Dr.P.S. ராஜன்
சேர்மன், லேப்ராஸ்கோபிக் எண்டோஸ்கோபிக்
சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ,
எல்சி கிளினிக்ஸ் , கோவை
- உணவுக்குழாய் அடைப்புக்கு அறுவைசிகிச்சை இல்லாமல் வாய்வழி எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை அளிக்கும் தென்னிந்தியாவின் முதல் நிபுணர் Dr. P.S. ராஜன் அவர்கள் என பாராட்டுதல் பெற்று, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களிடம் விருது பெற்ற சிறப்புக்குரியவர்.
- இயற்கைத் துவாரங்கள் மூலம் எண்டோஸ்கோபி சிகிச்சையால் தழும்பில்லாமல் குடல்வால் நீக்கம் செய்த உலகின் முதல் மருத்துவர், தழும்பின்றி பித்தப்பை அகற்றிய ஆசியாவின் முதல் மருத்துவர் என்ற பெருமைகளுக்குரியவர்.
- 7 மாதக் குழந்தைக்கு எண்டோஸ்கோபி மூலம் பித்தநாளக் கற்கள் அகற்றுவதிலிருந்து, கேன்சர்களுக்கு ஸ்டென்ட் பொருத்துவது வரை சிறந்த சிகிச்சை தந்துவரும் நம்பிக்கைக்குரிய மருத்துவர் என்ற மக்களின் பாராட்டுதலைப் பெற்றிருப்பவர்.
- அதிநவீன லேப்ராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி துறையில் 20 வருடங்கள் அனுபவமிக்கவர்.
- அது மட்டுமல்லாமல் இந்த இரு துறைகளிலும் அறுவைசிகிச்சை செய்யக்கூடிய மருந்துவர் இந்திய அளவில் இருவர் மட்டுமே உள்ளார்கள் என்கிறசிறப்பு மருத்துவ உலகம் இவருக்கு தந்திருக்கிறது.
- அமெரிக்க மருத்துவ உயர் பட்டங்கள் (FACS) பெற்றுள்ளவர்.
- பாரதத்தின் பல்வேறு பகுதிகளின் மருத்துவர்களுக்கு லேப்ராஸ்கோபி பயிற்சி தந்து வருபவர்.
- ஒரே நாளில் அறுவைசிகிச்சை மருத்துவத்தை முடித்துக்கொண்டு அன்றாடப் பணிகளை திறம்பட செய்யும் அளவு பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் அதீத ஆற்றல் பெற்றமருத்துவர்
இப்படி பல்வேறு சிறப்புகளுக்குரிய மருத்துவர் Dr.P.S. ராஜன் அவர்களை நாம் சந்தித்ததிலிருந்து இனி…
பிறந்தது… படித்தது…
என் பிறந்த ஊர் திண்டுக்கல். நெசவுத் தொழிலை நேசித்து செய்யும் குடும்பத்தில் மகனாக பிறந்தேன். என் உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். இரண்டு அண்ணா மற்றும் மூன்று மூத்த சகோதரிகள். நான் இளைய மகன். என் பள்ளிக்காலம் முழுவதும் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதியிலேயே அமைந்தது.
சிறுவயதில் படிப்பின் மீது அளவறியா பற்றிருந்தது. படிப்பின் மூலம் ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் மேலோங்கி இருந்தது.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது என் தந்தையின் மறைவு குடும்பத்தை மிகவும் பாதித்தது. அப்போது எனது இரண்டு அண்ணாக்களும் (திரு. ராம மூர்த்தி, திரு. சிவராமன்) குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு எங்களை வழிநடத்தினார்கள். நான் படித்த காலத்தில் இதைத்தான் படிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளைக் கூற, வழிகாட்ட யாருமில்லை. அதனால் எந்தப் படிப்பைப் படித்தாலும் என் எதிர்காலத்திற்கும் என் குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் ஓர் உந்துதலாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப என்னைத் தயார்படுத்திக் கொண்டு படித்தேன். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றியும் பெற்றேன்.
மதிப்பெண் கூடுதலாக எடுத்ததன் மூலம் மருத்துவச்சீட்டு எனக்குக் கிடைத்தது. அப்பொழுது என்னுடைய அண்ணன் திரு. ராம மூர்த்தி அவர்கள் கோவையில் தொழில் செய்து வந்தார். அதனால் 1984ல் மருத்துவத்துறையில் மருத்துவக்கல்வியை கோவையில் தேர்ந்தெடுத்தேன்.
