தெரியவில்லை புரியவில்லை
அது ஒரு பயிற்சி வகுப்பு.
தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளம் மாணவ-மாணவிகள் மற்றும் பட்டதாரிகள் அந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார்கள். “தொழில் முனைவோர்” பற்றிய கருத்தரங்கு என்பதால், அதில் சிறப்பு பயிற்சி வழங்கும் பயிற்சியாளராக கலந்துகொண்டேன். மொத்தம் 40 பேர் அந்தப் பயிற்சி வகுப்புக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
வகுப்பின் தொடக்கத்தில் பயிற்சி பெறவந்தவர்களிடம் “தொழில் முனைவோர் என்பதை எந்த ஆங்கில வார்த்தைக் கொண்டு அழைப்பார்கள்?” என்றுகேட்டேன். ஒருசிலரால் மட்டுமே பதில் தர முடிந்தது. அதில் கலந்துகொண்ட சிலர் “தெரியவில்லை சார்”, “தெரியாது சார்” என்று பதில் தந்தார்கள். சரியான பதிலாக “Entrepreneur” என்று ஒருசிலர் மட்டுமே பதில் தந்தார்கள். பதில் தந்தவர்களிடம் “அந்த ஆங்கில வார்த்தையை தனியாக ஒரு தாளில் எழுதித் தாருங்கள்” என்றுகேட்டேன். அவர்கள் அனைவரும் அந்த வார்த்தையை தவறாகவே எழுதி இருந்தார்கள்.
“தொழில் தொடங்க வேண்டும்” என்ற ஆர்வம் உங்களிடம் இருக்கிறது. “தொழில் வெற்றிபெற வேண்டும்” என்ற ஊக்கமும் உங்களிடம் உள்ளது. தொழிலைப் பற்றியே நீங்கள் சிந்திக்கின்ற தொழில் முனைவோராக நீங்கள் மாற விரும்புகிறீர்கள். தொழில் தொடங்குவதற்கு உதவும் அமைப்புகளை நீங்கள் அணுகும்போது ஆங்கிலத்தில் கண்டிப்பாக பேச வேண்டிய நிலை வரும். இந்தச்சூழலில் தொழில் முனைவோருக்கான ஆங்கில வார்த்தை இதுதான் என்பது பற்றிய தெளிவு இல்லாமல், நீங்கள் செயல்படுவது சரியாக அமையாது அல்லவா? என்று கேட்டேன். பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் திகைத்துப் போனார்கள்.
மேலே குறிப்பிட்ட நிகழ்வு ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றினாலும் அந்த நிகழ்ச்சி இன்றைய சூழலை படம்பிடித்துக் காட்டுகிறது.
“எந்தக் குறிக்கோளோடு எதை நோக்கி பயணம் செய்கிறோம்?” என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல், பயணத்தைத் தொடங்குவதும், தொடர்வதும் இப்போதுசிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. இத்தகைய செயல்கள்தான் அவர்களை “தெரியவில்லை சார்”, “புரியவில்லை சார்” என்று அடிக்கடிபேச வைக்கிறது. அதுவே அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய சிக்கல்களை உருவாக்கிவிடுகிறது.
சின்னஞ்சிறு வயதிலேயே, “மூன்றுநேரமும் வேளாவேளைக்கு சாப்பாடுகிடைக்கிறது. இதுவே எனக்குபோதும்” என்ற உணர்வை மட்டும் வளர்த்துக்கொண்ட சில இளைய உள்ளங்கள் பிற்காலத்தில் அவர்களுடைய வாழ்க்கைப் பற்றியும், அவர்களது முன்னேற்ற நிலை பற்றியும் சிந்திப்பதில்லை.
பள்ளியில் பயிலும்போது, ஆசிரியர்கள் கேள்விகள் கேட்பார்கள். அப்போதும் “இது எனக்குதெரியவில்லை சார்”, “அது எனக்குபுரியவில்லை சார்” என்றுசொல், தன்மீது எந்தத் தவறும் இல்லை என்பதை மற்றவர்களுக்கு உணர வைக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.
வீட்டில் ஏதேனும் வேலை செய்யச் சொன்னால்கூட, “எனக்கு இந்த வேலை செய்யத் தெரியாது, அதுமட்டும்தான் எனக்குப் புரியும்” என்று நாசூக்காகச் சொல்லி நழுவிவிடும் தன்மையோடு இவர்கள் காணப்படுவார்கள்.
ஒரு தகவல் அல்லது செயல்முறைப்பற்றி தனக்கு தெரியவில்லை என்றால் ‘எனக்கு தெரியாது’ என்று சொல்வதில் தவறில்லை. ஆனால், ஒன்றைப்பற்றி ‘தனக்குத் தெரியாது’ என்று தெரிந்தபின்பும், அதைப்பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் இருப்பதுதான் வேதனை படவேண்டிய செயலாகும்.
கீழேவிழுந்து விட்டதற்கு வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் விழுந்தே கிடப்பதுதானே அவமானப்படுவதற்கு அஸ்திவாரமாகக் காணப்படுகிறது.
பூமியில் பிறந்த அனைவரும் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டும், புரிந்துகொண்டும் இந்த உலகத்தில் பிறக்கவில்லை. ஆனால், பூமியில் நிலவும் சூழல்களைப் பார்த்து “தான் எப்படி வாழ வேண்டும்?” என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். அனுபவத்தின்மூலம் அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். இப்போது “தெரியவில்லை”, “புரியவில்லை” என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. அப்படியே புரியவில்லை என்றாலும் பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். எனவே இளம் வயதிலிருந்தே நன்மைதரும் எதனையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது நல்லது.
