There should be a Positive record of giving regard to all.
Contentment and bliss go hand in hand. These qualities create great fascination for you among others.
மற்றவர்களை கவர்வது என்பது ஒரு தனிக் கலை, அந்தக் கலை கை வர வேண்டுமென்றால் ஒருவர் சூழ்நிலைக்கேற்ப தன் குணாதிசயங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டு, தன்னிடம் இல்லாத குணாதிசியங்களை அவர் கற்றுக் கொள்ள வேண்டும், அதைத் தவறாது பின்பற்றவும் வேண்டும், தன்னிடமுள்ள குறைகளை விட்டுவிடவும் வேண்டும், குறைகளில்லாத நிறைவான மனிதர்கள் சில சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டிருப்பார்கள், சிலருக்கு அந்த அம்சங்கள் இயற்கையாகவே அமைந்திருக்கும், ஒரு சிலர் தன் முயற்சியால் அந்த அம்சங்களை பெற்றுக் கொள்வார்கள்.
ஒருவர் மற்றவர்களை வசீகரிக்க வேண்டுமானால் கீழ்க்காணும் அடிப்படை அம்சங்களை பெற்றுள்ளவராக இருத்தல் வேண்டும்.
1.நடை, உடை பாவணைகள்:
ஒருவருடைய கம்பீரமான நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், கண்களிலே ஒரு காந்த சக்தியும், அழகான உடையலங்காரமும், மற்றவர்கள் சற்றுத் திரும்பிப் பார்க்கிற உடல் அமைப்பும், அழகான உடல் அசைவுகளும் ஒருவருடைய கவரும் தன்மையை அதிகப்படுத்துக்கின்றன, கனிவான கண்பார்வை இருக்க வேண்டும், மற்றவர்களை வசீகரிப்பதில் கண்பேசும் வார்த்தைக்கு முக்கியத்துவம் உண்டு.
2.பேசும் வார்த்தைகளில் இனிமை:
நல்ல இனிமையான, பண்பட்ட, தேர்ந்த, சுவையான, வார்த்தைகளைப் பேசும்போது கூடியிருக்கிற கூட்டம் சற்று உங்களை உற்றுப்பார்க்கும் , வசந்தமான வார்த்தைகளை, மென்மையான குரலிலே உச்சரிக்கிற போது, அந்த உச்சரிப்புக்கள் காந்தத்தைப் போல மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும், நல்ல நடையும், உயர்ந்த உடைகளும், சிறந்த பாவனைகளும் இருந்தாலும் கூட, மோசமான, கீழான, இனிமையில்லாத, பயனில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தினால் உங்களைச் சுற்றியிருக்கிற கூட்டம் உங்களைசற்று ஒதுங்கிப்போகும், நடை என்பது உங்களின் நடத்தையும் குறிக்கும், நல்ல குணமுள்ளவராக, நல்ல பண்புகளின் ஒட்டு மொத்த சாரமாக, நல்ல நடத்தையுள்ளவராகவும் (Conduct and character) இருத்தல் வேண்டும்.
3.புன்சிரிப்பு:
நாம் அடுத்தவருக்கு எதைத் தருகிறோமோ, அது நமக்கே திரும்பி வந்து சேர்கிறது. பல மடங்காகவும் வரலாம் , வரமாகவும் வரலா, சாபமாகவும் வரலாம், நாம் எதைத் தருகிறோம், எப்படித் தருகிறோம், என்பதைப் பொறுத்து அது அமையும், நாம் மலர்களை தந்தால் அது மாலையாக திரும்பி வரும், விதைகளைத் தந்தால் அது விருட்சமாக திரும்பி வரும், நாம் புன்னகைத்தால் எதிரே வருபவர்கள் புன்னகைத்து தான் தீரவேண்டும்.
ஒரே ஒரு புன்னகை மற்றவர்களுக்கு இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியை தரும், உங்கள் மேல் இருக்கிற அபிமானம் அவருக்கு கூடும், அவர்கள் மனதிலே அன்புப் பூவும், ஆனந்தப் பூவும் மலரும், உங்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என விரும்புவார்கள், அடுத்த முறை அவர்கள் உங்களை பார்க்கும்; போது முதலிலேயே புன்னகைப்பார்கள், நட்பு துளிர்விடும், சந்திப்புகள் தொடரும், பழக்கம் நெருக்கமாகும், உங்களுடைய நட்பு வட்டம் அதிகமாகும், அவருடைய நண்பர்களும் உங்களுக்கு நண்பர்களாவார்கள், புன்சிரிப்புதான் இதற்கு முதல் வித்து.[hide]
4.மனப்பூர்வமான அன்பையும், விருப்பத்தையும், நேசத்தையும் காட்டவேண்டும்:
நீங்கள் மற்றவர்கள் மேல் காட்டுகிற அன்பு உளப்பூர்வமாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும், மேலெழுந்து வாரியாக பழகாமல், எதிர்பார்புகளுடன் கூடிய நேசமாக இல்லாமல் இருக்க வேண்டும்,அவர்கள் உள்ளத்தைக் கவரும் வகையில் அவர்களுடைய நலம் விரும்பிகளாக இருக்க வேண்டும், அவர்கள் தேடி வந்து அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சொல்லி ஆலோசனைகள் பெறும் அளவு உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும், நடிப்புக்கும், பாசாங்கிற்கும் இங்கு இடமில்லை.
