– 2015 – June | தன்னம்பிக்கை

Home » 2015 » June (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    ஆலோசனை

    எனக்கு வாழ்க்கைல பிடிக்காத ஒரே வார்த்தை “அட்வைஸ்”. அப்படி பலபேர் சொல்லிக் கேட்டிருப்போம். வங்கிப்பணிகளுக்கான நேர்முகப் பயிற்சி தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. விஜயன் ஒரு உயர்அதிகாரி. அவரை அடுத்த மாதம் நடைபெறும் நேர்காணலில் தேர்வு ஆகியிருக்கின்ற மாணவர்களை பயிற்றுவிக்க ஒரு நிறுவனம் அழைத்திருந்தது. விஜயன் அறிவுரை வழங்குவதில் அதிகம் நம்பிக்கை இல்லாதவர். நேர்முக தேர்வுக்கான பயிற்சியில் எவ்வாறான இளைய தலைமுறை வருகின்றது என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்குமே என்பதற்காகவே கலந்து கொண்டு தன் பங்கிற்கு கேள்விகளைக் கேட்பார். சில நேரங்களில் மறக்க முடியாத அனுபவமாக அந்த கலந்துரையாடல்கள் அமைந்து விடுவதுண்டு. தனது பணிக்கு தேர்வாகி பன்னிரண்டு வருடங்கள் ஆன பின்பும் அரிச்சுவடியைப் படிப்பவர்களோடு பழகுவதில் அவ்வளவு மகிழ்ச்சி. எதிர்காலத்தில் தனது கட்டமைப்பு எப்படிப்பட்ட சிந்தனையோட்டம் உள்ளவர்களால் கட்டியாளப்படும் என்று தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம். எதிர்பார்ப்புகளோடு மாக் இன்டர்வியு அறையுள் பதட்டமும் படபடப்பும் கலந்து நுழைந்து பேசும் இளைய தலைமுறையைப் பார்க்கையில் தனக்கும் அந்த வாய்ப்பு ஒருமுறை கைநழுவிப் போனது குறித்து ஞாபகம் வந்தது.

    அப்பொழுது பயிற்சி நிறுவனம்  அண்ணா நகரில் இருந்தது. வாயிலில், முழுக்கை சட்டை, காலணி அணிந்து டையை இருக்கி கட்டி முழு கட்டமைப்போடு காத்துக்கொண்டு இருந்தான் விஜயன். கடந்த 2003ல் அவனுடைய வாய்ப்பு வந்தபாடில்லை. ஒவ்வொருவருக்கும் அரைமணி நேரம், அல்லது கொஞ்சம் அதிக நேரம் கூட ஆகலாம். ஐந்து பேர் போர்டில் இருப்பார்கள். ஆளுக்கு ஐந்து நிமிடம்.  ஒன்றிரண்டு கேள்விகள் வந்தாலே அரைமணி நேரம் ஆகிவிடுகின்றது. ஐந்து மாணவர்கள் போனாலே இரண்டரை மணி நேரம் ஆகிவிடுகின்றது. கூட பத்து நிமிட இடைவேளை, கொசுறு நேரம் என்று காலம் கடந்து விடும். விஜயன் இரண்டு மணிக்கெல்லாம் வந்துவிட்டாலும் மூன்று மணி சுமாருக்குத்தான் போர்டு தொடங்கி முதல் மாணவன்  உள்ளே சென்றான். அடுத்து செல்லப்போவது யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அலுவலக உதவியாளர், அசட்டையாக அந்த பட்டியலைக் கொண்டு வந்தார். அமைதியாக கொடுத்தார். அவருக்கு எல்லா இன்டர்வியூக்களும் ஒன்றே. அதன் முடிவுகள் அவரை பாதிப்பது இல்லை. தன்பெயர் கடைசியாக இருப்பதை விஜயன் தெரிந்து கொண்டார். அந்த வரிசையில் மாலையாகி விடும் என்கின்றசெய்தி விஜயனுக்கு கிடைத்தது. சரி, பராவாயில்லை காத்திருப்போம்  என்று காலம் கடந்தது. மூன்றாவதாக போன பெண் நிறைய பதில்கள் நன்றாக சொல்லியிருப்பார் போல முழுதாக ஒரு மணி நேரம் ஆன போது மணி ஐந்தைத் தொட்டிருந்தது. ஐந்தே முக்கால், ஆனால் சென்னையின் கடிகாரமுள் வீட்டை நோக்கி ஓடத்துவங்குகிறதோ? இல்லையோ அலுவலகங்கள் அடங்கத் தொடங்கிவிடும் சூழல்.

    தான் எதிர்கொள்ளப்போகும் நேர்முகத் தேர்விற்கு ஏற்கனவே தேர்வாகியிருக்கும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் ஆலோசனை தருவார்கள் என்று ஏக்கத்தோடு இருந்த விஜயனின் எதிர்பார்ப்பு ஆட்டம் கண்டது. எப்படியும் நீண்ட நேரமாக காத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் இருக்கும் என்று தோன்றியது. அந்த அதிர்ஷ்டம் இன்றைக்கு அடிக்காதா? என்று மனது ஏங்க ஆரம்பித்தது.  இன்னும் இரண்டு பேர்தானே, பார்த்துவிடுவார்கள். கொஞ்சம் குறைவான கேள்விகள் குறைவான நேரத்தோடு முடிந்தாலும் பரவாயில்லை என்ன கேள்வி கேட்பார்களோ? என்று இருந்த பதட்டம் போய் கேள்வி கேட்கப்படும் வாய்ப்பு கிடைக்குமோ? இல்லையோ? என்று ஏக்கப்படும் சூழ்நிலை வந்துவிட்டது.

    அந்த அலுவலக உதவியாளர் மாணவர்களை அடுத்து உங்கள் டர்ன் என்று சொல்லி பெல் அடிக்கப்பட்டதும் உன்ளே அனுமதித்துக்கொண்டு இருந்தார். அவர் ஏதோ ஐ.ஏ.எஸ் சீட்டையே அளிக்க இருப்பதுபோல விஜயனுக்கு தோன்றியிருந்தது. அப்போதைக்கு, அதுதானே இலக்கு என்றும்  தோன்றியது. தன்னுடைய அவஸ்தை எல்லாம் தெரிந்தும் ஒரு புத்தர் முகம் போல சமாதான சமநிலையோடு முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் அந்த அலுவலக உதவியாளரோடு நட்பு வளர்க்கும் பேச்சு முயற்சி தோல்வியில் முடிவடைந்தது இன்னும் நினைவிலிருந்து தொலைக்கின்றது.

