– 2013 – May | தன்னம்பிக்கை

Home » 2013 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    தன்னம்பிக்கையும், சமுதாய பார்வையும்

    ஒவ்வொருவரின் எண்ணங்களின் அடிப்படையில் தான் நம்பிக்கை அமைகிறது. நல்ல சிந்தனைகளும், நல்ல எண்ணங்களும் அமையப்பெற்றால் மட்டுமே நல்ல நம்பிக்கைகள் பிறக்கின்றன.

    Continue Reading »

    தன்னம்பிக்கை

    “ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் இல்லையென்றால் அந்த ஆற்றலுக்கே ஆற்றல் இல்லை” என்பான் மாவீரன் நெப்போலியன். ஒவ்வொரு மனிதனையும் தன்மன்பிக்கை என்ற ஆற்றல்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது.

    Continue Reading »

    தடைகளை தகர்த்து ஜெயித்து காட்டுவேன்

    நாள்காட்டியில் ஒரு தாளைக் கிழிக்கும்போது கையிருப்பு நாட்களில் ஒன்று கிழிக்கப்படுகிறது என்று உணர்ந்து ஒவ்வொரு நாளையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். வாய்ப்புகளைத் தேடிக்கண்டுபிடித்து அவற்றைக் குழந்தைகளைக் காப்பது போல் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வெற்றிபெற வேண்டும்.

    Continue Reading »

    சிலையும் நீயே! சிற்பியும் நீயே!!

    ஒரு சிறிய விதை, தனக்குள் பெரிய விருட்சத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. விதைபோல் மனத்தையும், அறிவையும், விருட்சம் போல் திறமையும் அனைவரிடத்திலும் உள்ளது.

    Continue Reading »

    எதையும் சாதிக்க உன்னால் முடியும்

    மூச்சு விடுபவன் எல்லாம் மனிதனல்ல, முயற்சி செய்பவனே மனிதன். உண்பதும், உறங்குவதும் மட்டுமல்ல வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாக மாற்ற ஏற்பட்ட போராட்டமே வாழ்க்கை.

    Continue Reading »

    வாழ்வில் வெற்றி பெற தேவை “தன்னம்பிக்கை”

    தன்னம்பிக்கை இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். ஒவ்வொருவருமே திறமையானவர்கள்தான் அவர்களுக்குள் இருக்கும் அறிவாற்றல் மதிப்புமிக்கது. அதை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே பிரகாசிக்க முடியும்.

    Continue Reading »

    வெற்றிக்கு வித்திடுங்கள்

    தோல்வி அடைந்து விட்டோம் என்ன செய்வது என மனம் தளர்ந்து குற்ற உணர்வுடன் தன்னைப்பற்றிய தாழ்வான எண்ணங்களைத் தனக்குரிய அடையாளமாக்கிக் கொள்ளாமல், என்ன செய்யாமல் இருந்து விட்டோம் என யோசித்து ஆராய்ந்து பாருங்கள்.

    Continue Reading »

    சாதனையா? வேதனையா?

    பள்ளி தேர்வுகள் முடிந்துவிட்டன. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் – 2 தேர்வுகளை எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக இளைய உள்ளங்கள் காத்திருக்கிறார்கள்.

    “என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எந்த வேலைக்குச் செல்லலாம்?” – என பல்வேறு எண்ணங்களை மனதிற்குள் நிரப்பி, அதற்கான விடைகளைக் காண்பதற்கு இளைய வயதினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    இந்த ஆண்டு (2013) தமிழ்நாட்டில் சுமார் 10.5 லட்சம் மாணவ – மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதியுள்ளார்கள். பிளஸ் – 2 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ – மாணவிகள் எழுதியுள்ளார்கள். இந்தத் தேர்வு எழுதியவர்களில், மாணவர்களைவிட, மாணவிகள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 மாணவிகள் இந்த ஆண்டு தேர்வை எழுதியுள்ளார்கள். ஆனால் 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 மாணவர்கள் மட்டுமே பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளார்கள்.

    இப்படி ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ – மாணவிகள் எழுதுகின்ற பிளஸ் 2 தேர்வில், ஏராளமான பேர் வெற்றி பெற்றாலும், ஒரு சிலருக்கு மட்டுமே மேற்படிப்பு படிக்கின்ற நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. மேற்படிப்பு படிக்க விரும்பும் சில மாணவிகளில் சிலருக்கு அவர்களது மதிப்பெண்கள் குறைந்ததால் அந்த வாய்ப்பும் கை நழுவிபோய்விடுகிறது. பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றபின்பும்கூட மேற்படிப்பு பற்றிய சிந்தனைகள் சிலருக்கு குழப்பத்தை உருவாக்கிவிடுகிறது.

    ஏனென்றால் – “எதிர்காலத்தில் எந்தக் கல்வி நிலையத்தில் சேர்ந்து உயர்கல்வியை (Higher Education) தொடர்வது?” எந்தப் பாடம் எடுத்து படிப்பது? என்ற எண்ணம் மாணவ – மாணவிகள் மனதில் உருவாகும்போது முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.

