– 2015 – January | தன்னம்பிக்கை

Home » 2015 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்

    வெற்றி’ என்னும் சொல் 3 எழுத்தைக் கொண்டது. ஆனால் அந்த வெற்றியைத் தீர்மானிப்பது 4 எழுத்துக்கள் ஆகும்.

    “வெற்றி பெறவேண்டும்” என நினைப்பவர்கள், இளம்வயதிலேயே 4 ஆங்கில எழுத்துக்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஆங்கில எழுத்துக்கள் “KASH” என்பதாகும்.

    KASH – என்னும் 4 எழுத்துக்களில்

              K  என்பது – “Knowledge” என்பதைக் குறிக்கும். அதாவது  ஒருவரின் அறிவை இது குறிப்பிடுகிறது.

              A என்பது – “Attitude” என்பதாகும். இது ஒருவருடைய மனப்பாங்கைக் குறிக்கிறது.

              S  என்பது – “Skill” என்பதைக் குறிப்பிடுகிறது. ஒருவரது திறனை இந்த எழுத்து சுட்டிக்காட்டுகிறது.

              H என்பது- “Habit” ஆகும். ஒருவரது பழக்கவழக்கத்தை இந்த எழுத்து குறிக்கிறது.

    “ஒருவரது வெற்றியைத் தீர்மானிப்பது Knowledge, Attitude, Skil, Habit – ஆகிய 4 வார்த்தைகள்தான்” என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    இளம்வயதிலேயே அறிவை வளர்த்து நல்ல மனப்பாங்கை உருவாக்கி திறமையை மேம்படுத்தி சிறந்த பழக்கவழக்கங்களோடு திகழ்பவர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

    “அறிவு” (Knowledge) என்பது ஒருவருக்கு தானாக வந்துவிடுவதில்லை. இது தெளிவான முயற்சியும், தெளிந்த பயிற்சியின் மூலம்தான் ஒருவரிடம் வந்து சேரும்.

    இந்த அறிவை வளர்த்துக்கொள்வதற்கு, இளம்வயதிலேயே சுற்றுப்புறச்சூழலை கூர்ந்து கவனித்து வருவது மிகவும் அவசியமாகும். தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாக கவனிப்பவர்கள் மனதில், சில உண்மைகள் தெளிவாகத் தெரியும். தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டவர்கள் தனது அறிவைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.

    அதுமட்டுமல்லாமல் தேவையான நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்களும் போதிய அனுபவ அறிவைப் பெறுகிறார்கள். அனுபவ அறிவின் துணையோடு பள்ளிகளில் சேர்ந்து பாடங்களைப் படிக்கும்போது அறிவு மேலும் பெருகுகிறது. இந்த அறிவை, மேலும் மேம்படுத்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து முறையாகப் பாடங்களைப் படித்து அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். சிலர் பாடம் அல்லாத பொது அறிவை வளர்க்கும் புத்தகங்களையும் பெரியவர்களது வரலாறுகளையும் படித்து தங்கள் அறிவுக்கு மெருகூட்டிக் கொள்கிறார்கள்.

    கல்வி கற்பதனால் உருவாகும் அறிவும், புத்தகம் படிப்பதனால் உருவாகும் அறிவும் இணைந்து ஒருவருக்கு கிடைக்கும்போது அவர் அறிவில் சிறந்தவராக திகழ்கிறார்.

    “கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்து முதுமொழி. நல்ல முறையில் கற்று அறிவைப் பெற்றவர்கள் செல்லுகின்ற இடமெல்லாம் உரிய மரியாதையைப் பெறுவார்கள்.

    “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

     எழுமையும் ஏமாப்பு உடைத்து” – என்பது திருக்குறள் ஆகும்.

    “வாழ்க்கையில் ஒருமுறை ஒருவர் கற்றகல்வியானது அவருக்கு ஏழு பிறப்பிற்கும் துணையாக நிற்கும்” என்பது திருவள்ளுவரின் கருத்தாகும்.

    இதனால்தான், கல்வி கற்க வேண்டிய பருவமாக இளம்பருவத்தை குறிப்பிடுகிறார்கள். இளமையிலேயே ஒருவர் கற்க வேண்டிய நூல்களைக் கற்று, கல்வியில் சிறந்து விளங்கினால் அவரது வாழ்க்கை இனிமை நிறைந்ததாக மகிழ்ச்சியுடன் காணப்படும்.

    பி.ஏ., பி.எஸ்சி., எம்.ஏ., எம்.எஸ்சி. பி.காம்., எம்.காம்., பிடெக்., எம்.டெக் போன்றபட்டங்களை பெற்றுவிட்டாலும் படித்ததற்கு ஏற்றவாறு போதிய அறிவைப் பெறாதவர்களை, இந்த உலகம் மதிப்பதில்லை. எனவே, வாழ்க்கையில் வெற்றிகளைப் பெற்றுத்தரும் அறிவை தகுந்த காலத்திற்குள் பெறமுயலுவது அறிவிற் சிறந்த செயலாகும். அறிவைப் பெருக்கிக் கொள்வதைப்போலவே ஒருவர் தனது மனப்பாங்கையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மனப்பாங்கை இருவகையாகப் பிரிக்கலாம். அவை – 1. நேர்மறைமனப்பாங்கு 2. எதிர்மறைமனப்பாங்கு ஆகும். ஒருவர் தான் பார்க்கின்ற பொருளையெல்லாம் நேர்மறையோடு பார்ப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். இதைப்போலவே நேர்மறைமனப்பாங்கை வளர்ப்பதற்கு, தகுந்த தகவல்களை தேடி கண்டுபிடித்து கேட்பது நல்லது. தனக்கு கிடைக்கும் அனுபவங்களையும் “எல்லா நன்மைக்கே” என்ற மனப்பாங்கோடு ஏற்றுக்கொள்வது நேர்மறை மனப்பாங்கு ஆகும்.

    ஆனால், அதேவேளையில் “அய்யோ இப்படி ஆகிவிட்டதே” என்று அழுது புலம்புவதும், “எனக்கு மட்டும்தான் நேரம் சரியாக இல்லை” என்று எல்லா நேரங்களில் ஏங்கி வருந்துவதும், எதிர்மறை மனப்பாங்கை  உருவாக்கிவிடும்.

    இதனால்தான் பெரியவர்கள் “மனம்போல் வாழ்வு” என்கிறார்கள். ஒருவர் நல்லதை எண்ணும் மனப்பாங்கோடு இருந்தால் அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள் எல்லாம் நல்லதாகவே அமையும்.

    அறிவைப் பெருக்கியும் மனப்பாங்கை செதுக்கியும் நலமாக இருந்தாலும் ஒருவர் திறன் பெற்று விளங்கினால் மட்டுமே, அவரால் சிறந்த வெற்றிகளைப் பெறஇயலும். எனவேதான் அறிவு மற்றும் மனப்பாங்கைப்போலவே ஒருவரது திறன்  வாழ்க்கையின் வெற்றிக்கு இன்றியமையாததாக மாறுகிறது.

    வரலாற்றில் சிறப்புப் பெற்றவர்களெல்லாம் இளமைப்பருவத்திலிருந்தே தங்களது வாழ்க்கையை வளமாக்க உதவும் திறன்களை திட்டமிட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தர், 5வது வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டதும் மனப்பாடம் செய்யும் திறனை வளர்த்துக்கொண்டார். ஆசிரியர் நடத்தியப் பாடங்களை ஒருமுறைகேட்டாலும் அதனை மனதில் நிறுத்தி, எப்போது வேண்டுமானாலும் அதனை திரும்பச் சொல்லும் சிறப்பான ஆற்றலைப் பெற்றிருந்தார். பாடத்தைத்தவிர மற்றப் பாடங்களையும், பாடல்களையும் படித்து மகிழ்ந்தார். சிலம்பு, வாள் வீச்சு, மல்யுத்தம் போன்ற பயிற்சிகளோடு, தியானத்தையும் கற்றுக்கொண்டார். ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டார். இளமையிலேயே தனது திறனை வளர்த்துக்கொண்ட சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோவில் நடைபெற்றகூட்டத்தில் “அமெரிக்க சகோதர, சகோதரிகளே” என்று அழைத்து தனது பேச்சாற்றலால் வெளிநாட்டவர்களையும் வியக்க வைத்தார். இளமையிலேயே தனது திறனை வளர்த்துக்கொண்ட சுவாமி விவேகானந்தரின் வெற்றி அனைவரையும் அவர் பக்கம் திரும்ப வைத்தது.

    ஒருவர் அறிவில் சிறந்து விளங்கலாம். நல்ல மனப்பாங்கு கொண்டவராக இருக்கலாம். சிறந்த திறன் படைத்தவராக திகழலாம். இருப்பினும் அவரது பழக்கவழக்கங்கள் சிறந்ததாக அமையாவிட்டால் அவரது வெற்றி கேள்விக்குறியதாகிவிடும். எனவேதான், “வெற்றி பெறவேண்டும் என்று விரும்புபவர்களின் பழக்கவழக்கங்கள்  மிகச்சிறந்ததாக அமைய வேண்டும்” என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்கும் என்பார்கள். இளம்வயதில் ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறந்ததாக அமைத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்களின் பழக்கவழக்கங்கள் சரியாக அமைகிறதா? என்பதை பெற்றோர்களும் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும்போது திருத்தவும், நல்லவை செய்யும்போது பாராட்டவும் பெற்றோர்கள் தயங்காமல் முன்வர வேண்டும். அப்போதுதான் இளைய உள்ளங்களின் பழக்கவழக்கங்கள் திசைமாறிச் செல்லாமல் நல்ல பாதையை நோக்கி நகரும்.

    தேசியக்கவி பாரதியார் இளம்வயதிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமைப்பெற்று விளங்கினார். பிறமொழி இலக்கியங்களைக்கூட தமிழில் மொழிபெயர்த்தார். இளம்பருவத்திலேயே கவிதை எழுதுவதை பழக்கமாக வைத்திருந்தார். இந்த நல்ல பழக்கவழக்கங்கள்தான் அவரை மிகச்சிறந்த கவிஞராக்கியது. ‘மகாகவி’ என்று அனைவரும் புகழும் வண்ணம் அவர் புகழ்கொடி நாட்டி வெற்றி பெற்றார்.

    “படிக்காத மேதை” என்று புகழ்பெற்ற பெருந்தலைவர் காமராஜர் இளம் வயதிலேயே மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி சேவை புரிவதை பழக்கமாக வைத்திருந்தார். அதனால்தான் இன்றும் தேசியத்தலைவராக அனைவராலும் போற்றப்படுகிறார்.

    இதைப்போலவே, தந்தை பெரியாரின் பழக்கவழக்கங்கள் சாதிப் பாகுபாடுகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் எதிர்க்கும் விதமாகவே இளமையில் அமைந்தது. தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கும் இந்தப் பழக்கம்தான் அவரது பெருமைக்கும், வெற்றிக்கும் அடித்தளமாக அமைந்தது.

    எனவே – வாழ்க்கையில் வெற்றி பெறவிரும்புபவர்கள் Knowledge, Attitude, Skill, Habit – ஆகிய நான்கையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். KASH எனப்படும் 4 ஆங்கில எழுத்துக்களையும் நெஞ்சில் நிறுத்தி உழைக்க கற்றுக்கொண்டால் வெற்றிக்கனியை மிக விரைவாக தட்டிப் பறிக்கலாம்.

    இந்த இதழை மேலும்

    இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி

    இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால், அதை சர்க்கரை வியாதி (Diabetes) என்று சொல்கிறோம். பரம்பரை, தட்பவெப்ப நிலை, உடற்பயிற்சி செய்யாதது, உணவைச் சரியாக மென்று சாப்பிடாதது, அதிக இனிப்பு சாப்பிடுவது என்ற காரணங்களால் இந்நோய் வருவதாகச் சொல்கின்றனர்.

    நம் தமிழ்நாட்டில் அரிசி உணவு அனைத்து மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது. கர்நாடகாவில் கேழ்வரகு, வட இந்தியாவில் கோதுமை என ஆங்காங்கு விளையும் தானியங்களே உணவாகின்றன.

    பொதுவாக உலகம் முழுதும் இன்று பரவியுள்ள ஆங்கில மருத்துவம் பயின்ற மருத்துவர்கள், சர்க்கரை நோய் வருவதற்கும், அரிசிக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவருகின்றனர். எல்லா தானியங்களிலும்  கார்போஹைட்ரேட் எனும் மாவுப்பொருள் பெரிய அளவில் மாறுபடுவதில்லை. எனவே, அரிசி உணவையே உண்ணுங்கள் என்று பரிந்துரைக்கின்றனர்.

    தற்போது இது தவறு என விஞ்ஞான பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவு தான் இரத்த சர்க்கரை (Blood Suger) என்று கூறப்படுகிறது. இது GI ஆகும்.

    கிளைசெமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்பது இரத்த சர்க்கரையின் அளவைக் குறிப்பதாகும்.

    உணவிலுள்ள ஒரு கிராம் கார்போஹைட்ரேட் (மொத்த கார்போஹைட்ரேட்  நார்ச்சத்து), அதை உண்டபின், இரத்தத்தில் சர்க்கரை அளவை எவ்வளவு அதிகமாக்குகிறது என்பது தான் இந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (GI). சுத்தமான குளுக்கோஸின் அளவு 100 என்றால், நாம் உண்ணும் தானியங்களின் அட்டவணை:

    வெள்ளைப் பொன்னி அரிசி      – 75

    பாஸ்மதி அரிசி                              –  58

    சீரகச் சம்பா அரிசி                       –   56

     கைக்குத்தல் அரிசி                      –  50

    இந்த அளவு 70 முதல் 100 வரை உள்ள உணவுகள் சர்க்கரை அளவை சீக்கிரம் அதிகப்படுத்தும்.

    55 முதல் 70 வரை உள்ள உணவுகள் மெதுவாக (மீடியம்) உயர்த்தும்.

    55க்குக் கீழ் உள்ள உணவுகள் சர்க்கரை அளவைஅதிகரிக்காது.

    இந்த அட்டவணையின் படி, கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் இரத்த சர்க்கரை உயராது என்பது தெளிவாகிறது. கோதுமை, குறுந்தானியங்களான சாமை, வரகு, ராகி, தினை, குதிரை வாலி என்றபலவும் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைந்தவைகளே.

    இவற்றிலுள்ள அதிக நார்ச்சத்து வாயு பிரச்சனைகளை நீக்கி, உடல் எடையைச் சரியாக வைத்துக் கொள்ளும்.

    பல நாடுகளில் தானிய GI அட்டவணை அதன் பாக்கெட் மீது குறிக்கப்பட வேண்டுமெனச் சட்டங்கள் உள்ளன.

      தமிழ்நாட்டில் மக்கள் வெள்ளைப் பொன்னி அரிசியை அதிக அளவு உண்பதால், வட இந்தியர்களை விட அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அடுத்து, நம் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கணக்கிடுவதற்கு, எந்த அளவு உணவு சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். உணவு அளவைக் குறிக்க GL (Glycemic Load) என்று சொல்கிறோம். பொதுவாக நாம் உண்ணும் உணவில்

    கார்போஹைட்ரேட்    50%

    கொழுப்பு                            30%

    புரோட்டின்                        20%

    என்ற அளவில் இருந்தால் நல்லது.

    ஆனால், புள்ளி விபரங்கள் நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் 75% உள்ளதாய் தெரிவிக்கின்றன. இதனால் இரத்த சர்க்கரை அதிக அளவில் உள்ளது உறுதியாகிறது.

    கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) அதிகமான உணவுகளை அதிக அளவு  சாப்பிட்டால் (GL), அனைவருமே சர்க்கரை நோயாளிகளாக விரும்புகிறோம் என்று அர்த்தம்.

    எனவே, வாசகர்களே! உஷார்.

    மல்லிகைப் பூ போல் உள்ள வெள்ளைப் பொன்னிக்குப் பதிலாக கைக்குத்தல் அரிசி, கோதுமை, ராகி உள்ளிட்ட குறுந்தானியங்களை உணவாக உட்கொண்டு, எதிர்கால சமுதாயத்தையாவது சர்க்கரை நோயற்றதாக மாற்றுவோம்.

    தொகுப்பு: Jc. S.M.பன்னீர்செல்வம்

    கோவை

    97893 75278

    இந்த இதழை மேலும்

    பல்லும்… சொல்லும்……

    பவானிக்கு அருகில் கிட்டம்பட்டி என்ற சிறிய ஊரில் தான் பிறந்தேன். அப்பா திரு.வெங்கடாசலம், குமரகுரு கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அம்மா திருமதி. சாந்தி, இல்லத்தரசி. சிறிய குழந்தையாக இருக்கும் பொழுதிலிருந்து இன்று வரை நான் எதன் மீது ஆசைப்படுகிறேனோ அதை நிறைவேற்றிக் கொடுப்பார்கள். என்னுடைய படிப்பின் மேல் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது அதிகபட்ச நம்பிக்கையை வைப்பார்கள். எனது பெற்றோர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நிச்சயமாக நான் காப்பாற்றி இருக்கிறேன்.

    எனது ஆரம்ப கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை நான் பயின்றது எல்லாமே எனது சொந்த ஊரில் தான். கல்விக்கும், ஒழுக்கத்திற்கும் பெரிதும் முன்னுரிமை கொடுக்கும் பள்ளியில் தான் படித்தேன்.

    பள்ளி வாழ்க்கையை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. காரணம், நண்பர்களுடனான பழக்கங்கள், விளையாட்டுகள் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

    சராசரியாக படிக்கும் மாணவனாக தான் இருந்தேன். காலப்போக்கில் படிப்பின் மீது எனக்கிருந்த ஆர்வம் அதிகரித்தது. படிப்பு தான் வாழ்க்கை என்று எனது தந்தை அடிக்கடி என்னிடம் கூறுவார். அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு படித்தேன். எல்லா தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் எடுக்கக்கூடிய அளவில் என்னை தயார்படுத்திக் கொண்டேன். எனது பெற்றோர்களின் ஊக்குவிப்பே படிப்பில் நான் முன்னிலை வகிக்கக் காரணம்.

     கோவை மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். பின்னர், வெளிநாட்டில் மூன்றாண்டுகள் பல் மருத்துவம் சார்ந்த பயிற்சிக்குச் சென்றிருந்தேன். மருத்துவப் பிரிவுகள் பல உண்டு. ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு ஒரு துறையைத் தேர்வு செய்து அதில் சிறப்பானவர்களாக தங்களை வெளிக்காட்டிக் கொள்வார். அவ்வகையில் நான் பல் மருத்துவம் சார்ந்த துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இந்தப் பல் வலி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல் வரிசைகளில் முன் பல் அழகாகவும், எந்த பொருளை உண்ண வேண்டும் என்றாலும் இதன் பயன் அதிக அளவில் இருக்கும். சிங்கப்பல் கடினமான பொருட்களைக் கடிக்கவும்  கடவாய்ப்பல் உணவை நன்றாக மென்று சாப்பிடவும் பயன்படுகிறது.

    சாப்பிடும் போது பல் வலியால் ஏற்படும் வேதனையை எவராலும் தாங்கிக் கொள்ள முடியாது தான். மனித உடலுக்கு நோய் வருவது இயல்பு. அது போலவே பற்களுக்கும் நோய் தாக்குதல் ஏற்பட்டு சொத்தைப் பல் வரும் அபாயம் ஏற்படுகிறது. இம்மாதிரி பல் பிரச்சனை வருவதற்குக் காரணம் உணவுமுறை, உணவு உண்ட பின்பு செய்யும் சில விதிமுறைகளை சரியாகக் கடைபிடிக்காமல் இருத்தல் போன்றவையாகும். பல் சொத்தை ஏற்பட்டால் உணவுப் பொருள் எதையும் திருப்திகரமாகவும், நன்கு மென்று சாப்பிடவும் முடியாமல் போகிறது.

    பல் துலக்கும் முறை

    காலை எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும். காலையில் பல் துலக்குவதைக் காட்டிலும் இரவு வேளைகளில் பல் துலக்குதல் மிகவும் நல்லது. பெரும்பாலும், இரவு வேளைகளில் உணவு உண்டதும் படுக்கச் சென்று விடுகிறோம். அப்போது பற்களைப் பற்றிய நினைப்பே நமக்கு வருவது கிடையாது. நாம் உண்ணும் உணவில் ஏதேனும் சிறு துணுக்குகள் பற்களின் இடையே மாட்டிக் கொள்ள நேரும். தூங்கும் போது வாயில் சுரக்கும் உமிழ் நீரின் அளவு குறைவாகத் தான் இருக்கும். இதனால் தூங்குகின்ற அந்த 8 மணி நேரத்தில் பல்லில் உள்ள துணுக்குகள் சொத்தையாக மாறும். அப்படி மாறுகின்ற சொத்தைப் பல் அருகிலுள்ள பற்களுக்கும் பரவும். எனவே இரவு நேரத்தில் பல் துலக்குவது அவசியமான ஒன்று.

    பல்லும் ஈறும்

    பல்லோடு சேர்ந்தது தான் ஈறும், இதைத் தனியே பிரிக்க முடியாது. வாயிலுள்ள பற்களை எழும்பு பிடித்திருக்கிறது என்று தான் பலர் நினைப்பர். ஆனால் எழும்பும், ஈறும் இணைந்து தான் பல்லைப் பிடித்துக்கொண்டு இருக்கிறது.

    உடலில் எந்த நோய் வந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது ஈறு தான். உதாரணமாக, ஒருவருக்கு சர்க்கரைநோய் வந்துவிட்டால் முதலில் ஈறுகள் தான் பலவீனமாகும். எனவே நோய் ஏற்படும் அறிகுறிகளை ஈறுகள் மூலம் அறியலாம்.

    பல் கிளப் பயன்பாடுகள்

    குழந்தைப் பருவதில் சில குழந்தைகளுக்கு வாயில் விரல் வைத்து கைசூப்பும் பழக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவு பல் வரிசை முறையில்லாமலும், முன்னுக்கு பின்னும் வாய் மூடமுடியாமலும் பல் பெரிதாக காணப்படும். குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு பேசும் பொழுதோ அல்லது வகுப்பில் முன்நின்று பேசவோ சங்கப்படும் சூழ்நிலைகள் ஏற்படும். இதனால் குழந்தைக்கு தன்னம்பிக்கை குறைந்து விடும் நிலை உருவாகிறது. இதற்கு தான் பல் வரிசையை சீராக்க பல் கிளிப் முறைஉள்ளது. இந்த கிளிப் முறையை முறையாக கையாண்டால் பல் வரிசையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். எனவே அந்தக் குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி மற்றகுழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தர முடியும்.

