– 2016 – May | தன்னம்பிக்கை

Home » 2016 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    நல்ல நேரம் சிந்தனை நிகழ்வு வாழ்க்கை

    இறைவனது படைப்பில் மனிதன் ஒரு அரிய படைப்பாகும். அவனுக்குள் மறைந்துள்ள திறமைகள் பற்றியும், அவனுக்குள் புதைந்து கிடக்கும் சக்தியின் மகிமை பற்றியும் அவன் உணர நல்ல நேரமும் நல்ல சிந்தனைகளும் உறுதுணையாக இருக்கின்றன.

    “பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

    வேந்தர்க்கு வேண்டும் பொழுது”.

    என்பது வள்ளூவர் வாக்கு. காக்கை பகல் நேரத்தில் ஒரு ஆந்தையை வென்று விடும். அதுபோல நல்ல நேரம் ஒரு அரசனுக்கு அமைந்து விட்டால் அவன் தன் எதிரியை எளிதில் வென்று விடுவான். மூன்றுகாலங்களில், நிகழ்காலம் தனித்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட நிகழ்காலம் பயனுடையதாக அமைய வேண்டும் என்றால் மனிதனுக்கு நல்ல மனநிலை வேண்டும். மனம் நலம் பற்றி வள்ளுவர்

    “மனநலம் மண்ணுயிர்க்கு அக்கம் இனநலம்

    எல்லாப் புகழும் தரும்”.

    என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மனிதனின் இயக்கம் நல்ல சிந்தனை, நல்ல செயல்களைச் செய்யத்தூண்டும் மனம். அந்த நல்ல மனம் இடும் கட்டளையை ஏற்று செயல்படுத்தும் ஆரோக்கியமான உடல், அதனால் ஏற்படும் ஒரு நல்ல நிகழ்வு இந்த நான்கு செயல்களின் ஒத்துழைப்பில்தான் அடங்கியுள்ளது.

    நல்ல செயல் ஒன்றை செயல்படுத்த பெரியவர், சிறியவர் என்ற பேதம் கிடையாது. சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்திருந்தது. ஒரு கிராமத்தில் வெள்ளம் வந்தபோது ஒரு சிறுவன் இரண்டு ஆடுகளை வாழைமட்டையால் ஆன அமைப்பு ஒன்றில் ஏற்றி, ஒரு மரக்கட்டையை துடுப்பாக பயன்படுத்தி அந்த இரண்டு ஆடுகளையும் காப்பாற்றியுள்ளான். அந்த நிகழ்வை அந்த சிறுவனின் புகைப்படத்தோடு அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது… அந்த செய்தியைப் படித்த திரைப்பட இயக்குநர் ஒருவர் அந்த நிகழ்வை வைத்து திரைப்படம் எடுத்துள்ளார். அந்தத் திரைப்படம், அவருக்கு பல விருதுகளை அடைவதற்கான வாய்ப்பை நல்கியது. அதனால், மகிழ்ச்சி அடைந்த அந்த திரைப்பட இயக்குநர் அந்தச்சிறுவனனை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரரின் உதவியுடன், அந்தச் சிறுவனை நேரில் சந்தித்து அந்தச் சிறுவனின் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவிகள் செய்ததோடு, அந்த கிராமமே மேன்மை அடைய உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

    மனிதனின் மூளையில் ஓராயிரம் சிந்தனைகள் ஓடிக்கொண்டேதான் இருக்கும். அவற்றில் நல்லனவும் இருக்கும். தீயனவும் இருக்கும். ஏனென்றால், மனிதவாழ்வில் நிகழும் நிகழ்வுகளும் அப்படி உள்ளன. மனிதன் தன் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறான். எந்தப்பிரச்சனை என்றாலும் தீர்வு என்ற ஒன்று உண்டு அப்படி வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு ஒன்றை எடுக்க வேண்டும் என்றால் தெளிந்த நீரோடை போன்ற சலனம் இல்லாத மனநிலை வேண்டும்.

    பிரச்சனைகளை எதிர்கொண்டு அதற்கு ஒரு நல்ல தீர்வு காண்கின்ற மனிதனின் மனநிலை மேலும் வலிமை பெறும். மனம் என்பது ஒரு நிலம் போலதான். ஒருவன் தன் மனம் என்ற நிலத்தை ஆழ உழுது அதில் நல்ல எண்ணங்கள் என்ற நல்விதைகளை விதைத்து, நற்செயல்கள் என்ற பயிர்களை வளர்க்கும் போது, அதனால் ஏற்படும் நல்விளைவுகள் (நல்ல நிகழ்வுகள்) நல்ல விளைச்சலுக்குச் சமமாகும். மனிதனின் இந்த உலகில் குழந்தையாய் பிறந்து பல பருவங்களைக் கடந்து முழு மனிதனாகின்றான். அவன் தன்னுடைய ஒவ்வொரு பருவத்திற்கான கட்டுப்பாட்டையும், கடமைகளையும் மனதில் வைத்தால் அவனும் முட்டைப்பருவத்திலிருந்து ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து எப்படி ஒரு வண்ணத்துப்பூச்சி தன் வண்ணங்கள் நிறைந்த சிறகை விரித்து வானில் பறக்கின்றதோ…? அப்படியொரு ஆனந்தமான நல்வாழ்க்கையை ஒவ்வொரு மனிதனும் பெறலாம்…

    நற்சிந்தனைகளின் மனம், பூக்கள் நிறைந்த ஒரு பூக்கூடை போன்றது. அதை குப்பைகள் நிறைந்த கூடையாக மாற்றிவிடாமல், பார்த்துக் கொள்வது அவரவர்கள் பொறுப்பில்தான் உள்ளது.  தீய சிந்தனைகள் நம்மை நோக்கி வரும் பொழுது, எப்படி வேண்டாத பொருளை குப்பைக் கூடையில் போடுகின்றோமோ, அந்த தீய எண்ணங்களை தூக்கியெறியும் மனப்பக்குவத்தைப் பெறவேண்டும். ராஃபின் சர்மா என்றபுகழ்பெற்றஎழுத்தாளர் மனத்தை பண்படுத்துவதற்கான பத்து யுக்திகளை தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பத்து யுக்திகளை பின்பற்றியவர்கள், அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அந்த பத்து வழிமுறைகள் யாதெனில்…

    1. அதிகாலையில் எழுந்திருத்தல்
    2. தனிமையில் சிறிது நேரம் அமைதியாய் இருத்தல்.
    3. புகழ்பெற்ற பெருந்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகங்களைப் படித்தல்
    4. இறைவனின் நாமத்தை சொல்லுதல்
    5. இறைவனின் நாமத்தை எழுதுதல்
    6. உடற்பயிற்சி செய்தல்
    7. பொறுமை, சகிப்புத்தன்மை, வாய்மை, நேர்மை, இரக்கம், தைரியம் போன்ற குணாதிசியங்களை நம்மிடம் வளர்த்துக் கொள்ளுதல்.
    8. ஒவ்வொரு நாளின் முடிவிலும் தன்னைத்தானே பரிசோதித்துக் கொள்ளுதல் (இன்று எத்தனை நல்ல செயல்களை செய்தோம்…? எத்தனை தீயசெயல்கள் அல்லது எண்ணங்களுக்கு ஆளானோம் என்று)
    9. சிறந்த இசையைக் கேட்டு ரசித்தல்.
    10. எளிய வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல் என்பதாகும்…

    நல்ல நேரமும் நல்ல சிந்தனையும் சேர்ந்தால் நிகழ்ந்த சில நிகழ்வுகள் பற்றிய சிறு குறிப்புகள் சில…

    ஒரு பேராசிரியர் தன் மனைவிக்கு ஒரு தையல் இயந்திரத்தை வாங்கும் எண்ணத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றுமொரு பேராசிரியர் அவரை வழியில் சந்தித்து, தையல் இயந்திரம் எப்பொழுது வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்ளலாம். அந்த பணத்தை அவருடைய மனைவியை உயர்கல்வி படிக்க பயன்படுத்தும்படி ஆலோசனை கூறினார். அந்த பேராசிரியரும் அந்த ஆலோசனையை ஏற்று தன் மனைவியை உயர்கல்வி பயில அனுப்பினார். அவர் மனைவி பின்னால் சிறந்த பதவியிலிருந்து பணியாற்றியதோடு, பலர் சிறந்த நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளவும் உறுதுணையாக இருந்தார்.

    ஒரு S.S.L.C., மாணவன் பரிட்சையில் ஒரு பாடத்தில் மட்டும் தவறிவிட்டான். அவனுக்குத் தாய் இல்லை. தந்தையின் வருமானம் மிகவும் குறைவு. உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரியும், இரண்டு சகோதர்களும். அது சமயம் அந்த மாணவனின் உறவினர் மகள், வயது 16, ந.ந.க.இ.,  தான் முடித்திருந்தாள். அந்த மாணவனை அழைத்து, எந்தவொரு அரசாங்க உத்தியோகம் பார்க்க அடிப்படைத் தகுதியாக S.S.L.C. Pass Certificate   முக்கியம். ஒரு பாடம்தான். நான் உனக்கு அந்தப் பாடத்தை கற்பித்துத் தருகிறேன் என்றதன்னம்பிக்கையை வளர்த்து, அந்த மாணவனுக்கு வழிகாட்டினாள். அவனும் ந.ந.க.இ. தேர்வில் தேறிவிட்டான். அதன்பின் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் அந்த பெண்ணிற்கு அந்த மாணவன், தான் இராணுவத்தில் உள்ள தபால் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், அந்த சகோதரியின் அந்த நேரத்தின் உதவி அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளது என்றும் எழுதியிருந்தான்.

    படிப்பதற்கான கடைசி பாடத்திற்கான பரீட்சை அன்று. பரீட்சை நடக்கும் அறைக்குள் நுழைய 30 நிமிடங்கள் இருக்கும் தருணத்தில் ஒரு மாணவியின் கணவர் அங்கு வேகமாக வந்து, அரியலூரில் வாழ்ந்து வந்த அந்த மாணவியின் வயதான தந்தை இறந்து விட்டதாகவும், தன்னுடன் உடனே கிளம்பி வரும்படி அழைத்தார். அப்போது அந்த மாணவியுடன் இருந்த சகமாணவி நிலைமையைப் புரிந்து கொண்டு அந்த மாணவியை சமாதானம் செய்து விட்டு, அந்த மாணவியின் கணவரிடம் பரீட்சையை அவர் மனைவி மூன்று மணி நேரத்தில் முடித்தவிடுவார்கள் என்றும். இப்பொழுது எழுத இந்த பரீட்சையைத் தவறவிட்டால், பின் ஆறுமாதங்கள் கழித்துத்தான் எழுத முடியும், அதனால் வேலைவாய்ப்புகளும் தடைபடும் என்று எடுத்துக்கூறினார். அவரும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மூன்று மணிநேரம் கழித்து வந்து தம் மனைவியை அழைத்துச் சென்றார். அந்த மாணவி சரியான நேரத்தில் பரீட்சையையும் முடித்துவிட்டு தன் தந்தையின் இறுதிச் சடங்கிற்கும் சரியான நேரத்திற்குள் சென்றுவிட்டார். அந்த ஆண்டின் இறுதியில் அந்த மாணவிக்கு கல்லூரியில் உதவிப் பேராசிரியருக்கான பணியும் கிடைத்தது…

    கல்வித்துறையில் மட்டும் அல்லாது, விவசாயம், மருத்துவம், வியாபாரம், சுயதொழில் போன்றதுறைகளிலும் தக்க நேரத்தில் தக்க வழிகாட்டுதலைப் பெற்றவர்கள் அவரவரது தனித்திறமையாலும், கடுமையான உழைப்பாலும் அவர்தம் துறையில் உயர்ந்து விளங்குவதை நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பார்க்கின்றோம்… சில ஆபத்தான தருணங்களில் நல்ல நேரம் எப்படி, கைகொடுக்கும் என்பதற்கு உதாரணம் ஒரு நிகழ்வு…

    ஒரு கல்லூரி மாணவி மாடிச்சுவரில் ஏறிதற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் தருணத்தில் இருவரின் வேகமான ஒரு நிமிடச்செயலால் காப்பாற்றப்பட்டார். அந்தப் பெண்ணை மாடியில் பார்த்த கணத்தில் இருவர் விரைந்து மாடிக்கு செல்ல அந்த மாணவி மாடியில் உள்ள சுவரில் ஏறிக்குதிக்கப் போகும் தருணத்தில் அந்த இருவரும் ஒரு நிமிட வேகத்தில் எட்டி அந்த மாணவியின் இரண்டு கைகளையும் பிடித்தபடி இருக்க, அதை கீழே இருந்து பார்த்த மற்றமாணவிகள் ஓடி வந்து அந்த மாணவியின் கால்களை எட்டி சேர்த்துப்பிடித்து ஒரு மீனைத் தூக்கிப்பிடிப்பது போல் பிடித்து அந்த மாணவியை காப்பாற்றினார்கள். அந்த மாணவியின் வெகுளித்தனமான பெற்றோர்கள் கீழே கையை விரித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அந்த மாணவி தன் குடும்பத்துடன் அயல்நாட்டில வாழ்ந்து வருகிறாள்…

    சமீபத்தில் இயற்கையின் சீற்றத்தில் சென்னை மாநகரமே வெள்ளத்தால் சிக்கி அவதிக்கு உள்ளானது. அதில் நல்ல நேரம் பார்த்துக் காப்பாற்றியது.  நல்ல நேரம் அமையாதவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். துயரம் ஒருபுறம் இருந்தாலும், சென்னை வெள்ளம், மனிதநேயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது… நம் இளைய சமுதாயம், நம் பாரத நாட்டிற்கே உரிய சிறந்த பண்பு நலன்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்றபெருமையை அவர்களின் சமூகத்தொண்டு, ஒவ்வொரு தமிழனையும் உணர வைத்தது…

    இந்த நிகழ்வுகள் மூலம் அறிய வேண்டுவது என்னவென்றால்…? இந்த நல்ல மனம் படைத்தவர்கள்  செய்யும் நல்ல செயல்கள் எல்லாம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதோடு செய்யும் செயல்களுக்கு எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்ய முன்வரும் பண்புதான். மேலும், இந்த இளைய சமூகத்தினர் அவர்களாக முன்வந்து சமூக சேவை செய்யும் போது நம் பாரதத்தை உருவாக்கிய மறைந்த பெருந்தலைகள்கள், சமூக நலவாதிகள் மற்றும் இலக்கியவாதிகள் இன்றைய இளைஞர்கள் உருவிலே உலாவந்து கொண்டு இருக்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது…

    இதுபோன்ற நிகழ்வுகள் பற்றிய அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு. அதைப்பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மூலம் நல்ல எண்ணங்கள் பற்றிய சிந்தனை அலை பலரிடம் பரவ வாய்ப்புள்ளது. நல்ல சிந்தனைகளைக் கொண்ட நம் இளைஞர்கள் சமூதாயம் நல்ல வழிகாட்டுதலும், நல்ல நேரமும் தன்னகத்தே பெற்றுவிட்டால் நம் பாரதத் திருநாட்டை வளர்ச்சிமிக்க நாடாகவும், வலிமை மிக்க நாடாகவும் இந்த உலக அரங்கில் என்றென்றைக்கும் விளங்கச் செய்வார்கள் என்பது உறுதி…

    மனதால் இறந்தேன் மனத்தாலே சிறந்தேன்

    வாழ்வில் வெற்றி காற்றை மட்டும் சுவாசிக்கும் வாசக நண்பர்களே சிலர் சிரிப்பார்- சிலர் அழுவார் நான்  சிரித்துக் கொண்டே அழுகின்றேன், சிலர் அழுவார்- சிலர் சிரிப்பார்  நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்.  இது ளளகண்ணதாசன் அவர்களின் வரிகள்…

    இதை வாழ்ந்து காட்டியவர் கவியரசர். நடித்துக்காட்டியவர் நடிகர் திலகம்.

    நீங்கள் கண்ணதாசனா…? நடிகர் திலகமா…? இல்லை சராசரியான மனிதன் தான், அதனால்தான் என்னால் ஏதாவது ஒன்றை மட்டுமே செய்ய முடிகிறது.

    அதிலும், அழுவதுதான் அதிக நேரம் செய்ய முடிகிறது என்று சொல்கிறீர்களா…?

    எதனை முயன்றாலும், எத்தனையோ புத்தகங்கள் படித்தாலும், ஞானிகளின் போதனைகளைக் கேட்டாலும், அனுபவசாலிகளின் அறிவுரைகள் கேட்டாலும், பெரிய மாற்றமோ, ஏமாற்றமோ வாழ்வில் ஏற்படவில்லை என்று தோன்றுகிறதா…? என்னதான் எண்ணையை தேய்த்துக் கொண்டு உருண்டாலும்  ஒட்டும் மண்தான் உடம்பில் ஒட்டும் என்றமற்றவர் சொல்லும் வார்த்தைகள் நியாயம் என்று தோன்றுகிறதா…?

    கொஞ்சம் சிந்திக்க இந்த சில நிமிடங்களை செலவழியுங்கள்… நான் சொல்வதின் நியாயம் மெல்ல மெல்ல புரியத்தொடங்கும்.

    நம்முடைய ஒவ்வொரு நிமிடங்களும், ஏராளமான எண்ணங்களின் ஊற்றாகவே வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

    நம் மனம் ஒவ்வொரு நிமிடமும் பலப்பல மாயாஜால வித்தைகளை நமக்குள் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது.

    தடுமாற்றம், ஏமாற்றம் என்று மாற்றத்தை சொல்லிக்கொண்டிருக்கிறது நம் மனம். நாம்தான் மன் சொல்லும் தன் மாற்றத்தை உணர்ந்து கொள்ளாமல் தடுமாற்றத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.

    வீட்டைப்போலவே, அதிக நேரம் நாம் இருப்பது அலுவலகத்தில்தான். பலதரப்பட்ட மனிதர்களோடு, அவர்களின் சிந்தனைகள் எண்ணங்களோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவை, நமது மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு – தொழிலையும், அலுவலக வேலைகளையும் பெரிய அளவில் பதம் பார்க்கிறது.

    பல தருணங்கள்  அவற்று சில உங்கள் கவனத்துக்கு,

    வாழ்வின் தடுமாற்றங்களில், மனம் மிகவும் சோர்ந்து போய், துவண்டுபோய் இருக்கும். உங்கள் உறவினர் உடல் உபாதையால் தவித்துக்கொண்டிருக்கும். மருத்துவமனை செலவுகள் மலை போல தெரியும் தருணங்கள்.

    ஒரு நட்பு, உறவு (கணவன், மனைவி) பிரிந்து விடக்கூடிய விளிம்பில் நடந்து கொண்டிருக்கும் ஒரு மரணப்போராட்டம், மனப்போராட்டம்.

    மனிதனின் உழைப்போடு போட்டி போட்டு  எதிரே சவாலாக இருக்கும் பொருளாதாரத் தேவைகள், பணப்பற்றாக்குறை, இறுதி நாட்களை நெருங்கும் கடன் கொடுத்தவர்கள் நமக்கு தந்த கடைசி தேதிகள்.

    நம்முடைய வியாபாரத்தில் நமக்கு வரவேண்டிய பணம்  இன்னும் கைக்கு வராமல், தாமதமாக வரும் தடம் கூட தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தருணங்கள்.

    இப்படி, ஏதோவொரு சிந்தையில், இக்கட்டில் மனம் சிக்கித்தவித்துக்கொண்டு இருக்கின்ற சூழ்நிலைகளில்  உங்கள் அலுவலகத்தில் இதற்கெல்லாம் இடமில்லை என்ற நிதர்சனம். சுய பச்சாதாபதுக்கு சிறிதும் இடம் கொடுக்காமல்  வேலைகளைப் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம்.

    இங்கே  உங்கள் அலுவலக வேலைக்குத்தான் முதலிடமே தவிர மனப்போராட்டங்களுக்கோ, குழப்பங்களுக்கோ வேலை இல்லை.

    ஆம்…

    உங்கள் குழப்பங்கள், உங்கள் உற்சாகத்தை சூறையாடுவது தடுக்கப்பட வேண்டும். அவை, உங்கள் வளர்ச்சியை தடுப்பதை அனுமதிக்கக் கூடாது. உங்கள் ஆற்றலை, அறிவுத்திறனை வெற்றி பெற வேண்டிய தகுதி உடைய வாய்ப்பை, விலையாகக் கொடுக்க முடியுமா…?

    உங்கள் மனம் உங்கள் கண்ணோட்டத்தை, தொலைநோக்கு பார்வையை, திறமையை, உங்களில் புதஹிந்திருக்கும் திறமையை, கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து  மனதாலே இரைந்தேன் என்ற நீங்கள் சொல்கிறீர்களோ, இல்லையோ, மனதாலே இறந்தவன் என்று பட்டம் கட்டப்பட்டால் என்ன செய்வது…?

    இந்த சாவல்களை சந்திக்க என்ன செய்வது…?

    மனதாலே சிறந்தேன் என்று சொல்லி மண்ணை பிளந்து வெளியே வந்த ஒரு செடியைப் போல, மரத்தைப்போல மலர்களும், கனிகளும் கொடுக்கும் உயர்ந்த நிலைக்கு வர என்ன செய்வது…?

    சுலபம்…! மிகவும் சுலபம்…!

    பேசுங்கள், பகிருங்கள், சிந்தியுங்கள்

    மனப்போராட்டம் அதிகமாக இருக்கும்போது இவைகளை செய்வது சற்று சிரமமாக தோன்றும். முயலுங்கள், வெற்றி உண்டு. உங்கள் முதலாளியுடன் சூழ்நிலைகளை பகிருங்கள். உங்கள் வலிகளின் தன்மைகளை உணரும்படி சொல்லுங்கள். உங்கள் வார்த்தைகளில் மென்மையும், கவனமும் இருக்கட்டும். உங்கள் சிக்கல்களின் நீல, அகல, ஆழம் அவருக்குப்புரியும்படி தன்மையாக விளக்குங்கள். ஒரு குடுவைக்குள் அடைக்கப்பட்ட கள்ளாக இல்லாமல் உங்கள் முதலாளியுடனும் நெருங்கிய நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளும்போது மனதின் பாரம் பெருளவில் குறைவதை உணர்வீர்கள்.

    சிந்தியுங்கள்…

    தேவையில்லாத நபர்களுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் போது, அவை அலுவலகத்தில் உங்கள் மதிப்பு கெடும் வகையில் கூட மாற வாய்ப்பிருக்கிறது. உங்கள் வேலை சூழ்நிலைகளை பாதிக்கும் வகையிலும் கூட இருக்கலாம். எனவே, பேசுங்கள், பகிருங்கள்  அதே நேரம் சிந்தியுங்கள்.

    உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்…

    முதலில் நீங்கள் மனிதர்தான்  மாயாஜாலம் செய்யும் மந்திரவாதி அல்ல என்று உணருங்கள். ஒரே நேரத்தில் அலுவலக வேலையும், மனஉளைச்சலையும் போட்டு அழுத்தி – உங்கள்மூளையின் சிந்தனைத்திரனை பாதிக்காதீர்கள்.

    வேலையிலிருந்து ஒரு சின்ன ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்… தொலைபேசியில் மனதிற்கு பிடித்தவருடன் சிறிது நேரம் பேசுங்கள். உங்கள் அலுவலகம் இருக்கும் தெருவில் 5 நிமிடம் நடைபயிற்சி செய்யுங்கள். கணினியில் ஏதாவது சுவாரசியமான விஷயத்தை பாருங்கள் அல்லது படியுங்கள். மனதை லேசாக வைத்துக்கொள்ள பயிலுங்கள்.

    சிக்கல்களிலிருந்து சற்று விலகி இருந்துவிட்டு  மீண்டும் அதை கையாள வரும்போது மனம் ஒரு பெரிய ஆற்றல் காலமாகவே மாறி ஒரு தெளிவான பார்வையும், சிந்தனையும் கொண்டு வெற்றிகரமாக தீர்வு காண முடியும்.

    இப்படி பிரிந்தால்  ஒவ்வொருவரும் பிரச்சனைகளை தீர்க்கவும் முடியும், வேலைகளை பார்க்கவும் முடியும்.

    உணர்ச்சிகளை அடக்குங்கள்…

    நினைவில் கொள்ளுங்கள். உங்கள் முதலாளியோ, நண்பனோ  உங்கள் மனப்போராட்டத்தை முற்றிலுமாக தீர்க்கும் மருத்துவர் அல்ல. உங்கள் பணிகளை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும், தோள் கொடுக்கும் தோழன் மட்டுமே. எனவே, அழுது, புலம்பி அவர்களையும் சங்கடப்படுத்தாதீர்கள். உற்சாகமாகவே முகத்தை வைத்துக்கொண்டு மற்ற ஊழியர்களுடனும் சகஜமாகவே இருங்கள். சோகமாக முகத்தை வைத்துக்கொள்வதால் யாருக்கும் எந்த பலனும் இருக்கப்போவதில்லை.

    பிரித்து  ஆளுங்கள்…

    தெளிவான சிந்தனையுள்ள நபராக நேரத்தை பிரித்து ஆளுங்கள். சொந்த கவலைகளுக்கு என்று குறிப்பிட்ட மணி நேரத்தையும், அலுவலக பணிகளுக்கு என்று குறிப்பிட்ட நேரத்தையும் பிரித்து கண்டிப்பாக அந்த நேரத்தில் அந்த வேலையை மட்டுமே பார்க்க வேண்டும். இரண்டு தொப்பிகளையும் ஒரே நேரத்தில் தலையில் போட்டுக் கொண்டீர்கள் என்றால், ஒரு கோமாளியாகவே மற்றவர்களுக்கும் தெரிவீர்கள். ஜாக்கிரதை.

    தீர்வுகளை சிந்தித்து எழுதுங்கள்…

    சிக்கல்கள் நிறைந்த காலங்களில் குறைந்த நேரம் அலுவலக பணிகளை செய்வது மற்ற வேலையாட்களின் குறுக்கீடு இல்லாத நேரத்தில் பணிகளை செய்வது, வீட்டிலேயே இருந்தபடி அலுவலக பணிகளை செய்யும் பட்சத்தில் அதை செய்வது, இப்படி சிலபல தீர்வுகளை சிந்தித்து செயல்படுத்த முயலுங்கள். அனைவருக்குமே இதுபோன்ற சில இருட்டான பக்கங்கள், நாட்கள் வாழ்வில் வரும். அப்போது, அலுவலக பணிகளிலிருந்து சற்று விலகி இருந்து அல்லது லாவகமாக கையாண்டு, வேலைக்கும், தனக்கும் எந்த இடையூறும் இல்லாமல் இதுவும் கடந்து போகும் என்ற தெளிவோடு, மீண்டும் வெற்றி வலம் வருவதும் வெற்றியாளர்களின் வழக்கமாகும்

    இந்த மாற்றத்தை, தெளிவை தருவதும் நமது மனம்தான் என்பதை மறக்க முடியாது அல்லவா…?

    “மனதாலே இரைந்தேன், மனதாலே சிறந்தேன்” என்பது தன்னம்பிக்கை கொண்ட வெற்றியாளர்களின் தாரக மந்திரம்…!

    சரிதானே…!

    அடுத்த மாதம் “மனிதன் மனிதனாக வாழ” அவசியமான அம்சங்களைப்பற்றி விவாதிப்போம்…!

    வெற்றி பெறுவதற்கான இரகசியப்பாதைகள்

    உயர்ந்த லட்சியங்கள் உயர்ந்த எண்ணங்கள் நம்மிடம் உள்ளதா…? என நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால், அதை அடைய எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்தால், நமது திறமைகளை ஆக்கப்பூர்வமாக, முழுமையாக பயன்படுத்துகிறோம் என்று பொருள். நம்மை நாமே உயர்த்திக் கொள்கிறோம். படிப்படியாக செதுக்கிக் கொள்கிறோம் நம் மனம் வளமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் ஒளி தீபமாக, அரிய பொக்கிஷமாக, சாதனையாளராக, புகழ் பெற்றவராக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    எதையும் வித்தியாசமாகப் பார்த்தவர்கள் வித்தியாசமாக செய்தவர்களதான் வெற்றி பெற்றவர்கள். தோல்விக்கான காரணங்களை பட்டியல் இடுவதில் காலத்தை தொலைக்காதவர்கள்.