    படித்த கேள்விகள் தன்னைப்பற்றிய தகவல்கள், தமிழ்நாட்டில் அப்போதைக்கு பரபரப்பாக நிலவும் பொது அறிவு கரண்ட் அஃபேர்ஸ் என எல்லாவற்றையும் ஒரு முறை அசைபோட்டுத் திருப்பிப் பார்க்கலாம் என்று நினைத்து இருந்தது எல்லாம் போய் நமக்கு மாக் இன்டர்வியு இவ்வளவு அனுபவம் வாய்ந்த அதிகாரிகளால் நடத்தப்படுமா? அதன்மூலம் பணியில் சேரும் வாய்ப்பு உயருமா? என்றெல்லாம் யோசனை அலைபாய்ந்தது. ரெஸ்ட்லஸ் ஆனது நினைவிருக்கிறது.

    அதோ நான்காவது ஆளும் வெளியேற, மணி ஆறை நெருங்குகிறது. ஐயோ இறுதிவாய்ப்பு அன்றைக்கு பொதுவாக ஒரு கேன்டிடேட்டுக்கு ஐந்து நிமிடம், போர்டு மெம்பர்கள் மார்க் போட எடுத்துக் கொள்வார்கள். அதன்பிறகு அடுத்த கேண்டிடேட்டின் சிவிஐ எடுத்து பயோடேட்டாவைப் பரிசீலனை செய்து கேள்விகளை ஃப்ரேம் செய்வார்கள். அந்த நொடிகள், அந்த நொடிகள் பதட்டத்தோடு கடந்தன.  விஜயன் மயக்கம் போடாத குறை. பீ.பி எகிறியது. கதவு சொர்க்க வாசல் போல தெரிந்தது.

    அந்த சமயத்தில் ஒரு அசாத்திய சம்பவம். பயிற்சி நிறுவன டீன், பிரின்ஸ்பால் ஒரு மாணவியைக் கையோடு அழைத்துவந்து அறைக்கதவைத் திறந்து அவரோடு உள்ளே செல்ல, கையறுநிலையை அடைந்து கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கிய இலங்கை வேந்தன் நிலையடைந்ததால் புத்தர் மட்டுமே அக்கம் பக்கத்தில் அதே மந்தகாச புன்னகையோடு காட்சியளித்தது தெரிந்தது. அவர்களுக்கு உங்களைவிட முன்கூட்டியே இன்டர்வியு டேட் இருக்கு. அதனால் நாளைக்கு காலைல முதல் ஆளா ஒரு போர்டில் போடலாம் என்கின்ற பதிலை யார் சொன்னார்கள். எப்படி சென்னார்கள் என்று தெரியவில்லை. அடுத்த நாளும் வேறேதோ இடத்தில் மாக் இன்டர்வியுவிற்காக சென்றிருந்தார் விஜயன். இன்றைக்கு மேசையின் இந்தப்பக்கம் அமரப் போகின்றார்.  பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது.

    அந்த இழப்புக்கு?! பின்பு நேர்முக தேர்வுக்கு, இருமுறைதேர்வாகி, பணியிலும் தேர்வாகி அன்று பயிற்சி கொடுத்த அதிகாரிகளுடன் பணியாற்றும் வாய்ப்பும் பெற்றிருக்கிறார் விஜயன். தேர்வு அறைக்குள் நுழைந்த நினைவு போல வாய்ப்பை இழந்த சம்பவமும் நினைவில் நிற்கின்றது. அதனால் அடுத்து தேர்வாக போகும் மாணவர்களை சந்தித்து இயன்றளவு ஆலோசனை வழங்கலாம் என்று தோன்றியது.

    பணிக்கு தேர்வானவர்களோடு பேசுவதும் ஆலோசனை பெறுவதும் அதற்காக காத்திருப்பதும் இயல்பாக நடப்பதே. தனக்கு கிடைக்காத வாய்ப்பை தந்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார் விஜயன். ஒரு மாணவனது பதில் சுவாரஸ்யமாக இருந்தது.

    விஜயன் அவரை இதற்கு முன்பு இன்டர்வியு போனதன் மதிப்பெண்கள் என்ன என்று கேட்டார். முன்னூறுக்கு தொன்னூறு வாங்கியிருந்தார். எதுகை?! எகிறியது! பணி கிடைத்திருக்க வேண்டிய திறமைசாலி. தம்பி ஏதோ கம்பர் எல்லா பாத்திரங்களையும் நல்லவர்களாக படைத்திருக்கின்றார் என்று சொன்னதால் அதை வலுகூட்ட வாதிடுகின்றாயா? அல்லது நீ எப்போதுமே இப்படித்தானா?” என்று கேட்டால் அப்படித்தான் என்று பதில் வந்தது.

    சரி இன்டர்வியூவில் மதிப்பெண் பெறுவது முக்கியமா? அல்லது கொள்கை முக்கியமா?  என்றொரு கேள்வி கேட்டால் “மார்க்?! என்ன சார் வரும், போகும், மனுசனுக்கு வேல்யூ முக்கியம் சார்!” என்று பதில் வந்தது. மூன்றாவது இன்டர்வியூ சூடாக நடந்துவிடக் கூடாது என்று அவரை புத்தரின் நடு வழிக்கு அழைத்து வர தீர்மானித்தோம்.

    நீங்கள் பேசுவது இலக்கிய கூட்டத்திற்கு ஏற்றது. ஆனால் கம்ப இராமாயணத்தை அதன் எல்லைவரை ஏன் அழைத்து செல்கின்றீர்கள். விளிம்பு வரை யோசித்து பதில் சொன்னால் போர்டில் உள்ளவர்கள் சீட்டு நுனிக்கு வந்துவிடுவார்கள் என்று கூறினார் விஜயன். வேல்யு முக்கியம் என்று நீங்கள் சொன்ன பதில் நல்ல பதில். ஆனால் ஒரு வங்கிப் பணி என்று வந்துவிட்ட பிறகு அதன் கொள்கைகளுக்கும் உங்கள் தனிப்பட்ட கொள்கைகளுக்கும் முரண்பாடு வரும் பொழுது வங்கியின் கொள்கைகளுக்கு முன் உரிமை அளிக்க வேண்டிய சூழல் வரும் என்று கூறினார் விஜயன்.

