– 2014 – July | தன்னம்பிக்கை

Home » 2014 » July (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பிரச்னைகளுக்கான LSD தீர்வுகள்

    இன்றைக்கு உலகில் பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லக்கூடிய நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கை என்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலமாக இருப்பினும், குழந்தைப் பருவம் மற்றும் முதுமையில் பிரச்னைகள் அதிகம். இடையில் பிரச்னைகள் குறைவுதான். கரடிக்கு எங்கே பிடித்தாலும் முடி என்பது போல் மனிதனுக்கு பிரச்னை இல்லாத நாட்களே இல்லை என்று கூறலாம்.

    பிரச்னைஎன்றால்என்ன?

    இந்த கேள்விக்குப் பலரும் பலவிதமாய் பதில் கூறினார்கள்.

    பசி, வறுமை, ஞாபக மறதி, நோய், வழிகாட்டல் இல்லாமை, கல்லாமை என ஒரு சிலரும் கோபம், பொறாமை, ஏக்கம், பகைமை, பேராசை, அவசரம், பதட்டம், கடன், எதிர்பார்ப்பு என்பதாக மற்றவர்களும் கூறினர். இவற்றையெல்லாம் தொகுத்தால், பிரச்னை என்பதை  தேவைகளை, விருப்பங்களை அடைய முடியாத சூழ்நிலையும், அதனால் உண்டாகும் மனநிலை தரும் பாதிப்புகளும்  என்று கூறலாம்.

    இந்தப் பிரச்னை என்பது விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பது போல, ஏழை  பணக்காரன், படித்தவன்  படிக்காதவன், முதலாளி,- தொழிலாளி, ஆண்  பெண், குழந்தைகள்  முதியோர் என எவ்விதமான பாகுபாடுமில்லாமல் எல்லோருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

    பிரச்னையை உருவாக்குபவர்கள்

    நான்கு பிரிவுகளாக இவர்களைக் கூறலாம். முதலில் வருவது தானாக வரும் பிரச்னைகள். பிரச்னையைத் தேடி நாம் எங்கும் போக வேண்டியதில்லை. எதிர்பாராத போது, திடீரென இது பிரச்னையாக நம்முன் நிற்கும். திடீரென பல் வலிக்கும். எதனால் வலிக்கிறது என்றே தெரியாது. இது மற்ற எந்த வேலைகளிலும் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடும்.

    இரண்டாவதாக வருவது தானே உருவாக்கிக் கொள்வது. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை உங்களுக்கே தெரியுமே இருந்தாலும் விளக்கம் இதோ:

    பிள்ளையார் சிலையை மண்ணில் செய்வதற்கு ஒருவர் ஆயத்தம் செய்தார். தலை, வயிறு, கைகள், கால்கள், தும்பிக்கை எனத் தனித்தனியே செய்து வைத்தார். அவைகளை ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். தும்பிக்கை தவிர மீதி எல்லாவற்றையும் சேர்த்து முழு உருவமாக்கிவிட்டார். திடீரென அவர் தன்னைப் பார்க்க வந்த நண்பரைக் காணச் சென்றுவிட்டார்.

    அந்த நேரம் பார்த்து அவரது ஐந்து வயது மகன் அங்கே வந்து அந்த சிலையைப் பார்த்தான். ஒரு சிலையும், வாலும் இருப்பதைப் பார்த்த அவன், தும்பிக்கையை வால் என நினைத்துக் கொண்டு, அந்தச் சிலையின் பின்புறம் இடுப்பில் இணைத்து வாலாக்கிவிட்டான். இப்போது அந்தச் சிலை குரங்குபோல் சாட்சி அளித்தது. அந்தச் சிறுவனுக்கோ அடக்க முடியாத மகிழ்ச்சி.

    அதற்குள் வெளியே சென்ற அவன் அப்பாவும் வந்துவிட்டார். தன் அப்பாவிடம், “அப்பா இங்கே பாருங்கÐ நான் சரியா வாலை சேர்த்துட்டேன்” என்று சொன்னான். அந்தச் சிலையைப் பார்த்தவர் தன் மகன் மீது கோபப்படாமல், வாய்விட்டு சிரித்தாராம். “மகனே, பிள்ளையாரின் தும்பிக்கையை நீ வால் என நினைத்து இடுப்பின் பின்புறம் வைத்துவிட்டாய். அதை எடுத்து முகத்தில் மூக்கின் மீது வைக்க வேண்டும்” என்று கூறி, எடுத்து வைத்துக் காண்பித்தாராம்.

    தும்பிக்கை வாலாக இருந்தபோது குரங்காகத் தெரிந்த அந்தச் சிலை, இப்போது பிள்ளையாராக அழகாகத் தெரிந்தது. இதுதான் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை.

    இதுபோல் நாம் பல சமயங்களில் நல்லது என நினைத்துக் கொண்டு பேசுவதும், ஏதேனும் செய்வதும், முடிவில் நமக்கே பிரச்னைகளைக் கொண்டு வந்துவிடுவது சகஜமாகிவிட்டது. வெயில் காலம்; வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடனே, தாகத்தின் காரணமாக 2 டம்ளர் ஐஸ் தண்ணீரைக் குடித்துவிட்டீர்கள். 10 நிமிடத்திலேயே அடுக்கடுக்காய் தும்மல், மூக்கில் நீர் ஒழுகுதல் எல்லாம் வந்துவிட்டன. இது நாமாக உருவாக்கிக் கொண்ட பிரச்னை. இதுபோல் அவரவர் வாழ்வில் பல பிரச்னைகளை உருவாக்கியதை நினைத்துப் பாருங்கள்.

    மூன்றாவதாக மற்றவர்கள் உருவாக்கும் பிரச்னைகள். நம் வீட்டிலோ, வெளியிலோ, மற்றவர்களால் நமக்கு வரும் பிரச்னைகள் தான் இவை. புத்திசாலி மனைவி, மாதச் செலவுக்குத் தரும் பணத்தில் சிக்கனமாய் செலவு செய்து, மாதம் ரூ.500 என மீதப்படுத்தி, பக்கத்துத் தெருவிலுள்ள நகைக்கடையில் சீட்டு போட்டார். வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரியாது, திடீரென ஒருநாள் அந்தக் கடை திறக்கவில்லை. விசாரித்தால், கடன் தொல்லை அதிகமாகி, அந்தக் கடைக்காரர் இரவோடிரவாக, ஊரைக்காலி செய்து சென்றுவிட்டதாய் தகவல். 10 மாதம் சீட்டு போட்டதால் ரூ.5000 போய்விட்டது. அவர் மனைவிக்கோ மிகப்பெரிய இழப்பு, சோகம். அதோடு கணவனுக்குத் தெரியாமல் போட்டதற்குத் திட்டுவாரே என்ற பயமும் சேர்ந்து கொண்டது. ரூ. 5000 இழப்பு என்பது அவருக்குப் பெரிய பிரச்னை தான். இது அவர் மனைவியால் வந்தது.

    இதுபோல் வேறு பலராலும் அவ்வப்போது பல பிரச்னைகள் வரும்.

    நான்காவது, இயற்கையால் வரும் பிரச்னைகள். மழையே இல்லை; கடும் வறட்சி. குடிநீருக்கே தட்டுப்பாடு. விவசாயம், வேறு வேலை எதுவுமே நடைபெற முடியாத நிலை. இந்தப் பிரச்னை இயற்கையாக வந்தது. இதுபோலவும் பிரச்னைகள் பல வரும்.

    பிரச்னைகளைப் பிரியுங்கள்

    நமக்குள்ள பல பிரச்னைகளையும் முதல் பட்டியலிட வேண்டும். அவைகளை மேற்கண்ட நான்கு பிரிவுகளின் கீழ் கொண்டு வரவும். இப்போது நமது பிரச்னைகளுக்கு யார் காரணம் என்பது தெளிவாகிவிடும். இனிமேல், இதுபோன்ற பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வதோ, நம்முடைய செயல்பாடுகளைத் திருத்தியமைப்பதோ, எது தேவையென்பதைத் தேர்வு செய்து செயல்படலாம்.

