– 2018 – March | தன்னம்பிக்கை

Home » 2018 » March (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    தீக்காயம்

    ஆபத்தான தீக்காயங்களிருந்து சிறிய தீக்காயங்களை வேறுபடுத்த முதலில் உடல்திசுக்களைத் தீக்காயம் எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை அறிய வேண்டும். தீக்காயத்தை முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை தீக்காயங்களாகப் பிரிக்கலாம்.

    முதல் நிலை தீக்காயம்

    தோலின் மேல்புறம் (epidermic) மட்டுமே பாதிப் படைவதால் அதிக ஆபத்தில்லாதது. தோல் சிவப்பாகவும், வீக்கமாகவும், சிலநேரத்தில் வலியுடனும் இருக்கும் தீக்காயம். கைகளிலோ, பாதங்களிலோ, முகத்திலோ, பின்புறத்திலோ, வேறு முக்கியமான இடங்களிலோ பரவாமல் இருந்தால் சாதாரண சிகிச்சை செய்வதுடன் குணமாக்கலாம். இல்லையெனில் உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

    இரண்டாம் நிலை தீக்காயம்

    தோலின் முதல் அடுக்கு முழுவதுமாக எரிந்தும், இரண்டாம் அடுக்குத் (dermis) தோலும் எரிந்தால் இரண்டாம் நிலை தீக்காயமாகும்.

    • தோலில் கொப்புளங்கள் ஏற்படும்.
    • தோல் மிகவும் சிவப்பானதாகவும், வலியுடன் வீக்கமும் இருக்கும்.

    இரண்டாம் நிலை தீக்காயம் 3 இஞ்ச் அளவுக்கு குறைந்ததாக இருந்தால் அதை சிறிய தீக்காயமாகவே நினைத்து சிகிச்சை அளித்தால் போதுமானது. அளவில் 3 இஞ்ச்க்கு அதிகமானதாக இருந்தாலும், முகம், கை, கால், பின்புறம் போன்ற முக்கியமான இடங்களில் பரவி யிருந்தாலும் உடனடி மருத்துவ வசதியை அணுகுவது அவசியம்.

    சிறிய தீக்காயங்களைக் குணப்படுத்த

    (முதல் நிலை, சிறிய இரண்டாம் நிலை தீக்காயம்)

    தீக்காயத்தைக் குளுமைப்படுத்த வேண்டும்

    தீக்காயம் பட்ட இடத்தைக் குளுமையான ஓடும் தண்ணீரில் நனைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் அல்லது வலி குறையும் வரையில் வைத்திருக்கலாம். இவ்வாறு குளுமையான தண்ணீரில் வைத்தால் தோலிருந்து வெப்பம் வெளியேறி வீக்கம் குறையும். தீக்காயத்தின் மேல் ஐஸ் கட்டியை வைக்கக்கூடாது.

    சுத்தமான கிருமி நீக்கப்பட்ட துணிக் கொண்டு தீக்காயத்தை மூடி வைக்க வேண்டும்

    உதிரியான பஞ்சினை உபயோகித்தல்கூடாது. அதிக அழுத்திமில்லாமல் மெல்லிய துணியை இறுக்க மில்லாமல் கட்டவும். இவ்வாறு கட்டுவதால் வலி குறைவதுடன், கொப்புளங்கள் ஏற்பட்ட தோல் பாதுகாப்பாகவும் காற்றினால் பாதிப்படையாமலும் இருக்கும்.

    வலி குறைவதற்கான மருந்து எடுக்கலாம்

    ப்ரூஃபன், பாரசிட்டமால் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்பு கொடுக்கலாம்.

    சிறிய தீக்காயங்கள் இவ்வாறு செய்தாலே சரியாகிவிடும். இக்காயங்கள் நிறமாறி ஆறும். இக்காயங்கள் ஏற்பட்ட பின் வலி அதிகமாகவோ, காய்ச்சல் வீக்கம் அதிகமாக இருந்தாலோ, சீழ் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும்.

    எச்சரிக்கை

    ஐஸ் உபயோகித்தல் கூடாது.

    தீக்காயங்களில் நேரடியாக ஐஸ்கட்டியை வைத்தல் கூடாது. அவ்வாறு செய்தால் தீக்காயம் பாதித்த இடம் அதிகமாக வாய்ப்புள்ளது.

    வெண்ணெய், முட்டையின் வெள்ளைக்கரு, களிம்பு போன்றவைகளை உபயோகிக்கக்கூடாது. இதனால் கிருமி தொற்று ஏற்படலாம். தீக்கொப்புளங்களை உடைத்தல் கூடாது. அவ்வாறு உடைத்தால் கிருமி தொற்று ஏற்படலாம்.

    மூன்றாம்  நிலை தீக்காயம்

    இது தோலின் எல்லா அடுக்குகளும் பாதிக்கப் பட்டிருக்கும் ஆபத்தான நிலையாகும். இது நிரந்தரமாக திசுக்களை அழிக்கக்கூடும். கொழுப்பு, தசை மற்றும் எலும்பு கூட பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தீப்பட்ட இடம் கருப்பானதாகவும், வெடித்தும், வெள்ளையாகவும், தோல் வறண்டு போயும் காணப்படும். புகை உள்ளிழுத்தலும் இருக்கும் பட்சத்தில் சுவாசத்தில் கஷ்டம், கார்பன் மோனாக்ஸைடு விஷ வாயுவினால் பாதிப்பு போன்றவைகள் ஏற்படலாம்.

    இவ்வகை தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை கீழுள்ளவற்றைப் பின்பற்றவும்.

    1. எரிந்த உடையை உடலிருந்து அகற்றகூடாது.
    2. அதிக அளவு தீக்காயங்களைக் குளுமையான தண்ணீரில் நனைத்தல் கூடாது. இது உடலின் வெப்பநிலையைக் குறைக்கும், இரத்த அழுத்தத்தையும், இரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.
    3. இரத்த ஓட்டம், சுவாசம், அசைவுகள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும்.
    4. தீக்காயம் பட்ட இடத்தை இருதய நிலைக்கு மேலே உயர்த்த முடிந்தால் அவ்வாறு செய்யவும்.
    5. தீ பட்ட இடத்தை மெல்லிய துணியால் மூடி வைக்கவும்.

    இந்த இதழை மேலும்

    விடியலை நோக்கும் மண்ணின் விதைகள்

    “உயிர் கொடுத்து

    உதிரம் கொடுத்து

    பெற்றெடுத்து காத்து

    நிற்கும் பெண்மை..!

    விதைத்த இடத்தில்

    மரமாய் நிற்கின்றதோ?

    பேதை மகள் பெற்ற உறவு”

    உதிரம் கொடுத்தவள் தேடும் பெரும் புதையல் ஒன்று தான். தன் திறன் என்ன? தன்னால் இயன்றது என்ன? தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்ன? விடியல் என்று வரும்?

    காலம் எவருக்கும் சில தடைகளை விதிக்கும். விடியலிற்கும் ஒரு தடை விதித்தது. அது தான் இருட்காலம். பலருக்கு நாம் எதில் சிறந்தவர் என்று கூற தெரிவது இல்லை. இது தான் அவர்களுட்கு காலம் விதித்த தடை. தடையை உடைக்கும் தன்மை எளிதில் கிட்டாது. சிலருக்கு இளம் வயதிலேலோ வரும். சிலருக்கு நாற்பது வயதில் வரும். பலருக்கு வராமலே போகும்.

    அமேசான் காடுகளுக்குள் புக முடியாத விடியல் போல் இறுதிவரை அவர்கள் எதில் சிறந்தவர் என்று அறிய முடியாது. விடியலை நோக்கி மண்ணில் புதைந்துள்ள விதைகளிலிருந்து, வயிற்றில் துள்ளும் மழலை வரை துடிக்கும். பலகாலம் தொட்டு பல பெண்கள் அடுபங்கரையில் அமர்ந்து விடியலை எண்ணித் துடித்தனர். பெண்கள் சமைக்கவே பிறந்தவர்கள் என்று எண்ணும் பெரும் ஆண் மக்கள் வாழும் பூமியில் நாட்டையே ஆண்ட பெண்மணிகள் பலர் வாழ்ந்தனர். நாட்டிற்கு விடி விளக்காய் பலரும் திகழ்கின்றனர்.

    “விட்டு கொடு

    விடிவெள்ளியாய்

    வலைய வருவாய்”

    பலரும் பல சூழ்நிலைகளில் தங்கள் திறமைகளை தைரியமாக எடுத்துக் கூறும் வல்லைமையை தாய்மார்கள் தரும் ஊக்கத்தில் தான் வளர்கின்றது. அவ்வாறு இருக்கையில் இன்று பல பெண்கள் என்று விடியல் வரும் என்று எதிர் பார்த்து காத்திருக்கின்றனர். பலருக்கு விடிவிளக்காய் திகழும் பகலன் விடியலை இருளில் தேடுவது போல், பெண்கள் இன்று விடியலை நாடுகின்றனர். என்றுமே விட்டு கொடுத்து மட்டுமே வாழும் மங்கையர் உலகம் பெரும் பரப்பைக் கொண்டது. அது பசும்பிக் பெருங்கடல் ஆழ்குழியை விட பெரியது. அதில் உரைந்திருக்கும் சிந்தனைகள், கவலைகள், சுகங்கள், நிகழ்வுகள் என்று எவ்விதக் கருத்துகளையும் அறியமுடியாது. முன்னேற்றத்தை நாடும் உலகம், எழுந்து நிற்க துடித்தும் பெண்களின் விடியலை தடுத்து மறைத்து நிற்கின்றதோ?. நதி முதல் இறைவன் வரை பெண்கள் வைத்து வணங்கும் நாடு அவர்களது விடியலை முன்னிறுத்துவது இல்லை ஏன்? எழுந்து நிற்கும் பெண்களை அடித்து நொறுக்குவது ஏன்? அவர்கள் வளரும் முன்பே ஆழ்குழிக்குள் முடுக்குவது ஏன்?

    பெண்கள் விழித்து எழுந்துவிட்டனர் என்று உலகமே பேற்றினாலும் பலப் பெண்கள் இன்று வரை அடிமைப் போல் தான் நடத்தப்படுகின்றனர். ஆண்மகனைப் படிக்க வைத்தால் நமக்கு உபயோகம் இவள் வேறு வீட்டிற்கு செல்பவள் தானே என்ற கூற்று இன்றும் பரவி வருகின்றது. பல வழிகளில் பெண்கள் அடக்கவே படுகின்றனர்.

    “விடிந்தும்

    விடிவெள்ளி

    எழவில்லையோ?”

    பலருக்கும் இவ்வினாவிற்கு பதில், அவர்கள் பெரும் புதையலை நாடியும் கிடைப்பது இல்லை. விடிவெள்ளி முளைக்கும் வரை விடியல் எவருக்கும் கிடைக்காது. பலர் பலவிதமாய் முயன்றும் அவர்கள் வாழ்வு விடியல் இல்லாத இருளாகவே இருக்கும். முன்னேறிவிட்ட பெண்கள் இன்றும் பெரும் நிலையை அடையவில்லை.

    “முதுகெலும்பற்று

    வாழும் பெண்கள்

    நிலை முன்னேறுமா?”

    என்னும் கேள்விக்கு பலர் பலவிதமாய் பதில் கூறுகின்றனர். நாட்டிற்கும் வீட்டிற்கும் முதுகெலும்பே பெண்கள் தான். முன்னேறிவிட்டனர். ஆனால் விடியல் தான் கிடைக்கவில்லை. பலர் தங்கள் வாழ்வில் பலருக்கு விளக்காய் திகழ்ந்துவிட்டு அவர்கள் இன்றும் ஒரு இனம் தெரியாத இருளில் உள்ளனர்.

    பலருக்கும் ஒரே எண்ணம் எழுகின்றது. ஆண், பெண் இருபாலருக்கும் இடையே இருக்கும் இடைவெளி என்ன? இருவரும் வெற்றிப்பாதையை தொடும் வேறுபாடு என்ன? வாய்ப்பு என்னும் வேறுபாடு மட்டுமே உள்ளது. ஆண் மற்றும் பெண்களுக்கு அமையும் வாய்ப்புகள் தான் வேறுபாட்டாய் நிற்கின்றதா? இல்லை. இதுவும் வேறுபாடு இல்லை. அவரவர் எண்ணம் தான் வேறுபாட்டை தருகின்றன.

    விதைக்கப்படும் விதைகள் அனைத்தும் வெளிவருவது இல்லை. முளைத்து நின்று பெயர் பெறுவதும் இல்லை. இதனால் விதைக்கப்படும் முன்பே விதைகள் பரிசோதிக்கப்படுகின்றன. அந்த பரிசோதனைகளில் திறன் மிகு விதைகள் விதைக்கப்படினும் காலம் என்னும் விதி வாய்ப்பை தட்டிப்பறிக்கின்றன. வாய்ப்புகள் தட்டிப்பறிக்கப்படும் பொழுது தான் விடியல் இருண்டு விடுகின்றன.

    “பறிக்கபடும்

    வாய்ப்புகள்

    பிரித்தெடுத்து

    பகிரப்படுகின்றன”

    நமக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பலருக்கு மறுக்கப்பட்டிருக்கும். அந்த வாய்ப்புகள் நமக்கு எவ்வாறு கிடைக்கின்றது. தரமா? நல் திறமையா? பல கேள்விகளுக்கு ஒரே பதில். அது சிலருக்கு திறமை, சிலருக்கு அவர் வாழும் குடும்பத் தரம். தரத்தால் வரும் வாய்ப்புகள், பலத் திறமைகளை புறம் தள்ளி, பலரிடம் பறிக்கப்பட்டு வருவதால் மட்டுமே இவ்வாறு திறமை மறுக்கப்படுவதால் பல பெண்களுக்கு வாய்ப்பு பறிக்கபட்டு விடியல் அழிக்கப்படுகின்றன.

    மௌனம் என்னும் பந்தலில் தன்னை மறைத்து வாழ்ந்து, வீரம் என்னும் விடியலிற்கு தன் உயிரை அனுப்பி, பெருமை என்னும் உயரத்திற்கு உயிரை அழைத்து சென்று, தன்னடக்கம் என்னும் பொன்னாய் மாறியவள் ஒவ்வொரு அன்னையும். அவள் வாழ்வே முடியினும் ஒன்றை தேடுவாள். அவள் தேடியது எது? விளக்கு என்னும் போர்வைக்கும் மறைந்து நின்று விடியலை தேடும் மனத்திற்கு ஒன்று புரியும் மண்ணில் விதைத்த விதைகள் என்றாவது ஒரு நாள் விடியல் கிடைக்கும் என்று.

    இந்த இதழை மேலும்

    வாழ நினைத்தால் வாழலாம்- 14

    பூவையர்

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

    தன்னம்பிக்கை வாசகர் ஒருவர் “நன்றி”யை பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையில் பெண்களைப்பற்றி ஒரு வார்த்தைகூட இல்லையே? என்று என்னிடம் கேட்டார்.  நான் சொன்னேன் “நன்றி” என்ற ஒரு வார்த்தைக்குள் அடைக்கப்படும் அணுவல்ல பெண்.  அதிகாரத்துக்கும் அபரிமிதமான அதிகாரம்.  அகராதிக்கும் அப்பாற்பட்ட அகராதி.  அவர்களை பற்றி எழுத முற்பட்டால் பக்கங்கள் பத்தாது – இருந்தும் முயல்கிறேன்” என்று முடித்தேன்.

    “பெண்கள் நாட்டின் கண்கள்” எனும் பெருமை வாசகம், “பாரத மாதா” என்று தாய்க்கும் மேலான கவுரவம், நதிகளுக்கு பெண்களின் பெயரை சூட்டி பெருமிதம், “சக்தி இல்லையேல் சிவம் இல்லை” என்று பிரபஞ்ச சக்திக்கே பெருமை சேர்க்கும் பண்பு – இப்படி சில வரிகளில் சிக்கனமாக முடிக்கப்பட்ட பெண்களின் பங்களிப்பு, அவர்களின்மீது முழுமையான வெளிச்சத்தை இன்னும் வீசவில்லை என்பதே எதார்த்த உண்மை.

    “படைத்தலுக்கும், அழித்தலுக்கும் விதைப்புள்ளியாய் இருப்பவள்” – என்று பக்திக்காவியங்கள் பறைசாற்றுவது பெண்களைத்தான்.

    ஆனைமுகனின் அவதாரமாகட்டும், அழகு கந்தனின் வெற்றிகளாகட்டும் – பின்புலமாய் இருந்து இயக்கியது பார்வதிதேவி என்று புராணம் சொல்கிறது.

    கொடுமைகளையும், கொடியவர்களையும் அழிக்க புறப்பட்ட ஆதிசக்தி – பராசக்தி என்று ஆன்மீக உலகம் அடிக்கோடிட்டு காட்டுகின்றது.

    அக்கினியை மட்டுமல்ல, அன்பையும் வர்ஷிக்கும் நெஞ்சம் என்று சொல்லி – “அமாவாசை அன்று முழுநிலவை முன் நிறுத்துவாள், தன் பக்தனின் பரவசமான பக்திக்கு பலனாக – என்று அவள் பாசத்தின் பக்கங்களை படிக்க சொல்கிறது அனுபவங்கள்.

    நம்ப மறுக்கும் நாத்திகவாதிகளின் சிந்தையில் நங்கூரம் போடும் விதமாக – வள்ளுவனின் குரலுக்கு வாசுகி ஓடிவந்த போது தண்ணீர் குடம் அந்தரத்தில் நின்றது, என்று வாசுகியின் கற்ப்புக்கு கவுரவம் கொடுத்தது ஒரு வரலாற்று பதிவு.

    ஆம்.  வள்ளுவனின் “குரலுக்கு” மட்டுமல்ல அவன் “குறளுக்கும்” பெருமை சேர்த்தது வாசுகி எனும் பெண் என்பதை மடையறும் மறுக்கமாட்டார்கள்.

    பெண் இந்த பிரபஞ்சத்தின் பெருங்கொடை.

    சிவாஜியை “வீர சிவாஜி” என்று உலகம் பாராட்டும்படி உருவாக்கிய பெருமை – அவனை பெற்ற அன்னைக்கு உண்டு.

    அன்பை போதித்த வள்ளலார், வீரத்தையும், பெண் விடுதலையையும் போதித்த பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி, ஓங்காரத்தில் இருக்குது ரீங்காரம் என்று ஓங்கி ஒலித்த ஓஷோ – இவர்களின் புகழ் பூக்களில் மகிழ்ச்சி மணமாக இருப்பது அவர்களின் தாயின் ஆனந்தக்கண்ணீர் தான்.

    “Behind Every Successful Man – there is a Women”  – என்பதை உலகமே ஒப்புக்கொள்ள காரணம், எல்லா நாட்டிலும், வெற்றியாளனையும், சாதனையாளனையும் உருவாகியது ஒரு பெண் தான்.

    தாயாக, தாரமாக, சகோதரியாக, மூதாட்டியாக – அரிதாரம் பூசாத அவதாரமாக பலரின் வாழ்விலும்.

    அவளின் பரிணாமம் பலவிதம்.

    வீர சிவாஜியின் அன்னையாய் – வீரத்தை போதித்தாள்

    தெரசாவின் உருவில் – அன்பை போதித்தாள்

    பத்து மாதம் கரு சுமந்து – தாய்மையை போதித்தாள்

    தன் பிள்ளை மகிழ்ந்து வாழ – பாசத்தை போதித்தாள்

    குடும்ப தலைவியாய் தலை குனிந்து – பொறுமையை போதித்தாள்

    கண்ணிலே நீர் கொண்டு – இரக்கத்தை போதித்தாள்

    “எமனிடமிருந்து போராடி தன் கணவனை மீட்டாள் சாவித்திரி” – சத்தியவான் சாவித்திரி என்று தமிழ் ஆசிரியர்கள் சொல்லும்போது, இன்றைய காலகட்டத்தில் அப்படி ஒரு சாவித்திரியை தேடத்துடிக்குது நம் கண்கள்.

    ஒரு நாள், சுவாமி விவேகானந்தரின் வகுப்பாசிரியர் “நரேந்திரா! நீ பெரியவனானதும் என்னவாக ஆக விரும்புகிறாய்? என்று கேட்ட போது “குதிரை வண்டிக்காரனாக” விழைகிறேன் என்று விடையளித்தார்.  ஆதங்கம் கொண்ட ஆசிரியர் நரேந்திரனின் அன்னையிடம் வந்து வருத்தப்பட்டார்.  நரேந்திரனை அடுத்த அறைக்கு அழைத்துச்சென்று கீதோபதேச கண்ணன், தேரில் அமர்ந்து இருக்கும் படத்தை காட்டி – “குதிரை வண்டிக்காரன் என்றால் இந்தமாதிரி ஆகவேண்டும்.  மற்றவருக்கு அறிவுரை கூறும் அறிவும், உதவி செய்யும் கனிவும், வெற்றியை ஈட்டும் வீரமும், சந்தர்பங்களை உருவாக்கி அதை சமாளிக்கும் சாதுரியமும், ஆசீர்வாதம் அளிக்கும் ஞானமும் கொண்ட ஒரு குதிரை வண்டிக்காரன் தான் அவன்.  அவனைபோல்தான் ஆகவேண்டும் என்பது தான் சரியான லட்சியம்” – என்று நரேந்திரனின் நெஞ்சில் நங்கூரமிட்டாள் அன்னை.

    விதைக்கப்பட்ட விதை விசுவரூபமிட்டு வளர்ந்து – “வீரத்துறவி விவேகானந்தர்”  என்ற விசேஷ பூவை உலகம் முழுவதும் மணம் வீச செய்தது வரலாறு.

    My Dear Brothers & Sisters என்று சக மனிதர்களை சகோதர பாவத்துடன் அழைக்கும் மன அழகை அவருக்குள் விதைத்தது.

    அயல்நாட்டு பெண்மணி ஒருத்தி – உங்களைபோன்ற அறிவு கொண்ட ஒரு மகன் எனக்கு வேண்டும், என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டபோது “இதற்க்கு எதற்கு திருமணம்.  இப்போதே என்னை உங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அன்னையே” என்று சொல்லி அவள் மனசுக்குள் மழை தூவிய மகான் தான் விவேகானந்தர்.  பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் கொண்ட ஒரு மகன் தான் – மகான் தான் சுவாமி விவேகானந்தர்.

    இந்த உன்னதமான குணத்தை அவருக்குள் உற்பத்தி செய்தது “பெண்” எனும் பதுமைதான்.

    பூவையர் – வியக்க வைக்கும் விண் மீன்களை போன்ற அழகு

    பூவையர் – குழம்பிய குட்டையாம் மனித வாழ்வில் தெளிந்த நீர்.

    பூவையர் – இறைவனின் உற்பத்தி இரகசியத்தின் அற்புத இரகசியம்.

    பூவையர் – அறிஞனாலும் அறிய முடியாத அற்புத கிரந்தம்.

    பெண்களுக்கு ஆண்களைக்காட்டிலும் உடல் வலு குறைவு என்று கூறுவது மருத்துவம்.

    பெண்களுக்கு ஆண்களைக்காட்டிலும் மன வலிமை அதிகம் என்று கூறுவது மகத்துவம்.

    உடற்கூறு – மருத்துவத்தை ஏற்றாலும், மகத்துவம் என்றுமே மகத்துவமானது.  அந்த சிறப்புக்கு அருகில் செல்லக்கூட ஆண்களுக்கு அனுமதியும் இல்லை, அருகதையும் இல்லை.

    இத்தனையும், இதற்கு மேலும் சிறப்புக்கள் உடைய “பூவையர்” – இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் எப்படி இருக்கிறார்கள்?

    நாகரிகம் வளர்ந்தபோதும் எப்படி நடத்தப்படுகிறார்கள்?

    அவர்களது மகிமைகள் மறைக்கப்படுவதை, மறக்கப்படுவதை உலகம் எப்போது உணரத்துவங்கும்?

    “எங்கெங்கு காணினும் சக்தியடா” – என்று சொன்னதுதான் பெண்ணின் பெருமை பேசும் கடைசி வாசகமா?

    “கணிவின்பால்” பார்க்கவேண்டிய பெண் சிசுக்களுக்கு இன்னும் “கள்ளிப்பால்” தானே காத்துக்கொண்டிருக்கிறது.

    “கல்வியின்பால்” கவனம் செலுத்தவிடாமல், கல்வி மறுத்து உழைக்கும் எந்திரமாக்கி “களைப்பால்” கருக வைக்கும் கயமை என்று தீரும்?

    இந்த சமூக அவலங்களில் சிக்கியும், கல்விக்கிளைளை பிடித்து மேலே வந்து, சேற்றில் மலரும் செந்தாமரை போல கல்வியில் சிறந்து விளங்கியும் – மருத்துவர் ஆகும் கனவு மட்டுமல்ல, படிக்கும் ஆசையே அறுந்துபோகும் வண்ணம் அணை கட்டி அழிக்கும் தன்மை என்று தீரும்?

    அனிதாவுக்கு அடுத்து எந்த பெயரையும் நாம் எழுத வேண்டாம் என்று இந்த சமூகம் சத்தியம் செய்யும் நாள் வருமா?

    “நிமிர்ந்த நெஞ்சும் நேர் கொண்ட பார்வையும்” என்று பெருமை பேசிய நாட்கள் போய் “நிர்பயா” என்ற பெயரை நம் கண்களில் நீர் பெருக படிக்கவைத்த கயவர்கள் இல்லாத நாடாக மாறும் நாள் வருமா?

    இதுபோன்ற குற்றங்களுக்கு தீர்ப்பு “குறைந்தபட்ச தண்டனை குற்றங்களை நீக்குமா, அல்லது அதிகபட்ச தண்டனை அவலங்கள் போக்குமா”?

    “நகைகள் பல அணிந்து நள்ளிரவில் என்றைக்கு பெண்கள் தைரியமாக, சுதந்திரமாக, பாதுகாப்பாக நடந்து வருகிறார்களோ, அன்றுதான் நாடு சுதந்திரம் அடைந்ததற்கான அடையாளம்” – என்று ஒருவர் சொல்லி சென்றதை படித்ததாக ஞாபகம்.  அந்த அடையாளமும் அடையவில்லை, குற்றம் செய்பவர்களின் அடையாளமும் அறியவில்லை என்று பரபரப்பான செய்திகளை பத்திரிகைகள் பக்கத்துக்கு பக்கம் பிரசுரிக்கும்போது, ஆகஸ்ட் 15  என்பது இந்த வருட நாட்காட்டியில் வரும் இன்னொரு தேதி மட்டுமே என்பது இதயத்தை கனக்க செய்கின்றது.

    வயிற்றுக்கும், வாழ்வுக்கும், போராடும் நிலையில் அயல்நாட்டு நிறுவனங்களுக்காக இங்கே அர்த்த ராத்திரியில் உழைக்கும் பெண்கள் அலுவலகத்துக்கு பாதுகாப்பாக போய்வர Car களை நம்புவதும் கவலைக்குரியதே என்று ஒலாவும், ஊபரும் உரைப்பதை – உலகம் உணரவில்லையா? இல்லை நம் உள்ளம் உணரவில்லையா?

    தொட்டில் குழந்தை திட்டத்தின் தொட்டில்களில் அதிகம் விழுவது பெண் குழந்தைகள் தான் – என்பது அரசாங்கத்தின் புள்ளி விவரம்.

    பல முதியோர் இல்லங்களில் துணி துவைக்கும் போது தெரிந்து விடும் அங்கு அதிகம் வெளுப்பது சேலைகளையா? இல்லை வேட்டிகளையா? என்று.

    அதுசரி.  இவர்களை அங்கே விட்டுச்சென்ற படித்த மடையர்களின் சாயம் எப்போது வெளுக்கும்?

    காதல் என்ற போர்வையில் – கிடைக்கும் வரை யோகப்போருளாகவும் கிடைத்தபின் போகப்பொருளாகவும் பயன்படுத்தப்படும், வக்கிரபுத்தி காரர்களிடம் இருந்து பெண்ணினம் விடுபடுவது என்று?

    Casting Couch எனும் சூழலில் அதிகம் சிக்குவது பெண்கள் தான் என்று திரையுலகில் பல பிரபலங்களே புலம்பும் நிலை தான் இன்று.  கைகொட்டி  சிரிக்கும் இந்த நிகழ்வில் சின்னத்திரையும் சேர்ந்திருக்கிறது என்பது தான் உறுத்தும் உண்மை.

    “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” – என்று சொன்ன காலங்கள் போய், இப்போது “மாதரையே கொளுத்துவோம்” என்றாகி விட்டது விஞ்ஞானமே வெட்கப்படவேண்டிய வேதனை.

    “ஜாதிகள் இல்லையடி பாப்பா” – என்று பாப்பாகவாக இருந்தபோதே படித்ததாலோ என்னவோ, கல்யாணத்தின்போது மாற்று ஜாதியாரை மணமுடித்து – இறுதியில் பார்த்தால் அந்த பெண்தான் விதவை ஆக்கப்பட்டு வீதியில் நிறுத்தப்படுகிறாள்.  குற்றவாளியை கேள்வி கேட்பின் “கவுரவக்கொலை” என்று காரணம் சொல்கிறார்.  இது மாறுமா?

    பெண்களுக்கு எதிராக இங்கே நடந்துவரும் அணைத்து கொடுமைகளும் அந்த இனத்தை, இந்த சமூகத்தை அழிவுப்பாதைக்குத்தான் அங்குலம் அங்குலமாக நகர்த்திக்கொண்டு வருகின்றது.

    திருமண பொருத்தம் பார்த்து கல்யாணம் நடத்தும் ஒருவர் புலம்பினார்.  என் தொழில் இப்போது நிறைய நொடித்து விட்டது.  பல பெண்கள் திருமணத்தை விரும்பவில்லை.  அல்லது பலர் இப்போது வேண்டாம் என்று தள்ளி போடுகிறார்கள்.  இப்படியே போனால், இன்னும் சில வருடங்களில் பெண்களின் சதவீதம் பெருமளவில் குறைந்துவிடும்.  அடுத்த தலைமுறையை அதிகம் பாதிக்கும்” என்றார்.  யோசித்து பார்க்கும்போது உண்மை என்று உணர முடிந்தது.

    கள்ளிச்செடிகளுக்கு மத்தியிலும் பெண் எனும் முல்லைக்கொடி முளைத்து, பரவி, வசந்தம் வீச விரும்புகின்றது.  அந்த வாசம் சிறிது சிறிதாக சிதைந்து கொண்டிருக்கும் இந்த சமூகத்திற்கு அத்தியாவசியமான ஆக்ஸிஜென் என்று ஆக்கிக்கொண்டு இருக்கின்றது.  அது படர்வதற்கு ஆதரவுத்தூண் தரவேண்டிய கட்டாயத்தில் தான் இப்போதைய ஆண்கள் சமூகம் உள்ளது.

    பெண் இனத்தின் பெருமையை, மேன்மையை, மதிப்பை உணர வேண்டிய தருணம் இது.  33 என்பது ஒரு கணக்காக மட்டும் இருக்கட்டும்.  “ஆணுக்குப்பெண் சரிநிகர் சமானம்” – என்பது காலத்தின் கட்டாயம் என்பது விளங்கட்டும்.

    கல்வியிலும், விஞ்ஞானதிலும், பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்பிலும், சமூக அக்கரையிலும் தான் “எள் மூக்கத்தனையும் குறைந்தவள் இல்லை” என்று இன்றைய இளைய தலைமுறை பெண்கள் இயம்புவது – நாம் செவி மடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    பெண்மை குறித்த, பூவையர் குறித்த நம் கண்ணோட்டம் மாற வேண்டும்.

    “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” – என்ற அக்கறை அவசியம் தேவை.  “என் தேவையை யார் அறிவார் உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்” – என்று தெய்வத்திற்கு நிகராக உங்கள் இல்லது ராணியை இன்றே உயர்த்துங்கள்.

    “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், நாளோடும் பொழுதோடும் உறவாடவேண்டும்” என்ற புரிதல் ஒவ்வொரு கணவனுக்கும் தேவை.

    மலையையே தகர்க்கும் ஆற்றலை மனதுக்குள் கொண்டாலும், மௌனத்தை மொழியாக கொண்ட “பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி” என்றுணர்ந்து அவளிடம் பாடங்கள் பயில முயல்வோம்.

    இன்று புதிதாய் பிறந்தோம், இந்த நொடி இனிய நொடி என்று இயம்புங்கள்.

    “அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே” எனும் வரிகளை இசையின் அழகுக்கும் மீறி, நடிகரின் நடிப்புக்கும் மீறி, குரலின் இனிமைக்கும் மீறி – நெஞ்சில் குடியேற்றுங்கள்.

    பெண்மையை வாழ்த்துங்கள்!  பூவையரை போற்றுங்கள்!

    போற்றினால், உங்கள் வாழ்வு இனிக்கும், இந்த சமூகம் சிறக்கும்.  அனைத்துக்கும் மேலே ,

    “வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

    “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில்

    பலமா? பலவீனமா?

    நான் ஒன்றுக்கும் உதவாதவன். 

    என்னால் எப்போதுமே வெற்றி பெற முடியாது.

    என் உடலில் பல குறைகள் இருக்கின்றன.

    உடல் ஊனமுற்ற என்னால் எப்படி சாதிக்க முடியும்?

    – இவ்வாறு  பல்வேறு “பலம்” (Strength) இழந்த கூக்குரல்களை நாம் கேட்கலாம்.

    “என்னால் முடியாது” என்று முழுவதுமாக செயலைச் செய்ய மறுப்பவர்களும் உண்டு.

    உடலில் ஊனம். அப்பா இல்லை. அம்மா இறந்துவிட்டாள். உழைக்க வழியில்லை. இந்தச் சூழலில் கூட உயிர்வாழ விரும்பி பிழைக்க வழிதேடி ‘அநாதை’ முத்திரையோடு அலைபவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள்.

    ஆனால், அதேவேளையில் கை, கால்கள் திடமாக இருக்கிறது. கண், காது, மூக்கு, வாய் – என்ற முக்கிய உறுப்புகளும் நலமாக இருக்கிறது. உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அன்பான அப்பா. ஆதரவுதந்து அரவணைக்கும் அம்மா. உரிமையோடு அன்புகாட்டும் அக்கா, தங்கை. உண்மையான உறவை வெளிப்படுத்தும் பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, அத்தை, மாமா – என நெருங்கிய உறவுகள், உதவும் ஊர்க்காரர்கள். இப்படி எத்தனையோ உறவுகள் இருந்தும், ‘தற்கொலை’ செய்து வாழ்வை முடித்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

    இந்த உலகில் இனிமையாக வாழ்வதற்குக் கிடைத்த அற்புதமான வரத்தை சாபமாக மாற்றி, உயிரைத் தானாகவே மாய்த்துக்கொள்வது வேதனையை விளைவிக்கும் செயல் அல்லவா?

    தன்னிடமுள்ள பலங்களை அறியாதவர்கள்தான், தங்கள் பலவீனங்களை நாள்தோறும் நினைத்து வருந்தி சோகக்குழிக்குள் புதைந்துபோகிறார்கள்.

    ஜப்பான் நாட்டில் நடந்ந ஒரு உண்மைச் சம்பவம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

    அவன் ஒரு ஊனமுற்ற சிறுவன். சுமார் 10 வயது நிரம்பியவன். இடது கை அவனுக்குக் கிடையாது.

    இளம்வயதிலேயே அவனுக்கு ஒரு விசித்திரமான ஆசை இருந்தது.

    “எப்படியாவது நான் ஒரு ஜூடோ சாம்பியனாக மாற வேண்டும்” – என நினைத்தான்..

    தனது எண்ணத்தை சிலரிடம் சொன்னான்.

    “ஒரு கை இல்லாத சிறுவனால் எப்படி ஜூடோவில் சிறந்து விளங்க முடியும்?” – என அவர்கள் சிரித்தார்கள்.

    சில ஜூடோ மாஸ்டர்களை நேரில் சந்தித்து அவன் தனது விருப்பத்தைச் சொன்னான். “உனக்கே கை இல்லை. ஜூடோவுக்கு முக்கியமே கைதான். இடது கை இல்லாத உன்னால் எப்படி வெற்றி பெற முடியும்?” என்றுசொல்லி அவர்களும் அவனை மேலும் பலவீனப்படுத்தினார்கள்.

    சிறுவன் அவனது தன்னம்பிக்கையை தளரவிடவில்லை. மீண்டும் சில ஜூடோ மாஸ்டர்களிடம் நேரில் சென்று தனது எதிர்காலக் குறிக்கோளைத் தெரிவித்தான்.

    ஜூடோ மாஸ்டர்களில் சிலர் கோபப்பட்டார்கள். எரிச்சல்பட்டார்கள். முடிவில், ஒரு ஜூடோ மாஸ்டர் அவனுக்கு உதவினார்.

    ஜூடோ பயிற்சி ஆரம்பமானது. தினந்தோறும் அவனுக்கு பயிற்சி வழங்கினார் ஜூடோ மாஸ்டர்.

    வாரங்கள், மாதங்களாகி ஆண்டாக மாறியது. ஆனால், ஓராண்டு முடிந்தபின்பும் ஒரே ஒரு தாக்குதல் பயிற்சியை மட்டுமே சிறுவனுக்கு கற்றுத் தந்திருந்தார் மாஸ்டர். வேறு எந்தவித யுக்தியையும் அவனுக்கு மாஸ்டர் கற்றுத்தரவில்லை.

    சிறுவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    “ஒரு வருடமாக பயிற்சி செய்தபின்பும், எனக்கு ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டும் மாஸ்டர் கற்றுத் தந்திருக்கிறார். இந்தத் தாக்குதல் முறையை மட்டும் தெரிந்துகொண்டு, என்னால் எப்படி வெற்றி பெற முடியும்?” – என சோர்வடைந்தான்.

    தனது எண்ணத்தை வார்த்தைகளாக்கி ஜூடோ மாஸ்டரான குருவிடம் நேரடியாகவே கேட்டான்.

    “குருவே… எனக்கு ஒரே ஒரு தாக்குதல் பயிற்சி மட்டும் கற்றுத் தந்திருக்கிறீர்கள். இது மட்டும் எனக்குப் போதுமா? வேறு தாக்குதல் பயிற்சி வேண்டுமல்லவா?” – என வினா எழுப்பினான்.

    சிறுவனது ஆர்வத்தை அறிந்த ஜூடோ மாஸ்டர், “நீ கவலைப்படாதே. நீ திறமையானவன். நீ கற்றுக்கொண்ட ஒரே ஒரு தாக்குதல் வித்தை மட்டுமே உனது வெற்றியை உனக்குப் பெற்றுத்தரும்” என்றார்.

    குருவின் வாக்கை வேதவாக்காக எண்ணி, தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டான் சிறுவன்.

    ஒருநாள் – சாம்பியன்கள் பங்குபெறும் போட்டி தொடங்கியது.

    முதல் போட்டி – ஜூடோ கலையில் வல்லவரான ஒருவரோடு போட்டியிட்டு, வெற்றி பெற வேண்டும். சிறுவன் களத்தில் இறங்கினான். நன்றாக எதிர் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றான்.

    இரண்டாவது போட்டியில் – சிறந்த ‘சாம்பியன்’ போட்டிக்கு வந்தார். அந்தப் போட்டியிலும் வெற்றிபெற்று, தொடர்ந்து முன்னேறினான்.

    இறுதிப்போட்டியில் – புகழ்பெற்ற மிகச்சிறந்த சம்பியன் போட்டிக்கு வந்தார்.

    இடது கை இல்லாத சிறுவனின் தோற்றம் அந்த சாம்பியனுக்கு சிரிப்பைத் தந்தது. முதல் சுற்றுப் போட்டியில் ஓங்கி அடித்து சிறுவனை சாம்பியன் தாக்கினார்.

    “சிறுவன் நிச்சயம் தோற்றுவிடுவான்” என்ற முடிவுக்கு வந்த சாம்பியன், தனது பாதுகாப்பு கவசத்தைக் கழற்றிவிட்டு, சிறுவனை பலம்கொண்ட மட்டும் தாக்கினார். ஆனால், சிறுவன் தனக்குத் தெரிந்த ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டுமே கையாண்டான்.

    ஆனால், முடிவில் சிறுவனின் திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த சாம்பியன் வீழ்ந்தார். சிறுவனுக்கு “சாம்பியன் பட்டம்” கிடைத்தது.

    சிறுவனின் வெற்றியை யாரும் நம்பவில்லை. ஆச்சரியத்தோடு சிறுவனையும், ஜூடோ மாஸ்டரையும் பார்வையாளர்கள் நெருங்கி வந்து பாராட்டினார்கள்.

    மகிழ்ச்சியில் ஜூடோ மாஸ்டரின் கால்களில் விழுந்து வணங்கினான் சிறுவன்.

    “ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு என்னால் எப்படி வெற்றி பெற முடிந்தது?” – என ஆச்சரியத்தில் திகைத்துக் கேட்டான் சிறுவன்.

    “உனது வெற்றிக்குக் காரணம் உனது உடல் ஊனம்தான். நீ எது உனக்குப் பலவீனம் என்று நினைத்தாயோ, அதுவே உனது பலமாக மாறிவிட்டது. ஜூடோ பயிற்சியிலுள்ள மிகக் கடுமையான தாக்குதல் முறையை உனக்கு நான் கற்றுத் தந்தேன். இந்த தாக்குதல் முறையில் உனது திடீர் தாக்குதலை சந்திக்க வேண்டுமென்றால், உனது இடது கையைப் பிடித்துத்தான் எதிராளி உன்னை தாக்க வேண்டும். ஆனால், உனக்கு இடது கை கிடையாது அல்லவா? இதுதான் உனது வெற்றியின் ரகசியம்” என்றார் ஜூடோ மாஸ்டர்.

    ஜூடோ மாஸ்டரின் விளக்கத்தில் அதிர்ந்து நின்றான் சிறுவன். சிறுவனின் பலவீனம்தான், சிறந்த வெற்றியைத்தரும் பலமாக மாற்றப்பட்டிருப்பது முறையான பயிற்சிக்குக் கிடைத்த பரிசு அல்லவா?

    சிலர் தனது பலவீனங்களை எண்ணி வருந்தி சோர்ந்துவிடுகிறார்கள்.

    தனது பலவீனங்களைநீக்க முறையான பயிற்சி செய்தவர்கள் அவற்றை வெற்றிக்கு அடிப்படையான பலங்களாக மாற்றி வெற்றிக் காண்கிறார்கள் என்பது உண்மைத்தானே?.

    இந்த இதழை மேலும்

    பாயும் ஆறு

    தொடர்ச்சி

    ‘லா-பெட்ரோஸா’ என்றால் தெரியாதவர்களுக்கு தமிழ்நாட்டு பட்டிதொட்டியெல்லாம் கூட சினிமா கதாநாயகர்களுக்கு இணையாக டீ சர்ட்டில் (T-Shirt) இடம்பிடித்த “சே-குவேராவை” தெரிந்து இருக்கும்.  எர்னெஸ்டோ     செ-குவேரா… ஆரம்ப காலங்களில் தென் அமெரிக்கா கண்டத்தில் தெற்கு வடக்காக அர்ஜெண்டினா, பெரு, சிலி வழியாக இருசக்கர வாகனத்தில் (நோர்ட்டன்) Norten-make பயணித்த நினைவுகளை அவர் தனது தானியங்கி இருசக்கர வண்டி நாட்குறிப்புகள் (Motor Cycle – Diaries) என்று எழுதி உள்ளார்.  அவரது அந்த இருசக்கர வாகனத்துக்கு அவரே வைத்திருந்த செல்லப் பெயர்தான் “லா-பெட்ரோஸா” (La Poderosa -“The Mighty One“) என்பது  சக்திவாய்ந்த – The Powerful என்பதாகும்.    யமஹா – தல – 100  வாகனம்… இதை காண்கையில் எல்லாம் கல்லூரியில் நண்பன் கணா என்கின்ற கணபதியின் வாகனத்தை ஓஸி-வாங்கி ஓட்ட எத்தனித்த (ஓட்டினோம் என்று சொல்லிவிட மனம்வரவில்லை – ஆனால் காயமின்றி தப்பினோம் – என்று காலரை தூக்கிவிட்டு சொல்லலாம்)  நாட்கள் ஞாபகம் வருகின்றன.  பொதுவாக வாகனங்களை நாம் பக்குவமாக பயன்படுத்த உறுதி எடுத்துக்கொள்வோம் ஆகுக.

    ஆறுமட்டுமா அழகு:-

    காவிரியாறு தன்னுடைய தாகத்தை தீர்த்த மகிழ்ச்சியில் தளும்புவதாக தோன்றியது.  ஆங்காங்கே சிறுசிறு பாறைகளில் குதித்துத் துள்ளிய நீரில் இருந்து துடித்துத் துள்ளிய மீன்களை சில சிறுவர்கள் ‘லபக்’ என்று பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.  அப்படியொரு காட்சிப் பின்புலத்தில் வானம்பார்த்தவாறு ஒரு வாகான பாறையில் சாய்ந்து புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்தபொழுது நண்பர்கள் நிறையபேர்… மகிழ்ச்சியாக பின்னூட்டம் (Feedback) கொடுத்திருந்தனர்.  வால்டன் ஏரி அருகே தோரோ (Thoreau) சென்று வாழ்ந்த காலக்கட்டத்தின் பதிவுகளை அந்தக் காட்சிப்பதிவு அசைபோட வைத்தது காவிரி சிறு சிறு கற்குவியல்களில் பட்டு நெளிவதைப்போல நம் கட்டுரையும் நுரைத்துக்கொண்டு ஓடுவதே அழகுதான்.

    நீல நிற உடையில் போடப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்திற்கு ஆற்றங்கரையில் நினைவோடை – ஓடுமிடம் கொடுமுடி அருகே என்று எழுதி ஆங்கில தலைப்பிட்டு இருந்தோம் அறு நூற்றை தாண்டிய நண்பர்கள் விரும்பிய (Like) புகைப்படம் நாம் செய்கின்ற இடத்தில் எல்லாம் அதை ஏற்கனவே பார்த்திருந்த நண்பர்கள் அதுகுறித்து விசாரித்த வண்ணம் முக மலர்ச்சியுடன் பேச வைத்தது.  அதில் ஒரு நண்பர் “ஆறு மட்டுமா அழகு?” என்று ஒரு இருபொருள்படும் கேள்வி ஒன்றை பதிவிட்டு இருந்தார்.  இது பலபேரால் பார்க்கப்படும் பொழுது பல பொருள்களில் புரிந்துகொள்ளப்படும்.  ஒரு சில அர்த்தங்களில் நாமும் அழகு ‘வெட்கம்’ வரும் வகையில் கூட புரிந்துகொள்ளலாம்.  ஆனால், அவர் அதை சொல்லவில்லையே.  அழகு… என்பதே… சொல்லாமல் விடுகின்ற சொற்களில்தானே இருக்கின்றது? ஆங்கில கவிஞன் வோட்ஸ்வொத்தும், கீட்ஸூம், மனதில் வார்த்தை ஆறுகளை ஓடவிட்டனர்.  இதற்கு பதில் தரும்பொழுது அனைவரும் மேலும் ‘முகம் சிவக்கும்’ வண்ணமும், மேலும் முகம் மலரும் வண்ணமும், உடனே பதில் கூறும் வேகத்திலும் பதில் பதிவிட வேண்டும் என்று சற்றே மூளையை கசக்கி ஒரு பதிவிட்டோம், அது மிகவும் நன்றாக வந்திருந்தது.  முகநூலை கண்டவர் சிலரே!  இக்கட்டுரையை படித்துக்கொண்டு இருப்பவர்களோ பலர்… எனவே அந்த முகநூல் பதிவை எழுத்துப் பதிவாக்கும் எண்ணம் தோன்றியது.

    சொற்கள் மிகுந்த கவனத்துடன் கையாளப்படவேண்டிய

    வாழ்க்கைக் கட்டிடத்தைக் கட்டப் பயன்படும் கற்கள்

    என்று சிந்தனை ஓடுகிறது.

    “சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை

    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

    என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.  அவ்வாறு, ஒரு பதிலை எழுதலாம் என்கின்ற நம் முயற்சியில் இதைப்படிக்கின்ற உங்கள் மனதில் ஆற்றின் மடியில் ஒய்யாரமாய் தலைவைத்து விண்ணைத் தாண்டி விழிகளை வானெங்கும் பரப்பி சாய்ந்திருக்கும் படத்திற்கு, “ஆறு மட்டுமா அழகு” என்று ஒரு பதிவிட்டால்… அதைப் பதிவிட்டவருக்கும் புல்லரிக்கும் வண்ணம், என்ன பதில் எழுதலாம் என்று யோசனை செய்து சொல்லுங்கள்.

    கற்பனையே ஆறுதல், கற்பனையே மாறுதல்:-

    அதற்குள் நாம், “மூளைப்புற்று நோய்” என்று, நவீன மருத்துவ ஆராய்ச்சி முறைகள் வரப்பிரசாதமாக நம் கரங்களில் தவழ விட்டுள்ள ஊடுருவிப் பார்த்து கண்டறியும் தொழில்நுட்பம் மூலம்… பேரதிர்ச்சியை நமக்குக் கொடுத்த சூழ்நிலையை திரும்ப சென்று கண்டு வருவோம்.  அதில் மனதிற்கு அமைதியும் முடிந்தால் நிறைவும் அளிக்கும் மாற்றமோ செய்தியோ?  வந்துவிடாதா?… உதாரணத்திற்கு, ஒரு கற்பனையாக… கீழ்காணும், பத்தியில் ஒரு கனவில் காணும் சம்பவத்தை பார்ப்போம்.

    “இந்த சி.டி ஸ்கேன் (CT Scan) எடுக்கப்பட்டபொழுது மருத்துவக் கல்லூரி பாடபுத்தகத்தில் மூளைப்புற்று தோடர்பான மற்றொரு படக்காட்சி, தவறுதலாக உங்களுடைய உறவினரின் படக்காட்சியாக வந்துவிட்டது.  அதனால் மீண்டும் சரிபார்த்து நோயில்லாத படமாக இருக்கும் இந்தப்படந்தான் தங்களுடையது, தங்களுக்குரியது… இதை நீங்கள் மீண்டும் சரிபார்த்துக்கொள்ளலாம்,” என்று கூறினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று தோன்றியது.  அப்படி நடந்தால், மருத்துவமனை நிர்வாகத்தின்மீது, ஏன் முதலிலேயே சரியாக பார்த்து கூறவில்லை, என்கிற மனஸ்தாபம் கூட வரலாம். ஆனாலும் மிகவும் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்த மிரட்சியும் கவலையும் லேசாகி மறையக் காணலாம்.  இப்படியொரு கற்பனையும் நமக்குத் தோன்றியது.  ஆற்றின் ஓட்டத்தில் காணும் சுழல்களைப் போல சில காட்சிகள் இதுபோன்ற செய்திகளால் வருவதே வாழ்வின் இயல்பு.

    தற்செயல்:-

    தற்செயலாக மருத்துவ நண்பர் அறிவுச்செல்வன் நம்மை அலுவலகத்தில் சந்தித்திராவிட்டால் மூளைப்புற்றுநோய் குறித்த நியூரோசர்ஜிகல் அதிநுண்சிகிச்சை துறைகுறித்த இவ்வளவு ஆழமான சிந்தனை வந்திருக்காது.  வயதான பெரியவர் சொற்கோ, என்கின்ற உருவகத்திற்கு பதில் மூளைப் புற்று நோயாளி சொற்கோ என்கின்ற புதுக் கோணத்தில் மதிப்பிற்குரிய நண்பரின் தந்தையை பார்க்கும் கோணம் வந்திருக்காது.  அந்த மருத்துவ மனையில் இருந்து பிரிந்து கிளம்பும்பொழுது, அந்தப்பெரியவருக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பதும், அவருக்கு மிகவும் தேவைப்படுவதுமான, “அறுவைச் சிகிச்சை செய்யமாட்டோம்”, – என்கின்ற ஆசுவாசத்தை நம்மால் கொடுக்க முடிந்திருக்குமா? என்கின்ற சிந்தனையோடே நாகர்கோவில், கோதையாறு, தோவாளை, திருநெல்வேலி என அலுவலக பணி நிமித்தம் பயணித்த பொழுதும்… ஒரு வாழ்ந்து பழுத்த முதியவருக்கு… அவர் நினைக்கின்ற “அக்கறையை” “கவனிப்பை” “தெம்பை”, “பாசத்தை”, ‘அரவணைப்பை’ அளிப்பதற்கு பதிலாக, சிகிச்சையை மட்டுமே  அளிக்க நாமும் மௌன ஒப்புதல் அளித்ததாக தோன்றும் மனநிலையுடனே இருந்திருக்க மாட்டோம்.  இந்த பாராகிராஃபின் முதல் சொல்லை பாருங்கள், அது ‘தற்செயலாக’ என்றே தொடங்குகிறது.  அதற்கான சந்திப்புத்திட்டமிடல் எங்களுக்குள் நிகழவில்லை.  இதைப்படிக்கும், திட்டமிடல் உங்களிடம் நிகழவில்லை.  எதேச்சையாக இந்த புத்தகத்தை நீங்கள் படித்து நம் சொற்களை, சிந்தனையை பகிர்ந்துகொண்டிருக்கக்கூடும்… அனைத்துமே தற்செயலாகவே நிகழ்கின்றன.  இது குறித்த அற்புதமான விளக்கங்களை, இதே வினாடி, அதே வினாடி மற்றும் அடுத்த வினாடி என்கின்ற புத்தகங்களில் நாகூர் ரூமி சார் அருமையாக எழுதியிருக்கின்றார்.

    இந்த இதழை மேலும்

    பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்

    “பெண்ணிற்கு பெருந்தக்க யாஉள கற்பென்னும்

    திண்மை உண்டாகப் பெறின்”

    கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருந்தால் அக்கற்புடைய பெண்ணை விடப் பெருமை உடையவை வேறு எவை உள்ளன? என்ற கேள்வியுடன் வள்ளுவர் பெருந்தகை பெண்ணின் சிறப்பு பற்றி கூறுயுள்ளார். “அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது” என்ற வாசகம் மனிதன் ஒரு உயரிய படைப்பு என்று அறிவுறுத்துகின்றது. அதிலும் “மாந்தர்களாய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்” என்ற வாசகம் பெண் இனத்தின் பெருமையை ஒருபடி உயர்த்தி காட்டுகின்றது. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, பெண்கள் அறிவுதிறனிலும், ஆன்மீகத்திலும் மற்றும் பல்வேறு செயல்பாடுகளிலும் ஆண்களுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். “பெண் ஒரு இயற்கையின் சீதனம்” என்றும் “பெண் இல்லாமல் உலகில் சுகம் இல்லை” என்ற கவிஞர்களின் வாக்கியங்கள் பெண்ணின் சிறப்பை மேலும் வலுவூட்டுகின்றன. அப்படிப்பட்ட பெண் இனத்திற்கு பெருமை சேர்க்கும் புகழ் பெற்ற இந்திய முதல் பெண்மணிகள் சிலரின் வாழ்க்கை குறிப்புகள் பற்றி இக்கட்டுரை விவரிக்கின்றது. “முதல்” என்ற வார்த்தையின் மகிமை அனைவரும் அறிந்தது. இக்கட்டுரை மதல் பெண் எழுத்தாளர், ஆளுநர், விண்வெளி பயணி, IAS அதிகாரி, மற்றும் IPS அதிகாரி பற்றி விவரிக்க உள்ளது.

    சுவர்ணகுமாரி தேவி முதல் வங்காளப் பெண் எழுத்தாளர் ஆவார். இவர் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது ஆயுட்காலம் 1885 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் 1932ம் வருடம் ஜூலை மாதம் 3ம் தேதி வரை தான்.  இவர் பிராலி என்ற தாழ்த்தப்பட்ட பிராமிணர் குடும்பத்தில் பிறந்தவர். ஜாணகிநாத் கோசல் என்ற ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவரை மணந்தார். கோசல், மற்ற பிராமணர்கள் சுவர்ண குமாரியை தாழ்ந்த ஜாதி என்று கருதியதால், தன் குடும்பத்தை விட்டு பிரிந்து தன் உழைப்பால் உயர்ந்து சுவர்ணகுமாரி மற்றும் தன் குழந்தைகளுடன் இன்புற்று வாழ்ந்தார். சுவர்ணகுமாரியின் பாட்டனார், தாய், தந்தை, சகோதிரிகள் அனைவரும் பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்றவர்கள். ரவிந்தரநாத் தாகூர் இவருடைய இளைய சகோதரர் ஆவார். அவர் தன் குறிப்பில் “நாங்கள் வெளி உலகில் கற்றதை விட எங்கள் இல்லத்தில் கற்றக் கொண்டவை தான் அதிகம்” என்று குறிப்பிட்டுள்ளார். சுவர்ணகுமாரியின் முதல் நாவல் “தீப்நிர்பன்”1876ல் வெளியிடப்பட்டது. இந்தூல் தேசபக்தி எழுப்பவதாக அமைந்துள்ளது. இவர் 12 நாவல்கள், 4 நாடகங்கள், 3 கவிதைகள் மற்றும் விஞ்ஞானக் குறிப்புகள் நிறைந்த கட்டுரை ஒன்றும் எழுதியுள்ளார். 1896ல் இவர் “சக்தி சமீதி” என்ற இயக்கதை துவங்கி அதில் விதவைப்பெண்கள், ஆனதைக் குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வந்தார். பெண்கல்வியை இங்கு ஊக்குவித்தார். இவருக்கு ஹிரன் மோயி என்ற பெண்மணி ஒத்துழைப்பு நல்கி வந்தார். இவ்வியக்கம் இன்றும் ஹிரன் மோயி மகள் கல்யாணி மாலிக் மூலம் நன்றாக இயங்கி வருகின்றது. கோழிக்கோடு பல்கலைக்கழகம் சுவர்ணகுமாரியை 1927ம் ஆண்டு ஜெகத்தாரணி தங்கப்பதக்கம் அளித்து கொரவித்தது. பாரதி என்னும் பத்திரிக்கையின் எடிட்டராக பல ஆண்டுகள் பணிபுரிந்த பெருமையும் இவருக்கு உண்டு.

