கற்பனை சக்திக்குள்தான் எத்தனை அற்புதங்கள்
கலங்கரை விளக்கம்.
“ஒழுங்கு நிலைபெற்ற உத்தமர்
நடுங்குவதில்லை நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும் பயன் இல்லை பற்று விட்டார்க்கே”.
என்பது திருமூலர் மந்திரம். செயற்கரிய காரியங்களைச் செய்யும் உத்தமர்களின் மனம், தாங்கள் எடுத்த காரியம் முடியும் வரை எதற்கும் அஞ்சாது என்பது பொருளாகும். இவ்வுலகில் தோன்றும் மனிதன் ஒவ்வொருவரும் இத்தகைய நிலையை அடைய வேண்டுமெனின், முதலில் இப்பொழுது சமுதாயம் உள்ள குழப்ப நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய சமுதாயம் இரைச்சல் நிறைந்த கடல் போன்று காட்சியளிக்கின்றது. இதில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்க்கை என்ற படகு வழிதவறி இடையூறுகள் என்ற பாறைகளில் மோதி சிதைந்து விடாமல் தங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ற இலக்கை அடைய கலங்கரை விளக்கம் என்ற வழிகாட்டியின் துணையை நாட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்பது நடுக்கடலில் துடுப்பு இல்லாமல் தத்தளிக்கும் படகு போன்றது. மனிதன் தன் வாழ்க்கையில் மூன்று விதமான சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளான்.
- வயோதிகம் மற்றும் இறப்பு
- பசி மற்றும் பட்டினி
- கவலை மற்றும் மனக்குழப்பம்.
முதல் இரண்டும் உடம்பு சம்பந்தப்பட்டது. மூன்றாவது சவால் மனிதனின் மதி மற்றும் மனம் சம்பந்தப்பட்டது. மனிதன் தன் வாழ்க்கையில் மூன்று விதமான இலட்சியங்களை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளான்.
- சொந்த வாழ்க்கை
- சமுதாய வாழ்க்கை
- ஆன்மீக வாழ்க்கை
கலங்கரை விளக்கமானது தன் வாழ்க்கையின் இலட்சியங்களை தன்னகத்தே கொண்டுள்ள இரண்டு வழிமுறைகள் மூலம் மக்களுக்கு வழிகாட்டுகின்றது.
முதலாவது வழிமுறை
மனிதர்கள் முதலில் தம்மைத்தாமே பரிசோதித்துக் கொள்ளும் திறனைப் பெற வேண்டும். தம்முடைய குறிக்கோள்களை அடைவதற்கான வலிமை மற்றும் திறமைகள் நம்மிடம் உள்ளதா என்று சோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். மனிதனின் மனம் ஒரு நிலையில் இல்லாது, மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போன்று அங்கும் இங்கு மாய்த்தாவிக் கொண்டிருக்கும். மனதைக் கட்டுப்படுத்தி விட்டால் மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும். இத்தகைய மனத்தைக் கட்டுப்படுத்த இறையருள் வேண்டும்.
“மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினை செல்ல நெருங்கி
சுனைத்து விளக்கினைத் திரியாகத் தூண்ட
மனத்து விளக்கு மாய விளக்கே”.
என்ற திருமூலர் பாடல், உலகில் உள்ள சூரியன் உட்பட அத்தனை விளக்குகளிலும் சிறந்தது மன விளக்கு என்று விளக்குகின்றது. இந்த மனவிளக்கு, சினம் மற்றும் அதனோடு தொடர்புடைய அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் போன்ற குணாதிசயங்கûளிலிருந்து வெளிப்பட்டு, ஒருங்கிய நிலை பெற்று அறிவானது, செறிவுற்று, கற்றை கற்றையாக அனைத்து விளக்குத் திரிகளும் ஒன்றாகத் தூண்டி விடப்பட்ட பெருஞ்சோதியாக விளங்கும். இந்நிலை அடைய இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு மரத்தின் வேர்கள் எப்படி ஒரு மரத்தை தாங்குகின்றதோ, அத்தகைய வலிமை பிரார்த்தனைக்கு உள்ளது. மறைந்த முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர். அப்துல்கலாம் அவர்களின் தந்தை ஜைனுல்லாபுதீன் பிரார்த்தனை பற்றி தன் மகனிடம்…
“பிரார்த்தனை என்பது மாய மந்திரம் ஒன்றும் இல்லை. பிரார்த்தனையால் மக்களிடையே ஒரு அற்புத பிணைப்பு ஏற்படுகின்றது. பிரார்த்தனை செய்யும் போது, நீ, உன் உடம்பைக் கடந்து, இந்த பிரபஞ்சத்தைக் கடந்து, இந்த பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக மாறி விடுகின்றாய். அப்போது, பணம், வயது, சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு கிடையாது” என்ற எளிமையான விளக்கம் கூறியுள்ளார்.
தன்னைத்தானே அறிந்து கொள்ளும் திறன்பற்றி உலக தத்துவ மேதை சாக்ரடீஸூம் இந்தக் கருத்தைத்தான்
“உன்னையே நீ அறிவாய்”
என்ற மந்திரச்சொற்கள் மூலம் மனிதனின் திறன் பற்றி உலகம் அறியச் செய்தார்.
இரண்டாம் வழிமுறை
தாம் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயித்த பின் அந்த இலக்கை அடைய 5 படிகள் என்ற பயிற்சி முறையைக் கையாள வேண்டும்.
முதல்படி:
ஒவ்வொருவரும் தம் இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற முயற்சி, ஒரு மைதானத்தில் விளையாடும் போது எடுக்கப்படும் பயிற்சி போன்றது. விளையாட்டுப் பயிற்சியின் போது, பயிற்சியாளர் விளையாடும் போது எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும், வெற்றி கிடைக்கும் என்று பயிற்சி அளிக்கின்றார். அதே போன்ற பயிற்சிகள் நாம் அடையும் இலக்கிற்கும் தேவை. ஒவ்வொரு மனிதனின் மூளையிலும் 6000 சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால், நாம் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்றால், 5, 999 சிந்தனைகளை சல்லடை கொண்டு சலித்து விட்டு, நம் குறிக்கோள் என்ற சிந்தனையை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அந்த ஒரு சிந்தனை என்ற சிகப்பு கொடி மட்டும் எப்பொழுதும் மூளையின் Sub – Concious Mind ல் பறந்து கொண்டு அந்த குறிக்கோளை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும். வள்ளுவரின்…
“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்”. (குறள்: 611)
என்ற குறளில் குறிப்பிட்டுள்ளபடி, இதைச் செய்வது கடினம் என்ற எண்ணம் வராமல் இலக்கை அடையும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். பிரயாணத்தின் போது, நாம் அடையும் இலக்கு 1000 மைல் தூரத்தில் இருந்தாலும், நாம் முதல் அடி எடுத்து வைத்ததும் நாம் சென்றடையும் இடம் மனத்திரையில் தோன்றுவதுபோல் நம்முடைய இலட்சிய இலக்கும் நம் கண்முன் தோன்ற வேண்டும்.
இரண்டாம் படி:
நாம் அடையும் இலக்கிற்கான செயல்பாடுகளை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும்படி செய்வதால், நாம் எப்படியாவது அந்த இலக்கை அடைய வேண்டும் என்ற உந்துதலுக்குத் தள்ளப்படுவோம்.
“வினைத்திட்பம் என்பது ஒருவனது மனத்திட்பம்
மற்றவை எல்லாம் பிற”. (குறள்: 661)
என்ற வள்ளுவரின் வாக்கின்படி ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்க மன உறுதி அவசியம். செய்யும் செயல்களில் வெற்றி, தோல்வி இரண்டும் வரும். வெற்றியின் போது மகிழ்ச்சியும், தோல்வியின் போது, அதற்கான தண்டனையை நமக்கு நாமே அளித்து, தவறுகளை சரி செய்து கொள்ளும் பக்குவம் வர வேண்டும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் மூன்று பிம்பங்கள் உண்டு.
- நமக்கு நம்மைப் பற்றிய அபிப்ராயம்
- மற்றவர்களுக்கு நம்மைப் பற்றிய அபிப்ராயம்.
- உண்மையான நம்முடைய பிம்பம்.
