எண்ணத்துப்பூச்சி…
பட்டாம் பூச்சியை வண்ணத்துப்பூச்சி என்று சொல்வார்கள். ஆர்த்ரோபோடா என்று ஆர்ப்பரிக்கும் அறிவியல் எண்ணம் மரியாதைக் குறைவாக கருதப்பட்டுவிடக்கூடாது. போடாவில் விலங்கினப் பெயர் முடிகிறது என்பது எவ்வளவு பேருக்கு இயற்கையாக தெரியும்…? என மனது உடனே எண்ணிக்கொள்கிறது. பட்டாம்பூச்சி விற்பவன் இறைவனடி சேர்ந்த செய்தி நெஞ்சில் நின்றஇராகங்கள் மீது ஒரு சோக சாய எண்ணத்தைப் பூசியது.
எண்ணங்களும் பல வண்ணங்களில் படபடவென சிறகடித்து அங்குமிங்கும் பறந்து கொண்டே இருப்பதனால் எண்டமாலாஜியில் சேர்ப்பது போல எண்ணத்துப்பூச்சி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை (பூச்சி எண்டமாலாஜி எனப்படுகிறது). ஆனந்த யாழை மீட்டுகிறாய்…. என்று பாட்டிசைத்த நா. முத்துக்குமார் முதன் முதலாக “பட்டாம்பூச்சி விற்பவன்” என்கிறதலைப்பில் கவிதை எழுதினார் என்று செய்திகளில் படித்தோம்.
எழுத்தாளர் நாகூர் ரூமி அவர்கள் தமது புத்தகங்களின் அடிப்படை கருத்தாக தெரிவிக்கையில் மனிதர்கள் மூன்று வகையான உணர்வால் வாழ்வதாக தெரிவித்து இருப்பார். ( புத்தகம் அடுத்த விநாடி, இந்த விநாடி) அவை உணவு, மூச்சு மற்றும் கற்பனை ஆகும். அதில் கற்பனை என்பதே எண்ணங்கள் ஆகும். தொடர்ச்சியான நேர்மறைஎண்ணங்கள் சிறகடிப்பதால்தான், எந்த ஒரு செயலையும் உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு செய்பவரால் செய்ய முடிகின்றது. அதிசயமான காட்சிகள் ஒரு நிமிடம் எண்ணத்தை, எண்ண ஓட்டத்தை “டக்கென” நிறுத்தி வேறு திசையில் பயணம் செய்ய வைத்துவிடுகின்றன.
அத்தகைய ஒரு அதிசயம்தான் ஒரே வயிற்றில் பிறந்த ஒரே மாதிரியான நான்கு குழந்தைகளை நன்கு வளர்த்து, நாடகமாடி ஒன்றாக நடனமாடும்பொழுது காண நேர்ந்தது. அவர்கள் பெயர் அதிதி, அக்ரிதி, ஆப்தி, ஆக்ஷிதி.நடன நாடகம் நடந்தது. சர்ச் பார்க் கான்வென்டில், அது நாட்டுப்பற்றை அற்புதமாக விளக்கம் அளிக்கும் வண்ணம் அமைந்த நிகழ்ச்சி. புகழ்பெற்ற ஆங்கிலப்பள்ளிக்குள் அழகான தமிழ்வழிப் பள்ளியும், நாகே நாகெல் என்று சர்ச் பார்க் கான்வென்டை 1860ல் நிறுவிய நிறுவனர் பெயரில் அமைந்த படிப்பை நடுவில் கைவிடப்பட்டவர்களுக்காக அவர்கள் மீண்டும் படிக்கும் வண்ணம் அமைந்த சமுதாய கல்லூரியும் அமைந்திருப்பது ஆச்சரியம் தந்த நிகழ்வு ஆகும். நுனிநாக்கு ஆங்கிலம் பேசுகின்ற ஆசிரியர்கள் நிறைந்த இப்பள்ளியில் சுதந்திர கொடி ஏற்றியவுடன் தாயின் மணிக்கொடி பாரீர்…. அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்…. என்று மகாகவியின் மதுரத் தமிழிலே முழங்கிய மாணவிகள் முழு ஆச்சரியம் அளித்தனர்.
அறுநூறுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் அணிவகுத்து அமைதியாக அமர்ந்திருந்த பிரமாண்டமான உள் விழா அரங்கில் மிகச்சிறந்த ஒலி ஒளி அமைப்பில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. சில விழாக்களில் பல நேரங்களில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பேசி முடித்த பின்னர் கண்கவர் அலங்காரத்துடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கும். அங்கே இனிப்பை பெற்றஇளநெஞ்சங்களின் எண்ணங்கள் ஏற்கனவே தாங்கள் ஒத்திகையின் பொழுது ஓரக்கண்ணால் கேள்விப்பட்டிருந்த பாடல் ஆடல்களைச் சுற்றியே பறந்து கொண்டிருக்கும். ஆனால், சர்ச் பார்க்கின் கவனம் நிறைந்த நூறு வருடங்களை தாண்டிய பாரம்பரியத்தின் சாயல் படிந்த விழா நேர்த்தி… வரிசைப்படுத்தி கலை நிகழ்வுகளை கலை விருந்தினர் கண்முன் நடத்தியது. சில நிகழ்ச்சிகள், அதில் திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு. ஆங்கில பாதிப்போடு உச்சரிக்கப்பட்ட வசனங்கள் ஆங்காங்கே நெருடினாலும் நாட்டுப்பற்றின் கனல் தெறிக்கும் இறுதிகட்ட காட்சிகள் உள்ளத்தை உருக்கியது. கண்களில் நீர் கட்ட வைத்தது. வாட்ச்மேன் உடையில் வந்த அந்தகால ஆங்கிலேய காவல்காரராக நடித்த சின்னப்பெண் ஏனோ?…. பயமுறுத்தவே இல்லை…. பதிலுக்கு புன்முறுவல் பூக்கவைத்தார். அவர் அடித்த போலி வலிக்காத அடிகள் போல…. எண்ணங்கள் அங்குமிங்கும் பறந்து பழைய ஞாபகங்களை கண்முன் கொண்டுவந்தன.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles