– 2015 – September | தன்னம்பிக்கை

Home » 2015 » September (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    காய்ச்சலால் வரும் வலிப்பு

    காய்ச்சலால் வரும் வலிப்பு என்பது 6 மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும். இது 100 குழந்தைகளில் ஐந்து பேரில் காணப்படலாம். உடலின் வெப்பநிலை உயரும் போது, அதாவது காய்ச்சல் வரும்பொழுது வலிப்பு வர வாய்ப்புகள் உண்டு.

    பெற்றோர் இருவரும் தங்களின் சிறுவயதில் இந்நோயால் பாதிக்கப் பட்டிருந்தால், அவர்களின் குழந்தைக்கு 10% முதல் 20% வரை காய்ச்சலால் வரும் வலிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேலும் பெற்றோர் இருவரும் மற்றும் முதல் குழந்தையும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இரண்டாவது குழந்தைக்கு 20% முதல் 30% வரை ஏற்பட வாய்ப்புண்டு.

    அறிகுறிகள்

    • இவை ஏற்படும்போது குழந்தை சில நிமிடங்களுக்கு நினைவிழக்கலாம். தொடர்ந்து கை மற்றும் கால்களில் விறைப்புத் தன்மை ஏற்படலாம்.
    • தலை பின்னோக்கி தள்ளப்பட்டு, கை, கால்களில் வலிப்பு ஏற்படலாம்.
    • தோல் வெளிர் நிறமாகவோ அல்லது நீல நிறமாகவோ மாறலாம்.
    • ஒரு சில நிமிடங்களுக்குள் வலிப்பு நின்றுவிடும். அதன்பிறகு குழந்தை சிறிது நேரத்திற்கு நினைவின்றி இருக்கும். பிறகு மெதுவாக சுயநினைவு திரும்பும்.

    என்ன செய்ய வேண்டும்

    குழந்தைக்கு வலிப்பு ஏற்படும்போது நிதானம் காப்பதே மிக அவசியம். குழந்தையின் தலையை ஒருபக்கமாகத் திருப்பிப் புரையேறுவதைத் தடுக்க வேண்டும். குழந்தையின் வாயில் எந்தவொரு பொருளையும் வைக்கக்கூடாது. கைகளில் இரும்புச் சாமான்களை கண்டிப்பாகக் கொடுக்கக்கூடாது. வலிப்பு நின்றவுடன் குழந்தையை ஒருபக்கமாக படுக்க வைக்க வேண்டும். ஒருவேளை வலிப்பு நீடிக்குமானால் அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்.

    சிகிச்சை

    வலிப்பு நீண்ட நேரம் நீடிக்கும் சமயங்களில் மிடசோலம், லோரசிபம், டையசிபம் போன்ற மருந்துகள் ஊசி மூலமாகவே அல்லது ஆசனவாய் வழியாகவோ கொடுக்க வேண்டும். மிடசோலம் மூக்கின் மூலமாகவும் கொடுக்கலாம்.

    முதல்முறை காய்ச்சலினால் ஜன்னி ஏற்படும்போது, மருத்துவரை நாட வேண்டும். ஏனென்றால் வலிப்பு சாதாரண காய்ச்சலில் இருந்து மூளை காய்ச்சலில் கூட ஏற்படலாம். எனவே மருத்துவரை அணுகுவதே சாலச் சிறந்தது.

    இவ்வகையான காய்ச்சலினால் ஏற்படும் வலிப்பு, காண்போர்க்கு வலிப்பு நோய் போல தென்பட்டாலும், இதனால் பிற்காலத்தில் வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு (2-7%). பெற்றோர்கள் இவற்றைப் பற்றி சரியாக தெரிந்து கொண்டால், பதட்ட மடையாமல் சரியான அணுகுமுறையோடு கையாளலாம்

    இந்த இதழை மேலும்

    மாற்றம் தேவையா?

    இளமைப்பருவம், இது இனிமை நிறைந்த பருவம். இருந்தபோதும் இந்த வளரும் பருவத்தில் பல்வேறு தேவையற்ற உணர்வுகளும் நம்மை அறியாமலேயே வளர்ந்துவிடுகின்றன.

    சிலருக்கு எந்த ஒரு புது இடத்திற்குச் சென்றாலும் பயம் ‘பக்’கென பற்றிக்கொள்கிறது. புதிய நபர்களை சந்திக்கும்போது எரிச்சல் ஏராளமாகவே வந்துவிடுகிறது. புதிய சூழலை அணுகும்போது புரியாத புதிராகத் தோன்றுகிறது.

    எந்த ஒரு நல்ல மாற்றத்தையும்கூட எளிதில் ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது.

    “இது தேவையில்லை”.

    “இந்த மாற்றம் எனக்கு ஏற்றதல்ல”.

    “எனக்கு இது பிடிக்கவே பிடிக்காது”.

    என பல்வேறு எண்ணங்களைச் சுமக்கும் ‘மனம்’ வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களை சந்திக்க மறுக்கிறது.

    பள்ளிப்பருவத்தில் இந்த மனநிலை அதிகமான இளம் உள்ளங்களில் இடம்பிடித்து விடுகிறது. சுமார் 2 ஆண்டுகள் படித்த பள்ளியிலிருந்து இன்னொரு புதிய சிறந்த பள்ளியில் சேருவதற்குக்கூட மனம் அச்சத்தின் உச்சியில் நின்று அடம் பிடிக்கிறது.

    “எனக்கு ஆங்கிலப் பாடம் பிடிக்காது”.

    “கணக்குப் பாடத்தைக் கண்டாலே ஆகாது”.

    “வகுப்புக்கு சயின்ஸ் டீச்சர் வந்தாலே வெறுப்பாக இருக்கிறது”.

    இப்படி வெறுப்பும், கோபமும் கைகோர்க்கும் சூழல் வாழ்க்கையில் பல நிலைகளில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

    வெறுப்பு, கோபம், எரிச்சல், பயம், பதற்றம்  போன்ற உணர்வுகள் வாழ்க்கையில் எல்லோரிடமும் தோன்றுவது இயற்கைதான். ஆனால் அந்த உணர்வுகளைக் கையாளத் தெரியாத நிலை ஏற்படும்போது வாழ்க்கையில் வெற்றி என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது.

    எனது வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவம் சற்று வித்திசாயமானது.

    இது  சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம்.

    1994ம் வருடம்.

    ‘கார்’ ஓட்டும் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றபின், நான் முறையாக ‘லைசென்ஸ்’ பெற்றுவிட்டேன்.

    2 மாதங்கள் பயிற்சிக்குப்பின்னர் புதிய கார் வாங்க திட்டமிட்டேன். பலர் பலவித அனுபவங்களைச் சொன்னார்கள்.

    “செலவு அதிகமாகும்” என்றார்கள் சிலர். இன்னும்சிலர் “அடிக்கடி கார் ஓட்டிப் பழகினால்தான் ஆக்ஸிடன்ட் இல்லாமல் கார் ஓட்ட முடியும்” என்றார்கள். “இப்போது எல்லா ஊருக்கும் கார் வசதி இருக்கிறது உங்களுக்கு இது தேவையா?”  என்றார்கள்.

    கார் ஓட்டுவதற்குப் பயந்த எனக்கு பலரின் ஆலோசனை பதற்றத்தைத் தந்தது. கார் ஓட்டுவதற்கான “தயக்கம்” என்னிடம் வந்து ஓட்டிக்கொண்டது.

    எனவே  சொந்தமாக கார் வாங்கும் ஆசைக்கு தடைபோட்டேன்.

    15 ஆண்டுகளுக்குப்பிறகு  மீண்டும் கார் வாங்கும் திட்டத்தை அமுல்படுத்த எண்ணினேன்.

    சொந்தமாக கார் வாங்க முடிவெடுத்தபோது ‘சிக்கல்’ தலைதூக்கியது.

    எனது வீட்டிலிருந்து மெயின்ரோட்டிற்குச் செல்லும் 2 கீ.மீ. பாதை மிகவும் குறுகலானது. டாக்ஸி டிரைவர்கள்கூட அந்தப் பாதையில் கார் ஓட்டிச் செல்லும்போது சிரமப்படுவார்கள்.

    என்னால் முடியுமா?

    தயக்கம், எரிச்சல், சோகம்  ஆகிய உணர்வுகள் சொந்தமாக வந்துநின்றன. ஆனால், சரியான நேரத்தில் எனது நண்பர் வந்து ஆலோசனை சொன்னார்.

    “இந்தப் பாருங்க கவிநேசன். இந்தக் குறுகலான பாதையைப் பார்த்ததும் உங்களுக்கு எரிச்சலும், கோபமும் வருகிறது. சிறுவர்கள் குறுக்கே வருகிறார்கள். வழியில் வாகனங்கள் நிற்கின்றன. இந்த இடைஞ்சல்களையெல்லாம் நீங்கள் நினைத்தாலும் மாற்றமுடியாது. ஏனென்றால், இவை உங்களால் கட்டுபடுத்த முடியாத காரணிகள் (Uncontrollable  Factors) ஆகும்.

    ஆனால், இந்தப் பாதையை பார்க்கும்போது வருகின்ற எரிச்சல், கோபம், சோகம், தயக்கம் போன்ற உணர்வுகளை உங்களால் கண்டிப்பாக கட்டுபடுத்த முடியும். ஏனென்றால் அவை உங்களால் கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் (Controllable Factors). எனவே நீங்கள்தான் உங்கள் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்” என ‘நறுக்’ கென சொன்னார் நண்பர்.

    நண்பரின் அறிவுரை என்னை சிந்திக்க வைத்தது.

    சிந்தித்துப் பார்த்து என்னை மாற்றிக்கொண்டேன்.

    இப்போது கார் ஓட்டும் கலையை மகிழ்வோடு கற்றுக்கொண்டேன்.

    டிரைவர் செலவு மிச்சம். எனக்கும் மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சி.

