– 2017 – May | தன்னம்பிக்கை

Home » 2017 » May (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நவீன ஜீனோமிக்ஸ் ( பகுதி 4)

    நாம் வாழும் பூமி ஏறத்தாழ 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக அறிவியல் ஆராய்ச்சிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நில தாவரங்கள் (Land Plants) கிட்ட தட்ட 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானதாக கணக்கிடப்படுள்ளது. தற்கால மனிதன் ஏறத்தாழ 200,000 ஆண்டுகளுக்கு முன் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. மனிதன் வேளாண்மை செய்யத் தொடங்கியது கிட்ட தட்ட 12,000 ஆண்டுகளுக்கு முன் என வெகுகாலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சியில் 23,000  வருடங்களுக்கு முன்பே வேளாண்மை செய்யப்பட்டதற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வேளாண்மை செய்யத் தொடங்கிய கற்காலம் தொட்டு, நவீன தற்காலம் வரை, மனிதன் தனக்குப்  பயனளிக்கக் கூடிய வகையில் தாவரங்களை உருவாக்குவதில் நுண்ணிய உத்திகளை கையாண்டு வந்துள்ளான். உதாரணமாக, அதிக விளைச்சல் தரக்கூடிய பயிரையும், நோய் எதிர்ப்புப் பயிரையும் இனக் கலப்பு செய்து நோய் எதிர்ப்புத் தன்மையுடன் கூடிய அதிக விளைச்சல் தரும் புதுப் பயிரை உருவாக்கினான்.

    இவ்வாறாக ஒவ்வொரு காலச் சூழலுக்கும், ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும், ஒவ்வொரு சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றவாறு பயிர்களை உருவாக்கி வேளாண்மை செய்து நாகரிகம் அடைந்தவனாய் மனிதன் தன்னை செதுக்கிக் கொண்டான். இவ்வாறான செயல் முறை பிற்காலத்தில் தாவர இனப்பெருக்கவியல் (Plant Breeding) என அழைக்கப்பட்டு தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு  வருகின்றன.

    இத்துறை முன்னேற்றம்  அடைந்தால்தான் நாட்டின் உணவுப் பஞ்சத்தை போக்க முடியும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில், இத்துறையின் துணை கொண்டுதான் நாட்டின் வெவ்வேறு நிலப்பரப்பிற்கு ஏற்றவாறு அதிக விளைச்சலைத்தரக்கூடிய தரமான பயிர்களை உருவாக்க முடிகிறது.

    பொதுவாக, இரண்டு வகையான யுக்திகளை பயன்படுத்தி தாவர இனக் கலப்பு (Breeding) செய்யப்படுகிறது. ஒன்று, பாரம்பரிய முறையிலும் (Classical Breeding) மற்றொன்று மூலக்கூறியல் (Molecular Breeding) முறையிலும் செய்யப்படுகிறது.

    பாரம்பரிய முறையில் தரமான பயிர் ரகங்களை உருவாக்குவதில் அதிக கால அவகாசம் (10 முதல் 15 ஆண்டுகள்) தேவைப்படுவதால், இதன் மூலம் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுத்தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். மூலக்கூறியல் முறையில் மரபுக் குறியீடு (Genetics Markers) மூலமாகவும், மரபு பொறியியல் (Genetics Engineering) மூலமாகவும், குறைந்த ஆண்டு கால அவகாசத்தில் புது ரகப் பயிர்களை உருவாக்க முடிகிறது. தற்போது மரபு பொறியியல் மூலம் மரபு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு (Genetically Modified Crops) உலக அளவில் மாறுபட்ட கருத்துக்களும், எதிர்ப்புகளும் இருப்பதால் இந்த முறை மூலம் பயிர்களை பெருக்கம் செய்வது சற்றே சர்ச்சைக்குரியதாகவே கருதப்படுகிறது. ஆனால், மரபுக் குறியீடு முறையானது (Marker Assisted Breeding) மரபியல் நிபுணர்களின் ஒரு சிறந்த சாதனையாக கருதப்படுகிறது. இந்த முறையின் மூலம் தரமான, அதிக விளைச்சல் தரக்கூடிய, வறட்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் போன்ற விரும்ப தகுந்த பண்புகளுடன் கூடிய புது ரகங்களை உருவாக்க முடிகிறது. இத்தகைய ஆச்சரியமூட்டும் முறையை சற்று விரிவாக காணலாம்….

    1. நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டவர்கள்.
    2. நோயாளிகள்.

    படம் . 1 ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கம் (Single – nucleotide Polymorphism) மரபு குறியீடு விளக்கப்படம்.

    உயிரினங்களின் டி.என்.ஏ.வில் ஒற்றை (Single) அல்லது சிறிய துண்டு (Stretch of DNA) நியூக்கிளியோடைடுகள் வேறுபாடு கொண்டதாக இருக்கும்.  உதாரணமாக மனிதனில் 46 குரோமோசோம்கள் உள்ளன. அவைகளில், இரண்டாவது குரோமோசோமின்  ஒரு குறிப்பிட்ட பகுதியானது,  100 புற்றுநோயாளிகளிடமும், 100 ஆரோக்கியமான அல்லது புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்ட மனிதர்களிடமும் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை படம். 1 விளக்குகிறது.

    இதில், 11வது இடத்தில் அனைத்து நோய் எதிர்ப்புத் திறன் கொண்டவர்கள் A – எனும் நியூக்கிளியோடைடு கொண்டவர்களாகவும், அதே இடத்தில் அனைத்து நோயாளிகளும் T – எனும் நியூக்கிளியோடைடு கொண்டவர்களாகவும் வேறுபட்டு உள்ளனர்.

    இத்தகைய வேறுபாடு, ஒற்றைக் கருவன் பல்லூருவாக்கம் (Single – nucleotide Polymorphism) என அழைக்கப்படுகிறது. இந்த வேறுபாட்டை மரபுக் குறியீடாக (Genetics Markers) நிர்ணயித்து புற்றுநோயாளிகளையும், எதிர்ப்புத் திறன் கொண்டவர்களையும் பிரித்தறிய முடிகிறது.  இவ்வாறாகவே, தாவரங்களும்  பிரித்தறியப்பட்டு திறன் வாய்ந்த பயிர்கள் தேர்வு செய்யப்பட்டு (Selection) இனக்கலப்பு  செய்து விரும்பத்தகுந்த புது ரக பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. இதுவே, மரபுக் குறியீடு உதவி கொண்டு செய்யப்படும் இனக்கலப்பாகும் (Breeding). இதுபோல, மற்ற சில மரபுக்குறியீடுகள் ( உதாரணமாக ஆங்கிலத்தில் சுருக்கமாக RFLP, SSR. AFLP etc.,  ) இருந்தாலும் ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கம் (Single – nucleotide Polymorphism) மரபு குறியீடு டி.என்.ஏ.வில்., அதிக அளவிலும், நம்பகத்தன்மையுடனும் இருப்பதால், இந்த வகை மரபுக் குறியீட்டையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

    இவ்வாறாக மரபுக் குறியீடு மூலம் பயிர்களை வகைமைப் படுத்துவதை மரபு தோற்றவகைமை (Genotyping) என அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த மரபுக்குறியீட்டை கண்டறிந்து பயிர்களை வகைமை படுத்துவதற்கு அதிக உழைப்பும், செலவும் தேவைப்பட்டது. தற்பொழுது அதி நவீன இரண்டாம் தலைமுறை வரிசைப்படுத்தும் தொழில்நுட்ப வளர்ச்சியால் (Next generation sequencing) குறைந்த செலவில் இணையாக மரபுக் குறியீட்டை கண்டறியவும், மரபுவகைமை படுத்துவதும் முடிகிறது. இதில் வரிசை மூலம் வகைப்படுத்துதல் (Genotyping – by – sequencing ) எனும் முறைமை மிகவும் பிரசித்தி பெற்றது. தற்பொழுது, தாவர இனப்பெருக்கவியலில் இது மிகவும் இன்றியமையாததாக கருதப்படுகிறது. இது எண்ணற்ற கண்டுபிடிப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதை பற்றி அடுத்த பதிவில் விரிவாக காணலாம். நன்றி…

    உனக்குள் இருக்கும் உன்னை நம்பு !

    என்னால் முடியாவிட்டால், வேறு யாரால் முடியும்?

    இப்போது முடியாவிட்டால் வேறு எப்போது முடியும்?

    இந்த 2 கேள்விகளைக் கேட்பவர்கள் மற்றவர்களை விட விரைவில் முன்னேறவும், சாதிக்கவும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் வாழ்கிறார்கள்.

    இதற்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.

    ‘உனக்குள் இருக்கும் உன்னை நம்பு’

    எனக்குள் நானா?

    வித்தியாசமாக இருக்கிறதல்லவா?

    உன்னையறிந்தால், உலகத்தில் நீ சாதிக்கலாம்.

    வாழ்க்கை என்பது;

    தேடிச் சோறு நிதம்தின்று- பல சின்னஞ்சிறு

    கதைகள் பேசி-மனம்

    வாடித் துன்பமிக உழன்று- பிறர் வாடப் பல

    செயல்கள் செய்து நரை

    கூடிக் கிழப்பருவ மெய்தி- கொடுங் கூற்றுக்கு

    இறையெனப்பின் மாயும் பல

    வேடிக்கை மனிதரைப் போல

    என்று பாடிய முண்டாசுக் கவிஞன் பாரதியார் கூறியதல்ல.

