– 2015 – March | தன்னம்பிக்கை

Home » 2015 » March (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பிராணயாமம்

    யோக முறையில் மூச்சு பயிற்சியையே பிராணயாமம் என்று குறிப்பிடுவர். பிராணயாமத்தில் முக்கியமான ஒன்று யாதெனில் நாம் நம் மூச்சை கவனிக்க வேண்டும். அப்படி மூச்சை விழிப்புணர்வோடு கவனிக்கும் போதுதான் நாம் இதுவரை சுவாசம் என்று ஏதோ செய்து வந்துள்ளோம் என்ற உண்மை புரியும். நாம் உள்ளே கவனிக்க ஆரம்பிக்கும்போது நம் உயிர் மூச்சானது ஆழமாகிறது. ஆழமான மூச்சானது நம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிராண சக்தியை (O2) அளித்து அங்குத் தேங்கியிருக்கும் கரியமில வாய்வை (CO2) வெளியேற்றுகிறது. இதனால் நம் உடல் புத்துணர்வாகிறது. மனம் தெளிவாகிறது. நாம் நம் மூச்சை விழிப்புணர்வாக கவனித்தாலே நம் எண்ணங்கள் நேர்படும்.

    பிராணயாமத்தை நாம் பல விதங்களில் பயிற்சி செய்யலாம். நான் இங்கு பிராணயாம பயிற்சியை உங்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியாது. அதை நீங்கள் தகுந்த யோக அமைப்பில் குருவின் வழிகாட்டுதலில் பயின்று செய்வதால் மட்டுமே முழுமையான பலனைப் பெற முடியும். ஆனால், அதுபற்றிய விழிப்புணர்வை நான் உங்களுக்கு அளிக்க முடியும். உதாரணமாக, நாம் சௌகரியமாக அமர்ந்துகொண்டு நம் கைகளை மேல் முகமாக நம் தொடையின் மீது வைத்துக்கொண்டு மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். அதுவே நம் கைகளை கீழ்முகமாக பார்த்து நம் தொடை மீது வைத்து மூச்சை உள்ளிழுத்து வெளியிடும்போது அது இன்னொரு விதமாக இருக்கும். ஆக, சுவாசம் செய்யும்போது நம் கைகள் எவ்விதம் இருக்கிறது என்பதைப் பொறுத்து நம் சுவாசத்தின் ஆழமும் ஊடுறுவும் இடமும் மாறுபடும். அதே போல் நம் கை விரல்களை எந்த முத்திரையில் வைத்து சுவாச பயிற்சி செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் நம் உடல் பகுதிகளுக்கு பிராண சக்தி பாய்வது மாறுபடும்.

    பிராணயாமம் பலவிதங்களில் பல்வேறு யோக அமைப்புகள் கற்றுக்கொடுக்கின்றன. அதில் குறிப்பிட்ட ஒன்றுதான் சிறந்தது என்று நாம் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலனை அளிக்கின்றன. இன்னும் சில யோக அமைப்பில் மூச்சு பயிற்சியோடு கூடிய யோகாசனங்களை பயிற்று விக்கின்றனர். அப்படிச் செய்வதால் உடற்பயிற்சியுடனான பிராணயாமமும் ஆயிற்று. பிராணயாமத்தால் நம் மனம் அல்லது எண்ணம் நேர்படும் அல்லது நிதானப்படும். நாம் யாதொன்றையும் ஆழமாக யோசித்து செயலாற்ற பிராணயாமம் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

    இதுவரை யாதொரு மூச்சு பயிற்சியும் செய்யாதவர்கள் நாடி சுத்தி பிராணயாமத்தை செய்யலாம். இது நம் மூச்சில் விழிப்புணர்வை அதிகப்படுத்தி, இரு நாசி சுவாசங்களையும் சமநிலைக்கு கொண்டுவரும். இந்த பிராணயாமத்தால் நாம் யாதொன்றையும் சமநோக்கு பார்வையில் கையாளும் தன்மைக்கு மாறுகிறோம். இந்த மூச்சு பயிற்சியால் நம் உடலின் ஆண் பெண் சமநிலை நிலைபெறும். நாம் பொதுவாக நம் மூச்சை கவனித்தோமேயானால், நம் மூச்சு 45 நிமிடங்களுக்கு ஒரு முறைதான் வலதும் இடதுமாக மாறுகிறது. ஆனால் இந்த நாடி சுத்தி பிராணயாமம் செய்வதால் நம் மூச்சு எப்பொழுதும் சமமாக நடைபெற்று நாம் நம் எண்ணங்களில் சமநிலை பெறுகிறோம்.

    அடுத்து உடல் சோம்பலில் இருப்பவர்கள் உஜ்ஜை மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் உடல் சுறுசுறுப்பை பெற முடியும். இந்த உஜ்ஜை மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் நம் சுவாசமானது உடல் முழுமைக்கும் நிரம்பி நம்முள் உத்வேகத்தையும் அளக்கும். அப்புறம், நம் மூளை புத்துணர்வு பெற நாம் பஸ்திரிகா பிராணயாமம் செய்யலாம். இது நம் மூலாதாரம் முதல் மூளை வரை பிராண சக்தியை அள்ளக் கொடுக்கும். அடுத்து நம் மனதின் குப்பைகளை அள்ள வௌயே கொட்ட சுதர்ஷன கிரியா என்ற மூச்சு பயிற்சியை செய்யலாம். முடிவாக நாம் எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறோமோ அப்போதெல்லாம் நாம் நம் மூச்சை கவனிக்க ஆரம்பித்தால் அதுவும் கூட குட்டி குட்டி பிராணயாமம் தான். நம் பேச்சைக் குறைத்து மூச்சை கவனித்தால் நமக்கு வாழ்க்கையில் என்றும் உயர்வுதான்.

    இந்த இதழை மேலும்

    கண்ணா மூச்சு

    தென் ஆப்பிரிக்காவில் கடலோர அலைகளில் தவழ்ந்து விளையாடும் சர்ஃபிங் செய்யும் விளையாட்டு குறித்து. கதிரேசன் செய்திதாளில் தகவல் ஒன்றை படித்தான் தென் ஆப்பிரிக்கா அருகில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடல், ஏராளமான ‘பெரிய வெள்ளை’ என்றழைக்கப்படும், வெள்ளைச் சுறாக்களைக் கொண்டது. சுறாமீன்கள் இருக்கின்றகடல் ஓரத்தில் எழும் அலைகளில் சறுக்கி, அலைச்சறுக்கு விளையாடுவது; விதியோடு கண்ணாமூச்சி விளையாடுவது; இரண்டும் ஒன்றுதான் என்று கதிரேசன் நினைத்தான். வாழ்க்கை வழக்கம்போல் சென்று கொண்டிருக்க, விளையாட்டிற்காக? இப்படி ஏன் உயிரை பணயம் வைக்க வேண்டும்? என்று ஆச்சரியப்பட்டான் கதிரேசன்.

    மூச்சு நின்று போகுமளவு அபாயம் இருந்த போதிலும், அதிலும் நிறைய பேர் ஈடுபாடு காட்டுகின்றார்கள். பாதுகாப்பிற்காக, நிறைய அலுவலர்கள், வைத்த கண் வாங்காமல் கடலை பைனாகுலர் மூலமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் “சார்க் ஸ்பாட்டர்ஸ்” எனப்படும் சுறாமீனைக் கண்டுபிடிக்கின்றவர்கள். ஒரு வருடத்தில் ஆறுவிளையாட்டுவீரர்களேனும் சராசரியாக, சுறாவால் விபத்துக்கு உள்ளாகின்றனர். அதனால் சுற்றுலாவிற்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கின்றது. பாதுகாப்பு நடவடிக்கையாக, “சார்க் ஸ்பாட்டர்ஸ்” எதாவதொருசுறாவைப் பார்த்துவிட்டால் சைரன் ஒலிக்கச் செய்து, வெள்ளைக் கொடியையும் ஏற்றிவிடுகின்றனர். அதனையடுத்த ஓரிருநிமிடங்களில் கடற்கரையோர நீரிலிருந்து அனைவருமே கரையேறிவிடுகின்றனர். தற்பொழுது, விபத்தைக் குறைப்பதற்கான மின்சார வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குறை வழுத்த மின்சாரத்தால் சுறாவிற்கோ, மனிதர்களுக்கோபெரிய ஆபத்து ஏதும் இல்லை. சுறாக்களின் மூக்குநுனி மின்சாரத்திற்கு ஒவ்வாமை கொண்டது. எனவே அவை விலகிச் சென்று விடுகின்றன. மனிதர்கள் தொட்டால் லேசான சுறுசுறு, எனும் உணர்வே வருகின்றது என்று செய்தித்தாள் சொல்லியது.

    உயிர் மூச்சு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சக மனிதரின் கண் பார்வையை நம்பி, எல்லாவற்றையும், பணயம் வைத்து, கண்ணா மூச்சு, ஆடிக்கொண்டிருக்கின்றார்களே, என்று கதிரேசன் ஆச்சரியப்பட்டான். விளைவு இக்கட்டுரைத் தலைப்பு.

    கண்கள் உலகின் அபாயங்களை அடுக்கடுக்காக தேடிக்கண்டுபிடிக்க பழக்கப் படுத்தப்படுகின்றன. சுறாக்கள் எத்தகைய சூழல் வரும், எத்தகைய சுழலுக்கு இழுக்கும்? என்று யாராலும் கணிக்க முடியாது. அந்தச் செய்திக்கட்டுரையிலேயே ஸ்பீல்பெரிக்குடைய என்னும் திரைப்படத்து த்ரில் குறித்து பேசியிருந்தார்கள். வாழ்க்கை அப்படிப்பட்டதுதான். சுறாக்கள் வருவதைப்பார்த்தால் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் மகிழ்ச்சியாக விளையாட முடியாது. கலந்துகொள்ள பெயரே கொடுக்காமல் அச்சப்பட்டால், அவ்வளவுதான் வாழ்க்கை; அலைகளின் மீது சறுக்கி விளையாடும் வாய்ப்பே இல்லாமல் போகின்றது. சுறா வருமா? வராதா? என்கின்றகவலையை விலக்கி வைத்தால் தான் விளையாட்டே ஆரம்பிக்கும்.

    ‘மோபி டிக்’ என்கின்ற’ஹெர்மன் மெல்வில்’ புத்தகமும் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை குறித்தே பேசியிருந்தது. அதில் ஒரு திமிங்கலம் எந்த நேரத்திலும் தாக்கக்கூடும் என்று கண்ணா மூச்சு காட்டி கடைசியில் ஒருவரைத் தவிர எல்லோரையும் அது அழித்துவிடுவதாக தத்துவம் பேசியிருப்பார்.

    கதிரேசன் அலுவலகத்தில் நிறையப்பேர் பணிபுரிகின்றனர். வங்கியில் சிலபல கணக்குக்களை வாடிக்கையாளர்களின் இ-மெயில்களைப் பகிர்ந்து பாஸ்வேர்டு வைத்துப் பார்த்து பதில் சொல்வது வழக்கம். முன்பு ஒருநாள், சக அலுவலர், சுப்பிரமணியம் தனது மகளின் திருமணத்திற்காக கதிரேசனிடம் உதவி கேட்க, அவர், ‘உடனடியாக உதவிசெய்ய இயலவில்லை’ என்று கூறி நேர அவகாசம் கேட்டிருந்தார். சுப்பு பலமுறை கேட்டும் பார்த்துவிட்டார். கதிரேசன் பிடி கொடுக்கவில்லை. உதவி செய்ய முடியாது என்றில்லை, ஆனாலும் கதிரேசனின் மற்றபணிகளுக்கிடையே, சுப்புவின் மகள் திருமண விசயமாக சிந்திக்க முடியாமல் போனது. ‘சுப்பு மகளுக்கு அமைந்த வரன் குறித்து விசாரித்து சொல்வது’ என்பது அந்த உதவியின் சாரம்.

    இதில் சிக்கல் கூட இருக்கிறது பால் திரியரது எப்போ? என்று பாத்திரம் அறியுமா? என்று கள்ளிக்காட்டு இதிகாசத்தில் மேற்கோள் காட்டியுள்ளவாறு மனித மனம் எப்பொழுது மாறும்? என்பது தெரியாமல் இருக்க? எதிர்கால மருமகன் குறித்து ஏடாகூடமாய் ஏதாவது சொல்லி வைக்க, அது சரியாகவோ, தவறாகவோ? போனால் இருபுறமும் சங்கடம் என கதிரேசன் தயங்க…

    இந்தச் சூழ்நிலையில், தினமும் பணிபுரியும் கணினி, பாஸ்வேர்டு தவறு என்று கதிசேரனை முறைத்தது. உடனே கணினி துறையை அணுகிய கதிரேசன், ஒரு வேளை, சுப்பு பாஸ்வேர்டை மாற்றி இருக்கலாம், கம்ப்யூட்டரில் Re-set செய்து கொடுங்கள் என்று சொன்னார். இடையில் ஒருநாள் போய்விட்டது. சுப்பு, தான், உதவி செய்யாத, கோபத்தில்தான், தனக்கு எதிராக இப்படி பாஸ்வேர்டை எல்லாம் மாற்றி குழப்பம் விளைவிக்க நினைப்பதாக, நினைத்துக்கொண்டார். அதனால், சுப்புவோடு நேருக்கு நேர் பேசவும் தயங்கினார். சுப்புவை பார்க்கும் பொழுதொல்லாம், இவன் இன்னும் ஏதோ, தீங்கு செய்துவிடப் போகின்றான் என்றும் அஞ்சினார்.

    அலைச்சறுக்கு விளையாட்டில், சுறாக்களின் வருகை போல, சுப்புவை ‘சுறா’ ஆக்கி, அச்சக் கடல் நீந்தினார் கதிசேரன். தயக்கம் மற்றும் பயம் அவர் மூச்சை மிரட்டியது. கணினியில் முக்கியமான தகவல்களை எடுக்க முடியாமல் போய்விடுமோ? என்கின்ற குழப்பம் சேர்ந்து கொண்டது. இடையில், தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் இருந்த பாஸ்வேர்டை சரிபார்க்கலாம் என்று எதேச்சையாக எடுத்துப் பார்த்தவர் தூக்கி வாறிப் போட்டு அதிர்ந்தார். ஆம், பாஸ்வேர்டு, 63 என நினைத்தது 66 என்று சரியாக இருந்தது. இவராக மாற்றி நினைத்துக்கொண்டார். ஆனால் யாரும், குறிப்பாக சுப்பு, மாற்றிவிடவில்லை என்பதையும் புரிந்து கொண்டார். அதன்பிறகு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. இடையில் சுப்பு வேறு துறைக்கு மாறுதலாகி, மும்பை சென்றுவிட்டார்.  கதிரேசன் தனக்குள்ளே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்ததை எண்ணி மூச்சுக்கு மூச்சு வருத்தப்பட்டு, திருத்தப்பட்டார். இது மனசுக்குள்ளேயே நடந்த மாற்றம். வேறு யாராலும், ஏன் சுப்புவால் கூட இவ்வளவு தெளிவான சிந்தனையை தோற்றுவித்திருக்க முடியுமா? என்பது சந்தேகமே.

    கண்களை மூடிக்கொண்டு எடுக்கப்படும் சில முடிவுகள் மூச்சுள்ள வரை தவறானவைகளாக போய்விடுகின்றன. மூச்சை சுவாசிக்கும் பொழுதே அச்சம் தவிர்க்கும் வண்ணம் அது அமைய வேண்டும். சிலபல முடிவுகளுக்கான அடிப்படைகளை உணர்ச்சி வசப்படாமல் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அதற்கு தியான வழிமுறைகள் உதவலாம். மூச்சுப்பயிற்சியை தியானம் செய்யும் பொழுது சொல்லித்தருகின்றனர்.

    கதிரேசன் தன் வாரிசுகளுக்கு நீச்சல் பயிற்சியளிக்கும் கோச் செல்வேந்திரன் சொல்லக் கேட்டது நினைவிற்கு வருகின்றது. நீச்சல் ‘இராஜ யோகம்’ என்கின்ற பயிற்சியாம். சின்ன வயதில் மிக ஆழமாக இருக்கின்றகிணற்று நீரின் சில்லென்ற குளியலும் சேர்த்து ஞாபகம் வந்தது. கதிரேசனின் மாமா, ‘நெட்டை சதாசிவம்’ கிணற்றில் தூக்கி வீசிவிடுவார் என்கின்ற பிரசித்திக்கு அஞ்சி சோளக்காட்டிற்குள் அறுத்துவிட்ட, கட்டைகள், வெறுங்கால் குத்தி விடாமல், இலாவகமாக, யார் கையிலும் சிக்காமல் தப்பி ஓடினான். சின்னக் கதிரேசன் அந்தக் காலத்தில் அதன் பின்னர் தன்னைவிட சின்னப் பையன்களோடு போய் பல்லடம் பகுதியில் பாயும் பி.ஏ.பி வாய்க்கால் பாய்ந்து கத்துக் கொண்டது. கடப்பாறைநீச்சலுக்கு கொஞ்சம் மூத்த வகை நீச்சல். அதில் கழுத்து நீர்ப்பரப்புக்கு மேலேயே எப்போதும் தொன்னூறு டிகிரியில் இருக்கும். ஆனால் செல்வேந்திரன் சார் சொல்லித்தந்த நீச்சல் தொலைக்காட்சியில் மைக்கேல் பெல்ப்ஸ் நீத்தும் வகை சார்ந்தது. பெல்ப்ஸ் நீச்சல், மூச்சுப்பயிற்சி மூலம் உடல் மட்டத்தில் தலை ஒரே நேர்கோட்டில் வைக்கப்படுகின்றது. நீந்துகையில், சற்றே சாய்ந்து மேலேழும்பி காற்றை உள்வாங்கிக் கொண்டு அடுத்து உள்ளேயே முங்கியவாறு ஊதிக்கொண்டே முன்னேறி கைகால்களை இயக்க வேண்டி உள்ளது. நீச்சல் போட்டி வீடியோ பதிவொன்றை பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்ற தல்லவா?  பாருங்களேன் என்று கதிரேசன் சொல்கின்றார்.

    அவ்வாறு நீந்துகையில் நுரையீரல் முழுக்க முழுக்க காற்று நிறைகின்றது பின்னர் கையசைவு கால் அசைவில் உள்ளம் கவனிக்கின்றது. இந்தத் தருணத்தில் மூச்சை மட்டுமே மனம் கவனிக்கின்றது. ஒருமுகப்படுகின்றது. கண்ணாமூச்சி ஆடி தவறான முடிவுகளெடுக்கும் மனதை மூச்சுப்பயிற்சி மூலம் சுயபரிசோதனை செய்து பழக்க முடிகின்றது. நீண்ட நெடுநாட்களாக எடுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட மனப் பிரமைகள் கூட மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டி இருக்கலாம். ‘பயம் என்னும் தலைப்பில் புதுமைப்பித்தன் எழுதிய கதை அற்புதமானது. இங்கே, பொருத்தமானது. கண்ணா மூச்சிகள் கண்ணா மூச்சுகளாக மாற்றப்பட வேண்டும்.   தென்ஆப்பிரிக்க கடல் அலைச்சறுக்கும் சாகசவிளையாட்டாகட்டும். அதற்கு கொஞ்சம் குறைந்த நேரு விளையாட்டரங்கில் கால்பந்தாட்டமாகட்டும். அட்வென்சர் ஸ்போர்ட்ஸ் எனப்படும் உயிரைப் பணயம் வைக்கும் அபாயகரமான விளையாட்டுக்கள் அந்தந்த கணத்தில் அதில் ஈடுபடுபவர்களை வாழச் செய்கின்றன. இதையே நிகழ்காலத்தில் வாழ வேண்டும் என்றும், தத்துவஞானிகள், ஜென் தத்துவக் கதைகளில் சொல்லியுள்ளனர். ‘பவர் ஆஃப் நவ்’ என்கின்ற ‘எட்கார்ட் டல்’ உடைய புத்தகத்தை ஏராளமான முறைகள் கதிரேசன் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கின்றார். கதிரேசனுக்கு தத்துவக் கதைகள் தடுமாற்றத்தைக் கொடுத்துக்கொண்டே இருந்து வந்துள்ளன. ஜென் கதைகள் என்னும் பட்டியலிலுள்ள பல பேரின் லோக்கல் கதைகளையும் சேர்த்து, கதைகட்டி விட்டார்களோ? யார் இது ஜென்; இது ஜென் அல்ல; என்று ஜப்பானியர்களிடம் சென்று அக்மார்க் முத்திரை பெற்று வருவது? கதிரேசனுக்கு கோடிக்கணக்கில் விற்பனையாகின்றது என்று செய்தித்தாளில் பிரசுரமாகும் பிரபல ஓவியங்களைப் பார்க்கும் பொழுது உலகின் லாஜிக் காலடியில் நழுவுவது போலத் தோன்றும்.

    கண்ணாமூச்சிதான் அது. ஓவியங்களின் விலையைக் கேட்டால் மூச்சடைத்துப் போகும். சில ஜென் என்று கூறப்படும் கதைகளும் அதே ஸ்டில்தான். புரிந்துகொள்ள முடியாததெல்லாம் ஒரு பிரமிப்பு எஃபக்ட் கொடுத்து கலைக்கண்கள் வேண்டும் என்று வேண்டவைத்து விடுகின்றன. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்னும் பழமொழி நிகழ்கால வாழ்க்கையைச் சொல்கின்றது.

    ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

    கருதி இடத்தால் செயின்                                

                                  – குறள் 484

    தூங்குக தூங்கிற் செயற்பாலக என்பன பேன்றதிருக்குறள்கள் அந்தந்த நேரத்தில் அந்தந்த செயல்களைத் தவிர மற்றசெயல்களைப் பற்றி எண்ணத்தேவையில்லை என்றும் ஆணித்தரமாக சொல்கின்றன எனலாம். தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கிறது என்று கண்கள் முன்பு பூச்சி பறக்க படிப்பதாக கதிரேசன் கேள்விப்பட்டார்.

    முப்பது நாட்களுக்கும் மேல் இருக்கும் பொழுது கண்ணாமூச்சி விளையாடாமல் ஒரு கால அட்டவணை போட்டு அதை அவ்வப்போதே திருப்புதல் செய்து படித்தல் நன்மை பயக்கும். “கதிரேசன், எதுக்கும் ஒருமுறைநீங்க நேரில் வந்து எங்க எதிர்காலமே, அவனோட / அவளோட தேர்வெழுதப்போகும் கையில்தான் இருக்கு “அப்படின்னு சொல்லிட்டுப் போங்க” என்று உறவினர்கள் அழைத்தனர். தன் மகன், மகள்களின் பன்னிரண்டாம் வகுப்பு பரிட்சைக்காக கதிரேசனுக்கு, இவ்வளவு அழுத்தம் கொடுப்பதுகிரிக்கெட் மேட்சின் பொழுது ஓவராக எதிர்பார்த்துசொதப்புவது மாதிரி ஆகிவிடக்கூடாதே! என்றுதான் தோன்றுகிறது.

    தேர்வு முடிவுகள் முக்கியமானவைதான்; ஆனால் அவற்றோடே முக்கியமானவை முடிந்து போகின்றன என்று முடிவு செய்துவிட வேண்டியதில்லை‘ கல்லூரிகளின் தேர்வு அவசியமானதுதான். ஆனால் அத்தோடு தேர்வுகள் அஸ்தமிப்பதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும் விசித்திரங்களால் விரவப்பட்டுள்ளது. கண்களில் கனவுகளை நிரப்புபவர்களுக்கும் மூச்சுப்பயிற்சி செய்பவர்களுக்கும் கண்ணாமூச்சு  விளையாடுபவர்களுக்கும் ஒவ்வொரு நாளும் திருநாளே! கண்ணுக்குத் தெரியாத, ஆனால் வந்துவிடுமோ என்று அச்சமூட்டுகின்ற ‘சுறாமீன்’ கவலைகள் பல வகைப்படும். அவை கண்ணுக்குத் தெரிவதில்லை. மூச்சுப்பயிற்சி போல, பாஸிடிவ் எண்ணங்களை சுவாசித்து கண்ணாமூச்சியை, கண்ணா மூச்சு ஆக்குவோமாக.

    இந்த இதழை மேலும்

    உழைக்க உறுதி எடு! உலகம் போற்றப் பெயரெடு!!