மூன்றாவது படி:
நாம் அடைய வேண்டிய இலட்சியத்திற்கு ஆகும் கால அவகாசம் பற்றி திட்டமிடுதல் ஆகும். காலத்தை கணக்கிடக்கூடியவர்களால் மட்டுமே கடமையைச் சரியாகச் செய்ய இயலும், அவர்களால் முடியாத காரியமே இல்லை என்ற கருத்தை
“அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்”. (குறள்: 483)
என்ற வள்ளுவரின் குறளும் வலியுறுத்துகின்றது. இந்த மூன்றாம்படியில் ‘கனவுபுத்தகம்’ (Dream Book) என்ற ஒன்றை பயன்படுத்த வேண்டும். இதில் தன் இலட்சியம் பற்றிய புகைப்படங்கள், ஒவ்வொன்றிற்கும் தேவையான ஆட்கள், தேவையான பொருளாதாரம், ஆகும் கால அளவு போன்ற விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பின் அதன்படி நடக்கின்றதா? என்று தொடர்ந்து Review செய்ய வேண்டும்.
நான்காவது படி:
இலட்சியத்தை அடைவதற்கு என்னென்ன, எப்படி, எந்த காலகட்டத்தில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பின், வரும் இடையூறுகளை தவிர்க்க ‘மந்திரச்சட்டம்’ (Magic Rule) ஐ கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் ‘21 நாட்கள்’ தொடர்ந்து கடைப்பிடித்தால் அதுவே ஒரு பழக்கம் ஆகிவிடும் என்பதுதான் அந்த மந்திரச்சட்டம். இலக்கை அடையும் வரை எந்த ஆசா -பாசங்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது. நம் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல்கலாம் அவர்களின் தந்தை மகனிற்கு சொல்லிய அறிவுரை இங்கு குறிப்பிடப்படுவது மேலும் வலுவூட்டுவதாக இருக்கும்.
“அப்துல்… முன்னேற்றம் காண்பதற்கு நீ இங்கிருந்து புறப்பட வேண்டியிருக்கும். ஒரு கூடு கூட இல்லாமல் தன்னந்தனியாக வானவெளியில் நாரை பறக்கவில்லையா? உன்னுடைய மகத்தான ஆசைகள் நிறைந்த இடத்தை அடைவதற்காக நீ பிறந்த இடத்தின் ஏக்கத்தை உதறியே தீரவேண்டும். எங்களது, பற்றோ அல்லது தேவைகளோ உன்னை கட்டுப்படுத்தி வைக்காது”. இத்தகைய ஆசிர்வாதம் அவருடைய மகனை உலகப்புகழ் மிக்க விஞ்ஞானியாக மாற வழிவகுத்தது. எதிர்வரும் இடையூறுகளை எதிர்த்து நாம் செய்யும் காரியத்தை வைராக்யத்துடன் வெற்றிகரமாக முடிக்கும் போது உலகம் எய்திய இன்பபெருக்கும் புகழ் மாலையாக வினைக்குரியவரை வந்தடையும் என்பதை
“ துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை”. (குறள்: 669)
என்ற குறள் வலியுறுத்துகின்றது.
ஐந்தாவதுபடி:
நாம் நம் இலட்சியத்தை அடைவதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுத்த ஆரம்பித்ததிலிருந்து அதற்கான ஊக்கமும், உற்சாகமும் சிறிது கூட குறையாமல் இருக்க வேண்டும். நம் வாழ்க்கை என்ற தீபம் எப்பொழுதும் சுடர்விட்டு ஒளிவீசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றால், ஊக்கம் என்ற எரிபொருள் தொடர்ந்து போடப்பட வேண்டும்.
“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை”. (குறள்: 594)
என்ற வள்ளுவரின் குறள் இத்தகைய ஊக்கமுடன் உழைப்பவரின் உழைப்பிற்கு ஏற்ற செல்வம் அந்த வினைக்குரிய வரை தானாகவே வந்து சேரும் என்று எடுத்துரைக்கின்றது. மேலும், கலங்கரை விளக்கம் மூலம் விவரிக்கப்பட்ட வழிமுறைகள் ஒருவரை “தனக்கு முன்னால் இருப்பதோ, பின்னால் இருப்பதோ முக்கியமில்லை தனக்குள்தான் எல்லாம் இருக்கின்றது” என்பதை உணரச்செய்து,
“ ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்”. (குறள்: 620)
என்ற வள்ளுவரின் குறளில் கூறியுள்ளபடி எந்த வித பயமோ அல்லது தளர்ச்சியோ இன்றி, ஊக்கத்துடன் தன் இலக்கை அடைய உழைப்பவர்கள் விதியையும் வெல்லத்தக்கவர்களாக விளங்கச் செய்யும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
அடுத்த படியாக ‘மல்யுத்த வீரர்’ பற்றிய விளக்கங்கள் தொடரும்….
0 comments Posted in Articles