– 2015 – May | தன்னம்பிக்கை

Home » 2015 » May (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    குழந்தைகள் கல்வி கற்க ஏற்ற சூழ்நிலை

    குழந்தைகள் தங்கள் வாழ்வின் 10-12 ஆண்டுகள் பள்ளிகளில் கழிக்கின்றனர்.

    குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். பெரும் புத்தகச் சுமையைச் சுமந்து செல்கின்றனர்.

    கடுமையான வீட்டுப்பாட முறைகளால், சிறிது நேரம் கூட விளையாடவோ ஓய்வெடுக்கவோ முடிவதில்லை. படிப்பில் ஏற்படும் சிறு தவறுகளுக்கும் அதிகம் தண்டிக்கப்படுகின்றனர்.

    பள்ளிப் பேருந்துகளல் அளவுக்கும் அதிகமான குழந்தைகளை அடைத்துச் செல்கின்றனர். பல பள்ளிகளில் கழிப்பிடங்கள் சுகாதாரம் இல்லாமல் இருக்கின்றன.

    இவற்றைத் தடுப்பதற்கான வழிகள்

    குழந்தையை உடல்ரீதியாக துன்புறுத்தக்கூடாது.இது நன்மையை விடப் பல வகைகளல் தீமையை ஏற்படுத்தும்.

    குழந்தைகள் அதிக எடை உடைய புத்தகப் பையினைச் சுமப்பதால் அவர்களுக்கு முதுகுவலி, கழுத்துவலி போன்றவை ஏற்படும். குழந்தைகளின் புத்தக எடை அவர்களன் உடல் எடையில் 10%க்கும் குறைவாகவே இருக்க வேண்டும்.

    குழந்தைகளை 4 வயதில் தான் தொடக்கப்பள்ளியில் சேர்க்க வேண்டும். குழந்தைகளின் புத்தகங்களைப் பள்ளியிலே வைத்து செல்ல வசதி செய்ய வேண்டும்.

    உயர்வகுப்புகளில் புத்தகங்களை விட கோப்புகளைப் பயன்படுத்தலாம். கழிப்பிட சுகாதாரம் – 60 குழந்தைகளுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம் வேண்டும்.100 குழந்தைகளுக்கு ஒரு கழிவறை இருக்க வேண்டும். அவைகள் தினமும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

    குழந்தைகளன் பாதுகாப்பான பயணத்திற்குப் பள்ளகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.பள்ளிப் பேருந்துகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும்.

    ஒவ்வொரு வகுப்புக்கும் 40 குழந்தைகளுக்கு மேல் அனுமதிக்க கூடாது.ஒரு குழந்தைக்கு 10 சதுரஅடி அல்லது ஒரு வகுப்பறைக்கு 400 சதுரடி இருக்க வேண்டும்.விகிதத்தில் வகுப்பறையின் இடவசதி இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையும் நன்கு காற்றோட்டம் கொண்டதாகவும் குழந்தைகளன் வசதிக்கேற்ப மேசை நாற்காலிகள் உள்ளவையாகவும் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு பள்ளயிலும் குழந்தைகள் விளையாட மைதானம் இருக்க வேண்டும். வாரத்தில் 4 மணி நேரம் விளையாட்டு மற்றும் இதர பொழுது போக்குகளுக்கு ஒதுக்க வேண்டும்.

    குழந்தைகளின் மனதிற்கு கல்வி கற்க ஏதுவான சூழ்நிலையைப் பள்ளிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளின் மனதில் உள்ள பிரச்சனைகளைச் சரிசெய்யவும், அவர்களுக்கு ஏற்படும் அசௌரியங்களைத் தீர்க்கவும் சிறப்புப் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.

    குழந்தைகள் பயிலும் பள்ளகளல் சாதி மத வேறுபாடுகள் இருக்கக் கூடாது. மாற்றுத் திறனாளகளுக்கு ஏற்ற உதவிகளைச் செய்து தர வேண்டும்.

    படிப்பதில் கவனக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்குத் தனிக்கவனம் செலுத்தி அவர்கள் முன்னேற உதவி செய்ய வேண்டும்.

    குழந்தைகளன் உடல் மற்றும் மனம்சார்ந்த பிரச்சனைகளை உடனடியாக கண்டறியும் வசதிகள் செய்ய வேண்டும்.

    இந்த இதழை மேலும்

    கறுப்பு வெள்ளை

    கறுப்பு எல்லா நிறங்களும் உறிஞ்சப்படும் நிலை.வெள்ளை எல்லா நிறங்களும் உமிழப்படும் நிலை. வெள்ளைக்குள் எல்லாம் அடக்கம். கறுப்புக்குள் எல்லாம் அடங்கும்.ஒன்று ஒருபுற எல்லை என்றால், மற்றொன்று மறுபுறஎல்லை.இவ்விரண்டில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கின்ற நிலைமையோடு ஒப்பிடலாம்.

    கறுப்பு வெள்ளையை முதலில் கருப்பு வெள்ளை என்றுதான் எழுதினார் கதிரேசன். பின்னர் எந்த கறுப்பு சரி என்று, கங்கை புத்தக நிலையம் வெளியிட்ட,  ‘நல்ல தமிழ் அறிவோம்’ என்னும் புத்தகத்தில் படித்தது ஞாபகம் வந்தது. அந்தப் புத்தகம் டாக்டர் முத்து கண்ணப்பன் அவர்கள் எழுதியது. கறுப்பு தான் சரியானது. கருப்பு என்றால் ஏழ்மை அல்லது வறுமை என்று பொருள் என்று மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்திக் கொண்டார். கதிரேசனது இந்த முயற்சியால் “நல்ல தமிழ் அறிவோம்’ புத்தகத்திலிருந்து வழக்கமாக செய்யும். மேலும் பல எழுத்துப் பிழைகளைத் திருத்திக்கொள்ள இயன்றது. புத்தகங்கள் இதுதான், இவ்வளவுதான் என்று வரையறுத்துவிட முடியாத வகையில் அறிவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  படிக்கப்படிக்க கறுப்பு வெள்ளைக்கு இடையில் வெவ்வேறு அடர்த்தியிலான நிறங்களைப்போல, பகுத்து ஆராய்கின்ற பண்பு தோன்றுகின்றது.

    லேட்டரல் திங்கிங் என்பது தற்பொழுது “அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ யோசனைகள் என்கின்ற பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு கண்கட்டு வித்தையைப் போல கண்ணை மூடிக்கொண்டு கறுப்பு வெள்ளையாய் இருந்த உலகை, பல வண்ணமயமாக மாற்றுகின்றது, மாற்றி யோசிக்கும் வழிமுறைகள். கறுப்பு வெள்ளையில் இரண்டே முடிவுகள் தான். ஆனால் நிறங்கள் என்று  வந்துவிட்டால், என்ன நிறம் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்கின்ற கேள்வி, ஒருமையில் இருந்து கேள்விகள் என்ற பன்மையாக மாறிவிடும். இரண்டு பேர் கருத்து மாறுபாடு கொள்கின்றனர் என்றால் புதிதாவதாக மூன்றவாது ஒரு கருத்தை இருவருமே ஏற்றுக்கொள்கின்ற வகையில் கண்டுபிடித்தால் அதுதான் அவுட் ஆஃப் தி பாக்ஸ் சிந்தனை.

    வரலாறு அல்லது பின்புலம் ஒரு கருத்தை குறித்த புரிந்துணர்வை மாற்றவல்லது. உலகக்கோப்பை 2015-ல் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு அரை இறுதியில், மிகவும் உயரக் காரணம், அவர்களது தோல்வியில்லாத ஏழு தொடர் வெற்றியே. இந்தப் பின்னனி தகவல் தெரியாதவர்கள் ஆஸ்த்ரேலிய அணியுடன் மோதுகிறார்கள் என்று தெரிந்திருந்தால் அவர்களது எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருந்திருக்கலாம். மனிதகுல வரலாறு குறித்து இராகுல சாங்கிருத்தியாயனின் “கங்கை முதல் வால்கா வரை” என்னும் புத்தகம் கூறுகின்ற கருத்துக்கள் தற்கால நிகழ்வுகளோடு பொருத்திப் பார்த்தால்,  நிறைய தெளிவினை அளிக்க வல்லவை.

    கதிரேசன், பூ.கோ.சரவணன் என்னும் ஆளுமையை சமீபத்தில் சந்தித்தார்.  அவரை எழுத்தாளர் என்பதா, பொறியாளர் என்பதா, ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர் என்பதா, சமூகவியளாளர் என்பதா? என்று குறிப்பிட குழம்பும் அளவு பன்முக பர்ஸனாலிட்டி ஆக இருந்தார். விகடன் பிரசுரத்தில் “வரலாற்று மனிதர்கள்” என்னும் அறுநூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ‘கனமான’ புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் வரலாற்றில் நிலையான இடம்பெற்ற மனிதர்கள் குறித்தும் அவர்களது கறுப்புவெள்ளைக் காலம், அதாவது கடந்த காலம் குறித்தும், சுவையான படைப்புக்கள், நிகழ்வுகள் குறித்தும் அலசி ஆராய்ந்து, அதிசயமான அருமையான பொக்கிஷமான நினைவுகளை எல்லாம் இரசித்து எழுதியிருக்கிறார். உதாரணமாக கிரிக்கெட் வீரர் இராகுல் டிராவிட்டின் பொறுமை மற்றும் நம்பிக்கை குறித்த பக்கங்கள் அதைப்படித்த ஒரு வாசகியின் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டன. இந்த செய்தியை நண்பர் கூறினார். ஏன் எனில், இராகுல் டிராவிட் நீண்ட காலம் காத்திருக்க நேர்ந்தது போல வாசகியின் வாழ்விலும் காத்திருப்பு நிகழ்ந்ததாம்.

    கறுப்பு எதிர்ப்பை, துக்கத்தை காட்டவும் வெள்ளை அமைதி, சமாதானம், உடன்பாடு முதலியவற்றைகாட்டவும் சின்னமாக பயன்படுத்தப்படுகின்றன. கறுப்பு வெள்ளை நினைவுகள் நிறைந்த வாழ்க்கையை, சாதனை செய்தவர்கள் எப்படி கடந்தார்கள் என்று படிக்கக் கொடுத்த சரவணன், மழைபோல பேசுகின்றார். வெயில்போல பல திசைகளிலும் நிறைந்த அறிவுக்கதிர்களை வீசுகின்றார். இதனை ஒரு தேர்வு என்னும் புள்ளியை நோக்கி குவித்தார் என்றால் சுடச்சுட ஒரு இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி தயாராகிவிடுவார் என்று தோன்றியது.

    “னேஸிக்கின்றேன்!” என்று கதிரேசனுக்கு தமிழ் ஒருகடிதம் எழுதினாள் அவரின் எட்டு வயது மகள். தமிழ் பாடம் இல்லாத பள்ளியில் படிப்பதால் அவளுக்கு தமிழாசிரியர் ஆகும் பாக்கியம் கிடைத்தது, கதிருக்கு. தமிழோடு தமிழ் படித்த போது இருவருமே நிறைய கற்றுக் கொண்டார்கள். தமிழ், படைப்பாற்றல் மிகுந்தவளாக தெரிந்தாள். நேசிக்கின்றேன் என்பதன் நிறம் நிறைந்த வடிவம்தான் னேஸிக்கின்றேன்.  கறுப்பு வெள்ளையாய் சாதாரணமாக கண்கள் கடந்து போகும் ‘நேசிக்கின்றேன்’ என்கிற வார்த்தை குழந்தையின் மனதில் நிறைந்து வண்ணமயமாக கிடைத்த எழுத்துக்களை சேர்த்துக் கோர்த்து அப்பாவை நேசிப்பதை சொல்லிவிட வேண்டும்.  வார்த்தைகள் வராவிட்டால் கூட பரவாயில்லை என்று நினைக்கும்,  இதயத்தை புரிய வைத்து இருக்கின்றாள். கதிர், அவளை நீண்ட நாட்கள் கழித்து, அவள் பார்க்க ஆசைப்பட்ட, மாடு பால் பீச்சும் காட்சி, இளங்கன்று பால் ஊட்டும் நிகழ்வு போன்றவற்றைபார்ப்பதற்காக சென்னையிலிருந்து திருநின்றவூர் அழைத்துச் சென்றதை, தொடர்ந்து கிடைத்த பாராட்டுக்கடிதம் இது. பல்வேறு வங்கிப் பணி சாதனைகளுக்காக கிடைத்த பாராட்டு பத்திரங்கள் சான்றிதழ்களுக்கு சரிசமானமாக மனதிருப்தியை இந்த பென்சில் எழுதப்பட்ட கறுப்பு வெள்ளை கடிதம் கொடுத்தது.

    தமிழன் மனதில் பசுக்கள், ஆட்டுக் குட்டிகள் உண்டாக்கும் பரவசத்தை கதிரேசனும் ‘னேஸிக்கிறேன்’ மாடல்தான் வார்த்தைகள் கண்டுவித்து எழுதி புரியவைக்க இயலும்.அவள் முகம் அவ்வளவு சந்தோஷமடைவதை முகம் எல்லா தசைகளிலும் பூரிப்பை பூசிவிட்டு காட்டுகின்றது. நாள்கணக்கில் அந்தக் குழந்தை முகம் பார்த்து கடத்தி விடலாம்.இதெல்லாம் குழலினிது யாழினிது குறள் காலத்து கறுப்பு வெள்ளை சமாச்சாரம். சிறுகை அளாவிய கூழ்

    சாப்பிட்டு வளர்ந்த கலாச்சாரம்.

    கறுப்பு வெள்ளை என்பதற்கு அரதப்பழசான விஷயம் என்று கூட ஒரு பொருள் உண்டே. வயதானவர்களின் புகைப்படங்கள் அதை நினைவூட்டுவது போல் எக்காலமும் நிலைத்து நிற்கும். ஆனால், இன்னும் தமிழ் தானாக, இளங்கன்றையோ, பசுவையோ தொட்டுப் பார்க்க துணியவில்லை என்பது உண்மை. அதற்குள் அவள் பூரண திருப்தி அடைந்து நன்றி கடிதம் எழுதி கொடுத்துவிட்டாள். கதிரேசனின் நாட்குறிப்புக்குள், நடு நாயகமாக ஒட்டப்பட்டுவிட்டது அது. பேங்க் மீட்டிங்குகளில் காட்டமாகும் கட்டங்களில் பக்கங்கள் திருப்புகையில் பார்வைக்கு தட்டுப்பட்டு வருத்தத்தை மட்டுப்படுத்துவது, இதுபோல மகள்கள் கூட்டும் மகுடங்கள்தான் என்பது கூட்டத்தில் மாட்டிக்கொண்டுள்ள மற்றையோர்களுக்கு தெரியாததால், அவர்கள் திட்டப்படும் பொழுதெல்லாம் தீட்டப்படுகின்றோம் என்று வரிகளுக்கிடையே படித்துத் தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

    கறுப்பு வெள்ளை புரிந்து கொள்ளலிலுள்ள ஒரே விளைவுதான் இருக்கின்றது. சட்டப்பள்ளிகளில் “வண்ணம்பூசிய புரிந்துகொள்ளுதல்” என்று ஒரு வார்த்தையை பல நீதிமன்றதீர்ப்புக்களில் இருந்து எடுத்துவிளக்குவார்கள். ஆங்கிலத்தில் “கலருடு இன்டர்ப்ரட்டேஷன்” என்றுசொல்வார்கள். அதாவதுசிவப்புநிறகண்ணாடி அணிந்து பார்த்தால் பார்க்கும் பொருளெல்லாம் சிவப்பாக தெரிவதுபோல ஒருவிதிமுறையை தனக்குபிடித்த வண்ணம் புரிந்துகொண்டுவிளக்கம் கொடுப்பதுதான்.  அஸ்வத்தாமன் மறைந்துவிட்டான் என்று தர்மரை மஹாபாரதத்தில் சொல்ல வைத்த கதையை ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஒரு நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமையைக் கொண்டு வழக்குகளை வழக்கறிஞர்கள் வெல்லும்  கதைகள் தமிழ் மற்றும் ஆங்கில திரைப்படங்களில் நிறைந்து இருக்கின்றன. “ப்யூகுட் மென்” என்பது அப்படி ஒருதிரைப்படம். கலருடு இன்டர்ப்ரட்டேஷன் என்பது பொதுவாக எதிர்மறை அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். ஒரு செய்தியை ஒரே கோணத்தில் மட்டும் பார்ப்பது கறுப்பு வெள்ளை பார்வை என்றும் பல கோணங்களில் அலசிப் பார்ப்பது வண்ணம் நிறைந்த பார்வை என்றும் சொல்கின்றார்கள். சமஸ்கிருத இலக்கியத்தில் இதனை ‘தொனி’ என்று கூறி விளக்குவார்கள்.

    “உடம்புக்கு எப்படியிருக்கு?” என்கின்றகேள்வியை கேட்கின்றதொனியை வைத்து, அப்படி கேட்பவரின் வலுவை வைத்து, கேட்ட இடத்தை வைத்து, கேட்டு பதில் கிடைத்த பத்து நிமிடங்களுக்கு பிறகு நடக்கவிருக்கின்ற சம்பவத்தை பொறுத்து பொருள் கொள்ள வேண்டும். பேசப்பட்ட வார்த்தைகளும், பேசாமல் விடப்பட்ட வார்த்தைகளும் சேர்ந்துதான் ஒரு வாக்கியத்தினை முழுமைப்படுத்துவதாக ‘தொனி’ என்கின்றஇலக்கிய விமர்சன கருவியை குறித்து படிக்கும் பொழுது கதிரேசன் புரிந்து கொண்டார்.

                பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜாக்குவஸ் இலக்கான் என்னும் மொழியியலாளர்  “முழு வார்த்தை” என்னும் தத்துவத்தை கண்டறிந்துவிளக்கினார். அவரும் தொனி என்கின்றசமஸ்கிருத தத்துவத்தை குறித்தும் பேசி, அது ஆழமான கருத்து என்று பாராட்டியிருப்பார்.தமிழ் இலக்கியத்திலும் இத்தகைய சூழ்நிலைக்கேற்ப பொருள் கொள்ளக்கூடிய உத்தியை நிறைய இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். சொல்வதை புரிந்துகொள்வது நிகழ, சொல்பவரிடத்தில் எவ்வளவு முயற்சி உள்ளதோ அதே அளவு அல்லது அதைவிட அதிகமான அளவு கேட்பவரிடத்திலும் உள்ளது. இலக்கான் இதனை கான்ஸியஸ் (நனவு, மேல் மனம்)  மற்றும் அன்கான்ஸியஸ் (உள்மனம்) இரண்டும் கலந்த ஒரு செயல்பாடு என்று கூறியுள்ளார். தர்க்கம் (டிபேட்) செய்பவர்கள் பயன்படுத்தும் உத்தியும் இதுவே ஆகும்.

    நகைச்சுவை பெரும்பாலும் கலருடு இன்டர்பிரட்டேஷன் மூலமாகவே செய்யப்படுகின்றது.

    ஒரு அர்த்ததின் மூலம் கறுப்பு வெள்ளையாய் முடிவெடுத்து கோபப்பட்டுவிட கூடாது. அதன் “உள் அர்த்தம்”என்ன என்று ஆராய, ஆராய ‘உள் குத்து’ எதாவது இருந்தால் தெரியவரும். பரவலாக சாதாரண அன்றாட சமூக வாழ்க்கையில் பொறுமையும் நிறைய படிக்கும் இலக்கிய பரிட்சயமும் இருந்தால் சொற்கள் வண்ணமயமாக நடனமாட காணலாம். இரமண மஹரிசி கூறிய ஒரு கதையை கதிரேசன் படித்தார். நாய் ஒன்று இருந்ததாம், அதற்கு ஒரு எலும்பு துண்டு கிடைத்தது. அதை கடித்து உண்ண முயற்சித்தது. அதன் மூலம் தான் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நினைத்து கொண்டதாம். ஆனால் அது ஒரு காய்ந்த எலும்பு.  அதன் கீறல் பட்டு உதட்டில் உதிரம் வந்தது. அதன் சுவையில் நாய் மகிழ்ந்தது. ஆனால் உண்மையில் உதிரம் நாயினுடையதுதான் எலும்பினுடையது அல்ல என்று அதற்கு அதன் நண்பன் வந்து விளக்கம் கூறியது. அதன் பிறகு நாய் அமைதியானது. எனவே மகிழ்ச்சிக்கான காரணங்கள் மனத்துள்ளே இருக்க வெளியில் இருந்து வரும் வார்த்தைகள் மீது தகுந்த பொருள் என்னும் சாயம் பூசிக்கொள்ள வாய்ப்பு இருக்கின்றது. உதாரணமாக மதுவிலிருந்து பெறும் இன்பத்தை கூறலாம்.