    சூழ்நிலைகளை சரியாகப் புரிந்து நம்மை மாற்றிக்கொண்டால் நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை உணர்ந்துகொண்டேன்.

    இதனை தெளிவாக உணர்ந்துகொள்ள – ‘ஓஷோ’ சொன்ன விளக்கம் துணையாக அமையும்.

    ஒருமுறை ‘ஓஷோ’ ஓய்வு விடுதி ஒன்றில் இரவு நேரத்தில் தங்கும் சூழல் ஏற்பட்டது.

    ‘ஓஷோ’ தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள அடுத்த அறையில் மாநில அமைச்சர் ஒருவர் தங்கி இருந்தார்.

    அன்று இரவு  அந்த விடுதிக்கு அருகில் ஏராளமான நாய்கள் கூடி தொடர்ந்து சத்தம்போட ஆரம்பித்தன. தூங்கச் சென்ற அமைச்சருக்கு நாய்களின் சத்தம் எரிச்சலைத் தந்தது.

    அதிகமான பயணக் களைப்பு. மறுநாளும் பயணம் செல்ல வேண்டும். தூக்கம் கெட்டால் அடுத்தநாள் பயணத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிடும். அமைச்சருக்கு எரிச்சல் வந்தது.

    தொடர்ந்து குறைத்த நாய்களின் சத்தம் அவரது தூக்கத்தைக் கெடுத்தது.

    ஆனால் ஓங்கி ஒலித்த நாய்கள் சத்தத்திலும் எந்தவித இடையூறும் இல்லாமல் நிம்மதியாக ‘ஓஷோ’ தூங்கினார்.

    தூக்கம் வராமல் தவித்த அமைச்சர் ஓஷோவின் அறைக்கதவைத் தட்டினார்.

    “இவ்வளவு நாய்கள் தொடர்ந்து சத்தம் போடுகின்றன. இந்தச் சத்தம் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கவில்லையா? நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள்”  எனக் கேட்டார்.

    அதற்கு ‘ஓஷோ’ அமைதியாகப் பதில் தந்தார்.

    “இந்த நாய்கள் எல்லாம் உங்களுக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ சத்தம் போடவில்லை. அவைகளுக்கு இந்த ஓய்வு விடுதியில் யார் தங்கி இருக்கிறார்கள் என்று உணரும் பகுத்தறிவும் கிடையாது. இங்கு ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றும் தெரியாது. நாய்கள் தங்கள் தொழிலான குரைத்து சத்தம் போடும் வேலையைச் செய்கின்றன. நீங்கள் உங்கள் வேலையான தூங்குகின்ற பணியைச் செய்யுங்கள்” என்றார் ஓஷோ.

    “இப்படி அதிகமான நாய்கள் சத்தத்தில் என்னால் தூங்கவே முடியாதே”  எனக் கவலையோடு சொன்னார் அமைச்சர்.

    ஒஷோ மீண்டும் விளக்கமாக பதில் தந்தார்.

    “இப்போது நீங்கள் நாய்கள் சத்தம் போடுவதை எதிர்த்துப் போராட நினைக்கிறீர்கள். இங்கு இப்போதுள்ள பிரச்சனை உங்கள் மனதிலுள்ள எதிர்ப்பு உணர்வுதான். இதனால்தான், நீங்கள் நாய் சத்தத்திற்கு எதிராக செயல்படுகிறீர்கள். சத்தம் போடுகின்ற நாய்கள் எல்லாம் குரைப்பதை நிறுத்தினால்தான், நீங்கள் நிம்மதியாகத் தூங்க முடியும் என்று நினைக்கிறீர்கள். இந்த எண்ணம் ஒரு நிபந்தனையாக (Condition) மாறி உங்கள் மனதில் இருக்கிறது. உங்கள் ‘நிபந்தனை’ பற்றி அந்த நாய்களுக்குத் தெரியாது. நீங்களும் பிடிவாதமாக நிபந்தனையோடு இருக்கிறீர்கள். ‘நாய்களின் சத்தம் இல்லாமல் இருந்தால்தான் தூக்கம் வரும்’ என நினைக்கிறீர்கள். இப்படி ‘கண்டிஷன்’ போடுவது வாழ்க்கையில் நடைமுறைக்கு நல்லதல்ல.

    “நாய்களின் சத்தத்தை ஏற்றுக்கொள்வதுதான் சிறந்தது. அந்த நாய்கள் எவ்வளவு சக்தியோடு சத்தம் போடுகின்றன. இந்த இரவிலும் அவைகளின் சக்தியைக் கவனித்துப் பாராட்டினால், அந்த சத்தம்கூட உங்களுக்கு மந்திரமாகத் தோன்றும்” என்றார் ஓஷோ.

    ஓஷோவின் ஆலோசனையை ஏற்ற அமைச்சர் மனதை மாற்றிக்கொண்டார். தனது அறைக்குச் சென்று வேறு சிந்தனையை வரவழைத்துக் கொண்டார். இப்போது, அவரால் நிம்மதியாக தூங்க முடிந்தது.

    ஓஷோவின் அறிவுரை இதுதான்.

    “உன்னைச் சுற்றியிருப்பது உனக்கு எரிச்சல் தந்தால் உனது சிந்தனையை உள்முகமாகத் திருப்பிப்பார். உனது எரிச்சலுக்குக் நீதான் காரணம் என்பதை நீயே புரிந்துகொள்வாய். இந்த எரிச்சலுக்கு காரணம் ‘இது இப்படித்தான் நடக்க வேண்டும்’ என எதிர்பார்த்து நீ செயல்படுகிறாய். உலகம் இப்படித்தான் இயங்கவேண்டும் என நம் ‘நிபந்தனை’ விதிக்க முடியாது. தேவையில்லாத சில நிகழ்வுகளை எதிர்த்துப் போராடும்போதுதான் உன்னிடம் எரிச்சல் உண்டாகிறது”  இந்த ஓஷோவின் சிந்தனை நம்மிடம் மாற்றுச் சிந்தனையை உருவாக்குகிறது அல்லவா!

    சிந்தனையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்போதுதான் எந்த மாற்றங்களையும் நம்மால் சந்திக்க இயலும்.

    மாற்றம் ஒன்றுதான் நம் வாழ்க்கையில் ஏற்றம்தந்து வெற்றியைத் தரும் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

    எந்த மாற்றம் வந்தாலும் அதில் ஏமாற்றம் உருவாகி நம்மை வீழ்த்தும் நிலையை ஏற்படுத்த அனுமதி வழங்காமல் வாழக்கற்றுக்கொண்டால் வாழ்வில் வெற்றிகள் நிரந்தரமாக நம்மிடம் தங்கிவிடும் அல்லவா!

    இந்த இதழை மேலும்

    இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!

    வாழ்க்கை என்பது என்ன?

    பலரும் பலவிதமாய் கூறுகின்றனர்.

    “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’

    இது நம் முன்னோர் அனுபவித்துக் கூறியது.

    இந்த அரிய மனிதப்பிறவி எடுத்து வாழும் இந்தக் காலத்தில் காட்டில் நடப்பவைகள். வருத்தத்தையே தருகின்றன.

    வாழ்க்கை என்பதை எப்படி வேண்டுமானாலும் வாழலாம். வாழ்வதற்கு பணம் கட்டாயம் தேவை. அப்பணத்தைப் பெற எதையும் செய்யலாம் என்ற மனநிலை இன்று மக்களிடம் மேலோங்கி வருகிறது.

    ”வாடிய பயிரைக் கண்டே வாடிய உள்ளங்கள்” வாழ்ந்த நம் நாட்டில், இன்று செல்வந்தர்கள் ஒருபுறம் வேகமாகத் தங்கள் செல்வ நிலையைக் கூட்டிகொண்டே செல்ல, வசதியற்றவர்கள் அப்படியே வாழும் பெரும் ஏற்றத்தாழ்வு தொடர் கதையாகவே உள்ளது.

    “வாழ்க்கை என்ன வாழ்க்கை

    வாழ்ந்து காட்டுவோம் சுலபமாக ‘

    “நான் ஏன் பிறந்தேன்

    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் “

    இந்தப் பாடல் வரிகள் நமக்குச் சொல்வது, வாழ்க்கை வெகு சுலமானதுதான்.

    தான், தன் குடும்பம் மட்டும் என்றில்லாமல், தான் வாழும் இந்தச் சமுதாயத் (நாடு) துக்கும் ஏதாவது நல்லவை செய்ய வேண்டும்.

    பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. பலவகையான பறவைகளின் வசிப்பிடம் அது. ஒருநாள் ஒருபறவை இட்ட எச்சத்தால், அந்த மரத்தின் அடியில் முருங்கை ஒன்று வளர்ந்தது. ஆலமத்தைப் பார்த்து முருங்கை நினைத்தது. தானும் 5 ஆண்டுகளில் வருடத்துக்கு 10 அடி உயரம் வீதம் 5 அடி உயரம் ஆலமரத்தை விட உயரமாக வளர வேண்டுமென்று. அதன்படி வளரவும் செய்தது. ஆனால், மக்கள் அவ்வப்போது வந்து முருங்கை இலை, காய், எனப்பறித்துச் சென்றதால் அது உயரமாக முடியவில்லை. அதனால் வருந்தியது.

    இதையறிந்து ஆலமரம், முருங்கையிடம் கூறியது, “உனது உபயோகம் கணக்கிட முடியாதது, பல வியாதிகளைச் சரியாக்கும் மருத்துவ குணங்களுடன் நீ படைக்கப்பட்டிருப்பதால், என்னை விட உன்னை மக்கள் அதிகம் பயன்படுத்திப் பலனடைகிறார்கள். எனவே, நீ அதிகம் சந்தோசப்படு. உன் பிறப்பின் பலனே இதுதான்.

