முனைவர். க. சந்திரமோகன்
தலைவர், (NTC குழுமம்)
NTC Logistics India (P) Ltd.,
NTC ஓட்டுனர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
ஸ்ரீ வாரி எனர்ஜி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்.
- உண்மை, உழைப்பு, நேர்மை, ஆற்றல் ஆகியன மட்டுமே ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை அறிந்து, அதற்கு ஏற்றாற்போல் தன்னைத் தகவமைத்து வாழ்ந்து வருபவர்.
- செயல்படுத்துவன அனைத்திலும் புதுமை, அப்புதுமையால் பல்வேறு மாற்றங்களைக் கொடுத்து தனக்கென்று ஒரு தனிமுத்திரையைப் பதித்துள்ளார்.
- வழிகாட்டுபவரல்ல நல்ல தலைவன், வாழ்ந்து காட்டுபவரே நல்ல தலைவன் என்று தன்னையே ஒரு சிறந்த தலைவனாய், தீர்மானித்து இருப்பவர்.
- துணிவோடு சந்தித்தால் எந்தத் தோல்வியும் துன்பம் தராது என்று துணிந்து செயல்படும் NTC குழுமம் தலைவர் முனைவர் க. சந்திரமோகன் அவரோடு…
கே: உங்களின் பிறப்பும், இளமைக் காலமும் பற்றி?
என் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், கீழ்சாந்தாம்பூர் அருகிலுள்ள ராசாம்பாளையம் என்னும் அழகிய கிராமம். அமைதியான சூழல் நிறைந்தது எங்கள் ஊர். சுமார் 120 குடும்பங்களை உள்ளடக்கியது. நாமக்கல் என்றாலே வறட்சியான மாவட்டம் என்பது அனைவரும் அறிந்ததே, அதிலும் எங்கள் ஊர் வானம் பார்த்த பூமி, மழை வந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்த இடத்தில், ஒரு விவசாயக்குடும்பத்தில் நான் பிறந்தேன். விவசாயம் மட்டும்தான் எங்கள் பகுதியின் தலையாய தொழிலாக இருந்தது.
விவசாயக்குடும்பத்தில் பிறந்த எந்தப்பிள்ளையையும் பெற்றோர்கள் விவசாயம் செய்ய அனுமதிப்பதில்லை. காரணம், விவசாயத்தின் நிலையை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளதால் தான்படும் துயரத்தை தன் பிள்ளைகள் படக்கூடாது என்று எண்ணி வேறு ஒரு துறை சார்ந்த தொழிலை செய்ய சொல்வார்கள். அதற்கு கல்வி மிகவும் முக்கியம். அந்த வகையில் என் பெற்றோர்கள் என்னை நன்றாகப்படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இதனால் எங்கள் ஊரிலிருந்து ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்தார்கள். அதன் பிறகு இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோனூர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தேன். தினமும் வீட்டிற்கும், பள்ளிக்கும் நடந்தே தான் செல்ல வேண்டும்.
அதற்கு மேல் என்ன படிப்பது என்பதில் சற்று ஐயப்பாடு தோன்றியது. அப்போது தொழில் முறைப்படிப்பான டிப்ளமோ துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.
டிப்ளமோ படிப்பை வெற்றிகரமாக முடித்த கையோடு இன்ஜினியரிங் படித்தேன். 1984 – 1985ஆம் காலகட்டங்களில் இன்ஜினியரிங் என்பது மிகவும் தரம் வாய்ந்த படிப்பாக கருதப்பட்டு வந்தது. அப்படித்தான் என்னுடைய படிப்பும் இளமைக்காலமும் இன்பமாய்ச் சென்றது.
கே: நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர்ஸ் என்று உங்கள் நிறுவனத்திற்கு பெயர் சூட்டக்காரணம்?
எந்த நிலைக்குச் சென்றாலும் வந்த நிலையை மறக்கக்கூடாது என்பதுதான் என் மந்திரச்சொல். நான் பிறந்த மண்ணிற்கு என்னாலான பெருமையைத் தேடிக்கொடுக்க வேண்டும் என்ற ஒரே உத்வேகம் தான் அப்பெயரை வைக்கக் காரணமாக இருந்தது. நான் அயல்நாடுகளுக்கு அடிக்கடி செல்வேன். அங்கு எல்லாம் என் பெயரைச் சொல்லி, என் நிறுவனத்தின் பெயரைச் சொல்லும் பொழுது, என் மனதில் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும்.
