கோபம் என்பது மனிதர்களுக்கிடையே எழும் கடுமையான உணர்ச்சியாகும். உள்ளத்திலிருந்து பொங்கி வரும் ஒரு உணர்வு. ஒரு மனிதன் தன்னை அச்சுறுத்தும் வேறு ஒரு வெளி சக்தியை எதிர்க்க எடுக்கும் முடிவே கோபம். கோபத்திற்கு சினம், வெகுளி, குரோதம், சீற்றம் என்று பல பெயர்கள் உண்டு. தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுத்து தற்காலத்திலும் துன்பம் உண்டாக்கி, எதிர்காலத்திலும், துன்பத்தை நீடிக்கச் செய்யும் ஒரு உணர்ச்சி வயப்பட்ட பகை உணர்வு கோபமாகும். மனிதன் தெரிந்தே செய்கிற ஆனால், திருத்திக் கொள்ள முன்வராத தவறாகவே எல்லோரிடமும் உள்ளது இந்த கோப உணர்வு. மனிதனின் வாயிலிருந்து கோபத்தில் வார்த்தைகள் அறிவை விட வேகமாக வந்து விழுகிறது.
நாம் கோபப்படுவது ஏன்?
நாம் அவமதிக்கப்பட்டால். பொதுவாக நாம் விரும்புவது நடைபெறாமல் போனால், நம் பிள்ளைகள் படிக்காமல் டி.வி பார்த்துக்கொண்டு இருந்தால் நமக்கு கோபத்தை ஏற்படுத்தும். நாம் சார்ந்த மதத்தை யாராவது தவறாகப் பேசினால் கோபம் வரும். நம் வீட்டிற்குள் காலணியை கழட்டாமல் உள்ளே வருபவர்கள் மீது, நம்மிடம் ஆவேசமாகப் பேசுபவர்கள் மீது, நம் முன்னிலையில் கால் மீது கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பவர்கள் மீது, மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதை நினைத்து எரிச்சல் வரும்.
யார் மீது அதிகம் அன்பும் நம்பிக்கையும் கொள்கிறோமே அவர்களிடம்தான் உண்மையில்; நாம் அடிக்கடி கோபம் கொள்கிறோம். நம்மால் அதிகம் நேசிக்கப்படுகிறவர்களிடம்தான் நாம் அதிகம் கோபம் கொள்கிறோம். கோபம் இருக்குமிடத்தில் காமமும் இருக்கும். காமமும், கோபமும் இரட்டைக் குழந்தைகள் என்கின்றனர் அறிஞர்கள்.
நமது காரியங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால், நமது நன்மைக்கு இடையூறு ஏற்பட்டால் நமக்கு கோபம் கொந்தளிக்கிறது. தற்பெருமை, ஆடம்பரம், வறட்டுக் கௌரவம் ஆகியவற்றாலும் கோபம் உருவாகிறது. தன்னை கேவலமாகக் கருதுபவர்கள், தன்னை பிறருக்கு மத்தியில் கேவலப்படுத்துபவர்கள், நமது செல்வாக்கை நீக்குபவர்கள், நமது பெருமையை குலைத்து, நமக்கு ஏற்படும் இன்னல்களை கண்டு மகிழ்பவர்கள், நட்பை விரும்பி நாம் போனாலும் நம்மை கண்டுகொள்ளாதவர்கள், நம்மை அவதூறு பேசுபவர்கள், கேலி கிண்டல் செய்பவர்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நம்மை துன்புறுத்துபவர்கள், நமக்கு சேர வேண்டிய உரிமைகளை நம் மீது உள்ள வெறுப்பினால் ரத்து செய்பவர்கள் மீது நமக்கு கோபம் நிச்சயம் வரும்.
நமக்கு பிடிக்காத வகையில் எவரேனும் நடந்து கொண்டால் நாம் மகிழ்ச்சியை இழக்கிறோம். நாம் வேண்டுவது நடக்காவிட்டாலும் நமக்கு வேண்டாதது எதுவும் நடந்தாலும் நமது மனம் இறுக்கம் அடைகிறது. தவறான மனிதர்கள் தங்கள் தவறை ஓத்துக்கொள்ளவோ உணரவோ மறுப்பவர்கள்தான் அடிக்கடி கோபப்படுவார்கள்.