ஒரு ஹோட்டலில் சிறப்பான விருந்து நடந்து கொண்டிருந்தது.
பலர் அதில் கலந்து கொண்டிருந்தார்கள். விருந்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு பெண்ணின் தலைமீது ‘கரப்பான் பூச்சி’ விழுந்துவிட்டது. அந்தப் பெண் துடிதுடித்துப் போனாள். தலையை அங்கும் இங்குமாக ஆட்டினாள். கரப்பான்பூச்சி அவளது பட்டுப்புடவையின் மேல் படர்ந்தது. கையில் இருந்த உணவுத் தட்டை கீழே போட்டுவிட்டாள் அந்தப்பெண்.
கரப்பான்பூச்சி எங்கே இருக்கிறது? என்று மேலும் கீழுமாக பார்த்தாள். அதற்குள் கரப்பான்பூச்சி அந்த பெண்ணின் முதுகு பகுதிக்கு வந்தது. அங்கும் இங்குமாக ஓடினாள் அந்தப்பெண். அவளது பதற்றம் நின்றபாடில்லை. “ஏன் என்ன ஆச்சு உங்களுக்கு?” என்றுவிருந்தில் கலந்துகொண்ட சில பெண்கள் ஓடிவந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் ஓடிவந்த மற்றொரு பெண் துடிதுடித்தாள். “அய்யோ என் முதுகில் ஏதோ கடிக்கிறதே” என்று அலறினாள்.
விருந்தில் கலந்துகொண்ட அனைவரின் கவனமும் அவள் பக்கம் திரும்பியது. அந்தப் பெண்ணும் சாப்பாட்டு தட்டை வீசிவிட்டு, அங்கும் இங்குமாக ஓடினாள். வீசப்பட்ட தட்டில் இருந்த உணவு சிலரது பட்டுப்புடவையில் பக்குவமாக ஒட்டிக்கொண்டது. அங்கிருந்த ‘சர்வர்’ நிலைமையை உணர்ந்துகொண்டார்.
அவரது கண்கள் கரப்பான்பூச்சியைத் தேடியது. பயத்தில் உறைந்துபோன கரப்பான்பூச்சி ஒரு மேஜையின் அடியில் கிடந்ததைக் கண்டார். அவர் நெருங்கி வந்ததும் கரப்பான்பூச்சி சர்வரின்மேல் விழுந்தது.
சர்வ சாதாரணமாக அந்த ‘சர்வர்’ கரப்பான்பூச்சியை கையில் பிடித்துக்கொண்டார். எந்தவித பதற்றமும் இல்லாமல் மெதுவாக ஜன்னலுக்கு அருகில் சென்று, அந்தக் கரப்பான்பூச்சியை வெளியே பறக்கவிட்டுவிட்டு அவரது வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.
விருந்தில் ஏற்பட்ட கலவரம் முடிவுக்கு வருவதற்கு நெடுநேரம் ஆகியது. ஆனால், அந்த சர்வர் எந்த சலனமும் இல்லாமல் அவரது வேலையைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்த “விருந்துநிகழ்ச்சி” தரும் உண்மைகளையும் நாம் உற்றுநோக்க வேண்டியது அவசியமாகும்.
கரப்பான்பூச்சியைப் போலவே நம்மைச்சுற்றி நாள்தோறும் பலவிதமான பிரச்சனைகள் பறந்து வந்து சுற்றுகின்றன. சிலர் அந்தப் பிரச்சனைகளைப் பார்த்து பயப்படுகிறார்கள். சிலர் பயந்து ஓடுகிறார்கள். சிலர் எரிச்சல் படுகிறார்கள். கோபத்தின் உச்சியில் நின்று பிறர்மீது ‘தவறு’ என்னும் சேற்றைவாரி வீசுகிறார்கள். இவர்களால், பிரச்சனைகளை கடைசிவரை தீர்க்க முடியாத நிலைதான் ஏற்பட்டுவிடுகிறது. விருந்தில் கரப்பான்பூச்சிக்கு பயந்து ஓடிய பெண்கள் நிலையும், பிரச்சனைகளை எதிர்கொள்ள இயலாத நிலையைத்தான் சுட்டிக்காட்டியது. ஆனால், அதேவேளையில் சர்வர் கரப்பான்பூச்சி பிரச்சனையை மிகவும் தைரியமாகவும் சிறப்பாகவும் கையாண்டு வெற்றி கண்டார்.
எனவே, ஒரு பிரச்சனையை எப்படி கையாள வேண்டும்? என்பதில்தான் வாழ்க்கையின் வெற்றி அமைகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இளம் பருவத்தில் பள்ளிக்குச் செல்வதும், பாடங்கள் படிப்பதும், கல்லூரிக்குச் செல்வதும், பட்டங்கள் பெறுவதும், “வாழ்க்கைப் பிரச்சனைகளை சந்திப்பதற்காக வழங்கப்படும் பயிற்சிகள்” என்ற மனநிலையோடு இளம் உள்ளங்கள் படிப்பைத் தொடர வேண்டும்.
“தெரியவில்லை”, “புரியவில்லை” என்ற வார்த்தைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, “நல்லவற்றை தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன்” என்ற எண்ணத்தோடு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் எந்தப் பிரச்சனையையும் எளிதில் கையாளலாம். வெற்றிகளை நம் பக்கம் குவிக்கலாம்.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles