வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
வெற்றி’ என்னும் சொல் 3 எழுத்தைக் கொண்டது. ஆனால் அந்த வெற்றியைத் தீர்மானிப்பது 4 எழுத்துக்கள் ஆகும்.
“வெற்றி பெறவேண்டும்” என நினைப்பவர்கள், இளம்வயதிலேயே 4 ஆங்கில எழுத்துக்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஆங்கில எழுத்துக்கள் “KASH” என்பதாகும்.
KASH – என்னும் 4 எழுத்துக்களில்
K என்பது – “Knowledge” என்பதைக் குறிக்கும். அதாவது ஒருவரின் அறிவை இது குறிப்பிடுகிறது.
A என்பது – “Attitude” என்பதாகும். இது ஒருவருடைய மனப்பாங்கைக் குறிக்கிறது.
S என்பது – “Skill” என்பதைக் குறிப்பிடுகிறது. ஒருவரது திறனை இந்த எழுத்து சுட்டிக்காட்டுகிறது.
H என்பது- “Habit” ஆகும். ஒருவரது பழக்கவழக்கத்தை இந்த எழுத்து குறிக்கிறது.
“ஒருவரது வெற்றியைத் தீர்மானிப்பது Knowledge, Attitude, Skil, Habit – ஆகிய 4 வார்த்தைகள்தான்” என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இளம்வயதிலேயே அறிவை வளர்த்து நல்ல மனப்பாங்கை உருவாக்கி திறமையை மேம்படுத்தி சிறந்த பழக்கவழக்கங்களோடு திகழ்பவர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
“அறிவு” (Knowledge) என்பது ஒருவருக்கு தானாக வந்துவிடுவதில்லை. இது தெளிவான முயற்சியும், தெளிந்த பயிற்சியின் மூலம்தான் ஒருவரிடம் வந்து சேரும்.
இந்த அறிவை வளர்த்துக்கொள்வதற்கு, இளம்வயதிலேயே சுற்றுப்புறச்சூழலை கூர்ந்து கவனித்து வருவது மிகவும் அவசியமாகும். தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாக கவனிப்பவர்கள் மனதில், சில உண்மைகள் தெளிவாகத் தெரியும். தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டவர்கள் தனது அறிவைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் தேவையான நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்களும் போதிய அனுபவ அறிவைப் பெறுகிறார்கள். அனுபவ அறிவின் துணையோடு பள்ளிகளில் சேர்ந்து பாடங்களைப் படிக்கும்போது அறிவு மேலும் பெருகுகிறது. இந்த அறிவை, மேலும் மேம்படுத்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து முறையாகப் பாடங்களைப் படித்து அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். சிலர் பாடம் அல்லாத பொது அறிவை வளர்க்கும் புத்தகங்களையும் பெரியவர்களது வரலாறுகளையும் படித்து தங்கள் அறிவுக்கு மெருகூட்டிக் கொள்கிறார்கள்.
கல்வி கற்பதனால் உருவாகும் அறிவும், புத்தகம் படிப்பதனால் உருவாகும் அறிவும் இணைந்து ஒருவருக்கு கிடைக்கும்போது அவர் அறிவில் சிறந்தவராக திகழ்கிறார்.
“கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்து முதுமொழி. நல்ல முறையில் கற்று அறிவைப் பெற்றவர்கள் செல்லுகின்ற இடமெல்லாம் உரிய மரியாதையைப் பெறுவார்கள்.
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து” – என்பது திருக்குறள் ஆகும்.
“வாழ்க்கையில் ஒருமுறை ஒருவர் கற்றகல்வியானது அவருக்கு ஏழு பிறப்பிற்கும் துணையாக நிற்கும்” என்பது திருவள்ளுவரின் கருத்தாகும்.
இதனால்தான், கல்வி கற்க வேண்டிய பருவமாக இளம்பருவத்தை குறிப்பிடுகிறார்கள். இளமையிலேயே ஒருவர் கற்க வேண்டிய நூல்களைக் கற்று, கல்வியில் சிறந்து விளங்கினால் அவரது வாழ்க்கை இனிமை நிறைந்ததாக மகிழ்ச்சியுடன் காணப்படும்.
பி.ஏ., பி.எஸ்சி., எம்.ஏ., எம்.எஸ்சி. பி.காம்., எம்.காம்., பிடெக்., எம்.டெக் போன்றபட்டங்களை பெற்றுவிட்டாலும் படித்ததற்கு ஏற்றவாறு போதிய அறிவைப் பெறாதவர்களை, இந்த உலகம் மதிப்பதில்லை. எனவே, வாழ்க்கையில் வெற்றிகளைப் பெற்றுத்தரும் அறிவை தகுந்த காலத்திற்குள் பெறமுயலுவது அறிவிற் சிறந்த செயலாகும். அறிவைப் பெருக்கிக் கொள்வதைப்போலவே ஒருவர் தனது மனப்பாங்கையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மனப்பாங்கை இருவகையாகப் பிரிக்கலாம். அவை – 1. நேர்மறைமனப்பாங்கு 2. எதிர்மறைமனப்பாங்கு ஆகும். ஒருவர் தான் பார்க்கின்ற பொருளையெல்லாம் நேர்மறையோடு பார்ப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். இதைப்போலவே நேர்மறைமனப்பாங்கை வளர்ப்பதற்கு, தகுந்த தகவல்களை தேடி கண்டுபிடித்து கேட்பது நல்லது. தனக்கு கிடைக்கும் அனுபவங்களையும் “எல்லா நன்மைக்கே” என்ற மனப்பாங்கோடு ஏற்றுக்கொள்வது நேர்மறை மனப்பாங்கு ஆகும்.
ஆனால், அதேவேளையில் “அய்யோ இப்படி ஆகிவிட்டதே” என்று அழுது புலம்புவதும், “எனக்கு மட்டும்தான் நேரம் சரியாக இல்லை” என்று எல்லா நேரங்களில் ஏங்கி வருந்துவதும், எதிர்மறை மனப்பாங்கை உருவாக்கிவிடும்.
இதனால்தான் பெரியவர்கள் “மனம்போல் வாழ்வு” என்கிறார்கள். ஒருவர் நல்லதை எண்ணும் மனப்பாங்கோடு இருந்தால் அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள் எல்லாம் நல்லதாகவே அமையும்.
அறிவைப் பெருக்கியும் மனப்பாங்கை செதுக்கியும் நலமாக இருந்தாலும் ஒருவர் திறன் பெற்று விளங்கினால் மட்டுமே, அவரால் சிறந்த வெற்றிகளைப் பெறஇயலும். எனவேதான் அறிவு மற்றும் மனப்பாங்கைப்போலவே ஒருவரது திறன் வாழ்க்கையின் வெற்றிக்கு இன்றியமையாததாக மாறுகிறது.
வரலாற்றில் சிறப்புப் பெற்றவர்களெல்லாம் இளமைப்பருவத்திலிருந்தே தங்களது வாழ்க்கையை வளமாக்க உதவும் திறன்களை திட்டமிட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தர், 5வது வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டதும் மனப்பாடம் செய்யும் திறனை வளர்த்துக்கொண்டார். ஆசிரியர் நடத்தியப் பாடங்களை ஒருமுறைகேட்டாலும் அதனை மனதில் நிறுத்தி, எப்போது வேண்டுமானாலும் அதனை திரும்பச் சொல்லும் சிறப்பான ஆற்றலைப் பெற்றிருந்தார். பாடத்தைத்தவிர மற்றப் பாடங்களையும், பாடல்களையும் படித்து மகிழ்ந்தார். சிலம்பு, வாள் வீச்சு, மல்யுத்தம் போன்ற பயிற்சிகளோடு, தியானத்தையும் கற்றுக்கொண்டார். ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டார். இளமையிலேயே தனது திறனை வளர்த்துக்கொண்ட சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோவில் நடைபெற்றகூட்டத்தில் “அமெரிக்க சகோதர, சகோதரிகளே” என்று அழைத்து தனது பேச்சாற்றலால் வெளிநாட்டவர்களையும் வியக்க வைத்தார். இளமையிலேயே தனது திறனை வளர்த்துக்கொண்ட சுவாமி விவேகானந்தரின் வெற்றி அனைவரையும் அவர் பக்கம் திரும்ப வைத்தது.
ஒருவர் அறிவில் சிறந்து விளங்கலாம். நல்ல மனப்பாங்கு கொண்டவராக இருக்கலாம். சிறந்த திறன் படைத்தவராக திகழலாம். இருப்பினும் அவரது பழக்கவழக்கங்கள் சிறந்ததாக அமையாவிட்டால் அவரது வெற்றி கேள்விக்குறியதாகிவிடும். எனவேதான், “வெற்றி பெறவேண்டும் என்று விரும்புபவர்களின் பழக்கவழக்கங்கள் மிகச்சிறந்ததாக அமைய வேண்டும்” என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்கும் என்பார்கள். இளம்வயதில் ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறந்ததாக அமைத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்களின் பழக்கவழக்கங்கள் சரியாக அமைகிறதா? என்பதை பெற்றோர்களும் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும்போது திருத்தவும், நல்லவை செய்யும்போது பாராட்டவும் பெற்றோர்கள் தயங்காமல் முன்வர வேண்டும். அப்போதுதான் இளைய உள்ளங்களின் பழக்கவழக்கங்கள் திசைமாறிச் செல்லாமல் நல்ல பாதையை நோக்கி நகரும்.
தேசியக்கவி பாரதியார் இளம்வயதிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமைப்பெற்று விளங்கினார். பிறமொழி இலக்கியங்களைக்கூட தமிழில் மொழிபெயர்த்தார். இளம்பருவத்திலேயே கவிதை எழுதுவதை பழக்கமாக வைத்திருந்தார். இந்த நல்ல பழக்கவழக்கங்கள்தான் அவரை மிகச்சிறந்த கவிஞராக்கியது. ‘மகாகவி’ என்று அனைவரும் புகழும் வண்ணம் அவர் புகழ்கொடி நாட்டி வெற்றி பெற்றார்.
“படிக்காத மேதை” என்று புகழ்பெற்ற பெருந்தலைவர் காமராஜர் இளம் வயதிலேயே மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி சேவை புரிவதை பழக்கமாக வைத்திருந்தார். அதனால்தான் இன்றும் தேசியத்தலைவராக அனைவராலும் போற்றப்படுகிறார்.
இதைப்போலவே, தந்தை பெரியாரின் பழக்கவழக்கங்கள் சாதிப் பாகுபாடுகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் எதிர்க்கும் விதமாகவே இளமையில் அமைந்தது. தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கும் இந்தப் பழக்கம்தான் அவரது பெருமைக்கும், வெற்றிக்கும் அடித்தளமாக அமைந்தது.
எனவே – வாழ்க்கையில் வெற்றி பெறவிரும்புபவர்கள் Knowledge, Attitude, Skill, Habit – ஆகிய நான்கையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். KASH எனப்படும் 4 ஆங்கில எழுத்துக்களையும் நெஞ்சில் நிறுத்தி உழைக்க கற்றுக்கொண்டால் வெற்றிக்கனியை மிக விரைவாக தட்டிப் பறிக்கலாம்.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles