

    ஒரு வெற்றிக்கும், பல சாதனைகளுக்கும் “தன்னம்பிக்கை” தான் வெற்றியை உறுதிபடுத்துகிறது.

    நாம், நம்மிடம் தன்னம்பிக்கை வளர்த்திடல் வேண்டும். நமக்குச் சொந்தமான சிறந்த அம்சங்களில் காணப்படுகிற அவைகளில் வைத்திருக்கும் நம்பிக்கையே நம்முடைய தன்னம்பிக்கை ஆகும். அந்தத் தன்னம்பிக்கையே நம்முடைய வாழ்க்கையை வடிவமைக்கிறது. நம்முடைய முதலடியை நம்பிக்கையோடு எடுத்து வைத்துவிட்டாலே போதும். அவை உலகத்திலுள்ள நெடுஞ்சாலைகளைக் கடந்து, நடந்து முடிந்தாகிவிடும்.

    தன்னம்பிக்கையின் ஆணிவேர் எங்குள்ளது தெரியுமா? எங்கும் அதனைத் தேட வேண்டியதில்லை. அது நம்முடைய நல்லெண்ணம் அல்லது நல்ல அபிப்பிராயத்திலே உள்ளது.

    நம்மீது நாம் வைக்கும் சுயமரியாதைக்குள்ளே தான் (Self- Esteem) நம்முடைய நம்பிக்கை ஒளிந்துகொண்டு இருக்கிறது.

    தன்னம்பிக்கையை வளர்க்கும் குணம் நேர்மறைச் சிந்தனை (positive Thinking) தான்.

    நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அது “பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்” என்று. இதை நம் நாட்டிலே மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலேயும் “Misfortunes Never Come Single” இப்படிச் சொல்வதுண்டு.

    நமக்கு வருகின்ற துன்பங்கள் எல்லாம் அடுக்கடுக்காய் வருகின்றன. மேற்கூறிய பழமொழிகள் எல்லாமே ஒரு எச்சரிக்கை மணிகளாகவே இருக்கின்றன.

    இது ஒருவித ஈர்ப்பு விதி தான். இதைத் தான் ஆங்கிலத்தில் “Laws of Attraction” என்று சொல்வார்கள். மேல் நாட்டு மனோவியலாளர்களும் இதை சமீபத்திய ஆய்வில் உறுதிபடுத்தியுள்ளனர்.

    புராண நூலிலும் கூட “நீ எதை எண்ணுகிறாயோ… அதுவே நிகழும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நமது நாட்டில் கையாளப்படுகின்ற மந்திர சுலோகங்களில் கூட, எதிர்மறைவாக்கியங்கள் இடம் பெற்றிருக்காது. புத்தி, தைரியம், வீரம், ஜெயம் என்று நேர்மறையான வார்த்தைகளே இடம் பெற்றிருப்பதைக் காண முடியும்.

    நம்முடைய தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமானால், நல்லதொரு குறிக்கோளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு சில உதாரணங்களை காண்போம்.

    ஜோனி என்றபெண், அவருடைய இடுப்பிற்குக் கீழே முழுவதும் உணர்வற்றுப் போன பின்பும், மிகச்சிறந்த ஓவியராகப் பெயர் பெற்றார்.

    பெரிய ஓவியராக வேண்டும் என்ற அவருடைய ஓயாத எண்ணமே அவரது தன்னம்பிக்கைக்கு உரமானது.

    கைகளை இழந்தவர்கள் பலருக்கு எழுத வேண்டும், வரைய வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுவதால் தனது கால்களின் மூலம் எழுதவும், வரையவுமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

    டிஸ்ரேலி எனும் இங்கிலாந்தைச் சேர்ந்த இலக்கியவாதி தன் மனைவியிடம், நீ வருங்கால இங்கிலாந்தின் பிரதம மந்திரியின் மனைவி என்பதை மறந்துவிட்டு புலம்புகிறாய்… என்றிருக்கிறார். பின்னாளில் அவர் சொன்னதுபோலவே, அந்நாட்டின் பிரதமரானார். இது அவரது குறிக்கோள் அவருக்குத் தந்த தன்னம்பிக்கை.

    எனவே நாமும் வாழ்வில் குறிக்கோளுடன் வாழ்ந்தால், தன்னம்பிக்கையுடன் சாதனைகள் பல புரிந்து வெற்றிக்கனியை ருசிக்கலாம்… குறிக்கோளுடன் கூடிய தன்னம்பிக்கையே தடம் பதித்து, வடம் பிடித்து நம்மை உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் மாற்றம் ஏதும் இல்லை!

    இந்த இதழை மேலும்

    கவலைப்பட ஒன்றுமில்லை

    இன்று ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கவலை உட்கார்ந்து கொண்டு உலுக்கி எடுக்கின்றது என்பது மறக்க முடியாத உண்மையாகும். இவ்வுலகில் கவலை இல்லாத மனிதரைக் காண்பது அரிதாகிவிட்டது. நாளும் அதிகரித்து வரும் மனிதத் தேவைகளும், இயந்திரகதியான வாழ்க்கை முறையும் சேர்ந்துகொண்டு மனிதரைப் பாடாய்படுத்தி எடுக்கின்றது. இவற்றிற்கிடையில் எந்நேரமும் நாம் எச்சரிக்கையாக இல்லை என்றால், துன்பம் உடனே வந்து நம் தோளில் தொற்றிக்கொண்டு துளைத்து எடுக்கின்றது.

    இயற்கையை நன்றாக கவனித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாக தெரியும். இங்கே விதைப்பது தான் வளர்கின்றது. வளர்வது தான் அறுக்கப்படுகின்றது. அறுக்கப்படுவது தான் களஞ்சியங்களில் சேமிக்கப்படுகின்றது. அதுபோன்றுதான், நம் கவலைகளையும் நாம் தான் விதைக்கின்றோம். நாம் தான் வளர்க்கின்றோம். நாம் தான் அறுவடையும் செய்கின்றோம். நமக்குள் சேமித்தும் வைத்து சிரமப்படுகின்றோம்.

    நம் கவலைக்கு நம்மைத்தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. நாளைக்கு என்ன செய்வது என்பதன்மீது அதிக நாட்டம் வைக்காதீர்கள். இன்றைக்கு எப்படி சரியாக செயல்படுவது என்பதில் நூறுசதவிகிதம் திருப்தியாக இருங்கள். அதுபோதும் உங்களது கவலையை விரட்டி அடித்துவிடும். நாம் கவலைப்படுவதால் ஒரு நன்மையும் ஏற்படப்போவதில்லை. மாறாக துக்கமே மேலும் மேலும் உருவாகி நம்மை உருக்குலைக்கும்.

    கவலை உங்கள் சந்தோசத்தைக் கெடுத்துவிடும். உங்களை சாப்பிட முடியாமல் செய்துவிடும். உங்கள் தூக்கத்தை துரத்தி, உங்கள் சரீரத்தை நோய்வாய்ப்படச் செய்துவிடும். பெரும்பாலான மனித நோய்களுக்கு மூலகாரணமாக அமைவது அவர்கள் மனதிலே ஏற்படும் கவலையே என்பது இன்றைய மருத்துவ உலகம் கண்டுபிடித்துள்ள உண்மை.

    கழுத்திலே கத்தி வந்து நிற்கும்போது எப்படி கவலைப்படாமல் இருப்பது என்கிறீர்களா? நாம் என்ன வள்ளுவரா, துன்பம் வரும் வேளையிலே சிரிக்க என நீங்கள் கேட்க நினைப்பது புரிகின்றது.

    இப்பூமியிலே வாழும்வரை யாரும் பிரச்சனைகளைச் சந்திக்காமல் வாழ முடியாது. பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்வு என்ற ஒன்றும் கிடையாது. அப்படி என்றால் அதை எப்படி மகிழ்வுடன் எதிர்கொள்வது என்பதை அறிந்துகொண்டால் துன்பத்தில் இருந்து விடுபடுவது எளிது. கவலையை மகிழ்வாக எதிர்கொள்ளும் தாரக மந்திரம் இதுதான்.

     “எந்தக் கவலையையும் என்னால் எதிர்கொள்ள முடியும்”

     “கவலையற்ற அழகான, மகிழ்வான வாழ்வை என்னால் வாழ முடியும்”

    “எல்லாம் வல்ல இறைவன் எனக்கு எந்நேரமும் துணையாக இருப்பான்”

    என்கின்ற நம்பிக்கையே கவலையை நம்மிடமிருந்து நிச்சயம் விரட்டியடிக்கும் தாரக மந்திரமாகும்.

    பச்சிளம் குழந்தை போல் எந்தவித விருப்பு வெறுப்புக்கும் இடமளிக்காது இயல்பாக இருந்து பாருங்கள் கவலை உங்களைக் கண்டுகொள்ளாது. உங்களுடைய கவலைகளை, உங்களுக்குள் இருக்கும் உன்னத நம்பிக்கையிடம், ஆத்மார்த்தமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது அது தீர்வை கொடுப்பது மட்டுமின்றி, உங்களை உயர்வை நோக்கி உந்தித் தள்ளிவிடும். நம் தேவைக்கான தீர்வு நமக்குள்ளே இருக்கும்போது நாம் ஏன் கவலைப்பட வேண்டும்.

    கவலையைக் களைய இப்படியும் செய்யலாம். உளமாற வாய்விட்டு அதை சொல்லிச்சொல்லி, ஓ.. வென்று கதறி உருகி அழுது, அழுது முடித்துவிட்டால், எப்படிப்பட்ட கவலையும் நம் மனதில் இருந்து, இருந்த இடம் தெரியாமல் மறைத்துவிடலாம்.

     பாரத்தை சுமக்கப்பழகிக் கொள்வதைவிட, அதை எளிதாக இறக்கிவைக்க கற்றுக்கொள்வது மிக முக்கியமாகும். நம் கவலையை இறக்கி வைக்க யாரையும் தேட வேண்டாம். அது பெரிய பிரச்சனையில் கொண்டு விட்டுவிடும்.  நாமே நம் கவலையை நம்மிடம் இருக்கும் நம் நம்பிக்கையிடம் இறக்கிவைக்க பழகிக்கொள்வோம்.

     கவலையை இறக்கிவைப்பது என்பது, ரகசியத்தை வெளிப்படுத்துவதற்கு ஒப்பானதாகும். ரகசியம் என்பது சகமனிதரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத ஒன்று. அதனால் தான் அதன் பேர் ரகசியம் எனப்படுகிறது.

    ஒருபோதும் நீங்கள் “எனக்கு யார் இருக்கிறார்கள், ஏன் என் வாழ்வு மட்டும் இப்படி ஆகிவிட்டது; இனி சாகும் வரை எனக்கு இந்த வாழ்க்கை தானா… இது தான் என் தலையெழுத்தா… நான் என்ன பாவம் செய்தேன் என்றெல்லாம் எண்ண வேண்டாம்.

    எல்லா பிரச்சனைக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட தீர்வுகள் உள்ளன என்னும் நம்பிக்கையை ஒருபோதும் இழக்க வேண்டாம். முயற்சியால் முடியாதது ஒன்றும் இல்லை என்னும் மன உறுதியை மரிக்கச் செய்துவிட வேண்டாம்.

     “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

    மெய்வருத்தக் கூலி தரும்”

    என்பதை மறந்துவிட வேண்டாம்.

    கவலைச் சூழ்நிலைக்குள் மனிதமனம் அகப்பட்டுவிட்டால் திரும்பத்திரும்ப அது சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை போல, நகர முடியாத கிராமபோன் கருவி ஊசி ஒரு வரியையே திரும்பத்திரும்ப பாடி கடுப்பை ஏற்றுவது போல, நம் கவலையைக் குறித்தே மீண்டும் மீண்டும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்போம்.

    அதை உடனே நகர்த்திவிட எந்தவித முயற்சியும் நாம் எடுக்காத வரை அதே நிலையில் தான் நாம் அவதிப்படுவோம். ஒரு எல்லைக்கு உட்பட்ட நம் வாழ்வில் எதற்கு எல்லையில்லாத கவலை. கவலையைக் கட்டிக்கொண்டு காலத்தைக் கடத்துவதைக் காட்டிலும் அதை விட்டுவிட்டு மகிழ்வாக இருப்போம். இங்கு எல்லாம் மாறிக்கொண்டும், மறைந்து கொண்டும் இருக்கின்றது. எதுவும் நிலையானது இல்லை என்கின்ற போது நம் கவலைகள் மட்டும் என்ன விதிவிலக்கா?!

    கவலைகளை அப்படியே விட்டுவிட்டு, நாம் போகப் பழகிக் கொள்வோம். அது எப்படி உருவானதோ, அப்படியே அழிந்துபோய்விடும்.

    எப்போதும் நாம்…

    நடந்ததைக் கடந்து செல்வோம்!

    நடப்பதில் நாட்டம் வைப்போம்!

    தளர்வாய் இருக்கும் தைரியம் பெறுவோம்!

