உங்கள் சொல், செயல், சிந்தனையை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வளர்ச்சிகள் மீது உங்களுக்கே ஆளுமை அவசியம்.
Managing Yourself என்பது அரிய கலை. இந்தக்கலையை அறிந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். உங்களது வீட்டு நிர்வாகத்தைச் சரிவர கவனிக்கிறீர்களா? நீங்களே சுயமாகத் தொழில் செய்கிறீர்களா? அல்லது பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கின்றீர்களா?
இது பெரிய விஷயம் ஒன்றுமில்லை. ஆளுமைத் திறனுடையவர்கள் மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன் வாழ்கின்றார்கள். அதுபற்றி சற்றேஆராய்வோம். உங்கள் வாழ்க்கையில் எழக்கூடிய சவால்களை, பிரச்சனைகளை நீங்கள் தைரியமாக எதிர்கொள்ளும்போது அதில் ஒரு திரில் இருக்கவே செய்கிறது.
உங்களுடைய தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, குடும்ப வாழ்க்கையானாலும் சரி, அலுவலகப்பணியானாலும் சரி எந்த அளவு நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள் என்பது முக்கியமானது. அதனை எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படும்.
ஒரு சிறந்த நிர்வாகி தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை ஆளத் தெரிய வேண்டும். யார் யாரிடம் எந்தப் பணியைக் கொடுத்தால் சிறப்பாக நிறைவேறும். தொழில் மேம்பாட்டிற்கு என்ன செய்ய வேண்டும், போட்டிகளைச் சமாளிப்பது எப்படி, உற்பத்தித் திறனில் மாற்றம் செய்ய வேண்டுமா? ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் எப்படி சமாளிப்பது? திடீரென நஷ்டம் ஏற்பட்டால் அதனை எப்படி ஈடுகட்டுவது? இவை யாவும் அவர் சரியாக கவனித்துச் செயல்பட்டாலேயே ஊழியர்களிடம் மதிப்பும், மரியாதையும் உடையவராக இருப்பார். மேலதிகாரிகளிடமும், தொழில் அதிபரிடமும் நல்ல உறவு (Rapport) இருக்கும். அவர் நிர்வாகத் திறமையற்றவராக இருந்தால் பணியாளர்களிடம் மதிப்பை இழப்பார்.
ஆக, சிறந்த நிர்வாகிக்கு இந்த ஆளுமைத்திறன் அவசியம். சிலர் தங்களுடைய சக்திக்கு மேற்பட்ட பொறுப்புக்களை தங்கள் தோள்களில் சுமப்பதாலேயே தடுமாறுகிறார்கள். செய்ய முடியாததை நான் செய்து முடிக்கிறேன் என்று வீணாக சூளுரைத்துத் திண்டாடுவானேன்.
என்ன முடியுமோ, உங்கள் தகுதி, நேரம், வசதி வாய்ப்புக்கு ஏற்பப் பணிகளை மேற்கொள்வீர்களானால் எளிதில் முடிக்கலாம். பாரம் உங்கள் தோள்களை அழுத்தாது.
Too much is too bad என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். எதைத் தள்ள வேண்டும், எதைக் கொள்ள வேண்டும் என்றஉய்த்துணர்வும் அறிவும் அவசியம். அந்தப் பொறுப்பு உங்களுடையதே.
சில சமயங்களில் நாம் ஆற்றவேண்டிய பணிகள் பற்றி நமது திட்டத்தில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் நாம் போடும் கணக்கு தவறாகி விடுகிறது. தீர ஆலோசிக்க நேரம் இல்லாமல் அவசரகதியாய் அள்ளித்தெளித்த கோலமாய் பரபரவென எதையோ செய்கிறோம். அதனால் அக்காரியம் சீராக நடைபெறாமல் சிதைவுறுகிறது.
அப்படிச் செய்கிறேன், இப்படிச் செய்கிறேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டு, அந்த வாக்கைக் காப்பாற்றியாக வேண்டுமே என்று ஏன் வீணான மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதை உணர்ந்து, அறிந்து திருத்திக்கொள்ள, செய்துமுடிக்க வேண்டிய பணிகள் பற்றி சரியான திட்டமிடுதல் அவசியம். இது உங்களுடைய ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.
ஆக Managing yourself என்பதை அறிந்து செயல்படும்போது திட்டமிடுதல் சரியாக அமைந்து, எடுத்த காரியங்கள் செவ்வனே நிறைவேறக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இந்த ஆளுமைத்திறன் சரியாக இல்லாவிட்டால் பணிமுடியாமல் நமக்கு ஒருவித மனச்சோர்வு ஏற்படுகிறது. அது நமது உட்சக்தியை குலைத்துவிடுகிறது.
