– 2016 – August | தன்னம்பிக்கை

Home » 2016 » August

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிகரமே சிம்மாசனம்…

    வானம் தொடும் வரம் பெற்றோம்….

    தலைமுறை கடந்து கிடைக்கப்பெறுவதே வரம். தவமும் வரமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் கடவுள் வரங்களை விற்பனை செய்கிறார். முயற்சியே அவற்றின் விலை என்பார் தாமஸ் ஆல்வா எடிசன்.

    நம்பிக்கையோடு வாய்ப்புகளை தேடும்போது ஜெயிக்க முடியும். இது கடைசி வாய்ப்பு. நான் ஜெயிச்சே ஆக வேண்டும் என்ற இலட்சிய வெறி வேண்டும். வாய்ப்பின் மூலமும் வரத்தை பெறலாம். செவ்வாய் கிரகம் 2025ல் செல்ல கோவை மாணவி தேர்வு என்ற செய்தியும், பேட்டிக் கொடுத்த போது அந்த மாணவிக்கு 17 வயது என்பதும் அதிசயம். அந்த மாணவியின் பெயர் ஷர்தா பிரசாத் அவர் செவ்வாய் கிரகம் செல்லும்போது 28 வயதை கடந்திருப்பார்.

    பூமியில் இருந்து செவ்வாய் கிரகம் சுமார் 5 கோடியே 46 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. பூமியில் இருப்பது பேலவே மனிதர்கள் செவ்வாய் கிரகத்திலும் இருப்பதற்குரிய சூழ்நிலை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்ற. இதுவரை யாரும், அதாவது மனிதர்கள் யாரும் அங்கு செல்லவில்லை.

    செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யவும் நம் இந்தியாதான் மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி இருக்கிறது. நெதர்லாந்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வருகின்ற 2024ம் ஆண்டு பூமியிலிருந்து மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இது ஒருவழிப்பயணம் என்பதும், அங்கு செல்பவர்கள் யாரும் திரும்ப வரமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. துணிச்சலை துணைக்கழைத்தபடி செல்லும் இவர்களை எப்படி வாழ்த்துவது…?

    இந்த நிறுவனத்தின் செவ்வாய் கிரகம் செல்ல  உலகம் முழுவதும் விண்ணப்பித்தவர்களில் 1058 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் பல கட்டத் தேர்வுகள் உண்டு. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படும். பின்னரே செவ்வாய் கிரகம் செல்ல தேதி முடிவு செய்யப்படும்.

    இதுகுறித்து ஷர்தா பிரசாத்திடம் கேட்டபோது, நமது அண்ட வெளியில் பூமியைப் போன்று பல்வேறு கிரகங்கள் உள்ளது என்பது குறித்து சிறகூயது முதலே கேள்விப்படும்போது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கும். மேலும் சூரிய கிரகணம், சந்திரக்கிரகணம் எதனால் ஏற்படுகிறது…? என்று எனது பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கேள்வி கேட்பது உண்டு. தற்போது கோவையில் இன்ஜினியரிங் சல்ல விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றேன். 3வது கட்டமாக நேர்காணல் தோவு நடைபெறும் அதன்பின்னர் ரியாலிட்டி ஷோ நடைபெறும்.

    இந்த ரியாலிட்டி ஷோ என்பது ஒரு அறைக்குள் 10 பேர்வரை தங்கியிருக்க வேண்டும். வெளியே வர முடியாது. அங்கேயே சமையல் செய்து சாப்பிட வேண்டும். அங்கேயே படுத்து தூங்கி அன்றாட பணிகளை செய்ய வேண்டும். குறிப்பிட்ட சில மாதங்கள் வரை வெளியே வர முடியாது.

    இத்தேர்விலும் வெற்றி பெற்றால்தான் இறுதியில் செவ்வாய் கிரகம் செல்வதற்கான பயிற்சியை அளிப்பார்கள். என்னைப்போன்று கேரளாவில் இருந்து லேகா மேனன், ராகேஷ் ஆகியோர் செவ்வாய் கிரகம் செல்ல தேர்ச்சி பெற்றுள்ளனர். நாங்கள் 3 பேரும் சேர்ந்துதான் பயிற்சிக்காக நாசா செல்வோம்.

    சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் செவ்வாய். இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளது போல் கிண்ணக்குழிகளையும், புவியில் உள்ளது போல் எரிமலைகள், பள்ளத்தாக்ககள், பாலைவனங்கள், பனி மூடிய துருவப்பகுதிகளையும் கொண்டதாக உள்து. செவ்வாயின் சுழற்சிக் காலமும், பருவமாற்றங்களும் பூமியைப்போன்று உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

    செவ்வாய் கிரகத்தில் தெரியும் நிலத்தோற்றங்கள் ஒருகாலத்தில் அதன் மேற்பரப்பில் நீர்ம நீர் இருந்திருக்க கூடும் என்பதைக்காட்டுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த செவ்வாய் கிரகம் செல்ல எங்களுக்கு 2025ம் ஆண்டு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2025ல் செவ்வாய் கிரகம் செல்லும்போது கிட்டத்தட்ட 28 வயது ஆகலாம், தற்போது  உள்ளது போன்று இருப்பதற்கு அந்த நிறுவனத்தின் அதற்குரிய பயிற்சியையும்- தேர்வினையும்  நடத்தி வழிகாட்டுவார்கள். கண்டிப்பாக நான்  செவ்வாய் கிரகம்  செல்வேன் என்று மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாணவிகளை நாமும் செவ்வாய்  கிரகம்  சென்று தித்திக்கும் செய்தியை தந்திடுக என்று வாழ்த்தோம். இதுதான் வரம்; அதுமட்டுமில்லை வானம்  தொடும் வரமாகவே இருக்கிறது.

    அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து  வரும் கேரளாவை பூர்விகமாக கொண்டு பிஜோ ஆபிரகாம் சாப்ட்வேர் இன்ஜினியர், மனைவி டாக்டர் தாஜி ஆபிரகாம் தம்பதியிரின் 11 வயது மகன் தானிஷ்க் ஆபிரகாம் அமெரிக்காவின் ரிவர் கல்லூரியில்  படித்து  பட்டம்  பெற்று விட்டான். கணிதம், அறிவியல், வெளிநாட்டு மொழி கல்வி என 3 இணைப்பட்டங்கள் பெற்று சத்தி உள்ளான். அந்த கல்லூரியில் மிகக்குறைந்த வயதில் தானிஷ்க் அபிரகாம் மட்டுமே டாக்டர் பட்டம் பெற்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உயர்நிலைப்பள்ளி, டிப்ளமோ பெற்று சாதனை புரிந்த அவனை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கவர்ந்ததால் அவனுக்கு நேரிடையாக கடிதம் எழுதி பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது மனதைக் கவரும் விதமாகவே இருக்கிறது. 4 வயதிலேயே  ‘மென்சா’ என்று அழைக்கப்படும் அறிவுத்திறன் சங்கத்திலும் சேர்ந்தான். தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இந்த  மழலை மேதை “கல்லூரியில் படித்து பட்டம் பெறுவது என்பது என்னைப்பொறத்தவரையில் ஒர பெரிய விஷயம் இல்லை. கல்லூரியில் சில மாணவர்கள் எனக்கு மிரட்டல் விடுத்தனர். பெரும்பாலானவர்கள் தங்கள் வகுப்பில் ஒரு சிறுவன் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நான் ஒரு டாக்டர் ஆக விரும்புகிறேன். மேலும் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் ஆக விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் ஜனாதிபதி பதவியையும் எட்டிப்படிக்க ஆசைப்படுகிறேன்” என்றும் கூறினான்.

    இவன் தங்கை தியாரா ஆபிரகாமும் ஒரு மழலைமேதை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய மாணவர்களே வானம் தொடும் வரத்தை வாங்கி வந்தவர்கள். ஆபிரகாம்லிங்கன் சிறுவயதில் படிக்க ஆசைப்படுவார்; படிப்பதில் கொள்ளைப்பிரியம் உடையவர், ஒரு புத்தகத்திற்காக பல மைல்தூரம் கடந்து சென்று இரவலாக படிக்க புத்தகம் வாங்கி வருவார். அன்றைய இரவே படித்தும் விடுவார். இந்நிலையில், ஒருநாள் இரவில் பெய்த மழையால் புத்தகம் நனைந்து கிழிந்து போனது. நொந்து போன ஆபிரகாம், புத்தக உரிமையாளரிடம் தம்முடைய நிலைமையை எடுத்துச் சொல்லி மன்னிப்புக்கோரினார். இருந்தும் புத்தக உரிமையாளர், புத்தகத்திற்கான பணத்தைக் கொடு இல்லையேல் பண்ணையில் வேலை செய் என்றாராம். இவர்தான் பிற்காலத்தில் தம் 52ம் வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களால் கொண்டாடப்பட்டார் என்பது வரலாறு. அந்த நாட்டிலிருந்து தான் மழலைமேதை ஒன்று வரம் கேட்கிறது. சாதாரண வரம் அல்ல ஜனாதிபதியாவதற்கு வரம்…!  வானம் தொடும்வரம்-! வரம் கிடைக்க வாழ்த்துவோம்…

    ஜனாதிபதி ஒபாமாவுக்கு 13வயது சிறுவன் மார்குயிஸ் ஜாக்சன் “நான் உங்களுடன் கூடைப்பந்து விளையாட ஆவல் என்னுடன், மோத நீங்கள் தயாரா…?” என்று கேட்டிருக்கிறான். ஒபாமாவும் கிகாகோ செல்லும்போது மார்குயிஸ் ஜாக்சனுடன் கூடைப்பந்து விளையாட வருவதாக கூறியிருக்கிறார். ஜனாதிபதியாக இருந்தாலும், சாதாரண குடும்பத்தில் பிறந்த மார்குயிஸ் ஜாக்சன் போன்றோர் மோத தயாரா…? ன்ற கேள்விக்கணை – வானம் தொடும் வரமாகவே வலம் வருகிறது.

    ஒருவருக்கு கண் குருடு, காது செவிடு, வாய்பேச்சும் இல்லை. 2 வயதிலிருந்தே கடும் முயற்சி. யார் அவர்…? ஹெலன் கெல்லர். 14 வயதில் பட்டப்படிப்பை முடித்தார். 88 ஆண்டுகள் உலகின் உற்சாகமான சமூக சீர்த்திருத்தவாதியாக உலாவந்தார். எவ்வளவு உடற்குறைகள் இருந்தாலும் மனதி மனத்திற்கு மட்டுமே இத்தகைய வரம் கிடைத்திருக்கிறது. ஜெர்மன், பிரெஞ்சு, லத்தீன் போன்ற மொழிகளையும் கற்றுத்தேர்ந்தார். மாணவப்பரவமாம் 19 வயதிலேயே  “என் சுய சரிதம்” எழுதிய இவரை அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கிளீவ்லண்ட் – அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து சிவப்புக்கம்பளம் விரித்து கைகொட்டி வரவேற்றது இவருக்கா அல்ல, இவரின் தன்னம்பிக்கைக்காக…

    அப்படி மாணவப்பருவத்தில் இவர்கள் பெற்ற வானம் தொடும் வரங்களை – சிகர சிம்மாசனத்தில் நிறுத்தி வைப்போம். அதன் அழகை ரசித்து வைப்போம்…

    ஜெயிக்க வேண்டும் என்றால் ரிஸ்க் எடுக்க வேண்டும்…

    Successs is all about having the courage to take risks.

    “Even if you’ re on the right track,

    You’ll get run over if you just sit there”.

    – Will Rogers

    Let us not pray to be shelterd from dangers, but to be fearless when facing them.

    – Rabindranath Tagore.

    வாழ்க்கையில் வாய்ப்புகள் ஒரு சில முறைகள் மட்டுமே கிட்டும். அந்த வாய்ப்புகளை தவற விடக்கூடாது. தவற விட்டால் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழியே கிடைக்காது என்று பெரியவர்கள் சொல்வார்கள்…

    மரத்திலே இருந்து கனிகள் தானாக கீழே விழுவதைப்போல, வாய்ப்புக்கள் நம் கையில் தானாக வந்து விழாது. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்போது பல  “ரிஸ்க்குகள்” எடுக்க வேண்டி வரும். எல்லா தொழில்களிலும் துறை சார்ந்த அனுபவம் பெற்றவர்களானாலும் சரி, புதிய தொழில் முனைவோர்களானாலும் சரி ஆபத்தான முயற்சி (Risk) இல்லாமல் தொழிலை மேம்படுத்த முடியாது.

    ரிஸ்க் எடுப்பதற்கு ஒரு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். கின்னஸ் ரெக்கார்டு செய்பவர்கள் எல்லாம் அசாத்தியமான துணிச்சலோடுதான் ஆபத்தான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள்.

    60 ஆண்டுகளுக்கு முன்பாக எவரெஸ்ட் சிகரத்தை தொடுவது என்பது ஆபத்தான முயற்சி. அப்போதே டென்சிங் நார்கே, எட்மண்ட் ஹலாரி என்ற இருவரும் ஆபத்தான முயற்சி எடுத்து வெற்றி கண்டார்கள். ரிஸ்க் எடுத்தால்தான் அவர்களுக்கு வெற்றி கிட்டியது.

    மிக உயரமான இரு கட்டிடங்களுக்கு இடையே கம்பியைக் கட்டி உயிரக்க துணிந்து கம்பி மேலே நடந்து வெற்றி காண்கிறார்கள். இந்த சாதனையும் ரிஸ்க் எடுத்ததால்தான் முடிந்தது.

