கல்லூரிப் பிரச்சினைகள்… கவனம் தேவை
இளமைப்பருவம் இனிமை நிறைந்த பருவம். இந்தப் பருவத்தில்தான் மனிதர்கள் மிக அதிகமாக மகிழ்ச்சியாக இருக்க முடியும். இளமைப் பருவத்தில்தான் எந்தச் செயலையும் தைரியமுடன் செய்யமுடியும்” – உளவியல் வல்லுநர்கள் கருத்தாகும். பள்ளி – கல்லூரிகளில் பயிலும்போது மாணவ – மாணவிகள் இளமைப் பருவத்தை இனிமையாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இயலும்.
சிலருக்கு கல்வி நிறுவனங்களில் மிக மகிழ்ச்சியான அனுபவங்கள் நிறைய கிடைக்கும். ஆனால், அதேவேளையில் மனதில் வலியை ஏற்படுத்தும் சில நெருடல்களும் கல்வி நிலையங்களில் உருவாக வாய்ப்புகள் உள்ளது.
சமீபத்தில் கல்லூரி மாணவர்களிடம் காணப்படும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கும் சில பொது பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டது. அவை –
1. படிப்பு (Study)
பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேரும் மாணவ – மாணவிகளுக்கு முக்கிய பிரச்சினையாக அமைவது அவர்களது படிப்புதான். ஏனென்றால் பள்ளிகளில் பயிலும்வரை பெற்றோர்களின் முழு கவனம் தங்கள் பிள்ளைகள்மீது படிந்திருக்கும். ஆனால் கல்லூரிக்குச் சென்றதும் “என் மகன் தோளுக்குமேல் வளர்ந்துவிட்டான். அவன் இனிமேல் என் தோழன்” – என்று எண்ணி சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பைப்பற்றி கவலைப்படுவதில்லை.
கல்லூரிக்குச் சென்றமாணவன் தானாகவே படிப்பில் கவனம் செலுத்தி படிக்க வேண்டிய ஒருநிலை உருவாகிறது. மேலும் கல்லூரிகளில் பெரும்பாலும் “செமஸ்டர் சிஸ்டம்” (Semester System) உள்ளது. அதாவது ஒரு வருடத்தில் இரண்டு முறைநடத்தப்படும் பல்கலைக்கழகத் தேர்வுகளை மாணவ – மாணவிகள் எழுத வேண்டும். இதனால் குறுகியகாலத்தில் நிறைய தகவல்களை சேகரிப்பதிலும், படிப்பதிலும் அதிக அக்கறைசெலுத்தவேண்டிய நிலை உள்ளது.
தங்கள் ஊர் பள்ளிகளில் முதலிடம் பெற்றசில மாணவ – மாணவிகள் கல்லூரிப் படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறஇயலாத நிலையும் சிலவேளைகளில் ஏற்பட்டுவிடுகிறது. ஆங்கில வழியில் படிப்பதும், படித்த பாடத்தை “பகுத்தாய்வு செய்து புரிந்துகொள்ளும் திறனை” வளர்ப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டிய நிலை உள்ளது.”பள்ளியைப்போல கல்லூரியில் படிக்கும் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியவில்லையே” என்றகவலை சில மாணவர்களுக்கு உண்டு இதுவே, பெரிய பிரச்சினையாக அவர்களுக்கு மாறிவிடுகிறது. கல்லூரிப் படிப்பில் ஒரு மாணவன் மிகவும் சிறந்து விளங்க வேண்டுமென்றால் தினம்தோறும் தொடர்ந்து கவனமாகப் படித்து வரவேண்டும். அப்போதுதான் இந்தக் கவலையை மாற்றஇயலும்.
2. பணம் (Money)
கல்லூரியில் படிக்கும்போது பல நிலைகளில் ‘கல்விக் கட்டணம்’ (Tution Fees) உள்ளது. தமிழகத்தில் இயங்கும் கல்லூரிகளை – அரசு கல்லூரிகள் (Government Colleges), அரசு உதவிபெறும் கல்லூரிகள் (Government Aided Colleges), சுயநிதிக் கல்லூரிகள் (Self Financing Colleges) என மூன்று வகையாகப் பிரிக்கலாம். அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் மிகமிக குறைவாக இருக்கும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம், அரசு கல்லூரிகளைவிட சற்று அதிகமாக இருக்கும். இந்த அடிப்படைத் தகவல்களையெல்லாம் கல்லூரியில் சேருவதற்கு முன்பே தெரிந்து கொள்ளாத சில மாணவ – மாணவிகள் கல்லூரியில் சேர்ந்தபின்பு படிப்புச் செலவுக்கான பணம் இல்லாமல் திண்டாடித் தவிக்கிறார்கள். கல்லூரிக் கட்டணம் கட்ட முடியவில்லை என்பதற்காக தங்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திக் கொண்டவர்களும் உண்டு.
