திரு. S.M. உதயகுமார்
இயக்குநர், SPIRO ACADEMY பயிற்சி நிறுவனம்
சென்னை மற்றும் நாமக்கல்
சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையென்னும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதை திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின் புற்றிருந்து வாழ்வீர்
தீமையெல்லாம் அழிந்து போகும், திரும்பி வாரா…
இவ்வரிகள் மகாகவி பாரதியின் தன்னம்பிக்கை உணர்த்தும் தத்துவ வரிகளாகும். இவ்வரியை தனது வாழ்க்கை நெறியாக கடைபிடித்து வாழ்ந்து வரும் தன்னம்பிக்கையாளர்.
வெற்றி என்பது அரிதல்ல… எளிது… ஆனால் அதற்கு நம்பிக்கை என்னும் போராட்ட குணமும், முயற்சி என்னும் தன்னம்பிக்கை குணமும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற தத்துவத்தை தனது மாணவர்களுக்குப் போதித்து வரும் நல்லாசான்.
கனவு காணுங்கள் என்று சொன்னார் கலாம் அவர்கள்.. அந்தக் கனவை நனவாக்க என்னிடம் வாருங்கள், உங்களின் வாழ்க்கையை வசந்தமாக்கிக் காட்டுகிறேன் என்று நாளும் நம்பிக்கை விதையை மாணவர்கள் மனதில் விதைத்து வரும் SPIRO ACADEMY பயிற்சி நிறுவனத்தின் இயங்குநர் திரு. S.M. உதயகுமார் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…
கே : உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
நாமக்கல் மாவட்டத்திலிருந்து பத்து கல் தொலைவிற்கு அப்பால் உள்ள புதன் சந்தைக்கு அருகில் S. உடுப்பம் என்னும் சிறிய கிராமத்தில் தான் பிறந்தேன். இவ்வூருக்கு அருகிலுள்ள அரசுப் பள்ளியில் தான் என்னுடைய தொடக்கக்கல்வி முதல் உயர்நிலை கல்வி வரைப் படித்தேன். நன்றாகப் படித்ததால் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சிப் பெற்றேன். இதனால் சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம் பொறியியில் கல்லூரியில் பி. இ. கம்யூட்டர் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.
கே: படித்து முடித்தவுடன் உங்களின் முதல் வேலை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
எனது பெற்றோர் விவசாயம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு என்னையும் படிக்க வைத்தார்கள். கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் இனியும் பெற்றோர்களிடம் பணம் வாங்கி படிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனவே 2005 ஆம் ஆண்டு கல்லூரியை முடித்தவுடன் ஓரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணியாளராக வேலையில் சேர்ந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் என்னுள் எடுத்துக் கொண்ட தீர்மானம் என்னவென்றால் நாம் செய்யும் எந்தப் பணியும் இழிவானது அல்ல, செய்யும் எல்லா வேலையும் தெய்வமாக நினைத்துப் போற்ற வேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் எனக்குள் சின்ன வயதிலிருந்தே சம்பளம் வாங்கும் இடத்தில் இருப்பதை விட கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அந்த வகையில் அந்த தனியார் நிறுவனத்தில் ஒரு நாற்பத்தி ஐந்து நாட்கள் வேலையில் இருந்தவிட்டு பிறகு சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்க முனைந்தேன்.
கே: நீங்கள் படித்தது பொறியியல் ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்ததோ பயிற்சி நிறுவனம் அதைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் படிக்கின்ற காலத்தில் இது போன்ற பயிற்சி நிறுவனங்களோ, ஆலோசனை மையங்களோ இல்லை. இதனால் நான் படிக்கின்ற காலத்தில் என்னைப் போல எத்தனையோ மாணவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. நினைத்த வேலை ஓன்று செய்யும் வேலை வேறாக இருந்தது. இது தான் என்னை ஒரு பயிற்சி நிறுவனம் தொடங்கும் நிலைக்கு உந்தியது.