    இலக்கான் சொல்கிறப்படி பார்த்தால், முழு பொருளை எடுத்துக்கொள்ள பாதி வெளியிலிருந்து வந்த வார்த்தையோடு நமது ஆழ்மனதில் உள்ள புரிதலையும் சேர்த்தோம் என்றால் முழு பொருள் உருவாகின்றது. கறுப்பாய் வந்தால் அதன்மீது எதாவது ஒரு நிறம் போட்டு சரி செய்துகொள்ள முயற்சிக்க வேண்டாமா?குழந்தைகள் இதனை செம்மையாக செய்கின்றன.களங்கமில்லாத திறந்த வெள்ளை மனதோடுதான் இருக்கின்றன. தமிழுக்குத் தமிழ் கற்றுத்தருகின்றேன், பேர்வழி என்று கதிரேசன் தினந்தோறும் தன் மனதில் பட்ட கறுப்பு சாயங்களைத்தான் வெளுத்துக்கட்டிக் கொண்டிருக்கின்றார். கனவுகள் கறுப்பு வெள்ளை நிறத்தில்தான் வரும் என்று உளவியல் அறிஞர்கள் கூறியுள்ளதாக கதிரேசன் படித்தார். தான் வளர்ந்த கிராமத்தை நினைத்துப் பார்த்தால் பச்சை வயல்வெளியும், பரம்பிக்குளத்தின் நீர் பாயும் வாய்க்காலும் வண்ண வண்ணமாகத்தான் அச்சுஅசலாக நெஞ்சில் நிற்கின்றன. ‘கிரியேட்டிவ் விசுவலைசேஷன்’  என்று ‘சக்தி காவெய்ன்’ உடைய புத்தகம் ஒன்றைபரிந்துரை செய்த பேராசிரியர் வகுப்பில் கண்ணை திறந்துகொண்டு தூங்கினால் மெமோ கிடைக்காமல் இருக்கும் என்றார். கண்ணை திறந்துகொண்டு கனவு காண்பதால் கலர் கனவுகள் கிடைக்கும்தான்.

    சட்டென்று ஒரு முடிவெடுத்து வெட்டப்படும் உறவுகள் அதீத நினைவலைகளை ஏற்படுத்த வல்லன. லியோனார்டா டாவின்ஸி வேண்டாத இடங்களை ஒரு கல்லில் இருந்து நீக்கிவிட்டால் சிலை வடிக்கலாம் என்றார். இரண்டு துண்டாக வெட்டிவிடுவதை விட்டால், நிறைய கிடைக்கலாம். பொறுமை வளர பெருமை வளரும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார். தமிழ், கழல், அவர்களின் மாமா பெனடிக்ட், எல்லோரும் சேர்ந்து, வீட்டில் பிஸ்ஸா செய்தனர். அதை மைக்ரோவேவ் ஓவனில் கொஞ்சம் நேரம் தான்  வைத்தனர். மொஸ்ஸொரெல்லா சீஸ் முதல் பேஸ் வரை பொருட்கள் வாங்க நாள் கணக்கில் ஆனது.  அதுபோல பரிட்சை  ஹாலில், அல்லது பேசும் இடம் என்பது ஓவன் போல பல நாட்களாக படித்து தயாரித்து வைத்திருந்ததனால் வார்த்தைகள் கறுப்பு வெள்ளையாய் இன்றி “னேஸமுடன்” வண்ண வண்ணமாய் வரையப்படலாம்; பேசப்படலாம்; பேசப்படும்!

    இந்த இதழை மேலும்

    இணையதளத்தில் படிக்க

    மொபைலில் படிக்க

    உழைப்பை அர்த்தப்படுத்து! வாழ்க்கையை வளப்படுத்து!!

    Er. ரா.ஜெயப்பிரகாஷ் & Er. ரா. ராஜசேகர்

    மேலாண்மை இயக்குநர்கள்

    E.S. ராமசாமி & கோ

    (இன்ஜினியர்ஸ் & பில்டர்ஸ்), கோவை

    • உழைப்பால் உயர்ந்தவர்கள் இங்கு ஏராளம். அவர்களுள் சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பார்கள். அப்படியாய் மக்களில் மனதில் இடம்பிடித்த நன்மதிப்பிற்குரியவர்கள்.
    • தோல்விகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருபவர்கள்.
    • சவால்கள் நிறைந்திருக்கும் கன்ஸ்ட்ரக்சன் தொழிலில் திறமைமிகு செயல்பாடுகளால் நாளும் நாளும் முன்னேற்றத்தையே முழு மூச்சாகக் கொண்டு செயல்படுபவர்கள்.
    • இல்லறம் நல்லறமாக அமைய, குடும்பத்தில் குதூகலம் பிறக்க அவரவர் எண்ணம் அறிந்து ‘அழகு மிகு’ கட்டிடங்களைத் திறம்பட உருவாக்கி வருபவர்கள்.
    • உழைப்பையே மூலதனமாக்கி கட்டுமானத் தொழிலில் முதன்மை என்கிற பெருமைக்குரிய இடத்தை பெற்றிருப்பவர்கள் இவர்கள். பணிப்பளு ஒருபுறம் என்றாலும் கற்ற, பெற்ற அனுபவங்கள் அடுத்த தலைமுறைக்கு உதவ வேண்டும் என்று நம்மோடு பல்வேறு விசயங்களைப் பகிர்ந்து கொண்டார் E.S ராமசாமி & கோ, மேலாண்மை இயக்குனர்களில் ஒருவரான Er. ரா.ராஜசேகர் அவர்கள். இனி அவரோடு நாம்….!

    உங்களின் இளமைக் காலம் குறித்து?

    பிறந்தது கோவை. என்றாலும் படித்தது வளர்ந்தது எல்லாம் ஊட்டியில் தான். ஊட்டியில், புகழ்மிக்க கேத்தி ஜார்ஜஸ் ஹோம்ஸ் பள்ளியில் படித்தேன். இப்பள்ளியில் கல்விக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் விளையாட்டுக்கும் கொடுத்தார்கள். அதனால் பள்ளிக்காலத்தில் எனக்கு விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. விளையாட்டில் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றேன்.

    12 ஆண்டு பள்ளிப்படிப்பை எவ்வித தடையும் இன்றி வெற்றிகரமாக முடித்தேன். படிக்கின்ற காலத்தில் பொறியியல் படிப்பில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இதனால் பொறியியல் கல்வி கற்க கோவையிலிருந்து பெங்களூர் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. முதன்முதலாக குடும்பத்தைப் பிரிந்து செல்வது சற்று மனத்தில் சஞ்சலத்தை அப்போது ஏற்படுத்தியது. எனினும் பிடித்த கல்விகற்கத் தானே செல்கிறோம் என்று மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு செல்ல என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.

    பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படக் காரணம்?

    அடிப்படையில் எனது தந்தை ‘கட்டிட கன்ஸ்ட்ரக்சன்’ தொழில் தான் செய்து கொண்டிருந்தார். அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் வசித்து வந்தார்.கல்வியறிவு மிகவும் குறைவு என்பதாலும், ஏதேனும் சுயவேலை செய்ய வேண்டும் என்று விரும்பியதாலும் இந்தக் கட்டிடத் தொழிலை மேற்கொண்டார். இதற்கு அச்சாணியாக கிருஷ்ணகிரியில் ஓர் அணைக்கட்டில் வேலையை முதன்முதலாகத் தொடங்கினார்.

    அந்த அணைக்கட்டில் அவர் செய்த வேலைகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அணைக்கட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல இடங்களிலும் எனது தந்தை தனது தனித்திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் பில்லூர் அணைக்கட்டு, குந்தா, அவலஞ்சி, எமரால்ட், காரமடை அணை என்று பல அணைக்கட்டுகளைக் கட்டும் வாய்ப்பும் இவருக்கு அடுத்தடுத்து கிடைத்தது. கோவை மேம்பாலத்தைக் கட்டும் பணியும் அப்போது அவருக்குக் கிடைத்தது.

    ES ராமசாமி & கோ நிறுவனம் உருவான விதம் குறித்து?

    கன்ஸ்ட்ரக்சன் தொழிலில் எனது தந்தை மிகுந்த பரபரப்பாகப் பணியாற்றிய சமயம் அது. நானும் எனது மூத்த சகோதரர் இருவரும் பெங்களூரில் பொறியியல் கல்வியை முடித்து கோவைக்கு வந்து அரசுப்பணிக்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அந்த நேரத்தில் இனியும் அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருந்தால் எவ்வித பயனும் இல்லை என்கிறமுடிவுக்கு வந்தோம். எங்களின் மீதிருந்த நம்பிக்கையை மட்டுமே முன்னிறுத்தி சொந்தமாக தொழிலைத் தொடங்கலாம் என்று நினைத்தோம். அதன் பயனாக வடவள்ளி என்றஇடத்தில் கட்டிடங்களைக் கட்டி சிறுசிறு வீடுகளாக விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.

    எங்கள் வீடுகளை வாங்கியவர்களுக்கு எங்களின் மீது நல்ல நம்பிக்கையும், நன்மதிப்பும் ஏற்பட்டது. இதனால் சீரநாயக்கன்பாளையத்திலுள்ள பவர் ஆபீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய கட்டிடங்களைக் கட்டினோம். சிறுக சிறுக எங்களின் வளர்ச்சியைப் பெருக்கிக் கொண்டு இன்று எங்களுக்கென்று ஒரு தனிப்பெயருடன் தொடர்ந்து நடத்தி வருவது தான் உந ராமசாமி & கோ.

    தந்தையின் அனுபவ அறிவுக்கும், நீங்கள் கல்வி கற்று வளர்த்துக்கொண்ட அறிவுக்கும் மாறுதல் இருப்பதாக உணர்கிறீர்களா?

    என்ன தான் கல்வி கற்று என் அறிவை வளர்த்துக் கொண்டாலும் என் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட வேலை நுணுக்கங்கள் தான் என்றும் எனக்கு உறுதுணையாக இருக்கின்றது. எனது தந்தை இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் தான் என்றாலும் அவருடைய வேலையின் நேர்த்தியும், தொழில் ஈடுபாடும் இந்த தொழிலில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கச் செய்தது.

    அனுபவம் ஒரு மனிதனுக்கு சிறந்த ஆசான். அதைச் சிறப்பாகவே எனது தந்தையிடம் கற்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவரிடம் தொழில் கற்றஅனுபவமும், அதைப் பார்த்துத் தெளிந்த அறிவும் தான் எனது தொழிலுக்கு உறுதுணையாகவும், பலமாகவும் இருக்கின்றது.

    எனது தந்தை இந்தத் தொழிலிலேயே இருந்ததால் தான் என்னாலும் இதைச் சிறப்பாக செய்ய முடிகின்றது. இல்லையென்றால் இந்த அளவிற்கான வேலைகளை கற்றுத்தெளிய சற்றுத் தடுமாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

    பொறியியல் துறையில் பல பிரிவுகள் இருந்தாலும் இந்த சிவில் பிரிவைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?

    ஆரம்பத்தில் சொன்னதுபோல் பொறியியல் படிக்க வேண்டும் என்று பள்ளிக்காலங்களிலேயே எண்ணம் இருந்தது. பள்ளியில் படித்த சமயத்தில் விடுமுறைக்காக ஊருக்கு வந்தபோது, காரமடை அணை கட்டுமானப் பணியில் அப்பா வேலை செய்து கொண்டிருந்தார். அப்பகுதியைப் பார்ப்பதற்கு அப்பொழுது அப்பாவுடன் செல்வேன்.

    வேலை நேரத்தில் அப்பாவுடன் கட்டிட மேஸ்திரியும் உடன் இருப்பார். அடிக்கல் போடும் முன் வரைபடம் வரைய வேண்டும். அதற்காக என் தந்தை மேஸ்திரிக்கு பல்வேறு கட்டிட நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுப்பார். அவருடன் சேர்த்து எனக்கும் சில அறிவுரைகளைச் சொல்லித் தருவார். அதுவே இந்தத் துறையில் எனது ஈடுபாட்டை இன்னும் அதிகப்படுத்தியது. இப்படிப் படிப்படியாக ஏற்பட்ட ஆர்வமே என்னை இத்துறையில் முழுவதுமாக விருப்பம் ஏற்படச் செய்தது.

    ஆரம்பத்தில் பெரிய கட்டிடங்கள் கட்டியதற்கும், இப்பொழுது அதே அளவில் கட்டிடங்கள் கட்டுவதற்கும் வேறுபாடுகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?

    ஆரம்ப காலம் பொற்காலமாக இருந்தது. ஏனென்றால் எனது தந்தை 400 வேலையாட்களைக் கொண்டு வேலை நடத்தினார். அப்பொழுது அனைவரும் ஒற்றுமையுடன் வேலையை முடிப்பதில் ஆர்வமாகவும், ஈடுபாட்டோடும் வேலையைச் செய்வார்கள். ஆனால் இப்பொழுது மனிதர்களின் வேலையை விட பணத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அனைவரையும் குறைகூறவில்லை. ஒருசிலர் எந்த வழியில் சுலபமாக பணம் சம்பாதிக்கலாம் என்பதையே நினைத்து வேலையில் ஈடுபடுகிறார்கள்.

    ஆரம்பத்தில் வேலை செய்தவர்கள் எல்லாம் நல்ல விசுவாசிகளாகவும், உழைப்பில் ஓயாத ஆர்வம் உடையவர்களாகவும், நம்பிக்கையானவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அந்த அளவிற்கு இருக்கிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை. ஒரு தொழிலில் வெற்றி பெறவேண்டுமென்றால் அந்தத் தொழிலைப் பற்றிய அனைத்து அறிவும், நுணுக்கங்களும் அவரவர் பெற்றிருத்தல் அவசியம். அடுத்தவரை நம்பி எந்தத் தொழிலில் ஈடுபட நினைத்தாலும் அதில் சாதனையை எட்டுவது இயலாத காரியம்.

    ES ராமசாமி & கோ நிறுவனம் எது மாதிரியான வடிவமைப்பை இப்பொழுது செய்து கொண்டிருக்கிறது?

    நாங்கள் இப்பொழுது செய்கின்ற அனைத்து கட்டிடங்களும் சாதாரண சிறிய அளவில் தான் செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் பெரிய அடுக்குமாடி கட்டிடங்களைக் கட்டுவதற்கு சில காலம் தேவைப்படும்.

    எனது இரண்டு மகன்களும் இப்பொழுது சிவில் இன்ஜினியரிங் படிப்பு படித்து வருகிறார்கள். அவர்கள் படித்து முடித்த பிறகு, அவர்களின் முயற்சியால் இதை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என நம்புகிறேன்.

    இத்துறையில் மிகவும் கடினமானது என்று எதைச் சொல்வீர்கள்?

    எல்லாத் துறைக்கும் அடிப்படைக் காரணமானது ஒன்று தான், அது பொருளாதாரம். ஒவ்வொரு துறைக்கும் முதல் சவாலாக இருப்பது பொருளாதாரம் தான். இச்சவால்களை முறையாக எதிர்கொண்டால் வெற்றி பெறலாம்.

    போட்டிகள் நிறைந்த இத்துறையில் சவால்களை எதிர்கொள்வது எப்படி?

    கட்டுமானத் தொழில் என்றாலே நிறைய சவால்களைச் சந்தித்தாக வேண்டும். ஆனால் சவால்களைக் கண்டு பயந்தாலோ, பின்வாங்கினாலோ எதையும் சாதிக்க முடியாது என்பதை எனது அனுபவ வாயிலாகத் தெரிந்து கொண்டேன்.

    எங்கள் நிறுவனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வேலையாட்களை எவ்வாறு திருப்திப்படுத்த வேண்டும் என்பதை முறையாக தெரிந்திருக்கிறோம். பணியாட்களுக்கு வேலை செய்யும் இடத்திலேயே தங்குவதற்கான ஏற்படுகளைச் செய்து கொடுக்கிறோம். அவர்கள் அனைவரும் தினக்கூலி பணியாட்கள் என்பதால் அவர்களின் சம்பளத்தை சரியான நாட்களில் கொடுத்துவிடுவோம். சம்பளம் முறையாக கொடுப்பதால் அவர்களது ஈடுபாடும் ஒரே மாதிரியாக, சிறப்பானதாக இருக்கிறது.

    சில நிறுவனங்களில் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு ஆட்களை வைத்து வேலை வாங்குவார்கள். இப்படி வேலைக்கு வைக்கப்படும் ஆட்களில் யாரேனும் ஒருவர் வேலையை முறையாக செய்யவில்லை என்றாலும் அங்கு முற்றிலும் எல்லா வேலைகளும் தடைபடும் சூழல் ஏற்படும். மார்க்கெட்டிங் முதல் விற்பனை வரை நாங்களே செய்வதால் எங்களை நாடி வருபவர்கள் தொடர்ச்சியாக எங்களிடமே வருகிறார்கள். “எந்த வேலையையும் முறைப்படிசெய்தால் எல்லாசவால்களையும் திறம்பட எதிர்கொள்ளலாம்”.

    கோவைப்பகுதியில் கட்டுமானத் தொழில் ஆரம்பித்ததன் நோக்கம்?

    நான் பிறந்த மண் என்பதால் இங்கிருந்தே தொழிலை ஆரம்பித்தோம். அது முதல் காரணம் என்றாலும், தொழில் செய்யத் தேவையான அனைத்துச் சூழல்களும் கோவைப்பகுதிக்கு உண்டு. வாடிக்கையாளர்களுக்கும், எங்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுகிறது.

    இந்தத் துறையில் புதியதாய் தொழில்நுட்ப கருவிகள் வருகிறது. இதில் உங்களின் பயன்பாடுகள் குறித்து?

    பெரிய பெரிய பலமாடிக் கட்டிடங்கள் இப்பொழுது கட்ட வேண்டும் என்றால் சாதாரணமாகக் கட்ட முடியாது. எல்லாவற்றிக்கும் தொழில் நுட்ப கருவிகள் நிச்சயம் தேவைப்படுகிறது. சாதாரண மனிதனை மட்டுமே நம்பி பெரிய கட்டிடங்களைக் கட்ட முடியாது.

    இனிமேல் வருகின்ற காலங்களில் புதியதாய் வரும் தொழில்நுட்ப கருவிகள் இல்லாமல் பெரிய மாடிக் கட்டிடங்களை நிச்சயம் கட்ட முடியாது. கட்டிடத் தொழிலில் இனி எல்லாமே இயந்திரமாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    தந்தையிடம் கற்றுக்கொண்டது…தந்தைக்காக நீங்கள் செய்ய விரும்புவது?

    எந்த ஒரு தொழிலைச் செய்தாலும் அதில் நம்பிக்கை ஏற்படும் வகையில் தான் செய்ய வேண்டும்.அப்பொழுது தான் மக்களின் நன்மதிப்பு கிட்டும். அந்த வகையில் என் தந்தை மக்களின் நல்லாதரவைப் பெற்றவர். அவர் இந்த நிலையை அடைய எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை நான் உடன் இருந்து பார்த்திருக்கிறேன். இந்தத் துறையில் ஒவ்வொரு நாளும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். சவால்களை அவர் கையாண்ட விதம் எனக்கு பலவாறான அனுபவங்களைக் கொடுத்தது.