    சரோஜினி நாயுடு இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் முதல் பெண் ஆளுநர் ஆவார். இவர் 1879 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் நான் ஹைதாராபாத்தில் ஒரு வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தன் கல்வியை சென்னை, லண்டன், கேம்பிரிஜ்யில் பெற்றார். டாக்டர். கோவிந்த ராஜீலு இவருடைய கணவர் ஆவார். இவர் கவிதை எழுதுவதில் அதிக நாட்டம் கொண்டவர். அதனால் இவர் இந்தியாவின் “கவிகுயிலி” (நைட்டிங்கேல்) என்றப்பட்டதிற்கும் “பாரதீய கோகிலா” என்ற பட்டதிற்கும் உரியவரானார். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாது ஒரு பேச்சாளர், எழுத்தாளர், சமூகசேவகர் மற்றும் சுதந்திரப் போராட்டவீரரும் ஆவார். காந்தியடிகளுடன் பலப்போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும் பதவி வகித்தார். இந்தியப் பெண்களை தங்கள் சமையல் அறையில் இருந்து வெளியில் வந்து அவர்களை விழிப்படையச் செய்தவர் இவர் தான். 1947ல் உத்திரப்பிரதேசத்தின் முதல் பெண் ஆளுஞராகப் பதவி ஏற்றார். 1949ம் ஆண்டு லக்னோவில் உள்ள தன்னுடைய அலுவலக்கத்தில் இருதயவலியால் உயிர் நீத்தார். இவரது நினைவாக நிறைய நிறுவனங்கள் நிறுவப்பட்டு இன்று வரை செயலாற்றி வருகின்றன. இவருடைய பல்வேறு செயல்பாடுகளை கருத்தில் கொண்டு ஹைதராபாத் பல்கலைக்கழகம் சரோஜினி நாயுடுவின் பெயரில் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

    அன்னராஜம் மல்கோத்ரா முதல் பெண் IAS அதிகாரி என்ற புகழ்பெற்றவர் ஆவார். இவர் கோழிக்கோட்டில் ஒரு கிராமத்தில் 1927ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி பிறந்தார். பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் துணையைத் தேடிக் கொண்டிருக்கும் பருவத்தில் இவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 1950ல்  ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். தன்னுடன் பயின்ற மல்கோத்ராவை மணந்து கொண்டார். இவர் பெண்ணாகப் பிறந்ததால் பலசமயங்களில் அவமானப்படுத்தப்பட்டார். செயலகத்தில் இவருக்கு திருமணம் ஆனதால் இவரது பதவி பறிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அந்த சட்டம் தளர்த்தப்பட்டதால் மீண்டும் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். இ. ராஜகோபாலச்சாரியார் முதல்வர் ஆக பதவி ஏற்ற போது அன்னராஜம் அவரின் செயலாளராகப் பொறுப்பேற்றார். இ.ராஜகோபாலச்சாரியார் ஒரு பெண்ணால் அச்செயலை திறம்பட செய்ய இயலாது என்று செயலகத்தில் பணிபுரியச் செய்தார். ஆனால் அன்னராஜம், குதிரை ஏற்றம், கண்டு பாய்ச்சுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு திருப்பூர் மாவட்ட IAS அதிகாரியாகப் பொறுப்பேற்றார். ஏழு முதல்வர்கள் கீழும் பிரதமர்கள் இந்தராகாந்தி மற்றும் ராஜீவ்காந்திக்கு கீழும் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. மும்பையில் நவசேன துறைமுகம் உருவாக்கியதில் இவருக்கு அதிகப் பங்கு உண்டு. அதிகாலையில் எழுந்து படகில் சென்று கணினி மயமாக்கப்பட்ட துறைமுகத்தை உருவாக்கினார். ராஜீவ் காந்தி பிரதமாராக இருந்தபோது இவ்விடத்திற்கு இருமுறை சென்று இவரது சேவையை பாராட்டினார். இந்தராகாந்தி பிரதமாராக இருந்தபோது இவர் தனது குதிங்கால் முறிவினையும் பொருட்படுத்தாது அவருடன் எட்டு மாநிலங்களில் உணவு உற்பத்தி சம்பந்தமாகப் பிரயாணம் செய்தார். இவர் ஓசூரில் பணியாற்றியபோது யானைகளால் தொல்லை ஏற்பட்டது. அவ்வேளையில் அதனைச் சுடும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டபொழுதும் தனது திறமையால் அதனை சுடாது வெற்றிகரமாகக் காட்டிற்குள் அனுப்பி பெரும் சாதனைப் புரிந்தார். இவரது வாழ்கையில் பல பெண்களை சிவில் தேர்வை எழுத உக்கிவித்தது பெரும் பணி ஆகும். இவரது சேவையை பாராட்டி 1989ல் பத்மபூஷன் விருதை மத்திய அரசு வழங்கி பெருமை படுத்தியது.

    கிரண்பேடி இந்திய காவல் துறை IPS அதிகாரியாகப் பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் 1949ம் ஆண்டு ஜீன் மாதம் 9ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தரசில் பிறந்தார். தன் கல்வியை பஞ்சாப்பிலும், டெல்லியிலும் உள்ள கல்வி நிலையங்களில் கற்றார். கலசா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1972ல் காவல்துறை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். 1972ல் பிதிஜ்பேடி என்பவரைத் திருமணம் செய்தார். பல்வேறு காவல்துறைப் பதவிகளில் பணியாற்றினார். 2007, டிசம்பர் மாதம் 25ம் நாள் பதவியிலிருந்சது ஓய்வுப் பெற்று சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தில்லி சிறையில் பொது ஆய்வாளராகப் பணியில் இருந்த போது பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தார். இதனைக் கருத்தில் கொண்டு இவருக்கு மத்திய அரசு 1994ம் ஆண்டு “மாராட்டிய ரமோன் மகாசேசி” விருது வழங்கி கொளவித்தது. இதனைத் தவிர இவர் பத்திற்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று பெண் இனத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்.

    தன்னை இலஞ்ச ஒழிப்பு துறையில் 2011 ஆண்டு இணைத்துக் கொண்டார். 2015ம் ஆண்டு பாரதிய ஜானதா கட்சியில் இணைந்தார். 2016ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி புதுச்சேரி மாநில நெப்டினெட் ஆளுநராகப் பொறுப்பேற்று இன்று வரை திறன் பட செயலாற்றி வருகின்றார். இவரால் நிறுவப்பட்ட நவஜோதி NGO திறம்பட 1987ம் ஆண்டு முதல் இயங்கிவருகின்றது. 

    கல்பனா சால்வா விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்திய பெண்மணி என்பற பெருமை  இவருக்குரியது. ஒரு சாதாரணப்பள்ளியில் பயின்று, பலரும் வியக்கத்தக்க ஒரு வின்வெளி பொறியாளராக வாழ்ந்து காட்டியவர் ஆவார். இவர் 1961 ம் ஆண்டு ஜீலை மாதம் 1ம் தேதி ஹரியானவில் உள்ள கர்னல் என்ற ஊரில் பிறந்தார். இவர் 1988ல் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் பணியில் சேர்ந்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்கத் தகுது சான்றிதழ் பெற்றத்தோடு அவற்றை இயக்கவும் அனுமதி பெற்றிருந்தார். 1995ல் நாசாவின் வெளிவீரர்கள் பயிற்சி குழுவில் இணைந்த இவர் இரண்டே வருடங்களில் கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்.டி. எஸ்-87 (STS-87) ல் பயணம் செய்யத் தேர்வுச் செய்யப்பட்டார். 1997 ம் ஆண்டு சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனை படைத்தார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். 2003ம் ஆண்டு இரண்டாவது முறையாக கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) ல் இந்தியாவின் வீரமங்கையான கல்பனா சால்வாவுடன் ஆறுபேர்கொண்ட குழுவும் பயணித்தனர். 16 நாட்கள் ஆய்வை வெற்றிகரமாக முடித்து பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவில் டெக்ஸாஸ் வான்பரப்பில் அவர்கள் வந்த விண்கலம் வெடித்து சிதறியது கல்பனா சால்வா உடன் பயணித்த ஆறு பேரும் அதில் பலியாயினர். இவருடைய சாதனைகளை நினைவில் சொண்டு 2004 முதல் இவருடைய பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இவர் பெயரில் பல வீதிகளும் பயணித்து வருகின்றன.

    தங்களது விடாமுயற்சியாலும் உழைப்பாலும் மற்றவர் வாழ்விற்காக இந்த பெண்மணிகள் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு பெற்ற பெண்மணிகளை முன் மாதியாக்க் கொண்டு இன்றைய இளைய பெண்மணிகளும் பல்வேறு சாதனைகளைப் புரிய முன் வரவேண்டும் என்று சர்வதேச மகளிர் தினத்தன்று உறுதி எடுத்துக் கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    இந்த இதழை மேலும்

    என்று மடியும் பெண்ணடிமை?

    இறைவனின் அற்புதப் படைப்பு ஆணும் பெண்ணும்,  இருவருமே சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.  இதைத்தான், ‘சிவம் பாதி, சக்தி பாதி’ என்று புராணங்கள் கூறுகின்றன.  பெண்களைப் போற்றுவதும், மதிப்பதும் பாரதத்தின் பண்பாடு. கல்விக்கு ‘கலைமகள்’, செல்வத்திற்கு ‘இலட்சுமி’, வீரத்திற்கு ‘மலைமகள்’ என்று அனைத்துச் செல்வங்களுக்கும் பெண்பாற் கடவுளர்களையே அதிபதிகளாகச் சித்தரித்துள்ளனர்.  நதிகளுக்கும் ‘கங்கை’, ‘யமுனை’,‘காவேரி’ என்ற பெண்பாற் பெயர்களையே சூட்டியுள்ளனர்.

    அரசியல் உரிமைக்காகக் களம் இறங்கிய ஜான்சி ராணி, லட்சுமிபாய், கல்வி உரிமைக்காகப் போராடிய முத்துலட்சுமி ரெட்டி, அண்ணல் காந்தியோடு அரும்பணியாற்றிய தில்லையாடி வள்ளியம்மை, இலக்கியத் தளத்தில் சாதனை படைத்த சரோஜினி நாயுடு, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னிபெசன்ட், புற்றுநோய்க்குத் தீர்வு கண்டு நோபல் பரிசு பெற்ற கியூரி போன்றோர் வரலாறு படைத்தவர்கள்.

    கருணையுள்ளம் கொண்ட அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா, இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, உலக அளவிலான புக்கர் பரிசைப் பெற்ற அருந்ததி ராய், விண்வெளியில் பறந்து தீபமாய் ஓளிவிடும் கல்பனா சாவ்லா, திகார் சிறையில் சாதனைகள் பல புரிந்த கிரண் பேடி, இசைத்துறையில் பிரகாசிக்கும் லதா மங்கேஷ்கர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா போன்றோர் சாதனை படைத்த, படைத்துக் கொண்டிருக்கும் மங்கையர்களே.

    நாட்டின் குடியரசுத் தலைவராக, பிரதமராக, முதல்வராக, கட்சிகளின் தலைவர்களாக, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களாக, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாக, உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் இயக்குனர்களாகப் பல்வேறு துறைகளிலும் உயர் பதவிகளை வகித்து சாதனை புரிந்து வருகின்றனர்.

    கடந்த 2017ஆம் ஆண்டிலும் சாதனை படைத்த பெண்கள் பலர், ‘லட்சுமி எனும் பயணி’ என்ற தன் முதல் நூலுக்கே ‘ஸ்பாரோ’ விருதைப் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மா. நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்.  இந்திய விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) 104 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் செலுத்த எட்டு பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.  திருநங்கைகளின் உரிமைக்காகப் போராடி வரும் திருநங்கை அகாய் பத்மாஷலி இந்தியாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.  பேட்மிண்டன்  விளையாட்டு என்றாலே பி.வி.சிந்து என்கிற அளவுக்கு அவர் சாதனை படைத்து உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்,  உலக அழகியாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர்  ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தகைய சாதனைகளுக்குப் பல சோதனைகளும் போராட்டங்களும் மறைந்துள்ளன.

    உலக மகளிர் தினம்

    வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த பெண் சமுதாயம் வெளி உலகில் சுதந்திரமாக வலம் வருவதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றித் தினமே உலக மகளிர் தினமாகும். பெண்களின் பிரச்சனைகள் குறித்து, முதன்முதலில் கோரிக்கைச் சாசனம் ஒன்று 1866இல் உலகத் தொழிலாளர்கள் சங்கத்தில் முன்மொழியப்பட்டது,  1870ம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியன்று நியூயார்க் நகரில், பஞ்சாலைகளில் 16 மணி நேரம், உழைத்து வந்த ஆயிரக்கணக்கான பெண்கள், வீதியிலிறங்கி 8 மணிநேர வேலை கோரி, வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தினர்.  அந்த தினத்தைச் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக அனுசரிக்க 1910-ல் கோபன் ஹேகனில் நடைபெற்ற சோஷலிஸ்ட் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில், தலைசிறந்த போராளியான கிளாரா ஜெட்கின் தீர்மானத்தை முன்மொழிந்தார். 1911இல் இந்த தினம் முதன்முறையாக வியன்னாவில்  கொண்டாடப்பட்டது,  எட்டு மணி நேர வேலை என்ற பொருளாதாரக் கோரிக்கையையும் ஓட்டுரிமை என்ற அரசியல் கோரிக்கையையும் முன்வைத்து உருவான உழைக்கும் பெண்கள் தினம்தான், காலப்போக்கில் உருமாறி இன்று சர்வதேச மகளிர் தினமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ஆம், தேதி கொண்டாடப்படுகிறது.

    உலக அன்னையர் தினம்

    அக்காலத்தில் யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர்,  அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சிதறிப்போயின.  அப்படிப் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர  அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்திற்கும் அயராது பாடுபட்டவர் சமூக சேவக “ஜார்விஸ்”. வாழ்நாள் முழுக்க சமூக சேவகியாகவே வாழ்ந்த அவர் 1904ல் மறைந்தார்.

    அவருடைய மறைவுக்குப் பின் தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் அனா ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார்.  தன்னுடைய தாயார் ஜார்விஸ் நினைவாகத் தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்கள் கௌரவிக்கப் பட வேண்டும் என்று எண்ணினார்.  சமூக நலனில் அக்கறை கொண்ட அவர் ஏதாவது ஒரு நாளில் எல்லோரும் தங்களது தாயை, அவர் உயிரோடு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவர் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து கௌரவிக்க வேண்டும் என்று அனா ஜார்விஸ் விரும்பினார். தம் எண்ணத்தை பெனிசுல்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார்,  அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீகரித்து அறிவித்தது,  இவரின் விடாமுயற்சியின் காரணமாக 1914ம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமான அன்னையர் தின அறிவிப்பை வெளியிட்டார்,  அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அனா ஜார்விஸ் திருமணம் செய்து கொள்ளாமல் அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர்.

    உலக அளவில் தாய்மையைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை,  மாறாக, மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகின்றது.

    தொடரும் அவலம்

    உலகம் முழுவதும் பல சமூகச் சீர்திருத்தவாதிகள் பெண்களுக்காகப் போராடினர்.  இந்தியாவில் இராசாராம் மோகன்ராய், மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற பெருமக்கள் குரல் கொடுத்தனர்,  தமிழகத்தில் தந்தை பெரியார், திரு.வி.க. போன்ற தலைவர்களும், நீதிபதி வேதநாயகம் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், பெரியார் போன்ற சிந்தனையாளர்களும் பெண்களுக்காக வாதாடினர்.

    எனினும் பெண்கள் இன்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருவது வேதனைக்குரியது.  பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தாக்குதல்கள் பற்றியச் செய்தி இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்குப் பெண்கள் ஏமாற்றப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும், வேதனைக்கு உள்ளாக்கப்படுவதும், வதை செய்யப்படுவதும், சுரண்டப்படுவதும், கற்பழிக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளன.

    நமது தேசத்தின் வாழ்வியல் முறையில் குடும்ப அமைப்பு அடிப்படையானது.  குடும்பம் என்பது திருமணத்தை முதலாகக் கொண்டு ஏற்படுவது, திருமணம் ஆன்ம உறவின் அழகிய தொடக்கம்,  அந்த இனிய உறவில் பூத்துக் குலுங்கும் அன்பின் பூந்தோட்டம் இல்லறம்.

    இந்த இனிய பந்தத்தை பல ஆண்களுக்கு நேசிக்கத் தெரிவதில்லை,    சரியாகப் புரிந்து கொள்ளவும் முடிவதில்லை,  இதனால்  எண்ணற்ற எதிர்பார்ப்புகளோடும், இன்பக் கனவுகளோடும் இல்லறத்தில் அடியெடுத்து வைக்கும் பல பெண்களின்  எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி விடுகின்றன,  அவர்களின்  கனவுகள் கருகி குடும்ப வாழ்வு அர்த்தமற்றதாகி விடுகின்றது,   உண்மை அன்பு என்பது வெறும் உணர்ச்சியோ, இன்னொருவர் மீதான கவர்ச்சியோ அன்று,  ஒருவர் இன்னொருவர் மீது  காட்டும் ஆத்மார்த்தமான அக்கறை, அன்பு.

    அக்காலத்தில், குடும்பத்திற்காக சம்பாதிப்பது என்பது கணவனின் கடமையாக இருந்தது,  குடும்பத்தை நிர்வகிப்பது மனைவியின் முழு நேர வேலையாக இருந்தது.  ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது,  மனைவியும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் காலம் வந்து விட்டது, இது வரவேற்கத்தக்கது என்றாலும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கிறது,  வீட்டையும் பராமரித்து வேலை பார்க்கும் இடத்திலும் தன் பெயரை காப்பாற்றிக் கொள்ள பெண் படாத பாடுபட வேண்டி இருக்கிறது.

    உறவுகளுக்குள் திருமணம் நடக்கும்போது மாப்பிள்ளையைப் பற்றியும், மணப்பெண்ணைப் பற்றியும் இரு குடும்பங்களும் நன்கு அறிந்திருக்கும்,  எனவே, அவ்வப்போது ஏற்படும் விரிசல்கள், பிரச்சனைகள் உரிய முறையில் சரிசெய்யப்படும்,  ஆனால் இன்று உறவுகளுக்குள் திருமணம் என்பது அரிதாகி விட்டது,  பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்கள் குறைந்து விட்டன,  இதில் நன்மைகள் பல உண்டு என்றாலும் பேராபத்தும் பெருமளவில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை,  அதிலும் குறிப்பாக ஆணை விட பெண்ணும் அவளது குடும்பத்தினரும்தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்,  முள் மீது துணி விழுந்தாலும், துணி மீது முள் விழுந்தாலும் கிழியப் போவது துணிதானே!

    உறவுகளுக்கு வெளியே மாப்பிள்ளை பார்க்கும்போது ஏமாற்று வேலைகள் அதிகமாக இருக்கின்றன. திருமணத்தை முன்மொழியும் போது ‘உனக்காக எதையும் செய்வேன், உயிரையும் கொடுப்பேன்’ போன்ற ஆயிரம் உறுதிமொழிகளை அள்ளி வீசுகிறார்கள்,  புது உறவு என்பதால் மாப்பிள்ளை குடும்பத்தினரை முன்பின் அறியாத சூழலில் அவர்களின் வார்த்தைகளை நம்பி பெண் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதித்து விடுகிறார்கள்,  திருமணத்திற்கு பிறகு ‘கணவன்’ என்று ஆகி விட்டால் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு ‘அந்நியன்’-ஆக மாறிவிடுகிறார்கள்,  இன்பத்திலும் துன்பத்திலும் உன்னைக் கைவிட மாட்டேன் என்று ஊரறிய உறுதி கூறி தாலிக் கட்டியவன் மனைவி மீது மாறி மாறி குற்றப்பத்திரிகை வாசித்துக் கொண்டே இருந்தால் வாழ்வது எப்படி?  அக வாழ்க்கைக்கும் புற வாழ்க்கைக்கும் அர்த்தம் தெரியாமல் கணவன் மனைவிக்கிடையேயான அந்தரங்க உரையாடலைக் கூட அடுத்தவரிடன் கூறினால் இல்லறத்தின் மாண்பு என்னாவது?

    தன்னைப் போலவே மனைவியும் அலுவலகம் சென்று களைத்துப் போய் வீட்டுக்கு வரும் நிலையில் தான் வீட்டிற்கு  வரும் போது மனைவி இன்முகம் காட்டி வரவேற்க வேண்டும் என்றால் எப்படி?  வேலைக்குச் செல்லாமல் ஆண்மகனை அண்டிப் பிழைத்து வாழ்ந்த காலத்திற்கு வேண்டுமானால் இது பொருத்தமானதாக இருக்கலாம்,  ஆணுக்கு இணையாக, ஏன் சற்று மேலாகவும் இருக்கும் இந்தக் காலத்திலும் அதையே எதிர்பார்த்து பெண்களை கொடுமைக்கு உள்ளாக்குவது எந்த வகையில் நியாயம்?  குடும்ப பாரத்தைச் சுமப்பவள் பெண் என்றாலும் கரம் பிடித்தவன் துணை நின்றால்தான் சுமப்பதிலும் சுகம் இருக்கும்,  அதனால்தான் வாழ்க்கைத் துணை என்றார் வள்ளுவர்.

    ஆனால் அற்ப விஷயங்களைக் காரணம் காட்டி பெண்களை அடிமையாக நினைத்து ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுகின்றனர்.  கணவனின் உண்மையான தோற்றம் தெரியும்போது செய்வதறியாது தவிக்கும் பெண்கள் ஏராளம்,  திருமணத்திற்கு முன்பு இருந்த பூரிப்பு, மகிழ்ச்சி, வியப்பு எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு பெண்ணிடம் காணாமல் போய்விடுகிறது,   இன்றைக்கும் ஒரே ஒரு செல்போன் இணைப்பில் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் பல,  தன் உரிமைக்காக குரல் கொடுக்க பெண் முற்பட்டால் செல்போன் இணைப்பு துண்டித்து விட்டு ஒதுங்கிக் கொண்டால் அபலைப் பெண்ணால் என்ன செய்ய முடியும்?    சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்லப்படும் திருமண வாழ்க்கையை பலர் நரகத்தில் நடத்த வேண்டிய துர்பார்க்கிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    கூட்டுக் குடும்பங்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில், பெண்கள் பேசிப் பேசியாவது தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டார்கள்.  இப்போது அதற்கும் வாய்ப்பில்லை. காரணம் கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் தனிக்குடும்பங்களாகி இப்போது ஒவ்வொருவரும் தனித்தனி குடும்பமாகி விட்டனர். ஆலோசனை சொல்பவர்களும் ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’, ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்’ என்று பிரச்சனைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் தன் பங்குக்கு ஏதோ ஒன்றை சொல்லி விட்டு செல்வார்கள், பேசித் தீர்க்க தொலைபேசியை நாடலாமா என்றால் அது இன்னும் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்கி எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றிய கதையாகத்தான் இருக்கிறதே ஒழிய பிரச்சனைகளை தீர்க்க பயன்படுவதில்லை.

    உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில் பெண்களின் இன்றைய இழி நிலையை நினைக்கும்போது ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் வரும் கவிஞர் வைரமுத்துவின் ‘கண்ணின் மணியே, கண்ணின் மணியே போராட்டமா?’ என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

    வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்

    ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்

    ஏனென்று கேட்கத்தான் இப்போதும் ஆளில்லை

    சமநீதி சேர்க்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை

    உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை!!

    (கண்ணின் மணியே )

    ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்று பாடிய மகாகவி பாரதி இன்றிருந்தால் ‘என்று மடியும் இந்தப் பெண்ணடிமை?’ என்றுதான் பாடியிருப்பான்,

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…

    செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பதில்கள்

    தேவையைப் பூர்த்தி செய்யாமல் தேவையற்றவை மட்டுமே நமக்கு கிடைக்கிறது, அதனால் தான் புரட்சி, வன்முறை போன்றவை ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். இது சரிதானா?

    அருள்மொழிநாச்சியார், கணக்கர், மதுரை.

    தேவைகள் கிடைப்பதில்லை, தேவையற் றவை கிடைக்கின்றன, எனவே தான் புரட்சி, வன்முறை போன்றவை ஏற்படுகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது சரிதானா என்று ஆராய்வோம்.

    மனிதனுக்கு என்னென்ன தேவை என்பதைப் பார்ப்போம். உணவு, உடை, இருப்பிடம், உடல்நலம், சுகாதாரம், மருந்துகள், தூய காற்று, சிறந்த வேலை, நல்ல குடும்பம், நண்பர்கள், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை, மகிழ்ச்சி போன்றவை எல்லா மனிதர்களுக்கும் தேவைப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் இந்தியாவில் வாழும் நமக்கு கிடைக்கிறதா என்று கேட்டால், பலருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூறமுடியும்.

    வறுமை :

    நமது நாட்டில் 138 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இதில் 27 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளனர் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இவர்களது தினசரி வருமானம் ரூ. 75-ஐ விடவும் குறைவானது. ஆக, இந்த சொற்ப வருமானத்தை வைத்து அவர்களால் என்ன செய்ய முடியும்? இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் 5 ஆண்டுகள் முடியும் முன்னர் இறந்து போகிறார்கள். வறுமை நிலை அந்த அளவு கொடுமையாக இருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள்.

    சமீபத்திய ஒரு அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளில் நமது நாட்டில் உருவான வருவாயில் 70 சதம் ஒரு சதம் பணக்காரர்கள் கைகளுக்கே சென்றுள்ளது. அதாவது பணக்காரர்கள் பெரிய பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னும் பெரிய ஏழைகளாகவும் மாறி வருகிறார்கள். இந்தியாவில் தனிமனித வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் என்று கணக்கு காட்டும் நபர்கள் 76 லட்சம் பேர். அதாவது ஆயிரம் இந்தியர்களில் 6 பேர் வசதி வாய்ப்புடன் வாழ்கிறார்கள். இந்த ஆறு பேர்களில் இரண்டு பேர்தான் உண்மையிலேயே பணக்காரர்கள், 4 பேர் அரசு ஊழியர்கள். அரசு ஊழியர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. அதாவது ஆயிரத்தில் இரண்டு பேர் தேசத்தின் சொத்துக்களைக் குவித்து வைத்துள்ளனர்.

    நம்மைப் போன்றவறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் நிலைமை மிகவும் பாராட்டும் வகையிலும் இல்லை. படித்திருந்தாலும் வேலை இல்லை, வேலை இருந்தாலும் போதிய சம்பளம் இல்லை, விலைவாசியோ மிக அதிகம். பல குடும்பங்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல்தான் காலத்தை ஓட்டுகின்றனர். எனவே, நம்மில் பலருக்கும் தேவைகள் போதுமானதாகக் கிடைப்பதில்லை என்பது சரியெனத் தென்படுகிறது.

    தேவையற்றவை :

    இனி, நமக்கு தேவையற்றவை என்னென்ன கிடைக்கிறது என்பதையும் ஆராய்வோம். நம் நாட்டு மக்களுக்கு வெட்டிப்பேச்சு பேச வாய்ப்பு தாராளமாகக் கிடைக்கிறது, அதை கேட்கவும் ஆட்கள் கிடைக்கிறார்கள். நமது நாட்டில் இறைவழிபாடு மக்களுக்கு தடையின்றிக் கிடைக்கின்றன, அதற்கான இடங்களும் தெருவிற்கு தெரு இருக்கின்றன. சிலர் வீட்டின் மதில் சுவரில் கூட ஒரு வழிபாட்டு இடத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்து அனைத்து சேனல்களையும் எண்ணுங்கள். அதில் எத்தனை சேனல்கள் மதங்களைப் பற்றியது என்பதைப் பாருங்கள். இவை அனைத்தும் நமக்கு தேவைதானா என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். அறிவியல் போதிக்க ஒரு சேனலாவது உண்டா என்றும் சிந்தித்துப் பாருங்கள். அதோடு, நமக்கு தேவைக்கும் அதிகமான சினிமாக்கள் மற்றும் சீரியல்கள் கிடைக்கின்றன. அவற்றில் உள்ள நாட்டம் பலருக்கு வேறு எதிலும் இல்லை. இவைதான் மக்களின் பொழுதுபோக்கும் கூட. இதோடு சேர்த்து சினிமா பற்றிய செய்திகள், துணுக்குகள், சினிமா பாட்டு, அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி என்று தேவையற்றவை அதிகமாகவே கிடைக்கின்றன. இதற்குமேல் கிரிக்கெட் கிடைக்கிறது, அதுவும் தாராளமாக கிடைக்கிறது. இதில் பல இளைஞர்கள் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.