    பல் வேர் சிகிக்சை

    பல் சொத்தையாகி பிடுங்குகின்ற நிலையில் ஈறுகள் வழியாக பல்லின் அடியில் செய்யும் சிகிச்சை முறைதான் பல் வேர் சிகிச்சை. இச்சிகிச்சையின் போது பல்லை பிடுங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல்லை பாதுகாக்கலாம். இந்த சிகிச்சைக்கு பின்னர் முறையாக பாதுகாத்தால் நிச்சயம் இந்த பல்வலியை சில ஆண்டுகளுக்கு வராமல் தள்ளிப்போடலாம். இந்த சிகிச்சையை முறைவாரியாக பிரித்து மாதம் ஒருமுறை, இருமுறை என சிகிச்சை பெறுவதன் மூலம் பல்லைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

    பல் சந்தை அடைத்தல்

    பல் ஈறுகளில் சதை வளரும் இது இயல்பானது. உதடுடன் ஈறுகள் ஒட்டி இருப்பதால் உதடுகள் ஒவ்வொரு முறையும் அசையும் பொழுது ஏற்படும் இடைவெளியால் சந்துகள் உருவாகிறது.

    அதுபோலவே பல் வரிசை அமைப்புகள் சரியாக இருந்தால் சந்துகள் வராது. ஏதேனும் ஒரு பல் மாறி வந்தாலும் பல்லில் சந்து வரும். இதனை முறையற்ற பற்சந்து என்பர். இதனை சரிசெய்யும் சில வழிகள்…

    • கிளிப் முறையை கையாளுதல்
    • காம்போசிட் என்ற ஒரு மெட்டீரியல் மூலம் சரி செய்தல்

    ஆரம்பத்தில் ஒரு பல்லை அடைக்க வேண்டும் என்றால் சில்வர் கொண்டு பற்களை அடைத்தார்கள். ஆனால் இப்பொழுது மாற்று பல் எனத் தெரியாத அளவிற்கு பற்களை அடைக்கலாம்.

    கேப் மூலம் பற்களிலுள்ள சந்துக்களை அடைக்கலாம். பற்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கேப்பின் வடிவமைப்புகள் மாறும்.

    மற்றநோய்களும், பற்களின் பாதிப்புகளும்

    சர்க்கரை நோயால் பாதிப்படைந்தவர்கள் பல் ஈறுகள் வலுவிழந்து காணப்படுவார்கள். சர்க்கரை நோய் வந்தாலே உடம்பில் எதிர்ப்பு சக்திகள் குறையத் தொடங்கும். எனவே ஈறுகளுக்கு இரத்த ஓட்டம் சரியாக செல்லும் வாய்ப்பு குறைவாகத் தான் இருக்கும்.

    • ஈறு சார்ந்த எல்லா பிரச்சனைகளுமே பற்களையும் பாதிக்கும்.
    • கேன்சர் நோயால் பாதிப்படைந்தவர்களுக்கும் பல் பிரச்சனைகள் ஏற்படும். இவர்கள் முறையாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று அதைப் பின்பற்றினால் பிரச்சனைகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
    • இதயப் பாதிப்பு ஏற்பட பல்லும் காரணமாக இருக்கிறது.

    வாய் புற்றுநோய்

    வாய்புற்று நோயைத் தடுக்க முழுமையான மருத்துவம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். புற்றுநோய் மூலம் வரும் கட்டிகளை அகற்ற மருத்துவமுறைகள் இருக்கின்றன.

    பற்பசைகள் பயன்பாடு

    நோய் வருமுன் காக்க புளோரைடு பற்பசைகளை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம். வயதுக்கு ஏற்றாற்போல் பற்பசைகளின் தேர்வு முறைமாறுபாடு செய்தல் வேண்டும். நாகரிக மாறுதலுக்கு ஏற்றாற்போல் பற்பசைகளும் மாறிக்கொண்டு தான் இருக்கிறது. புதிதாய் வரும் அனைத்து பற்பசைகளையும் பயன்படுத்தலாம் என எண்ண வேண்டாம். சரியான முறையில் பற்பசைகளைப் பயன்படுத்தினால் நீண்ட நாள் ஆரோக்கியமாகவும், பல் வலிமையாகவும் இருக்கும்.

    எந்த ஒரு நோயையும் வந்த பின்னர் குணப்படுத்த முடியவில்லை என்றநிலைக்கு ஆளாகாமல் வருமுன் காப்பதே ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

    இந்த இதழை மேலும்

    உறவின் பெருமை

    கைகளிரண்டும் உடைந்திருக்கையில் பறக்க இரு சிறகு கிடைத்ததற்குச் சமமானது உறவினர் உடனிருப்பது. மேலானதும் போதாதுமாய் இருக்குமந்த உறவுகள்; இருக்கிறார்கள் என்பதே பலம். சிரிக்கையில் சிரிக்கவும் அழுகையில் துடைக்கவும் உடனிருக்கும் உறவுகளின் கைகள் மகத்தானது. கசங்கிப்போன மலர்களின் வாசம் போல உதவிக்கில்லாத போதும் உறவுகள் இருக்கிறார்கள் என்பது இனிக்கவே செய்கிறது. முரசடிக்கும் கைகள் ஓய்ந்து போனாலும் அடுத்தடுத்து உயிருள்ள கடைசி நொடியிலும் கொட்டும் முரசொலி சப்தம் காதுகளை எட்டித் தொடுவதைப் போல், உறவுகளின் பங்கில் ஒரு புள்ளியேனும் நம் மனதை எட்டி தொட்டுக் கொண்டே தான் இருக்கிறது. பச்சை வயலின் ஈரமும், பரந்த வானின் நீளமும் கொண்டு அகன்றிருக்கும் மனசு உறவுகள் சிலரிடத்தில் வெகுவாக இருப்பது நமக்கான நம்பிக்கை கூடுவதன் உச்சமன்றி வேறில்லை.

    எனக்கு நீ உனக்கு நான் என்று வாழ்வது; இலை வேருக்கு வெளிச்சம் பாய்ச்சுவதும், வேர் இலைக்கு நீர் பாய்ச்சுவதும் போன்ற இயல்பின் நிறைவன்றி வேறென்ன? காற்றிற்குப் பாகுபாடில்லை, நதி யாரைக் கண்டும் கோபத்தில் நின்று கொள்ளப் போவதில்லை. அலைகள் உதைப்பவரின் காலைக்கூட நனைத்துத் தான் விலகிச் செல்கிறது. பின் மனிதன் மட்டும் தனக்கென வாழ்ந்து தனக்கென்று சாகையில், எந்த புதிய புல்முளைத்து ‘மனிதரை’ நீ மேலானவனாக வாழ்ந்தாயடா என்று காட்டிவிடப் போகிறது?

    சார்ந்திருத்தல், சாய்ந்து கொள்ளல், தாங்கிப்பிடித்தல், வாகை சேர்த்தல், வாலிபத் திமிரையும் வாஞ்சை மனதையும் விதைகளாக்கி வாழையாகப் பெற மனிதருக்கு அன்பின் நெருக்கமும், அதைப் பெருக்கும் உறவுகளின் ஈர்ப்பும் ஒருவருக்கு ஒருவரென அனைவருக்குமே வேண்டும்.

    தனித்து அழும் கண்ணீரைப் போல சேர்ந்து மகிழும் கனமும் மனதிற்கு இனிப்பானதென உணர உறவுகளுடன் சேர்த்திருந்துப் பார்த்தல் வேண்டும். நெருங்கி நிற்கையில் சிலவேளை குழப்பங்கள் நேரிடலாம். பிடித்தங்கள் மாறுபடலாம். முரண்படுகையில் கோபம் வரும். சண்டை மூளலாம். உனக்கா எனக்கா என்று சுயநலத்தில் மார்பு தட்டி இருவேறாகக் குடும்பம் வெட்டி முறியலாம். முறியட்டுமே… முறிந்து பின் புரிந்து, அன்பின் ஏக்கத்த்தில் மீண்டும் சேர்ந்து அணைக்கையில் கூடும் சுகம் பிரிந்திருப்பதில் இல்லையே.

    பிறருக்குக் காட்டாத பூரிப்பு, பகிர்ந்து கொள்ளாத வெற்றி, வெளியில் தெரியாத வீரம், ஒருவருக்குள் ஒருவருக்காக மட்டும் வலுத்தென்ன பயன்? இருக்கும் உணர்வை சலிப்பு காட்டி, சிரிப்பு கூட்டி, மலிய மலிய கொடுத்துக் கொடுத்து மீளும் ஆனந்தக் கண்ணீர் ததும்ப தெரியும் முகம் மானுட நீதியை மனிதத்துள் பொத்திக்காக்க ஒற்றுமையின் வழிநின்று முயற்சிக்கும் இக்காலத் தேவையறிந்த முகமன்றி வேறென்ன?

    வெவ்வேறு பக்கமாக மாறி மாறி வேறு பக்கம் திரும்புகையிலும் வாழ்க்கை வேறு வேறாகத் தெரிகிறது. வெவ்வேறு வண்ணமும் எண்ணமுமாக நாளும் பொழுதும் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே   இருக்கிறது. இதில் தனியே நின்று செய்து முடித்தவை செய்தவையாகவே முடிகிறது. சுற்றத்தோடு அறிந்து செய்யப்பட்டவையே சாதித்ததாகிறது. காரணம், மகிழ்ச்சி என்பது பகிர்தலில் இருக்கிறது. சிரியோருக்கு கொடுப்பதிலும், பெரியவரிடமிருந்து பெறுவதிலும் இருக்கிறது மகிழ்ச்சி.

    நண்பரொருவர் கார் வாங்கினார். வீட்டிற்குப் போனதும் எப்போதும் போல தனது அறைக்குப் போனார். உடை மாற்றிக்கொண்டு படுக்கச் சென்றுவிட்டார். யாரோ ஒருவர் விவரமறிந்து தொலைபேசியில் அழைத்து, “என்னப்பா கார் வாங்கியிருக்கியாம், சொல்லவே இல்லையே” என்கிறார் இமைகள் விரிய. அதற்கந்த நண்பன், இதில் உன்னிடம் சொல்வதற்கு என்ன இருக்கு, எனக்கு லோன் கிடைத்தது அதில் வாங்கினேன். நீயா பணத்தைக் கட்டப்போற மாசம் மாசம் என்று கடுப்படிக்க அவர் எதிர்முனையில் டப்பென இணைப்பைத் துண்டித்தார்.

    இன்னொரு நண்பருக்கு கார் கிடைக்கிறது. வேலை செய்யும் நிறுவனத்தில் கார் தருகிறார்கள். உபயோகித்த கார். அவர் வேகவேகமாக வீட்டிற்கு வருகிறார். வரும் வழியிலேயே தொலைபேசியில் அழைத்து தனது அம்மா, அப்பா, மனைவி என குடும்பத்திற்குச் சொல்லி விடுகிறார். கார் வாசலில் வந்து நின்றதும் அம்மா ஓடிவந்து ஆரத்தி எடுக்கிறாள். நம் வீட்டிற்கு முதல் கார் வந்துவிட்டது என்று அண்ணன் தம்பிகள் எல்லாம் அவனை கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் காரில் ஏறி அமர்ந்து எட்டி எட்டி குதித்து ஆரவாரப் படுத்துகிறார்கள். அந்த நண்பன் உடனே குளித்துவிட்டு எல்லோரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்கிறான். வரும் வழியில் நல்ல உணவகம் பார்த்து அரிய உணவுகளை வாங்கித்தந்து உண்டு மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறான். அவனுடைய நண்பர்களில் ஓரிருவரும் உடன் கலந்து கொண்டு அவனோடு மகிழ்ச்சியில் பூரிக்கிறார்கள். வீட்டிடம் வண்டி வந்து நின்று எல்லோரும் இறங்கியதும், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மகிழ்ச்சியோடு விசாரிக்கிறார்கள். இடையே “அவர் இன்ஜினியரா இருக்காறா? நான் ஏதோ சாதாரண வேலை செயறாரோன்னு நினைச்சேன்” என்று பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி பேசி உசுப்பேத்திவிட, நண்பனின் மனைவி பெருமையோடு அவனைப் பார்க்கிறார். அவன் அன்று படித்து பட்டம் வாங்கியதற்கான அத்தனை மதிப்பும் மகிழ்ச்சியும் இந்த ஒரு காரில் இன்று அவனுக்குக் கிடைக்கிறது.

    இரண்டு பேருமே கார் வாங்கினார்கள். முதல் நண்பன் புதிதாக வாங்கினான். இரண்டாம் நண்பனுக்கு கம்பெனி முன்பு பயன்படுத்திய பழைய காரையே தருகிறது. இதில் மகிழ்ச்சி யாருக்குக் கிடைத்தது பார்த்தீர்களா? இது ஒரு மாயையான உலகம். மகிழ்ச்சியையும் வெற்றியையும் ஆடம்பரத்திலும் அடுத்தவரின் தோல்வியிலுமே வைத்திருக்கிறது இவ்வுலகம். தான் ஜெயிப்பது, தான் அடைவது மட்டுமே இங்கே கொண்டாடப்படுகிறது.

    கொண்டாட்டம் என்பது ஒரு கை ஓசையல்ல. இரு கை நான்காகி நான்கு எட்டாக கொக்கரிக்கும் உறவுகளின் ஆர்ப்பரிப்போடு வருகிறது கொண்டாட்டம். தான் உண்டு உறங்கி எழுவதைவிட, உண்டோமா, உறங்கினோமா என்று பார்த்து கவனித்து அன்பு செய்து அக்கறையோடு பரிமாறும் உணவிலும் உறக்கத்திலும் ஒரு இனிப்புண்டு. அந்த இனிப்பை அடைய உறவுகளோடு கூடி வாழுங்கள்.

    தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசும் பொங்கலுக்கு மெல்லும் கரும்பும் தனியே இருப்போருக்கு வீண்செலவாகவே கருதப்படுகிறது. உறவுகள் நெருங்கி இருக்கையில் தான், பண்டிகையும் விழாக்களும் கோலாகலப்படுகிறது. குழந்தை சிரிப்பதும், கிழவர் வாழ்த்தும், அம்மாப்பா ஆசிர்வதிப்பும், அக்கா தங்கை அண்ணன் தம்பிகளின் மகிழ்வும் மனதிற்கு நிறைவைத் தருவது முழு உண்மை. என்றாலும் உறவுகளைப் பிரிவது என்பது பெறு வலி அன்றி வேறில்லை. எனக்கு ஊர்விட்டு வருகையில் எனது எதிர்வீட்டு மரத்தைப் பிரிந்து வந்தால் கூட வலிக்கும்.

    ஒவ்வொரு முறை ஊர் போகையிலும், வழி நெடுகிலும் இருக்கும் மரம், மரத்திற்கு மேல் தெரியும் வானம், வானத்தில் நகரும் மேகம், மேகமுரசிப் பெய்யும் மழை, மழையோடு ஆடும் மலர்கள், மலரில் சிறகடிக்கும் தேனீ, தேனீக்கள் தாண்டிப்போகும் காக்கை, காக்கையோடு சுற்றும் குருவி, தலை அமர்ந்திருக்கும் கன்னுக்குட்டி என எல்லாமே ஊரில் பார்க்கையில் எத்தனை அழகோ அத்தனை கொடுமை அவர்களை விட்டு விலகி வருவதும்.

    தோல் இறுக்கிக் கட்டிக்கொண்டு முத்தமிடும் குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு விமானம் ஏறுவது அத்தனை சுலபமல்ல. போகும் வழியெல்லாம் உயிரருக்கும் குழந்தையின் நினைவை பிரித்துச் செல்லும் பெற்றோர் மட்டுமே அறிவர் அதை. எனவே ஒரு இதயத்தையும் பிரிவால் அறுக்காதீர்கள். உறவுகளோடு கூடி மகிழ்ந்திருங்கள். உறவுகளின் நெருக்கத்தில் வாழ்க்கை பலவாக மகிழ்வாக சிறகடிக்கட்டும். சின்ன இதயம் முழுவதும் சிரிப்பு நல்லுறவுகளால் நிறையட்டும். உறவுகள் சிரித்துக் குலுங்கும் வீடு சொர்க்கமாகவே எல்லோருக்கும் வாய்க்கட்டும்.

    வெற்றியின் அர்த்தம்; ஒருவர் தோற்பதென்பது மாறி, திறமையை அறிவதும் பகிர்வதுமாய் ஒரு சகோதரத்துவ பூமி எல்லோருக்குமாய் சமதர்மத்தில் உருவாகட்டும்.

    இந்த இதழை மேலும்

    குளியல் குறிப்புகள்

    அன்பு நண்பர்களே! குளிப்பதற்கு கூடவா செயல் முறை விளக்கம் தேவை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனாலும், அது பற்றிய புரிதல் நம் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவைப்படுவதால் அது பற்றி இனிப் பார்ப்போம். குளியல் என்பது ஆரோக்கிய கண்ணோட்டத்தில் கீழ்கண்ட விதமாக நாம் விவாதிக்கலாம்.

    1. அன்றாடக் குளியல்: நாம் எல்லா நாட்களலும் எந்தச் சூழலிலும் (ஜுரம் அடிக்கும்போதும்) குளிப்பது நல்லதுதான். நாம் குளிக்க தண்ணீரைத்தான் (பச்சைத் தண்ணீரை) பயன்படுத்த வேண்டும். வெய்யில் மற்றும் குளிர் நாளிலும் பச்சைத் தண்ணீரைப் பயன்படுத்தினால் நம் உடலானது அதிக கோடை வெப்பம் மற்றும் பனிக்காலக் குளிர் ஆகிய இரண்டையுமே இயல்பாக எற்றுக்கொள்ளும் தனமையில் நம் உடல் இருக்கும். நம்ப முடியாவிட்டால் நீங்களே முயற்சித்துப் பார்க்கலாம். அப்புறம் பச்சைத் தண்ணீரில் குளித்தால் சளி பிடித்துக்கொள்ளும் என்று பயப்படுபவர்கள்தான் அன்றாடம் சளி என்ற சனியனுடன் மல்லுக் கட்டுகிறார்கள். அப்புறம் குளியல் என்று சொல்லிக்கொண்டு உடலுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றிக்கொள்வது சரியல்ல. நாம் தினமும் தலைக்கும் சேர்த்தே தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். புதிதாக ஒரு ஊரில் குளிக்க நேர்ந்தால் முதலில் அந்தத் தண்ணீரை சிறிது எடுத்து நம் காதுகளன் பின்னால் தடவிவிட்டு பின்னர் குளித்தால் அந்தத் தண்ணீரால் யாதொரு கேடும் உண்டாகாது. அப்புறம் குளியலுக்கு இரசாயன சோப்பு கட்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. மூலிகை சோப்புகளைப் பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தும்போது அந்தச் சோப்பை ஒரு முறை தேய்த்து நுரைக்க வைத்து அதனை உடலில் தேய்த்துக் குளிக்கலாம். சோப்பை அப்படியே உடலில் நேரடியாகப் போடுவது நம் தோலின் வியர்வைச் சுரப்பிகளை அடைத்துவிடும்.

    2. தலைக்குளியல்: வாரம் ஒரு முறை நம் உச்சம் தலை முதல் பாதம் வரை இலேசாக சுட வைத்த நல்லெண்ணெய்யை தடவி மஸாஜ் செய்ய வேண்டும். உடலில் மஸாஜ் செய்வது எல்லாம் மூலாதாரத்தை நோக்கிய திசையிலேயே இருக்க வேண்டும். அதற்கு எதிரான திசையில் செய்தால் உடலில் வாய்வு சிக்கிக்கொண்டு உடல் வலி மற்றும் சோர்வைத் தரும். ஆக, எப்படி எண்ணெய்த் தேய்ப்பது என்று தெரியாமல் தலை குளித்துவிட்டு அப்புறம் உடல் அசௌரியம் ஏற்படும்போது எண்ணெய்த் தேய்துக் குளிப்பதே தவறு என்ற முடிவிற்கு வந்துவிடுவோம். பின்னர் கொஞ்சம் வியர்க்கும் அளவிற்கு சிறிது வெய்யலிலோ அல்லது வேலையோ செய்து விட்டு பின்னர் மூலிகை பொடி அல்லது ஷாம்பு கொண்டு தலை முதல் பாதம் வரை எண்ணெய்ப் பிசுக்கு போகும் வரைத் தேய்த்துக்குளிக்க வேண்டும். தலைகுளிக்கும் அன்று பகலில் தூங்கக்கூடாது. இரவில் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

    3. தொட்டிக் குளியல்: நாம் கால்களை வெளியே நீட்டி வைத்துக் கொண்டு இடுப்புப் பகுதி மட்டும் தண்ணீரில் இருக்கும்படி (தொப்புள் வரை நீர் மட்டம் இருக்க வேண்டும்) 15 நிமிடங்கள் அமர்ந்து இருக்கலாம். இப்படிச் செய்வதால் நம் மூலாதாரம் குளிர்ந்து நம் உடலும் குளிர்ச்சியடைகிறது. இதன் மூலம் நம் கல்லீரலின் வெப்பம் தணிகிறது. மூலம் குணமடையும். தினமும் தொட்டிக் குளியல் செய்வதால் உடல் புத்துணர்வு பெறும்.

    4. மண் குளியல்: மாதம் ஒரு முறை புற்று மண்ணை நீரில் கரைத்து உடல் முழுவதும் பூசி, சற்று காய்ந்த பின்னர் தண்ணீரில் குளித்தல் வேண்டும். மண் குளியலானது நம் தோல் மற்றும் உடலில் உள்ள கழிவுகளை வியர்வைச் சுரப்பிகளின் மூலம் வெளியேற்றம் செய்கிறது. உடல் புத்துணர்வு பெறுகிறது.

    5. வாழை இலைக் குளியல்: ஆறு மாதம் ஒரு முறை பச்சை வாழையிலைகளை உடலின் அனைத்து பாகங்களிலும் நாரால் கட்டி, 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் காயவைத்து பின்னர் இலைகளை நீக்கிவிட்டு தண்ணீரில் குளிக்க வேண்டும். இதனால் நம் உடலில் உள்ள விஷங்கள் நீக்கப்படுகின்றன. இவ்விதமானக் குளியல் நாட்பட்ட நோய்கள் மற்றும் நீடித்த காய்ச்சலிலிருந்து விடுபட முடியும்.

    ஆக, ஆரோக்கியத்திற்கான குளியல் வகைகளை நாம் பார்த்துள்ளோம். இதில் அன்றாடக் குளியல் மற்றும் தொட்டிக்குளியலை நாம் தினம்தோறும் காலையில் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    தினசரிக் குளியலால் நம் உடலின் இருபது சதவீத தண்ணீர் தேவைப் பூர்த்தியாகிறது.

    தினசரி தொட்டிக் குளியலால் நம் உடலின் இருபது சதவீத உஷ்ணம் தணிகிறது

    இந்த இதழை மேலும்

    இடைவெளியை பூஜ்யமாக்குவோம்

    உபாயங்கள் என்றால் வழிகள் ஆகும். முன்பு உபாத்தியாயர் என்று ஆசிரியர்களைச் சொல்வார்கள். அந்த ஊரில் பல குடும்பங்களிலும் ஏதேனும் பிரச்னைகள், நோய்கள் என்றால், அவரை அணுகி ஆலோசனை கேட்பார்கள்.

    பிரச்னைகள், நோய்களின் விபரம் அறிந்து, அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகள், பல வழிகள் சொல்வார். எனவே தான் அவரை உபாத்தியாயர் என்றனர்.

    இன்றைய ஆசிரியர்களின் நிலை அப்படியா உள்ளது? அவர் ஆசிரியர் என்பதே அந்தப் பகுதியில் பலருக்கும் தெரியாது; அப்படித் தெரிந்தாலும், எந்தப் பள்ளியில் பணிபுரிகிறார் என்பதும் தெரியாது. அந்த அளவுக்கு ஆரவாரமில்லாமல் பணிபுரிகின்றனர் என்று சொல்லிக் கொள்ளலாம்.

    இடைவெளியைக் குறைப்பது, இடைவெளியை பூஜ்யமாக்குவது இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. உதாரணமாக நமக்கும் ரயிலுக்குமான இடைவெளி 500 அடி என்றால், ரயிலை நோக்கி நாம் நடந்து செல்லச் செல்ல இடைவெளி குறைந்து கொண்டே இருக்கும்.

    நமது பெட்டிக்குச் சென்று, அதில் ஏறி, நமது இருக்கையில் (Seat/ berth) அமரும் போது, இடைவெளி பூஜ்யமாகிறது.

    சமீபத்தில் என் நண்பரின் மகன் ஓணம் பண்டிகையின் போது, சென்னையிலிருந்து கோவை செல்ல, கேரளா செல்லும் ரயிலில் 3ம் ஏ.சி. வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்து டிக்கெட் வைத்திருந்தார். நமக்குத்தான் டிக்கெட் ரிசர்வ் செய்து விட்டோமே என வழக்கம் போல சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் சென்றார்.

    இவர் பயணிக்க வேண்டிய இரயில் நிற்கும் (பிளாட் பாரம்) நடைமேடைக்குப் பக்கமே செல்ல முடியாதவாறு ஏராளமான மக்கள் கூட்டமாம். எப்படியோ, அந்த பிளாட்பாரத்தை நெருங்கிவிட்டார். இவர் பயணம் செய்யும் பெட்டி அந்த இடத்திலிருந்து 15 பெட்டிகளுக்கு அப்புறமாய் இருந்தது.

    அந்த நடைமேடையில் ஓர் அடிகூட முன்னேற முடியாமல், நின்றுவிட்டு, இரயில் புறப்பட்ட பின், சென்னையில் தங்கி, மறுநாள் திரும்பியதாயும், தன் வாழ்நாளில் இதுபோன்ற கூட்டத்தைப் பார்த்ததில்லை என்றும் கூறினார்.

    பயணத்தன்று, சம்பந்தப்பட்ட இரயில் நிலையம் சென்று, ரயில் நிற்கும் பிளாட் பாரத்தை அடைந்து, நாம் பயணிக்கும் பெட்டிக்குச் சென்று, நமக்காகப் பதிவு செய்யப்பட்ட இருக்கையில் அமரும் வரையான இடைவெளியை, அதாவது நமக்கும், நம் இருக்கைக்குமானதை, குறைக்கும் செயல் தான் பூஜ்யமாக்குதல் என்பது. இதில் வெற்றியும் பெறலாம்; தோல்வியும் பெறலாம்.

    சமீபத்தில் சீரடி சென்றுவிட்டு, நள்ளிரவு 2 மணிக்கு பூனா இரயில் நிலையத்தில் மும்பையிலிருந்து கோவைக்கு வந்த இரயிலில், நம் பெட்டியில் ஏறினால், நமது குழுவுக்கான எல்லா பெர்த்துகளிலும் பயணிகள் இருந்தனர். கூட்டமாக இருந்ததால் அரை மணிநேரம் போராடி, அவர்களை எழுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

    இதேபோல் மறுநாள் மந்த்ராலயத்தில் மதியம் 12.30க்கு இரயில் ஏறினால், நமக்காக பூனாவிலிருந்து பதிவு செய்த இருக்கைகளில் வேறு ஒரு குழுவினர் அமர்ந்திருந்தனர். இது எங்களுடையது, எழுந்திருங்கள் என்றால் காது கேட்காதது போல் அமர்ந்திருந்தனர்.

    மந்த்ராலயத்தில் வெயிட்டிங் லிஸ்ட் என்பதால், பணம் அதிகமானாலும் பரவாயில்லை என பூனாவிலிருந்து டிக்கெட் எடுத்து அதற்கான தொகை செலுத்தி, ஏறுமிடம் மந்த்ராலயம் என வாங்கியிருந்தோம்.

     நம் இருக்கையில் அமர்ந்திருந்த இந்தி மொழி பேசிய பெண்கள், நம்மிடம் டிக்கெட் கேட்டனர். எப்படி இருக்கிறது கதை? அவர்கள் டிக்கெட்டைக் காண்பிக்குமாறு எல்லோரும் இணைந்து சப்தம் போட்டு, அங்கிருந்து எழ வைத்தோம்.

    இடைவெளி பூஜ்யமாவது, அதாவது நமக்குப் பதிவு செய்த இருக்கைக்குச் சென்று அமர்வதற்கு எவ்வளவு நேரமானது பாருங்கள்.

    நமக்கு ஒதுக்கிய இடத்தில் வயதானவர்கள், முடியாதவர்கள் அமர்ந்திருந்தால், மனித நேயத்தோடு, இடைவெளியை பூஜ்யமாக்க விரும்பாத பல நல்ல உள்ளங்களும் நம்மிடையே உள்ளார்கள்.

    எனவே, நம் நோக்கம் இடைவெளியை பூஜ்யமாக்குவது தானே தவிர, குறைப்பதல்ல. இடைவெளி பூஜ்யம் என்பது நம்முடன் பல இலக்கை, குறிக்கோளை இணைப்பது தான். இப்போது இடைவெளியை பூஜ்யமாக்குவோம் என்பதில் யாருக்குமே சந்தேகம் இல்லை என உறுதியாக நம்புவோம்.

    சரி! நம் வாழ்க்கையில் எதில் இடைவெளியைப் பூஜ்யமாக்குவது? இது பெரிய கேள்வி தான்.

    இப்போது நாம் கீழ்கண்டவற்றில் எந்த நிலையில் இருக்கிறோம்?

     உடல் நலத்தில்,

    பொருளாதாரத்தில்,

    மன அமைதியில்,

    கல்வியறிவில்,

    சம்பாதிப்பதில்,

    எதிர்பார்ப்பதில்,

    எண்ணங்களில்,

    ஆசைகளில்,

    வாழ்வின் இலட்சியங்களில்

    (அதாவது குறிக்கோள்களில்)

    இவற்றில் இன்று எந்த அளவில் இருக்கிறீர்கள் எனப்பட்டியல் தயாரிக்க வேண்டும். ஒரு சிலை செதுக்க நல்ல கல் எப்படி மிக முக்கியமோ, அதுபோல் இந்தப் பணி முக்கியமானதாகும்.

    உடல் நலம்

    நோய் விபரம், பசி, தூக்கம், கழிவு நீக்கம் இவற்றில் இன்றைய நிலையை எழுத வேண்டும். (உ.ம்) கண்கோளாறு; நீண்ட நேரம் வாசித்தால் கண் வறட்சியாகி வலிக்கிறது.

    எதிர்பார்ப்பு

    கண் வறட்சியால் உண்டாகும் கண்வலியிலிருந்து விடுபட வேண்டும். எவ்வளவு நேரம் படித்தாலும் கண் வலிக்கக் கூடாது என்பதே எதிர்பார்ப்பு.

    தகவல் சேகரித்தல்

    கண் வறட்சிக்கான காரணம் தெரிந்துவிட்டது; அதிக நேரம் படிப்பது. ஆனால், அதிக நேரம் வாசிக்கும் எல்லோருக்குமே கண் வறட்சி வருவதில்லை என்பதால், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். எந்த நேரம் வாசித்தால் கண் வறட்சியாகிறது; அதற்கு கண்களைக் கழுவினால் சரியாகிறதா? வேறு சொட்டு மருந்துகள் விட வேண்டுமா? ஓய்வு எடுக்க வேண்டுமா? பயிற்சிகள் ஏதேனும் செய்ய வேண்டுமா? உணவில் கண்களைப் பாதுகாக்கும் பப்பாளிப் பழம், பொன்னாங்கன்னிக் கீரை போன்றவைகளைச் சேர்க்க வேண்டுமா? டாக்டரிடம் காண்பிக்க வேண்டுமா? எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டுமா? உடல் சூடு குறைய மிளகு நீர் அல்லது கடுக்காய் நீர் குடிக்க வேண்டுமா? போன்ற தகவல்கள் சேகரித்தல் தான் உங்களுக்கும் கண் வறட்சிக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பவை.

    தேர்வு செய்தல்:

     மேற்கூறிய தகவல்களுள் உங்களுக்குப் பொருத்தமான, தேவையான தகவல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

     முறை:

    ஒவ்வொன்றையும் ஒரு தாளில் சிவப்பு மையால் எழுதி, முக்கோணமாக மடித்து வைக்கவும். எழுந்து நின்று, வலது கையை தோள்பட்டை உயரத்தில் கிடைமட்டமாக நீட்டிக் கொள்ளவும். இடது கையில் இந்தத் தாளைப்பிடித்து, உள்ளங்கையை மூடி, இதயத்தின் முன்புறம் வைக்கவும்.

    இப்போது வேறு ஒருவரை உங்கள் எதிரில் நீட்டிய கைமுன் நிற்கச் சொல்லி, அவரது வலது கையை உங்கள் வலது கை மணிக்கட்டின் மீது வைத்து அழுத்தச் சொல்லுங்கள். அதேநேரம், நீங்கள் உங்கள் வலது கையை தம்கட்டி கீழே விடாமல் பலமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

     தொடரும்

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    2015 ஆங்கில புத்தாண்டு பிறந்துவிட்டது. பண்டைய காலத்தில் ஆங்கில புத்தாண்டு மார்ச் மாதத்தின் முதல் நாள் தானாம். காரணம் மார்ச் மாதம் தான் வசந்தத்தின் தொடக்க மாதமாகவும், ரோமானியர்களின் கடவுளான ‘மார்ஸ்’ என்பதாலும், ‘மார்ச்’ புத்தாண்டு மாதம் ஆக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, அப்போது ஆண்டுக்கு 10 மாதங்களே இருந்திருக்கிறது. அதற்குப்பின்பு சேர்க்கப்பட்ட மாதங்கள் தான் ஜனவரி, பிப்ரவரி.

    கி.மு. 153-ம் ஆண்டு முதல் தான் ரோமானியர்களால் ஜனவரி மாதம் ஆண்டின் முதல் மாதமாக ஆனது. அதற்குக் கூட காரணம் ஜனவரி (ஜானுஷ் என்ற லத்தின் சொல்லுக்கு வாயில்களின் கடவுள் என்று பொருள்) மாதம் வாயில்களின் கடவுளுக்குரிய மாதமாக பண்டைய கால ரோமானிய மக்கள் நம்பியது தானாம்.

    என்றாலும் கிரிகேரியன் காலண்டர் முறைப்படி ஜனவரி முதல் தேதியை புத்தாண்டு தினமாக முதலில் கொண்டாடிய நாடு ஸ்காட்லாந்து. அதனைத் தொடர்ந்தே இன்று உலக நாடுகள் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடி வருகிறது.

    இப்படி வரலாற்றுப் பதிவுகள் சொல்கிற இந்நேரத்தில், இல்லையில்லை இந்த ஆண்டில் நாமும் வரலாற்றில் பதிவாகும் சாதிப்புகளை, நிகழ்த்தக்கூடியவர்களாக உயர்வோம்.

    நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது

    கனவுக்குள்ளும் நீ கனமாயிரு

    பூவுக்குள்ளும் நீ பூகம்பமாயிரு

    வேருக்குள்ளும் நீ விசுவரூபமாயிரு

    நீருக்குள்ளும் நீ நெருப்பாயிரு

    நீ நீயாயிரு

    என் கவிதைத் தொகுப்பில் நான் எழுதிய கவிதை வரிகளோடு உங்கள் இதயம் என்னும் வாசல் கதவைத் தட்டி உள்ளே நுழைகிறேன்.

    கடல்களின் கதைகளுக்கும், மலைச் சிகரங்களுக்கும் இடையில் ஓர் இரகசியப் பாதை செல்கிறது. பூமியின் மகனாக ஆவதற்கு முன்னால் நீங்கள் அந்தப் பாதையில் பயணம் செல்ல வேண்டும்.

    உமது அறிவிற்கும், புரிந்து கொள்ளுதலுக்கும் இடையில் ஓர் இரகசியப் பாதை செல்கிறது.  மனிதரோடு ஒன்றாக உம்மை அடையாளம் கண்டு கொண்டு அதன் மூலம் உங்களை அடையாளம் கண்டு கொள்ளுமுன், அந்தப் பாதையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்பார் கலீல் ஜிப்ரான்.

    மனிதனிடம் அமைந்துள்ள ஆற்றல்கள் எண்ணற்றவை. ஆனால் அவற்றைச் செயல்படுத்துவதற்கான துணிச்சல் இல்லாத காரணத்தால் அந்த ஆற்றல்கள் உலகத்துக்கு பயன்படாமல் போய்விடுகின்றன.  உங்கள் வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றிக் காட்டும் மாபெரும் சக்தி துணிச்சலுக்கு உண்டு. துணிச்சல் இருந்தால் தடைகளும் பிரச்சனைகளும் தூள் தூளாகிவிடும். நேர்மையும், விவேகமும் நிறையப் பெற்றமனிதர்கள் விண்ணளவு உயர்ந்ததற்குக் காரணம் துணிச்சலே!

    நீங்கள் போராடிய காரணத்தால் அனுபவிக்கவும், உழைத்த காரணத்தால் ஓய்வு பெறவும் விதைத்த காரணத்தால் அறுவடை செய்யவும் உங்களுக்கு உதவக்கூடிய பரிசுதான் எது? அவை உங்கள் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறது!

    அது உங்களுக்கு நீங்களே அணிந்துக் கொள்ளக்கூடிய பரிசு. வாழ்வில் அடைய வேண்டுமென்று இரகசியமாக மனதுக்குள்ளேயே ஏங்குகின்ற அனைத்தையும் பெற உதவுகின்ற பரிசு அது. துன்பம் நிறைந்த வாழ்க்கைப் பாதையை வியத்தகு முறையில் எளிமையாக்கித் தந்து உண்மையான இன்பத்தை நீங்கள் அடைய வழிவகுக்கும். மந்திரம் போல் அமைந்திருக்கும் பரிசு உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. அந்தப் பரிசின் பெயர்தான் துணிச்சல்.

    துணிச்சல் என்ற பரிசை நீங்களே உங்களுக்கு வழங்கிக் கொண்டு நீங்கள் துணிச்சல்காரனாக ஆகிவிட்டால் மற்றவையெல்லாம் உங்களைத் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும்; கட்டிக் கொள்ளும்.

    கேப்டன் ஸ்காட் அண்டார்டிக் கண்டத்தை நோக்கி மேற்கொண்ட பயணம்.  அழிவினை தோற்றுவித்த போது, அவர் பின்வருமாறு குறிப்பெழுதிய போது அவருக்கிருந்த அந்தத் துணிச்சலைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

    “எங்கள் பயணம் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தக் கடிதம் எப்படியாவது கண்டெடுக்கப்பட்டு உங்களுக்கு அனுப்பப்படும் என்ற நம்பிக்கையோடு இதை எழுதி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். என்னுடைய நிலைமை பற்றியும், என்னுடைய முடிவு பற்றியும், நல்லவிதமாக எண்ணி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன், போய் வருகிறேன்”. எங்களுக்கு நேர்ந்த இத்தகைய முடிவு குறித்து நான் அஞ்சவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற நீண்ட பயணங்களை மேற்கொண்டு அவற்றின் மூலம் பெறக்கூடிய எளிய இன்பத்தை இழந்துவிட்டோமே என்றுதான் கவலைப்படுகிறேன்.

    நம்பிக்கையிழந்த நிலையில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் கால்கள் எல்லாம் பனியால் உறைந்துவிட்டன. கப்பலுக்கு எரிபொருள் இல்லை. உணவைக்கண்டு நெடுநாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும், எங்கள் முகாமுக்கு வந்து எங்களுடைய பாடல்களையும், மகிழ்வூட்டும் உரையாடல்களையும் கேட்பீர்களாயின் உங்கள் மனதுக்கு இதமாக இருக்கும். நாங்கள் எங்கள் முடிவின் எல்லைக்கு மிக அருகாமையில் நெருங்கிவிட்டோம்.

    அண்டார்டிக் பாலைவனத்தின் துயர்மிகுந்த சூழ்நிலையில் இருண்ட முகாமுக்கு வெளியே ஒரு நிமிடம் நின்று பாருங்கள். உங்களுக்கு மேலேயும் இருள் இருக்கும். உங்களைச் சுற்றிலும் இருள் படிந்திருக்கும். ஆனால் அந்த முகாமுக்கு உள்ளே இருக்கின்ற கேப்டன் ஸ்காட்டின் உள்ளத்திலும், அவருடைய நண்பர்களின் உள்ளத்திலும் இருளைக் காண முடியாது. இறப்பதற்கென்றே விதிக்கப்பட்டு அங்கு சென்ற அவர்களின் மகிழ்வூட்டும் பாடல்களையும், உரையாடல்களையும் இன்றும் கேட்கலாம். கவனமாக கேளுங்கள். அவர்களின் துணிச்சலை உங்களுடையதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

    1909 ஆம் ஆண்டில் கியூபாவில் ஒரு காட்சி. அந்தக்காட்சியின் கதாநாயகர்கள் லாசரும், அவரது நான்கு நண்பர்களும். அவர்களுடைய துணிச்சலை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்.

    கியூபாவில் அப்போதைய நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கடுமையான மஞ்சள் காய்ச்சல் மக்களை ஆயிரக்கணக்கில் தாக்கி அழித்துக் கொண்டிருந்தது. அந்தப் பேரழிவுக்கான காரணம் கொசுக்கடிதான் என்று விஞ்ஞானிகளும், டாக்டர்களும் கருதினர். அந்த வியாதி எவ்வாறு பரவுகிறது என்பதைத் சோதித்துக் கண்டுபிடிக்க சில மனிதர்கள் தேவைப்பட்டனர். அப்போது லாசரும், அவரது நான்கு நண்பர்களும் தாமாக முன்வந்து அந்தச் சோதனைக்கு “நாங்கள் தயார்” என்று டாக்டர்களிடம் கூறினர்.

    ஒரு சிறிய வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த கட்டில்களின் நுனியில் ஐந்து பேரும் அமர்ந்து கொண்டனர். வெள்ளி நிற வரிகள் கொண்ட கொசுக்களை ஒவ்வொன்றாக அவர்களின் கைகளில் அமர்ந்து கடிக்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டே படுத்துவிட்டார்கள். தம்நாட்டு மக்கள் காய்ச்சல் நோயின் கொடுமையிருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவதற்காக அந்தக் கொசுக்களுக்கு இரையாகி அவர்கள் தம்மையே மாய்த்துக் கொண்டார்கள்.

    இராணுவ முகாமின் நடுவில் அழகிழந்த அந்தச் சிறிய வீட்டுக்கு வெளியே ஒரு நிமிடம் நின்று அந்த வீட்டுக்குள்ளே துணிச்சலின் உருவங்களாக வாழ்ந்து மடிந்த அந்த நண்பர்களின் வீரத்தையும், நாட்டுப்பற்றையும் நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சம் நெக்குறுகிறது.

    நாம் இதுவரை கண்ட அனைத்தும் எவ்வளவு உண்மையான காட்சிகள்!  மனித நேயத்தின் உச்சநிலை! மனிதனின் அளப்பரிய மாண்பு! மேன்மையில் தோய்ந்து தூய்மை பெற்ற துணிச்சலின் சாரம்!

    வெற்றி பெற்ற ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், ஊன்றிக் கவனித்தால் எத்தனையோ ஆண்டுகளும், மாதங்களும் அவர்கள் வாழ்வில் எத்தகைய பலன்களும் கிடைக்காத நிலையில் வீணாகக் கழிந்திருக்கும். சாதனை எதுவும் நிகழ்த்த முடியவில்லையே என்ற மனச்சோர்வு அவர்களை வாட்டி வதைத்திருக்கும். ஆனாலும் அத்தகைய மனச்சோர்வை மீறி விடாப்பிடியாக அவர்கள் உழைத்திருக்காவிட்டால் நிச்சயமாக அவர்கள் வெற்றி அடைந்திருக்க மாட்டார்கள். எவனொருவர் தொடர்ந்து முயற்சி செய்கின்றானோ அவனை வெற்றி மகள் தேடி வருவாள்.

    அன்றாடச் சோதனைகளில் வெற்றி காணும் அளவுக்குத் தேவையான துணிச்சலைப் பெற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க நினைத்த சாதனையை உங்களோடே சேர்ந்து புதைக்க வேண்டுமா? என்றோ ஒரு நாள் நீங்கள் ஒரு சாதனையை நிகழ்த்தத்தான் போகிறீர்கள். ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தும் செயல்களை என்றோ ஒருநாள் செய்யத்தான் போகிறீர்கள். உங்களுடைய சிறப்பான சாதனைகள் மூலம் என்றோ ஒருநாள் இந்த உலகத்தையே திகைக்க வைக்கப் போகிறீர்கள். உங்களை வருத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை எல்லாம் என்றோ ஒருநாள் துடைத்தெறியத்தான் போகிறீர்கள்.

    வெளியே நின்று காத்துக் காத்துக் களைத்துப் போன நீங்கள் என்றோ ஒருநாள் விருந்து மண்டபத்தில் உரிமையோடு நுழைந்து உங்களுக்குரிய நாற்காலியில் உட்காரத்தான் போகிறீர்கள்! அது நிச்சயமாக ஒருநாள் நடக்கத்தான் போகிறது.

    செய்ய வேணடும் என்று பல ஆண்டுகள் பேசிக்கொண்டே நாட்களை கழித்த நீங்கள் அதை செய்து முடிப்பதற்கான முதல் கட்டத்தை தேட நினைத்த புகழைக் கையோடு எடுத்துக் கொண்டு ஆண்டுகள் பல ஓடிமுடிவதற்குள் அந்தச் துணிச்சல் உங்களை செயல்படத் தூண்டுகின்றது.

    உங்கள் மனமென்றும் மாளிகையில் கவலையில் பாதிப்புனுறாத அறைகள் சிலவற்றை அமைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அறையில் வாழுங்கள்.  நேற்றைய அறையை மூடிக்கொண்டு நாளைய அறையைப் பற்றிக் கவலைப்படாமல் இன்றைய அறையில் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

    ஒவ்வொரு நாளும் தோற்றுவிக்கின்றவாய்ப்புகளைப் பெரும்பான்மையாகப் பயன்படுத்திக் கொண்டு கவலையின்றி வாழுங்கள்.