    உள்ளத்திலே கனலாய் மையம் கொண்டுள்ள நற்பண்புகளின் அடிப்படையில், சமுதாய நலனுக்காக, நாம் வாழும் காலத்திலே நம்முடன் வாழ்கின்ற உடன்பிறவா சகோதார சகோதரிகளின் வாழ்க்கை சிறப்புற அமையவும், வேறு யாராலும் பாதிப்புக்குள்ளாகாதவாறு பாதுகாப்புடன் வாழும் சூழலை வழங்கும் மக்கள் நல அரசு அமைய வாக்குரிமையைப் பயன்படுத்துவதுமே உனக்குள் இருக்கும் உனது வெளிப்பாடாகும்.

    வேலியில் சென்ற ஓணானை எடுத்து பைக்குள் வைத்து வீட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், எப்படி இருக்கும்?

    இன்று மக்கள் அனுபவிக்கும் எல்லாவற்றுக்கும் காரணம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.

    தற்காலிக சுய லாபத்துக்காக உரிமைகளை விற்ற கதை தான்.

    சரி! இனி என்ன செய்வது?

    பக்கத்து நாடுகளைப் பாருங்கள் என்ற நிலை மாறி, பக்கத்து மாநிலங்களைப் பாருங்கள் என்று ஆதங்கத்துடன் சொல்லுமளவு கடந்த அரை நூற்றாண்டாக நாம் சுயத்தை இழந்து, தனி மனித வாழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து விட்டோம்.

    மக்களுக்கும் தைரியமில்லை இவர்களால் தேர்வுசெய்யப்பட்ட ஆட்சியாளர்களுக்கும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை.

    குடிநீர், கழிவு நீர், சாலை, மின்சாரம், கல்வி, தெருவிளக்கு, குப்பை நீக்கம் ஆகிய வசதிகளில் உங்கள் பகுதி எந்த நிலையில் இருக்கிறது?

    என்றாவது சிந்தித்திருப்போமா? சிலர் எண்ணியிருக்கலாம். நமது தவறான வாழ்க்கை முறையால் இயற்கை வறட்சி என்ற தண்டனையை வழங்கியுள்ளதைக் கண்டும் காணாமல் இருப்பது நியாயமா?

    இளைஞர் சக்தி, இன்றைய வறட்சியில் மேட்டூர் அணையைத் தூர்வார முன் வந்திருப்பபது, வருண பகவானையே சிந்திக்க வைத்துள்ளது.

    உங்களளது கண்டு கொள்ளாத நிலையைக் கண்டு கொண்ட அரசாங்கம்  உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் பெயரில் கடன் வாங்கி, தமிழ்நாட்டின் கடன் தொகையை சுமார் மூன்று  லட்சம் கோடிகள் என உயர்த்தி சாதனை படைத்துள்ளது.

    இந்தக்கடன் எதற்காகப் பெறப்பட்டது? மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் செலவினங்களுக்காகத் தான் என அரசின் வரவு – செலவுத் திட்டம் தெரிவிக்கிறது.

    இது சரிதானா? என ஆய்வு செய்வது வரவேற்கப்படக் கூடிய செயல்தான்.

    நடந்ததை யாராலும் மாற்ற முடியாது. அதிலிருந்து கற்றுக் கொள்ள முடியும். எனவே, இப்போதாவது உனக்குள் இருக்கும் உன்னை நம்ப முடிவு செய்து செயல்படு.

    இன்று தமிழ்நாடு பரிதாபமாகத்தான் உள்ளது. தேவை கறை படியாத கரங்களும், “மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற பொது நல நோக்கும் வளைக்கும் உள்ள இளைஞர் படைதான்.

    சுவாமி விவேகானந்தர், நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் கூறியது:

    இளைஞர்கள் சினிமா, அரசியல் இரண்டையும்  தவிர்க்க வேண்டும்.

    நம் தேசத் தந்தை மகாத்மாகாந்தி நம் முன்னேற்றத்துக்கு கிராமமே அடிப்படை. கிராம நிர்வாகத்தில் சேவை மனப்பான்மையுடன் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்றார்.

    இதோ, சரியான தருணம். இளைஞர்களுக்காகத் தாயராகிவிட்டது. உங்களிடமுள்ள நேர்மை, நாணய உணர்வுகளுடன் சேவைக்கான வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

    உங்கள் கண்முன்னால் உங்கள் உரிமை பறிபோவதை இனியும் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் வசிக்கும் தெருவில் நாட்டு நலனில் அக்கறையுள்ள சிலரை இனம் கண்டு ஒன்று சேருங்கள்.

    மக்கள் நலத்திட்டங்கள் உங்கள் தெருவில் செயல்பாட்டுக்கு வரும்போது, எச்சரிக்கையாக, விழிப்பு நிலையிலிருந்து சரியான விபரங்கள் பெற்று கண்காணிக்க வேண்டும்.

    வார்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணக்க நிலையில் உங்கள் தெருவுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் விபரம் கூறி, அதைப்பெற வலியுறுத்த வேண்டும்.     புழுக்கள் கூட, ஊசியால் குத்தினால் நெளிகிறது.

    காய்ந்த சருகுகள் கூட, அதன் மீது நடந்தால் சப்தமிடுறது.

    நீங்களென்ன, சருகுகளை விட, புழுக்களை விட தாழ்ந்தவர்களா?

    எதையும் சாதிக்கும் மனோசக்தி அளவில்லாமல் உங்களுக்குள் நிரம்பியுள்ளது. நியாயமான செயல்களுக்கு, ஒத்த கருத்துடைய இளைஞர் பெருமக்கள் ஓடிவரக்காத்துள்ளனர்.

    உங்களுக்குள் இருக்கும் நீ எப்படிப்பட்டவர் எனக் கண்டுபிடி.

    நீங்கள் அனைவரும் நொந்து கொண்டு, நடக்கின்ற அநியாயமான நிகழ்வுகளை  ஏற்றுக் கொண்டு வாழ்வதற்காகப் பிறக்கவில்லை என்பதை உறுதியாக நம்புங்கள்.

    அவிழ்த்துச் சிதறிய நெல்லிக்காய்களாக இறைந்துள்ள நிலையை நீக்கி,  ஒன்று சேரும் மனநிலைக்கு வரவேண்டும்.

    வாய்ப்பை உருவாக்கி, தெரு மக்களுக்கு, அத்தொகுதியில் சேவை செய்யக் கூடிய வாய்ப்பை, தேர்தல் மூலம் பெறவும் ஆராய்ந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

    மயக்க நிலை முடியும் காலம் நெருங்கி விட்டது. மயங்கிக் கிடப்போரும், நம் உடன் பிறவா நல்ல அன்பர்களே என்று  அவர்களது குடும்பத்தார் மூலம் உங்கள் சேவைக்கான அங்கீகாரத்தைப் பெற முயல வேண்டும்.

    தவறு கண்ட இடத்திலே, சுட்டிக்காட்டும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு குச்சியை எளிதில் உடைத்து விடலாம். ஆனால், பல குச்சிகள் சேர்ந்த கட்டை உடைப்பது மிகவும் சிரமம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    விமான நிலையம் சொல்லும் பாடம். ரன்வேயில் ஓடுகின்ற விமானம், ரன்வே முடியுமிடத்துக்கு சற்று முன்னர்தான் மேலெழுந்து ஆகாயத்தில் பறக்கிறது.

    முயற்சியில் தோல்வி என்றால் துவண்டு விடக்கூடாது. இடைவிடா முயற்சி ஒன்றே நம் துயரோட்டும். தோல்வி தரும் பாடங்களை விருப்பத்துடன் ஏற்று, தேவையான மாற்றங்களுடன் மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிப்பதைக் கடமையாகக் கருத வேண்டும்.

    ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திமிருந்து சுதந்திரம் பெறத் தமது சொத்து, சுகம் அனைத்தையும் இழந்தவர்கள் கணக்கிலடங்காதவர்.

    சிறைகளில் அவர்கள் அனுபவித்த  கொடுமைகள் கல் நெஞ்சையும் கரைக்கும். அந்தமான் தீவிலுள்ள செல்லுலார் சிறையில் நம் முன்னோர்கள் அனுபவித்த துன்பங்கள் அளவில்லாதவை.

    இன்று தமிழ் நாட்டில் ஏராளமாக இழந்து விட்டோம். இந்திய அரசியல்  நிர்ணய சட்டம் கூறும் உரிமைகளை அனுபவிப்பது கூட சிரமமே.

    வேதாத்திரி மகரிஷி சொன்னது போல், சில சுயநலவாதிகள் ஒன்று சேர்ந்து அரசியல் கட்சி என்ற போர்வையில்  மக்களைக் காயடித்து வருகின்றனர்.

    சட்டங்களை இயற்றுவோரும், அதை அமல்படுத்துவோரும், சுயநலத்துக்காக அச்சட்டங்களை மீறுவது தொடர்கதையாகி விட்டது.

    இந்த அராஜகங்களை மாற்ற இளைஞர்கள் செய்ய வேண்டியது, உங்களுக்குள் உறைந்துள்ள உங்களை அறிந்து, நம்பி, அதன் வழிகாட்டுதலில் செயல்படுவதே!

    செயல்படுவோம்! சந்தோஷமாக வாழ்வோம்!!