    தமிழ்நாட்டில் 1978 – ஆம் ஆண்டு பிளஸ் – 2 மேல்நிலைக் கல்விமுறை தொடங்கப்பட்டது. அதன்பின்னர், மாணவ – மாணவிகள் பிளஸ் – 2 தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே உயர்கல்வியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அடிப்படைக் காரணியாக (Factor) பிளஸ் 2 மதிப்பெண்கள் அமைவதால், பிளஸ் – 2 தேர்வு ஒருவரின் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைகிறது.

    கடந்த 2012 – ஆம் ஆண்டு நடந்த பிளஸ் – 2 தேர்வில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவ – மாணவிகள் மொத்தம் 9,401 பேர். இதில் கணிதப் பாடத்தில் மட்டும் 2 ஆயிரத்து 656 மாணவ – மாணவிகளும், இயற்பியல் பாடத்தில் 142 மாணவ – மாணவிகளும், வேதியியல் பாடத்தில் 1,444 மாணவ – மாணவிகளும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். மிக அதிகமான சாதனையாளர்களை இந்த பிளஸ் 2 தேர்வு உருவாக்கிவிடுகிறது.

    பிளஸ் – 2 தேர்வு எழுதிய மாணவ – மாணவிகளில் சிலர் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு மிக அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழகத்தில் சுமார் 525 – க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. பி.இ., பி.டெக்., போன்ற பொறியியல் படிப்புகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன.

    “எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்தால் உடனே வேலை கிடைக்கும்?” என்ற எண்ணத்தில் பெற்றோர்களும், மாணவ – மாணவிகளும் சிந்தித்து திட்டமிடுகிறார்கள்.

    “தமிழகத்தில் புகழ்பெற்ற ‘அண்ணா பல்கலைக்கழகம்’ (Anna University) போன்ற மிகச்சிறந்த கல்வி நிலையங்களில் சேர்ந்து படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்” – என்ற நம்பிக்கை இன்று பல மாணவ – மாணவிகளிடம் உருவாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்து சென்னையில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. போன்ற புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. பிளஸ் – 2 தேர்வில் கட் – ஆஃப் மார்க் (Cut off Mark) மிக அதிகமாக 200க்கு 200 அல்லது 200 க்கு 199 அல்லது 200க்கு 198 அளவுக்கு இருந்தால்தான் இங்கு நடத்தப்படும் படிப்புகளில் இடம் கிடைக்கும். அதற்கு குறைவாக கட் – ஆஃப் மார்க் இருந்தால் கண்டிப்பாக இடம்கிடைக்கும் என்று உறுதியாக கூற இயலாது.

    மிக அதிக மதிப்பெண்கள் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., படிப்பில் சேர்ந்தவர்களில் “எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ்” (Electronics and Communications) பாடப்பிரிவில் சுமார் 50 சதவிகிதம் பேர் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக அமைகிறது. 2012 – ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலும் செமஸ்டர் தேர்வில் மாணவ – மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாகவும், இதனால் பல்கலைக்கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவர்களின் மேம்பாட்டிற்கு உதவி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    “நல்ல மதிப்பெண்களை பிளஸ் 2 தேர்வில் பெற்ற மாணவ – மாணவிகள் பி.இ., படிப்பில் கணிதப் பாடத்தில் தோல்வியடைவதற்குக் காரணம் என்ன?” என்பதை பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

    “பிளஸ் – 2 தேர்வில் நடத்தப்படும் கணிதப் பாடம் மனப்பாடம்செய்து எழுதும் அளவுக்கு மிகவும் எளிதானது. ஆனால், பி.இ. படிப்பில் – கணிதப் பாடத்தை மனப்பாடம்செய்து எழுத இயலாது. நன்றாகப் புரிந்துகொண்டால் மட்டுமே கணிதப் பாடக் கருத்துக்களையும், பயன்பாடுகளையும் அறிந்துகொள்ள இயலும். இதன்மூலம் கணிதப் பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற இயலும்” – என அனுபவமிக்க பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    பிளஸ் 2 தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட சில குறிப்பிட்ட மேற்படிப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற இயலாத சூழ்நிலை உருவாகிவிடுவதை இதன்மூலம் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

    “நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வேலை கிடைக்கும்” – என்று எண்ணி மிக அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக பாடங்களை மனப்பாடம்செய்யும் முறை இப்போது சில பள்ளிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.

    “மனப்பாடம்செய்து தேர்வு எழுதும்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்” – என்ற நம்பிக்கை மாணவ – மாணவிகளிடம் உருவாகிவிட்டது. இதனால்தான் சில பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் தேவையான பாடத்தை நடத்தாமல், பிளஸ் – 2 பாடத்தை பிளஸ் 1 வகுப்பிலேயே நடத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். இன்னும் சில பள்ளிகளில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்த மறுநாளில் பிளஸ் 2 பாடத்தை “ஸ்பெஷல் கிளாஸ்” என்ற பெயரில் ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனால் பிளஸ் 1 வகுப்பில் மாணவ – மாணவிகள் கற்கவேண்டிய “அடிப்படைப் பாடங்கள்” (Foundation Subjects) முறைப்படி கற்றுக்கொள்ள இயலாத #ழ்நிலையை சில பள்ளி நிர்வாகங்களே ஏற்படுத்திவிடுகின்றன.

