கவலை
வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே!
அண்மையில் தமிழ்நாட்டின் சிறந்த பல்கலைக்கழகம் என்று தரச்சான்று பெற்ற கோவையின் ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான ஒரு பயிற்சி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன்.
ஒரு மாணவன், “அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும் என்று தினமும் நினைக்கிறேன். ஆனால், முடியவே இல்லை. என்ன செய்வது?” என்று கேட்டான்.
இன்னொருவன் “எப்படி படித்தாலும் பரிட்சையை நினைத்தால் பயமாக இருக்கிறது” – என்றான்.
மற்றொருவன் “கல்லூரி படிப்புக்குப்பின் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை”. என்று கண்ணீரோடு குழம்பினான்.
எதிர்காலத்தைப் பற்றிய எதார்த்தம், தெரிந்து கொள்ள விரும்பும் தேடல், அனுபவசாலிகளின் ஆலோசனைகள் தமக்கு உதவுமா? என்ற ஆவல். எதை தின்றால் பித்தம் தீரும் என்ற எதிர்பார்ப்பு.
தான் பார்த்துக்கொண்டிருப்பதும், பருகிக்கொண்டிருப்பதும் ‘பாலா’ அல்லது ‘வேறா’ என்ற பரிதவிப்பு.
ஆசிரியர்களின் அறிவுரைகள் என்றுமே வெற்றி வாசலில் திருடு போகாத திறவுகோல் என்று உறுதியாக நம்பும் உள்மனம்.
எனக்கு இவைகள் கிடைத்திருக்கிறதா? என்று கேட்கத்துணிந்த கேள்விகள். நாணயமான அணுகுமுறை – நம் மாணவர்களிடம். பாராட்டுக்கள்!
நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள். இன்னொரு பக்கம் எப்படி இருக்கிறது? பெற்றவர் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியாத புத்தி கோணல். விளையாடுவதற்கும், விதண்டாவாதம் செய்வதற்குமே கல்லூரி என்ற கருத்து.
பரம்பரை சொத்து என்னை பார்த்துக்கொள்ளும் – என்ற தீர்மானமான திமிர்.
எதிர்காலம் என்னை என்ன செய்யும்? என்ற எகத்தாளம்.
நடிப்பையும் நம்பி, அந்த நடிகனையும் நம்பி – தன் முகத்தில் அரிதாரம் பூசும் அசட்டுத்தனம்.
தன் சுற்றம் தன்னை கோமாளியாக பார்ப்பதையும் புரிந்து கெள்ளத்தெரியாத புத்தி.
உன் எண்ணங்களே உன் எதிரி – என்று எடுத்துச் சொன்னாலும் உதாசீனம் செய்யும் உள்ளம்!
விளக்கமாக சொன்னாலும், விமர்சனம் செய்யும் விதண்டாவாதம். இந்த இரண்டு தரப்புமே ஏதோ ஒன்றை தன் மீது போர்த்திக்கொண்டு இருப்பதை உன்னிப்பாக கவனித்தால் உங்களால் உணர முடியும்.
நான்கு தடுப்புக்குள் தடுமாறும் தள்ளாட்டம் தெரியும்.
முதல் தரப்பு – விசாலமான கடலினை நீத்திக்கடக்க முடியாதபடி, தனக்கே போட்டிருக்கும் வலை – “மீனைப்போல”.
இரண்டாம் தரப்பு – வெளி உலகமே தெரியாமல், வெளி வரவும் முடியாமல், உள்ளிருப்பவனையும் உபத்திரவம் செய்யும் நிலை – “கொசுவைப்போல”.
இரண்டும் சிக்கியிருப்பது வலையில்
கவலையில்.
க + வலை = என்பது வினா?
கற்பனை + வலை = கவலை என்பது வேதாத்திரி மகரிஷியின் விளக்கம்.
இரண்டு தரப்பும் சிக்கியிருப்பது இந்த வலையில்தான்.
எதிர்காலம் என்ன ஆகுமோ என்பதும் கற்பனைதான். என்ன ஆகும் என்ற சிந்தனையே இல்லாமல், தவறான வழியில் பயணிக்கிறோம் என்ற கவனமே இல்லாத ‘கற்பனையும்’ கவலைதான்.
இந்த உலகத்தில் கலை இல்லாத மனிதனை காண முடியுமா? அல்லது கவலை இல்லாமல் இருத்தல் என்பது ஞானிகளுக்கு மட்டுமே முடியும் – என்று முடிவுக்கு வருதா?
ஒரு சுவாரசியமான சம்பவம்!
“முற்றும் துறந்த முனிவன் ஒருவன்”, ஒருநாள் ஆற்றங்கரையோரமாக உள்ள மரத்தடியில் தன் கையையே தலைக்கு வைத்து படுத்துக்கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருத்தி, தன் தோழியிடம், “சந்நியாசம் பெற்றும் இவனுக்கு தன் உயரமாக வைத்துக் கொண்டு தூங்கும் சுகம் கேட்கிறது”. இவனெல்லாம் என்ன சந்நியாசி? என்று கிண்டலாக சொன்னால்.
தூங்க முயற்சித்த முனிவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. தான் எளிமையாக இருக்கவில்லையோ, என்னும் சில சவுகரியங்களை என் உடலும் மனமும் கேட்கிறதே
இந்தப்பெண் சரியாகத்தான் சொல்கிறாளோ?
நான் என்ன செய்வது? – என்று கவலைக் கொண்டான்.
ஆழ்ந்து சிந்தித்து அருமையான ஒரு முடிவெடுத்தான்.
“இனி எதையும் தலைக்கு வைத்து படுப்பதில்லை” – என்று.
பொழுது சாய்ந்தது. தவம் செய்தான். பயிற்சிகள் செய்தான். அமைதியான மனதுடன் ஆராய்ந்து தூங்கினான். தலையை தரையில் வைத்தபடி.
அடுத்த நாள்!
அந்த இரண்டு பெண்களும் அவ்வழியே வந்தார்கள். முனிவரை பார்த்தார்கள்.
முதலாமவள் சொன்னாள் – பார்த்தாயா நேற்று நீ அவரை கிண்டல் செய்தாய், இப்போது அவர் தலைக்கு எதையும் வைக்கவில்லை. அநேகமாக உன் மீது கடுங்கோபத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்.
சத்தியமாக உனக்கு இப்போது சாபம் நிச்சயம் – என்று பயம் காட்டினாள். அதற்கு மற்றவள் – அடி போடி நான் ஏதோ விளையாட்டாக சொன்னேன். அடுத்தவன் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்கும் இவன் என்ன பெரிய ஞானி – என்று சொற்களால் சுட்டாள்.
இப்போது அந்த ஞானிக்கு நிஜமாகவே கவலை வந்து விட்டது. தான் உண்மையிலேயே முற்றும் துறந்த ஞானியா? இல்லையா? என்று அந்தப் பெண் சொன்னது. இரண்டுமே உண்மைதான்.
நீ மற்றவர் சொல்வதைக் கேட்டாலும், விமர்சனம் வரும். கவலை வரும். சுயமான முடிவெடுத்தாலும் விமர்சனம் வரும். கவலை வரும்.
பின் இதற்கு தீர்வுதான் என்ன?
உனக்கு எது சரி என்று படுகிறதோ, அதை அப்படியே வாழ். உன் வாழ்வுக்கும், மன அமைதிக்கும், சமூக நன்மைக்கும் எது தீங்கு விளைவிக்காமல் இருக்குமோ, அதன்படி வாழ்ந்தால், உக்கு கவலை வராது.
கவலை உன் வெற்றி இலக்கை தடுக்கும் தடுப்புச்சுவர்.
கவலை உன் லட்சிய கோட்டை தகர்த்தி வெட்டவெளியாக்கும் வெடிகுண்டு.
கவலை – உன் வாழ்வின் நல்லவைகளை முடக்கும் நஞ்சு.
கவலை – உன் முன்னேற்றத்தை தடுக்கும் முதுகு பாரம்.
கவலை – உன் அறிவை அரிக்கும் அமிலம்.
கவலை – உன் சிந்தனைத்திறனை சிதைக்கும் சிறு உளி.
“உலகத்தை அறிந்தவன், உணர்ந்தவன் அவனே கவலை இல்லாத மனிதன்” – என்றான் காவியக்கவிஞன்.
போவதைக் கண்டு கலங்காமல், வருவதைக் கண்டு மயங்காமல், மெய் தளராமல், உண்மையும் பொய்யும் உணர்ந்தவன் அவனே, கவலை இல்லாத மனிதன்.
“வாழ்க்கை என்பது நாடகமே, வந்து போனவர் ஆயிரமே, கொண்டு வந்தவர் யாருமில்லை, கொண்டு சென்றதும் நினைவில் இல்லை” – என்று கவலை இல்லாமல் இருக்க சில கட்டடிளகள் சொன்னார்.
எதார்த்தத்துக்கு மட்டுமல்ல – எதற்குமே கவலைப்படாமல் இருப்பது – ஒரு கலை.
“நான் கேட்டுத் தாய் – தந்தை படைத்தானா – இல்லை என் பிள்ளை என்னைக் கேட்டு பிறந்தானா” – என்று சொல்லி, என் கையில் எதுவும் இல்லை, பின் ஏன் கவலைப்பட வேண்டும் என்கிறார் கவிஞர்.