    பிரச்னைகள் எதுவானாலும் இரு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

    நம்மால் தீர்க்கக் கூடியவை

    நம்மால் தீர்க்க முடியாதவை

    நம்மால் தீர்க்கக்கூடிய பிரச்னைகள்

    இதை ஆங்கிலத்தில் AOC (Area of Control) என்று சுருக்கமாய் சொல்லலாம். திடீரென மருத்துவச் செலவு வந்துவிட்டது. உங்களுக்கு உதவக்கூடிய நண்பர் சிலர் உள்ளனர். அவர்களிடம் விபரம் கூறி, பணம் பெற்றுச் செலவு செய்யலாம். உங்கள் அலுவலகத்தில் அல்லது நகையை வங்கியில் வைத்து கடன் பெற்று, நண்பருக்கு கொடுத்துவிடலாம். இதுபோல் நம்மால் தீர்க்கக்கூடிய பிரச்னைகளைத் தனிப் பட்டியடலாம்.

    தீர்ப்பதற்கான வழிமுறைகளைத் தெளிவாகப் பின்னர் பார்ப்போம்.

    நம்மால் தீர்க்க முடியாத பிரச்னைகள்

    பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது. இது நம்மால் தீர்க்க முடியாத பிரச்னை. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பஸ் பயணம் என்பது தவிர்க்க முடியாததால், இதற்கு முன்னுரிமை கொடுத்து, பிறசெலவுகள் சிலவற்றைக் குறைக்க முயற்சிக்கலாம். இப்படி ஏற்றிவிட்டார்களே என அங்கலாய்த்துக் கொள்வதாலோ, புலம்புவதாலோ பிரச்னை தீராது. இந்த எண்ணம் மனதிலே இருந்தால், வேறு செயல்களில் முழுமையாக ஈடுபட முடியாது.

    குடிநீர் பிரச்னை, மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம் இதுபோன்ற பொதுவான பிரச்னைகளை நம்மால் தீர்க்க முடியாது. எப்போது ஒன்றை ஏற்றுக் கொள்கிறோமோ, அப்போதே அது நமக்கு நட்பாகிவிடுகிறது. இதனால் பொருந்தா உணர்வு வராது. அடுத்து, அதனால் வரும் சிரமங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை நம் அறிவே நமக்குச் சொல்லிவிடும்.

    எனவே, பிரச்னைகள் என்று சொல்லிப் புலம்புவதால் பயனில்லை.

    பிரச்னைகளுக்கான காரணம்

    பிரச்னைகள் தானாகவும், நம்மாலும், மற்றவர்களாலும், இயற்கையாலும் வருகின்றன என்றாலும், அவைகள் வருவதற்கான காரணங்கள் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால், அவைகளிலிருந்து சுலபமாக விடுபடும் வழிகள் எளிதில் கிடைத்துவிடும்.

    பசி ஒரு பிரச்னை என்று பார்த்தோம். பசி, ருசி அறியாது என்ற பழமொழியும் உள்ளது. பசிக்கிறது என்பதற்காக நமக்கு விருப்பமில்லாத, சுகாதாரம் இல்லாத உணவை நாம் உட்கொள்ளலாமா?

    இந்த உணவு நமக்கு ஒத்துக்கொள்ளாது என்று தெரிந்த நிலையில், அறிந்த நிலையில், சாப்பிட்டுவிட்டால், அதற்கு அலட்சியம் என்று பெயர். அந்த உணவு உடலுக்குள் சென்று பாதிப்புகளைத் தரத்தானே செய்யும். பல சமயங்களில் ஞாபக மறதியால் ஏதாவது செய்துவிடுவார்கள். இதனால் உண்டாகும் பிரச்னை அறியாமை என்பதால் வந்தது எனக் கூறலாம்.

