ஒரு யானைக்குட்டியை யானைப் பாகன் மேய்ச்சலுக்கு கொண்டுபோய் திரும்பிவருகையில் ஒரு சிறிய கொம்பு நட்டு அதில் அந்த யானைக்குட்டியை கட்டிவைப்பானாம். சிலவேளை அவன் மேய்ச்சலுக்குப் போக தாமதமாகையில் யானைக்குட்டிக்கு பசியெடுத்து தனைக் கட்டப்பட்டுள்ள கயிற்றை இழுத்து இழுத்து அறுத்துப்பார்க்க முயன்று அறுக்கமுடியாமல் தோற்றுப்போகுமாம். இப்படி எத்தனையோமுறைப் போராடியும் அந்தக் கயிற்றை அறுக்க முடியவில்லை என்பதால் அவன் வந்து அவிழ்த்து விடும்வரை அந்த யானை அந்த இடத்திலேயே பசியோடு காத்திருக்குமாம்.
பின் வளர்ந்து பெரிதாகிப்போன அந்த யானையை காட்டிற்கு கொண்டுபோய் விட்டால் போதும், வெறி வந்தாற்போல் பெரியப் பெரிய மரங்களையெல்லாம் சர்வசாதரணமாகப் பிடுங்கி தரையில் எறியுமாம். அட்டகாசம் தாங்கமுடியாமல் யானைப்பாகன் அந்த யானையை ஓட்டிவந்து அந்தச் சிறிய கொம்பில் கட்டிவைத்துவிட்டு வீட்டிற்குப் போய்விடுவானாம். அந்த யானை மீண்டும் தன்னை பழையதுப்போலவே கருதிக்கொண்டு மறுநாள் அந்த யானைப்பாகன் வந்து யானையை அவிழ்த்துவிடும்வரை அந்தக் கயிற்றை இழுத்துக்கூட பார்க்காதாம்.
காரணம், அதைப் பொறுத்தவரை, அந்தக் கயிறு ஒரு அறுக்கமுடியாத கயிறு. சிறு வயதிலிருந்து இழுத்து இழுத்துப் பார்த்து அறுக்க முடியாமல் போகவே ஒரு கட்டத்தில் இனி அதை அறுக்கவே முடியாதென்று எண்ணிக்கொண்டே அந்த யானை வளர்ந்து வந்ததால், அந்த யானைக்கு தான் வளர்ந்து காட்டையழிக்கும் சக்தியைப் பெற்றபோது கூட அந்த சிறிய கொம்பை பிடுங்கிக்கொண்டு ஓடமுடியாது என்றே எண்ணம் இருந்துள்ளது.
நாமும் இப்படித்தான், இந்த மரத்தில் கட்டிவைத்த யானையைப் போலவே சிறுவயது எண்ணங்களையே மனதில் சுமந்து வாழ்ந்து கொண்டுள்ளோம். வளர வளர அறுபடவேண்டிய பல நம்பிக்கைக்குரிய கட்டுகளை அறுத்துக்கொண்டு சுதந்திரமாகப் பயணிக்காமல், காதால் கேட்டதையும் யார்யாரோ சொன்னதையுமே நமக்கான கடைசி வட்டமென்று எண்ணிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம்.
சாமி.. வழிபாடு… பண்டிகை… கலாச்சாராமெல்லாம் மனிதரின் நன்மைக்கானதும், மேன்மையை எதிர்நோக்கி நாம் கட்டமைத்ததும் மட்டுமே. பிறகு அந்தந்த வேளை வருகையில் அததற்கான விளக்கங்களை எடுத்துச் சொல்லி வளரும் குழந்தைகளை “விடுதலை உணர்வோடும்’ போதுமான பண்போடும், பகுத்தறியக் கூடியத் தெளிவோடும்” மனித மற்றும் உயிர்களின் மீதான மதிப்பும் மரியாதையோடுமாய் வளர்க்க வேண்டியது நமது கட்டாயமாகிறது.
அங்ஙனம் அவிழ்க்க வேண்டிய கட்டில் ஒன்றும், புரியவேண்டிய உண்மையில் ஒன்றுமானதுதான் அந்த “நம் ஆத்தா கண்ணை குத்தும்” என்று சொன்ன பொய்யும். எல்லாம் அவன் செய்வான் என்று நம்பவைத்த நம்பிக்கையுமாகும். ஏனெனில் இன்று அத்தகையப் பொய்யில் வளர்ந்த மூடப்பழக்க வழக்கங்களும், அவசியமற்ற நம்பிக்கைகளும் பயமும் மாற வேண்டுமெனில் குறைந்தது ஆயிரமிரண்டாயிரம் வருடங்களாவது இனியும் நமக்குத் தேவைப்படும்போல்.