5.மற்றவர்களுடைய பெயர்களைச் சொல்லி அழைக்க வேண்டும்.
எந்தக் கூட்டமாக இருந்தாலும் ஒருவருடைய பெயரைச் சொல்லி அழைக்கிற போது அங்கே அவருக்கு ஒரு முக்கியத்துவம் உண்டாகிறது, தனது பெயர் உச்சரிக்கப்படும் போது அவர் மனதிலே ஒரு மகிழ்ச்சி மத்தாப்பூள வெடிக்கும், உங்கள் மேல் ஒரு அளவு கடந்த பிரியம் அவருக்கு உண்டாகும்.
முத்தமிழறிஞர் கலைஞரைப்பற்றி குறிப்பிடுவார்கள், எந்த ஊர் சென்றாலும் அங்குள்ளவர்களில் தொண்டர்களின் பெயரைபெயர் சொல்லி கூப்பிடும் அளவு நினைவாற்றல் இருந்தது எனவும் அந்தக் காரணத்திற்காகவே உயிரை கொடுக்கும் தொண்டர்கள் இருந்தார்கள் என்பதும் அறியப்பட்ட உண்மை.
எனது மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய நெருங்கிய நண்பர் திரு. K.G.ராமகிருஷ்ணனமூர்த்தி அவர்கள் அரிமாசங்கத்தின் மாவட்ட ஆளுநராக இருந்தவர், கூட்டு மாவட்டத் தலைவராக இருந்தார், இந்திய துணைக் கண்டத்தில் அரிமா இயக்கத்தில் அவர் ஒரு VIP. தெற்காசிய நாடுகளினுடைய அமைப்பின் முதன்மைப் பிரதிநிதியாக இருந்தார். பன்னாட்டு அரிமாசங்கத்தில் இயக்குநராக தேர்ந்தெடுக்கப்ட்டவர், பன்னாட்டு அரிமா சங்கத்தின் அகில உலகத் தலைவராகும் தகுதி பெற்றவர், மிகச்சிறந்த பேச்சாளர், பழகுவதற்கு இனியவர், மிகவும் அன்பானவர், மென்மையானவர் , K.G.R என்ற மூன்றெழுத்துக்கு சொந்தக்காரர் , எல்லா நண்பர்களும் உறவு முறை சொல்லியே அழைக்கும் உன்னத குணம் அவருக்குண்டு, மற்றவர்கள் எல்லாம் வியக்கும் அளவுக்கு ஒரு நினைவாற்றல் கொண்டவர்.
அவர் மாவட்ட ஆளுநர் பொறுப்பு ஏற்கும் போது சுமார் 300 பேர் கொண்ட அமைச்சரவை உறுப்பினர்களை ஒரு குறிப்பும் கையில் இல்லாமல், வரிசையாக ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி அழைத்து, எல்லோரையும் அதிசயக்க வைத்து நட்பின் உச்சத்தைத் தொட்டார், இவர்களைப் போன்ற நண்பர்களைப் பெறுவது ஒரு பாக்கியமாகும், அவருக்கு இந்திய அளவில் இருக்கும் நட்பின் விரிவாக்கம் வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.
6.மற்றவர்கள் சொல்வதை கேட்கிற பழக்கம் இருக்க வேண்டும்,
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நிதானமாக காது கொடுத்து கேட்க வேண்டும், மறுத்துப் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், விவாதம் செய்வதை அறவே விட்டு விட வேண்டும், அவர்களைப் பற்றி அவர்களே பெருமையாக பேசுவதை ஊக்குவிக்க வேண்டும், நாம் சொன்னால் அவர் காது கொடுத்து கேட்பார், நம்மை உற்சாகப்படுத்துவார் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும், அப்பொழுதுதான் உங்கள் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படும்.
7.மற்றவர்களின் விருப்பு வெறுப்பு அறிந்து பேச வேண்டும்,
ஒருவருக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு அதைப்பற்றி அவர்களிடம் பேச வேண்டும், அவர்களுக்கு பிடிக்காததை அவர்களிடம் அழுத்தமாகப் பேசி வெறுப்பை சம்பாதிக்க கூடாது, அவர்கள் எந்த அலை வரிசையில் இருக்கிறார்களோ அந்த அலை வரிசைக்கேற்ப நமது பேச்சை திசை திருப்பிக் கொள்ள வேண்டும்.
8.மற்றவர்கள் தன்னை முக்கியமானவர்கள் என்று உணரும்படி நமது செயல்கள் இருக்க வேண்டும்.