    இதைக் கேட்டு முருங்கை மரம் சமாதானமடைந்தது, இந்த உலகில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்துக்காவே உள்ளன என்பது உறுதி.

    வாழ்க்கை என்பதை இறப்பதற்குள் வாழ்ந்துவிட வேண்டும். இறக்கும்போது, இன்னும் கொஞ்ச நாள் நீட்டித்தால், இப்படியெல்லாம் வாழலாமே என்று எண்ணுவதில் பயனில்லை.

    ஒவ்வொரு நாளையும், இன்றே நம் வாழ்வின் கடைசி நாள் என்ற உணர்வுடன் வாழ்பவர்கள் பிறவியின் நோக்கத்தை அறிந்து அனுபவிப்பவர்கள்.

    பிறவியின் நோக்கம் தான் என்ன?

    இரு சொற்களில் சொல்லி விடலாம்.

    ஒத்தும் உதவியும் வாழ்தல்.

    ஒத்து என்றால்  விட்டுக் கொடுத்து,

    ஏற்றுக் கொண்டு,

    மன்னித்து,

    பாராட்டி – என்று அர்த்தம்

    உதவி என்றால் நம் உடலாற்றல், மன ஆற்றல்,  பொருள் வளம், அதிகாரம் இவற்றால் மற்றவர்களுக்கு, பாகுபாடு பாராமல், தேவையான காலத்தே தேவைப்படுவதை மனமுவந்து கொடுத்துவிட்டு, அதை மறந்து விடுதல் என்று பொருள்.

    இரண்டையும் சேர்த்துச் சொன்னால், வாழ்க்கை என்பது, நீ எதைச் கொடுக்கிறாயோ, அதுவே பல மடங்காக உனக்குத் திரும்பிவரும் என்பதுதான்.

    “அர்ச்சனை இல்லாத ஆண்டவனுமில்லை

    பிரச்சனைகள் இல்லாத மனிதனுமில்லை “

    என்று நகைச் சுவையாகச் சொல்லுவார் நண்பர் ஒருவர், வாழ்க்கை என்பது நீண்ட பயணம் போன்றது. பயணம் மகிழ்ச்சியாக அமைய வாகனம், ஓட்டுனர், எரிபொருள், உடன் பயணிப்போர், இருக்கைவசதி போன்றவை எப்படி முக்கியமோ, அது போல், நாம் பிறந்த வீடு, பெற்றோர் வளர்ப்பு முறை, பழக்கமான நண்பர்கள், கல்வி சுற்றுச்சூழல் ஆகியன மிக முக்கியம்.

    எங்கு வேண்டுமானலும் பிறந்திருக்கலாம். ஆனால், முன்னேறுவதற்கு பிறந்த இடமோ, பெற்றோரோ தடையல்ல என்பதைத் திடமாக நம்ப வேண்டும்.

    முதலில் நாம் என்ன பணிக்குச் செல்ல விரும்புகிறோம். அதற்காக தகுதி என்ன என்பதை அறிதல் அடிப்படை.

    பள்ளி, கல்லூரிக் கல்வி பெரும்பாலும் பணிசார்ந்திராமல், பொதுவாகவே உள்ளதால், பணிக்கான தகுதியைப் பெறுவது முக்கியம்.

    இதற்கு ஆசை என்ற முறையைக் கடைபிடிக்க வேண்டும். ASAI  என்று ஆங்கில எழுத்துக்களாய் ஆசையை எழுதுவோம்.

    A    Analyse – தகவல் சேகரித்து, ஆராய்தல்

    S    Select – தேர்வு செய்தல்

    A   ACT – திட்டமிட்டு செயல்படுதல்

    I INFORM OTHERS -மற்றவர்களுக்கும் சொல்லுதல்

    பிறக்கும் போது உடல் குறையுடன் பிறந்தவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று சொல்லுகிறோம். பெயரிலேயே சாதாரண மனிதர்களை விட திறமை அதிகமுடையவர்கள் என்பது தெளிவாகிறது.

    அவர்கள் தங்கள் திறமைகளை உணர்ந்து அவைகளை வளர்த்து, தமது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உபயோகிப்பதை அறிவோம்.

    இடையில் உடல் உறுப்புகளை விபத்தில் இழந்தாலும் கூட, முயன்றால் சாதிக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு அருணிமா சின்ஹா என்ற மங்கை, சமீபத்தில் பாரத தேசத்தின் உயர் விருதுகளில் ஒன்றான பத்ம விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார்.

    தன் 20வது வயதில் பணியில் சேருவதற்கான ரயில் பயணத்தின்போது கொள்ளையர்களால் ரயிலிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டு ஒரு காலை இழந்தார். வாழ்க்கைத்தடம் புரண்டது.

    பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து, செயற்கை கால் பொருத்தி, முதன் முதலில் இந்த வகையில் உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை ஏறிச்சாதனை படைத்தார். ஏன் மற்றவர்களால் முடியாது?

    மற்ற உயிர்களான எறும்பு, சிலந்தி, காகம், போன்றவைகள் சுறுப்சுறுப்பாகத் தம்பணியை விடாமுயற்சியுடன் செய்யும் போது நம்மால் மட்டும் முடியாதா?

    முடியும். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என நிர்ணயம் செய்வதுதான். அடிப்படை. படகில் பயணம் செய்கிறோம். துடுப்பு இல்லை. நீரின் வேகத்திற்கேற்ப ஏதாவது ஓரிடம் சென்று சேருவோம். இது போலவே பலரது வாழ்க்கை அமைகிறது.

    துடுப்பு கையிலிருந்தால், நாம் விரும்பிய இடத்துக்குச் செல்ல முடியும். துடுப்பு என்பது தான் வாழ்க்கையின் குறிக்கோள்.

    ஆனால், இதற்குத் தடையாக இருப்பது பயமும் வலியும் ஆகும். அதாவது கடந்த கால அனுபவங்கள் என்ற வலி; எதிர்காலம் அல்லது கற்பனை பயம்.

    இவற்றிலிருந்து விடுபட, நிகழ்காலத்திலேயே வாழ வே

    ண்டும்.  மற்றவர்கள் ஏதாவது சொல்லுவார்களோ என்றேண்ணியே பலர் தம் திறமைகளைப் பூட்டி வைத்துள்ளனர்.

    இவர்கள் அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து சிறிது நேரம் சிந்தித்தால்போதும், செய்கின்ற பணியிலேயே திருப்தியை உயர்வை அடைய முடியும்.

    இதற்குத் தேவை: மூன்றிணைப்புப் பண்பாடு:

    1)    விழிப்பு நிலை : நம் தேவைகள், பழக்கங்கள், சூழ்நிலை இவற்றால் நாமும் மற்றவர்களும்   பாதிக்காமல், துன்பமடையாமல் எச்சரிக்கையுடன் வாழ்தல்.

    2)    திட்டமிட்ட செயல்பாடு : திட்டமிட்ட வாழ்க்கை தெவிட்டாத இன்பம். வீடு கட்டுவதற்காக   எப்படி ஒரு வரைபடம் தயாரித்து, அதன்படி கட்டி ஆனந்தப்படுகிறோமோ, அதுபோல் நம் வாழ்க்கை இப்படி இருக்க வேண்டுமெனத் திட்டமிடலாம்.

    ஓராண்டுக்குள் செய்ய வேண்டியவை,

    மூன்றாண்டுக்குள் முடிக்க வேண்டியவை

    ஐந்தாண்டுகளில் உயர வேண்டிய நிலை

    இதுபோல் இலக்குகளை நிர்ணயித்து, உழைத்து, செலவழித்து, சேமித்து இன்பம் காண வேண்டும். இதற்கு நம் எண்ணம் பேச்சு, செயல் மூன்றையும் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.

    என்ன பலன் கிடைக்க வேண்டுமென எண்ணுகிறோமோ, அது அப்படியே வந்து சேரும். இதற்குத்தான் இந்த திட்டமிட்டாலும் கூட எப்படியாவது பின்னடைவு வரும். இதைத் தான் “”யானைக்கும் அடி சறுக்கும்’ என்றனர். எனவே, தினமும் இரவு படுக்குமுன், அன்று பேசிய பேச்சுகள் செய்த செயல்கள், எண்ணிய எண்ணங்கள் இவைகளை ஒருமுறை நினைத்துப் பார்த்து, தவறுகள் தெரிந்தால் திருத்திக் கொள்வதும், சரியென்றால் தொடர்ந்து செய்யவும் பழகிக் கொள்ள வேண்டும்.

    இப்படியெல்லாம் வாழும்போது, வாழ்க்கை ஐஸ்கிரீம் போல சுவையுடையதாக இருக்கும். பெரும்பாலானவர்கள் ஐஸ்கிரீமை விரும்பிச் சாப்பிடுவார்கள். ஏதாவது விசேடங்களுக்குச் செல்லும் போது, சாப்பிடாதவர்கள் சிலரே என்ற அளவில் அதை சுவைப்பர். ஐஸ்கிரீம் வாங்கி, கையில் வைத்துக் கொண்டே சாப்பிட தாமதம் செய்தால் என்னவாகும்? இது உருகி விடும்,

    உருகிவிட்டாலே சுவை குறைந்து விட்டது என்ற உணர்வு உண்டாகும். திட நிலையில் ஸ்பூனால், சிரமப்பட்டு எடுத்து வாயிலிட்டு கரைத்து உண்ணுவதிலுள்ள ஆனந்தமே, ஆனந்தம்.

    இது போன்றதுதான் நம் வாழ்க்கையும், ஒவ்வோர் பருவத்திற்கும் உண்டான இயல்பான பேச்சு, செயல் இவைகளை அறிந்து, எவருடைய மனமும் வருந்தாமல், காலத்தே செயல்பட்டால் வாழ்க்கை சுவையாக அமையும்.

    “பருவத்தே பயிர் செய்’ என்று கூறியுள்ளனர், உரிய காலம் என்பதை மறவாமல் எச்சரிக்கையுடன் வாழும் போது வாழ்க்கை வசந்தமாகவே இருக்கும்.

    பொதுவாக இருவர் சந்தித்துக் கொண்டால், நல விசாரிப்புக்குப் பின் பேச்சு தொடர்ந்தால், தங்கள் உடல் வியாதி, வீட்டுப் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது இயல்பு.

    கேட்பவர்கள், சொல்பவருக்கு ஏராளமான இலவச ஆலோசனைகள் வழங்குவார்கள். இது தவறு, சொல்பவர் தம் மனதிலுள்ள பாரத்தில் சிறுப்பகுதியை இறக்கி வைக்கும் களமாக கேட்பவரை நினைக்கிறார் என்ற நினைவில் கேட்பது தான் சிறந்தது.

    நாம் ஓரிடத்திலிருக்கிறோம். அந்த இடத்திலேயே வாழ்க்கை நம்மிடமிருந்து முன்னே சென்று நமக்காகக் காத்திருக்கிறது. இப்போது நமக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியைக் கடப்பது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை.

    இடைவெளி பூஜ்யமானதா? இதோடு நின்று விடலாமா? மீண்டும் ஏதோ திட்டம், வாழ்க்கை முன்னே சென்று காத்திருக்கும்! மீண்டும் பூஜ்யமாக்க வேண்டும் அடேங்கப்பா! இத்தனை முறையா? ஆம் அப்போதுதான் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும்.

                              தொடரும்.

    இந்த இதழை மேலும்

     

    தன்னம்பிக்கை மேடை

    ஒரு மனிதன் எப்படி வாழ்ந்து மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்…?

    – சுரதா, பாலக்காடு

    சுமார் 2 லட்சம் ஆண்டுகளாக மனித இனம் (Homo sapiens) வாழையடி வாழையாக, வாழ்ந்து வருகின்றது.  நமது பெற்றோரிடமிருந்து நாம் வந்திருக்கிறோம்; ஆனால் நாம் மட்டும் நவீன உலகில், விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட நிலையில், இன்றைய தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். முன்னர் வாழ்ந்தவர்கள் மறைந்துவிட்டார்கள்.

    நமது சந்ததிகள் பிறந்து வளர்ந்த நிலையில் நாம் மறைந்து விடுவோம். நமது வாழ்நாள் சுமார் 25,000 நாட்கள்தான், மிஞ்சிப்போனால் இன்னும் 5000 நாட்கள் அதிகமாக வாழ்வோம், அவ்வளவுதான். 100 ஆண்டுகள் கழித்து இந்தப் பூமியில் வேறு ஆட்கள் ஜீவித்திருப்பார்கள். ஆனால், அவர்களுடைய உடலில் நமது இரத்தம் இருக்கும்.

    அதாவது, விஞ்ஞான ரீதியாகச் சொல்லப்போனால் நமது மரபணுக்கள் (Gene) நிலைத்து இருக்கும். மனிதனின் மரபணுக்கள் மரிப்பதில்லை; அது அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடந்து சென்று கொண்டிருக்கும். நமது உடல் அழிந்தாலும் நமது மரபணுக்கள் நமது பிள்ளைகள் மூலமாக பல நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும். மரபணுக்களுக்கு மரணமில்லை…! இது விஞ்ஞான உண்மை; அதைப்பற்றி இன்னும் தெரியவேண்டுமானால், இயற்கை உயிரியல் விஞ்ஞானி ரிச்சர்டு டாக்கின்ஸ் எழுதிய “ “The Selfish Gene” என்ற விஞ்ஞான காவியத்தைப் படியுங்கள்.

    ஆக, நாம் பிறந்தது ஒரு உயிரியல் சம்பவம் அவ்வளவுதான். ஆனால், எப்படி வாழ்வது என்பது அவரவர் சூழ்நிலை தீர்மானிக்கும் அல்லது அவரே தான் தீர்மானிக்க வேண்டும். பிறக்கும்போது இவரது வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்;இப்படிப்பட்ட வேலைதான் செய்வார், இப்படிப்பட்டவரைத்தான் திருமணம் செய்வார், இன்றைய தினம்தான் இறப்பார் என்றெல்லாம் முன்னரே முடிவானது என்று சொல்லுவதை நம்ப முடியவில்லை. ஏனென்றால், அதற்கு ஆதாரம் இல்லை. மறைந்த மாமனிதர், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம்  “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார். இது எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமான, உற்சாகமூட்டும் ஒரு யதார்த்த வாசகம்…?

    நாம், நாமாக சரித்திரம் படைக்க வேண்டும். ஆக, வாழ்க்கையை சரித்திரம் ஆக்குவதும் சாதாரணம் ஆக்குவதும் அவரவர் விருப்பத்தையும் முயற்சியையும் பொறுத்தது, அவரது தலை எழுத்தைப் பொறுத்து அல்ல…

    ஒருவர் இறக்கும்போது அவரைப்பார்த்து எவரும் பொறாமைப்பட மாட்டார்கள்; ஆனால், டாக்டர் அப்துல்கலாம் இறந்தபோது, அப்படி ஒரு ஏக்கம் பலருக்கு வந்தது என்று ஒரு குறுஞ்செய்தி உலா வந்தது.. அப்படி ஒரு நல்ல மரணம்; அவர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார். அவர் மறைந்த போது வருத்தப்படாத மனிதர்களே இல்லை எனலாம்…! வாழ்க்கை என்றால் அப்படி வாழவேண்டும்; அல்லது அப்படி சாகவேண்டும். டாக்டர் அப்துல்கலாம் மரித்தபோது நாம் அனைவரும் அழுதோம். ஒருவர் மரித்தபோது எத்தனைபேர் அழுதார்கள் என்பதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு எனலாம்…

    ராபின் சர்மா என்பவர் இந்திய வம்சாவளி அமெரிக்கர், சிறந்த நூலாசிரியர்; அவரது அனைத்து நூல்களையும் படித்து விட்டேன். “ Who will cry when you die…? என்பது அவரது முன்னணி புத்தகம். நீ இறந்த பின் யார் அழுவார்கள்…? என்ற நூலில், வாழ்நாள் முழுவதும் எப்படி வாழ்ந்தோம் என்பது தினம்தினம் எப்படி வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்து அமைகிறது என்கிறார். எனவே, இன்றைய தினத்தில் எப்படி வாழ்வது என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் திறவுக்கோல் எனலாம்.

    “பிறந்தபோது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது மற்றவர்கள் அழுதால் உன் ஆத்மா மகிழும்” எனப் பேசும் ராபின் ஷர்மா இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் பரவலாகப் பேசப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது. அவற்றை உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும் வைக்கின்றேன். இன்று, இப்போது இங்கே அறிவுப்பூர்வமாக வாழ்ந்தால் ஒருவருடைய வாழ்வும், சாவும் நல்லதாகவே இருக்கும் என்பதை அவை உணர்த்துகின்றன.

    1. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றைக் கற்றுத்தருகிறார். எனவே, நீங்கள் சந்திப்பவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள்.
    2. எந்தத்துறையில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் செலுத்துங்கள். மற்றவிஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
    3. கவலைப்படாதீர்கள், மிகவும் அவசியம் என்றால் கவலைப்படுவதற்கென ஒவ்வொரு நாளும் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகளையும் போக்குவது குறித்து சிந்தியுங்கள்.
    4. அதிகாலையில் 5 மணிக்கு எழுங்கள், வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே. ஒரு நாளின் நல்ல நாளும் காலைப்பொழுதான்.
    5. நிறைய சிரியுங்கள், அது நல்ல ஆரோக்கியத்தையும், உற்ற நண்பர்களையும் பெற்றுத் தரும்.
    6. எண்ணற்ற புத்தங்களைப் படியுங்கள் எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள் காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள் (ஆனால் நல்ல புத்தகங்களை மட்டும் தேர்வு செய்யுங்கள்)
    7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் வரிசையாக எழுதுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போது மனபாரம் கணிசமாக குறையும். பிரச்சனைகளுக்கான தீர்வு மனதில் உதிக்கும். இதன்மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
    8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக நினையுங்கள். அவர்களுக்கு தரும் நேரம் தான் நீங்கள் தரக்கூடிய சிறந்த பரிசு.
    9. தனக்கு வேண்டியதைக் கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாள் போலத் தெரிவான் கேட்கக்தவறியவன் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும். வேண்டியதைக் கேளுங்கள், கேட்பதில் தவறில்லை. கேட்பது என்பது ஒரு கலை.
    10. உங்கள் பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள் உதாரணமாக நல்ல புத்தங்கள் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் பற்றி சிந்திப்பதிலோ செலவழிக்கலாம்.
    11. எந்த ஒரு புது பழக்கமும் தொடங்க, பின்னர் அது உங்கள் வாடிக்கையாகக் குறைந்தது 21 நாட்களாவது ஆகும். அதுவரை பொறுத்திருந்து, தொடர்ந்து அந்த நல்ல செயலை செய்து நல்ல பழக்கங்களைப் பழகுங்கள்.
    12. உங்களுக்கு பிடித்த இசையைக் கேளுங்கள். மனதுக்கு இதமான இசை புன்னகையையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும்.
    13. புது மனிதர்களிடம் தயங்காமல் பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கக்கூடும்.
    14. பணம் மட்டும் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன் பலருடன் பழகுங்கள்.
    15. எதிலும் வித்தியாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
    16. நீங்கள் படிக்கத் துவங்கும் எல்லாப் புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணி நேரத்தில் அந்த நூல் உங்களை ஈர்க்கா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
    17. உங்கள் கைபேசி உங்கள் வசதிக்காக தான் அது அடிக்கும் போதெல்லாம் பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேலைகளில் இருக்கும் போது தொலைபேசியை எடுத்து பேசாதீர்கள்
    18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்றவர அவை உதவும்.
    19. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போது மனைவி / குழந்தைகளுக்கு ஏதாவது எடுத்துச் செல்லுங்கள். சின்னச் சின்ன பரிசுகள் பெரிய பெரிய ஆனந்தத்தைத் தரும்.
    20. எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான மனிதராயிருங்கள் டாக்டர் அப்துல்கலாம் போன்று வெற்றி பெற்றசிறந்த மனிதர் எளிமையானவர்களே.