கல்வி கட்டணம் தவிர மாணவ – மாணவிகளுக்கு விடுதி கட்டணம், பேருந்து கட்டணம், கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவதற்கான செலவு, நோட்டுப் புத்தகத்திற்கான செலவுகள் என பல்வேறு விதமான செலவுகள் தவிர்க்க இயலாத செலவுகளாக மாறிவிடுகிறது. ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் கல்விக் கட்டணத்தை மட்டுமே கருத்தில்கொண்டு கல்லூரியில் சேர்ந்துவிடுகிறார்கள். பின்னர் பணப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறிவிடுவதால் இவர்களது படிப்பு பாதியிலே நின்றுபோய் விடுகிறது.
இந்தப்பிரச்சினையைத் தவிர்ப்பதற்கு பள்ளிகளில் பயிலும்போதே மாணவ – மாணவிகள் ஒவ்வொரு கல்லூரியின் இணையதளங்களை (Websites) பார்வையிட்டு கல்லூரி பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்றும் வேண்டிய தகவல்களைப் பெறமுயற்சிகள் மேற்கொள்ளலாம். கல்வி உதவித்தொகைகளை (Scholarships) வழங்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு அவைகள் வழங்கும் உதவியைப் பெற முயற்சி செய்வதும் நல்லது
3. பணி (Job)
கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும், விடுதிக் கட்டணத்தை கட்டுவதற்காகவும் சில மாணவ – மாணவிகள் பகுதிநேரப் பணிகளில் (Part Time Job) ஈடுபடுவது வழக்கம். கல்லூரியில் படித்துக்கொண்டும், பகுதிநேர பணியைப் பார்த்துக்கொண்டும் தொடர்ந்து உழைப்பது நல்லதுதான். இருந்தபோதும் இளமைப் பருவத்தில் ஓய்வு இல்லாமல் நீண்டநேரம் உழைக்கும்போது படிப்பிலுள்ள கவனம் சிதறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே – கல்லூரிப் படிப்பை பாதிக்காத வகையில் பகுதிநேரப் பணியில் சேர்ந்துகொள்வது சிறந்ததாகும். சில பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் மாணவர்களின் படிப்பைப் பாதிக்காத வகையில் பகுதிநேர பணியை வழங்குகிறது. அவற்றைஅடையாளம் கண்டு அந்தப் பணிகளில் சேர்ந்து படிப்பையும் பாதுகாத்துக்கொள்வது நல்லது.
4. வீட்டுக் கவலை (Homesickness)
கல்லூரியில் படிக்கின்றசில மாணவ – மாணவிகளுக்கு தங்கள் வீட்டைப் பற்றிய கவலை தானாக உருவாகிவிடுகிறது. வீட்டின் நிதிநிலைமையைப்பற்றி சிந்தித்து “நமது குடும்பத்தில் இப்படி பணப் பிரச்சினை இருக்கிறதே” என்று எண்ணி அதிகமாக கவலைப்படுபவர்கள் படிப்பின்மீது கவனம் கொள்வதை குறைத்துக்கொள்கிறார்கள். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ – மாணவிகளில் சிலருக்கு “வீட்டிற்குச் செல்ல வேண்டும்” – என்றஎண்ணம் அடிக்கடி தோன்றுவதால் விடுதியிலும் நிம்மதியாக அவர்களால் இருக்க முடியாது. படிப்பிலும் கவனம் செலுத்த முடியாது.
விடுதியில் பயிலும்போதே தங்கள் வீட்டுநிலையைப்பற்றி கவலைப்பட்டு நேரத்தை வீணடிப்பதைவிட, மாதத்திற்கு ஒருமுறைவீட்டிற்கு சென்று வரலாம். மாதத்திற்கு இருமுறைவீட்டிற்கு தொடர்புகொண்டு பேசிக்கொள்ளலாம். இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் நண்பர்களிடம் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம். பெற்றோர்கள் – நண்பர்கள் – உறவினர்களிடம் வீட்டில் இருக்கும்போது பழகுவதைப்போலவே தொடர்பை ஏற்படுத்திக்கொண்டால் வீட்டுக் கவலை மறந்துவிடும்.
தொடரும்
0 comments Posted in Articles