ஒருவர் தமக்கென்று VIP Treatment இவர் கொடுக்கிறார் என்று அவர்கள் நினைக்கும்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த இடத்திலும் சின்ன அவமரியாதை கூட அவர்களுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அவர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும், தனி அக்கறை செலுத்தும் போது ஒருவருக்கு VIP Treatment தரும் போது, உங்கள் மேல்அவருக்கு அளவிடமுடியாத அன்பும், பாசமும், மரியாதையும் ஏற்படும், “ இவரைப் போல வேறு ஒருவர் இல்லை ” என்று சொல்கிற அளவு அவர் மனம் குதுட்கலம் அடையும்.
9.எல்லோரையும் அரவணைத்து அன்பு காட்ட வேண்டும்,
யாராக இருந்தாலும் ஒரு அரவணைப்புடன் கூடிய அன்பு காட்டும் போது ஒரு கசப்பான சூழல் கூட இனிப்பாக மாறும், கஷ்டத்தில் இருக்கும் போது உதவியும், துக்கத்தில் இருக்கிற போது ஆறுதலும், தோல்வி வரும் போதுதன்னம்பிக்கை தருவதும், வெற்றி பெறும் போது பாராட்டி உற்சாகத்தை ஊட்டுவதும், ஒரு நெருங்கிய பந்தத்தை உருவாக்கும், சொந்தங்கள் செய்யாத பணியை இந்த அன்பான அரவணைப்பு செய்து காட்டும்,உங்கள் மேலுள்ள விருப்பத்தின் விகிதாச்சாரம் கூடும், நேசம் வலுப்படும்,.
10.பழக்கத்தில் மென்மையாக இருக்க வேண்டும்
பூவுக்கு வலிக்காமல் தேனீக்கள் தேன் எடுப்பதைப் போல, பூமிக்கு நோகாமல் விதைகள் வேர்விடுவதைப் போல மென்மையாக இருக்க வேண்டும், சருகு போல மென்மையாக இருப்பவர்கள்தான் நதியோடு பயணிக்க முடியும், மென்மையாக இருப்பது என்பது உயிர்த்திருப்பது, ஜுவித்து இருப்பது, மென்மையாய் இருப்பவர்கள் துடிப்போடும், துள்ளலோடும், மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும், வாழ்வை இனிமையாக நுகர்வார்கள், மனிதர்கள் மென்மையாக இருக்கும் போது மலராக இருக்கிறார்கள், தென்றலாக இருக்கிறார்கள், நிலவாக இருக்கிறார்கள், நீங்கள் தனித்து இருந்தால் உங்களுக்கு சமூகத்தில் மதிப்பு இல்லை, ஆனால் நீங்கள் நேசிப்பவராக, இனிமையானவராக , மென்மையானவராக, ஒத்துப் போகும் பண்புடையவராக இருந்தால், நீங்கள் அதே சமூகத்தில் விலைமதிப்பு உள்ளவராக கருதப்படுவீர்கள்.
ஒரு இலையும், கல்லும், நதிக்கரையில் கிடந்தன, இலையைப் பார்த்து கல் சொன்னது, “ நண்பா எனக்கு ஒரு ஆசை , இந்த நதி கடலில் போய் சேரும் வரை அதில் நான் பயணிக்க வேண்டும், அதன் இரு கரைகளையும் பார்த்து ரசித்துச் செல்ல வேண்டும் “ என்று சொன்னது, இலை சொன்னது “ அது உன்னால் முடியாது, விழுந்த மாத்திரத்தில் நீ மூழ்கிப் போவாய்”, ஏன் ? என்று கேட்டது கல், “ நீ அடர்த்தியாய் , கனமாய் இருக்கிறாய் அதனால் நீ மூழ்கிப் போவாய்” , கல் போன்று கனமாக இருப்பவர்கள் வாழக்கை நதியில்; மூழ்கிப் போவார்கள், இலை போன்று மென்மையாய் இருப்பவர்கள் வாழ்க்கை நதியில் மூழ்காமல் பயணம் தொடர்ந்து வெற்றி இலக்கை தொடுவார்கள், இலையைப் போல, சருகையைப் போல மென்மையாய் இருப்பவர்கள் காற்றிலும் பறக்கலாம், ஆற்றிலும் மிதக்கலாம், அன்பினிலும் குளிரலாம்,
ஆதலின் நீங்கள் கல் போன்று கனமாய் இல்லாமல், இலையைப் போல, சருகைப் போல மென்மையாய் இருந்தால் வாழ்வின் வசந்தத்தை ருசிக்கலாம், எங்கும், எப்போதும் ஜெயிக்கலாம், இத்தனை குணங்களும் மொத்தமாக உங்களிடம் இருந்தால் எல்லோரையும் வசீகரிக்கலாம், உங்களுடன் எப்போதும் ஒரு கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கும், எதையும் வெல்லும் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.[/hide]
இந்த இதழை மேலும்