– 2017 – July | தன்னம்பிக்கை

Home » 2017 » July (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வீழ்வேனென்று நினைத்தாயோ?

    1994 ஆம் ஆண்டு  பிப்ரவரி முதல் வாரத்தில் தஞ்சையிலிருந்து சிதம்பரம் பயணிப்பதற்காகத் தஞ்சை ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். சிதம்பரம் செல்லும் வரை வாசிப்பதற்கு ஏதேனும் புத்தகம் வாங்கலாம் என்று ஒரு புத்தகக்கடைக்குச் சென்றேன்.  அங்கு பார்வையாலேயே அனைத்து நூல்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தேன். அப்போது வைரமுத்து அவர்களின் இதுவரை நான் புத்தகம் என் கண்ணில் பட்டது. அது அவருடைய சுயசரிதை. உலகத்திலேயே 28 வயதில் சுயசரிதை எழுதியவர்  இவர் ஒருவராகத் தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.சரி அந்தப் புத்தகத்தைப் படிக்கலாம் என்று வாங்கினேன். ஒரு அற்புதமான புத்தகத்தை வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று வாங்கும் போது தெரியவில்லை. புத்தகத்தின் முதல் பக்கத்தைத் திருப்பினேன்.  அதில் அவரின் தனித்தன்மைகள் பற்றி இருந்தது.குறிப்பாக 7 முறை தேசிய விருது பெற்ற ஓரே பாடல் ஆசிரியர் இவர் மட்டும் தான். அவர் முன்னேறுவதற்கு பட்ட ரணங்களை எனக்குள்ளும் கடத்தினார்.

    என் தலைக்கு மேல் பருந்துகள் எப்போதும்

    பறந்து கொண்டிருந்ததால் நான்

    செத்து விடவில்லை என்பதை

    நித்தம் நித்தம் நிரூபிக்க வேண்டியதாயிற்று

    இந்தப்புத்தகத்தில் இது போன்ற பல கவிதைகள் தமிழ் மீது தீராக் காதலை ஏற்படுத்தியது மட்டுமின்றி வாழ்வில் எந்த பிரச்சனையைச் சந்தித்தாலும் கலங்காமல் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் என்னுள் விதைத்தது.

    என்னளவுக்குப் பிரச்சனைகளை எவரேனும் சந்தித்திருப்பார்களா எனும் சந்தேகம் எனக்கு அவ்வப்போது எழுவதுண்டு. தைரியத்துடன் எதிர்கொள்வதாலேயே என்னால் அனைத்தையும் சமாளிக்க முடிகிறது என்பதை அவையடக்கத்துடனும், சற்றே கர்வத்துடனும் தெரிவித்துக் கொள்வதுடன்.. என் அனுபவங்கள் மூலம் நான்  கற்றுக் கொண்டதை தன்னம்பிக்கையுடன் முன்னேற பத்து வழிகள் என்னும் தலைப்பில் தருகிறேன்

    தன்னம்பிக்கையுடன் முன்னேற 10 வழிகள்

    1. யாரோடும் உன்னை ஒப்பிடாதே எனக் கூறுவோர் உண்டு. மிகத் தவறு. நம் துறையில் நம்மை விட உயர்வில் இருக்கும் ஒருவருடன் நம்மை ஒப்பிட வேண்டும். அப்போது தான் அவர் செய்யும் எதை நாம் செய்யத் தவறுகிறோம் என்பது தெரிய வரும். நமக்கும் அவருக்குமான இடைவெளியை இட்டு நிரப்ப வேண்டும்.
    2. எந்த மனிதனின் வாழ்வை உற்று நோக்கினாலும் வெற்றியை விடத்தோல்வியையே அதிகம் ருசித்திருப்பான். ஆகவே தோல்வியென்பது உன்னை எரிக்க வரும் நெருப்புப் பந்தல்ல…நீ தூக்கிப்போட்டு விளையாட வேண்டிய கூடைப்பந்து. அதற்கு முக்கியத் தேவை துணிச்சல்.
    3. நம்மை அவமானப்படுத்தியவர்களையும்,துரோகம் இழைத்தவர்களையும் பழி வாங்கியே தீர வேண்டும். என்பதை விட அவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
    4. அவநம்பிக்கைகளையும், எதிர்மறைச் சிந்தனைகளையும் ஒரு போதும் நண்பனாக்கிக் கொள்ளதே. உன் அறிவும் அஸ்தமாகி விடும்.
    5. மனதளவில் சிங்கமாய் இரு… ஆனால் நரியின் தந்திரத்தை மறந்து விடாதே.. ஏனெனில் நம்மைச்சுற்றி மனிதன் என்னும் போர்வையில் உலவிக் கொண்டிருக்கின்றன- பல மிருகங்கள்.
    6. கவனத்தில் கொள் அச்சம் முயற்சியின் அடைப்புக்குறி. தயக்கம் தரித்திரத்தின் நிழல்.
    7. நீ சரியான பாதையிலிருந்தாலும் தோல்வியைச் சந்திப்பாய் அங்கேயே தங்கி விட நேர்ந்தால், ஓரிடத்தில் எப்போதும் தங்கி விடுவார்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் சரிந்து விடுவார்கள், பறந்து திரிந்து பயணம் செல்பவர்களே புயலையும் அனுசரித்துப் புவியை ஆள்வார்கள்.
    8. நிறைய நூல்களைப் படிக்க வேண்டும். வரலாற்று நூல்கள், வெற்றியாளர்களின் நூல்கள், தன்னம்பிக்கை சார்ந்த நூல்கள் போன்ற தரம் வாய்ந்த நூல்களை முறையாக கற்க வேண்டும்.
    9. வெற்றி பெற முதலீட்டை விட என்னாலும் முடியும் என்ற தன்னம்பிக்கை மிக்க மனம் மிகவும் அவசியம்.
    10. வாழ்வில் முன்னேற ஓர் இலக்கு வேண்டும். அந்த இலக்கை அடைய தெளிவான திட்டங்கள் வேண்டும், எத்தகைய சோதனைகள் வந்தாலும் பரவாயில்லை, எப்போதும் உயர்ந்த இலக்குகளையே குறி வையுங்கள், கண்டிப்பாக ஒரு நாள் வானம் வசப்படும்.

    சவாலும் எதிர்ப்பும்

    ஒரு புதிய தீவைக் கண்டுபிடிக்க கொலம்பஸ் போல சாகசப் பயணம் துவக்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஒரு கட்டத்தில் கரை நம் கண்களுக்குத் தெரியாமல் போய் சுற்றிலும் நீராகக் காட்சியளிக்கும் தானே? அதற்கு பயந்தால் புது உலகைக் காண முடியுமா? வாழ்வதே கூட அதே போல் ஓர் சவால் தான். ஒப்புக் கொள்கிறீர்களா? மனித குலம் அடர்ந்த காடுகளில் தன் வாழ்வைத் தொடங்கியது. ஒவ்வொரு மணித்துளியும் கொடிய விலங்குகள், பயங்கரமான விஷப் பூச்சிகள், பாம்புகள் ஆகியவற்றுடன் போராடியல்லவா மனிதன் ஜெயித்துக் காட்டினார். மழை, இடி, வெள்ளம் வேறு நம்மைப் பாடாய்ப்படுத்துகிறது. நாம் வாழ்வதே இவற்றையெல்லாம் முறியடித்துதான். பிரச்சனையைக் கண்டு பதறி ஓடும் கோழைத்தனத்தை விட போராடும் துணிவும், தெளிவுமே நம்மை உயிர் வாழ வைக்கிறது. கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது, கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம். அவ்வாறே வாழ்வின் எந்தப் பிரச்சனையும் நம்மை பாதிக்கவே முடியாது. நாம் அனுமதித்தால் தவிர, வாழ்விலிருந்து விலகி ஓடும் மனிதர்களை விட எதிர்த்து நின்று போராடும் மனிதர்கள் தான் உன்னதமான இடம் பெறுகிறார்கள்.

    ஒரு கப்பல் கடலுக்குள் போவதில் எவ்வளவு கஷ்டங்கள் காத்திருக்கின்றன. புயலும் சூறாவளியும் அடிக்கலாம், பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் மாதிரி உடைந்தும் போகலாம், திமிங்கிலங்கள்,சுறா மீன்களிடம் சிக்கிக் கவிழ நேரிடலாம் இப்படி எண்ணற்ற ஆபத்துக்கள் கடலில் காத்திருக்கின்றன . கம்பீரமாக கரையில் நங்கூரம் பாய்ச்சி நின்று விட்டால் அழிவில்லை தானே, ஆனால் அதற்காகவா கப்பல் கட்டப்பட்டது, கடலின் ஆபத்துக்களை எதிர் கொண்டு பயணிப்பது தானே அதன் வேலை. அதே போல் தடைகளை விலக்கி ஜெயிக்கத் தானே நாம் மனிதப் பிறவிஎடுத்துள்ளோம், எதிர்ப்பற்ற வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள் சாதகமான விஷயங்கள் நம்மை சரி செய்வதை விட பாதகமான விஷயங்களே நம்மை உறுதி செய்து பாதுகாக்கின்றன, ஆகவே எதிர்ப்பைக் கொண்டாடுங்கள், அதனுடன் வாழப் பழகுங்கள். வெற்றி நிச்சயம்….

    சிகரமே சிம்மாசனம்

    வானத்தில் பறப்பதா?

    பூமியில் கிடப்பதா?

    “வானம் என்பது ஒர் வானவில்

    அதில் உன் வர்ணம் காட்டு!”

    வாழ்க்கையின் புரிதலை புரிந்துகொண்டோமா?

    புரிதலை புரிந்து கொள்ள முடியாதபோது

    வாழ்க்கை எப்படி வசப்படும்?

    வானம் எப்படி புரிபடும்?

    தலையின் மேல் எண்ணெய் தடவினோமே?

    தலைக்குள் எதை தடவினோம்?

    எண்ணத்தை தடவினோமா?

    ‘புதிய பிரதேசங்களைப் பார்ப்பதால் மட்டுமே நீங்கள் கண்டறிவதில்லை புதிய கண்களோடு பார்ப்பதால் மட்டுமே கண்டறிகிறீர்கள்’ என்றார் பிரஞ்சு நாவலாசிரியர் மார்ஷல் ப்ரெஸ்ட்.

    சைப்ரஸ் மரங்களோடு காதலி செல்மாவின் மீது படிந்த காதலை – பெப்ரூட் நகர்வீதியில் பைன் மரக்காடுகளுக்கருகே – நடந்ததை மௌனங்களோடு மொழி பெயர்க்கிறேன்.

    யார் அது!

    ஓ! அது நான் தான்!

    உங்களின் காதோடுதான் நான் பேசுவேன்!

    உங்களின் உள்ளத்தோடு ஒட்டி

    உறவாடுவேன். உறங்கும் எங்களை

    விழிக்கச் செய்வேன். விழித்திருக்கும்

    உங்களோடு உறங்கச் செல்வேன்.

    உங்களை வானத்தில் பறக்க வைப்பதும்

    பூமியில் புரள வைப்பதும் நானே!