    யோகமும் மனோபாவமும்

    யோகா என்பது இளமையில் ஆடாத ஆட்ட மெல்லாம் ஆடி ஓய்ந்த பின்னர், வயசாகிப் பொழுது போக்க வழியில்லாமல் இருப்பவர்களின் போக்கிடம் என்று நம்மில் நிறைய பேர்களின் நினைப்பாகும். உண்மையில், உணவு, நீர் காற்று ஆகியவற்றின் மூலம் நம் உடலுக்குச் சக்தி பெறும் நுட்பங்கள் போல் யோகாவும் ஆகாசம் மூலம் சக்தி பெறும் நுட்பமாகும். இந்த நுட்பத்தை வாழ்வின் அனேக காலங்களை வீணாக்கிய பின்னர் எஞ்சிய நாட்களில் பயன்படுத்த முயற்சிப்பதால் பெரிதாகப் பலன் எதுவும் கிடைக்காது. உண்மையில் இளமைக் காலத்திலேயே யோகத்தைக் கற்று பயின்று உயிர்ச் சக்தி மற்றும் வாழ்க்கை விரைய மாவதைத் தடுத்து இளமையோடு நீடூழி வாழலாம். அதேபோல், நம் மனோபாவமும் நம் இளமைத் தன்மையை காக்கும் விதமாக வைத்துக் கொள்ள முடியும். இந்த இரண்டையும் இனிப் பார்ப்போம்.

    1. ஆழ்நிலை தியானம்: ஏதேனும் ஒரு யோக அமைப்பில் தகுந்த குருவின் துணை கொண்டு ஆழ்நிலை தியானம் கற்றுக்கொள்வது நல்லது. தியானம் என்பது ஆன்மீகமும் விஞ்ஞானமும் இணைந்த உயிர்ச் சக்தி செறிவேற்ற நுட்பமாகும். தியானம் மூலம் நம் உயிர் ஆதாரச் சக்கரங்கள் ஏழும் அதற்குண்டான ஏழு மண்டலங்களும் சக்தியாக்கம் பெறும். ஆழ்நிலைத் தியானம் கைவரப் பெற்று அதனை நாள் தவராமல் செய்பவர்கள் தீவிர நோய்களுக்கு ஆட்படமாட்டார்கள். அதேபோல், சக்தி தேவைக்காக மாற்று மருத்துவங்களை அண்டியிருக்கத் தேவையில்லை. நாமே நம் சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். ஆக, நமக்கு நாமே திட்டம்தான் இந்த தியானமாகும்.
    2. காயகல்ப பயிற்சி: வேதாத்திரி மகரிஷி அவர்களின் குண்டலினி யோக முறையில் கற்றுத் தரப்படும் காயகல்ப பயிற்சியானது நம் மூலாதார விந்து நாத உயிர்ச் சக்தியை நம் உடல் முழுமைக்கும் பாய்த்து புத்துணர்வேற்றும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனை அவ்வமைப்பு மூலம் கற்று பயின்று பலன் பெறலாம். இதனாலும் நம் உடல் இளமைப் பொலிவு பெறும்.
    3. எளிமையான உடற்பயிற்சி: நம் உடலை முறுக்கேற்றும் கடினமான உடற்பயிற்சி யாவும் நம்மை விரைவாக முதுமையாக்கும். “அப்படியெல்லாம் இல்லையே, நாங்கள் பல காலமாக அவ்விதமாக உடற்பயிற்சி செய்து கொண்டுதானே வருகிறோம். நாங்கள் இளமையாகத் தானே இருக்கிறோம்” என்று நீங்கள் கூறலாம். உடல் முறுக்கேற்றம் இருக்கும் வரை இளமையாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால் அது உங்கள் முறுக்குத் தன்மையால்தான் என்று இப்பொழுதே இனம் கண்டு எளிய முறை உடற்பயிற்சிக்கு மாறிவிடுங்கள். நமது உடலின் முறுக்கு (இறுக்கம்) தளர்ந்த பின்னர் நாம் விரைவாகத் தாத்தாவாகி விடுவோம். எளிய முறை உடற் பயிற்சிக்கு நாங்கள் எங்கே சென்று கற்றுக்கொள்வது?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எங்கேயும் போக வேண்டாம். நாமே இலகுவாக செய்யலாம். கால் முனை முதல் தலை வரை இருக்கும் அசையும் மூட்டுகளை (Joints) ஒவ்வொன்றாக அசையும் விதமாக உடற் பயிற்சி செய்வதால் மூட்டோடு இணைந்துள்ள நரம்பும் உடல் பகுதியும் புத்துணர்வு பெறும்.
    4. இலட்சிய நெருப்பு மற்றும் நேர்மறைச் சிந்தனைகள்: நாம் இனம் கண்டு வைத்துள்ள நமக்கான இலட்சியங்களின் நெருப்பு நமக்குள்ளே அனையாமல் இருக்குமாயின், நம் உயிர்ச் சக்திச் செறிவாக இயங்கும். அப்படி ஒரு இலட்சிய வெறி இருக்கும் வரை நம் முந்தைய நோய்கள் மற்றும் சக்தி குறைபாடுகள் பறந்து போகும். என்ன கதை விடுகிறேன் என்று நினைக்காதீர்கள். உண்மையை உணர வேண்டுமாயின், நீங்களும் உங்கள் இலட்சியத்தில் கருத்தாய் நெருப்பாய் இருந்து பாருங்கள். உங்கள் உயிர்ச் சக்தி அதற்குத் தயாராய் மாறிடும் அதிசயத்தை உணர்வீர்கள். இந்த இலட்சிய வெறியோடு நம் சிந்தனைகளை நேர்மறையாக வைத்துக் கொள்வோ மேயாயின், நம் உயிர்ச் சக்தி பிரவாகம் எடுக்கும். அப்படி இருந்து வாழ்வினில் வெற்றி காண வாழ்த்துக்கள். பிறர் நம்மை வாழ்த்தும்படி வாழ்வதாலும் நமக்குள் உயிர்ச் சக்தி பெருகும். இறுதியாக நம் பிறப்பின் அர்த்தம் புரிந்து அது நோக்கிய பயணமாக நம் வாழ்க்கை அமைந்தாலும் இளமையாக இருக்கலாம்.

    யோக வாழ்க்கை முறையும் நேர்மறை எண்ணங்களும்

    நம் உயிர்ச் சக்தியைப் பெருக்கும்.

    போக வாழ்க்கையையும் எதிர்மறை எண்ணங்களும்

    நம் உயிர்ச் சக்தியைக் குறைக்கும்.

    சீதபேதி- அமீபியாசிஸ் (Amebiasis)

    சீதபேதி ஏற்படுவதற்கு எண்டமீபா ஹிஸ்டோ லைடிகா (Entamoeba histolytica) என்னும் புரோட்டோ சோவல் ஒட்டுண்ணியே காரணமாகும். இக்கிருமியால் தாக்கப்பட்டவர்களில் 10% பேருக்குக் குறைவான வர்களுக்கு மட்டுமே இந்நோய் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. சீதபேதி பொதுவாக இரண்டு நிலைகளில் காணப்படுகிறது.

    குடல் பகுதி – குடல்பகுதியைத் தாக்குகிறது. (Intestinal) அதனால் லேசான வயிற்று உபாதை, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

    குடல்பகுதியைத் – குடல் பகுதியைத் தவிர மற்ற தவிர மற்ற உறுப்புகளான கல்லீரல், பகுதிகள்  நுரையீரல், மூளை, மண்ணீரல், (Extra Intestinal)    தோல் ஆகிய உறுப்புகளையும்  பாதிக்கிறது.

    பரவல் தன்மை

    இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 15% மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் ஒட்டுண்ணி தாக்குதலினால் மக்கள் இறப்பதில் சீதபேதி மூன்றாவது காரணமாகும்.

    காரணி : எண்டமீபா ஹிஸ்டோலைடிகா

    இந்த ஒட்டுண்ணி 2 நிலைகளில் காணப்படுகிறது.

    1. தாவரங்கள் – இது பெருங்குடலில் தங்கிப் போல வளர்கிற  பெருகுகிறது. மனித நிலை உடலிலிருந்து வெளியேறினால் (Vegetative form) அதனால் உயிர் வாழ முடியாது.

    2. சிஸ்டிக் நிலை -இது மனித உடலிலிருந்து மலம் (Cystic form) மூலம்  வெளியேறுகிறது. இது பல நாட்களுக்கு ஈரப்பதம் மற்றும் குறைந்த வெப்பநிலையில் அதாவது மலம், தண்ணீர், குப்பைகளில் வாழும்.

    இவற்றை 55oC மேல் தண்ணீரைச் சூடுபடுத்தும் போதும், உறைய வைக்கும் போதும் கொல்ல முடியும்.

    நோய்க்கிருமியின் இருப்பிடம் 

    கிருமியின் தாவரங்கள் போல வளர்கிற நிலை மனித உடலில் மட்டுமே வாழும். உணவு தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் மூலம் பிறருக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

    நோய் தொற்று காலம்

    சிஸ்ட் வெளியேறும் வரை பல வருடங்களுக்கு.

    புரவலன் (Host)

    இது எல்லா வயதினருக்கும், பாலினத்தவருக்கும் வரும். ஓரு குடும்பத்தில் ஒருவர் இந்நோயால் தாக்கப் பட்டிருந்தால் அக்குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் இக்கிருமி தொற்று ஏற்படலாம்.

    சுற்றுப்புறக் காரணிகள்

    சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் அதிகமாகப் பரவுகிறது. மனிதக் கழிவுகள் விவசாயத்தில் உரமாக பயன்படுத்துவது இந்நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாகும்.

    மழைக்காலத்தில் இந்நோய்த் தொற்று அதிகமாகக் காணப்படுகிறது.

