காட்சிப் பிழை
காட்சி நம்பிக்கையில் நடக்கின்றது
கடந்த 1995ல் அன்றைக்கு நியூமராலஜி பரீட்சை என்று நினைக்கின்றேன், வேக வேகமாகப் படித்து நிறைய விஷயங்களை மனதிற்குள் நிறைத்து வைத்திருக்கலாம் என்று மாரியப்பன் கடும் முயற்சி மேற்கொண்டு இருந்தான். இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று, தேர்வு எழுத வேண்டிய நேரம் நெருங்கியதும் அறைக்குள் கடவுளை கும்பிட தொடங்கினான். கண்கள் நெக்குருக வேண்டிக்கொள்கையில் அவனுக்கு ஆசுவாச உணர்வு கிடைக்கும்போல் உள்ளது. தேர்வு அவனுக்கு கடவுளின் பரிசோதனையாக காட்சிப் பிழையாகித் தெரிகின்றது போலும். நம்பிக்கை ஒரு நல்ல விஷயமாக வளர்ந்து வந்து மனதை நிறைக்கின்றது. ஒரு குறிப்பிட்ட சட்டை மட்டுமே போட்டுக்கொண்டு தேர்வெழுத செல்லும் நண்பர்களுண்டு, எனக்கு. இந்த வரிசையில் பேனாதான் தேர்வு வெற்றிக்கு காரணகர்த்தா என நம்புவோர் உண்டு.
புதுமையும் அறிவார்ந்த சொத்துரிமை சட்டங்களும்!
புதுமை என்பது புதுக்கவிதையில் இருப்பது மட்டுமல்ல ஒவ்வொரு கண்டுபிடிப்புக்களுக்கும் உரிமை கொண்டாடுபவர்களிடத்தும் இருக்கவேண்டும் என்பது இந்திய அறிவார்ந்த சொத்துரிமை (காப்புரிமை) சட்டம், 1970 சொல்வது. சமீப காலத்தில் கண்ணுக்குப் புலப்படாத சொத்துக்கள் என்று சொல்லப்படும் படைப்புரிமை யுத்தங்கள் மிகுந்த ஆரவாரத்துடன் அதற்குரிய நீதிமன்றங்களிலும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றன.
காட்சிப்பிழை என்பதுபோல ஒரு கண்டுபிடிப்பு மற்றொன்று போலவே இருப்பின் அது மாற்றியமைத்தல் (modification) என்கின்ற வகையில் வருமே ஒழிய, புதிய கண்டுபிடிப்பு என்று காப்புரிமை கோர இயலாது. தொடரும் காப்புரிமை சச்சரவுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் ‘எவர் கிரீனிங்’ (ever greening) என்ற ஒரு சொல்லாட்சி…. குறிப்பிடத் தகுந்தது. ஒரு ‘பேட்டன்ட்’ அல்லது காப்புரிமை பெற்றுவிட்டால் அது குறிப்பிட்ட (ஏழு) வருடங்களுக்குப் பிறகு பொது சொத்து ஆகிவிடுகின்றது. அதை தடுப்பதற்கான எதிர்மறை டெக்னாலஜிதான் எவர்கிரீனிங் என்பது. சிறுசிறு மாற்றங்களைச் செய்வதன்மூலம் தமது படைப்பு புதுமையானது என்று தொடர்ச்சியாக காப்புரிமையை பழைய கண்டுபிடிப்பு ஒன்றுக்கு செய்துகொண்டே இருந்தால், அதனை எவர்கிரீனிங் என்று சொல்கின்றார்கள். இது ஒருமுறை வாங்கிய தேனில் நீர் கலந்து கலந்து நீர்த்துப் போக செய்வது போல… இது காப்புரிமை உலகின் காட்சிப் பிழை என்று கொள்ளலாம். சமீபகால, நோவார்டிஸ் கம்பெனியாரின் வழக்குத் தோல்வி பேட்டன்ட் உலகில் சின்னச்சின்ன மாற்றங்களுக்குக் காப்புரிமை கொண்டாடும் செயல்களை ஊக்குவிக்காமல் பின்புறமாக தள்ளிச்செல்கின்றது.