    வெற்றிமீது வெற்றிவந்து உங்களைச்சேர

    துணை நிற்பேன். நீங்கள் தலைகுப்புறத்

    தடுமாறி விழவும் வழிவகுப்பேன்

    உங்களை ஆள்பவனும் நானே

    உங்களை ஆண்டவனும் நானே

    சிந்தனை வல்லமை படைத்த நான்

    உறுதியோடு நீங்கள் ஆணையிட்டால்

    உங்கட்கு தாசானுதாசனாவேன்.

    நீங்கள் எண்ணியதை எண்ணியாங்கு

    எய்தத் துணை நிற்பேன்

    நான் யார் தெரியுமா?

    உங்களின் மனம் எனும் மந்திரப்பேழையில்

    உருவாகும் எண்ணங்களே நான்!

    — என்று ஜேம்ஸ் ஆலன் As a man Thinketh’ என்ற தன் – நூலில் வானத்தை வசமாக்கும் மின்னல் வரிகளை அள்ளி வைத்திருப்பார்.

    நெஞ்சை அள்ளும் தஞ்சை (தஞ்சாவூர்)யிலிருந்து ஆட்டோ டிரைவரின் மகன் ஐ.ஏ.எஸ் ஆனார். கலெக்டர் கனவை நனவாக்கிய தன் எண்ணத்தை அவரே கூறுகிறார் “என் மனதை மிகவும் பாதித்த சம்பவம் சுனாமி. நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்து பாதிக்கப்பட்ட இடத்திற்கு நான் சென்றேன். அங்கே பாதிக்கப்பட்டவர்களுக்கு சில தொண்டு நிறுவனங்கள் பல்வேறு வகையில் உதவிகள் புரிந்து வந்தன. எங்களால் அவர்களின் தற்போதைய தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடிந்தது. ஆனால் அவர்களுக்கு தற்போதைய தேவையை மட்டுமின்றி, நிரந்தர தேவையையும் பூர்த்தி செய்து அவர்கள் சுனாமியில் இழந்த பொருட்களுக்கு இழப்பீடு தொகையை பெற்றுக் கொடுத்தார் கலெக்டர்.

    கலெக்டரின் இந்தசெயல் என்னை மட்டுமல்ல அப்பகுதியில் சுற்றியிருந்த அனைவரையும் கவர்ந்தது. மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கலெக்டரால்தான் செய்யமுடியும் என்பதை கலெக்டர் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. என் அப்பா பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆட்டோ டிரைவர். என் அப்பாவிற்கு சொந்த ஊர் தஞ்சாவூர். அம்மா பெயர் யோகாம்பாள், தங்கை பெயர் விஜய சாமுண்டீஸ்வரி. வீட்டிற்கு நான் ஒரே ஆண்பிள்ளை எந்த அளவிற்கு என்னை செல்லமாக வளர்த்தார்களோ அதே அளவிற்கு என்னுடைய லட்சியத்திற்கும் தூண்டுகோலாக திகழ்ந்தார். நான் பள்ளிப்படிப்பை வீரராகவா மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன். பின்னர் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் இ.சி.இ படித்தேன். எனது ஐ.ஏ.எஸ் கனவை பற்றி எனது தந்தையிடம் சொன்னபோது மறுப்பு எதுவும் சொல்லாமல் உன்னால் சாதிக்க முடியும் என என்னை ஊக்குவித்தார். பணத்தை பற்றி கவலைப்படாதே நீ படித்து ஐ.ஏ.எஸ் ஆனால் நம்மை போன்ற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பல மாணவர்களை ஐ.ஏ.எஸ் ஆக்க உன்னால் முடியும் என என்னுடைய முயற்சியை விடாமுயற்சியாக்கினார்.

    எனது சகோதரி ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான புத்தகங்களை எல்லாம் வாங்கி கொடுத்து என்னை மேலும் ஊக்குவித்தார். தேர்வுக்காக எந்த பயிற்சி மையத்திற்கும் நான் சென்றது கிடையாது என்னுடைய குடும்பத்தினரின் ஊக்குவிப்பினால் தான் இன்று உங்கள் முன் ஐ.ஏ.எஸ் ஆக நிற்கிறேன். ஒவ்வொரு இளைஞர்களிடம் ஏதாவது ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது நம்மிடம் எந்த திறமை உள்ளதோ அதை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் முயற்சியை மட்டுமே கைவிடாமல் நமது லட்சியப்பாதையில் சென்றால் வெற்றி என்றுமே நம்பக்கம்தான். எனது பெற்றோரின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கி விட்டேன்.

    “தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

    முந்தி யிருப்பச் செயல்” தான் ஆட்டோ டிரைவராக இருந்தாலும் தனது மகனின் ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கினார் திரு. கிருஷ்ணமூர்த்தி.

    “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

    என்னோற்றான் கொல்எனுஞ் சொல்”

    எந்த தவத்தால் இவன் தந்தை இவனைப் பெற்றானோ – என்று சொல்லும்படி கலெக்டரானார் சதீஷ்குமார். மேலும் அவர் கூறுகையில், எனது பெற்றோருக்கும், தஞ்சை மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதே என்னுடைய எதிர்கால லட்சியம் என்கிறார். சதீஸ்குமார். ஒருவர் சாதிப்பதற்கு பணம் முக்கியமில்லை என்பதை ஆட்டோ டிரைவரின் மகனான சதீஸ்குமார் ஐ.ஏ.எஸ் ஆகி நமகெல்லாம் பெருமையை நிரூபித்துவிட்டார்.

    நான் தொட்டு வணங்கும் என் தஞ்சை மண்ணை சேர்ந்த, இளைஞர்களின் எழுச்சிநாயகன், கலாமின் கனவு நாயகன் சதீஸ்குமார் ஐ.ஏ.எஸ் பற்றி எழுதுவதில் என் பேனா பெருமிதம் கொள்கிறது. தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பது எந்நாளோ? சிகரமே சிம்மாசனத்திற்கு தஞ்சையிலிருந்தும் தனிமகுடம் கிடைத்திருக்கிறது. எழுதிமுடித்தபோது காற்றோடு ஒரு பாடல் காதுக்குள் விழுந்து இதயத்திற்குள் இறங்கியது. அந்தபாடல்,

    சொன்னது என்ன சொன்னது

    என்வாழ்க்கை என்ன சொன்னது

    மோதிப்பார்க்க அலைகள் சொன்னது

    முட்டிப்பார்க்க விதைகள் சொன்னது

    தொட்டுப்பார்க்க வானம் சொன்னது

    தோண்டிப்பார்க்க தண்ணீர் சொன்னது

    மவுனம் காக்க மலைகள் சொன்னது

    காயம் கற்க கலைகள் சொன்னது

    மாயம் கற்க வானவில் சொன்னது

    இதுதான் வாழ்க்கை எனக்குச் சொன்னது.

    வெற்றி உங்கள் கையில் 43

    தேவையற்ற ஒப்பீடு

    “நான் கஷ்டப்பட்டுப் படித்தேன். ஆனால், என் பக்கத்துவீட்டு சங்கர்போல அதிக மதிப்பெண்கள் என்னால் பெற முடியவில்லை. எவ்வளவுதான் படித்தும் என்ன பலன்?” என்ற சோகம் படிப்பினால் அசோக்கிற்கு ஏற்பட்டது.

    “நல்ல மதிப்பெண்கள் எடுத்தப்பின்பும், என்னால் நான் விரும்பிய படிப்பில் சேர முடியவில்லை. ஆனால், என்னைவிட குறைவாக மதிப்பெண் எடுத்த ஷாலினிக்கு வேளாண்மைக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது” – என மேற்படிப்பு பற்றிய கவலை பத்மாவுக்குள் உருவானது.

    “என்னிடம் போதுமான பணம் இல்லை. ஆனால், நான் மட்டும் பணக்காரனாக இருந்திருந்தால் இன்று நிம்மதியாக வாழ்வேன்” – இது ஒரு ஏழையின் கவலை.

    “நான்கு தலைமுறைகள் வாழ்வதற்கு என்னிடம் சொத்து இருக்கிறது. ஆனால், இன்று நிம்மதி இல்லை. என் சொத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு, கடவுள் எனக்கு நிம்மதியை மட்டும் தந்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும்” – இது ஒரு பணக்காரரின் கவலை.

    வெற்றி பெற விரும்புபவர்கள், தன்னைவிட உயர்ந்த, சிறந்த மனிதர்களைப்போல தானும் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அதற்கான தகுதிகளும், பண்புகளும், சிறப்புத் திறமைகளும் தங்களிடம் இருக்கிறதா? என்பதை நன்கு அறிந்தபின்பே தன்னை பிறரோடு ஒப்பீடு செய்யும் பணியில் ஈடுபடுவது நல்லது.

    வெற்றி பெற்றவர்களிடம் இருக்கும் சிறப்புத் திறமைகள் போன்று, தங்களிடம் சிறப்பான திறமைகள் இல்லையென்றால் அந்தத் திறன்களை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுதான் விவேகமான செயலாகும். ஆனால், வீணான முறையில் ஒருவர் தன்னை மற்றவரோடு ஒப்பிட்டு வருத்தப்படுவதும், தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதும் வெற்றிக்கு வழிவகுக்காது. மாறாக, தீராத கவலையையும், எரிச்சலையும் வாழ்க்கையின்மீது வெறுப்பையும், உடன் இருப்பவர்களிடம் கோபமும், ஒப்பீட்டின் வெளிப்பாடாக மாறும். இதனால்தான், தேவையற்ற முறையில் உருவாகும் ஒப்பீடுகளைத் தவிர்ப்பது நல்லது. தாழ்வு மனப்பான்மையின் தாயகமாக விளங்கும் இந்த “தேவையற்ற ஒப்பீடு” பலவேளைகளில் பிரச்சினைகளை உருவாக்கிவிடுகிறது.

    பொதுவாக, மற்றவர்களிடம் பொறாமை உணர்வையும், நிம்மதி இழப்பையும் இது உருவாக்கிவிடுவதால் தன்னை மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    “நான் அவரைப்போல் இல்லையே!” என்று வருத்தப்படுவதற்குப்பதில் “என்னிடம் எந்தெந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்? என ஒருவர் தன்னைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், வாழ்க்கையில் வெற்றிகள் குவியும்.

    வெளிச்சம் வேண்டுமென்றால் நெருப்பையும் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும் – என்பது ரூஸ்வெல்ட் நமக்கு வழங்கும் அறிவுரை ஆகும்.

    மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது, நிலைகுலைந்து போவது வெற்றியை வேரோடு பறிக்கும் செயலாகும்.

    ரோஜாவை விரும்புகிறவர்கள் அதன் முட்களையும் பொருட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது வெளிநாட்டு பொன்மொழியாகும்.

    அறிவாளிகள் பெரும்பாலும் தங்களை வீழ்த்தும் வேண்டாத ஒப்பீட்டை விரும்புவதில்லை. நண்பர்கள், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள், ஊர்க்காரர்கள் என எல்லா நிலைகளிலும் ஏற்படும் ஒப்பீடுகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு அவற்றை ஆக்கப்பூர்வமான சக்தியாக மாற்றுகிறார்கள்.

    இது ஒரு ஜப்பான் நாட்டு கதை.

    ஜப்பான் நாட்டு படைத்தளபதி ஒருவருக்கு தன்னைப் பற்றிய பெரும் சந்தேகம் ஏற்பட்டது. அதற்கு விளக்கம் கேட்டு, ஆலோசனைகளைப் பெற புகழ்பெற்ற ஜென் குருவிடம் அவர் வந்தார்.

    ஜென் குருவை சந்திக்க வந்தபோது, குரு தியானத்தில் ஆழ்ந்திருந்தார். தியானம் முடித்தபின்பு படைத்தளபதியிடம் வந்தார்.

    ஜென் குருவை வணங்கிய படைத்தளபதி தனது பிரச்சனையைச் சொல்ல ஆரம்பித்தார்.

    “நான் எப்போதும் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறேன். ஏன்? என்று காரணம் எனக்குப் புரியவில்லை. போரில் பலர் இறப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். காயமுற்றவர்கள் பலரை நான் காப்பாற்றி இருக்கிறேன். இருந்தபோதும், தியானத்தில் உங்களைப் பார்த்தபோது எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. நான் எனது வாழ்க்கை முழுவதையும் முக்கியம் இல்லாத விஷயத்தில் கழித்துவிட்டேன் என்று தோன்றுகிறது” – என்று தனது வருத்தத்தை வார்த்தைகளாக்கி ஜென் குருவிடம் சொன்னார் படைத்தளபதி.

    இதைக்கேட்ட ஜென் குரு – “இன்று என்னைப் பார்க்க நிறைய பேர் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் என்னை பார்த்துவிட்டு சென்றபின்பு நான் உங்கள் கேள்விக்கு பதில் தருகிறேன். அதுவரை நீங்கள் அமைதியாகக் காத்திருங்கள்” – என்றார்.

    படைத்தளபதி அந்த நாள் முழுவதையும் ஜென் குரு தங்கியிருந்த இடத்திலேயே செலவிட்டார். அங்குள்ள கோவில், தோட்டங்கள், ஜென் குருவைப் பார்க்க வரும் மக்கள், ஆலோசனைப் பெற்றுச் செல்பவர்கள் என்று பலரையும் பார்த்துக்கொண்டே இருந்தார். தன்னைப் பார்க்க வருபவர்களிடம் பொறுமையாகவும், சிரித்த முகத்துடனும், ஜென் குரு பதில் சொல்வதையும் கவனித்தார்.

    இரவுநேரம் வந்தது.

    ஜென் குருவைப் பார்க்க வந்த பலரும் சென்று விட்டார்கள்.

    பின்னர், ஜென் குருவைப் பார்த்து “இப்போது எனக்கு அறிவுரை வழங்குவீர்களா?” என்று கேட்டார் படைத்தளபதி.

    ஜென் குரு அவரை அழைத்துக்கொண்டு அவரது அறைக்குச் சென்றார். ஜன்னல் வழியாக வானத்தைப் பார்க்கச் சொன்னார். வானத்தில் சந்திரன் முழுமையாகப் பிரகாசித்தது. மிகவும் அமைதியான சூழல் அங்கு நிலவியது.

    “நீங்கள் இந்த சந்திரனைப் பார்த்தீர்களா? எவ்வளவு அழகாக இருக்கிறது? இது முழு வான்வெளி மண்டலத்தையும் கடந்து செல்கிறது. நாளை சூரியன் அதிக ஓளியோடு காட்சி தரும். சூரிய ஓளி மிகவும் பிரகாசமாக இருக்கும். நம்மைச் சுற்றியுள்ள நிலபரப்பை குறிப்பாக, மரங்கள், மலைகள், மேகங்கள் ஆகியவற்றை அது நமக்குக் காட்டும். சூரியன், சந்திரன் இரண்டையும்பற்றி நான் பல ஆண்டுகளாக ஆழ்ந்து சிந்தித்து வருகிறேன். நான் ஒருமுறை கூட சூரியனைப்போல பிரகாசிக்க முடியவில்லையே என்று சந்திரன் வருத்தப்படவில்லை. சூரியனைவிட தாழ்ந்த நிலையில் இருக்கிறோம் என்பதைக்கூட அது சிந்திக்கவில்லை. அது ஏன்?” – என்று ஜென் குரு படைத்தளபதியிடம் கேட்டார்.

    பின்பு, அவரே அந்தக் கேள்விக்கும் பதில் தந்தார். சந்திரனும், சூரியனும் வெவ்வேறானது. இந்த ஒவ்வொன்றுக்கும் தனது இயற்கையான அழகு உண்டு. எனவே, நாம் ஒன்றை மற்றொன்றோடு இணைத்து, ஒப்பிட்டுப் பார்ப்பது கூடாது. இப்போது உங்களுக்கு பதில் கிடைத்திருக்கும். மனிதர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஒருபிரிவினர் நம்பிக்கைகளின் அடிப்படையில் செயல்பட்டு இந்த உலக வளர்ச்சிக்காக செயல்படுகிறார்கள். இன்னொரு பிரிவினர், வெளித்தோற்றங்களைப் பார்த்து ஒப்பீடு செய்து தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்” – என்றார் ஜென் குரு.

    இதைக்கேட்ட படைத்தளபதி “பிரச்சனை எங்கிருக்கிறது?” என்பதை புரிந்துகொண்டு நம்பிக்கையோடு சென்றார்.

    தேவையற்ற ஓப்பிடுதல் என்பது பலநேரங்களில் நம்மை பள்ளத்திற்குள் தள்ளிவிடும். இதனால், ஒப்பீடு செய்யும்போது ஏற்படும் இழப்புகளை மனதில்கொண்டு நாம் ஒப்பீட்டை தவிர்ப்பது நல்லது.

    மனிதர்கள் அனைவரும் வெவ்வேறு தனித்தனி சிறப்புத் திறமை கொண்டவர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, ஒருவரையொருவர் ஒப்பிடும்போது எதிர்பாராத பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படும் என்பதை முதலிலேயே புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவரோடு ஒப்பிடும் சூழல் ஏற்பட்டாலும், அதனை வளர்ச்சிக்கு உதவும் பாதையாக மாற்றிக்கொள்வது நல்லது. ஒப்பிடுதல் சிலவேளைகளில் தேவையற்ற உறவுப் பிரச்சினைகளை உருவாக்கிவிடும் என்பதால் இதனை அடியோடு நீக்குவதும் சிறந்ததாகும்.

    எனவே, தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் தேவையற்ற ஒப்பிடுதலை நீக்கிக்கொண்டால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றிகள் தொடரும்.

    தொடரும்.

    எதார்த்தம்

    வாழ்க்கை என்பது வெகு சுலபமானது. எதை நாம் பிறருக்குக் கொடுக்கிறோமோ, அதுவே பல மடங்காகத் திரும்பி வருகிறது.

    வாழ்க்கை என்பது பந்தயமல்ல; வெற்றி பெறுவதற்கு. இது நீண்ட, நெடிய பயணம், பயணித்து இன்பமாக வாழ வேண்டும், இதற்கு நம்முடன் இணைந்து பயணிப்போருடன் ஒத்தும் உதவியும் வாழும் மனநிலை வேண்டும்.

    மனிதர்கள் எல்லோருமே, தாயின் வயிற்றில் கருவாக உருவாகித்தான் குழந்தையாகப் பிறக்கின்றனர். கருத் தொடராக பிறவிக் குணங்களுடன் பிறந்து, வளர்ப்பு முறையாலும், சுற்றுச் சூழலாலும், பழக்கத்தாலும் நல்லன தீயன தெரிந்து அதற்கேற்றவாறு வாழ்கின்றனர்.

    வாழும் காலத்தில், அவரவர் விருப்பத்துக்கேற்ப, பல நல்லவற்றைக் கற்பதும், அதைக் கடைப்பிடிப்பதும், சில சூழ்நிலைகளில் கடைப்பிடிக்க இயலாமல் தவிப்பதும் இயல்பாகி விட்டது.

    இது உதாரணங்கள் பார்ப்போம்.

    நல்ல கொள்கை: என் நண்பர் ஒருவர் வாழ்க வளமுடன் இயக்கமான எளியமுறை குண்டலினிதவம் கற்று, அதைக் கடைப்பிடித்து வாழ்பவர். அவரது மனைவி, மகள் இருவருக்குமே வேதாத்திரியம் என்னும்  உலக அமைதிக்கான வாழ்க்கை முறையில் நல்ல ஈடுபாடு.

    அவர் துணைவியாருக்கு பட்டுப்புடவை என்பதற்கு மகான் வேதாத்திரி மகரிஷி கூறிய உண்மைகள் மிகவும் ஏற்புடையதாக இருந்தது.

    பல உயிருள்ள பட்டுப்புழுக்களை வெந்நீரில் முழ்க வைத்து, அவைகளைக் கொன்று எடுக்கக் கூடிய நூல் தான் இயற்கைப்பட்டு நூல். இந்த நூலில் நெய்து உருவாக்கும் பட்டுப்புடவையைக் கட்டுவது பாவம்.

    பல ஆயிரக்கணக்கான புழுக்களைக் கொலை செய்து பெற்ற நூலில் நெய்த புடவை. எனவே பட்டுப்புடவைகளை வாங்குவதும், அவைகளை உடுத்தவதும் தவிர்ப்பது நல்லது என்ற அவருடைய போதனைகள், அவரது துணைவியாரின் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது.

    திருமணம் உள்ளிட்ட சில முக்கியமான விசேடங்களுக்கு எடுத்து, உடுத்தி, அடுக்கி வைத்திருந்த பட்டுப்புடவைகளை எல்லாம் தான் உடுத்துவதில்லை என்று தானமாகக் கொடுத்துவிட்டார்.

    இவர்களது மகளுக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள் மணமகனின் பெற்றோரிடம் பட்டுப்புடவை மீதான தங்கள் கருத்துக்களை விரிவாக எடுத்துக் கூறி, மகளின் திருமணத்துக்கு இயற்கைப் பட்டுச்சேலைக்குப் பதிலாக செயற்கைப் பட்டுச் சேலைகள் எடுக்கலாம் எனத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

    அவர்களும் மகிழ்வுடன் சம்மதித்தனர். ஜவுளி எடுக்கச் செல்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு மணமகன் வீட்டார் போன் மூலம் தங்கள் தரப்பு உறவினர்கள் திருமணம் என்றால் கட்டாயம் பட்டுப்புடவை தான் எடுக்க வேண்டும். பல காலமாக நடை முறையிலிருக்கும், இப்பழக்கத்தை மாற்றக் கூடாது என்பதால், இயற்கைப் பட்டுப்புடவை எடுப்பது தான் நல்லது, இது தான் தங்கள் முடிவு என்றனர்.

    இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. புடவைக்காக, அமைந்துள்ள நல்ல வரனை இழப்பதற்க்கும் மனமில்லை. மகளுடன் இருவரும் கலந்து பேசினர். அவளும் பரவாயில்லை, இயற்கைப் பட்டுச்சேலையே எடுக்கட்டும். திருமணத்திற்கு மட்டும் அதை உடுத்திக் கொண்டு, அதன் பிறகு உடுத்தாமல் வைத்து விடுகிறேன் என்றாள்.

    அதுபோலவே நடந்தது. நல்ல ஒரு மாற்றத்தைக் கொண்டு வர, அதுவும் தங்கள் வாழக்கையிலேயே விரும்பினாலும், மணமகனின் பெற்றோர் ஏற்றுக் கொண்டபோதிலும், உறவுகள் ஏற்காததால். அது கைவிடப்பட்டது. இதுபோல இன்னொரு நிகழ்வையும் பார்ப்போம்.

    நட்பும் உறவும்: ஒரு பெற்றோருக்கு ஓர் ஆண்மகன் ஒரு மகள் என இரு குழந்தைகள். அண்ணன் – தங்கை என்ற உறவில் இருவரும் பாசமாயிருந்தனர்.

    காலம் உருண்டோடியது. அண்ணன் நல்ல கல்வி கற்று, கற்ற நல்லவைகளைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்தார். அவருக்குத் திருமானது. அவரது மனைவி வந்த பின், பல சமயங்களில் இவரது நல்ல பழக்கங்களைத் தொடர முடியாத நிலை உண்டானது.

    இவரது பழக்கம்; உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேடங்களுக்கு அவர்கள் நேரில் வந்து அழைக்க வேண்டுமென எதிர்பார்க்க மாட்டார். தபாலில் அனுப்பினாலும் போனில் அழைத்தாலும், கட்டாயம் சென்று வருவார். இயலாத நிலையில் வாழ்த்துக்கடிதம்  அனுப்புவார்.

    இது இவரது மனைவிக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நேரில் வந்து அழைத்தால் மட்டுமே செல்ல வேண்டும் என்ற கொள்கை உடையவர். பலமுறை இருவரும் விவாதம் செய்தும் காஷ்மீர் பிரச்னை போல் முடிவு எடுக்க முடியாமலேயே நிலுவையில் உள்ளது.

    காலப் போக்கில் இவர்களது நண்பர்கள் வீட்டு விசேடங்களுக்கு, நேரில் அழைப்பு இல்லாவிட்டாலும் கலந்து கொள்வதென்ற முடிவை மனைவி ஏற்றுக் கொண்டார்.

    ஆனால், உறவைப் பொறுத்தவரை, நேரில் வந்து முறைப்படி அழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

    இந்த மனைவியின் அண்ணன் மகனுக்கு மொட்டை அடித்து, காது குத்துவதற்கு, அண்ணி வந்து அழைத்துச் சென்றார். ஆனால் அண்ணனும் வந்து தேங்காய் பழத்தட்டு வைத்து அழைக்கவில்லையெனச் செல்லவில்லை. அந்த நாளில் அவர்கள் தொலைவில் உள்ள வெளியூருக்குச் சென்று விட்டனர்.

    கணவனின் தங்கை மகள் திருமண ஏற்பாடுகள் நடை பெற்றன. மாப்பிள்ளை பார்த்து உறுதி செய்த பின், தங்கை தன் அண்ணனுக்கு போனில் விபரங்கள் சொன்னாள். ஒரு நாளில் உப்பு சர்க்கரை வாங்குவதற்கு வருமாறு போனில் அழைத்தாள்.

    ஒரே தங்கை. தன் மகளுக்குச் சரியான மாப்பிள்ளை தேடுவதற்குத்தான் தன்னை அழைக்கவில்லை. உப்பு  சர்க்கரை வாங்கும் நிகழ்ச்சிக்கு நேரில் வந்து அழைத்திருக்கலாம் என்ற நெருடல் மனதுள் எழுந்தது.

    சரி, ஏதோ பல வேலைகள் இருந்திருக்கலாம்; ஆனால் நேரில் வர இயலவில்லை போலும் என சமாதானமானார்.

    ஆனால், இவரது மனைவிக்கு சமாதானமே இல்லை. இவர் தாய் மாமன்.  மாப்பிள்ளை பார்க்கும் போதே நேரில் வந்து சொல்லி அழைத்துச் சென்றிருக்க வேண்டும். உறுதி செய்த பின் ஒப்புக்கு உப்பு- சர்க்கரை வாங்க போனில் அழைப்பது எந்த வகையில் நியாயம்? இதற்கு செல்லக் கூடாது எனத் தடை விதித்தார்.

    நேரில் வந்து அழைத்தால் மட்டும் உப்பு சர்க்கரை வாங்கச் செல்ல வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார். ஆனால் அண்ணனோ, என்ன சமாதானம் சொல்லியும் தன் மனைவியின் முடிவை மாற்ற முடியவில்லை.

    கடைசியில் தான் மட்டும் சென்று வருவதாய் கூறினார்.இப்போதே உதாசீனப் படுத்துபவள், தன் கணவன் மட்டும் சென்றால் அண்ணி என்ற உறவை, எதிர்காலத்தில் மதிக்கவே மாட்டாள். எனவே அவரும் சொல்லக் கூடாது; மீறிச் சென்றால், தான் இவருடன் சேர்ந்து வாழ்வதைப் பற்றி யோசிக்க வேண்டிய நிலை உருவாகும் என எச்சரித்தார்.

    இது வரை தன் மனைவி இது போல் பேசியதில்லை என்பதால்,இவரும் ஆடிப் போய் விட்டார்.  தங்கையின் வீட்டு விசேடத்துக்குச் செல்லவில்லை.

    குற்றம் பார்த்தால் சுற்றமில்லை என்ற சொற்களின் பொருள் புரிந்தது. இந்த அப்பாவி அண்ணனைப் போலிருக்காமல் மனதுக்கு நல்லது எனப்பட்டதைச் செய்யும் துணிவைப் பெறுவது சிறப்பு.

    எதார்த்தம் என்பது என்ன?

    எத்தரப்புக்கும் அதிக சேதமில்லாமல் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொள்வதைச் செய்வது.

    பட்டுப்புடவை நிகழ்வில் உறவினர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். பல  ஆயிரம் புழுக்களைக் கொன்று தயாரித்த பட்டுப் புடவையைத் தொடர்ந்து உபயோகிக்கவும் கூடாது. இந்த நிலையில் சிறிது விட்டுக் கொடுத்து மணப் பெண், மற்றவர்களது திருப்திக்காக திருமணத்துக்கு மட்டும் அணிவது; அதன் பின் அணிவதில்லை என்று எடுத்த முடிவு பெரும்பாலானவர்களுக்கும் பாதிப்பில்லாத முடிவு.

    அண்ணன்- தங்கை உறவு என்பது அண்ணி வருவதற்கு முன்னாலிருந்தே இருப்பது எனவே, கணவன்- மனைவியை சமாதானப் படுத்த போன் மூலம் உப்பு- சர்க்கரைக்கான அழைப்பைப் பெற்றதால், போன் மூலமே விசாரித்தது. சரி; இவரது குடும்பத்தில் பிரச்னை தோன்றாமல் செய்து விட்டார்.

    அதன் பின் தங்கை நேரில் வந்து தன் மகளின் திருமணத்துக்கு அழைத்த போது, அண்ணன் – அண்ணியை சமாதானப்படுத்தி, எவ்வளவோ பேர் திருமணத்துக்குச் செல்வது போல் இதற்கும் சென்று வந்து விடலாம் என அழைத்துச் சென்று வந்தார்.

    உறவுகளுக்குள் விரிசல் மற்றவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இதுவே எதார்த்தம்.

    விட்டுக்கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை.

    வாழ்க வளமுடன்.

    நீள் ஆயுள் அவசியமா?

    அன்பு நண்பர்களே! இப்ப படும்பாடு போதாதா? இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து பட வேண்டுமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனக்கெல்லாம் அவ்வளவு ஆசை கிடையாதுங்க! விதி வந்தால் மூட்டையைக் கட்ட வேண்டியதுதாங்க! என்று இருப்பவரா நீங்கள். நான் உங்கள் ஆசைக்கு நடுவில் நிற்க விரும்பவில்லை. உங்கள் வாழ்க்கை முடிவுகளை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன் இவைகள் உங்களுக்கு உதவுமா என்று பாருங்கள்.

    1. வாழத் தயாரானால் போதுமா?: இன்றைய விஞ்ஞான உலகத்தில் நாம் கல்வி கற்றுத் தேறி, ஒரு நிலையான சம்பாத்தியத்திற்கு வருவதற்கு வயது 30க்கு மேல் ஆகிறது. இவ்வளவு காலம் தயாராகிவிட்டு, ஏதோ இருக்கும் வரை இருக்கிறேன், விதி வந்தால் போய் சேர்கிறேன் என்று கூறுவது நியாயமா? தயாரானது வாழ்வதற்கா அல்லது வாழத்தெரியாமல் வீழ்வதற்கா?
    2. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் பொறுப்பில்லையா?: அடுத்து வரும் தலைமுறைக்கு நாம் நம் பெற்றவர்களிடம் பெற்ற உதவியைப்போல் நம் பிள்ளைகளுக்கு நாம் கைமாறு செய்ய வேண்டுமாயின் நாம் அவர்களின் முப்பது வயது தாண்டி வாழ வேண்டும் அல்லவா? அதாவது, நாம் 60ஐத் தாண்டி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அல்லவா?
    3. சமுதாயக் கடன் அடைக்க வேண்டாமா?: நாம் தயாராவதற்கு இந்தச் சமுதாயத்திலிருந்து பல்வேறு உதவிகளையும், இந்த பூமியிலிருந்து பொருள்களையும் பெற்றுக் கொண்டு, அந்தக் கடனைக் ‘கடமை’ (கடன் ‘ உடமை) என்ற வடிவில் திருப்பிக்கொடுக்காமல் டாடா பை பை! சொல்ல நினைப்பது நியாமா?
    4. முன்னுதாரண வழிகாட்டியாக வேண்டாமா?: வாழத் தெரியாதோர் பலர் இவ்வுலகில் திண்டாடிக் கொண்டிருக்க, நாம் அவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து வழிகாட்டலாம் தானே? அதற்கு பதிலாக இங்கு யாருமே சரியில்லை! இந்த உலகமே சுத்த ஃப்ராடு என்று முத்திரை குத்திவிட்டு கிளம்புவது நியாயமா?
    5. வாழ்வின் மூன்று கட்டங்களைப் பார்க்க வேண்டாமா?: வாழ்வின் முதல் 30 வருடம் தயாரிப்பு காலம். இதில் கவலை அதிகமில்லை. ஆனால், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷமும் அதை அனுபவிக்க நேரமும் நமக்கு கிடைக்கும். இரண்டாவது 30 வருடம் நாம் செல்வம் சேர்க்கும் காலம். இப்பொழுது பணமும் பொறுப்பும் அதிகமிருக்கும். ஆனால் அனுபவிக்க நேரம் இருக்காது. மூன்றாவது 30 வருடத்தில் பணமும் நேரமும் இருக்கும். ஆனால், அதை அனுபவிக்க ஆரோக்கியம் குறைந்திருக்கும். ஆக, இந்த மூன்று காலங்களையும் சமநிலையோடு வாழ்ந்து பார்க்க வேண்டாமா?
    6. நம்மைச் சார்ந்தவர்களை நடு வழியிலேயே விட்டு ஓடலாமா?: எனக்கு வாழப்பிடிக்கவில்லை, ஆகவே நான் கிளம்புகிறேன் என்று நம்மால் இந்த உலகத்திற்கு வந்த பிள்ளைகளையும் நம்மை நம்பி வந்த வாழ்க்கைத் துணைக்கும் ஏதும் ஏற்பாடு செய்யாமல் தப்பிக்க நினைப்பது நியாயமா?
    7. நம்மைப் பெற்றவர்களைவிட முந்திக்கொள்வது நியாயமா?: நாம் உருவாகவும் வளரவும் காரணமாக இருந்த பெற்றோர்களை முந்திக்கொண்டு போய்ச் சேர்வது நியாயமா? அவர்களுக்கு நாம் ஏதும் திருப்பிக் கொடுக்கவோ திருப்பிச் செய்யவோ வேண்டாமா?
    8. பிறவிப் பெருங்கடல் நீந்த வேண்டாமா?: கிடைத்த இந்தப் பிறவிக்குள் ஆன்மப் பதிவை காலி செய்து இனி வேறு பிறவி வேண்டாம் என்று புத்திசாலியாக வேண்டாமா? ஒவ்வொரு பிறவியையும் தயாரிப்பு நிலையிலேயே முடித்துக்கொண்டு திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதுதான் நம் வேலையா? இந்த இப்பிறவியே சுமையாக இருக்கும்போது மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க விரும்புவோமா?
    9. ஞானம் பெற வேண்டாமா?: ஞானம் ஞானம் என்று ஏதோ சொல்கிறார்களே அது என்ன என்று ஒரு கை பார்க்க வேண்டாமா? வாழும் பொறுமை இல்லாது ஞான சூன்யமாக ஏதோ வாழ்ந்தோம், போனோம் என்று இருக்கலாமா?

    கிடைத்த இப்பிறவியை முழுமையாகப் பயன்படுத்துவதே ஞானத்தனம்

    அடுத்த பிறவியில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருப்பது மடத்தனம்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி

    படித்தவர்களை விட படிக்காதவர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார் என்ற பொதுவான கருத்து ஒன்று உண்டு. நிச்சயம் அந்தக் கருத்து ஏற்புடையது தானா..? அது பற்றிச் சொல்லுங்கள்?

    பிரவீன்ராஜ், தனியார் ஊழியர்

    சிவகங்கை மாவட்டம்

    படித்தவர்களை விட படிக்காதவர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது ஒரு பேச்சு; ஆனால் அது பொதுவான கருத்து என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட பேச்சுக்கள் ஏற்புடையது தானா என்றால், ஏற்புடையது அல்ல என்று தான் பதில் சொல்ல வேண்டும்.

    எடுத்துக்காட்டு:

    கல்வித்துறையைப் பார்ப்போம். படிக்காத ஒரு நபர் பள்ளி காவலாளி, பட்டயப்படிப்பு படித்தவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர், பட்டப்படிப்பு படித்தவர் இடைநிலைப்பள்ளி ஆசிரியர், முதுநிலைப் பட்டப்படிப்பு படித்தவர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், முனைவர் (Ph.D) படிப்பு படித்தவர் கல்லூரிப் பேராசிரியர் என்று பணியாற்றுவதைப் பார்க்கிறோம். இவர்கள் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப ஊதியம் தரப்படுகிறது. காவலாளிக்கு குறைந்த ஊதியம், கல்லூரிப் பேராசிரியருக்கு அதிகப்பட்ச ஊதியம். இவர்களுக்குள் கல்வி என்ற வேறுபாட்டைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்..? ஆக இங்கு படித்தவர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள். அதுவும் உயர்கல்வி அடிப்படையில் சம்பளம் அதிகரிக்கிறது.

    இப்போது நீங்கள் ஒருகேள்வி கேட்கக்கூடும். சரி, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்பிற்கேற்ப ஊதியம் என்பது இருக்கட்டும். இவர்கள் படித்தவர்கள்; ஆனால் ஒன்றுமே படிக்காத ஒருவர்தானே பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்..? அவருக்குத் தானே அதிக வருமானம், அது எப்படி..?

    தொழில் முனைவர்கள்:

    இந்தக் கேள்வி ஒரு நியாயமான கேள்வி. ஆனால் இந்தக் கேள்வியை நீங்கள் நன்கு ஆராயவேண்டும். இன்றெல்லாம் பள்ளிகளையும், கல்லூரிகளையும் தோற்றுவிப்பவர்கள் அனைவருமே படிக்காதவர்கள் அல்ல. சென்னை SSN பொறியியல் கல்லூரியைத் தோற்றுவித்த சிவ நாடார் கோவை PSG கல்லூரியில் பொறியியல் படித்தவர், இந்துஸ்தான் கம்யூட்டர் நிறுவனத்தை (HCL) தோற்றுவித்த முன்னணி தொழிலதிபர்.

    படிக்காதவர்கள் பலரும் கல்வி நிறுவனங்களை நிறுவி, வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர் என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பட்ட கல்விச்சாலை நிறுவனர்களை எப்படிப் படிக்காதவர்கள் என்று சொல்ல முடியும்..? அவர்கள் பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் படிக்காதவர்கள் எனலாம். காமராஜர் கல்லூரியில் படிக்கவில்லை, ஆனால் அவர் படிக்காதவரா..? இல்லை. அவர் அரசியல் களம், சிறைச்சாலை, சுதந்திரப் போராட்ட களம், பத்திரிக்கைகள், அரசுஅறிக்கைகள், வெள்ளையர்கள், அரசு அதிகாரிகள் என்று பல இடங்களில் பலரிடம் பல உண்மைகளைக் கற்றுக் கொண்டார். எனவே தான் அவர் ஒரு நல்ல ஆட்சியைத் தமிழகத்திற்குத் தந்தார். அவரிடம் இருந்த நேர்மைக் குணமும், எளிமையும், பகுத்தறிவும் கல்வி கற்றவர் பலரிடம் இல்லை.

    உண்மைக்கல்வி:

    படிக்காத ஒரு பெரியவர் கல்லூரி ஒன்றை நிறுவி, படாதபாடுபட்டு, அதை பெரிய கல்லூரியாக வளர்த்து, பெரும் வருமானமும் சம்பாதிக்கும் நிலையில் அவரைப் படிக்காதவர் என்று ஏளனம் செய்யும் மனப்பான்மை பலரிடம் இருக்கிறது. இது நல்ல மனப்பான்மை இல்லை.  ஏனெற்றால் இந்தக் கல்லூரி நிறுவனருக்கு கனவு ஒன்று பெரிதாக இருக்கிறது.  நான் படிக்கவில்லை, என்றாலும் பலரைப் படிக்க வைக்க வேண்டும் என்ற உயர்நோக்க கனவு அது. அந்தப் பெரிய கனவை நனவாக்க, மன தைரியம் இருந்திருக்கிறது. நிலம் தேர்வு செய்து, பத்திர பதிவு செய்து, அரசு அனுமதியும் வாங்கியிருக்கிறார். இதற்கு இவர் எத்தனைப் பேராசை படைத்தவர்களையும், நேர்மையற்ற அதிகாரிகளையும் பாத்திருப்பார்.?எத்தனை தடைகளைத் தாண்டியிருப்பார்? எத்தனைத் துரோகிகளிடம் சிக்கிருப்பார்? இவை அனைத்தும் வாழ்க்கைப் பாடங்கள். அதுவும் நடைமுறைப் பாடங்கள். இவை வகுப்பில் மனப்பாடம் செய்து கற்ற பாடங்களை விட ஆழமானவை. இந்தக்கல்லூரி துவக்கும் முயற்சிகளில் தோற்று, கல்லூரியை நிறுவ முடியாமல் திணறி சிறுக சிறுக சேர்த்தப் பணத்தை முற்றிலுமாக இழந்து; கடனாளியாக நிற்கும் கல்லூரி நிறுவனங்கள் ஏராளம். அவர்கள் நம் கண்களுக்குத் தெரியமாட்டார்கள். மீதமுள்ள வெற்றி பெற்ற கல்லூரி நிறுவனர்கள் தான் நம் கண்களுக்குத் தெரிகின்றனர். அவர்களது வருமானத்தை ஒப்பிட்டுத்தான், படிக்காதவர்களுக்கு சம்பளம் அதிகம் என்றும் பேசுகிறோம். இப்படி அனுபவங்கள் மூலமும், நூல்கள் மூலமும், நடைமுறை மூலமும், தோல்விகள் மூலமும் கற்பவர்களும் “படித்தவர்கள்” தான்.

    படிக்காதவர்:

    அப்படி என்றால் படிக்காதவர்கள் என்பவர் யார்? என்று நீங்கள் கேட்க்கலாம். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாதவர்கள், வரவு செலவு பார்க்கத் தெரியாதவர்கள், மக்களைப் பற்றி கல்வியறிவு (Human psychology) இல்லாதவர்கள், ஊதாரித்தனம் உள்ளவர்கள், சோம்பேறிகள், கனவு இல்லாதவர்கள், உலக நடப்புத் தெரியாதவர்கள், புத்தகம் வாசிக்க மறுப்பவர்கள், மனிதர்களை வெறுப்பவர்கள், ஏழைகளுக்கு உதவாதவர்கள், விஞ்ஞானத்தை நம்பாதவர்கள், மூடநம்பிக்கைகாரர்கள், சாதி வெறியர்கள், குழந்தைகளையும், பெண்களையும் அடிமையாக நடத்துபவர்கள், நேர்மையற்றவர்கள் இவர்களைப் படிக்காதவர்கள் எனலாம். வளர்ந்த நாடுகளில், இப்படிப்பட்டவர்கள் எதையும் சம்பாதிக்க முடியாது. ஆனால் நமது நாட்டில் மட்டும் பாரம்பரியச் சொத்துக்கள் தானாக வாரிசுகளுக்கு வந்து விடுவதால் நாம் குறிப்பிட்ட படிக்காதவர்களுக்குக் கூட சொத்தும், வருமானமும், மரியாதையும்  வந்து விடுகிறது. ஆனால் அந்த வருமானம் நிலையாக நிற்காது. பெரிய நிறுவனங்கள் பல படிக்காத வாரிசுகள் கையில் சிக்கி சின்னாபின்னமாவதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கிறீர்கள். இவர்கள் வெளிநாட்டுக் கல்லூரிகளில் படிக்கச் சென்றவர்கள், ஆனால் அங்கு எதையும் படித்ததாகத் தெரியவில்லை. பணச்செருக்கும், வறட்டு கவுரவமும், கஞ்சத்தன்மையும், முட்டாள்தனமும் இவர்களைப் படிக்காதவனாக்கி விடுகிறது.