“”கோவில்… சாமி… என்று காட்டும் அக்கறையை இன்று நாம் நம் மனிதரிடத்தே காட்ட மறுக்கிறோம். எதெல்லாம் இயற்கையிலிருந்து வந்ததோ அதெல்லாம் தெய்வீகமானது தான். கல்லை நம்பி கையெடுத்து வணங்கினாலும் கல் நம்மைக் காப்பாற்றும். மரத்தை நம்பினாலும் மரம் நமைக் காப்பாற்றும். அத்தகைய நம்பிக்கைக்குரிய வகையில்தான் இயற்கையெனும் இறைசக்தி நம்முள் எங்கும் பரவியுள்ளது” என்று சொன்னதை நாம் வெறும் ஒரு கல்லும் மரத்திலும் மட்டுமே உண்டென்று நம்பிக்கொண்டது பிழை.
கையெடுத்து வணங்கி உள்ளே பேசும் சொற்கள் ஆழ்மனதுள் பதியுமெனில் அதற்கு செயல்வடிவம் ஏற்பட்டு நம்பியது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அமைவதென்பது இயற்கைச் சக்தியின் இயல்பிற்கு உட்பட்டதே. இதைத்தான் எண்ணங்களே செயலாகும் என்றார் விவேகானந்தர்.
தனை தானுணர்ந்து, தனக்குள் பேசி, தான் வளர வளர பூரண அன்புகொண்டு பிறருக்காய் வாழ்வதையே ஆன்மிகம் போதிக்கிறது. உள்ளே கடைந்து வெளியே தெரியும் காட்சியின் சூட்சுமத்தை அறியவே “நானே கடவுள்” என்றது மதம். ஆனால் நாமென்ன செய்தோம்? நானே கடவுள் என்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தன்னைத்தான் முழுதாக நம்பாமல், எங்கும் நிறைந்த இறைத்தன்மையை சுயநலமறுத்துக் காணாமல், வெறுமனே கடவுள் எங்கென்று தேடித் தேடியே காலத்தை கழித்துவிடுகிறோம். எது உண்மை என்று புரிவதற்குள் மரணம் நெருங்கி வாழ்நாள் முடிந்து மீண்டும் மறுபிறப்பெடுத்தும் உண்மையறியாமலே மரணிக்கவும் தயாராகிவிடுகிறோம்.
ஆக பிறருக்காக, பிறரின் அனுபவத்தின் பாடத்திற்காகக் காத்திருந்ததையெல்லாம் விட்டுவிட்டு விழிப்பென்னும் வெளிச்சத்திற்கு நாமெல்லோரும் வரவேண்டும். எதைக் குறித்தும் சுதந்திரமாய் தனது அறிவிற்கு புரியும்வகையில் சிந்திக்க வேண்டும். பிறருக்கும், மொத்த உலகிற்கும் நல்லதை ஏற்படுத்தும் வகையில் மட்டுமே நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். எங்கு நமது அசைவால் ஒரு நன்மை நடக்குமோ’ அங்கு அந்த இறைசக்தி நிறைந்திருக்கும் என்பதை அனுபவத்தால் புரிந்துணர வேண்டும்.
சிந்திப்போம். எல்லாவற்றையும் சிந்திக்கும் சமயத்தில் நமைப் பற்றியும் நாமறிந்து கொள்ள முயற்சிப்போம். நமையறிந்து கொள்ளல், நம் பலத்தை, நமக்குரிய பண்பை, இயல்பான நற்குணங்களை அறிந்து கொள்ளல் நமது கடன். பிறகு, தனை தானறிந்து கொள்வதெனில் வேறென்ன செய்வது?
தனைப் பார்க்க வேண்டும். எந்த மதமும் போதனையும் அறிவில் முடிவாகச் சென்று ஏறிக்கொள்ளாதளவில் அமைதியாக அமர்ந்து, தனக்குள்ளே முழுவதுமாய்ச் சென்று, தனை முற்றிலுமாக நான் யார் என்று அறியுமாறு பார்க்க வேண்டும். தான் மாறிக்கொண்டே இருப்பதையும், இந்த உலகம் மாறிக்கொண்டே இருப்பதையும் பார்த்துணர வேண்டும். அது முயன்றால் அறிவுள்ள ஒவ்வொரு உயிருக்கும் முடியும். நமக்குள் ஏற்படும் மாற்றத்தையும் நாம் பார்க்க முடியும். உள்ளே சென்று பார்த்தால் உள்ளிருக்கும் சாமி மட்டுமல்ல வெளியிருக்கும் உலகத்தின் மொத்தத் தோற்றமும்கூட நிதர்சனமாய் தெரியும்.
ஆக, தனை தானே அறிவதென்பது யாது? அதெப்படி தனைத்தானே உள்ளே பார்ப்பது?