    பரிசுத்தமானவன் நான், என்னை ஒன்றும்

    தீண்டாது என்கிற நம்பிக்கை கொள்வோம்!

    என் பயணம் நல்லதாய் முடியும் என்கிற

    உணர்வுடன் உறங்கச் செல்வோம்!

    இறுதியாய் புண்ணியம் எல்லாம் போனாலும் கூட

    கர்ணனைப் போல கவலையில்லாது இருப்போம்!

    கடமையில் கண்ணுங்கருத்துமாக…

    இந்த இதழை மேலும்

    பத்து நிமிடம் பத்து வருடம்

    மக்களின் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பறந்து செல்லவே விரும்புகிறார்கள். சிக்னலில் நிற்பதற்கு பொறுமை இல்லை. முன்னால் செல்பவன் சற்று மெதுவாக சென்றால் ஹாரன் அடித்தே கொன்று விடுவார்கள். அலுவலகத்திற்கு நேரத்திருக்கு போக வேண்டுமே என்ற அவசரம்.

    ஒரே டென்ஷன், பரபரப்பு, எரிச்சல், இதற்கெல்லாம் மூல காரணம் என்ன? வீட்டிலிருந்து சற்று முன்னதாக கிளம்பாததுதான். அது என்னவோங்க. சீக்கிரம் புறப்படவே முடியலேங்க என்ற அங்கலாய்ப்பு வேறு.

    அலுவலகத்திற்கு முன்னதாக போக கூடாது என்று நாம் ஒரு கொள்கையை வைத்திருக்கிறோம். 10 மணிக்கு ஆபீஸ் என்றால் அதற்கு முன்னால் கண்டிப்பாக போக கூடாது என கங்கணம் கட்டி கொண்டுள்ளோம். முன்னால் செல்வது ஒரு குற்றம் போல ஒரு உணர்வு சரியாக 10 மணிக்குதான் போய் சேர வேண்டும் என நினைத்தால் அது போக முடியாதவாறு வழியில் பல்வேறு பிரச்சனைகள். டிராபிக் ஜாம். ஒருவர் இருவர் அல்ல. அனைவருமே அவசரப்படுகிறார்கள். அதனால் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. சிக்னலை மீறி நான் மட்டும் எப்படியாவது போய் விட வேண்டும் என்ற நினைப்பில் அனைவருமே மற்றவர்களைப் பற்றி கவலை படாமல் அவசர படுகிறார்கள்.அதனால் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. சிக்னலை மீறி நான் மட்டும் எப்படியாவது போய் விட வேண்டும் என்ற நினைப்பில் அனைவருமே மற்றவர்களைப் பற்றி கவலை படாமல் அவசர படுகிறார்கள்.

    எப்படியோ அலுவலகம் போய் சேர 10.15 ஆகி விடுகிறது. நாம் லேட்டாக வந்ததை யாரவது பார்த்து விடுவார்களோ யாராவது கேட்பார்களோ என்ற படபடப்பு. அப்படி கேட்டால் என்ன பதில் சொல்லலாம் என்று இரண்டு மூன்று பதில்கள் தயாராக இருக்க வேண்டும். அப்படி யாரும் கேட்கவில்லை என்றாலும் கூட மேலதிகாரி எதற்கு கூப்பிட்டு விட்டாலும் இதைதான் கேட்க போகிறார் என்ற பதைபதைப்பு, யாரும் கேட்பதற்கு முன்னால் நான் சற்று கோபமாக இருப்பது போல் கத்தி கொண்டு இருந்தால் யாரும் நம்மிடம் வந்து “ஏன் லேட்” என கேட்க மாட்டார்கள் என கத்த ஆரம்பிப்போம்.

    கொஞ்சம் கொஞ்சமாக டென்ஷன் ஏறுகிறது, எகிறுகிறது. மாலை அதே மூடில் வீட்டிற்கு செல்கிறோம். வரும்போது எதையோ வாங்கி வரசொன்னாளே என வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும் பொழுது தான் ஞாபகம் வருகிறது. இன்னும் எரிச்சல் அதிகமாகிறது. மனைவி “வாங்கி வர வில்லையா? என கேட்பதற்கு முன்னால் ஏதாவது கத்தி விட்டால் நம்ம கிட்ட கேட்க மாட்டாள் என்றுக் கத்துகிறோம்.

    மொத்தத்தில் மன நலம், உடல் நலம் இரண்டும் கெட்டுப் போய் விடுகிறது. இது இப்படியே போனால் ஆட தொற்றிகொள்ளும். அடிக்கடி டென்ஷன் ஆகி விடுவோம். இப்படியே விட்டு வைத்தால் எளிதில் வியாதிகளை வரவழைப்போம். நமது வாழ் நாள் 10 ஆண்டுகள் குறைந்து விட வாய்ப்புண்டு. இதற்கு ஒரே வழி: அலுவலகத்திற்கு 10 நிமிடம் முன்னதாக சேர்ந்து விட வேண்டும் என திட்டமிட்டு சீக்கிரமே வீட்டிலிருந்துப் புறப்பட்டு விட வேண்டும். நடு வழியில் டிராபிக் ஜாம் ஆனாலும் பிரச்சனை இல்லை.

    பத்து நிமிடம் முன்னதாக சென்று விட்டீர்களா. உலகம் ஒன்றும் கவிழ்ந்து விடாது. நிதானமாக பாத் ரூம் சென்று வாருங்கள். தண்ணீர் குடியுங்கள். உங்கள் நாற்காலியை சுத்தப்படுத்துங்கள். சரியாக 10 மணிக்கு வேலையை ஆரம்பித்தால் போதும். ஆனால் அன்றைய நாள் பொழுது எவ்வளவு அழகாக ஆரம்பிக்கிறது என்று பாருங்களேன். வாழ ஆசைப்படுகிறோம். நன்கு வாழ ஆசைப்படுவோமே!

    இந்த இதழை மேலும்

    வீட்டில் கவனக்குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்

    குழந்தைகள் தவழும் பருவத்தில் இருந்து 4-5 வயது வரை பெற்றோர்கள் குழந்தைகளைக் கவனமுடன் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் இப்பருவத்தில் குழந்தைகளுக்குப் பல ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

    1. பூச்சி உருண்டைகளை விழுங்குதல் (நாப்தலின் உருண்டை)

    நாப்தலின் உருண்டை நிலக்கரியில் இருந்து உருவாக்கப்படுகிறது. இது கிருமிநாசினியாகவும் பயன்படுத்தபடுகின்றது. இவ்வகை உருண்டைகள் வெள்ளை நிறத்தில் கண்களை கவரும் வகையில் இருப்பதால் குழந்தைகள் சுலபமாக அவற்றை வாயில் போட்டுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதில் உள்ள நச்சுப்பொருட்கள் இரத்த அழிவை ஏற்படுத்தும். மஞ்சள்காமாலை, சிறுநீரக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு, வலிப்பு போன்றவை ஏற்படலாம்.