    எனக்கு மிக நெருங்கிய டாக்டர் நண்பர் ஒருவர் உள்ளார். கிராமப்புரத்தில் ஒரு கிளினிக் வைத்து நடத்துகிறார். அந்த கிராமத்தைச் சுற்றிலும் யாராவது ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றவர்களை இவரிடம் கொண்டு வந்து சேர்த்தால் அவர் பிழைக்க வைத்து விடுவார். விஷம் குடித்து ஆபத்தான நிலையில் இருக்கிறவர்களை காப்பாற்றும் டாக்டர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்… ள

    ஒருநாள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது “என்னை ரகசியம் உங்களிடம் உள்ளது…? விஷம் குடித்து ஆபத்தான நிலையில் இருப்பவர்களைக் கூட நீங்கள் காப்பாற்றி விடுகிறீர்கள். மற்றவர்களையெல்லாம் வைத்தியம் செய்யவே தயங்கும்போது நீங்கள் மட்டும் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விடுகிறீர்களே…”எப்படி…? என்று கேட்டேன்.

    அவர்களை எப்படியும் காப்பாற்றி விடலாம் என்ற தைரியத்தால்தான் இந்த முயற்சியில் நான் இறங்குகிறேன். அடுத்து அவர் சொன்னது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. “பொதுவாக விஷம் குடித்தவர்களை காப்பாற்ற முயற்சிக்கும் போது அதற்கான எதிர் மருந்தை இந்த அளவுதான் கொடுக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது”.

    இந்த சமயத்தில்தான் நான் என்னுடைய சிகிச்சையில் ரிஸ்க் எடுப்பேன். விஷம் குடித்தவர் பிழைக்கப் போவது கடினம். ஆறுமுறைதான் அவருக்கு ஊசியில் மருந்து செலுத்த வேண்டும் என்றால், நான் அவருக்கு இரட்டிப்பு மடங்காக அல்லது 15 முறை ஊசியில் மருந்து செலுத்துவேன். அவர் உயிர் பிழைத்து விடுகிறார். ஒரு உயிரைக் காப்பாற்ற ரிஸ்க் எடுப்பதில் தவறில்லை என்றார்.

    ஒரு கப்பல் நிறைய சரக்குகளை ஏற்றமதி செய்வதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அந்த சரக்குகள் நிராகரிக்கப்படலாம். அதனால், மிகப்பெரிய நஷ்டம் ஏற்படலாம். ஆனாலும், பெரும்பகுதியான ஏற்றமதியாளர்கள் ஏற்றுமதி செய்வது ஆபத்தான முயற்சி எடுத்தால்தான் ஜெயிக்க முடியும்.

    கிரிக்கெட் விளையாட்டில் கடும் போட்டி, ஜெயிக்கப்பதற்கு 10 ரன்கள் தேவை. இன்னும் கடைசி இரண்டு பந்துகள்தான் உள்ளன. இந்த இரண்டு பந்துகளை அடித்து விளையாடினால்தான் ஜெயிக்க முடியும். அதற்கான கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் ரிஸ்க் எடுக்கிறார்கள் ஜெயிக்கிறார்கள்.

    கால்பந்து போட்டியில் இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன. ஒரு கோல் அடித்தால்தான் ஜெயிக்க முடியும் என்ற சூழலில் ஒரு கோலுக்காக விளையாட்டு வீரர்கள் ரிஸ்க் எடுக்கிறார்கள்.

    ஒரு பத்துமாடி கட்டிடம் அந்த உயரத்திலே பெயிண்டர்கள் வெளிப்பக்கத்தில் வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த பணிக்காக இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு ஆபத்தான முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    ஒரு பயணி அவசரமாக விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். விமான நிலையத்திற்கு குறித்த நேரத்தில் செல்வதற்காக கார் ஓட்டுநர்கள் ரிஸ்க் எடுக்கிறார்கள்.

    மாணவர்கள் கூட தேர்வு எழுதுவதற்காக தயார் செய்யும் போது குறிப்பிட்ட கேள்விகளை மட்டும் படித்து ரிஸ்க் எடுக்கிறார்கள். ஜெயிக்கிறார்கள்.

    இதுபோன்று ஆசிரியர்கள், மருத்துவர்கள், சினிமா நடிகர்கள், ஸ்டாண்டு நடிகர்கள், ஆபத்தான தொழிலை செய்கின்ற தொழிலாளிகள், தென்னை மரம் ஏறும் தொழிலாளிகள், விவசாய தொழிலாளிகள் இயந்திரத்திலே பணிபுரிபவர்கள், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய இடங்களில் பணிபுரிபவர்கள், அணுசக்தி துறையிலே பணிபுரிபவர்கள், மின்சாரத்துஐறயில் பணிபுரியும் தொழிலாளர்கள், உயரமான கட்டிடங்களின் மீது பணிபுரியும் தொழிலாளர்கள், விமானிகள், கப்பலிலே பணிபுரிபவர்கள், மீனவர்கள், படையில் பணிபுரிபவர்கள், காவல்துறையிலே பணிபுரிபவர்கள், எல்லைபுரத்தில் பணியாற்றும் இராணுவ வீரர்கள் என எல்லோரும் எல்லாத் துறைகளிலும் ரிஸ்க் எடுக்கிறார்கள்.

    போட்டிகளில் சூதாட்டங்களில், விளையாட்டுகளில், மேஜிக் செய்வதில், அரசியலில், ரிஸ்க் எடுக்க வேண்டி உள்ளது. ஆபத்தான முயற்சி எடுக்காத துறை உலகினில் எதுவுமே இல்லை. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நொடியையும் ரிஸ்க் உடன்தான் கடந்து செல்கிறோம்.

    உலகம் வேகமாக ஒடிக்கொண்டிருக்கிறது. அந்த ஓட்டத்திற்கு ஏற்ப நம் முன் செல்லாவிட்டால் நமக்கு பின்னால் வருகிறவர்கள் நம்மை பின்னுக்குத்தள்ளி விடுவார்கள்.

    வாழ்விலே முன்னேறுவதற்கு  மட்டுமல்லாமல், நம்மை நிலைநிறுத்திக் கொள்ளவும், நம் இடத்தை தக்க வைத்துக் கொள்வதிலும் ரிஸ்க் எடுப்பது முக்கிய பங்கு வகிக்கிறது.

    பலர் எடுக்க வேண்டிய நேரங்களில் ஒரு அடி முன்வைக்க முடியாமலும், ஒரு அடி பின் வைக்க முடியாமலும் அந்த நுழைவாயிலிலே தயங்கி நிற்பார்கள். இந்த தயக்கம், இந்த பயம், தோல்வியை அவர்களுக்குத் தரலாம். அந்த வினாடிகளில் தைரியமாக ரிஸ்க் எடுத்து அதைத் தொடங்க ஆரம்பித்தால் வெற்றி நிச்சயமாக கை கூடும்.

    பொதுவாக இந்த மாதிரியான ரிஸ்குகளும், மாற்றங்களும்தான் நிலையானது.

    எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பது ஒரு மிகப்பெரும் கேள்வி. இந்த ரகசியம் தெரிந்து கொண்டால் வெற்றி நிச்சம்.

    பொதுவாக ரிஸ்க் எடுக்கும்போது ஒரு பயம் வரலாம். பயம் வந்தால் தோல்வி நிச்சயம். ஒரு சிலருக்கு ரிஸ்க் எடுக்கும் போது மிகப்பெரிய துணிச்சல் இருக்கும். அப்படி எடுக்கிற முயற்சிகள் வெற்றியைத் தரும்.

    துணிச்சல் தான் ரிஸ்க் எடுக்கக் கூடிய சக்தியை தரும்.

    மிகப்பெரிய அறிவாளிகளுக்கும், போர்வீரர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் இந்த துணிச்சல்தான் வெற்றியைத் தந்திருக்கிறது.

    கிரேக்கத்தின் மிகப்பெரிய அறிஞர் சாக்ரடீஸ் அந்த கோப்பையில் விஷம் இருக்கிறது என்று தெரிந்துதான் அருந்தினார். மகாத்மா காந்தி உயிர் போகும் என்று தெரிந்துதான் உண்ணாவிரப் போராட்டங்களில் கலந்து கொண்டார். சுவாமி விவேகானந்தர் மனோதைரியத்திற்கும், வலிமைக்கும் பெயர் பெற்றவர். அமெரிக்காவிலிருந்த போது பல உலகம் வியக்கம் ஆன்மீக சொற்பொழிவை நடத்தி வந்தார். ஒவ்வொரு முறையும் அவர் எந்த ஆபத்து வந்தாலும் தைரியத்தோடு இருப்பதுதான் அழகு என்று சொல்லி வந்தார்.

    ஒரு சில இளைஞர்களுக்கு இவர் பேச்சில் நம்பிக்கை இல்லை. அதனால், எதிர்ப்பைக் காட்ட நினைக்கிறார்கள். அவர்கள் ஒன்ற சேர்ந்து ஒரு பல்கலைக்கழகத்திலே திட்டமிட்டுப் பேச அழைக்கிறார்கள். விவேகானந்தரும்அந்த நிகழச்சிக்கு ஒப்புக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் விவேகனாந்தர் பேசும் போது கடவுள் மேல் நம்பிக்கையும், பயமின்மையும், தைரியமும் இருந்ததால் எந்த ஆபத்துக்களையும் எந்த கஷ்டங்களையும் எதிர் கொள்ளம் சக்தி கிடைக்கிறது என்று சொன்னார்கள். அந்த அஜ்ங்கிலே அவர் பேசிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. துப்பாக்கி அவரை நோக்கி சுடப்படுகிறது. அந்த துப்பாக்கிக்குண்டு அவர் தலையை உரசிச் செல்கிறது. அரங்கம் முழுவதும் குழப்பம், பார்வையாளர்கள் சிதறி ஓடுகிறார்கள். சில வினாடிகளில் அரங்களம் அமளி துமளியாகிறது. ஆனால், அந்த மேடையில் சிறிதும் கவலைப்படாமல், பயமில்லாமல் அந்த இடத்தில் விவேகானந்தர் நின்று கொண்டிருக்கிறார். “மற்றவர்களெல்லாம் ஓடி ஒளியும் போது நீங்கள் எப்படி பயமில்லாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள்” கேள்வி கேட்டனர்.

    விவேகானந்தர் சொன்னார், “இந்த துப்பாக்கி குண்டு எனக்காக தயாரிக்கப்பட்டது அல்ல என்று எனக்குத் தெரியும். அதனால் அது என்னைத் தொடவில்லை. என்னைக்காயப்படுத்த வேண்டும் என்று எனக்காக அந்த துப்பாக்கி குண்டு தயாரிக்கப்பட்டிருந்தால் நூறு கவசங்களும், நூறு காவல்களும் இருந்தாலும் என்னை காப்பாற்றி இருக்க முடியாது”. மேலும், சொன்னார் “வலிமையே வாழ்க்கை”, “பலவீன் என்பது இறப்பு”. பலவீனம் ஒரு மனிதனுக்கு துன்பங்களைத் தரும். வீரத்தோடும், வலிமையோடும் இருந்தால் எதையும் எதிர் கொள்ள முடியும். துணிவேதான் துணை என்று சொன்னார்.

    மாவீரன் அலெக்ஸாண்டர் போர்களத்தில் எதிரியினுடைய எல்லையிலே இருக்கிறான். அலெக்ஸாண்டரினுடைய படையில் ஆயிரம் போர் வீரர்கள் இருந்தார்கள். ஆனால், எதிராளிகளின் போர்படையில் பத்தாயிரம் பேர் இருந்தார்கள். இரவு பாசறையில் நட்த கூட்டத்தில் இவருடைய துணைத் தளபதிகள் எதிராளிகளினுடைய பலம் பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்கள். தாக்குதலை நிறுத்தி வைக்கலாம் என்றும் யோசனை சொன்னார்கள்.

    அலெக்ஸாண்டர் அந்த தளபதிகளிடம் நாம் ஆயிரம் பேரை வைத்துக்கொண்டு பத்தாயிரம் பேரை ஜெயிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உரை நிகழ்த்துகிறார். இந்த உரைக்குப் பின்பு தளபதிகளையும், வீரர்களையும் பார்த்து நம் இறைவனுடைய துணையையும் ஆசியையும் வேண்டுவோம். என் கையில் இருக்கிற நாயணத்தை சுண்டி விடுகிறேன். தலை விழுந்தால் பேரைத் தொடங்கலாம். பூ விழுந்தால் போரை ஒத்தி வைக்கலாம் என்று சொன்னார். உடனே தன்னிடம் உள்ள நாணயத்தை சுண்டி விடுகிறான். தலை விழுகிறது. தளபதிகளும் வீரர்களும் இறைவன் அனுமதி கொடுத்து விட்டதாக மகிழ்ந்து ஆர்ப்பறிக்கிறார்கள். சொன்னபடியே போர் தொடங்குகிறது. அந்த போரிலே அலெக்ஸாண்டர் வெற்றி பெறுகிறார். அந்த போரில் ரிஸ்க் எடுத்துதான் அலெக்ஸாண்டர் வெற்றி கண்டார்.

    ஆதலில் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பல நேரங்களில் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். Janet Rand என்ற ஆங்கிலக் கவிஞர் சொல்வதைப் போல ரிஸ்க் எடுக்காத மனிதன் ஒன்றுமில்லாதவன். அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை. அவனிடம் ஒன்று கூட இல்லை. அவன் ஒன்றுமே இல்லை. அவன் ஒன்றம் இல்லாமலேயே ஆகிப்போவான். ரிஸ்க் எடுக்காதவர்கள் துன்பங்களையும், துயரங்களையும் தவிர்த்திருக்கலாம். ஆனால், அவர்களுக்கு பட்டறிவு ஏற்பட வழியில்லை, எண்ணங்கள் இல்லை, மாற்றங்கள் இல்லை, வளர்சச்ல் இல்லை, அன்பு இல்லை, வாழ்க்கையும் இல்லை. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் வாழ்வின் அடிமைகள். அவர்கள் சுதந்திரத்தை இழந்து விட்டவர்களாகிறார்கள். ரிஸ்க் எடுப்பவர்கள்தான் உண்மையிலேயே சுதந்திரமானவர்கள். வாழ்விலே மிகப்பெரிய தோல்வி என்பது ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான்..

    Will Rogers என்ற ஒரு பேரறிஞர் சொன்னார், “நீ சரியான பாதையில் போய் கொண்டிருந்தாலும் கூட போகும். வேகத்தில் நீங்கள் தயங்கி நின்றாலோ அல்லது ஓய்வெடுக்க யோசித்தாலோ பின்னால் வருகிறவர்கள் உங்களை மிதித்து விட்டு செல்வார்கள்” என்று பதிவு செய்கிறார்.  வெற்றி பெறுவதற்காக ரிஸ்க் எடுக்கும்போது வெற்றியும் கிட்டலாம். தோல்வியும் கிட்டலாம். தோல்வி கிட்டும் என்பதற்காக முயற்சியிலிருந்து பின்வாங்கக் கூடாது. வெற்றி கிட்டும் என்ற தன்னம்பிக்கையோடு முயற்சி எடுத்தால் ரிஸ்க் எடுப்பதும் ஆனந்தமே.

    நின்று கொண்டு…. சென்று கொண்டு….

    சமீபத்தில் ஒரு கூட்டத்தில் நின்று கெண்டிருப்பதை விட, சென்று கொண்டிருப்பது வளர்ச்சி, முன்னேற்றம் என்று ஒருவர் பேசினார். இதை நாம் பல சமயங்களில் அனுபவித்திருப்போம். பொதுவாக பேருந்தில் வெளியூர் செல்லும் போது, அந்த பேருந்து புறப்படும் இடமான பஸ் நிலையம் சென்று பஸ்ஸில் அமர்ந்து செல்வது சிரமமில்லாத பயணமாகும். ஆனால், வழியில் ஏறுவதற்காகக் காத்திருக்கும் போது பஸ்ஸில் அமருவதற்கு இருக்கை காலியாக இருந்தால் ஏறுவது, இல்லையென்றால் ஏறாமலிருப்பது சிலரது பழக்கம்.

    அவசரமாகச் செல்பவர்கள் நின்றுகொண்டாவது பயணிக்கலாம் என ஏறிவிடுவார்கள். இருக்கைக்காக காத்திருப்பதில் சில நாட்களில் எல்லா பஸ்களும் கூட்டமாகவே வர காத்திருந்து, காத்திருந்து கால்கள் வலித்து, ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறிவிடு என்று கெஞ்சும் போத மனம் சொல்லும்…

    “வெளியில் நின்று கொண்டிருந்த நேரத்தில் பேருந்திற்குள் நின்று கொண்டிருந்தால் போதுமிடம் போயிருக்கலாமே” என்று மற்றொரு நாள் இந்த அனுபவத்தின் அடிப்படையில் முதலில் வந்த பேருந்தில் ஏறி நின்று பயணம் செய்தால், அதற்குப்பின் வந்த பேருந்துகளில் இருக்கைகள் காலியாக இருந்ததைக் கேள்விப்படும்போது மனம் “அவசரப்பட்டு விட்டோம். 2வது பஸ்ஸை பார்த்தபின் ஏறியிருக்கலாம்” என்று சொல்லும்.

    மனம் ஒன்றுதான், செயலும், அதாவது பயணமும் ஒன்றுதான்.  ஏன், இந்த முரண்பட்ட எண்ணம்…?             உடல்நிலைதான்…     ஆரோக்கியமான உடலாக இருப்பின் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. உடல்நிலை மட்டும்தான் காரணமா என்றால் கூடவே சோம்பேறித்தனமும்தான் காரணம் என்று நம் அறிவு சொல்கிறது..   இந்த 2 மட்டும் தானா?  என சிந்தித்தால் நம் பொருளாதார நிலையும் காரணம் என்று கூறலாமே என்கிறது நம் குடும்ப உறவுகள்.

    சரி, நின்று கொண்டிருப்பதை விட, சென்று கொண்டிருப்பது வளர்ச்சிதான் என்பதை விரிவாய் பார்ப்போம்…             ஆறு ஓடும்பரை அழகு…          தேங்கிவிட்டால் துர்நாற்றம்தான் குழந்தைகள் உடலாலும், அறிவாலும் சீராக வளர்ந்தால்தான் அது இயல்பான குழந்தை. இல்லாவிட்டால் எதிலோ குறைபாடு என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

    சிறுவயதில், சிந்திக்க இயலா நிலையில் வீட்டில் பெற்றோர், பெரியோர் வழிகாட்டதல் படி கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு தேவையானதைக் கேட்பது பக்தி.

    வளர, வளர அறிவு தெளிவு பெறுவதால் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” எனப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் கூறியது போல், இறைவன் ஒவ்வொருவருக்கும் தேவையான அனைத்தையும் வழங்கிவிட்டான். இனி தருவதற்கு ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரிடமுள்ள திறமைகளை அறிந்து, உபயோகித்து தேவையானதைப் பெற வேண்டியது அவரவர் பணி என்ற தெளிவு பெற்று முன்னேற வேண்டும்.

    இறைவன் தருவான் என நின்று கொண்டிருந்தால், சிந்தித்துத் தெளிவு பெற்றவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள். இவர்கள் நின்று கொண்டே இருக்க  வேண்டியதுதான். இதற்கு “தன்னையறிய வேண்டும்” என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எப்படி அறிவது…?

    முகம் பார்க்கும் கண்ணாடியில் அவரவர் முகத்தைப் பார்க்க வேண்டும். சில சுவாசங்கள் அமைதியாக முடித்தபின், சிறு புன்னகையுடன் முகத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும். கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தை ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும். எப்படி நேசிப்பது…? நேசிப்பதாக வாய்பிட்டு, மகிழ்ச்சியோட சொல்ல வேண்டும்.  இதைத் தொடர்ந்த சில நாட்கள் சொல்லி வந்தால், தன்னிடமுள்ள திறமைகள் சூழ்நிலைக்கேற்ப வெளிப்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு அழைத்துச்செல்லும்… இது உண்மை…

    மாணவர்கள் தேர்வுக்காலங்களில் தயார் நிலையில் தேர்வெழுதச் செல்வார்கள். வினாத்தாளை வாங்கி, ஆர்வமாகத் தனக்குத் தெரிந்த விடைகளுக்கான வினாக்கள்தான்…? என்பதைப்பார்ப்பார்கள்.    தெரியும் என்று முதல் வினாவுக்கு விடை எழுத ஆரம்பிப்பார்கள். 2வரி எழுதியவுடன் அதன் தொடர்ச்சி நினைவுக்கு வராமல் சண்டித்தனம் செய்யும். சில விநாடிகளில் உடல் சூடேறி பெருமூச்சு விட்டு, படபடப்பு அதிகமாகும். இதனால் மற்ற தெளிவான பதில்களும் சட்டென நினைவுக்கு வராது. இது சிறு தொந்தரவுதான்.

    கண்களை மூடி, ஐந்து மூச்சு மெதுவாக இழுத்து விடவும். இப்போதும் நினைவுக்கு வராவிட்டால் அடுத்த கேள்விக்கான பதிலை எழுத வேண்டும்.

    முதல் கேள்விக்கான விடை தேடி எழுதாமல் நின்று கொண்டிருப்பதை விட, அடுத்தடுத்த வினாக்களுக்கு விடை எழுதிச் சென்று கொண்டிருப்பதுதான் முன்னேற்றம்.

    வெளியூர்காரனுக்க அற்றில் இறங்க பயம். உள்ளூர்காரனுக்கு இருட்டில் மரத்தைக் கண்டால் பயம் என்றொரு பழமொழி உண்டு.

    உள்ளூரிலிருப்பவர்களுக்கு ஆற்றில் எந்த இடத்தில் ஆழமாக இருக்கும். சுழல் எந்த இடத்தில் அதிகமாக இருக்கும் என்பதெல்லாம் அத்துபடி. அதனால், ஆற்றுக்குச் சென்றால் மடமடவென இறங்கி குளித்து வந்துவிடுவார்கள்.

    வெளியூரிலிருந்து வந்துள்ள ஒருவர் கால்களை மெதுவாக நீரினுள் விட்டு, ஆழம் பார்த்து, இறங்கி அதன் பின் குளித்து வருவார்.

    ஆனால், பயந்து கொண்டிருப்பவசர்கள் அற்றின் நீரோட்டத்தைப் பார்த்து ரசித்து திரும்பலாம் அல்லது சிறு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து குளிக்க வேண்டியதுதான்..

    உள்ளூரிலிருப்பவர்களுக்கு எந்த மரத்தில் பேய் இருக்கும் என்பதை சிறுவயதில் சொன்னதை நினைவில் வைத்திருப்பது இயல்பு. எதற்கு சிரமம் என இரவில் அந்தப்பக்கம் செல்ல மாட்டார்கள்.

    ஆனால், வெளியூரிலிருந்து வந்திருப்பவர்களுக்கு, எந்த மரத்தில் பேய் இருக்கிறத என்பது தெரியாது. அதனால், தைரியமாக இருட்டில் அந்த மரத்துப்பக்கம்  செல்வார்கள்.

    பேய் என்பது மன பயம்தானே…!நடந்து செல்கிறோம். ஒரு நாய் குரைத்துக்கொண்டு நம்மை நோக்கி ஓடிவருகிறது. நாம் ஓடாமல் நின்று விடுவது நல்லது. ஓடினால், அது துரத்தும். ஆபத்தான நிலை என்றால் தாக்குதலுக்கும் தயாராக வேண்டும். இயலாவிட்டால் பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடலாம்.

    புதிதாக வீடு கட்டுகிறோம். தொடர்ந்து பணிகளை முடித்து விட வேண்டும். பாதியில் நிறுத்திவிட்டால் என்ன ஆகும்…? நாம் வாழ்வதற்காகத்தான் பிறந்திருக்கிறோம் மற்றவர்களோடு ஒப்பிட்டு பற்றாக்குறைகளைப் பட்டியலிட்டு, பச்சாதாபப்படுவதை விட, இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்வாய் வாழத்திட்டமிட வேண்டும். நின்று  கொண்டிருக்கும் நேரத்தில் அணையில் தேக்கி வைத்த நீர்போல், அமைதி காத்து, செல்லும் போது முழு மூச்சுடன், திறந்தவுடன் பாய்ந்து செல்லும் தண்ணீர் போல் செயல்பட வேண்டும். இதனால் மட்டுமே மனித வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும்…

    வாழ்க வளமுடன்…!

    ஆனந்த சுதந்திரம்…

    “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்று சுதந்திரம் அடைவதற்கு 40 ஆண்டிற்கு முன்பே சுதந்திரம் அடைந்து விட்டதாகப் பாடிய தீர்க்கதரிசி மகாகவி பாரதி. “சுதந்திர தேவி…! நினைத் தொழுதிடல் மறக்கிலேனே” என்று தினமும் தொழுது, சுதந்திரம் சுதந்திரம் அடையப்போவதை முழுமையாக நம்பிய விடுதலைக்கவி.

    ஆனால், சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகளுக்குப்பிறகும் விடுதலையின் அருமை பெருமைகளை உணர்ந்திருக்கிறோமா…? என்றால் இ8ல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. மக்களிடையே குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் அருகி வரும் ஒன்று தேசப்பக்தி. குருபக்தி, தெய்வ பக்தி, தாய்தந்தை பக்தி போன்ற அனைத்திற்கும் மேலானது தேசப்பக்தி. தீபாவளி, பொங்கல் என்று பண்டிகைகளை கொண்டாடும் அளவிற்கு, பிறந்தநாள், மணநாள் என்று பல்வேறு தினங்களை கொண்டாடும் அளவுக்கு கூட சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களை கொண்டாடுவதில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.

    “போராடினார்கள், வெற்றி பெற்றார்கள், விடுதலை கிடைத்தது. பிறகு எதற்கு தேச பக்தி, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்றெல்லாம் இடைவிடாது பேச்சு…? என்று சிலர் கேட்கக் கூடும். அப்படி கேட்பது அறியாமையின் வெளிப்பாடு”.

    விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒவ்வொரு தலைமுறையிலும் புதுப்பித்தாக வேண்டும். இல்லாது போனால் ஒற்றுமை சிதறுண்டு போகும். ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும்.

    1. விடுதலைக்கல்வி

    இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞனாக விளங்கிய மகாகவி பாரதியின் கவிதைகள் காலத்தை வென்று நிற்பவை. ‘வந்தே மாதரம்’ என்னும் வீர முழக்கம் தான் வெள்ளையரை விரட்டி அடித்தது. அடிமை மோகம் விலகிட, ஆனந்த சுதந்திரம் அடைந்திட என்று தணியும் இந்த சுதந்திர தாகம்…?  என்று மடியும் எங்கள் மோகம்…? என்று கண்ணீர் விட்டவன்.

    சுதந்திர இந்தியாவில் அடிமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை ‘ஏழையென்றும், அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் – இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே’ என்று இறுமாந்து பாடினான் பாரதி.

    எதற்கெடுத்தாலும் பயந்து சாகிறவர்களைப் பார்த்து ‘அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’ என்று வேதனைப்பட்டு அத்தகைய மனிதர்களைப் பார்த்து ‘நெஞ்சம் பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்’ என்று மனம் நொந்து அச்சமில்லை அடிச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று வீர முழக்கம் செய்தவன்.

    நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ- கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி என்று இந்தச் சமுதாய மக்களில் சிலரை அடையாளம் காட்டி விழிப்புணர்வு  கொள்ளச் செய்தவன்.

    பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், அநீதிகளையும் பார்த்து மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாடினான்.

    அணுக்குப் பெண் சரிநிகர் சமானமென்பதை “எட்டுமறிவினினல் அணுக்கிங்கே பெண் இளைப்பில்லை” காணென்று கும்மியடி என்று பாடினான்.

    பாரதியின் பாடல்கள் வெறும் கற்பனையால் எழுந்தது அன்று. அவன் ஊனோடும் உயிரோடும் கலந்து உள்ளத்திலிருந்து உறித்தெறித்த சத்திய வரிகள்.

    2. அறக்கல்வி

    ஒளவை மூதாட்டி இயற்றிய ஆத்திச்சூடி, நீதி நூல்களில் முதன்மையானது, பழமையானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் எளிதில் புரிந்து கொண்டு மனதில் பதிய வைத்துக் கொள்ளக்கூடியது. அகர வரிசை முறையைப் பின்பற்றி கட்டளை வாக்கியங்களால் அமைந்தது. ஆரம்பப் பள்ளியில் படித்த ஆத்திச்சூடி அனைவருக்கும் நினைவிருக்கும்.

    அறம் செய்ய விரும்பு, அதாவது தர்மம் செய்ய விரும்பு

    ஆறாவது சினம் – கோபத்தை அடக்கு

    இயல்வது கரவேல் – இன்ற உதவிகளை செய்யாமலிக்காதே

    ஈவது விலகேல் – தானதருமங்களை விட்டுவிடாதே

    உடையது விளிம்பேல் – உன் உடமைகளைப் பற்றி யாரிடமும் சொல்லாதே.

    ஊக்கமது கைவிடேல் – தடைகளைக் கண்டு உற்சாகத்தை விட்டு விடாதே.

    உடையது விளம்பேல்  – எண்ணையும எழுத்தையும் இகழாதே

    ஏற்பது இகழ்ச்சி – யாசிப்பது இகழ்வானது

    ஐயம் இட்டு உண் – பிறர்க்கு உணவிட்டு நீ உண்

    ஒப்பறவு ஒழுகு – உலகத்தோடு ஒத்து வாழ்

    ஓதுவது ஒழியேல் – கற்பதை நிறுத்தாதே

    ஔவியம் பேசேல் – கோள் சொல்லாதே

    ஒளவையாரின் ஆத்திச்சூடியைப் போல, மகாகவி பாராதியாரும் புதிய ஆத்திச்சுசூடியை படைத்தார். இலக்கியத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்த பாரதி தமது ஆத்திச்சுசூடியிலும் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு புதிய சிந்தனைகளை புகுத்தினார்.

    அச்சம் தவீர்

    ஆண்மை தவறேல்

    ஈகை திறன்

    உடலினை உறுதி செய்

    என்று அகர வரிசையில் தொடங்கும் ஆத்திச்சூடியில்,

    கற்றது ஒழுகு

    காலம் அழியேல்

    கிளைபல தாங்கேல்

    கீழோர்க்கு அஞ்சேல் என்று சொல்லி அடுத்ததாக சொல்கிறார்

    குன்றென நிமிர்ந்து நில் என்ற மகாகவி பாரதியின் ஆத்திச்சூடி மிக உரியது. அந்த வரிக்கு பாரதியே சிறந்த எடுத்துக்காட்டு. வறுமையும், வெறுமையும் விடாது துரத்திய போதும் அஞ்சாமல், அக்கினிக் குஞ்சாய் வீறுகொண்டு எழுந்த கவிஞன் அவன்.

    பதினாறு வயதிற்குள் பாரதியைப் போல வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டவர் யாரும் இருக்க முடியாது. வறுமை எனும் உளியால் செதுக்கப்பட்ட கலைச்சிற்பம் பாரதி என்றாலும் நெருப்பாற்றில் நீந்திக்கொண்டு அவரால் அழகிய கவிதைகளை படைக்க முடிந்தது.

    3. நம்பிக்கை கவி

    முன்பெல்லாம் மார்கழி மாதத்தின் அதிகாலை பொழுதில் குடுகுடுப்பைக்காரனைப் பார்க்க முடியும், அவன் சொல்வதைக் கேட்க மடியும். அவனது உருவமும், குரலும் சற்று அச்சமூட்டுவதாக இருந்தாலும், அவன் சொல்வது பொதுவாக நம்பிக்கை ஊட்டுவதாகத்தான் இருக்கும். குடுகுடுப்பைக்காரனை நினைத்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது, ‘நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது’ என்ற அவனது ஆரம்ப வாக்கியங்கள்தான்.

    அதனால்தான் ‘செல்வம் வருகுது, படிப்பு வருகுது; பாவம் தொலையுது, தரித்திரம் போகுது’; என்று அவன் சொல்லும்போது மனதுக்கு நம்பிக்கை தருவதாக இருந்தாலும், “படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான்” என்று சொல்லும்போது தெரிந்தோ தெரியாமலோ நாம் ஏதாவது பாவம் செய்திருக்கிறோமா அல்லது செய்துவிடுவோமா என்று படிப்போரது மனம் பதைபதைக்கும்.

    எந்த ஒரு காலத்திலும் படைப்பாளன் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்தில் தனது படைப்புகளை படைத்தல் வேண்டும். விரக்தியான நிலையில் மனச்சோர்வடைந்துள்ள மக்களுகு;க நம்பிக்கை தரக்கூடிய விதத்தில் படைப்புகள் இருந்தால் மட்டுமே மக்களை வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும்.

    நல்ல கவிஞர்களுக்கான அடையாளமாக நம்பிக்கை ஊட்டுவதைத்தான் உயர்ந்ததாகக் கூறுவர். மகாகவி பாரதி அந்த வகையில் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்.

    மகாகவியை வறுமை வாட்டிய போதும் அவர்தம் பாடலில் நம்பிக்கை விதைகளைத் தூவி மக்களை எழுச்சி கொள்ள வைக்கிறார். பாராசக்தியிடம் பாரதி கேட்கின்றபோது கூட,

    “சொல்லடி சிவசக்தி எனைச்

    சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

    வல்லமை தாரோயோ இந்த

    மாநிலம் பயனுற வாழ்வதற்கே”

    என்று நம்பிக்கை தளராது பாடுகின்றார்.

    வெறுமனே நல்ல காலம் வருகுது, நல்ல காலம் வருகுது என்று சொல்வதால் நல்ல காலம் வந்துவிடாது. அவ்வாற நல்ல காலம் வருவதற்கு உழைக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் சமுதாய சீர்கேடுகளை நீக்கிப் புதியதோர் உலகம் படைத்திடப் பாடுபடுதல் வேண்டும்.

    நாம் வியர்வையை சிந்தி உழைக்க வேண்டும். அதற்காகத்தான் இயற்கை நமக்குத் தேவையானவற்றை மறைத்தே வைத்திருக்கிறது. உண்பதற்கான உணவை மண்ணுக்குள் மறைத்து கொடுத்திருக்கிறது. வசிப்பதற்கு அப்படியே வீடாகப்படைக்காமல், வீட்டைக்கட்டிக்கொள்ள கல்லையும், மண்ணையும் படைத்தியிருக்கிறது.

    உழைப்பில் ஒரு சுகம் உண்டு. ஈடுபாட்டோடு உழைத்தால் அதில் சுகம் இருக்கும். கடனே என்று உழைத்தால் சுமை மட்டும்தான் தெரியும். ஆசையோடு குழந்தையை அள்ளி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால் அதில் சுமை தெரியாது. விருப்பமில்லாமல் வேண்டா வெறுப்பாக ஒரு பொருளை தூக்கிக் கொண்டு நடந்தால் சுமை தெரியும்.

    இளைஞர்கள் பலர் தங்களால் சாதிக்க முடியுமா…? என ஐயுற்று, ஏதோ கிடைத்த பணியைச் செய்தால் போதும் என்ற நோக்கில் செயல்படுகின்றனர். ஆஞ்சினேயருக்குத்தனது பலம் தெரியாத நிலையில், அவரது பலத்தை அவருக்கு அடையாளம் காட்டியதாலேயே கடலைக்கடந்து, சீதையைக் கண்டு, இராமாயண காவியம் சுபமாக நிறைவேற அவரால் உதவ முடிந்தது. அதுபோல இளைஞர்களுக்கு அவர்களது பலத்தை நினைவூட்டி, அவர்களை தட்டி எழுப்ப வேண்டும்.

    இக்கால இளைஞர்கள் தேசத்தின் பெருமை. விடுதலையின் அருமை. வாழ்வியல் நெறிகள் போன்றவை குறித்து அறிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள உதவும் கருவூலங்கள் மகாகவி பாரதியாரின் கவிதைகள். சிறு துன்பங்களுக்கும் விதியை நொந்து கொள்கிற நமக்கு மகாகவி பாரதி பாராதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் “குன்றென நிமிர்ந்துநில்” என்பதுதான். நாம் நிமிர்ந்து நின்றால் நாடும், வீடும் தலை நிமிர்ந்து நிற்கும்.

    வெற்றிக்கு வழிபாட்டும் நூல்கள்…

    புத்தகங்களைப் போல் ஆச்சரியமானது வேறு எதுவும் இல்லை. ஞானிகளின் இதயங்களை உள்ளே இருந்து எதிரொலித்துக் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. படிப்பது போலச் செலவு குறைந்த பொழுது போக்கு வேறில்லை.

    காலம் என்னும் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் கலங்கரை விளக்கு புத்தகம். சிறுகாகிதம் நம்மிடம் பேசும். ஆறுதல் அளிக்கும். பாடத்தைக் கற்பிக்கும். இதயத்தை திறந்து காட்டும்.

    இது புத்தகத்தின் சிறப்பு இயல்பு…!

    முறையான சிந்தனையோடு படிக்கும் விஷயங்களை பரிசீலனை செய்து முக்கியமான கருத்துக்களை நினைவில் ஏற்றுக் கொண்டு படிக்க வேண்டும்.

    இவ்வாறு படித்தால்தான் அறிந்துள்ள செய்திகள் விரிவானதாகவும், துல்லியமாகவும், பயனுள்ளதாகவும் விளங்கும். ஒவ்வொரு புத்தகமாகத் தாவிக்கொண்டு இருக்கக்கூடாது.

    ஒரு நூல் முழுவதும் வேகமாப்படித்து ஒன்றும் தெரியாமல் இருப்பதை விட, ஒரு பக்கத்தையும்  நன்றாக உணர்ந்து படிப்பது மேலாகும்.

    படிப்பவைகளில் மிகவும் இன்பமாகவும், பன்பதரக் கூடியதாகவும் இருப்பவை வாழ்க்கை வரலாறுகளேயாகும். மனித சமூகத்திற்கு முதன்மையான ஆசிரியர்கள் பெரிய மனிதர்களின் வாழ்க்கைச் சரித்திரங்கள்தான்.

    “பழங்காலத்தில் பெரும் புகழ் பெற்று வாழ்ந்தவர்களின் வரலாறுகளை அறியாமல் இருப்பது, வாழ்நாள் முழுவதும் குழந்தையாக இருப்பது போலத்தான் என்கிறார் புளுடார்க்”.

    காரல் மார்க்ஸ் எழுதிய தாஸ் கேப்பிடல் என்ற அரசியல் பொருளாதார நூல்தான் பெர்னாட்ஷாவை அதிகமாகக் கவர்ந்தது.

    என் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நோக்க உதவியது இந்த நூல்தான். அவருடைய நூல்தான் என்னை மனிதனாக்கியது என்றார் பெர்னாட்ஷர். அந்த நூல்தான் அவருடைய வாழ்க்கையில் புதிய திருப்பமாக அமைந்தது.

    ரூஸோவின் நூல்கள்தான் டால்ஸ்டாயை உயர்ந்த ஞானியாக்கியது.

    டால்ஸ்டாயைத்தான் சாந்தி குருவாக ஏற்றார். இவ்விதத்தொடர்பு எவ்விதம் ஒன்றாக முடியும்…? நூல்களைப்படித்தபதன் மூலமாகத்தான்.

    நல்ல நூல்களைப்படித்து அதிலுள்ள கருத்துக்களை கோடிட்டு அதனை அடிக்கடி நினைவுக்கு கொண்டு வந்த செயலாற்றினால்தான் வெற்றி பெற முடியும்.