    படிப்பிற்கேற்ற ஊதியம்:

    இறுதியாக ஒன்றை சொல்கிறேன். சென்னை IIT என்ற கல்வி நிறுவனத்தில் 100 மாணவர்களுக்கு வேலை கிடைத்தது. அதில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 1.2 கோடி ஊதியம், இன்னொரு மாணவருக்கு 6 லட்சம் ஊதியம்; மற்றவர்களுக்கு இடைப்பட்ட ஊதியம். ஓரே கல்லூரி, ஒரே B.E பட்டப்படிப்பு, அதே வகுப்பு, அதே பாடங்கள் ஆனால் ஒருவருக்கு 120 லட்சம் ஊதியம்; இன்னொறுவருக்கு  6 லட்சம் ஊதியம். பட்டம் ஒன்றென்றாலும் சம்பளத்தில் பெரிய வேறுபாடு, படிப்பிற்கேற்ற ஊதியம் புரிகிறது அல்லவா..?

    படிப்பின் ஆற்றலை உங்களுக்குப் புரிய வைக்க சிலரது ஊதியத்தைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

    இவர்கள் அனைவரும் இந்தியர்களே! இவர்கள் தொழிலதிபர்கள் அல்ல! ஊதியம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகள். இவர்களை நிறுவன சூப்பர் ஸ்டார்கள் எனலாம்.

    உங்கள் கவலை: 

    உங்கள் கவலை என்ன என்பது எனக்குப் புலப்படுகிறது. சினிமாக்காரர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் எந்த படிப்பும் இல்லாமல் எந்த தொழிலும் செய்யாமல் பெருஞ்செல்வந்தர்கள் ஆகிவிட்டார்களே! இவர்கள் என்னதான் படித்தார்கள்? என்பது உங்கள் கவலை. சினிமாத்துறை, கிரிகெட் விளையாட்டு போன்றவை பொழுது போக்குகள். இங்கு படிக்காதவர்கள் கூட வெற்றி பெற்று விட்டால் பெரிய வருமானம் வந்து விடுகிறது. ஆனால் இவர்கள் பல போட்டிகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. விளையாட்டுத்திறன் அல்லது நடிப்புத்திறன் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியாக வேண்டும். அது மக்களுக்குப் பிடிக்க வேண்டும்; அவர்களுக்கென்று ஒரு கிராக்கி(craze) இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பல கோடி ரூபாய்கள் சம்பளம் கிடைக்கும். இது உலக நியதி. இதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இதில் தவறில்லை.!

    இன்னொரு உண்மை உங்கள் மனதை நெருடும் என்பதை நான் அறிவேன். படிக்காதவர்கள் ஒரு அதிகாரத்தில் வந்த உடன் ஊழல் புரிந்து பல கோடி சம்பாதிக்கிறார்களே! மணல் அள்ளியவர்கள் கோடிஸ்வரர்களாக இருந்திருக்கிறார்களே! ஒப்பந்தப்பணி எடுத்தவர்கள் அதிகம் சம்பாதித்து விட்டார்களே! என்பது தான் அது. இது உண்மைதான், இங்கு படிக்காதவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் இது வருமானம் அல்ல, இது கொள்ளை. கொள்ளை அடிப்பது ஒரு குற்றம். அதைச் செய்பவர்கள் குற்றவாளிகள். குற்றவாளியாக இருந்து ஒரு நாள் பிடிப்பட்டு ஜெயிலுக்குப் போக வேண்டியவர்களைப் பற்றி ஏன் நாம் கவலைப்பட வேண்டும்..? அவர்களைப் போன்றவரின் வருமானம், அதாவது உழைக்காமலேயே சாம்பாதிக்கும் வருமானத்திற்கு ஏன் ஆசைப்பட வேண்டும்? வேண்டாம், வேண்டவே வேண்டாம். நியாமான வருமானம், நமது படிப்பிற்கேற்ற வருமானம், அது குறைவாக இருந்தாலும் நமக்கு அது போதும்.!

    முடிவு:

    படித்தவர்களே சம்பாதிக்கிறார்கள்; ஆனால் அந்தப் படிப்பு கல்லூரிகளுக்கு வெளியில் படிக்கும் படிப்பும், அவரவர் சொந்த முயற்சியால் படிக்கும் படிப்பும் அடங்கும்.

    மருத்துவத்தில் மகத்துவம் மகப்பேறில் தனித்துவம்

    டாக்டர் சவிதா அசோக் MBBS.,DGO.,ART(Fellow)

    ஸ்ரீ சக்ரா மருத்துவமனை, சக்தி கருத்தரிப்பு மையம்

    உடுமலைப்பேட்டை

    எந்த ஒரு சாதனைக்கும் வயது தடை இல்லை, சிறிய வயதில் பெரிய துறையைத் தேர்தெடுத்து கொழுந்து விட்டு எரியும் தன்னம்பிக்கையோடு வெற்றி பெற வேண்டும் என உழைத்துக் கொண்டுயிருப்பவர்.

    மேலை நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வரும் நகர்புற மருத்துவ வளர்ச்சிகளை சிறு கிராமமும் சென்றடைய வேண்டும் என உறுதியாய் உழைப்பவர்.

    சேவை மனப்பான்மையோடு இனி எல்லா குழந்தையில்லா தம்பதியர்க்கும் குழந்தை பெற்று தர வேண்டும் என்ற குறிக்கோளில் பல திட்டத்தைச் செயல்படுத்தி அதன் மூலம் சாத்தியப்படுத்தி வருபவர்.

    கால மாற்றத்திற்கு ஏற்ப உடுமலையில் பல நவீன மருத்துவ தொழில் நுட்பக் கருவிகளை நிறுவி அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு மேலை நாடுகளைப் போல சிறந்த சிகிச்சை அளிப்பதில் முதன்மையாக விளங்குபவர்.

    ஸ்ரீ சக்ரா மருத்துவமனையில் சக்தி கருத்தரிப்பு மையத்தின் தலைமை மருத்துவர் சவிதா அசோக் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

    கே : உங்களைப் பற்றி ?

    தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் சிவகாசியில் வேளாண் குடும்பத்தில் திரு வெள்ளைச்சாமி திருமதி நிர்மலா தம்பதியருக்கு ஒரே மகளாகப்பிறந்தேன். சின்ன வயதிலிருந்தே நன்றாகப் படிக்கும் பழக்கம் எனக்கிருந்தது. இதனால் கல்வியில் சிறந்து விளங்கினேன். தொடக்கப்பள்ளி லயன்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியிலும், மேல்நிலைப்பள்ளியை SNG பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றேன். இந்தப்பள்ளியில் படிக்கும் போது தான் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன். அது போலவே பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களையும் வாங்கினேன். இது இன்றும் என் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கிறது.  படிக்கும் போதே வகுப்பில் ஆசிரியர்கள் எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக வருவீர்கள் என்று எல்லா மாணவ மாணவிகளிடமும் கேட்பார்கள்; அப்படிக் கேட்கும் போது நாம் எப்போதும் ஒரு மருத்துவராக தான் வரவேண்டும் என்று சொல்வேன். இந்த வார்த்தை வெறும் வார்த்தையாக வரவில்லை. என்னுடைய  ஆசையாகவும், ஆதங்கமாகவும் வந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

    ஆசை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இருப்பதால் எவ்விதப் பயனும் இல்லை. ஓரு குறிக்கோளை அடைய வேண்டும் என்றால் அதற்கு நிறைய முயற்சிகளும் பயிற்சிகளும் அதிகளவில் எடுக்க வேண்டும். இதனால் தினந்தினம் என்னை நன்றாகத் தயார்படுத்திக் கொண்டேன். பள்ளி அளவில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வும் பெற்றேன். நல்ல மதிப்பெண் எடுத்ததால் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். என்னுடைய கல்லூரிப்படிப்பை  புதுச்சேரி AVMC கல்லூரியில் முடிந்தேன். என்னுடைய முதுகலை மருத்துவப்படிப்பை பி.எஸ்.ஜி கல்லூரியில் முடித்தேன். அதே சமயத்தில் டெஸ்ட் டியூப் பேபி சம்மந்தமான படிப்பை இந்தியாவிலேயே சிறந்த 10 மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றான NADKARNI 21 ST CENTURY HOSPITAL & TEST TUBE BABY CENTER யில் பயின்றேன். பயிலும் போதே நிறைய கருத்தரங்குகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியும், கலந்தும் வந்தேன்.

    கே : நீங்கள் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தது குறித்து?

    விவசாயத்தை பரம்பரையாக பின்பற்றி வரும் எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை மருத்துவர். எல்லா பெற்றோர்களும் எண்ணுவதுபோல், என் பெற்றோரும்   என்னை ஒரு மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள். பொதுவாக மருத்துவர் என்பவர்கள் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுவார்கள். மருத்துவத்துறை மகவும் சுவாரசியம் மிக்கது. மனித வாழ்வில் ஒவ்வொரு நகர்தலிலும் ஏதேனும் ஒரு விதத்தில் மருத்துவர்கள்  துணை நின்றிருப்பார்கள். நான் வெறும் பட்டத்திற்காக மட்டும் இந்த மருத்துவப் படிப்பைப் படிக்க வில்லை.  ஒரு பெரும் மாற்றத்திற்காகத் தான் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.

    மருத்துவம் என்றாலே சேவை என்று சொல்வார்கள். இந்தசேவையை என் வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும் என்று நினைத்துத் தான் இந்தத் துறையையே நான் தேர்தெடுத்தேன்.

    கே : மருத்துவத்துறையில் பலதுறைகள் இருக்கும் பொழுது கருத்தரித்தல் துறையைத் தேர்ந்தெடுத்ததுபற்றி?

    எல்லாத் துறையும் போன்று, மருத்துவத்திலும் பலதுறைகள் உண்டு. ஆனால் என்னைப் பெரிதும் நேசிக்க வைத்தது  இந்தக் கருத்தரித்தல் துறையே.

    ஒரு பெண்ணாய் நான் மிகவும் நேசித்தத் துறை இதுவாகும்.  திருமணம் ஆகி ஒரு பெண்ணுக்கு குழந்தைப் பேறு இல்லையென்றால் அந்தப் பெண்ணை இந்தச்சமுதாயத்தில் வார்த்தை சூட்டால் சுட்டெரித்து விடுவார்கள். எந்த தவறும் செய்யாத எத்தனையோ பெண்கள் இன்று பல சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.

    குழந்தையின்மை காரணமாக பல பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று நாம் இன்றும் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பார்க்கிறோம். நான் மருத்துவம் படித்ததே இந்தக்குறையைப் போக்கி நல்ல ஒரு சேவையை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தான். இங்கு நிறைய மருத்துவமனைகளும் மருத்துவர்களும் உண்டு. அவரவர் ஏதேனும் ஒரு துறையில் வல்லுநர்களாக இருப்பார்கள். நாமும் அவர்களைப் போல வித்தியாசமான துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்துப் படித்தது தான் இந்த கருத்தரித்தல் துறை. இது தாய்மையைப் போற்றும் ஒரு உன்னதமான துறை என்றால் அது மிகையாகாது.

    கே: ஸ்ரீ சக்ரா மருத்துவமனையில் சக்தி கருத்தரிப்பு மையம் துவக்கப்பட்டது பற்றிச் சொல்லுங்கள்?

    உடுமலை, பொள்ளாச்சி போன்ற கொங்கு மண்டல பகுதியில் 150 க்கும் மேலான கிராமங்கள் உண்டு . இந்தக் கிராமங்கள் அனைத்திலும் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் நல்ல மருத்துவமனை இப்பகுதியில் இல்லை. சாதாரண பிரச்சனை என்றால் கூட பல மையில் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இங்கு வாழும் மக்களின் சில மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல வருடங்களுக்கு முன் துவங்கப்பட்டது தான் ஸ்ரீ சக்ரா மருத்துவமனை.

    சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக அனைத்து மருத்துவமும் ஒரே இடத்தில் கிடைக்கும் படி கொண்டு வர திட்டமிட்டோம். SCAN,X-RAY,ADVANCED LABORATORY,LAPAROSCOPY SURGERIES என அனைத்தையும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்து வைத்தோம். எங்கள் மருத்துவமனை துவக்கப்பட்ட சில மாதங்களிலேயே எங்கள் மருத்துமனை சேவையைப் பாராட்டி ISO  தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வயிறு அறுவை சிகிச்சைகள், புற்று நோய் அறுவை சிகிச்சைகள் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையில் ஆர்தொரோ கோபி மூட்டு அறுவை சிகிச்சைகள்  என அனைத்து அறுவை சிகிச்சைகளும் உடுமலையில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி முதன்மையான மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது.

    கே : சக்தி கருத்தரிப்பு மையம் உருவானது பற்றிச் சொல்லுங்கள்?

    இது என்னுடைய நீண்ட நாள் கனவு என்றே சொல்லாம். அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் தொடங்கப்பட்டது தான் இந்தக் கருத்தரிப்பு மையம். குழந்தையில்லா ஏழை தம்பதிகள் பயன் பெறும் வகையில் சக்தி கருத்தரிப்பு மையம் என்ற பெயரில் தமிழக அரசு அங்கீகாரத்துடன் தொடங்கப்பட்டோம்.

    திருமணமான அனைவருக்கும் குழந்தைப் பேறு கிடைப்பதில்லை. தாய்மை அடைந்தால் மட்டுமே ஒரு பெண்ணை இந்தச் சமுதாயம் முழுமையடைந்த பெண்ணாகப் பார்க்கும். அப்படியிருக்கும் போது ஏதேனும் சில காரணங்களால் சில பெண்களுக்குத் தாய்மை என்ற குணமே இல்லாமல் போய்விடுகிறது. இவர்களின் மீது அக்கரைக் கொண்டு உருவானது தான் இந்தக் கருத்தரிப்பு மையம். வசதியில்லாத ஏழைப் பெண்களுக்கு இந்தத்திட்டம் போய்ச் சேர வேண்டும் என்பதுவே எங்களின் நோக்கமாக இருக்கிறது.

    கே: சக்தி கருத்தரிப்பு மையத்தின் மூலம் செய்து வரும் சமூக சேவைகள் பற்ற?

    இத்திட்டத்தின் மூலம்  பல சமூக நலத்திட்டங்களை மக்களுக்குச் செய்து வருகிறோம்.

    இளம் பருவ பெண்களுக்கு ஆரோக்கியக் கருத்தரங்குகள் அரசு தனியார் பள்ளி, கல்லூரிகளில் அதன் வளாகத்திற்கேச் சென்று கருத்தரங்குகள் நடத்தி விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச யோகா, உடற்பயிற்சி போன்றவை எங்களது மருத்துவமனை கருத்தரங்கு அறையில் மாதம் ஒரு முறை நடத்தி வருகிறோம்.

    மலைவாழ் மக்கள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆலோசனை மையத்தின் மூலம் இலவச மருந்துகள் அளித்து வருகிறோம்.

    ஒவ்வொரு மாதமும் கிராமம், நகரங்களில், குழந்தையில்லாத் தம்பதியனருக்கு இலவச ஆலோசனை முகாம் நடத்தி வருகிறோம்.

    அருகில் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து வருகிறோம்.

    கே: சமீப காலமாக குழந்தையின்மை அதிகரிப்பு பரவலாக உள்ளது. அது பற்றி உங்களின் கருத்து?

    பெருகி வரும் நவீன நாகரிக உலகில் ஆண்களைப் போலவே பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள். வேலைக்குச் செல்வதை தவறு என்று சொல்லவில்லை, அது அவர்களின் குடும்ப சூழலாக இருக்கலாம், அல்லது வேறு எதாவது காரணமாகக் கூட இருக்கலாம். இன்றைய சூழலில் ஒரு குடும்பத்தில் தம்பதியர்கள் இருவரும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையும் இருக்கிறது.

    அதே போல சில ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண்கள் தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க திருமண வயது எட்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் வயது முதிர் கன்னியாகவே இருக்கிறார்கள்.

    இது போன்ற பெண்கள் மன அழுத்தம், உடற்பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். இதுவும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம் தான்.

    அதே போல இயற்கையிலேயே சில பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு அதிகளவில் இருக்கும். இந்தக் குறைபாடு ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது ஒன்று தான்.


    கே: குழந்தையில்லாத் தம்பதியர்கள் எப்போது சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?

    தம்பதியர்கள் எவ்வித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு வருட காலத்திற்கு தாம்பத்திய உறவை மேற்கொண்டும் கருத்தரிக்கவில்லை என்றால் அவர்கள் பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும். குழந்தைப்பேறின்மைக்கு 40 % ஆண்களிடமும், 40 % பெண்களிடமும், 10% இருவரிடமும், 10 % கண்டறிய முடியாத காரணங்களாலும் இருக்கும்.

    ஒரு ஆண் போதுமான அளவு நல்ல விந்தணுக்களை உற்பத்தி செய்து அந்த உயிர் அணுக்களை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கும் தன்மை உடையவராக இருக்க வேண்டும். இந்த விந்தணுக்கள் பெண்ணின் கரு முட்டைக்குள் சென்று கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.

    ஒரு பெண்ணின் கரு முட்டையின் உற்பத்தி சரியாக இருக்க வேண்டும் கரு வரும் வழி அடைப்பில்லாமல் இருக்க வேண்டும். கரு முட்டையின் விந்தணுவை ஏற்று கரு வளரக் கூடிய அளவுக்கு பலமுள்ள நிலையில் கருப்பை இருக்க வேண்டும்.

    ஆண்களுக்ளுக்கான மலட்டுத்தன்மைகளின் காரணங்கள்:

    ஹார்மோன் குறைபாடு, உடற்பருமன், நீண்ட கால தீவிர புகைப்படித்தல், மது அருந்துதல், விந்தணு மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்சனைகள், விந்து திரவத்தில் உயிரணுக்கள் குறைந்தோ (அ) இல்லாமலோ இருப்பது. விந்தணுக்களின் அசையும் திறன் குறைவாக இருப்பது (MOTILITY) உருவ அமைப்பு குறைபாடுகள் (MORPHOLIGY) சர்க்கரை வியாதி மரபுரீதியான நோய்களால் ஏற்படும் விந்தணு குறைபாடுகள் (GENETICS) போன்ற காரணங்கள் இருக்கிறது.

    பெண்களுக்கான காரணங்கள்:

    கருக்குழாய் அடைப்பு மற்றும் கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பையில் கட்டி, ஹார்மோன் குறைபாடுகளால் கரு முட்டைகள் உற்பத்தி ஆகாத நிலை, சினைப்பையில் அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் இருந்தும் முட்டை வளர்ச்சி முதிர்ச்சி பாதிக்கபடும் நிலை (PCOD) உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, தைராய்டு ஹார்மோன் தொந்தரவுகள் போன்றவைகள் பெண்களுக்கு ஏற்படும் காரணங்களாகும்.

    கே. குழந்தையில்லாப் பெண்கள் அனைவருக்கும் டெஸ்ட் டியூப் பேபி முறை தான் நிரந்தரத் தீர்வா?

    உலகில் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கும். அந்தத் தீர்வு நிரந்தரமாகக் கூட மாறலாம். அது அந்தப் பிரச்சனையை எவ்வளவு வெகுவாக கண்டறிந்தோம் என்பதில் தான் அதன் தீர்வு அடங்கியுள்ளது. அது போல தான் மருத்துவத்துறையிலும் எல்லாம் நன்றாக இருக்கும் பொழுது மருத்துவரை யாரும் அணுக மாட்டார்கள். ஏதேனும் உடலில் மாற்றம் ஏற்பட்டால் தான் அணுகுவார்கள். இது எல்லா விதமான நோய்களுக்கும் பொருந்தும்.

    அது போல தான் குழந்தையில்லாத் தம்பதியர்கள் ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பெறவில்லை என்றால் மருத்துவரை அணுகுவார்கள். மருத்துவர்களும் சில மருத்துவக் குறிப்புகளும், தாம்பத்திய உறவு முறைகள் குறித்தும் விளக்குவர். அதைப் பின்பற்றி நடந்தாலே சிலருக்கு குழந்தைப் பாக்கியம் கிடைத்து விடும். ஒரு சிலருக்கு பல மருத்துவ முறைகள் செய்தும் குழந்தைப்பேறு அடைவதில்லை, அப்படிப்பட்டவர்கள் தான் இந்த சிகிச்சைக்கு வருவார்கள். பெரும்பாலானவை சில ஹார்மோன் குறைபாடுகளை சீர் செய்தாலே வெற்றிகளைக் காண முடியும். உடலளவில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அவைகளை லேப்ராஸ்கோபி (அ) ஹிஸ்ட்ரோஸ்கோபி கருவிகள் முலம் அறுவை சிகிச்சை செய்தாலே குழந்தைப் பாக்கியம் பெறலாம். மிக சிலருக்கு மட்டுமே டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை முறை தேவைப்படும்.

    கே: டெஸ்ட் டியூப் பேபி எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது பற்றிச் சொல்லுங்கள்?

    செயற்கைக் கருத்தரித்தல் சிகிச்சை (ART)

    ஆய்வுக்கூடல், சோதனைக்குழாய் கருகட்டுதல் என்பது உடலுக்கு வெளியே பெண் உயிருடன் கரு முட்ûயுடன் ஆண் விந்துவை இணைத்து நிகழும் செயல் முறை. பொது வழக்கில் ஆங்கிலத்தில் இதனை(IVF) என்பர். இவ்வாறு பெரும் குழந்தைகளைப் பேச்சு வழக்கில் சோதனைக்குழாய் குழந்தைகள் (TEST TUBE BABY) என்று அழைப்பர்.

    இந்த செயல் முறையை 3 கட்டங்களாக செய்யப்படும்.

    1. கருமுட்டை சேகரித்தல்:

    பெண்ணின் சினைப்பை ஹார்மோன் பரிசோதனை செய்யப்பட்டு பிரத்யோக மருந்துகள் மூலம் 12-15 கருமுட்டைகள் மட்டும் முதிர்வடையச் செய்யபடுகின்றது. சரியான காலக்கட்டத்தில் முதிர்ந்த முட்டைகளை ஒரு ஊசி மூலம் வெளியே சேகரிப்படுகின்றன.