    பரவும் முறை

    மலம் – வாய் வழி முறை

    அசுத்தமான தண்ணீர், உணவின் மூலம் பரவுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் சிலசமயம் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    சிஸ்ட்

    கைகளிலும், நக இடுக்குகளிலும் காணப்படுகிறது. இதனால் கை மூலம் நேரடியாகப் பரவுகிறது.

    நோய்க்கிருமி தாக்கியபின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்காகும் காலம்

    2 முதல் 4 வாரங்கள் மற்றும் அதற்கு மேலும்.

    அறிகுறிகள்

    பெருங்குடல் வீக்கம் (Amoebic Colitis)

    வயிற்றுப்போக்குடன் கூடிய வலி, மலம் இரத்தம் கலந்து வெளியேறுதல்.

    சில நேரங்களில் திடீரென்று காய்ச்சல், குளிர், தீவிர வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடம்பில் நீர்ச்சத்து குறையும்.

    கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் வீக்கம் (Amoebic Abscess)

    குழந்தைகளுக்குக் காய்ச்சல் உடன் கூடிய வயிற்று வலி, வயிறு வீக்கம், கல்லீரல் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

    ஆய்வகப் பரிசோதனை முறைகள்

    இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாதல், இரத்தசோகை, ESR அதிகமாகுதல், கல்லீரல் நொதிகள் (Liver Enzymes) அதிகமாகுதல், மலம் பரிசோதித்தல், சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

    சிகிச்சை முறைகள்

    மருத்துவரின் அறிவுரைப்படி தகுந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்ளுதல். 2 வாரத்திற்கு ஒரு முறை மலம் பரிசோதனை செய்ய வேண்டும்.

    தடுக்கும் வழிமுறைகள்

    சுற்றுப்புற சுகாதாரம் (Sanitation)

    • மனிதக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் நீக்குதல்
    • தூய பழக்கவழக்கங்கள் (சாப்பிடுவதற்கு முன் கை கழுவுதல்)
    • உணவு தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தகுந்த இடைவெளியில் பரிசோதனைகள் செய்ய வேண்டும். அவர்களுக்குச் சுத்தமான பழக்க வழக்கங்களைக் கற்றுத்தர வேண்டும்.
    • மக்களுக்கு இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
    • இந்நோய் வருமுன் தடுப்பதற்கு எந்த மருந்தோ, தடுப்பூசியோ கிடையாது.

    கற்பனை சக்திக்குள்தான் எத்தனை அற்புதங்கள்

    மல்யுத்த வீரர்

    “தென்னிந்திய ஆலின் சிறுபழத்து ஒரு விதை

    தெண்ணீர் கயத்து சிறு மீன் சினையிலும்

    நுண்ணியதே ஆயினும் அண்ணல் யானை

    அணிதேர் புரவி ஆள்பெரும் படையொடு

    மன்னர்க்கு இருக்க நிழலாகுமே”.

    என்ற நீதிநூலின் வரிகள் ஆழ்ந்த கருத்தை தன்னகத்தே கொண்டுள்ளன. மனிதன் என்பவன் ஒரு ஆலின் விதையைப் போன்றவன். சிறிய மீன் முட்டையைக் காட்டிலும் சிறியதாக இருக்கின்ற ஆலம் பழத்தின் விதையானது, முளைத்து, வளர்ந்து, படர்ந்து அது ஒரு பெரிய நாட்டின் மன்னனின் தேருக்கும் சேர்த்து நிழலைத் தருவது போல இந்த மண்ணுலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தன்னுடைய கல்வியால், உழைப்பால், பெற்றோர்களின் வழிகாட்டுதலால் நண்பர்களின் சீரிய நட்பால் உயர்ந்து பலருக்கும் நன்மை செய்யும் ஆன்மீக பலம் இவை மூன்றும் அடங்கியுள்ளது.

    9 அடி உயமும் 900 பவுண்டு எடையுமுள்ள மல்யுத்த வீரர் என்று கற்பனைக் கதையில் உருவகப்படுத்தியது மனிதனின் பலத்தை குறிப்பதாகும். இத்தகைய பலத்தை மனிதன் பெறுவதற்கு யோகிராமன் கூறிய பழமையான பத்து யுக்திகள் இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன.

    முதலாம் யுக்தி:

    அமைதியாகும். ஒரு சிறிய பயணம் நாம் காரில் செல்லும்போது, இடையில் நிறுத்தி சிற்றுண்டி சாப்பிடுதல், சிறிய தூக்கம், குழந்தைகளின் உரையாடலில் ஆவலுடன் கலந்து கொள்ளுதல் போன்றவற்றை செய்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அது போல் நம் வாழ்க்கை என்ற நெடும் பயணத்திற்கு அன்றாடம் 15 நிமிடம் நம் தனிமைக்கு ஒதுக்குவது நல்லது. தனிமையில் அமைதியாக இருப்பது நம் வலிமை மற்றும் திறமைகளை அறிய உதவும். மேலும், இந்த யுக்தியை 30 நாட்கள் தொடர்ந்து செய்தால் அதுவே நம் பழக்க வழக்கங்களில் ஒன்றாக மாறிவிடும். அமைதிக்காக நாம் தேர்ந்தெடுத்த இடம் கூட நம் வருகைக்காக காத்திருப்பது போன்ற உணர்வு கூட நம்மிடையே தோன்றும்.

    இரண்டாம் யுக்தி:

    உடல் நலம் ஆகும். ஒரு வாரத்தில் 168 மணி நேரம் உள்ளது. இதில் ஒரு 5 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சிகள் செய்தால் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

    மூன்றாவது யுக்தி:

    சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல் ஆகும். இயற்கை தரும் காய், கனி, தானியங்களை உட்கொள்வதால் நோயற்ற வாழ்வு வாழலாம். கொரில்லா குரங்கு, யானை போன்ற பிராணிகள் சைவ உணவு உண்டு அதிக பலத்துடன் உள்ளன. கொரில்லா குரங்கின் வலிமை முப்பது மனிதர்களின் வலிமைக்கு இணையானது என்று சொல்லப்படுகின்றது. திருவள்ளுவரும்…

    “மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

    ஊறுபாடு இல்லை உயிர்க்கு”. (குறள்: 945)

    என்ற குறள் மூலம் உடம்பிற்கு ஒத்துவரும் உணவை உண்பதால் அவர்தம் உயிர்க்கு எந்த இடையூறும் வராது என்று எடுத்துரைத்துள்ளார்.

    நான்காவது யுக்தி:

    அறிவுடைமை ஆகும். இந்த Computer யுகத்தில், நேரம் போதவில்லை என்ற நினைப்பில் முக்கியமான சில செயல்களை செய்ய மறந்து விடுகின்றோம். இது தவறு. Computer – ல் நாள் முழுவதும் வேலை செய்து அந்த விவரங்களை ‘Save’ செய்யாமல் விட்டுவிட்டு, அத்தனையும் பாழ் ஆகிவிட்டது என்று வருந்துவது போல் தான் வாழ்க்கையும். ஒவ்வொரு நாளும் ஒரு 30 நிமிடம் நல்ல புத்தகங்கள் படிப்பது நல்லது. உலகில் நடப்பவை எவையும் புதியவை அல்ல. சிறந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சரித்திரங்கள் படிப்பதன் மூலம் பல்வேறு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு படிப்பதன் மூலம் வள்ளுவரின்

    “எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

    அதிர வருவதோ நோய்”. (குறள்: 429)

    என்ற குறளுக்கிணங்க அறிவுடையோர் தீய சக்திகளை முன்பே அறியும் திறம் உடையவர்களாக இருப்பதால் அஞ்சும் வகையான எந்த அழிவுகளும் அவர்களுக்கு ஏற்படாது. மேலும், இந்த அறிவுடைமை…

    “அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

    உள்ளழிக்க லாகா அரண்”. (குறள்: 429)

    என்ற குறளுக்கிணங்க அறிவுடையோர்களால் கட்டப்பட்ட அறிவு என்ற உள்ளக்கோட்டையை  எந்தப் பகைவர்களாலும் அழிக்க முடியாது. அறிவுத்திறமையை வளர்க்கும் நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்கள் ஆவார்கள்.

    ஐந்தாவது யுக்தி:

    சுய பிரதிபலிப்பு ஆகும். ஒரு நாள் என்பது 24 மணி நேரம் கொண்டது. இதில், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்கள் நம்முடைய பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அன்று மாலை வீடு திரும்பிய பின் ஒரு 5 நிமிடம் அன்றைய பணிகளை நாம் நினைவிற்குக் கொண்டுவரும்போது, நாம் செய்த பாவ, புண்ணியங்களை நம்மால் உணர முடியும். இதுதான், ‘Self Reflection’ இதைத் தொடர்ந்து 30 நாட்கள் செய்யும் போது நாம் நடுவுநிலைமை என்று தராசு கூறும் நிலைக்கு கொண்டுவரப்பட்டு ஒரு தரமான வாழ்க்கையை வாழ வழிவகுப்போம்.

    “நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை

    நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை

    நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர்

    நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே.”

    (திருமந்திரம்: 32:320)

    என்ற திருமூலரடிகளின் வரிகள் நடுவு நிலைமையின் சிறப்பை விளக்குகின்றது. நடுவு நிலையற்றவர்களின் அறிவானது தெளிவாகச் செயல்படாது. அவர்கள் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுவார்கள். அதனால்தான் தற்கொலை, கொலை, சொத்து தகராறு, விவாகரத்து போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன.