    நிறையப்புத்தகங்களைப்படித்தவர்கள், நிறைய விஷயங்களை தெரிந்து கொள்பவர்கள்தான் சாதனைப்படைத்தவர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக விஷயம் தெரிகிறதோ, அந்த அளவுக்கு அவ்வளவு வெற்றி பக்கத்தில் இருக்கிறது. நம்மிடம் உள்ள தனிச்சிறப்பு மிக்க ஆற்றலை கண்டுபிடித்து வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர் செய்ய முடியாத ஒன்றைசெய்து முடிக்கும் ஆற்றலை நமக்கு கடவுள் தந்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. குடும்பத்தினரோடு சகநண்பர்களோடு இணக்கமாக செயல்பட்டால் வெற்றி நிச்சம். இவ்வுலகில் ஒரு தடவைதான் நமது வாழ்வு. வாய்ப்புக்களின் கதவைத் திறப்பதும் மூடுவதும் நம் எண்ணங்களே.

    இலட்சியம் இல்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரம் போன்றது. நம் இலக்கு என்ன…? எந்தத் துறையில் சாதிக்கப்பபோகிறோம்…? இலட்சியம்தான் நம்மை செயல்பட வைக்கும் நெம்புகோள். அன்னல் காந்தியின் இலக்கு, சுதந்திரம், அன்னை தெரஸாவின் இலக்கு தொண்டு. பெர்னாட்ஷாவின் இலக்கு பெரிய எழுத்தாளராவது. அலெக்சாண்டரின் இலக்கு உலகை வெல்வது. ஜார்ஜ் எஸ். பார்க்கரின் இலக்கு உலகில் தலைசிறந்த பேனாவைத் தயாôரிக்க வேண்டும் என்பது. பெரியாரின் இலக்கு பகுத்தறிவை பரப்புவது. அதுபோல, கொலம்பஸ் வேறு ஒரு நாடு இருக்கிறது என்று எண்ணினார். அதைக் கண்டுபிடிப்பதே தனது இலட்சியமாகக் கொண்டதால்தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

    பதினாறு முறைவாழ்க்கையில் தோல்வி கண்டவர்தான் ஆப்ரகாம் லிங்கன், பலமுறைதோற்றுதான் சிலந்தி வலை பின்னுகிறது. தாமஸ் ஆல்வா எடிசன் பார்க்காத தோல்வியா…? தோல்விகள் நிரந்தரமானவை அல்ல. அது ஒரு அனுபவம். அது ஒரு தற்காலிகத்தடை வாழ்க்கை என்பது வாய்ப்புகளின் தொகுப்பு. நம் கண்முன் ஆயிரமாயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன. வாய்ப்புகள் கதவைத் தட்டும் போது தயாராக இருப்பதுதான் வெற்றியின் இரகசியம். பராசக்தி படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்புதான்  கணேசனை சிவாஜிகணேசனாக, நடிகர் திலமாக மாறபாதை வகுத்தது.

    சோம்பல் ஒரு தொற்று நோய். சோம்பல் மனிதனை சீக்கிரம் தின்றுவிடும். நம்மை தோற்கடிக்கும் எதிரிகளில் முதலாவது எதிரி சோம்பல். நம் முன்னேற்றத்தைக் கொன்றுவிடும். சோம்பல் நம்மை இன்னும் கொஞ்ச நேரம் தூங்க அழைக்கும் பேழ, சுறுசுறுப்பு நம்மை இன்னும் கொஞச்ம் நேரம் கூடுதலாக உழைக்க வைக்கிறது. தேனீ, எறும்பு போல சுறுசுறுப்பு தேவை.

    நாம் விரும்புவதை, நமது லட்சியத்தை அடைய நாம் கொடுக்கும் மாபெரும் விலைதான் உழைப்பு. சலிக்காத உழைப்பு, கடின உழைப்பு, அயராத உழைப்பு. சாதனைக்க எல்லை கிடையாது. அறிவு சார்ந்த உழைப்பு மட்டும்தான் உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. உழைப்பு ஆறு போன்றது. முன்னேறுகிறது. சோம்பல் தேங்கிய சாக்கடை போன்றது. உழைப்புதான் வெற்றி பெறுவதற்கான உண்மையான இரகசியப்பாதை.

    நம் ஒவ்வொருவருக்கும் ஓர் அற்புதமான சக்தியை, ஆற்றலை தனித்தன்மையை கடவுள் தந்துள்ளார். அதை வெளிக்கொணர பயன்படுத்த வேண்டும். பள்ளிப்படிப்பை படிக்க லாயக்கற்றவர்கள் என்று அனுப்பப்பட்டவர்கள்தான் எடிசன், ஹென்றிபோர்டு, இராபர் கிளைவ், ஐன்ஸ்டீன் ஆகியோர். உனக்கு நடிப்பெல்லாம் வராது என்று திருப்பி அனுப்பப்பட்டவர்தான் உலகப்புகழ்பெற்றசார்லி சாப்ளின். உனக்கு இலக்கணம் தெரியாது என அவமானப்படுத்தப்பட்டவர்தான் இரவீந்தரநாத் தாகூர்.

    எப்போது நீ விமர்ச்சனத்திற்கும், தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டு விட்டாயோ அப்போதே நீ சமுதாயத்தால் அங்கீகரிக்கபட்டு விட்டாய் என்பது உண்மை. ஊக்கமுடையவர்களுக்கே இந்த உலகம் சொந்தம். விளக்கு தூண்டுகோல் போல, எஞ்சினுக்கு நீராவி போல, வாழ்க்கைக்கு, வளர்ச்சிக்கு அவசதிம் தேவை உற்சாகமும் ஊக்கமும்.

    பாராட்டுவதில் சிக்கனம் வேண்டாம். யாரிடமும் வாக்குவாதம் செய்வதால் எந்த பயனும் கிடையாது. உழைப்பு வறுமையை விரட்டுகிறது. கிரேக்க மன்னன் அலெக்சாண்டரை எதிர்க்க புருஷோத்தமன் தயங்கவில்லை. மாற்றானிடம் மண்டியிடக்ககூடாத என்று வீர முழக்கம் செய்த பிரித்விராஜ், ஆப்கானியர் கோரி முகமதுவை எதிர்த்துப் போரிட்டார். தன் கடைசி மூச்சுவரை முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பை எதிர்ப்பதில் ஓயவில்லை மராட்டிய மன்னன் வீர சிவாஜி. அசூர பலம் கொண்ட எதிரியையும் அஞ்சாமல் எதிர்த்து நின்று வரலாற்றில் அழியாத இடம் பெற்றவர்கள்.

    அமைதியான கடல் திறமையான மாலுமிகளை உருவாக்கியதில்லை. சுமைகளைக் கொடுத்த கடவுள் தோள்களையும் கொடுத்து இருக்கிறார். நம் வாழ்க்கையில் எற்படும் பிரச்சனைகள்தான் நம்மை உயிர்துடிப்போடு வைத்திருக்கிறது. பிரச்சனைகள்தான் மனிதர்கள் யார் என்று காட்டுகிறது. எதுவுமே எப்போதும் நீடிப்பதில்லை. நம் பலம் ,நமது பலவீனம் நமக்கு கிடைத்த வாய்ப்புகள். நம் லட்சியத்தை அடைய வழி ஆகியவற்றைசிந்திக்க வேண்டும்.

    கவலைப்படுவதற்கு அல்ல நாம் வாழும் உலகம். கவலை பிரச்சனைளைத் தீர்க்காது. கவலை நாளைய துன்பங்களை அகற்றாது. மாறாக இன்றைய வலிமையை அழித்து விடுகிறது. கவலைக்கான தன்னிகரற்ற் மருந்து பிரார்த்தனை. துணிவுதான் நமக்கு பாதுகாப்பு. வரலாறுகளைப் படிப்பதன் மூலமும், வரலாறு படைத்தவர்களோடு பழகுவதன் மூலமும் துணிவைப் பெறலாம். நமக்கு கிடைத்தவற்றைஏற்றுக் கொள்ள வேண்டும். ஒப்பிட்டுப் பார்க்காமல் இருந்தால் மன அழுத்தம், மன இறுக்கம் ஏற்படுவதில்லை. மன அழுத்தம் நோய்களை ஏற்படுத்தி விடும்.

    பிறப்பு – இறப்பு, இன்பம்  துன்பம், உறவு -பிரிவு, லாபம்  நஷ்டம், பாராட்டு  தூற்றல், ஏற்றம்  இறக்கம், வெற்றி – தோல்வி எல்லாம் மாறி மாறி வருவதுதான் மனித வாழ்க்கை.

    விதி ஒரு கதவை மூடினால், நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களின் வாழ்க்கைதான் உலக சரித்திரமானது. பலர் பிறரது சாதனைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிரோ மக்கத்தான சாதனைகளை படைத்தக் கொண்டிருக்கிறார்கள். பிறருடைய உதவியில்லாமல் தனக்குத்தானே எந்த நட்புறவோடு பிறரிடம் பழனால், அந்த நட்புறவு பல மடங்காக நம்மிடம் திரும்பக் கிடைக்கும். பிறரை நாம் நேசித்தால்தான் பிறரால் நாம் நேசிக்கப்படுவோம். உபயோகிக்காத பாதைகளில் களைகள் முளைக்கும். நம்மில் ஒரு வழிபாதைக் கூடாது.

    நமது நண்பன் நமது நல்ல குணங்களை மிகைப்படுத்துகிறான். தீய குணங்களை கண்டுகொள்வதில்லை. நமது எதிரியோ நமது தீய குணங்களை மிகைப்படுத்துகிறான். நமது நல்ல குணங்களை கண்டு கொள்வதில்லை.

    நம் குறைகளை முதலில் காண்பவர்கள் நமது எதிரிகளே. எதிரியை பயன்படுத்தினால்தான் முன்னேறலாம். தேவையில்லதவற்றில் நேரத்தை வீணடிப்பது நமது வளர்ச்சியைக் கொல்லும். நாட்காட்டியில் ஒவ்வொரு நாளைக் கிழிக்கும் போதம் நம் வாழ்நாள் கழிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் உழைப்பிலேயே முதலீடு செய்பவர்கள் முன்னேற்றப்பாதையில் பயணிக்கிறார்கள்.

    எந்த நிலையும் மாறும் என்பது மாறாத உண்மை. கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி, இலட்சியத்தில் உறுதி இவையே வெற்றியின் ரகசியங்கள். உலகில் மனிதனைத் தவிர எந்த உயிரினத்திற்கும் கற்பனைவளமோ, சக்தியோ கிடையாத. எதையும் உருவாக்கும் திறன் மனிதனுக்கு மட்டுமே உள்ளது. கனவு காண்பவனும் மனிதன் மட்டுமே. பெரிய தலைவர்கள், சாதனையாளர்கள், தொழில் அதிபர்கள் எல்லோருக்கும் உள்ள பொதுவான விஷயம் உடற்பயிற்சி ஆகும். இவ்வுலகை வெல்ல, உடலும், உள்ளமு; உரம் பெறஉடற்பயிற்சி மிக அவசியம். பிறகர் செய்யும்நல்ல விஷயங்களைப் பாராட்டத் தவறக்கூடாது. வெறுப்பு வெறுப்புகளினால் நீக்கப்படுவதில்லை. நாம் பணிபுரியும் இடத்தில் வெற்றி பெறமுதல் நிலை அனைவரிடமும் அன்பாக பேசுதலே ஆகும்.

    முயற்சி இல்லையேல் வெற்றி இல்லை. பட்டங்கள் பறப்பது காற்றைஅனுசரித்தல்ல எதிராகத்தான். இருப்பதைக் கொண்டு திருப்தி அடைபவதே மகிழ்ச்சி நிறைந்தவராவார். சிறிய கோபத்தினை அடக்குவது பெரிய துன்பத்தை தடுத்து விடுகிறது. கோபம் விஷம் குடிப்பதற்குச் சமமானது. கோபம் கொண்டவனைத்தான் கோம் அதிகமாக தாக்கவும் செய்கிறது. தொழில் எதிலும் சிறுமையோ, பெருமையோ இல்லை. ஆது செய்யப்படும் விதத்தில்தான் சிறுமையும், பெருமையும் இருக்கிறது.

    புத்தகம் படிப்பது பல நன்மைகளை படிப்பவருக்கு ஏற்படுத்துகிறது. நம்மை கூர்படுத்துகிறது. அறிவு பெருகுகிறது. நூலகம் பலரது வாழ்வில் நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. நம் வாழ்வை புரட்டிப்போடும் வல்லமை நல்ல புத்தகங்களுக்கு உண்ட. வசந்தம் அழைக்கிறது. எதிர்கால பூமி நமக்கு சொந்தமானது. நமக்காக விடியல் உருவாகிறது. உதயமாகிறது.

    குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு

    ஜிங்கின் பயன் (Zinc)

    வயிற்றுப்போக்கின் பொழுது ஜிங்க் பொருள் கொடுக்கப்பட்டால் அது வயிற்றுப்போக்கின் கால அளவு மற்றும் அதன் தீவிர நிலையைக் குறைக்கும். வயிற்றுப்போக்கின் ஆரம்ப காலத்தில் எல்லா நோயாளி களுக்கும் ஜிங்க் சார்ந்த பொருள் வழங்கப்படுகிறது. ஏனென்றால் அவை வயிற்றுப்போக்கின் அளவைக் கட்டுப்படுத்தும். இழந்த ஜிங்க் சத்தைக் குழந்தைகளுக்கு மீண்டும் கொடுத்தால் அவை குழந்தைகளின் நலத்தை வரும் காலங்களில் காப்பாற்றும். ஜிங்கின் பயன் உலக சுகாதார மையம் மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உலக நாடுகள் முழுவதும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு ஒரு நாளுக்கு 20 மி.கி. அளவு மருந்து கொடுக்கப்படுகிறது. 4-6 மாதத்திற்குக் குறைவான கைக் குழந்தைகளுக்கு ஒரு நாளுக்கு 10 மி.கி. அளவு மருந்து கொடுக்கப்படுகிறது.  ஜிங்க் 10 லிருந்து 14 நாட்கள் வரை கொடுக்கப்படுகிறது.

    வயிற்றுப்போக்கின் போது

    உணவுக்கட்டுப்பாட்டு சிகிச்சை

    குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் போது அவர்களுக்கு புரதச் சத்துள்ள உணவுகள் மற்றும் எளிதில் செரிமானமடையக் கூடிய உணவுகள் கொடுக்கப்பட வேண்டும். இது குடல்நாளத்தில் நீர் மற்றும் சோடியத்தின் சத்தை உட்கொண்டு விரைவாகக் குணமடைய உதவுகிறது.

    • கடுமையான வயிற்றுப்போக்கின் போது தொடர்ச்சியாகத் தாய்ப்பால் கொடுத்தல்.
    • எண்ணெய் அல்லது சர்க்கரை குறைவாயுள்ள, அதிக பயன் தரக் கூடிய உணவுப்பொருளைக் கொடுத்தல்
    • அதிக நார்ச்சத்துள்ள உணவுப்பொருட்களைத் தவிர்த்தல்
    • கடுமையான வயிற்றுப்போக்கின் போது தொடர்ச்சியாக சர்க்கரை சேர்த்த பால் கொடுத்தல் கூடாது.

    வயிற்றுப்போக்கு வராமல் தடுத்தல்

    வயிற்றுப் போக்கைத் தடுக்க தாய்ப்பால் கொடுப்பதின் அளவை உயர்த்த வேண்டும். தாய்மார்கள் முறையாக வீட்டில் உணவு சமைக்க வேண்டும் கலப்படத்தைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான தண்ணீர் பயன்படுத்த வேண்டும் மற்றும் காய்களைக் கழுவ வேண்டும். உணவு சமைப்பதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும். எல்லா நேரங்களிலும் சுத்தமான உணவு பயன்படுத்துவதால் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கலாம்.

    உடலில் நீர்பற்றாக்குறையைக் கண்டறிதல்

    வயிற்றுப்போக்கு ஏற்படும் போது உடலின் நீர் மற்றும் சக்திகளின் அளவு குறைந்து நீர் பற்றாக்குறை ஏற்படும். இந்த அறிகுறிகளை அடிப்படையாக வைத்து நீர்பற்றாக்குறையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை

    1. நீர்பற்றாக்குறை இல்லை
    2. சிறிதளவு நீர்பற்றாக்குறை
    3. அதிகளவு நீர்பற்றாக்குறை

    சிகிச்சை முறை A

    இப்பிரிவில்  உள்ள குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு இருக்கும், ஆனால் உடலில் நீர் பற்றாக்குறை இருக்காது. இச்சிகிச்சையின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் உடல்நீர் பற்றாக்குறையைத் தடுத்தல். நீர் மற்றும் எலக்ட்ரோலைட்ஸ், மலம் கழிக்கும் போது வெளியேறும். ஓ.ஆர்.எஸ். (ORS) நீர் கரைசல், உப்பிட்ட கஞ்சித் தண்ணீர், இளநீர், சாதாரண தண்ணீர், உப்பிட்ட சூப், உப்பிட்ட தயிர் போன்ற நீர் ஆகாரங்களைக் கொடுக்க வேண்டும்.

    பொதுவாக மக்களிடம் இளநீரால் சளி, காய்ச்சல், ஏற்படும் என்ற எண்ணம் உள்ளது. இது முற்றிலும் தவறாகும். குறிப்பாக வயிற்றுப்போக்குக் காலத்தில் இளநீர் கொடுப்பது மிகவும் சிறந்தது. இளநீரில் தாதுப்பொருள்கள், உப்பு, சர்க்கரை உள்ளது. இது வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பிற்கு ஏதுவானது. கார்பனேட்டட் பானங்கள், பழச்சாறு, தேநீர், காபி போன்ற ஆகாரங்களைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக இந்த சிகிச்சை முறையில் வரும் குழந்தைகள் நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்தாலும், வயிற்றுப்போக்கு நிற்காது. மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தாலோ, குழந்தைக்கு உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டாலோ, தொடர்ச்சியாக வாந்தி எடுத்தாலோ சரியாக சாப்பிடாமலோ, நீர் குடிக்காமலோ, காய்ச்சல், மலத்தில் இரத்தம் காணப்பட்டாலோ தாய் குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

    வீட்டில் ORS  தயாரிக்கும் முறை

    1 பங்கு உப்பு மற்றும்

    8 பங்கு சர்க்கரை கரைசல் நீர் (அளவு : 1 லி)

    சிகிச்சை முறை B

    இது சிறிதளவு உடலில் நீர் பற்றாக்குறை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை ஆகும். சிகிச்சை முறை ஆயின் முக்கிய குறிக்கோள் என்ன வென்றால், உடலிலிருந்து எவ்வளவு நீர் வெளியேறு கிறதோ அதற்கேற்ப நீர் செலுத்த வேண்டும். ஓ.ஆர்.எஸ். (ORS)  நீர் கரைசல் 75 மிலி/கிலோ 4 மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டும். உடலில் நீர் பற்றாக்குறையின் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கவனிக்கவும். குழந்தையின் வயதுக்கேற்ற முறையில் ஓ.ஆர்.எஸ். (ORS) நீர் கரைசல் கொடுக்கவும். 4 மணி நேரத்திற்குப் பிறகு உடல் நீரின் அளவை மறுபடியும் பரிசோதித்து அதற்கேற்றவாறு சிகிச்சையைத் தொடர வேண்டும்.

    உலகச் சுகாதார உப்புநீர் கரைசல் (W.H.O. ORS)

    உப்பு நீர் கரைசல் தண்ணீருக்கு உலக சுகாதார மையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதில் சர்க்கரை மற்றும் உப்பு உள்ளது. இது ஒவ்வொரு நாட்டின் கலாச்சார முறைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படுகிறது. 95-97 சதவிகித வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர். எஸ் கரைசல் உடல் நீர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்கிறது. 3-5% குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் பயனளிப்பது இல்லை. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இரத்தக்குழாய் வழியாக நீர் செலுத்த வேண்டும். ஓ.ஆர்.எஸ் பயனளிக் காததன் காரணங்கள்,

    • அடிக்கடி வாந்தி எடுத்தல்
    • தவறான முறையில் ஓ.ஆர்.எஸ். தயார் செய்தல்
    • வயிறு வீக்கம்

    சிகிச்சை முறை C

    அதிகளவு நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் குழந்தைகளுக்கு இரத்தக்குழாய் வழியாக நீர் செலுத்த வேண்டும். அவ்வாறு ஊசி போடமுடியாத நிலையில் மூக்கு வழியாக குழாயைச் (Nasogastric tube) செலுத்தி ஓ.ஆர்.எஸ் கொடுக்கவும். ரிங்கர் லேக்டேட் அல்லது நார்மல் சலைன் ஆகியவை இரத்தக்குழாய் வழியாகச் செலுத்துவதற்கு சிறந்த நீராகும். டெக்ஸ்ட்ரோஸ் கரைசல் செலுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. ஆகாரம் ஊட்டுதல்

    ஓ.ஆர்.எஸ் கரைசல் சிகிச்சை முறை குழந்தைக்குப் பசியை அதிகக்கிறது மற்றும் சோடியம், பொட்டாசியத்தின் அளவைச் சீர்படுத்துகிறது. ஓ.ஆர்.எஸ் கொடுத்த உடனே தாய்ப்பால் கொடுப்பதால் வயிற்றுப்போக்கிலிருந்து எளிதில் விடுதலை கிடைக்கும்.

    தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப் பாலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குடல் வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவதோடு, ஊட்டச் சத்தையும் அதிகரிக்கிறது.

    பெரிதளவு நீர் பற்றாக்குறை இல்லாத குழந்தை களுக்குத் தாய்ப்பால் மற்றும் இதர உணவுகளைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கப் படாத குழந்தைகளுக்குப் பாலுடன் சேர்த்துத் தானியங்களையும் கரைத்துக் கொடுக்க வேண்டும். குறைந்த அளவிலான உணவினை அடிக்கடி கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.

    உடல் நிலை சீராகும் போது எப்போதும் உட்கொள்வதைவிட 1டீ முறை அதிகளவு உணவினை உட்கொள்ளச் செய்ய வேண்டும்.

    ஆன்டிபயாட்டிக்ஸ் (Antibiotics)

    பொதுவாக அதிகமாக வயிற்றுப் போக்கை ஏற்படுத்துவது வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளின் விஷப்பொருள் (toxins) ஆகும். இவற்றிற்கு ஆண்டி பயாட்டிக் தேவையில்லை. விப்ரியோ காலரா, ஷஜெல்லா மற்றும் என்டமிபா போன்ற கிருமிகளுக்குக் கண்டிப்பாக ஆன்டிபயாடிக் கொடுக்க வேண்டும்.

    ஈ-கோலை, எர்ஸினியா, சால்மோன்னல்லா போன்றவைக்கு சில சூழ்நிலைகளில் ஆன்டிபயோடிக் கொடுக்க வேண்டும்.

    வயிற்றுப்போக்கைத் தடுக்கும் மருந்துகள்

    1. குடலின் செயல்பாட்டைக் குறைக்கும் மருந்துகள்
    2. அதிக நீர் உற்பத்தியாவதைத் தடுக்கும் மருந்துகள்

    குழந்தைகளுக்கு இந்த மருந்துகளைக் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது.

    ப்ரோபயாடிக் (Probiotics)

    கரோபயாடிக்ஸ் என்பது உயிருள்ள நுண்ணுயிரி. இது வயிற்றுப்போக்கைத் தடுப்பதற்குப் பயன்படுகிறது

    இதில் லேக்டோ பேசில்லஸ் என்னும் நுண்கிருமியே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    தொடரும்…

    வெற்றிக்கு முதல்படி நேர நிர்வாகமா? அல்லது நேரத்தை உருவாக்கிக் கொள்வதா?

    பல தொழிற்துறை நண்பர்கள் தங்களுக்குள்ளே வேலைப் பளுவையும் தனக்கு முன்பட்டியலிடப்பட்டுள்ள பணிகளை முடித்து வைக்க நேரமின்மை பற்றியும் அதனால் புதிய தொழில் தொடங்க இயலாது போனது பற்றியும் வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார்கள்.

    இந்த வேலையை நீங்கள் முடித்திருந்தால் உங்கள் தொழில் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும், விரிவாக்கத்திற்கும், நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்குமே என்று சொல்லுகிற போது அவர்கள் சொல்லுகிற ஒரே பதில் இருக்கிற பணிகளை முடிக்கவே நேரம் கிடைப்பதில்லை. இந்த புதிய திட்ட வேலையை தேர்வு செய்வது எப்படி? என வருந்துகிறார்கள்.

    தொழில் முனைவோருக்கு நல்ல திட்டங்கள், நல்ல செயல்கள், வெற்றி பெறுவதிற்குறிய உத்திகள், அதை செய்து காட்டக்கூடிய திறமைகள், அதற்கு தருகிற உழைப்புகள், தொழிற் நுட்ப அறிவுகள், அதற்குரிய நிபுணத்துவம், கண் எதிரே வாய்ப்புகள் இத்தனையும் இருந்தாலும் கூட அவர்களுக்கு அந்தக் காரியத்தைச் செய்து முடிக்க போதுமான நேரம்  கிடைப்பதில்லை. நேரத்தை ஒதுக்க முடியவில்லை.

    தொழில் நிமிர்த்தமான பல கூட்டங்களுக்கு வருவதற்கே அவர்களுக்கு நேரம் போதுவதில்லை. பணிகளை சரியாக தொடங்குவதற்கும் நேரம் இல்லை. தொழில் நிபுணர்களாகவும், மேதைகளாகவும் இருந்தாலும் கூட தலைமுûறை தலைமுறையாக  வருகிற நேர நிர்வாக நுட்பத்தை தவிர மாற்று வழிகளை யோசிக்கக்கூட நேரம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் கையில் நேரம் கிடைத்தால் இன்னும் பல வெற்றிகளை அவர்கள் பெற முடியும்.

    வெற்றியோடு கைகுலுக்க வேண்டுமென்றால். கிடைத்துள்ள நேரத்தை பகிர்ந்து கொள்வது பற்றிய உங்களுடைய பார்வையும், கண்ணோட்டத்தையும் மாற்றிக் கொள்ள தயராக இருக்க வேண்டும். நேர நிர்வாக உத்தியைவிட, நேரத்தை உருவாக்கிக் கொள்கிற உத்தியை கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும் .

    நேர நிர்வாகம் பற்றித்தெரியும். அது என்ன நேரத்தை உருவாக்கிக் கொள்வது? என்று கேட்கலாம். நிமிடத்திற்கு நிமிடம் அட்டவணையிட்டு ஒரு வினாடியைக்கூட வீணாக்காமல் நேரப்படி பணிகளைத் தொடங்குவதும், நேரப்படி பணிகளைத் தொடங்குவதும், நேரப்படி பணிகளை முடிப்பதும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்தப் பணியை முடித்து விட்டு, அடுத்தடுத்தப் பணிகளை முடிப்பதும் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன் தருகிற வகையில் உபயோகப்படுத்திக் கொள்கிற திறமைதான் நேர நிர்வாக உத்தியாகும்.

    நேரத்தை  உருவாக்கிக்க கொள்வது என்பது, நேர நிர்வாக மேலாண்மையை விட எளிதானது. மேலை நாட்டு அறிஞர்கள், அனுபவசாலிகள், வெற்றியைத் தொட்ட வித்தகர்கள் அதற்கு இரண்டு சுலபமான வழிகளை நமக்கு சுட்டிக்காட்டுகிறார்கள்.

    1. ஒவ்வொரு பணிக்கும் 10 நிமிடங்களுக்கு முன்பாகவே அதைத் தொடங்க தயராக இருங்கள்.

    ஒரு செயலை அல்லது பணியைத் தொடங்கவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே நீங்கள் மனதளவிலும், நேர அளவிலும் தயராக இருக்க வேண்டும். அந்தப்பணி குறித்து உங்கள் எண்ணங்களை வகைப்படுத்திக் கொள்ளவும், அதைப்பற்றி யோசித்துக் கொள்ளவும், அந்த  சூழலை  உணர்ந்து கொள்ளவும், வரிசைப்படுத்திக் கொள்ளவும் அந்த 10 நிமிடங்கள்  உங்களுக்கு போதுமானதாக அமையும். இந்த 10 நிமிடங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது? இது ஒரு மிகப்பெரிய கேள்வி?

    காலை 6 மணிக்கு எழுகிற பழக்கம் நீங்கள் கொண்டிருந்தால்   10 நிமிடம் முன்னதாகவே 5.50 க்கு எழுத்து விடுங்கள். அந்த 10 நிமிடம் ஒவ்வொரு  பணிக்கும் போனஸாக கிடைக்கும். 10 மணிக்கு நீங்கள் பணியைத் தொடங்க வேண்டும் என்றால் 9.50 க்கு அந்த இடத்தில்  பழகிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் இன்னும்  10 நிமிடம் இருக்கிறதே ஒரு போன் செய்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அந்த தொலைபேசித் தொடர்புஅடுத்த முனைகளில் இருப்பவர்களால்  10நிமிடத்திற்கு மேல் நீட்டிக்கப்பட வாய்ப்பு உண்டு.

    நீங்கள் உருவாக்கிய அந்த  10 நிமிடம் நீங்கள்  எதிர்ப்பாரதாத வகையில் வீணாகிப் போகும்  சூழல் உருவாகி விடும். அதன் காரணமாக நீங்கள் அந்தக் கூட்டத்திற்குச் செல்ல மேலும்  10நிமிடம் தாமதமாகி விடும். இந்த அவசரத்தால்  மன அழுத்தம் அதிகமாகிறது, எரிச்சலும் உண்டாகிறது. நீங்கள்  சேமிப்பு இருப்பில் வைத்திருந்த அந்த 10 நிமிடம் உங்களை தயார் படுத்திக் கொள்ளவும் எதிர்பாராத விதமாக ஏற்படுகிற போக்குவரத்து நெரிசல், அநாவசியமானதாமதம், எதிர்ப்பாராத திருப்பங்கள் போன்றவற்றை சமாளிக்க முடியும்.

    நீங்கள்  உருவாக்கி கொண்ட இந்த 10 நிமிடம் என்பது  நேர  நீடிப்பு அல்ல. இந்த  10 நிமிடத்தை உருவாக்கிக் கொள்ள கூடிய சூட்சுமம் தெரிந்தால் ஒரு அற்புதமான மாற்றத்தை உணர்வீர்கள். அவசரம் குறையும். அதனால் மன இறுக்கம் குறையும். அழுத்தம்  மறைத்து மகிழ்ச்சி நிறையும். 2.  ஒரு புதிய திட்டத்தைப் பார்த்த உடனேயே சரி என்று சொல்வதை விட, வேண்டாம் பொறுங்கள் என்று  சொல்வதே மேல்.

    இவ்வாறு சொல்வது பல பேருக்கு சிரமமாக இருக்கும். உதாரணமாக இருக்கும். உதாரணமாக ஒரு அருமையான புதிய திட்டம் தொடங்க வேண்டுமென்று உங்களிடம் நிபுணர் ஒருவர் சொல்லும்  போது, நீங்கள் சரி என்று சொல்ல தோன்றும். ஆனால் ஏற்கனவே உங்கள் திட்டப்படி பல பணிகள் நிலுவையில் இருந்தாலும் கூட அந்த நல்லத் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட உடனே அதனால் வரும் பலரின் அளவைப்பார்த்து நீங்கள் சரி என்று சொல்வீர்கள். இரண்டு வாரம் கழித்துப்பார்த்தால் பழைய பணிகளோடு இந்தப்புதிய பணிகளும் சேர்த்து சுமையாகி உங்களுடைய மன அழுத்தத்தை அதிகபடுத்தி விடும். இந்த மன அழுத்தத்திற்கு காரணம் நேரமின்மை என்றாலும்  கூட அந்தப் புதிய திட்டத்திற்கு சரி என்று சொன்னதும் ஒரு காரணமாக அமையும்.

    இவ்வாறு நல்ல ஒரு புதிய திட்டத்திற்கு சரி என்று சொல்வதற்கு முன்பாக உங்கள் பழைய திட்டங்களுக்கு உங்கள் பார்வையை செலுத்துங்கள். இந்தப் புதியப்பணிக்கு நேரம் ஒதுக்க முடியுமா? என்று பாருங்கள். ஆரம்பத்தில் வேண்டாம்  என்று  சொல்லுங்கள் அல்லது ஒத்திப்போடுங்கள் அல்லது வேறு ஒருவரை இந்தப்பணிக்கு முன்னிறுத்துங்கள் அல்லது  யோசித்து பதில் சொல்லுங்கள். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் உங்கள் நேரத்தை உருவாக்கிக் கொண்ட பின்பு தான் புதிய திட்டத்திற்கு சரி என்று சொல்ல  வேண்டும்  அல்லது ஒத்துக் கொள்ள வேண்டும். அந்தப்புதிய திட்டத்திற்கு நேரத்தை உருவாக்கிக் கொண்டு விட்டீர்களானால் எல்லாம் எளிதாகும். திட்டமும் நிறைவடையும்  மகிழ்ச்சியும் பெருகும்.

    வெற்றி என்பது முதலாவதாக நீங்கள் கிடைக்கும்  நேரத்தை எவ்வாறு திறமையாக பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும். இரண்டாவதாக  தேவையான நேரத்தை எவ்வாறு நீங்கள் உருவாக்கிக் கொள்கிறீர்கள் என்ற சாமர்த்தியத்தைப் பொறுத்தும்  அமையும். இந்த இரு வழிகளையும் கையாளப்பழகிக் கொண்டால்  ஒரு 10 நிமிடம் மட்டுமல்ல. இன்னும் பல 10 நிமிடங்களை உங்களுக்கு சாதகமாக நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

    நீங்கள் உருவாக்கிக் கொள்கிற முதல் 10 நிமிடங்களுக்குரிய பலனின் அளவைப்பார்த்து நீங்கள் ஆச்சிரியப்படுவீர்பகள். இது போல அடுத்து அடுத்து நீங்கள் உருவாக்கிக் கொள்கிற 10 நிமிடங்கள் பிரமாண்டமானதாகவும், பிரமிக்கக்கூடியதாகவும் இருக்கும். வெற்றிக்கு நேர நிர்வாகம் மட்டும் காரணம் அல்ல. நேரத்தை உருவாக்கிக் கொள்கிற திறமையும், உத்தியும் காரணமாக அமையும் என்பதை அனுபவபூர்வமாக உளமாற உணர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். நேரத்தை உருவாக்கிக் கொள்கிறப் பணியைத் தொடங்குங்கள். பல தொழிகளுக்கு நீங்கள் அதிபராவீர்கள். வெற்றிகள் தொடர்ந்து உங்களிடம் அணி வகுக்கும்.

    உதடுகள் சொல்லும் இரகசியங்கள்

    நண்பர்களே! நமது உடல் தோலானது ஆகாச சக்தியை கிரகித்து உயிர்ச் சக்தியைத் தன்மாற்றம் செய்து மண்ணீரல் செயல்பாட்டிற்கு சக்தியளிக்கிறது. நமது தோலின் பிரதிநிதியான உதடும், அதே ஆகாச சக்தியை உள் வாங்கி நமது மண்ணீரல் செரிமான நொதிகளின் செயலாக்கத்திற்கு சக்தியளிக்கிறது. நமது உதடானது மண்ணீரலின் உருவத்தைக் கொண்டுள்ளதால் அது மண்ணீரலின் வெளி உலகத் தூதராகச் செயல்படுகிறது. இதை அக்குபங்சர் மருத்துவம் உறுதி செய்கிறது. ஆகவே, நமது உதட்டில் ஏற்படும் மாற்றங்கள் யாவும் நமது மண்ணீரல் சக்தி நிலையை வெளிப்படுத்துகிறது. அவை பற்றி இனிப் பார்ப்போம்.

    உதட்டில் புண் : மண்ணீரல் இரணத்தைக் குறிக்கிறது.

    உதட்டில் வெடிப்பு: மண்ணீரல் அழற்சியால், கல்லீரல் சக்தியிழப்பைக் காட்டுகிறது.

    வாய்ப் புண்: மண்ணீரல் அழற்சியால், இரைப்பை அல்சரைக் குறிக்கிறது.

    ஈறுகளில் இரத்தக் கசிவு: மண்ணீரல் தளர்ச்சியைக் குறிக்கிறது.

    உதடு கருத்தல்: மண்ணீரல் அழற்சியால், சிறுநீரகங்கள் சோர்ந்திருப்பதைக் குறிக்கிறது. உதட்டுத் தோல் உரிதல்: மண்ணீரல் அழற்சியால் ஏற்பட்ட இரத்தச் சோகையைக் குறிக்கிறது.

    உதடு வறட்சி : மண்ணீரல்  அழற்சியால் கல்லீரல் இரணப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. உதடு சிவந்து புண் ஏற்படுதல் : மண்ணீரல் மற்றும் கல்லீரல் இரணப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. உத்தம நண்பர்களே! நமது உதடு மற்றும் தோலுக்கு நாம் அளிக்கும் மரியாதைதான், நம் உயிர்ச் சக்திக்கு நாம் தரும் மரியாதையாகும். நமது உதடுகளில் இரசாயனச் சாயங்கள் எதுவும் பூசக்கூடாது. அதுபோலவே, இரசாயன டால்கம் பௌடர், இரசாயன கிரீம், இரசாயன சென்ட், மற்றும் மெழுகு போல் அப்பிக்கொள்ளும் சோப்புகள், கொசு வத்தி சுருள் அல்லது கொசு விரட்டி திரவம், ஆகியன தோலின் உயிர்ப்புத் தன்மையை குறைத்து மண்ணீரல் சக்தியை அழித்து விடுகிறது. இவ்வித இரசாயனங்களைத்  தொடர்ந்து பயன் படுத்தும் போது, மண்ணீரல் மூலம் உயிர்ப்பிக்க வேண்டிய உயிர்ச் சக்தியானது தொடர்ந்து குறைபாடாகி, நரம்புகள் உணர்விழக்கும் வரை பாதித்து, தோல் புற்று நோய்க்கு இட்டுச் செல்கிறது.

    அன்பு நண்பர்களே! நம் உதடுகள் உண்மை என்றமையைப் பூசிக் கொண்டால் போதும். நமது மண்ணீரலானது, உணவின் தகுதி (உடலுக்குத் தேவையா? இல்லையா? என்று) அறிந்து, தரம் பிரித்து (நல்லதை எடுத்து, அல்லதை விடுத்து) நமது மனசாட்சியின் பிம்பமாகச் செயல்படுகிறது. இந்த மண்ணீரலுக்கு திடசக்தியை ஆகாசம் வழி வழங்கும் உதடும் தகுதியும் தரமும் உடையதாக விளங்க வேண்டும். ஆகாசம் என்பது தூயத்தன்மை வாய்ந்தது ஆகும். ஆகவே, நாம் உதடு வழி வெளியிடும் பேச்சும் தகுதியும் தரமும் உடையதாக இருக்க வேண்டும். அல்லதை விடுத்து நல்லதை மட்டுமே வெளிப்படுத்தும் உதடானது, மண்ணீரலின் மனசாட்சியை உரசிப்பார்க்கும் உரைகல்லாக இருக்கும்.  நண்பர்களே! நமது உதடு சக்தி வாய்ந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது, திணிவான ஆகாச சக்தி கிரகிக்கப்பட்டு, தன்மாற்றம் அடைந்து மண்ணீரலின் மாண்பைக் காக்கிறது. இன்னும் ஒரு படி மேலே போக நினைத்தால், உதடுகள் அசையாமல் மௌனமாக இருக்கும் போது சேமித்த ஆகாச சக்தியானது மண்ணீரலை அடுத்த நிலை உயர்வுக்கு இட்டுச் செல்லும். இதனால், நமது மனசாட்சியின் ஆன்மபலம் பன்மடங்காகும். இதுதான் மௌனத்தின் மகத்துவம்.

    நண்பர்களே! அதிகம் பேசுபவர்கள் மண்ணீரலின் ஆக்கத்திறனை இழப்பர். இவர்கள்  பேசுவதில் ஹீரோவாக இருப்பர். ஆனால், செயலில் ஜீரோவாக இருப்பர். அதிகம் பேசாத ஞானவான்கள் தாங்கள் நினைப்பதை சாதிப்பார்கள். சதா பேசிக்கொண்டே இருப்பவர்கள் அப்படிப்பட்ட ஞானவான்களை விமர்சனம் செய்வார்கள். நாம் எப்படி? வாய்ச் சொல் வீரரா? பிறர் வாயால் வாழ்த்தப்படும் செயல் வீரரா? பேசுவதைக் குறைத்து ஆக்கச் செயலில் இறங்க ஹீத்தர் என்ற மலர் மருந்து உதவியாக இருக்கும்.

    அனுபவத் தொகுப்பா…? வாழ்க்கை வகுப்பா…?

    வாழ்க்கை அனுபவத் தொகுப்பு என்பதை நாமனைவரும் அறிந்தாலும் – புரிதலோடு அவை பயணிக்கும் திசையை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை நாம் வாழ்ந்திருக்கிறோமா அல்லது அதன் திசைநோக்கி மட்டுமே நகர்ந்திருக்கிறோமா என்பதில் நெருடல்கள் உண்டு. பார்வையை பக்குவமாக திரும்பி பார்க்கும்போது பயணத்தின் இலக்கோடு பாதை போட்டவர்களே வென்றிருக்கிறார்கள். சாதனைச் சிகரங்களை தாண்டியிருக்கிறார்கள் என்பதே வெளிப்படை. தாண்டியிருக்கிறார்கள் என்பதே வெளிப்படை.

    ‘ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு தோல்வியும் உன்னையும் உன் போராடும் சக்தியையும் வலுப்படுத்தும். அவைகளை நீ நண்பர்களாகக் கருதி மேலே செல்லலாம் அல்லது விலகியும் போகலாம். ஒவ்வொரு எதிர்ப்பும் நீ முன்னேற ஒரு வாய்ப்பு அதைக் கண்டு அஞ்சி ஓடினால் நீ உன் எதிர்காலத்தை தூக்கி எரிகிறாய்’ என்பார் ஓரிடத்தில் ஆக் மான்டினோ. மேலும் முன்னேற வேண்டும் என்று முழு முயற்சியுடன் செயல்படுபவனை தோல்விகள் ஒருபோதும்  துவளச் செய்யாது என்பார். இதனை ஒரு இலக்கியக் காட்சி மூலம் அறியலாம்.

    இஸ்லாமிய இலக்கியத்தில் எப்போதும் எனக்கொரு காதல் உண்டு. காட்சியை மையப்படுத்திய நான் மெய் மறந்த இடம் ஒன்றுண்டு. இஸ்லாமிய மார்க்க நெறிப்படி வாழ்ந்த சுலைமான் தன் இறப்பிற்கு பின் சொர்க்கத்தின் வாசலில் சுதந்திரமாக றிறுத்தப்பட்டார். ‘சுலை, இங்கே சொர்க்கத்தின் வாசல் கதவு உனக்காக திறக்கப்பட்டிருக்கிறதே’ எதற்கென்றதெரியுமா…? நீயே சொல் பார்க்கலாம் என்று அருளாளர் கேட்டார்.

    ‘என் இறைவா…! முழுமுதற் கடவுளே…! எல்லாமுமாய் இருப்பவனே… ! என்னில் என்றும் உதிப்பவனே… ! இதுகூடவா தெரியாது. உன்னை ஐந்து முறைஅனுதினமும் தொழுகிறேனே  அதற்காக இருக்கலாம்…!’ கடகடவென சிரிப்பொலியை சிதறவிட்ட பெருமான் ஒருமுறை, ஒரேயொரு வேளை மட்டும் நீ என்னைத் தொழாமல் சென்றாயல்லவா  அதனால் தான் சொர்க்கத்தில் நீ சுதந்திரமாக நிற்கிறாய் என்றார் இறைவன்.

    ஒருவேளை தொழாமல் போனால் சொர்க்கத்திற்கு போகலாம் என்றமௌத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலே கிடந்தது. புனிதத்தின் புத்திரனே… ! ஒருநாள் அதிகாலை பனிக்காலத்தின் பொழுது பள்ளிவாசல் தொழுகை அழைப்பு மணியோசை கேட்டு வேகமாய் புறப்பட்டபோது ஒரு பூனைக்குட்டி குளிரால் நடுங்கி வெலவெலத்து, பனிப்பொழிவு உடல் முழுவதும் தன் பாதங்களால் பக்குவாய் தடவிக்கொடுத்து, தலை, உடல், கால்களையும் உன் விரலால் நீவியும் கோதி விட்டாய் அல்லவா…! அன்று அந்த பூனைக்குட்டிக்கு வாய்மட்டிருந்தால் உயிர் போகத் தருவாயில் என்னை உயிர்ப்பித்தவனே உன்னால் உயிர்பிழைத்தேனே… ! என்று கதறி கண்ணீர் விட்டிருக்கும். என்ன செய்ய பேச முடியாதே… பூனைக்குட்டியின் வெப்பம் பட்டு அதன் உடல்நிலை சமநிலை அடைந்தவுடன் அதனை கீழே விட்டுவிட்டு மணிபார்த்தபோது பள்ளிவாசலின் தொழுகை நேரம் முடிந்திருந்தது. ஒரு பூனைக்குட்டியின் – சிறிய உயிரின் கஷ்டத்தை களைந்தாய்  தொழுகையை மறந்தாய்  எந்த உயிரிடமும் காட்டும் பெருங்கருணையே எனக்குப் பிரியமானது என்றார் நபிகள் நாயகம்.

    2005 ல் கை, கால், வயிறு, தலை என உடலின் எந்த பாகமுமே செயல்படாத நிலையில் வீல்சேரில் செவிலியர் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். அவரது வீல்சேரில் வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்யூட்டரும், வாய்ஸ்ஸின்தைசரும் இருந்தது.

    பிரிட்டீஷ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்திய ரிச்சார்ட் மற்றும் ஜீடி கேட்ட கேள்விகளுக்க கம்யூட்டர் மூலம் எளிதாக பதில் சொன்னர் ஸ்டீபன்.

    “வாழ்கை எப்படி இருக்கிறது…?” என்று கேட்டார்கள், “முன்னை விட சுவாரஸ்யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது” என்றார். இந்த உடல் நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா…? என்று தயங்கித்தயங்கி கேட்டார்கள். “எதை இழந்தீர்கள் என்பதல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்…!” என்றார். மனிதன் தான் பார்க்கும் பார்வையிலேயே பதிவுகளையும் வாழ்ந்ததின் வரலாற்றுச் சுவடுகளையும் இனம் காண்கிறான் என்பதற்கு இதுவே சாட்சி.

    ஒருகதை  மிகப்பெரிய சாகச நிகழ்ச்சி – அதை செய்யும் போது முகத்தில் காயம்பட்டு, முகத்தில் பல்வேறு தசைகளை வைத்து அறுவை சிகிச்சை மூலம் (Surgery) சரிசெய்யப்பட்டது. இப்போது அவனிருக்கும் நிலையைப் பார்த்தால் அடையாளம் தெரியாது.

    அவனைப் பார்க்க மருத்துவமனைக்கு அவன் தாய் பதறி ஓடோடி வருகிறாள். கட்டுப்போட்ட உடம்போடு இருப்பவனைப் பார்த்து என் மகன் எங்கே…? எங்கே நீ யார்…? உங்கள் மகனின் நண்பன். காரணம் மகன் என்று தாயாலேயே கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவன் நிலை. அப்போது அவன் காதலியும் வருகிறார்.

    “ஏன் அப்படி சொன்னாய்…?” நீதான் என் மகன் என்பது முன்பே எனக்குத் தெரியும். எப்படி தெரியுமா…?

    “காலுறைகளை துவைத்துப்போட்டேன் என் மகனின் வாசனை வந்தது” என்றாள். இப்படி ஒரு தாயால் மட்டுமே மகனின் வாசனையை வைத்து கண்டுபிடிக்க முடியும்.

    இப்படி பலப்பல காட்சிகளும், சாட்சிகளும் நிறம் மாறாத் தன்மையுடன்ட இருப்பதால்தான் சிகர சிம்மாசனத்தில் மின்னி மிளிர்கிறது.

    மேசை

    நான் ஒரு மேசை பேசுகிறேன். மேசைகள் பல வகைப்படும். மேசையாக இருந்து பல முகங்களை நான் பார்த்து இருக்கிறேன். என்னைத்தாண்டி வெளிப்பக்கம் இருந்து உள்பக்கமாக வந்து அமர்வதற்கு மனிதர்கள் முட்டி மோதிப் பார்க்கிறார்கள். வட்டமேசை மாநாடுகள் என்று என் பெயரில் பல பாராட்டுதல்களுக்குரிய முடிவுகளை எடுக்கின்றனர்.

    மேசையின் பக்கத்தை மாற்றுவது என்ன…? என்றால்… புதிதாக யாருக்காவது நேர்முகத்தேர்வு நடத்த வேண்டும் என்றால் அவர்களுக்கு அந்தப்பக்கம், ஒரு நாற்காலியும் எனக்கு இந்தப்பக்கம் நான்கு நாற்காலிகளும் போட்டு கேள்வி கேட்கின்றனர். பதில் சொல்பவர்கள் வெற்றிகரமாக சொல்லிவிட்டால்…. அவர் தேர்வாகிவிட்டதாக அறிவிப்பு செய்கின்றனர். அதன் பிறகு தேர்வானவர் அலுவலகத்தில் சேர்ந்து பணி அனுபவமும் முதிர்ச்சியும் அடைந்த பிறகு நாற்காலியின் இந்தப்பக்கம் வந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம்  நான் ஒரு மௌன சாட்சியாக இருக்கிறேன். பல இடங்களின் பல சந்தோசமான, சங்கடமான உரையாடல்களை கேட்டிருக்கின்றேன். என்மீது கோப்புக்களில் எவ்வளவு உயிரோட்டமான சம்பவங்களும், சங்கதிகளும் நிறைந்து கிடைக்கின்ற…

    ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான நேர்முகத்தேர் தேர்வுக்கான மாதிரி தேர்வு ஒன்று நடந்தது. அதில் இரண்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. என்ன பேசலாம், எப்படி பேசலாம், எதனால் தடுமாற்றம் வருகிறது. அதிலிருந்து எப்படி தப்புவது என்றெல்லாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. டாக்டர் சங்கர் சரவணன் இதுபோன்ற நிறைய பயிற்சி மாதிரி நேர்முக தேர்வுகளில் கலந்து கொள்கின்றனர். ( மேஜையின் இந்தப்பக்கம் இருந்து) ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கான விண்ணப்பத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பதவிகளும் பல்வேறு மாநிலங்களும் வரிசையாக கொடுக்கப்பட்டு இருக்கும்., அதில் கலந்து கொள்பவர் தனது விருப்ப மாநிலத்தை வரிசைப்பபடுத்த கொடுத்திருப்பார். பல நேரங்களில் அது குறித்து தேர்வு கேள்வி வந்து விடும். கேரள மாநிலத்தை ஒருவர் பதினைந்தாவது வரிசையில் கொடுத்திருந்தார். ஆனால் மற்ற தென் மாநிலங்களை முதல் ஐந்துக்குள் கொடுத்து இருந்தார். இண்டர்வியூ போர்டில் இருந்தவருக்கு வசமாக கேள்வி கிடைத்துவிட்டது.

    கேரளத்தில் நல்ல நல்ல வளர்ச்சிப்பணிகள் நடந்து வருவதாகவும் மனிதவளத்தில் அவர்கள்தான் மிகச்சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட நீங்களே ஏன் அங்கே போய் பணிபுரிய தயாரில்லை என்று கேட்டு மடக்கப்பட்டார். இந்த கேள்வியில் தர்மசங்கடமாக அகப்பட்டுக் கொண்ட கவிதா திருவனந்தபுரத்தில் பிறந்தவர் வேறு. அதனால், தமிழ்நாட்டுக்கு முதல் விருப்ப இடமும் கேரளத்திற்கு பதினைந்தாவது விருப்ப இடமும் கொடுத்திருந்த அவரால் விளக்கம், தனக்கே திருப்திகரமாக கொடுக்க இயலவில்லை. அந்த மாநிலம் ஏற்கனவே வளர்ந்து விட்டது அதனாலா…? என்று இந்தப்பக்கத்து உயர் அதிகாரி கேட்டார். அதற்கு வாய்தவறியோ… வழிதவறியோ… ஆமாம் என்று சொல்லிவிட்டார். குழுவினர் சிரித்துவிட்டனர். ஆக… கேரளத்திற்கு அதிகாரிகள் போதும் என்கின்றீர்கள்… என்று கமென்ட் வேறு…

    கவிதா… திறம்பட  எப்படி பதில் சொல்லியிருக்கலாம் என்ற கேள்விக்கான பதிலை அடுத்த சில போட்டியாளர்களைத்தாண்டி கீர்த்தனா வந்தபொழுது கிடைத்தது. அவர்கள் தெலுங்கானாவில் போலீஸ் சர்வீஸ்க்கு பதினாறாவது விருப்பத்தையும் மற்ற தென்மாநிலங்களுக்கு எனில் ஐந்துக்குள் விருப்பத்தையும் தெரிவித்திருந்தனர். இப்படி, நமது விருப்பங்கள் வெறுப்புக்களாக  பார்க்கப்படும்பொழுது என்ன செய்யலாம் என எல்லோரும் யோசிக்கின்றனர். கீர்த்தனா என்ன செய்யப்போகின்றார் என்று பார்க்கும் பொழுது… அவர்…Sir..  நான் தெலுங்கானா மாநிலத்திற்கு பதினைந்தாவது இடம் தர வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், எனக்கு விருப்பமான மாநில பெயர்களை ஒன்று ஒன்றாக கொடுத்துக்கொண்டே வந்த பொழுது அது பதினாறாவது விருப்பமாக இடம் பிடித்தது என்று கூறினார். ஆழகான பதில். நேர்மறையாக யோசித்து, நல்ல முறையில் பதிலாக மாற்றிக் காட்டியிருந்தார். அதன் மூலம் நல்ல மதிப்பெண்கள் பெறுபவர்கள் இதுபோன்ற அனுபவங்களை படிப்பது மிகவும் உதவியாக இருக்கும். முதல் முறையாக எனக்கு முன்னால் வந்து அமர்பவர்கள் கொஞ்சம் தயாரித்துக் கொண்டு வந்தார்களானால்… பதட்டமின்றி பதில் கூறுவார்கள். பொதுவாக என்மீது கைகளையோ, பைகளையோ வைக்கக் கூடாது.

    மேசைகள் மேதைகளை உருவாக்குகின்றன. உணவு மேசைகளும் உண்டு. சுவாமி விவேகானந்தர் கால்களை தொங்கவிட்டு உணவு உண்பர்களின் ஆயுளை குறைத்துவிடுகின்றது என்று கூறியுள்ளாராம். தரையில் அமர்ந்து உணவு உண்பதை விடுங்கள். கால்களை மடித்து தரையில் அமர இயலாதவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் ஒரு பழக்கவழக்கம் தானே.

    போர்த்துகீஸ் நாட்டிலிருந்துதான் உங்கள் வீட்டு மேஜை கூடவந்திருக்கிறது என்றால், நம்பித்தான் ஆகவேண்டும். எப்படி…? நான் உள்ளூரில் தானே வாங்கினேன் என்று நீங்கள் கூறினாலும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். என்பெயர் தாசில்தார், ஜாமீன், பட்டா, ஜனம் போன்ற சொற்கள் போல, வெளி மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது. குறிப்பாக போர்த்துகீசிய மொழியிலிருந்தும் மொகலாயர் காலத்தில் தமிழ் மொழியில் கலந்ததாக கூறக்கேட்டுள்ளேன்.

    நாற்காலியும் நானும் உடன் பிறந்தவர்கள் போல பழகினாலும் அவனுக்கு என்னைக்காட்டிலும் அதிக அதிகாரம். ஹ.. ஹ… அப்படித்தான் அனைவரும் நம்புகிறார்கள். நாற்காலிச்சண்டைதானே நடைபெறுவதாக கேள்விப்பட்டிருப்பீர்கள், மேசை சண்டை எங்கே நடக்கிறது…?

    நாற்காலியும், மேசையும் எந்த வடிவத்தில் எந்த சாய்கோணத்தில் எந்த உயரத்தில் எந்த பொருத்தத்தில் இருக்க வேண்டும் என்று ‘எர்கோனாமிக்ஸ்’ என்னும் பொறியியல் பிரிவு அலசிப்படிக்கிறது. குறிப்பாக நீண்ட நேரம் கணிப்பொறியை என்மீது வைத்து முறைத்துப்பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை இமைத்துக் கொள்வதும், கழுத்தை சுழற்றி வேறு சில அலுவலக யோகாசனம் என்னும் பயிற்சிகள் எடுப்பதும் இந்த அவசர யுகத்திற்கு அத்தியாவசியமானதாகும்.

    மேசையைத் தட்டுதல் கைதட்டுதலோடு இரண்டற கலந்துவிட்டது… என்மீது விழுகின்ற ஒவ்வொரு அடியும்… யாரையோ பாராட்டுவதற்கானது என்று அகமகிழ்கின்றேன்…திரைப்படங்களில் அடிதடி என்றாலே… எனக்கு பயம்… இந்த இயக்குனர்கள் குண்டர்களை தூக்கிப்போட்டு உடைப்பதென்னவோ என்னைத்தான்.