    Dr.P.S. ராஜன்

    சேர்மன், லேப்ராஸ்கோபிக் எண்டோஸ்கோபிக்

    சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ,

    எல்சி கிளினிக்ஸ் , கோவை

    • உணவுக்குழாய் அடைப்புக்கு அறுவைசிகிச்சை இல்லாமல் வாய்வழி எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை அளிக்கும் தென்னிந்தியாவின் முதல் நிபுணர் Dr. P.S. ராஜன் அவர்கள் என பாராட்டுதல் பெற்று, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களிடம் விருது பெற்ற சிறப்புக்குரியவர்.
    • இயற்கைத் துவாரங்கள் மூலம் எண்டோஸ்கோபி சிகிச்சையால் தழும்பில்லாமல் குடல்வால் நீக்கம் செய்த உலகின் முதல் மருத்துவர், தழும்பின்றி பித்தப்பை அகற்றிய ஆசியாவின் முதல் மருத்துவர் என்ற பெருமைகளுக்குரியவர்.
    • 7 மாதக் குழந்தைக்கு எண்டோஸ்கோபி மூலம் பித்தநாளக் கற்கள் அகற்றுவதிலிருந்து, கேன்சர்களுக்கு ஸ்டென்ட் பொருத்துவது வரை சிறந்த சிகிச்சை தந்துவரும் நம்பிக்கைக்குரிய மருத்துவர் என்ற மக்களின் பாராட்டுதலைப் பெற்றிருப்பவர்.
    • அதிநவீன லேப்ராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி துறையில் 20 வருடங்கள் அனுபவமிக்கவர்.
    • அது மட்டுமல்லாமல் இந்த இரு துறைகளிலும் அறுவைசிகிச்சை செய்யக்கூடிய மருந்துவர் இந்திய அளவில் இருவர் மட்டுமே உள்ளார்கள் என்கிறசிறப்பு மருத்துவ உலகம் இவருக்கு தந்திருக்கிறது.
    • அமெரிக்க மருத்துவ உயர் பட்டங்கள் (FACS) பெற்றுள்ளவர்.
    • பாரதத்தின் பல்வேறு பகுதிகளின் மருத்துவர்களுக்கு லேப்ராஸ்கோபி பயிற்சி தந்து வருபவர்.
    • ஒரே நாளில் அறுவைசிகிச்சை மருத்துவத்தை முடித்துக்கொண்டு அன்றாடப் பணிகளை திறம்பட செய்யும் அளவு பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் அதீத ஆற்றல் பெற்றமருத்துவர்

    இப்படி பல்வேறு சிறப்புகளுக்குரிய மருத்துவர் Dr.P.S. ராஜன் அவர்களை நாம் சந்தித்ததிலிருந்து இனி…

    பிறந்தது… படித்தது…

    என் பிறந்த ஊர் திண்டுக்கல். நெசவுத் தொழிலை நேசித்து செய்யும் குடும்பத்தில் மகனாக பிறந்தேன். என் உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். இரண்டு அண்ணா மற்றும் மூன்று மூத்த சகோதரிகள். நான் இளைய மகன். என் பள்ளிக்காலம் முழுவதும் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதியிலேயே அமைந்தது.
    சிறுவயதில் படிப்பின் மீது அளவறியா பற்றிருந்தது. படிப்பின் மூலம் ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் மேலோங்கி இருந்தது.

    நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது என் தந்தையின் மறைவு குடும்பத்தை மிகவும் பாதித்தது. அப்போது எனது இரண்டு அண்ணாக்களும் (திரு. ராம மூர்த்தி, திரு. சிவராமன்) குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு எங்களை வழிநடத்தினார்கள். நான் படித்த காலத்தில் இதைத்தான் படிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளைக் கூற, வழிகாட்ட யாருமில்லை. அதனால் எந்தப் படிப்பைப் படித்தாலும் என் எதிர்காலத்திற்கும் என் குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் ஓர் உந்துதலாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப என்னைத் தயார்படுத்திக் கொண்டு படித்தேன். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றியும் பெற்றேன்.

    மதிப்பெண் கூடுதலாக எடுத்ததன் மூலம் மருத்துவச்சீட்டு எனக்குக் கிடைத்தது. அப்பொழுது என்னுடைய அண்ணன் திரு. ராம மூர்த்தி அவர்கள் கோவையில் தொழில் செய்து வந்தார். அதனால் 1984ல் மருத்துவத்துறையில் மருத்துவக்கல்வியை கோவையில் தேர்ந்தெடுத்தேன்.

    நுழைவுத் தேர்வை எதிர்கொண்ட விதம் குறித்து?

    நான் படித்த காலத்தில் (1991) எந்தத்துறையில் சேர வேண்டும் என்றாலும் நுழைவுத்தேர்வு மிகவும் அவசியமாக இருந்தது. மருத்துவத்திலும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக இருந்தது.

    அப்பொழுது தமிழ்நாடு நுழைவுத்தேர்வு, இந்திய அளவில் நுழைவுத்தேர்வு இப்படி பலதரப்பட்ட நுழைவுத்தேர்வு இருந்தது. இதில் வென்றால் தான் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்று இருந்ததால் ஒருவிதமான பயம் இருந்தது. ஆனால் அந்தப் பயம் தான் என்னை வெற்றியும் பெறச் செய்தது. நுழைவுத்தேர்வில் நல்ல ரேங்க் கிடைத்தது. அறுவைசிகிச்சை பிரிவைத் தேர்ந்தெடுத்தேன்.

    ஆரம்பத்தில் எம்.பி.பி.எஸ். 5 வருட கல்விக்குப் பின் படிக்கின்ற காலத்தில் ஒரு வருடம் CRRI பயிற்சி கொடுப்பார்கள். அதற்குப் பின்பு, மருத்துவப் பிரிவிலுள்ள துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்தத் துறையில் எது நம்மால் வெற்றிகரமாக செய்ய முடியும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்வதால் நிச்சயம் தோல்வி கிட்டாது என்பதை நன்றாக உணர்ந்து அன்று அறுவைசிகிச்சைப் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன்.

    எப்போது எல்சி மருத்துவமனை உருவானது? வித்தியாசமாய் பெயர் சூட்டக் காரணம்?

    2013 டிசம்பர் 12 அன்று ஆரம்பிக்கப்பட்டது. எண்டோஸ்கோபி மற்றும் லேப்ராஸ்கோபி துறையில் அனுபவம் இருந்ததால் இந்த இரு துறைகளையும் எதிர்காலத்தில் வளர்க்கும் நோக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை வைத்தே பெயர் சூட்ட வேண்டுமென்று முடிவு செய்து ELCE என்று பெயர் வைத்தோம். இதில்,

    E என்பது எண்டோஸ்கோபி

    L என்பது லேப்ராஸ்கோபி

    C என்பது சென்டர்

    E என்பது எக்செலன்ஸ்

    குறிப்பாக, இந்தக் குடல் அறுவைசிகிச்சைப் பிரிவைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம்?

    1992ம் ஆண்டு எம்.எஸ். படிக்க சேர்ந்த பொழுது அறுவை சிகிச்சை சார்ந்த எத்தகைய துறையில் பணியாற்ற வேண்டும் என்று என்னுள் எதுவும் தோன்றவில்லை. நான் பயின்ற அதே துறையில் தற்போதைய ஜெம் மருத்துவமனையின் சேர்மன் Dr. பழனிவேல் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1995ம் ஆண்டு எம்.எஸ். முடித்துவிட்டேன். அப்பொழுது மருத்துவத்தில் இத்துறை சார்ந்து அவர் சொன்ன விதம், எனக்கு மிகுந்த ஆர்வத்தையும், ஆனந்தத்தையும் கொடுத்தது. அந்நாளை என் வாழ்வில் ஒரு மைல்கல் என்றே சொல்வேன்.

    அவரது வழிகாட்டலின் படி இப்பிரிவில் பணியைத் தொடர்ந்தேன். அவருடனேயே வேலையும் செய்தேன். அந்தக் காலம் என் வாழ்க்கைக்கு பெரிதும் துணைபுரிந்த காலம். பகுதி நேரமாக வேலை செய்த நான் பின்பு முழுநேரமும் அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றேன். இப்படி அவருடன் இணைந்து பணியாற்றிப் பெற்ற அந்த இருபது வருட அனுபவமே இத்துறையில் நான் சாதிக்க பெரிதும் துணைபுரிந்தது.

    ஓபன் சர்ஜரி முறை மாறி லேப்ராஸ்கோப் அறுவைசிகிச்சை முறை என்கிற மாற்றம் எப்போது நிகழ்ந்தது?

