எஸ்.சண்முகம், தலைமையாசிரியர் (பணி நிறைவு)
தமிழக அரசின் டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர்
கவுந்தப்பாடி, பவானி வட்டம், ஈரோடு மாவட்டம்.
தேடிச் சோறு நிதந்தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி- மனம்
வாடித் துன்பம் மிக உழன்று பிறர்
வாடப் பல செயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ…?
என்ற பாரதியின் வைர வரிகளுக்கு ஏற்றாற் போல வாழும் உன்னத மனிதர். எதிர்காலச் சமுதாயத்தை ஒரு ஏற்றமிகு சமுதாயமாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த வகையில் இவர் பணியாற்றிய அத்தனை பள்ளிகளையும் தரமானதாக உயர்த்தி சாதித்துள்ளார்.
சிறந்த ஆசிரியர், மிகுந்த மனித நேயப் பண்பாளர், மாணவர் நலனே தன் நலன் எனக் கருதுபவர், தலைமைப் பண்பு மிக்கவர், சிறந்த ஆளுமைத்திறன் மிக்கவர், சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர், பேச்சு ஆளுமை மிக்கவர்….. இப்படி பன்முகத் திறமை பெற்றவர் தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றதிரு. எஸ். சண்முகம் அவர்கள். அவரது நேர்முகம் இனி நம்மோடு…
கே.உங்களின் பிறப்பு பற்றிச் சொல்லுங்கள்?
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்பலூர் என்னும் கிராமத்தில் சுப்பிரமணியம்-மாராயாள் தம்பதியரின் ஆறு மகவுகளில் தலை மகனாக 1955-ல் பிறந்தேன். எனக்கடுத்து ஒரு தங்கை, பெயர் சிவகாமி. அதன் பின் தங்கவேல், மூர்த்தி, கணேசன், ஆறுமுகராஜன் என நான்கு தம்பியர்கள். எனது தந்தையார் கிராமத்திலேயே சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். பொருளாதார ரீதியாகச் சிரமம் இருந்த போதிலும், வறுமையிலும் செம்மை வாழ்க்கை வாழ்ந்தனர் என் பெற்றோர். குழந்தைகள் அனைவருக்கும் உயர் கல்வி தர முடியா விட்டாலும் உயிரினும் மேலான ஒழுக்கங்களை கற்பித்தார் என் தந்தையார். நல்ல பேச்சு, பெரியோரிடம் மரியாதை, தீமையிலிருந்து விலகி இருத்தல், பணிவு, இன்சொல் பேசுதல், நல்ல நண்பர் சேர்க்கை, மற்றும் உறவுகளைப் பேணுதல் போன்ற மனிதப் பண்புகளை உணவுடன் சேர்த்து உணர்வுடன் ஊட்டி வளர்த்தார். இன்றளவும் அப்பண்புகள் எங்களின் குடும்பச் சொத்தாக இருந்து கொண்டிருக்கின்றன. அப்பண்புகளோடு வளர்ந்த என் தங்கை மற்றும் தம்பியர் குடும்பங்களும் நன்முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. என் சித்தப்பாவின் ஒரே மகன் என் தம்பி சரவணன் எம்.இ., ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டு கோபியில் குடும்பத்துடன் நன்கு வசித்து வருகிறார்.
கே.உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?
கொளப்பலூர் என்னும் கிராமத்தில் பிறந்த நான் ஆசிரியப் பணியின் பொருட்டு எனது குடும்ப வாழ்க்கையை பவானி வட்டம் கவுந்தப்பாடி என்னும் ஊரில் அமைக்க நேர்ந்தது. எனது மனைவி திருமதி. அ.சந்திரா அங்கிருந்த அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் வேதியியல் முதுகலை ஆசிரியையாகப் பணியாற்றினார். எங்களுக்கு நவீன்பிரபு, கௌதம் என்று இரண்டு மகன்கள். அவர்களின் பள்ளிப் பருவத்திலேயே ஆசிரியையாகப் பணியாற்றிய எனது மனைவி 1999-ல் மறைந்து விட்டார்கள். இரண்டு ஆண்டுகள் குடும்பத்தையும் ஆசிரியப் பணியையும் ஒரு சேரக் கவனிக்க முடியவில்லை. இச்சமயத்தில் அருகிலுள்ள கோபியில் சி. கே. கே. மெட்ரிக் பள்ளியில் பணியாற்றிய திருமதி. ஆ. அலமேலு பி. காம் என்பவர்க்கும் என்னைப் போலவே மறுமணத் தேவை இருப்பதை அறிந்தேன். அவர்களை 2001-ல் மறுமணம் செய்து கொண்டேன். அவர்களின் ஒரே மகள் கீர்த்தனாவை, தற்போது பி.டெக்., பட்டதாரி, என்னுடைய மகளாகவும் வரித்துக் கொண்டு, இப்போது கவுந்தப்பாடியில் வசித்து வருகிறேன். எனது மூத்த மகன் எஸ். நவீன்பிரபு பி.டெக், மருமகள் எம். அனுப்பிரியா எம்.சி.ஏ., இருவரும் நல்ல உத்தியோகத்தில் பேத்தி ஹனுஸ்ரீ உடன் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இளைய மகன் எஸ். கௌதம், மருமகள் கரிஷ்மாகோபி இருவரும் பொறியியல் பட்டதாரிகள். அவர்களும் சென்னையில் நல்ல தனியார் நிறுவனங்களில் பணியாற்றி நலமுடன் வசித்து வருகிறார்கள்.
கே. உங்களின் பள்ளி மற்றும் உயர் கல்வி பற்றிச் சொல்லுங்கள்?
எங்கள் கிராமத்திலேயே புனிதமரியன்னை பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் அதன் பின் பதினொன்றாம் வகுப்பு வரை நான்கு கிலோ மீட்டர் தள்ளி இருந்த கெட்டிச் செவியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தினமும் நடந்து சென்று என் பள்ளிப் படிப்பை முடித்தேன். 1973-ல் நடைபெற்ற அரசு பொதுத்தேர்வில் பள்ளி முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். 1974 முதல் 1977 வரை கோபி கலைக்கல்லூரியில் பயின்று வேதியியல் பாடத்தில் இளங்கலைப்பட்டமும், 1979-ல் கேரளாவில் உள்ள கொச்சின் பல்கலைக்கழகத்தில் அதே பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றேன். ஆசிரியராகப் பணியேற்ற பின் பி.எட்., எம்.எட்., மற்றும் எம்.பில்., பட்டங்கள் பெற்றேன்.
கே.ஆசிரியப் பணியில் தாங்கள் சேர்ந்தது குறித்துச் சொல்லுங்கள்?
1978-ல் தமிழகத்தில் 2 கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளிக் கல்வி ஒட்டுமொத்தமாக ஒரு புதிய மாற்றத்தைப் பெற்ற காலகட்டம் அது. நானும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் அமைந்திருந்த வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வேதியியல் பாடத்திற்கு முதுகலை ஆசிரியராக அரசால் நியமிக்கப்பட்டேன். என்னை ஆசிரியனாக அறிமுகப்படுத்திக் கொண்டு வால்பாறை பள்ளியில் நான் எடுத்த முதல் வகுப்பு தனிமங்கள் (elements) பற்றியது. அந்த வகுப்பின் நாற்பத்தைந்தாவது நிமிட முடிவில் என் எதிரே அமர்ந்திருந்த மாணவச் செல்வங்களின் வியப்பால் விரிந்த விழிகளையும், ஒருவித உற்சாக அதிர்வலைகளையும் கண்டு மனம் மிகவும் மகிழ்ந்து போனேன். நான் கற்றதைப் பிறருக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்லும் ஆற்றல் எனக்குள் இருப்பதை நான் உணர்ந்த ஆசிரிய மற்றும் ஆச்சரிய நிமிடங்கள் அவை. ஆசிரியப் பணிக்கெனவே நான் படைக்கப்பட்டதை உணர்ந்து, 1980 முதல் 2014 வரை 34 ஆண்டுகள் அந்த அறப்பணிக்காகவே என்னை அர்ப்பணித்தேன்.
கே. தங்களின் ஆசிரியப் பணிக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?
1980-ல் முதுகலை வேதியியல் ஆசிரியராகி வால்பாறை, பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி மாவட்டம் குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஒலகடம் மேல்நிலைப் பள்ளி, நான் பயின்ற கெட்டிச்செவியூர் மேல்நிலைப் பள்ளி, கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இவைகளில் பணியாற்றினேன். வேதியியல் பாடத்தை அறவே வெறுக்கும் மாணவனும் அப்பாடத்தை விரும்பும் வண்ணம் போதிப்பதில் கவனம் செலுத்தினேன். நான் நேசித்து நடத்திய பாடம் என்பதால், முதலில் என்னை நேசித்த மாணவனை மெதுவாக என் பாடத்தையும் நேசிக்க வைத்ததை என் ஆசிரியப் பணியின் வெற்றியாகக் கருதுகிறேன்.