    ரூஸோ ஏழாம் வயதிலேயே வரலாற்று நூல்களை மிகவும் ஆர்வத்துடன் படித்தார். உணர்ச்சி ததும்பும் கட்டுரைகளை விரும்பி படித்தார்.

    புத்தகத்தைப் படித்து முடித்த பின்பு படுக்கைக்குச் செல்வார். சில சமயம் விடியற்காலையில் கோழி கூவுகின்ற வரையிலும் படிப்பார். புத்தகம் படிப்பது கவலைக்கு மருந்து என்று கண்டார்.

    எத்தகைய நூலாக இருந்தாலும் சரி அறிவுக்கு வளர்ச்சிதரும் என்று எண்ணி ஒன்றையும் விடாமல் படித்தார். வேலைக்கு சென்றாலும் நேரம் கிடைக்கும் போது என்று எப்பொழுதும் கவனத்துடன் படித்தக்கொண்டிருப்பார்.  ரூஸோ கற்றவற்றை அமைதியாக சிந்திப்பார்.

    இறைக்க இறைக்க கிணற்றில் நீர் சுரப்பது போல கற்க கற்க அறிவும் பெருக்கெடுத்து ஓடும். அறிவின் மேன்மையால் அழியாத படைப்பான சமுதாய ஒப்பந்தம் என்ற நூலை அவரால் எழுத முடிந்தது.

    ஜாமீதாரர் கொடுத்த மூன்னூறு ரூபாயில் ஒரே ஒரு புடவை மட்டுமே வாங்கிக்கொண்டு மீதிப்பணத்திற்கு எல்லாம் புத்தகங்களாக வாங்கி வந்தார்.

    செல்லம்மாள் பெட்டியை ஆவலுடன் திறந்து பார்த்து திகைத்தார். ஒரே ஒரு புடவையுடன் சிலப்பதிகாரம், திருக்குறள், திருவருட்பா, கம்பராமாயணம் என்று எண்ணெற்ற தமிழ், ஆங்கில நூல்கள் இருந்தன.

    செல்லம்மாள் வருத்தப்பட்டாலும் பாரதியாரின் படிப்பின் ஆர்வத்தை அறிந்து அமைதியாகிவிட்டார். எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ…? அந்த வீட்டில்தான் உயிர் ஒளி இருக்கும்.

    உலகில் இறவாத பொருள் புத்தகங்களே. புத்தகங்கள் இல்லாத வீடும், ஜன்னல் இல்லாத வீடும் ஒன்றுதான்.

    இங்கர்சால6;, மார்க்டுவெயின் எழுதிய ஒரு நல்ல பிள்ளையினுடைய கதை என்ற நூலைப்படித்தபிறகு சிந்தனையாளராக மாறினார்.

    நாமும் இதேபோல் நல்ல நூல்களைப்படித்து, செயல்பட்டு வெற்றியுடன் வாழ வழி அமைப்போம்……

    தனித்திரு….

    ‘தனித்திரு’ என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். தனித்திரு என்றால் தனியாக யாரோடும் இணையாது இருப்பது அல்ல தனித்திரு என்றால் தனித்துவமாக வித்தியாசமாக சிந்தித்து செயல்படுவது.

    கற்பனை திறனின் அவசியம்…

    தனித்துவமாக விளங்க கற்பனைத்திறன் அதிகம் வேண்டும். சராசரி மக்களை போன்று சிந்திக்காமல் அவர்களிடமிருந்து வேறுபட்டு முன்னேற்ற பாதையில் சிந்திப்பவர்களே வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள். ஆட்டுமந்தையைப்போல எல்லோரும் செய்வதையே செய்கிறார்கள்.

    எடிசனின் – தனித்துவம்

    ‘மின்விளக்கு’ என்பது கண்டுபிடிக்க முடியாத ஒன்று என்று பல அறிவியல் அறிஞர்கள் கூறினார்கள். ஆனால், முடியும் என்று வித்தியாசமாக சிந்தித்தார் எடிசன். அப்படி வித்தியாசமாக சிந்தித்து விடாமுயற்சி செய்தாலேயே சரித்திரத்தில் இடம் பிடித்தார்…

    முடியாது என்ற நோய் நம்மில் பல பேரிடம் இருக்கிறது.

    முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.

    – அப்துல்கலாம்

    அதிசய மனிதன் ராஜர் பேனிஸ்டர்

    ராஜர் பேனிஸ்டர் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு ஓட்டப்பந்தய வீரர் ஒரு  மைல் தூரத்தை 4 வினாடிக்குள், ஓடி கடக்க முடியாது என்று பல நிபுணர்கள் நம்பி வந்தனர். ஆனால், முடியாது என்பதை உடைத்து 1 மைல் தொலைவை 3.59 வினாடிக்கள் ஓடி சாதனை படைத்தார் ராஜர் பேனிஸ்டர். அதற்கு காரணம் எல்லோரும் மரபு வழி பயிற்சிகளை மேற்கொள்ள, பேனிஸ்டரோ அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி செய்து புதிய பயிற்சி முறைகளை கையாண்டு சாதனை படைத்தார். அவர் மருத்துவம் படித்தவர். அதனால்தான் மருத்துவத்தில் கற்று உணர்ந்த உண்மைகளை ஓட்டப்பந்தய பயிற்சியில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டார்…

    தோனியின் புதுமையான தலைமைத்துவம்

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டர் மகேந்தர சிங் தோனி தனது தோற்றத்திலும் வித்தியாசமாக ஆடும் பாணியிலும் புகழ் பெற்றவர். இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி உலககோப்பையை வென்று, தாயகத்திற்கு பெருமை தேடித்தந்தவர். அவருடைய வித்தியாசமான ‘எலிகாப்டர் ஷாட்’ இளைஞர்களை கவர்ந்தது. எப்போதும் ஆட்டக்களத்தில் அவர் காட்டும் அமைதி அனைவரையும் வசீகரித்தது…

    கற்பனை திறனின் தந்தை – ஸ்டீவ் ஜாப்ஸ்…

    ஸ்டீவ் ஜாப்ஸ் மிக வித்தியாசமாகவும், புதுமையாகவும் சிந்திக்கும் திறன் உடையவர். தனி நபர் கணினி புரட்சியை ஆரம்பித்து வைத்தவர். கணினி என்பது பெரிய நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற எண்ணத்தை உடைத்தெறிந்து, தனி நபர்களும் வெகுஜன மக்களும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்து காட்டியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஐபாட், ஐபோன் போன்ற புதிய கருவிகளை சந்தைப்படுத்தியவர்.

    ‘புதுமையாக சிந்திக்கும் ஆற்றல்தான் தலைவனையும், பின்பற்றுபவனையும் வேறுபடுத்தி காட்டுகிறது’.

    – ஸ்டீவ் ஜாப்ஸ்

    இப்படி, தனித்துவமாக சிந்தித்தவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றதை பார்த்தோம். இதுபோன்று இனி வித்தியாசமாக சிந்திப்போம். செயல்படுவோம்… வெற்றி பெறுவோம்…

    வெற்றி உங்கள் கையில்

    சிந்தனைகள்  சீராகட்டும்

    வாழ்க்கையில்  வெற்றி எங்கே தொடங்குகிறது? என்பதில்  அறிந்து  கொள்வதில் நம்மில்  பலருக்கும் ஆர்வம் அதிகம்  உள்ளது.

    நேற்று வரை சாதாரண நிலையில்  இருந்தவன் இன்று பிரபல தொழிலதிபராகிவிட்டான்- என்று ஆச்சிரியத்தோடு சிலரைப் பற்றி பேசுவதைக் கேட்டிருக்கிறோம். இந்த உயர்வுக்கு திடீர்  அதிர்ஷடம் அல்லது யோகம்  முக்கிய காரணமாக உள்ளது என்றும்  பெயர் சூட்டிக் கொள்கிறார்கள்.  தனக்கு வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றும்  எண்ணி,  வெற்றி பெற இயலாதவர்களில் பலர் தங்கள்  இலக்கை மறந்து விலகியும் போய்விடுகிறார்கள்.

    வெற்றி வாய்ப்பு என்பது  எல்லா மனிதர்களுக்கும் சமமாக கிடைக்கும் ஒன்று தான். ஆனால், அந்த  வெற்றி வாய்ப்பை சரியான முறையில்  பயன்படுத்துவதில் தான் ஒருவரின் வெற்றி அடங்கி இருக்கிறது.

    தேர்தலில் யார்  வேண்டுமானாலும் வேட்பாளராக நிற்கலாம்.  இந்த  தேர்தல்  நேரத்தில்  வெற்றி வாய்ப்பு அனைத்து  மக்களுக்கும் சமமாக வழங்கப்படுகிறது. இருந்த போதும் அந்த வாய்ப்பை ஒரு  சில பேர்  மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.  வேட்பாளராக அறிமுகமாகி  களத்தில்  தீவிரமாக செயல்படுகிறார்கள். ஆனால், ஒருவர்  மட்டுமே தேர்தலில் மட்டும்  ஆராய்ச்சி செய்து விட்டு மற்ற தேவைகளைப் பார்க்க சிலர்  சென்று விடுவார்கள்.

    வெற்றி என்பது  ஒரே முயற்சியில் ஒரே நாளில்  கிடைப்பதல்ல. இது பல நாள் சிந்தனையில்  உருவாகும்  அற்புதமான சொத்து ஆகும்.

    ஒரு  ஆப்பிள் மரத்தின் அடியில்  படுத்து  உறங்கிக் கொண்டிருந்தார்  அறிவியல் அறிஞர் சர் ஐசக்  நியூட்டன். தூங்கிக்  கண் விழிக்கும்  நேரத்தில்   ஒரு  ஆப்பிள்  மரத்திலிருந்து கீழே விழுவதைப்பார்த்தார்.  அவரது சிந்தனை அந்த ஆப்பிள்  மீது சென்றது.

    “இந்த ஆப்பிள் ஏன்  கீழே  விழுகிறது? கிழே  விழுவதற்குப்  பதில்  இந்த ஆப்பிள்  மேலே போனால்  என்ன ஆகும்?” என சிந்தித்தார். அதனை வாய்ப்பாகக் கருதினார்.

     ஏற்கனவே புவி ஈர்ப்பு விசை (Gravitational Force) பற்றிய ஆராய்ச்சி எண்ணத்தோடு இருந்தார் நியூட்டன். அப்போதுதான், ஆப்பிள் கீழே விழுந்தது. நியூட்டனின் ஆராய்ச்சி எண்ணத்தை இந்த நிகழ்வு அதிகபடுத்தியது.

    மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவது என்பது இயற்கையான செயல்தான். ஆனால், ஆப்பிள் கீழே விழுவதைப் பார்த்த அனைவரும் அறிவியல் அறிஞராக புகழ்பெறவில்லை. ஆனால், நியூட்டன் வெற்றி பெற்றார். “ஆப்பிள்தான் நியூட்டனின் வெற்றிக்கக் காரணம்” என்றும் சிலர் சொல்கிறார்கள்.

    ஆனால், நியூட்டனின் வெற்றிக்கு உண்மையான காரணம் என்ன…? என்பதை ஸ்டீபன் டபிள்யூ. ஹாக்கிங் (Stephen W. Hawking) என்பவர் தனது, The Theory of Everything என்னும் நூலில் தெளிவாக்குகிறார்.

    “மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்த நியூட்டன் ‘புவி ஈர்ப்பு விசை’ பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டார். ஏற்கனவே – புவி ஈர்ப்பு விசை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிந்ததால், இந்த நிகழ்ச்சி முக்கியமாகக் கருதப்படுகிறது” என்பது ஸ்டீபன் டபிள்யூ. ஹாக்கிங் கருத்து ஆகும்.

    இந்தச் சம்பவம் ஒரு முக்கியமான உண்மையை நமக்குக் கற்றுத் தருகிறது.

    “வெற்றியாளராக வேண்டும்” என விரும்புபவர்கள் எல்லா நேரங்களிலும் வெற்றி பெறுவதற்கான சிந்தனையோடு இருக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் எந்த நேரத்தில் நம்மை வந்தடையும்…? என்பது நமக்கே தெரியாமல் இருக்கலாம்.

    ஆனால், வெற்றிச் சிந்தனைகளோடு இருக்கும் ஒருவருக்கு இந்த வெற்றி வாய்ப்புகள் விரைவில் நெருங்கி வரும். “என்னால் வெற்றி பெற முடியும்” – என்ற நம்பிக்கையை மனதில் வைத்து, அந்த எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள்.

    “சூழல்களுக்காகவும், வாய்ப்புக்களுக்காகவும் நான் எப்போதும் காத்திருக்க மாட்டேன், எனக்குத் தேவையான சூழல்களையும், வாய்ப்புகளையும் நானே ஏற்படுத்திக் கொள்கிறேன்” – என்னும் அறிஞர் பெர்னாட்ஷாவின் சிந்தனைத் துளிகளையும் நினைவில் நிறுத்தி, வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை நாமே உருவாக்கிக் கொள்வது நல்லது.

    எந்தச் சூழலிலும் அமைதியாக செயல்பட்டால், வெற்றியை எளிதில் பெறலாம். வெற்றி பெற விரும்புபவர்கள் தங்கள் மனதை ஒருமுகப்படுத்தவும், பழகிக்கொள்ள வேண்டும். “ஒருமுகப்படுத்தப்படாத ஒளிக்கதிர்க்ள எரிவதற்கு பயன்படுவதில்லை. எனவே, உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி வெற்றி காணுங்கள்” – என்பது அலெக்ஸாண்டர் கிராஹாம்பெல் வழங்கும் அறிவுரை ஆகும்.