ஆரம்பத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பிராஜெக்ட் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினேன். எதிர்பார்த்து காத்திருந்த எத்தனையோ மாணவர்கள் தொடங்கிய ஆண்டே எங்கள் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார்கள். நான் எப்போதும் தொடங்குவதற்கு முன் பலமுறை யோசித்துவிடுவேன். தொடங்கிவிட்டால் என்னுடைய யோசனை எல்லாம் அதன் வளர்ச்சி சார்ந்ததாக மட்டும் தான் இருக்கும்.
முதலில் சென்னையிலுள்ள அமிஞ்சகரையில் தான் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினோம். அதன்பிறகு ஆண்டிற்கு ஒரு இடத்தில் என்று நிறுவனத்தின் வளர்ச்சி பெருகி கொண்டே போனது. அதன்பிறகு SPIRO ACADEMY நிறுவனம் என்னும் பெயரில் தொடங்கி மாணவர்களுக்கு JEE, NEET, IIT போன்ற போட்டித் தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பலவகையில் பயன் பெற்றனர். எங்கள் நிறுவனம் தொடங்கியதன் முதன்மை நோக்கமே JEE, NEET போன்ற போட்டித் தேர்வுகளை மற்ற மாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் தான் அதிக அளவில் தேர்வு பெற்று வந்தார்கள், அவர்களை போல தமிழ்நாட்டிலும் அதிக மாணவர்கள் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற ஒரே உயரிய நோக்கம் தான்.
கே: SPIRO ACADEMY பெயர் காரணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
இதற்கு மூன்று பொருள் இருக்கின்றன. ஒன்று சூரியன் உதயமாதல், சுவாசம், இரண்டு அணுக்கதிர்கள் போதும் ஒன்றை ஒன்று மோதும் பொழுது உருவாகும் ஒரு சக்தி தான் SPIRO என்பது.
படிக்கும் மாணவனுக்கு தன்னிடம் இருக்கும் உந்து சக்தியை மேம்படுத்தி அவன் சந்திக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதால் தான் இப்பெயர் வைக்கப்பட்டது.
இந்தியாவில் சென்ற ஆண்டு மட்டும் நீட் தேர்விற்கு 1,175,000 பேர் எழுதினார்கள். இந்தியா முழுவதும் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இதை இரண்டிலும் சேர்ந்து 65,000 சீட் தான் இருக்கிறது. அத்துனை பேர் எழுதும் தேர்வுக்கு வெறும் இவ்வளவு சீட் தான் இருக்கிறது. அதே போல் தமிழ்நாட்டில் 1 இலட்சம் பேர் எழுதினார்கள் ஆனால் இங்கு சீட் என்று பார்த்தால் வெறும் 2 ஆயிரம் தான். இதைப் பார்க்கும் போது மாணவர்கள் மனதில் ஒருவித பயத்தைக் கொடுத்து விடும்.
இதனால் ஒரு தேர்வு சார்ந்த பயத்தை மாணவர்களிடம் நீக்குதல் வேண்டும். அதே சமயத்தில் தேர்வு சார்ந்த ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். அவனுக்கே தெரியாமல் மனதளவில் அவனை தயார் படுத்தி அவன் மனதில் இருக்கின்ற சக்தியை வெளிகொணர்வது இந்நிறுவனத்தின் நோக்கம். இதன் அடிப்படையில் தான் இந்நிறுவனத்திற்குப் இந்தப் பெயரை வைத்தோம்.
கே: மாணவர்களின் சேர்க்கையையும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் எப்படி பூர்த்தி செய்தீர்கள்?
இது ஒரு போட்டி நிறைந்த உலகம். எல்லோரும் ஒரு எல்லையை அடைய ஓடியும் தேடியும் கொண்டியிருக்கிறார்கள். இங்கு எத்தனையோ விதமான போட்டித் தேர்வுகள் இருக்கிறது. நமக்கு மாணவர்களின் எண்ணிக்கை ஒன்றும் பெரிதல்ல, தன்னிடம் வரும் ஒவ்வொரு மாணவர்களையும் எப்படியும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்களை தயார்படுத்தி சாதிக்க வைத்திடுவோம்.
இச்சாதனையை படிப்பவர்களும் பார்ப்பவர்களும் எங்கள் நிறுவனத்தை நாடி வருகிறார்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்பே எங்களிடம் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு இடங்களில் மருத்துவம் படித்து வருகிறார்கள்.