    ஒரு இன்டர்வியூவில் இரண்டு எக்ஸ்ட்ரீம் பதில்களையும் கூறவே கூடாது என்று எதுவும் சட்டம் இல்லை. ஆனால் நடுநிலை எடுத்துக்கொண்டு இப்படியும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர் என்கின்ற அலசல் முயற்சியாக ஒரு கருத்தை முன் வைக்கலாம்.  நீங்கள் சொல்வது போல், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிரூபிக்க முயல்பவர் போன்று காட்டிக்கொள்வது நல்லதா? என்று முடிவு செய்துகொள்ள கூறினோம்.

    கிட்டத்தட்ட நூறு கேள்விகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டு அதற்காகச் சிறந்த பதில்களை எழுதிக்கொண்டு மாக் இன்டர்வியூவில் கிடைக்கின்ற பதில்கள் குறித்த கருத்துக்கேற்ப சிறு சிறு வார்த்தைகளைக் கோர்த்து மாற்றி சரி செய்து நல்ல பதில்களைத் தயாரித்து கண்ணாடி முன்னாடி நின்று பேசிப்பார்த்து, திணறும் இடங்களை சரிசெய்து கொண்டு மாக் இன்டர்வியூவில் கலந்து கொள்ள வேண்டும்.   அதிக ஐடியாக்களைத் தனக்குரிய பாணியில் பரிட்சித்து பார்த்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

    டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில், கடந்த 2003ல், விஜயன் கூட ஒரிஜினல் தேர்வான நேர்முக தேர்வுக்கு நான்கு நாள் முன்பு, “நீங்கள் சாய்ந்து உட்காருவது சரியில்லை, வார்த்தை பிரயோகம் வரவில்லை மாற்றி கொள்ள வேண்டும்,”  என்றனர். வீடியோகிராஃப் எடுத்தும் சீடியும் கொடுப்பதாக கூறினர். மாற்றிக் கொள்கிறேன். மீண்டும் வருகிறேன்! என்று, சொல்லி, வெளியே வந்து,  முன்பணம் கூட திரும்ப பெறாமல் அங்கு பயிற்சி பெறும் முடிவை மாற்றிக்கொண்டு, மீண்டு!? வந்தார்! விஜயன். அந்த மாதிர் மாக் இன்டர்வியூக்களில் சொல்லும் எல்லாவற்றையும்,  எல்லாரும், கண்ணை மூடி கடைபிடித்துவிட முடியாது.

    பணி கிடைத்தால் நம்மால் கிடைக்கட்டும், கிடைக்காவிடில் நமக்காக கிடைக்காமல் போனால் பரவாயில்லை. நமக்கு பயிற்சி அளித்தோரால் நமக்கு பணி கிடைத்தால் கூட நல்லதுதான் அவர்கள் தந்த இன்புட்டால் பணி அவுட் ஆனால் அது ஆபத்து. நம் சொந்த முடிவோடு இன்டர்வியூக்களை சந்திப்போம் என்று விஜயன் ஏற்று கொள்ள வேண்டியவற்றை ஏற்றுக்கொண்டு மாற்றுவதை?! மாற்றிக்கொண்டு தேர்வுகளை சந்தித்தார். நம்மால் முடியும் என்றநம்பிக்கை அவருக்கு இருந்ததை, இன்றைக்கு மற்றவர்களுக்கு தர முயற்சிக்கின்றார்.

    “போர்டு, என்னை புரிந்து கொள்ளவில்லை அதனால்தான் தொன்னூறு போட்டார்கள்” என்றார், எல்லைக்கோட்டை தொட்ட போட்டியாளர். இல்லை  “போர்டு என்னை முழுக்க முழுக்க புரிந்து கொள்ளும் என்றும், முன்பும் புரிந்து கொண்டது என்றும் நினையுங்கள். அவர்களை, மாற்றி, புரிந்துகொள்ள வையுங்கள் என்று கூறினார்” விஜயன். லீடிங் இன்டர்வியு என்று சொல்வார்கள். ஒரு பதிலில் இருந்துதான் அடுத்த கேள்வி பிறக்கும். நல்ல பதில்கள் பயிற்சி செய்து ஒப்பிப்பது போல செயற்கை சாயம் இல்லாமல் இயல்பாக வருவது போல கூறப்படுகின்றன. புத்தகங்கள், மேற்கோள்கள், இடைச்செறுகல் என்பது போல் இல்லாமல் இன்றியமையாத இடத்தில் தானாக உள்ளிருந்து எழுந்ததுபோல் சொல்லப்படுகின்றன. தெரியாது என்கின்ற பதிலும் ஊகித்து சொல்ல அனுமதி கிடைக்குமா? என்னும் கேள்வியும் அதற்குத் தகுந்த இடத்தில் சொல்லுக சொல்லை என்னும் குறளுக்கேற்ப சொல்லப்பட வேண்டும். உணர்வு கலந்து யதார்த்தமாக பேச்சு நீளுவது சிறப்பானது. வங்கி தேர்வு முதல், ஆட்சிப்பணி தேர்வு வரை இப்படித்தான் இன்டர்வியூவின் அடிநாதம் இருக்கின்றது என்றார் விஜயன்.

    நிறைய கற்பனை செய்து பார்ப்பதன் மூலமும் பயிற்சி செய்து கண்ணாடி முன்பு பேசிப்பார்ப்பதன் மூலமும் அகத்தின் அழகை முகத்தில் தெரிய வைக்கலாம்.  அட்வைஸ் பிடிக்காது என்று சொல்லி ஆரம்பித்து ஏகப்பட்ட அட்வைஸ்களை அறிவுரைகளை குவித்துவிட்ட விஜயன், தன் ஏமாற்றத்தை தான் ஏமாந்த கதையை ஏன் நீளமாக எழுதினார் என்று தோன்றும்.

    மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகின்றது. முடிவு சுபம் என்று தெரிந்தபிறகு முயற்சிப் பாதையில் சந்தித்த படங்கள், பிம்பங்கள், பாடங்களே ஒரு தேர்வுக்கு தயாராகும் மாணவனுக்கு சாதாரணமாக இதுமாதிரியான சிறுசிறு எதிர்பாராத தடுமாற்றங்கள் நிறைய நிகழலாம். அதனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிட வாய்ப்பில்லை. இதேபோன்றசிறு நிகழ்வுகள் வாழ்வில் திருப்புமுனையாகவும் அமையலாம். எனவே எல்லா சந்தர்ப்பங்களையும் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளும் பண்பு இருந்தால் நன்று என்றார் விஜயன்.

    இந்த இதழை மேலும்

    எண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்!

    • வட்டம் போட்டு வாழ்வது அல்ல வாழ்க்கை. காலத்துக்கு ஏற்றாற்போல் திட்டம் போட்டு வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை என்பதை பன்முகத் தொழில் மூலம் சாதித்து வருபவர்.
    • திறமையும், நேர்மையும் கடமையாகும்போது ‘பெருமைகள்’ வந்துசேரும் என்பதற்கு உதாரணமாய் இருந்து வருபவர்.
    •  “நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார்ஙு ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கைஙு” என்றசுவாமி விவேகானந்தரின் சிந்தனைக்கேற்ப நொடிப் பொழுதையும் வீணாக்காமல் “வாழ்க்கையைத் திருவிழாக்கால சந்தோசமாக்கி” வாழ்பவர்.
    • தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்றதனியார் வேளாண் கல்லூரிகளில் முக்கிய கல்லூரியாக தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியை உருவாக்கியிருப்பவர்.
    • Dr. A.P.J. அப்துல்கலாம் அவர்கள் இவரது தொழில்முனைப்பைக் கண்டு பெரிதும் மகிழ்வுற்று பாராட்டிய பெருமைக்குரியவர்.
    • இப்படிப் பல்வேறு சிறப்புகளுக்குரிய முனைவர் கே. பலராமன் அவர்களை நாம் சந்தித்தபோது, “பிறர் நம்மால் வாழ நாம் வாழ்வதே வாழ்க்கைக்கு அழகு” என்ற அவருடன் இனி நாம்…

    உங்களைப் பற்றி?

    தேனிக்கு அருகிலுள்ள லட்சுமிபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தேன். அப்பா கிருஷ்ணசாமி விவசாயம் பார்த்து வந்தார். என் பள்ளி வாழ்க்கை எல்லாமே எங்கள் ஊரில் தான் என்பதால் படிப்பின் மீது ஆர்வம் எனக்கு அதிகம். பள்ளிப்படிப்பை முடித்ததும் பி.யு.சி. படிக்க திண்டுக்கல் சென்றேன்.

    எங்கள் குடும்பம் பெரிய குடும்பம் (8 சகோதரர்கள், 2 சகோதரிகள்) என்பதால் ஆரம்பத்தில் ஏழ்மைநிலையில் தான் இருந்தோம். ஏழ்மையை வெளிக்காட்டாமல் எனது பெற்றோர்  அனைவரையும் கல்லூரிவரை படிக்க வைத்தார்கள். என் அப்பாவிடம் நிறைய கற்றுக்கொண்டேன். நேர்மையான மனிதர். 24 மணிநேரம் வேண்டுமென்றாலும் உழைத்துக் கொண்டே இருப்பார். அந்த அளவிற்கு அவரின் அர்ப்பணிப்பு இருக்கும். அவரது வழிகாட்டுதல் தான் என்னை உயர்ந்த பாதையில் வழிநடத்துகிறது.

    வேளாண் துறையைத் தேர்ந்தெடுத்ததன் காரணம்?

    பள்ளிப்படிப்பை முடித்ததும் மனதில் பலவாறான சிந்தனைகள்; எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதில் குழப்பம். மருத்துவம், பொறியியல், வேளாண்மை இம்மூன்றில் எதைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசித்தேன். வேளாண்மையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றஆர்வத்தில் சில ஐயங்களை வேளாண்மைக் கல்லூரிக்கு கடிதமாக எழுதி அனுப்பினேன். அவர்களும் எனது கடிதத்திற்கு பதில் அனுப்பினார்கள்.

    அக்கடிதத்தில் நேர்காணல், தேர்வு ஆகியவற்றைப் பற்றி முறையாக எழுதியிருந்தார்கள். தேர்வுக் குழுவில் என் பெயரிலேயே பல்ராம்ராஜா என்று ஒருவர் இருந்தார். முதல் தேர்வு முறையில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. வேளாண் தொழிலைப் பற்றி தெரிந்து கொண்டிருந்ததால் படிப்பதற்கும் சற்று எளிமையாக இருந்தது. நான் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதாலும், சீரான பதில் அளித்ததாலும் இரண்டாவது அட்டவணையில் முதலாவதாக எனக்கு படிக்கும் வாய்ப்பினைக் கொடுத்தார் அவர்.

    படிக்கின்ற காலத்திலேயே தொழில் தொடங்கும் எண்ணம் இருந்ததா?

    பெரும்பாலானவர்கள் போல் தான் கல்லூரி முடித்ததும் அரசுப்பணியில் சேர வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது.

    முதலில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்றஆசை மட்டும் தான் இருந்தது. காரணம் பசுமை சூழல், பெரிய கட்டிடங்கள் போன்றவை என்னை பெரிதும் கவர்ந்தன.

    பி.எஸ்.சி. அக்ரி முடித்தவுடன் தஞ்சாவூரில் பணி கிடைத்தது. மேற்கல்வி படிக்கும் ஆர்வமும் இருந்தது. எனவே எம்.எஸ்.சி. முடித்தவுடன் ஓராண்டு கல்லூரிக்குள்ளேயே ஆய்வகத்தில் வேலை செய்தேன். அப்போது தான் Ph.D. படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெங்களூரில் உள்ள கல்லூரியில் UNDP Fellowship (United Nations Development Programme Fellowship) உடன் படித்தேன். என்னுடைய எம்.எஸ்.சி. நெறியாளர் Dr.K. ராமகிருஷ்ணன் (Dean, Tamil Nadu Agricultural University Coimbatore ) அவர்கள் பெங்களூருக்கு டீன்-னாக வந்தார். அவரின் கீழ் ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.