    அறிவியல் உண்மையில்லாத மருத்துவமுறைமலிந்து கிடக்கின்றன. எந்த மருத்துவ உண்மையும் தெரியாத, எந்த நவீன மருத்துவ அறிவை பல்கலைக்கழகங்களில் பயிலாத அல்லது அறிவியல் மருத்துவ பழக்கம் இல்லாதவர்கள் எல்லாம் மருத்துவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு மக்களுக்கு உடல்நலம் பற்றிய கருத்துக்கள் சொல்வதும், அதற்கான மருந்துகள் விற்பனை செய்வதும் தாராளமாக நடந்து வருகிறது. இந்த ஆபத்தான மருத்துவமுறைகளை உலகின் வேறு எந்த நாகரீக மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் நம் நாட்டு மக்கள் இந்த மகான்களை பின்பற்றுகிறார்கள். படிக்காதவர்கள் மட்டும் அல்ல, படித்து பட்டம் பெற்றவர்கள் கூட இப்படிப்பட்ட போலி அறிவியல் மருத்துவர் களிடம் சிக்கிக் கொண்டு, அவற்றை பாமரர்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

    இன்னொன்று மிகவும் ஆபத்தானது. புகையிலை, சிகரெட் மற்றும் மது, இவை தாராளமாகக் கிடைக்கின்றன. பலர் இதற்கு அடிமையாகிவிட்டனர்.

    இப்படி இன்றைய நாகரீக மனிதர்களுக்கு தேவையற்றபல விஷயங்கள் நமது மக்களுக்கு தாராளமாக கிடைப்பதுடன் அவற்றில் மக்கள் ஈடுபட்டு, மகிழ்ச்சியாக இருப்பது போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவுதான் வறுமை, கல்வியின்மை, சிந்தனையின்மை, வேலை திறமையின்மை, மனிதர்கள் மீது வெறுப்பு போன்றவை.

    புரட்சி, வன்முறை:

    இனி உங்களது கேள்வியின் இரண்டாவது பாகத்திற்கு வருவோம். இப்படியாக தேவையானவை கிடைக்காமல் போனதாலும், தேவையற்றவை நிறைய கிடைப்பதாலும்தான் புரட்சி மற்றும் வன்முறைஏற்படுகிறது என்றஉங்கள் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை. விரும்பத்தகாத சில புரட்சிகள் ஏற்பட்டன. ஆனால், விரும்பத்தக்கப் புரட்சிகள் பெரியதாக ஒன்றும் ஏற்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. பசுமை புரட்சி, கல்விப்புரட்சி, அறிவியல் புரட்சி, சிந்தனை புரட்சி, செயல்திறன் புரட்சி, மொழி வல்லமை புரட்சி போன்றவை ஏற்பட்டிருந்தால் நாம் அதைப் பாராட்டலாம்.

    நமக்கு நல்ல ஒரு அரசியல் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது, பாராளுமன்றமக்களாட்சி முறை. அது சிறந்த முறைதான், அதில் குறையில்லை. நாம் தானே ஆட்சியார்களை தேர்ந்தெடுக்கிறோம். அதுவும் அவர்கள் சரியில்லை என்றால் நாமே அவர்களை மாற்றிவிடலாம். இதை விட சிறந்த முறைஉலகில் இல்லை. எனவே அரசியல் புரட்சி நம் நாட்டுக்குத் தேவையில்லை என்பது நம் பணிவான கருத்து. பொருளாதாரப்புரட்சி மிகவும் அவசியம், அதைச் செய்ய நாம் முற்பட வேண்டும். அதற்கு நமது செயல்திறனைப் பெருக்க வேண்டும்.

    உண்மைக் காரணம் :

    உங்களது கேள்வியின் ஒரு முக்கிய பகுதி ‘வன்முறை’. இந்த வன்முறைகள் இன்று ஜாதியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும், மாநிலங்களின் பெயரிலும், பாலினத்தின் பெயரிலும் நிகழ்கின்றன. இவை மாறவேண்டும், அப்படியே மறைய வேண்டும். வன்முறைகளுக்கு மூலக்காரணமான காரியங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஒரு காரணமாக இருக்கக் கூடும். எனவே ஒரு நாட்டு மக்களுக்கு அவசியம் தேவை என்பவற்றைமீண்டும் ஒருமுறைபட்டியல் இடுவதில் தவறில்லை.

    (அ) உணவு, நீர், உடை, உறைவிடம், தூயகாற்று.

    (ஆ) பொருத்தமான இணை.

    (இ)  நல்ல தரமான கல்வி.

    (ஈ) தாய்மொழி புலமை, அதோடு ஆங்கிலப் புலமை.

    (உ) சிறந்த உயர்தர அறிவியல் மருத்துவம்.

    (ஊ) உலக அறிவு, சிந்தனை திறன்.

    (எ) நல்ல செயல்திறன்.

    (ஏ) படிப்புக்கேற்றபிடித்த ஒரு வேலை.

    (ஐ) போதுமான நிரந்தர வருமானம்.

    (ஒ) நல்ல குடும்பம், நல்ல நண்பர்கள்.

    (ஓ) உடல்நலம், மனநலம், சமூக நலம்.

    (ஔ) மனமகிழ்ச்சி.

    இவை நம் அனைவருக்கும் போதுமான அளவு கிடைக்கவில்லை. ஆனால், நமது சந்ததியினருக்கு கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் சமுதாயத்தில் தேவையற்றபுரட்சி ஏற்படவும், வன்முறைஏற்படவும் அவசியம் இருக்காது. இன்றைய சூழ்நிலையில், தேவையானது கிடைக்காமல் போனதால் வருத்தமும், கோபமும், போராட்டங்களும், வெறுப்பும் அவநம்பிக்கையுமம் மக்களிடம் இருப்பதைக் காண முடிகிறது. உங்களது கணிப்பு சரியாகத்தான் இருக்கிறது.

    இந்த இதழை மேலும்

    மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!

    திருமதி. சித்ரா பார்த்தசாரதி

    ஐசால்வ் & க்யாட் க்ரூப், இயக்குனர் & முதன்மை நிதி மேலாளர்

    நேர்காணல் : செந்தில் நடேசன்

    விக்ரன் ஜெயராமன்

    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

    எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

    இளைப்பில்லை காணென்று கும்மியமடி

    என்பார் பாரதி. கல்வி ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி நிகர் சமம். ஆண்களைப் போலவே பெண்களும் கல்வி கற்று இந்த உலகில் சாதிக்க முடியும் என்றவாக்கிற்கிணங்க வாழ்ந்து வருபவர்.

    ஒரு பெண் இந்த சமுதாயத்தில் எவ்வாறு எல்லாம் சாதிக்கலாம், சாதிக்க என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறது என்பதை முறையாகப் பின்பற்றி நவீன உலகில் தனக்கென்று ஒரு இடத்தைப்பிடித்து தடம் பதித்து வருபவர்.

    சாப்ட்வேர் துறைமற்றும் இணையதள தொழிற்நுட்பத்துறையில் பல சாதனைகள் செய்து இன்று உலகம் முழுவதும் வலம் வரும் வரலாற்றுப் பெண்மணி.

    நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் என்றவாக்கிற்கிணங்க பல தொழிற்நுட்பத் துறைகள் தொடங்கி அதனால் சமுதாயத்திற்கு பல நன்மைகள் செய்து வரும் திருமதி சித்ரா அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி…

    கே. உங்களின் பிறப்பும் பின்புலமும் பற்றிச்  சொல்லுங்கள்?

    நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கோயமுத்தூரில். ஒரு பாரம்பரியமான குடும்பத்தில்  பிறந்தேன். என் பெற்றோர்கள் பெயர் திரு. ராஜகோபால், திருமதி. சுந்தரி அவர்கள். எனக்கு ஒரு அண்ணன் திரு. ராமசாமி வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அண்ணி ராதிகா அவர்கள். என்னுடைய கணவர் திரு. ரா. பார்த்தசாரதி. CADD Centre, isolve Group, ikix Group Chairman & CEO.  எங்களுக்கு இரட்டைக் குழந்தைகள். பிரித்விக், ரித்விக். இவர்கள் ஐரோப்பாவில் எம். எஸ் படித்துள்ளனர்.

    என்னுடைய தந்தை கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். குறிப்பாகப் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் கோவை மாவட்டத்தில் நல்ல புகழ் பெற்றஅவிலா கான்வென்ட் பள்ளியில் படித்தேன்.

    மிகவும் ஒழுக்கமும் உயர்ந்த பண்பும் போதிக்கும் சிறப்பான பள்ளி. கல்லூரிப் படிப்பை  திரு. அவிநாசிலிங்கம் கல்லூரியிலும் எம். பி. ஏ பட்ட மேற்படிப்பை பாரதியார் பல்கலைகழகத்தில் பயின்றேன்.

    கே. உங்கள் வாழ்க்கையில் யார் முன்னோடியாக இருந்தார்கள்?

    பள்ளி, கல்லூரி மற்றும் மேற்படிப்பு படிக்கும் போது எல்லா ஆசிரியர்கள், பேராசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை தான் பின்பற்றினேன். ஆனால் குறிப்பாக பள்ளி பருவத்தில் எனது மாமாவின் மனைவி (அத்தை) திருமதி. இராஜலஷ்மி வாசன் எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் முன்மாதிரி ஆக இருந்தார்.

    அதன் பின்பு அவிநாசிலிங்கம் கல்லூரியில் படிக்கும் போது டாக்டர். இராஜம்மாள். பி. தேவதாஸ் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தான் என் பல லட்சியங்களுக்கு ரோல் மாடல் என்று சொல்லலாம். கல்லூரியில் நான் படித்த வணிகவியல் துறையின் அனைத்துப் பேராசிரியர்களும் என்னுடைய இலட்சியங்கள் அடைவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு இங்கு படிக்கும் போது சிறந்த மாணவிக்கான விருதை (தங்க பதக்கம்) பெற்றேன்.

    பாரதியார் பல்கலை கழகத்தில் மேற்படிப்பின் போதும் அனைத்து பேராசிரியர்களும் நாங்கள் எதிர்காலத்தில் நல்ல மேலாளர்களாக வருவதற்கு நல்ல பயிற்சி அளித்தனர். 2015 ஆம் ஆண்டு “Distinguished Alumini Achiever Award” என்றவிருதையும் பெற்றேன். இப்போது, பெப்ஸி நிறுவனத்தின் இந்திரா நூயி எனக்கு பெரிய முன் மாதிரியாக இருக்கிறார்.

    கே. நீங்கள் படிக்கும் போதே எதிர்காலத்தில் ஒரு தொழிற் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நினைத்தீர்களா?

    எனக்கு ஆர்வம் எல்லாமே IAS படிக்க வேண்டும் என்பது தான். ஆனால் அந்த காலத்தில் பெண்கள் அத்துறைக்கு போவது சிறிது கடினம் தான் என்று என் பெற்றோர்க்கு இருந்தது. அதனால் அடுத்து என்ன என்று நினைத்து கொண்டிருந்த போது, கல்லூரியில் விருது வழங்க வந்த சிறப்பு விருந்தினர் எம்.பி.ஏ படிக்கலாமே என்று அறிவறுத்தினார். அதன் பின்பு தான் அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்த போது அத்துறையிலும் நான் சிறந்து விளங்கலாம் என்று எம்.பி.ஏ படித்தேன். ஆனால் படிக்கும் போது எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை.

    கே. நீங்கள் படிக்கின்றகாலத்திலும் தற்போதும் பெண்கல்வி எவ்வாறு மாறுதல்கள் அடைந்துள்ளது?

    நிச்சயமாக, நிறைய மாறுதல்கள் அடைந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் படிக்கின்ற காலத்தில் பெண்களை அதிகமாகப் படிக்க வைக்க மாட்டார்கள். ஆனால், தற்போது நிலை மாறிவிட்டது. நான் படிக்கின்றகாலத்தில் எனது வகுப்பில் மொத்தம் 35 பேர். அதில் என்னையும் சேர்த்து 10 பெண்கள் மட்டுமே படித்தோம். அப்போது ஆண், பெண் இருபாலரும் இணைந்து படிக்கும் கல்லூரிகளும், பள்ளிகளும் அதிகளவில் இல்லை. ஆனால் இப்போது எல்லாமே இயல்பாகிவிட்டது.

    ஆண்களைப் போலவே பெண்களும் எல்லாத்துறையிலும் படித்து சாதனை புரிந்து வருகிறார்கள். பெற்றோர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு கூட அனுப்பி வைக்கிறார்கள். இதற்கு பெற்றோர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இது தற்போது பெண் கல்வியின் வளர்ச்சிதானே.

    கே. மேலாண்மை படிப்பு மிகவும் கடினமாக இருந்ததா? எப்படி அதை மேற்கொண்டீர்கள்?

    ஆம், முதலில் கடினமாக தான் இருந்தது. மேலாண்மை படிப்பில் எல்லா பாடங்களும் இருக்கும் (Accounting, Engineering, Economics, Computer Science etc). அப்படிப்பட்ட துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்பது சற்று சவாலாக இருந்தது. அனைத்து பேராசிரியர்களும் புரியாத பாடங்களைத் திரும்பத் திரும்ப புரியும் வரை எங்களுக்குச் சொல்லி கொடுத்தார்கள். பல நேரங்களில் பல்வேறு துறைகளில் இருந்து வந்த நண்பர்களுடன் குழுப் படிப்பை செய்து புரிந்து கொள்வோம். என் வாழ்க்கையில் எம்.பி.ஏ படித்ததை ஒரு பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.

    கே. படித்த உடனே தொழில் தொடங்கினீர்களா? உங்களின் முதல் வேலை அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

    படித்தவுடனேயே தொழில் தொடங்கவில்லை. பிரிக்கால் நிறுவனத்தில் (Pricol) என்னுடைய மேலாண்மை ஆய்வை செய்தேன். செய்யும் பொழுது அங்கேயே வேலை கிட்டியது.

    அப்போது சில நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூக்கு வருவார்கள். நான் படித்து கொண்டிருந்த போது சிட்டி பேங்க்கிலிருந்து வந்தார்கள். நான் தான் பிரிக்கால் பணி கிடைத்து விட்டதே, இனி எதற்கு சிட்டி பேங்க் நடத்தும் நேர்முகத் தேர்விற்குப் போக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய பேராசிரியர்கள் என்னை அழைத்து உனக்கு கிடைக்கிறதோ இல்லையோ அதுவும் ஒரு அனுபவம். நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

    அவர்களின் ஆலோசனை படி நானும் சென்றேன். அங்கு குழு கலந்துரையாடல், நேர்முகம் போன்றவை நடைப் பெற்றது. இறுதியாக இரண்டு பேரை மட்டும் தேர்ந்தெடுத்தார்கள். அதில் நானும் ஒருவர். ஆனால் வேலை மும்பையில், இதை என்  பெற்றோர்கள் எப்படி நினைப்பார்கள் என்று என் மனதில் ஒரு தயக்கம். ஆனால் என்னுடைய தந்தை மிகவும் ஊக்குவித்தார். மும்பை மட்டும் செல்ல அனுமதியளிக்கவில்லை. சென்னையில் சிட்டி பேங்க் அலுவலகம் இருந்தது. அங்கே சென்று பணியில் சேர்ந்தேன். நான்கு ஆண்டுகள் சென்னையி லேயே பணியாற்றினேன்.

    பிறகு பேங்க் ஆப் அமெரிக்காவில் பணியில் சேர்ந்தேன். அதன் பின் அஆச அம்ழ்ர் பேங்கில் சேர்ந்தேன். மொத்தம் 12 வருடங்கள் வங்கிகளில் பணி புரிந்தேன்.

    கே. உங்களின் தனித்தன்மை பற்றிச் சொல்லுங்கள்?

    நான் எதை செய்தாலும் ஒரு முறைக்கு பல முறைநன்கு யோசித்து அதன் பிறகு தான் செயல்பட முனைவேன்.

    திட்டமிட்டு செய்யும் எந்த பணியும் சோர்வும், தோல்வியும் அடையாது என்று நம்புவேன். அந்த வகையில் திட்டுமிடுதலை நான் முறையாக கடைப்பிடிப்பேன்.

    Measure twice cut once, என்பது எனக்குப் பிடித்த பழமொழி. எங்கு சென்றாலும் என்னை நன்கு தயார் படுத்திக் கொண்டு செல்வேன். மீட்டிங், கருத்தரங்கம் போன்றவற்றிர்க்கு போகும் பொழுது என்னை நானே தயார் படுத்திக் கொள்வேன். எனக்குள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வேன்.

    எந்த வினாவிற்கும் விடை தெரியாது என்று முடிந்தவரை சொல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

    கே. நீங்கள் எப்போது முதலில் தொழில் செய்ய ஆரம்பித்தீர்கள்? உங்கள் நிறுவனத்தில் நீங்கள் செய்யும் பணிகள் குறித்து?

    மேலே, நான் கூறியது போல 12 வருடங்கள் வங்கிகளில் பணி புரிந்தேன். எனது குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் போது அவர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதனால் என்னுடைய வேலையை ராஜினாமா செய்தேன்.

    எனது கணவர் CADD Centre India Private Limited என்ற மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தி வந்தார், தற்போதும் நடத்தி வருகிறார். இதில் தொழில் நுட்பக்கருவிகள் விற்பனை, மென்பொருள் விற்பனை, க்யாட் பயிற்சி போன்றவை அடங்கும்.

    அப்போது வங்கிகள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள், தங்களுடைய சில சேவைகளுக்கு உதவ அவரிடம் அணுகினர். பெண்கள் எப்போதும் அவருடைய சொந்த காலில் நிற்கவேண்டும் என்றமுற்போக்கு சிந்தனை உடையவர் என் கணவர். அப்போது நான் என் வேலையை ராஜினாமா செய்தவுடன், உனக்குத் தெரிந்த தொழிலான, வங்கிகள் தொடர்பான சேவைகள் கொடுக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நாமே அதற்கு ஒரு நிறுவனம் ஆரம்பித்து நீ அதை வழி நடத்தலாமே என்று கூறி ஐசால்வ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தோம். இப்படித்தான் நான் ஒரு Entrepreneur ஆனேன். முதலில் பகுதி நேரம் வேலை செய்தேன். பிறகு குழந்தைகள் வளர்ந்தவுடன் முழு நேர பணியாளாராக என்னை இணைத்து கொண்டேன்.

    நான் இந்நிறுவனத்தின் இயக்குனராகவும், முதன்மை நிதி மேலாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். CADD Centre மற்றும் ikix 3D  பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராகவும், முதன்மை நிதி மேலாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    கே. பெரிய நிறுவனத்தை வழி நடத்துவதில் உள்ள சவால்கள் என்ன?

    என்னைப் பொறுத்த வரை சவால்கள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் நல்ல பணியாளர்களுடன் சவால்களை மேற்கொள்ள முடியும்.  எல்லாமே சாத்தியம் தான்.

    உலகத்தின் மிப்பெரிய இஅஈஈ பயிற்சி தரும் நிறுவனம் எங்களின் CADD Centre தான். 750 கிளைகளும், 22 நாடுகளிலும் இருக்கிறது. அதற்கு காரணம் என்னுடைய கணவர் மற்றும் அவரின் குழுவினரின் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் தான்.

    இதைத் தவிர ஐசால்வ் மற்றும் உலகத்தின் மிகப்பெரிய 3D பிரிண்டிங் நிறுவனமான ikix 3D   பிரிண்ட்ஸ் என்றநிறுவனங்களும் நடத்துகிறோம்.

    ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பு அங்கு பணியாற்றும் பணியாளர்கள் தான்.  அவர்களைச் சரியாக வழிநடத்தினாலே போதும், சாதித்து விடலாம்.

    கண்டிப்போடு எதையும் சொல்லுதல் கூடாது. அவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். என்பது என்னுடைய கணவருடைய அடிப்படைத் தத்துவம்.

    எனக்கும் சரி, எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கும் சரி என்னுடைய கணவர் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். இதனால் எங்களால் எல்லாப் பணியும் செம்மையாகச் செய்து முடிக்க இயலும்.

    அதே போல் ஒரு வேலையை தனியாகச் செய்வதை விட குழுவாகச் செய்தால் அந்தப் பணி மேலும் சிறப்பாக அமையும்.

    அந்த வகையில் எங்கள் நிறுவனத்தில் வேலை பணியாளர்கள் அனைவரும் மிகுந்த அக்கரையும், கவனத்துடனும் பணியைச் செய்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

    கே. இந்த தொழிற்நுட்ப துறையிலுள்ள சிக்கல்கள், அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

    எல்லாத் துறையிலும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதை சிக்கலாகப் பார்க்காமல், புதிய முறையில் வேலையைக் கற்றுக் கொள்வதாகப் பார்க்க வேண்டும். எல்லாம் சரியாகப் போகும் பொழுது எதுவும் தோன்றாது. ஆனால் சில சவால்களைச் சந்திக்கும் பொழுது தான் நமக்கு புது புது எண்ணங்கள் மனதில் தோன்றும். நான் ஆரம்பத்தில் சொன்னதைப் போல எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியே குழு இருக்கிறது. எது நடந்தாலும் அவற்றைமுறையாகக் ஆராய்ச்சி செய்து அவற்றிக்குத் தீர்வு காணுவார்கள்.

    வந்தப் பின் எதிர்கொள்வதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்பது தான் எங்கள் நிறுவனத்தின் அடிப்படைத் தத்துவம்.

    எங்களுடைய நிறுவனம் 24 மணி நேரமும், 365 நாட்களும் இயங்கிக் கொண்டிருக்கும். வெளிநாடுகளுக்கு நாங்கள் செய்திதாளை வடிவமைத்து கொடுக்கிறோம். எங்கள் நிறுவனத்தின் கிளைகள் சென்னையிலும், கோவையிலும் உள்ளன. இங்கிருந்து தான் கிட்டதட்ட 500 பதிப்பகங்களுக்கு 22 மொழிகளில் வடிவமைத்துக் கொடுக்கிறோம். இதைத் தவிர வங்கிகள் மற்றும் அலைபேசி நிறுவனங்களுக்கு சேவைகள் செய்கிறோம். நாங்கள் நிறுவனத்தில் நேர மேலாண்மை என்பது சரியாகக் கடைப்பிடித்து வருகிறோம்.

    வாடிக்கையாளர்களின் தேவையை உடனுக்குடன் செய்து கொடுப்போம், ஏனெற்றால் செய்திகள் எப்போது வேண்டு மென்றாலும் வரும் என்பதால் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.

    கே. உங்களின் எதிர்காலத்திட்டம்?

    தற்போது தொழிற்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே தான் செல்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய வளர்ச்சி வருகிறது. அதைச் சரியாகக் கையாண்டு எங்கள் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து தொழிற்நுட்ப வசதிகளை பெருக்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகமான சேவைகள் கொடுக்க வேண்டும்.

    செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் துறைகளில் சேவைகள் செய்ய உள்ளோம். தொழிற்நுட்ப முறையில் நல்ல உறவு முறைகளை ஏற்படுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

    மருத்துவ துறைக்கு தொழிற்நுட்பத்தைத் தொடங்கியுள்ளோம். அதன் தேவைகளை சேவைகளாகக் கொடுக்கின்றோம். பெரிதளவில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.

    கே. தற்போது அரசின் சில அதிரடித் திட்டத்தால் உங்கள் நிறுவனம் பெறும் ஏற்றஇறக்கங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

    இந்தியா வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று. நாடு வளர வேண்டும் என்றால் சில அதிரடித்திட்டங்கள் எடுத்து தான் ஆக வேண்டும்.

    ஒரு சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் ஏற்படும். இது இயல்பு தான். ஆனால் இந்த மாற்றத்தின் காரணமாக பல புதிய வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.

    பணம் இல்லா பரிவர்த்தனை, ரூபாய் நோட்டு மாற்றம் போன்றவை சில வளர்ச்சியின் படி நிலைகள் தான்.

    ஆரம்பத்தில் பண பரிவர்த்தனையில் கால தாமதம் ஏற்பட்டது. இப்போது உடனுக்குடன் கிடைத்துவிடுகிறது.

    வெளிநாடுகளில் நிறைய இடங்களில் பணம் இல்லாத பரிவர்த்தனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்று நம் நாட்டில்  நடந்து வருகிறது.

    சென்னையில் ஒரு ஆட்டோவில் அனைத்து தொழிற்நுட்ப வசதிகள், செய்திதாள்கள், புத்தகங்கள் போன்றவை ஓட்டுனர் வைத்திருக்கிறார், ஆட்டோவில் பயணம் செய்யும் பொழுது அனைத்தையும் நாம் இலசவமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சமீபத்தில் செய்தித்தாளில் படித்த பொழுது நிச்சயம் நான் மகிழந்தேன். இது தான் வளர்ச்சியின் அழகு.   .

    கே. பெண்கல்வியின் மூலம் சமுதாயத்தின் வளர்ச்சி எப்படியிருக்க வேண்டும்?

    கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இதில் ஆண், பெண் பாகுபாடில்லை.

    ஆரம்பத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை இருந்தது, ஆனால் தற்போது எல்லாத் துறையிலும் பெண்களின் வளர்ச்சி இருக்கிறது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் வேலை செய்கிறார்கள்.

    ஒரு பெண், கல்வி கற்றால் அப்பெண்ணும் முன்னேறி, அம்முன்னேற்றத்தால் அந்த குடும்பம், அந்த சமுதாயமே வளர்ச்சி பெறும் என்பதில் எவ்வித மாற்றும் இல்லை.

    பெண் கல்வி என்பது நாட்டிற்கு மிகவும் தேவை.

    கே. இன்றைய சூழலில் தொழிற்நுட்பத்தின் சேவை எந்தளவிற்கு பயன்படுகிறது?

    இன்றைய வியபார உலகில்  அனைத்து துறைகளிலும் தொழிற்நுட்பத்தின் பயன் அதிகளவில் தேவைப்படுகிறது.

    புதுமைகள் நிகழ நிகழ தான், வளர்ச்சியும், மாற்றங்களும் அதிகளவில் தோன்றும். இந்த மாற்றம் தான், தனி மனித வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கும்.

    தற்போது நாம் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது சில தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியை நாம் பயன்படுத்தி தான் ஆக வேண்டும்.

    கணினி மயமான உலகில் அனைத்தும் தொழிற்நுட்பத்தின் கீழ் இயங்கி வருகிறது. அப்படியிருக்கும் போது, நாடு வளர்ச்சியை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது.

    கே. புதியதாய் தொழில் தொடங்க வருபவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

    நான் இளம் தொழில் முனைவோர்களிடம் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். இங்கு சாதிக்க பல வழிகள் இருக்கிறது. அதில் நீங்கள் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதில் தான் உங்களின் வளர்ச்சியே இருக்கிறது.

    புதியதாய் தொடங்க வருபவர்களுக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால் நம்மைத் தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

    பணம் வாங்குவது, பெறுவதில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

    ஒரு வேலையை நம்மிடம் ஒப்படைத்து விட்டால், அதை வாடிக்கையாளர்களுக்கு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    ஆரம்பத்திலேயே அகல கால் வைக்க வேண்டாம். தேவையானதை மட்டும் செய்தல் வேண்டும்.

    வேலை செய்யும் பணியாளர்களைச் சரியாக மதிக்க வேண்டும். அவர்களுக்கு போதுமான சுதந்திரம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    மனித இனம் தோன்றியதிலிருந்து இன்று வரை ஆணும் பெண்ணும் சமுதாயத்தின் இருகண்களாகாவே இருந்து வருகிறார்கள்.

    இங்கு ஆணும் பெண்ணும் சமம் என்று சட்டமிருந்தாலும் இன்றளவிலும் அதை ஏனோ நடைமுறை படுத்தவே முடியவில்லை. காரணம் பெண்ணிற்கு சுதந்திரம் வேண்டும் என்று ஒரு பெண் நினைப்பதை விட ஒரு ஆண் நினைத்தாலே நிச்சயம் பெண் விடுதலை கிடைத்துவிடும்.

    ஆணாதிக்கச் சமுதாயம் ஒரு பெண்ணை எவ்வாறு சித்தரிக்கிறது என்றால் திருமணம் ஆகுவதற்கு முன் தந்தையின் அரவணைப்பிலும், திருமணம் ஆன பின்னர் கணவனின் அரவணைப்பிலும், குழந்தைப் பெற்ற பின்னர் தன் மகனின் அரவணைப்பிலும் இருக்க வேண்டும், இது தான் பெண்ணிய கட்டமைப்பு என்று சிலர் கூறுகிறார்கள்.

    இந்நிலை மாற வேண்டும் என்று தான் கவிஞர்களும், எழுத்தாளர்களும், பெண் விடுதலையாளர்களும் எழுதியும் போராடியும் வருகிறார்கள், ஆனாலும் இன்னும் மாற்றம் வராமல் எத்தனையோ பெண்கள் வீட்டின் வாசலைக்கூட தாண்ட முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு  பெண் இருக்கிறார் என்று பெருமையாகச் சொல்வதை விட உன்னுடைய வெற்றிக்குப் பின்னால் நான் இருக்கிறேன் என்று ஒரு பெண்ணை ஊக்கப்படுத்தினாலே போதும், அவர்கள் வாழ்வில் உயர்ந்து விடுவார்கள், அவர்களின் நிச்சயம் குடும்பத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றே சொல்லலாம்.

    தற்போது எல்லாத் துறையிலும் பெண்கள் ஆணுக்கு இணையாக முன்னேறிக் கொண்டு தான் வருகிறார்கள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற நிலை மாறி இன்று பெண்கள் வேலைக்குச் செல்வதால் தான் எத்தனையோ வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது என்பதை பெருமையாகச்  சொல்லலாம்.

    பெண்ணினத்தைப் போற்றுவோம்… பெருமை கொள்வோம்…

    அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.