இந்தியாவில் இருக்கின்ற எல்லா மருத்துவக் கல்லூரியும் நீட் க்கு கீழே வந்து விடும். ஏஎம்எஸ் மருத்துவக்கல்லூரி ஜீப்மர்ஸ் இரண்டு மருத்துவக் கல்லூரியும் இந்தியாவின் அதி முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனம் என்பதால் இந்த இரண்டிற்கும் சில விலக்குகள் இருக்கிறது. ஏம்எம்எஸ் தன்னாட்சி பெற்ற நிறுவனம். இந்த இரண்டு கல்வி நிலையங்களிலும் 200 சீட் இருக்கிறது. இதில் எங்கள் SPIRO ACADEMY லிருந்து 40 மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். ஜீப்மர்ஸ்ல் 30 மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். இந்த இடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அதில் குறிப்பிட்ட பேர் எங்கள் நிறுவனத்திலிருந்து தேர்ச்சி பெற்று செல்வதால் இதைப்பார்க்கும் மாணவர்களும் பெற்றோர்களும் எங்களை நாடி வருகிறார்கள்.
2005 ஆம் ஆண்டிற்கு முன்னர் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நுழைவுத் தேர்வு இருந்தது. ஆனால் அதன் பிறகு அரசு இத்தேர்வை நீக்கிவிட்டது. ஆனாலும் எங்கள் நிறுவனம் ஆகில இந்திய நுழைவுத் தேர்வான ஏஎம்எஸ், ஜீப்மர்ஸ், ஜெஇஇ போன்ற தேர்வுகளில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வந்தோம். தற்போது நீட் தேர்வு வந்தவுடன் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இத்தேர்வு குறித்தான விழிப்புணர்வு அதிகம் வர ஆரம்பித்துவிட்டது. இதனால் எங்கள் நிறுவனத்தை நாடி வருகிறார்கள்.
இங்கு அறிவு குறைந்த மாணவர்கள் என்று யாரும் இல்லை. மாணவர்களில் இரண்டு படிநிலைகளில் இருக்கிறார்கள். ஒன்று சட்டென்று புரிந்து கொள்பவர்கள் மற்றொருவர் சற்று தாமதமாகப் புரிந்து கொள்வர்கள். இவர்களை சரியாக கையாண்டால் வெற்றி பெற்றுவிடுவார்கள்.
கே: கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கு நீங்கள் அளிக்கப்படும் பயிற்சிப் பற்றிச் சொல்லுங்கள்?
நகர்ப்புற மாணவர்களைவிட, கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். காரணம் அவர்களில் ஒரு சிலர் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களாக இருப்பார்கள். இதை அவர்கள் பெரிய குறைகளாகக் கருதுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை கிராமப்புற மாணவர்களே சிறந்தவர்கள் என்று சொல்வேன். காரணம் அவர்களுக்குள் அதிகபடியான கனவுகள் இருக்கும். உழைக்கும் மனப்பான்மை அதிகம் இருக்கும்.
ஆரம்பத்தில் சற்று தயக்கம் இருந்தாலும், கற்றுக் கொண்ட பின்னர் அவர்களின் கற்றல் போக்கு மிகவும் தெளிவாக இருக்கும். நகர்ப்புறத்தில் படிக்கும் மாணவர்களை சிறுவயதிலிருந்தே பெற்றோர்களும் சரி, கல்வி நிறுவனங்களும் சரி அவர்களை நன்றாகத் தயார் படுத்தி விடுகிறது. இதனால் அவர்கள் எதையும் எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.
சென்ற ஆண்டுகள் 465 பேர் மெடிக்கல் கல்லூரிக்குத் தேர்வாகி சென்றார்கள். அதில் 40 பேர் கிராமப்பின்னணியில் தமிழ்வழிக் கல்விப் படித்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகக் கருதுகிறேன்.
கே: உங்கள் நிறுவனத்தின் தனித்தன்மைகள் பற்றிச் சொல்லுங்கள்?