நுழைவுத் தேர்வை எதிர்கொண்ட விதம் குறித்து?
நான் படித்த காலத்தில் (1991) எந்தத்துறையில் சேர வேண்டும் என்றாலும் நுழைவுத்தேர்வு மிகவும் அவசியமாக இருந்தது. மருத்துவத்திலும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக இருந்தது.
அப்பொழுது தமிழ்நாடு நுழைவுத்தேர்வு, இந்திய அளவில் நுழைவுத்தேர்வு இப்படி பலதரப்பட்ட நுழைவுத்தேர்வு இருந்தது. இதில் வென்றால் தான் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்று இருந்ததால் ஒருவிதமான பயம் இருந்தது. ஆனால் அந்தப் பயம் தான் என்னை வெற்றியும் பெறச் செய்தது. நுழைவுத்தேர்வில் நல்ல ரேங்க் கிடைத்தது. அறுவைசிகிச்சை பிரிவைத் தேர்ந்தெடுத்தேன்.
ஆரம்பத்தில் எம்.பி.பி.எஸ். 5 வருட கல்விக்குப் பின் படிக்கின்ற காலத்தில் ஒரு வருடம் CRRI பயிற்சி கொடுப்பார்கள். அதற்குப் பின்பு, மருத்துவப் பிரிவிலுள்ள துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்தத் துறையில் எது நம்மால் வெற்றிகரமாக செய்ய முடியும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்வதால் நிச்சயம் தோல்வி கிட்டாது என்பதை நன்றாக உணர்ந்து அன்று அறுவைசிகிச்சைப் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன்.
எப்போது எல்சி மருத்துவமனை உருவானது? வித்தியாசமாய் பெயர் சூட்டக் காரணம்?
2013 டிசம்பர் 12 அன்று ஆரம்பிக்கப்பட்டது. எண்டோஸ்கோபி மற்றும் லேப்ராஸ்கோபி துறையில் அனுபவம் இருந்ததால் இந்த இரு துறைகளையும் எதிர்காலத்தில் வளர்க்கும் நோக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை வைத்தே பெயர் சூட்ட வேண்டுமென்று முடிவு செய்து ELCE என்று பெயர் வைத்தோம். இதில்,
E என்பது எண்டோஸ்கோபி
L என்பது லேப்ராஸ்கோபி
C என்பது சென்டர்
E என்பது எக்செலன்ஸ்
குறிப்பாக, இந்தக் குடல் அறுவைசிகிச்சைப் பிரிவைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம்?
1992ம் ஆண்டு எம்.எஸ். படிக்க சேர்ந்த பொழுது அறுவை சிகிச்சை சார்ந்த எத்தகைய துறையில் பணியாற்ற வேண்டும் என்று என்னுள் எதுவும் தோன்றவில்லை. நான் பயின்ற அதே துறையில் தற்போதைய ஜெம் மருத்துவமனையின் சேர்மன் Dr. பழனிவேல் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1995ம் ஆண்டு எம்.எஸ். முடித்துவிட்டேன். அப்பொழுது மருத்துவத்தில் இத்துறை சார்ந்து அவர் சொன்ன விதம், எனக்கு மிகுந்த ஆர்வத்தையும், ஆனந்தத்தையும் கொடுத்தது. அந்நாளை என் வாழ்வில் ஒரு மைல்கல் என்றே சொல்வேன்.
அவரது வழிகாட்டலின் படி இப்பிரிவில் பணியைத் தொடர்ந்தேன். அவருடனேயே வேலையும் செய்தேன். அந்தக் காலம் என் வாழ்க்கைக்கு பெரிதும் துணைபுரிந்த காலம். பகுதி நேரமாக வேலை செய்த நான் பின்பு முழுநேரமும் அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றேன். இப்படி அவருடன் இணைந்து பணியாற்றிப் பெற்ற அந்த இருபது வருட அனுபவமே இத்துறையில் நான் சாதிக்க பெரிதும் துணைபுரிந்தது.
ஓபன் சர்ஜரி முறை மாறி லேப்ராஸ்கோப் அறுவைசிகிச்சை முறை என்கிற மாற்றம் எப்போது நிகழ்ந்தது?