    மனதைக் கவலையிலிருந்து மீட்பதற்கு ஒரே வழி இன்றையப் பிரச்சனைகளுக்கு இன்றே தீர்வு காண முயற்சிப்பது. செயலற்று இருந்தாலும், செய்யாமல் இருந்தாலும் மனிதன் அந்தச் சுமையின் கீழே சிதைந்து விடுவான். பணத்தைப் பற்றிக் கவலைப்படுதல், வியாபாரம் பற்றிக் கவலைப்படுதல், குடும்பம் பற்றிக் கவலைப்படுதல், வேலையைப் பற்றிக் கவலைப்படுதல். இவ்வாறு கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் மட்டும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது. ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்க்க ஏதாவது செய்துதானே ஆகவேண்டும். உடனே அதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்.

    மனமகிழ்ச்சியில்லாத தொல்லைத்தரக்கூடிய, விருப்பமற்றசெயல்களைத் தினந்தோறும் தொடர்ந்து செய்ய வேண்டாம். உங்கள் இலட்சியத்தை கண்முன்னே நிறுத்துங்கள். அந்த இலக்கை நோக்கி அடியெடுத்து வைக்கும் வகையில் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு வினாடியையும் பயன்படுத்துங்கள்.

    கவலைக்கு உட்படாத மனஅறையில் ஒவ்வொரு நாளும் வாழுங்கள். வருங்காலம் பற்றிக் கவலைப்பட மறுத்துவிடுங்கள். மனம் ஒரு சிறைச்சாலை, அதில் நீங்கள் ஓர் ஆயுட்கைதி. பூட்டப்பட்ட அந்த அறையில்தான் உங்கள் காலமெல்லாம் வாழுகிறீர்கள்.  அதனுள் ஆண்டுக்காண்டு, நாளுக்கு நாள் நடந்து கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் வெற்றிகள் பற்றிய நினைவுகளையே உங்கள் மனச்சுவரில் மாட்டி வையுங்கள்.  மனத்தளர்ச்சியை உதறிவிட்டு வலிமையின் உதவியை நாடுங்கள். நீங்கள் இதுவரை செய்த நல்ல செயல்களையே நினைத்துப் பாருங்கள். நீண்ட நாட்களாக மனதில் புதைத்து வைத்திருந்த எண்ணத்தையோ, ஆசையையோ, கனவையோ நிறைவேற்றும் வகையில் சராசரி நிலைக்குச் சற்று மேலே உயர்ந்து நீங்கள் நிகழ்த்திய சாதனைகளை எண்ணிப் பாருங்கள்.

    உங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த காலக்கட்டத்தை நினைத்துப் பாருங்கள்!  அவற்றையெல்லாம் உங்கள் மனச்சுவரில் வரிசையாக மாட்டி வைத்து அவற்றைப் பார்த்த வண்ணம் உங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள்! வெற்றிக்கான பாதையை அமைக்கும் பணி எப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

    நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாட்களும் உண்டு. துயர் மிகுந்த நாட்களும் உண்டு. துயரமான நாட்கள் வரும்போதெல்லாம் வாழ்க்கையைக் கசப்பானதாக நினைத்துவிடக் கூடாது. துயரமான நாட்களை சந்திக்கும்போது ஆச்சரியப்படுவதோ, அதிர்ச்சி அடைவதோ, மனமுடைந்து போவதோ கூடாது. அதே நேரத்தில் இனிவரும் வாழ்நாளெல்லாம் நமக்குத் துயரம்தான் என்று நினைத்துவிடவும் கூடாது.

    ஒருவேளை நேற்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்கலாம். உலகின் உச்சியில் நேற்று நீங்கள் உட்கார்ந்திருந்தீர்கள். உங்கள் இதயம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து களிப்புடன் பாடிக் கொண்டிருந்தது. இனிவரும் நாளெல்லாம் இன்ப நாட்கள் என்றகனவினில் மகிழ்ந்திருந்தீர்கள். வாழ்க்கையின் தோற்றத்தில் பலஅற்புதமான வண்ணங்கள் அமைந்து கிடந்தன. நீங்கள் பணியில் ஈடுபட்ட போது இயற்கையும் உங்களோடு இனைந்து பாடியது. இந்த உலகின் பொருட்களெல்லாம் உங்கள் ஆன்மாவின் சந்தத்திற்கு ஏற்ப இசை கூட்டி ஒத்தன. நீங்கள் நடந்து சென்றபோது இந்த உலகமே நிமிர்ந்து நின்று உங்களுக்கு மரியாதை செலுத்தியது. பல நகரங்களை வென்று வாகை சூடிய மாவீரனைப் போல அலங்கார வளைவுகள் வரவேற்க, பல மனிதர்களை வழி நடத்திச் சென்றீர்கள். சீக்கிரம் செல்லுங்கள், அதோ சிகரத்தில் சிம்மாசனம் காத்துக் கிடக்கிறது.

    இந்த இதழை மேலும்

    திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டில் வள்ளுவத்தைப் பாமர மக்களிடமும், மாணவ மாணவிகளிடமும் எடுத்துச் சென்று கொண்டிருக்கிற வள்ளுவத் தொண்டர் ஒருவர் வாழ்ந்து வருகிறார் என அறிந்த போது அகம் மகிழ்ந்து அவர் முகம் கண்டோம்…

    தனது மாணவப் பருவம் முதல் ஊதியம், பரிசுப் பொதி, பயணச்செலவு எதுவும் பெறாமல் கிராமங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிற்குச் சென்று வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறிகளைப் பரப்பும் அறப்பணியில் ஈடுபட்டு வருகிறேன் என்று அவர் கூறிய போது இப்படிப்பட்டவர்களால் தானே “தமிழ்” இன்றும் வாழ்ந்து வருகிறது என நெகிழ்ந்தோம்ங!

    குறள் நெறி வேந்தர், திருக்குறள் ஞானி, திருக்குறள் பேரொளி, திருக்குறள் தூதர், நடமாடும் அய்யன், திருவள்ளுவர் நூலகம் என பல விருதுகள் பெற்றதுடன், முன்னாள் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தாலும் தன்னால் இன்று பல நூறு மாணவ-மாணவிகள் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து, அதன் பொருள் அறிந்து வாழ்வில் உயர்ந்து நிற்பதைப் பார்ப்பதே எனக்கு எல்லாவற்றையும் விட உயர்வு தருகிறது என்பதை அவர் சொல்லக் கேட்கும் போதே நாம் வியப்படைந்தோம்!

    திருவள்ளுவப் பெருந்தகையாரே எனக்கு வழிபடும் தெய்வம்; திருக்குறளே வழிபடும் நூல் என்றபோது,

    “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

    நற்றாள் தொழாஅர் எனின்”

    என்ற வள்ளுவரின் குறள் நம் முன்னே வந்தது. “தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்று இருந்தாலும், அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தோம். வள்ளுவர் புகழ் பரப்பும் சாமியை ‘திருக்குறள் பாலுசாமியை’ நாமும் வணங்கி நின்றோம்!

    திருக்குறள் பாலுசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், செல்லப்ப கவுண்டன் புதூரில் திரு. கு. குப்பணகவுண்டர் – திருமதி. கு. மயிலாத்தாள் தம்பதியர்களின் ஒரே மகன். ஐந்து தலைமுறைகளாக பாடசாலைக்கு சென்றிராத உழவுத்தொழிலை உயிர்த் தொழிலாக கொண்ட குடும்பத்தில் முதன் முதலாகப் பாடசாலைக்குச் சென்றவர்.

    சொந்தக் கிராமத்தில் ஆரம்பப் பள்ளிப்படிப்பையும், ஒட்டன்சத்திரம் கஸ்தூரி ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையும் படித்தவர். அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் வேதியியல் துறையில் இளமறிவியல் பட்டப்படிப்பும் (Bsc.Chemistry), தமிழ்த்துறையில் முதுகலைத் தமிழ்ப் படிப்பும் முடித்தவர். மேலும் “குலோத்துங்கன் கவிதைகள்” (வா.செ. குழந்தைசாமி)  ஓர் ஆய்வு என்றதலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டமும், பாரதியார் பல்கலைக் கழகத்தில் வா.செ. குழந்தைசாமியின் “வாழ்வும் தமிழப்பணியும்” என்றதலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் அறிஞர் (Ph.D) பட்டமும் பெற்றவர்.

    எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை. காடுகளிலும், மலைகளிலும் இரண்டாண்டுகள் வெள்ளாடு மேய்த்து வருந்திக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த திருக்குறள் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கினேன். மனப்புண்ணை ஆற்றி மனதைப் பக்குவப்படுத்தியது. வழிகாட்டுதல் இல்லாத நிலையில் வலிபோக்கி வாழ்வில் ஒளி கூட்டியது திருக்குறளே என்றவரிடம்… உங்கள் பெயருடன் திருக்குறள் இணைந்தது எப்படி என்றோம்…

    “மாணவப் பருவத்திலிருந்தே திருக்குறளின் மீது இருந்த ஈடுபாடு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும், உடன் பயின்ற மாணவர்களையும் ‘திருக்குறள் பாலுசாமி’ என்று அழைக்க வைத்தது. அது பிடித்திருந்தது. வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி வாழ அப்படி அழைப்பது உதவும் என்று அப்படியே வைத்துக் கொண்டேன்” என்றார்.

     வேதியியல் துறையில் கால் பதித்து தமிழ்த்துறைக்கு எப்படி வந்தீர்கள் என்றபோது, “பொருளாதார பின்புலமின்மை தான் காரணம். இளமறிவியல் பட்டப்படிப்பு முடித்து முது அறிவியல் பட்டப்படிப்பு படிக்க வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. தங்கிப் படிக்குமளவு வசதி இல்லை. ஆனாலும் மேலே படிக்க வேண்டும் என்றவெறி அதே பழனி ஆண்டவர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் எடுத்தேன். தொடர்ந்து தமிழோடு பயணப்பட்டு ஆய்வியல் அறிஞர் பட்டத்தையும் பெற்று தற்பொழுது கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைவிரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன்” என்றார்.

    தனது அயராத உழைப்பால் இன்று நீர்வளத் துறையில் (Hydrology) உலகிலுள்ள ஐந்து தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக, எட்டுப் பல்கலைக்கழகங்களிடமிருந்து மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவராக, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், சாகித்ய அகாடமி, திருவள்ளுவர், பாவேந்தர் விருதுகளுக்கு சொந்தக்காரராக வாழும் வா.செ. குழந்தைசாமி அவர்களே எனக்கு முன்மாதிரி என்கிற திருக்குறள் பாலுசாமி அவர்களிடம், “தங்களுக்குப் பிடித்த குறட்பா” எதுவென்று கேட்டபோது…

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

    உள்ளத் தனையது உயர்வு

    (குறள்: 595)

    (நீர் நிலையிலுள்ள நீர்ப்பூக்களின் தண்டின் நீளம் தண்ணீரின் அளவைப் பொறுத்தது. அதுபோல மனிதர்களின் உயர்வு அவர்களின் மனதைப் பொறுத்தது) என்றார்.

    கணினியை வென்ற சிறப்பு உங்களுக்கிருக்கிறதே என்றபோது… “ஆம், கணினித் திரையில் குறள் படிக்க வேண்டுமென்றால் விசைப்பட்டினை அழுத்தி சில நொடிப் பொழுதுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் 1330 குறட்பாக்களில் எந்த எண்ணைக் கூறினாலும் அடுத்த நொடிப் பொழுதில் நான் சொல்லி விடுவேன். இந்தச் சாதிப்பிற்குக் காரணம் எனது தன்னம்பிக்கை தான்” என்றார்.