வகுப்பறைகளில் வேதியியல் பாடத்தோடு மாணவ மாணவியர்க்கு அவர்களின் எதிர் கால வாழ்க்கை பற்றிய புரிதலையும் கற்றுக் கொடுக்க முயற்சிப்பேன். பாடம் என்பது வெளியிலிருந்து நான் தருவது என்பதையும், கல்வி என்பது அவனுக்குள் இருந்து வெளியில் வருவது என்பதையும் புரியவைப்பேன். கற்க வரும் மாணவரிடம் அவர்தம் குடும்பப் பின்னணி கேட்டறிந்து, அனைவருமே குபேரன் வீட்டுக் குழந்தைகளாகப் பிறப்பதில்லை எனச் சொல்லி நேர்மையான உழைப்பு அந்த நிலைக்கு அவர்களை உயர்த்தும் என்று உணர வைப்பேன். பல மாணவர்களின் உயர் படிப்பிற்காக பலரிடம் நிதி உதவி பெற்று படிப்பு தொடர உதவியுள்ளேன். அப்படிப்பட்ட மாணவக் கண்மணிகள் இதய நோய் நிபுணர் டாக்டர் வேதநாயகம், பொறியியல் பட்டதாரி தருண் மற்றும் தீபிகா, செவிலியர் ஷாலினி ஆகியோராவர். “மாணவர் பாதங்களை வெயில் சுட்டால் காலணியாகும் இவரின் இதயம்” என்று என் ஆசிரிய நண்பர் அந்தியூர் திரு. சுகதேவ் எனக்காக எழுதிய வரிகளுக்கேற்ப என் ஆசிரியப் பணி அமைந்திருந்தது இறைவனின் சித்தமே.
கே. தங்களின் தலைமையாசிரியர் பணி பற்றிச் சொல்லுங்கள்?
24 ஆண்டுகள் ஆசிரியப் பணிமுடித்த பின், 2004-ல் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றேன். ஆசிரியர் என்ற நிலையிலிருந்து நிர்வாகி என்ற அடுத்த கட்டத்திற்கு எனது பயணம் தொடங்கியது. நன்முறையில் எனது ஆசிரிய மற்றும் நிர்வாகப் பணி தொடர காலமும், இடமும், சூழ்நிலையும், நல்ல ஒத்துழைப்பும் அந்தியூர் பள்ளியில் எனக்குக் கிடைத்தன.
பள்ளி நலனில் அக்கறை கொண்ட ஆஸ்திரேலிய டாக்டர் உயர்திரு. இராஜேந்திரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் திரு. பத்மநாபன், திரு. கோவிந்தராஜ், அரிமா சங்கத்தினர், நண்பர் திரு. ஜலால் மற்றும் பல ஊர்ப் பிரமுகர்களின் சீரிய உதவி நன்கு கிடைத்தது. மேலும் என் தலைமையின் கீழ் பணியாற்றிய ஆசிரியப் பெருமக்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது. இவற்றால் அப்பள்ளிக்கு ஈரோடு மாவட்டத்தின் ஆட்சியர்களிடமிருந்து பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கான முதல் மற்றும் இரண்டாம் இட மாவட்ட மதிப்பெண்களுக்காக ஆறு முறை விருதுகள் பெற்றுத் தரும் பாக்கியம் கிடைக்கப்பெற்றேன். அங்கு பணியாற்றிய போது தான் ஊர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தால் கல்விச்சிற்பி என்ற பட்டமும், Top light என்னும் அமெரிக்க நிதியுதவி அமைப்பு மூலம் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்ட வாய்ப்பையும், அரிமா சங்கம், JCI அமைப்புக்கள் மூலம் சிறந்த தலைமையாசிரியர் என்ற பட்டமும் கிடைக்கப் பெற்றேன்.
கே. தாங்கள் கடைசியாகப் பணியாற்றிய பள்ளி அங்கு தங்கள் பணி பற்றிக் கூறுங்கள்?