    மாவீரன் நெப்போலியன் இளம்வயதிலே போரில் வெற்றி பெற்றார். இதற்கு, முக்கிய காரணமாகத் திகழ்வது  நெப்போலியனின் கவனம் சிதறாத தன்னம்பிக்கை என்பதை அனைவரும் அறிவார்கள். தனது போர்ப்படை வீரர்களை ஒருமுகப்படுத்தி எழுச்சிமிக்க வீர உரை நிகழ்த்தினார். இதனால், படை வீரர்கள் எழுச்சி மிகக் வீரர்களாக திகழ்ந்தார்கள்.

    “எப்படியும் வெற்றியடைவோம்” – என படைவீரர்களை உற்சாகப்படுத்தினார் நெப்போலியன். மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றிய நெப்போலியன் வெற்றிகளைக் குவித்தார். வெற்றி என்பது நமக்கு மனத்திலும், எண்ணத்திலும்தான் இருக்கிறது.

    வீட்டில் உருவாகும் பிரச்சனைகள் நம் கவனத்தை சிதறடிக்கலாம். பள்ளியில் ஏற்படும் நட்பும், பிரச்சனைகளும் நமது நிம்மதியைக் கொடுக்கலாம். மதம் கூட சிலவேளைகளில் சிக்கலை ஏற்படுத்தலாம். சமூகம் மற்றும் அரசியல் சூழல்களாலும் நமது சந்தோஷங்களுக்கு இடையூறுகள் வந்து சேரலாம்.

    நம்மைச் சுற்றியுள்ள சூழல்களால் சிக்கல்கள் ஏற்படும்போது நமது நல்ல எண்ணங்களே நம்மை சீர்படுத்துகிறது. நம்பிக்கையுடன் செயல்பட வைக்கிறது. “மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்” – என்ற முன்னோர்மொழி ஒருமுகச் சிந்தனையின் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது. “சிதறாத சிந்தனைகள்” தான் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கிறது. எனவே – சீரான வெற்றிச் சிந்தனைகள் ஒருவரை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வது நிச்சயம்.

    பறவையை பாதுகாக்கும் மனிதம்

    அன்பு செல்வம்

    “பறவைகளுக்கு பனைக் கூடு” சேவை மையம்

    பெரியநாயக்கன்பாளையம், கோவை

    கிளி  வளர்த்தேன்  பறந்து  விட்டது

    அணில்  வளர்த்தேன் ஓடி விட்டது

    மரம்  வளர்த்தேன் இரண்டும்  வந்து விட்டது

    என்பார் முன்னாள் குடியரசு தலைவர் திரு அப்துல்கலாம்  அவர்கள். மரம்  வளர்ப்பதன் பயனை மிக அழகாக உவமையோடு கூறியிருப்பார். அந்த வகையில்  இந்த வரிக்கு உயிரோட்டம் கொடுக்கும் விதமாக உண்மையிலேயே மரத்தை  வளர்த்து பறவைகளையும் அணில்களையும் அனுசரணையோடு  அரவனைத்து வருகிறார் அன்பு செல்வம்  என்னும் விவசாயி இவரை சந்தித்த போது அவர்  கூறியது…

    நான் கோவை மாவட்டம்  பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள காளிப்பாளையம் என்னும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில்  பிறந்தேன். படிப்பு என்று பார்த்தால்  வெள்ளமடையிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்தேன் அதன் பிறகு, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல்  படித்தேன். சில காலத்திற்குபின்னர் தமிழ் மொழியின்  மீதுள்ள பற்றுதலால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம் .ஏ பட்டப்படிப்பை படித்தேன் இப்பொழுது  சொந்தமாக தமிழ்கேப்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறேன்.

    படிக்கின்ற காலத்திலேயே எனக்கு விவசாயத்தின்  மீதும், பறவைகளின் மீதும்  ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது. விவசாயம்  செய்யும்  எங்களுடைய தோட்டத்தை  சுற்றிலும்  பல நிற பறவைகள் எப்போதும்  அழகான  ஒசையை எழுப்பி கொண்டே இருக்கும்,  இந்த ஒசை என் மனதிற்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடியதாகவும் ஒரு அமைதி ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. காலபோக்கில்  பறவைகளின்  எண்ணிக்கை குறைவதை என்னால் உணர முடிந்தது. எத்தனையோ வண்ண நிறத்தில்  அப்போதெல்லாம் பறவைகளை பார்த்து இருக்கிறேன். ஆனால்  ஒரு  சில பறவைகள்  முற்றிலுமாக அழித்து விட்டது…

    முன்னரெல்லாம்  நம்  வீட்டு  முற்றத்தில்  குடும்பம்  குடும்பமாக வசித்து வந்த சிட்டுக்குருவி இனம்  நாளடைவில் கான்கீரிட் விடுகளின் மாற்றத்தால் குறையத்  தொடங்கிவிட்டன. மேலும் ரியல் எஸ்டேட்  வளர்ச்சியால் பறவைகளுக்கு வாழ்வதரமான விவசாயமும், மரங்களின்  எண்ணிக்கையும்  குறைந்து  விட்டன. இதனால்  பறவைகளின்  புகழிடத்திற்கு கடும்  நெருக்கடி  ஏற்பட்டுவிட்டது. அறிய வகை பறவை இனங்களும்  அழியத்தொடங்கிவிட்டன. இவைகளும்  காக்கும்  விதமாக ஒரு  சிறிய முயற்சியை எனது ‘பறவைகளும்  பானைக்கூடு’ திட்டத்தைத் தொடங்கினேன். இதனால் எனது  தோட்டத்தில்  உள்ள 200 பாக்கு மரங்களில் காலை,  மாலை  வேளைகளில் கூடும் பல ரக பறவையினங்களைப் பாதுகாக்கும் விதமாக 75 துளையிடப்பட்ட  பானைகளை வாங்கி பாக்கு மரங்களில்  10 அடி  உயரத்தில்  கட்டியுள்ளேன். தினமும்  அவைகளுக்கு ராகி,சோளம், கம்பு, தினை  உள்ளிட்ட தானியங்களை உணவாக வைத்து வருகிறேன். தினசரி  தானியங்களை உண்ண வரும்  பறவைகள்  தோப்பில் கட்டப்பட்டுள்ள பானைகளை புகழிடமாக பயன்படுத்தி வருகின்றன. மைனா,  சிட்டுக்குருவி அணில்  போன்றவற்றை பானைக்குள் பஞ்சனை போல் கூடு  அமைத்து நிரந்தரமாக தங்கும்  அளவிற்கு வீடு அமைத்து  கொடுத்திருக்கிறேன். பறவைகளின்  ஆனந்த ஒலி  மனதிற்கு ஒரு  இதமான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    பறவைகளுக்கு இயற்கையோடு  சேர்ந்து புகழிடம், உண்ண உணவு இவையாவும்  நம்மால்  கிடைக்கும் போது  அவற்றின்  இனப்பெருக்கம்  அதிகரித்து  இயற்கை வளமும்  செழிக்கும் .  எந்த ஒரு  பறவையும்  மனிதனுக்கு ஒரு போதும்  தீங்கிழைப்பதில்லை நம்மால் இயன்ற உதவிகளை பறவை இனங்களுக்கு  செய்தால்  எதிர்காலம்  இயற்கையோடு செழிப்புறும் பறவைகளும்  நன்றி  பாராட்டும்.

    பறவைகளுக்கென்றே தனியாக 2 ஏக்கரில்  பழத்தோட்டம்  அமைத்து அதனிடையே நிறைய பறவைகளுக்கு புகழிடம்  அமைத்து கொடுத்து பறவைகளின்  சந்ததிகளைப் பெருக்க வேண்டும். இதனால்  100 பறவை குடும்பங்களுக்கு மேலும் வாழ்வளிக்க வேண்டும்…

    இந்த செய்தியை படிக்கும்  ஒவ்வொருவரும்  தங்கள்  சூழலுக்கு ஏற்ப பறவை இனங்களை பாதுகாக்க முற்பட்டாலே போதும். இயற்கை நம்மை வாழ வைக்கும் காக்கைக்கு சோறு வைக்கும் நீங்கள் அவையுடன்  தானியங்களையும்  சேர்த்து வையுங்கள் உங்கள்  பகுதியும்  பறவைகளின்  பேரானந்த ஒலியால்  பரவசமடையும். சிறிய  செலவு  தான்  மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையது…

    என் பள்ளி

    Dr. S.காந்திய வேந்தன் M.Tech(IT),M.Sc,M.Phil,P.hD,P.D.F

    Six Sigma Black Belt(Indian Statistical Institute

    Assistant Profersor in Agricultural Station AEC& RI

    Indian Council of Medical Research,New Delhi

    ஈரோடு மாவட்டம் பாவனி தாலுக்காவில் உள்ள ஊராட்சிக் கோட்டை என்ற கிராமம் தான் எங்கள்  ஊர். அப்பா UP சுப்பிரமணி அம்மா பாப்பாள். என்து குடும்பத்தில்  என்னுடன் சேர்த்து உடன்பிறந்தவர்கள்  5 பேர்.

    எங்கள் கிராமம் நல்ல விவசாயம் செழித்து வளரும்  பகுதியாகவும், இயற்கை சூழல்மிக்கப் பகுதியாகவும் இருக்கும். பெரும்பாலோனோர் விவசாயம்  சார்ந்த தொழிலை மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள். எனது தந்தை ஒரு அரசு ஊழியர் என்பதால்  நாங்கள் வாழ்ந்த எங்கள் பகுதிகளில்  எங்கள்  அப்பாவிற்கு நல்ல  மதிப்பும்  மரியாதையும்  இருந்தது.

    நான் முதல் வகுப்பு முதல்  ஐந்தாம்  வகுப்பு வரை ஊராட்சிக் கோட்டை ஆரம்பப் பள்ளியிலும், 6 ஆம்  வகுப்பு  முதல்  12 ஆம் வகுப்பு  வரை மயிலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்றேன்.

    சிறு வயதில்  ஆரம்பக் கல்வி  படிக்கின்ற காலத்திலிருந்தே எனது தந்தை எனக்கு தெளிவான அறிவுரைகளும், உலக நடப்பு நன்னெறிகளையும் எடுத்துக் கூறி  சமுதாயத்தில்  பெயர்  செல்லும்படியான ஒரு நல்ல மனிதனாக மற்றவர்கள் மத்தியில்  நான்  வாழ்ந்து காட்ட வேண்டும் என்று கூறுவார்.

    அதற்கு கல்வி தான் முக்கியம்.  வாழ்க்கையில் மிக உயர்ந்த இலட்சியத்துடன் நல்ல முறையாக கல்வியைக்  கற்றால் தான்  உயர்வடைய முடியும் என்ற அறிவுரைகள் வழங்கிக்  கொண்டேயிருப்பார்.

    பள்ளிப்பருவத்தில் பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி,  நம் நாட்டுக்கு உழைத்த சிறந்த உத்தமத் தலைவர்களின்  வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களும், நல்ல நீதி நூல்களும் சான்றோர்களின்  நூல்களையும் நன்கு ஆழ்ந்து தெளிவாக படிக்கச் சொல்லுவார். இதற்காகவே என்று தந்தை வேண்டிய அனைத்து நூல்களையும் எனக்கு வாங்கிக் கொடுப்பார். அதுவே எங்கள்  வீட்டில் சிறு நூலகம் போல் அமைந்து விட்டது.

    எனது  பள்ளிப்பருவம்  எனக்கு ஈடுபாடும் கல்வியில் நல்ல ஆர்வமும் உண்டாக எனக்கு நல்ல ஒரு முன் மாதிரியாக என் தந்தை அமைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல். பள்ளியில்  படிக்கும் போது  எனது  வகுப்பாசிரியர்கள் நீயும்  நன்றாகப் படித்து உனது தந்தையைப் போல் நன்கு படித்து சமுதாயத்தில் நல்ல மனிதானாக வாழ வேண்டும்  என்றும்  கூறுவார்கள்.  அதனால் எனக்கு கல்வியின் மேல் ஈடுபாடு அதிகம் வந்தது. நானும்  நல்ல முறையில் கற்றேன்.

    ஆறாம்  வகுப்பு படிக்கும் படித்துக் கொண்டிருக்கும்  போது, ஒரு முறை எங்கள்  பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் நான் இரண்டாம் பரிசு பெற்று பாரதியார் கவிதைகள் புத்தகத்தைப் பரிசாகப் பெற்றேன். அந்த பரிசும்  பாராட்டும் எனக்கு நல்ல தூண்டுகோலாக அமைந்தது. 1998 ஆம் ஆண்டு  12 வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்வானேன், இதன் மூலம் டாக்டர் படிக்க விண்ணப்பித்திருந்தேன். நுழைவுத்தேர்வு, கவுன்சலிங் என எல்லாவற்றிலும்  தேர்ச்சிப் பெற்றேன். ஆனாலும் டாக்டர் படிப்பை படிக்க முடியவில்லை.  எனது குடும்பத்தில் எனது தந்தை ஒருவரது வருமானம் மட்டும் இருந்தால் எங்கள் குடும்பச் செலவுகளும், மற்றும்  என் உடன்பிறந்தோரின் கல்விச்செலவுகளையும் பார்க்க வேண்டியிருந்தால் அந்த சூழலில் எம். பி.பி. எஸ் சேர்ந்து படிக்க முடியாமல் போனது. இதனால்  அத்தருணத்தில் ஒரு மிகப்பெரிய ஏமாற்றமும், மன உளைச்சலும் உண்டானது. நன்கு படித்தும் கூட இப்படி ஆகி விட்டதே என்று நினைத்து ஒரு தொய்வு நிலைக்கு வந்து விட்டேன்.

    அதன்  பிறகு ஆசிரியர்கள்,  நண்பர்கள், உறவினர்கள் அனைவரும்  எனக்கு ஆறுதல் கூறி,  டாக்டருக்கு  படிக்க முடியாவிட்டாலும் வேறு துறையில் இன்னும் உயர்கல்வியில்  சேர்ந்து  நன்கு படித்து முன்னேறி விடலாம்   என்று பலவாறு ஆறுதல்கள் கூறினார்கள்.

    அப்போது இயற்பியல்  ஆசிரியராகப் பணியாற்றி  திரு. ரங்கநாதன் அவர்கள்  எனக்கு கணக்கு பாடம்  பற்றியும், பாடத்தை சொல்லி கொடுத்த முறையும் எனக்கு மிகுந்த  ஊக்கத்தைக் கொடுத்தது. ஒரு இயற்பியல்  ஆசிரியர் கணக்கு பாடத்தை இவ்வளவு எளிமையாக நடத்துவதைக் கண்டு மிகவும் வியப்படைந்தேன்.

    பிறகு ஈரோடு  வாசவி கல்லூரியில்  பி.எஸ்சி கணிதம்  பயின்றேன். அங்கு பேராசிரியர் முனைவர். ச. முத்துசாமி அவர்கள் கணிதத்துறைப் பயின்றால்  என்னென்ன எதிர்காலம்  உள்ளது என தெளிவாக எடுத்துரைத்தாô. எனக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்தது. அப்போது பி.எஸ்சி படிக்கின்ற போது ஏராளமான புத்தகங்கள்  படிக்க  நூல் நிலையம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதற்காக நண்பர்களின் தேவையற்ற பொழுது போக்குகளையெல்லாம் தளர்ந்து கல்லூரி நூல் நிலையமாகவே என்னுடைய பயணம்  ஒரே முழு மூச்சாக இருந்தேன். ஏற்படும்  சந்தேகங்களை உடனுக்குடன் பேராசிரியர்களிடம் கேட்டு தெளிவுபெற்றேன்.

    மேலும் எனது என்னிடத்தில்  சிவில் சர்வீஸ்  தேர்வு எழுதும்  போது அறிவுரை கூறினார். இதற்காக நிறைய நூல்களை வீட்டிலேயே வாங்கிப் படிக்கச் சொன்னார்.பிறகு பி. எஸ் சி முடித்து  எம் எஸ் சி புள்ளியில்  பாரதியார் பல்கலைக்கழகத்தில்  சேர்ந்தேன். அங்கு புள்ளியில்  துறையில்  பேராசிரியாக இருந்த  முனைவர் K.K சுரேஷ் அவர்களின்  வழிகாட்டுதலின் படி  இதே பல்கலைக்கழகத்திலல்  ஆய்வியில்  நிறைஞர் பட்டத்தையும்  பெற்றேன்.

    அப்போது  பல்கலைக்கழக அளவில்  நாட்டு நலப் பணித்திட்ட முகாம்களில்  கலந்து கொண்டு மக்களுக்கு சேவை ஆற்றவும்  பேராசிரியர் அறிவுரை வழங்கினார். அப்போது ஈரோடு  மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர். திரு.காôத்திகேயன் அவர்களை  விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள எங்கள்  துறைத்தலைவர்  ஏற்பாடு செய்திருந்தார். அவர் எங்கள்  மத்தியில்  பேசும்  பொழுது வெற்றி என்பது உங்கள்  கையில்  தான்  இருக்கிறது.  நீங்கள் வெற்றியை தீர்மாணிக்க வேண்டும்  என்று பல்வேறு அறிவுரைகள்  வழங்கினார். இது எனக்கு மிகப்பெரிய தூண்டுகோலாக அமைந்தது. எனது தந்தையும்  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது கலெக்டரை சந்திக்கும்  வாய்ப்பும,  அறிமுகமும்  கிடைத்தது. அப்போது நிறைய அறிரைகள்  வழங்கினார்.

    ஆய்வியல்  நிறைஞர்  பட்டத்தையும்  முடித்தேன். சிவீல் சர்விஸ் தேர்வுக்காக கோவையிலேயே தங்கி  2 ஆண்டுகள்  படித்தேன். பின்னர் சென்னை சென்று  தேர்வு எழுதினேன். ஆனாலும் தேர்ச்சி பெற முடியவில்லை. புள்ளியில்  கம்பியூட்டர் சயின்ஸ்  சார்ந்து  நான்  படித்துக் கொண்டிருந்தால்  என் மனம்  அடுத்த உயர் கல்வி ஆய்வுப்பணி கற்க வேண்டும்  என்ற வேட்கை இருந்தது. இதனால் மீண்டும்  கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில்  எம்.டெக்(ஐ.டி) சேர்ந்து படித்தேன்.  அப்போது  பாடத்திட்டங்கள்  சற்று கடினமாக  இருந்தால்  சில மாணவர்கள் சேர்ந்து சில நாட்களிலேயே படிப்பைத் தொடராமல்  பகுதியிலேயே நின்று விட்டார்கள். சக மாணவர்களும்  என்னையும்  அவ்வாறே ஏளனமாகப் பார்த்து கிண்டல்  பேசினார்கள்.

    எம். டெக் படிக்கும் போது துறைத்தலைவர்  பேராசிரியர்  திரு. N. மாரிகண்ணு மற்றும்  பேராசிரியர் மணிசேகர்  எனக்கு நெறியாளராக இருந்து நல்ல கண்டிப்புடன் படித்து சாதிக்க வேண்டும்  என உத்வேகம்  ஊட்டினார். எம்.டெக் படிப்பு எனக்கு ஒரு சவாலாக அமைந்தது. மனதளவில் சிரமம் இருந்தாலும் என் தந்தையின்  எதிர்பார்ப்பு என்னை சாதிக்க தூண்டியது.  பேராசிரியர்களின்  நல்ல வழிகாட்டுதலின்  படி எம். டெக் முடித்தேன்.

    2009 ம் ஆண்டு எம்.டெக் படித்தவர்கள்  யாருக்கும்  பிளேஸ்மண்ட் கிடைக்கவில்லை ஆனால்  எனக்கு மும்பையில் AT&T கம்பெனியில்  மாதம்  60,000 சம்பளத்தில்  “பிளேஸ்மண்ட்” கிடைத்தது. ஆனாலும்  பி.எச்.டி  படிக்க வேண்டும்  என்ற இலட்சியம்  உண்டானது. கிடைத்த பணியில்  சேராமல்  மீண்டும்  பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்  முனைவர்.K.K சுரேஷ் அவர்களிடம்  சேர்ந்து படித்தேன். அப்போது எனக்கு வேண்டிய உதவிகளையும்  ஆலோசனைகளையும்  வழங்கி பி.எச்.டி சம்மந்தமாக படிக்க நல்வழிப்படுத்தினார். மேலும்  எனது பி.எச் டி  ஆய்வு கணினி அறிவியல்  சார்ந்தது. இதனால்  எனக்கு கணிதம், புள்ளியில் மற்றும்  கணினி  அறிவியல்  ஆகிய துறைகளைகளைப் பற்றி அதிகம் தெரியும்  என்பதால்  ஆய்வுப்பணி சிரமம் இல்லாமல்  இருந்தது.

    அதே வருடம்  என்னுடைய தந்தை பணியில்  இருந்து  ஓய்வு பெற்றார்.  இதனால்  நிதியின்  நெருக்கடி  ஏற்பட்டது. அப்போது பல்கலைக்கழகம் சார்பாக பெலோஷிப் Indian Statistical Institute(ISI)  நிலையத்துடன்  இணைந்து பணியாற்றும்  வாய்ப்பு கிடைத்தால்  இந்த  பெலோஷிப் கிடைத்தது.

    மேலும்  எம்.டெக் படிக்கும் போது வார இறுதி நாட்களில் Station National Insitute ல் சேர்ந்து Six Sgma Black Belt Super Facilition இந்தப் படிப்பை பெரும்பாலும்  பேராசிரியர்களே பெற்றதில்லை. இவையும்  என்னுடைய வாழ்க்கையில்  ஒரு நல்ல வாய்ப்பாக கிடைத்தது. மேலும்  பல வெளிநாடுகளில்  கான்பிரன்ஸில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றிருக்கிறேன். 2013 யில் பி.எச்.டி முடித்தேன். முடித்தவுடன் 6 மாதம் பெங்களூரில் ஒரு கல்லூரியில் பேராசிரிராகப் பணியாற்றினேன். அதன்  பிறகு 2014 ஆம்  ஆண்டு  புதுடெல்லியில்  ஐஐடியில் PDF(POST DOCTORATE FELLOWSHIP) முடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதையும்  வெற்றிகரமாக நிறைவு செய்தேன் .புதுடெல்லி IIT யில் முடித்தவுடன் புதுடெல்லி ICMR PDF முடித்தேன் எனக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மூலமாக பணியாற்ற எனது கல்விப் பின்புலத்தைப் பார்த்து வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர்  முனைவர். திரு. ராமசாமி அவர்கள் எனக்கொரு நல்ல வாய்பை அளித்தார்.

    இப்போது மன நிறைவுடன்  வேளாண் கல்லூரியில் பணியாற்றுகிறேன். பி.டெக், எம்.டெக்,  பி.எச்.டி படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி  வகுப்புகள்  மூலமாக மாணவர்களை நல்வழிப்படுத்தி வருகிறேன். மேலும்  தற்போது  புது டெல்லியில் உள்ள AIIMS நிறுவனத்திலும், USA PDF படிக்க இரண்டு வாய்ப்புகள்  கிடைத்துள்ளன. அதுவும்  மட்டற்ற மகிழ்ச்சியாகும்.

    எதிர்காலத்தில்  புள்ளியில்  சாôந்த ஆய்வுப் பணிகளும்  மாணவர்களுக்கு  நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே என்  ஆர்வமாகும். என்னுடைய வாழ்க்கைத் துணையாகயிருக்கும் டாக்டர் G.அனிதா MBBS,Asst,Surgeon சேலம்  மாவட்டம் வீரகனூர்  அரசு மருத்துவமனையில்  மருத்துவராகப் பணியாற்றுகிறார். நான்  பள்ளியில்  படித்து முடித்தவுடன் எனக்கு மருத்துவம்  படிக்க இடம்  கிடைத்தும்  பொருளாதார வசதியில்லாததால்  படிக்கும்  வாய்ப்புகிடைக்காமல்  போய் விட்டதே என்ற ஏக்கம்  இருந்தது. ஆனால்  தற்போது என் மனைவி ஒரு மருத்துவராக இருக்கிறார் என்பது எனக்கு ஒரு மனநிறைவாக உள்ளது.

    மேலும்  அவருடன் இணைந்து (Bio Statisticis) உயிர்ப்புள்ளியில் துறையில்  ஆய்வு மேற்கொள்ள எதிர்காலத்திட்டம் உள்ளது…

    வழிகாட்டி

    சமீபத்தில் 2015 ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகின. தமக்கு வழிகாட்டிய நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குறித்து வெற்றியாளர்கள் நாளிதழ், வார இதழ் போட்டிகளில் குறிப்பிட்டு நன்றி அறிவித்துக் கொள்வது இயல்பு. அவர்கள் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு நன்றி பாராட்டுவார்கள் என்பதிலும் ஐயமில்லை.

    கர்ணன் கதாபாத்திரம் மஹாபாரதத்தில் உன்னதமானது. எவ்வளவோ தானங்கள் செய்தும், அன்னதானம் செய்யாததால் அவருக்கு சொர்க்கத்தில் பசி தீரவில்லையாம். கண்ணன் வழிகாட்டி அறிவுரை கூற, அதன்படி கர்ணன் தனது வலது கை சுட்டுவிரலை வாயில் வைக்க பசி தீர்ந்ததாம். ஏனெனில், அதோ அங்கே – என்று யாருக்கோ, முன் காலத்தில் உணவு கிடைக்கும் இடத்தை கர்ணன் சுட்டிக்காட்டியதால் அந்த சுட்டு விரலுக்கு அவ்வளவு புண்ணியமாம் என்று கதை செல்கின்றது. வழிகாட்டிகளுக்கு எவ்வளவு புண்ணியம் பாருங்கள்.

    பாரதி…

     “அன்னச் சத்திரம் ஆயிரம் நாட்டல்

     ஆலயம் பதினாயிரம் சாட்டல்

    அன்ன யாவினும் புண்ணியம் கோடி

     ஆங்கோர் ஏழைகளுக்கு எழுத்தறி வித்தல்”. என்று பாடியுள்ளார்…

    கர்ணன் கதைக்கும் சம்பந்தம் உள்ளது. ஒரு ஏழை என்றால் பொருளில் ஏழை என்று பொருள் கொள்ளாமல் கல்வியல் தேவை உள்ளவர் என்றே பொருள் கொள்ளுதல் பொருந்தும். அல்லது, தான் கற்கும் கல்விக்கட்டணம் கட்ட வழி காணாதவராகவும் பொருள் கொள்ளலாம். டாக்டர் சங்கர சரவணன் தன்னிடம் தமிழ் கற்க விழைந்த மாணவன் ஒருவன் கட்டணப் பொருள் இல்லையே என தயங்க… அதைப்பற்றி அப்புறம் யோசிக்கலாம் என்று கற்றுக்கொடுத்து அவன் தேர்வில் வெற்றிப் பெற்றதை உள்ளார்ந்த திருப்தியோடு பகிர்ந்து கொண்டார்.

    ஆத்ம திருப்தி வழிகாட்டிகளுக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. டாக்டர் சங்கர சரவணன் ஒரு முனைவர் படிப்பு மாணவராக கால்நடை மருத்துவக்கல்லூரியில் தற்போதும், படிப்பதும், ஆண்டுதோறும் விகடன் பிரசுரம் வெளியிடும் போட்டித் தேர்வு புத்தகங்களுக்கு பங்களிப்பதும் குறிபிடத் தகுந்தது.

    வழிகாட்டிகள், கற்றது கையளவு என்னும் ஒளவையின் வாக்கிற்கிணங்க தம்மை தொடர்ந்து செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டியது கண்கூடு. அவ்வப்போது மாறிவரும் பாடத்திட்டங்களுக்கும், அதற்கேற்ப மாற்றிக் கொள் வேண்டிய தயாரிப்புத் திட்டங்களுக்கும் வழிகாட்டிகள் தேவைப்படுகின்றார்கள்.

    சென்ற வருட வெற்றியாளர்கள் கடந்து சென்ற பாதைகளின் பேசும் சாட்சிகளாகத் திகழ்பவர்கள் வழிகாட்டிகள். கதிரேசனின் நண்பர் ஒருவரின் மகள் மிகவும் பிரைட் மாணவி. ஐ.ஏ.எஸ். படிக்க விரும்பினார். சென்னையில் ஒரு பயிற்சி நிலையத்திலும் சேர்ந்தார். வீடு வாடகை மட்டுமே இருபதினாயிரம். மாணவியின் அம்மா, மகளே பாபநாசம் திரைப்படம் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றாளே என்று ஆச்சரியப்பட்டார்.

    இயல்பாகவே திரைப்படம் பார்க்காமல் படிப்போம் என்று தானாக மனமுவந்து நினைத்தால் அது நன்று. ஆனால், மற்றவர்கள், கட்டுப்பாட்டால், பாபநாசம் செல்லாமல் கட்டுப்படுத்தினால் அது பாடநாசம். நினைவுகள் திரையரங்கத்தில் இருந்தால், அதைப் பார்த்துவிட்டு இவ்வளவு படிப்போம் என்று குறிக்கோள் வைக்கலாம் அல்லது இவ்வளவு படித்தபிறகே பார்க்கலாம் என்றும் சொல்லாம். படம்கூட பாடமாக வேண்டும். மூன்று மணிநேர திரைப்பட நேரத்தில் மூளையின் மற்ற பகுதிகள் தூண்டிவிடப்பட்டு ஒரு உணர்வு ரீதியான புத்துணர்ச்சியை போட்டியாளர்கள் பெறக்கூடும்.

    ஒரே மாதிரியான படிப்பு முறையை பின்பற்றுவதால் படிப்பிலிருந்து சற்றே பாதை மாறி ஒரு புத்துணர்ச்சியை திரைப்படம் மூலம் தேடலாம் என்று தோன்றியிருக்கலாம். அதனால், மியூஸியம், நூலகம் முதலிய இடங்களுக்கு செல்லுமாறு ஊக்குவிக்கலாம் என்று ஒரு புதிய உத்தியை தெரிவித்தோம். பாபநாசம் திரைப்படம் கூட திரைப்படங்கள் மூலம் வாழக் கற்றுக்கொண்ட திரைக் கதாநாயகன் குறித்துதான்.

    திரைப்படங்கள் கூட வழிகாட்டியாகி விடக்கூடும். டாக்குமென்டரி திரைப்படங்கள், வரலாற்ற திரைப்படங்கள் என பெரிய பட்டியலே பிறகு தயாரிக்க வேண்டியிருக்கும். வழிகாட்டிகள் பல திரைகளை காட்டினாலும் பயணிப்பவர்களின் மனப்பாங்கிற்கேற்ப இலக்குக்கான வேகமும் தூரமும் பயண முறையும் மாற்றிக் கொள்ளப்படுகின்றது.

    இரமண மஹரிஷி அவர்களது வழிகாட்டும் வாக்கியங்கள் அடங்கிய வசனாமிர்தம் புத்தகம் திருவண்ணாமலை, இரமணாஸ்ரமத்தில் கிடைக்கின்றது. அதில் ‘குரு’ என்பவர், ‘ஆத்மா’ தான் என்று கூறியிருப்பார். ‘ஆத்மா’, தான் யார் என்று அறிந்து கொள்ள முடியற்சிக்க வேண்டும் என்று கூறியிருப்பார்.

    புறத்தே குருக்களையும் வழிகாட்டுதலையும் தேடினாலும், அவை அமைவது ஆத்மாவின் ஈடுபாட்டினால் தான் நிறைவேறுகின்றது என்று கூறியிருப்பார். எட்கார்ட் டல்லி எழுதிய, ‘தி பவர் ஆஃப் நப்’ (The Power of Now) என்னும் ஆங்கில புத்தகம். அந்த தருணத்தில் வாழ:வது என்பதன் முக்கியத்துவம் குறித்து பேசியிருப்பார். கடிகார நேரம் மற்றும் உளவியல் நேரம் என்கின்ற கருத்துக்கள் படிக்கத் தகுந்தன. அதாவது கடிகாரம் காட்டும் நேரம் அப்போதைய நேரம். மனிதர்கள் அதை மட்டும் காண்பது இல்லை. கடந்த காலத்தில் என்ன நடந்தது, எதிர்பாலத்தில் என்ன நடக்க உள்ளது என்கின்ற கவலைகளும், எதிர்பார்ப்பும் சேர்ந்து கடிகார நேரத்தை முள்ளாக குத்திக் கிழிக்கின்றன. எனவே நேரம் நினைவுகளால் மாசுபட்டு வருகின்றது. அப்படி இல்லாமல் மனதின் பாதிப்பிலிருந்து விடுபட்ட தூய்மையான கடிகார நேரத்தை நம்மால் பிரித்துணர முடியும் என்றால், பரிபூரண மகிழ்ச்சி கிடைக்கின்றது.

    இந்த கருத்தைத்தான் ஜென் தத்துவத்தில் – ‘அந்த நேரத்தில் வாழ்’ என்று கூறி இருப்பார்கள். ‘பவர் ஆஃப் நவ்’ புத்தகம் இதனை ஆங்கிலத்தில் மனதை களைதல் என்கின்ற கருத்து மூலம் விளக்கி உள்ளது. வழிகாட்டுதலில் ஆன்மீக வழிகாட்டிகளின் பங்கு கணிசமானது. மனித வாழ்வின் அடிநாதமாக, பின்புலமாக ஒரு ஆன்மீக திருப்தி இருக்க வேண்டும் என்ற ஸ்டீவன் கோவே தனது (Seven Habits of Effective People) என்கின்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார்.

    இரண்டு நெருங்கிய நண்பர்கள், கதிரேசனிடத்தில், “தயவு செய்து, சுய முன்னேற்ற புத்தகங்களை குறித்து பேசாதீர்கள்” என்று சொல்லி இருந்தார்கள். இந்தக்கருத்தும் மிகவும் கவனிக்கத் தக்கது. “ஏறத்தாழ எட்டு மணிக்கு”, என்ற சொற்றொடர் போல “சுயம்” என்பதும் “முன்னேற்றம்” என்பதும் முரணான வார்த்தைகள் தான்.

    சுயத்தை வெளியிலிருந்து முன்னேற்ற வேண்டும் என்கின்ற கருத்துக்களை திணித்தோமேயானால் சுயமான பாதையும் பயணமும் – ஒரு (Stage Managed) விஷயமாக மாறிவிடுகின்றது என்னும் அவர்களது கருத்தும் சரிதான். பின்பற்றுவதற்காக என்று அல்லாமல், சுயத்தை பாதிப்பதற்காக என்றும் கொள்லாமல், என்ன…? என்று  தெரிந்து கொள்வதற்காக என்று தத்துவங்கலந்த சுயமுன்னேற்ற புத்தகங்களை படித்துப் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்யலாமே… என்று கூறிப்பார்த்தேன்.

    அப்படிப் பார்த்தால் திருக்குறள் கூட ஒரு சுயமுன்னேற்ற புத்தகமே என்றும் தோன்றியது. சமூகத்தை அனுசரித்துப் போவதற்காக மனித இயல்புகள் குறித்து அறிவதற்காக இலக்கியங்கள் மறைமுகமாகச் செய்வதை சுயமுன்னேற்ற புத்தகங்கள் நேரடியாக செய்கின்றன. சில நண்பர்கள் பாடத்தைத் தவிர எந்த புற இலக்கியத்தையுமே படிக்கவில்லை. சிலர் படிக்கவேயில்லை. ஆனால், அவர்கள் எல்லோருக்குமே ஏதாவதொரு அல்லது யாராவதொரு… முன்மாதிரிகள் அல்லது வழிகாட்டிகள் இருப்பார்கள் என்பது வரை நிச்சயம்.

    சமீபத்தில் அவுட்லுக் பத்திரிக்கை அட்டையில் இராஜிங்க்யா இஸ்லாமிய மக்களின் சிரமம் குறித்த கட்டுரை இடம் பெற்று இருந்தது. மியான்மார் நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி இருக்கின்றனராம். மலாக்கா ஸ்ட்ரெய்ட் என்னும் அந்தமான் மற்றும்  தாய்லாந்து பகுதிகளû சுற்றியுள்ள கடல்பகுதியில் சுமார் எட்டாயிரம் மக்கள் அந்த நாட்டினாலும் விருப்பப்படாமல் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டே உணர்வுக்கும் நீருக்கும் போராடி வாழ்வதும், வீழ்வதுமாக இருக்கிறார்கள் என்கின்ற செய்தி நெஞ்சை நெருடியது. வழிகாட்டிகள் யாருமின்றி புலம் பெயர்ந்த மக்களின் துயரம் ஆற்றப்படுவதற்கான அமைதித் தீர்வினை நோக்கி உலக நாடுகள் நகர்வதற்கு உகந்த சூழல் விரைவில் பிரார்த்திக் கொண்டார் கதிரேசன்.

    உலகத்தின் நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாய் வழிகாட்டிய, ரோம, கிரேக்க சாம்ராஜ்யங்களை கட்டியாண்ட மன்னர்கள் பலர். உலகை ஓர் குடையின் கீழ் ஆளுவேன் என்று கிளம்பிய கிரேக்க மாவீரன் அலெக்ஸாண்டரின் கதை நாடறியும். அவர் குதிரையின் பெயரை (பெகாசஸா, பூசெபாலஸா என்று இமெய்ல் செய்யுங்கள்) L.K.G. குழந்தைகளின் அப்பாக்கள் அறிவார்கள்… அத்தகைய கிரேக்க நாடு இன்று கடனில் தத்தளிக்கின்றதாம்.

    அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஐம்பத்தேழு வயதானாலும் ஓய்வூதியம் உண்டாம். ஐரோப்பிய யூனியன் அவர்களுக்கு கடன் கொடுக்க அதுவும் காலியாகி விட்டது. வழிகாட்டியவர்களுக்கு வழிகாட்ட பலமுறை கூட்டங்கள் நடந்துள்ளன. ஜெர்மனி கிட்டத்தட்ட கைவிரித்துவிட்ட நிலை என்று செய்தித்தாள்கள் பரபரப்பாக செய்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன. வழிகாட்டுதல் சமயத்தில் திரும்பி விடுகின்றது. முன்பு இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில் ஜெர்மனிக்கு கிரீஸ் கடன் உதவி செய்ததாக சமூக வலைதளங்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு தலைமுறை பெயரும் புகழும் பெற்று வாழ்வதும் அதனை தொடர்ந்து வரும் தலைமுறைகள் சிரமப்படுவதும் பின்னர் மீண்டும் சிறிது காலம் கழிந்து சீரும் சிறப்பும் திரும்ப வருவதுமாகத்தான் வரலாறு அமைகின்றது. வழிகாட்டிகள் நிரந்தரமானவர்கள் இல்லை போலும்…

    முக்கனிகளில் பழங்களின் அரசன் மாங்கனிதான், அவற்றின் பல வகைகளில் கலப்பினங்களை உருவாக்குவது குறித்து பூவாணி தோட்டக்கலைப் பண்ணையில் ஆராய்ச்சியாளர் விளக்கினார். ஒரே மரத்தில் ஐந்து வகை மரங்களை ஒட்டவைத்து ஐந்து வகை கனிகளை உருவாக்கியிருந்தனர்.

    செம்பருத்தியிலும் இதுபோலவே ஒரே அடிமரத்தில் பலநிற மலர்கள் பூத்துக் குலுங்க வைத்திருந்தனர். இவை எல்லாம் நல்ல குணங்களை வழிகாட்டிகள் தேடிப்பிடித்து நம்முள் பதியம் செய்து வளர்த்து விடுவார்கள் என்கின்ற நம்பிக்கையை விதைக்கின்றனர்… விரைவில் பலன் பழம் கனியாகட்டும்… சுவை பரவட்டும்…