– 2019 – June | தன்னம்பிக்கை

Home » 2019 » June (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நில்! கவனி !! புறப்படு !!!  4

    சேவை மையத்தை அணுகுங்கள் ! (பாதை 3)

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

    “அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள்” – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்க்கைக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான  என் லட்சியம்.

    அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

    சேவை மையத்தை அணுகுங்கள் !

    “ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதை – இருவரின் துடிப்பினிலே விளைவது மழலை”.

    அந்த மழலையின் வரவை Birth Certificate என்ற கோப்பில் பதிவு செய்ய இருக்கும் “சேவை மையம்” – இவர் ஒரு இந்தியப் பிரஜை என்று இயம்ப உதவுகின்றது.

    “ஆடி அடங்கும் வாழ்க்கை – இதில் ஆறடி நிலமே சொந்தம்” – என்று உணர்த்தி உயிர் பிரிந்தவர்களின் வாரிசுகளுக்கான Death Certificate ஐ வழங்கும் “சேவை மையம்” – பல குடும்ப வழக்குகளின் தீர்ப்பை மாற்றி வருவதும் உண்மையே.

    “கல்வி, வேலை வாய்ப்பு, ஆதார் எண் போன்ற பல்வேறு வாழ்க்கை நடைமுறைகளுக்கும் சேவை மையங்கள் சிறப்பான சேவை தான் செய்து வருகின்றது.

    பல நடைமேடைகள் இருக்கும் இரயில் நிலையங்களில், நம் இரயில் எந்த நடை மேடையில் என்று சொல்வதற்கும், நாம் பயணிக்கும் பெட்டி இஞ்சினில் இருந்து எத்தனை பெட்டிகள் தள்ளி இருக்கின்றது என்று தெரிந்து கொள்வது வரை – “சேவை மையங்கள்” சரியாக சொல்வதால் தான் நம் பயணம் எப்போதும் ஒரு சுக அனுபவமாக இருப்பதை உணர்கின்றோம்.

    மனிதனுக்கு வாழ்வில் ஏற்படும் தேவைகளை தீர்த்து வைப்பதற்கு எண்ணிலடங்கா சேவை மையங்கள் ஏராளமாகவே இருக்கின்றது.

    அனைத்து அரசியல் அமைப்புகளும் “சேவை மையமாக” தங்களை பிரகடனம் செய்துவரும் சூழலில் “மையம் சேவை” செய்யுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

    “இயற்கையின் சீற்றமும், அதற்கு எதிரான மனிதனின் ஆற்றலும்” நேரடியாக களம் காணும்போது, புயல், வெள்ளம் தந்த இடர்களிலும் “மனித நேயம்” மகத்தான சேவை செய்ததை மானுடம் மறக்காது தன் வரலாற்று பக்கங்களில் பதிவு செய்து வந்திருக்கின்றது.

    முன்பெல்லாம் ஓட்டல்களில் தர்மம் Service ல் அழைத்தால் Order செய்யும் அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் தர்மம் க்கே வந்து தருவார்கள்.

    விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி, மனித மூளையின் மகத்துவம், Digital India என்று பல விஷயங்கள் இன்று மனிதர்களுக்கு தேவையான அனைத்தும் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே.

    பண பரிவர்த்தனை முதல் பட்டா வரை – விரல் நுனியில் சேவை மையங்களின் சேவையில்.

    சமைக்க காய்கனிகள் தொடக்கி – சந்தோஷிக்க வெளிநாட்டு விமான சீட்டு முடிய – அனைத்தும் வீட்டு வாசலில்.

    சரி! இவை அனைத்தும் வாழ்க்கையில் தேவைப்படுபவை தானே.  இவையே வாழ்க்கை அல்லவே.

    அப்படி என்றால் – வாழ்க்கையின் தேவைகளை தருவதற்கு “சேவை மையம்” இருக்கின்றதா?

    இருக்கின்றது.  நிச்சயமாக இருக்கின்றது.

    ஒவ்வொரு மனித ஜீவனின் தேவைகளுக்கும் பதில் அளிக்க, உதவ சிறப்பான ஒரு சேவை மையம் இருக்கின்றது.

    உங்கள் படிப்பிற்கும், வாழ்வின் வெற்றிக்கும் வேண்டிய எல்லாவற்றையும் மறுக்காமல் தருவதற்கும் ஓர் “சேவை மையம்” உண்டு.

    அந்த மையத்தை நீங்கள் தொடர்பு கொண்டால், உங்களுக்கு வாழ்க்கை குறித்த ஒரு தெளிவு கிடைக்கும், வழிகள் கிடைக்கும், பாராட்டுக்கள் கிடைக்கும், புகழ் கிடைக்கும், செல்வாக்கு கிடைக்கும், இலட்சியங்களை அடைய வெற்றி கிடைக்கும் – இப்படி இன்னும் பல..

    அந்த சேவை மையத்தின் பெயர் தான் “பிரபஞ்சம்”

    அனைத்தும் எல்லை இல்லாமல் நிறைந்திருக்கும் பிரபஞ்சம், நீங்கள் கேட்டதை கொடுக்கும் அட்சய பாத்திரம் போன்றது.

    அறிவாளிகள் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அங்கிருந்து தான் பெறுகிறார்கள்.

    பொன்னும் பொருளும் புகழும் வேண்டுபவர்கள் – அதைதான் தங்கள் புதையலாக போற்றுகின்றார்கள்.

    நிறைவையும், நிம்மதியையும் தேடுபவர்களின் நெஞ்சம் விரும்புவதும் அதைத்தான்.

    பிரபஞ்சத்தின் ஆற்றல் அனைவருக்கும் உடல் சக்தியை மட்டுமல்ல, மன சக்தியையும் பிரவாகமாக அளிக்கிறது.

    அந்த பேராற்றலை ஈர்க்கும் நுட்பம் தெரிந்தவர்கள் சத்தமே இல்லாமல் பல சாதனைகளை படைக்கும் வல்லவர்களாக வாழ்கிறார்கள்.

    விளங்கினால் விளங்கும் விஞ்ஞானமும்,  விளங்கினாலும் பிரமிக்க வைக்கும் மைஞானமும் தரும் விளக்கங்களுக்கும் மேலாக விஸ்வரூபமாக இருப்பதே இந்த பிரபஞ்சம்.

    இந்த பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்க ஒரு எளிமையான வழிமுறையை இப்போது பார்ப்போம்.[hide]

    பயிர்ச்சி முறை :

    1. உங்கள் தேவை என்ன என்று சரியாக தீர்மானித்து ஒரு தாளில் எழுதவும். (உதாரணமாக)

    (a) இந்த ஆண்டு முழு ஆண்டு தேர்வில் —— மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவேன்.

    (b) விளையாட்டு போட்டியில் பங்கெடுத்து —— பதக்கங்களை வெல்வேன்.

    (c) இன்னும் ஒரு வருடத்தில் ரூ. ——- சேமிப்பாக வைத்திருப்பேன்.

    (d) ————– நாட்டுக்கு பயணம் செல்ல விரும்புகின்றேன்.

    (e) ————–  நபரை சந்திக்க விரும்புகின்றேன்.

    (f) ————– தேதிக்குள் என்னுடைய எடையை ———- கிலோவாக குறைக்க விரும்புகின்றேன்.

    (g) என் மகனுக்கு/மகளுக்கு ————- வருடத்துக்குள் திருமணம் செய்து வைக்க விரும்புகின்றேன்.

    இதுபோன்று ஒரு பட்டியலை உடனே தயார் செய்யுங்கள்.  இது உங்கள் சிந்தனை திறனை தூண்டும்.

    ஒரு சாதனை மனிதனாக, வெற்றியாளனாக மாற வேண்டும் என்ற உத்வேகத்தை உங்களுக்குள் ஏற்படுத்தும்.

    தெளிவான இலட்சியத்தை உங்கள் மனக்கண் முன் கொண்டுவரும்.

    2. இன்னொரு தாளில் உங்கள் ஒவ்வொரு இலட்சியமும், ஆசையும், விருப்பமும், தேவையும் நிறைவேறி விட்டதாக – இப்போது நடந்து கொண்டிருப்பதாக எழுதவும். (உதாரணமாக)

    (a) ஆசிரியர் நடத்தும் பாடங்கள் முழுவதும் எனக்கு நன்றாக புரிகின்றது.  சுலபமாகவும் இருக்கின்றது.  அதனால், இந்தவருட முழுத்தேர்வில் ——– மதிப்பெண் பெறுவது எனக்கு சுலபமே.

    (b) என்னால் தினமும் சிறிது பணம் சேமிக்க முடிகின்றது.  அதைக்கொண்டு ரூ. ——— ஐ இன்னும் ஒரு வருடத்தில் சேமிப்பேன்.

    (c) தினமும் தவறாது உடற்பயிற்சி செய்வது எனக்கு உற்சாகமாக இருக்கின்றது.  அந்த உற்சாகத்தை துணை கொண்டு என்னுடைய எடையை ———- கிலோவாக குறைப்பேன்.

    (d) நல்ல வரன்கள் நிறைய அமைந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது.  அதைக்கொண்டு ——– வருடத்துக்குள் திருமணம் செய்து வைத்து விடுவேன்.

    இந்தப் பழக்கம், இலட்சியத்தை எப்போதும் உங்கள் நினைவில் உயிரோட்டத்துடன் வைத்திருக்கும்.

    3. உங்கள் இலட்சியங்களை தினமும் பலமுறை சத்தமாகப் படியுங்கள். முக்கியமாக, அதிகாலை நேரம், மற்றும் இரவு உறங்கச்செல்லும் முன்பாக.

    ஏனென்றால், அப்போது உங்கள் இலட்சியங்கள் ஆழ்மனதில் பதிந்து செயலுக்கு வரத்துவங்கும்.  உங்கள் ஆழ்மனம் தான் உங்களை ஒரு வெற்றியாளனாக ஆக்கப்போகின்றது.

    ஆழ்மனம் தான் “பிரபஞ்சம்” எனும் “சேவை மையத்தை” தொடர்பு கொண்டு நீங்கள் கேட்கும் அனைத்தையும் உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கப் போகின்றது.

    எனவே, சரியான விஷயங்களை தொடர்ந்து கேட்டால் உங்களுக்கு தொடர்ந்து வெற்றி தான்.

    அந்த தொடர் வெற்றி உங்களை தொடர என் வாழ்த்துக்கள்.

    Minutes with Mithran – கேள்விகளால் ஒரு வேள்வி

    1. நாளை காலை கண் விழித்ததும் பயமில்லாமல் நீங்கள் செய்யும் முதல் காரியம் என்ன? – என்ற கேள்விக்கு பலரும் தெரியவில்லை என்ற பதிலையே சொன்னார்கள். இல்லத்தரசி திருமதி. சுதா அவர்கள் “தெரியவில்லையே! என்றார். ஒரு தேர்ந்த இலட்சியம் கொண்டவர்கள் சொல்வது “என் வெற்றிப்பயணம் சிறக்க இன்னுமொரு நாள் கிடைத்திருப்பதால் எந்த பயமும் இல்லாமல் கிடைத்திருக்கும் புதிய நாளை நன்றியுடன் வரவேற்பேன்” – என்பார்கள்.
    2. 5 வருடங்களுக்கு முன் உங்களுக்கு இருந்த மிகப்பெரிய கவலை என்ன? இப்போதும் இந்த நிமிடமும் அவை உங்களுக்கு இருக்கின்றதா? – என்ற கேள்விக்கு “வியாபாரம் சிக்கலான திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்ற கவலை இருந்தது.  ஆனால், ஒரு பெரிய நிறுவனத்தின் Order வந்தவுடன் – அந்த கவலை என்னை விட்டு போய்விட்டது” – என்றார்.

    இங்கே கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் (100 கேள்விகள் இடம்பெறும்) உங்கள் வாழ்க்கைக்கான வழித்துணை.  இந்த கேள்விகளும், அதற்கான உங்கள் பதில்களையும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வையுங்கள்.  தட்டச்சு செய்து பாதுகாப்பது இன்னும் சிறந்தது.  இந்தக்கேள்விகள் உங்கள் வாழ்க்கை பயணத்துக்கான வரைபடம்.

    பத்து நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பதில்களை மீண்டும் சரிபாருங்கள்.  பதி|ல் மட்டுமல்ல – உங்கள் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகி வருவதை நீங்களே கண்கூடாக காணலாம்.

    திசைகளை தீர்மானியுங்கள் ! திட்டமிடுங்கள் ! செயல்படுங்கள் !
    கேளாய் மகனே கேளொரு வார்த்தை ! நாளைய உலகின் நாயகன் நீயே ![/hide]

    இந்த இதழை மேலும்

    வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 9

    அதிகாரத்தை அடைய 48 விதிகள்

    (The 48 Laws of Powers)

    இந்த நூலின் ஆசிரியர் இராபர்ட் கிரீன் (Robert Greene) ஆவார். (இந்த நூலை முனைவர் எம்.எஸ்.குமார் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். விவா புக்ஸ் வெளியிட்டுள்ளது) இந்த நூல் மூவாயிரம் ஆண்டுகளுக்கான அதிகாரச் சரித்திரத்தின் சாரம் ஆகும். உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களான மேக்கியவில்லி, சன்சூ, கார்ல்வான்க்ளாஸ்விட்ச் ஆகியோரின் ஞானத்தை இந்நூல் வடித்துக் கொடுத்திருக்கிறது. மேலும் காலங்காலமாக இருந்து வந்த ராஜதந்திரிகள், போர் வீரர்கள், வஞ்சியர், ஏமாற்றுப் பேர்வழிகள் போன்றோர் விட்டுச் சென்ற வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன. சிலர் அதிகாரத்தோடு விளையாடி மோசமான தவறு இழைப்பதால் அதனை இழக்கின்றனர். சிலர் மனித ஆற்றலையும் மிஞ்சி லாவகத்துடன் மிகச் சரியாக அனைத்துக் காய்களையும் நகர்த்தி அதிகாரத்தை தங்களை நோக்கி ஈர்க்கின்றனர். அதிகாரம் எப்படியானவர்களின் கைகளில் இருக்கிறது. இந்த அதிகாரத்தை இவர்கள் எப்படிக் கைப்பற்றினார்கள். அதிகாரம் எப்படியான வலிமையுடையது. ஏன் மனித சமூகம் அதிகாரத்தை அடைய மாபெரும் விருப்பம் கொண்டு ஓயாமல் போராடி வருகின்றது. இந்த அதிகாரத்தை எப்படியானவர்களால் அடைய முடியும். எப்படியானவர்களால் அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை உலக வரலாற்றில் பல சான்றுகளுடன்; பல்வேறு கதைகளையும், பல்வேறு உலக வரலாற்று உண்மைகளையும் ஒரு வேத நூல் போல இந்நூல் சொல்கின்றது. இந்த நூலை மிகச் சாதாரணமாக ஒருவர் வாசித்துவிட்டு; வைத்துவிடமுடியாது. வாசிப்பவரை மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லும் தகவல்களும், கருத்துக்களும் அடங்கிய ஒரு வாழ்வியல் களஞ்சியமாய் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலைப் படிப்பதன்மூலம் நாம் வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறமுடியாவிட்டாலும் பெரிய தோல்வியிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள 48 விதிகள் ஒவ்வொன்றும் அதிகாரத்தை அடைய விரும்புபவர்கள் கைக்கொள்ள வேண்டிய பண்புநலன்களை மிக விரிவாக பேசுகின்றன.

    48 விதிகளில் சில வருமாறு.

    • தலைவரைவிட எப்பொழுதும் அதிகமாக ஓளி வீசாதீர்கள்.
    • நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைக்காதீர்கள்.
    • உங்கள் நோக்கங்களை மறைத்துக்கொள்ளுங்கள்.
    • தேவைக்குக் குறைவாக எப்பொழுதும் பேசுங்கள்.
    • வாக்குக் கொடுத்தால் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றுங்கள்.
    • என்ன விலை கொடுத்தேனும், பிறர் கவனத்தைக்                  கவர்ந்திடுங்கள்.
    • மற்றவர்களை உங்களுக்காக வேலை செய்ய வையுங்கள்.
    • பிறர் உங்களிடம் வருமாறு செய்யுங்கள்.
    • உங்கள் செயல்கள் மூலம் வெற்றி பெறுங்கள். எப்பொழுதும் விவாதத்தின் மூலமாக வெற்றி  பெறாதீர்கள்.
    • அதிர்ஷ்டம் இல்லாதவர்களுடன் சேராதீர்கள்.
    • நண்பனாக நடியுங்கள், ஒற்றனாக வேலை செய்யுங்கள்.
    • உங்கள் எதிரியை முழுமையாக நசுக்குங்கள்.
    • உங்கள் செயல்களைக் கணிக்க முடியாதபடி பாவனையை வளர்த்துக்       கொள்ளுங்கள்.
    • எவரிடமும் உங்களை ஒப்படைத்து விடாதீர்கள்.
    • உங்கள் ஆற்றல்களைக் குவியுங்கள்.
    • முழுமையான அரசவை உறுப்பினராக நடியுங்கள்.
    • துணிவுடன் செயலில் இறங்குங்கள்.
    • முடிவு வரை வழியெல்லாம் திட்டமிடுங்கள்.
    • கிட்டாதாயின் வெட்டென வெறுத்திடுங்கள்.
    • மீனைப் பிடிக்க நீரைக் கலக்குங்கள்.
    • முழு நிறைவானவர்களாக எப்பொழுதும் தோன்றாதீர்கள்.

    என்றவாறு வெற்றிவிதிகள் ஒரு சூத்திரம் போல் சொல்லப்பட்டு; ஒவ்வொரு விதியும் காரணகாரியங்களுடன் மிக விரிவாக ஆராய்ந்து விளக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றிரண்டை நான் இங்கே விளக்க முற்படுகின்றேன்.[hide]

    தலைவரைவிட எப்பொழுதும் அதிகமாக ஓளிவீசாதீர்கள்.

    உங்களுக்கு மேலாக இருப்பவர்களைவிட நீங்கள் அதிகாரமும் அறிவும் இருப்பவராக எப்போதும் காட்டிக்கொள்ளக் கூடாது, எந்தத் தலைவனும் தன்னைவிட ஓளிவீசும் ஒருவனை விரும்பமாட்டான் என்பது உலக நியதி. நீங்கள் உங்கள் திறமைகளை அதிகம் காட்டினால் எதிர்மறை விளைவுகள் தான் ஏற்படும். நீங்கள் அதிகாரமுடையவர் போன்று தோன்றினால் உங்கள் மேலதிகாரிக்கு நீங்கள் அவரின் மனதில் அச்சத்தினையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்திவிடும். உங்களைவிட உங்கள் தலைவர் அதி புத்திசாலி என்ற தோற்றத்தை ஏற்படுத்த நீங்கள் பாடுபடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் அதிகாரத்தின் சிகரங்களை அடைவீர்கள். இதனை நாம் “நிறைவாகும் வரை மறைவாக இரு” என்ற பழமொழி மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

    ஒரு நேரத்தில் ஒரே ஒரு கதிரவன்தான் இருக்க முடியும். கதிரவனின் ஓளியை நீங்கள் எப்பொழுதும் மங்கச் செய்யாதீர்கள். அல்லது கதிரவனின் ஓளியுடன் எப்பொழுதும் நீங்கள் போட்டி போடாதீர்கள். ஆனால் மெள்ள மெள்ள வானத்தில் மங்கி மறையுங்கள். தலைமை விண்மீனின் தீவிர ஓளியை அதிகப்படுத்த வழிகளைக் கண்டுபிடியுங்கள். தலைவரை விஞ்சுவதைத் தவிர்த்திடுங்கள். எல்லா மேலாண்மையும் வெறுக்கத்தக்கது. ஆனால் ஓர் அரசனை மீறிய குடிமகனின் மேலாண்மை முட்டாள்தனமானது மட்டுமல்ல. அழிவுக்கானதும் ஆகும். வானத்திலுள்ள விண்மீன்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் இது. அவை கதிரவனுக்கு உறவானதாக இருக்கலாம். அதனைப்போன்று ஓளிர்வுடையதாய் இருக்கலாம். ஆனால் அவை அதனுடன் எப்பொழுதும் தோன்றுவதில்லை.

    வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைபவர்கள் அரசர்களையும், அரசிகளையும் போன்றவர்கள். அவர்கள் தங்கள் நிலைகளில் பாதுகாப்பாக இருப்பதை உணர விரும்புகின்றனர். மேலும் அவர்கள் அறிவிலும், சமத்காரத்திலும் கவர்ச்சியிலும் தங்களைச் சுற்றி இருப்பவர்களைவிட மேம்பட்டவர்களாக இருப்பதை உணர விரும்புகின்றனர். இந்நிலையில் நீங்கள் தலைவரைவிட ஓளியுடன் திகழ்ந்தால்; அவர் உங்களை வெளியேற்றி விட்டு, உங்களைவிட புத்திசாலித்தன மற்ற அல்லது திறமையற்ற ஒருவரை உங்கள் இடத்தில் நியமித்துவிடுவார். ஆகவே நீங்கள் தலைவரைவிட ஓளிவீசாமல் இருப்பதே உங்களுக்குப் பாதுகாப்பானது என்கிறது இந்த விதி. இந்த நூலின் முதல் விதியும் இதுதான்.

    மற்றவர்களை உங்களுக்காக வேலை செய்ய வைத்தல்

    உங்கள் சொந்த நோக்கத்தை முன் எடுத்துச்செல்ல மற்றவர்களது ஞானம், அறிவு மற்றும் அலுப்பு வேலைகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்கள் மதிப்புமிக்க நேரத்தையும் சக்தியையும் காப்பாற்றும். அதுமட்டுமல்ல, அது உங்கள் ‘திறமை மற்றும் வேகத்தின் கடவுளாக்கி’ ஓளிவட்டத்தைக் கொடுக்கும். முடிவில் உங்கள் உதவியாளர்கள் மறக்கப்படுவார்கள். நீங்கள் நினைக்கப்படுவீர்கள். மற்றவர்கள் உங்களுக்காகச் செய்யக்கூடிய எதையும், நீங்கள் எப்பொழுதும் செய்யாதீர்கள்.

    அதிகார உலகம் ஒரு காட்டினுடைய இயக்க ஆற்றலைப் பெற்றிருக்கிறது. வேட்டையாடியும், கொன்றும் வாழ்க்கையை நடத்தும் விலங்குகள் அங்கே இருக்கின்றன. நீங்கள் அப்பாவித்தனமாக இருக்காதீர்கள். நீங்கள் மற்றவரை உங்களுக்காக வேலை செய்ய வைப்பதில் உங்களின் பெரு வெற்றி மறைந்துள்ளது. இதனை ஐசக் நியூட்டன் “பூதங்களின் தோள்களின் மேல் நிற்றல்” என்று கூறுவார். அவர் தனது கண்டுபிடிப்புக்களை பிறர் சாதனைகளின்மேல் உருவாக்கியதாக அவர் இதற்குப் பொருள் கூறுவார். பண்டைய, மத்திய கால மற்றும் மறுமலர்ச்சிக்கால விஞ்ஞானிகளின் நுண்ணறிவுத் திறனைப் பெரிதும் பயன்படுத்தும் தன் கூர்மதித் திறமையால்தான் அவரைச் சுற்றி மேதை என்ற ஓளிவட்டத்தின் பெரும் பகுதி உருவாகியது என்பதை அவர் சொல்லத் தயங்கவில்லை. ஷேக்ஸ்பியர் தன் கதைப் பின்னல்கள், பாத்திரப் படைப்பு மற்றும் உரையாடல்களையும் பிற எழுத்தாளரிடமிருந்தும் குறிப்பாகப் புளுடார்க்கிடமிருந்தும் பெற்றார் என்பது வரலாறு. ஆக எந்த வெற்றியும் தன்னால் மட்டுமே உருவாகாது. பிறரைப் பயன்படுத்திக்கொள்வது அதிகாரப்படுத்தலில் ஒரு விதி என்கின்றது இந்நூல். நிக்கோலே கேக்கியவல்லி என்ற ராஜதந்திரி சொல்வது இங்கே நினைக்கத்தக்கது. “தன்னைச் சுற்றியுள்ள பெரும்பாலான கெட்டவர்களிடையே, எல்லா நேரத்திலும் நல்லவனாக இருக்க முயலும் எந்த மனிதனும் சீக்கிரத்தில் அழிந்துபோவான்” என்ற செய்தி இந்த உலகில் உயிர்வாழ விரும்பும் எல்லோருமே தெரிந்திருக்க வேண்டியது. இந்த நூலில் இடம்பெறும் ஏழாவது விதி இது ஆகும்.