கே: இந்தத் தொழில்தான் தொடங்க வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்குள் எப்படித் தோன்றியது?
நான் படித்தது டிப்ளமோ ஆட்டோ மொபைல்ஸ் துறை என்பதால், இந்தத் துறை சார்ந்த வேலையை மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற உந்துதல் தோன்றியது.
பெற்றோர்கள் என்னை நன்றாகப் படிக்க வைத்தார்கள். அதன் பிறகு, வாழ்க்கையில் முன்னேற்றம் என்னுடைய கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, ஏதேனும் ஒரு தொழிலைத் தொடங்கி, அதில் முத்திரை பதிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
படித்து முடித்து ஓராண்டுக்குபிறகு, அருகிலுள்ள மில் கம்பெனியில் (APPRENTICE) அப்ரண்டிஸாகப் பணியில் சேர்ந்தேன். அங்கு நிறைய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். நாமக்கல் என்றாலே மோட்டார் வாகனத் தொழிலுக்கு சிறப்பு பெற்றது. அந்தளவிற்கு எங்கு பார்த்தாலும் வாகனத்தின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும்.
இதனால் நாமும் வாகனச் சம்பந்தமான பணியைச் செய்ய வேண்டும் என்று, மற்றொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சேர்ந்த 15 நாட்களில் அந்த நிறுவனத்தின் சூப்பர்வைசராக பதவி உயர்வு கிடைத்தது. எனக்குக் கீழ் 7 பேர் கொண்ட குழு இருந்தது. ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் கம்பெனியின் உயர்வைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.
4 ஆண்டுக்கு மேல் வேலை செய்தேன். ஒருநாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. அங்கு பணியாற்றியவர்களின் அனுபவம் எனக்குப் பெரிதும் உதவியது.
நான் இங்கு கற்றுக்கொண்ட அனுபவம், பெற்றுக்கொண்ட அறிவுரை போன்றவைதான் என்னை இந்த நிறுவனம் தொடங்க தூண்டுதலாக இருந்தது.
கே: ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு சொந்தமாக எப்பொழுது நிறுவனத்தை தொடங்கினீர்கள்?
‘என்னால் எதுவும் சாதிக்க முடியும், அந்தச் சாதனையால் சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும்’, என்னும் மந்திரச் சொல், நான் அனுதினமும் உச்சரிக்கும் வேதவாக்கு. இதுதான் என்னை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றதாக உணர்கிறேன்.
சொந்தமாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற முடிவில் தாமதம் ஏற்பட்டால், மனம்மாற வாய்ப்புள்ளது. இதனால் தோன்றுவதை உடனே செய்து விட வேண்டும் என நினைத்தேன். கையில் வெறும் இரண்டு லட்சம் மட்டுமே ரொக்கம் இருந்தது. இதை வைத்து என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.
அப்போது என் கைபேசியில் அழைப்பு மணி அடித்தது, இந்திரா குரூப் ஆப் கம்பெனியின் மேலாண்மை பொறுப்பாளரான திரு. பொன்னுசாமி அவர்கள் என்னைச் சந்திக்க வேண்டும் என்று அழைத்தார்.
அவரின் அழைப்பை ஏற்றுச் சென்றேன். அவருக்கு நானும் எனக்கு அவரும் நிறைய ஆலோசனைகளைப் பரிமாறிக்கொண்டோம்.
அவரிடம் பேசிய பின்னர் நான் கற்றும் பெற்றும் கொண்ட உண்மை என்னவென்றால் ‘தனி மரம் தோப்பாகாது, ஒற்றுமையே பலம்’ என்பது தான் இந்த எண்ணத்தில் என்னுடைய ஜீனியர் தில்லையரசன் அவருடன் என்னை இணைத்துக்கொண்டேன்.
கே: நாமக்கல்லிலிருந்து சென்னை சென்று தொழில் தொடங்கியது ஏன்? அது பற்றிச் சொல்லுங்கள்?
இங்கு சாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு. எந்த வழியை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதில்தான் வெற்றியின் ரகசியமே மறைந்திருக்கிறது.
நம் நிறுவனத்திற்கு ஏற்ற இடம் சென்னைதான். அங்கு தொடங்கினால் தான் நன்றாக இருக்கும் என்று நினைத்து, 1997ம் ஆண்டு நாமக்கல்லிலிருந்து சென்னைக்கு வெறும் இரண்டு லட்சம் பணம் எடுத்துக் கொண்டு சென்றோம்.
அங்கு சில நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. 2500 ரூபாய் வாடகையில் ஒரு அறை கிடைத்தது. வேலைக்கு உதவியாக பழைய இருசக்கர வண்டி ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினோம்.
அதன் பிறகு, எங்களை நாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு வெளியில் சென்று, சிறிது சிறிதாக ஆர்டர்களைப் பிடித்தோம். வாடகை வண்டி, ஓட்டுனர் சம்பளம் போன்றவற்றிற்கு பணம் தேவைப்பட்டது. ஆர்டர் எடுத்தவர்களிடமே அதை முன் பணம் வாங்கித்தந்து வேலையை சிறந்த முறையில் முடித்துக் கொடுத்தோம்.
வாடகை வண்டி என்பதால் வருமானம் குறைவாகத்தான் கிடைத்தது. அப்போதுதான் சொந்தமாக வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்து, பழைய வாகனம் வாங்க நாமக்கல் வந்தோம்.
நினைத்தார் போல் வாகனம் அமைந்தது. ஆனால் அதை வாங்கும் அளவிற்கு எங்களிடம் பணம் இல்லை. அப்பொழுது என் நண்பரும், எங்கள் நிறுவனத்தின் நல விரும்பியமான திரு. மாறன் முன்வந்து உதவினார். அவர்களின் உதவியால் வாகனம் மற்றும் ட்ரைலர் வாங்கினோம். அவர் செய்த உதவியை நான் என்றும் மறக்க முடியாது.
‘உண்மையாகவும், உறுதியாகவும் உழைத்தால் நிச்சயம் முன்னேறி விடலாம்’. என்பது எங்கள் நிறுவனத்திற்கு வந்த ஆர்டர்களைக் கொண்டு அறிய முடிந்தது.
கே: உங்களின் நேர நிர்வாகம் பற்றி சொல்லுங்கள்?
‘நேரமும், காலமும் யாருக்காகவும் காத்திருக்காது’, என்று சொல்வார்கள். அதேபோல் ‘கடிகாரத்தைப்பார் ஓடுவது முள் அல்ல உன்னுடைய வாழ்க்கை’ என்ற பொன்மொழிதான் என்னுடைய ஒவ்வொரு நகர்வுக்கும் அடிப்படைக்காரணிகள்.
எந்தளவிற்கு ஓடி உழைக்கிறோமோ, அந்தளவிற்கு மனதிற்கு அமைதியும் தேவைப்படுகிறது. இதனால் தினமும் காலை – மாலை யோகா, உடற்பயிற்சி செய்கிறேன்.
ஒரு நாளின் நேரத்தைப் பிரித்துக்கொண்டு, எந்த வேலையை எப்போது தொடங்கினால் சரியாக இருக்கும் என்பதை அறிந்து கொண்டு செயல்படுகிறேன். தேவையற்ற செயலுக்கு அதிக நேரத்தை ஒதுக்குவது இல்லை.
ஒரு செயலை தாமதமாகத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். சரியாகத் தொடங்குவதையும் சற்று முன்னரே தொடங்கினால் கூடுதல் நேரம் கிடைக்கும்.
அவ்வாறு பயன்படுத்துவதால் மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவற்றைத் தவிர்த்து விடலாம்.
கே: ஒரு நிறுவனத்தை தனி நபராக வழிநடத்துவதற்கும், கூட்டாக வழிநடத்துவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? அதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
தனி நபரால் சாதிக்க முடியும். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது எவ்வளவு தூரம் வெற்றியடையும் என்பதை, என்னால் அளவிட்டுச் சொல்ல முடியவில்லை. காரணம் தனி ஒருவரால் எல்லாமே செய்து விட முடியாது.
தனி ஒருவராக செய்வதற்கும், கூட்டாக செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒருவரே நிறுவனத்தை மேலாண்மை செய்து கொண்டு, மற்ற எல்லா வேலைகளையும் சய்ய முடியாது.
திறமையை அறிந்து, அனுபவத்தை அறிந்து, ஆட்களைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு பணியாற்றினால், நிச்சயம் நிறுவனம் வளர்ச்சி பெறும். நானும் என் நிறுவனத்தை கூட்டாகத் தான் நடத்திக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு துறைக்கும் துறைசார்ந்த அனுபவமிக்க நபர்கள் என்னுடன் இணைந்துள்ளனர். உதாரணமாக தில்லையரசன், ராஜசுந்தரம், முத்துசாமி போன்றவர்கள் அனுபவம் மிக்கவர்கள் தனித்தனித்துறையை நிர்வகித்து வருகிறார்கள்.
இவர்களின் ஈடுபாடு இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.
கே: போட்டி நிறைந்த உலகில் உங்கள் நிறுவனம் கையில் எடுக்கும் புதுமைகள் பற்றிச் சொல்லுங்கள்.
தேவையிருந்தால்தான் புதுமைகள் தோன்றும். ஒவ்வொரு துறையிலும் ஆண்டுக்காண்டு நிறைய மாறுதல்கள் தேவைப்படுகிறது. இந்தத் தேவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் நாங்கள் புதுமைகளைப் புகுத்தித்தான் ஆக வேண்டும்.
2007ம் ஆண்டு என்டிசி டவர்ஸ் 5 மாடிக்கட்டிடம் கட்டினோம். ஒரு வாகனத்தின் உயிர் அந்த வாகன ஓட்டுநர். பொதுவாக லாரி ஓட்டுனர் என்றாலே ஒரு தோற்றம் உண்டு. இந்த தோற்றத்தை மாற்ற வேண்டும் என்று, எண்ணி அதை முதலில் மாற்றினேன். அவர்களின் உடையில் மாற்றம் செய்தாலே அவர்களின் நடைத்தையும் தானாக மாறிவிடும்.
ஒரு நாட்டின் முதுகெலும்பே போக்குவரத்துத்துறைதான். அந்த போக்குவரத்துத் துறையை மதிக்கவேண்டும் என்றால் டிரைவரை மதிக்க வேண்டும். இதனால் தான் என்னுடைய நிறுவனத்தில் ஓட்டுனருக்கு என்றே தனியாக ஒரு நாளை ஒதுக்கி அவர்களைக் கௌரவப்படுத்தி வருகிறோம். 5 ஆண்டுகள் ஆகிவிட்டால் அவர்களுக்கு கேப்டன் என்ற பொறுப்பைக் கொடுத்து கௌரவப்படுத்துகிறோம். இது எல்லாம் ஓட்டுனருக்கு நாங்கள் செய்துள்ள புதுமைகள்.
கே: அடுத்த கட்டமாக ஓட்டுனர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்க காரணம் என்ன?
2011ம் ஆண்டு எங்கள் நிறுவனத்தின் அடுத்த நிலையாக
NTC ஓட்டுனர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கினோம்.
இந்நிறுவனத்திற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் போன்றவற்றோடு இணைப்பை ஏற்படுத்திக் கொண்டோம்.
ஓராண்டுக் கல்வியாகக் கொடுத்தோம். இன்று டாடா நிறுவனம், வால்வோ போன்ற பெரிய நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளோம். இந்தக்கல்வி முறையைக் கற்பவர்கள், ஒரு நல்ல திறமை வாய்ந்த ஓட்டுனராகத் தான் வெளியே வருவார்கள். இது அனைத்தும் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியாக செயல்படுத்தி வருகிறேன்.
வெறும் கல்வி மட்டுமல்லாமல் செயல்முறை யோகா, உடற்பயிற்சி போன்ற அனைத்தும், இந்த நிலையத்தில் சொல்லிக்கொடுத்து வருகிறோம்.
அனைத்து வாகனத்திலும் ஓட்டுனர் குடும்பத்தின் புகைப்படங்களை வைத்திருக்கிறோம். அது ஓட்டுனரின் கவனக்குறைவைப் போக்குகிறது.
கே: உங்கள் நிறுவனத்தின் தனித்தன்மைகள்?
- நம்பிக்கை என்ற ஒரே வார்த்தை தான் எங்கள் நிறுவனத்தின் தனித்தன்மை ஆகும்.
- வாடிக்கையாளர்களின் தேவையை சரியான முறையில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
- கனரகப் போக்குவரத்து சம்பந்தமான எந்த வாகனம் முதன் முதலில் சந்தைக்கு வந்தாலும் அதை இயக்கும் முதல் நிறுவனம் எங்களுடையதாகத் தான் இருக்கும்.
- (Toll Free Number)டோல் ஃபிரீ நம்பர் ஒன்றை எங்கள் அனைத்து வாகனத்திலும் வைத்திருக்கிறோம். இது வாடிக்கையாளரின் நன்மைக்காக; 24 மணிநேரமும் இலவசமாக கால் செய்யலாம்.
- இந்தியாவில் பல இடங்களில் நம் நிறுவனம் சார்பாக சர்வீஸ் சென்டர் வைத்திருக்கிறோம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மேனேஜர் இருப்பார். லாரி சம்மந்தமான அனைத்து உதிரிப்பாகங்களும் அங்கு கிடைக்கும்.
- எல்லா வேலைக்கும் ஒரு முன் மாதிரி திட்டம் (PRE – PLAN) இருக்கும். முன்கூட்டியே நன்கு யோசித்த பின்னர்தான் செய்வோம்.
- தினசரி ஒரு புதுமையைக் கொடுத்துக் கொண்டேதான் இருப்போம்.
- உலகத்திலேயே பெரிய காற்றாலை பாகங்களை அதிகளவில் டிரான்ஸ்போர்ட் (Wind Mill Componet Transport) செய்யும் முதல் நிறுவனம் எங்கள் நிறுவனம்தான்.
- ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்களுக்கு 32 பரிசுகள் (AWARD) கொடுத்து வருகிறோம்.
கே: உங்கள் நிறுவனம் ஒரு புறத்தில் தொடங்கி, இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதன் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதற்குக் காரணம் மதிப்பும், வாடிக்கையாளர்களின் விருப்பம்போல் செய்யும் செயலும்தான்.
சாதாரண நிலையில் தொடங்கி, இன்று சரித்திர நிலையைத் தொட்டு இருக்கிறது என்றால், அதற்குப் பல காரணங்கள், பல செயல்கள், பல நம்பிக்கைகள், பல பாராட்டுகள்தான். இன்று மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் புதிதாக நிறுவனம் தொடங்கியுள்ளோம்.
NTC லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை சிங்கபூரில் தொடங்கினோம். எல்லா நாடுகளிலும் பங்குதாரர் (Partnership) முறையில் தொடர்ந்து செய்கிறோம்.
வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடனே செய்து கொடுக்கிறோம். ‘முடியாது’ என்பது எங்கள் நிறுவனம் மறுக்கும் சொல் ஆகும்.
கே: உங்கள் குடும்பம் குறித்து?
பெற்றோர் திரு. கந்தசாமி, திருமதி. பழனியம்மாள், அண்ணன் ரவிச்சந்திரன்; கந்தசாமி கண்டர் கலைக்கல்லூரியில் இயற்பியல் துறைப்பேராசிரியர். என் மனைவி சவுந்திரம் இல்லத்தரசி. என்னை நன்றாக புரிந்து கொண்டு வாழ்பவர். எனக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் சக்திஸ்ரீ பரதநாட்டியத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இளையவள் காவியாஸ்ரீ, மகன் பிரணவ்சாய் எனது குடும்பம் ஆகும்.
கே: வளரும் தலைமுறையினருக்கு நீங்கள் கூறுவது?
முயற்சி என்பது ஒரு புத்தகம் ஒரு புதையல். அதைக் கண்டுகொள்ளாமலோ, கையில் எடுக்காமலோ விட்டுவிட்டால் அதனால் எவ்வித பயனுமில்லை.
இதனால், முயற்சி செய்யுங்கள், வாழ்க்கை என்னும் வைரக்குவியலை வாரி எடுங்கள். எதுவும் உடனே கிடைத்து விடாது. காத்திருங்கள். காலத்திற்கு ஏற்றாற்போல் கனவு காணுங்கள். காலத்தை வெல்லுங்கள்.
கே: உங்கள் வெற்றியின் தாரக மந்திரம்?
‘One Team One Dream – ஒரே குழு ஒரே கனவு’ என்பது தான். எங்கள் நிறுவனத்தின் தாரக மந்திரம்.
நேர்முகம்; ஜெ.விக்ரன் ஜெயராமன்