    இவ்வகை நாப்தலின் உருண்டைகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இவ்வகையான உருண்டைகளின் ஆபத்துகளை எடுத்துரைக்க வேண்டும். தவறுதலாக  உட்கொள்ளும் நேரத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    2. கற்பூரம்

    இது பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் உபயோகபடுத்தப்படும் பொருளாகும். கற்பூரத்தை தவறுதலாக விழுங்குவதால் வாய் மற்றும் நெஞ்சு எரிச்சல், வாந்தி, கண்பார்வை மங்குதல், இடைவிடாத வலிப்பு போன்றவை ஏற்படலாம். கற்பூரத்தின் அளவு அதிகமாக இருந்தால் நரம்பு மண்டலம், நுரையீரல், கல்லீரல் பாதிக்கபட்டு உயிருக்கு பாதிப்பு ஏற்படலாம். குழந்தைகள் கற்பூரத்தை விழுங்கினால் வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    3. நகங்களில் அடிக்கும் வண்ணங்களினால் வரும் ஆபத்துகள்

    இது பெரும்பாலும் அத்தகைய வண்ணங்களை சுவாசிப்பதாலோ அல்லது விழுங்குவதாலோ ஏற்படுகிறது. அவ்வண்ணங்களில் டொலின் , அசிடேட் போன்ற நச்சுப் பொருட்கள் உள்ளன.

    இவை பல்வேறு கண்கவரும் வண்ணங்களில் வருவதால் குழந்தைகள் அவற்றால் ஈர்க்கப்பட்டு அறியாமல் விழுங்கி விடுகிறார்கள்.

    குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, கண் எரிச்சல், மூச்சு விட சிரமப்படுதல், நெஞ்சுவலி, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு, அதிகமாக சிறுநீர் கழித்தல், வலிப்பு, மயக்கம், தள்ளாட்டம், கோமா.

    சிகிச்சை முறை

    சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன் எப்பொழுது சாப்பிட்டது, எவ்வளவு அளவு சாப்பிட்டது, அவற்றில் உள்ள நச்சுப்பொருட்கள் என்ன? போன்றவற்றை அறிய வேண்டும். மூச்சு விடுதலை சீர்ப்படுத்த வேண்டும்.  உணவுக் குழாய் மற்றும் மூச்சுக்குழாயில் ஏதேனும் காயங்கள் உள்ளதா என ஸ்கோபி மூலம் காண வேண்டும். இருதயத்துடிப்பை சீராக்க வேண்டும். வயிற்றை கழுவ வேண்டும். வயிற்று எரிச்சலுக்கு மருந்து தரவேண்டும்.

    தடுக்கும் முறைகள்

    1.சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் இதுபோன்ற வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தாமல் இருக்கலாம்.

    2.இத்தகைய வண்ணப்பூச்சுகள் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

    3.இவற்றையும் மீறி குழந்தை இத்தகைய வண்ணப்பூச்சுகளை விழுங்கி விட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

    4. வேப்பெண்ணெயால் வரும் ஆபத்துகள்

    நம் நாட்டில் வேப்பெண்ணெய் பல இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.

    இதற்கு மருத்துவ குணங்கள் இருப்பதால் நாட்டு மருந்துகளில் உபயோகப்படுத்தப்படுகிறது, பூச்சிகொல்லியாகவும், கிருமிநாசினியாகவும் உபயோகப்படுகிறது.

    வேப்பெண்ணெய் ஆபத்துகள் சளி உள்ள குழந்தைகளுக்கு மூக்கில் இடுவதாலும் அல்லது குழந்தைகள் அறியாமல் எடுத்து குடிப்பதாலும் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்

    மூச்சுத்திணறல், அதிவேகமான இருதயத்துடிப்பு, அதிக அளவு உமிழ்நீர் சுரத்தல், சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, நிற்காத வலிப்பு, ஈரல் வீக்கம், சிறுநீரக பாதிப்பு, தன்னையறியாமல் சிறுநீர் கழித்தல்.

    சிகிச்சை முறை

    •       வேப்பெண்ணெய்க்கு என்று தனியாக தடுப்பு மருந்துகள் இல்லை.
    •     மூச்சுத்திணறல் உள்ள குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம்.
    •       வாந்தி, வயிற்றுப்போக்குக்கு மருந்து
    •       வலிப்பு மருந்து

    5. மண்ணெண்ணெய்

    மண்ணெண்ணெயை குளிர்பான பாட்டிலில் வைத்தால் அவற்றை குழந்தைகள் தண்ணீர் என்று நினைத்து குடித்து விடுவார்கள். இதனால் குடல் வெந்து போகலாம் அல்லது குடித்த மண்ணெண்ணை புரை ஏறி நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்.

    6. நடை வண்டி

    குழந்தைகளுக்கு நடை வண்டியின் மூலம் நடை பயிற்றுவிக்கக்கூடாது. ஏனெனில் குழந்தைகள் சுவற்றிலோ அல்லது வேறு பொருட்களிலோ மோதிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். மேலும் கால்களின் தசைகள் வலுப்பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால், தன்னாலே நடக்கும் திறன் ஏற்பட தாமதம் ஆகலாம்.

    7. சூடான பொருட்கள்

    உணவு, திரவப்பொருட்கள் மற்றும் வெந்நீர் குழந்தையின் மேல் விழுதல் அல்லது கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் போது குழந்தைகள் தானே எடுத்து மேலே போட்டு கொள்ளும் ஆபத்துகள் அதிகம். எனவே இவ்வகையான சூடான பொருட்களை குழந்தைகளின் எட்டும் தூரத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    8. மின் சாதனங்கள்

    மேசை மீது வைக்கும் சுற்றும் மின் விசிறியின் உள்ளே கைகளை விடும் ஆபத்து உண்டு. எனவே குழந்தைகளை மின்சார பொருட்கள் உள்ள  இடத்தில் விளையாட அனுமதிக்க கூடாது.

    மின்சாரத்தால் இயங்கும் விளையாட்டு பொருட்களால் ஆபத்துகள் ஏற்படலாம்.