    ஆகையினால், நடுவுநிலைமையை அடையும் யுக்தி அடைந்தவர்களுக்கு நாம் வாழ்கின்ற இவ்வுலகிலும், சென்று அடையும் மேல் உலகிலும் சொர்க்கமே வாய்க்கும். நரகம் வாய்க்காது. மேலும், தேவர்களுக்குச் சமமாகக் கருதப்படுவர். எனவே, அவர்கள் வழியில் நின்றதால் தானும் எய்த வேண்டிய இன்ப நிலையை எய்தினேன் என்று திருமூலர் கூறுகின்றார்.

    ஆறாவது யுக்தி:

    விடியற்காலையில் விழித்திருத்தல். ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு நாளின் 6 மணி நேரம் தூக்கம் போதும். முதலில் காலை 5.30 மணிக்கு எழும்பும் போது உடம்பில் சிறிய வலி இருப்பது போலத் தோன்றும். பின்னால், இதனால் அடையும் நன்மையை நினைக்கும் போது இந்த சிறிய உடல் வலி பெரிய விஷயம் இல்லை.  சூரியன் சிறந்த மருத்துவன். காலையில் எழுந்தவுடன் உள்ள 10 நிமிடங்கள், உறங்கும் முன் உள்ள 10 நிமிடங்கள் ஒரு நாளின் முக்கியமான நிமிடங்கள். ஏனென்றால், அந்த நேரத்தில் மனிதனின் ‘Sub – Conscious’ Mind  ஊக்குவிக்கப்படுகின்றது. நம் Mind-ல் பதிந்த நல்ல எண்ணங்கள் என்ற விதைகள், நல்ல செயல்களாக மாறி கற்பனைக்கதையில் கூறியிருந்தபடி,அழகிய பூந்தோட்டமாக மாற்ற உந்தப்படும் நேரமாகும். சூரிய ஒளி  புத்துணர்வைத்தருவதுடன், ஒவ்வொரு நாளையும் ஒரு புதிய நாளாக உணரவும் செய்கின்றது.

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி?

    எந்த உரிமையை வெல்ல வேண்டும் என்றாலும் இப்போது போராடி தான் வெல்ல வேண்டியுள்ளது. இந்த நிலை முறைதானா?

    ரேணுகாதேவி, எழுத்தாளர்

    கன்னியாகுமரி மாவட்டம்

    எந்த உரிமையை வெல்ல வேண்டும் என்றாலும், இப்போது போராடித்தான் வெல்ல வேண்டியுள்ளது. இந்த நிலை முறைதானா? என்ற கேட்டுள்ளீர்கள். இந்த நிலை முறையற்றது என்று ஒரே வரியில் பதில் தந்துவிடலாம். ஆனால் அது, இந்த விவகாரத்தில் அடங்கியிருக்கும் பல பிரச்சனைகளை வெட்ட வெளிச்சமாக்காது. ஆகையால் விரிவான விளக்கம் தர வேண்டியுள்ளது.

    மிக உயர்ந்த மனித உரிமைகைளப் போராடிப்  பெற்ற நாடு நம்நாடு. ஆங்கிலேயரின் ஆட்சியை அகற்ற நடந்த அறப்போராட்டங்களில் பலர் உயிர் இழந்தனர், சிலர் உடமையைத் துறந்தனர், பலர் வாழ்க்கையையே தொலைத்தனர். இறுதியில் சுதந்திரம் பெற்றோம். ஆனால், சுதந்திரப்போராட்டம் முறையானதுதான். அது பெரிய பிரச்சனை, அனைவரும் ஒன்றுசேர்ந்தால் மட்டுமே வென்றெடுப்பது சாத்தியம் என்ற நிலை இருந்தது. ஒன்று பட்டனர், வென்று காட்டினார்கள் நமது முன்னோர்கள். அவர்களைப் பாராட்டுவோம், அவர்களை நன்றியுடன் நினைவு கூறுவோம்.

    நியாமா போராட்டம்?

    ஆனால், இன்று எதற்கெல்லாம் போராட வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அரசாங்கத்தின் எந்த ஒரு நியாயமான திட்டத்தையும் நிறைவேற்ற முடிவதில்லை. எல்லாத் திட்டங்களுக்கும் எதிராகப் போராட்டம். திட்டம் என்றாலே போராட்டம் என்பதே சிலரின் கொள்கையாகி விட்டது. மின்சாரம் நாட்டின் கட்டமைப்பு, அது அடிப்படைத் தேவை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மின்சாரத்தை தயாரிக்க ஒரு அணுஉலையை அமைத்து, மின்சாரம் எடுக்கும் நிலையில் போராட்டம் வெடிக்கிறது. அணு மின்சாரம் என்பது அனைத்து ரக மின்சாரத்திலும் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் அனைத்து விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள். பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களும் கூறுகிறார். இருந்தாலும், போராட்டம் பல மாதங்கள் தொடர்கிறது. இதனால், மின் உற்பத்தி செய்வது தாமதமாகிறது. மின் திட்ட செலவு பலமடங்கு ஆகிவிடுகிறது. இது ஒருவிதப்போராட்டம்.

    இன்னொரு ஊருக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல அந்த ஊரார் எதிர்க்கிறார்கள். போராட்டமும் நடத்துகிறார்கள். அப்படி ஒரு போராட்டம் நடந்த ஊரில் கலவரம் வெடித்து துப்பாக்கி சூடும் நடந்தது. இதனால், குடிநீரை எடுத்துச் செல்லும் திட்டம் கைவிடப்பட்டது. பைப்புகள் மட்டும் அங்கே இன்றும் கிடக்கின்றன. இன்றுவரை தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள் 15கி.மீ., தூரத்தில் உள்ள அந்த ஊர் மக்கள்! ஒரு விபரீத போராட்டத்தின் விளைவு தகித்த வாய்க்கு தண்ணீர் இல்லை!.

    தொழில்களை நசுக்கும் போராட்டம்

    தொழிற்சாலையில் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடக்கிறது, அது பல நாட்கள் நீள்கிறது. தொழிலாளி கேட்ட ஊதிய உயர்வு தருவதாக இருந்தால் தொழிற்சாலை மூடும் அபாயம் ஏற்படும் என்று நிர்வாகம் எச்சரிக்கிறது. இருந்தாலும் போராட்டம் தொடர்கிறது. அதுவே வன்முறையாக மாறுகிறது. கோவையில் ஒரு தொழிற்சாலையில் நடந்த வன்முறையில், நிர்வாக உயர் அதிகாரியே கொல்லப்பட்டார். இது போராட்டங்களின் மிக மோசமான ஒரு விளைவு. இது போன்ற பலபோராட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்ததையும், ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்த பல பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டதையும், அதற்கு பின்னர் அந்த தொழிலாளர்கள் திண்டாடியதையும், நீங்களே கண்கூடாகப் பார்த்து விட்டீர்கள்.

    தொழிலாளர் போராட்டம் பற்றி பேசும்போது, தொழிற்சாலை முதலாளிகள் அனைவரும் நீதிமான்கள் என்றோ, அவர்கள் கூலியை சரியாகத்தான் கொடுப்பார்கள் என்றோ நான் சொல்லவில்லை. தொழிலாளிக்கு நியாயமான ஊதியம் தராமல், சுய ஆடம்பரங்களில் வாழும் முதலாளிகளாலும் பல தொழில்கள் அழிந்துவிட்டன.

    மனைநிலை மாற்றம் வேண்டும்

    சுதந்திரத்திற்காகவும், பெண் கல்விக்காகவும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், மூடப்பழக்கங்களை ஒழிக்கவும் போராடிய நிலை மாறி இன்று குடிதண்ணீர் வரவில்லை என்றால் சாலையை மறிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. குடிதண்ணீர் மக்களின் உரிமைதான், ஆனால் சாலையில் பயணிப்பது மற்றவர்களின் உரிமை இல்லையா? மருத்துவமனை, அலுவலகம், வீடு என்று போக வேண்டியவர்களைப் போராட்டக்காரர்கள் நடு வீதியில் தடுத்து நிறுத்தி அராஜகம் செய்வது எந்த வகையில் நியாயம்..?

    பல இலட்சம் ரூபாய் செலவு செய்து MBBS படித்த ஒரு மருத்துவரை உருவாக்குகிறது ஏழைமக்களின் அரசு. அந்த மாணவனுக்கு கல்வி இலவசம், ஆனால் அதற்கான பணம் மக்கள் வரிப்பணம். இந்த மாணவர்களில் பலர் கிராமப்புற மாணவர்கள்தான். இவர்கள் ஒரு ஆண்டுகாலம் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்கிறது அரசு. உடனே மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், பணிகிறது அரசு. கிராமங்களில் மருத்துவர்க்ள போதுமானதாக இல்லாமல் உயிரிழக்கிறார்கள். MBBS படிப்புதான் உண்மையான  மருத்துவப்படிப்பு என்பதால் விஞ்ஞான மருத்துவ சிகிச்சை இல்லாத கிராமத்தில் பாதிப்பு அதிகமாகவே இருந்து விடுகிறது. இதுவும் உரிமைக்கான போராட்டம் என்கிறார்கள் சிலர்.