    மேற்கண்ட ஆலோசனைகளில் ‘ஆற்றல் உண்டு’ என்று நீங்கள் கருத்தினால் அவற்றைசெயல்படுத்திப் பாருங்கள்; உங்கள் வாழ்க்கை சிறப்பாகும், மரணம் கூட.

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    நம் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த சங்கர்தயாள் சர்மா அவர்கள் ஒரு முறை “”ஓமன் நாட்டிற்குச் சுற்றுப் பயணம்” மேற்கொண்டபோது, அந்நாட்டு மன்னர் சர்மா அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வருகை புரிந்தது மட்டுமல்லாமல் விமானத்தில் ஏறி உள்ளே  சென்று சர்மா அவர்களை அழைத்து வந்தார்.

    இச்செயல் அங்கு இருந்த அதிகாரிகளையும், பத்திரிகையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. காரணம், இதுபோன்று உலகில் எந்நாட்டிலும் வரவேற்பு தரப்பட்டதில்லை.

    பத்திரிகையாளர்கள் உடனே மன்னரைச் சந்தித்து வெளிநாட்டுத் தலைவர்கள் யார் வந்தாலும் அவர்கள் வந்து உங்களை சந்திப்பது தானே மரபு. ஆனால் இந்தியக் குடியரசுத் தலைவரை நீங்களே நேரில் சென்று வரவேற்று அழைத்து வந்திருக்கிறீர்களே! ஏன் இந்தச் சிறப்பான வரவேற்பு என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஓமன் மன்னர், இந்தச் சிறப்பான வரவேற்பு சர்மா அவர்கள் குடியரசுத் தலைவர் என்பதற்காக மட்டும் தரப்பட்ட வரவேற்பல்ல, நான் இந்தியாவில் பூனாவில் படித்தபோது எனக்கு திரு சர்மா அவர்கள் தான் ஆசிரியர் ஒரு மாணவன் ஆசிரியருக்குச் செலுத்திய மரியாதை இது என்றாராம்.

    ஒரு சிறந்த ஆசிரியர் என்றும் எப்போதும் எல்லாப் பதவிகளைக் காட்டிலும் முதல் மரியாதையோடு பார்க்கப்படக்கூடியவர். அதனால் ஆசிரியர்கள் என்பவர்கள் வாங்குகிற சம்பளத்திற்காக வேலை செய்யாமல் வருங்காலச் சமுதாயத்தை உருவாக்கும் பெரும் பொறுப்போடு வேலை செய்ய வேண்டும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பு.

    நாடு உயர மாணவர் சமுதாயம் உயர பாடுபடும் எல்லா நல்ல ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.

    என் பள்ளி

    முனைவர் கு. கிரிஜா ராஜராம்

    குமாரசாமி ராஜராம் அறக்கட்டளை

    மதுரை.

    “ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்

    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற

    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”.

    – பாரதியின் வரிகளை உண்மையாக்கியவர் முனைவர் திருமதி கு.கிரிஜா ராஜராம் அவர்கள் ‘என் பள்ளி’ நினைவுகள் குறித்து அவரிடம் நாம் கேட்டபோது அவர் பகிர்ந்து கொண்ட சாதிப்பு வரிகள்….…

    சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் என்னும் அழகிய கிராமம். தந்தை குப்புசாமி, தாய் தனலட்சுமி ரங்கநாயகி இருவரும் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றார்போல் எனது உடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர் 6 சகோதர்கள்   5 சகோதரிகள். எனது குடும்பம் பெரியதாக இருந்தாலும் என்பெற்றோர்கள் எவ்வித கஷ்டமுமின்றி எங்களை வளர்த்தார்கள்.

    நான் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை போடிநாயக்கனூரிலுள்ள “ஜமீன் தாரணி காமுலம்மாள்” துவக்கப் பள்ளியில் பயின்றேன். அடுத்து 5ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தேனி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றேன். எனது பள்ளி வாழ்க்கை முழுவதும் தமிழ் வழிக் கல்வியாக பயின்றேன். என்னுடைய பத்தாம் வகுப்பிலே பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன்.

    இதற்குக் காரணம் என்பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான சமூக அறிவியல் ஆசிரியர் திருமதி ஆண்டாள் என்பவர். இவர் என்னுடைய வகுப்பு ஆசிரியராக இருந்தார். இவர் பாடம் நடத்தும் போது பாடத்துடன் தங்களின் வாழ்க்கையையும் பாடமாக சொல்வார். அது மட்டுமல்லாமல் கடந்த வந்த பாதையில் சந்தித்த இன்ப துன்பமான நிகழ்வுகளை வகுப்பில் சொல்வார் இது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    பள்ளியில் இவர் எப்பொழுதும் நம்பிக்கை உரிய வார்த்தைகளை மட்டுமே பேசுவார். இவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு உந்துகோலாக  இருக்கும்.

    என் தாய், தந்தை இருவரும் ஆசிரியர்கள் என்பதால் எனக்கும் அந்த ஆசிரியர் பணியின் மீது திவிர ஈடுபாடு வந்தது. அதனால் பி.ஏ. ஆங்கிலம் மீனாட்சி மகளிர் கல்லூரி மதுரையில் படித்தேன். பிறகு எனக்கு திருமணம் நடந்து முடிந்தது. என் கணவர் ஓ. ராஜாராம், அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு என் குடும்பம் மற்றும் கணவர் துணையுடன் ஆங்கிலத்திலும், வரலாற்றிலும் மூன்று எம்.ஏ. பட்டங்கள் வாங்கினேன்.

    என்னுடைய தீராத அறிவுத் தேடலினால் படிப்பை மேலும் தொடர விரும்பினேன். இதனால் 1988ம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பில் பயின்று அதில் தங்கப்பதக்கம் வாங்கினேன். அதன் பிறகு பி.எட், எம்.எட்,  இரண்டு பி.எச்.டி, மூன்று பி.ஜி டிப்ளமோ என கிட்டத்தட்ட 12 பட்டங்களைப் பெற்றேன்.

    படிப்பை முடித்த பிறகு சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் சீதாலட்சுமி ஆச்சி பெண்கள் கல்லூரியிலே ஆசிரியராகக் கல்விப் பணியைத் துவங்கி  மூன்று வருடம் இந்தக் கல்லூரியில் பணிபுரிந்தேன். பின்பு புதுக்கோட்டை ஜே.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓராண்டு பணி புரிந்தேன்.  பின்பு நாடார் சரஸ்வதி கல்லூரி தேனியிலே முதல்வராக 12 வருடம் பணியாற்றினேன்.

    அதன் பிறகு சுமார் 6 வருடம் கோவை ஓ.எ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணி செய்து எனது 62 வது வயதிலே ஓய்வு பெற்றேன். கிட்டத்தட்ட 22 வருடம் கல்லூரியில் மாணவ மாணவிகளுடன் பணியாற்றியதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

    ஓய்வு பெற்ற பிறகும் தற்போது பல கல்லூரிகளின் பி.எச்.டி ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டியாகவும்,  கரூர் மாவட்டத்திலுள்ள வள்ளுவர் அறிவியல் மற்றும், மேலாண்மை கல்லூரிக்கு சிறந்த ஆலோசகராகவும் என்னுடைய கல்விச் சேவையைத் தொடர்ந்து கொண்டுயிருக்கிறேன்.  என் கணவர் அமரர் ஆகிவிட்டார். அதனால் அவரின் நினைவாக ஒரு அறக்கட்டளை மற்றும் கல்வி நிலையத்தை உருவாக்கி வருகின்றேன். இந்த அறக்கட்டளை மற்றும் கல்வி நிலையம் பல ஏழை, எளிய மாணவர்களுக்கு நல்ல வாழ்க்கை வழிகாட்டியாக அமையும். எனது பணியைப் பாராட்டி புது டெல்லியில்  இரண்டு முறை சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது. இது மட்டும் இன்றி என் ஆசிரியர் பணியைப் பாராட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் இரண்டு முறை வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய தன்னம்பிக்கை, கடின உழைப்பு, பொறுமை, இறை நம்பிக்கை இவைகளே, இந்த வெற்றிப் பாதையைக் கடக்க பெருந்துணையாக அமைந்தது.

    எதிர்கால மாணவ சமுதாயத்திற்கு நான் கூற விரும்புவது “முடியும் என்ற நம்பிக்கை, கடின உழைப்பு, நேரங்களை திட்டமிட்டு சரியாகப் பயன்படுத்துதல், நம் மேதைகளின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்துக்கொண்டு அதைக் கடைபிடித்தல் மேலும் வெறும் புத்தகப் படிப்பு மட்டும் ஒருவரை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லாது. ஒவ்வொரு தனிமனிதனுக்குள் ஒரு தனித் திறமை உண்டு. அந்தத் திறமையை அறிந்து அதற்கான தீவிர பயிற்சி மேற்க்கொள்ள வேண்டும்.  இவை அனைத்தும் எனது மாணவ, மாணவிகள் கடைபிடித்தால் வெற்றியின் சிகரத்தை எட்டிவிடலாம்.

    “ஒரு ஆண் மகன் கல்வி கற்றால் அவனுக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால் சமுதாயம் முழுவதும் நன்மை பெறுகிறது”  என்பதை உணர்த்தி இருப்பதுடன்,

    காலத்தை கடந்து பல சாதனை மனிதர்களை உருவாக்கி இச்சமூகத்தில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் திருமதி கிரிஜா ராஜராம் அவர்களை தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

    இந்த இதழை மேலும்

    எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!

    டாக்டர் P. பிரவீன்ராஜ்

    உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய் அறுவை சிகிச்சை நிபுணர்

    ஜெம் மருத்துவமனை, கோவை.

    வெற்றியின்’ ரகசியம் என்பது ஒரு காரியத்தில் தொடர்ந்து முயற்சி செய்து வருவதுதான் என்று சொல்வார்கள். அத்தொடர் முயற்சியால் மருத்துவ உலகில் சாதித்து வரும் இளைஞர் இவர்.

    • எந்தவொரு வேலையையும் ஆர்வத்துடன் செய்து முடிப்பதில் முன்னோடி என பெயர் எடுத்திருக்கும் சாதிப்பாளர் இவர்.
    • நாம் விரும்பும் வாழ்க்கைக்கு ஏற்ப எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் அறுவை சிகிச்சைத் துறையில் பலரின் பாராட்டுதல்களைப் பெற்று வருபவர் இவர்.
    • இருப்பதில் ஆனந்தம் காணுவதை விட்டு, புதிது புதிதாக படைப்பதில்  ஆனந்தம் காணும் தேடல் நிரம்பிய மருத்துவர் இவர்.
    • எடுத்த செயலை அடையும்வரை போராடு… நிச்சயம் கிடைக்கும் பாராட்டு என பலரையும் ஊக்கப்படுத்தி வருபவர்.
    • இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட மருத்துவர் P. பிரவீன்ராஜ் அவர்களை நாம் நேர்முகம் கண்டதிலிருந்து இனி…

    உலகத்தரம் வாய்ந்த ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சி. பழனிவேலு அவர்களின் மகன் தாங்கள் என்பது உங்களுக்கு பலமா? பலவீனமா?

    ஒரு பிரபலமான மருத்துவரின் மகன் என்பது ஆரம்ப காலத்தில் எனக்கு மிகவும் பெரிய பலமாக இருந்தது. என் தந்தை உலகளவில் புகழ்பெற்றிருப்பதால் அவரின் கீழ் பணியாற்றுகிறோம் என்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

    டாக்டர் பழனிவேல் அவர்கள் மகன் என்பதால் என்னிடம் அவரைப் போலவே நிறைய எதிர்பார்ப்பு உண்டு. அந்த எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்கிறேன்.

    நான் தொடக்கத்திலிருந்து ஜெம் மருத்துவமனை எங்களுடைய சொந்த மருத்துவமனை என்று நான் ஒரு நாளும் பார்த்ததே இல்லை. இங்கு பணியாற்றும் மற்றமருத்துவர்களைப் போலத்தான்  நானும் என்றுதான் நினைப்பேன். பொதுவாகவே என்னுடைய வளர்ச்சி என்பது ஒரு சுயமுயற்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பி உழைக்கிறேன்.

    அவரிடம் இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களை மட்டுமே நான் எடுத்துக் கொண்டு என் வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

    மற்ற மருத்துவர்கள் எப்படி என் தந்தையை உடன் பணியாற்றும் பொழுது ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்கிறார்களோ அதைப் போலத்தான் நானும் எடுத்துக் கொள்கிறேன்.

    உங்கள் தந்தை சாதிப்பிற்குரிய மருத்துவர் என்பதால்தான் நீங்களும் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்தீர்களா…?

    நான் பள்ளியில் படிக்கின்ற காலத்திலிருந்தே மருத்துவராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும் குறிக்கோளுமாக இருந்தது. அனைவரும் மருத்துவர் ஆகிறார்கள், நாமும் ஆகலாம் என்று நான் நினைக்கவில்லை. யாரும் தொடாத துறையை தொட வேண்டும், அத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் மட்டும்தான் எனக்குள் இருந்தது.

    என் தந்தையும் நீ இந்தத்துறையில்தான் வரவேண்டும் என்று ஒருமுறைகூட என்னிடம் கூறியதே கிடையாது. என்னுடைய விருப்பம்தான் அவர்களின் விருப்பம். நானாக ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த துறைதான் இது.

    நான் எப்பொழுதும் தனியொரு பாதையை உருவாக்கிக் கொண்டு அதில் பயணப் படத்தான் ஆசைப்படுகிறேன்.

    மருத்துவத்தில் பல துறைகள் உண்டு. அதில் நீங்கள் உடல்பருமன் துறையைத் தேர்ந்தெடுத்ததன் காரணம்…?

    நான் எதைச் செய்தாலும் புதுமையாக செய்ய வேண்டும் என்றுதான் நினைப்பேன். அனைவரும் செய்யும் ஒரே வேலையைச் செய்தால் நிச்சயம் தனித்திறமையைக் காட்டினாலும், அங்கு ஒப்பீடு செய்வார்கள். இதில் யார் சிறந்தவர்கள் என்று பார்ப்பார்கள். இதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். நான் செய்வது அனைத்தும் புதிதாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன்.

    ‘லேப்ராஸ்கோபி’ அறுவை சிகிச்சை செய்யும் முறைபரவலாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அதனை நிறையப்பேர் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் நானும் ஒன்று என்று வந்துவிடக் கூடாது என என் மனதில் ஒரு தீர்மானம் போட்டுக்கொண்டேன்.

    அந்த சமயத்தில் தான் ஆஸ்திரேலியா செல்லும் ஒரு வாய்ப்பு வந்தது.  அங்கு நடந்த கான்பிரன்ஸில் ‘ஒபிசிட்டி’ குறித்த பயிறிசியை அளித்தார்கள்.

    அந்தப் பயிற்சியில் உடல்பருமன், சர்க்கரை நோய்களுக்கு மட்டும் தனியாக ஒரு துறையைத் தொடங்கி சிகிச்சை அளித்து வந்தது எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த முறையை நாம் இந்தியாவில் செய்ய வேண்டும் என்று இத்துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

    ஆரம்பத்தில் பல மருத்துவர்கள் இச்சிகிச்சையை ஒரு பெரிய பொருட்டாக நினைக்கவில்லை, என்னையும் மனமாற்றம் செய்தார்கள், ஆனால், நான் விடாப்பிடியாக மருத்துவர்களிடையே கொண்டு சென்றதால், இத்துறை இன்று நன்றாக வளர்ந்து வருகிறது.

    ஜெம் மருத்துவமனையில் இந்த உடல்பருமன் சிகிச்சை முறைஎப்போது தொடங்கப் பட்டது…?

    உடல் பருமன் சிகிச்சை 2003ம் அண்டிலிருந்தே ஜெம் மருத்துமனையில் இருந்து வந்தது. ஆனால், தனிப்பிரிவாக நான் 2010ம் ஆண்டுதான் கொண்டு வந்தேன்.

    உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையயே இப்போது எந்தளவிற்கு இருக்கிறது…?

    மிகக்குறைந்தளவில்தான் இருக்கிறது. ஒரு மனிதன் எடை அதிகமாக இருந்தாலும், பாதிப்பு வராமல் இருக்கும் வரை அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை.

    ஆனால், உடல் எடை பன்மடங்கு அதிகரித்து அவர்களால் உடல் இயங்க முடியாத அளவிற்கு செல்லும் போதுதான் இதைப்பற்றி அறிந்து மருத்துவரை நாடி வருகின்றனர்.

    இது மிகப்பெரிய விழிப்புணர்வின்மையைக் காட்டினாலும், தற்போது ஓர் அளவிற்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

    உடல் பருமனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தொல்லைகள் குறித்து….…?

    உணவுக்கட்டுப்பாட்டில் அடிக்கடி தவறிழைத்தல், குடும்பத்தினர்களின் புறக்கணிப்பு, அந்நியர்களின் கேலிப்பேச்சு, கொழுப்புடன் தொடர்ந்து போராட்டம் இவற்றால் மனச்சோர்வுக்கு உள்ளாகக் கூடும்.

    ஈரலில் செல்களில் கொழுப்பு கூடும்போது ஈரல் கொழுப்பு நோய் ஏற்படும். ஈரலில் கொழுப்பு சதவீதம் அதிகரிக்கும் அளவுக்கு ஏற்ப ஈரலின் பாதிப்பும் இருக்கும்.

    கால்கள் வீங்குதல், தோல் புண், சிறுநீர்ப்பாதையில் சிக்கல், மாதவிடையால் காலங்கடத்தல் நுரையீரல் தொந்தரவு, புற்றுநோய் இப்படியாய் பிரச்சனைகள் வரும்.

    உலகம் முழுவதும் தவிர்க்கக் கூடிய மரணங்களில் ஒன்றாக இருக்கிறது உடல்பருமன். சிறுவர்கள் வளர் இளம் பருவத்தினர் உடல் பருமனுக்கு ஆளாகி வருகிறார்கள். 21ம் நூற்றாண்டின் பொதுநலப் பிரச்சனையாக உடல்பருமன் இருக்கும் என்று மருத்து வல்லுநர்கள் கணித்துள்ளனர். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் , இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்றவை குறித்து ஒவ்வொருவரும் கவலைப்படுவார்கள். ஆனால், அவை ஏன் ஏற்படுகின்றன…? அதைத் தவிர்க்கும் வழிமுறைகள் என்ன, என்பதை அறிய முற்படுவதில்லை. பின்வரும் பலவகை உடல் கோளாறுகளுக்கு உடல் பருமன் ஒரு காரணியாக இருக்கிறது.

    உடல் பருமன் உள்ளவர்களிடம் உடல் அணுக்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினை ஏற்க மறுக்கிறது. நீண்டகாலமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உடல்நலம் கெடும்.

    அதிக உடல் எடை இதயத்தின் இயக்கத்திற்கு கூடுதல் சுமை தருகிறது. அதிக ரத்த அழுத்தம் மூளை ரத்தக் கசிவு மற்றம் சிறுநீரக பாதிப்பும் ஏற்படுத்தும்.

    உடலின் அதிக எடை மூட்டுகளில் குறிப்பாக கால்முட்டியில் அதிக தேய்மானத்தை ஏற்படுத்துகிறது. வலியையும் வீக்கத்தையும் தருகிறது.

    நாக்கு மற்றும் கழுத்துப் பகுதியில் சேரும் கொழுப்பின் விளைவாக சுவாசக் காற்று தடைபட்டு, தூக்கமின்மை பகலில் தலைவலியைத் தரும், அசதியை ஏற்படுத்தும்.

    உடல் பருமன் உள்ளவர்களுக்கான அறுவை சிகிச்சை வாய்ப்புகள் என்னென்ன அதனால் வரும் பிரச்சனைகள் என்னென்ன?

    உடல் பருமன் அறுவைசிகிச்சை எதற்கு செய்யப்படுகிறது  என்றால் உடலின் உள்ள எடையை குறைவதற்கான காரணத்தை முதலில் ஆராய வேண்டும். அதற்கு நான்கு வகையான முறைகளை பின்பற்ற வேண்டும்.

    • கட்டுபடுத்தும் முறை  இரைப்பையின் மேல்பகுதியின் மீது ஒரு பை போன்ற மைப்பை செலுத்துவதன் மூலம் உணவு உட்கொண்டால் அதன் அளவை குறைக்க முடியும்.
    • சத்து உறிஞ்சும் அளவை தடுக்கும் முறை இம்முறையில் உணவு பொருளின் சத்தை சிறுகுடல் உறிஞ்சும்பொழுது அது தடுக்கப்படுகிறது. இது பெரும் அளவில் இல்லாவிடினும் சிறிய  அளவு நாம் இதை செய்கிறோம்.
    • எரிப்புத் தன்மையை அதிகப்படுத்துதல் இது நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் மூலம் வருவது இம் ஹார்மோன் மாறுவதன் மூலம் உடலில் உள்ள எரிப்புதன்மை அதிகமாகிறது.
    • ஹார்மோன் மாற்றத்தின் மூலம் உணவின் மீது ஏற்படும் ஆசை உடம்பில் உள்ள ஹாப்பிடெக்ஸ் குறைக்கிறது.

    இந்த நான்கு முறையும் சேர்த்து ஒரு உடல் பருமன் நோயாளிக்கு செய்யும்பொழுது அவர்களின் உடலின் எடை கொஞ்சகொஞ்சமாக குறைகிறது..

    கட்டுப்படுத்தும் முறை- இது இரைப்பையின் மேல்பகுதியில் ஒரு பை (Pouch) அமைப்பதன் மூலம் உட்கொள்ளும் உணவின் அளவை குறைக்க உதவும்.  சத்து உறிஞ்சுவதை தடுத்தல் முறை- இதில் உணவுப் பொருளின் சத்தை சிறுகுடல் உறிஞ்சுவது தடுக்கப்படுகிறது. மேற்சொன்ன இரண்டும் அமைந்த சிகிச்சை

    உடல் பருமனைக் குணப்படுத்த என்ன வழி…?

    1. முதலாவதாக, மருந்துகள் உதவியின்றி உடல் எடையைக் குறைக்க வேண்டும். இது தொடக்க நிலையில் உள்ளவர்களுக்குப் பயன்தரும். அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் சமச்சீர் உணவு மூலம் இதைச் செய்தால் போதுமானது.
    2. இரண்டாவதாக மருந்தைப் பயன்படுத்தி உடல்பருமனைக் குறைக்கலாம். இது உடல்நிறைகுறியீட்டு எண் (பி.எம்.ஐ) 30க்குள் இருப்போருக்கு பயன்படும். ஆனாலும், எடை குறைப்புக்கு இது பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைஅல்ல.
    3. பி.எம்.ஐ 32க்கு மேல் உள்ள நபர்களுக்கும் உதாரணமாக சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் பருமனால் பல பிரச்சனைகளுக்கு இரண்டு வழிமுறைகள் சரியானதாக இருக்காது. பொதுவாக அறுவை சிகிச்சை மட்டும் நிரந்தரத் தீர்வாக அமையும்.

    உடல் பருமன் அறுவை சிகிச்சை எந்த நிலையில் செய்து கொள்ள வேண்டும்…? 

    முதலில் உடல் பருமன் உடையவர்கள் தன் உடலைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். உடல் பருமன் அதிகரித்திருந்தாலும் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று சாதாரணமாக நினைக்கக் கூடாது.

    உடல் பருமன் உடையவர்கள் ஆரம்பக்கட்டத்திலேயே அதற்கான முயற்சிகளை எடுக்க, மருத்துவரை அணுக வேண்டும்.

    உடல் பருமன் பிரச்சனை என்று வருபவர்களுக்கு முதலில் உணவு பற்றிய முறைகளைக் கூறுகிறோம்.  அதன் பின் உடல் பயிற்சி குறித்து சொல்கிறோம்.

    உடற்பயிற்சி செய்தும், உணவு கட்டுப்பாட்டோடு இருந்தும் உடல் பருமன் குறையவில்லை என்றால் மட்டும்தான் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    தந்தை பல கான்பிரன்ஸ் மூலம் பல பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல இத்துறைசார்ந்து நீங்கள் ஏதேனும் பயிற்சி அளித்து வருகிறீர்களா…?

    2008ம் ஆண்டிலிருந்து இது வரைக்கும் ஆண்டிற்கு ஒன்று என்று ஆறு கான்பிரன்ஸ் பயிற்சிகள் கொடுத்திருக்கிறேன். இந்த ஆண்டும் ஒரு கான்பிரன்ஸ் நடத்தப் போகிறேன். ஆறு ட்ரெய்னிங் பயிற்சிகளை நடத்தியிருக்கிறேன். உடல் பருமன் அறுவை சிகிச்சை செய்யும் முறை குறித்து பயிற்சிகள் அளித்திருக்கிறேன். இதில் இந்தியாவிலிருந்து 25க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில், பலர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அதுமட்டுமல்லாமல், 155க்கும் மேற்பட்ட நிபுணர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறேன்.

    இந்தச் சிகிச்சை குறித்து இதுவரை இந்திய அளவில் எந்தவொரு புத்தகமும் வெளியிடப்பட வில்லை. இந்தக் கான்பிரன்ஸ்க்குப் பிறகு ‘ஸ்பிரிங்கர்’ என்னும் உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம் எங்களிடம் அப்புத்தகம் குறித்து ஆலோசனை கூறியுள்ளது. அது குறித்து இப்போது தயாராகி வருகிறேன். இம்முயற்சி எங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.

    சர்க்கரை நோய் ஒரு நோயே அல்ல என்பது குறித்து…?

    ஒரு மனிதன் தனது உடலில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருக்கிறான் என்றால் அவனுக்கு எவ்விதப்பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்கிறான் என்று அர்த்தம். அதே, மனிதனுக்கு உடலில் மாற்றம் ஏற்படுகிறது என்றால், அதன் பெயர்தான் நோய்.

    ஒரு விபத்தை நாம் நோய் என்று சொல்ல முடியாது. நிகழ்காலத்தில் இருக்கும் ஒரு மனிதனின் எதிர்காலம் உடலில் பிரச்சனை நிறைந்ததாக இருக்குமாயின் அனைத்து மனிதனுக்கும் துன்பம்தான். மனித உடல் கட்டுக்குள் இல்லாமல் போவது அனைத்தும் நோய்தான்.

    சரி சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்தி விடலாம் என்று கூறும் உங்களின் மருத்துவ ஆலோசனைகள் குறித்து…?

    இவ்வகையான அறுவைசிகிச்சையில் உடம்பில் உள்ள இன்சுலின், கணையத்தில் இருந்து சுரக்கும் (insulin sensitivity) இன்சுலின் சரியாக வேலை செய்ய வைப்பதினால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும்.

    டயாபட்டீஸ் குழந்தைகளுக்கு வரக்கூடிய இவ்வகையான சர்க்கரை நோய் கணையத்தில் இருந்து இன்சுலின் சுரக்கும் தன்மை முழுவதுமாய் இல்லாதினால் இவ்வகையான அறுவை சிகிச்சை செய்ய இயலாத நிலை.

    இதை (ADA)- American Diabetes Association அங்கீகரித்து உள்ளது..

    அதுமட்டுமல்லாமல் மற்றநாடுகளை விட இந்தியா போன்றநாடுகளில் அதிகமானோர் உடல் பருமன் நோயால் அவதிப்படுகிறார்கள். காரணம் நாகரீகம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்பு சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது.

    இந்தியாவிலிருக்கும் மக்களுக்கு சராசரியாக 20 முதல் 25 சதவீதம் வரை கொழுப்பு காணப்படுகிறது. இதனால்தான் தொப்பை, உடல்பருமன் போன்றவை ஏற்படுகிறது.

    நீங்கள் பெற்ற விருதுகளில் உங்களுக்குப் பிடித்த விருது என்று எதைச் சொல்வீர்கள்…?

    விருதுகள் என்பது சாதித்தவர்களின் பெருமைக்காக அளிக்கப்படும் பரிசுதான். புதுமையான சாதிப்பிற்கு நான் பல விருதுகளை வாங்கியிருக்கிறேன்.

    அமெரிக்கா போன்றநாடுகளில் சில விருதுகள் வாங்கியிருக்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய கௌரமாக இருந்தாலும், சொந்த நாட்டில் சொந்த ஊரில் வாங்கும் விருதிற்கு தனி மதிப்பு உண்டு என்று நம்புகிறேன்.

    சமீபத்தில் கோவை, ரோட்டரி கிளப்பில் ‘ஒக்கேசனல் எக்ஸ்லண்ட் அவார்ட்’ என்ற விருதை ஆண்டுக்காண்டு ஒருவருக்கு கொடுப்பார்கள். இவ்விருது ரோட்டரி கிளப்பின் உயரிய விருது என்றும் சொல்வார்கள். அதை எனக்கு கொடுத்து கௌரவித்தார்கள், இந்த விருதை மிகப்பெருமையாக கருதுகிறேன்.

    லேப்ராஸ்கோபியின் ஆராய்ச்சிக் கூடம் ஜெம் மருத்துவமனை என்று சொல்லலாமா…?

    இந்தியாவில் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையை முன்னெடுத்துக் கொண்டு வந்தவர் என்னுடைய தந்தைதான். அவர், இச்சிகிச்சையை தான் மட்டும் செய்யக்கூடாது, மற்றமருத்துவர்களும் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்து பல கருத்தரங்கில் பேசியிருக்கிறார்.

    பல மருத்துவர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளார். அந்த வகையில் ஜெம் மருத்துவமனை லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையின் ஆராய்ச்சிக்கூடம் என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன்.

    உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட நற்பண்புகள் பற்றி…?

    எதைச் செய்ய வேண்டும் என்று என்னிடம் எப்பொழுதும் கட்டாயப்படுத்தவே மாட்டார்.

    மருத்துவத்திலுள்ள புதுமைகளை காலத்திற்கு ஏற்றாற் போல் முறையாகப் பின்பற்றுவார். வாழ்க்கையில் சாதித்து விட்டேன் என்று அவர் எப்பொழுதும்   நினைத்ததே இல்லை.

    அடுத்த இலக்கு என்ன…? மருத்துவத்தில் அடுத்த என்ன புதுமைகளை எப்படி கொண்டு வரவேண்டும் என்பது பற்றி மட்டுமே எப்பொழுதும் தேடிக் கொண்டே இருப்பார்.

    அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை எங்களுக்கு வாழ்க்கைப்பாடமாக சொல்லிக் கொடுத்திருக்கிறார். இப்படி நிறைய அவரிடமிருந்து நான் பெற்றுள்ளேன்.

    மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தாலும், புதிது புதிதாக நோய்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கான காரணம் என்ன…?

    இயற்கையை நாம் நேசிக்கத் தவறி விட்டோம். அதன் விளைவுதான் இன்று புதிது புதிதான நோய்கள், மனிதனை தாக்கும உயிர்கொல்லியாக உருவெடுத்து வருகிறது…

    மனிதர்கள் இதுகுறித்து அப்பொழுது செய்யும் சில தவறுகள்தான் அவர்களை பின்வந்து தாக்குகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கமும் அதனை முறையாக மக்களும் பின்பற்றினால் சில பல நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

    தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக, பரவலான செய்திகள் இருந்து வருகிறது. அதைப்பற்றி தங்களின் கருத்து…?

    ஆரம்ப காலத்தில் மருத்துவத்தை ஒரு சேவை மனப்பான்மையோடு பலரும் செய்து வந்தார்கள். அன்று ஒரு மருத்துவர் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுவிட்டால் அவருக்கு எவ்வித விளம்பரமும் தேவையில்லை.

    ஆனால், இப்பொழுது மருத்துவத்திலும் கார்ப்ரேட் வந்துவிட்டது. இதன் விளைவுதான் இன்று கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக நினைக்கிறேன்.

    ஒரு மருத்துவமனையில் உயர்ந்த கட்டிடம், உயர்தரமான இயந்திரம் போன்றவை இருந்தால் மட்டுமே மருத்துவமனையை மக்கள் நாடுவார்கள் என்பதை சில மருத்துவமனைகள் செய்து வருகின்றன.      இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    ஒரு மருத்துவமனை மக்களிடையே நன்மதிப்பு பெறவேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்…?

    ஆரம்ப காலத்தில் இருந்த மக்களைப் போல் இப்பொழுது மக்கள் இல்லை.

    நாகரீகம் வளர்ந்த, இச்சூழ்நிலையில் மக்கள் மருத்துவரிடம் பல கேள்விகள் கேட்டபின்புதான் மருந்தையே உட்கொள்கிறார்கள். இன்றைய மருத்துவம் சார்ந்த அறிவை ஒரு மருத்துவர் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.   உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அவர்களிடம் நன்முறையில் பேசி ஒரு நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இவரிடம் சென்றால், நிச்சயம் குணமாகி விடும் என்றநிலையைக் கொண்டு வரவேண்டும். இப்படியான செயல்பாடுகள் இருந்தால், விளம்பரங்கள் இன்றி பெயரைப் பெறலாம்…

    மருத்துவர்களுக்கு குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை என்று பொதுவான கருத்து உண்டு அதுபற்றி…?

    இன்றைய உலகில் அனைவரும் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றுதான், ஏதேனும் ஒரு துறையில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டே இருந்து குடும்பத்தை மறந்து விடுகிறார்கள். ஒரு மருத்துவர், தன்னிடம் வரும்  நோயாளிகளை எப்படியும் குணப்படுத்த வேண்டும் என்றுதான் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்.  அப்பொழுது குடும்பம் பெரிதாக தெரியாது. ஒரு மருத்துவர், குடும்பத்தையும், மருத்துவமனையையும் ஒரே மாதிரியாகத்தான் பார்ப்பார்.  பணிநேரம் போக கிடைக்கின்றநேரத்தை குடும்பத்துடன் மட்டுமே செலவழிக்க விரும்பினால் மட்டுமே குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்க முடியும். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

    தாங்கள் பெரிதும் மதித்து போற்றக்கூடியவர்கள் என்றால்…?

    என் மருத்துவ வாழ்க்கைக்கு முன்மாதிரியாக விளங்கும் என் தந்தைதான், நான் பெரிதும் மதித்துப் போற்றக்கூடியவர். அவருடன் இருக்கும் நாட்களில், அவர் பழகிய வாழ்க்கைமுறைகுறித்து என்னிடம் அவ்வப்போது பேசுவார். காலச்சூழலுக்கு ஏற்றாற் போல் ஒவ்வொருவரிடமிருந்து ஏதேனும் ஒன்றைகற்றுக் கொள்ளும் சூழல் பல வழிகளில் எனக்கு கிடைத்தது.  அதில் உள்ள நல்லவற்றைஎடுத்துக் கொண்டு சரியான தருணங்களில் அதை செயல்படுத்துகிறேன்.

    உங்களிடமிருந்து, உங்களுக்கு பிடித்தது என்று எதைச் சொல்வீர்கள்…?

    ஒவ்வொருவரும் முதலில் அவரவர்களை நேசிக்க வேண்டும். பாசிட்டிவ், நெகட்டீவ்  களை முறையாக அறிந்து அதற்கு தகுந்தாற் போல் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சிறிய வயதிலிருந்தே, எனக்குள் ஒரு பழக்கம் இருந்தது. அது என்னிடம் நானே, கேள்வி கேட்டுக்கொள்வது.  என் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு, நானே எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பேன்.

    என்னிடம் பணியாற்றும், சந்திக்கும் அனைத்து நபர்களிடமிருந்தும் ஏதேனும் ஒன்றைப் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றஆர்வம் எனக்குள் இருக்கும்.

    குறிப்பாக பாசிட்டீவ் விசயங்களை பெருக்கிக் கொள்வேன். நெகட்டீவ் விசயங்களை கழித்து விடுவேன்.

    எதிர்கால திட்டம் குறித்து…?

    எதைச் செய்தாலும் அதற்கு திட்டம் என்பது அவசியம். உடல்பருமன் சிகிச்சை முறைகுறித்து மக்களிடையே முறையான விழிப்புணர்வைக் கொண்டு வரவேண்டும்.

    உடல்பருமனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதைக் குறித்து நிறைய கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும்.

    • இத்திட்டம் குறித்து நிறைய புதுமைகளை கொண்டு வர வேண்டும்.
    • இச்சிகிச்சை குறித்து புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளேன்.
    • கேரளாவில் அடுத்த ஆண்டு ஜெம் மருத்துவமனை தொடங்கப்படுகிறது.
    • இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் 10 இடங்களில், இம்மருத்துவமனை நிறுவப்பட வேண்டும்.

    கல்விக் களம் குறித்து…?

    நான் எம்.பி.பி.எஸ்., பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியில் படித்தேன். ஜென்ரல் சர்ஜரியை சென்னை ராமசந்திரா கல்லூரியில் முடித்தேன். கேஸ்ட்ரோ எண்ட்ராலாஜி ஜெம் மருத்துவமனையிலேயே பயின்றேன். பேரியாட்ரிக் சர்ஜரி ஆஸ்திரேலியாவில் கற்றுக் கொண்டேன்.

    தங்கள் வெற்றியின் தாரகமந்திரம்…?

    தேடல், முயற்சி, தன்னம்பிக்கை இம்மூன்றும் இருந்தால் அபரா வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்.

    இந்த இதழை மேலும்

    சட்டைப் பையில் சந்தோசம்

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் A1 –  சிப்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் & இந்தியா ப்ரைவேட் லிமிடேட்,

    வாசவிகிளப் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ – கோவை. இணைந்து வழங்கும் 321 – வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 20.9.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : கன்னிகா காம்பளக்ஸ் மீட்டிங் ஹால்

    (நியூ வாசவி & கோ)

    ராஜவீதி சார்பதிவாளர் அலுவலகம் எதிரில்,

    தேர்முட்டி, கோவை  1.

    தலைப்பு   :“சட்டைப் பையில் சந்தோசம்

    சிறப்புப் பயிற்சியாளர் : அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், கோயம்முத்தூர்

    போன் : 97893 75278.

    தொடர்புக்கு: தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் 98422 59335

    செயலாளர்  திரு. E. விஜயகுமார்  94426 10230

    பொருளாளர் திரு. AD. A.  ஆனந்தன்  74026 10108

    PRO விக்டரி விஸ்வநாதன்  97877 44533