– 2017 – January | தன்னம்பிக்கை

Home » 2017 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    இங்கு இவர் இப்படி

    ந. சரவணக்குமார்

    நிறுவனர் மற்றும் ஆலோசகர்

    SRS ஆலோசனை மையம் தொண்டாமுத்தூர்,

    கோவை

    இவ்வுலகில் மனிதராய் பிறந்து விட்டாலே அவர்களுக்கென்று ஒரு சாதிப்பு காத்துக் கொண்டியிருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சாதிப்பை எவ்வாறு எதிர் கொண்டு, எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டும் என்பதில் தான் அந்தப் பிறப்பின் பயனே நமக்குப் புலப்படும். ஆற்றில் கூட இறந்த மீன் தான் தண்ணீரில் மிதக்கும். உயிருள்ள மீன் அனைத்தும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே தான் இருக்கும், உயிருள்ளவரை! அவ்வாறு தன் வாழ் நாளையே எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு, ஆலோசனை மையத்தை நிறுவி, அதன் ஆலோசகராகவும் பணியாற்றி வரும் திரு S. சரவணக்குமார் அவரோடு இனி நாம்.

    நான் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் என்னும் சிற்றூரில் பிறந்தேன். அப்பா திரு. சாமிநாதன் ஓய்வு பெற்ற நேர்முக ஆட்சியர். தான் பணிக் காலம் முழுவதும் மிகவும் நேர்மையான முறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா திருமதி பத்மாவதி இல்லத்தரசி. குடும்பத்தை நிர்வகிப்பதில் வல்லவர். என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள்.

    நான் பிறக்கும் போது மற்ற பிள்ளைகளைப் போல் இயல்பாகத்தான் பிறந்தேன். பெற்றோர்கள் மிகவும் சந்தோஷப் பட்டார்கள். ஆனால் ஆறு மாதத்திகுப் பிறகு தான் என்னுடைய கண் பார்வையில் குறைபாடு உள்ளதை அவர்கள்  உணர்ந்திருக்கிறார்கள். ஒரே ஆண் மகன் என்பதால், சிகிச்சைக்காக தமிழ்நாட்டிலுள்ள பல மருத்துவமனைகளுக்கு  என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கு  மருத்துவர்கள் சொன்ன ஒரே பதில் முழுமையாக கண் குறைபாடு இல்லை. ஆனால் காலப்போக்கில்,பார்வை போக வாய்ப்புள்ளது என்பது தான். இந்த வார்த்தையைக் கேட்டு என் பெற்றோர்கள் ஒரு கணம் கலங்கிவிட்டார்கள்.

    கலங்கிவிட்டால் என்னுடைய தன்னம்பிக்கை பாதிக்கும் என்று எண்ணி என்னையும் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து தொண்டாமுத்தூர் அரசினர் பள்ளியில் சேர்த்தார்கள். ஏதேனும் ஒரு குறையுள்ளவர்களுக்கு ஒரு மாற்று அதீத சக்தியிருக்கும் அதுபோல எனக்கும் இருந்தது. எதைப் படித்தாலும் உடனே மனப்பாடம் ஆகிவிடும். அதனால் படிப்பு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பள்ளிப்படிப்பு முழுவதுமாக முடித்து விட்டேன்.

    ஆண்டுகள் போகப் போக,  என்னுடைய கண்பார்வை மங்கிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் முழுமையாக இருண்டது. பகலும் இருளானது, கண் முன்னே பார்த்து ரசித்தவைகள் அனைத்தும் இருளானது. என்னால் எதையும் உணர முடியவில்லை.  உலகத்திலேயே மிகவும் கொடுமையானது ஒன்று உள்ளது என்றால் பாதியில் வரும் பார்வைக் குறைபாடு தான். ரசித்த நேசித்த அனைத்தையும் இப்போது என்னால் பார்க்க முடியவில்லை. மிகவும் கவலைப்பட்டேன்.

    இனி வாழ்க்கை அவ்வளவு தான் . வாழ்ந்தும் பயனில்லை. அவ்வாறு வாழ்ந்தாலும் என்னால் மற்றவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது என்பதை உணர்ந்தேன். என்னதான் ஆனாலும் காக்கைக்கு தன்  குஞ்சு பொன் குஞ்சு அல்லவா? நானே என்னுடைய நம்பிக்கை இழந்த நேரத்திலும் என்னுடைய கைக்கு ஒரு ஊன்று கோலாக இருந்து நல்வழியைக் காட்டினர் என் பெற்றோர்கள். சாதிக்க எப்போதும் குறை ஒருவனுக்கு தடையில்லை என்பதை அவர்களின் வாயிலாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

    இருண்டது என்னுடைய கண்கள் தானே தவிர. என் எதிர்காலம் அல்ல என்பதை புரிந்து கொண்டேன். அப்போது என் சம்மந்தமான தேவைகளைத் தேடத் தொடங்கினேன். இத்தேடுதலின் மூலம் நல்ல மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. அதில் முதலானவர் திரு. ரவி அவர்கள் மத்திய பேங்கில் மேனேஜராக இருக்கிறார். அவரைப் போலவே திரு வெங்கடேசன் SBI பேங்கில் அசிஸ்டெண்ட் மேனேஜராகப் பணியாற்றுகிறார். மற்றொரு நண்பர் திரு.ஜெகன் கம்யூட்டர் டெக்னிக்கல் சென்டர் வைத்திருக்கிறார். இவர்கள் அனைவரும் என் போல குறைபாடுள்ளவர்கள் தான் இவர்களிடமிருந்து நிறைய ஆலோசனைகள் எனக்குக்கிடைத்தன.

    இந்த ஆலோசனைகள் முழுவதையும் ஒரு வேதவாக்காக நினைத்து, என்னை நானே சீர்திருத்தவாதியாக நினைத்து, செம்மைப்படுத்திக் கொண்டேன். அவர்கள் சொன்ன பயிற்சியை 6 மாதம் கடுமையாகச் செய்தேன். அதன் பயன், இப்பொழுது என்னால் கணிப்பொறி சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்ய முடிகிறது. தமிழ், ஆங்கிலம் தட்டச்சு வேகமாக என்னால் செய்ய முடியும். எனக்குத் தேவையான எல்லா வேலைகளையும் யாருடைய உதவியும் இல்லாமல் நானே செய்து கொள்கிறேன். இதற்கு எல்லாம் காரணம் நான் எடுத்துக் கொண்ட பயிற்சிகள் தான்.

    இயற்கையாகவே இறைபக்தியும், தியான சக்தியும் எனக்குள் உண்டு. என்னுடைய மாற்றத்தைப் பார்த்து என்பெற்றோர்கள் இந்த ஆலோசனை மையத்தை நிறுவிக் கொடுத்தார்கள். இந்த மையத்தின் முதன்மையான நோக்கமே, அதிகமான மன உளைச்சல், முறையற்ற எண்ணங்கள், மணவாழ்க்கை உறவு முறையில் விரிசல் குழப்பம், கவலை, பயம் தூக்கமின்மை, தற்கொலை எண்ணம் இப்படி பிரச்சனையுள்ளவர்களுக்கு நிரந்தரத் தீர்வு தர வேண்டும் என்பது தான்.

    அது என்னால் முடியும் உளவியல் முறைகளைப் பயன்படுத்தி, அதற்கான தீர்வு கொடுத்து  அவர்களின்  வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன். பின்னால் வரக்கூடிய பிரச்சனைகளை முன்னரே அறிந்து அவற்றை வரமால் தடுத்து கொள்ள ஆலோசனை வழங்குவேன்.

    இம்மையத்தில் அறிவியல் பூர்வமான உண்மைகளைக் கண்டறிந்து  ஆலோசனைகள் சிறப்பாக வழங்கப்படுகின்றன.

    அது மட்டுமல்லாமல், கல்வி, ஞாபக சக்தி, அரசுத் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணி பெறுவது, சுய தொழில் வளர்ச்சி, வீடு வாஸ்து, பண வரவு, கடன் தீர்வு, குடும்ப உறுப்பினர்களை தீய பழக்கத்திலிருந்து மீட்டல், திருமண வாழ்வு, குழந்தைப் பேறு,  உடல் நலம், ஆயுள் பாதுகாப்பு போன்ற பலவற்றிற்கு அறிவியல் ரீதியாக தீர்வு அளித்து வருகிறேன். இது ஜோதிடம் அல்ல உள்ளார்ந்த அறிவியல் சார்ந்த மனவளக் கலை ஆகும்.

    2003 ஆம் ஆண்டு கோவை வந்த  முன்னால் குடியரசுத்தலைவர் ஆ.ப. ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பாராட்டு எனக்கும் என் நிறுவனத்திற்கும் கிடைத்தது.

    25 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பயிற்சியைக் கொடுத்து வருகிறேன் என்னால் முடிந்தளவிற்கு என் குறைபாடு உள்ளவர்களுக்கும், ஏழ்மையானவர்களுக்கும் பயிற்சியை குறைந்த செலவில் அளித்து வருகிறேன். தமிழ்நாட்டில் மொத்தம் 6 லட்சம் பேர் கண் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கூட நான் பயிற்சி கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

    சேவை மனப்பான்மை உள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தால் நிச்சயம் நிறைய பேரின்  வாழ்வை வளம் பெற செய்யலாம் .

    முன்பு எப்போது சொல்லப்படாத ஒரு கதை

    பெண்களுக்கு எப்போதும் கற்றுக்கொடுக்கப்படுவது, வீட்டை விட்டு வெளியே போனால் விழுந்துவிடுவீர்கள் என்பதுதான். உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் பெண்களின் நிலைமை ஒரே மாதிரிதான். பயமும், வன்முறையும் வாழ்க்கையின் அன்றாட வழக்கங்களாக மாறிவிட்டன எதிர்த்து வலிமையோடு நின்று போராடும் பெண்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ‘பாதுகாப்பு நிம்மதி’ என்ற எதுவுமே இல்லாத சூழ்நிலையிலும் பெண்கள் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுவாகவே இந்தியாவில் பெண்கள் பலவீனமான நிலையில்தான் இருக்கிறார்கள் என்றாலும், இந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் இருப்பவர்களின் வாழ்வே அதுவாகத்தான் இருக்கிறது. சாதாரணமான கண்களுக்குத் தெரியாமலேயே, இதுநாள் வரை மறைவில் வாழ்ந்து வரும் ஒரு பெண் சமுதாயமும் இந்த நாட்டில் இருக்கிறது. இருட்டின் மறைவில், வறுமையின் கோரப்பிடியால், தளர்ந்து பாலியல் தொழிலாளர்களாக, இந்தியாவில் மும்பை போன்ற நகரங்களில் சிவப்பு விளக்குப்பகுதிகளில் அந்தப் பெண் சமுதாயம் வாழ்ந்து வருகிறது.

    இவர்கள் மட்டமானவர்களாக வெறுத்து ஒதுக்குகிறோம். ஆனால், காலம் விழிப்பை இவர்களுக்கும் ஏற்படுத்தி வருகிறது சமீபகாலமாக இவர்களும் தங்கள் உரிமைகளுக்காகப் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிலர் மட்டும் தங்களின் கதைகளை வரலாறாகப் படைத்து சாதாரணமானவர்களில் இருந்து சாதனையாளர்களாக உயர்ந்து நிற்கிறார்கள்.

    ஸ்வேதா தன் சொந்தக்கதையை தானே எழுதத் தொடங்கியுள்ளார். மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதியில் செயல்பட்டுவரும் ‘க்ராந்தி’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் ஒரு அங்கமாக இவர் உள்ளார். ஸ்வேதா என்ற இந்த இளம்பெண்தான் மும்பை சிவப்பு விளக்குப் பகுதியான காமாத்திப்புரா என்ற இடத்தில் இருந்து, முதல் தடவையாக வெளிநாடு சென்று படித்ததற்காக கல்வி உதவித்தொகை பெற்றவர்.

