நகரும் நதிகள்
நதிகள் நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கங்கை நதியைப் பார்க்க வேண்டுமானால் தூரப்பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. அந்நதி வாகனத்திலேரி பயணம் செய்யுமானால் வரவேற்கின்றவாய்ப்பும் இருக்கின்றது. அறிவியல் பூர்வமாக நதிநீர் இணைப்பு குறித்தெல்லாம் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரை உணர்வும், உளவியலும் கலந்ததாக அமைகின்றது. அறிவியலில் இதுவும் ஒரு வகையே இருநதி நீரை ஒன்றாக இணைத்துவிட்டால் பிரிப்பது சிரமம்தான். சிறுவாணி நீர் குடிக்க ஆசைப்படாத ஆட்கள் குறைவு. மற்றநதி நீர்களைக் குடிக்க நிறைய தைரியமெல்லாம் தேவைப்படுகின்றகாலகட்டம் இது. அறிவியல் பூர்வமாக, சமுதாயவியல் பூர்வமாக மிக நீண்ட நெடிய விமர்சனங்கள் நதி நீர் மாசுபடாமலிருக்க மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனையும் நாம் தொடப்போவதில்லை…
எதையும் செய்யப் போவதில்லை… என்று முடிவு செய்துவிட்டால் வாழ்க்கை தெளிவு மிக்கதாகிவிடுகின்றது. ஏதாவதொரு வேலையை செய்துகொண்டு இருக்கின்றோம்… என்றாலே, ஏதாவதொரு மற்றவேலையை செய்யாமல் இருக்கின்றோம் என்றுதானே அர்த்தம். அதனால் கட்டுரை நாம் காட்டுகின்றதிசையிலேயே நதி மாதிரி பயணப்படவிருக்கின்றது என எளிதாக முடிவு செய்யலாம்.
‘வில் டுராண்ட்டின்’ பொன்மொழிகளில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரங்களைப் பற்றி மட்டும் ஆழ்ந்து யோசிக்கின்றமனிதர்கள் கடந்த ஆறாயிரம் ஆண்டுகளில் நடந்ததைப் பற்றி அதிகம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை?! என்று சொல்லிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்க்கை ஏற்கனவே எல்லா வழிகளிலும் வாழப்பட்டு இருக்கக்கூடுமோ? என்னவோ?
நாம் நதிகளின் நீரைப் போல மனிதர்களின் மனதைக் கொள்ளலாம். நீரோடுவது போல மனம் ஓடுகின்றது. ரிக்கி மார்டினின் ‘விவின் லா விட லோகா’ (விசித்திர வாழ்க்கை வாழ்வது) என்றொரு ஆங்கில ஆல்பம் கேட்டுக் கொண்டிருந்தேன். திருச்சி நண்பன் சித்து தான் வழக்கம்போல அறிமுகப்படுத்தி வைத்தான். ‘அவள் என் மனதில் வலியை, மூளையைத் துளைத்துச் செல்லும் புல்லட்போல இல்லாமல் செய்கின்றாள்’ என்று பாடியிருக்கின்றார். இசை எவ்வளவு தூரம் உபயோகரமாக இருக்கின்றது. ஒன்றிரண்டு பாடல்கள் வெற்றிபெற்றால் போதும், அதே வேலையாக உலகம் சுற்றத் தொடங்கி விடுகின்றார்கள். ஆங்கிலப் பாடகர்கள் என்றான், சித்து.
நடந்தாய் வாழி காவிரி! என்றொரு புத்தகம் பற்றி நந்தகுமார் சொன்னது போல ஒகேனக்கல்லிருந்து உள்நோக்கி நகர்ந்தால் பிலிகுண்டுலு தாண்டி இராசி மணல் என்றொரு இடம் வருகின்றது. ஜேக்கப் ஆசீர்வாதம் உடன், முதலைகள் ஆழத்தில் தான் இருக்கும். அவை நம்மை ஒன்றுமே செய்வதில்லை என்று உணர்ந்து கொண்டே பரிசலில் பயணித்தோம். முனியப்பா மசாஜ் என்றபெயரில் சித்துவை பிளந்து ஒட்டவைத்து அனுப்பியிருந்தார். அடுத்த நாளின் கிரிக்கெட் மேட்ச்சில் பக்கவாட்டில் பந்து வீசிக் கொண்டிருந்தான்.
நதிகளின் ஆழம் தெரிவதில்லை. சில இடங்களில் கற்கள் வழுக்கி விட கீழே விழுதல் சுகமாகத்தான் இருக்கின்றது. அடுத்த வேளை உணவிற்கு ஏற்பாடு செய்யாமல் கிடைத்த உணவை உண்டு மகிழ்வது இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்று தோன்றியது. பசித்தவன்தான் மிகவும் இனிப்பான ரொட்டியைப் புசிக்கின்றான் என்றார் பெரியவர். பெண் பார்த்து திரும்பியிருந்த நந்து எவ்வளவோ மசாஜ் அடிவாங்கியும் மூளை குழம்பாமல் எந்த விஷயத்தையும் வெளியே சிந்தாமல் இறுக்கமான உதடுகளுடன் இளகலான விஷயங்களுடன் தொடர்ந்து சிரிக்க முயற்சி செய்து கொண்டே இருந்தான்.
எண்ணெய் திப்பி திப்பியாக படர்ந்து பச்சை நீரின் மீது மிதந்துகொண்டு இருந்தது. ஆழம் அதிகம் ஆகும்பொழுது நதியின் ஆர்ப்பாட்டம் குறைந்து விடும் போல் உள்ளது. நகரும் நதிகள் என்றால் மனிதர்களைத்தான் குறித்துச் சொல்கின்றேன். அவர்களுடைய அனுபவ ஆழம் உயர உயர ஆரவாரம் குறைத்துக் கொள்ளப்படுகின்றது போலும். வில் டுராண்ட் சொல்வது போல மனதிற்கும் வயதாகிவிடுகின்றது என்பது உண்மைதான். நதியொன்று மலர்வனம் வழியாகப் புகுந்து வெளிவந்தால் தேனும் நறுமணமும் சேகரித்து வருவதில்லை?! அதுபோலவே கடந்த முறை நூலகம் சென்றபொழுது சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட ‘ப்ராடிஜி’ வெளியீடு புத்தகங்களைப் பார்க்க நேர்ந்தது. அவற்றில் பெரும்பாலானவை சுயசரிதை குறித்த வெளியீடுகள். அதில் ‘வான்கோ’ என்கின்ற ஓவியமேதை, ‘பிக்காஸோ’ குறித்த புத்தகங்களைப் புரட்டினேன்.
வாழும்பொழுது ‘வான்கோ’ என்கின்ற’நதி’ குறித்து எதுவுமே புரிந்துகொள்ள இயலவில்லை. அவருடைய தம்பியின் மனைவிதான் இருவருமே இறந்த பிறகு வான்கோவின் ஓவியங்களில் அடங்கியிருக்கும் சிறப்புக்குறித்து பெருமைபட பேசி மக்களை புரிந்துகொள்ள வைத்து உலகப்புகழை தேடிக்கொடுத்தார். முன்பு ‘வான்கோ’ தனது காதலிக்காக காதை அறுத்துக் கொண்டவர் என்று படித்திருந்தேன். ஆனால் சுயசரிதை வழியாக வான்கோவோடு வாழ்ந்து பார்த்ததில், அவருடைய நண்பரோடு தனியாக சென்று வாடகை வீட்டில் ஒரு கிராமத்தில் தங்க வைக்கப்படுகின்றார். அங்கே அவர்களுக்குடனான கருத்து மாறுபாட்டில் கத்தி குத்துவரை சூடு பறக்கின்றது. அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடந்துவிடவில்லை. ஆனால் சற்று நேரம் கழித்து தன் காதையே அறுத்துக் கொள்கிறார். அதன்பிறகு காதில் பாண்டேஜ் உடன் தன்னைத் தானே வரைந்து கொண்ட ஓவியம், உலகப் புகழ் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து வந்ததொரு நாளில் தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக் கொண்ட வான்கோ இரண்டொரு நாளில் இறைவனடி சேர்கின்றார். தன்னை மனநல மருத்துவமனையில் சேர்த்துவிடுமாறு தம்பியிடம் கோரிக்கை வைக்குமளவு ‘தன்னம்பிக்கை’ கொண்டு வாழ்ந்த ‘வான்கோ’ என்பவரை நகரும் நதியெனக் கொண்டால் அந்நதியில் நிறைய சுழல்களை காண வாய்ப்பு இருக்கின்றது. இதுபோன்றதிருப்பங்களை சில நதிகளில் மட்டுமே காண இயல்கின்றது.
நதிகள் மீன்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. நிறம் வெளியிலிருந்து பார்க்கும்பொழுது ஒரே மாதிரியாகத் தெரிகின்ற மீன்கள் வேக வேகமாக வளைந்தோடிக் கொண்டிருந்தன. எண்ண அலைகளும் மனதிற்குள் அப்படித்தான். வளைவதும் நெளிவதுமாய்…. முன்பிருந்த இடத்திற்கே மீண்டும் வந்து நிற்பதும், பின்னர் மீண்டும் சுற்றி அலைவதுமாய் எத்தனை சுற்றோட்டங்கள். இரமண மகரிஷி சொல்வதுபோல் நதி தன்னை நதியென உணர்கையில் நதியாகின்றது. நீர் என உணர்கையில் நீரோட்டமாகின்றது. மனிதர்களும் தன்னை யாரென உணர முயற்சித்தல் வேண்டும். ஓட்டத்திலேயே கவனம் செலுத்தினால் இருப்பு நினைவு வருவதில்லை. அமைதியான நதியில் கல் விழுந்தால் கவனிக்க முடிகின்றது. நீர்வீழ்ச்சியில் ஆளே விழுந்தாலும்-அவ்வளவுதான்!? என்றாகிவிடுகின்றது. ஒரு நதியின் பயணத்தில் எல்லாப் பருவங்களும் காண கிடைக்கின்றது. மனிதர்களும் பயிற்சி எடுத்துக் கொள்ள, கொள்ள பக்குவம் அடைகின்றனர். மழை நதிக்கு புத்துயிர் கொடுப்பது போல் படிப்பும், நினைப்பும், மனதை வளமாக்குகின்றது.
0 comments Posted in Articles