எனக்கு வாழ்வியல் ஆதாரம் தந்த தற்போது நான் வாழ்ந்து வரும் கவுந்தப்பாடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியராக 2010-ல் பணி மாறுதல் பெற்றேன். அப்பள்ளியிலும் ஆசிரியப் பெருமக்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட மதிப்பெண்களுக்காக மூன்று ஆட்சியரிடமிருந்து ஐந்துமுறை விருதுகள் பெற்றுத் தந்த பாக்கியம் வாய்க்கப் பெற்றேன். ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிகளிலேயே முதல் முறையாக மாநில இடம் பெற்றமைக்காக அப்போதைய முதல்வர் மறைந்த மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா அம்மா அவர்களின் கையொப்பமிட்ட சான்றிதழை பள்ளிக்குப் பெற்றுத் தந்தேன். அப்பள்ளியில் பணியாற்றிய போது இரண்டு இந்திய சுதந்திர தின விழாக்களில் இரண்டு முறை அப்போதைய மாவட்ட ஆட்சியர்களால் சிறந்த தலைமையாசிரியருக்கான விருதுகள் கிடைக்கப்பெற்றேன்.
அக்காலகட்டத்தில் பெங்களூரு தமிழ்ச்சங்கம் என்னை அழைத்து திராவிட கழகத் தலைவர் உயர்திரு. கி.வீரமணி அவர்களது தலைமையில் ஒரு பாராட்டு விழா நடத்திச் சான்றிதழ் வழங்கியது. 2012-ல் ஆசிரியப் பணிக்காக தமிழக அரசு எனக்கு டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்தது. அப்போது ஊர் மக்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் சீருடை அணிந்த மாணவிகளோடு ஊர்வலமாக பள்ளிக்கு என்னை அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தினர். மேலும் எண்பது லட்சம் ரூபாய் மதிப்புடைய நபார்டு வங்கி கட்டடமும், சவீதா பல்கலைக்கழக வேந்தர் மரியாதைக்குரிய டாக்டர். என்.எம். வீரையன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உதவியுடன் பள்ளிக்கு ஒரு கலையரங்கமும் என்னுடைய காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டதை மிகுந்த மகிழ்வுடன் நினைவுகூர்கிறேன். 31.05.2014-ல் எனது ஆசிரியப் பணி முழு மன நிறைவுடன் நிறைவடைந்தது. “ஆசிரியம் என்பது தொழில் அல்ல; அது ஒரு வாழ்க்கை நெறிமுறை,” என ஆசிரியப் பணியாற்றி பணி திருப்தியுடன் (Job satisfaction) தற்போது வாழ்ந்து வருகிறேன்.[hide]
கே .இன்றைய ஆசிரியர்க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தெய்வத்தின் சிலை செதுக்க வாய்ப்புக் கிடைத்த சிற்பிகள் நீங்கள். சிற்பியின் கை உளி போல உங்கள் நற்போதனையும் அறிவுக்கூர்மையும் உங்களுக்கு வாய்த்த அற்புத ஆயுதங்கள். மாணவனை மதிப்பெண்களை மட்டுமே உற்பத்தி செய்யும் எந்திரமாக மாற்றாதீர்கள். மானுடப் பண்புகளைச் சொல்லிக் கொடுங்கள். இழந்து போன நம் விழுமியங்களை மாணவ சமுதாயம் மீண்டும் மீட்டெடுக்க உதவுங்கள். மாணவனை மனிதனாக மாற்றி, சமுதாயப் பயன்பாட்டிற்குத் தாருங்கள். அறம் சார்ந்த வாழ்க்கைக்கு மாணவர்களை தயார்படுத்துங்கள். உங்களிடம் பயிலும் ஒவ்வொரு மாணவனும் தன் மனதுக்குள் உங்களுக்கென ஒரு தனி சிம்மாசனத்தை அமைக்கும் வண்ணம் உங்கள் ஆசிரியப் பணி அமையட்டும். அப்பணியில் ஆத்மார்த்தமாக ஈடுபடுங்கள். மாணவனின் உதடுகள் தாண்டி உள்ளம் தாண்டி அவனின் ஆன்மாவோடு பேசுங்கள். இந்த தேசத்திற்கே உரிய எல்லா விழுமியங்களையும் உங்கள் மூலம் மட்டுமே இளைய தலைமுறை பெற முடியும் என்று நம்பிக்கையுடன் செயல்படுங்கள். தாயின் கருவறையில் கரு மட்டுமே; உங்கள் வகுப்பறையில் மட்டுமே அது முழு உரு.