    ஆக, எந்த உரிமைக்காகப் போராடுகிறோம் என்பது ஆராய வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் நடந்து விட்ட பல போராட்டம் ஒரு நல்ல காரணத்திற்காக நடைபெறவில்லை. அதேபோல்,  அப்படி போராடினாலும் அந்த வெற்றியால் எந்த பயனும் இல்லை. இந்த நியாயமில்லாத போராட்டங்களால் ஒரு தொழிற்சாலை வருவதும், வேலை வாய்ப்புகள் உருவாவதும் நின்று போகிறது. முறையாக இயங்கிய தொழிற்சாலை மூடப்படுகிறது. தொழிலாளி வேலை செய்யாமல் இருப்பதால் உற்பத்தி தடைபடுகிறது. நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பிக்கிறது. இதன் விளைவாக கொரியா நாட்டு மோட்டர் சைக்கிலும், ஜப்பான் நாட்டு கார்களையும், சீனா நாட்டு பர்ணிச்சர்களும் வந்து இறங்குகின்றன. அதை நாம் வாங்கி வெட்கமில்லாமல் பயன்படுத்துகிறோம். பிற நாட்டு பொருட்களை நம்பி வாழ்ந்து பழகிவிட்டோம்.

    மாணவர் போராட்டம்

    மாணவர்கள் போராட்டத்தில் குதித்து உரிமைகளை வென்றெடுத்தார்கள் என்று பெருமையாகப் பேசப்படுகிறது. ஆனால், மாணவர்கள் கடமை என்ன? அவர்கள் கல்வி கற்க வேண்டும்.  தொழில் நுட்ப வல்லுநர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், நிர்வாக அதிகாரிகளாகவும் வரவேண்டும். அதற்கு பதில் அவர்கள் போராட்டம் நடத்தச் சென்று விட்டால் அவர்களால் எப்படி கல்வி கற்க முடியும். அவர்கள் சில நாட்கள் தானே போராட்டத்தில் வீணடித்தார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அவர்கள் கற்கும் உயர்கல்வி இன்று மிகவும் தரம் தாழ்ந்து கிடப்பதாகவே கல்வியாளர்களே கவலைப்படுகிறார்கள். இந்த தருணத்தில் அவர்களது பொன்னான நேரத்தை இப்படி வீணடிக்கலாமா..? அதுவும் அவர்கள் போராடும் காரணத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள்? அறிவை வளர்க்க போராடவில்லை, அறிவியலை வளர்க்க போராடவில்லை, தொடர்புத் திறனை வளர்க்க போராடவில்லை, செயல்திறனை வளர்க்க போராடவில்லையே! அவர்களுக்கு சற்றும் சம்மந்தமில்லாத எதற்கோ போராடுகிறார்கள்.

    ஏன் போராட்டங்கள்?

    இறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். உயர்ந்த நோக்கத்திற்காக போராட்டங்கள் நடப்பது நல்லது. ஆனால், இன்று நடக்கும் பல போராட்டங்கள் தேவையில்லாதவை, அதோடு மிகவும் ஆபத்தானவை. பெரும்பாலும் போராட்டங்கள் பொய்யான தகவல்களை உண்மையாகச் சித்தரித்து, ஊதிப்பெரிதாக்கி, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களைக் கோபமடையச் செய்து சில விஷமிகள் பின்னணியில் இருந்து நடத்தும் போராட்டமாகத்தான் இருக்கிறது. வளர்ந்து விட்ட நாடுகளான டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மக்கள் உரிமைக்காகப் போராடுவது இல்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. ஏழ்மை, கல்வியின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமுதாய ஏற்றத்தாழ்வுகள், மோசமான நம்பிக்கை முறை, பரஸ்பர சக மனிதன் மீது வெறுப்பு, பெண் அடிமைத்தனம் போன்ற பிரச்சனைகள் இன்னும் இருப்பதால்தான் இந்த போராட்டங்கள் நம் நாட்டில் நடைபெறுகிறது என்று எனக்குப்படுகிறது.

    முடிவு

    உரிமைக்காக போராடும் நாம் நமது கடமைகளையும் உணர்ந்துவிட்டால் காலப்போக்கில் தேவையில்லாத போராட்டங்களை சம்மந்தமில்லாதவர்கள் செய்யாமல் இருப்பார்கள். போதுமான உணவு, குடியிருக்க வீடு, உடுக்க உடை, குடிக்க தண்ணீர், ஒரு நல்ல வேலை, நியாயமான சம்பளம், எதிர்கால நம்பிக்கை, பாதுகாப்பு என்பவை இல்லாதவரை நமது நாட்டில் இதுபோன்ற உரிமைப் போராட்டங்கள் நடத்த மக்களுக்கு நேரம் இருக்கும். எனவே, இந்த தேவைகள் அனைத்தையும் நமது மக்களுக்குப் பெற்றுத்தருவதுதான் இன்றைய இளைஞர்களின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, போராட்டங்களை நடத்துவது அல்ல. போராட்டங்களை நடத்தி அரசை பணிய வைப்பதால் நடக்கவிருந்த ஓரளவு முன்னேற்றம் கூட தடைபடும்!

    உதவிக்கு கரம் நீட்டு உழைப்புக்கு வரும் பாராட்டு

    திரு. டாக்டர் லெனின்பாபு

    MBBS., MS (ORTHO)., FRCS(EDIN), MCH (ORTHO)(L.POOL)., FRCS (ORTHO)(EDIN)., PAEDIATRIC FELLOW (SHEFFIELD)

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்

    கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவனை

    கோயமுத்தூர்

    • தூய்மை, நேர்மை, நாணயமிக்க ஒரு நல்ல மருத்துவர் மற்றும் மனித நேயமிக்க மனிதர்.
    • தான் பிறந்த கிராமத்தைத் தந்தெடுத்து பாலைவனமாக இருந்த பூமியை சோலைவனமாய் மாற்றியவர்.
    • பழக்கத்தில் வரும் பண்பை விட, பண்பால் வரும் பழக்கம் உயர்ந்தது என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருபவர்.
    • வாய்ப்புகள் பல வந்தும் வசதியை எதிர்பார்க்காமல்  தன்னை வளர்த்த நாட்டிலேதான் சேவை இருக்க வேண்டும் என்று ஒரு கொள்கையை வரையறுத்துக்கொண்டு பல மருத்துவ சேவைகளை செய்து வருபவர்.
    • தன்னிடம் வருபவர்களுக்கு முதலில் தன்னம்பிக்கைக் கொடுத்து நல்லதொரு விழிப்புணர்வைக்  கற்று தருபவர்.
    • தமிழகத்தில் விரல் விட்டு எண்ணகூடிய குழந்தைகள் மூட்டு மாற்று அறுவை மருத்துவரில் இவரும் ஒருவர்.
    • மருத்துவமே மகத்துவமே, மகத்துவமே நல்ல மனிதநேயம் என்ற வாக்கின்படி இன்று மருத்துவத்துறையில் கால்நூற்றாண்டாக கால்பதித்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் முத்திரைப் பதித்து வரும் டாக்டர் லெனின்பாபு அவர்களை நேர்முகம் கண்டோம் அவரின் அனுபவ பகிர்வு இனி நம்மோடு.

    கே. உங்களின் பிறப்பு மற்றும் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?

    கோவைக்கு அருகில் உள்ள சிறுமுகைதான் எனது சொந்த ஊர். ஆனால் என்னுடைய பூர்வீகம் தாராபுரம் அருகில் உள்ள இல்லிலியம்பட்டி என்ற குக்கிராமம். எனது தந்தை திரு விநாயகம், தாய் திருமதி மோகனாம்பாள். 1960ல் சிறுமுகைக்கு அருகிலுள்ள விஸ்கோஸ்  தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். மிக சராசரியான குடும்பம் எங்களுடையது. எனது தந்தை பணிபுரிந்த விஸ்கோஸ் நிறுவனம் நடத்திய S.I.V. மெட்ரிக் பள்ளியில் என் பள்ளிப்படிப்பு தொடங்கியது. நான் சிறுவயதிலிருந்தே வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன். விளையாட்டிலும் முதல் மாணவனும் நானே. 12ம் வகுப்பில் திருப்பூர் மாவட்டத்திலேயே முதல் மாணவனாகத்  தங்கப்பதக்கம் வென்றேன். சாதாரணமான குடும்பத்தில் பிறந்த  அனைவரும் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால் படிப்புதான் அவர்கள் கையில் எடுக்கும் அற்புத ஆயுதம் என்று சொல்லிக்கொடுத்தவர் எனது தந்தை.

    கே. நீங்கள் மருத்துவர் ஆகும் எண்ணம் எப்படி, தோன்றியது?

    நான் 7ம் வகுப்பு படிக்கும் பொழுது ஒருநாள் விளையாடி கொண்டிருக்கும் அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து கையில் எலும்பில் அடிபட்டுவிட்டது. அப்போது எனது தந்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள மூசாகலீம் என்ற ஒரு முருத்துவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் சிகிச்சை அளித்த முறை எனக்குப் பிடித்திருந்தது. மேலும், சிறுமுகையில் டாக்டர் பொன்னுராஜ் என்ற மருத்துவர் மீது அந்த ஊர்மக்கள் வைத்திருந்த மரியாதையும், அவர் பழகிய விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. நானும் அவர்களைப் போல் ஒரு சிறந்த மருத்துவராக வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

    கே. மருத்துவக் கல்லூயில் நுழைந்து பற்றிச் சொல்லுங்கள்?

    நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்று கீதை சொல்கிறது. அதைப்போல 12ம் அண்டு வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதால் மருத்துத்துறையில் சிறந்து விளங்கும் சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது.