    உங்கள் தரத்தைவிட ஊமையாகத் தோன்றுங்கள்

    இந்த விதி இந்த நூலில் 21ம் விதியாகச் சொல்லப்பட்டுள்ளது. ஓர் ஏமாளியைப் பிடிக்க நீங்களும் ஓர் ஏமாளியாக நடியுங்கள். உங்கள் தரத்தை விட ஊமையாகத் தோன்றுங்கள் என்பது இந்த விதியின் விரிவு. அதாவது உங்கள் மேதைமையை மறைத்து நான் கொஞ்சம் பேதை என்று காட்டிக்கொள்வது. இதனை சீனப் பழமொழி “புலியைக் கொல்லப் பன்றியாக முகமூடி போடு” என்று கூறும். புலிகளைப்போல் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையும் ஆணவமும் கொண்ட மனிதர்களிடத்தில் பன்றியாக முகமூடிப் போட்டுக் கொண்டு செல்வது பலனளிக்கும். உங்களை இரையாக்கிக்கொள்வது எவ்வளவு எளிதென்று அவர்கள் நினைக்கிறார்களோ, அதைவிட எளிதாக நீங்கள், நிலைமையை மாற்றிப்போட்டு அவர்களை எளிதாக இரையாக்கலாம். ஒரு பொருளைப் பற்றித் தெரியாததுபோல் தோன்றுதல் சில சந்தர்ப்பங்களில் மிக மிக உயர்ந்த ஞானமாகும். நீங்கள் அறியாமையுடன் இருக்கக்கூடாது. ஆனால் அறியாதவர்போல் நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். முட்டாள்களின் மத்தியில் புத்திசாலியாகவும், பைத்தியக்காரர்கள் மத்தியில் நல்ல மனநிலையில் உள்ளவராகவும் இருப்பதில் அதிகப் பலனில்லை. முட்டாளாக நடிப்பவர் முட்டாளில்லை. பிராணிகளிலேயே மிக மிக ஊமையான பிராணியின் தோலை நீங்கள் போர்த்திக் கொண்டிருந்தால், உங்களை எல்லாரும் மிக மிக நன்றாக வரவேற்பார்கள் என்று கூறும் இராபர்ட்கிரீன் வெற்றி அல்லது அதிகாரம் அடைதல் என்பதும் உயர்நிலையை அடைந்து அங்கே நிலைத்திருப்பது எப்படி என்பதற்கு காலங்காலமாய் இருந்துவரும் சிந்தனைகளை ஒரு கோட்பாட்டு அடிப்படையில் சொல்லியுள்ள இந்நூலின் கருத்துக்கள் அனைத்தும் உலகம் முழுமைக்கும் பொதுவானது. இந்நூலில் இடம்பெறும் 21வது விதி இது ஆகும்.

    அதிகாரம் எப்பொழுதும் உருகி ஓடிக்கொண்டே இருக்கும். ஏனென்றால் அதிகாரத்தைப் பிடிக்கும் விளையாட்டு அதன் இயற்கைப்படியே ஓடும் திரவம். அது ஒரு போராட்டக்களம். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏறக்குறைய எப்பொழுதுமே கீழ்நோக்கிப் பாய்ச்சலில் இருப்பார்கள். இந்நூல் அதிகாரத்தை அடைய விரும்பும் எல்லோரும் படிக்கவேண்டிய நூல்.

    – வாசிப்பு தொடரும்…[/hide]

    இந்த இதழை மேலும்

    நம்பிக்கை நாயகர்கள்

    புயலில், மரத்தைத் தாங்கி நிற்கும் ஆணிவேர் போல, வாழ்க்கைப் புயலில் நம்மைச் சாய்த்து விடாமல் காப்பது தான் தன்னம்பிக்கை.  உலகமே எதிர்த்து நின்றாலும், நமக்குப் பின்னின்று ஏசினாலும், நமக்கு முன்னே தூற்றினாலும், நம்மைத் தளர விடாமல் தாங்கிப் பிடிக்கும் முதல் கை தன்னம்பிக்கை. இதுவே, நம் சுயத்தின் பலம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.

    தன்னம்பிக்கை ஊன்றுகோல் போன்றது. கால் தடுக்கும்போது, கீழே விழுந்து விடாமல் ஊன்று கோல் தாங்கிப் பிடிப்பது போல, நாம் தோல்வியைச் சந்திக்கும் போதும், நம்முடைய முயற்சி, நாம் எதிர்பார்க்கும் பலனைத் தராத போதும்,  நம்மைச் சுற்றியுள்ள உலகம்,  நம் தகுதிக்கும்,  திறமைக்கும் உரிய அங்கீகாரம் தராத போதும்,  நம்மை மனம் தளர விடாமல் தாங்கிப் பிடிப்பது தான் தன்னம்பிக்கை.

    தன்னம்பிக்கை வாழ்கையை தங்கமாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த கதை.

    ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த சிறுவன்,  கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லி கொடுத்தான். அந்தக் கடிதத்தை அந்தத் தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும்படி படித்தாள்.“உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை. அதனால் தயவு செய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று.

    பல ஆண்டுகளுக்கு பிறகு சிறுவனின் தாயாரும் காலமாகி விட்டார். அவரும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் ஆனார். இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொரு முறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்.  அதில் இப்படி எழுதியிருந்தது.

    “மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்” என்று.  இதைப் படித்த அவர் கதறி அழுதார். அவர் தான் பின்நாளில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன். பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

    “மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்” என்று. நம் பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும். குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்!

    தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் நூலிழை  தான் வித்தியாசம் என நினைக்க கூடாது. தன்னம்பிக்கை தலை நிமர வைக்கும்.  கர்வம் தலைகுனிய வைக்கும்.  இதை உணர்த்தும் கதை இதோ,

    அசாதாரணமான அறிவும்,  தன்னம்பிக்கையும் கொண்ட  ஹிட்லர் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முன் ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. ஆனால் தன்னால் நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை திடமாக அவரிடம் இருந்தது. 1933 ல் ஹிட்லர் தன் நாட்டு மக்களிடம் கூறினார். “எனக்கு நான்கே நான்கு வருடங்களைக் கொடுங்கள்.”  என்றார். சொன்னபடி நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டினார்.  எழுபது லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாட்டில் தொழிற்சாலைகளையும், வாணிபஅபிவிருத்தியையும் ஏற்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கினார்.  நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிக நல்ல நிலைக்கு உயர்த்தினார். எல்லாம் அவரது தன்னம்பிக்கை செய்து காட்டியது.

    ஆனால் அதே தன்னம்பிக்கை கர்வமாக மாற ஆரம்பித்தவுடன் அழிவும் ஆரம்பித்தது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவரின் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்திலேயே பேரழிவுகளை ஏற்படுத்தின.

    அடாத மழையிலும் விடாது முளைக்கும் காளான்போல, எரிந்து போனாலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போலத் தோல்வியிலிருந்து துள்ளி எழுவதல்லவா வாழ்க்கை! யாருக்குதான் துயரமில்லை. துயரமின்றி உயரமில்லை. துன்பமின்றி இன்பமில்லை. அடிகளால் அனுபவங்கள் கிடைக்கின்றன, அனுபவங்கள் நமக்கு ஆசானாகின்றன. தண்ணீரில் மிதக்கும் கப்பலை சிறுதுளை வழியே உள்நுழையும் தண்ணீரே கவிழ்க்கிறது. நாம் நம் மனதிற்குள் அனுமதிக்கிற கவலைகள்தான் நம்மைக் கவிழ்க்கின்றன.

    டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என்றதும் “கனவு காணுங்கள்”என்ற வெற்றிச் சூத்திரம் நம் மனதை வருடுகிறதே! தமிழகத்தின் ராமேஸ்வரம் எனும் சின்னஞ் சிறுதீவில் பிறந்து தன் விடாமுயற்சியால் மாபெரும் விஞ்ஞானியாய், ஆய்வறிஞராய், இந்தியக் குடியரசுத்தலைவராய் உயர்ந்த அந்த மாமனிதர் வாழ்வில் சந்திக்காத தோல்விகளா? ‘கனவுகாணுங்கள்’ என்று கூறி எங்களைத் தூங்கச் சொல்கிறீர்களா? என்றொரு மாணவி அவரிடம் கேட்டார், அதற்குக் கலாம் அவர்கள், ”தூங்கும்போது வருவதல்ல கனவு, எது உன்னைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுவே கனவு” என்ற அவரது பொன்மொழி நினைவுக்கு வருகிறதே! நம்மில் எத்தனைப் பேரிடம் கனவுகாணும் அற்புதக்கண்கள் உள்ளன? இரண்டு சூரியன்களை நம் இமைக்குள்ளே இருத்துக்கொண்டு இருளில் இருப்பதாய் இனியும் சொல்லத்தான் வேண்டுமா?[hide]

    டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்றவுடன் “நம்பு தம்பி நம்மால் முடியும்” என்ற வாசகம் நினைவுக்கு வருகிறது அல்லவா? வேதியியல் பேராசிரியராகத் தன்பணியைத் தொடங்கி,அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் பணியாற்றித் தன்னம்பிக்கைத் தத்துவத்தைப் பிரபலப்படுத்த ‘மக்கள்சக்தி இயக்கம்’ என்ற இயக்கத்தின் மூலம் இளைய சமுதாயத்தை மனஉறுதி உள்ளவர்களாக மாற்றிச் சென்ற மகத்தான மனிதர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் வெற்றிவாசகம், “நம்பு தம்பி நம்மால் முடியும்” என்பதுதானே.அவரது தன்னம்பிக்கை கண்டு வியந்துபோன கமல்ஹாசன், உன்னால் முடியும் தம்பி என்ற நம்பிக்கைத் திரைப்படத்தை உருவாக்கி அப்படத்தின் கதாநாயகனுக்கு உதயா என்று பெயர்சூட்டி மகிழ்ந்தது நாம் அறிந்த ஒன்றே!

    “உங்களால் வெல்ல முடியும்”  என்ற தன்னம்பிக்கை நூலின் ஆசிரியரான ஷிவ்கேராவின் வெற்றிவாசகம் “தன்னம்பிக்கை உடையவன் தனிமனித ராணுவம்”என்பதுதானே. வெற்று மனத்தை வெற்றி மனமாக்கும் வித்தை நம்மிடம்தானிருக்கிறது.

    “உள்ளங்கையிலே ரேகைகள் எதற்கு

    ஜோசியம் பார்கவா அது இங்கு இருக்கு.?

    ரேகைகள் தேய்ந்திட உழைத்தால்

    வெற்றிகள் உன் கையில்.”

    என்பதும் வாழ்வில் வெற்றி பெற உதவும் உன்னத வரிகள்.

    தன்னம்பிக்கை பற்றிய பல பொன்மொழிகள் வாழ்வியல் வரலாறுகளே! நான் ஆரம்பத்தில் 1? செயல்களை செய்தால் 9 செயல்கள் தோல்வியாகவே முடியும். தோல்வி என்னை கேலி செய்தது. 9 முறை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என சிந்தித்தேன். 9? முறை முயன்றால் 9 வெற்றி கிடைக்கும் அல்லவா? என அன்று முதல் முயற்சியின் எண்ணிகையை அதிகமாக்கினேன். இதுதான் என் வெற்றியின் ரகசியம் என்பது பெர்னாட்ஷாவின் பொன்மொழி

    “வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலத்தனம்” என்பது தாரா பாரதியின் தங்க வரிகள்.

    உன் தன்னம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் தனியாக தரணியில் வெற்றி பெறலாம். போராடி தோல்வி கண்டால் வெற்றி பெற்றவன் கூட நம்மை கண்டு அஞ்சி நடுங்குவான்.

    ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும்போது கிளை எப்போது முறிந்து விழும் என அச்சபடுவதில்லை ஏன் எனில் அது நம்புவது மரத்தின் கிளைகளை அல்ல,  தன் சிறகுகளை..

    ஆகவே, தன்னம்பிக்கை போற்றினால் உலகம் நம்மை போற்றும். விதை விதைத்துவிட்டு விண்ணை நம்பி மண்ணைப் பார்த்துக் கொண்டிருப்பதும் விவசாயியின் தன்னம்பிக்கை தான். தன்னம்பிக்கை எனும் தாரக மந்திரத்தை  ஏற்று நம் தலைவிதியை மாற்றுவோம். புதியதோர் உலகம் படைப்போம்.

    ஸ்டீபன் ஹாக்கிங். அண்மையில் உயிரிழந்த மிகப்பெரிய ஆராய்சியாளர். இளம்வயதில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட இவர் உயிர் போகும் நிலையிலும் தன் தன்னம்பிக்கையை கைவிடவில்லை. தன்னம்பிக்கையும் அவரை கைவிடவில்லை சுற்றும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பூமி சுற்றுவதை பற்றியும் அதற்கு மேலாக அண்டத்திலும், கருந்துளைகள், வெப்ப இயக்கவியல், கருங்குழி வெப்ப இயக்கவியல் என்னும் தலைப்பில்   அண்டவியல் ஆய்வுகளை நடத்தி அகிலத்தை அதிர செய்தார். இவர் தன் 76-ம் அகவையில் மறைந்தார். [/hide]

    இந்த இதழை மேலும்

    சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்க

    நீண்ட தூரப்  பயணங்களில் இடையிடையே நாம் சிறு நீர் கழிக்க வேண்டியிருக்கும். பொதுக் கழிப்பிடமாக இருந்தாலும் அல்லது வெளிக் கழிப்பிடமாக இருந்தாலும் அவை பெரும்பாலும் அசுத்தமாகவும், அனைத்து நோய்க் கிருமிகளையும் கொண்ட இடமாகவே இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதைவிட  அடக்கி வைத்துக்கொள்வது பரவாயில்லை என்ற முடிவிற்கு நாம் அனேக முறை வருகிறோம்.  ஆணாக இருப்பின் அசுத்தமான இடத்திலும் எப்படியோ நின்று கொண்டேவாவது சிறுநீர் கழித்துவிடுகிறோம். அதுவே, பெண்ணாக இருப்பின் அசுத்தமான இடத்தில் உட்கார்ந்தல்லவா கழிக்க வேண்டியிருக்கிறது. ஆக, இதற்கு பயந்து அடக்கி வைத்துக் கொள்வதைத்தான் தேர்வு செய்கிறார்கள். என்ன கொடுமையடா நம் நாட்டில். கழிப்பிட சுதந்திரம் கூட நமக்கு (குறிப்பாக பெண்களுக்கு) இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    அசுத்தமான இடங்களில் சிறு நீர் கழிக்க பயந்து அடக்குவதால் உண்டாவதுதான் சிறுநீரகக் கல் பிரச்சனைகள். இது நல்லதுக்கல்ல.

    அப்புறம் சிறுநீரக கற்களை அகற்ற இரசாயன மருந்துகளை எடுப்பதாலும் நம் சிறுநீரகப்பாதையில் அழற்சி ஏற்பட்டு சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறது. ஆக, இப்படியும் நமக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சரி போகட்டும் என்று அசுத்தமான இடத்தில் சிறு நீர்கழிப்பதால் ஏற்படும் நோய்த் தொற்றை நீக்க ஆங்கில மருத்துவம் இரசாயன கிருமி நாசினிகளைத்தான்  (Antibiotics) கொடுக்கிறது. இங்கேயும் கிருமி நாசினிகளின் அமிலத்தன்மையை ஈடுசெய்ய நம் எலும்பின் சுண்ணாம்புக் காரம் கரைக்கப்படுகிறது. பிறகு இரசாயன மருந்தின் அமிலமும் எலும்பின் காரமும் ஒன்று சேர்ந்து உப்பாகிறது. இந்த உப்பு நம் சிறுநீரகத்தில் கற்களாகப் படிமானமாகிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் பிரச்சனை சிறுநீரகங்களைச் சுற்றியே நிகழ்கிறது. இதற்குத் தீர்வுதான் என்ன? [hide]

    இதற்கு நாம் ஒரு தீர்வைக் கண்டுள்ளோம். நாம் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் நம் கையில் ராக் ரோஸ் (Rock Rose) என்ற மலர் மருந்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு முறை பிரயாணத்தில் சிறு நீர் கழித்த பின்னர் ஒரு டோஸ்  (4  மாத்திரைகள்) ராக் ரோஸ் மருந்தை வாயில் போட்டு சப்பினால் போதும். நம் மூச்சு மற்றும் பிறப்புறுப்பு வழியே உள்ளே வந்த எப்பேர்பட்ட கிருமிகளையும் அந்த கனத்திலேயே வெளியேற்றம் செய்துவிடும். இந்த மலர் மருந்து கிருமியைக் கொல்வதில்லை. கிருமிகள் வளர்வதற்குத் தேவையான அசுத்தங்களை ராக் ரோஸ் நீக்குவதால் கிருமிகளும் வெளியேறுகின்றன.

    அப்புறம்  ராக்ரோஸ் மருந்தை பிரயாணத்தில் எடுப்பதால் இன்னும் சில நன்மைகள் ஏற்படுகின்றன. அவைகளுள் ஒன்று நாம் பயணங்களில் சாப்பிடும் உணவின் விஷங்கள் யாவும் வெளியேற்றம் செய்ய உதவியாக இருக்கிறது. இவ்வித விஷங்கள் வெளியேற்றப்படாவிட்டால் பயணம் முடித்து வீட்டிற்கு வந்த பின்னர் அந்த விஷத்தால் வளர்ந்துவிட்ட வைரஸ் தொற்றிற்கு ஆட்பட வேண்டியிருக்கும். ராக் ரோஸின் இன்னொரு பயன்பாடு நாம் கொசுக்கடியின்றி பயண இடங்களில் நிம்மதியாகத் தூங்க முடியும். இதற்கு காரணம் ராக் ரோஸ் மலர் மருந்தானது கொசுவிற்கு விருப்பான இரத்த அசுத்தங்களை நீக்குகிறது.

    அடுத்து, நான் ராக் ரோஸ் பற்றிக் கூறப்போவதை நீங்கள் நம்பமாட்டீர்கள். இருந்தாலும், என்னுள் இருக்கும் இறை நிலை கட்டளையிடுவதால் இதையும் உங்கள் முன் வைக்கிறேன். ராக் ரோஸ் மருந்தை பிரயாணத்தில் எடுக்கும் போது நம் ஆன்மசக்தியின் ஆற்றலானது எல்லையற்ற இறைநிலையோடு தொடர்பு கொண்டு நம்மை எந்தவிதமான விபத்துகளும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. நம் ஆன்மா விழிப்பு நிலையில் இருப்பதால், எந்த அதிரடி விபத்து ஆபத்து நேர்கையிலும் அந்த கனத்தில் நாம் அதிலிருந்து தப்பிக்கும் செயலைச் செய்ய உதவியாக இருக்கும். என் 15 வருட மலர் மருந்து அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுவது என்பது உங்கள் உள் இருக்கும் இறைத் தன்மையைப் பொறுத்ததாகும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    ஏற்றுக்கொள்ளுதல்

    நமது வாழ்வில் ஏதோ ஒரு எதிர்பாராத சங்கடமான விஷயம் நடந்து விட்டது. அதை மனம் சகித்துக் கொள்ளாத போது, ஏற்க மறுக்கும் போது கோபம் ஏற்படுகிறது. ஏதோ ஒன்றை உங்களால் அடைய முடியவில்லை. மற்றவர் அடைந்து விட்டார். அவரை அங்கீகரிக்க மறுத்தால் அது பொறாமையாகி விடுகிறது. அவரது  வெற்றியை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது உங்களுக்கு ஓரு உத்வேகம் பிறக்கிறது. அவரை முன்மாதிரியாக நினைத்து மறுபடியும் நீங்கள் முயற்சிக்கும் போது ஓரு நாள் நீங்கள் அந்த இலக்கை நிச்சயம் அடைவீர்கள். உங்களை ஒருவர் காயப்படுத்துகிறார். அதை நீங்கள் ஏற்க மறுக்கும் போது வெறுப்புணர்வு ஏற்படுகிறது. எதிர்மறைஉணர்வுகள் ஏற்படுகிறது. அதை சகித்துக் கொள்ளும்போது நேர்மறை உணர்வுகள் ஏற்படுகிறது.

    நாம் விரும்பாத ஒன்று நடந்து விட்டது. அல்லது நடக்கப் போகிறது. அதை சகித்துக் கொள்ள, ஏற்க மறுக்கும் போது அங்கு கோபமும் கலகமும் ஏற்படுகிறது. நிலைமை மேலும், மோசமாகிறது.

    சிலர் பனிச்சாரலில் மலைச்சிகரத்தில் ஏறுகிறார்கள். நிச்சயமற்றதன்மை நிறையவே உள்ளது. அதை “சாகசம்” என்கிறோம். இதுவே தயங்கினால் “பயம்” என்கிறோம். கஷ்டமான சூழ்நிலையை சகித்துக் கொண்டு கடப்பது மனஉறுதி. வலியும், எதிர்ப்பும் பெருகும் போது மிகுந்த துன்பம் அடைகிறோம். வலியை ஏற்றுக் கொள்ளும்போது, அதற்கு எதிராக போராடாத போது குறைந்த துன்பமே அடைகிறோம். மனம் விரும்பி ஏற்றுக்கொள்வது அல்ல. மாற்ற முடியாததை எதிர்த்து போராடுவதை விட அதை ஏற்றுக் கொள்ளுதல் சிறந்தது.

    டி.வி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழும் காட்சிகளை காண்கிறோம். ரசிக்கிறோம்.

    உங்களுக்கு என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் அதை உங்கள் இருப்பின் ஒரு பாகமாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்றுக் கொள்ள பழகுங்கள் எல்லாமே இனிமையாய் மாறிவிடும். எதையும் புறந்தள்ளாதீர்கள்.

    பெரிய விஷயம் சிறிய பொருளில் ஒத்துப் போகாததால் கெட்டுப் போவதுண்டு. சில நபர்களுக்கு பொதுவாக ஒரு வேலையை கெடுப்பதில் ஏக சந்தோஷம்.

    வாழ்க்கை நம்மை சோதனை செய்யத் தவறுவதில்லை. பெற்றத் தாயை தெய்வமாக ஏற்றுக் கொள்ளுதல் நம்மை நிறைவாழ்வு பெறச் செய்கிறது. ஒருவன் தன் சகோதரர் சகோதரிகளின் தவறை மனமாற மன்னித்து ஏற்றுக் கொள்ளுதல் பிரிவைத் தடுக்கிறது.

    மனிதன் வந்த சூழ்நிலையைப் பொறுத்து அவர்களுடைய எண்ணங்களும் வாழ்க்கை கண்ணோட்டமும் செயல்களும் அமைந்திருக்கின்றன. எனவே, மற்றவர்களை குற்றம் சாட்டும் கண்களுடன் பாராமல் அவர்களை புரிந்து கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். இவை உறவுகளுக்குள் பிளவு ஏற்படாமல் தடுக்கும்.

    ஏற்றுக்கொள்ளுதல் என்பது அவர்களை சகித்து போதல் அல்ல. அவர்களை புரிந்துக் கொண்டு ஓதுங்கிப்போதல், மன்னித்துப் போதல் என்பதாகும். அவர்கள் மீது வெறுப்போ, பகைமையோ மனதில் கொள்ளாமல் இவர்கள் இப்படித்தான் என விட்டுப் பிடிப்பதாகும்.

    நீங்கள் மாறவும் வளரவும் விரும்பினால், உங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உள்ளது உள்ளபடியே உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் துளிர்க்க முடியும். நீங்கள் வளர முடியும்;.

    சமநிலையில் இல்லாதவர்களிடம்; தனக்கு ஏற்படும் தோல்வியை ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைக்கல்லாகும். ஏற்றுக்கொள்வது என்பது அதிக கடினமாகத் தோன்றுகிறது. சில சமயங்களில் சில நிமிடங்கள் காது கொடுத்து கேட்பதே போதுமானது. மற்றவரது பார்வைக் கோணத்திலிருந்து பார்க்க முயன்றாலே போதும். நீண்ட கால அடிப்படையில் இதுவே குறைந்த எதிர்ப்புகள் உள்ள பாதை. இதுவே ஆன்மீக ரீதியாக சரியானதும் கூட. பழிபோடுபவர்களிடம் எரிச்சலையும், சகிப்பற்றதன்மையையும் காட்டுவது குறுகிய கால அடிப்படையில் எளிதாக இருக்கலாம்.[hide]

    ஏற்றுக் கொள்ளுதல் முழுமையாகிற போது எதிர்ப்புகள் இருப்பதில்லை. எதிரணி இல்லாமல் கிரிக்கெட் ஆட்டமே சாத்தியமில்லை.

    எதிரணி என்ற ஒன்று இருந்து அதில் பதினோரு பேர் இருந்தால்தான் கிரிக்கெட் விளையாட்டை விளையாட முடியும். இதை ஏற்றுக் கொள்கிற போது மனதில் பதட்டம் இருப்பதில்லை. அந்த இன்னொரு அணியின் திறமைகளோ, அவர்கள் இதுவரையிலும் செய்திருக்கிற சாதனைகளோ உங்களுக்கு ஓரு தடையாக இருக்கப் போவதில்லை.

    சிலர் உயர்த்தப்படுகிறார்கள். அவர்களது வாழ்வு சொர்க்கமாகிறது. சிலர் வீழ்த்தப்படுகிறார்கள். அவர்களது வாழ்வு நரகமாகிறது.