இப்படி கேள்வி வரும் வேளை; உள்ளே சென்று நம்மை நிரப்பிக் கொண்டுள்ளது யார் என்றும் யோசியுங்கள். உடம்பெல்லாம் காய்ச்சல் அடிக்கையில் வெப்பத்தை நீக்க உடம்பெல்லாம் தண்ணீர் ஊற்றுகிறோமா அல்லது நெற்றியில் மட்டும் துணி நனைத்துப் போடுகிறோமா? யோசியுங்கள். ஒரு அடி அடிக்க பொருள் உடைவதில்லை, அடிக்க அடிக்க எதுவும் உடைகிறது. யோசியுங்கள். நூறடி நடக்கவேண்டும். கடக்கவேண்டும். ஒரு ஒரு அடியாய் நடக்கையில் நூறடியை மெல்ல மெல்ல கடந்தேவிடுகிறோம். யோசியுங்கள்.
இப்போ நம்மை நாம் அறிய நாமென்ன செய்யலாமென்பது ஓரளவேனும் புரிந்திருக்கும். ஆம், மெல்ல மெல்ல நகர்ந்தால், உறுதியாகத் தொடர்ந்தால், உண்மையை அறிந்துவிடலாம். விபாசனா எனும் முறையில் புத்தர் மிக அழகாக இந்த தன்னைத் தான் அறிதலைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த வேதமான ரிக் வேதம் இதைக் குறிப்பிடுவதாய் புத்தர் சொல்கிறார். அதுதான் நம் உடனுள்ளே செல்லும் காற்று வழியே உள்புகுந்து வெளியிருக்கும் புறஉலகை கண்கொட்டாமல் பார்ப்பது.
விடிகாலையில் அல்லது எப்போதெல்லாம் மனதொத்துப் போகிறதோ, அமைதியாக அமர நேரமும் இடமும் கிடைக்கிறதோ அப்போதெல்லாம், கண்மூடி முதுகெலும்பை நேராக்கி அமர்ந்து, நாசி முனையிலோ அல்லது நெற்றியின் நடுவிலோ சிந்தனையைக் குவித்து, தனது எல்லா வெளிஉலகத் தொடர்பையும் இந்த உடலிலிருந்து, சிந்தனையிலிருந்து மெல்ல மெல்ல அறுத்துவிடுகையில், இயற்கையோடு இயற்கையாக நாம் முற்றும் ஒன்றிநிற்கையில்; நமை நாம் எத்தனை பெரிய சக்தி என்று உண்மையாய் அறியவும் உணரவும் முடிகிறது.
அதுபோல், உள்செல்லும் காற்று வழியே, அதாவது நாசி துவாரம் வழியே சென்று மனதின் மொத்த எண்ணங்களையும் நாசிமுனையில் குவித்து, எண்ணங்களின் கூட்டாக இருக்கும் மனத்தை மெல்ல அசைத்துப் பார்த்து, அசைவது உணரக் கிடைக்கையில் அதை நெற்றிக்கு மாற்றி பின் நெற்றியிலிருந்து கழுத்தில் கொண்டுவந்து பின் கழுத்திலிருந்து மார்பு நடுவே வைத்து பின் முதுகெலும்பின் அடியில்’ உச்சந்தலையிலென மாறி மாறி முகம், காது, கழுத்து, உடம்பு என உச்சி முதல் உள்ளங்கால் வரை வேறெங்கும் தொடர்பின்றி உள்ளேயே பார்த்து வருகையில், உலகின் மொத்தப் படைப்புமே மாற்றத்திற்கு உரியது என்பதையும், அசையாமல் அமர்ந்திருக்கும் நாம் எப்படி கணத்திற்கு கணம் மாறிவருகிறோம் என்பதையும் அறியமுடிகிறது.
அங்ஙனம் தொடர்ந்து செய்துவர, மாற்றத்திற்குட்பட்ட அனைத்தின் மீதான பற்றும் பேராசையும் மெல்ல மெல்ல குறைகிறது. நாளடைவில் எல்லாம் பொது எல்லாம் ஒன்றென்று மனதுள் அமைதி நிறைந்த எண்ணம் வருகிறது. பிறகும் எண்ணம் ஓரிடத்தில் குவியக் குவிய நமக்கான நாம் கொண்டுவந்துள்ள நம் சக்தி மெல்ல மெல்ல வெளிப்படத் துவங்குகிறது.