தற்காலிக வெற்றி மற்றும் தரமான வெற்றி:
“நான் லீனியர் ஸ்டோரி டெல்லிங்” (Non linear story telling) டெக்னாலஜியின் குறிப்பிடத்தகுந்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தனது திரைப்படங்களில், காட்சிப் பிழையை நிறையப் புகுத்தியிருப்பார். அவரது பேட்மேன் பிகின்ஸ் என்கிற படத்திலிருந்து தமிழ்ப்படங்கள் நிறைய பிறந்திருப்பதாக பேச்சு. இவர் செய்த யுக்தி என்னவெனில், காட்சிகளை முன்னும் பின்னுமாக கலந்து கொடுத்து, புரிந்துகொள்ள சற்று யோசிப்பது போல அமைத்து தெரிந்துகொள்வதில் உள்ள மகிழ்ச்சியை அனுபவிக்க வைப்பதுவே.
இதனையும் முதன்முறை பார்க்கும்பொழுது காட்சியை நாம் சரியாக பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று சந்தேகப்படுகின்ற காட்சிப் பிழையை அனுபவிக்க வைக்கின்றார்.
வாழ்விலும் சில நேரங்களில் நாம் தோல்வியுற்றுவிட்டதாக நினைக்கையில் அல்லது நினைத்துப் பார்க்கையில் காட்சிப்பிழை போல அதுவே வெற்றி என்று தெரிய வருகின்றது. பல நேரங்களில் சின்ன வெற்றிகளின் சந்தோஷத்தில், வெளிச்சத்தில் பெரிய வெற்றிகளுக்கான கண் கூசுதல் ஏற்பட்டு விடுகின்றது. மேலும், முயற்சி செய்யாமலே இருந்துவிடுகின்றோம். சென்னை கால்பந்து கழகத்தின் இரண்டாவது டிவிஷன் லீக் போட்டிகளில் நேரு பார்க்கில் வெள்ளை ஜெர்ஸி அணிந்து விளையாடுகையில் கோல் கிராஸிற்கு (Goal Cross) கால் வைக்கவேண்டும். அதை சற்று முன்பாகவோ? அல்லது பின்பாகவோ? வைத்தாலும் கோலாக பந்து மாறுவதில்லை.
அதைப்போல மிகச் சரியான நேரத்தில்தான் செயல்கள் நடைபெறுகின்றன. காட்சிகள் அவனால் அரங்கேற்றப்படுகின்றன. அவற்றை புரிந்துகொள்ள முயற்சிக்கின்ற சம்பந்தப்பட்டவர்கள் எப்படி எடுத்துக்கொள்கின்றார்கள் என்பதில் சூட்சுமம் அடங்கியிருக்கின்றது. இதையே இரமண மகரிஷி காண்பானைப் பொருத்தே காட்சி அமைகின்றது என்று சொல்லியிருக்கின்றார். காண்பானை ‘திருக்’ என்றும், காணப்படும் காட்சியை ‘திருச்சியம்’ என்றும் அவரது கருத்துக்களை சொல்லும் வசனாமிர்தம் என்னும் புத்தகம் சொல்கின்றது.
மாக்கியவில்லியின் ‘இளவரசன்’ படித்தேன். அதில், “பார்க்கின்றவரெல்லாம், தான் என்ன பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றனரோ அதையே காண்கின்றனர். எது உண்மையில் இருக்கின்றதோ அதை காண்பதில்லை” என்று எழுதியிருக்கின்றார். மாக்கியவில்லி 15ஆம் நூற்றாண்டில் இத்தாலிப் பக்கம் அனுபவித்து சொன்னதும், இரமண மகரிஷி 20ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் அருளிச் சென்றதும் ஆச்சரியமாக ஒன்றுபோலிருக்க கண்டதும் தோன்றியது காட்சிப் பிழைகள் சாதாரணமானவை என்பதே.
மாடர்ன் ஆர்ட்கள் வண்ணக்கலவையாக தீற்றல்களாக, காணப்படலாம், அவையே கலையாற்றல் மிகுந்த கண்களுக்கு காட்சிப் பிழையற்ற கவர்ச்சியாக தெரியலாம். கொங்கன் இரயில்வே வழியாக சமீபத்தில் பயணித்தோம். SBC என்பது ஒரு நகரின் இரயில் நிலைய சுருக்கம், MAS என்றால் சென்னை, மெட்ராஸ் என்பதன் சுருக்கம் ஆகலாம்…. ஆனால் SBC என்றால் பெங்களூர் சென்ட்ரலாம்…. இந்தக் காட்சிப்பிழையை இந்து யங் வோல்ட்டு (Young World)ல் படித்தேன்.
பட்கல் பயணம் :-
பரமானந்தம் ஆசிரியர் ஒரு சுவாரஸ்யமான மனிதர். “பசங்க ரொம்ப முன்னேறிட்டாங்க சார்…. ரொம்ப பக்குவமா பேச வைக்கிறாங்க, டெய்லி, எச்சரிக்கையாவே இருக்க வேண்டி இருக்கு சார், உலகம் மாறிடுச்சு, ஆசிரியர்களுக்கு சாதுரியம் தேவைப்படுது சார்” என்று நிறைய எடுத்துக்காட்டுக்கள் மூலம் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் மாணவர் உறவின் கற்பித்தல் நிகழ்வுகளின் காட்சிப் பிழை குறித்துப் பேசிக்கொண்டு இருந்தோம். இந்தியாவின் துபாய் எனப்படும் கோவா அருகேயிருந்த பட்கல் என்கின்ற ஊரில்.
காலகாலமாக இயற்கை காட்சி கண்கட்டு வித்தைகளைக் கழுவி சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கின்றது. இத்தகைய இயற்கைப் பரப்புகள் மனதிற்கு சுத்தமானதொரு பின்புலம் தருகின்றன. அந்தப் பின்னணியில் நம் நினைவுகளை வைத்துப் பார்ப்பது எஃக்ஸ் ரே படத்தை வெள்ளை ஒளிப்பெட்டி மீது வைத்துப் பார்ப்பது போல, பார்வைக்கு ஸ்படிகமான வரையரைகளைக் கொடுக்கின்றது. காட்சிப் பிழைகளைத் தெளிவாக்குகின்றது. மனித உறவுகளின் நிறங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றது. சாயம் போகின்ற பொழுது கூட சிரிக்கக் கற்றுக்கொடுக்கின்றது.
கன்னட நூலகம் ஒன்றில் நீலகண்ட நாயக் என்கின்ற பாசமுள்ள நூலகர் ஒருவரின் உதவியோடு ஒரு மணி நேரம் தனித்துப் பிரிக்கப்படாத புத்தகங்களுக்கிடையில் ஆங்கில புத்தகங்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டிருந்தேன். பரமானந்தம் சார், இங்கியுமா சார்…. படிக்கணும்? என்று உள்ளூர ஆச்சரியப்பட்டுக்கொண்டே…. கெமிஸ்ட்ரி புத்தகமொன்றை புரட்டிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு அடுக்காக கண்கள் மேய்கையில் எண்ணற்ற காட்சிகள் கண் சிமிட்டி மறைந்தன. ஷேக்ஸ்பியரை படமாகத் தாங்கி அட்டையில் வட்ட ஜிலேபி கன்னட எழுத்துக்களோடு இருந்த புத்தகமொன்று அவரது நாடகங்களை மனது நிறைய காட்சிப் படுத்திக்கொண்டு இருந்தது.
இன்னும் இலக்கியச் சோலைக்குள் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை பல்கலைக் கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கப் போகும் காட்சிப் பிழை கண்ணில் மின்னுகின்றது….
காட்சிகள் தொடரும்….. பிழைகளும்….
0 comments Posted in Articles