    முதலில் நம்மை நாம் எந்தவித விருப்பு வெறுப்புமின்றி ஏற்றுக் கொள்ளுதல் அவசியம். நம்மை நாமே ஏற்றுக் கொள்ளாவிட்டால் பிறர் எப்படி நம்மை ஏற்றுக் கொள்வார்கள். சுயமாக தன்னை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் போது அவர்களிடம் உள்ள நிறைகுறைகளை குறைத்துக் கொள்வதற்கும் அவர்களுக்கு மிக முக்கியமான சுயமுன்னேற்றத்தால் அமைகிறது.

    தொலைந்து போன பணத்தை நினைத்து வருத்தப்படுவதால் நடந்தவற்றைமாற்றவா முடியும். இனி நடந்ததை நினைத்து கவலைப் படுவதால் ஒரு பயனும் இல்லை. இந்த நிகழ்வினால் இனிமேல் எச்சரிக்கையாய் இருக்கலாம். அவ்வளவுதான்.

    வாழ்க்கையில் தவறுகள் என்று எதுவும் இல்லை. அவை எல்லாமே படிப்பினைகள். இழந்த சொத்தை நினைத்து வருந்துபவர்கள், கிடைக்காத பதவி உயர்வை எண்ணி வருந்துபவர்கள் வாழும் நாட்களை நரகமாக்கி கொள்கிறார்கள்.

    இப்படி நடந்து விட்டதே, நமக்கு மட்டும் இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று கவலைப்படாமல் ஆத்திரப்படாமல் நடந்ததை நடந்தவாறு ஏற்றுக் கொள்வது உகந்தது.

    நடந்ததையே நினைத்து இருப்பதால் அமைதியை இழக்கிறோம். இதுவரை எதிரியாக இருந்தவரை இனி எதிரியாக நினைக்கக் கூடாது. அவர் வழியாக வந்த கர்மா முடிந்தது என்று நினைத்து அவரை மன்னித்து மறந்து விட வேண்டும்.

    நம்மைச் சுற்றி நாம் விரும்பாத நமக்கு சங்கடத்தை கொடுக்கின்றமனிதர்கள் சூழ்நிலைகள், அதர்மங்கள் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம். அவைகளினால் பாதிப்பை அடைகிறோம். அந்தப் பாதிப்பை குறைக்க முக்கியமான பண்பு ஏற்றுக் கொள்ளுதல் என்னும் பண்பு.

    வந்த துன்பத்தை பொறுத்துக் கொள்ளுதல் மற்ற உயிர்களுக்கு துன்பம் தராமல் இருப்பது. நோய் என்றால் துன்பம். நமக்கு ஓரு துன்பம் வந்து  விட்டால் துன்பம் தாங்காமல் புலம்புவோம். எனக்கு இப்படி ஆகி விட்டதே. ஏன்தான் எனக்கு மட்டும்  இப்படி வருகிறதோ என புலம்புவோம். இந்த துன்பத்திற்கு யார் காரணம் என்று யோசிப்போம். யாரையாவது பலிகடாவாக்கி அவரை திட்டித் தீர்ப்போம். மூன்றாவது, நமக்கு இந்த துன்பம் வரக் காரணமாக இருந்தவர்களுக்கு ஒரு துன்பம் வர வேண்டும் என்று விரும்புவோம். ஒன்றும் இல்லாததற்கு மனம் நோகும்படி ஏதாவது சொல்ல வேண்டியது. நொந்து கொள்வது. நமக்கு வரும் ஒவ்வொரு துன்பத்தையும் பொறுத்துக் கொள்ளாமல் தவிக்கிறோம். அதே சமயம் நமது துன்பத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க நினைக்கிறோம். அப்படியே இல்லாவிட்டாலும் நமது இன்பத்திற்காக மற்றவர்களை துன்பப்படுத்த நினைக்கின்றோம். துன்பம் என்று வந்து விட்டால் அதை அமைதியாக ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.          இன்னொரு உயிருக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது. உடலாலோ, மனதாலோ, மற்றஉயிரை துன்புறுத்தக் கூடாது.

    மனிதர்கள் தவறு செய்பவர்களே. மனிதர்கள் இயல்பிலேயே தவறு செய்பவர்கள் என்றாலும் அதிலே நிரந்தரமாக உழல்வது ஏற்கத்தக்கது அல்ல. மாறாக தவறு செய்பவர்கள் தான் செய்த தவறைஒப்புக் கொண்டு மனந்திருந்தி வாழ வேண்டும்;. மனிதர்களில் இந்த வகையினர்தான் சிறப்புக்குரியவர்கள். ஆனால், இதற்கு மாறாக அதிகமானோர் என்ன தவறு செய்தாலும் தான் செய்தது சரி என்பதாக தவறைமழுப்பப் பார்க்கிறார்கள். அதற்க்காக மணிக்கணக்கில் பேசி தவறைநியாயப்படுத்து கிறார்கள்;. தாம் செய்த தவறைஏற்றுக் கொள்ளும் பரந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலோனரிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது இறைவன் விரும்பும் உயரிய பண்பு.

    மனிதன் ஏராளமான தீய காரியங்களில் ஈடுபடுகிறான். பாவ காரியங்களில் மூழ்கி உல்லாசமாய் நீந்திக் கொண்டிருக்கிறான். கடவுள் மனிதன் தவறுகளை ஒப்புக் கொள்வதை மிகவும் விரும்புகிறார்.

    குடும்பத்தில் ஒரு தவறு நிகழ்ந்து விட்டது. நான் இல்லை. நீதான். சம்பந்தப்பட்டவர் ஏற்றுக் கொள்ள பலமாக மறுக்கிறார். என்  மனைவி எந்த தவறு செய்தாலும் ஒப்புக்கொள்ளவே மாட்டாள் என்ற எண்ணம் கணவனுக்கும், என் கணவன் தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள மாட்டார் என்றஎண்ணம் மனைவிக்கும் ஏற்படும். இவ்வாறு மறுப்பது இருவருக்கிடையில் உள்ள பாசத்தை, அன்பை முறிக்கவே வழி வகுக்கும். இன்னும் சில தம்பதியர்கள் விவாகரத்து வரைக்கும் செல்வதற்கும் இதுவே காரணமாக அமைகிறது. கணவன் மனைவி உறவு நெடுநாள் திகட்டாமல் இனிக்கவும் தம் தவறைஒப்புக் கொள்ள இருவரும் முன்வர வேண்டும். இருவரில் ஒருவர் என்னிடம்தான் தவறு. நான்தான் தவறிழைத்து விட்டேன் என்று ஓப்புக் கொண்டு விட்டால் மற்றொருவஏ இல்லையில்லை நான்தான் குற்றமிழைத்து விட்டேன்.  பாவம்,   நீ என்ன செய்வாய் என்பதாக சமாதானமாவார்கள். இருவருக்குமிடையில் உள்ள நேசம் முன்பிருந்ததைவிட மேன்மேலும் அதிகரிக்க நீங்கள் தவறை ஒப்புக் கொள்வது ஓரு இணைப்பு பாலமாக செயல்படும். பெரும்பாலும், பெண்கள் தாங்கள் செய்த தவறை சீக்கிரத்தில் ஒப்புக் கொள்வதில்லை.

    தவறை மறுக்கும் தீய குணம் வெகு விரைவில் அனைத்து தீமைகளுக்கும் அவனிடம் குடிகொள்ள ஆரம்பித்து விடும். ஒருவர் தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள மறுக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டால் அவரது உள்ளம் அதனை சரி காண ஆரம்பித்து விட்டால் எல்லா தீமைகளும் சர்வ சாதாரணமாக புகுந்து அவனை நாசப்படுத்தி விடும். உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும்.

    உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும்;, அணைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புக|டம் அளித்த நாட்டை சேர்ந்துள்ள நாம் ரோமானியரின் கொடுமையால் தங்கள் திருக்கோவில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்த கலப்பற்றஇஸ்ரேல் மரபினர்களும் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவிக் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன் என்கிறார் சுவாமி விவேகானந்தர். பெருமைமிக்க செராஸ்டிர மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து இன்னும் பேணிக் காத்து வருகின்றசமயத்தைச் சார்ந்தவர்கள் நாம்.

    ஏற்றுக்கொள்வதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்படி நடை போடுங்கள். தற்போதய நிலை என்னவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ங்கள். அப்படியே தொடர்ந்தால், எதிராக அல்ல. அற்புதமான மாற்றம் வாழ்வில் நடக்கும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    மாமரத்தில் கொய்யாப்பழம் – 5

    இனிய வாசகர்களே! வாழ்க வளமுடன்

    வாழ்க்கை என்பது என்ன என்ற கேள்விக்கு பதில்- அனுபவங்களின் தொகுப்பு.

    அனுபவங்கள் நிறைந்த, அக்கரையும் பாசமும் கொண்ட பெற்றோர் வழிகாட்டுதலின்றி, தவறான முடிவால் துன்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கஷ்டப்படும் பலர் உள்ளனர்.

    இங்கு தேவைப்படுவது தான் நல்ல நட்பு. நட்பிற்கான உரைகல் இது தான் என திருக்குறள் தெளிவாகச் சொல்லுகிறது.

    நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

    பண்புடை யாளர் தொடர்பு-குறள்- 783

    நல்ல பண்புடையவர்களை நண்பர்களாய் பெறுவது என்றுமே இன்பம் தரும். எதுபோல் என்றால் நல்ல புத்தகங்களைப் படிக்கப் படிக்க அடையும் இன்பம் போல.

    உன் நண்பனைப் பற்றிச் சொல்;

    உன்னைப் பற்றிச் சொல்கிறேன்

    என்ற தொடர்மொழி உள்ளது.

    சிறு குழந்தை முதலே, பெற்று, பாலூட்டி, தாலாட்டி வளர்த்த தாயால் முடியாததைக் கூட நண்பனால் செய்ய முடியும். எனவே தான் நல்ல பண்புள்ள நண்பர்கள் வேண்டும் என்பது.

    எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப் படுவதை விட, நல்ல நண்பர்கள் சிலரே போதும் என்ற எண்ணம் சிறந்தது.

    பள்ளிப் பருவ நட்பு மனதில் ஆழப் பதிந்துவிடும். பெற்றோர் கண்காணிப்பில் வளர்வதால் பெரும்பாலும் தவறான பாதைக்குச் செல்ல வாய்ப்பில்லை. ஆனால், சிறு சதவீதம் பெற்றோர்களால், குடும்ப சூழ்நிலையின் காரணமாக குழந்தைகளின் நடவடிக்கைகளைக்அ கவனிக்க இயலாத போது நற்பண்பு என்ற பாதையில் இருந்து மாறி விடுபவர்கள், பின்னர் சமூக விரேதிகளாக மாறி விடுகின்றனர்.

    இதற்குப் பெற்றோரும் பொறுப்பு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

    கல்லூரிப் பருவத்தில் அமைத்துக் கொள்கின்ற அல்லது அமைகின்ற நட்பு மிக முக்கியமானது. நன்கு படிக்கும் மாணவர்கள், சுமாராகப் படிப்பவர்கள்,சராசரியாகப் படிப்பவர்கள் என மூன்று ரகமாகப் பிரிக்கலாம்.

    சுமாராகப் படிப்பவர்கள் பெரும்பாலும் தவறு செய்ய மாட்டார்கள். நன்றாகப் படிப்பவர்களின் நட்பைப் பெற முயல்வார்கள். அவர்களின் பெற்றோர்களும் நடவடிக்கைகளைக் கவனித்து வருவார்கள்.

    சராசரியாகப் படிக்கும் மாணவர்கள் எளிதில் தீய குணங்களுக்கு ஆளாகி விடுவார்கள். நன்கு படிக்கும் மாணவர்களைக் கண்டால் பிரம்மிப்பு; நெருங்கிப் பேச தயக்கம், தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பர்.

    இந்தப் பிரிவு மாணவர்கள் சிலரிடம் சில தீய பழக்கங்கள்(புகை, மது போன்றவை) இருக்கலாம். காரணம் பெற்றோர் அல்லது அவர்களது வசிப்பிட சூழ்நிலையாக இருக்கலாம். இவர்கள் தீய பழக்கங்களை விடுவதற்கு நல்ல வழிக்காட்டுதல்கள் தேவை.

    ஒருவேளை நன்கு படிக்கும் மாணவர்களுள் ஓரிருவர் செல்வச்செழிப்பால், இத்தீய பழக்கங்களைக் கொண்டிருந்து, அவர்களுக்கு சராசரி ரக மாணவர்கள் நட்பு இணையும் போது தீய பண்புகள் மேலும் கூட வாய்ப்புள்ளது.

