என் பள்ளி
ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு உயர் பள்ளியில் 8ம் வகுப்பு 1964-65ல் படித்த போது என் வாழ்வின் இலக்குகள் படிப்பில் பட்டம் பெறவேண்டும்; வெளிநாடு சென்று வர வேண்டும்.
சுமார் 50 ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கிறேன். என் சிறு வயது இலக்குகள், வாழ்வின் குறிக்கோள் என எல்லா நிலையிலும் நிறைவாக வாழ்ந்து வருவதற்குக் காரணம் சிறு வயது முதலே உள்ளத்திலே நன்கு பதிந்துவிட்ட நல்ல குணங்களும், அவைகளைப் பழக்கமாக்கியதும் தான்.
சித்தோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்தபோது ஒருமுறைபள்ளியிலிருந்து ஒருநாள் உல்லாசப் பயணமாக லாரியில் அருகிலுள்ள ஈரோட்டுக்குச் சென்று காவிரியாறு பார்த்து, ராஜாராம் தியேட்டரில் சினிமா பார்த்து வந்தது நினைவில் உள்ளது.
6ம் வகுப்பு படிக்கும்போது வகுப்பாசிரியை திருமதி. சரஸ்வதி துரைசாமி அவர்கள் கூறியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு மாமிச உணவு, டீ, காபி ஆகியவைகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டேன்.
இன்றும், என்றும் அவரைப் பற்றி எங்கும் சொல்வதில் பெருமைப்படுகிறேன்.
1965ல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்றோம். அப்போது பள்ளி மாணவர் தலைவனாயிருந்த சி. லோகநாதனுடன் கடைசிவரை இருந்து, ஒன்றாகவே பள்ளிக்குத் திரும்பினோம்.
11ம் வகுப்பில் ஆங்கில ஆசிரியர் திரு. வெங்கட்ராமன் நடத்திய ஆங்கில இலக்கணம் தான் இன்று தடையில்லாமல் பேசுவதற்கு அடிப்படை என்றால் மிகையாகாது.
விஞ்ஞானப் பாடம் நடத்திய திரு. விவேகானந்தன், சமூகப் பாடம் நடத்திய திரு. பொன்னுசாமி, தமிழாசிரியர்கள் திருவா. ஆறுமுகம் மற்றும் சிவராமன் என எல்லோருமே குடும்ப உறுப்பினர் போல் பழகினர். இன்றும் தொடர்பில் உள்ளனர்.
பள்ளிப் படிப்பில் T. சண்முகசுந்தரம், L. பாலமுருகேசன் மற்றும் நான் என கடும்போட்டி. எதிர்பாராத விதமாக 1968ல் பள்ளி இறுதித் தேர்வில் 458 / 600 எடுத்து முதலிடம் பெற்றது என்றும் மகிழ்ச்சியையும், என்னால் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தை இன்றும் வழங்கிக் கொண்டே இருக்கிறது.
என் பெற்றோர் இருவருமே பள்ளிக்கல்வி இல்லாதவர்கள், படிப்பில் நான் தான் முதல் தலைமுறை. என் உடன் பிறந்தவர்களிலும் நான் மட்டுமே ஈரோடு சிக்கைய மகாஜன கல்லூரி சென்று PUC வகுப்பு படித்தேன்.
ஈரோடு நகரவை காமராஜ மேல்நிலைப் பள்ளியில் மகன் கமல் 10ம் வகுப்பு தேர்வில் கணக்கில் 100% மார்க் வாங்கியதும், மகள் யோகதா கோவை நிர்மலா கல்லூரியில் B.Sc.Plant Biotech-ல் யுனிவர்சிட்டி ரேங்க் பெற்றதும் விதை விதைத்தவன் அதன் விளைச்சலை அறுப்பான் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகும்.
டாக்டராக வேண்டுமென்ற ஆசை. அதனால் தான் PUC-யில் நேச்சுரல் சயின்ஸ் படித்தேன். D+ மதிப்பெண் பெற்றும், வழிகாட்டுதலும், பொருளாதார வசதியும் இல்லாததால் மருத்துவராக மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்தேன். ஆனால், இன்று மருத்துவம், மக்கள் தொடர்பு, யோகா எனப் பல பட்டங்கள், பட்டயங்கள் தபால் மூலம் முடித்து, பெயருக்குப் பின்னால் M.A.,B.A.,BGL.,PGDPR,PGD Yoga,DMT,DHYN,DAC,D.Accu என A to Z எழுத்துக்களின் எண்ணிக்கையைவிட அதிகம் பெற்று, பலரும் பல நோய்களிலிருந்து முழுமையாக குணமாகி, டாக்டரய்யா என்று நன்றி கூறும் நிலையில் உள்ளேன். இதனால் பெறும் மனநிறைவு வேறு எதிலுமே இல்லை என உறுதியாகச் சொல்கிறேன்.
திருமணத்தின் போது 9ம் வகுப்பு பாஸ் செய்திருந்த என் மனைவி திருமதி முத்துலட்சுமி இன்று பல மருத்துவப் பட்டயப்படிப்புகள் முடித்து டாக்டராகிவிட்டார். அவரால் உடல், மன நோய்களிலிருந்து விடுபட்டவர்கள் ஏராளம். அவர் டாக்டர் நான் கம்பவுண்டர் என்று சொல்வேன்.