    வாழ்வு அவ்வளவு சுலபமானதாக இல்லாமல் போகும்போது, ‘வாழ்ந்தே தீரவேண்டும்’ என்ற உத்வேகத்தைக் கொண்டவர் ஸ்வேதா. அவரும் அவரது தாயும் விதிவசமாக காமாத்திப்புராவில் வசிக்கும்படி காலத்தால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். நினைவு தெரியும் வரை சாதாரணமான ஒரு சிறுமியாகவே ஸ்வேதாவும் வாழ்ந்தாள். இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ராஃபின் சௌராசியா என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ‘க்ராந்தி’ என்றதன்னார்வு தொண்டு நிறுவனத்தால் ஸ்வேதாவுக்கு மறுவாழ்வுகிடைத்தது. மும்பையில் உள்ள சிவப்பு விளக்குப் பகுதியில் இருக்கும் பெண்களின் மறுவாழ்விற்காக இந்த அமைப்பு பாடுபடுகிறது.

    தன்னைச்சுற்றிலும் முட்களே நிறைந்திருந்தாலும், அவற்றை எல்லாம் எதிர்த்து ஒரு மனதோடு போராடி வெற்றி பெற்றபெண்தான் ஸ்வேதா. ஒரு சாமான்யமான  மனிதப்பிறவியான அவர். சகிக்க முடியாத எத்தனையோ இடர்பாடுகளை எல்லாம் எதிர்கொண்டார்; எதிர்த்து நின்றார். கண்ணீரும், கதறல்களும் நிறைந்த அவருடைய வாழ்க்கை மனித மிருகங்களால் நாசமாக்கப்பட்டது என்றாலும், சாம்பலில் இருந்து உயிர் பெற்று எழுந்தவர் அவர் ‘க்ராந்தி’ அமைப்பு இதுபோன்ற இளம்பெண்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணரவே பாடுபடுகிறது.

    நியூயார்க் நகரத்தில் இருக்கும் பாக் கல்லூரியில் உளவியல் பட்டப்படிப்பிற்காக உதவித் தொகையைப் பெற்று, கல்வி கற்கும் அருமையான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இருளானாலும், பகலானாலும் எந்த நேரத்திலும் விலங்குகளை விடவும் மட்டமான மனித ஜென்மங்கள் தன்னை வேட்டையாட வரும் என்றபயத்துடனும், பீதியோடும் இருந்த ஸ்வேதா இப்போது அமெரிக்காவில் பாக் கல்லூரியில் உளவியல் கற்கும் இந்திய மாணவியாக உயர்ந்து நிற்கிறார். இதற்கெல்லாம் காரணம் அவர் தன் வாழ்க்கையை தானே வழிநடத்திச் சென்றதுதான்.

    துக்கம், துயரம், எல்லாம் தலைவிதி என்று ஒரு பக்கம் ஓரமாக உட்கார்ந்து விடாமல் வாழ்க்கையை எல்லோரையும் போல வாழ வேண்டும் என்று மகத்தான மனஉறுதியோடு எழுந்து நின்றார் ஸ்வேதா.

    அமெரிக்காவில் படிப்பை முடித்து இந்தியாவிற்கு திரும்பி வந்ததும், தன்னைப்போல இருக்கும் எத்தனையோ பேருக்கு வழிகாட்டப் போவதாகவும் திட்டமிட்டுள்ளார் ஸ்வேதா. வழக்கமாக ஒரு பெண் என்றால் அவளுடைய தோலின் நிறம், அவள் உடுத்திக் கொண்டிருக்கும் உடை,நடை,பேச்சு,பாவனை அவளுடைய வைத்தே எடை போட்டுப்பழக்கப்பட்ட நம் சமூகத்தில் ஒரு விடிவெள்ளியாக ஒளிர்கிறார் ஸ்வேதா.

    மலை போல தளராத உறுதியான மனது, அடைந்தே தீருவது என்றபிடிவாதமான உயர்ந்த  இலட்சியம், அதை நோக்கிய கடினமான அர்ப்பணிப்போடு கூடிய பயணம் என்பவைதான் ஸ்வேதாவை இப்போது அமெரிக்காவுக்கு கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போயிருக்கிறது. அருவருப்பாக நினைக்கப்பட்ட பகுதியில் இருந்தவர் இன்று வளமான நம்பிக்கையின் பச்சை விளக்காக திகழ்கிறார்.

    ஸ்வேதாவின் மனஉறுதியும், இரத்தம் சிந்திய உழைப்பும் அவருக்கு ஐக்கிய நாடுகளின் விருதைத் தேடிக் கொடுத்துள்ளது. 25வயதுக்கும் குறைவாக உள்ள உலகளவில் சிறப்புமிக்க 25 பெண்களில் ஒருவராக ஸ்வேதா நியூஸ் வீக் இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பட்டியலில்தான், தீவிரவாதத்தின் எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்து, எதிர்த்துப் போராடி உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் மலாலா யூசப் அலியும் இடம்பெற்றிருக்கிறார்.

    இப்போது ஸ்வேதா என்றபெயரைக் கேட்டால் முதலில் தோன்றும் உணர்வு அவரின் மீது அளவில்லாத மதிப்பும், மரியாதையும்தான். இந்த இளம்வயதில் இத்தனை துன்பங்களையும் அனுபவித்தபிறகும் அதையெல்லாம் மீறி, அதற்கெல்லாம் அப்பால் ஒரு சுடராக ஒளிவிடுகிறார் அவர். திரும்பி வந்த பிறகு மும்பையில் தான் வாழ்ந்த அதே சிவப்பு விளக்குப் பகுதியில், ஒரு உளவியல் ஆலோசனை மையத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ஸ்வேதா. தன்னைப்போன்றசிறுமிகளுக்கு ஒரு ஆதரவாக, வாழ்வின் கலங்கரை விளக்கமாக இருக்க விரும்புகிறார் அவர். ஸ்வேதாவின் தாத்தா,தான் பெற்றமகளையே பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார் ஆனால்.

    ஒரு ஆலைத்தொழிலாளியான அவருடைய தாய் அவரை ஒருபோதும், தான் படும் துயரங்களுக்கு ஆளாக்க விரும்பவில்லை. பள்ளிக்குப் படிக்க அனுப்பி வைத்தார்.

    அந்த நாள் முதல் ஸ்வேதா கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். ஒவ்வொருநாள் மாலை வேளையிலும் அவர் ஒரு டியூஷன்  வகுப்புக்கு சென்று படித்தார்.

    ‘க்ராந்தி’, ஸ்வேதாவின் கனவை நனவாக்க கை கொடுக்க முன்வந்தது. பல பயணங்களை மேற்கொண்டு தன்னைப் போலவே ஒரு மோசமான சூழ்நிலையில் வாழ்பவர்களை ஸ்வேதா சந்திந்தார். இது அவருக்கு ஏராளமான நம்பிக்கையைத் தந்தது. தான் யார்? என்பதை அவர் மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தார். ஸ்வேதாவுடைய அம்மா தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றசமயங்களில் அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்த மற்றபாலியல் தொழிலாளிப் பெண்கள், ஸ்வேதாவை கண்மணிபோல் பாதுகாத்தார்கள்.  ‘க்ராந்தி’ ஏற்பாடு செய்த தங்குமிடம் அவருக்கு இரண்டாவது வீடானது.  தனது 11 வது வயதிலேயே வன்முறைக்கு இரையான போதும் அவருடைய தன்னம்பிக்கை கொஞ்சமும் தளர்ச்சி அடையவில்லை.

    அன்று அவருடைய தோலின் நிறத்தை வைத்து, ‘மாட்டுச்சாணி’ என்றும், அவர் இருந்த இடத்தை  வைத்து ‘சாக்கடை’ என்றும் அழைக்கப்பட்டார். ஆனால், இன்று? ஸ்வேதா ஆயிரக்கணக்கான உலகப் பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்.

    வாழ்க்கையை மாற்றியமைக்க, நம் ஒவ்வொருவராலும், உறுதியாக நினைத்தால் முடியும். நாம் காணும் கனவை நிஜமாக்க நம்மிடம் அளவில்லாத ஆற்றல் இருக்கிறது. அடுத்தவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி தீர்ப்பளிக்க நமக்கு குறைவாகவே உரிமை இருக்கிறது; என்கிறார் ஸ்வேதா.

    அமெரிக்கா செல்வதற்கு பாஸ்போர்ட்  வாங்குவதற்கு ஸ்வேதாவுக்கு ஏராளமான இடையூறுகளும், தடங்கல்களும் ஏற்பட்டன. அவற்றைஎல்லாம் எதிர்த்து நின்று வென்று நியூயார்க் நகரத்தில் இருக்கும் பாக் கல்லூரியில் உளவியல் பட்டப்படிப்பில் சேலர்ந்துள்ளார். 2014ம் ஆண்டில் ‘வீர சாதனை புரிந்த இளைஞர்களுக்கான விருது’ (UN Youth Courage Award) ஐக்கிய நாடுகளால் ஸ்வேதாவுக்கு வழங்கப்பட்டது. வாழ்வில் அவர் எதிர்கொண்ட சோதனைகளை வீரதீரத்தோடு போராடி வெற்றிகொண்டதற்காக, அவருக்கு இது வழங்கப்பட்டது.

    ஸ்வேதாவின் கதை இதோடு முடிந்து விடாது.  பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை அவர் தன் வாழ்வின் சாதனை மூலம் விழித்தெழச் செய்திருக்கிறார். தங்கள் சொந்தப் பெயரை வரலாற்றில் தாங்களாகவே எழுதிக்கொள்ளும் அபூர்வ பெண்மணிகளில் ஒருவர்தான் ஸ்வேதா. இருட்டைப் பழிக்காமல் இனியாவது வெளிச்சத்துக்கு வர லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முடியட்டும்… அதற்கு ஸ்வேதா ஒரு மகத்தான மாதிரியாக இருப்பார்…

    படைப்பாற்றல்

    “Creativity is oxygen for our souls.

    Cutting off our creativity makes us savage.

    We need to create what wants to be created.” – Julia Cameron.

    மலையின் உச்சியில்  – நீ ஒரு பைன் மரமாக இருக்க முடியாதெனில்

    மலையடிவாரத்தில் ஒரு புதர்ச் செடியாக இரு.

    ஆனால், ஒரு சிறந்த புதர்ச்செடியாக, சிற்றோடையின் கரையில் இரு.

    நீ மரமாக இருக்க முடியாதெனில்  ஒரு சிறு செடியாக இரு.

    ஒரு செடியாக இருக்க முடியாதெனில்  பெரு வழியின்

    இருமருங்கிலும் மகிழ்வைத் தரும் பசும் புல்லாக இரு.

    நீ கஸ்தூரிமானாக இருக்க முடியாதெனில்  ஒரு மீனாக இரு.

    ஏரியில் உள்ள, உற்சாகமாகத் துள்ளும் மீனாக இரு.

    நீ நெடுஞ்சாலையாக இருக்காவிட்டாலும்

    ஒரு ஒற்றையடிப்பாதையாக இரு.

    நீ சூரியனாக இருந்து பிரகாசிக்கா விட்டாலும்

    நட்சத்திரமாக இருந்து கண் சிமிட்டு.

    வெற்றி பெறுவதும், தோல்வியுறுவதும் உன் உருவத்தின் அளவை வைத்து அல்ல.

    நீ எதுவாக இருக்கிறாயோ, அதில் சிறந்ததாக இரு.

    ஆங்கிலக் கவி. டௌக்ளஸ் மால்லோச்.

    ஒவ்வொரு ஓவியமும் பல லட்சங்கள் விலைக்குப் போகிற திறமையுடைய ஒரு புகழ் பெற்ற ஓவியருடைய கலைக்கூடத்தில், பல மாதங்கள் உழைத்து வரையப்பட்ட ஒரு ஓவியம் திருடு போய்விட்டது. அந்த ஓவியருடைய நண்பர்கள் “இப்படி நடந்து விட்டதே,  இது உங்களுக்கு மிகப்பெரிய இழப்பு, என்றார்கள்.

    “ஓராண்டு கஷ்டப்பட்டு உழைத்து வரைந்த ஒரு அற்புதமான ஓவியம் திருட்டுப்போய்விட்டது” என்று வருந்தினார்கள். அந்த நண்பர்கள் ஒன்றுகூடி அந்த ஓவியரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வந்தார்கள். அந்த ஓவியர், ஓவியம் திருட்டுப்போனதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், ஒரு பூங்காவில் நிம்மதியாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். “எப்படி உங்களால் இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது? மிகப் பெரிய இழப்பை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்கள், ஓராண்டு கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பு வீணாகிப்போய் விட்டதே.

    அந்த ஓவியம் பல லட்சம் ரூபாய் விலை போயிருக்குமே? உங்களுடைய அதிர்ஷ்டத்தை இழந்து விட்டீர்களே“ என்று வருத்தப் பட்டார்கள்.

    ஓவியர் சொன்னார் “நீங்கள் தவறாக கணிக்கிறீர்கள். என்னுடைய ஒரு படம் காணாமல் போனது உண்மை. ஆனால், அந்த படைப்பு மிகப்பெரிய பொக்கிஷம் அல்ல. என்னுடைய உண்மையான பொக்கிஷம் இதோ இங்கே இருக்கிறது என்று தன் தலையில் உள்ள மூளையைச் சுட்டிக்காட்டினார்.

    என் மூளைதான் எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம். என்னுடைய அரிய, உயர்ந்த, உன்னதமான அனைத்து படைப்புகளையும் உருவாக்கித் தந்தது இந்த மூளைதான். இங்கிருந்துதான் எல்லாப்படைப்புகளும் உதயமாயின. இதைவிட ஆயிரம் மடங்கு உயர்வான, அற்புதமான மேலான படைப்புகளை என்னால் உருவாக்க முடியும்” என்று தன்னம்பிக்கையோடு சொன்னார்.

    ஓவியம் வரைவது அவரிடம் உள்ள படைப்பாற்றல் (Creativity). அது தனித்துவம் கொண்டது. பிறருக்கு இல்லாத அந்த ஆற்றல் தனக்குள் இருப்பதை உணர்ந்து அந்த ஆற்றலை வளர்த்து கொண்டார். அதனால் உலகப்புகழ்பெற்ற, விலை மதிக்க முடியாத பல ஓவியங்களை அவரால் படைக்க முடிந்தது. இதுதான் அவருடைய படைப்பாற்றலின் ரகசியமாகும்.

    பொதுவாக பலர், “நான் திருப்தியாக இருக்கிறேன், எதற்கும் ஆசைப்படுவது இல்லை. ஆசைப்பட்டால்தானே அல்லல்பட வேண்டி வரும், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, எது நமக்கு வாய்த்ததோ அதுவே திருப்தி. எதைப்பற்றியும் நான் கவலைப்படவில்லை. அமைதியாக, நிம்மதியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றேன், என்று சொல்வார்கள்.

    பொதுவாக அவர்கள் வெளியே இப்படி சொல்லிக் கொண்டிருந்தாலும், அது முற்றிலும் உண்மையல்ல. அவர்கள் மனதினுடைய ஒரு மூலையில் ஏதோ ஒன்றை இழந்துவிட்டதைப் போலவும், செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் விட்டுவிட்டதைப் போலவும் ஒரு தவிப்பு அவர்கள் மனதிலே எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும்.

    எதை அவர்கள் இழந்திருப்பார்கள், என்று யோசித்துப் பார்த்தால் ஒன்று புலப்படும். தன்னுடன் பிறந்த ஒரு தனித்திறமையை, இறைவன் கொடுத்த அரிய வரத்தை, அவர்களுடைய தனிப்பட்ட திறமையை அவர்கள் இழந்திருப்பார்கள் அல்லது பயன்படுத்தாமல் விட்டிருப்பார்கள். அதுதான்- அவர்களுக்குள் புதைந்து கிடக்கிற, புதிதாக ஒன்றை உருவாக்கும் திறமையான படைப்பாற்றல் (Creativity).. ஆகும் (படைப்பாற்றல் என்பது ஒவ்வொருவருக்கும் இறைவன் தந்த பரிசு. தனித்தன்மை கொண்டது. சிறப்பம்சம் உடையது. இந்த திறமை ஒரு சில சாதனையாளர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தனித்திறமை உண்டு.

    பறவைகளுக்கு கைகள் இல்லா விட்டாலும் கூடு கட்டுகிற ஆற்றல், சிலந்திக்கு தன் வாயில் இருக்கும் உமிழ் நீரால் ஒரு வலையைக் கட்டிக்கொள்கிற ஆற்றல், கரையானுக்கு புற்று கட்டிக் கொள்கிற ஆற்றல், தேனீக்களுக்கு மிக அழகாக கூடு கட்டிக் கொள்கிற ஆற்றல், குயிலுக்கு இனிமையான குரல்வளம், சிறுத்தைக்கு அதன் வேகம், யானைக்கு அதன் பலம் ஆகியவைகள் அமைந்திருப்பது போல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனி ஆற்றல் உள்ளடங்கி இருக்கிறது.

    அப்படிப்பட்ட அந்த படைப்பாற்றலை பயன்படுத்தாமல் நமக்குள்ளே புதைத்து விட்டோமேயானால், நம்முடைய வாழ்க்கையின் முதன்மையான அம்சங்களை, முக்கியமான பகுதியை இழந்து விட்டதற்கு ஒப்பாகும். நம் படைப்பாற்றலை வேண்டுமென்றேமழுங்கச் செய்து விடுகிறோம். முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறோம், என்று பொருளாகும். Julia Cameron, என்றபேராசிரியர்  “The Artist’s Way” என்றதன்னுடைய புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

    “படைப்பாற்றல் என்பது உயிருக்குத் தேவையான ஆக்ஸிஜன் போன்றது. நம்முடைய படைப்பாற்றலை முனை மழுங்க வைப்பது என்பது நம்மை அடிமையாக்கிக் கொள்கிறமுயற்சியாகும். என்ன புதிதாக தேவையோ அதை உருவாக்குவதே நமது கடமை” என்று சொல்கிறார். நமக்குள் இருக்கும் எந்தப் படைப்பாற்றலை நாம் இழந்திருக்கிறோம் என்று அறிந்தால்தான், நாம் சரியான திசையில் பயணிக்கிறோமா இல்லையா என்றமுடிவுக்கு வரமுடியும்.

    நம்முடைய தினசரி வாழ்க்கையில் எவை, எவை தனித்திறமைகளை உள்ளடக்கிய துறைகள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இயல், இசை, நாடகம் ஓவியம் தீட்டுதல், வாய்ப்பாட்டு, நாட்டியக்கலைகள், இசைக்கருவிகளை இயக்கும் திறமை, கவிதை புனைதல், கதைகள் எழுதுதல், சிலை செதுக்கும் திறமை, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பங்களை வளர்த்துக் கொள்ளுதல், விமானம் ஓட்டுதல், விண்வெளி ஆராய்ச்சி, சிக்கலான கருவிகளை இயக்குதல் போன்றதுறைகள் எல்லாம், மனிதனின் தனித்திறமைகளாக கருதப்படுகின்றன.

    பொதுவாக இந்த நுணுக்கமான தனித்திறமை உத்திகளை உங்கள் வீட்டில் இருந்தே தொடங்கலாம். வீட்டிற்கு வண்ணம் பூசுவது, வரவேற்பறையை அழகுபடுத்துவது, உணவு உண்ணும் அறையை மாற்றி அமைப்பது, அலுவலகத்தின் அமைப்பை மாற்றுவது, நாட்டியம் சொல்லித்தருவது, நாடகத்தை இயக்குவது, சினிமாத்துறையில் இயக்குனராவது, பிரச்சனையைத் தீர்த்து வைப்பது, உங்கள் குழந்தைகளுக்கு அறிவியல் திட்டத்தைத் தருவது, சமைக்கும் கலையிலே புதிய  மாற்றம் தருவது போன்றவைகளும் அடங்கும்.

    உங்களுடைய தனித்திறமையில் ஒரு புதிய உத்தியைப் பயன்படுத்தி, புதுமையைப் புகுத்தினால் அது நல்ல பலனைத் தரும். அது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கூட்டும், புகழைத்தரும். செல்வத்தைக் கொடுக்கும். வெற்றிகளைப் பரிசளிக்கும். மக்களுக்கும் அது நல்ல பலனைத் தரும். சமூகம் பலன் பெறும்.

    உங்கள் படைப்பாற்றலினுடைய தன்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய தனித்திறமையை மெருகிட்டு பிரகாசப்படுத்திக் கொண்டால், அந்த துறைசார்ந்த அனுபவங்களும், உத்திகளும் புதிய  புதிய வழிகளை உங்களுக்குக் காட்டும்.

    உங்களுக்கு எந்தத்துறையில் ஆர்வமோ, அந்தத்துறையில் உங்கள் படைப்பாற்றலை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். என்னிடம் எந்த தனித்திறமையும் இல்லை, என்று சொல்வது ஒப்புக்கொள்ள முடியாது. உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு முயற்சியைத் தொடங்கி, அதைக் கற்றுத் தேர்ந்து பழகிக் கொள்ளலாம். திறமைசாலிகளிடமிருந்து நீங்கள் பயிற்சிகளின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

    ஒருவனிடம் உள்ள தனி ஆற்றல் அவனுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கிறது. இதைப்போன்ற தனித்திறமைகள் உங்களிடமும் புதைந்துள்ளன. அதைக் கண்டுபிடியுங்கள், மெருகேற்றுங்கள். இது வரை அது உபயோகப்படாமல், அடையாளம் காணப்படாமல் உங்கள் மூளைக்குள் புதைந்து இருந்தால், அதை அடையாளம் காணுங்கள். உங்கள் வாழ்வுக்கு வளம் கிடைக்கும். வழியும் கிடைக்கும். சமுதாயத்துக்கும் பலன் கிடைக்கும். தன்னம்பிக்கையோடு தளராமல் முயற்சியுங்கள், முயற்சிக்கேற்றவெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

    ஸ்ரீலங்கா – சுற்றுலா

    காலை எழுந்து தயாரானோம். சுற்றுலா குழுவில் 12பேர் ஏ.சி. அறைவேண்டாம் என்றனர். ஒரு சகோதரிக்கு முழங்கால் வலி என்பதால் குளிப்பதற்கு வெந்நீர் வேண்டும் என்றார். எல்லோருக்கும் ஏற்பாடு செய்தோம்.

    தயாரான அறைகளைக் காலி செய்து விட்டு வாகனத்தில் புறப்பட்டோம். ஒரு சகோதரிக்கு வாகனத்தின் ஏ.சி. ஒத்துக்கொள்ளாததால் முதல் நாள் பல முறைவாந்தியால் சிரமப்பட்டார். மற்றவர்களுக்கும் தாமதமானது. எனவே, அன்று பெட்டிகள் வைத்துள்ள காரில் ஏ.சி. இல்லாமல் பயணிக்க ஏற்பாடு செய்தோம்.

    வவுனியா என்றநகரில் பிரின்ஸ் ஓட்டலில் காலை டிபன் இடியாப்பம், வடை, ரோஸ்ட் சாப்பிட்டோம். ஒரு தட்டில் வடைகள், இன்னொன்றில் இடியாப்பம், இட்லி ஆகியவைகளைக் கொண்டு வந்து வைக்கிறார்கள். அவர்களும் பரிமாறுகிறார்கள். நாமும் எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ளதை எடுத்துக் கொண்டு சாப்பிட்டதற்கு மட்டும் பில் தருகின்றனர்.

    ஓட்டல்களில் S.S. தட்டு அதன் மேல் ஒரு பாலிதீன் தாள் போட்டு வைக்கின்றனர். சில ஓட்டல்களில் இந்தத் தாள் இல்லாமல் தருகின்றனர். டிபன் நன்றாகவே இருந்தது.

    யாழ்ப்பாணம் – விடுதலைப் புலிகளின் கோட்டை எனப் பெயர்  பெற்றது.  இந்நகருக்கு பகல் 12 மணிக்குச் சென்றோம். வாகனத்திலிருந்தே நகரை, கடைவீதியைப் பார்த்து, ஒரு சுற்று சுற்றி நல்லூர் கந்தசாமிகோயில் முன்புறம் சென்றோம். கோயில் 3.30 மணிக்குத் தான் திறப்பார்கள் என்றறிந்து மதிய உணவுக்கு ஓட்டலுக்குச் சென்றோம். சூர்யா என்றஓட்டலில் சைவ பஃபே உணவு ரூ. 120 (இலங்கை) தான். ஆனால், மோர் தயிர் இல்லை என்பதால், அக்சதை என்றஓட்டலுக்குச் சென்று ரூ. 130 கொடுத்து அளவு சாப்பாடு, புளித்த மோருடன் சாப்பிட்டதாய் பெயர் செய்தோம்.

    4.2.1948ல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னும் சிறைக் கூடமாகவும், இராணுவ முகாமாகவும் இருந்தது. 1990  95 என 5 ஆண்டுகள் இக்கோட்டை விடுதலைப் புலிகள் வசம் வந்தபோது, இடிக்கப்பட்டதாம், அதன் பின் இராணுவ முகாமாக இருந்தது.

    இப்போது பழமை வாய்ந்த சுற்றுலா இடமாகப் புனரமைத்து வருகின்றனர். இங்கு கடற்கரையும் உள்ளது. படகில் சிறிது தூரம் சென்றால் பார்க்குமிடம் ஒன்று இருப்பதாய் கூறினார்கள். அங்கு செல்ல இயலவில்லை. கோட்டையைப் பார்த்தபின் கோயிலுக்குச் சென்றோம்…

    மாலை 3.30 முதல் 4.30 வரை நல்லூர் கந்தசாமிகோயில் பூசையில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பெரிய பிரகாரம், மூலவர், உற்சவர் என மாறி மாறி தீபாராதனை நடந்தது.

    அங்கு தங்குவதை விட கிளிநொச்சிக்குச் சென்றுவிட்டால், மறுநாள் கூடுதல் இடங்களைப் பார்க்க முடியும் என்று கைடு கூறியதால், முழு மன ஒப்புதலின்றி கிளி நொச்சிக்குச் சென்றோம்.

    பெட்ரோல் இங்கு ரூ. 57.50 – டீசல் 47.50 தான். மாலை 6.45 மணிக்கு கிளிநொச்சியில் ஒரு புத்த ஆலயம் சென்றோம். அடிக்கின்ற மணி (BELL) வடிவில் கட்டிடம் கட்டியுள்ளனர். அதற்குள் புனிதமானவை இருப்பதாய்க் கூறினார்கள். அருகில் புத்தர் சிலையுள்ள ஆலயம்.

    இங்கு தங்குவதற்கு அறைகளும் உள்ளன. கைடு 2 மணிநேரம் தேடி மூன்று வெவ்வேறு ஓட்டல்களில் தங்குவதற்கான அறைகளை ஏற்பாடு செய்து வந்தார். இதனால், பெண்கள் மத்தியில் சலசலப்பு உண்டானது. சமாதானப்படுத்தி, இனி ஒரே இடத்தில் தங்க ஏற்பாடு செய்வதாய்க் கூறினோம்.

    சரவணபவன் என்றஓட்டலில் இரவு சாப்பிட்டோம். சுமாராக இருந்தது. கிளிநொச்சியில் இரவு தங்கினோம்.

    நான் தங்கியிருந்த லோட்டஸ் காட்டேஜ் உரிமையாளர் ஸ்ரீகாந்தன் அரசு வேளாண் துறையில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். 2009 உள்நாட்டுப் போரின் போது, சென்னை போரூரில் வசித்தாராம். அவரது மகன் ஜதுருகன் 11ம் வகுப்பு மாணவர். தமிழ் பாட வழியில்  படிப்பதாய்க் கூறி நோட்டுக்களைக் காண்பித்தார்.

    பள்ளிக்கல்வி இலவசம் என்றார். இப்போது எவ்விதப் பிரச்னையுமில்லை என்றார். விடுதலைப்புலிகள் இருந்தபோது, அவர்களது ஆட்சிதான் நடைபெற்றதாம். வவுனியா அருகிலுள்ள கரந்தை என்றபகுதியில் இருந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்றபகுதிகள் அவர்களிடம் இருந்ததாம். விசா போன்றநடைமுறைகள் அமுலில் இருந்ததாம்.

    வரிவசூல், சட்டம்  ஒழுங்கு, தண்டனை என அனைத்துமே விடுதலைப்புலிகளிடம் தான்; குற்றங்கள் கடுமையானது என்றால், தண்டனை நடுரோட்டில் நிற்கவைத்து, மக்கள் பார்க்கும் போது சுட்டுக்கொல்லுவதுதானாம். அந்த மாணவன் கூறியது முன்பு குற்றங்கள் இல்லை. இப்போது அதிகரித்து விட்டது.

    சாலையோரம் ஓர் உயரமான கண்காணிப்பு கோபுரம்  கட்டி, கிளிநொச்சி முழுவதையுமே கண்காணித்தனராம். விடுதலைப்புலிகளை அழித்தபின், இதை இடித்துக் கீழே தள்ளியுள்ளனர். அதைப்பார்த்தேன்.

    காலை உணவை சக்தி சைவ உணவகத்தில் முடித்து விட்டு பயணத்தைத் துவக்கினோம்.

    திரிகோணமலை என்ற ஊருக்கு வவுனியா வழியே வனத்துக்குள் பயணம் தொடர்ந்தது. சில இடங்களில் யானைகள் கடக்கலாம், என்றபோர்டு வைத்துள்ளனர்.

    திரிகோண மலைக்கு 10 கி.மீ., முன்பாக கன்னியா வெப்ப நீரூற்று சென்றோம். கட்டணம் ரூ. 50, குழு என்றால் ரூ 30 எல்லோருமே குளித்தோம். தரை மட்டத்தில் தனித்தனியே ஏழு தொட்டிகள் உள்ளன. வாளி உள்ளது.

    வெந்நீரை மொண்டு குளித்தோம். சுமார் 4 அடி ஆழம் மட்டுமே உள்ளது. ஏழு ஊற்று நீருமே ஏழு வித வெப்ப நிலையில் உள்ளன. இராவணனுடன் சம்பந்தப்படுத்தி கூறுகின்றனர். சூடாகவே உள்ளது. நீர் அளவு குறைவதே இல்லை. உயர்ந்து சமநிலைக்கு வந்துவிடுகிறது. சுற்றுலாப்பயணிகள் வருவதால், பல பொம்மைக்கடைகளும் உள்ளன.. அங்கிருந்து புறப்பட்டு டிரிங்கோ எனப்படும் திரிகோணமலை நகர் சென்றோம்…

    என் பள்ளி

    Er A.G. மாரிமுத்து ராஜ்

    தென்னிந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஊர்களில் ஒன்று இராஜபாளையம். தற்போதுள்ள விருதுநகர் மாவட்டத்தில் இணைந்துள்ளது. இந்த ஊர் தான், காலத்தால் முந்திய, பெரும் பரப்பளவுடன் தமிழகமாக இருந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக விளங்கிய திரு குமாரசாமிராஜா அவர்களின் பூர்வீகமாகும்.

    மிகச்சிறந்த காந்தியவாதிகளை உருவாக்கிய ஊர்! இங்கு ஒருமுறைமகாத்மா காந்தி அவர்கள் வருகை புரிந்துள்ளார். அவரின் நினைவாக இன்றும் இராஜபாளையத்தில் காந்தி கலை மன்றம் என்றநூலகம் இயங்கி வருகிறது. எங்கள் ஊர் காப்பியக்கால சிறப்புக்களைக் கொண்டது, என்பதற்கு இங்குள்ள “சஞ்சீவி மலை” ஒரு சிறந்த சான்றாகும்.

    “இராமாயண” காவியத்தில்,  போர்க்களத்தில் இறந்து கிடந்த  வீரர்களை உயிர்ப்பிப்பதற்காக அனுமான் மூலிகையைத் தேடிச் சென்ற போது, அது சஞ்சீவி மலையில் இருந்ததாக கம்பன் குறிப்பிடுவார். அதுமட்டுமல்லாமல், இயற்கையின் அழகில் கொத்துக் கொத்தாய் பூத்துக்குலுங்கும் அருமையான வனப்பகுதியாக “அய்யனார் கோயில்” என்ற சுற்றுலாத்தலமும் உண்டு.

    நூற்பாலைகளுக்குப் பெயர் பெற்ற இராஜபாளைய மண்ணிலே, மிகச் சாதாரணமாக ஒரு குடும்பத்திலே, தினசரி கீரை விற்கும் திருமதி பொன்னுத்தாய்க்கும், கட்டிடத்தொழிலாளியான திரு குருசாமிக்கும் 1968ல் பிறந்த இரண்டாவது மகன் தான் அடியேன்! என்னுடன் பிறந்தவர் அண்ணன் மட்டுமே அவர் பெயர் எ. பழனிச்சாமி, எனக்கும் அவருக்கும் 5 ஆண்டுகள் வித்தியாசம் அவ்வளவுதான்.

    எங்கள் குடும்பம் வறுமையிலும் வறுமை நிறைந்தது. எங்கள் தலைமுறைக்கு முன்பு வரை யாருமே எங்கள் பரம்பரையில் பள்ளிக்கூட வாசனை அறியாதவர்கள். என் அண்ணன் தன் படிப்பை எட்டாம் வகுப்புடன் நிறுத்திவிட்டார். அதற்கு மேல் அவரைப் படிக்க வைக்க எங்கள் குடும்பத்தில் வருமானம் போதவில்லை.

    நான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ராஜேந்திரன் நடுநிலைப்பள்ளியில் படித்தேன். அந்தப்பள்ளியில் மொத்த மாணவர்களே 50 பேர்தான் என்று நினைக்கிறேன். நடுநிலைப்பள்ளியில் படிப்பு என்பது ஓட்டை டவுசர், கிழிந்த சட்டை, ஊளைமூக்கு வடிய தலையில் பொடுகு கொப்பளிக்க, கண்றாவியாக போய் வந்ததை என்னால் இன்றும் மறக்க முடியாது.

    எப்படியோ, 5ம் வகுப்பை முடித்தாகிவிட்டது. அதற்கு மேலே என்ன செய்வது? என்று எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், எங்க அம்மாவும், அப்பாவும், மாமாவும் எப்படியாவது என்னை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றவைராக்கியத்துடன், ஐந்திலிருந்து ஆறாம்வகுப்பு கொண்டு போக நிறைய கஷ்டப்பட்டார்கள்.

    அப்போது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த எங்கள் ஒன்றுவிட்ட மாமா பொன்னுசாமி, வார்டு கவுன்சிலராக இருந்தார். அவர்கிட்ட போய் முறையிட்டாங்களாம் என் குடும்பத்தினர். அவர்தான் என்னை நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

    அவரை இன்றைக்கும் என்னால் மறக்கக முடியாது. நல்லா நினைவிருக்கு, அவருடைய மிதிவண்டியில் பின்னாடி உட்கார வைத்து, இராஜபாளையம் நாடார் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்க கூட்டிட்டு போனபோது, நான் பின்னாடி மல்லாக்க விழுந்து சாய்ந்தது.

    ஒருவழியா உயர்நிலைப்படிப்புக்குள் நுழைந்தாச்சு. ஆறாம் வகுப்பு வாத்தியார் இராமசாமி என்னுடைய பயத்தை நன்கு புரிந்து கொண்டு எனக்கு அன்பும், ஆதரவும் காட்டினார். வாழ்வின் கீழ்ப்படிக்கட்டில் இருந்த எனக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டியது அவர் தான் என்றால் அது மிகையல்ல.

    முருகன், முனியாண்டி, நான் மூன்று பேரும், எங்க தெருவான முகில்வண்ணம்பிள்ளை தெருவில் இருந்து, கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாடார் உயர்நிலைப்பள்ளிக்கு தினமும் நடந்தே சென்று வருவோம். பள்ளியில் என்னுடன் படித்த என் தோழன் கந்தகுமார் என்மீது அவ்வளவு பிரியமா இருப்பான். அவன் பெரிய இடத்துப்பிள்ளை என்றாலும் என்மீது உயிரா இருப்பான்.

    அது என்னவென்று தெரியாது. அவன் அந்தப்பள்ளியை விட்டு எட்டாம் வகுப்புக்கு பாளையங்கோட்டை போயிட்டான். போன மறுநாளே எனக்குக் கடிதம் எழுதினான். அதற்கு நானும் பதில் கடிதம் எழுதினேன். அந்த இணைப்பு இன்றுவரை நீடிப்பது இறைவன் எங்களுக்கு அளித்த வரம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

    நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் வீட்டில் ஆங்கிலத்திற்கும், கணிதத்திற்கும் டியூசன் இல்லையே என்று நினைச்சு மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்துவிட்டார்கள். பத்தாவது வகுப்பில் இருந்த தமிழாசிரியர் ஆதிமூலம் அவர்களை என்னால், எந்நாளும் மறக்க முடியாது. என்னுள் தமிழ் ஆர்வத்தை தூண்டிவிட்டவர் அவர்தான். என்னை மேடையேற்றி அழகு பார்த்தவர். அவருக்கு நான் எந்நாளும் நன்றிக்கடன்பட்டவனாக இருப்பேன்.

    அந்தா, இந்தா என்று பத்தாவது எழுதி பாஸ் ஆகியாச்சு; இப்போது மேலும் என் குடும்பத்துக்கு நெருக்கடி; இன்னும் இவனை மேலே படிக்க வைக்கனும் என்று எண்ணி, அவர்கள்  சக்திக்கு மீறி என்னைப் படிக்க வைக்க முயற்சி செய்தனர். அப்போ எங்கள் தெருவுல பணக்காரர் எங்க மாமா முறை அய்யனார். அவருக்கு பெரிய மனிதர்களோடு நல்ல தொடர்பு உண்டு. அவர்கிட்ட போய் நின்னாங்க என் குடும்பத்தினர். அவரும் தன் பங்கிற்கு என் வாழ்வில் ஒரு ஒளியை ஏற்றிவிட்டார். என்னை சங்கரகோவில் மேலநீலிதநல்லூரில் உள்ள பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக்கில் யாருமே எடுக்காத இண்ஸ்ண்ப் படிப்பில் சேர்ந்து படிக்க உதவி செய்தார். 1984 அப்போதுதான் எங்கு பார்த்தாலும் நிறைய பாலிடெக்னிக் கல்லூரிகள் உருவெடுத்தன. மிக சாதாரணமான ஓலைக்குடிசை தான் வகுப்பறை. ஒரு பெரிய குடோன் மாதிரி இருக்கும் அப்போது நான் தங்கி இருந்த விடுதி.

    அங்கே மஞ்சளா சோறு மூன்று வேளையும் ஏனோ, தானோ என்று தருவார்கள். நிறையக் கட்டுப்பாடு. அங்கு என் ஒவ்வொரு ஆண்டு படிப்பிற்கும் என் குடும்பம் செத்து செத்து பிழைத்தது; அது ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. நானும் எந்தவித ஆசா பாசத்திற்கும் இடங்கொடுக்காமல் படிப்பு ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, தமிழ்வழியில் இருந்து ஆங்கில வழிக்கல்விக்கு மாறிய புதிதில், ஏற்பட்ட பயத்துடன் பல ஆசிரியர்களை வைத்து,  தக்கி, முக்கி எப்படியோ இறுதி ஆண்டில் அத்தனையும் கிளியர் செய்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.

    Diplamo (டிப்ளமோ) தேர்வு முடிவுகள் வரும்போது நான் வெளியூர் சென்றிருந்தேன். என் சொந்தக்காரர் ஒருவர், நான் பாஸ் ஆன செய்தியை, தெருவில் நின்றுகொண்டிருந்த என் தாயிடம், பொன்னுத்தாயி, உம் மகன் முதல் வகுப்புல பாஸ் பண்ணிட்டானாம் என்று சொல்ல, எல்லோரும் ஆச்சரியப்பட்டார்களாம் என் குடும்பம் சந்தோஷப்பட்ட போது, எனக்காக அவர்கள் பட்ட கஷ்டம் அத்தனையும் அந்த நேரத்தில் பஞ்சு பஞ்சாக பறந்து போனது.  இதுக்கு மேல என்னால எழுத முடியல…

    Diplomo (டிப்ளமோ) முடிச்சாச்சு அவ்வளவுதான். இதுக்கு மேல படிக்க வைக்க அவங்க உடம்பில உதிரம் இல்லை. தம்பி, எங்களால முடிஞ்சதை உனக்கு செஞ்சிட்டோம். இனிமே நீதான் பிழைச்சுக்கனும் என்று கூறியபோது, எனக்கு ஒன்னும் புரியவில்லை. ஆனால், குடும்பம் கஷ்டத்திலே இருக்கு நாம் சம்பாதித்து ஆகனும்; என்று மட்டும் உறுதி செய்து ஓராண்டு வேலை தேடி அலைந்தேன்.

    ஒருவருமே வேலை கொடுக்கலே. பள்ளியிலே படிச்சப்ப சித்தாள் வேலைக்குப் போனது போல, இப்ப மம்மட்டி ஆள் வேலைக்குப் போனேன். அப்படி வேலை செய்கிற இடத்தில மேஸ்திரி ராமர் என்பவர், ஏம்பா நீ இந்த வேலை செய்யற? நான் ஒரு இன்ஜினியர்கிட்டே கூட்டிட்டுப் போறேன் என்று கூட்டிட்டுப் போனார். அதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

    அப்சரா கன்சல்டன்சி என்றபெயரில் காண்ராக்ட் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார் Er A. பாலசுப்பிரமணியம் என்பவர் அவர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வேலை செய்தேன். ஒரு சில மாதம் சும்மா, அதன் பின்பு சொற்ப சம்பளம்; எனக்கு வேலை கற்றுத்தந்த குருநாதர் அவர். என்னை நன்றாகப் பயிற்றுவித்து தனித்திறன் படைத்தவனாக ஆக்கியதில், அவருக்கு நிறைய பங்கு உண்டு.

    இரண்டு ஆண்டுகளுக்குப்பின், சேலத்தில் டாக்டர் நவநீத கிருஷ்ணன் என்பவர் மருத்துவமனை கட்டுவதற்காக என்னை அழைத்தார். இங்குதான் என் தொழில் குறித்த தெளிவு கிடைத்தது. அந்த மருத்துவர் எனக்கு நிறைய கற்றுத்தந்தார். தன் தம்பியைப்போல கவனித்துக் கொண்டார். இன்றும் அவருடன் எனக்கு நல்ல தொடர்பு உண்டு. அதை அடுத்து கோவை மாநகருக்கு என் நண்பன் முருகேசன் அழைத்து வந்து, தான் பணிபுரியும் “சீனிவாசன் அசோசியேட்” நிறுவனத்தில் என்னை சேர்த்துவிட்டான்.

    ஒரே ஒரு மஞ்சப்பை, அதில் மூன்று உடைகள். என் சொத்து அவ்வளவுதான். இந்த நிலையிலும் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த நான்கு பேரில் எனக்குத்தான் சம்பளம் 1400 ரூபாய் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

    நிறுவனத்தலைவர் உழ்  சீனிவாசன் அவர்களும் என் வாழ்வில் மறக்க முடியாத மனிதர்.  நான் இந்த அளவுக்கு வாழ்வில் வருவதற்கு ஓராண்டுதான் அவருடன் இருந்தேன். இன்னும் சில ஆண்டுகள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பான நிலையை அடைந்திருப்பேன்.

    அவரை விட்டு வந்தபின் 1994ல் இருந்து சுயமாகத் தொழில் புரிய முற்பட்டேன். அப்போது, Coimbatore Institute of Technology  கல்லூரியில் B.E., Civil Engineering படிப்பில் சேர்ந்தேன். அதையும் மிகவும் சிரமப்பட்டுத்தான் முடித்தேன். இப்போது என் வாழ்க்கையை நடத்த யாரையும் எதிர்பாராத நிலையை அடைந்து விட்டேன். நான் வளர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்து என் பெற்றோர், எனக்கு சொந்தத்தில் இருந்த ராஜராஜேஸ்வரி என்றபெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்.

    திருமணம் செய்து வைத்து, கோவையிலேயே தனிக்குடித்தனம் வைக்க கணபதியில் ஒரு குடிசை வீட்டை தேர்வு செய்து வைத்திருந்தார் என் உறவுக்காரர். இது என்னை வெகுவாக பாதித்தது. இவர்கள் இன்றும் நம்மை எந்த நிலையில் வைத்து பார்க்கின்றார்கள் என்று.

    அந்த வேகமும், வெறியும் என் மனதைத் துளைத்து எடுத்தது. இவர்களுக்கு முன்னாள் நாம் முன்னேறி, அவர்கள் போற்றும் படி வாழ வேண்டும் என்று தொடர்ந்து உழைத்தேன். சளைக்காமல் உழைத்தேன். அந்தக் காலகட்டத்தில் என்னுடன் அப்பா இருந்தது எனக்குப் பெருந் துணையாக இருந்தது.

    ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது,  ஒவ்வொரு முறையும் உயிர்தெழுவது போல. அதிலே என் வீட்டைக்கட்டி குடிபோன பின்பு எனக்கே என்மீது மதிப்பு, மரியாதை வரத்தொடங்கியது. என் வாழ்க்கைய முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

    அதற்கு ஏற்றாற் போல், தன்னம்பிக்கை வாசகர் வட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது; சில நிகழ்ச்சிகளுக்குப் பின் அதில் பொருளாளராகவும், தலைவராகவும் பதவி ஏற்றது. அப்போது ஐயா பன்னீர் செல்வம் அவர்கள், லட்சுமிகாந்தன், ஒட்டக்கூத்தன் முதலானோர் உறுதுணையாக இருந்தது. கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசனில் சேர்ந்து, குறிப்பிடத்தக்க நபராக மாறியது; இவை அனைத்தும் சேர்ந்து என்னையும், என் பொருளாதாரத்தையும் உயர்த்தியன. நிறைய நெஞ்சுக்கு நெருக்கமான நல்ல நண்பர்கள் வட்டம் அதிகரித்து சமூகத்தில் நல்ல நிலைக்கு என்னை அவர்கள்தான் அழைத்துச் சென்றார்கள் என்றால் அது மிகையாகாது.

    எழுத்து ஆர்வம், எனக்கு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. சின்ன வயதில் நிறைய புத்தகங்கள் படிப்பேன். இன்றும் என் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஒவ்வொரு நாளும் படிப்பேன். எந்த எழுத்தையும் விடுவதில்லை. ஏதாவது நமக்கு வேண்டிய ஒன்று அதிலே இருக்கும் என்று எண்ணம் தோன்ற தேடித் தேடிப்படிப்பேன். நன்றாக ஓவியம் வரைவேன், இசை கேட்பேன், இயல்பாக இருக்க பிடிக்கும். இத்தனை அம்சமும் இந்த சமுகத்தில்  உள்ள பல்வேறு அறிஞர்களிடம் இருந்துதான் நான் கற்றேன். அதை இந்த சமூகத்திற்கு சிறிதளவேனும் திருப்பித்தர வேண்டும் என்று முதல் கவிதை நூலை “தேடிப்பிடித்த தீர்ப்புகள்” என்றதலைப்பில் வெளியிட்டேன். அது வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து…

    1. நஞ்சை முறிக்கும் நம்பிக்கை 2. அம்மா 3. நம்பிக்கையா நச்சுனு நாலு வரி 4. மாற்றி யோசிக்கலாம் வாங்க 5. தலைமையின் தனிச்சிறப்பு 6. வாஸ்து 7. வானியலும், வாழ்விட வடிவமைப்பு வசதிகளும் 8. கட்டுமானப் பொறியாளர் வழிகாட்டி 9. சுலபமாக கட்டலாம் சொந்தவீடு 10. மேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் 11. குழாய் அமைப்பு முறைகள் 12. சர் மோட்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா 13. இன்ஜினியர் வாஸ்து, என்று தொடர்ந்து மேலே குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் பல நூல்களை எழுதி, இந்த சமூகத்திற்கு அர்பணம் செய்தேன். என் முப்பது ஆண்டுகால வாழ்வில் நான் சாதித்த துன்பத்திற்கும், உழைப்பிற்கும் கடந்த பத்து ஆண்டுகளில் பலன் கிடைத்தது.

    வானொலி உரை, பட்டிமன்றஉரை மற்றும் பொறுப்புகளில் மிகச்சிறந்த செயல்பாட்டிற்குக் கிடைத்த அங்கீகாரம் என என்னை இந்த சமூகம் தூக்கிப்பிடித்தது. கோவை இல. செ. கவின் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவராகவும், கொசினா விஷன் இதழ் ஆசிரியராகவும், ஆனந்தயோகம் மற்றம் பில்டிங் வாய்ஸ் மாத இதழின் இணை ஆசிரியராகவும் இருப்பதுடன், மிகச்சிறந்த சுயமுன்னேற்றப் பயிற்சியாளராகவும் இருக்கிறேன்.

    தன்னம்பிக்கை, பில்டர்ஸ் எக்ஸ்பிரஸ், கலைக்கதிர், பாசமலர், பில்டர்ஸ் வாய்ஸ், பில்டர்ஸ் லைன், தினமலர், கனவு இல்லம் போன்ற பத்திரிக்கை ஊடகங்களில் கட்டுரை ஆசிரியராகவும் இருந்து வருகிறேன்.

    வருங்கால நண்பர்களுக்கு, என் வாழ்க்கை கொடுத்த பாடத்தின் அனுபவத்தில் இருந்து நான் சொல்வதெல்லாம்…

    பெரிய பின்புலம் கொண்டவன் அல்ல நான். அதை விரும்புபவன் இறைவனும் அல்ல. எப்போதும் ஒற்றை மனிதனாகவே இந்த உலகில் சுற்றிக்கொண்டிருக்கிறேன். கற்பதில் இருந்தே தீர்ப்பைக் கண்டு கொண்டு இயங்குகிறேன். மிகப்பெரிய அளவில் உயர்வை இன்றும் நான் எட்டவில்லை என்றாலும், என்னளவில் ஏதோ ஒரு இடத்தை நான் இப்பூமியில் தக்க வைத்துக்கொண்டுள்ளேன்.

    எதிர்கால இளைஞர்களே…

    உன் ஊன்றுகோலையே உன் இறுதிக்காலம் வரை நீ நம்பிக்கொண்டு இருக்காதே.

    இயல்பாகவே…

    இறகு முளைக்கின்றவரைக்கும்தான்

    பறவைக்கு கூட்டில் இடம் உண்டு…

    இருபத்தொரு நாட்கள் (21) வரைக்கும்தான் முட்டைக்குள் இருக்கும் குஞ்சுக்கு கால அவகாசம் உண்டு. என்பதை  உணர்ந்து, சீக்கிரம் அனல்போல தெறித்து வெளியேறி, முயற்சிக்கு மேல் முயற்சி நீ செய்தாய் என்றால், எப்படிப்பட்ட மலையையும், தூக்கி எறிந்து விடலாம். துணிவுதான் அதற்கு வேண்டும்.

    தன்னம்பிக்கையுடன் புறப்படுங்கள்…

    தைரியமாக

    தலைசிறந்த மாமனிதராகி…

    தரணிபுகழ வாழ்ந்திடுங்கள்..

    சோதனைகளை, சோதனை செய்…

    “வாழ்வில் ஒரே நோக்கத்துடன் செய்யும் பணியிலே, இறுதிவரை நிலைத்திருப்பதிலும், அதை நிலையாக வைத்திருப்பதிலும் தான் நிலையான, உண்மையானவெற்றி அடங்கியுள்ளது”. என்பது வெற்றியின் தத்துவம். ஆக, வெற்றி என்பது நினைத்ததை அடைவதல்ல, மற்றவர்களை விட, சற்று அதிகப்படியாக இருப்பதும் அல்ல, உதாரணமாக ஒருவரிடம் நூறு கோடி ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இன்னொருவரிடம் நூறு கோடிக்கு மேல், ஐந்தாயிரம் ரூபாய் இருந்தால், முதல் நபரை விட பெரிய பணக்காரர் என்று சொல்லலாமே தவிர, வெற்றி பெற்றவர் என்று சொல்ல முடியுமா…? இவர்களை விட மூன்றாம் நபரிடம் ஆயிரம் ரூபாய் அதிகமாக இருந்தால், மற்றவர்களை தோற்றவர்களாக சொல்லிவிட முடியுமா? ஆகவே, மேற்கூறிய வெற்றியின் தத்துவப்படி, இது நிலைத்த வெற்றியல்ல. ரூபாய் அதிகமாக இருந்தால், மற்றவர்களை தோற்றவர்களாக சொல்லிவிட முடியுமா? ஆகவே, மேற்கூறிய வெற்றியின் தத்துவப்படி, இது நிலைத்த வெற்றியல்ல.

    இன்று கடுமையாக உழைத்து, பெரும் வெற்றி கண்டவர்கள் கூட,சாதாரண சிறு விஷயத்தில் கேள்விகளைச் சந்திருக்கிறார்கள். அதன் காரணங்களைச் சற்று ஆழமாக ஆராய்வோம்.

    முதலில், வெற்றி என்பதன் ஆரம்பமும், முடிவும் எது? வெற்றியை நிரந்தரமாக்க என்ன வழி?வெற்றி நிலையில்லாமல் போவதற்கான காரணம் என்ன? என்பதை சில உதாரணங்களோடு அகத்தாய்வு செய்வோம். வெற்றி என்பது எங்கே நிர்ணயிக்கப்படுகிறது?  மலையில் ஏறுபவர்களுக்கு, மலை உச்சியை அடைவது (வெற்றியின்) முடிவு. மலையை விட்டு இறங்குபவர்களுக்கு மலை அடிவாரம் (வெற்றியின்) முடிவாக அமைகிறது. யோசித்துப் பாருங்கள்!.. இந்த செயலில் வெற்றி யாருக்கு? வெற்றி எங்கே இருக்கிறது? மலை உச்சியிலா? மலையடிவாரத்திலா?

    அடுத்து ஓட்டப்பந்தயத்தில், பந்தய வீரர்கள் ஓட்டத்தை தொடங்கிய இடத்திலேயே முடிப்பது தான் வெற்றியாக நிர்ணயிக்கப்படுகிறது. இதில் வெற்றியின் ஆரம்பமும், முடிவும் ஒரே இடத்தில் அமைந்துவிட்டது. இந்த மூன்று வகைகளில் எந்த இடத்தில் வெற்றி என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

    முதலுக்கும், முடிவுக்கும் “இடைப்பட்ட” கால அளவு, முயற்சி, சூழ்நிலைகளில் தான் என்பது புலனாகிறது இதேபோல்தான் வாழ்க்கையிலும், பிறப்பு ஒரு வெற்றி, இறப்பு ஒரு வெற்றி. வாழ்க்கைப்பயணத்தில் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில்தான் நம் இறந்த கால காயங்கள், நிகழ்கால நிர்ணயங்கள், எதிர்கால இலக்குகள் வெற்றியை நிர்ணயிக்கிறது என்பது அறிவுப்பூர்வமான உண்மை. அப்போதுதான் பிறப்பு என்கின்றவெற்றிச் சம்பவம், இறப்பு என்னும் வெற்றிச்சரித்திரமாக மாறமுடியும்.

    யார் ஒருவருக்கு ‘வெற்றியே இல்லை, தோல்வி மேல் தோல்வி’ என்றநிலை இருக்கின்றதோ, அவர்கள் நிலைத்த வெற்றிக்காக முயற்சிக்கவே, இல்லை என்று அர்த்தம். அதுதான் உண்மையும் கூட.

    நிலைத்த வெற்றிக்கு மிகவும் முக்கியமான, தேவையான மந்திரம் எது தெரியுமா? அந்த இடைப்பட்ட காலத்தில், செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய காலத்தே செய், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுதான்! இதற்கு உதாரணமாக,

    ஒரு பெரிய ‘இரும்பு’ தயாரிப்பு கம்பெனி முதலாளி, தற்செயலாக தன் பள்ளி பால்ய நண்பரை  “கலாசு” தொழிலாளியாக சந்தித்தார். அன்பு மேலிட முதலாளி, அந்த தொழிலாளி நண்பரின் கைகளைப் பிடித்து சந்தோஷமாக, ‘எப்படி இருக்கிறாய்? என்று விசாரிக்க, அந்த கலாசு தொழிலாளி நண்பர், ‘நான் ஒரு பாடத்ததைக் கற்றுக் கொண்டு விட்டேன். அதாவது, நான் எதையும் செய்ய வேண்டிய காலத்தில், செய்ய வேண்டியதை செய்யாததால், அதற்குண்டான தண்டனையைப் பெற்று வருகிறேன்; என்று கூறி காய்ப்புக் காய்த்த தன் கரத்தால், முதலாளி நண்பரின் மென்மையான கரத்தை தடவிக்கொடுத்தார்.

    நம்மில் எத்தனை பேர், இவர்களைப் போல இடைப்பட்ட காலத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்? வெற்றியும் தோல்வியும் சந்தித்துக் கொள்வது போல, எத்தனை பேர்களை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    வாழ்வில், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமே என்னவென்றால், ஒரு சில நிமிட சந்தர்ப்பங்களில் வெற்றியை இழந்தாலும், அதன் பாதிப்பை பல மணி நேரம் மட்டுமல்ல, பல நாட்கள், மாதங்களில் கூட சரி செய்யாமல்  இருப்பதுதான். வாழ்க்கை வெற்றிக்குத் தடையாகவும், தோல்விக்குக் காரணமாகவும் இருக்கிறது. இதனால்தான், மனிதனின் குணம், தொழில், உறவுமுறைகள், ஆரோக்கியங்கள் எல்லாம் சீரழிகின்றன.

    சரி செய்ய முடியாமைக்குக் காரணம்… நம் மனது சிறு தோல்வியை பெரிதாகக் காட்டி, அடுத்து வெற்றி ஒன்று இருப்பதை மறக்கவும், மறைக்கவும் செய்வதும், அல்லாது வெற்றியை சிறிதாக, அலட்சியமாக காட்டி தள்ளி விடுவதும்தான். இதனால், மனதிற்குள் தோல்வியானது, வெற்றியை ஜெயித்து, வெற்றி பெறுகிறது. மேலும், ஒரு செயலில் வெற்றி பெற்றதும், தோல்வியைப் பற்றி சிந்திக்காத மனம், தோல்வி ஏற்பட்டதும், வெற்றியைச் சிந்திக்காமல், தோல்வியையே நினைத்து விடுகிறது. முடிவில் மறைமுகமாக தோல்வி மனப்பான்மைக்கு நாமே ஊக்கமும், வலுவும் கொடுத்து நமக்குள் உள்ள வெற்றி உணர்வை, தோற்கடித்து விடுகிறோம். புரிந்து கொள்ளுங்கள்.

    நம் உள் மனதில் எதை, எப்படி விதைக்கின்றோமோ, அதுதான் வெளியே முளைக்கும் வெற்றிப்பெறாவிட்டால், வெளியே வெற்றி தோற்றுவிடும். முடிவில் வெற்றி வெறியாக மாறிவிடும். வெற்றிக்காக குணம், கொள்கை, கட்டுப்பாடுகளை மீறி செயல்பட வேண்டியிருக்கும். இப்போதுள்ள காலகட்டத்தில், வெற்றி பெறத் துடிக்கும் மனிதர்களின் மனநிலைப்பாடு இதுதான். இதனால், நிலைத்த வெற்றிக்கு இடமில்லை.

    இதைத் தவிர்க்கும் வழிகள் நமக்குள்தான் என்றபேருண்மையை உணர வேண்டும். தோல்வியை வெற்றியாக மாற்றும் சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும். வெற்றி, தோல்வியைப் பற்றி நம் கண்ணோட்டமும், மனஓட்டமும் மாறவேண்டும். அதாவது,

    முதல் தோல்வியிலேயே வெற்றி பெறாததற்கு என்ன காரணம்? என்பதை அறியாமல் அல்லாடிக் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம். ஒரு காரியத்திற்கு பல காரணங்கள் இருக்கும். உதாரணமாக,

    நடக்கும் போது, கால் தடுக்கி கீழே விழுகிறோம். இங்கே விழுந்ததற்கான காரணத்தை ஆராய்ந்தால்… விழுந்ததற்குக் காரணம், கல்லா? கவனச் சிதறல்களா? இதேபோல்,

    காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றான். இதற்குக் காரணம் எது? முன் விரோத எண்ணமா? தூண்டுதலா? துப்பாக்கியைக் கொடுத்தவனா? இல்லை துப்பாக்கி தயாரித்தவனா? துப்பாக்கியா, தோட்டாவா? அல்லது காந்தியின் மரண விதியா? இதில் எதைக் காரணமாக சொல்ல முடியும்? இந்த காரணங்களில் ஒன்று இல்லாமல் போயிருந்தாலும் மரணம் நிகழ்ந்திருக்காதே. ஆக, வெற்றிக்கும், தோல்விக்கும் காரணங்களை ஆராய்ந்து, கவனம் செலுத்தினால் தொடர் தோல்வியும் தொடராது. தொடர் வெற்றியும் தடையாகாது. இதுதான் காரணங்கள் மூலம் கற்றுக் கொள்ளும் பயிற்சி. இதுதான் நிலைத்த வெற்றிக்கான முயற்சி. இதைத்தான்,  தோல்வியே வெற்றியின் சூட்சுமம் என்கிறோம். அடுத்து வெற்றி தோல்வி குறித்த நம் கண்ணோட்டம் மாறவேண்டும் என்றவகையில் ஆராய்ந்தால்…

    பார்க்கும் கண்ணோட்டத்திலும் மூன்று வகைகள் உண்டு. 1) தோல்வியோ, ஏமாற்றமோ எல்லாம் சகஜம் என்றசமாதான மனப்பக்குவம். 2) இதுவும் ஒரு நன்மைக்குத்தான் என்று ஏற்றுக் கொள்வது. 3) வெற்றிக்கான முயற்சி, பயிற்சி, தன்னம்பிக்கை போதாது என்பதையும், காரணத்தையும் அறிந்து கற்றுக் கொள்ளவில்லை என்றும் உணர்வது.

    இந்த வகையில்… தோல்வியில் அடங்கியுள்ள வெற்றியைப் பார்க்கத் தெரியாமல், தோல்வியையே முடிவாக நினைத்து, வாழ்க்கையை முடிவுக் கட்டி கொண்டு கடந்த காலத்திலேயே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள், மற்றும் தன்னையே ஏமாற்றிக் கொண்டு வாழாமல், செத்துப் பிழைக்கும் நிலையில் இருப்பவர்களின் கண்ணோட்டம் மாறவேண்டும்.

    இதற்கு, உதாரணமாக ஒரு உண்மைச் சம்பவம்… ஒரு இளைஞன், தான் படிக்க ஆசைப்பட்ட பட்டப்படிப்பை, குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிக்க முடியாமல் போனதற்காக கவலைப்பட்டதோடு, குடும்பத்தார் மீதும், தன் பிறப்பின் மீதும் வெறுப்புற்று நொந்து கொண்டான். தந்தையின் சுய தொழில் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்தபோது, வேண்டா வெறுப்பாக, தன்னைக் கஷ்டப்பட்டு, மாற்றிக் கொண்டு வேலை செய்தான். ஆனால், தினமும், தான் தோற்றுவிட்டதாகவே நினைத்து வேதனைப்பட்டான்.

    இந்த நிலையில், தன்னுடன் படித்த நண்பனைச் சந்தித்த போது அவன் பட்டப் படிப்பை முடித்தும்,கூட நல்ல வேலையின்றி, நிம்மதியின்றி, சொந்தத் தொழிலும் இன்றி கஷ்டப்படுவதை சொல்லக் கேட்டதும், தன் நிலையை நினைத்து, நிம்மதியும், சமாதானமும் அடைந்தான். மனம் மாறி, சந்தோஷமாக தொழிலில் ஈடுபட்டான். மன ஓட்டத்தையும், கண்ணோட்டத்தையும் மாற்றிக்கொண்ட பின், பெரும் மாற்றத்தைத் சந்தித்தான்.

    இந்நிலையில், மீண்டும் ஒரு சோதனையாக, இளைஞரின் திருமண சமயத்தில் அவன் விரும்பிய பெண், அரசு வேலை இல்லை என்றகாரணத்திற்காக அவனை தவிர்ததாள். ஆனால், இந்த தோல்வி, ஏமாற்றம், இந்த முறை அந்த இளைஞனை சிறிதும் பாதிக்கவில்லை. காரணம், முன்பு தொழில் செய்த விஷயத்தில் வந்த தோல்வி கண்ணோட்டம் மாறியதும், சந்தோஷம் வந்ததை நினைவு கூர்ந்தான். இப்போதும், அதே கண்ணோட்டத்தில் மாற்றி யோசித்தான், தான் விரும்பும் பெண் தனக்குக் கிடைக்காவிட்டாலும், தன்னை விரும்பும் பெண்ணை மணக்கும் மனப்பக்குவத்தை பெற்றதால், இன்று இல்லறவாழ்க்கையிலும், தொழிலிலும் நிலைத்த வெற்றி கண்டுள்ளான்.

    ஆகவே, தோல்வியைச் சந்திக்கும் போது, சில சமயம் நம் தைரியத்தை இழக்க நேரலாம். ஆனால், அதை இடைப்பட்ட காலச் சூழ்நிலைகளில் மாற்றி யோசித்தால், சாதாரணமான சோதனைகளை, அசாதாரண சாதனைகளாக மாற்றலாம். வாழ்க்கையில், நிலைத்த வெற்றி பெற, இடைப்பட்ட காலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறைஎன்றஇலட்சியத்தோடு அடைக்கப்பட்ட கதவுகளை தடைபட்டதாக நினைத்து, நடை திறக்கும் வரை, அடைபட்டுக் கிடப்பதை விட, முட்டிக் கொண்டு முயன்றால், வெற்றி வாசல் திறக்கும். துணிந்து, சோதனை (தோல்வி) களை, சோதனை (ஆய்வு) செய்து என்றும் நிலையான வெற்றியை, நிலையாக்குவோம்…

    பூமிப்பந்து பூத்துக் குலுங்கட்டும்…

    “வானத்தில் ஏணி போட்டு ஏறி, நிறைய புதிர்களை விடுவிக்க விரும்புகிறேன். யாஸ்மின்” என்று பாரசீகக் கவிஞன் உமர்கயாம் சொன்ன போது ( பாரசீக நாடு  இன்றைய ஈரான்) அவனுக்கு வயது 16. அவனுடைய தோழி யாஸ்மின் அவன் கனவுகளை காதலுடன் ரசித்தாள். “ஆனால், நீ பேசுவதே கவிதை போல் அழகாக இருக்கிறதே பேசாமல் நீ ஏன் கவிஞனாகக் கூடாது…?” என்று கேட்டாள்.

    “கவிதைகளை விட எனக்கு காகிதத்திலும், வான ஆராய்ச்சியிலும் தான் விருப்பம் அதிமாக இருக்கிறது. இப்போதைய வான சாஸ்திரப்புத்தகங்கள் எல்லாம் தப்பும், தவறுமாகவே இருக்கின்றன. எல்லாவற்றையும் மாற்றவேண்டும் என்று பார்க்கிறேன். என்னால் முடியுமா யாஸ்மின்…?” என்றான் உமர்கயாம்.

    “அல்லா மீது ஆணையாகச் சொல்கிறேன் என் மீது காதலுடன் கவிதை எழுதுவதுபோல் எதையுமே நீ காதலுடன் செய். வெற்றி நிச்சயம்…!” என்று உமரின் கைகளைப் பிடித்து ஊக்கம் தந்தாள் யாஸ்மின். இந்த மந்திரச் சொல்தான், கவிதைகள் எழுத மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் உமர்கயாம் சாதனைகள் செய்யவும் காரணமாக இருந்தது.

    இதுபோன்றயாஸ்மின்கள் இன்றளவும், இருப்பதால்தான் பூமி பூத்துக்குலுங்குகிறது. பெரியவர் ஒருவருக்கு இரு மகன்கள். உழைப்பை உச்சந்தலையில் வைத்து சம்பாதித்ததை, பையன்கள் பாசக்கயிறு வீசி சொத்தை பங்கு வைக்கப்பார்த்தார்கள்.  சொத்துக்கு சொந்தம் கொண்டாடும் மகன்களைப் பார்த்த தந்தை,  இன்று இரவுக்குள் இந்த அறையை எதைக் கொண்டாவது நிரப்ப வேண்டும்  இதுதான் போட்டி. இதில் வெற்றி பெறுபவனுக்கே சொத்து, என்றார்.

    “என் மீது காதலுடன் கவிதை எழுதுவதுபோல்

    எதையுமே நீ காதலுடன் செய். வெற்றி நிச்சயம்!

    என்று உமரின் கைகளைப் பிடித்து ஊக்கம் தந்தாள்

    யாஸ்மின். இந்த மந்திரச் சொல்தான், கவிதைகள்

    எழுத மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் உமர்கயாம்

    சாதனைகள் செய்யவும் காரணமாக இருந்தது”.

    பெரியவன் வைக்கோலை வைத்து நிரப்பினான். மூத்த மகனின் அறையை பார்த்து தந்தை மௌனத்தை தன் மன அறையில் மாட்டியவாறேசென்றார்.

    இளைய மகன் இருக்கும் அறையை நோக்கிச் சென்றபோது, இளையவன் அறையில், இருள் மட்டும் இவரை எதிர் கொண்டது. இளையவன் கையில் மெழுகுவர்த்தியுடன் வந்தான். இருள் விலகியது.

    அறைமுழுவதும் வெளிச்சம் பரவியது. இளையவனை இருகரம் கொண்டு உச்சி முகர்ந்து அணைத்துக்கொண்டார் தந்தை. காரணம்…? சிந்தனை தான் வெற்றிக்கான கதவைத்திறக்கும். இளையவன் திறந்த வெற்றிக்கதவு வழியே தந்தை தன் பாதப்பதிவுகளை பக்குவமாய் எடுத்து வைத்தார்.

    மரணத்துக்குப் பின் என்ன நிகழும்…? என்று எண்ணியவாறு, மூடத்தனம் என்றுணர்ந்து வாழ். நாளை பற்றி நாளைக்கு கவலைப்படலாம் என்கிறது ஜென் தத்துவம். அவசியப்பட்டால், என் புத்திக்குள் வந்து யோசித்துச் சென்றது.

    ஒருமுறை சுஜாதாவிடம், பூக்கள் பல நிறங்களில் இருக்க காரணம் என்ன…?  என்று கேட்டபோது மலர்கள் பல நிறங்களோடும் மட்டுமா… பலவித வாசனைகளோடும் மலர்வது, வண்ணத்துப்பூச்சிகளையும், தேனீக்களையும்  வரவேற்கத்தான். வா, எனக்குள் தேன் இருக்கிறது…! வந்து உட்கார்ந்து அருந்தி, அப்படியே உன் குச்சிக்கால்களில் கொஞ்சம் மகரந்தத்தை ஒட்டிக்கொள். அடுத்த பூவுக்குச் செல்லும்போது, என் கேள் ஃபிரண்டுக்கு மகரந்தத்தைக் கொடு. அவள், பூப்பாள், காயாவாள், கனியாவாள், என்று சொல்லாமல் சொல்கின்றன அந்த வண்ண மலர்கள்.

    இந்த இதழை மேலும்

    உணவு முறைகள்

    1. குழந்தையின் ஆரோக்கியம், வயது மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப சத்துணவின் தேவைகள் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பரிந்துரையின்படி) செரிக்கும் தன்மை மற்றும் எல்லோராலும் ஏற்கத்தக்க விலை முதலியவற்றைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
    2. அனைத்து வகை தயாரிப்புக்கும் நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரையே உபயோகப்படுத்த வேண்டும்.
    3. கொடுக்கும் பாலானது சுத்தமான கறந்த மாட்டுப்பாலாகவோ (அ) கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாஸ்ட்டிரைசுடு பாலாகவோ இருக்க வேண்டும்.
    4. நெய், எண்ணெய் முதலியவை சுத்தமானதாக, கெட்ட வாசனையற்றதாக இருக்க வேண்டும்.
    5. தயாரிக்கும் உணவுச் சாதனங்களும், பண்டங்களும் மற்றும் முறைகளும் மிகவும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும்.
    6. இதன் மூலம் தொற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

    1. ஜவ்வரிசி கஞ்சி

    ஜவ்வரிசி- 25 கிராம்

    பொட்டுக்கடலை- 25 கிராம்

    கரும்புச் சர்க்கரை- 25 கிராம்

    தண்ணீர்-2 கப்

    நெய்- 2.5 மி.லி.

    செய்முறை

    1. ஜவ்வரிசியை வறுத்துக் கொள்ள வேண்டும்.
    2. பொட்டுக்கடலையைப் பவுடர் செய்து கொள்ளவேண்டும்.
    3. வறுத்த ஜவ்வரிசியை 1ணீ கப் தண்ணீருடன் சேர்த்து சமைக்க வேண்டும்.
    4. பின்பு பவுடர் செய்த பொட்டுக்கடலை மாவை எடுத்துக்கொண்டு அத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்யவேண்டும். இதனை சமைத்த ஜவ்வரிசியில் நன்றாகக் கலக்கி கொண்டே சேர்க்க வேண்டும். இத்துடன் கரும்புச் சர்க்கரையை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

    குறிப்பு: இதில் தேவையான அளவு கலோரிகள், புரதம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது.

    சத்து விபரம் :  

    சக்தி- 298 கி. கலோரி

    புரதம்- 5.8 கிராம்

    இரும்புச்சத்து- 3.34 மி.கி.

    2. ராகி கஞ்சி

    முளை கட்டிய ராகி மாவு- 50 கிராம்

    பொட்டுக்கடலை மாவு- 4 டீஸ்பூன்

    வறுத்த கடலை மாவு

    (நிலக்கடலை)- 2 டீஸ்பூன்

    கரும்புச்சர்க்கரை- 20 கிராம்

    நெய்- 2.5 மி.லி.

    செய்முறை

    ராகி மாவு, பொட்டுக்கடலை மாவு, வறுத்த கடலை மாவு, ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து மாவு போல கரைத்து வேக வைக்க வேண்டும். பின்பு இதனுடன் கரும்பு சர்க்கரை (நீரில் கரைத்து வடிகட்டியது), நெய் சேர்க்க வேண்டும். இதை 5-10 நிமிடங்கள் தீயில் சமைக்க வேண்டும்.

    குறிப்பு: இதில் தேவையான அளவு புரதம், கலோரி, இரும்புச்சத்து முதலியன உள்ளன.

    சத்து விபரம் :  

    சக்தி- 443.5 கி. கலோரி

    புரதம்- 13.3 கிராம்

    இரும்புச்சத்து- 3.0 மி.கி

    3. கோதுமை மாவு கஞ்சி

    முளை கட்டிய

    கோதுமை மாவு- 50 கிராம்

    கரும்புச்சர்க்கரை- 15 கிராம்

    பால்- 50 மில்லி

    தண்ணீர்- 200 மி.லி.

    நெய்- 2.5 மி.லி.

    செய்முறை

    முளைகட்டிய கோதுமை மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் தண்ணீர் சேர்த்து கலந்த பின் மிருதுவாக ஆகும் வரையில் சமைக்க வேண்டும். அத்துடன் கரும்பு சர்க்கரை மற்றும் பால் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

    குறிப்பு: இதில் தேவையான அளவு புரதம், கலோரிகள் ஆகியவை உள்ளன.

    சத்து விபரம் :  

    சக்தி- 308.47 கி. கலோரி

    புரதம்- 8.36 கிராம்

    இரும்புச்சத்து- 3.69 மி.கி.

    இந்த இதழை மேலும்

    வாழ நினைத்தால் வாழலாம்

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே!… இந்த வருடம் முதல் உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் உயரட்டும், வளரட்டும்.  என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.

    நம்பிக்கைகள் பல விதம் மத நம்பிக்கை, மூடநம்பிக்கை, முழு நம்பிக்கை இப்படி, எந்த நம்பிக்கை நம் வாழ்வை முன்னோக்கிச் செலுத்தும் என்ற தெளிவு ஒவ்வொருவருக்கும் தேவை.

    மத நம்பிக்கை தனி மனிதனைச் சார்ந்தது.

    மூடநம்பிக்கை என்பது, நமது மூளைச் செல்களில் இந்தச் சமுதாயம், பல காலங்களாக பதிய வைத்த விஷயங்களாகும்.அவை நம் வாழ்வை முன்னோக்கிச் செலுத்தும் என்று மொழிதல் சற்று சிரமம்தான்.

    முழு நம்பிக்கை என்பது, நாம் பார்க்கும், கேட்கும் விஷயங்களை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தாகும்.

    “முழு நம்பிக்கையோடு முயன்றால், முடியாததது ஒன்றும் இல்லை” என்ற அசரீரி வார்த்தைகள் நம் காதுகளில் அடிக்கடி கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.

    சில சரித்திர ஆதாரங்களும், சமூக சாதனைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. ஒரு ஆற்றங்கரையின் மீது கூடுகட்டி குடியிருந்தது ஒரு குருவிக்குடும்பம், ஒரு நாள் காற்றின் கொந்தளிப்பில் அதன் கூடு மரத்திலிருந்து ஆற்றில்  விழுந்து, இரண்டு பாறைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டது.

    கூட்டில் இருந்த தன் குஞ்சுகளின் மீது தாளாத பாசம் கொண்ட தாய்க் குருவி ,தன் துணையிடம் எப்படியாவது நம் குஞ்சுகளை இந்த ஆற்றின் வெள்ளப்போக்கில் இருந்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றவேண்டும், என்று கவலையோடு முறையிட்டது.

    தந்தைக்குருவியும், தாய்க்குருவியும் பலவாறு யோசித்தன இறுதியில், இந்த ஆறு வற்றிவிட்டால் அல்லது இந்த ஆற்று நீரை நாம் வடித்துவிட்டால், நம் குழந்தைகளைக் காப்பாற்றமுடியும் என்று முடிவு செய்தன. அதன்படி, இரண்டு குருவிகளும் தனது சின்ன வாயால் நீரை உறிஞ்சி சற்று தொலைவில் கொண்டு போய்க் கொட்டத் துவங்கின.

    வெகுநேரம் இது தொடர்ந்தது. ஆனால் ஆற்று நீரும் குறையவில்லை. குருவிகளின் நம்பிக்கையும் தளரவில்லை.

    அப்போது அந்த வழியே வந்த ஞானி ஒருவர் என்ன செய்கின்றீர்கள்? என்று குருவிகளிடம் கேட்க, குருவிகள் இரண்டும் தங்களது திட்டத்தினைக் கூறி எங்கள் எண்ணத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டு, முயற்சித்திருக்கிறோம், என்று வெள்ளந்தியாக வெளிப்படுத்தியன.

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில்…37

    நாடு வெற்றி பெற…

    இளம் வயதில் படித்த பாடங்களும், கதைகளும் இன்றைய நடைமுறைகளையும், வாழ்க்கை யதார்த்தததையும் உணர்த்துகிறது என்பதைப் புரிந்து கொண்டு, படிக்கும் காலத்தில் நன்றாகப் படித்தால் வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்கலாம்.

    பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வு எழுதி, அதனால் கிடைக்கும் மதிப்பெண்கள் மகிழ்வைத் தரலாம். ஆனால், படிக்கும் பாடங்களில் இடம்பெறும் கவிதைகள், உரைநடைகள், கதைகள், வரலாற்று நிகழ்வுகள், அறிவியல் அற்புதங்கள் போன்றவைகளெல்லாம் “வாழ்கையின் பிரதிலிப்பு” என உணர்ந்தவர்களால் மட்டுமே, அந்தப் பாடங்கள் தரும் நல்ல அனுபவங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடியும்.

    சின்னஞ்சிறு வயதில் படித்த கதைகள் கூட நம் வாழ்க்கையை மட்டுமல்ல, நாட்டின் நிலைமையைக் கூட அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைகின்றன என்பதை அறியும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

    இது  நாம் சிறுவயதில் பள்ளியில் படித்த கதை தான்.

    மன்னர் அக்பர் ஒருமுறைநீண்டநாள் போரில் ஈடுபட்டார். அதனால், மிக அதிக அளவில் சேதமும், செலவும் ஏற்பட்டது. எப்போதும் பொருட்கள் குவிந்து கிடக்கும் அவரது கஜானா காலியாகும் நிலைக்கு வந்துவிட்டது. இந்நிலையில், மன்னர் அக்பர் அவரது ஆலோசகரான பீர்பாலை அழைத்தார்.

    இந்த நீண்டநாள் போரினால் நமது கஜானாவில் பொருட்கள் காலியாகும் நிலைக்கு வந்துவிட்டது. கஜானாவை மீண்டும் நிரப்ப நாம் என்ன செய்யலாம்? என்று பீர்பாலிடம் ஆலோசனை கேட்டார்.

    “மிகப்பெரிய வணிகரான தானாசேத் என்பவரிடம் மட்டுமே, நமது கஜானாவை நிரப்பும் அளவுக்கு நிறைய பணம் இருக்கிறது. நாம் அவரை சந்திக்கலாம் மன்னா!” என்றார் பீர்பால்.

    மன்னர் அக்பர் ஆச்சரியப்பட்டார்.

    ஒரு சாதாரண வணிகருக்கு இவ்வளவு அதிக பணம் எங்கிருந்து வருகிறது? அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

    தானாசேத்தின் வணிக நிறுவனத்திற்கு இருவரும் நேரடியாகச் சென்றார்கள். தானா சேத்திடம் நிலைமையைச் சொன்னார்கள். தானாசேத் மிகவும் பெருந்தன்மையாக “மன்னா! உங்களுக்கு வேண்டிய பணம் அனைத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்”- என்று மிகவும் சர்வ சாதாரணமாகச் சொன்னார்.

    இந்த இதழை மேலும்