கே. இன்றைய இளைய தலைமுறைக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
சமூக வலைதளங்களின் தீய கண்ணிகளுக்குள் சிக்கி விடாது இருக்க வேண்டுகிறேன். தகர்ந்து போன கூட்டுக் குடும்ப வாழ்க்கையால் சிதைந்து போன உறவுகளை புதுப்பித்து வாழச் சொல்லுகிறேன். “மறந்தும் பிறன் கேடு சூழற்க” என்னும் வள்ளுவ மந்திரத்தைக் கைக் கொண்டு அறம் சார்ந்த வாழ்வை மட்டுமே மேற்கொள்ளச் சொல்லுகிறேன். இந்தியாவை நவீன முறையில் புதிய அடுத்த நிலைக்கு நகர்த்துங்கள்; அதே சமயத்தில் ஆன்மீக ரீதியாக பழைய இடத்திற்கு உயர்த்துங்கள் என அன்புடன் வேண்டுகிறேன். புத்தனின் ஒற்றைச் சொல் மந்திரமான
“நல்லவனாக இரு” என்பதை மட்டுமே உச்சரித்து நீ வல்லவனாக வாழ்ந்து காட்டு என வேண்டுகோள் விடுக்கிறேன்.
கே. உங்களுக்குப் பிடித்தமானவை?
நெஞ்சம் எப்போதும் நேசிக்கும் ஒரே விஷயம் கவிதைகள். அடுத்து புத்தக வாசிப்பு. பாரதியின் கவிதைகள் மீது பக்தியும் மரியாதையும், கண்ணதாசனின் தமிழ் மீது மட்டற்ற காதலும், ஜெயகாந்தனின் கதைகள் மீதும், சாண்டில்யனின் வரலாற்றுப் புதினங்களின் மீதும், வாலி, வைரமுத்து, அப்துல் ரகுமான் வரிகளின் மீதும் தீராத மயக்கமும், தமிழருவி மணியன் எழுத்துக்கள் மீது தணியாத தாகமும் எப்போதும் எனக்குள் உண்டு.
கே. பணி ஓய்வுக்குப்பின் உங்களின் பொழுதுபோக்கு?
நிறைய புத்தக வாசிப்பு, நிகழ்ச்சிகள், புலவர் க. பாண்டியன் ஐயா அவர்களின் கரை காணா மரக்கலங்கள் மற்றும் சமுதாயச் சந்தை, புலவர் இராமச்சந்திரனின் ஆன்மீக தரிசனம், ஆங்கில ஆசிரியப் பெருந்தகை திரு. ஓ. ரவிக்குமார் அவர்களின் RUTS, கோவையைச் சேர்ந்த பன்மொழி வித்தகர் முனைவர். திருமதி. பிருந்தா ரவிக்குமார் அவர்களின் VOICE I, VOICE II என்னும் ஆங்கிலக் கவிதை நூல்கள் இவை வெளிக்கொணர்வதற்கான நூல் வெளியீட்டு வேலைகள், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் பணிக்குழு உறுப்பினர் பணிகள், சில சமுதாயப் பணிகள் இவற்றில் மன நிம்மதி காண்கிறேன். ஓய்வுக்குப்பின் அதிக நேரம் குடும்பத்தோடு செலவிடுகின்ற வாய்ப்பு கிட்டியுள்ளது.
கே. தங்களின் லட்சியக் கனவுகள் ஏதாவது கூறுங்கள்?
கவியரசு கண்ணதாசனின் பாட்டு வரிகளில் எப்போதும் நான் பரவசப்படுவேன். அவரின் பின் வரும் வரிகள் எனது கனவுகளில் ஒன்று.
- “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்னும் வரிகளே அவை.
- கண்ணதாசனின் நாட்டுப்பற்று மற்றும் தேசிய உணர்வு மேலோங்கும்
“பனி மலை தலையா அலை கடல் காலா
பரந்ததோர் பாரத தேசத்து
குடிகள் இனங்கள் குறையொன்றின்றித்
தலை முறை தோறும் தழைத்தினிதோங்குக!”
என்னும் கவிதை வரிகள் என் உள்ளம் திரும்பத் திரும்ப உச்சரித்து வேண்டும் பிரார்த்தனை வரிகளாகும்.
கே: அரசுப்பள்ளிகளை வலுப்படுத்த நீங்கள் கூறும் ஆலோசனைகள்?
நல்ல முழுமையான கட்டமைப்பு வசதிகள், அறிவியல் பார்வை மேலோங்கும் பாடத்திட்டங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், சிறந்த நூலகங்கள், ஆசிரியப் பணிக்கே உரிய அர்ப்பணிப்புடன் கூடிய திறமைமிக்க ஆசிரியப் பெருமக்கள், கற்பித்தலில் நவீன உத்திகள், ஒழுக்கத்தை மேம்படுத்தும் நீதி போதனை வகுப்புகள், மாணவர்களின் தனித்திறனை அடையாளப்படுத்துதல், விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதற்கான வசதிகள் இவற்றோடு நிர்வாகத்திறன் மிகுந்த தலைமையாசிரியப் பெருமக்கள் இவர்களால் அரசுப்பள்ளிகளின் தரம் மேலும் வலுப்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகளில் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைத் தொடர்ந்து பெற்று வருவதில் பெருமிதம் கொள்கின்றேன். அதற்கு கடும் உழைப்பை நல்கிய ஆசிரியப் பெருமக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
கே: நீங்கள் பெற்ற பட்டங்கள், விருதுகள், பாராட்டுகள் பற்றிச் சொல்லுங்கள்?
முதுகலை வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றிய கால கட்டத்தில் வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற வைத்தமைக்காகப் பலமுறை பாராட்டுக்கள் விருதுகள் பெற்றுள்ளேன்.
தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றபின் மாணவச் செல்வங்களால் பள்ளிக்குப் பெற்றுத் தந்த மாவட்ட அளவிலான விருதுகள் பின்வருவன
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது:
2006- 2007 பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாமிடமும் பனிரெண்டாம் வகுப்பில் இரண்டாம் இடமும் பெற்று மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டது
2007- 2008 ஆம் ஆண்டு மாவட்ட ALM School விருது மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.
2008-2009 ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் முதல் மற்றும் மூன்றாம் இடம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டது.
2009- 2010 ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டது.
கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது:
2010-2011 ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்காக மாநில விருது.
2010- 2011 ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் கோபி கல்வி மாட்ட அளவில் முதலிடம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியர் விருது.
2012-2013 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் பள்ளி முதன் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியரிடம் விருது.
2013- 2014 ஆம் ஆண்டு பள்ளி முதன் முறையாக பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியரிடம் விருது.
மேலும்…
- தமிழக அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.
- அந்தியூர் பொதுமக்களால் கல்விச்சிற்பி என்ற பட்டம்.
- பெங்களூரு தமிழ்ச் சங்க மேடையில் பாராட்டும் விருதும்.
- அமெரிக்க வாழ் தமிழரால் தொடங்கப்பட்ட Top Light -அமைப்பு தந்த தங்கப்பதக்கம்.
- ஈரோடு JCI அமைப்பு மூலம் இரண்டு முறை சிறந்த தலைமையாசிரியர் விருது.
- கவுந்தப்பாடியின் Friends Associate மூலம் தரப்பட்ட F.A.விருது.
- தினத்தந்தி பத்திரிக்கை நிறுவனம் தந்த பாராட்டும் விருதும்.
- ஈரோடு மாவட்ட இரு ஆட்சியர்களால் இந்திய சுதந்திர தினத்தன்று இரண்டு முறை சிறந்த தலைமையாசிரியர் விருது.
- அமெரிக்காவில் பதியப்பட்ட Ellan Triaster International College தந்த நற்சான்றிதழ்.
கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது?
“நம்பிக்கை என்னும் நந்தாவிளக்கு
உள்ளவரையில் உலகம் நமக்கு”
எனச் சொன்ன கவிஞர் மு. மேத்தாவின் கவிதை வரிகளில் நம்பிக்கை உள்ளவன் நான். தன்னம்பிக்கை மாத இதழ் அந்த நந்தா விளக்கை குன்றின் மேலிட்டு நம்பிக்கை வெளிச்சத்தை உலகம் முழுவதும் பரப்புகிறது. அதன் கட்டுரைகளும், சாதனையாளர்களின் வாழ்க்கைச் சரிதம் மற்றும் அனுபவங்களும் வாசகர்களை வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டவராக மாற்றும் என்பது திண்ணம். இவ்வேளையில் தன்னம்பிக்கை ஆசிரியர் குழுவுக்கும், இந்த இதழில் என்னைப் பற்றிய செய்திகளை வெளிக்கொணர்வதற்கு ஆத்மார்த்தமாக பேருதவி புரிந்த என் ஆருயிர் நண்பர் தூசி. தியாகராஜன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.[/hide]
இந்த இதழை மேலும்