    எங்கள் குடும்பத்திலும் சரி, ஊரிலும் சரி உறவினர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால், நான்தான் எங்கள் குடும்பத்திலேயே முதல் மருத்துவ மாணவன். சாதாரண தொழிலாளியின் மகனான நான் மருத்துவம் படித்தேன் என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் கல்விதான். மெரிட்டில் படித்ததால் எனக்கு ஆண்டிற்கு வெறும் ஐந்தாயிரம் ரூபாய்தான் செலவானது. ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி என்னை மிகச்சிறந்த மருத்துவனாக செதுக்கியது என்றே சொல்வேன்.

    கே. நீங்கள் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சைத் துறையைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்ன?

    மருத்துவத்தில் பல பிரிவுகள் உண்டு. அதிலும் பல அறுவை சிகிச்சை முறைகளும் உண்டு. ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் படிக்கும் போது டாக்டர் சி.டி. அழகப்பன் என்ற  மருத்துவர் ஆர்த்தோ துறையில் தலைவராக இருந்தார். அவர் பாடம் நடத்துவதிலும் அறுவை சிகிச்சை செய்வதிலும் கைதேர்ந்த நிபுணர். அவரின் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. நாமும் இவரைப்போல் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணராக வர வேண்டும் என்று எண்ணினேன். அவரைப்பார்த்து வந்ததுதான் இந்த ஆர்வம். ஆர்வம் மட்டுமிருந்தால் போதாது, அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். அதனால் என்னை நானே நன்றாகத் தயார்படுத்திக் கொண்டு கடுமையாக உழைத்தேன். அதன் பயனாய் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றதால் மத்தியபிரதேசத்திலுள்ள இந்தூர் மருத்துவக்கல்லூரியில் டாக்டர் தனேஜா அவர்களின் கீழ் படிக்கும் M.S. Ortho வாய்ப்பு கிடைத்தது.

    டாக்டர் தனேஜா அவர்கள்தான் என் குரு. வேறு  மாநிலத்தில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டுமென்றால், அம்மாநிலத்தின் மொழியை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இங்கு இந்தி முதன்மை மொழியாக இருந்தது.  இந்தியை மிகக்குறுகிய காலத்தில் கற்றுக் கொண்டு மிகச்சிறப்பாக செயல்பட்டேன். M.S. Ortho  -வில் டாக்டர். முக்கோ பாத்யாயா அவர்களின் பெயரில் தங்கப்பதக்கம் பெற்று Best Outgoing Student ஆக 1999ம் வருடம் தேர்வு பெற்றேன்.

    கே. உங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் பட்டங்களை குறித்துச் சொல்லுங்கள்?

    நான் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் படிக்கும் போது புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர் கல்யாணராமன் அவரது பெயர் பலகையை பார்த்திருக்கிறேன். அதில் அவரின் பெயரை விட அவரின் பட்டங்கள் பெரிதாக இருந்தது, அதில் இருந்த FRCS – என்ற கல்வித்தகுதி எல்லா மருத்துவர்களுக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். நான் எது குரு பேராசிரியர் தனேஜா அவர்களிடம் எனது ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். அவர் சற்றும் யோசிக்காமல் லண்டன் மருத்துவமனையில் பணி செய்து வந்த மருத்துவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடித்தின் மூலமாக எனக்கு அங்கு வேலை கிடைத்தது. அந்த வாய்ப்பு எனது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. நம்புகள் நான் சுயம்பு அல்ல என்னை சிற்பமாக்கியவர்கள் பலர். பின்பு நான் இங்கிலாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆப் எடின்பரோ கல்லூரியில் FRCS  – முடித்தேன்.

    கே. பொதுவாக வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் அங்கேயே வேலை செய்வதற்குத்தான்  முக்கியத்துவம் அளிப்பார்கள். ஆனால், நீங்கள் இந்தியா வந்ததற்கு நோக்கம் என்ன?  

    நிச்சயமாக… வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு அதிக வருமானமும், வாழ்க்கையும் வசதியாக இருக்கும். ஆனால், நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது நடந்த ஒரு சம்பவம்தான் என்னை இந்தியா வரத்தூண்டியது. நான் லண்டனில் இருந்தபோது, ஒருசமயம் நான் உயிருக்கு உயிராக நேசித்த எனது அத்தையார் அவர்கள் கீழே விழுந்து இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு சரியாக அனுவமில்லாத மருத்துவர் ஒருவர் செய்த சிகிச்சை முறையால் அவர் மேலும் பலவீனமாகி அவரை இழக்க நேரிட்டது. எலும்பு மூட்டு நிபுணராக இருந்து கொண்டு என்னால் அவருக்கு உதவ முடியவில்லையே என்பது எனக்கு மிகப்பெரிய  மனவருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, எனது படிப்பும், உழைப்பும்  என் நாட்டு மக்களுக்குப் பயன்பெற வேண்டுமென்று நான் இந்தியா வந்தேன். வெளிநாடுகளில் மருத்துவரை மருத்துவராக மட்டுமே பார்ப்பார்கள். ஆனால், நம் தாய்நாட்டில் மருத்துவர்களை கடவுளாக  பார்ப்பார்கள். இது எனது மருத்துவ பணியில் மனநிறைவை ஏற்படுத்தியது.

    கே. மருத்துவத்துறையில் உங்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக நினைப்பது பற்றி?

    எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஒரு ஆசிரியர் பள்ளியில் மிக மிக கண்டிப்பானவர். நாங்கள் படிக்கும் போதும் சரி,  அவரைப் பார்க்கும் போதும் சரி எங்களுக்கு மிகுந்த பயம் ஏற்படும். ஏறக்குறைய 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் மருத்துவமனையில் அவரைப் பார்க்க நேர்ந்தது. நான்கைந்து வருடங்களாக கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு பல மருத்துவர்களைப் பார்த்தும் சரியாகாத காரணத்தால், சக்கர நாற்காலியில் அவரை என்னிடம் அழைத்து வந்தார்கள். அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையைப் பற்றிக் கூறி, ஆப்ரேஷனையும் வெற்றிகரமாக முடித்தோம்.

    கற்றுக்கொடுத்த குருவிற்க வைத்தியம் பார்த்த அந்த அனுபவத்தை, இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கும். இதற்கு அடுத்து 88 வயதான ஒரு மூதாட்டிக்கு கால் முட்டி முழுவதும் தேய்ந்த நிலையில் எழுவதற்கு கூட சிரமமான நிலையில் என்னிடம் வந்தார். அப்போது நான் அவரிடம் என்ன பாட்டி வயசாச்சே, இனிமேல் எதுக்கு மூட்டு மாற்றனும்? அப்படியே இருக்கலாமில்லையா, வலிக்கு மருந்து தருகிறேன் என்று சொன்ன போது அப்படியென்ன வயசாச்சு எனக்கு, இன்னும் எத்தனை கல்யாணம் காட்சி, பேரன் – பேத்திகளை பார்க்க வேண்டியிருக்கு என்றார். அவரின் நம்பிக்கையான அந்தப் பேச்சு என்னை வியப்படைய செய்தது.

    தற்போது அவர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு நல்ல நிலையில் நடந்து கொண்டிருக்கிறார். இப்பொழுதும் பார்க்கும் போதெல்லாம், அங்கே போனேன், இங்கே போனேன் என்று அவர் சொல்லும் போது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

    கே. இந்தியாவிலுள்ள மருத்துவ சிகிச்சைகள் வெளிநாட்டு மருத்துவ சிகிச்சைகளுக்கு இணையாக உள்ளதா?

    கண்டிப்பாக இணையாகத்தான் உள்ளது. நான் இங்கிலாந்திலிருந்து வந்த உடனே KMCH ல் சேர்ந்தேன். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய அனைத்து கருவிகளும் இங்கேயும் இருந்தது கண்டு வியப்பாக இருந்து. KMCH – நிறுவனர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி அவர்கள் மருத்துவ உலகின் ஒரு தலைசிறந்த தலைவர்.  KMCH – மருத்துவமனை உலகத்தரத்திற்கு இணையானது. உலகிலுள்ள எல்லா மருத்துவத் தொழில் நுட்பங்களையும் அறிந்து அதற்கான கருவிகளையும் இங்கேயே வாங்கி வைத்திருக்கிறார். நான் மட்டுமல்ல KMCH ல் 90 சதவீத மருத்துவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் பல வருடங்களாக பணியாற்றியவர்கள்தான். வெளிநாட்டில் கிடைக்கக் கூடிய அனைத்து சிகிச்சைகளும் இங்கு நம் மக்களுக்கு கிடைப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

     கே. உங்களின் வெற்றியின் ரகசியம் பற்றி?

    A long journey begins with a small step”…

    உயர்ந்த கோபுரங்கள் எல்லாம் சிறுசிறு கற்களாலேயே கட்டப்படுகின்றன. சின்னச்சின்னத் திட்டங்கள், சின்னச்சின்ன வெற்றிகள்  பெரிய வெற்றியாளனாகக் காட்டும்.

    கே. நோயாளிகளை நீங்கள் அணுகும் விதம் பற்றி?

    இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குடும்பம், குழந்தைகள் என்று நிறைய சொந்தங்களும், பல பொறுப்புகளும் உள்ளது. என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளையும்  என் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறேன். அவர்கள் அனைவருமே குணமாக வேண்டும் என்பதில் தனிப்பட்ட ரீதியாக எனக்கு பெரும் அக்கறை உள்ளது. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். மேலும், ஒருமுறை என்னிடம் சிகிச்சை பெற வருபவர்களை அடுத்தமுறை அவரை நான் பெயர் சொல்லி அழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு அவர்களிடம் ஒரு டாக்டர் என்றில்லாமல் நண்பராகவே பழக வேண்டும் என்று நினைக்கிறேன்.