    நான் எம்.எஸ். படிக்கின்ற காலத்திற்கு முன்பே 1991ம் ஆண்டு லேப்ராஸ்கோப் முறை இந்தியாவிற்குள் வந்தது. அதற்கு முன்னர் எல்லாம் ஓபன் சர்ஜரி தான். நான் முதலில் ஓபன் சர்ஜரி முறையில் தான் அறுவைசிகிச்சை செய்தேன். அதன்பிறகு தொழில்நுட்ப மாற்றத்தின் காரணமாக மருத்துவ உலகில் அதீத மாற்றம் ஏற்பட்டது. மாற்றங்களுக்கேற்ப என்னை நான் அத்துறையில் வளர்த்துக் கொண்டேன்.

    லேப்ராஸ்கோப் என்பது வயிற்றில் சில துளைகள் மூலம் அறுவைசிகிச்சை செய்வது. எண்டோஸ்கோப் என்பது வாய்வழியாக கேமரா உள்ள ஒரு டியூப்பை செலுத்தி அதன் மூலம் உணவுக்குழாய் மற்றும் இரைப்பையில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிவது.

                ஆரம்ப காலத்தில் யூகங்கள் மூலம் மருத்துவம் செய்வது என்ற நிலை மாறி இப்பொழுது வயிற்றில் ஏற்படும் சிறுசிறு கட்டிகளையும் கண்டுபிடித்து அதனை குணப்படுத்தும் அற்புத வளர்ச்சியை மருத்துவம் எட்டியிருக்கிறது. அந்த வகையில் லேப்ராஸ்கோப், எண்டோஸ்கோப், ERCP போன்ற அனைத்து அறுவைசிகிச்சைகளையும் எங்கள் ELCE கிளினிக்கில் திறம்பட ஒருங்கே கொடுத்து வருகிறோம்.

    மருத்துவம் என்றாலே ‘சேவை’ எனச் சொல்வார்கள். அச்சேவையில் தங்களின் பங்களிப்பு குறித்து?

    நான் இத்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்கிறேன். இந்த பயணத்தில் நிறைய நோயாளிகளைச் சந்தித்திருக்கிறேன். சாதாரண வயிற்று வலி என்று என்னிடம் வருவார்கள். அவர்களைச் சோதித்துப் பார்த்தால் வயிற்றில் அகற்றமுடியாத அளவிற்கு பெரிய கட்டிகள் இருக்கும். இது என்னை சிந்திக்க வைத்தது. அப்போது நான் ஜப்பான், கொரியா நாடுகளுக்கு பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. நான் அங்கு ஆரம்ப நிலையில் உள்ள இரைப்பை புற்றுநோய்க்கு ‘எண்டோஸ்கோபி’ மூலமாகவே சிகிச்சை அளித்து முற்றிலுமாக குணப்படுத்துவதைக் கண்ணுற்றேன். அங்குள்ள மருத்துவர்களைப் பார்த்து, “உங்கள் நாட்டில் மட்டும் எப்படி இந்த நோயை இத்தகைய ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடிந்தது” என்றுகேட்டேன்.

    அதற்கு அவர்கள் “எங்கள் நாட்டில் ஒருவிதிமுறை இருக்கிறது. 45 வயதிற்குமேற்பட்ட அனைவரும் வாய்வழி எண்டோஸ்கோபி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலை இருக்கிறது” என்றார்கள். ஆனால் நமது நாட்டில் நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் தான் மருத்துவரை நாடி வருகிறார்கள். இந்நிலை மாறினால் தான் பெரும்பாலான உணவுப்பாதை கேன்சர் நோய்களின் பிடியில் இருந்து விலகியிருக்க முடியும் என்பதை உணர்ந்தேன். இந்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணி கடந்த ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியர் ‘அர்ச்சனா பட்நாயக்’ அவர்களின் தலைமையில் எண்டோஸ்கோப் பரிசோதனை முறையை இலவசமாக அளிக்க ஆரம்பித்தோம். பலர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தொடர்ந்து திருப்பூர், அன்னூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இதுவரை 16 பரிசோதனை முகாம்களை நடத்தி அதில் 3500க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக எண்டோஸ்கோபி பரிசோதனை செய்திருக்கிறோம். இந்த பரிசோதனையில் எங்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப நிலையில் புற்றுநோய் கட்டிகள் இருப்பதை அறிந்து அவர்களுக்கு சிகிச்சையும் கொடுத்து வருகிறோம்.

    மக்களிடையே எண்டோஸ்கோபி பரிசோதனை முறை குறித்த விழிப்புணர்வு எந்த அளவிற்கு இருக்கிறது?

    இக்கால கட்டத்தில் மக்கள் பலநிலைகளில் விழிப்புணர்வுடன் தான் இருக்கிறார்கள். ஆனால் போதுமானதாக இல்லை என நான் நினைக்கிறேன். காரணம் எல்லா மருத்துவமனையிலும் (Master Checkup) அடிப்படையாக சில முறையை மட்டும் பின்பற்றுகிறார்கள். ரத்தம் குறித்த பல பரிசோதனைகள், சர்க்கரையின் அளவு, BP, ECG, ஸ்கேன் போன்றவை மட்டுமே செய்கிறார்கள்.

    என்னைப் பொறுத்தவரை எண்டோஸ்கோபி பரிசோதனையையும் ஒவ்வொருவரும் நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் எதிர்காலத்தில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து நிச்சயம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    இன்றைய நாகரிக வாழ்வில் உணவு கலாச்சாரம் பலவிதமாக மாறியிருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி?

    ஒவ்வொருவரும் உயிர்வாழ வேண்டும் என்றால் உணவின் பயனை நிச்சயம் அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் உண்ணும் உணவு ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்கிறதா என்று பார்க்க தவறிவிடுகிறார்கள். இந்நிலை மாறவேண்டும்.

    காலம் போகின்ற போக்கில் உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை பலர் தவறுகிறார்கள். அது மட்டுமல்லாமல் வேலைப்பளுவும் ஒரு காரணம். உதாரணமாக, ஒருவர் எவ்வித கவலையுமின்றி வேலை செய்கிறார் என்றால் ஒரு மணிநேரத்திற்கு அவர் வயிற்றுக்குள் அமில அளவைப் போல மன அழுத்தத்தோடும், ஆர்வமில்லாமலும் வேலை செய்தால் அமில 4 அளவு மடங்கு அதிகம் சுரந்து அவர் வயிற்றை நிரப்பும். இதனால் அமிலத் தன்மையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றெரிச்சல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை ஏற்பட்டு அவருக்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

    இரவு வேலை செய்பவர்களுக்கு அதிக அளவில் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறதே… அதற்குக் காரணம்?

    இரவு நேரமாக இருந்தாலும் சரி, பகல் நேரமாக இருந்தாலும் சரி ஒவ்வொரு மூன்று மணிநேரத்திற்கும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அது உணவாகவோ அல்லது பழங்களாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

    காபி அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் உணவு உண்ட பின் எடுத்துக் கொள்வது நல்லது. காலையில் எழும் நேரத்திலிருந்து 2 மணி முதல் 2.30 மணிக்குள் காலை உணவை உண்ணுதல் வேண்டும்.

    இப்படி சரியான நேரத்தில் முறையாக உணவு உட்கொண்டால் வயிற்றில் எவ்வித பிரச்சனைகளும் வராது. இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள் இந்த உணவு முறையைச் சரியாக உட்கொள்வதில்லை. இதனால் தான் அவர்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    இத்துறையில் வெளிநாடுகளைப் போல் இங்கும் சிகிச்சை முறைகள் உள்ளதா?

    ஆரம்ப காலத்தில் நிறைய வேறுபாடுகள் இருந்தது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அங்கு என்ன முறைகளைப் பின்பற்றுகிறார்களோ, அதே வழிமுறைகளைத் தான் இங்கும் பின்பற்றுகிறோம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இயந்திரக் கருவிகள் வந்துவிட்டது.

    தொடக்க காலத்தில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமென்றால் வயிற்றைக் கத்தியால் கிழித்துத்தான் செய்தனர். ஆனால் இப்பொழுது எக்யூப்மென்ட் அனைத்தும் நம்மிடமே இருப்பதால் வெளிநாட்டிற்கு இணையான மருத்துவ சேவையை இங்கும் செய்ய முடிகின்றது.

    ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். மனித உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியே மருத்துவர்கள் இருப்பதால் எல்லா பிரச்சனைக்கும் மருத்துவம் இங்கேயே கொடுக்கப்படுகிறது.

    மருத்துவர்களின் மீதான மக்களின் நன்மதிப்பு குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறதே… அதைப் பற்றிய தங்களது கருத்து?

    மருத்துவருக்கும் மக்களுக்கும் இடையேயான சரியான புரிதல் இன்மையே இதற்குக் காரணம். உதாரணமாக, மலம் கருப்பாக கழிந்தால் 75% பிரச்சனை உணவுக்குழாய் அல்லது இரைப்பையில் தான் இருக்கும். மீதி 25% சிறுகுடல் அல்லது பெருங்குடலில் இருக்கலாம். இதனால் வாய்வழி எண்டோஸ்கோபி முதலில் செய்யப்படும். அதில் பிரச்சனை இல்லையென்றால் CT ஸ்கேன், பெருங்குடல் எண்டோஸ்கோபி செய்யப்படும். இதை ஏன் செய்கிறோம் என்பதை தெளிவாக புரிய வைத்தாலே மருத்துவரையும், மருத்துமனையையும் மக்கள் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். எனவே சிகிச்சைக்காக வருபவர்களிடம் முதலில் அவருக்கு இருக்கும் பிரச்சனையை நேரடியாக அவரிடம் தெரிவித்து புரியவைக்க வேண்டும். இது ஒவ்வொரு மருத்துவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

    நகர்ப்புறங்களை நோக்கியே என்றில்லாமல் கிராமப்புறமக்களை நோக்கிய பயணத்திட்டம் தங்களிடம் ஏதாவது…

    இது எங்களின் கனவு என்றே சொல்லலாம். நகர்ப்புறங்களில் மருத்துவக் கருவிகளை இயக்குவது எளிது. ஆனால் கிராமப்புறங்களில் சற்று கடினமாகத்தான் இருக்கும். அதற்காக மொபைல் வேன் முறையைப் பின்பற்றலாம் என்றால் அதற்கு கூடுதல் செலவு பிடிக்கும்.

    விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளோம். அப்போது கிராமப்புறங்களுக்கு எங்கள் மருத்துவர்கள் நேரடியாக சென்று இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறார்கள்.

    இன்று மருத்துவமனைகளின் வளர்ச்சி என்பது அதிகளவில் இருக்கிறது. தங்கள் மருத்துவமனையின் தனித்துவமாக நீங்கள் சொல்ல விரும்புவது?

    மருத்துவத்தில் பல்வேறு துறைகள் உண்டு. எல்லோரும் செய்கின்ற ஒரே முறையைப் பின்பற்றுதல் கூடாது என்று எண்ணி மக்களுக்கு முறையான விழிப்புணர்வினை ஏற்படுத்த ஹெர்னியா சார்ந்த பிரிவினை தேர்ந்தெடுத்து அதனை சிறப்பு செய்து வருகிறோம்.

    ஹெர்னியா சார்ந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் தான். அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பின்னர் சில காலம் கழித்து சிகிச்சை நடந்த இடத்தில் ஹெர்னியா சார்ந்த பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்.

    ஹெர்னியா அறுவை சிகிச்சை என்றாலே வயிற்றைக் கிழித்துத்தான் செய்ய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் லேப்ராஸ்கோப் மூலம் சில துளைகளால் உலகத்தர மருத்துவ சிகிச்சையை ஒரே நாளில் அளித்து வீடு திரும்ப இயலும் என்ற விழிப்புணர்வை அதிகளவு நாங்கள் கொடுத்து வருகிறோம்.

    அதுமட்டுமல்லாமல் ‘ஹெர்னியா கிளினிக்ஸ்’ என்று ஒரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் பயிற்சியும் கொடுத்து வருகிறோம். மேலும் “ஹெர்னியா பவுண்டேசன்”மூலம் குறைந்த செலவில் சிகிச்சையும் கொடுத்து வருகிறோம்.

    அடுத்து உடல் பருமன் தொடர்பாக பிசியோதெரபி, உடல் பருமன் தொடர்பான ஆலோசனைகளை வழங்க சிறப்பு பெற்ற மருத்துவர்கள் குழுவை இங்கு உருவாக்கி இருக்கிறோம்.

    பெற்ற பட்டங்கள், பாராட்டுக்கள் குறித்து?

    நான் மருத்துவராகி முதல் நாள் எப்படி மருத்துவமனைக்குள் நுழைந்தேனோ அதுபோலத்தான் ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்குள் நுழைகிறேன்.

    பட்டங்களையும், பாராட்டுக்களையும் தேடி நான் மருத்துவம் பார்ப்பதில்லை. என்னை நாடி வருபவர்களின் பிரச்சனையை முற்றிலும் குணமாக்கிட தன்னால் முடிந்த ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் செயல்படுகிறேன். பட்டம், பாராட்டுக்கள் எல்லாம் நம்மிடம் உள்ள தனித்திறமையால் தானாகவே வந்து சேர்ந்துவிடும். எதையும் எதிர்பார்த்து மருத்துவ சேவை செய்வதில்லை.

    நோயின் பாதிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே போகிறதே?

    அதற்காக மருத்துவமனை பெருகிக்கொண்டே போனாலும் அந்த அளவு நோயின் தாக்கமும் அதே அளவில் சென்று கொண்டுதான் இருக்கின்றன. மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு என்று சென்றடைகிறதோ அப்போது தான் இப்பிரச்சனைக்கு முற்றிலும் தீர்வு காண முடியும்.

    இப்பிறப்பின் பயனை அடைந்துவிட்டதாக எப்போதாவது நினைக்கிறீர்களா?

    மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் சாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு குடும்பம், படிப்பு, செய்யும் வேலை ஆகியவற்றை முறையாக கையாள வேண்டும் என்பது தான் முக்கியம்.

    விரும்பி செய்கின்ற வேலைகள் என்றும் சோர்வைத் தருவதில்லை. நான் பார்க்கும் இந்த மருத்துவத் தொழில் எனக்கு பெரிதும் உற்சாகத்தையும், உந்துதலையும் கொடுக்கிறது.

    எதிர்காலத் திட்டம் குறித்து?

    எங்கள் கிளினிக் நான்கு மருத்துவத்துறை சார்ந்து இயங்கி வருகிறது. ஹெர்னியா, உடல் பருமன், எண்டோஸ்கோப் மற்றும் மகளிர் நலம். இத்துறைகளில் தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் அறுவை சிகிச்சைத் துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் உருவாகிக் கொண்டே வர வேண்டும் என விருப்பம் கொள்கிறேன்.

    ஒவ்வொரு ஆண்டும் தரம், உழைப்பு, முயற்சி இவற்றை மேன்மேலும் அதிகரித்துக் கொண்டே சென்றால் தான் சிறந்த சேவையை வழங்க முடியும் என்பதில் மாற்ற முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறேன்.

    கோவைப் பகுதியைப் போலவே இன்னும் பிற இடங்களுக்கு இம்முறையைக் கொண்டு செல்ல வேண்டும். அதன் முதல்கட்டமாக திண்டுக்கல் பகுதியில் ஹெர்னியா கிளினிக்ஸ் ஒன்றைத் தொடங்கி இருக்கிறோம்.

    எல்சி கிளினிக்கின் வளர்ச்சியில் என்னுடன் பணியாற்றும் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் கந்தசாமி மற்றும் 20 பேர் கொண்ட மருத்துவக் குழு இவர்களின் அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும் நிரம்ப இருக்கிறது என்பதை பதிவு செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    வளர்ந்து வரும் மருத்துவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    முதலில் மருத்துவத்தின் மகத்துவத்தை ஒவ்வொருவரும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். தன்னைத் தேடி வரும் மக்களிடையே உண்மைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையில் ஒரு நோயாளி வருகிறாரோ அதை அவரிடம் முழுவதுமாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். அதற்குப் பின்பு சிகிச்சை என்பது அமைய வேண்டும்.