    அவர் எங்களது குடும்பத்திற்கு ஒரு மேன்மையான பாதையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அப்பாதையில் எவ்வித தடையும் இன்றி பயணம் செய்வது எங்களது கையில் தான் இருக்கிறது என்பதால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறோம்.

    அவரின் பெயருக்கு எவ்வித கலங்கமும் இல்லாத அளவிற்கு தொழிலை உண்மையாக செயல்படுத்துவதே அவருக்கு நாங்கள் செலுத்தும் மரியாதையாகும்.

    கல்லூரி வாழ்வில் கற்றுக்கொண்ட அனுபவம் குறித்து?

    கல்லூரி வாழ்க்கை எனக்கு பல அனுபவங்களைக் கற்றுக்கொடுத்தது.குடும்பத்தைப் பிரிந்து நானும் எனது அண்ணாவும் தனியாக வீடு எடுத்து தங்கிப்படித்தோம்.

    மாநிலம் விட்டு மாநிலம் சென்று படித்ததால் நிறைய இன்ப துன்பங்களைச் சந்தித்தோம்.மொழிவாரியாக பிரிந்திருந்ததால், மொழி தெரியாத நபர்களிடம் பேசுதல் சிரமமாக இருந்ததால் ஒருவருக்கொருவர் பழகும் சூழல் மிகவும் குறைவாகத் தான் இருந்தது.

    இருந்தும் எங்களுக்கு முன் படித்த சீனியர்கள் நிறைய ஆலோசனைகளையும், புத்தகங்களையும் கொடுத்து உதவினார்கள்.அது எங்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது.

    உங்களின் அடுத்த கட்டம்

    ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு திட்டத்தை வரையறுத்துக் கொண்டு அதை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.அதுபோல தான் எங்களின் எதிர்காலத் திட்டம் நிறைய இருக்கிறது.அதை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வர சிறந்த திட்டங்களை வகுத்து அதைச் செயல்படுத்துவோம்.

    எங்களுக்கு அடுத்து எங்களது பிள்ளைகளும் இதை திறம்பட வழிநடத்தி செல்ல வேண்டும்.

    சிவில் படிக்கும் இளைய தலைமுறைக்கு நீங்கள் சொல்வது?

    எந்தத் தொழில் செய்தாலும் அதில் கடுமையாக உழைக்க வேண்டும்.உழைப்புடன் ஈடுபாடு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை சரியாக பின்பற்றவேண்டும்.

    முதலில் வைக்கும் காலடியை முறையாக எடுத்து வைக்க வேண்டும்.வைத்த பின்னர் கவலைப்படக் கூடாது.முடியும் என்று முன்னேறிக் கொண்டு சென்றாலே வெற்றியைத் தொட்டு விடலாம்.

    வெற்றி வெகுவிரைவாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.வெற்றிக்குக் காத்துக் கொண்டிருப்பதில் எவ்வித தவறுமில்லை.

    வெறும் பாடத்தை மட்டுமே படித்துக் கொண்டு தேர்வில் வெற்றி பெறுவதில் எவ்வித பயனும் இல்லை.படிப்பையும் செய்முறையையும் ஒன்று சேர்த்துப் படிக்க வேண்டும்.அவ்வாறு கற்றால் வெற்றி பெறலாம்.

    விரும்பி ஒரு பாடத்தை எடுத்துக் கொண்டால் அதிலேயே தொழில் செய்ய வேண்டும்.படித்தது ஒன்று வேலை செய்வது ஒன்றாக இருக்கக் கூடாது.

    சிவில் இன்ஜினியரிங்கில் வேலை வாய்ப்பு எந்த அளவில் உள்ளது?

    வேலை வாய்ப்பு அதிகம் ஏற்படுத்தி கொடுக்கும் துறை இந்த சிவில். சிவில் இன்ஜினியரிங் இல்லாமல் எதுவுமில்லை என்ற நிலை மிகவும் விரைவாக வரும். இன்னும் 10 ஆண்டுகளில் இதில் நிறைய வேலை வாய்ப்புகள் நிச்சயம் ஏற்படும்.

    உங்கள் நிறுவனத்திற்கே உள்ள தனிச் சிறப்பு என்றால்

    ஒரு நிறுவனத்தை தொடர்ந்து பல காலம் ஒரே இடத்தில் நடத்தி வருகிறோம் என்பதே பெரிய சிறப்பாக நினைக்கிறேன்.24 ஆண்டுகளாக எவ்வித தங்கு தடையின்றி எங்களை நம்பி வரும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறோம். அவர்களும் எங்களை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு நன்மதிப்பு அளித்து வருகிறார்கள்.

    நாங்கள் இத்தனை ஆண்டுகளில் நிறைய அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஒருமுறைகூட ஒரு சிறிய பிரச்சனை வந்திருக்கிறது என்று எங்களிடம் யாரும் புகார் சொல்லியதே இல்லை.

    இதுவே எங்களுக்கு ஒரு சிறந்த தர மதிப்பீடு தான்.

    தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் இந்தக் கட்டுமானத் தொழில் சிறப்பாக இருக்கிறது?

    கோவை மாவட்டம் எல்லாத் துறைக்கும் ஒரு சரியான இடமாக இருக்கிறது. விரைவாக வளர்ந்து வரும் மாவட்டத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ளது என்றால் அது கோவை மாவட்டம் தான். கோவை மாவட்டம் தான் வெளியிலிருந்து வருபவர்களுக்கு விரும்பிய மாவட்டமாக இருக்கிறது. காரணம் தொழிற்சாலை, காலச்சூழல் போன்றவை.

    உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என்றால்

    ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் கசப்பான நிகழ்வு என்ற ஒன்று இருக்கும். வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களால் செய்யப்பட்ட பிணைப்புதான். அப்படி ஏற்பட்ட ஒரு நிகழ்வு தான் எங்கள் அப்பாவிற்கு தொழிலில் ஏற்பட்ட சில நெருக்கமான பழகியவர்களால் ஏற்பட்ட நெருடல்கள்.

    தொழிலில் தனது நண்பர்களால் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் கலங்கியது என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. கஷ்டங்களைப் புரிந்து கொள்ளும் வயது தான் எங்களுக்கு, ஆனாலும் அவர் முடங்கிவிடவில்லை.

    மீண்டும் இழந்ததை பிடிக்க வேண்டும் என்பதற்காக அவரின் கடுமையான பணி எங்களால் இன்னும் மறக்க முடியாத ஒரு வடு.