    1976ல் IAAS (Indian Agriculture Administration service ) என்றபுது தேர்வுமுறைஇருந்தது. இதில் நான் தேர்வு எழுதி முதலாவதாக தேர்ச்சி பெற்றேன். முதலில் பயிற்சிக்காக ஹைதராபாத் சென்று வந்தேன். நிர்வாக பயிற்சியாக இது 3 மாத காலம் அமைந்தது. பின்னர் டெல்லியில் ஜவஹர்லால் நேரு சிறந்த வேளாண் ஆய்வாளர் விருதைப்  பெற்றேன். படிக்கும் பொழுதும் கூட தொழில் தொடங்கும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை.

    IAAS-யில் பணியாற்றிய அனுபவம் குறித்து?

    முனைவர் பட்டம் முடித்ததும் பெரியகுளத்தில் பணியாற்றினேன். அப்பொழுது G. ரங்கசாமி அவர்கள் துணைவேந்தராக இருந்தார். என்னுடைய Ph.D. ஆய்வைப் பாராட்டி கோவையில் வேலையைத் தொடரும்படி அறிவுறுத்தினார். ஆனால் பெரியகுளத்தில் கொஞ்ச நாள் வேலைசெய்த பின்னர் சொல்கிறேன் என்றேன். அவரும் அதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்.

    அப்பொழுது IAAS-யில்  (Indian Agriculture Administration service ) pool officer என்றஒரு பணி இருந்தது. இது அசோசியேட் பேராசிரியருக்கும் மேலான பணி என்பதால் நானும் சேர்ந்து கொண்டேன். அங்கு Dr. அப்துல்காதர், Dr. சத்தியமூர்த்தி, Dr. அழகிய மனவாளன் போன்றோர் இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து பிளாண்டிங் பணியை பெரியகுளம் பண்ணையில் செய்தோம். நிறைய மாறுதல்களை உட்படுத்தினோம்.

    அரசுப்பணியை விட்டுவிட்டு தொழில் தொடங்கிய பொழுது குடும்பத்தின் எதிர்பார்ப்பு எந்தளவில் இருந்தது?

    இதை அறிந்ததும் அனைவரும் சற்று தயக்கம் கொண்டார்கள். நல்ல அரசுப்பணியை விட்டுவிட்டு தொழில் தொடங்குவது எந்த அளவில் சாத்தியம் என்று எண்ணினார்கள். ஆனால் எனது நம்பிக்கையைப் பெரிதும் மதித்து என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

    என் பதவி விலகலைக் கேட்டவுடன் எனது புராஜெக்ட் இயக்குனர் முதல் அனைவருமே வருத்தம் தெரிவித்தார்கள். பதவி விலகுதலின் போது மனைவி மற்றும் என் இரு குழந்தைகள் என முழு குடும்பப் பொறுப்பையும் ஏற்று வந்திருந்த நான், தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்கினேன்.

    அந்த முயற்சி சாதாரணமாக இல்லாமல் ஏதேனும் பெரிய நகரமாக இருக்க வேண்டும் என விரும்பி பெங்களூரில் தொடங்கினேன். அங்கு தொழிலுக்கு ஏற்றவகையில் ஒரு சிறுநிலத்தை லீசுக்கு எடுத்தேன். நான் வேலை செய்த இடத்திற்கு அருகில் பால் பண்ணை வைத்திருந்த ஒருவர் அறிமுகம் ஆனார். அவரிடம் நன்கு பழகிய போது, அந்த பால் பண்ணைத் தொழிலை நான் எடுத்து செய்யட்டுமா எனக் கேட்டேன். அவர் முதியவர் என்பதால் மகிழ்வுடன் சம்மதித்து அதை முழுவதுமாக என்னிடம் லீசுக்குக் கொடுத்துவிட்டார். ஆண்டிற்கு ஒருமுறைபணத்தைக் கொடுத்தால் போதும் எனக் கூறி, அவர் அந்த பண்ணையை என்னிடம் கொடுக்கும் பொழுது எட்டு கால்நடைகள் இருந்தன. நாளடைவில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நல்ல வளர்ச்சியும் அடைந்தது அப்பண்ணை.

    தரம் சரியாக இருந்ததால் வியாபாரமும் நல்ல வளர்ச்சியை அடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கால்நடைகளைப் பராமரிப்பதற்கும், முறையாக மருத்துவம் பார்க்கவும் இயலாமல் போய்விட்டது. இதனால் கால்நடைகளை எல்லாம் எனது தந்தையைப் பராமரிக்கச் சொல்லி அனைத்தையும் எனது சொந்த ஊருக்கு என் தந்தையின் கண்காணிப்பிற்கு அனுப்பி வைத்துவிட்டேன். அவரும் அவைகளை முறையாக பராமரித்து அடுத்த ஐந்தாண்டுகளில் நன்கு வளர்ச்சியை மேம்படுத்தினார்.

    நர்சரி தொழிலுக்கு வருவதற்குக் காரணம்?

    பால் பண்ணையை தந்தையிடம் ஒப்படைத்த பின்னர் மாற்றுத் தொழில் தொடங்க எண்ணினேன். அப்போது திரு. G. நாகராஜ், நாகராஜ் நர்சரி கார்டன்ஸ், திருப்பத்தூர், தமிழ்நாடு, என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் இந்த நர்சரி தொழிலை தமிழகம் முழுவதும் பரவலாக செய்து வந்தவர். அவருடன் இணைந்த நானும் பழங்கள், காய்கள் போன்றவற்றைஉற்பத்தி செய்தேன். சிம்லா, கோவா போன்றஇடங்களுக்கு உற்பத்திப் பொருள்களை அனுப்பினோம். தரம் சிறந்ததாக இருந்ததால் அங்கிருந்த பலரும் நேரடியாக வணிகத் தொடர்பு கொண்டார்கள்.

    தொடர்ந்து சாங்கிலி, சோலாப்பூர் (மஹாராஷ்டிரா), ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா போன்றஇடங்களிலில் இருந்தும் நிறைய ஆர்டர்கள் வந்தன. சிலரின் வேண்டுகோளுக்கு ஏற்ப பூக்கள், திராட்சை போன்றவற்றையும் எங்களது நர்சரியில் அறிமுகம் செய்தோம்.

    அப்போது டென்டர் கான்ட்ராக்ட் (Tender Contract in DRDO ) DRDO-வில் இருந்து டெல்லி, பம்பாய், ஹைதராபாத், கொச்சின் போன்றபகுதிகளில் கான்ட்ராக்ட் வந்தது. முதல் கான்ட்ராக்ட் ஹைதராபாத்தில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் வந்தது. அக்காலத்தில் இது மிகப்பெரும் தொகை.

    இந்த கான்ட்ராக்ட் மரம் நடுதல் தொடர்பானது, இதை வெற்றிகரமாக செய்து கொடுத்தோம். எங்களது இந்தத் தொழில் முனைப்பைப் பார்த்த Dr.A.P.J. அப்துல்கலாம் அவர்கள் பெரிதும் மகிழ்வு கொண்டார். சிறப்புடன் செய்து முடித்ததைக் கண்ட அவர் அடுத்த கான்ட்ராட்டையும் எங்களுக்கே வாங்கிக் கொடுத்தார். இது எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தொழில் ரீதியில் ஏற்படுத்திக் கொடுத்தது.

    அப்போது Dr. வெங்கடராமன் அவர்கள் டிபன்ஸ் அமைச்சராக இருந்தார். Dr. A.P.J. அப்துல்காலம் அவர்கள் அக்னி செயற்கைகோள் செலுத்தி வெற்றி பெற்றசமயம் அது. ஒரு விழாவின் போது அவர் என்னிடம் பத்தாயிரம் மரக்கன்றுகளை நட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அது ஒரு மறக்க முடியாத தருணம்.

    இந்தியாவில் DRDO உள்ள இடங்களில் எல்லாம் எங்களுக்கு கான்ட்ராக்ட் கிடைத்தது. அது தொழில் ரீதியில் நம்பிக்கையையும், கௌரவத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

    உற்பத்தியில் தரம் என்பதை எப்போதும் குறையாது காப்பதில் தனிக்கவனம் வைத்திருப்பேன். தரமே வெற்றியின் சூத்திரம்!

    வேளாண் கல்லூரி தொடங்கியதன் நோக்கம் குறித்து?

    நாகரிகம் வளர்ந்துவரும் இக்காலத்தில் திரும்புகின்றஇடங்களெல்லாம் பள்ளிகளும், கல்லூரிகளும் தான். ஆனால் இக்கல்வி படிப்பவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருந்தாலும், வேளாண்மை, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. விவசாயத்தின் எதிர்காலம் இனிவரும் காலத்தில் சற்று அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வகையில் தான் இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் வரும் குழந்தைகளுக்கு இதன் முக்கியத்துவம் தெரிய வேண்டும் என்பதற்காகவே இக்கல்லூரியைத் தொடங்கினேன்.

    அது மட்டுமின்றி அடிப்படையில் 35 ஆண்டுகாலம் வேளாண்மைத் துறையில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தொடர்ந்து பெரிய வேளாண் விஞ்ஞானிகளுடன் ஏற்பட்ட தொடர்பில் “இந்தியன் ஆர்டிக்கல்சர் கன்சல்டன்சி சர்வீஸ்” என்றதிட்டத்தைத் தொடங்கினேன். Dr.V.N. மாதவராவ் (Dean, Horticulture, Tamil Nadu Agricultural University, Coimbatore), Dr.G.S. ராந்தவா (Director, Indian Institute of Horticultural Research, Bangalore) போன்றோருடன் சேர்ந்து இத்திட்டத்தைத் தொடங்கியதும் இதன் சிறப்பம்சமாக அமைந்தது.

    ஆரம்பத்தில் ஒரு டிப்ளமோ பிரிவை மட்டும் தொடங்கி, அதன் மூலம் வேலைவாய்ப்பினைக் கொடுக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. என்னிடம் பல மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள வருகிறார்கள். வேளாண்மையின் தேவை மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன்.

    பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்போரின் எண்ணிக்கை அதிகளவில் இருந்த காலகட்டம் அது. அந்தப் படிப்பிகளில் மாணவர்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதே அளவு ஆர்வம் இந்த வேளாண்மைப் படிப்பிலும் இருந்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அந்த மகிழ்ச்சியின் முயற்சியே இந்த கல்லூரியின் துவக்கம்.

    வேளாண்மைக் கல்வியின் தேவை அதிகரித்ததன் காரணம் என்ன?

    ஆரம்ப காலத்தில் வேளாண் கல்வியில் ஆர்வம் குறைந்திருந்தமைக்குக் காரணம் எதிர்காலத்தில் நினைத்தாற்போல் பணி கிடைக்காது என்றமனநிலை இருந்திருந்தது. அதோடு இதுதொடர்பான வேலைகள் கடினமானதாக இருக்கும் என்றும் நினைத்திருந்தார்கள். ஆனால் இப்பொழுது இக்கல்வி பரவலாக பல இடங்களில் பரவியுள்ளது.

    மகாராஷ்டிரா போன்றமாநிலங்களில் வேளாண்மைக் கல்வி என்ற ஒரு குழுவை வரையறுத்து, அதன்மூலம் புதிதாக வரும் தொழில்நுட்பக் கருவிகளை வாங்கி அதில் பல தயாரிப்புகளைச் செய்து வருகிறார்கள்.

    தேவையான வேளாண் கருவிகள், அவர்களுக்கென்று வீடு என்று தனித்தனியாக இருப்பதால் ஆர்வமாக வேளாண் தொழிலைச் செய்து வருகிறார்கள். அவர்களாகவே அனைத்து வேலைகளையும் செய்து உற்பத்தி செய்வதால் நல்ல வருமானமும் கிடைக்கப் பெறுகிறார்கள்.

    அன்றாடம் தேவைப்படும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை முறையாக பயிரிடுகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவகையில் பயிர்களைப் பயிரிடுகிறார்கள். இத்துறையைத் தேர்ந்தெடுத்து படித்தவர்கள் அனைவரும் சுயதொழில் செய்வதால் விரும்பிப் படிக்கும் பாடமாக இந்த வேளாண்மைக்கல்வி இருந்து வருகிறது.

    இக்கல்லூரியைத் தேனி மாவட்டத்தில் தொடங்கியதன் காரணம்?

    நான் பிறந்த ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய விரும்பியே வேளாண் கல்லூரியைத் தேனியில் நிறுவினேன். கல்லூரி தொடங்க பரந்துவிரிந்த நிலப்பரப்பு தேவை. அது சொந்த மண்ணில் கிடைத்ததும் ஒரு காரணம். மேலும் கிராமப்புறங்களில் வேளாண்மைக் கல்லூரியைத் தொடங்குவதால் அதன் நோக்கம் முழுமையாகக் கிடைக்கப் பெறும் என்பதும் எனது நம்பிக்கை.

    உங்கள் கல்லூரியின் தனித்தன்மைகளாக கூறுவது?

    நமது மரபுகளில் ஊரிப்போன பல்வேறு நுட்பங்களிலும், பல்வேறு அறிவியல்களிலும் விவசாயமும் ஒன்று. அத்தகைய விவசாயப் படிப்பை தற்போதைய இளம்தலைமுறைகள் படிக்க பெறும் ஆதரவு காட்டி வருவது மிகவும் முக்கியத்துவமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இச்சமயத்தில் இக்கட்டுரையின் வெளியீடும் அவசியமான ஒன்றாகும்.

    விவசாயப் படிப்பை படிப்பதற்கு தற்போது நிறைய கல்லூரிகளில் பெருவாரியான வாய்ப்பை தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஏற்படுத்தித் தந்துள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில், அதில் சில, சிறப்பு பெற்றகல்லூரிகளாக தமிழகத்தில் திகழ்கின்றன. அதில் முக்கிய கல்லூரிகளில் ஒன்றாக திகழ்வது தேனியில் அமைந்துள்ள வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி.

    கடந்த 2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் குறுகிய காலகட்டத்திலேயே பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது தமிழகத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்றதனியார் கல்லூரிகளில் முக்கிய கல்லூரியாகக் கருதப்படும் தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியின் பரப்பளவு கிட்டத்தட்ட 600 ஏக்கர் கொண்டது. பரப்பளவில் மட்டுமல்ல இக்கல்லூரியின் பிரம்மாண்டம்; கல்வி, விளையாட்டு, செய்முறைக் கல்வி, கலை என பல்வேறு நிகழ்வுகளில் தனது வெற்றிக்கொடியை நாட்டி சாதனை படைத்துள்ளது. இரண்டு தொகுதி மாணவர்களை மட்டுமே வெளியேற்றியுள்ள இக்கல்வி நிறுவனம் கண்டுள்ள சாதனைகளும் பெற்றுள்ள விருதுகளும் எண்ணிலடங்காதவை. குறிப்பிடத்தக்க வெற்றிகளாக, ICAR எனும் அகில இந்திய அளவில் முதுகலை வேளாண்மைப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் இதுவரை 2010-11ம் ஆண்டு மாணவர்கள் 14 பேரும், 2011-12ம் ஆண்டு மாணவர்கள் 16 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கல்லூரி பெற்றுள்ள விருதுகள் குறித்து?

    வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் நடத்தும் பிரபந்தாஸ் Cultural போன்ற பல்வேறு போட்டிகளில் தங்கள் மாணாக்கர்களைக் கொண்டு தனது பலத்தை நிரூபித்துள்ளது. இதை நினைவூட்டும் விதமாக இந்த ஆண்டு ICT எனும் மாநில அளவில் அனைத்து வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான, மதுரையில் நடைபெற்றகால்பந்து விளையாட்டுப் போட்டியிலும், திருச்சி வேளாண்மைக் கல்லூரி மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி இணைந்து நடத்திய Freedom எனும் கலை இலக்கிய விழாவிலும் ஒட்டுமொத்த வெற்றிக்கோப்பையை (Over All Championship) வென்றது குறிப்பிடத்தக்கது.

    கல்வி மட்டுமல்லாது, மாணவர்களின் திறன்மேம்பாட்டிற்குத் தகுந்த பயிற்சிகளும் வாயப்புகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஆட்சி ஆணையர் (IAS) பயிற்சியை மாணவர்களின் நலன் கருதி இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் ஈஷா யோக பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

    நகர்ப்புறங்களில் உள்ள வேளாண் கல்லூரிக்கும், கிராமப்புறத்தில் உள்ள கல்லூரிக்கும் உள்ள வேறுபாடு?

    வேறுபாடு அதிகளவில் இருப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக ஒரு கிராமத்தில் நிலம் வாங்குவதற்கும், நகரத்தில் நிலம் வாங்குதவற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

    அதுமட்டுமல்லாமல் மஹாராஷ்டிரா போன்றபகுதிகளில் கிராமப்புறங்களில் தான் அதிகளவு வேளாண் கல்வி நிறுவனங்கள் இருக்கும். காரணம் கிராமப்புறத்தில் விவசாயம் தான் முதன்மைத் தொழில் என்பதால் வேளாண்மையைப் பற்றி மாணவர்களிடம் விளக்குவதற்கும் எளிமையாக இருக்கும்.

    இயற்கை சூழ்நிலை கிராமப்புறங்களில் அதிகளவில் இருக்கும் என்பதால் நகரத்தைக் காட்டிலும் கிராமம் தான் வேளாண்மைக் கல்விக்கு ஏற்றசூழல் என்று நம்புகிறோம்.

    பன்முகத் தொழில் செய்யும் உங்களுக்கு எந்தத் தொழில் மனதிற்கு நிறைவாக இருக்கிறது?

    எந்தத் தொழிலைச் செய்தாலும் மனதிற்கு நிறைவாக இருந்தால் தான் அதில் வெற்றி பெறமுடியும். ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு தொழிலும் மனதிற்கு நிறைவைக் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது.

    ஆர்வம் இருந்தால் மனநிறைவு தானாகவே வந்துவிடும். நான் எல்லா தொழிலையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்ப்பதால் எல்லாவற்றையும் ஒரே அளவில் நேசிக்கிறேன்.

    பள்ளிப்படிப்பை முடித்தவுடன் வேளாண் கல்வியைப் படிக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

    பள்ளிப்படிப்பை முடித்த குழந்தைகள் அதிகளவில் பொறியியல் கல்லூரியைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் பொறியியல் கல்லூரியின் எண்ணிக்கை இப்பொழுது பலமடங்கு உயர்ந்துள்ளது.

    பொறியியல் படித்தால் உடனே வேலை கிடைத்துவிடும் என்றகாலம் மாறிவிட்டது. பொறியியல் படிப்பைவிட வேளாண் கல்வியின் மூலம் வேலைவாய்ப்பு அதிகளவில் இருக்கிறது என்பதை பெற்றோர்களும், மாணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

    வேளாண்மைக் கல்வி வாழ்க்கைக்கு உகந்த கல்வி என்பதை உணர வேண்டும். உழைப்பதற்கு நம்மிடம் கைகள் இருக்கிறது என்பதால் எதிர்கால வாழ்விற்கு ஏற்றகல்வி வேளாண் கல்வி.

    பிடித்த புத்தகம், பாதித்த மனிதர்கள் பற்றி?

    வாழ்க்கையை எப்படி வாழ்வது போன்றதன்னம்பிக்கை புத்தகங்களையும், வரலாற்று சிறப்புமிக்க சில புத்தகங்களையும் படிக்க பிடிக்கும்.

    என்னுடைய நெறியாளர் Dr.K. ராமகிருஷ்ணன் அவர்கள் எனக்கு பலவகையில் உதவி செய்திருக்கிறார். எந்த வேலை செய்தாலும் நேர்மையாக இருந்தால் போதும் வெற்றி பெற்றிடலாம் என்று அடிக்கடி என்னிடம் கூறுவார். அதையே இன்று வரை நான் பின்பற்றி வருகிறேன்.

    சுயதொழிலில் என்னை ஊக்குவித்த கோவை தொழிலதிபர் எல்.ஜி. பாலகிருஷ்ணன் எனது ‘காட்ஃபாதர்’ (God Father) என்றே சொல்லலாம்.

    எதிர்காலத் திட்டம் குறித்து?

    கல்லூரியை ஒரு பல்கலைக்கழகத்திற்கு இணையாக கொண்டு செல்ல வேண்டும். வேளாண் தொடர்பான எல்லா துறைகளும் ஒரே வளாகத்திற்குள் கிடைக்குமாறு செய்ய வேண்டும். படித்தவுடன் வேலை கிடைப்பதற்கு ஏதுவாக மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய துணைபுரிய வேண்டும்.

    தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…

    உண்மை, நேர்மை, கடின உழைப்பு இவை மூன்றையும் முறையாகப் பின்பற்றினால் போதும், வெற்றி பெறலாம்!

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    மகிழ்ச்சி – துக்கம் மனிதனுக்கு எங்கிருந்து வரும்?

    எம். கோதை, ஒப்பிலிபாளையம்

    இன்பம் – துன்பம் என்றஇரண்டு உணர்வுகளால் மனிதன் ஆளப்படுகிறான் என்று சொல்லலாம். மனிதன் ஆனந்தத்தைத் தேடுகின்றான்; துன்பத்தைத் தவிர்க்கிறான். நாம் அனைவருமே மகிழ்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கிறோம், வேதனைகள் நமக்கு வேண்டாம் என்கிறோம். ஆனால் வேதனைகளும், துன்பங்களும், துக்கங்களும், தோல்விகளும், ஏமாற்றங்களும் அடிக்கடி நம்மை சூழ்ந்து கொள்கின்றன. அவற்றை ஏற்க முடியாமல் சிலர் மனம் தளர்ந்து விடுகிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே இந்த துன்பத்தைக் கடந்தால் தான் இன்பமான வாழ்வை எட்டிப்பிடிக்க முடியும் என்று நம்புகிறார்கள்; முயன்று முன்னேறுகிறார்கள்.

    ஒரு வகையில் பார்த்தால் இன்பங்களும், துன்பங்களும் மாறிமாறி வரும்போது தான் வாழ்க்கை சுவை உள்ளதாக இருக்கிறது. கடுமையான பசியை அனுபவிப்பவனுக்குத் தானே விருந்தில் கிடைத்த உணவின் அருமை புரியும். சைக்கிள் கூட வாங்க வழியில்லாதவனுக்குத் தானே மோட்டார் சைக்கிளின் அருமை புரியும். வாடகை வீட்டில் குடியிருக்கும் இளைஞனுக்குத் தானே சொந்த வீடு கட்டிய பிறகு அதில் குடியேறிய அருமை புரியும். ஆக, ஒரு துன்பம் வரும்போது அதை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு பிரச்சனைகளைச் சமாளித்தால் தான் வாழ்ந்துகாட்ட முடியும், வாழ்க்கையில் சரியான அணுகுமுறைகளையும், கோட்பாடுகளையும் புரிந்து கொள்ள முடியும், அனுபவசாலியாகவும் முடியும்.

    Continue Reading »

    உள்ளதோடு உள்ளம்

    ஆரோக்கியமான வளர்சிக்கு ஆனந்தமான வாழ்க்கைக்கு “விரல்களின் ஒற்றுமை’ இன்று நமக்கு அவசியம் தேவைப்படுகிறது.

    நம் ஐந்து கை  விரல்களும் மாறுபட்ட உயரத்தையும், பருமனையும் கொண்டது தான் என்றாலும் “வேற்றுமையில் ஒற்றுமை”  கொள்கிறது என்பது தான் உண்மை.

    ஆள்காட்டி விரல்,  எதையேனும் சுட்டி காட்ட நீளும் போது மற்ற விரல்கள் மடங்கி கொண்டு அதன் பொறுப்பை நிறைவேற்ற வாய்ப்பு தரும்.

    சுண்டு விரல், கை கூப்பி வணங்கும் போது மற்ற விரல்கள் சிறிது தானே என்று பாராமல் அவ்விரலை முன் நிறுத்தி அழகு பார்க்கும்.

    கட்டை விரல், ஒரு பொருளை எடுக்கும் போது மற்ற விரல்கள் வளைந்து, நெளிந்து பொருளின் மறு பாகத்தைப் பற்றி எடுக்க உதவும்.

    மோதிர விரல், அணிகலன் அணியப்படும் போது பிற விரல்கள் விலகி நின்று பெருமையுடன் பார்க்கும்.

    நடுவிரல், எல்லா விரல்களையும் விட பெரிது என்றாலும் பிற விரல்கள் பொறாமை கொள்ளாமல் உதவும்.

    இப்படி ஐந்து விரல்களும் வெவ்வேறு அளவு கொண்டது என்றாலும் ஒரு செயல் என்று வரும் போது வேறுபாடு மறந்து ஒன்றுபட்டு உழைக்கின்ற அந்த ஒற்றுமை நம் ஒவ்வொருவருக்குள்ளும் வர வேண்டும்.

    “குடும்பம், தொழில், சொந்தம், பந்தம்” என எங்கும் எதிலும் ஆரோக்கியமான வளர்ச்சியும், ஆனந்தமான வாழ்க்கையும் பரவலாக வேண்டும் என்பதே நம் எல்லோரின் விருப்பமாகட்டும்!