நான் எம்.எஸ். படிக்கின்ற காலத்திற்கு முன்பே 1991ம் ஆண்டு லேப்ராஸ்கோப் முறை இந்தியாவிற்குள் வந்தது. அதற்கு முன்னர் எல்லாம் ஓபன் சர்ஜரி தான். நான் முதலில் ஓபன் சர்ஜரி முறையில் தான் அறுவைசிகிச்சை செய்தேன். அதன்பிறகு தொழில்நுட்ப மாற்றத்தின் காரணமாக மருத்துவ உலகில் அதீத மாற்றம் ஏற்பட்டது. மாற்றங்களுக்கேற்ப என்னை நான் அத்துறையில் வளர்த்துக் கொண்டேன்.
லேப்ராஸ்கோப் என்பது வயிற்றில் சில துளைகள் மூலம் அறுவைசிகிச்சை செய்வது. எண்டோஸ்கோப் என்பது வாய்வழியாக கேமரா உள்ள ஒரு டியூப்பை செலுத்தி அதன் மூலம் உணவுக்குழாய் மற்றும் இரைப்பையில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிவது.
ஆரம்ப காலத்தில் யூகங்கள் மூலம் மருத்துவம் செய்வது என்ற நிலை மாறி இப்பொழுது வயிற்றில் ஏற்படும் சிறுசிறு கட்டிகளையும் கண்டுபிடித்து அதனை குணப்படுத்தும் அற்புத வளர்ச்சியை மருத்துவம் எட்டியிருக்கிறது. அந்த வகையில் லேப்ராஸ்கோப், எண்டோஸ்கோப், ERCP போன்ற அனைத்து அறுவைசிகிச்சைகளையும் எங்கள் ELCE கிளினிக்கில் திறம்பட ஒருங்கே கொடுத்து வருகிறோம்.
மருத்துவம் என்றாலே ‘சேவை’ எனச் சொல்வார்கள். அச்சேவையில் தங்களின் பங்களிப்பு குறித்து?
நான் இத்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்கிறேன். இந்த பயணத்தில் நிறைய நோயாளிகளைச் சந்தித்திருக்கிறேன். சாதாரண வயிற்று வலி என்று என்னிடம் வருவார்கள். அவர்களைச் சோதித்துப் பார்த்தால் வயிற்றில் அகற்றமுடியாத அளவிற்கு பெரிய கட்டிகள் இருக்கும். இது என்னை சிந்திக்க வைத்தது. அப்போது நான் ஜப்பான், கொரியா நாடுகளுக்கு பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. நான் அங்கு ஆரம்ப நிலையில் உள்ள இரைப்பை புற்றுநோய்க்கு ‘எண்டோஸ்கோபி’ மூலமாகவே சிகிச்சை அளித்து முற்றிலுமாக குணப்படுத்துவதைக் கண்ணுற்றேன். அங்குள்ள மருத்துவர்களைப் பார்த்து, “உங்கள் நாட்டில் மட்டும் எப்படி இந்த நோயை இத்தகைய ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடிந்தது” என்றுகேட்டேன்.
அதற்கு அவர்கள் “எங்கள் நாட்டில் ஒருவிதிமுறை இருக்கிறது. 45 வயதிற்குமேற்பட்ட அனைவரும் வாய்வழி எண்டோஸ்கோபி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலை இருக்கிறது” என்றார்கள். ஆனால் நமது நாட்டில் நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் தான் மருத்துவரை நாடி வருகிறார்கள். இந்நிலை மாறினால் தான் பெரும்பாலான உணவுப்பாதை கேன்சர் நோய்களின் பிடியில் இருந்து விலகியிருக்க முடியும் என்பதை உணர்ந்தேன். இந்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணி கடந்த ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியர் ‘அர்ச்சனா பட்நாயக்’ அவர்களின் தலைமையில் எண்டோஸ்கோப் பரிசோதனை முறையை இலவசமாக அளிக்க ஆரம்பித்தோம். பலர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தொடர்ந்து திருப்பூர், அன்னூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இதுவரை 16 பரிசோதனை முகாம்களை நடத்தி அதில் 3500க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக எண்டோஸ்கோபி பரிசோதனை செய்திருக்கிறோம். இந்த பரிசோதனையில் எங்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப நிலையில் புற்றுநோய் கட்டிகள் இருப்பதை அறிந்து அவர்களுக்கு சிகிச்சையும் கொடுத்து வருகிறோம்.
மக்களிடையே எண்டோஸ்கோபி பரிசோதனை முறை குறித்த விழிப்புணர்வு எந்த அளவிற்கு இருக்கிறது?
இக்கால கட்டத்தில் மக்கள் பலநிலைகளில் விழிப்புணர்வுடன் தான் இருக்கிறார்கள். ஆனால் போதுமானதாக இல்லை என நான் நினைக்கிறேன். காரணம் எல்லா மருத்துவமனையிலும் (Master Checkup) அடிப்படையாக சில முறையை மட்டும் பின்பற்றுகிறார்கள். ரத்தம் குறித்த பல பரிசோதனைகள், சர்க்கரையின் அளவு, BP, ECG, ஸ்கேன் போன்றவை மட்டுமே செய்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை எண்டோஸ்கோபி பரிசோதனையையும் ஒவ்வொருவரும் நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் எதிர்காலத்தில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து நிச்சயம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இன்றைய நாகரிக வாழ்வில் உணவு கலாச்சாரம் பலவிதமாக மாறியிருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி?
ஒவ்வொருவரும் உயிர்வாழ வேண்டும் என்றால் உணவின் பயனை நிச்சயம் அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் உண்ணும் உணவு ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்கிறதா என்று பார்க்க தவறிவிடுகிறார்கள். இந்நிலை மாறவேண்டும்.
காலம் போகின்ற போக்கில் உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை பலர் தவறுகிறார்கள். அது மட்டுமல்லாமல் வேலைப்பளுவும் ஒரு காரணம். உதாரணமாக, ஒருவர் எவ்வித கவலையுமின்றி வேலை செய்கிறார் என்றால் ஒரு மணிநேரத்திற்கு அவர் வயிற்றுக்குள் அமில அளவைப் போல மன அழுத்தத்தோடும், ஆர்வமில்லாமலும் வேலை செய்தால் அமில 4 அளவு மடங்கு அதிகம் சுரந்து அவர் வயிற்றை நிரப்பும். இதனால் அமிலத் தன்மையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றெரிச்சல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை ஏற்பட்டு அவருக்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
இரவு வேலை செய்பவர்களுக்கு அதிக அளவில் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறதே… அதற்குக் காரணம்?
இரவு நேரமாக இருந்தாலும் சரி, பகல் நேரமாக இருந்தாலும் சரி ஒவ்வொரு மூன்று மணிநேரத்திற்கும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அது உணவாகவோ அல்லது பழங்களாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
காபி அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் உணவு உண்ட பின் எடுத்துக் கொள்வது நல்லது. காலையில் எழும் நேரத்திலிருந்து 2 மணி முதல் 2.30 மணிக்குள் காலை உணவை உண்ணுதல் வேண்டும்.
இப்படி சரியான நேரத்தில் முறையாக உணவு உட்கொண்டால் வயிற்றில் எவ்வித பிரச்சனைகளும் வராது. இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள் இந்த உணவு முறையைச் சரியாக உட்கொள்வதில்லை. இதனால் தான் அவர்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
இத்துறையில் வெளிநாடுகளைப் போல் இங்கும் சிகிச்சை முறைகள் உள்ளதா?
ஆரம்ப காலத்தில் நிறைய வேறுபாடுகள் இருந்தது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அங்கு என்ன முறைகளைப் பின்பற்றுகிறார்களோ, அதே வழிமுறைகளைத் தான் இங்கும் பின்பற்றுகிறோம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இயந்திரக் கருவிகள் வந்துவிட்டது.
தொடக்க காலத்தில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமென்றால் வயிற்றைக் கத்தியால் கிழித்துத்தான் செய்தனர். ஆனால் இப்பொழுது எக்யூப்மென்ட் அனைத்தும் நம்மிடமே இருப்பதால் வெளிநாட்டிற்கு இணையான மருத்துவ சேவையை இங்கும் செய்ய முடிகின்றது.
ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். மனித உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியே மருத்துவர்கள் இருப்பதால் எல்லா பிரச்சனைக்கும் மருத்துவம் இங்கேயே கொடுக்கப்படுகிறது.
மருத்துவர்களின் மீதான மக்களின் நன்மதிப்பு குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறதே… அதைப் பற்றிய தங்களது கருத்து?