    உங்களின் மருத்துவ சேவையில் ‘இது தனி’ என்று சொல்வது…

    நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவ இடமும் கிடைத்து படிக்கச் சிரமப்படும் மாணவர் ஒருவரை செய்தித்தாளில் பார்த்தவுடன் அவருக்கு உதவிட வேண்டும் என்று எண்ணம் கொண்டு அவரைப் படிக்க வைத்து வருகிறோம். இனி ஒவ்வொரு ஆண்டும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவசமாக மருத்துவம் படிக்க  வசதிகள் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    தன்னம்பிக்கை குறித்து?

    தன்னம்பிக்கை என்ற ஒரு சொல் ஒவ்வொருவரையும் உயர்த்தும் மந்திரச்சொல். நம் வளர்ச்சியின் உயரம் நம் தன்னம்பிக்கையின் உயரத்தைப் பொறுத்தே அமையும். விதையின் தன்னம்பிக்கையே விருட்சம் ஆகும்.

    உந்துதலாக இருந்தாலும், உயர்வாக இருந்தாலும் அது நம்முடையதாகவே இருக்க வேண்டும்.

    இளைய சமுதாயத்திற்கு தாங்கள் கூற விரும்புவது?

    வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும். இது தவறல்ல. வெற்றி தான் ஒவ்வொருவரின் பிறவிப் பயன். இதனை அடைய வேண்டும் என்றால் சரியான இலக்கு, சரியான பாதை, கடின உழைப்பு, காலம் தவறாமை, நேர்மை, ஒழுக்கம், பணிவு ஆகியவற்றுடன் அதற்கான சரியான காலம் வரும் வரை பொறுமையும் அவசியம்.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    சுயமுன்னேற்ற நூல்கள் வாசிப்பதால் ஒருவருக்குள் எழும் மாற்றங்கள் குறித்து?

    மா. திருமுருகன்
    கல்வீரம்பாளையம்

    சுயமுன்னேற்ற நூல்கள் படிக்கும் பழக்கம் போதுமான அளவுக்கு இல்லாத இன்று இந்த கேள்வியைக் கேட்ட   மா. திருமுருகன் அவர்களுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்று நூலகங்களிலும், புத்தகக் கடைகளிலும் பலவிதமான நூல்களைக் காணமுடிகிறது. இதில் எதைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்பது மிக முக்கிய முடிவாகும். ஏனென்றால் நாம் படிக்கும் நூல்கள் நமது எண்ணங்களை, வாழ்க்கையை, ஏன் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும் ஆற்றல் படைத்தவை. ஒரு சிலர் மத சம்பந்தமான நூல்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள். சிலர் இலக்கிய நூல்களுக்கு, இன்னும் பலர் கதைகளுக்கு முக்கியத்துவம் தந்தும் வருகிறார்கள். ஒரு மனிதனின் எண்ணங்கள், நம்பிக்கைகள், உணர்வுகள், படிப்பறிவு, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்து அவன் நூல்களைத் தேர்வு செய்கிறான். ஆனால் இந்த உலகில், அதுவும் போட்டி நிறைந்த உலகில் சுதந்திரமாக, தைரியமாக, நம்பிக்கையுடன் வாழ விரும்பும் ஒருவர் சுயமுன்னேற்ற நூல்கள், அதுவும் தரம் மிக்க நூல்களைப் படிப்பதும், அதன்படி நடப்பதும் மிகவும் அவசியமாகிறது.

    அறிவு விரிவாக்கம்

    சுயமுன்னேற்ற நூல்கள் நமது அறிவை அகலப்படுத்துகின்றன; ஆழப்படுத்துகின்றன. இன்றைய உலகம் அறிவாளிகள் உள்ள உலகம் (World of Knowledge Workers); யாருக்கு அறிவாற்றல் அதிகம் உள்ளதோ அவருக்கு பல சாதகங்கள் உண்டு. சமீபத்தில் டாட்டா நிறுவனரின் ‘நானோ’ என்ற குட்டி கார் திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், பின்னர் மேற்கு வங்காளத்தின் சிங்கூர் என்ற ஊரில் இந்தக் காரை தயாரிக்க சந்தித்த பிரச்சனைகளும், குறுகிய காலத்தில் ரட்டன் டாட்டா அவர்கள் அதை எப்படி சரி செய்து கார்களைத் தயாரித்தார் என்ற செய்திகளும் TATA NANO – The People’s Car என்ற ஒரு நூலாக வந்தது. தொழில் முனைய விரும்புபவர்களுக்கு அது பயனுள்ள கருவியாக இருக்கிறது. பிரச்சனைகளைச் சந்தித்தவரே நேரடியாக உங்களிடம் ரூ.99-க்கு (புத்தக வடிவில்) சொல்கிறார். இது சுயமுன்னேற்ற நூல்களின் மகிமை அல்லவா? உங்களுக்கு அறிவுப் பெட்டகத்தைப் பரிசாகத் தருகிறது சுயமுன்னேற்ற நூல்கள்!

    சிந்திக்க வைக்கின்றன

    பல சுயமுன்னேற்றநூல்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. உலகிலேயே பிரபலமாக பேசப்பட்ட பல நூல்கள் மக்களை சிந்தனைக்கு (Logical Thinking) உள்ளாக்கின. இந்த உலகம் உருவானதா (Creation) அல்லது உருவாக்கப்பட்டதா (Evolution) என்ற பெரிய வாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. உருவாக்கப்பட்டது என்று பல அறிஞர்களும், உருவானது என்று பல அறிஞர்களும் தங்களது வாதங்களை எடுத்துரைத்தனர். இதில் சார்லஸ் டார்வின் 1859ம் ஆண்டு எழுதிய ‘Origin of Species’ என்றநூல், இந்த உலகில் உயிரினங்கள் படிப்படியாகத் தோன்றி உயர்நிலை உயிரினங்களாகத் தோன்றியது என்பதை நம்பக்கூடிய வகையில் நிரூபித்துவிட்டது.

    இவரது கண்டுபிடிப்புகளை வைத்து உலகம் எந்த உயர்ந்த சக்தியாலும் தோற்றுவிக்கப்படவில்லை என்று விவாதம் செய்யும் ரிச்சார்ட் டாக்கின் என்பவர் எழுதிய God Delusion என்றநூல் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. அதுபோல ராபின் சர்மா என்பவர் எழுதிய The Leader Who Had No Title என்றநூல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. “நாம் ஒவ்வொருவரும் தலைவர் தான். நம் அனைவருக்கும் தலைமைப் பண்பிற்கான பயிற்சிதேவை. மாணவன் ஒருவன் அவனது கடமையைச் சரியாகச் செய்ய அவனுக்குத் தலைமைப்பண்பு வேண்டும். இதைப் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன் தானும் இன்றைய தலைவன் தான்; நாளைய தலைவன் மட்டும் அல்ல என்பதை உணர்வான். அந்த சிந்தனையே அவனது நடவடிக்கைகளை மாற்றும். இதை உணர்ந்தால் ஒரு தலைவனைப் போல் மிடுக்காக நடப்பான் அவன்.”

    நம்மை உருக வைக்கும்

    சிறப்புமிக்க சுயமுன்னேற்றநூல்கள் நம்மை உருக வைத்துவிடும். தென்துருவத்திற்கு செல்ல வேண்டும் என்று புறப்பட்டு பின்னர் சடலமாகிவிட்ட ராபர்ட் ஸ்காட் (Robert Scott) பற்றிய செய்தியும், அவர் இறந்த பின் டென்னிசன் என்பவர் எழுதிய Ulysses என்றபாடலும், அவரது கடிதமும் உருக வைக்கிறது. அவர் சாதிக்க முனைத்த தென் துருவத்திற்கு Roald Amundsen என்றநார்வே நாட்டவர் மாணவர்களுடன் சென்றடைந்து சாதனை செய்தார். வயது ஒரு புறம், உணவு இல்லாமல் இருந்தது இன்னொரு புறம், உடல் நலம் குன்றிய நிலையில் அவரது கடிதம் மனதை உருக்கியது. பல விளக்குகள் தந்த ஒளி (Light From Many Lamps) என்றநூலில் இவரைப் பற்றிய தகவல்கள் உள்ளது.

    தன்னம்பிக்கை ஊட்டும்

    கண்பார்வையற்ற எரிக் வேய்ஹென்மேயர் (Erik Weihenmayer), 8848 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். இவரது அனுபவங்களைத் தொகுத்தளித்த Touch The Top Of The World என்ற நூல் நமக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவது அல்லவா? சென்னையைச் சேர்ந்த 32 வயது இளங்கோவிற்கு இரண்டு கண்களிலும் பார்வை இல்லை. ஆனால் அவர் இன்று சுயமுன்னேற்றபேச்சாளராக உள்ளார். 400 ஆங்கில ஆசிரியர்களை வைத்து “Ace panacea” என்றநிறுவனத்தை நடத்துகிறார். அவரது “ஜெயிப்பதுநிஜம்” என்றநூலைப் படியுங்கள்; உங்களுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.

    உலகை பார்க்கும் மனப்பக்குவம் வரும்

    தரமான நூல்களைப் படித்தவர்கள் உலகில் காணும் நிகழ்வுகளில் பெருத்த மகிழ்ச்சியும், அதே வேளையில் பெருத்த துன்பமும் இல்லாமல் ‘நடுநிலை உணர்வு’ கிடைக்கப் பெறுவார்கள். “The Feeling Of Equanimity” நான் முதலில் குறிப்பிட்ட ‘விளக்குகள் பல தந்த ஒளி’ என்னும் நூலில் ‘இதுவும் கடந்துவிடும்’. “This too shall pass” என்ற தத்துவம் சொல்லப்படுகிறது. இப்படி ஒரு மனப்பக்குவம் வந்துவிட்ட நிலையில் சந்திக்கும் சங்கடமான அல்லது சந்தர்ப்பமான சூழ்நிலைகளை எப்படி சந்திப்பது என்பதுதெரிந்துவிடும்.

    வெற்றித் தத்துவங்கள் தெரிந்துவிடும்

    பல சுயமுன்னேற்ற நூல்கள் வெற்றிப்படிகளை வெளிச்சம் இட்டுக் காட்டுகின்றன. அதாவது வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்லித் தருகின்றன. “Laws of Success” என்பதுநெப்போலியன் ஹில் எழுதிய ஒருசிறந்த நூல். பல வழிகளில் உயரத் தேவையான விதிமுறைகளை நமக்குத் தருகிறது. “7 Habbit of Highly Effective People” என்ற Stephen Covey என்பவர் எழுதிய சுயமுன்னேற்றநூல் சிறந்துவிளங்கத் தேவையான 7 முக்கிய பழக்க வழக்கங்களைத் தருகிறது. “48 Ways of Our” என்பது ராபர்ட் கிளைவ் தந்துள்ள அற்புத வெற்றித் தத்துவ நூல்.

    ஞானோதயம் பிறக்கும்

    புத்தனுக்கு ஞானோதயம் வந்தால் போதுமா? நமக்கு வர வேண்டாமா? அவருக்கு போதி மரத்தடியில் இருந்ததால் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மாணவனாகிய உனக்கு ஞானோதயம் வர வேண்டுமானால் அது ஒரு சுயமுன்னேற்றநூலையோ அல்லது பல நூல்களையோ படிப்பதால் மட்டுமே ஏற்படும். அதுவும் எந்த நூல்களைப் படிக்க வேண்டும் என்பதும், படித்தபடி நடந்து கொள்ளுதலும் வேண்டும். சமீபத்தில் ஒரு நூலைப் படித்தேன். The Power of Now – இன்று இப்போதைய நேரத்தின் ஆற்றல் அதிகம் என்பது அந்த நூல். நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் உள்ள விலை மதிப்பற்ற பொக்கிஷங்களைத் திறந்து பார்ப்பதில்லை. நமது முக்கியத்துவம் உணர்வதில்லை. நமது நேரத்தின் மகிமையையும் உணர்வதில்லை என்பதை இடித்து உணர்த்த இந்த நூலை Elcort Tolle எழுதியுள்ளார்.

    நகைச்சுவை உணர்வு வளரும்

    நகைச்சுவை உணர்வு உள்ளவர்களிடம் தான் நல்ல மனிதர்களைப் பார்க்க முடியும். இந்த நகைச்சுவை உணர்வுடன், சுயமுன்னேற்ற நூல்களை வழக்கமாக கற்றவர்களிடம் அதிகம் இருக்கும். Murphy’s Law என்றநூல் Arthur Bloch என்பவரால் தொகுக்கப்பட்டது. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் இந்த நூல் “If Anything that can go wrong, will go wrong” என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்டது.

    நல்ல சுயமுன்னேற்றநூல் படித்தவர்களின் வேறு பெயர்கள்:

    சிந்தனையாளர், மகான், நிபுணர், மகிழ்ச்சி உள்ளவன், அறிவாளி, இடம் அறிந்தவன், பிறரை மதிப்பவன், நேரத்தின் அருமையை உணர்ந்தவன், பிறருக்கு உதவுபவன், தலைவன், திறமைசாலி, நல்ல மனிதன். நல்ல சுயமுன்னேற்ற நூலால்,

                அறிவு வளர்ந்து பெருமரமாகும்

                சிந்தனை மலர்ந்து நறுமணமாகும்

                மனிதர்களைப் புரிதல் உயரும்

                மனம் விரிந்து வானமாகும்

                நடவடிக்கைகள் முதிர்ந்து கனியும்

                நகைச்சுவை உணர்வு வாசனை பரவும்

                பேச்சைக் குறைத்து செயலை அதிகமாக்கும்

                நம்மையும் நேசித்து பிறரையும் நேசிக்க வைக்கும்

                உள்ளேயும் பார்த்து, வெளியேயும் பார்க்க வைக்கும்.

    சுயமுன்னேற்ற நூல்கள் ஆயிரம் மாற்றங்களை ஏற்படுத்தலாம்; சில நூல்களைப் பற்றி தான் இங்கே குறிப்பிட்டுள்ளேன். பலவற்றைக் குறிப்பிட முடியவில்லை. அவற்றுள் சில:

    1. திருக்குறள்
    2. சுவாமி விவேகானந்தரின் My Eternal India
    3. காந்தி அடிகளின் My Experiments with Truth
    4. பாரதியார் கவிதைகள்
    5. பண்டித நேருவின் Tryst With Destiny

    சுயமுன்னேற்றநூல்களைப் படியுங்கள்; படித்த நூல்களையே திரும்பவும் படியுங்கள்; உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு நீங்களே வியந்து போகலாம். பின் ஒருநாள் உங்கள் வாழ்க்கையும் சுயமுன்னேற்றநூலாகலாம்.

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் பீத்தோவன் இசையைக் கேட்க ஆவலாய் அதிகம் கூடியிருந்த கூட்டம் அது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தபடி மிக அற்புதமாக பீத்தோவன் இசையைப் பொழிந்து கொண்டிருந்தார். அந்த இடமே அமைதியாய் இருந்தது. அப்பொழுது ஒரு பெண்மணி எழுந்து, “பீத்தோவன் எவருக்கும் கிட்டாத இசை ஞானத்தை இறைவன் உமக்குக் கொடுத்திருக்கிறார். எனக்கும் அந்த ஆற்றல் கிடைத்திருந்தால்…” எனச் சத்தமாகச் குரல் எழுப்பினான்.

    பீத்தோவன் அந்தப் பெண்ணின் குரலைக் கேட்டவுடன், “அம்மா எவருக்கும் இல்லாத ஆற்றலை எனக்கு இறைவன் கொடுத்துவிட்டார் என்று சொன்னீர்கள்… நீங்களும் அந்த ஆற்றலைப் பெறமுடியுமே” என்றார்.

    “அப்படியா? எப்படி அந்த ஆற்றலைப் பெறுவது சொல்லுங்கள்” என்றாள் அந்தப் பெண்மணி.

    அவர் சொன்னார், “அது ஒன்றும் பெரிய வேலை இல்லை ஒவ்வொரு நாளும் எட்டு மணிநேரம் பயிற்சி பெறவேண்டும் நாற்பது வருடங்களுக்கு. அதுபோதும்” என்றார்.

    அந்தப் பெண்மணி அப்படியே மௌனமாகிப் போனார்கள்.

    நம்முடைய குறிக்கோளை அடைய எப்போதும் பயிற்சியும், முயற்சியும் அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுகிறவர்கள் தான் சாதிப்பாளர்கள்.

    அந்த வகையில் மகளிர் தினம் கொண்டாட உள்ள மகளிரும், தேர்வை சந்திக்க உள்ள மாணவ மாணவிகளும் அந்தப் பயிற்சியையும், முயற்சியையும் கொண்டு சாதிக்க தன்னம்பிக்கை வாழ்த்தி மகிழ்கிறது!