உயர்நிலைப் பள்ளியில் கற்று, வாழ்க்கையில் பழக்கமாகிக் கொண்ட அதிகாலை எழுதல், தண்ணீரில் குளித்தல், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, படிப்பில் கவனம், பெரியோருக்கு மரியாதை, உறவினர்களிடத்தில் அந்நியோன்னியம், காலம் தவறாமை, எளிய வாழ்க்கை பேராசைப்படாதது, மற்றவர்களுக்கு உதவுவது, சட்டத்தை மதிப்பது என்ற இதுபோன்ற பல நல்ல பண்புகள் தான் இன்றும் என்னை 15 வயது மனமுள்ள இளைஞனாகச் செயல்பட வைத்துக் கொண்டுள்ளன.
பள்ளியில் நடித்த யார் படித்தவர்? என்றநாடகம் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. மதுப்பழக்கம் கொடியது என்பதை வலியுறுத்திய அந்நாடகத்தில் கதாநாயகன் வேடத்தில் நடித்தது பெரும் வாய்ப்பாகும். பல போட்டிகளிலும் கலந்து கொண்டேன்.
PUC படிக்கும்போதே தவளை, கரப்பான் பூச்சிகளை சோதனைக் கூடத்தில் வெட்டுவது, மாமிச உணவு சாப்பிடாத எனக்கு அருவெறுப்பாக இருந்தது. சோதனையாக B.Sc.Zoology தான் கிடைத்தது. B.Sc.Chemistry கிடைக்கவில்லை. B.A.Economics-க்கு மாற்றி ஒருநாள் பாடத்திலேயே பட்டப்படிப்பைத் தொடரவில்லை என எழுதிக் கொடுத்து TC வாங்கிவந்தேன்.
PUC படிக்கும்போது வீட்டிலிருந்து 5 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று வருவேன். தன்னைப் படிக்க வைக்கவில்லையே என்றbஉணர்வில் ஒருநாள் காலை என் சைக்கிளை மறைத்து வைத்த என் அண்ணனை சமாதானப்படுத்தி, சில நாட்களில் பெற்றோர் பெற்றுத் தந்ததும் பசுமையாக நினைவில் உள்ளது.
தமிழ்நாடு அரசு வணிகவரித் துறையில் சுமார் 38 1/2 வருடங்கள் பணிபுரிந்து 2009 சூன் மாதம் உதவி ஆணையர் நிலையில் நேர்மையானவர் என்றபெயருடன் பணியை நிறைவு செய்தேன்.
சங்கப் பொறுப்புகளில் உண்ணாவிரதமிருந்து 1981ல் ஒருமாத காலம் கோவை மத்திய சிறையில் வாழ்ந்தது அரிய வாய்ப்பு என்றே மகிழ்கிறேன்.
ஜேஸி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளில் கற்றவைகள், பெற்றநண்பர்கள் இன்றும் என்னுடன் உள்ளனர்.
மனவளக்கலையில் 1987 முதல் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதுடன் கற்பிக்கும் ஆசிரியராகவும் இருப்பது மனநிறைவைத் தருகிறது.
சென்னை Dr. அண்ணாதுரை, கோவை Dr. கிருஷ்ணசாமி, மும்பை Dr. தேவேந்திரவோரா எனப் பலரிடமும் பயின்றதால் இன்று மருத்துவம் சார்ந்த பல புத்தகங்கள் எழுதி, ஆலோசனைகளும் வழங்கி வருகிறேன்.
தன்னம்பிக்கை இதழின் வாசகர்வட்டங்களைத் தமிழ்நாட்டின் பல நகரங்களில் ஆரம்பித்து, சுயமுன்னேற்றப் பயிலரங்களை மக்களுக்கு மாதம் ஒருமுறை இலவசமாக நடத்தி வருவது, ஜேஸியில் பெற்ற பயிற்சியாளர் தகுதியின் வெளிப்பாடுதான்.
நோய் தீர்க்கும் முத்திரைகள் என்றபுத்தகம் தமிழ், ஆங்கிலம், கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. 30 புத்தகங்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.
தங்கப்புதையல், விரும்பும் வாழ்க்கை விரல் நுனியில், உங்கள் நலம் உங்கள் கையில், வாழ்க்கை உல்லாசப்பயணம், உறவிலே தெளிவு, ஒளிமயமான எதிர்காலம், சட்டைப்பையில் சந்தோசம், நீங்களே சாதனையாளர் உட்பட பல தலைப்புகளில் அனைத்து பிரிவினருக்கும் தனிமனித, சுயமுன்னேற்றபயிற்சிகளை வழங்கி வருவதை, சமுதாயக் கடமையாகவே விரும்பிச் செய்கிறேன்.
2008 முதல் 2 ஆண்டுகட்கு ஒருமுறை 11ம் வகுப்பில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தி ஆசிரியர்களை கௌரவித்து நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் உருவாக்கி வருகிறேன்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் சென்று வந்துள்ளேன். ஏப்ரல் 2015ல் அமெரிக்காவுக்கு மகன் கமல் அழைப்பின் பேரில் 5 மாத காலப்பயணம் செல்ல உள்ளேன்.
அங்கும் தமிழ் சங்கங்கள், மனவளக்கலை மன்றங்கள், பல தமிழ் குடும்ப குழுக்களிடையே பேசும் வாய்ப்பும் வரிசையில் காத்துள்ளன.
என் பலம் என் அம்மா பவுனம்மாள். நான் என் வாழ்க்கைத் துணை முத்துலட்சுமிக்கு பலம். மகள் யோகதா ஈரோட்டிலும், மகன் கமல் அமெரிக்கா சியாட்டிலிலும் இப்போது சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். 2 பேத்தி, ஒரு பேரன் என எங்கள் குடும்பம் இடையூறின்றி இன்பமாக அமைதியாக வாழ்க்கைப் பயணத்தில் சென்று கொண்டுள்ளதற்கு அருட்பேராற்றலுக்கு நன்றிகள்.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles