திரு. டாக்டர் லெனின்பாபு
MBBS., MS (ORTHO)., FRCS(EDIN), MCH (ORTHO)(L.POOL)., FRCS (ORTHO)(EDIN)., PAEDIATRIC FELLOW (SHEFFIELD)
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்
கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவனை
கோயமுத்தூர்
- தூய்மை, நேர்மை, நாணயமிக்க ஒரு நல்ல மருத்துவர் மற்றும் மனித நேயமிக்க மனிதர்.
- தான் பிறந்த கிராமத்தைத் தந்தெடுத்து பாலைவனமாக இருந்த பூமியை சோலைவனமாய் மாற்றியவர்.
- பழக்கத்தில் வரும் பண்பை விட, பண்பால் வரும் பழக்கம் உயர்ந்தது என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருபவர்.
- வாய்ப்புகள் பல வந்தும் வசதியை எதிர்பார்க்காமல் தன்னை வளர்த்த நாட்டிலேதான் சேவை இருக்க வேண்டும் என்று ஒரு கொள்கையை வரையறுத்துக்கொண்டு பல மருத்துவ சேவைகளை செய்து வருபவர்.
- தன்னிடம் வருபவர்களுக்கு முதலில் தன்னம்பிக்கைக் கொடுத்து நல்லதொரு விழிப்புணர்வைக் கற்று தருபவர்.
- தமிழகத்தில் விரல் விட்டு எண்ணகூடிய குழந்தைகள் மூட்டு மாற்று அறுவை மருத்துவரில் இவரும் ஒருவர்.
- மருத்துவமே மகத்துவமே, மகத்துவமே நல்ல மனிதநேயம் என்ற வாக்கின்படி இன்று மருத்துவத்துறையில் கால்நூற்றாண்டாக கால்பதித்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் முத்திரைப் பதித்து வரும் டாக்டர் லெனின்பாபு அவர்களை நேர்முகம் கண்டோம் அவரின் அனுபவ பகிர்வு இனி நம்மோடு.
கே. உங்களின் பிறப்பு மற்றும் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?
கோவைக்கு அருகில் உள்ள சிறுமுகைதான் எனது சொந்த ஊர். ஆனால் என்னுடைய பூர்வீகம் தாராபுரம் அருகில் உள்ள இல்லிலியம்பட்டி என்ற குக்கிராமம். எனது தந்தை திரு விநாயகம், தாய் திருமதி மோகனாம்பாள். 1960ல் சிறுமுகைக்கு அருகிலுள்ள விஸ்கோஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். மிக சராசரியான குடும்பம் எங்களுடையது. எனது தந்தை பணிபுரிந்த விஸ்கோஸ் நிறுவனம் நடத்திய S.I.V. மெட்ரிக் பள்ளியில் என் பள்ளிப்படிப்பு தொடங்கியது. நான் சிறுவயதிலிருந்தே வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன். விளையாட்டிலும் முதல் மாணவனும் நானே. 12ம் வகுப்பில் திருப்பூர் மாவட்டத்திலேயே முதல் மாணவனாகத் தங்கப்பதக்கம் வென்றேன். சாதாரணமான குடும்பத்தில் பிறந்த அனைவரும் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால் படிப்புதான் அவர்கள் கையில் எடுக்கும் அற்புத ஆயுதம் என்று சொல்லிக்கொடுத்தவர் எனது தந்தை.
கே. நீங்கள் மருத்துவர் ஆகும் எண்ணம் எப்படி, தோன்றியது?
நான் 7ம் வகுப்பு படிக்கும் பொழுது ஒருநாள் விளையாடி கொண்டிருக்கும் அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து கையில் எலும்பில் அடிபட்டுவிட்டது. அப்போது எனது தந்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள மூசாகலீம் என்ற ஒரு முருத்துவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் சிகிச்சை அளித்த முறை எனக்குப் பிடித்திருந்தது. மேலும், சிறுமுகையில் டாக்டர் பொன்னுராஜ் என்ற மருத்துவர் மீது அந்த ஊர்மக்கள் வைத்திருந்த மரியாதையும், அவர் பழகிய விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. நானும் அவர்களைப் போல் ஒரு சிறந்த மருத்துவராக வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
கே. மருத்துவக் கல்லூயில் நுழைந்து பற்றிச் சொல்லுங்கள்?
நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்று கீதை சொல்கிறது. அதைப்போல 12ம் அண்டு வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதால் மருத்துத்துறையில் சிறந்து விளங்கும் சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது.
எங்கள் குடும்பத்திலும் சரி, ஊரிலும் சரி உறவினர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால், நான்தான் எங்கள் குடும்பத்திலேயே முதல் மருத்துவ மாணவன். சாதாரண தொழிலாளியின் மகனான நான் மருத்துவம் படித்தேன் என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் கல்விதான். மெரிட்டில் படித்ததால் எனக்கு ஆண்டிற்கு வெறும் ஐந்தாயிரம் ரூபாய்தான் செலவானது. ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி என்னை மிகச்சிறந்த மருத்துவனாக செதுக்கியது என்றே சொல்வேன்.
கே. நீங்கள் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சைத் துறையைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்ன?
மருத்துவத்தில் பல பிரிவுகள் உண்டு. அதிலும் பல அறுவை சிகிச்சை முறைகளும் உண்டு. ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் படிக்கும் போது டாக்டர் சி.டி. அழகப்பன் என்ற மருத்துவர் ஆர்த்தோ துறையில் தலைவராக இருந்தார். அவர் பாடம் நடத்துவதிலும் அறுவை சிகிச்சை செய்வதிலும் கைதேர்ந்த நிபுணர். அவரின் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. நாமும் இவரைப்போல் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணராக வர வேண்டும் என்று எண்ணினேன். அவரைப்பார்த்து வந்ததுதான் இந்த ஆர்வம். ஆர்வம் மட்டுமிருந்தால் போதாது, அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். அதனால் என்னை நானே நன்றாகத் தயார்படுத்திக் கொண்டு கடுமையாக உழைத்தேன். அதன் பயனாய் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றதால் மத்தியபிரதேசத்திலுள்ள இந்தூர் மருத்துவக்கல்லூரியில் டாக்டர் தனேஜா அவர்களின் கீழ் படிக்கும் M.S. Ortho வாய்ப்பு கிடைத்தது.
டாக்டர் தனேஜா அவர்கள்தான் என் குரு. வேறு மாநிலத்தில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டுமென்றால், அம்மாநிலத்தின் மொழியை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இங்கு இந்தி முதன்மை மொழியாக இருந்தது. இந்தியை மிகக்குறுகிய காலத்தில் கற்றுக் கொண்டு மிகச்சிறப்பாக செயல்பட்டேன். M.S. Ortho -வில் டாக்டர். முக்கோ பாத்யாயா அவர்களின் பெயரில் தங்கப்பதக்கம் பெற்று Best Outgoing Student ஆக 1999ம் வருடம் தேர்வு பெற்றேன்.
கே. உங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் பட்டங்களை குறித்துச் சொல்லுங்கள்?
நான் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் படிக்கும் போது புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர் கல்யாணராமன் அவரது பெயர் பலகையை பார்த்திருக்கிறேன். அதில் அவரின் பெயரை விட அவரின் பட்டங்கள் பெரிதாக இருந்தது, அதில் இருந்த FRCS – என்ற கல்வித்தகுதி எல்லா மருத்துவர்களுக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். நான் எது குரு பேராசிரியர் தனேஜா அவர்களிடம் எனது ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். அவர் சற்றும் யோசிக்காமல் லண்டன் மருத்துவமனையில் பணி செய்து வந்த மருத்துவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடித்தின் மூலமாக எனக்கு அங்கு வேலை கிடைத்தது. அந்த வாய்ப்பு எனது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. நம்புகள் நான் சுயம்பு அல்ல என்னை சிற்பமாக்கியவர்கள் பலர். பின்பு நான் இங்கிலாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆப் எடின்பரோ கல்லூரியில் FRCS – முடித்தேன்.
கே. பொதுவாக வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் அங்கேயே வேலை செய்வதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்பார்கள். ஆனால், நீங்கள் இந்தியா வந்ததற்கு நோக்கம் என்ன?
நிச்சயமாக… வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு அதிக வருமானமும், வாழ்க்கையும் வசதியாக இருக்கும். ஆனால், நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது நடந்த ஒரு சம்பவம்தான் என்னை இந்தியா வரத்தூண்டியது. நான் லண்டனில் இருந்தபோது, ஒருசமயம் நான் உயிருக்கு உயிராக நேசித்த எனது அத்தையார் அவர்கள் கீழே விழுந்து இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு சரியாக அனுவமில்லாத மருத்துவர் ஒருவர் செய்த சிகிச்சை முறையால் அவர் மேலும் பலவீனமாகி அவரை இழக்க நேரிட்டது. எலும்பு மூட்டு நிபுணராக இருந்து கொண்டு என்னால் அவருக்கு உதவ முடியவில்லையே என்பது எனக்கு மிகப்பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, எனது படிப்பும், உழைப்பும் என் நாட்டு மக்களுக்குப் பயன்பெற வேண்டுமென்று நான் இந்தியா வந்தேன். வெளிநாடுகளில் மருத்துவரை மருத்துவராக மட்டுமே பார்ப்பார்கள். ஆனால், நம் தாய்நாட்டில் மருத்துவர்களை கடவுளாக பார்ப்பார்கள். இது எனது மருத்துவ பணியில் மனநிறைவை ஏற்படுத்தியது.
கே. மருத்துவத்துறையில் உங்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக நினைப்பது பற்றி?
எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஒரு ஆசிரியர் பள்ளியில் மிக மிக கண்டிப்பானவர். நாங்கள் படிக்கும் போதும் சரி, அவரைப் பார்க்கும் போதும் சரி எங்களுக்கு மிகுந்த பயம் ஏற்படும். ஏறக்குறைய 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் மருத்துவமனையில் அவரைப் பார்க்க நேர்ந்தது. நான்கைந்து வருடங்களாக கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு பல மருத்துவர்களைப் பார்த்தும் சரியாகாத காரணத்தால், சக்கர நாற்காலியில் அவரை என்னிடம் அழைத்து வந்தார்கள். அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையைப் பற்றிக் கூறி, ஆப்ரேஷனையும் வெற்றிகரமாக முடித்தோம்.
கற்றுக்கொடுத்த குருவிற்க வைத்தியம் பார்த்த அந்த அனுபவத்தை, இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கும். இதற்கு அடுத்து 88 வயதான ஒரு மூதாட்டிக்கு கால் முட்டி முழுவதும் தேய்ந்த நிலையில் எழுவதற்கு கூட சிரமமான நிலையில் என்னிடம் வந்தார். அப்போது நான் அவரிடம் என்ன பாட்டி வயசாச்சே, இனிமேல் எதுக்கு மூட்டு மாற்றனும்? அப்படியே இருக்கலாமில்லையா, வலிக்கு மருந்து தருகிறேன் என்று சொன்ன போது அப்படியென்ன வயசாச்சு எனக்கு, இன்னும் எத்தனை கல்யாணம் காட்சி, பேரன் – பேத்திகளை பார்க்க வேண்டியிருக்கு என்றார். அவரின் நம்பிக்கையான அந்தப் பேச்சு என்னை வியப்படைய செய்தது.
தற்போது அவர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு நல்ல நிலையில் நடந்து கொண்டிருக்கிறார். இப்பொழுதும் பார்க்கும் போதெல்லாம், அங்கே போனேன், இங்கே போனேன் என்று அவர் சொல்லும் போது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
கே. இந்தியாவிலுள்ள மருத்துவ சிகிச்சைகள் வெளிநாட்டு மருத்துவ சிகிச்சைகளுக்கு இணையாக உள்ளதா?
கண்டிப்பாக இணையாகத்தான் உள்ளது. நான் இங்கிலாந்திலிருந்து வந்த உடனே KMCH – ல் சேர்ந்தேன். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய அனைத்து கருவிகளும் இங்கேயும் இருந்தது கண்டு வியப்பாக இருந்து. KMCH – நிறுவனர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி அவர்கள் மருத்துவ உலகின் ஒரு தலைசிறந்த தலைவர். KMCH – மருத்துவமனை உலகத்தரத்திற்கு இணையானது. உலகிலுள்ள எல்லா மருத்துவத் தொழில் நுட்பங்களையும் அறிந்து அதற்கான கருவிகளையும் இங்கேயே வாங்கி வைத்திருக்கிறார். நான் மட்டுமல்ல KMCH ல் 90 சதவீத மருத்துவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் பல வருடங்களாக பணியாற்றியவர்கள்தான். வெளிநாட்டில் கிடைக்கக் கூடிய அனைத்து சிகிச்சைகளும் இங்கு நம் மக்களுக்கு கிடைப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கே. உங்களின் வெற்றியின் ரகசியம் பற்றி?
“A long journey begins with a small step”…
உயர்ந்த கோபுரங்கள் எல்லாம் சிறுசிறு கற்களாலேயே கட்டப்படுகின்றன. சின்னச்சின்னத் திட்டங்கள், சின்னச்சின்ன வெற்றிகள் பெரிய வெற்றியாளனாகக் காட்டும்.
கே. நோயாளிகளை நீங்கள் அணுகும் விதம் பற்றி?
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குடும்பம், குழந்தைகள் என்று நிறைய சொந்தங்களும், பல பொறுப்புகளும் உள்ளது. என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளையும் என் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறேன். அவர்கள் அனைவருமே குணமாக வேண்டும் என்பதில் தனிப்பட்ட ரீதியாக எனக்கு பெரும் அக்கறை உள்ளது. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். மேலும், ஒருமுறை என்னிடம் சிகிச்சை பெற வருபவர்களை அடுத்தமுறை அவரை நான் பெயர் சொல்லி அழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு அவர்களிடம் ஒரு டாக்டர் என்றில்லாமல் நண்பராகவே பழக வேண்டும் என்று நினைக்கிறேன்.
என்னிடம் நிறைய ஊனமுற்ற குழந்தைகள் சிகிச்சைக்காக வருவார்கள். அவர்கள் 90 % பேர் ஏழ்மையானவர்களாக தான் இருப்பார்கள். அவர்களின் குடும்பத்தின் நிலை கருதி இலவசமாகவே அவர்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறோம். என்றாலும் ரோட்டரி கிளப் போன்ற தனியார் சேவை அமைப்புகளை தொடர்பு கொண்டு சிகிச்சை அளித்திருக்கிறேன். இதற்கு எல்லாம் பெரும் உறுதுணையாக இருப்பவர் இம்மருத்துவமனையின் தலைவர் நல்லாஜி பழனிசாமி அவர்களையே சாரும். மேலும் திருமதி யாமினி தனராஜ் அவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றிக் கூற கடமைபட்டுள்ளேன்.
கே. உங்கள் பார்வையில் பரப்பரப்பான செய்தியாக நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?
இப்பிரபஞ்சத்தில் நாம் மட்டுமல்லாது வேறு கிரகத்திலிருந்து நம்மைப் போலவே உயிரினங்கள் இருக்கின்றன என நிரூபிக்கும் விதமாக முதலில் வரும் புகைப்படங்கள்தான் எனக்கு மிகவும் சென்ஸேனல் நியூஸாக இருக்கும்.
கே. நீங்கள் ஒரு கிராமத்தை தத்தெடுத்தாக என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். அதைப்பற்றி?
எனது பூர்வீகமான இல்லியம்பட்டு கிராமம் தாராபுரத்திலிருந்து 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. சரியான பேருந்து வசதி கூட இல்லாத அந்த கிராமம், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் பச்சைப்பசேல் என்று பார்வைக்கு விருந்தளிக்கும். ஆனால், தற்போது சஹாரா பாலைவனத்திற்கு இணையாக வறட்சியை கண்டு வருகிறது. எனவே, அந்த கிராமத்தைத் தத்தெடுத்து Oansis நிறுவனமும், பெரமியம் இல்லியம்பட்டி இளைஞர்களும், பொதுமக்களும் சுமார் 200க்கும் மேற்பட்ட மரங்களை நட்டதோடு மட்டுமல்லாமல் Water Drip அமைத்து, அந்த மரங்களை பாதுகாத்து நீர் ஊற்றவும், சுமார் 5 பேரை மாத சம்பளம் என்ற முறையில் வேலைக்கு நியமித்து பாதுகாத்து வருகிறோம்.
தற்போது அந்தச் செடிகள் மரங்களாக வளர்ந்த பசுமையாக காட்சியளிக்கின்றன. மேலும், ரோட்டரி நன்னயம் டிரஸ்ட், விழுதுகள் பவுண்டேசன், தாராபுரம் உடன் இணைந்து வசதியில்லாத மாணவ – மாணவிகள் பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் மாணாக்கர்களுக்கு நன்கொடையும் அளித்து வருகிறோம். சென்ற வருடம் மட்டும் தலா 1 குழந்தைக்கு 5000 ரூபாய் என 100 குழந்தைகளுக்கு ரூ. 50,00,000 வரை நன்கொடை வழங்கினோம். இதுபோன்ற நற்செயல்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடியேறிய ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையாகும். இது, காந்தி கண்ட கனவும் கூட.
கே: நோயில்லா வாழ்வு வாழ மக்களுக்கு நீங்கள் தரும் விழிப்புணர்வு?
விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மக்களிடையே காணப்படும் வாழ்க்கை முறைதான் நோய் என்ற சொல்லுக்கு மூலக்காரணமாக இருக்கிறது.
இந்த வாழ்க்கை முறையில் பல மாறுபட்ட செயல்களில் மக்கள் ஈடுபடுகிறார்கள். அதில் முதன்மையானது உணவுமுறை. உணவுமுறையில் அக்கரையற்று வாழும் குழல் இப்பொழுது அதிகம் நிகழ்கிறது. ஹோட்டலில் சாப்பிடுவதை கௌரவமாக நினைக்கிறார்கள் மக்கள் இன்றைக்கு. இது ஒரு ஆரோக்கியமற்ற வளர்ச்சி. இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உணவை உண்டவுடன் வெற்றிலைப்பாக்கும் போடும் காலம் போய் இன்று மாத்திரை சாப்பிடும் காலம் வந்துவிட்டது. இதை எல்லாம் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்.
- நல்ல உணவைத்தேர்ந்தெடுத்து உண்ணுதல் வேண்டும்.
- காய், கனிகள், கீரைவகைகள், கிழங்கு வகைகள் போன்றவற்றை நிறைய உண்ண வேண்டும்.
- உணவே மருந்து என்பது போல நன்றாக சாப்பிட வேண்டும்.
- உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை தினமும் செய்தல் வேண்டும்.
இவற்றை முறையாக கடைப்பிடித்தாலே வரும்முன் காத்துவிடலாம்.
கே. தாங்கள் சிறுமுகையில் கட்டி வருகின்ற SIV பொன் விழா கட்டிடம் பற்றி?
SIV மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் 50வது வருட பொன்விழா 2015ம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெறும் பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருந்து விடாமல், ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன் ஒரு பகுதியாக சுமார் 10,000 சதுர அடியில், 50 லட்சம் ரூபாய் செலவில் Community Hall ரேயான் நகரில் கட்டி முடித்துள்ளோம். இலாப நோக்கமின்றி கட்டப்பட்டது இந்தக் கட்டிம் ஆகும். சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாகும்.
கே. தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறும் நம்பிக்கை வரிகள் என்ன?
மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே மகத்தானது. மனித வாழ்வில் மாற்றம் ஒன்றே நிலையானது. அந்த மாற்றத்தை மற்றவர்களிடமிருந்து எதிர்ப்பார்க்காமல் நீங்ளே முதன்மையாகத் தொடங்குகள். ஒரு நாடு தூய்மையாக இருக்க வேண்டும் என்றால் உங்கள் வீடு முதலில் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது நாமும் வளம் பெறுவோம் நாடும் வளம்.
மனிதராய் பிறந்து விட்டால் எல்லோருக்கும் இங்கு ஒரு வெற்றிடம் ஒன்று இருக்கும். அந்த வெற்றிடத்தை நிரம்புவதில் தான் வாழ்க்கையின் மகத்துவமே அடங்கியிருக்கிறது.
இது ஒரு போராட்ட களம் போட்டிப் போட்டுக் கொண்டு தான் வெற்றி பெற வேண்டும் என்ற நியதி இருக்கிறது. அதை உணர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்.
எந்த செயல் தொடங்குவதிலும் காலதாமதம் செய்யக் கூடாது.
செய்யும் செயலில் திட்டமிடல் அவசியம். நிறைய சாதித்தவர்களின் வரலாற்றைப் படியுங்கள். தன்னம்பிக்கை போன்ற இதழ்களைப் படியுங்கள். நிச்சயம் வாழக்கையில் வென்று விடலாம்.
கே: குடும்பம் பற்றி?
என் மனைவி திருமதி கவிதா மருத்துவர். எனக்கு ஒரே மகள். செல்வி. லேகா படித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக மருத்துவத்துறையில் இருப்பவர்கள் குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவது என்பது சற்று கடினம் தான் அதனாலும் இன்று ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தந்தையாகவும், பெற்றவர்களுக்கு நல்ல பிள்ளையாகவும் இருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
நேர்முகம் . ஜெ. விக்ரன்
நன்றி . வி. தங்கராஜ்