    பக்கத்து வீட்டுக்காரர், கோபமாக நம்மிடம் ஏதோ பேச, நாமும் உணர்ச்சி வயப்பட்டு, கோபத்தில் ஏதோ பேசிவிடுகிறோம். என்ன பேசினோம் என்பது கூட நினைவில் இல்லை. பிறகு, அவரே நம்மிடம் வந்து, “என்ன சார்? நான் தான் உங்களை விட சிறியவன். கோபத்தில் பேசிவிட்டால் நீங்களும் இதுபோல் பேசி விட்டீர்களே” என வருத்தப்பட்டுக் கூறினால், நமக்கு “இதுபோல் நான் பேசினேனா?” என்று நினைக்கத் தோன்றும்.

    எனவே, பிரச்னைகள் வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவைகளையெல்லாம் தொகுத்து மூன்று பிரிவுகளுக்குள் கொண்டு வரலாம். அவை, அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம். எந்த நிலையிலும் நம் பேச்சோ, செயலோ என்ன விளைவைத் தரும் என எச்சரிக்கையாக இருந்தால் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

    பிறஉயிர்களும், மனிதனும்

    மழை பெய்யாவிட்டால் மனிதனுக்கு மட்டுமா பிரச்னை; மற்ற உயிரினங்களுக்கும் ஏன்? தாவரங்களுக்கும் கூடப் பிரச்னைதானே! மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் உயர்ந்து நிற்பதற்குக் காரணம், பகுத்தறிவு தான். இதுதான் பல பிரச்னைகளுக்கும், அதன் வழியான துன்பங்களுக்கும் காரணமாகின்றன. தன் அறிவைப் பயன்படுத்தி, இயற்கை வளங்களை வாழ்க்கை வசதிகளாக மாற்றி அனுபவித்து மகிழ்கிறது மனித இனம்.

    மற்ற உயிரினங்கள், இயற்கையில் என்ன கிடைக்கிறதோ, அதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்கின்றன. எனவே, அவற்றுக்குத் தானாக வரும் பிரச்னைகள், தன்னால் உருவாகும் பிரச்னைகள் மற்றும் பிறரால் உருவாகும் பிரச்னைகள் இல்லை. ஆனால் இயற்கையால் உண்டாகும் பிரச்னைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

    சமீபகாலங்களில் மனிதர்களால், மற்றஉயிரினங்களுக்கு மறைமுகமாகப் பல பிரச்னைகள் உருவாகி வருகின்றன. காடுகளை அழிப்பதாலும், இயற்கையிலிருந்து விலகி வாழ்வதாலும், குளிரூட்டப்பட்ட வாகனம், வீடு என வாழ்ந்து, புவியை வெப்பமாக்குவதாலும் பல பிரச்னைகளை உருவாக்குகிறோம்.

    (தொடரும்)

    இந்த இதழை மேலும்

    விதி என்று மயங்காதே! மதி உண்டு தயங்காதே!!

    திரு. G. செந்தில்குமார்

    சேர்மன், ஹெலிக்ஸ் கல்வி மையம், சேலம்

    தமிழகத்தில் “School Social Work” என்கிற ஆராய்ச்சி சார்ந்த கல்விக்கூடமாக ‘ஹெலிக்ஸ்’ கல்வி மையத்தை தமிழகத்தில் முதன்முதலாக உருவாக்கிய பெருமைக்குரியவர்.

    • தமிழகத்தின் “Special Resource Committee” மெம்பர் என்ற சிறப்பிற்குரியவர்.
    • தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலன்களுக்கான பயிற்சிகளை பல வருடங்களாக கொடுத்து வருபவர்.
    • குழந்தைகளின் “Interest Profile” தயாரித்து அவர்களை அவர்கள் ஆற்றல் வழியே உருவாக்கும் ஆய்வுகள் மேற்கொண்டும்,
    • சமூக சேவை புரிய வேண்டும் என்பதற்காகவே ‘சமூகவியல்’ படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்து இன்று அத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்.

    கற்றலில் குறைபாடு உள்ள மாணவ மாணவிகளுக்கு நல்வழிகாட்டியாகத் திகழ்ந்து அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வரும் ‘ஹெலிக்ஸ்’ கல்வி மையம் சேர்மன் திரு. எ. செந்தில்குமார் அவர்களை நாம் நேர்முகம் கண்டதிலிருந்து இனி.

    பிறந்ததுவளர்ந்ததுபடித்தது

    நான் பிறந்தது வளர்ந்தது பள்ளிப் படிப்பு படித்தது எல்லாமே சேலத்தில் தான். எனது மேற்படிப்பை கோவையில் முடித்தேன். எனது பெற்றோர்கள் P.M. கோவிந்தராஜூலு, இந்திராணி. அப்பாவுக்குத் தொழில் எண்ணெய் வியாபாரம். இந்த வியாபாரத்தை தான் நானும் செய்ய வேண்டும் என்ற நிலையில் ஓர் ஆறு மாதம் அத்தொழிலில் ஈடுபட்டேன். ஆனால் தொடர முடியவில்லை. இந்தத் தொழிலுக்காகவே பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் தொழில் மேலாண்மையைப் (BBM) படித்தேன். ஆனாலும் தொழிலில் எனக்கு ஈடுபாடு வரவில்லை. சமூகப்பணி சார்ந்தே என் எண்ணம் இருந்தது. அதனால் Social Work Department என்கிற சமூகவியல் பாடத்தையும் பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்தேன்.

    சமூகவியல்பாடத்தின்மீதுஆர்வம்வரக்காரணம்

    பள்ளிக் காலங்களிலேயே நான் NSS, NCC போன்ற பயிற்சியில் கலந்திருக்கிறேன். அதன் தாக்கமே இந்தப் படிப்பை மிகவும் ஈடுபாட்டுடன் படிக்க வைத்தது. அதன் பிறகு இதையே சேவையுடன் கூடிய தொழிலாக மாற்றிக் கொண்டேன். அப்பொழுது சமூகப் பணித்துறையின் துறைத்தலைவராய் இருந்த டாக்டர். முரளிதரன் அவர்களின் ஆலோசனை இந்தத் துறையில் என்னை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது. அன்று அவர் கூறிய ஆலோசனைகளும், அறிவுரைகளும் தான் இந்தப் பணியை சிறப்பாக செய்ய வைத்திருக்கிறது என்று கூறுவேன்.

    சமூகப்பணிக்கானபடிப்பைபடித்தபின்உங்களுக்குள்எதுமாதிரியானஅனுபவங்கள்ஏற்பட்டது?

    இந்தப் படிப்பை படிக்கும் போதே என் ஆசிரியர் 14 ஆண்டுகள் நீ காத்திருந்தால் தான் இந்தத் துறையில் சாதிக்க முடியும் என்றார். மேலும் முடித்தவுடன் நான் சேவை செய்கிறேன் என்று இறங்கிவிட முடியாது. பொறுமையாக இருந்து மக்கள் பணியாற்றி பெயர் எடுத்தால் தான் சாதிக்க முடியும். அதற்கு நீண்டகாலம் தேவைப்படும் என்றார். அந்தத் தருணம் எனக்கு மிகவும் கடுமையாகவே அமைந்தது. சமூகப்பணி செய்வதற்கெல்லாம் ஒரு படிப்பு இருக்கின்றதாÐ எனக் கேட்பார்கள். அவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாத நிலையில் தான் இருந்தேன்.

    என்றாலும், என் படிப்பு எந்தெந்த இடத்தில் எவ்வாறு துணைபுரியும், இதன் மூலம் என்ன பயன் இருக்கிறது, இதில் யார் யார் பயனடைவார்கள் போன்றவை குறித்து அவர்களிடம் எடுத்துச் சொல்வேன். அதன் பின்பு அவர்கள் இப்படிப்பைப்பற்றி தெரிந்து கொண்டு பாராட்டச் செய்தார்கள். முதல் மூன்று வருடம், மாதம் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று இப்பணி செய்தேன். அதன்பிறகு, சேலம் நஓந மருத்துவமனையில் நிர்வாக மேலாண்மை பொறுப்பிற்காகப் பணியில் சேர்ந்தேன். இந்தப் பணியானது என்னுடைய சமூகப் பணிக்கு பெரிதும் துணைபுரிந்தது. அங்கிருந்த மருத்துவர்களிடம் நல்ல ஆலோசனையும் கிடைத்தது. அப்போது எந்தத் தொழில் புரிபவர்களாகவும், எந்த வேலையில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு என்னால் ஆலோசனை கூறமுடியும் என்ற நிலைபாடு என்னுள் வந்தது.

    கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கான கல்விக்கு ஒரு பள்ளியை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணம் எழக்காரணம்?

    அடிப்படையில் நானும் குழந்தைப் பருவத்தில் இந்தக் கற்றல் குறைபாட்டைச் சந்தித்தவன் தான். நான் படித்த காலத்தில் இக்குறைபாட்டிற்கு எவ்வித விழிப்புணர்வும் கிடையாது என்பதை உணர்ந்து, இன்றும் நிறைய பள்ளிகளில் நிறைய குழந்தைகள் இக்குறைபாட்டுடன் இருப்பதைப் பார்த்தேன்.  அவர்களுக்கு இக்குறைபாடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதை அறிந்த பின்னர் இக்குறைபாடு சார்ந்த விழிப்புணர்வு தரும் துறையைத் தேர்ந்தெடுத்து அதையும் படித்து முடித்தேன்.

    மருத்துவமனை, பொது இடங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் என்று எங்கெல்லாம் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் கற்றல் குறைபாடு பற்றி பேச ஆரம்பித்தேன். நாளடைவில் எனக்குள்ளே இதற்கென்று ஒரு பள்ளியைத் தொடங்க வேண்டும் என்றஎண்ணம் எழுந்தது. ஆனாலும் அதற்கு நிறைய பிரச்சனைகள், சிக்கல்கள் வந்தது. அதை எல்லாம் நான் கற்றகல்வியின் மூலம் தீர்த்துக் கொண்டு சேலத்தில் 1998-ல் என் வீட்டிலேயே ஒரே ஒரு மாணவனை வைத்துக்கொண்டு தொடங்கினேன். இன்று அது ஒரு கல்வி மையமாக விரிவடைந்துள்ளது.

    தங்கள் கல்வி மையத்திற்கு “ஹெலிக்ஸ்” (Helikx) என்று பெயர் வைக்கக் காரணம்?

    தொடக்கத்தில் இந்தப் பள்ளிக்கு “ஜாந்வனாந்” (மன அமைதி) என்று தான் பெயர் வைத்தோம். பின்பு தான் “ஹெலிக்ஸ்” என்று பெயர் மாற்றம் செய்தோம். ஹெலிக்ஸ் என்பதற்கு கிரேக்க மொழியில் “சூரியக் கடவுள்” என்று பொருள்.

    தொடக்கத்தில் இந்தப் பள்ளிக்கு “ஜாந்வனாந்” (மன அமைதி) என்று தான் பெயர் வைத்தோம். பின்பு தான் “ஹெலிக்ஸ்” என்று பெயர் மாற்றம் செய்தோம். ஹெலிக்ஸ் என்பதற்கு கிரேக்க மொழியில் “சூரியக் கடவுள்” என்று பொருள்.

    வேதியியல் பாடத்தில் “ஸ்பைரல்” என்று ஒன்று வரும். அந்த ஸ்பைரல் வெடிக்கிற போது ஒரு மிகப்பெரிய வெளிச்சம் தோன்றும். அந்த இடத்தை ‘ஹெலிக்ஸ்’ என்று சொல்வார்கள். இருட்டில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய வெளிச்சத்தைக் கொடுக்கிறோம் என்கிற நோக்கில் தான் இந்தப் பெயர் வைத்தோம். இதில் e என்ற ஆங்கிலச்சொல் நேர்மாறாக ý என்று இருக்கும். காரணம் கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள் வார்த்தைகளை இப்படி தான் மாற்றி எழுதுவார்கள். அதுமட்டுமல்லாமல் e என்பது Education என்றபொருள். Education என்பதில் யார் யாருக்கெல்லாம் பிரச்சனை உள்ளதோ அவர்களுக்காகத் தான் நாங்கள் இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டவும் e என்ற எழுத்தை நேர் மாறாக சிவப்பு நிறத்தில் எழுதியுள்ளோம். சிவப்பு என்றாலே ஒரு புரட்சிக்காகவும், புதிய முயற்சிக்காகவும் உள்ள குறியீடு ஆகும்.