கோபத்தினால் ஏற்படும் விளைவுகள்:
கோபம் நம் உடலை, நம் நடத்தையை, நம் அறிவை பாதிக்கக்கூடியது. எப்போழுதுமே கோபமாக இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை போன்ற வியாதிகள் வர வாய்ப்பு அதிகமாகிறது. கோபப்படும் போது நம் அழகிய முகம் விகாரமாகிறது. ரத்தம் கொதிக்கிறது. கண்கள் சிவக்கிறது. நாக்கு குளறுகிறது. முக அழகு கெடுகிறது. வெறி கொண்ட நாய் போன்ற வெறுப்பான தோற்றம் நமக்கு தேவையா? மனம் கொந்தளிக்கிறது. நரம்புகள் பலவீனம் அடைகிறது. நோய்கள் உண்டாகின்றன. உயிர் ஆற்றல் அதிகம் செலவாகிறது. ஹைபர் டென்ஷன், ரத்த கொதிப்பிற்கு காரணமே கோபம்தான். கோபத்தின் வெளிபாடுகளாக உரத்த குரலில் பேசுவது, பற்களை நற நறவென கடிப்பது, முறைப்பது என தாறுமாறாக நடந்து கொள்கிறோம்.
கோபத்தில் இருந்து அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடு சொற்கள், தாக்குதல் ஆகிய எட்டு தீய குணங்கள் பிறக்கின்றன. கோபத்தில்தான் கொலை செய்கிறார்கள். கடுமையான மொழிகளில் எடுத்தெறிந்து பேசுகிறார்கள். சொல்லத் தகாததை சொல்கிறார்கள். செய்யத் தகாத செயலை செய்கிறார்கள். கோபத்தினால் ஒரு போதும் ஆக்கம் இல்லை. இழப்புதான். கோபம் நெருங்கிய தோழமையை பிரிக்கும். கோபத்தில் செய்த செயல்களால் வாழ்க்கையே அழிந்து சிறையில் உள்ளவர்கள் ஏராளம். கோபத்தில் துவங்குவது அவமானத்தில் முடிகிறது. நம்முடைய சினமும், சீற்றமும் எதிராளியை அச்சமூட்டுகிறது. கோபம் வெளிப்படுத்த இயலாத இடத்தில் வஞ்சமாக மாறுகிறது. கோபமே பாவங்களுக்கு எல்லாம் தாய். நல்ல உறவை அறுக்கிறது. துயரைக் கொடுக்கிறது. எதையும் கூடி வர விடாது.
பிறரின் வெறுப்பை சம்பாதிக்கிறோம், உடல் நலம், நட்பு நலம், சமுதாய நலம் பாதிக்கப் படுகிறது. பிறர் உள்ளத்தை புண்படுத்துகிறது. தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான். முகத்தில் சிரிப்பையும், மனதில் மகிழ்ச்சியையும் கொன்று விடுகிறது. கோபம் கொண்டவர்கள் அழிவது உறுதி. அவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களைச் சேர்ந்தவர்களையும் அழித்து விடும். முட்டாள்தனத்தில் ஆரம்பித்து வருத்தத்தில் முடிகிறது. கோபம் நல்வாழ்வை சீரழிக்கும் நஞ்சாகும். மனிதனை மிருகமாக்குகிறது. அன்பு, அகிம்சையை தகர்க்கும் வெடிகுண்டு. கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு வெடிக்கும் எரிமலை. காட்டாற்று வௌ;ளம். நமது கோபம் பிறர் முகத்தை சுளிக்க வைக்கிறது. சந்தோஷங்களை துண்டிக்கிறது. கோபத்துடன் செய்யும் செயல்கள் யாருக்கும் நன்மையை தராது. கோபத்தில்; புத்தி மழுங்குகிறது. வலியவரிடம் கோபத்தைக் காட்டினால் கெடுதலாக முடியும். மேலதிகாரியிடம் கோபத்தைக் காட்டினால் வேலை போய்விடும்.
சிறைக்கைதிகளின் வரலாற்றை விசாரித்தால் அவர்கள் செய்த கொலைக் குற்றங்கள் யாவும் திடிரென்று எழுந்த கோபத்தால் இழைக்கப்பட்டவையே. கோபத்தால் சீரழிந்து, மதிப்பிழந்து மாண்டு போனவர்கள் எண்ணற்றவர்கள். கோபத்தில் நிதானமிழந்து துடிக்கிறார்கள். கீழ்த்தரமாக பேசுகிறார்கள். மனிதன் கோபப்படும் போது மிருகக்குணம் தாண்டவமாடுகிறது. சகல தீமைகளுக்கும் திறவுகோலான கோபம் நம்மை இழிவுபடுத்தி விடுகிறது. ஒரு நாட்டின் கோபம் யுத்தத்தை உண்டாக்குகிறது. நாம் கோபமாய் இருக்கும் ஓவ்வொரு நிமிடமும், மகிழ்ச்சிகரமான 60 நொடிகளை இழக்கிறோம். கோபப்படுவது என்பது மற்றவர்களின் தவறுகளுக்காக நம்மை நாமே தண்டித்துக் கொள்வதாகும். கோபக்காரர்கள் வாழ்க்கைப் பயணத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் போல் விபத்துக்குள்ளாகிறார்கள். வினிகர் தேனை கெடுப்பது போல, கோபம் நம் நல்வாழ்வை கெடுத்து விடுகிறது.
கோபக்காரர்கள் நான்கு வகை:
முதல்தரமான மேன்மையான மனிதர்களிடத்தில் ஒரு நொடிப்பொழுதுதான் கோபம் நீடிக்கும். அதற்கு அடுத்த மத்திய தரத்தில் உள்ளவர்களின் கோபம் சில நிமிடங்கள் நீடிக்கும். கடைத்தரத்தில் உள்ளோர் கோபம் ஒரு நாள் முழுவதும் நீடிக்கும். ஆனால், தீயவர்களுக்கோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். இந்நான்கு வகைகளில் நீங்கள் எந்த வகை? முதல் வகையைச் சேர்ந்திருப்பது நல்லது.
நம் எதிரி எளியவரா? வலியவரா? நிகரானவரா?
1. அரசன் ஆண்டியின் மீது கோபப்படுவது-எளியவர் மீதான கோபம்.
2. ஆண்டி அரசன் மீது கோபப்படுவது-தன் சக்திக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட வலியவர் மீதான கோபம்.
3. இரண்டு அரசர்கள் அல்லது இரண்டு ஆண்டிகள் (கணவன்-மனைவி, சகோதரர்-சகோதரி) கோபப்படுவது- தமக்கு நிகரான மற்றொருவர் மீதான கோபம்.
கோபத்தை கட்டுப்படுத்த முடியுமா?
எரியும் தீயை தண்ணீரால் அணைக்க முடியும். பாம்பு சட்டையை உரிப்பது போல உங்களது கோப குணத்தை அகற்ற முடியும். வாகனத்தை சர்வீஸ் செய்தால் கட்டுப்பாடுடன் இயங்குகிறது அல்லவா. கோபத்தை நாம் ஆக்க சக்தியாக மாற்ற வேண்டும். கவனத்தை திசை திருப்புவது கோபத்தை தணிக்கும்.
குளிர்ந்த நீரில் குளிப்பதால் சிலருக்கு கோபம் குறைகிறது. படுத்துக் கொண்டால் சிலருக்கு கோபம் குறைகிறது. தண்ணிர் குடிக்கலாம். தியானம் செய்யலாம். கோபம் வரும் போது பேசாமல் இருப்பது நல்லது. கோபத்தை குறைப்பது பிறரை அழிக்கும் சக்தியை குறைக்கும்.
ளநமக்கு யார் மீது கோபம் வருகிறது என பட்டியல் போட வேண்டும். நம் மனைவி, குழந்தைகள், உயர் அதிகாரி என ஒரு சிலர்தான் இருப்பர். யாரிடம் கோபம் அடிக்கடி எற்படுகிறது. எழக்காரணம் என்ன என்பதை சிந்திக்கவும். கோபம் தவிர்க்க என்ன செய்வது என சிந்திக்கவும். நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு பதிலுக்கு தீங்கு செய்யாது இருத்தல் நலம். நாய் கோபத்தில் நம்மைக் கடிக்கிறது. அதற்குப் பதிலாக தம் வாயினால் நாயை கடித்தவர்கள் இவ்வுலகில் இல்லை.
கீழ்த்தரமான சொற்களை கீழ்மக்கள் சொல்லும் போது மேன்மக்கள் அவர்களுக்கு எதிராக அச்சொற்களைத் திருப்பிச் சொல்வதில்லை. சினம் பெரிதல்ல. அதை அடக்கியாளும் குணமே பெரிது. கோபப்பட்டால் நமக்கு நாம்தான் எதிரி. தனது தவறை உணரும்போது மனிதன் தெய்வமாகிறான்.
ஒவ்வொருவரும் தம் தலையில் தீக்குச்சியை சுமந்தபடிதான் அலைகிறோம். யாராவது உரசிவிட்டால் அவ்வளவுதான். எரித்து விட்டுத்தான் மறுவேலை. அவ்வாறு எரிக்கும்போது தீக்குச்சி ஒன்றை உணர்வதில்லை. தானும் அழிந்துதான் பிறரை அழிக்கிறது அந்த தீக்குச்சி.
கணவன்-மனைவி இருவரும் இறுதிவரை ஒன்றாக வாழப்பிறந்தவர்கள். வாழ வேண்டியவர்கள். அவ்விதம் வாழ்வதைத் தவிர்க்க இயலாதவர்கள். அப்படியிருக்க கோபத்தால் வாழ்வின் நிம்மதியை இழக்க வேண்டிய அவசியம் என்ன? கோபத்தில் கூட நீ அழகாக இருக்கிறாய் என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் மனைவி சிரித்து விடுவார். மனைவியிடம் சமாதானமாக போவது நல்லது. உள்ளம் பண்பட வேண்டும். உள்ளம் பண்பட்டு விட்டால் அதிலே கோபம் வாலாட்ட முடியாது. நாம் யார்? நாம் இறுதியாக போகப் போகிற இடம் மண்குழி.
எதிரி கண்டபடி நம்மை திட்டுகிறான். எதிரி சொல்வது உண்மையாயிருந்தால் இறைவன் என்னை மன்னிக்கட்டும். எதிரி சொல்வது பொய்யாயிருந்தால் இறைவன் எதிரியை மன்னிக்கட்டும். நம் மீது வீசப்படும் அவதுட்றுகளுக்காக உள்ளத்தில் பொங்கும் கோபத்தை அகற்ற முடியாவிட்டாலும் அதைப் பலவீனப்படுத்த முடியும். அழிக்க முடியாத, அகற்ற இயலாத கோபத்தை பலவீனப் படுத்த முடியும். அதன் தீய விளைவைத் தகர்த்து விடலாம். கோபத்தை தணிக்கும் மருந்து – மன்னிப்பு.
ஆரோக்கியமானவர்களை விட நோயாளிகள் அதிகம் கோபப்படுகிறார்கள். வாலிபர்களைவிட வயதானவர்கள் அதிகம் கோபப்படுகிறார்கள். ஆண்களைவிட பெண்கள் அதிகம் கோபப்படுகிறார்கள். மேதைகளை விட முரடர்கள், மடையர்கள், சோம்பேறிகள் அதிகம் கோபப்படுகிறார்கள்.
பழிக்குப்பழி, பதிலுக்கு பதில் நம் எதிரியை அவமானப்படுத்தினால்தான் நமக்கு துட்க்கம் வரும் என்பது நல்ல இயல்பே அல்ல. அது பொல்லாத இயல்பு. நம் கோபத்தை ஒடுக்கினால் நற்பெயர் கிடைக்கும். மதிப்பு குறையாது. எத்தனையோ தீங்குகளைத் தடை செய்து விடும். விரோதிகளிடமும் அன்பாய் பழகி நேசக்கரம் நீட்டலாம்;. நம்மை வெறுத்தவர்களுக்கும் உதவி செய்தல் வேண்டும். உலகில் எத்தனையோ விதமான அநியாயங்கள் நடைபெறுகின்றன. அவை ஒவ்வொன்றிற்க்கும் தக்க தண்டனை நிச்சயம் உண்டு.
நம்மை அவதுட்று பேசுபவர்களை, நம்மை திட்டுபவர்களை, நம்மை வஞ்சிப்பவர்களை நாம் கோபத்தில் தண்டிக்க முற்படும் போது வரம்பு மீறி, அவர்கள் நமக்கு இழைத்த தீங்கைவிட பன்மடங்கு அவர்களுக்கு நாம் தீங்கிழைக்க நேரிடலாம்.
வாழ்வில் எப்போதும் நாம் விரும்பியதெல்லாம் நிறைவேறாது. நமக்கு பிடிக்காததும் நடக்கும். நமது விருப்பத்திற்கு மாறான விஷயங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இது எல்லோருக்கும் பொதுவானது.
கோபம் எந்த சிக்கலையும் தீர்ப்பதில்லை. கோபம் ஆக்கப்பூர்வமாக எதையும் கட்டமைப்பதில்லை. மாறாக, எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. நம் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம் தவறான வார்த்தைகள் மன்னிக்கப் படலாம். ஆனால், மறக்கப் படுவதில்லை. கோபமாகவே இருப்பது என்பது, தான் விஷத்தை குடித்து விட்டு, தன் எதிராளி மரணிக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பதாகும்.
நாம் தற்காலிகமாக நிலைகுலைந்து இருக்கலாம். ஒரு நிகழ்வு தற்காலிகமாக நம்மை கலங்க வைத்திருக்கலாம். அதற்காக கோபத்தில் முட்டாள்தனமாக செயல்பட்டு நிரந்தரமான அவப்பெயரை தரும் செயலை செய்துவிடக் கூடாது. கோபம் நிறைந்த இதயத்தில் அன்புக்கு இடமே இல்லை. ஓரு நொடிப்பொழுது கோபத்தைக் கட்டுப்படுத்தி நாம் பொறுமையாக இருந்து விட்டால் ஒரு வருடம் நமக்கு ஏற்படப் போகும் துயரத்திலிருந்து எளிதாக தப்பி விடலாம்.
முரடர்கள் கோபத்திற்கு அதிக இடம் தருகிறார்கள். புத்தசாலிகள் கோபத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறார்கள். நீங்கள் புத்திசாலிகள்தானே?
இந்த இதழை மேலும்