மனிதனின் வளர்ச்சி படிநிலைகளில் எல்லா காலத்திலும் ஒவ்வொரு தேர்வை எதிர் கொண்டு தான் இருக்க வேண்டும். அதிலும் போட்டித் தேர்வு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வளர்ச்சியைக் கொடுக்கும் தேர்வாகும். இவ்வாறு இருக்கும் போட்டித் தேர்வில் இத்தனை வினாவிற்கு இவ்வளவு மதிப்பெண் என்று முடிவு செய்து விடுவார்கள். உதாரணமாக நீட் தேர்வில் மொத்தம்180 வினாக்கள், 180 நிமிடங்கள் ஒரு வினாவிற்கு ஒரு நிமிடம் தான். இரண்டு ஆண்டுகள் அவர்கள் தினமும் இரவு பகல் பார்க்காமல் படித்ததை இந்த மூன்று மணிநேரம் தான் தீர்மானிக்கிறது. ஒரு வினாவை சரியாக எழுதினால் 4 மதிப்பெண், ஆனால் தவறாக எழுதினால் மதிப்பெண் இல்லை மைனஸ் 1 மதிப்பெண். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை ஒரு மாணவன் எவ்வாறு தீர்மானிக்கிறான், கால மேலாண்மையை எப்படி சமாளிக்கிறான் போன்றவற்றை கற்றுக் கொடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு மாணவர்கும் நீட் தேர்வை மூன்று முறை எழுதலாம் எஸ். சி. எஸ்.டி பிரிவினர் ஐந்து முறை எழுதுலாம். நீட் தேர்வு ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பாக நடைபெற்று வருகிறது. மருத்துவர் கனவோடு தற்போது 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். எந்த வெற்றியும் எளிதாக கிடைத்து விடாது. சற்று கடினமான சூழலை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
நாங்கள் காலை 5 மணிக்கெல்லாம் மாணவர்களைத் தயார் படுத்தி விடுவோம். 6 மணிக்கு வகுப்புகள் தொடங்கி விடும். 6 மணியிலிருந்து 1.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் 1.30 மணியிலிருந்து 2 மணி வரை உணவு இடைவேளை, 2 மணியிலிருந்து 3 மணி வரை அவர்களுக்கு ஓய்வு அவர்கள் உறங்கிக் கொள்ளலாம். 3 முதல் 5 வரை ஆசிரியரின் மேற்பார்வையில் அவர்கள் படிக்க வேண்டும். 5 முதல் 6 வரை விளையாட வேண்டும். 6 மணியிலிருந்து 8 வரை படிக்க வேண்டும். இரவு உணவு அருந்திய பின்னர் அன்று நடத்திய பாடத்தை படிக்க வேண்டும் இப்படியே தொடர் சங்கிலியாக அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பொழுது அவர்களும் சோர்வடையவோ, மன அழுத்தம் ஏற்படா வண்ணம் அவர்களை அவர்களே தயார்படுத்திக் கொள்வார்கள்.
பொதுவாக நீட் எழுதும் மாணவர்க்கு இயற்பியல், வேதியியல் பாடம் சற்று கடினமான இருக்கும் என்று நினைப்பது இயல்பு தான். ஆனால் எங்கள் அகாடெமியில் படிக்கும் எந்த மாணவனும் அந்தப் பாடத்தை படிக்கச் சொல்ல மாட்டார்கள். காரணம் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் மாணவர்களிடையே எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு எப்போதும் இருக்கும்.
கே: இந்த நிறுவனத்தின் ஆசிரியர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
எங்களிடம் பணியாற்றும் அத்துனை ஆசிரியர்களும், ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களாகவும், 15 வருடத்திற்கும் மேலாக அனுபவம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து பல இடத்திலிருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சாதித்த வல்லுநர்களை மட்டுமே நாங்கள் ஆசிரியர்களாக நியாமித்து வருகிறோம். [hide]
கே: ஒரு கல்வி நிலையம் நடத்துவதில் உள்ள சவால்கள் என்னென்ன?