    9. புரையேறுதல்

    ஒரு வயது முதல் ஐந்து அல்லது ஆறு வயது குழந்தைகள் விளையாடும் போதும் கைகளில் கிடைக்கும் பொருட்களை வாயில் போட்டுக் கொள்வார்கள். இவை மூச்சுக்குழாயில் சென்று குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். சில சமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். பெரும்பாலும் சில்லறைக் காசுகள், பட்டாணி, கடலை, சட்டை பொத்தான் போன்றவற்றால் ஆபத்து ஏற்படலாம். இவ்வகையான பொருட்களை குழந்தைகள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் வைக்க கூடாது.

    10. மருந்துகள்

    குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் மருந்துகள் மற்றும் மாத்திரைகளை வைக்க கூடாது. ஏனெனில் பல வண்ணங்களில் மாத்திரைகள் வருவதால் குழந்தைகள் எளிதில் கவரப்பட்டு அதை விழுங்கி விடும் ஆபத்துகள் அதிகம்.

    11. தண்ணீர்

    குழந்தைகளை நீர் நிறைந்த வாளிக்கு அருகிலோ அல்லது  நீர்த்தொட்டிக்கு அருகிலோ தனியாக விடக்கூடாது. குழந்தைகள் தவழ்ந்தோ, நடந்தோ அந்நீரில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    அலமாரிகள் திறந்த அறையின் கதவுகளை குழந்தைகள் உள்ளே சென்று விளையாட்டாக கதவுகளை மூடிக்கொள்வதின் மூலம் ஆபத்து ஏற்படலாம்.

    12. சாணி மருந்து உட்கொள்ளுதல்

    சாணி மருந்து என்பது வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு மற்றும் சமயச்சடங்குகளில் உபயோகப்படுத்தப்படும் பொருளாகும். இது தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை உட்கொள்ளுதல் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக முடியும். இதில் இரண்டு வகைகள் உள்ளன.

    1.பச்சை பவுடர்: இதில் மாலசைட் கிரீன் உள்ளது.

    2.மஞ்சள் பவுடர்: இதில் ஆரமின் ஓ  உள்ளது.

    பச்சை வகை மருந்தில் உள்ள காப்பர் அதீத தீங்கு விளைவிக்கக் கூடியது.

    அறிகுறிகள்

    1.வயிற்றுவலி

    2.எச்சில் அதிகம் வருதல்

    3.அதிக தாகம்

    4.குமட்டுதல், வாந்தி

    5.வயிற்றுப்போக்கு, இரத்தம் கலந்து போகுதல்

    6.சிறுநீரக பாதிப்பு

    7.மஞ்சள் காமாலை

    8.வலிப்பு மற்றும் மூளை பாதிப்பு

    சிகிச்சை முறை

                1% பெரோசயனைட் என்னும் மருந்து கொண்டு வயிற்றினைக் கழுவுதல் பயனளிக்கும். தீவிரமான பாதிப்புள்ள குழந்தைகளுக்கு உஈபஅ மற்றும் பெனிசிலமைன் மருந்துகள் கொடுக்கலாம். இதனைத் தவிர அறிகுறிகளுக்குத் தகுந்தவாறு வாந்தி, வயிற்றுவலி, வலிப்பு, சிறுநீர் மருந்துகள் கொடுக்க வேண்டி இருக்கும். உடலினுள் விஷத்தன்மை நீங்கும் வரை மருத்துவமனையில் கண்காணிப்புடன் சிகிச்சை மேற்கொள்ளுதல் மிக அவசியம்.

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில் – 10

    முன்னுரிமை கொடுப்போம்

    “வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும்” என்ற நம்பிக்கையோடு அனைவரும் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருசிலர் மட்டுமே மிகச்சிறந்த வெற்றியைப் பெறமுடிகிறது. வெற்றியைப் பெறுவதற்கு முயற்சி செய்யும் சிலர், வெற்றியின் சிகரத்தைத் தொடமுடியாமல் ஏமாற்றத்தை நெஞ்சில் நிரப்பி வருந்துகிறார்கள்.

    இதற்குக் காரணம் என்ன?

    “வெற்றி பெறவேண்டும்” என முயற்சி செய்யும்போது அந்த முயற்சிக்கு பக்க பலமாக இருக்கின்ற மனிதர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அந்த வெற்றியைப் பெறுவதற்கு செய்யவேண்டிய அவசியமான செயல்களையும் அவசரமான செயல்களையும் பட்டியலிட்டு முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். எந்தெந்த செயல்கள் எல்லாம் மிக முக்கியமான செயல்கள் என்று அடையாளம் கண்டபின்பு அந்தச் செயல்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு திட்டமிட வேண்டும்.

    திட்டமிடுவதிலும், உழைப்பதிலும்தான் ஒருவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

    “சரியான உழைப்பு இல்லாமல் எந்த வெற்றியும் கிடைப்பதில்லை” என்பது ஜேம்ஸ் ஆலன் என்னும் அறிஞரின் கருத்தாகும்.

    இதைப்போலவே, ஜவஹர்லால் நேரு “துணிச்சலாக உழைப்பவர்களுக்கு மட்டும்தான் வெற்றி அருகில் வந்து அமருகிறது. பயப்படுகிறவர்களை அது திரும்பிக்கூட பார்ப்பதில்லை” என்று குறிப்பிடுகிறார்.

    முறைப்படுத்தப்பட்ட உழைப்பும், சிறந்த திட்டமிடலும்தான் ஒருவரின் வெற்றியை அலங்கரிக்கின்றது என்பதை இதன்மூலம் உணர்ந்துகொள்ளலாம்.

    திட்டமிடும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பதைப்பற்றிய ஒரு தெளிவான முடிவை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

    அந்தக் கல்லூரியில் பேராசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ‘தத்துவவியல்’ பற்றிய பாடம் அது. ஒரு பெரிய கண்ணாடிக் குவளையைக் கொண்டு வரச்சொல்லி மேஜைமீது வைத்தார்.

    அந்தக் கண்ணாடிக் குவளையில் சின்னஞ்சிறு கூழாங்கற்களைப் போட்டார். கண்ணாடிக் குவளை சிறு கூழாங்கற்களால் நிரப்பப்பட்டதும் மாணவர்களிடம் கேட்டார்.

    “கண்ணாடிக் குவளை முழுவதும் நிரம்பிவிட்டதல்லவா?” பேராசிரியரின் கேள்விக்கு “ஆமாம்” என அனைவரும் பதில் தந்தார்கள்.

    மீண்டும் சில சின்னஞ்சிறு கூழாங்கற்களை அந்தக் கண்ணாடி குவளைக்குள் போட்டார். இப்போது ஓரிரு கூழாங் கற்களைத்தவிர மற்றவைகள் வெளியே விழுந்தன. கண்ணாடிக் குவளையை எடுத்து சற்று குலுக்கினார்.

    “கண்ணாடிக் குவளை நிரம்பிவிட்டதல்லவா?” என்று கேட்டார். மாணவ மாணவிகள் அனைவரும் “ஆமாம்” என ஒரே குரலில் பதில் தந்தார்கள்.

    பேராசிரியர் இப்போது ஒரு பெட்டியிலிருந்து மணலை எடுத்து அந்தக் கண்ணாடிக் குவளைக்குள் தூவினார். கூழாங் கற்களால் நிரப்பப்படாத இடங்களை அந்த மண் துகள்கள் நிரப்பியது. “இப்போது கண்ணாடிக் குவளை நிரம்பிவிட்டதல்லவா?” என மீண்டும் கேட்டார். மாணவ – மாணவிகள் “ஆமாம்” என பதில் தந்தார்கள்.

    மீண்டும் பேராசிரியர் பேசத் தொடங்கினார்.

    “இந்தக் கண்ணாடிக் குவளையைப் போன்றது தான் நமது வாழ்க்கை. இந்தக் கண்ணாடிக் குவளையில் முதலில் நான் சின்னஞ்சிறு கூழாங்கற்களைப்போட்டு நிரப்பினேன். இந்தக் கூழாங்கற்களைப் போலத்தான் உங்கள் குடும்பம், உங்கள் வாழ்க்கைத்துணை, உங்கள் உடல்நலம், உங்கள் குழந்தைகள் போன்றவைகள் ஆகும். இந்தக் கண்ணாடிக் குவளையைக் கூழாங்கற்களால் நிரப்பிய பின்புதான் மணலைத் தூவினேன். இந்த மணல் துகள்கள்தான் உங்கள் வேலை, உங்கள் வீடு, உங்கள் மோட்டார் சைக்கிள், உங்கள் கார் போன்றவைகள் ஆகும். மணல்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கும். அதேபோல் வேலை, வீடு, மோட்டார் சைக்கிள், கார் போன்றவைகளை நீங்கள் எல்லா இடத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

     “இந்தக் கண்ணாடிக் குவளையில் முதலில் மணலைப்போட்டு நிரப்பியிருந்தால் பின்னர் கூழாங்கற்களைக் கண்ணாடிக் குவளையினுள் போடமுடியாது. இதேபோன்றது தான் உங்கள் வாழ்க்கை. நீங்கள் உங்கள் நேரம் மற்றும் சக்தி ஆகியவற்றை சின்னஞ்சிறு விஷயங்களில் அதிகமாக செலவிட்டால் தேவையான பெரிய செயல்களுக்கு நேரத்தையும், சக்தியையும் செலவிடுவதற்கு வாய்ப்பே இருக்காது. எனவே உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றும் நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். உங்கள் செயல்களில் எது முக்கியமானது? என்பதைத் தெரிந்துகொண்டு அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்க பழகிக்கொள்ளுங்கள். கண்ணாடிக் குவளையில் கூழாங்கற்களை நிரப்பியதுபோலவே முதலில் முக்கியமான செயல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் பழகுங்கள். அதன்பின்னர் மற்றசெயல்களில் கவனம் செலுத்துவது நல்லது” என்றார் பேராசிரியர்.

    இந்த சம்பவம் ஒரு முக்கிய கருத்தை நமக்கு உணர்த்துகிறது. எந்தச் செயலுக்கு எப்போது, எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பதை புரிந்துகொண்டு உழைக்கத் தொடங்கியவர்கள் வெற்றியை எளிதில் பெறுகிறார்கள்.

    வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளமான குடும்பம், உடல்நலம், நண்பர்கள், உறவினர்கள் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இளம்வயதிலேயே பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதன்பின்னர்தான் நல்ல வேலை, புது வீடு, மோட்டார் சைக்கிள், கார் போன்ற தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    இதைப்போலவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் படிப்பு சம்பந்தப்பட்ட செயல்களுக்கு மட்டுமே “முன்னுரிமை”  கொடுத்து செயல்பட வேண்டும். ஏனென்றால் இளம்பருவத்தில் கற்றுக்கொண்ட கல்விதான் ஒருவருக்கு பின்னாளில் வாழ்க்கை முழுவதும் துணையாய் அமைகிறது.

    கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் காலத்தில் நல்ல புத்தகங்களை வாசிப்பது, அன்றாடம் பாடங்களை தொடர்ந்து படிப்பது, கல்வி சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பது, தேர்வுக்கு முறையாக தயார் செய்வது, கவனம் சிதறாமல் நாள்தோறும் பாடங்களை திரும்பத்திரும்ப படித்து நினைவில் நிறுத்துவது, படித்ததை எழுதிப் பார்ப்பது, எழுதிய பாடங்களை சரிபார்த்து மீண்டும் எழுதி பயிற்சி மேற்கொள்வது போன்றவைகளெல்லாம் படிப்பு சம்பந்தப்பட்ட முக்கிய செயல்களாக அமைகிறது.

    இவைதவிர ஓய்வுநேரங்களில் நண்பர்களோடு படிப்பு சம்பந்தமாக கலந்துரையாடுவது, மனதுக்கு இனிமை சேர்க்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவது, நாள்தோறும் செய்தித்தாள்கள் படிப்பது, நூலங்களுக்குச் செல்வது போன்றவைகளையும் முக்கிய செயல்களாக வைத்துக்கொண்டால் பயிலும் காலத்திலேயே வெற்றிகள் பெறுவது எளிதாகிவிடும்.

    எந்தச் செயலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? என்பதை முறையாக தெரிந்துகொண்டவர்கள் வாழ்க்கையை ரசிக்கிறார்கள். சிறந்த வெற்றிகளைப் பெற்று மகிழ்வோடு வாழ்கிறார்கள்.

    “ஒவ்வொரு மனிதரும் தன்னை வெற்றிக்கொள்வதுதான் மிகச்சிறந்த வெற்றியாகும். ஓவ்வொரு நிமிடமும் நல்ல நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்தால் வெற்றி தானாக கிட்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் உருவாகும்” என்ற மாவீரன் நெப்போலியன் வார்த்தைகளை நம் நெஞ்சில் நிறுத்திக்கொள்வது சிறந்ததாகும்.

