முனைவர் வே. புகழேந்தி
வேளாண் பொருளாதார நிபுணர்
மேலாண்மை இயக்குநர், அக்ஷயா மருத்துவமனை,வடவள்ளி
அறங்காவலர், நொய்யல் பப்ளிக் ஸ்கூல், கிணத்துக்கடவு
கோவை
வெற்றி பெறுவதற்கான அனைத்து அம்சங்களையும் தேவையான உத்வேகத்தையும் தரக்கூடியது என்னவென்றால் முயற்சி என்னும் ஒன்றைச் சொல் தான். இந்த குணத்தைச் சிறப்பாகப் பெற்று இன்று பொருளாதார உலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து ஒரு சாதனையாளராக வலம் வந்து கொண்டிருப்பவர்.
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தான் வெற்றிக்குத் தேவையானது என்பார் விவேகானந்தர். அவர் கூற்றை தன் வாழ்நாளில் மெய்பித்து வருபவர்.
வாழ்க்கையில் எல்லாம் இன்பமாகவே அமையாது, அதே போல் துன்பமாகவும் அமையாது இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. அவ்வாறு தன் வாழ்நாளில் பல இன்ப துன்பங்கள் எதிர் கொண்டு சாதித்து வரும் பொருளாதார வல்லுநர்.
திறமையைக் காட்ட வேண்டிய இடத்தில் தன் தகுதியைப் பயன்படுத்த வேண்டும் என்பது போல் தன்னுடைய திறமையால் இன்று தரணியெங்கும் தன் பெயரை நிலை நிறுத்தி வரும் வேளாண் பொருளாதார நிபுணர், உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிறுவன ஆலோசகராகவும், அக்ஷயா மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநராகவும், நொய்யல் பப்ளிக் ஸ்கூலின் அறங்காவலர் என பல பொறுப்புக்களை தன் வசம் கொண்டு பன்முகத் திறமையாளராகவும் நல்ல பண்பாளராகவும் இருந்து வரும் முனைவர் வே. புகழேந்தி அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி…
கே. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
அப்போது திருச்சி மாவட்டம் தற்போது பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர் என்னும் கிராமம். பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும் அழகாகவும் தென்படும். விவசாயப் பின்னணியில் உடைய குடும்பம். எங்கள் குடும்பத்தைப் பற்றி அனைவரும் அறிந்து வைத்திருப்பர், காரணம் என் தந்தை புலவர் ப. வேணுகோபாலணார் தமிழாசிரியர். அனைவரிடமும் அன்பாகப் பழகும் அரிதான குணம் கொண்டவர். அதுமட்டுமின்றி விவசாயத்தில் அதிக பற்று கொண்டவர். ஆசிரியர் பணியும் பார்த்துக் கொண்டு விவசாயத்தையும் நேசித்து வந்தார். . அம்மா. திருமதி. சீத்தாலட்சுமி இல்லத்தரசி. என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பேர் தங்கை திருமதி மணிமேகலை, தம்பிகள் திரு இளங்கோ, மற்றும் திருமாவளவன். அனைவரின் பெயரும் நல்ல தமிழ்ப்பெயரில் அமைந்திருக்கும்.
நான் படித்தது என்று பார்த்தால் எங்கள் ஊரிலுள்ள அரசுப்பள்ளியல் தான். நன்றாகப் படிக்கும் மாணவன் என்று என்னைப் பற்றி ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். என்னுடைய தந்தை ஆசிரியர் என்றாலும் வீட்டில் எவ்வித கண்டிப்பும் இருக்காது. இதனால் நன்றாகப் படிக்கும் குணம் இயற்கையிலேயே வந்து விட்டது. இதற்கு கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். பள்ளிப்படிப்பை அதிக மதிப் பெண்ணில் தேர்வானேன். அதன் பிறகு பி.எஸ்.சி வேளாண்படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றேன். பிறகு எம். எஸ்.சி மற்றும் முனைவர் பட்டப் படிப்பை கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் பயின்றேன். இது தான் என்னுடைய கல்வி பின்புலம்.
கே. உங்களின் ஆசிரியர் பணியைப் பற்றிச் சொல்லுங்கள்?
முனைவர் பட்டப் படிப்பை முடித்தவுடன் வேளாண் பல்கலைக்கழத்திலேயே 6 ஆண்டுகள் வேளாண் பொருளாதாரவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தேன். இது தான் என்னுடைய முதல் ஆசிரியர் பணி. இன்னும் என் மனதில் நீங்காத ஒரு ரீங்காரமாய் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் பணியாற்றும் பொழுதும் என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து என்னால் முடிந்த அளவுக்கு மாணவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறேன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. கூடுதல் சிறப்பு என்னவென்றால் மற்றவர்களுக்கு எளிதாக கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அது என்ன வென்றால், ஆசிரியர் பணியிலிருந்து வங்கிப்பணிக்குச் சென்று 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிரியராகப் பணி செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 4 ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியில் இருந்து வந்தேன்.
கே. ஆசிரியர் பணியிலிருந்து வங்கித்துறைக்குள் வந்தது குறித்துச் சொல்லுங்கள்?
ஆசிரியர் பணியிலிருந்து வங்கித்துறைக்குள் பணி இடமாற்றம் பெற்று நபார்டு (சஅஆஅதஈ) வங்கியில் 30 ஆண்டுகள் இந்தியாவில் பல மாநிலங்களில் பணிபுரிந்தேன். இப்பணியில் சேர்ந்தவுடன் கிராமப்புறத்தில் உள்ள சுயத்தொழில் செய்பவர்களுக்கு பயன் பெறக்கூடிய வகையில் நல்ல வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும் முதன்மை நோக்கமாக இருந்தது.
ஆரம்பத்தில் கிராமப்புற பகுதியில் சுயத் தொழில் புரிபவர்களுக்கு கடன் உதவி அவ்வளவாக கிடைக்க பெறாது என்ற கருத்து நிலவி வந்தது. இதை மாற்ற வேண்டும் என்று உறுதியெடுத்து சுயத் தொழில் புரிய நினைக்கும் அனைவருக்கும் குறுகிய கடன் உதவி வாங்கிகொடுத்து வழிவகைச் செய்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது ஒன்று.
முதலில் பெங்களூரில் சுய உதவிக்குழு என்ற அமைப்புக்கு அடித்தளம் போட்டது நான் தான் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய ஆய்வு முழுவதும் குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி சார்ந்ததாகவே இருந்தது.
கே. இந்த அமைப்பின் மூலம் சுய உதவிக்குழு பெரும் நன்மைகள் என்ன?
நான் எதைச் செய்தாலும் ஏழை எளிய மக்களுக்கு நன்மைத் தரும் வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு நன்மை ஏற்பட்டால் அவர்களின் வாழ்க்கைத் தரம் தானாக உயர்ந்து விடும் என்பது மட்டும் நான் சிந்தித்தது.
நான் அமைப்பைத் தொடங்கும் பொழுது நான் நினைத்தது என்னவென்றால் மக்களுக்கு அவர்களின் மீதே ஒரு தன்னம்பிக்கை ஏற்பட வேண்டும். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒற்றுக்கொள் என்று சொல்வார்கள் அந்த வாக்கின் படி ஆர்வமுள்ள அனைவருக்கும் சிறிய நிதி உதவி கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மறுமலர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பது தான்.
சுய உதவிக்குழு மூலம் பல பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள். உதவிக்குழுவில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வேலை செய்து வருகிறார்கள்.
பெண்களின் வளர்ச்சி தான் குடும்பத்தின் வளர்ச்சி. குடும்பத்தின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி. இப்படி நிறைய நன்மைகள் இருக்கிறது என்பதை உணர்ந்து தான் இத்திட்டத்தை பெரிய அளவிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
கே. 2020 நாடு வளர்ச்சி அடைந்து விடும் என்று அப்துல்கலாம் அவர்கள் சொல்லியிருந்தார் தற்போது சில பொருளாதார மாற்றம் நடைபெற்று வருகிறது. அது பற்றி உங்களின் கருத்து?
வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அனைத்து துறைகளிலும் நாடு தற்போது வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மற்ற உலக நாடுகளே போற்றும் வகையில் பல அதிரடித் திட்டங்கள், கண்டுபிடிப்புகள் என வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் செயல் படுத்திக் கொண்டு தான் வருகிறோம்.
சரியாக 2020 யில் நாடு வளர்ச்சி பெறும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள வில்லை. அதற்கான மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு இன்னும் சில ஆண்டுகள் கூட ஆகலாம். அதன் பிறகு நாமும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கே. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று பல நாடுகள் சென்று பணியாற்றி இருக்கிறீர்கள் இந்த வளர்ச்சியைப் பற்றி நீங்கள் நினைப்பது?
நிச்சயம், இது ஒரு பெரிய அங்கீகாரமாக தான் நினைக்கிறேன். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன் நான் என்ற வகையில் என்னுடைய வாழ்க்கை சிறப்பானது. நான் எந்த வேலையைச் செய்தாலும் நன்கு யோசித்து திட்டமிட்டு தான் செய்வேன். அது மட்டுமின்றி புரிந்து கொள்ளும் தன்மை எனக்கு அதிகம். எங்கு எது தேவை என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் என்னை மாற்றிக் கொள்வேன்.
உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று கல்வி ஆலோசகராகப் பணியாற்றி இருக்கிறேன். நான் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாட்டின் பழக்க வழக்கத்திற்கு என்னை இணைத்து கொள்வேன். அதுமட்டுமின்றி என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம், தன்னம்பிக்கையை நான் ஒரு போதும் இழந்ததில்லை.
என்னை எங்கும் நான் அடையாளப்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டது கிடையாது. நாம் எங்கு பிறக்கிறோம், எங்கு வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல என்ன சாதிக்க இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இதை முறையாக கடைபிடித்து வந்தாலே சாதிப்பு நமக்கு சாதகமாகி விடும்.
இந்த இதழை மேலும்