    1. ஒன்றாகச் சேர்த்தல்:

    ஆய்வகத்தில் உயிரணுவையும், முட்டையும் ஒன்றாகச் சேர்த்து கரு உருவாக்கம் செய்யப்படும். அதன் பின் கருப்பை ஒத்த காற்றின் அளவு, ஹார்மோன் அளவு, வெப்ப அளவு என அனைத்து உள்ள INCUBATOR என்னும் செயற்கைக் கருவில் வளர்க்கப்படுகிறது.

    1. கருவை கர்ப்பப்பைக்குள் செலுத்துதல்:

    நன்கு வளர்ந்த ஆரோக்கியமான கருக்கள் மட்டும் கண்டறியப்பட்டு பிரத்தேகக் கருவி மூலம் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படுகின்றது. பின்பு இந்தக் கரு இயற்கையான உருவான கரு போலவே நன்றாகத் கருவறையில் வளரத் தொடங்கும்.

    கே : நீங்கள் செய்த அறுவை சிகிச்சையில் உங்களால் மறக்க முடியாதது?

    மருத்துவருக்கு ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் தங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாதது தான். அந்த வகையில் ஒவ்வொரு சிகிச்சையும் ஒரு பாடமாக அவர்கள் மனதில் பதிந்திருக்கும். அதுபோல என் மருத்துவ வாழ்க்கையில் நிறைய இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்.

    மாதவிடாய் நின்ற பிறகும் 47 வயதான பெண்ணுக்கு டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை மூலம் குழந்தைப் பேறு அளித்திருக்கிறோம்.

    கருத்தடை செய்து கொண்ட தம்பதியருக்கும் 12 ஆண்டுகள் கழித்து மறு அறுவை சிகிச்சை மூலம் இயற்கை முறையில் கருத்தரித்தல் செய்திருக்கிறோம்.

    சிறு வயதிலேயே கரு முட்டைகளை இழந்த பெண்ணிற்கு முட்டை தானம் பெற்று மீண்டும் கருத்தரிக்கச் செய்தோம்.

    கருப்பை சிறிதாக உள்ள பெண்ணுக்குக் கருப்பையை வளர வைத்து கருத்தரிக்க செய்து குழந்தைப் பாக்கியம் பெற்று தந்தோம்.

    கே : ஒரு நிறுவனம் மேன்மை பெற வேண்டும் என்றால் ஊடகங்களின் முக்கியத்துவம் தேவையா?

    சமுதாயத்தின் நான்காவது மிகப்பெரிய தூண் ஊடகம். அந்த வகையில் ஊடகத்தின் பங்கு எங்கள் மருத்துவனைக்கு அதிகளவு உண்டு. ஊடகவியலார்கள் எதையும் உடனுக்குடனே நன்கு ஆராயாமல் எந்த செய்தியையும் வெளியிடமாட்டார்கள். அந்த வகையில் எங்கள் மருத்துவமனைக்கு ஊடகத்தால் நிறைய பயன் கிடைத்திருக்கிறது.

    நோய்க்கு நன்றாக சிகிச்சை அளிப்பதை விட நோய்களை பற்றி விழிப்புணர்வு அளிபவரே சிறந்த மருத்துவர். இதற்காக எங்களது மருத்துவமனையில் கணினி தொழிற்நுட்ப குழு செயல்பட்டு வருகிறது.

    அனைத்து நோய்களையும் விபரங்களையும் பற்றி அனிமேஷன், கருத்தரங்குகள், கட்டுரைகள் ஆகியவற்றை Facebook, Twitter,Google+ Website,Youtube போன்ற அனைத்து சமூக வலைதளங்களில் “SAKTHI FERTILITY” என்ற பெயரில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இவை அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    கே: எதிர்காலத்திட்டம் பற்றிச் சொல்லுங்கள்?

    எங்கள் சேவையானது செயற்கைக் கருத்தரிப்பு முறையில் அதிக செலவில் சிகிச்சை என்ற கருத்தினை மாற்றி குறைந்த செலவில் டெஸ்ட் டியூப் பேபி மருத்துவ வசதி இல்லாத  அனைத்து கிராமங்களிலும் எங்களது சேவையை வழங்குவதே தலையாய நோக்கமாகும். இதற்காக எங்களைப் போல் சேவை மனப்பான்மை உள்ள அனைத்து இளைய தலைமுறை மருத்துவர்களை எங்களோடு இணைத்து கொண்டு செய்யப்பட உள்ளோம்.

    கே : ஒரு பக்கம் மருத்துவமனையின் பெருக்கம், மற்றொரு பக்கம் நோய்களின் பெருக்கம் இது பற்றி?

    மக்கள் தொகையின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போவதால் தேவைகள் பெருகுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. இதனால் எல்லாவற்றிலும் வளர்ச்சியும் பெருக்கமும் தேவைப்படுகிறது.

    அதுமட்டுமின்றி வளர்ச்சியின் காரணமாக உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் தான் பல நோய்களுக்கு முதன்மைக்குக் காரணமாக இருக்கிறது. இதை எல்லாம் முறையாகக் கடைப்பிடித்தாலே பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

    கே :மருத்துவம் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?

    வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை அனைவருக்கும் இருக்க வேண்டும். வாழ்க்கையில் தெளிவான ஒரு இலக்கு வகுத்துக் கொள்ள வேண்டும். அந்த இலக்கை அடைய தீவிர உழைப்பு அவசியம், விடாமுயற்சி தான் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆற்றல் மிகு ஆயுதம்.

    இன்று எப்படி டாக்டாக ஆக வேண்டும் என்று இலட்சியம் இருக்கிறதோ? அது இறுதி வரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

    மருத்துவரானப் பின்னர் இன்னும் இருமடங்கு அதிகமாக உழைக்க வேண்டும். வயது ஆனாலும் புதுமையை உள் புகுத்திப் பார்க்க வேண்டும். எதையும் நான் முழுமையாக கற்றுணர்ந்து விட்டேன் என்று நினைக்கக்கூடாது.

    தனிமனிதனால் எதையும் சாதிக்க முடியம் என்ற நிலை தனக்குள் உருவாக்கிக் கொள்ளவும்  வேண்டும்.

    கே : குடும்பம் குறித்து?

    எனது கணவன் டாக்டர் அசோக் ஸ்ரீ சக்ரா மருத்துவமனையின் தலை லேப்ராஸ்கோபி சிகிச்சை நிபுணராக விளங்கி வருகிறார். மேலும் மருத்துவமனையில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் நல்ல மருத்துவராகவும், நல்ல கணவராகவும் இருக்கிறார்.  அதே சமயத்தில் குடும்ப வாழ்க்கையில் எனது மாமா, அத்தை திரு. முத்துகிருஷ்ணன் திருமதி. காஞ்சனா மற்றும் எனது கணவனின் சகோதரர் திரு. ஆனந்த் திருமதி. சபிதா ஆகியோர் எனக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் எப்போதுமே மருத்துவமனையின் வளர்ச்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதால் அவ்வபோது நல்ல ஆலோசனையும் வழங்கி வருகிறார்கள். இது எனக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

    கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு உங்களின் பொன் மொழிகள் என்ன?

    வெற்றியின் முதல் படியே தன்னம்பிக்கை  தான். தளராத மனத்தைத் தனக்குள்ளே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

    எதை நினைத்தாலும் உயர்வாகவும், தெளிவாகவும் கருத்தியல் தன்மையுடன் இருக்க வேண்டும். நல்ல நூல்களைப் படியுங்கள். நல்லோரிடம் நட்பு கொள்ளுங்கள். தினம் தினம் புதுமையை நோக்கி நகருங்கள். வாழ்க்கைச் சக்கரம் மிகவும் வேகமாகச் சுழலும் தன்மையுடையது. அந்த வேகத்திற்கு ஏற்றார் போல் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

    கஷ்டங்களை நினைத்துக் கவலைப்படாதீர்கள். அதைக் கடக்க என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் யோசியுங்கள். வெற்றியின் பிரமிப்பை அறிந்து கொள்ள முடியும்.

    உள்ளத்தோடு உள்ளம்

    ஒரு கிராமத்தில் மகா கருமி(கஞ்சன்) வசித்து வந்தான். அவன் தன் வாழ்நாள் முழுவதும் பணம் சேர்ப்பதிலேயே தீவிரமாக இருந்தான். இதற்காக அவன் நன்றாக சாப்பிடாமல், நல்ல ஆடைகள் அணியாமல், எந்த ஒரு இன்பத்தையும் அனுபவிக்காமல் மிகவும் கஞ்சத்தனமாக இருந்தான்.

    இப்படியாக அவன் தனது வாழ்நாளில் 10 கோடி ரூபாய் சேர்த்து விட்டான். இனி இந்தப் பணத்தைக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாகவும் சுகமாகவும் வாழலாம் என்று நினைத்திருந்தான்.

    அப்பொழுது அவனது உயிரைப் பறிக்க எமன் வந்ததைக் கண்டான். கண்டவுடன் அந்தக்கருமி திகைத்து அலறினான். ஐயா இத்தனை நாளும் என் வாழ்க்கையை சற்றும் அனுபவிக்கவில்லை. இன்று முதல் தான் நான் இன்பமான வாழ்க்கையை அனுபவித்து வாழலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள்  என்னை அழைத்துப் போக வந்து விட்டீர்களே. எனக்கு சில மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சினான் கருமி.

    ஆனால் எமன் அவன் கெஞ்சுவதை சற்றும் பொருட்படுத்தமால் மறுத்தவிட்டார். ஐயா, மாதக் கணக்கில் கொடுக்கவில்லை என்றாலும், ஒரு வாரமாவது அவகாசம் கொடுங்கள், அதற்குப் பதிலாக நான் சம்பாதித்தப் பணத்தில் பாதியை உங்களுக்குக் கொடுத்து விடுகிறேன் என்றான் அந்தக் கஞ்சன்.

    அதற்கும் எமன் செவிசாய்க்கவில்லை. வேறுவழியின்றி ஐயா, இன்று ஒருநாளாவது வாழ அனுமதியுங்கள். அதற்குள் நான் முடிந்தளவு நினைத்த வாழ்க்கையை அனுபவித்துக் கொள்கிறேன். இதற்குப் பதிலாக என் வாழ்நாளில் முழுவதும் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் தருகிறேன் என்றான் அவன்.

    எமன் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் எமனிடம் ஐயா எனக்கு ஒருசில நிமிடங்கள் மட்டும் உயிர்ப்பிச்சைக் கொடுங்கள். அதற்குள் சிலவற்றை நான் எழுத விரும்புகிறேன் என்றான்.

    எமனும் சம்மதித்தார். அந்தக் கருமி அவசரமாக ஒரு தாளில் எழுதினான். அதில் இந்தக்கடிதத்தை யார் படிக்க நேர்ந்தாலும் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால். வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லை.

    அது எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது. எனவே உங்கள் வாழ்க்கையில் பணம் தேடுவதில் மட்டுமே செலவழிக்க வேண்டாம். வாழும் வரை வாழ்க்கையை அனுபவித்து வாழங்கள். என்னிடம் 10 கோடி ரூபாய் இருந்தாலும், ஒரு வினாடி நேரத்தைக் கூட வாங்க முடியவில்லை. இதனால் இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ முன் வர வேண்டும் என்று எழுதி முடித்தான்.