ஆயிரக்கணக்கான புத்தகங்களை நீங்கள் அடுக்கி வைத்திருந்தாலும் அது தொடப்படாமலும் படிக்கப்படாமலும் இருந்தால் அவை அனைத்தும் பயனற்றவையாகவே கருதப்படும். ஒவ்வொரு மனிதனும் நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்க பழகிக்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்கு குறைந்தது நூறு நல்ல புத்தகங்களையாவது படிக்க வேண்டும்.
புத்தகங்களைப் படிப்பதால் எனக்கு என்ன பயன் என்று ஒருவர் கேட்கலாம், நல்ல புத்தகங்கள் உங்களுக்கு ஒரு நல்ல நண்பன். உங்களுக்கு வழிகாட்டுவதும், வாழ்வை சீரமைப்பதும், எண்ண ஓட்டங்களை ஒழுங்குபடுத்துவதும், மனதுக்குள் எழுச்சியை உண்டாக்குவதும், அறிவை விசாலப்படுத்துவதும், ஆழமாக சிந்திக்க தூண்டுவதும், மற்றவர்களின் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்கிற தன்மையும், வாய்ப்புகளை வசப்படுத்திக் கொள்கிற திறமையும், பிரச்சனைகளை எளிதில் முடிக்கக் கூடிய சாமார்த்தியமும், புத்தகங்களைப் படித்து அறியும் அனுபவத்தால் மட்டுமே பெறமுடியும்.
மோசமான புத்தகங்கள் தீய எண்ணங்களையும் தீய பழக்க வழக்கங்களையும் தீய விதைகளையும் மனதிலே விதைக்கும். உங்கள் முகம் தீய எண்ணங்களின் வடிவமாக மாறிவிடும். உங்கள் முகம் உங்கள் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அமையும் என்பதையே,
அடுத்தது காட்டும் பளிங்கு போல
எடுத்தது காட்டும் முகம்
என்னும் குறள் விளங்க வைக்கிறது.
புத்தகங்களை நல்ல நண்பனுக்கு ஒப்பிடலாம். பல நண்பர்கள் உங்களைச் சுற்றி இருக்கலாம். நீங்கள் வெற்றி பெறும் போது உங்களைச் சுற்றி ஆயிரம் நண்பர்கள் படுவார்கள். உங்களுக்கு என்று ஒரு சிறு சறுக்கலோ, சரிவோ, பிரச்சனையோ வரும் போது, அந்த ஆயிரத்திலே ஒரு நண்பர் கூட உதவிக்கு வரமாட்டாட்கள்.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல
உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்
தொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலுமே
ஒட்டி உறுவார் உறவு.
எனும் ஒளவையார் வாக்குப்படி குளத்திலே நீர் நிறைந்திருக்கும் போது ஆயிரமாயிரம் பறவைகள் அக்குளத்தைச் சுற்றி இருக்கும், அந்த குளம் நீரின்றி வறண்டு விட்டால் ஒரு பறவை கூட இருக்காது. அது போலவே, பயன் பெறும் போது உங்களைச் சுற்றி பலர் இருப்பார்கள் உங்களால் பயன் ஏதும் கிடையாது என்ற நிலை வரும் போது உங்களுடன் ஒருவருமே இருக்கமாட்டார்கள்.
புத்தகங்கள் மற்றும் நண்பர்களை எடுத்துக் கொண்டால், எண்ணிக்கை முக்கியமல்ல தரம் தான் முக்கியம். எத்தனை புத்தகங்கள் படித்துள்ளோம் என்பது முக்கியமல்ல, எந்த வகையான புத்தகங்களைப் படித்துள்ளோம் என்பது தான் முக்கியம். நல்ல புத்தகங்களைப்போல தரமான நண்பர்களால் தான் தரமான யோசனைகளையும் வாழ்வியல் ஆலோசனைகளையும் தர முடியும்.
ஒரு நூலகத்திற்குள் அல்லது புத்தக நிலையத்திற்குள் நுழையும் போது ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பல வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதில் எது சிறந்த புத்தகம், எது நல்ல புத்தகம் என தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம்மைச் சாரும். ஏனெனில் ஒரு நல்ல புத்தகம் ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த அறிவுக் களஞ்சியம். அவை நமக்கு வழிகாட்டும்.
ஒரு நல்ல புத்தகப் படிப்பாளி, நல்ல புத்தகம் எது, மோசமான புத்தகம் எது என்பதைக் கண்டறியக்கூடிய திறமை மிக்கவராக இருப்பார். இதே தத்துவம் நண்பர்களுக்கும் பொருந்தும். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய சக்தி நமக்கு இருக்க வேண்டும். சிலர் உண்மையான அன்புடன் நட்பு கொள்வார்கள். சிலர் இவரிடம் நட்பு கொண்டு விட்டால் பல காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்ற சுயநலக் கணக்குடன் பழக முற்படுவார்கள். வசதியான வீட்டுப் பிள்ளையாய் இருக்கிறார்கள், இவருடன் பழகிக் கொண்டால் நமக்காக அவர் செலவு செய்வார், அவர் தோள் மீது அமர்ந்து தேரோட்டம் பார்க்கலாம் என்று நினைப்பவர்களும் உண்டு.