    முதன்முதலில் திருப்பூர் கட்டிடம் கட்டுதல் பணிநடை பெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது எங்கள் குடும்பத்தில் அவ்வளவாக வசதியில்லை. இதனால் தினமும் பேருந்து, இரயில் பயணம் தான். தினமும் செல்ல வேண்டும் என்பதால் இருவருக்கும் அதிகம் செலவாகும் என்பதால் பஸ் பாஸ் எடுத்துக்கொண்டு செல்வோம்.

    காலை வேளையில் உணவு உண்பதற்கு நேரம் கிடைக்காது. இதனால் காலை உணவு, மதிய உணவு இரண்டையும் பையில் போட்டுக் கொண்டு சரியாக உண்ணாமல் பல நாட்கள் உழைத்திருக்கிறோம்.

    குடும்பக் கஷ்டத்தை நாங்கள் இருவரும் நன்றாகப் புரிந்துகொண்டதால் தான் இன்று இந்த நிலையில் இருக்கிறோம்.

    கட்டுமானத் தொழிலில் உள்ள நீங்கள் குடும்பத்தோடு செலவிடும் நேரத்தைப் பற்றி?

    இந்நிறுவனத்தைத் தொடங்கி 24 ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. வாழ்க்கையில் பாதிநாள் தொழிலியே போய்விட்டது.

    என் மகன்களோடு இருந்து அவர்களோடு செலவிட்ட காலம் மிகவும் குறைவு

    சில சந்தோஷங்களை இழந்தால் தான் வாழ்க்கையில் மேன்மை பெறமுடியும் என்று நம்புகிறேன்.

    தன்னம்பிக்கை வாசகர்களுக்கு

    ‘தன்னம்பிக்கை’ இதழின் பெயரை ஒவ்வொருவர் உள்ளத்திலும் பதிய வைத்தாலே போதும். நம்பிக்கை கொண்டு ஒவ்வொருவரும் ஜெயித்துவிடுவார்கள். தன் மீது மட்டும் நம்பிக்கை வைத்து உழைப்பால் உயர்ந்தவர்கள் ஏராளம்.

    முயற்சி… பயிற்சி… உழைப்பு – வெற்றி!

    வாழ்க்கை என்பது ஏணியைப் போல ஒவ்வொரு படியையும் பார்த்து கால் வைக்க வேண்டும் என்கிற மனப்பக்குவம் வந்துவிட்டாலே தினம் தினம் வாழ்வு திருவிழா தான்.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா?

    சுஜாதா, திருச்சி

    குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை மட்டும் அல்ல அது ஒரு விஞ்ஞானமும் கூட. அந்த விஞ்ஞான உண்மைகளை குழந்தை மனோதத்துவ மருத்துவர்கள் (Child Psychologist) புத்தங்களாகத் தந்துள்ளனர். ஆனால் அவற்றைஎல்லாம் படிக்க பெற்றோருக்கு மனதில்லை, நேரமும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த வரை, அவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பதை வைத்து குழந்தைகளையும் வளர்க்க முற்படுகிறார்கள். எந்த விஞ்ஞான கல்வியும் இல்லாத பல போலி மருந்துவர்கள் தொலைக் காட்சிகளில் பேசுவதும், சிகிச்சை அளிப்பதும் இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது.

    அந்தக் காலங்களில் 8 அல்லது 10 குழந்தைகளை வைத்து ஒரு தாயார் அவதிப்பட்டபோது குழந்தைகளை அடித்து துன்புறுத்தி பணியவைத்தார். “அடியாமாடு படியாது” என்பதும் “முருங்கையை ஒடிச்சுவளர்க்கணும்; பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்” என்பதும் ஊரறிந்த பழமொழி. ஆக குழந்தைகளைத் துன்புறுத்தி கட்டுப்பாடு பண்ணுவது தான் நம் நாட்டின் வழிமுறையாக இருந்திருக்கிறது. ஆனால் விஞ்ஞான உண்மைகள் அடிப்படையில் இந்த அநாகரிகமுறை கைவிடப்பட்டிருக்கிறது. நவீன உலகில் குழந்தைகள் சித்திரவதை செய்ய வேண்டியதில்லை, பேசிப் புரிய வைத்து விரும்பத்தக்க நடைமுறையை ஏற்படுத்திவிடலாம் என்று வந்திருக்கிறது. இன்று குழந்தைகளை அடிப்பதும் குற்றமாகிவிட்டது; இருப்பினும் அது ஒரு புறம் இருக்கட்டும்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    திருமண வயதை எட்டிய இளைஞன் அவன். முழுச்சோம்பேறியாக இருந்தான்.“தினசரி உழைத்துநூறுரூபாய் கொண்டு வந்தால் தான் இனி சாப்பாடு உனக்கு” என்றுகோபத்தில் கத்தினார் அவன் தந்தை.

    இளைஞனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தாயிடம் புலம்பினான், அந்தத் தாய் இரக்கப்பட்டாள். “எங்காவதுபோய் வா.நான் பணம் தருகிறேன். அதை அப்பாவிடம் கொடுத்துவிடு” என்றாள் அவன் தாய்.

    இளைஞனும் அப்படியே செய்தான். பணத்தை அவன் தந்தை வாங்கி, “நீயும், உன் பணமும்” என்றுதூக்கி எறிந்தார்.ஒவ்வொருமுறையும் இப்படியே நடந்தது.

    சில நாட்களுக்குப் பின் தாயிடம் பணம் இல்லாமல் போனது. கடன் வாங்கிக் கொடுத்தாள். அப்போதும் அவன் தந்தை பணத்தை தூக்கி எறிந்தார்.

    ஒரு கட்டத்தில் அந்தத் தாயால் பணம் கொடுக்க முடியவில்லை.இளைஞன் வேறு வழியின்றி வெளியே சென்று எந்த வேலையையும் செய்யத்தயார் என்று உழைக்க ஆரம்பித்தான். மூட்டை தூக்கினான். நூறு ரூபாய் சம்பாதித்தான்.

    பெருமை பொங்க தந்தையிடம் கொடுத்தான். அன்றும் வழக்கம்போலவே பணத்தை தூக்கி எறிந்தார். அவனவன் மூட்டை தூக்கி கல் சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து வந்தால் இப்படி தூக்கி வீசுகிறீர்களே! என்று அந்த இளைஞன் வருத்தப்பட்டான்.

    வீசி எறிந்த பணத்தை எடுத்து அதை முத்தமிட்டு தன் பைக்குள் வைத்த தந்தை சொன்னார், “இது என் மகன் உழைப்பில் வந்த பணம், இனி எனக்கு என் மகனைப் பற்றிய கவலை இல்லை” என்று…

    உயர வேண்டும், வளர வேண்டும், முன்னேற வேண்டும் என்று விரும்புபவர்கள் எல்லோருமே முதலில் உண்மையாக உழைக்க முன் வர வேண்டும். அப்போது தான் உயர்வு வரும்.

    அனைவருக்கும்“உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!”