தன் மகன் மருத்துவராகவோ, அல்லது பொறியாளராகவோ ஆக வேண்டும் என்ற ஒரு இலட்சிய கனவோடு தான் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் எங்களிடம் வந்து சேர்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிச்சயம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதற்கு எங்களை நாங்கள் பல வழிகளில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
எங்களிடம் 800 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் அவர்களை அத்துனை பேரையும் மருத்துவர்களாக்கி பார்க்க வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கமாக இருக்கும். நான் மட்டுமல்ல என்னை தொடங்கி எங்கள் ஆசிரியர்கள், மேலாண்மைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியர் அல்லாதோர், கேண்டீனில் வேலை செய்பவர்கள் என இவர்கள் அனைவரும் மாணர்வர்கள் அனைவரும் மருத்துராகி விட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
மாணவர்களை தன் நோக்கம் பிறழாதவாறு அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். 100 க்கு 10 சதவீதம் மாணவர்கள் ஆசிரியர்கள் என்னதான் போராடிப் பாடத்தை நடத்தினாலும் அதற்கு அவனின் ஒத்துழைப்பு இருக்காது. இதனால் அவனால் தேர்ச்சிப் பெற முடியாமல் கூட சில வேளைகளில் போய் விடும். இப்படிப் பட்ட மாணவர்களை சீர்படுத்துவதில் தான் சற்று சவால்கள் இருக்கிறது.
கே: கடந்த வந்த பாதையில் நீங்கள் சந்தித்த ஏதேனும் நெகிழ்ச்சியான நினைவுகள் பற்றி?
நிறைய நெகிழ்ச்சியான நிகழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன். பெற்றோர்கள் மிகவும் வறுமை நிலையிலிருந்து தனது மாணவனை எங்களிடம் அழைத்து வருவார்கள். கட்டணம் செலுத்த கூட அவர்களிடம் பொருளாதாரம் இருக்காது. அப்படிப்பட்டச் சூழலில் அம்மாணவன் நன்றாகப் படித்து நல்ல ஒரு அரசு வேலையில் பணியில் சேர்ந்திருப்பான். அவர் தனது பெற்றோரை அழைத்து வந்து என்னிடம் நன்றியைச் சொல்வார்கள். அத்தருணம் எப்போதும் எனக்கு நெகிழ்ச்சியைத் தரும்.
நாங்கள் நிறைய மாணவர்களுக்கே தெரியாமல் உதவித்தொகைக் கொடுத்து படித்துவைத்திருக்கிறோம். விடுதிக்கட்டணம் செலுத்த முடியாமல் தினமும் பல மைல் தூரம் பயணம் செய்து வரும் மாணவர்களுக்கு விடுதியில் இலவசமாக அனுமதி கொடுத்திருக்கிறோம்.
35 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகைப் பெற்று படித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட மாணவர்கள் நல்ல உயர் பதவியை அடையும் பொழுது மாணவனும் அவனின் பெற்றோரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவிப்பது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது.
கே: நீட் தேர்வால் சமீப காலத்தில் இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள், அது பற்றி?
அது மிகவும் துயரமான சம்பவம் தான். அதை நினைத்து நான் பல நேரங்களில் வருத்தம் கொண்டதுண்டு. நிச்சயம் அந்த பெண்களுக்கு எங்கள் நிறுவனத்தைப் பற்றி தெரிந்து எங்களிடம் வந்திருந்தால் அவர்களின் நிலை வேறு விதமாகக் கூட மாறியிருக்கலாம்.
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எப்போதும் தாழ்வு மனப்பான்மை மட்டும் இருந்திடுதல் கூடாது. எதையும் எதிர் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இல்லாத போது தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
இப்படிப்பட்ட மாணவர்கள் எங்களை அணுகினால் நாங்கள் இலவசமாகப் பயிற்சி கொடுக்கக் கூட தயாராக தான் இருக்கிறோம். தற்போது அரசும் இதற்கான பயிற்சிகளைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
தற்கொலை ஒரு போதும் எதற்கும் தீர்வு அல்ல…முடிவு என்று இங்கு எதுவும் இல்லை. இங்கு சாதிக்க பல வழிகள் இருக்கிறது. அதில் எதையேனும் முறையாக கடைபிடித்து சாதியுங்கள்.
கே: தொலைதூர கல்வி முறையை கொண்டு வருவதற்கான காரணம்?
எந்த ஒரு தனியார் பயிற்சி நிறுவனமும் கொண்டு வராத திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். நீட் பயிற்சி வகுப்பை தொலை தூர கல்வியின் மூலம் படிக்கலாம் என்பது தான்.
தற்போது படித்து வரும் மாணவர்கள் அவர்களால் தினமும் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல் தான். அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எங்களின் நிறுவனம் சென்னை மற்றும் நாமக்கல் ஆகிய இரு இடங்களில் மட்டுமே தான் இருக்கிறது. எங்கள் நிறுவனத்தில் மட்டுமே படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தூரத்தின் காரணமாக வர முடியாத சூழல் ஏற்டலாம். இது அவர்களுக்கு ஒரு வரபிரசாதம்.
மேலும் எல்லா விதமான தகுதித் தேர்வுக்கு படிக்கும் வகையில் புத்தகங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதை அவர்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேர்வு தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளோம். எங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்த படியே இதில் தேர்வு எழுதிக் கொள்ளலாம். அவர்களின் வீட்டின் முகவரிக்கு மூன்று கொரியர் அனுப்பி விடுவோம். அதில் ஒன்றில் வினாத்தாள் இருக்கும். மற்றொன்றில் அந்த வினாவிற்கான விடை இருக்கும், இன்னொன்றில் ஏதேனும் தவறாக விடை எழுதியிருந்தால் அதற்கான தீர்வு கொடுக்கப்பட்டிருக்கும். இப்படி அவர்கள் வீட்டியிலிருந்தே அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்.
இந்தியாவில் எந்த பகுதியில் படிக்கும் மாணவர்களும் எங்களின் தலைசிறந்த ஆசிரியர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தகவல்கள், வினாக்கள் போன்றவை கேட்டுக் கொள்ளலாம்.
தற்போது இதில் 1000 த்திற்கும் மேற்பட்டோர்கள் படித்து பயன் பெற்று வருகிறார்கள்.
கே: உங்களுக்குப் பிடித்த மனிதர் பிடித்த புத்தகம்?
பிடித்த மனிதர் முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். தனது வாழ்நாள் முழுவதும் மாணவர்களின் நலனே தன் நலனாக வாழ்ந்தவர். அவர் எழுதிய புத்தகம் அக்னி சிறகுகள் எனக்கு மிகவும் பிடித்தது.
கே: எதிர்கால திட்டம்?
தற்போது சென்னை மற்றும் நாமக்கல்லில் இருக்கும் இந்நிறுவனம் அடுத்தடுத்த ஆண்டில் கோவை, திருச்சி, மதுரை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் கொண்டு வர வேண்டும்.
அதே போல் தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களை ஒரு தலைசிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும்.
மருத்துவர் பிரிவில் 3000 சீட்டில் ஒரு 800 சீட் பெற வேண்டும். அகில இந்திய ரேங் பட்டியியலில் 10 இடத்திற்குள் தமிழ்நாட்டு மாணவர்கள் யாரும் இடம் பெறவில்லை அவர்களை அந்த இடத்திற்கு அழைத்து வர வேண்டும்.
எல்லா போட்டித் தேர்வு சார்ந்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
கே: வளரும் இளம் தலைமுறையினருக்கு நீங்கள் கூறுவது?
வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான். வெற்றி உன்னை நாடறிய செய்யும் தோல்வி உன்னை அறிய செய்யும். இதைப்புரிந்து கொள்ள வேண்டும்.
உன் இலக்கை தேடி அழைந்து கொண்டேயிருக்க வேண்டும். சிற்றின்ப ஆசையில் உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். அது அப்போது தோன்றும் ஒரு சிறிய மகிழ்ச்சி தான். ஆனால் நீங்கள் போராடி வெற்றி பெற்று பாருங்கள் காலம் முழுவதும் மகிழ்ச்சியாகவே இருக்கலாம். இதை நீங்கள் புரிந்து கொண்டு செயலாற்றினீர்கள் என்றால் நாளை உலகம் உன் பெயரைச் சொல்லும்.[/hide]
நேர்காணல் : விக்ரன் ஜெயராமன்
இந்த இதழை மேலும்