இவர்களை எல்லாம் அடையாளம் கண்டு நட்பு பாராட்டுவது மிகவும் சிரமமான காரியம். அதனால் தான் ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்து வருகிற நட்புகள் முறிவுகளாக மாறி விடுகின்றன. இவை எல்லாம் உண்மையான அக நக நட்புகளாக ஆவதில்லை.
சிலர் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படுவார்கள். இணையதளம், வலைதளம், முகப்புத்தகம் என்ற ஒரு புதிய பரிமாணம் தற்போது தொடங்கியுள்ளது. இணையதளம் மூலமாக பழகிய நண்பர்கள் ஏமாற்றியதாகவும், மோசடி செய்ததாகவும், திருமண ஆசை வார்த்தை கூறி காதலித்து ஏமாற்றியது போன்று பல நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம்.
ஒரு மனிதன் தனக்கு அதிக நண்பர்கள் இல்லை என கவலைப்பட அவசியமில்லை. நூறு மோசமான நண்பர்களை விட ஒரு நல்ல நண்பனை பெறுவது உத்தமமானது. நண்பர்களைத் தெரிவு செய்யும் போது மெதுவாக யோசித்து தெரிவு செய்ய வேண்டும். தெரிவு செய்த நண்பர்களை ஏதோ ஒரு காரணத்திற்காக பிரியும் போது மிகவும் மெதுவாக மெதுவாக யோசித்துப் பிரிய வேண்டும். ஒரு சிறு உணர்ச்சிக் குமுறல் அல்லது சில வருத்தங்கள் கூட ஒரு நல்ல நட்பினை முறிக்கும் ஆற்றல் கொண்டது. தீர்க்கமான முடிவுக்கு பின் தான் ஒரு நட்புக்கு முடிவு சொல்ல வேண்டும். நம்பிக்கையான நண்பர்கள் குறைந்த அளவிலே இருந்தாலும் பரவாயில்லை, அது நன்மையே பயக்கும்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
என்று வள்ளுவர் சொன்னதை போல முகம் பார்த்து பழகுவது நட்பல்ல உள்ளம் பார்த்து, அகம் பார்த்து பழகுவது தான் நல்ல நட்பு. உணர்வுகள், உணர்ச்சிகள், மகிழ்ச்சிகள், துயரங்கள், அன்பு, பாசம், உறவு, பிரிவு, பரிவு, உதவிகள், ஆலோசனைகள், இத்தனையும் சேர்ந்த கலவை தான் நட்பு.
“நாயின் கால்களில் உள்ள சிறிய விரல்கள் நெருக்கமாக இருக்கும் அது போல மிகவும்; நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் கூட துன்பம் வரும் காலத்தில் ஈயினது கால் அளவு கூட உதவி செய்யமாட்டார்கள், அத்தகையவர்களின் நட்பினால் சிறிதளவும் பயனில்லை. ஆற்று நீர் வாய்க்கால் வழியாக சென்று வயலுக்குப் பயன்படுவதைப் போல் தொலைவிலிருந்தாலும் உதவும் குணம் கொண்ட நண்பர்களை தேடிச்சென்று நட்பு கொள்ள வேண்டும் என்பதை,
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பெண்ணாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால்அணையார்தொடர்பு
எனும் நாலடியார் பாடலின் மூலம் அறியலாம்
வாழ்க்கை என்பது ரோஜா மலர் கூட்டமல்ல, இன்பமும் துன்பமும் கலந்தது. நல்ல நண்பரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து படிப்பதும் வாழக்கைக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
நட்பு கொள்வது எளிதானது. ஆனால் அதை இறுதி வரை தொடர்வது சற்று கடினமானது. ஏனென்றால் தியாகம், சுயநலமின்மை, அன்பு, நம்பிக்கை, இவைகள் ஒரு மயிரிழை கூட நட்பில் குறையாமல் இருத்தல் வேண்டும். உடை மாற்றுவதைப் போல நண்பர்களை மாற்றஇயலாது. உயர்வாக சொன்னால் உண்மையாக சொன்னால் நண்பர்களும் நல்ல புத்தகங்களும் இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதர்கள் ஆவார்கள்.
சிரமங்களின் போது உதவுவதும், துயரங்களைப் பங்குபோட்டுக் கொள்வதும், மகிழ்ச்சியை அசை போட்டுக் கொள்வதும், கலக்கமுறும் போது கை கொடுப்பதும், காயம்படும்போது ஆறுதல் சொல்வதும், சோதனை வரும் போது உதவுவதும், இதயத்தோடு இணைந்து இருப்பதும் நண்பர்கள் தான்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களை வதாம் நட்பு.
என்பார் வள்ளுவர்.
இது எத்தனை ஆழமான உண்மை என்பதை அனுபவங்கள் தான் உணர்த்தும். நண்பன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆதலின் புத்தகங்களும் நண்பர்களும் ஒன்று தான் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
இந்த இதழை மேலும்