    “பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக அமையும்” – என்று மாணவ – மாணவிகள் காதுகளில் வேதம் ஓதுவதுபோல திரும்பத்திரும்பச் சொல்லி அவர்களை “மனப்பாடம் செய்யும் இயந்திர”மாக பெற்றோர்களும், ஆசிரியர்களும், உறவினர்களும், நண்பர்களும் போட்டிப்போட்டு ஈடுபடுகிறார்கள். இதனால் – “எப்படியாவது நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும்?” என்ற முயற்சியில் மாணவ – மாணவிகள் ஈடுபடுகிறார்கள்.

    தேர்வு நேரத்தில் பிறரைப் பார்த்து எழுதுவது, ‘பிட்’ அடிப்பது – போன்ற முறையற்ற செயல்களில் மாணவ – மாணவிகள் ஈடுபடுவதற்கும் இந்த “மதிப்பெண் மோகம்”தான் முக்கிய காரணமாக அமைகிறது.

    “பணம் வைத்திருந்தால் மட்டும்தான் அதிக மதிப்பு கிடைக்கும்” – என்று திரும்பத்திரும்பச் சொல்லி பிள்ளைகளை வளர்க்கும்போது “அந்த பணத்தை எந்த முறையில் பெறுவது? என்ற முறையை கற்றுத்தர தவறினால், அந்தப் பிள்ளைகள் வழிதவறி செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. கொள்ளை அடிப்பவர்களாகவும், கொலைக்காரர்களாகவும், ஏமாற்று பேர்வழிகளாகவும், ரவுடி கும்பல்களாகவும், தீவிரவாதிகளாகவும், அடியாட்களாகவும், கூலி படையினராகவும், கள்ளநோட்டு கும்பல்களாகவும் மாறியவர்களின் பின்னணியை அலசிப்பார்த்தால் “எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும்” – என்ற மோகம் அவர்களது அடிமனது தாகமாக இருப்பதை உணரலாம். “எப்படியாவது எனக்கு பணம் வேண்டும்” – என்பதை மட்டுமே கருத்தில்கொண்டு இயங்குவதால் பணம் சம்பாதிக்க நல்ல வழிமுறைகளைப் பின்பற்ற இவர்கள் தவறிவிடுகிறார்கள்.

    இதைப்போலவே – “எப்படியாவது மதிப்பெண் பெற வேண்டும்” என்ற எண்ணத்தில் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தும் கூட்டங்கள் அதிகமாகிவருகிறது. இதற்கு உடந்தையாக சில பெற்றோர்களும், பள்ளி நிர்வாகிகளும் அமைவது வேதனை தரும் விஷயம் அல்லவா?

    “மனப்பாடம் செய்ய வேண்டும்” என்ற மந்திரத்தைப் பல பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள். ஆனால் பி.இ., பி.டெக்., பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., – போன்ற மேற்படிப்புகளில் சேர்ந்து மாணவ – மாணவிகள் படிக்கும்போது மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை ஓரளவுதான் பயன்படுகிறது. கற்றுத்தரும் பாடத்தை நல்லமுறையில் புரிந்துகொண்டு அந்த புரிதலின் அடிப்படையில் கேள்விக்கான விடைகளை எழுதும் ஆற்றலை மாணவ – மாணவிகள் பெற்றால்தான் உயர்கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.

    பாடத்தை நன்கு புரிந்துகொண்டு பகுத்தாய்வுசெய்து தேர்வு எழுத உதவும் “பகுத்தாய்வு செய்யும் திறன்” (Analytical Ability) கண்டிப்பாக மாணவ – மாணவிகளுக்குத் தேவையான ஒன்றாக அமைகிறது.

    இந்தத் திறனை வளர்க்கும் விதத்தில் மேல்நிலைப்பள்ளிகளில் பாடத்திட்டத்தில் வழிவகைகள் செய்யப்பட்டிருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தி கற்றுத்தரும் ஆசிரியர்களுக்குத்தான் அதிக பொறுப்பு (Responsibility) உள்ளது.

    பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே “அறிவாளிகள்” என்று சமுதாயத்தில் பலர் எண்ணுவதால்தான், “மதிப்பெண்களை உயர்த்த வேண்டும்” என்ற எண்ணத்தில் பெற்றோர்கள், மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள் என எல்லோரும் செயல்படுகிறார்கள்.

    “பகுத்தாய்வு செய்யும் திறன்” உள்ளவர்கள் மட்டுமே உயர்கல்வியில் சிறப்புப்பெற இயலும்” என்பதை அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நமக்குத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.

    படிக்கும்போதே பாடங்களை நன்கு புரிந்துகொண்டு பகுத்தாய்வு செய்யும் திறனை மாணவ – மாணவிகள் பெற்றுக்கொண்டால்தான், அவர்கள் பெறும் மதிப்பெண்கள் சாதனையாக மாறும். பாடங்களை நன்கு புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் மட்டுமே செய்து மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அந்த மதிப்பெண்கள் எதிர்காலத்தில் வேதனையைத் தந்துவிடுகிறது.

    எனவே – பாடங்களை மனப்பாடம் செய்வதோடு அதனை தெளிவாகப் புரிந்துகொள்ளும் பண்பையும் மாணவ – மாணவிகள் இளம்வயதிலேயே உணர்ந்துகொள்வது நல்லது.

    தொடரும்.

    நீங்கள் சாதனையாளரே!

    இனிய வாசக நண்பரேÐ இந்த இரண்டு சொற்களும் உங்களுக்குத்தான். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? என அவசரப்பட்டு, பக்கத்தைப் புரட்டி விடாதீர்கள்.
    “கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்” என்று கிராமத்தில் கூறுவார்கள். அது உண்மை தான். அதனைப் பெற்றுக் கொள்வதற்கான தகுதியை மட்டும் நாம் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
    அது என்னங்க தகுதி? மிக நன்று. நீங்கள் சாதனையாளர் என்பதற்கான தொடக்கமே இந்தக் கேள்வி தான்.

    சமீபத்தில் பெங்களூர் சென்றிருந்த என்னை, நண்பர் ஒரு பாரம்பரியம் மிக்க, புகழ்பெற்ற கிளப் ஒன்றுக்கு மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு செல்ல வேண்டுமென்றால் ஆண்கள் கட்டாயம் ஷூ அணிந்திருக்க வேண்டும். இது போன்றது தான் தகுதி. தெய்வம் உங்களுக்கு கொடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. அவைகளைப் பெறுவதற்கு நீங்கள் தயாரா?

    கடந்த மாதம் கோவையில் ஒரு கல்லூரிக்கு மாணவ, மாணவியருக்கு “நீங்களும் வெற்றியாளரே” (How to be a Winner) என்ற தலைப்பில் பயிற்சி அளித்தேன். “நீங்கள் வெற்றியாளரா?” கை தூக்குங்கள் என்றேன். 150 பேரில் சுமார் 15 பேர் மட்டுமே யோசித்து கை தூக்கினர். எல்லோருமே பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்றதால் தானே கல்லூரிக்கு வர முடிந்தது என்று விளக்கிய பின் எல்லோரும் கை தூக்கினர். கல்லூரிக்கு வந்ததே வெற்றி என்பதை மறந்துவிட்டனர்.

    நம் எல்லோருக்குமே எல்லாவற்றையும் பெறுவதற்கான தகுதி உள்ளது. அந்தத் தகுதி, திறமை நம்மிடம் உள்ளது என்பதை நாம் பெரும்பாலும் நம்பத்தயாராயில்லை. ஏன்? நாம் வளர்க்கப்பட்ட விதம், நம்முடைய பழக்கம், நட்பு வட்டம் எனப் பல காரணங்கள் கூறலாம். இத்தோடு நான் இப்படித்தான் என்ற வரையறைக்குள் நம்மைச் சிறை வைத்துக்கொண்டுள்ளோம். இதை மோசமான “நான்” வட்டம் (Dirty I Circle) என்று கூறுகிறோம். இந்த வட்டத்தை, உடைத்துக் கொண்டு வெளியே வர வேண்டும். உடைப்பதற்கான வழிகளும் நம் எல்லோருக்குமே தெரியும்.

    சென்னையில் நடைபெற்ற வாசகர்வட்டப் பயிலரங்கில் “உங்கள் மகிழ்ச்சிக்கு என்ன வேண்டும்” என்ற கேள்விக்கான பலரது பதில் இதோ:
    “நோயில்லா வாழ்க்கை
    குறைவில்லாத வசதிகள்
    தேவையான அளவு பணம்
    அன்பு, தைரியம், பொறுமை
    தன்னம்பிக்கை, நல்ல சுற்றம்
    இறையருள், வெற்றி”

    உண்மை தானேÐ நாம் எல்லோருமே இதைத்தானே விரும்புகிறோம். இதற்காகவே திட்டமிட்டு, செயல்படுகிறோம். ஆனாலும் எல்லோருமே வெற்றி பெறுவதில்லையே. இதுவும் உண்மை தானே.

    இந்த நிலையில் ஒவ்வொருவரும் சாதனையாளர் என்பதை ஏற்பது எப்படி? ஒரே குறை தான். நமக்கு என்ன தேவை என்பதிலே தெளிவில்லை. தேவை என்பது அளவிலே, எண்ணிக்கையிலே இருக்க வேண்டும். Specific என்று இதனைக் கூறலாம். தேவையான அளவு பணம் என்பதற்கும், ரூபாய் 50 லட்சம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதேÐ

    வாழ்க்கையிலே முன்னேற நினைப்பவர்கள் எல்லோருமே கடுமையாக உழைக்கிறோம். நேரமிருந்தால் பகுதி நேரப்பணி (Part Time Job)-யும் பார்க்கிறோம். இருந்தாலும் திருப்தியில்லை. ஏன்? எங்கேயோ, எப்படியோ நம் உழைப்பு வீணாகிறது. இதைத்தடுக்க இரண்டு மட்டுமே தேவை.
    ஒன்று: ஆர்வம் (Interest)
    மற்றது: ஈடுபாடு (Involvement)

    மனிதன் தான் இந்த உலகிலுள்ள உயிரினங்களில் (சூப்பர்) மிகவும் உயர்வானவன். மகிழ்ச்சியாக, வெற்றிகரமாக வாழ்வதற்காகவே பிறந்துள்ளோம். ஒரே மரம் தான். அந்த மரத்தின் கனிகள் அனைத்தும் ஒரே மாதிரி சுவையாக இருப்பதில்லை. அதிலும் ஒரு கனியை எடுத்துச் சாப்பிட்டால், அதன் எல்லாப் பகுதியும் ஒரே மாதிரி சுவையாக இருப்பதில்லை. இது இயற்கை.

    இதுபோல், தோல்வி அடைந்தவர்கள் எப்போதும் வெற்றி பெறவே முடியாது என்பதோ, வெற்றியடைந்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள் என்பதோ நிரந்தர விதியல்ல. மாற்றம் என்பது மட்டுமே நிலையானது.
    மாறுவதற்குத் தயார் என்றால், நீங்கள் சாதனையாளரேÐ சாதனை என்பது என்ன? தொடர் வெற்றி / பிறரால் முடியாததைச் செய்து முடிப்பது. சரி, வெற்றி என்பது என்ன? வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்தி பிறரிடமிருந்து முன்னிலையில் இருப்பது.

    சிறிது விளக்கமாகவே பார்ப்போம். மாணவர்கள் என்றால், தேர்வுகள் என்பது வாய்ப்பு. என்ன தான் ஆர்வத்துடனும், முழுமன ஈடுபாட்டுடனும் கவனித்திருந்தாலும், தேர்வை நல்ல முறையில் எழுதி, அதில் பெறும் மதிப்பெண்களே வெற்றியை அளிக்கும். வேறு ஏதேனும் போட்டி என்றால், அதில் கலந்து கொண்டு, சிரமம் எடுத்து, செயல்பட்டு முதலிடம் பெறுவது. இதை சான்ஸ் (Chance) என்று கூறலாம். இதற்கும் ரிஸ்க் (Risk) எடுக்க வேண்டும். இந்த ரிஸ்க் என்பது முயற்சி, பயிற்சி.

    சாதனை:
    இதை Achievement என்று ஆங்கிலத்தில் கூறுகிறோம். பலருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது (Achiever’s Award) வழங்குவதை நாம் கண்டும் கேட்டுமிருக்கிறோம். சாதனை என்பதைத் தொடர் வெற்றி என்று கூறலாம். இருக்கும் பலவற்றுள் பிறரால் முடியாது என்ற ஒன்றைத் தேர்வு செய்து (Choice) அதை நிறைவாகச் செய்து முடிப்பது சாதனையாகும்.

    இதோ ஒரு சாதனையாளர்,

    78 வயதான பாட்டி சந்திரா தோமர். இவர் கலக்குவது துப்பாக்கி சுடும் போட்டியில். உத்திரப் பிரதேசத்தில் ஒரு குக்கிராமத்தில், சின்னஞ்சிறு வீட்டில் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருப்பவரைப் பார்ப்பவர்களுக்கு, இவரின் மறுபக்கம் தெரியாது.

    15 பேரக் குழந்தைகள் உள்ளனர். நரைவிழுந்த தலைமுடி; தலையை மறைக்கும் முக்காடு, ஆண்கள் அணியும் முழுக்கைச் சட்டை, மூக்கில் பெரிய மூக்குத்தி. இவைதான் இவரது அடையாளம்.

    உலகின் மிக வயதான தொழில் ரீதியான துப்பாக்கி சுடும் வீராங்கனை இவர் தான். இவரது மறக்க முடியாத அனுபவம். ஒரு போட்டியில் டில்லியைச் சேர்ந்த போலீஸ் டி.ஐ.ஜி.யை இறுதிச் சுற்றில் தோற்கடித்தது.

    இதுவரை மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று பதக்கங்கள், பரிசுகள் எனப் பலவும் குவித்துள்ளார்.

    சுமார் 15 ஆண்டுகளுக்கு முன், அதாவது அவரது 63வது வயதில், இவர் ஊரில் உள்ள கிளப் ஒன்றுக்குத் தன் பேத்தியை துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு அழைத்துச் சென்று வருவார். அங்கு பயிற்சி செய்பவர்களைப் பார்த்து பார்த்து தானும் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க ஆசைப்பட்டார். முதலில் வெளியே சொல்லத் தயக்கமாக இருந்தது. ஆசை அவரைத் தூங்க விடவில்லை.

    ஒருநாள் துணிந்து பேத்தியிடம் தன் மனம் திறந்தார். பயிற்சியாளரிடம் பாட்டியின் ஆசையைப் பேத்தி விளக்கினார். அவரும் மகிழ்ச்சியுடன் சேர்த்துக் கொண்டார். துப்பாக்கி பிடித்ததும் உண்டான நடுக்கம் நிற்க பல நாட்கள் ஆயின. சில மாதங்களில் மிகச்சிறப்பாக குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்றார்.

    பிறப்பு, வசதி, வயது, படிப்பு – இவை ஒன்றுமே தேவைப்படவில்லை; தூங்க விடாமல் செய்த ஆசை தான் இவரைச் சாதனையாளராக்கியது.
    நீங்கள் சாதனையாளர் ஆக வேண்டாமா?
    -தொடரும்.

    ஒவ்வொருவர் உள்ளத்திலும் தீ…

    உடலைப் பற்றுகிற நோய் மனிதனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறது. ஆனால் உள்ளத்தைப் பற்றுகிற நோயாம் ‘பொறாமை’ தனி மனிதனின் அழிவிற்கும் சில சமயம் அவன் சார்ந்திருக்கிற சமூகத்தின் அழிவிற்கும் காரணமாகிவிடுகின்றது. சிலருக்குள் எரிந்த பொறாமைத் தீ சாம்ராஜ்யங்களைக் கூட சரிய வைத்திருக்கிறது.
    தனிமனிதர் ஒவ்வொருவர் மனத்திலும் மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு, மகிழ்ச்சியைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத இயல்பு இருக்கிறது. ஒருவேளை அது நபருக்கு நபர் அளவில் வேறுபடுமே தவிர, இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம். அங்கும் இங்குமாக மிகமிகச் சிலருக்கு மட்டுமே ஒருவேளை இந்தப் பொறாமை குணம் பொங்காமல் இருக்கலாம்.
    நமது தெருவில், நமது ஊரில், நமது அலுவலகத்தில், நமது பகுதியில் நம்மோடு வாழ்ந்து வருகிறவர்கள் நம்மைவிட உயர்வடைந்துவிட்டால், நம்மோடு படித்தவர்கள், பணியாற்றுகிறவர்கள், தொழில் செய்கிறவர்கள் நம்மைவிட பொருளாதாரத்தில், புகழில், பதவியில் மேம்பாடு அடைந்துவிட்டால், நம் உள்ளத்தில் ஊற்றெடுத்து சுரந்து வருகிற பொறாமையானது, பிறரின் மேம்பாட்டை, வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத தன்மை ஏற்படுகிறது.
    இந்தப் பொறாமையை விட்டொழிக்கத் தெரியாமல், அகற்றத் தெரியாமல் அடக்கக் கற்றுக் கொண்டவர்கள், அதை பிறர் அறிய வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளத்திற்குள்ளேயே போட்டுக் குமைந்து போவார்கள். இந்தப் பொறாமை குணம் அவர்கள் உடல் நலத்தை தினந்தினம் அரித்தரித்துத் தின்று கொண்டிருப்பதை அறிந்தும் அறியாமலும் அந்தப் பண்பை உதரிவிடாமல் நெருப்பிலிட்ட வெண்ணெய்போல உருகி உருக்குலைந்து ஒழிந்து போவார்கள்.
    சிலர் பொறாமையை அடக்கிக் கொள்ளவும் முடியாமல் அள்ளியெறியவோ கிள்ளி எறியவோ முடியாமல் தங்களின் சொல்லாலும், செயலாலும், வெளிப்படையாகவே காட்டிக் கொள்வார்கள். பொறாமை நெருப்பில் பொசுங்கிப் போவார்கள். அடிக்கடி பெருமூச்சு விடுவார்கள். முன்பு சொன்னவர்களைவிட ஓரளவுக்கு மேலானவர்கள் என்றாலும் இத்தகையவர்களுக்கு நண்பர்கள் குறைந்து பகைவர்களே மிஞ்சுவார்கள்.
    மதிநுட்பம் வாய்ந்த சிற்பியும், மாபெரும் ஓவியக் கலைஞனுமான மைக்கேல் ஏஞ்சலோ பொறாமையால் சிக்கலில் அகப்பட்டுக்கொண்டு சிரமப்பட நேர்ந்தது. சூலியசு என்ற போப்பாண்டவர், தாம் வாழ்கிறபோதே தனக்காக வனப்பு மிகுக் கல்லறை ஒன்றைக் கட்டியெழுப்பிவிட விரும்பினார். ஒருநாள் மைக்கேல் ஏஞ்சலோவை அழைத்து கல்லறைக்கான மாதிரி வரைபடம் வரைந்து வருமாறு கூறினார். அந்த வரைபடத்தைக் கண்டு போப்பாண்டவர் மிகவும் மகிழ்ந்தார். ஏராளமாக நிதி கொடுத்து உடனடியாக கல்லறைக்கான பணியைத் துவங்கிட ஆணையிட்டார்.
    உள்ளத்தில் உவப்போடும் ஈடுபாட்டோடும் அதை நிறைவேற்ற விளைந்த ஏஞ்சலோ கல்லறையைப் பளிங்குக் கற்களாலேயே கட்டத் தீர்மானித்து, கராரோ என்ற மலைப்பகுதிக்குச் சென்று, தரமான கற்களைத் தட்டிப்பார்த்து வெட்டி எடுத்துவரச் செய்தார். எட்டு மாதங்களில் ஏராளமான கற்கள் பளிங்கு மலையென கல்லறை கட்டப்பட வேண்டிய கிடத்தில் குவிந்து கிடந்தன. பார்ப்போரை பிரமிக்கச் செய்தது. போப் அங்கே போகும் போதெல்லாம் பொங்கும் மகிழ்வால் மைக்கேல் ஏஞ்சலோவுக்கு பரிசுகளை அள்ளி அள்ளி அளித்து வந்தார்.
    ஏஞ்சலோ வாழ்ந்த அதே காலத்தில், ரோம புரியில் அதே சிற்பக் கலையில் சிறந்து விளங்கிய பிரமான்ட்டி என்ற இன்னொரு சிற்பியும் பேரும் புகழும் பெற்றவராக இருந்தார். போப்பின் கல்லறைக் கலைப்பணியைத் தனக்கு அளிக்காமல் ஏஞ்சலோவுக்குப் போனதால் பொறாமையால் பொசுங்கிக் கொண்டிருந்தார். போப் பாண்டவரைக் காணப்போகும் போதெல்லாம் இல்லாததைப் பொல்லாததைச் சொல்லி போப்பின் நெஞ்சத்தில் மூடநம்பிக்கை என்னும் நஞ்சை ஊற்றிக்கொண்டே வந்தார். அதாவது உயிருள்ள போதே கல்லறையை உண்டாக்கினால் உங்கள் உயிருக்கு ஆபத்து, தீய விளைவுகளை உண்டாக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கினார். மற்றவர்கள் வழியாகவும், அந்தச் செய்தியை, வதந்தியைப் போப் பாண்டவர் காதுக்குப் போய் சேரும்படிச் செய்தார் பிரமாண்ட்டி.
    ஆனானப்பட்ட அறிவாளிகள் எல்லாம் கூட மூடநம்பிக்கை என்றால் நடுங்கிப் போவது எங்கும் நடப்பது தான். நாட்கள் நகர்ந்தன. மனம் மாறிப்போனார் போப் பாண்டவர். மைக்கேல் ஏஞ்சலோவை அழைத்து கல்லறையைக் கட்ட வேண்டாம் எனக் கட்டளையிட்டார். ஒருவேளை அது கட்டி முடிக்கப்பட்டிருந்தால் அந்தக் கல்லறை கலையறையாகி காலத்தை வென்று நின்று நிலைத்த நெடும்புகழை ஏஞ்சலோவுக்கு ஏற்படுத்தி இருக்கும். அத்தோடு நின்றாரா பிரமான்ட்டி, இல்லை. அண்டையில் இருந்த சிசுடின் தேவாலயத்தில் சுவரோவியங்கள் வரைவதை ஏஞ்சலோ வரைந்தால் ஏகாந்தமாயிருக்கும் என்று போப்பிடம் போட்டுக் கொடுத்தார்.
    பொறாமை பொங்கிக் கொண்டிருந்த பிரமாண்ட்டி கணக்குப் போட்டார், ஓவியக் கலையில் அச்சமயம் தேர்ச்சி பெறாதிருந்த காலம், இதை அவரிடம் ஒப்படைத்தால் ஒழிந்தார் ஏஞ்சலோ என ஓங்கி எண்ணியதன் விளைவுதான் தேவாலயத்தில் ஓவியம் வரைவதை ஏஞ்சலோவிடம் ஒப்படைக்கச் சொன்னது.
    மைக்கேல் ஏஞ்சலோவிற்கும் அந்தப் பணியில் நாட்டமில்லை. ஆனால் போப்பின் ஆணையை மீறிவிடக்கூடாது என்பதாலும், ஆகட்டும் பார்க்கலாம் ஆக்குவோம் ஓவியத்தையும் என ஆக்கபூர்வமாய் மைக்கேல் ஏஞ்சலோ தீர்மானித்து, தீவிரமாக தீட்டித்தள்ளினார் தேவாலயத்தில் ஓவியங்களை. உலகம் உள்ளளவும் ஒப்பறிய கீர்த்தியை மைக்கேல் ஏஞ்சலோவுக்கு மகுடமாய் ஆக்கின அந்த ஓவியங்கள்.
    ஆகவே அன்பர்களேÐ பொறாமைக்காரர்கள் உங்களுக்கு புதைகுழி வெட்ட நினைத்தால் ஆக்கபூர்வமாக செயலாற்றி புகழின் உச்சிக்கே சென்றடைய திட்டமிடுவோம். அதுமட்டும் போதாது, நாமும் இத்தகைய பொறாமை நோய்க்கு ஆளாகாமல் இருந்திட வேண்டும்.
    ஒருவரின் உயர்வை மட்டுமே பார்த்து பொறாமையால் பொறுமிப் பயனில்லை. அந்த உயர்வை அடைய அவர்கள் எந்த அளவுக்கு உழைத்திருப்பார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். மற்றவர்கள் பொறாமைப்படும்படி உயர்ந்தவர்கள் யாரும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை அனுபவிக்காமல் பலவற்றையும் இழந்துதான் அர்ப்பணித்து தற்போதைய உயர்ந்த உன்னத நிலையை எட்டி இருப்பார்கள் என்பதை ஒரு நொடிப்பொழுதேனும் நினைத்துப் பார்த்தால் அவர்கள் மீது ஏற்படும் பொறாமை பொடிப்பொடியாகி பொலபொலவென உங்கள் உள்ளத்தைப் பற்றாமல் உதிர்ந்துபோகும் பொறாமைப்படும் போக்கும் மாறும்.
    ஊன்றி கவனித்தால் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். இந்தப் பொறாமை என்பதே நம்மோடு பழகி, உண்டு உறங்கியும், வாழும் நமது உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், நம்மைப் போன்ற தொழில் செய்பவர்கள், இப்படியாக நமக்குத் தெரிந்தவர்கள் மீதே ஆக்கிரமிப்பு செய்கிறது. அத்துணை நாள் அன்பாக இருந்தவர்களை அழிக்க நினைக்கிறது.
    இதற்கு மாறாக, இன்னொரு கோணத்தில் பார்த்தால், நமக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள், நம் வயதில், நம் தகுதியில், நம் உழைப்பின் அளவில் குறைவாக இருந்தும் வாழ்வில் உயர்ந்தோங்கி ஒளிர்பவர் பல்லோர் இருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் அத்தகையோர் மீது நமக்கு பொறாமை எழுவதில்லை. காரணம் அவர்களை நாம் அறியோம். நம்மையும் அன்னவர்கள் அறிந்திலர். அவர்களது பொருளாலும், புகழாலும், பதவியாலும், பெருமையாலும் நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
    அதேபோலத்தான் நம்மைச்சுற்றி வாழ்கிறவர்களின் புகழும் பெருமையும் நம்மைப் பாதிப்பது இல்லை எனினும் பாதித்துவிடுமே என்கிற தாழ்வுமனப்பான்மையும், வீணான கற்பனையும் நம்மை பொறாமையால் பொங்கச் செய்கிறது. நம் உடலையும் உள்ளத்தையும் அரித்து நமக்கு அழிவையே அளிக்கிறது.
    பொறாமை என்பது நெல் வயலின் விளைச்சலை விழுங்கிவிடும் களைச்செடியைப் போல, நற்பயிரை அழிக்கும் நச்சுச்செடி போல ஓங்கி உயர்ந்து விரைந்து வளர்ந்து எது இனியதோ, எது ஏற்றதோ, எது அழகானதோ அதை அழித்துவிடும். எனவே பொறாமை என்னும் களையை முளைவிடும்போதே வேரோடு பிடுங்கி எறியுங்கள்.
    நமது செல்வத்தையும் செல்வாக்கையும் வெளிச்சம் போட்டு மிகையாக காட்டிக்கொண்டாலும் பொறாமை பல திசைகளில் இருந்தும் நம்மீது படையெடுத்துவரும். அந்தப் பொறாமை மறைமுகமாக நமது வளர்ச்சிக்கும், உயர்விற்கும் ஊறுவிளைவிக்கும். அதைத் தாண்டிச் செல்வதற்குப் போராடுவதில் நமது உழைப்பும், உற்சாகமும், மகிழ்ச்சியும் வீணாய்போகும். எனவே எப்போதும் உங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருந்தால் அதே ஒரு வகையில் உங்களைப் பொறாமைகளில் இருந்து பாதுகாக்கும்.
    பாரெங்கும் ஏராளம் ஏராளம் என்னும்படியாக எத்தனையோ பேர் நம்மைவிட பன்மடங்கு உயர்ந்து இருக்கிறார்கள். வளமாக வாழ்கிறார்கள். அவர்கள் மீது நமக்கு பொறாமை ஏற்படுவதில்லை. பிறகு நம் அருகில் இருப்போர் மீது மட்டும் ஏன் இந்தப் பொறாமை ஏற்பட வேண்டும் என்ற பரந்த நோக்கை உள்ளத்தில் வளர்த்துக் கொண்டால் பொறாமை ஒழியும்.
    மேலும் நம்மோடு வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள், நம்மைவிட தாழ்வான நிலையில் எவ்வளவோ பேர் இருக்கக்கூடும். அத்தகையவர்களை, அவர்தம் உழைப்பை எண்ணிப் பார்ப்போம். கடுமையாக உழைத்தும் அவர்களால் உயர்ந்தோங்க இயலவில்லையே, நம்முடைய உயர்வு அவர்களைக் காட்டிலும் மேலானதே என்று எண்ணி மகிழ்வோம். உள்ளத்தில் ஒழிந்து கொண்டிருக்கும் பொறாமைத் தீயை அணைப்போம்.