வெறும் ஏட்டளவில் கணக்கு போட்டால் மட்டும் போதாது. சாதகபாதகங்கள் ஆராய்ந்து செயல்படுவதே சாலச்சிறந்தது. அதுவே ஆளுமைத்திறன் வளர உதவும். கீழ்க்கண்டவற்றை நீங்கள் சரியாக அனுசரித்தால் உங்கள் ஆளுமைத்திறன் பழுதுபடாமல், எந்த வேலையையும் சரியாகத் தீர்மானித்து நிறைவேற்றமுடியும்.
நீங்கள் செய்துமுடிக்க வேண்டிய மூன்று முக்கிய பொறுப்புக்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டினைப் பழுது இன்றி நிறைவேற்றினாலும் போதும். நீங்கள் சாதனையாளர் தான். உங்களை அறியாமல், நீங்கள் விரும்பாத சில பணிகளைச் செய்ய வேண்டி நேரிடலாம். அந்த மாதிரி இக்கட்டாண நிலையில் நீங்கள் சிக்கிக்கொண்டது கூடத் தெரியாமல் ரொம்பவும் “பிஸி”யாக இருக்கலாம். இந்த இடியாப்ப சிக்கலிலிருந்து விடுபட நீங்கள் முயன்றாலும் முடியாமல் போகலாம். அங்குதான் Managing yourself கை கொடுக்கும்.
உங்களுடைய தனித்தன்மை, திறமை இது பற்றிச் சிந்திக்காமல் நீங்கள் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். அதனால் தடுமாற்றத்திற்கு ஆளாகலாம். இதிலிருந்து எப்படியும் மீண்டுவருவேன் என்று நம்பிக்கையுடன் முயலுங்கள். உங்கள் ஆளுமைத்திறன் உங்களுக்குக் கை கொடுக்கும்.
என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று சிந்திக்கக்கூட கால அவகாசம் இல்லாமல் இருக்கலாம். அப்போது உங்களது “Presence of mind” உங்களுக்குக் கைகொடுக்கும். அடுத்து வாக்குக்கொடுத்துவிட்டு, அப்பணியை முடிக்க முடியாமல் போகலாம். இதற்காக சமாதானம், சால்சாட்டி சொல்லாதீர்கள். உங்களது இந்த தர்மசங்கடத்திற்குப் பிறரைப் பழிக்காதீர்கள். அடுத்த தடவை இதுபோல் பொறியில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்க முயலுங்கள்.
உங்களால் முடியுமா, முடியாதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க முடியும். முடியாததைச் செய்ய முற்பட்டு முடங்குவானேன். முடிந்ததைத் திருப்தியுடன் செய்யலமே. உங்களுடைய ஆளுமைத்திறன் சரியாக இல்லை என்றால் நீங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எளிதில் சோர்வடைந்து விடுவீர்கள்.
சில விஷயங்களில் உங்களுக்கு எரிச்சல் வரும். வேலை செய்வதில் உற்சாகத்தை இழப்பீர்கள். அது கடமையாற்றுவதில் உள்ள உங்கள் அக்கறையைக் குறைத்துவிடும்.
இலக்கை நிர்ணயிக்காமல் எந்தப் பணியையும் செய்ய முற்படாதீர்கள். உங்களுக்கு நீங்களே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
என் குடும்ப வாழ்க்கை, பணியிடத்தில் நான் நடந்துகொள்ளும் விதம், என் சொந்த வாழ்க்கை இவையாவும் திருப்திகரமாக அமைந்துள்ளதா? என் சக்தியை மீறிப் பொறுப்புகளைச் சுமக்கின்றேனா? தேவையில்லாமல் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொள்கிறேனா? மாறுதலுக்கு இடம் தராமல் எப்போதும் அரைத்த மாவையே அரைப்பதுபோல, மாமூலான செயல்பாடுகளிலேயே கவனம் செலுத்துகிறேனா? சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறேனா? என் செயல்முறைதிட்டமிட்ட ரீதியில் அமைந்துள்ளதா?அதிகமாக மன உளைச்சல் இல்லாமல் அமைதியாகப் பணியைச் செய்கின்றேனா?
என்னுடைய பிரச்சனைகளிலிருந்து மீண்டுவர முடியாமல் தவறான பழக்கத்திற்கு ஆளாகின்றேனா? (மதுபோதை, சிகரெட் பழக்கம், சூதாட்டம் போன்றவை) சற்று இதைப்பற்றி நீங்கள் சிந்திப்பீர்களானால், எங்கே நீங்கள் தவறு செய்கிறீர்கள், அதை எப்படிச் சரிசெய்து கொள்ள முடியும் என்ற விவேகம் பிறக்கும். ஆக “”Managing yourself” என்ற அருங்கலையை நீங்கள் சரிவரப் பயின்று என்றும், எப்போதும் செயல்வீரராக மாறுங்கள்.