“கள்ளிக்கென்ன முள்ளில் வேலி – காட்டுக்கேது தோட்டக்காரன்” – என்பது போல் என் வாழ்க்கை தானாகவே விசுவரூபமாக வளர்ந்த ஒரு காட்டுக்கு சமம். அது பல ஜீவராசிகளின் சரணாலயமாக இருக்கிறது. பின் எதற்கு கவலை கொள்ள வேண்டும் – என்ற தெளிவை தருகிறது.
“வந்தவரெல்லாம் தங்கிவிட்டால், இந்த மண்ணில் நமக்கே இடமேது” – என்றும், இரவல் தந்தவன் கேட்கிறான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா.
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா – என்று மரணத்தைக் கூட மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் – கவலை இன்றி வாழ நினைப்பவர் கவனத்தில் கொள்ள வேண்டியது.
காலனைக்கண்டும் கவலை கொள்ளாத மனம். “செல்வங்கள் இல்லாத வாழ்க்கை செல்லாக்காசு” – என்ற வறட்டு தத்துவம், பலரையும் பணத்தின் மீது ஒரு பற்றையும், அது கிடைக்காத போது – கஹ்லையை தனது கண்ணுக்குள் தேவைக்கு மேல் தேக்கி வைக்கும் சோகம்.
“பணம் என்னடா… பணம் பணம், குணம் தானடா… நிரந்தரம்” – என்ற புரிதல் “நாணயம் என்றால் அதன்பேர் நேர்மை என்பது. நல்லவர்க்கு காசு பணம் தேவையற்றது” – என்ற மனோபாவம் பெருகுவது, மனித மனதுக்கு நல்லது.
பணத்துக்கான குற்றங்கள் குறையும்.
சமூக அந்தஸ்தில், அழகில், திறமையில், கல்வியில், குணநலனில், நட்பில், குடும்ப உறவுகளில், புகழில் – இன்னும் இந்த பட்டியலில் இடம் பிடிக்க தகுதி வாய்ந்த பல கவலைகள் ஒவ்வொருவர் மனதிலும், ஒவ்வொருவருக்கும் வேறு வேறு விகிதாசாரங்களில் இருக்கும். சிலரிடம் சில விஷயங்கள் இல்லாமலேயே கூட இருக்கும்.
ஒவ்வொருவரும் தன்னளவில் இதற்காக கவலை கொள்ளும் விகிதாசாரங்களும் வேறுபடுகிறது.
இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய கவலைகளே.
“உனக்கு கீழே உள்ளவர் கோடி – நினைத்துப்பார்த்து நிம்மி நாடு” என்ற கவியரசரின் வரிகள், அவர்களின் கண்களுக்கு மட்டுமல்ல, கவனத்துக்கும்தான்.
கவலைப்படுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.
கவலைகளை – க + வலை = என்ற கற்பனை வலைகளை அறுத்து எறியுங்கள்.
வலைகளை அறுத்து வெளியே வாருங்கள்.
‘வ’ இல்லாமல் அது ‘கலை’ ஆகிறது.
கலை – கவலையை வெல்வது ஒரு கலை.
வாழ்வின் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் ஆளுமையான திறமையை அடையாளம் காணுங்கள். மேலும், சிறக்க மெருகேற்றுங்கள்.
வெற்றியாளர்களின் சாதனைகளை உணருங்கள். அவர்கள் பயணித்த பாதைகளின் அனுபவங்களை ஆராயுங்கள்.
உங்களுக்கான திட்டத்தினை தீட்டுங்கள். உள்ள திடத்துடன் உழையுங்கள். உங்கள் பார்வைக்கு பல முன்னேற்றப்பயிலரங்களை பரிச்சயப்படுத்துங்கள். அங்கே சொல்லப்படும் வெற்றியின் ரகசியங்களை – மனதில் கல்வெட்டு ஆக்குங்கள்.
பயிற்சியும் – முயற்சியும் இணைந்து வரும், தரும் இரு கை ஓசை – எப்போமு; இனிமையாகவே இருக்கும்.
அவை, உங்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வரவேற்கும் ஆனந்த ராகம் – என்பதை உள்ளப்பூர்வமாக உணருங்கள்.
அந்த இரண்டு ‘கரங்களும்’ – ‘சி’ றப்பான கரங்கள் என்பதைத்தான் சரித்திரம் ‘சிகரம்’ என்று செதுக்கி மகிழ்கிறது.
அனைத்து பயிற்சிகளையும் அரச கட்டளையாக பார்க்காமல், உங்கள் ஆழ்மன கட்டளையாக கொண்டு உண்மையாக உழைத்தால், நீங்கள் கண்டிப்பாக, “கவலை” இல்லாத மனிதனாக இல்லை – “கவலையே இல்லாத கலைஞன்” ஆவீர்கள்.
வாழ்த்துக்கள்…
“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”. “வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”.