    என்னிடம் நிறைய ஊனமுற்ற குழந்தைகள் சிகிச்சைக்காக வருவார்கள். அவர்கள் 90 % பேர் ஏழ்மையானவர்களாக தான் இருப்பார்கள். அவர்களின் குடும்பத்தின் நிலை கருதி இலவசமாகவே அவர்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறோம்.  என்றாலும் ரோட்டரி கிளப் போன்ற தனியார் சேவை அமைப்புகளை தொடர்பு கொண்டு சிகிச்சை அளித்திருக்கிறேன். இதற்கு எல்லாம் பெரும் உறுதுணையாக இருப்பவர் இம்மருத்துவமனையின் தலைவர் நல்லாஜி பழனிசாமி அவர்களையே சாரும். மேலும் திருமதி யாமினி தனராஜ் அவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றிக்  கூற கடமைபட்டுள்ளேன்.

    கே. உங்கள் பார்வையில்  பரப்பரப்பான செய்தியாக நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

    இப்பிரபஞ்சத்தில் நாம் மட்டுமல்லாது வேறு கிரகத்திலிருந்து நம்மைப் போலவே உயிரினங்கள் இருக்கின்றன என நிரூபிக்கும் விதமாக முதலில் வரும் புகைப்படங்கள்தான் எனக்கு மிகவும் சென்ஸேனல் நியூஸாக இருக்கும்.

    கே. நீங்கள் ஒரு கிராமத்தை தத்தெடுத்தாக என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். அதைப்பற்றி?

    எனது பூர்வீகமான இல்லியம்பட்டு கிராமம் தாராபுரத்திலிருந்து 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. சரியான பேருந்து வசதி கூட இல்லாத அந்த கிராமம், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் பச்சைப்பசேல் என்று பார்வைக்கு விருந்தளிக்கும். ஆனால், தற்போது சஹாரா பாலைவனத்திற்கு இணையாக வறட்சியை கண்டு வருகிறது. எனவே, அந்த கிராமத்தைத் தத்தெடுத்து Oansis நிறுவனமும், பெரமியம் இல்லியம்பட்டி இளைஞர்களும், பொதுமக்களும் சுமார் 200க்கும் மேற்பட்ட மரங்களை நட்டதோடு மட்டுமல்லாமல்  Water Drip அமைத்து, அந்த மரங்களை பாதுகாத்து நீர் ஊற்றவும், சுமார் 5 பேரை மாத சம்பளம் என்ற முறையில் வேலைக்கு நியமித்து பாதுகாத்து வருகிறோம்.

    தற்போது அந்தச் செடிகள் மரங்களாக வளர்ந்த பசுமையாக  காட்சியளிக்கின்றன. மேலும், ரோட்டரி நன்னயம் டிரஸ்ட், விழுதுகள் பவுண்டேசன், தாராபுரம் உடன் இணைந்து வசதியில்லாத மாணவ – மாணவிகள் பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் மாணாக்கர்களுக்கு நன்கொடையும் அளித்து வருகிறோம். சென்ற வருடம் மட்டும் தலா 1 குழந்தைக்கு 5000 ரூபாய் என 100 குழந்தைகளுக்கு ரூ. 50,00,000 வரை நன்கொடை வழங்கினோம்.  இதுபோன்ற நற்செயல்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடியேறிய ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையாகும்.  இது, காந்தி கண்ட கனவும் கூட.

    கே: நோயில்லா வாழ்வு வாழ மக்களுக்கு நீங்கள் தரும் விழிப்புணர்வு?

    விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மக்களிடையே காணப்படும் வாழ்க்கை முறைதான் நோய் என்ற சொல்லுக்கு மூலக்காரணமாக இருக்கிறது.

    இந்த வாழ்க்கை முறையில் பல மாறுபட்ட செயல்களில் மக்கள் ஈடுபடுகிறார்கள். அதில் முதன்மையானது உணவுமுறை.  உணவுமுறையில் அக்கரையற்று வாழும் குழல் இப்பொழுது அதிகம் நிகழ்கிறது. ஹோட்டலில் சாப்பிடுவதை கௌரவமாக நினைக்கிறார்கள் மக்கள் இன்றைக்கு. இது ஒரு ஆரோக்கியமற்ற வளர்ச்சி. இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    உணவை உண்டவுடன் வெற்றிலைப்பாக்கும் போடும் காலம் போய் இன்று மாத்திரை சாப்பிடும் காலம் வந்துவிட்டது. இதை எல்லாம் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்.

    • நல்ல உணவைத்தேர்ந்தெடுத்து உண்ணுதல் வேண்டும்.
    • காய், கனிகள், கீரைவகைகள், கிழங்கு வகைகள் போன்றவற்றை நிறைய உண்ண வேண்டும்.
    • உணவே மருந்து என்பது போல நன்றாக சாப்பிட வேண்டும்.
    • உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை தினமும் செய்தல் வேண்டும்.

    இவற்றை முறையாக கடைப்பிடித்தாலே வரும்முன் காத்துவிடலாம்.

    கே. தாங்கள் சிறுமுகையில் கட்டி வருகின்ற  SIV பொன் விழா கட்டிடம் பற்றி?

    SIV மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் 50வது வருட பொன்விழா 2015ம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர்.  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெறும் பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருந்து விடாமல், ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன் ஒரு பகுதியாக சுமார் 10,000 சதுர அடியில், 50 லட்சம் ரூபாய் செலவில்  Community Hall ரேயான் நகரில் கட்டி முடித்துள்ளோம். இலாப நோக்கமின்றி கட்டப்பட்டது இந்தக் கட்டிம் ஆகும். சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாகும்.

    கே. தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறும் நம்பிக்கை வரிகள் என்ன?

    மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே மகத்தானது. மனித வாழ்வில் மாற்றம் ஒன்றே நிலையானது. அந்த மாற்றத்தை மற்றவர்களிடமிருந்து எதிர்ப்பார்க்காமல் நீங்ளே முதன்மையாகத் தொடங்குகள். ஒரு நாடு தூய்மையாக இருக்க வேண்டும் என்றால் உங்கள் வீடு முதலில் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது நாமும் வளம் பெறுவோம் நாடும் வளம்.

    மனிதராய் பிறந்து விட்டால் எல்லோருக்கும் இங்கு ஒரு வெற்றிடம் ஒன்று இருக்கும். அந்த வெற்றிடத்தை நிரம்புவதில் தான் வாழ்க்கையின் மகத்துவமே அடங்கியிருக்கிறது.

    இது ஒரு போராட்ட களம் போட்டிப் போட்டுக் கொண்டு தான் வெற்றி பெற வேண்டும் என்ற நியதி இருக்கிறது. அதை உணர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்.

    எந்த செயல் தொடங்குவதிலும் காலதாமதம் செய்யக் கூடாது.

    செய்யும் செயலில் திட்டமிடல் அவசியம். நிறைய சாதித்தவர்களின் வரலாற்றைப் படியுங்கள். தன்னம்பிக்கை போன்ற இதழ்களைப் படியுங்கள். நிச்சயம் வாழக்கையில் வென்று விடலாம்.

    கே: குடும்பம் பற்றி?

    என் மனைவி திருமதி கவிதா மருத்துவர். எனக்கு ஒரே மகள். செல்வி. லேகா படித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக மருத்துவத்துறையில் இருப்பவர்கள் குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவது என்பது சற்று கடினம் தான் அதனாலும் இன்று ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தந்தையாகவும், பெற்றவர்களுக்கு நல்ல பிள்ளையாகவும் இருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

    நேர்முகம் . ஜெ. விக்ரன்

    நன்றி . வி. தங்கராஜ்

    உள்ளத்தோடு உள்ளம்

    “நாட்டில் மிகவும் பணக்கார கோயில் எது?” என்று ஒரு பொருளாதாரப் பயிற்சியாளர் கேள்வி எழுப்புகிறார். பயிற்சியில் இருந்த எல்லோரும் ஒரே குரலில் “திருப்பதி வெங்கடாசலபதி” என்று சொல்கிறார்கள். “ஏன்… விளக்கமுடியுமா” என்றார் பயிற்சியாளர்.

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் தருகிறார்கள். அந்தப் பதில்களில் திருப்தி அடையாத பயிற்சியாளர் சொன்னார், எத்தனையோ இடங்களில் பெருமாள் ஆலயம் உள்ளது ஆனால் திருப்பதியில் மட்டும் தான் சாமி இரவு 12 மணி வரை பக்தர்களைப் பார்த்து ஆசிர்வதிக்கிறார். மீண்டும் காலை 3 மணிக்கு எழுந்து தரிசனம் தருகிறார். பகலில் ஓய்வு இல்லை மற்ற ஆலயங்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்துகிறார்கள் பகலில் ஓய்வு உண்டு.

    “கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருந்தும் போது நமக்கு… சிந்திப்போம்…சிகரம் தொடுவோம்.”

    உழைத்துத்தான் முன்னேறுவேன் என்பதில் ஒவ்வொருவரும் பிடிவாதம் கொண்டு உழைத்தோம் என்றால் ஏய்ப்பவர்கள் ஏமாற்றுபவர்கள் இல்லாது போவார்கள்.

    அப்படி ஒரு காலம் உருவாக்கவே உழைப்போம் மாற்றம் வரட்டும் உழைப்பில்!

    அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.