    இன்று கல்வி நிலையங்களில் ஆசிரியர்களின் நிலை மோசமாகத்தான் உள்ளது. படிப்பு என்ற பகுதியைத் தவிர மற்றவைகளைத் தொட்டு, சிக்கலில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட விரும்பாத பலர் உள்ளனர்.

    வெகு சிலரே, சமுதாய அக்கரையோடு மாணவர்களுக்கு நல்வழிகாட்டும் புனிதப்  பணியில் ஈடுபடுகின்றனர்.

    தலைக்குமேல் வளர்ந்த குழந்தை எனக் கண்டுகொள்ளாமல் இருப்பதை விட்டு, பெற்றோர்கள் வாரத்தில் சில நாட்களாவது அவர்களுடன் நேரம் செலவழித்து, தங்களின் அன்பை, அக்கரையை வெளிப்படுத்த வேண்டும்.

    இந்த வாய்ப்பு இல்லாத மாணாக்கர் மாமரத்தில் கொய்யாப்பழத்தை எதிர்பார்க்கும் விதண்டாவாத மன நிலையை வளர்த்துக்கொள்ள நேரிடும்.

    வாதம் என்பது விவாதம் ஆகும். தான் கொண்ட கருத்தை வலியுறுத்திப் பேசுவதாகும். விதண்டா என்றால், இயற்கை நியதியைப் புரிந்து கொள்ளாமல் தனது நிலைக்குச் சாதகமாக உலக நிகழ்வுகளைத் தேடிப் பிடித்து சாமார்த்தியமாகப் பேசுவதாகும்.

    இந்தப் பருவம் டீன்-ஏஜ் பருவம் என்பதால், பெற்றோர் கூடுதல் முயற்சி எடுத்தால் நல்ல பழக்கங்களை மேற்கொள்ளச் செய்யமுடியும்.

    இந்த வாய்ப்பு விடுதிகளில் தங்கி படிப்போர்க்கு சிரமமே.

    அடுத்து பணி என்று வரும்போது அமையும் அல்லது அமைத்துக் கொள்ளும் நட்புதான் குடும்ப நட்பாக விரிந்து வாழக்கையை வளப்படுத்துகிறது அல்லது நாசமாக்குகிறது.

    மாணவப் பருவத்தில் பணத்துக்கு பெற்றோரை அல்லது மற்றவர்களை எதிர்ப்பார்த்தநிலை, ஆனால் இங்கு சுய சம்பாத்தியம்.

    பணிக்கு சேர்ந்த நாள் முதல் திருமணம் வரையிலான காலங்களில்தான் மாமரத்தில் கொய்யாப்பழங்கள் காய்க்கின்றன என்று ஆய்வுகள் மூலம் அறிய முடிகின்றது.

    குழந்தை மற்றும் பள்ளிப் பருவத்தில் பெற்றோரது வளர்ப்பு எப்படி இருக்கிறதோ அதற்கேற்பவே இவர்கள் தங்கள் வாழக்கையை அமைத்துக் கொள்கின்றனர்.[hide]

    குடும்பத்தின் பொருளாதார நிலையைத் தெளிவாகத் தெரிவித்து, நியாயமான விருப்பங்களை நிறைவேற்றிய குடும்பங்களின் குழந்தைகள் ஊதாரித்தனம், தீயபழக்கம் போன்றவைகளைக் கடைப்பிடிக்க வாய்ப்பு இல்லை.

    வசதி இருந்தும் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பெற்றோர் தடையாக உள்ளனர் என்ற எண்ணம் விழுந்துவிட்டால், அது ஊதியம் பெறும் காலத்தில் வேகமாக வளர்ந்து மரமாகி, தேவையில்லாத கனிகளைத் தரும்.

    இன்று பணி என்பது பெரும்பாலும் வெளியூர்களில்தான்.

    பேயிங்-கெஸ்ட்?(PAYING GUEST) பணம் செலுத்தி தங்கும் உண்ணும் விருந்தினர் என்ற நிலையில் வசிக்கலாம். அல்லது சிலர் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இணைந்து சாப்பிட்டு பணிபுரியலாம்.

    அல்லது சிலருடன் அறைகளில் இணைந்து தங்கி வெளி உணவகங்களில் உண்டு பணி புரியலாம்.

    நான் பத்து ஆண்டுகளுக்கு முன் என் மகன் வீட்டுக்கு இங்கிலாந்து சென்ற போது அவரது நண்பர்கள் சிலரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

    அவர்கள் அனைவருமே இந்தியர்கள். அந்த வீடுகளில் உள்ள அறைகளில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் வசித்தனர். தனித்தனியாகவோ இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து சமைத்து உண்டனர்.

    நம் பழக்கத்தின் அடிப்படையில் புதுமையாக உணர்ந்தேன். பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் பற்றிக்கொள்வது இயல்புதானே என்று படித்திருக்கிறோம் அல்லவா?

    இங்கு ஒருசில ஜோடிகள் பழகி, தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வுசெய்து கொண்டனர்.

    காலப்போக்கில் சுமார் பத்து ஆண்டுகளில் இணைந்து வாழும் கலாச்சாரம் இன்று நம் நகரங்களில் அதிகரித்து விட்டதை அறிகிறோம்.

    இதில் தவறு நடக்காமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்ல எதிர்காலத்தை தரும்.

    குடும்பப் பாசம், பொறுப்புடன் இருப்பவர்கள், நட்பை இரண்டாம் இடத்தில் வைத்து வாழ்வதால் நல்ல பண்புகளின் உறைவிடமாக இருப்பர்.

    பெற்றோர் கண்டு கொள்ளாமை, ஏக்கம், நிறைவேறாத சிறு சிறு ஆசைகளை மனதில் குவித்து வைத்திருப்போர் நிலை பரிதாபம்தான்.

    ஓடி ஓடி, நாடி நாடி, தேடித் தேடி என்பது போல், தன் ஆசைகள் நல்லதா, கெட்டதா என சிந்திக்காமல் செலவு செய்து, தீய பழக்கங்களின் இருப்பிடமாகி விடுவர்.

    இந்த நிலைக்கு இவர்கள் செல்வதற்குக் காரணம் பெரும்பாலும் பெற்றோர்கள் தான்.

    எனவே, செடியைப் பராமரிப்பதைப் போல தம் ஓரிரு குழந்தைகளைக் கண்காணித்து அவர்களுக்கு நல்ல இல்லறத்தை அமைத்துத் தர வேண்டும்.

    -தொடரும்[/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில் – 66

    வெற்றியின் தொடக்கம்…

    வாழ்க்கையை ரசிக்கவும், ருசிக்கவும் பழகிக்கொண்டால், எந்தச்சூழலிலும் வெற்றி நம்மைத்தேடி வரும்.

    பொதுவாக – “தோல்விதான் வெற்றிக்கான முதல்படி” என்பதை நன்கு உணர்ந்தவர்கள் வித்தியாசமாக செயல்படுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைந்தால் அவர்கள் துவண்டு போவதில்லை. “எப்படியாவது வெற்றி பெறவேண்டும்?” என்றஎண்ணத்தில் பல செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு சிறிய வெற்றி கிடைத்தாலும், அதனைப் பெரிதாக அவர்கள் கொண்டாடுவதில்லை. “இந்த வெற்றி நிரந்தரமல்ல. இதுவும் கடந்துபோகும்” என்ற எச்சரிக்கையோடு வாழ்க்கையை எதிர் நோக்குவார்கள்.

    இவர்கள் ஒரு சிறிய வெற்றியைப் பெற்ற பின்னர், அடுத்த வெற்றியைப் பெறுவது எப்படி? என்ற சிந்தனையோடு எப்போதும் காணப்படுவார்கள். தோல்விகளை சந்தித்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்து வாழ கற்றுக்கொள்வார்கள்.

    “முன்னேற்றப்பாதை எது?” எனத் தெரியாமல் திக்குமுக்காடி தவிக்கும் நேரத்தில், சிறந்த வழிகாட்டல்கள் நமக்கு பக்கபலமாக அமைகின்றன. அவை வெற்றிப் பாதையை கண்டறிவதற்கும், அந்தப் பாதையில் பீடுநடை போடுவதற்கும் துணையாக அமையும்.

    இந்த வழிகாட்டல்களை – பெற்றோர்கள், பெரியோர்கள், அறிவில் சிறந்தவர்கள், சிறந்த நூல்கள், தொலைக்காட்சித் தொகுப்புகள் போன்றவற்றின் மூலம் முன்கூட்டியே பெற்றுக்கொண்டால், சிக்கல்கள் இல்லாமல் மகிழ்வோடு எல்லா சூழல்களிலும் வெற்றியாளராக வலம் வரலாம்.

    தாய்ப்புறா ஒன்று தனியாக இருந்தது. அப்போது, மகள் புறா அருகில் வந்தது.

    “அம்மா… எனக்கு எப்போதும் கவலையாகவே இருக்கிறது. மற்ற புறாக்களோடு பேசவே பிடிக்கவில்லை” என வருத்தப்பட்டது.

    தாய் புறாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    “இவ்வளவு நாள் என்னோடு இருந்தும் தைரியமாக உனக்கு வாழத் தெரியவில்லையே….” என எண்ணிய தாய்ப்புறா பேசத் தொடங்கியது.

    “நீ எதற்கும் கவலைப்படாதே. நாம் பிறரோடு பேசிப் பழகினால்தான் நம்மிடம் இருக்கும் தயக்கம் மறையும். வெட்கப்பட்டும், பயப்பட்டும் நீ வாழ்ந்தால் உனக்கு அதிகமான பிரச்சினைகள் ஏற்படும். எனவே, நீ மற்றவர்களோடு பழகு. எதை வேண்டுமானாலும் மற்றவர்களிடம் மனம் திறந்து பேசு. தேவையானவற்றை கேட்டுப் பெற்றுக்கொள்” – என்றது.

    “நான் உதவி கேட்கும்போது அவர்கள் மறுத்துவிட்டால் என்ன செய்வது?” – தயங்கிக் கேட்டது மகள் புறா.

    “நீ கவலைப்படாதே. யாரும், நாம் கேட்காமல் நமக்குக் கொடுக்கமாட்டார்கள். எந்த உதவியையும் தேவையென்றால் கேட்டுப் பெறலாம். சிலர் கொடுக்கலாம். பலர் மறுக்கலாம். கேட்பது நமது உரிமை. கொடுப்பதும், கொடுக்காததும் அவர்கள் உரிமை” – என்று அறிவுரை சொன்னது, தாய்ப்புறா. பின்னர், தனது மகள் புறாவை அழைத்து “நீ என்னைப் பின் தொடர்ந்து வா” என்று சொல்லி பறக்க ஆரம்பித்தது. முதலில் – ஒரு ஏரியின் அருகே அவர்கள் வந்தார்கள். பின்பு, ஏரிக் கரையோரம் பறந்த தாய்புறா ஏரி நீரில் எச்சமிட்டது. ஏரியின் அலைகள் அந்த எச்சத்தை அடித்துச் சென்றது. எச்சம் நீரில் கரைந்தது. தாய்ப்புறா ஏரியைப் பார்த்து, “எனது எச்சத்தை என் அனுமதி இல்லாமல் கரைத்துவிட்டாய். எனவே, அந்த எச்சத்தை திருப்பிக்கொடு” – எனச் சொன்னது.

    “என்னால் உன் எச்சத்தை திருப்பித் தர முடியாது. அதற்குப் பதிலாக நான் ஒரு மீன் தருகிறேன்” – என்றது ஏரி.

    மீனைப் பெற்றுக்கொண்ட தாய்ப்புறா ஊருக்குள் வந்தது. ஒரு வீட்டின் முன்வாசலில் அந்த மீனை வைத்துவிட்டு மறைந்து நின்று பார்த்தது. கதவைத் திறந்த வீட்டுக்கார அம்மா “ஆகா… இது நல்ல மீன். இன்றைக்கு குழம்பு வைத்தால் நன்றாக இருக்கும்” என முடிவு செய்தாள். மீன் குழம்பாகி உணவானது. காத்திருந்த தாய்ப்புறா வேகமாக வீட்டுக்கார அம்மாவிடம் வந்தது.

    “நீங்கள் எனது மீனை எடுத்துக்கொண்டுபோய் குழம்புவைத்து சாப்பிட்டுவிட்டீர்கள். எனக்கு அந்த மீனைத் தாருங்கள்” என்றது.

    “சாப்பிட்ட மீனை எப்படி திருப்பித்தர முடியும்? அதற்குப்பதிலாக என்னிடம் ஒரு கயிறு இருக்கிறது. அதைத் தருகிறேன்” – என வீட்டுக்கார அம்மா சொன்னாள். வீட்டுக்கார அம்மா கொடுத்த கயிற்றை வாங்கிக்கொண்டு தனது மகளோடு தாய்ப்புறா பறந்தது. வழியில் கவலையோடு ஒருவர் ஊர்க்கிணற்றின் அருகே நிற்பதைப் பார்த்து விபரம் கேட்டது.

    “எனது கயிறு அறுந்து போய்விடும் நிலையில் உள்ளது. இனி தண்ணீர் இரைக்க இதனை பயன்படுத்த முடியாது. இந்த நல்ல தண்ணீரைக் கொண்டு சென்று தான் வீட்டில் சமையல் செய்ய வேண்டும்” – என வருத்தப்பட்டுச் சொன்னார்.[hide]

    “எனது கயிற்றை நான் உங்களுக்குத் தர ‘ரெடி’யாக இருக்கிறேன். நீங்கள் எனக்கு என்ன தருவீர்கள்?” – என தாய்ப்புறா ‘கண்டிஷன்’ போட்டுப் பேசியது.

    “வீட்டில் புதிய வகையான விதை நெல் கொஞ்சம் வைத்திருக்கிறேன். இது கிடைப்பதற்கு அரியது. இதில் ஒரு படி நெல் தருகிறேன்” என்றார் தண்ணீர் எடுக்க வந்தவர்.

    விதை நெல்லை வாங்கிய தாய்ப்புறா, அந்த நாட்டு மன்னரின் விவசாயப் பண்ணை அருகே வந்தது. விதை நெல்லை அந்தப் பண்ணை அருகே வைத்துவிட்டு பறந்து சென்றது. சிறிதுநேரத்தில் விவசாயப் பண்ணையைப் பார்வையிட வந்த மன்னர், அந்த நெல்லை விவசாயத்திற்கு பயன்படுத்த ஆணையிட்டார். மாலை நேரத்தில் அங்கு வந்த பறவை மன்னரிடம் கோரிக்கை வைத்தது.

    “மன்னா… எங்குமே கிடைக்காத அரிய வகை நெல்லை நான் உங்கள் பண்ணை அருகே வைத்துவிட்டு, சென்றிருந்தேன். நீங்கள் அந்த நெல்லை எடுத்து பயன்படுத்திவிட்டீர்கள். இப்போது எனக்கு அந்த நெல் வேண்டும்” – என்று கேட்டது.

    தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்த மன்னர், “உனது நெல் என்று தெரியாமல் நாங்கள் பயன்படுத்திவிட்டோம். சரி… இப்போது அந்த நெல்லுக்குப் பதிலாக உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

    “மன்னா… எனக்கு ஒரேயொரு வாய்ப்பு தாருங்கள். எனக்கு அரச சபையில் உட்கார்ந்து 2 மணிநேரம் நான் அரசாட்சி செய்கிற உரிமையை நீங்கள் எனக்குத் தரவேண்டும்” – என தாய்ப்புறா வேண்டிக் கேட்டது. மன்னரும் உடனே அனுமதி வழங்கினார். அரச சபையில் உட்கார்ந்த தாய்ப்புறா, முதல் உத்தரவைப் போட்டது. அதுவே எல்லோருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

    “இன்றிலிருந்து நாள்தோறும் எங்கள் புறா இனங்கள் அனைத்திற்கும் மன்னர்தான் உணவு வழங்குவார்” எனப் பிறப்பித்த அதிரடி உத்தரவு அனைவரையும் திகைக்க வைத்தது. மன்னரும் உத்தரவை ஏற்றுக்கொண்டார். 2 மணிநேரம் அரசாட்சி என்றாலும், எச்சத்திலிருந்து உச்சத்தைத் தொட்ட தாய்ப்புறாவின் செயலைப்பார்த்து ஆச்சரியப்பட்டது மகள் புறா.

    “இந்த அரசாட்சி, அதிரடி உத்தரவு ஆகியவற்றைப் பிறரது நன்மைக்காகவே நான் நிகழ வைத்தேன். யார் நினைத்தாலும், தங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றமுடியும் என்பதை உனக்கு உணர்த்தவே இந்த செயல்களில் ஈடுபட்டேன்” – என்று தாய்ப்புறா தனது மகளிடம் சொன்னபோது அதற்குள் நல்ல நம்பிக்கை பிறந்தது. இந்த புறாவின் கதை மிகச்சாதாரணமாகத் தோன்றினாலும், அந்தக் கதையில் இடம்பெற்ற நிகழ்வுகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. இது வாழ்க்கையின் சில உண்மைகளை புரியவைக்க உருவாக்கப்பட்ட நிகழ்வுத் தொகுப்பு.

    “புறா பேசுமா?” என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், சில உதாரணங்களும், உவமைகளும் சின்னஞ்சிறு வயதிலேயே நம்பிக்கையான எண்ணங்களை நமக்குள் தோன்றுவதற்காக உருவாக்கப்பட்ட உருவகங்கள் இவை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

    “ஒரு சாதாரண நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைக்கு நம்மால் முன்னேறமுடியும்” என்பதை இந்தக்கதை நிகழ்வு நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது.

    புறாவின் அறிவுக்கூர்மையான சிந்தனையோடு இணைந்த செயல்கள்தான், ஒரு சிறந்த நிலையை அடைவதற்குத் துணை நின்றது. இதைத்தான் இந்த நிகழ்வின்மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்தச்சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் தன்னம்பிக்கையோடு வாழக் கற்றுக்கொண்டவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். மிகச்சிறந்த நிலையை அடைகிறார்கள்.

    -தொடரும்[/hide]

    இந்த இதழை மேலும்

    இன்பமயமான வாழ்வு

    நாம் நாள்தோறும் கால்மணி நேரம் கருத்தூன்றி கடுமையாக கற்றால் எந்தக் கலையைக் கற்கறோமோ அந்த கலையில் பத்து ஆண்டுகளில் அறிஞராக திகழ முடியும்.

    இதன் மூலம் நம்முஐடய ஆற்றலை உணர்ந்து இருக்கும் பொழுது சாதாரண கவலையை விட்டு ஒழிக்க முடியாதா…? கவலையை சுழற்றி எறிய முடியாதா என்ன…?

    கட்டாயம் நம்மால் முடியும்…!

    குப்பையிலே கிடக்கிற நம் வாழ்வு கோபுரக்கலசமாவது எப்போது என்ற ஏக்கம் இனிமேலும், வேண்டாம். நம்மால் எந்தக்காரியத்தையும் சாதிக்க முடியும்.

    நம்முடைய மூளை பெரிய வயல். அதில்  இயற்கை எண்ணங்களை விதைக்காளாகத் தூவுகிறது.

    பயிர் வளரும் அழகு, சூழ்நிலையாகிய  மண்ணையும், சிந்தனையாகிய எருவையும் பொருத்தது விதைக்க வேண்டும்.  விதைக்காவிட்டால் அறுவடை செய்ய முடியாது.

    நல்ல விதையை விதைத்தால் நல்ல பயிர் வளர்ந்து பயன் கொடுக்கும்.

    ஒன்றும் செய்யாமல் சோம்பி உட்கார்ந்து கொண்டு கீதை, குரான், பைபிள் இவற்றைப் படித்துக் கொண்டிருப்பதினால் மட்டும் எந்தவித முன்னேற்றமும் அடைய முடியாது.

    காலையில் எழுந்ததும் இன்று நாம் மகிழ்ச்சியுடன் இருக்கப் போகிறோம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

    இதனை மனத்திற்குள் பல தடவை சொல்ல வேண்டும். அப்பொழுது முக மலர்ச்சி ஏற்படும். சோர்வு ஏற்படாது.

    மகிழ்ச்சியுடன் பணியாற்றினால்  கவலை கொண்டிருக்கும் பொழுது, கடவுள் இல்லை என்ற கட்டுரையை ஆணித்தரமாக எழுதினார்.

    இதனை அறிந்த கல்லூரி நிர்வாகிகள் அவரை கல்லூரியை விட்டு வெளியேற்றினார்கள். கல்லூரிப்படிப்பை பாதியில் இழந்தற்கு துளியும் கவலைப்படவில்லை…

    தன்னுடைய லட்சிய வாழ்வுக்க குறுக்கே நின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிவதில் சற்றும் அவர் பின்வாங்கவில்லை.

    தனக்கு விருப்பமான கவிதைகளை தொடர்ந்து இயற்சி சாகாவரம் பெற்றார். அவர் செய்யும் பணியில் ஆர்வம் காட்டுவதை நிறுத்தவில்லை.

    ஷெல்லி, இறக்கும் வரையிலும் இன்புற கவிதைகளை இயற்றினார். எதையும் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொண்டால் கவலை எப்படி உள்ளே வரமுடியும்…?

    இந்த உலகை பார்க்க முடியாதவர்களும், நடக்க இயலாதவர்களும், பேச முடியாதவர்களும் இருக்கும் போது நாம், உலகைப் பார்க்கவும்,  விரைவாக நடக்கவும், அன்பாகப் பேசவும் வரம் அருளப்பட்டு இருக்கிறது.

    இந்த வரத்தை நாம் பயன்படத்திக் கொண்டால் கவலைக்கு இடம் ஏது…? இந்த வரம் அருமையாக இருக்கும் பொழுது எதற்காகக் கவலைப்பட வேண்டும்…?[hide]

    நம்முடைய கவலையை கால்களுக்க அனுப்பி நடக்கும் சக்தியை இழக்க அனுமதி கொடுத்து விடக்கூடாது.

    நம்முடைய மனம் உற்சாகத்துடன் இருந்தால், கால்களும் துடிப்புடன் செயல்புரியும். செயலைச் செய்யும் போது கவலை எப்படி ஏற்பட முடியும்…?

    உடல் முழுவதும் ரத்தத்துடன் ரத்தமாக உற்சாகத்தின் சாறு கலந்து ஓட வேண்டும்.

    பாரதியாரிடம் ஒரு கிழவிக்கு அளவு கடந்த அன்பு இருந்தது. ஒருநாள் மாலைப் பொழுது பாரதியார் வந்து கொண்டிருந்த வண்டி அவளது வீட்டின் முன் நின்றது.

    கிழவிதான் சமைத்து வைத்து இருந்த உணவை பாரதியாருக்கு கொடுத்தாள்.

    பாரதியார் அந்த உணவை பெற்றுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார். உணவு மிகவும் சுவையாக இருந்தது.

    “அமிர்தம், அமிர்தம்” என்று கூறியபடி, “சரி ஓட்டுடா தேரை” என்றார்.  இந்நிலையில், அவர் தன்னை தேவன் என்றும், தாம் அமர்ந்திருப்பது தேர் என்றும் எண்ணினார்…

    தன்னை மிகவும் உயர்வாக நினைத்து இருந்த படியானால்தான் என்றும் வாழும் கவிதைகளை இயற்றினார்…

    தன்னை நம்பினார்…!

    அந்த நம்பிக்கை நலமுடன் இருந்தது, வாழ்வாங்கு வாழ்ந்து, வளமான கவிதைகளை அவரால் உருவாக்க முடிந்தது.

    ஒவ்வொரு மனிதரிடமும் உள்ள ஆற்றல் தான் நம்மிடமும் உள்ளது. இதனை உணர்ந்து கவலைப்படாமல் செயலாற்றி வெற்றி பெறவேண்டும்…[/hide]

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி …?

    இயற்கை விவசாயம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு துணைபுரியும் என்று நினைக்கிறீர்கள்?

    – காதர் மொய்தீன், சென்னை.

    விவசாயம் இல்லாத நாடுகள் வளர்ச்சியடைய முடியாது. அப்படி விவசாயம் செய்யாத நாடுகள் மற்ற நாடுகளைச் சார்ந்து வாழ வேண்டியது இருக்கும்.

    ஆனால் ஒரு நாடு வளர்ச்சியடைய மக்கள் தொகையில் ஒரு சிலரே விவசாயம் செய்ய வேண்டும். அமெரிக்காவில் விவசாயம் செய்பவர்கள் 1 சதம், கனடாவில் 2 சதம், இஸ்ரேலில் 1 சதம், ஜெர்மனியில் 1 சதம், ஜப்பானில் 3 சதம், நார்வேயில் 3 சதம், ஸ்வீடனில் 2 சதம், ஆஸ்திரேலியாவில் 3 சதம். மற்றவர்கள் சேவை துறையிலும், தொழில் நுட்ப துறையிலும் பணியாற்று கிறார்கள். விவசாயம், நமது நாட்டின் முதுகெலும்பு இங்கு நூற்றுக்கு 44 சதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

    ஒரு பிளாஸ்பேக்:

    ஒரு காலத்தில் எண்பது சதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர், இருப்பினும் அப்போதெல்லாம் எல்லோருக்கும் முழு வயிறு உணவு கிடைக்கவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் இருந்தது, பலர் அதில் வேலை செய்வார்கள். விளைச்சலில் ஒரு பகுதி கூலியாகத் தரப்படும். நிலச்சுவான்தாரர்கள் தாராளமாக உண்டு வயிறு பெருத்து அவதிப்பட்டார்கள். நிலத்தில் வேலை செய்த கூலியாட்கள் ஒட்டிய வயிறுடன், அரைகுறை ஆடைகளுடன், கூரை வீடுகளில் எலும்பும் தோலுமாக உயிர் வாழ்ந்து அவதிபட்டார்கள்.

    ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிலங்கள் அளக்கப்பட்டன. சட்டம், நீதிமன்றம், நிர்வாகம், கலெக்டர் என்று அரசு கட்டமைப்பு உருவானது. சாலைகள், இரயில் போக்குவரத்து ஏற்பட்டது. இந்தியா என்ற ஒரு பெரிய வர்த்தக விவசாய நாடு உருவானது. ஆங்கிலேய ஆட்சியில் எற்பட்ட மாற்றத்தில் முதன்மையானது நுகர்தல் விவசாயம் வர்த்தக விவசாயமாக மாறியதுதான். ஆனாலும் கூட பசி, பட்டிணி. உணவு பற்றாக்குறை பிரச்சனைகளுக்கு அவர்களால் முழு தீர்வு காண முடியவில்லை. வங்காளதேசம் பஞ்சத்தில் (The Great Bengal Famine) 30 லட்சம் பேர் இறந்தார்கள். இது நடந்தது 1943 ஆம் ஆண்டு; இதுபோல பல இடங்களில் நடந்தது, பல ஆண்டுகளாகவே நடந்தது.

    ஐந்தாண்டுத் திட்டம்:

    சுதந்திர இந்தியாவின் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயம் முன்னுரிமை பெற்றது. பவானி சாகர், சாத்தனூர், மணிமுத்தாறு, ஆண்டிபட்டி, ஆழியாறு போன்ற இடங்களில் அணைகள் கட்டப்பட்டன. நீர்பாசன திட்டங்கள் விவசாயம் செழிக்க உதவின. அணைகள் தான் நவீன இந்தியாவின் கோவில்கள் என்றார் பண்டித ஜவகர்லால் நேரு.

    நிலச்சீர்திருத்தம், உழவனுக்கு நிலம் போன்ற நிலை வந்ததால் உணவு உற்பத்தி பெருகியது. சுதந்திர இந்தியாவில் தொழிற்சாலை, போக்குவரத்து, கல்வி, வேலை வாய்ப்பு என்று வாழ்க்கைத்தரம் உயர உயர மக்களின்  வாங்கும் திறனும் உயர்ந்து பாமர மக்கள் மூன்று வேளை சாப்பிடும் நிலை ஏற்பட்டது. இலவச அரிசி திட்டத்தால் பட்டினி அறவே இல்லாத நிலை ஏற்பட்டது. மதிய உணவுத் திட்டம் ஏழைப் பிள்ளைகளின் பசியை போக்கியதோடு கல்வி பெறவும் வழி வகுத்தது.

    இன்று நமக்கு தேவையான தானியங்களை நாமே தயார் செய்கிறோம், ஏற்றுமதி கூட செய்கிறோம். நமக்கு தேவையான பாலும் நாமே உற்பத்தி செய்கிறோம். ஆனால் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி போதுமானதாக இல்லை, அவற்றை இறக்குமதி செய்கிறோம். அவற்றை சாகுபடி செய்ய நிலம் நம்மிடம் இல்லை.

    பசுமைப்புரட்சி:

    மக்கள் வயிறு நிறைய உண்பதற்கு காரணமாக இருந்தது பசுமைப் புரட்சியும், வெண்மைப் புரட்சியும் தான். அந்தப் பசுமைப் புரட்சி ஏற்பட காரணமானவர்கள் நமது வேளாண்மை விஞ்ஞானிகளும், விவசாய பல்கலைக்கழகங்களும், வேளாண்மை அதிகாரிகளும், விவசாயிகளும் என்றால் அது உண்மை.[hide]

    அதிக விளைச்சல் ஏற்பட காரணங்கள் இவை.

    அ) புதிய ரக வீரிய விதைகள்

    ஆ) இரசாயன உரங்கள்

    இ) பூச்சிக்கொல்லி மருந்துகள்

    ஈ) வேளாண் உபகரணங்கள்

    உ) வங்கிக்கடன்

    ஊ) குளிரூட்ட வசதிகள்

    எ) இலவச மின்சாரம்

    ஆயிரம் கிலோ மகசூல் கிடைத்த ஒரு ஏக்கர் நிலத்தில் மூவாயிரம் கிலோ நெல் விளைச்சல் கிடைத்தது. இரண்டு லிட்டர் பால் தரும் பசு இருபது லிட்டர் பால் தந்தது. ஒரே நாளில் சாப்பிட்ட மாம்பழம் ஒரு ஆண்டு முழுவதும் சாப்பிடப்படும் பழரசமாக மாற்ற பட்டது.

    இயற்கை விவசாயமும் அறிவியல் விவசாயமும்:

    இந்தப் பின்னணியில் தான் நாம் இயற்கை விவசாயத்தை ஆராய வேண்டும். 30 கோடி மக்களுக்குக் கூட உணவு வழங்காத பரிதாப நிலை மாறி இன்று 134 கோடி மக்களுக்கு உணவு வழங்கும் நிலைக்கு விவசாயம் வந்திருக்கிறது. அறிவியல் வேளாண்மையில் இது சாத்தியமானது. நமது விவசாயிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், நாம் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

    வேளாண் அறிஞர்களையும், அவர்களது வேளாண் அறிவியலையும் கூட சிலர் குறை கூறுகிறார்கள். வேளாண் அறிஞர்கள் இயற்கை விவசாயம் செய்யக்கூடாது என்று ஒரு போதும் சொன்னது இல்லை. பெரும்பாலும் இயற்கை உரங்கள் பயன்படுத்தவே அவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் சில சத்துக்கள் நிலத்தில் இல்லை என்றால் செயற்கை உரங்கள் பயன்படுத்த வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளும், தேவையான மருந்தை தேவையான நேரத்தில், தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்த பரிந்துரைக்கிறார்கள். அப்படி செய்யவில்லை என்றால் பயிரை பூச்சிகளும், நோய்களும் அழித்துவிடும். விவசாயிக்கு பெரிய இழப்பும் ஏற்பட்டுவிடும்.

    இன்று பல விவசாய விளைபொருட்கள், இயற்கை விவசாயம் என்றபெயரில் விற்கபடுகிறது. அவை இயற்கையாக விளைந்தவையா? அதாவது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாதவையா? என்று நம்மால் உறுதி செய்ய முடிய வில்லை. பல வேளைகளில் அது உண்மையை மறைத்து இயற்கை விவசாய விளைபொருள் என்ற போர்வையில் விற்பதாகவே தெரிகிறது.

    நல்லதா கெட்டதா?

    சரி, அப்படி என்றால் இயற்கை விவசாயம் நல்லது இல்லையா என்ற கேள்வி எழும். இயற்கை விவசாயம் நல்லது, மிகவும் நல்லது. ஆனால் அது சாத்தியமானதா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. நமது வீட்டுத் தோட்டத்தில் பயிர்களும், செடிகளும் இயற்கையாக வளர்க்க முடியும். புழு, பூச்சிகள் தாக்கினாலும் இழந்தது போக மீதி போதும் என்ற நிலை என்பதால் இதில் சிக்கல் இல்லை. ஆனால் கடன் வாங்கி வாழை, கரும்பு, பருத்தி, நெல், மிளகு, மஞ்சள் என்று விவசாயம் செய்யும் ஒரு விவசாயி ரசாயன உரம் இடாமல், பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காமல் லாபகரமாக விவசாயம் பண்ண முடியுமா என்பது சந்தோசமாக இருக்கிறது.

    அப்படி இயற்கை முறையில் விவசாயம் செய்ய முடியும் என்றால் அந்த வழிமுறைகளை வேளாண் விஞ்ஞானிகள்தான் விளக்கிச் சொல்ல வேண்டும். அவர்கள்தான் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஆதாரம் திரட்ட வேண்டும்.

    முன்னணி விவசாயிகள்:

    விவசாயிகள் சிலர் இன்று இயற்கை விவசாயம் செய்து நல்ல பலன் கண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு நியாயமான மகசூலும் கிடைத்திருக்கிறது. அவர்கள் மீது உள்ள நம்பிக்கையால் அவர்களது விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி முன்னணி விவசாயி திரு.அந்தோணிசாமி, அப்படிபட்ட ஒரு புகழ் பெற்ற விவசாயி. இவரது முயற்சியை பார்க்கும் போது இயற்கை விவசாயத்தின் மீது நம்பிக்கை வருகிறது. நானும் எனது வீட்டுத் தோட்டத்தில் இயற்கை விவசாயம் தான் செய்கிறேன்.

    இதுவரை அறிவியல் பூர்வமான, இராசயன உரமும் பூச்சிக்கொல்லி மருந்தும் பயன்படுத்திய நவீன விவசாயம் மட்டுமே நம் நாட்டு வளர்ச்சிக்கு உதவியது. ஆனால் இதனால் நிலத்தின் வளம் கெட்டது, உயிரினங்கள் அழிந்தன என்பது உண்மைதான். இயற்கை விவசாயம் செய்வதால் எதிர்காலத்திலாவது நிலமும் நீரும் காற்றும் மாசுபடாமல் இருக்கும்.

    நாடு வளர்ச்சியடைய தீவிர விவசாயம் செய்ய வேண்டும். அதையும் ஒரு சிலரே செய்ய வேண்டும். அவர்களும் இயற்கை விவசாயம் செய்வது நல்லது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்கும் வகையில் தானியங்களும், பயிறு வகைகளும், எண்ணெய் வகைகளும், பழ வகைகளும், காய்கறிகளும், பணப்பயிர்களும் இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்ய முடியுமா என்ற கேள்விகள் குறித்து விவசாயிகளும், விவசாய விஞ்ஞானிகளும் இணைந்து ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    கிரேக்க மன்னர் பிலிப் மாசிடோனியாவிலிருந்து அரிஸ்டாட்டிலுக்கு எழுதிய கடிதத்தில் குருவே திருமணம் ஆகி பதினொரு ஆண்டுகளுக்குப்பிறகு எனக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. அந்தக்குழந்தை மகாமேதையான உங்களிடம் தான் கல்வி கற்கும் என்கின்ற நம்பிக்கையில் நான் ரொம்பும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார் மன்னர்.

    கடிதத்தில் குறிப்பிட்டபடி தன் மகன் அலெக்ஸாண்டரை பத்து வருடம் கழித்து அரிஸ்டாட்டிலிடம் ஒப்படைத்தான் மன்னன். அரிஸ்டாட்டில் அலெக்ஸாண்டரைத் தன்னுடன் நான்கு ஆண்டுகள் வைத்திருந்தார். ஒரு முறை மலையடிவாரத்திற்கு கீழே வந்து கொண்டிருக்கும் வெள்ளத்தைக் கடந்து செல்ல வேண்டும். அரிஸ்டாட்டிலுக்குப் பின்னால் அலெக்ஸாண்டர் வந்து கொண்டிருந்தார்.

    அலெக்ஸாண்டர் அரிஸ்டாட்டிலைப் பார்த்து குருவே வெள்ளம் அதிகமாக வருகிறது. நான் முன்னே செல்கிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள் என்றான். எங்கே மேடு பள்ளம் என்பது தெரியாத அளவிற்கு வெள்ளம் வருவது அதிமாகிவிட்டது. வெள்ளம் உன்னை இழுத்துக் கொண்டு போய்விடும். நீ முன்னால் போக வேண்டாம் என்றார் அரிஸ்டாட்டில்.

    இதற்கு ஐயா நீங்கள் நினைத்தால் ஆயிரம் அலெக்ஸாண்டர்களை உருவாக்க முடியும். ஆனால் ஆயிரம் ஆயிரம் அலெக்ஸாண்டர்கள் சேர்ந்தாலும் ஒரே அரிஸ்டாட்டில் மாமேதையை உருவாக்க முடியாது. எனவே நான் முதலில் செல்கிறேன் என்றார் அலெக்ஸாண்டர்.

    தம்மை விடவும் அறிவு முதலியவற்றில் பெரியவர்களைத் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் வல்லாமை எல்லாவற்றிலும் சிறந்த வல்லமையாகும்.