    தெய்வம் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை; மனிதன் தெய்வத்திற்குச் சொன்னது திருவாசகம்; மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள். இன்றைய இளைய தலைமுறையினருக்கு இளம் பருவம் முதல் வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்பித்தால் எதிர்காலத்தில் அவர்கள் மிகச்சிறந்த கல்வியாளர்களாக விளங்குவார்கள். அதற்காக திருக்குறளை உலகமெல்லாம் பரப்பும் அறப்பணியில் என்னுடைய வாழ்நாள் முழுவதையும் ஈடுபடுத்துவேன் என்றவரிடம்,

    திருக்குறளுக்கு உரை எழுதுவீர்களா? என்றபோது, “எளிய உரையெழுதும் பணியில் ஈடுபட்டுள்ளேன். எல்லோரும் பயனடையும் விதமாக அதனை மிகச்சிறந்த நூலாக குறைந்த விலையில் வழங்கவும் முயற்சி செய்து வருகிறேன்” என்றார்.

    தனது வாழ்வின் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் உறுதுணை நின்றவர்களை தவறாமல் நினைவு கூறுவதிலாகட்டும், பணியாற்றி வரும் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் ‘திருக்குறள் பேரவையின் செயல்பாடுகளை விவரித்து மகிழ்வதிலாகட்டும், நட்பு பாராட்டி நலிந்தோர்க்கு உதவுவதிலாகட்டும், தன்னிடம் பாடம் படிக்கும் மாணவ மாணவிகள் வியந்து தன்னைப் பாராட்டியதை உயரிய விருதாகவே கருதுவதிலாகட்டும், இவரை யாரும் மிஞ்சிட முடியாது என்றேநாம் எண்ணுகிறோம்.

    உயர்ந்த நோக்கத்தோடு நல்லதே நினைத்து, நல்லதே செய்து வாழும் திருக்குறள் பாலுசாமி என்கிறஇந்த வள்ளுவத் தொண்டரின் எண்ணம் எல்லாம் குறள் வழி சமுதாயம் மலர வேண்டும் என்பது தான்… அவரின் எண்ணம் நிறைவேறட்டும். தமிழும்  வள்ளுவமும் உலகமெங்கும் பரவி ஆளட்டும்!

    அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்!!

    இந்த இதழை மேலும்

    உறவுகள் அமைவதெல்லாம்…

    வாழ்க்கையே உறவுகள் தான்’ என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளுதல் அவசியம். உறவுமுறைகள் சரியில்லாத நிலையில் சரிப்படுத்தாத வரையில்… வாழ்க்கை சரியாகும் என்று எதிர்ப்பார்ப்பது நடக்காத ஒன்று.

    ‘சுவர் எப்படியோ சித்திரம் அப்படியே’ வளைந்து குவிந்த சுவரில் எவ்வளவு அழகான உருவத்தை வரைந்தாலும் ரசித்து வரைந்தாலும் முடிவில் ரசிக்க முடியாமல்தான் அமையும். இங்கே சீர்படுத்த வேண்டியது ஓவியத்தையல்ல; சுவற்றைத் தானே.

    அதுபோல வாழ்க்கையில் சீர்ப்படுத்துதல் என்பது உறவுமுறைகள்

    எனும் சுவர்களை வளப்படத்துதலே!

    ஆனால் உறவுகளை சரிப்படுத்துவதென்பது சிரமமான காரியம். ஏனென்றால் ‘சரி செய்வது’ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது. மற்றவர்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது’ என்பதுதான். ஆனால் அப்படியல்ல. புரிந்து கொள்ளுங்கள்!

    ஒரு வெங்காயத்தை உரித்துக் கொண்டே போனால் முடிவில் ஒன்றுமே இருக்காது. ஒருவரை புரிந்து கொள்ளும் முயற்சி என்பதும் அது போலத்தான். ஒரு கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் விமர்சிக்கவும் நிர்ணயம் செய்யவும்  மாற்றவும் ஜெயிக்கவும் போராடுகிறார்கள். முடிவு, பிரச்சனை, சண்டை. உதாரணமாக…

    கணவன் அலுவலகம் விட்டு வீடு திரும்பியதும் அவனின் சந்தேகம் கொண்ட மனைவி அவனை ஆராய்கிறாள். அவன் சட்டையில் ஒரு நீளமான தலைமுடியை  கண்டெடுத்தவள் கோபமாக கேட்டாள்.

    இத்தனை நேரம் எவளை கெஞ்சிட்டு வர்றீங்க? என்றாள். கணவன்  சொன்னதை  கேட்க  மறுத்து  சண்டையிட்டாள்.

    மறுநாள்… சட்டையில் வெள்ளை நிறதலைமுடி கண்டெடுத்து கத்தினாள். ச்சே…கிழவியைக்கூட விட்டு வைக்க மாட்டிங்களா? என்றாள்.

    மறுநாள் அலுவலகத்திலேயே சட்டையை சுத்தமாக உதறிவிட்டுக்கொண்டு வந்தான். வழக்கமாக ஆராய்ந்தாள். தலைமுடி எதுவும் இல்லை. ஆனாலும்  ஆவேசமாக, அடப்பாவி மனுஷா… மொட்டையடிச்சவளையும் விடமாட்டியா? என்றாளாம். ஒன்று சேர்ந்து வாழும் குடும்பவாழ்க்கையில் சந்தோஷம் வராமல் சந்தேகமும் சங்கடமும் வரக்காரணம், நம் மனதில் இருக்கும் நம் சொந்த கருத்துக்களால் உருவாக்கப்பட்ட கற்பனைகள் விலகாத வரை சந்தோஷம் சாத்தியம் இல்லை. நாம் மாய உலகில் கற்பனையில் வாழ்கிறோம் என்பதை அறியாமல் நிஜத்திற்கும் கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாத தெளிவல்லாத மனதிலிருந்து முடிவுகள் எடுப்பதால்தான் வாழ்க்கை உறவுகளில் குழப்பங்கள், குதர்க்கங்கள், பிரச்சனைகள். நம் பயம், எரிச்சல், சந்தேகம், துக்கம் எல்லாமே யாரையோ எதையோ ஒன்றைசுற்றி உருவான கற்பனைகளால் உருவானவை. நடந்த அல்லது நடக்கப் போகிறஒரு காரியத்தை நாம் கற்பனை செய்யும் கோணத்தைப் பொருத்து நிம்மதியும் போராட்டமும் நிர்ணயமாகிறது.

    மற்றவர்களை முழுமையாக புரிந்து கொள்ளும் ‘முயற்சியால்’ எந்த பலனும்  இருக்காது. ஒருவேளை மன்னித்து மறந்து சரி செய்தாலும் அது நிரந்தர தீர்வாக இருக்காது. மீண்டும் வேறுவகையில் உறவு முறிவு ஏற்படும். இதற்கு காரணம் புரிந்து கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சி தான். அப்படியென்றால் நிரந்தரமாக உண்மையாக சீர்படுத்துவது எப்படி?

    ஒன்றைநினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே ‘நாம் பதிவுசெய்யப்பட்ட கணினிகள் என்பதையும் இன்னும் நம்மால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது.என்பதையும் கற்றுக் கொள்ளவேயில்லை என்று புரிந்து கொள்ளவேண்டும்.

    கருவில் தொடங்கி, பிறப்பில் ஏற்பட்ட பாதிப்புகள், பருவம், படிப்பு, கலாச்சாரம் மற்றம் நிர்ணயங்கள் ஆகியவை நம்மிடம் பதிவாகியுள்ளது. இதை பொருத்துதான் நம் வாழ்க்கையும் அமையும். சிறு உதாரணம், சினிமாவில் கதாநாயகன் முடிவில் மரணமடைவதாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த முடிவை நம்மால் ஏற்றுக்கொள்ளாமல் மறுநாள் முடிவு மாறும் என்று  ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பது போலத்தான். முடிவு மாறவேண்டும் என்று எதிர்பார்ப்பது யார் தவறு? இந்த தவறைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டே இருக்கிறோம். முடிவை புரிந்து ஏற்றுக்கொண்டால்  முடிந்து விடும் பிரச்சனை.

    ஆக, மற்றவர்களை மாற்றவும் புரிந்து கொள்ளவும் எடுக்கும் முயற்சி என்பது ஒரு குரங்கு இன்னொரு குரங்கை மாற்றும் முயற்சி போல!

    நாம் புரிந்து கொள்ளவேண்டியது,

    1.மற்றவர்களை மாற்றமுடியாது

    2.அவர்கள் அப்படி நடந்து கொள்ள உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

    3.அவர்களை புரிந்து கொண்டு அனுபவப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    ஏற்றுக்கொள்வது என்றால் எப்படி?

    ஒரு இனிப்பை சுவைக்கும் போது அதன் சுவையை அப்படியே அனுபவிப்போம் இல்லையா? அதைவிட்டு விட்டு அதைப்பற்றி ஆராய்ச்சியில் இறங்கி புரிந்துகொள்ள முயற்சி செய்ய மாட்டோம் அல்லவா! அதைப்போலத்தான்.

    வீட்டில்  உள்ள உறவுகள்  தேவையின்றி புலம்பிக் கொண்டிருந்தால் செய்ய வேண்டியது அந்த சூழ்நிலையை அப்படியே சாதாரணமாக எடுத்துக்கொண்டு மனவலியை அனுபவிக்க வேண்டும். இது கஷ்டமான காரியம்தான் “ஏன்… இப்படி நடந்து கொள்கிறார்கள்?

    எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்றகுழப்பக் கேள்விகளுக்கு பதில் கிடையாது. எனவே அதைத் தவிர்த்திட வேண்டும்.

    குறைசொல்லல்; அப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் நமக்குள்  ஏதோ ஒரு குறைஉள்ளது என்று அர்த்தம். அது… அகங்காரமாகவும் இருக்கலாம். அல்லது ஜெயிக்க வேண்டும் என்றஎண்ணமாகவும் இருக்கலாம். தன் ‘இமேஜ்’ எங்கே ‘டேமேஜ்’ ஆகிவிடுமோ என்றபயமாகவும் இருக்கலாம். இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க  மற்றவரை எடை போடாமல் குறைசொல்லாமல் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த அனுபவம் எந்த பிரச்சனையிலிருந்தும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை  எளிதாய்  கற்றுக்கொடுக்கும். ஒரு காரியம் நடந்து முடிய பல காரணங்கள் உண்டு. இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது என்பதை அறிவோம்.     பின்னர்  ஏன் வீண் முயற்சியும் ஆராய்ச்சியும் செய்ய  வேண்டும்? கல்யாண வாழ்க்கை கசந்து விட்டது யார் காரணம்?

    பெண் பார்த்ததிலிருந்து பந்தல் போட்டு, பந்தி போட்டது வரை குறைசொல்லிக் கொண்டே போகலாம். இந்த முடிவில்லாத விளையாட்டைத்தான் தினமும் விளையாடிக் கொண்டே இருக்கிறோம். இது தீர்க்க முடியாத பிரச்சனையல்ல. பூமியில் நல்லன வாழ நல்லதொரு அனுபவம் அவ்வளவுதான். ஏற்றுக்கொள்வதற்கான மனப் பயிற்சி

    1.மற்றவர்களின் சுபாவம்

    2.செயல்

    3.உணர்வு

    இவைகளை நம் ஒவ்வொரு உறவுகளிலும் புரிந்து  ஏற்றுக்கொண்டால் இதயத்தில் கருணை என்பது தானாக சுரக்கும். அன்பு மலரும். உறவு முறைகள் சீராக அமையும்.

    எண்ணப்படி வாழ்வு!

    இன்று… வாழ்க்கையில் உயர்ந்து ஜெயித்தவர்களின் பிண்ணனி

    வெற்றியின் இரகசியமும் இதுதான்

    வாழ்க்கையில் ஜெயிப்பதை விட

    வாழ்க்கையை ஜெயிப்பதே சிறந்தது!

    நாமும் வாழ்க்கையை ஜெயிப்போமே!

    இந்த இதழை மேலும்