    மேசை டென்னிஸை யாரும் மறந்துவிட முடியுமா…? இதில் நிறைய நியூட்ரோ ட்ரான்ஸ்மீட்டர்கள் உருவாகின்றதாம். சமீபத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற இந்தியாவின் முதலிடம் பிடித்த வீரர் அமல்ராஜூம் அவர்தம் தந்தை அற்புதராஜூம் ஒரு நாளில் ஒன்பது முதல் பத்து மணி நேரம் பயிற்சி எடுத்துக்கொள்ள என்னை பயன்படுத்தியதை நான் எங்கு கேட்டாலும் சொல்லத் தயார். ஆக, படிப்பதற்கு மட்டுமல்ல… எந்த வகையான தீவிர சிந்தனைக்கும் உறுதுணையாகவே நான் இருக்கத் தயாராக இருக்கின்றேன்.

    என்மீது ஏராளமான புத்தகங்களை குவித்து இறைந்து வீசுகின்றவர்கள் இருக்கின்றார்கள். பலவிதமான துணிமணி பேனா மூடிகள், மைத்துளிகள் என்று என்னை  வெட்டுக்காயம் செய்பவர்களும் உண்டு. தற்காலிக மேசை போட்டு பந்தி வழங்கும் வீடுகளில் நான் சகலவிதமான வாசனைகளோடு காணப்படுவேன். அசைவ உணவென்றாலும், கடாவெட்டு என்றாலும் என்னைச் சுற்றி ஆராவாரம்தான். மதுக்கடை மேசைகளைப் பற்றி பேசவே வேண்டாம்.  சில நேரங்களில் கண்ணாடி, கான்சிரீட், கடப்பாகல், சிமெண்ட் சிலாப் என்று எல்லா வடிவ நீள அகலங்களில் நான் பலவிதமாக காணப்படுகின்றேன். பழைய தமிழ் படங்களில் ‘டெஸ்க்’ என்று கணக்குப்பிள்ளை வைத்து உட்கார்ந்து தரையிலமர்ந்து எழுதியதும் இன்னொரு வகை மேசைதான். என்னை எழுதுபவர் கூட சின்ன வயதில் அதன் மேலேதான் அறிவுப்பதார்த்தங்களை புசித்து வளர்ந்தார்.

    கல்லூரிப் பேராசிரியர்கள் சுண்ணாம்புக் குச்சியை என்மீது நுனிமுறிந்து எழுதுகையில் பவுடர் பூசிக்கொண்டு டஸ்டர்களால் மேக்கப்போட்டுக்கொண்டு புன்னகைகின்றேன். என்னைத்தாண்டி இயற்பியலின் ரிலேட்டிவிட்டி தத்துவமும், சாக்ரடீஸின் தத்துவமும், வரலாற்று பேராசிரியர்கள் வழங்கிய தனிச்சிறப்பம்சங்களும், செந்தமிழ் முழங்கிய தேனோசைகளும் எத்தனையோ வகை வகையாய் கேட்டுக் களித்திருக்கிறேன். வேதியியல் ஆய்வகத்தில் ப்யூரெட்டும் பிப்பெட்டும் ஊட்டிய உப்புக்கரைசல்களை குடித்து பல கண்டுபிடிப்புகளால் பெருமிதம் கொண்டுள்ளேன்.

    அஃறிணைப் பொருளான நான் பேச நினைப்பதெல்லாம் பேசத்தோன்றினாலும்… பின் நவீனத்துவ படைப்பு நோக்கில் தான் என் பிறவி இருக்கிறது. நான் சொல்ல வருவதையும், சொல்லிவிட்டதையும் தாண்டி கொஞ்சமேனும் உங்கள் மனம் பயணித்திருக்கும். நீங்கள் கைகட்டி நின்ற மேசை அல்லது கால்போட்டு வைத்த மேசை என்றுஎதையாவது மறக்க முடியாமல் நினைவு வர வைத்திருந்தால் நான் வெற்றி பெற்றதாகவே அர்த்தம். அடுத்தமுறை என்னைப்பார்த்தால் நீங்கள் சிறிதளவேனும் புன்னகைத்தால் நான் அதை நிச்சயம் பிரதிபலிப்பேன். வாழ்வே அதுதானே…!!

    வேலையே சிறந்த வலிநிவாரணி

    நான் தொடர்ந்து 33 ஆண்டு காலம் கல்லூரியிலும் பாரதியார் பல்கலைக்கழகத்திலும் பணியாற்ல் ஏப்ரல் 2015-ல் ஓய்வு பெற்றவன். பணிநிறைவுக்கப் பிந்தைய சிலமாத காலம் எனக்குள் உண்டாக்கிய ‘ஞானோதயத்தை’ பகிர்ந்து கொள்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

    கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஓய்வு நேரமும், விடுமுறைநாட்களும், கோடை விடுமுறையும் தாரளமாகக் கிடைக்கும். அந்த நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள நாட்டு நலப்பணித்திட்டம், கல்லூரி ஆண்டுமலர் தயாரித்தல், வானொலி உரை, நாளிதழ்களுக்க கட்டுரை தயாரித்தல் போன்றபல்வேறு செயல்களில் செலவிடுவதுண்டு. கோடை விடுமுறையின் பெரும்பகுதி தேர்வுப்பணிகள், விடைத்தாள் திருத்தும் பணிகளில் கழிந்து விடும். மருத்துவ விடுப்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு போன்றவை பிற்காலத்தில் தேவைப்படும் என்றஎடுக்காமலேயே வைத்திருந்தேன்.

    கல்லூரியிலிருந்து அயற்பணியில் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது என்னுடைய பணி நிர்வாகப்பணி என்கிறகாரணத்தால் கோடை விடுமுறைகிடையாது. அதிலும் குறிப்பாக கடைசி மூன்று ஆண்டுகள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தலைமைப் பணியாளராக இருந்தாலும், அத்தோடு கூட, கூடுதல் பொறுப்புக்களையும் சேர்த்து வகிக்க வேண்டிய காரணத்தால் வார விடுமுறைநாட்களை நினைத்துப் பார்க்கவும் முடியாது. தற்செயல் விடுப்பு போன்றவை இருந்தாலும் எடுக்க இயலாத நிலை.

    அலுவல் நேரத்திலேயே அலுவலகப்பணிகளை முடித்துக் கொள்ள இயலாது. திட்டமிட்டப் பணிகளில் இடம்பெறாத, தற்செயலாக வரும் அவசரப் பணிகளைப் பார்ப்பதற்கே அலுவல் நேரம் சரியாக இருக்கும். அலுவலக நேரம் முடிந்த பிறகுதான் அலுவலக கோப்புக்களை பார்க்க முடியும். எல்லா வேலைகளும் முடிந்து வீட்டிற்குச் செல்வதற்கே இரவு 8 மணி ஆகிவிடும். பிறகு சாப்பிட்டு தூங்குவதற்கு சரியாக இருக்கும். விடியற்காலை எழுந்து வெளிச்சத்திற்கு முன்பே நடைபயிற்சி முடித்துவிட்டு, ஐந்தாறு நாளிதழ்களை பார்த்துவிட்டு 9 மணிக்க அலுவலகம் சென்றஅன்றைய பணிகளைத் துவக்கி விடுவேன்.

    இப்படி ஓய்வில்லாமல் வேலைகளுக்கிடையே புதைந்து கிடந்தபோது வேலை என்றால் என்ன என்பதை முழுமையாக அறியாமல் இருந்தேன். ஓய்வில் இருக்கும்போதுதான்  வேலை என்பதன் பன்முகத்தை என்னால் உணர முடிகிறது. பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் வேலை இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பது வேலை செய்யும் போது இருந்த களைப்பை விட அதிகமாக இருந்தது. ‘இயந்திரம் ஓடுவதால் தேய்வதில்லை. ஒரே இடத்தில் இருப்பதால் தேய்வடையும்’என்பார்கள்.

    ஓய்வு காலத்தில் ஏதோ அன்றாடம் தேடித்தேடி ஒன்றிரண்டு வேலைகள் செய்தாலும் ஒரு மனநிறைவு கிட்டவில்லை. மேலும், பணியில் இருந்தபோது பத்து வேலைகளோடு நான் சேர்த்து செய்த ஒரு வேலையே இப்போது பிரதான வேலையாக தெரிந்தது. சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கும்போது பத்து வேலைகளோடு கூடுதலாக இன்னும் ஒரு வேலையைக் கூட செய்ய நேரம் கிடைக்கும். ஆனால், வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கம்போது கூடுதலாக செய்த அந்த ஒரு வேலையைக் கூடச் செய்ய நேரம் இருக்காது என்பதை புரிந்து கொண்டேன்.

    பொருளாதாரப் பாடத்தை நான் வகுப்பில் நடத்தும்போது ஒன்றைக் குறிப்பிடுவேன். அதாவது, தொழிலாளர்களின் கையில் பணம் புழங்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் ஒரு குழியை வெட்டச் சொல்லி அதற்கு கூலி கொடுத்து, பிறகு அதையே மூடச்சொல்லியும் கூலி கொடுக்கமாம். ஒருபுறம் அது உண்மைதான். மறுபுறம் அந்தச் செயல் ஏதோ உழைப்பை வீணடிப்பதுபோல் தோன்றும். ஆனால், அந்த உழைப்பு உண்மையில் மனதை செம்மைப்படுத்துகிறது. விளம்பரம் ஒன்றில் கணவன் தன் மனைவி வேலைக்குப் போவதைப் பற்றி பெற்றோர்களிடம் சொல்லும் போது ‘அவளுக்கு பிடித்திருக்கிறது, வேலைக்குச் செல்கிறாள்’ என்றபொருளில் கூறுவான். உண்மைதான், இதில் வரும் வருமானம் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு மனநிறைவு என்பதுதான் முதன்மைப்படுத்தப்படுகிறது.

    நாம் வியர்வை சிந்தி உழைக்க வேண்டும். அதற்காகத்தான் இயற்கை நமக்கத் தேவையானவற்றைமறைத்தே வைத்திருக்கிறது. உண்பதற்கான உணவை மண்ணுக்கள் மறைத்து வைத்திருக்கிறது. உடுப்பதற்கு ஆடையாக கொடுக்காமல் நெய்து தயாரிக்க பஞ்சைக் கொடுத்திருக்கிறது. வசிப்பதற்கு அப்படியே வீடாகப் படைக்காமல், வீட்டைக் கட்டிக் கொள்ள கல்லையும், மண்ணையும் படைத்திருக்கிறது.

    நாம் எந்த வேலையை செய்தாலும் அதனால், உலகத்த்திற்கு எவ்வித நன்மையே தீமையோ ஏற்படுவதில்லை. சாப்பாட்டு இலைமீது ஒரு எறும்பு வந்து வயிறு நிரம்ப சாப்பிட்டாலும் அல்லது சாப்பிடாமல் சென்றுவிட்டாலோ நமக்கு எவ்வித வித்தியாசமும் தெரியாது. அதுபோல் இந்த உலகத்தின் தொடர்ந்த இயக்கத்தில் தனிமனிதனின் செயல்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது.

    சுறுசுறுப்பாகவும், ஈடுபாட்டுடனும் வேலையை செய்தவதன் மூலம் மனதில் உள்ள அழுக்குகள் நீங்கி மனம் தூய்மை பெறும். பத்து பேர் செய்யும் வேலையை ஒருவரே செய்வதால் உற்பத்தி திறன் அதிகமாகிவிட்டது என்றமகிழும் அதே நேரத்தில் பத்து பேருக்கு பதில் ஒரே ஒருவரின் மனம் மட்டும்தான் தூய்மையடைய வாய்ப்பு கிடைக்கிறது என்றஉண்மையும் உணர வேண்டும்.

    வேகமாக வேலை செய்தால் முன்னேற்றங்கள் விரைவில் ஏற்படும் என்பது உண்மை. ஆனால், உண்மையிலேயே இது முன்னேற்றமா…? மகாத்மா காந்தி காலத்தில் இங்கிலாந்திற்கு செல்ல பதினைந்து நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இப்பொழுது பதினைந்து மணி நேரத்தில் லண்டன் சென்று விடலாம். ஆறுமாதங்களில் கட்ட வேண்டிய கட்டடப்பணியை ஒரே மாதத்தில் கட்டுவது, பத்து பேர் செய்யும் வேலையை கம்ப்யூட்டர் உதவியுடன் ஒரே ஆள் செய்வது போன்றமாற்றங்கள் புறவுலகை வேகமாக மாற்றி வருகின்றன.

    ஆனால், அதனால் எற்படும் பயன் அதே விகித்தில் அதிகரிப்பதில்லை சொல்லப்போனால் ஒவ்வொரு முன்னேற்றமும் வாழ்வில் நெருக்கடியையும், மனஉளைச்சலையும் அதிகப்படுத்துகின்றன. பேருந்தில் ஒரு மணி நேரம் பயணம் அடைந்தாலும், முன்னை விட தற்பொழுது நேரம் பயணம் செய்வதற்கு பதில் இருசக்கர வாகனம் வாங்கி இருபது நிமிடங்களில் அலுவலகத்தை அடைந்தாலும் முன்னை விட தற்பொழுது நேரம் போதவில்லை என்றுதான் தோன்றுகிறது. மாட்டுவண்டி காலத்தில் ஓய்வெடுக்க கிடைத்த நேரம் மோட்டர் கார் யுகத்தில் கிடைப்பதில்லை. பொழுதுபோக்கிற்காக சுற்றுலா செல்பவர்கள் கூட நேரம் போதவில்லை என்றஅவசர அவசரமாக அருங்காட்சியத்துக்குள் நடக்கிறார்கள்.

    தீபாவளி கொண்டாட்டத்தின் போது தனக்க கிடைத்த ஒரே ஊசிப்பட்டாசு சரத்தை ஒரேயடியாக கொளுத்தாமல் அதை பிரித்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு பட்டாசையும் தனித்தனியாக கொளுத்தி தீபாவளி கொண்டாடும் ஏழை சிறுவனையும், பத்தாயிரம் ரூபாய்க்கு பட்டாசுகளை வாங்கி பத்து நிமிடத்தில் மொத்தமாக கொளுத்தி முடித்துவிட்டு நாள் முழுவதும் ‘போர் அடிக்கிறது’ என்று சலித்துக் கொள்ளும் பணக்காரச் சிறுவனையும் ஒப்பிட்டால் வேகமான வாழ்க்கையின் விரயம் புரியும்.

    எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருப்பதில்லை ஓய்வு. ஓய்வு என்பது சலிப்பு ஏற்படாமல் இருக்க தற்காலிகமாக வேறு ஒரு பணியைச் செய்து உடலையும் மனதையும் உற்சாகப்படுத்திக் கொள்வதாகும். வேலை செய்யும் இடம் மனதைச் செம்மையாக்கும் பயிற்சிக்கூடம். வேலை செய்யாமல் சோம்பியிருந்தால் மனம் தன் ஆரோக்கியத்தை இழந்து விடும். எனவே வேலை செய்வது அவசியம்.

    ஓய்வாக இருப்பதே மகிழ்ச்சி, வேலை செய்வது துன்பம், வியர்வை சிந்துவது தண்டனை என எண்ணிக் கொண்டிருப்போரால் உண்மையான மகிழ்ச்சியின் ஆணிவேரை அடையாளம் காண முடியாது. உடல் என்பது இயக்கத்துடன் இயைந்துது. எந்த உறுப்பு சரியான விகித்த்தில் இயங்குகிறதோ, அது அழகாக இருக்கும். அழகு, புறத்தோற்றத்துடன் மட்டுமின்றி ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.

    அலுவலகம் செல்லும் போது ஏதோ தன் அனைத்துக் கப்பல்களுமே கடலுக்குள் மூழ்கி விட்டதுபோல் சோகத்தோடு செல்பவர்களும், வேலை முடிந்து திரும்பும்போது சிறகு முளைத்ததைப்போல் வானவீதியில் பறக்கிறஉற்சாகத்துடன் இல்லம் செல்பவர்களும் இருக்கிறார்கள்.

    சிலர் தங்களுக்கு அசாதரண தகுதி இருப்பதற்காகக் கற்பனை செய்து கொண்டு மற்றபணிகளை சாதாரணப்பணி என்றும், அதைச் செய்தால் தங்களது கௌரவம் சீர்குலைந்துவிடும் என்றும் எண்ணிக் கொள்கின்றனர். அந்த மயக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு முன், ஆயுளைக் கடந்து விடுகின்றனர். முதல் படியை மிதிக்காமலேயே மாடிக்குச் செல்ல நினைக்கிறமனப்பான்மை, பலருக்கம் இருக்கிறது.

    பணியிலிருந்து தப்பிப்பதைச் சிலர் கொள்கையாகவே வைத்துள்ளனர். எதைச் சொன்னாலும், ‘எனக்குத் தெரியாதே…!’ என்று கைவிரிப்பவர்கள் இருக்கின்றனர். ‘தெரியும்’ என்று சொன்னால், வேலைப்பளு வந்து விடுமே…! என்றபயம்தான் காரணம். அரைகுறையாகப் பணி செய்வோர், முழுமையான மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது. கடின இலக்குகளை நிர்ணயித்து, அவற்றைஅடையும்போது ஏற்படும் மகிழ்ச்சி, ஜீவநதியைப்போல நிரந்தரமானது. எதைச் சொன்னாலும், ‘நான் செய்து காட்டுவேன்’ எனத் துடிப்புடன் இயங்குபவர்களால்தான் உலகம் இன்னும் இருண்டுவிடாமல் இருக்கிறது.

    வாழ்வின் முன்னேற்றம் என்பது எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை. மனம் எவ்வளவு செம்மையடைகிறது என்பைதப் பொறுத்தே வாழ்வின் உண்மையான முன்னேற்றம் அமையும். ஆர்வத்துடன் செய்தால் மனம் ஒன்றிச் செய்தல், பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளல் போன்றவை மனதை செம்மைப்படுத்தும் வழிகளாகும். வேலைதான் சிறந்த வலி நிவாரணி, ஓய்வல்ல…

    வெற்றி உங்கள் கையில்…

    வாசிப்பை நேசிப்போம்…

    அறிவை பெருக்கிக் கொள்ளவும் மற்றவர்களுடைய கருத்துக்களைத் தெரிந்து கொள்ளவும் மனிதர்களுக்கு உதவியாக இருப்பது “புத்தகங்கள்” ஆகும்.

    “நண்பர்களில் மிகச்சிறந்த நண்பர் புத்தகங்கள்தான்” என்பது அறிஞர்களின் கருத்து ஆகும். சிறந்த சிந்தனையாளர்களின் கருத:துத் தொகுப்புகளாக புத்தகங்கள் அமைவதால், பல நேரங்களில் அவை உயிர் காக்கும் தோழனாக மாறிவிடுகிறது.

    நல்ல புத்தகங்களைப் படிக்கும் ஒருவரது மனம் நல்லவற்றைப் பற்றியே சிந்திக்கிறது. கவலைப்படும் நேரத்தில் கூட சிறந்த புத்தகங்களைப் படித்தால் கவலைகள் காணாமல் போய்விடுகிறது.

    தனிமைச் சிறையை தகர்ப்பதற்கும், நம்பிக்கையூட்டுவதற்கும், நம்மை புதுப்பிப்பதற்கும், வெற்றியை நோக்கி பயணிப்பதற்கும் அடிப்படையாக நல்ல புத்தகங்கள் அமைந்துவிடுகிறது. மிகச்சிறந்த செலவில் மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் மனிதர்களுக்கு வழங்குவது புத்தகங்கள்தானே… !

    வரலாற்றைப் படிப்பதற்கும், வரலாற்றைப் படைப்பதற்கும் இந்தப் புத்தகங்கள் தரும் கருத்துக்கள் அடித்தளமாக அமைகின்றன. நல்ல புத்தகங்களைப் படிப்பதால் ஒருவர் வாழ்வில் வெற்றி தானாக வந்து தங்குகிறது.

    மாவீரன் நெப்போலியன் வாழ்க்கையில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தார். “வரலாறு படைக்க வேண்டுமென்றால் வரலாறு படிக்க வேண்டும்” என்றஎண்ணத்தை மனதில் கொண்டவராகத் திகழ்ந்தார் நெப்போலியன். வால்டேர், ரூசோ போன்றமேமைகளின் கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்களை தனது 14 வயதிலேயே படித்து முடித்தார். இதன் மூலம், அவரது அரசியல் அறிவு தெளிவு பெற்றது. கற்பனைத் திறனையும், பல்துறைஅறிவையும் வளர்த்துக்கொண்ட மாவீரன் நெப்போலியன், புத்தகம் படிப்பதற்காகவே தனது வாழ்க்கையில் அதிக நேரத்தை ஒதுக்கினார்.

    16 வயதிலேயே இராணுவத்தில் முக்கியப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள பல பயிற்சிகளை மேற்கொண்டார் நெப்போலியன். உல்லாசமாக பொழுதைப் போக்க வாய்ப்புகள் இருந்தும் புத்தகம் படிப்பதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தினார். சமுதாயத்திற்கு தேவையானவை எவை…? அரசியலின் நிலைப்பாடு எப்படி உள்ளத…? எதிர்காலத்தில் எப்படி திட்டமிட வேண்டும்…? என்பவற்றைபுத்தகத்தின் மூலமே இளம் வயதில் கற்றுக் கொண்டார் நெப்போலியன்.

    புத்தகங்களை வாடகைக்குத் தரும் “புத்தக வங்கி”க்குச் சென்று (லெண்டிங் லைப்ரரி) புத்தகங்களை வாடகைக்கு எடுத்துப் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். படிக்கும்போதே முக்கியக் கருத்துக்களை தனியாக குறிப்பு எடுக்கவும் பழகிக்கொண்டார்.

    எகிப்து நாடு பற்றி பல தகவல்களை புத்தகத்தின் மூலமே தெரிந்து கொண்டார். இந்த புத்தக அறிவுதான், இளம்வயதிலேயே பல்வேறு பொறுப்புகளும், அங்கீகாரமும் மாவீரன் நெப்போலியனுக்குக் கிடைக்க காரணமாக இருந்தது. உலகத்திலேயே சிறந்த மாவீரனாக திகழ்வதற்கு அடிப்படையாக அமைந்தது மாவீரன் நெப்போலியனின் “புத்தக வாசிப்புத் திறன்” என்பதை மனதில் நிறுத்தி புத்தகங்களை நேசிக்கவும், வாசிக்கவும் பழகிக்கொள்வது நல்லது.

    முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாக அமைந்தது அவர் நேசித்த புத்தகங்கள்தான்.

    1950ம் ஆண்டு சென்னை மூர் மார்கெட்டில் “The Light from Many Lamps” என்னும் புத்தகத்தை ஒரு பழைய புத்தகக் கடையில்தான் அப்துல்கலாம் வாங்கினார். அந்தப்புத்தகத்தை பலமுறை வாசித்தார். மனதுக்குள் நேசித்தார். மேலும், இளம்வயதிலேயே தமிழ் இலக்கியத்தில் அதிக நாட்டம் கொண்டதால் கட்டுரைப் போட்டியிலும் பங்குபெற்றார். கட்டுரைப் போட்டியில் பரிசாக அவருக்குக் “திருக்குறள் தெளிவுரை” என்னும் புத்தகம் வழங்கப்பட்டது.

    “The Light from Many Lamps”, “திருக்குறள் தெளிவுரை” ஆகிய இரண்டு புத்தகங்களையும் நாள்தோறும் படிக்க ஆரம்பித்தார் அப்துல்கலாம். இந்த இரண்டு நூல்களும் எனது நெருங்கிய நண்பர்கள் என்று அப்துல்கலாம் குறிப்பிட்டுள்ளார்.

    என்னை உருவாக்கிக்கொள்ள இந்த இரண்டு புத்தகங்களும்தான் உறுதுணையாக இருந்தது. எனது வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது, இந்த நூல்கள்தான் துணை நிற்கின்றன. இந்த புத்தகங்களால் என் கண்ணீர் துடைக்கப்படுகிறது”  என்று புத்தகங்களின் சிறப்பை நெஞ்சம் நெகிழ்ந்து டாக்டர் அப்துல்கலாம் குறிப்பிடுகிறார்.

    இளம் வயதிலேயே புத்தகங்கள் வாசிப்பதற்கும், நேசிப்பதற்கும் கற்றுக் கொள்வதன் மூலம் வெற்றியை நம்மை நோக்கி நகரச் செய்யலாம்.

    புத்தகத்தை வாசிப்பது ஒரு தனிக்கலையாகும். மேலோட்டமாக ஒரு புத்தகத்தைப் பார்த்துவிட்டு “நான் புத்தகத்தை முழுவதுவமாக படித்துவிட்டேன்” என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், அந்தப்புத்தகத்தில் என்னென்ன முக்கிய கருத்துக்கள் இருக்கின்றன…? என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல இயலாத நிலையில் சிலர் இருக்கிறார்கள்.

    புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஒரேநாளில் ஏற்படுத்தி விட முடியாது. தொடர்ந்து வாசித்துப் பழக வேண்டும். பள்ளிகளில் பயிலும் போதே புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தத்தான் பாடப்புத்தகத்தைப் படிக்கவும், அந்த புத்தகத்திலுள்ள கருத்துக்களை மனப்பாடம் செய்யவும் ஆசிரியர்கள் பயிற்சி தருகிறார்கள். நாள்தோறும் படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டவர்கள்தான் பல செய்திகளையும் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் நடமாடும் தகவல் களஞ்சியமாக அவர்கள் உலா வருகிறார்கள்.

    புத்தகத்திலுள்ள அத்தனை பக்கங்களையும் வரிவிடாமல் படிப்பதும் கடினமான செயலாகும். எனவே, புத்தகத்தை வாசித்தபின்பு, வாசித்த கருத்துக்களை நினûவு கொள்ளும் வகையில் மீண்டும் ஒருமுறைபுத்தகத்தைப் படிப்பது நல்லது.

    நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகமாக இருந்தால் ஓரிரு வாரங்கள் கழித்து மீண்டும் அந்தப் புத்தகத்தை வாசித்து நல்ல கருத்துக்களை நினைவில் கொள்ளலாம். புத்தகத்தை வாசிக்கும் போதே மனதை ஒருமுகப்படுத்திக்கொள்வதன் மூலம்  வாசித்த கருத்தை நினைவில் நிறுத்தலாம். சுமார் 100 பக்கங்களை வாசித்தபின்பு அத்தனை கருத்துக்களும் மனதில் இல்லையே என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தேவைôயன கருத்துக்களை மட்டும் சின்னச்சின்ன குறிப்புக்களாக்கி மனதில் நிறுத்திக்கொண்டால் அவை நமக்கு தேவைப்படும் நேரத்தில் உதவும்.

    சுவாசிப்பது உயிர்வாழ எவ்வளவு முக்கியமோ, அதைப்போலவே வாசிப்பது வெற்றி வாழ்க்கை வாழ மிக முக்கியமானதாக அமைகிறது. முறையாக வாசிக்க ஒருவர் பழகிக் கொள்ளும்போது, புத்தகம் படிப்பதற்காக செலவிடும் அதிக நேரத்தை குறைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

    புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல்களை புத்தகத்தைப் படிக்கும்போதே புரிந்துகொண்டால் வாசிப்பு வேகம் அதிகரிக்கும். வாசிக்கும் வேகம் அதிகரிக்கும்போது நிறைய புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. படித்தவற்றைநினைவில் வைத்து மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தால் படித்த கருத்துக்கள் எல்லாம் மனதில் தேங்கும்.

    பள்ளியில் படிக்கும்போதே பாடப்புத்தகத்தோடு செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தகத்தைப் படித்து தகவல்களைத் திரட்டும்போது அந்தத் தகவல்களை வகைப்படுத்திக் கொள்ளவும் முயல வேண்டும். குறிப்பாக செய்தித்தாளிலுள்ள பொதுவான செய்திகள், அரசியல் செய்திகள், ஆசிரியர் உரை, சித்திரங்கள், படங்கள், விளையாட்டுத்தகவல்கள், வணிகத் தகவல்கள், சிறப்புக் கட்டுரைகள் என வகைப்படுத்துவதன் மூலம் தேவையான தகவல்களை சரியான முறையில் நினைவில் நிறுத்தலாம்.

    புத்தகங்களை வாசிப்பதோடு வாசித்த புத்தகத்திலுள்ள நல்ல கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டவர்கள் மட்டுமே வாழ்க்கையை ரசிக்கிறார்கள். மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

    வாசிப்பை நேசிப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் எளிதியில் வெற்றி பெறுகிறார்கள்…

    தொடரும்…