அங்ஙனம் நமது சக்தி வெளிப்பட்டு, எல்லாம் ஒன்றே, இயற்கையின் அணைத்துப் படைப்பும் மாற்றமெனும் ஒரு நியதிக்கே உட்பட்டது என்று புரிந்து போகையில், அந்தப் புரிதல் வரும் அமைதி முழு ஞானத்தை கொடுக்கிறது. அங்ஙனம் மீண்டும் மீண்டும் அடையும் அமைதியில் மனம் லயித்துப்போய்; மனமானது எல்லையில்லாததொரு தனையறிந்துவிட்ட ஆனந்தத்தில் ஆழ்ந்துவிடுகையில்; உயிர்களின் மீதான புரிதலும், உயிர்கள் அனைத்தும் சமம் எனும் உண்மையும், எல்லோரும் நலமாக வளமாக வாழ வாழ நாமும் நலம் பெறுவோம்; வளம் பெறுவோம் எனும் மொத்த இயற்கைச் சக்தியின் நெருக்கமும் மானசீகமாக விளங்க ஆரம்பிக்கும்.
இப்படி ஒன்றன்பின் ஒன்றாக எல்லாமே இயற்கைச் சக்தியின் இயல்புக் கூறுகளிலிருந்து நமக்குக் கிடைப்பது மட்டுமே என்று புரிந்துபோகையில் அதைப் புரிவதற்கான ஏற்பாடு மட்டுமே மதங்களின் வழி கற்ற சடங்குகளும் சாஸ்திர முறைகளும் என்பதும் புரியவரும். அது தெள்ளத் தெளிவாகிய பின்னர் மனது அங்கே போட்டியிடுவதை விட்டுவிட்டு அவசியமற்ற மூடநம்பிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ள தானே முற்படுவதை அறியவருவோம்.
ஆக இப்படி மெல்ல மெல்ல அவசியமற்ற எல்லா கட்டுகளும் விலகி, சமமாக இருத்தல், நடுநிலையோடு வாழ்தல் எனும் நிலை உள்புகுந்து, எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்று, நன்மை நடத்தல் எனில் அது எல்லோருக்கும் நடத்தல் வேண்டும். ஒன்று நன்மைக்கென புரிதலெனில் அது எல்லோருக்கும் புரிதல் வேண்டும். மகிழ்ச்சி என்பது அனைத்து உயிர்க்கும் பொதுவானது எனும்’ உலக உயிர்களின் பாகுபாடற்ற நன்மை குறித்து சிந்தித்து வாழும் நற்தன்மையானது தானே எல்லோருக்கும் ஏற்பட்டுவிடும்.
மனிதனுக்கு உண்மையில் அந்த நிலைதான் வேண்டும். தன் கையிலிருப்பது பிறருக்கும் உரியதென்பதை மனிதன் ஏற்க வேண்டும். எனக்கு நாளைக்கு வேண்டுமே என்று எடுத்து வைத்துக் கொள்வதைக் கூட போகட்டும் மனிதன் மெல்லத்தான் மாறுவான் என்று விட்டுவிடலாம். ஆனால் அடுத்த வருடத்திற்கு வேண்டும், அடுத்த தலைமுறைக்கு வேண்டும், அதுவரை எனக்கருகில் எவன் செத்தால் எனக்கென்ன எனும் சுயநலகுணமெல்லாம் புழு பூச்சிக்குக் கூட இருக்காது. இருக்கக் கூடாது. இருக்காது.
நம் பக்கத்தில் பட்டினியோடு ஓருயிர் அமர்ந்திருக்க நாம் முழு வயிறு நிறைய உண்போமானால்; நாம் மனித தன்மையை இழந்து நிற்கிறோம் என்றே அர்த்தம்.
எனவே, தனைப் பற்றி அக்கறை கொள்ளும் அதே அளவில் பிறர் பற்றிய வருத்தத்தையும் ஏந்தி நடத்தல் வேண்டும். பிறருக்கும் சேர்த்து சிந்தித்து வாழும் வாழ்க்கையை அனைவரும் பழக்கிக்கொண்டால் நமக்கான பசியை யாரோ தீர்த்துவைப்பதற்கு முயல்வதையும் நம்மால் காணமுடியும். அப்படியொரு சமதர்மம் இம்மண்ணில் மலரவேண்டும். அதற்கு நாம் நடுநிலைத் தன்மையை அடைய வேண்டும்.
நடுநிலைத் தன்மையை அடைய எண்ணத்தை ஒன்று கூட்டுங்கள். ஓரிடத்தில் கூட்டி, மெல்ல மெல்ல ஏற்றயிறக்கத்தைக் களைந்து யாதுமற்ற ஓருயிராய் அமைதியோடு உட்காரப் பழகுங்கள். அப்படி உட்கார உட்கார சுயநலம் தீர்ந்து, தன் மீதான, தனது என்றிருக்கும் அதாவது நான் என்றிருக்கும், எனது கடவுள்’ எனது வீடு’ எனது நாடு’ எனது பொருள் எனும் தனதான அத்தனைக் கவலையும் நீங்கி, எல்லோருக்குமாய் வாழும் நிம்மதி முழுதாய்…
இந்த இதழை மேலும்