    இந்த இதழை மேலும்

    பேச்சுப் பட்டறை பேச்சுக் கலை

    மக்களாட்சி, தேசியம், பொதுவுடைமை, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், விழிப்புணர்வு போன்ற பண்புகள் ஒரு நாட்டில் வளர்வதற்கும், மலர்வதற்கும் பெருந்துணையாக இருப்பது ஒரு தனிமனிதனின் தனித்திறமை வாய்ந்த பேச்சுக்கலையாகும்.

    பிறருக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், நாட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், அப்பாவி மக்களின் அறியாமை இருளை அகற்றவும், மனிதனை மேன்மை அடையச் செய்யவும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், தன்வசப்படுத்தவும், ஒரு தேசத்தின் குடியரசு நிலைக்கவும், இறையாண்மை பாதுகாக்கப்படவும்  தேவையான உரத்தையும், உறுதியையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் நமக்குக் கொடுப்பது மேடைப் பேச்சாகும்.

    பேச்சுக் கலைக்கென்று இலக்கணமும், பண்புகளும், வகைகளும், வளர்ச்சியும் பல உள்ளன.

    ஒரு சிறிய அறிவிப்பு, மேடைப் பேச்சு, இலக்கியப் பேச்சு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சிறப்புரை, பரப்புரை, பாராட்டுரை, வாழ்த்துரை, வரவேற்புரை, தொகுப்புரை, பேருரை, தலைமையுரை, எழுச்சியுரை,  நிறைவுரை, ஏற்புரை, நன்றியுரை, கருத்தரங்க விவாதம், சமய சொற்பொழிவு, நகைச்சுவை மேடை, தொலைக்காட்சி விவாத மேடை, வானொலிப் பேச்சு, ஆன்மீகச் சொற்பொழிவு, இன்னிசைப் பட்டிமன்றம், பாட்டு மன்றம், அரசியல் பேச்சு, கண்டன உரை, புரட்சிகரமான போராட்ட முழக்கம், எழுச்சிகரமான ஆர்ப்பாட்ட முழக்கம், உண்ணாவிரத உரை, புத்தகத்திருவிழா உரை, நேர்காணல் பேச்சு, தொலைக்காட்சிப் பேச்சு, திருமணநாள் மேடைப் பேச்சு எனப் பலவகைகளையும், பல வடிவங்களையும் கொண்டுள்ள அற்புதமான கலைதான் பேச்சுக்கலை என்பதாகும்.

    அனைவருமே “சிறந்த பேச்சாளர்” ஆக வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் அது நம்மவர்கள் விரும்பியபடி அப்படி நடந்துவிடுவது இல்லை. பலருக்கும் அது ஒரு கனவாகவே உள்ளது.

    தன்னிடம் உள்ள அறிவு, ஆற்றல்களால் இயற்கையாகவே சிறந்த பேச்சாளர்களாகத் திகழ்பவர்களும் உண்டு.

    பல்வேறு வகையான பயிற்சிகள் செய்தபின் சிறந்த மேடைப் பேச்சாளராக இந்த உலகை வலம் வருபவர்களும் இப்பூமியில் உண்டு.

    இருந்தபோதிலும் உலகில் பல கோடிபேர் மேடைப் பேச்சைக் கேட்பவர்களாகத்தான் இருக்கிறோம். பல நூறு பேரால் மட்டுமே சிறந்த பேச்சாளராக சிறந்து விளங்க முடிகிறது உலகில்.

    மேடைப்பேச்சை ரசித்து, ருசித்துக் கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். ஒருவர் நாவன்மையுடைய சிறந்த பேச்சாளராகப் பல தகுதிகள் உள்ளன.

    தொடக்கம், உடற்பகுதி, முடிவு போன்றவை இக்கலையின் அடிப்படை அமைப்பு முறைகளாகும். சொல் தடுமாறாமல் பேசிப் பழகும் பயிற்சி, பார்வையாளர்களை எதிர்கொள்ளும் ஞானச்செருக்கு, பல துறை அறிவு, தினமும் தொடர்ந்து படித்தல், நாட்டு நடப்பை நன்கு அறிந்து வைத்தல், நடைமுறைச் செய்திகளை நாள்தோறும் சேகரித்தல், சேகரித்தவைகளை முறைப்படி குறித்து வைத்தல், நாள்தோறும் நடக்கும் நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள பல்வேறான நாளிதழ்கள், தகவல் மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்த்தல், வார இதழ்களையும், வாழ்க்கைப் பற்றிய புத்தகங்களையும் தொடர்ந்து படித்தல், தன் தேச வரலாற்றையும், உலக வரலாற்றையும் நன்கு படித்தறியும் தனியாத ஆர்வம், மற்ற பேச்சாளர்களின் பேச்சை நன்கு கேட்பது ஆகியவை ஒருவர் சிறந்த பேச்சாளராவதற்கான தகுதிகள் ஆகும். இக்கûலைக்கென்று தகுதிகள் உள்ளதைப் போல் பல பண்புகளும் உண்டு.

    நாவன்மை, கருத்துத் தெளிவு, சுருக்கம், தன் கருத்தில் என்றும் உறுதி, நூல் வழிக் கற்றது மட்டுமின்றித் தன் சுயசிந்தனைக் கருத்துக்களை முன் வைத்தல், கேட்பவர்களுக்குப் புரியும் எளிய மொழிநடை, நகைச்சுவை உணர்வு, அவையறிந்து பேசுதல், நேரமறிந்து பேசுதல், உண்மையை மட்டுமே பேசுதல், ஜாதி, மத, மொழி, இன, தூண்டல்களும் வேறுபாடுகளும் இன்றிப் பேசுதல், பிறரது கருத்துக்களை ஏற்கும் மனப்பான்மை, பிறரது நேரத்தை எடுத்துக்கொள்ளாமல், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பேசி முடித்தல் போன்றவை பேச்சாளனின் தனிச்சிறந்த பண்புகளாகும்.

    மனிதன் பேசத்தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை பேச்சுக்கலை தனிக்கலையாகவே வளர்ந்து கொண்டே வருகின்றது.

    “பேச்சுக்கலை” என்பது ஆற்றல் வாய்ந்த கலைகளுள் ஒன்றாகும்.

    மன்னர் ஆட்சியை, ஏகாதிபத்திய ஆட்சியை, ஆங்கிலேய ஆட்சியை, கொடுங்கோல் ஆட்சியை, முடியாட்சியை வீழ்த்தி மக்களாட்சியை மலரச்செய்த பெருமைக்குரிய கலை “பேச்சுக்கலை” ஆகும்.

    நாடாளுமன்ற, சட்டமன்ற அரசியல்வாதிகளின் ஊழல்களையும், அநீதிகளையும், நிர்வாகத் திறமை இன்மையையும் வெளிப்படுத்த ஆளுங்கட்சியை எதிர்கட்சியாகவும், எதிர்கட்சியை ஆளுங்கட்சியாகவும் மாற்றி அகற்றி அமரச் செய்யும் பெருமைமிகு கலைப் பேச்சுக்கலையாகும். ஜனநாயகத்தின் மிகச்சிறந்த மக்கள் பாதுகாப்புப் பெட்டகமாக விளங்குவது பேச்சுக்கலையே ஆகும்.

    இலக்கியம், அரசியல், சமயம், சமுதாயம், பொருளாதாரம், அறிவியல், வாழ்வியல், ஆன்மிகம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மேடைப்பேச்சும், பேச்சுக்கலையும் இன்று மிகவும் செல்வாக்குப் பெற்றுவிட்டன.

    மக்களின் வாழ்க்கை முறைகளையும், நமது நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாத்து ஒழுங்குமுறைப் படுத்தப்பட்ட சமுதாயத்தை வடிவமைத்துத் தரும் பேராற்றல் பெற்றது பேச்சுக்கலையே ஆகும்.

    அதுமட்டுமல்லாமல், நாவன்மையே மூலதனாகக் கொண்டு நாட்டையே ஆட்டிவைக்கும் கலையும் இக்கலையாகும். தேசியம், மக்களாட்சி, பொதுவுடைமை என்னும் மூன்று கொள்கைகளும் உலக வரலாற்றில் செல்வாக்குப் பெற்று வளர்ந்த காலகட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களின் வெற்றிக்கு முழு முதற்காரணமாக அமைந்தது இக்கலையே.

    “ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்து ஒன்றாம் புலவர்

    வார்த்தை பதினாயிரத்து ஒருவர்”

    என்பது ஒளவையாரின் வாக்காகும்.

    கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கும் உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூறுபேரில் ஒருவருக்கே வாய்க்கும்.

    ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராகத் திகழ்வர். ஆனால் பேச்சாளராக இருப்பவர்களில் பதினாயிரம் பேரில் ஒருவரே என்று ஒளவையார் வலியுறுத்தியுள்ளார்.

    பேச்சு என்பதும் சொல் என்பதும் கருத்தை விளக்கும் கருவிகள் ஆகும்.

    மனிதனைப் பேசும் விலங்கு என்று குறிப்பிடுவர். பேச்சுத்திறன் தான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.

    இன்றைய யுகத்தை “அணுயுகம்”, “விண்வெளி யுகம்”, “கணினி யுகம்”, “தகவல் தொடர்புப் புரட்சி யுகம்”, “அறிவியல் யுகம்” என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் இன்றைய யுகத்தைச் “சொற்பொழிவு யுகம்’ எனக் குறிப்பிடுவதே மிகவும் சரியானதும், பொருத்தமுடையதுமாகும்.

    இந்த மனித சமுதாயம் பெற்ற மகத்தான சாதனம் “பேச்சு” ஆகும். கருத்தும், தெளிவும் இக்கலைக்கு மிகவும் இன்றியமையாதனவாகும்.

    கருத்து சுருங்கும்போது தான் பேச்சு சுவைக்கும், இனிக்கும்.

    கருத்தில் தெளிவில்லாத போது தான் சொல்லில் வெற்று எதுகை மோனையும், அலங்காரமும் தோன்றும்.

    மேடையில் பேசும் பேச்சாளர்களுக்குக் கருத்தே முதலில் நினைவுக்கு வர வேண்டும்.

    அதற்குப் பின்பு தான் சொன்ன அக்கருத்தினை விளக்கும் சொல்லைப் பற்றிய நினைப்பு வர வேண்டும். இதுதான் மேடைப் பேச்சுக்கலையின் அடிப்படை இலக்கணமாகும்.

    எனவே தன் கருத்தில் தெளிவும், சொல்லில் சிக்கனமும், மேடைப் பேச்சில் இன்றியமையா இலக்கணமாகும்.

    பேச்சின் அடிப்படை தெளிவாகும். ஆகையால் சொல் தெளிவும், கருத்துத் தெளிவும் மிக முக்கியமானவையாகும். எளிமையான சொற்களைக் கொண்டதாகவும், கருத்தாழ முடையதாகவும், தெளிவுடையதாகவும், கருத்து விளக்கமுடையதாகவும், பேசும் பேச்சு வெற்றியடையவும், பல கைதட்டல்களைக் கொடுக்கும்.

    மற்றவர்கள் கேட்க, நாம் பேசுவது என்பது ஒரு கலை.

    இக்கலை பேராற்றல் வாய்ந்தது

    முத்தொழில் புரியும் வல்லமையும் வாய்ந்தது

    பேச்சைக் கலையாக்குவது அறிவுடைமை

    மேடைப்பேச்சு நாட்டை வளப்படுத்தும்

    வாக்காளரைப் பண்படுத்தும்

    என்று திரு.வி.க. சுட்டிக்காட்டியுள்ளார்.

    “நா அசைத்தால் நாடசையும்” எனும் தொடர் பேச்சுக்கலையின் இலக்கணத்தையும், தொடர் பேச்சுக்கலையின் இலக்கணத்தையும், சிறப்பையும் நன்றாக விளக்குகின்றது.

    மேடையில் பேச்சாளர்கள் கட்டளையிட்டால் அக்கட்டளையை மார்தட்டி, தோள்கொட்டி எதுவும் செய்யத் தயாராக இருக்கும் நாட்டு மக்களையே இத்தொடர் காட்டுகின்றது.

    இதற்குப் பேச்சாளர் கொள்கை உறுதி படைத்தவராகவும், சலியாத உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தளராத உள்ளம், புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மயங்காதவராகவும், நேர்மையானவராகவும், தியாக மனப்பான்மையும், அர்ப்பணிப்பு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். மேடைப்பேச்சு மக்களிடையே உற்சாகத்தையும், ஊக்கத்தையும், புத்துணர்வையும் ஊட்டுகின்றது. தனிமனித சுதந்திர உணர்வை உண்டாக்குகின்றது.

    மேடைப் பேச்சுக்கலை வளர வளர ஒரு நாட்டில் மக்களாட்சியும், ஜனநாயகமும் வாழ்வு பெறும். ஆள்பவர்கள், ஆளப்பெறுபவர்கள் ஆகிய இருசாரர்களுக்கே மேடைப்பேச்சு மூலதனமாக அமைந்திருக்கிறது.

    இந்த இதழை மேலும்