மருத்துவருக்கும் மக்களுக்கும் இடையேயான சரியான புரிதல் இன்மையே இதற்குக் காரணம். உதாரணமாக, மலம் கருப்பாக கழிந்தால் 75% பிரச்சனை உணவுக்குழாய் அல்லது இரைப்பையில் தான் இருக்கும். மீதி 25% சிறுகுடல் அல்லது பெருங்குடலில் இருக்கலாம். இதனால் வாய்வழி எண்டோஸ்கோபி முதலில் செய்யப்படும். அதில் பிரச்சனை இல்லையென்றால் CT ஸ்கேன், பெருங்குடல் எண்டோஸ்கோபி செய்யப்படும். இதை ஏன் செய்கிறோம் என்பதை தெளிவாக புரிய வைத்தாலே மருத்துவரையும், மருத்துமனையையும் மக்கள் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். எனவே சிகிச்சைக்காக வருபவர்களிடம் முதலில் அவருக்கு இருக்கும் பிரச்சனையை நேரடியாக அவரிடம் தெரிவித்து புரியவைக்க வேண்டும். இது ஒவ்வொரு மருத்துவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
நகர்ப்புறங்களை நோக்கியே என்றில்லாமல் கிராமப்புறமக்களை நோக்கிய பயணத்திட்டம் தங்களிடம் ஏதாவது…
இது எங்களின் கனவு என்றே சொல்லலாம். நகர்ப்புறங்களில் மருத்துவக் கருவிகளை இயக்குவது எளிது. ஆனால் கிராமப்புறங்களில் சற்று கடினமாகத்தான் இருக்கும். அதற்காக மொபைல் வேன் முறையைப் பின்பற்றலாம் என்றால் அதற்கு கூடுதல் செலவு பிடிக்கும்.
விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளோம். அப்போது கிராமப்புறங்களுக்கு எங்கள் மருத்துவர்கள் நேரடியாக சென்று இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறார்கள்.
இன்று மருத்துவமனைகளின் வளர்ச்சி என்பது அதிகளவில் இருக்கிறது. தங்கள் மருத்துவமனையின் தனித்துவமாக நீங்கள் சொல்ல விரும்புவது?
மருத்துவத்தில் பல்வேறு துறைகள் உண்டு. எல்லோரும் செய்கின்ற ஒரே முறையைப் பின்பற்றுதல் கூடாது என்று எண்ணி மக்களுக்கு முறையான விழிப்புணர்வினை ஏற்படுத்த ஹெர்னியா சார்ந்த பிரிவினை தேர்ந்தெடுத்து அதனை சிறப்பு செய்து வருகிறோம்.
ஹெர்னியா சார்ந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் தான். அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பின்னர் சில காலம் கழித்து சிகிச்சை நடந்த இடத்தில் ஹெர்னியா சார்ந்த பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்.
ஹெர்னியா அறுவை சிகிச்சை என்றாலே வயிற்றைக் கிழித்துத்தான் செய்ய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் லேப்ராஸ்கோப் மூலம் சில துளைகளால் உலகத்தர மருத்துவ சிகிச்சையை ஒரே நாளில் அளித்து வீடு திரும்ப இயலும் என்ற விழிப்புணர்வை அதிகளவு நாங்கள் கொடுத்து வருகிறோம்.
அதுமட்டுமல்லாமல் ‘ஹெர்னியா கிளினிக்ஸ்’ என்று ஒரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் பயிற்சியும் கொடுத்து வருகிறோம். மேலும் “ஹெர்னியா பவுண்டேசன்”மூலம் குறைந்த செலவில் சிகிச்சையும் கொடுத்து வருகிறோம்.
அடுத்து உடல் பருமன் தொடர்பாக பிசியோதெரபி, உடல் பருமன் தொடர்பான ஆலோசனைகளை வழங்க சிறப்பு பெற்ற மருத்துவர்கள் குழுவை இங்கு உருவாக்கி இருக்கிறோம்.
பெற்ற பட்டங்கள், பாராட்டுக்கள் குறித்து?
நான் மருத்துவராகி முதல் நாள் எப்படி மருத்துவமனைக்குள் நுழைந்தேனோ அதுபோலத்தான் ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்குள் நுழைகிறேன்.
பட்டங்களையும், பாராட்டுக்களையும் தேடி நான் மருத்துவம் பார்ப்பதில்லை. என்னை நாடி வருபவர்களின் பிரச்சனையை முற்றிலும் குணமாக்கிட தன்னால் முடிந்த ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் செயல்படுகிறேன். பட்டம், பாராட்டுக்கள் எல்லாம் நம்மிடம் உள்ள தனித்திறமையால் தானாகவே வந்து சேர்ந்துவிடும். எதையும் எதிர்பார்த்து மருத்துவ சேவை செய்வதில்லை.
நோயின் பாதிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே போகிறதே?
அதற்காக மருத்துவமனை பெருகிக்கொண்டே போனாலும் அந்த அளவு நோயின் தாக்கமும் அதே அளவில் சென்று கொண்டுதான் இருக்கின்றன. மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு என்று சென்றடைகிறதோ அப்போது தான் இப்பிரச்சனைக்கு முற்றிலும் தீர்வு காண முடியும்.
இப்பிறப்பின் பயனை அடைந்துவிட்டதாக எப்போதாவது நினைக்கிறீர்களா?
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் சாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு குடும்பம், படிப்பு, செய்யும் வேலை ஆகியவற்றை முறையாக கையாள வேண்டும் என்பது தான் முக்கியம்.
விரும்பி செய்கின்ற வேலைகள் என்றும் சோர்வைத் தருவதில்லை. நான் பார்க்கும் இந்த மருத்துவத் தொழில் எனக்கு பெரிதும் உற்சாகத்தையும், உந்துதலையும் கொடுக்கிறது.
எதிர்காலத் திட்டம் குறித்து?
எங்கள் கிளினிக் நான்கு மருத்துவத்துறை சார்ந்து இயங்கி வருகிறது. ஹெர்னியா, உடல் பருமன், எண்டோஸ்கோப் மற்றும் மகளிர் நலம். இத்துறைகளில் தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் அறுவை சிகிச்சைத் துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் உருவாகிக் கொண்டே வர வேண்டும் என விருப்பம் கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் தரம், உழைப்பு, முயற்சி இவற்றை மேன்மேலும் அதிகரித்துக் கொண்டே சென்றால் தான் சிறந்த சேவையை வழங்க முடியும் என்பதில் மாற்ற முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறேன்.
கோவைப் பகுதியைப் போலவே இன்னும் பிற இடங்களுக்கு இம்முறையைக் கொண்டு செல்ல வேண்டும். அதன் முதல்கட்டமாக திண்டுக்கல் பகுதியில் ஹெர்னியா கிளினிக்ஸ் ஒன்றைத் தொடங்கி இருக்கிறோம்.
எல்சி கிளினிக்கின் வளர்ச்சியில் என்னுடன் பணியாற்றும் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் கந்தசாமி மற்றும் 20 பேர் கொண்ட மருத்துவக் குழு இவர்களின் அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும் நிரம்ப இருக்கிறது என்பதை பதிவு செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
வளர்ந்து வரும் மருத்துவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
முதலில் மருத்துவத்தின் மகத்துவத்தை ஒவ்வொருவரும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். தன்னைத் தேடி வரும் மக்களிடையே உண்மைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையில் ஒரு நோயாளி வருகிறாரோ அதை அவரிடம் முழுவதுமாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். அதற்குப் பின்பு சிகிச்சை என்பது அமைய வேண்டும்.
உங்களின் மருத்துவ சேவையில் ‘இது தனி’ என்று சொல்வது…
நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவ இடமும் கிடைத்து படிக்கச் சிரமப்படும் மாணவர் ஒருவரை செய்தித்தாளில் பார்த்தவுடன் அவருக்கு உதவிட வேண்டும் என்று எண்ணம் கொண்டு அவரைப் படிக்க வைத்து வருகிறோம். இனி ஒவ்வொரு ஆண்டும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவசமாக மருத்துவம் படிக்க வசதிகள் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
தன்னம்பிக்கை குறித்து?
தன்னம்பிக்கை என்ற ஒரு சொல் ஒவ்வொருவரையும் உயர்த்தும் மந்திரச்சொல். நம் வளர்ச்சியின் உயரம் நம் தன்னம்பிக்கையின் உயரத்தைப் பொறுத்தே அமையும். விதையின் தன்னம்பிக்கையே விருட்சம் ஆகும்.
உந்துதலாக இருந்தாலும், உயர்வாக இருந்தாலும் அது நம்முடையதாகவே இருக்க வேண்டும்.
இளைய சமுதாயத்திற்கு தாங்கள் கூற விரும்புவது?
வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும். இது தவறல்ல. வெற்றி தான் ஒவ்வொருவரின் பிறவிப் பயன். இதனை அடைய வேண்டும் என்றால் சரியான இலக்கு, சரியான பாதை, கடின உழைப்பு, காலம் தவறாமை, நேர்மை, ஒழுக்கம், பணிவு ஆகியவற்றுடன் அதற்கான சரியான காலம் வரும் வரை பொறுமையும் அவசியம்.
இந்த இதழை மேலும்