    தங்கள்பள்ளியின்நோக்கம்என்பது

    மாணவர்கள் வெறும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதாது. இன்னபிறதிறமைகள் அவனிடம் என்னென்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதில் அவனுக்கு ஊக்கம் கொடுப்பதுவே இப்பள்ளியின் நோக்கம்.

    சென்றஆண்டு ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள மாணவர்கள் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு ஓவியங்களை வரைந்தனர். அவ்வாறு வரைந்த ஓவியங்களை 20,000 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்து சாதனை படைத்தனர்.

    வகுப்பறையிலேயே வைத்து அவர்களுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுப்பதால் படிப்பதில் குறைபாடுள்ள மாணவர்களின் படிப்பில் மேலும் தொய்வு நிலை தான் ஏற்படும் என்று கருதி, ‘சலீம் அலீ’ என்ற நிறுவனம் மூலம் பறவைகள் சரணாலயம் சென்று, அங்கு பறவைகள் பற்றிய ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்ள ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். இந்தக் கல்வியில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கலாம். அவர்களுக்கு எவ்வித கட்டாயமோ, கட்டுப்பாடுகளோ கிடையாது.

    கட்டாயத்திற்கு உட்படுத்தி மாணவர்களை பாடங்களைத் தேர்ந்தெடுக்கச் செய்தால் அவர்களின் தன்னார்வம் நிச்சயம் குறைபடும். எனவே அவரவர் விருப்பப்படியே பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கச் செய்து அவர்கள் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் பாடங்கள் நடத்தப்படுகிறது. மேலும், சமுதாயப் பிரச்சனைகளை இம்மாணவர்களுக்கு அதிகமாகக் கற்றுத்தருகிறோம். படிப்பிற்கும் மேலாக சமுதாயத்தின் மீது தனக்கிருக்கும் அக்கறையையும், அவசியத்தையும் அவனுக்கு உணர்த்தச் செய்கிறோம்.

    2011ம் ஆண்டு “ஜாகித்யாத்நா” என்ற ஒரு ரயில் பயணத்தில் 500 இளைஞர்களுடன், 20 நாளில் 12 மாநிலங்களில் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டோம். இப்பயணத்தில் ஒவ்வொரு இடத்திலும் பல்வேறு விதமான மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. அம்மனிதர்களின் ஆளுமைப் பண்புகளை இம்மாணவர்கள் நேரடியாக பார்த்தன் மூலம் சமுதாயத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது என்றும், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அந்தப் பயணம் அமைந்தது.

    இளைய தலைமுறையினர் தங்களுக்கான சமுதாய மேம்பாடுகள் பற்றிய கடமைகளை செய்ய வேண்டுமெனில் அவர்களுக்கு குழந்தைப் பருவம் முதலே சமுதாய விழிப்புணர்வுகளை ஊட்ட வேண்டும்.

    ஒவ்வொரு பள்ளிகளும் இம்மாதிரியான முயற்சிகளை பள்ளி விடுமுறைகாலங்களில் செய்துவர பள்ளிப்பருவம் முதலே பண்பட்ட மாணவர்களாக இளைய சமுதாயம் உருவாகும். அப்படி உருவாக்குவதில் பள்ளிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு.

    கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை எவ்வாறு இனம் காண்பது?

    இக்குறைபாடுள்ள மாணவர்கள் யாரும் மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள் அல்ல. மற்றவர்களைப் போல சாதாரணமானவர்கள் தான். அதுமட்டுமல்லாமல் எல்லா விதத்திலும் மற்றவர்களைவிட புத்திசாலியானவர்கள். ஆனால் படிப்பு என்று வரும் பொழுது மட்டும் சிரமத்தை வெளிக்காட்டுவார்கள். அந்த சிரமத்திற்குக் காரணம் நிறைய இருக்கிறது. கரு உருவாவது முதல், வளர்ச்சிப் பருவம் வரை குழந்தைகளுக்கு முக்கியமான தருணம். குழந்தைப் பருவத்தில் தவழ்வதை விட்டு நடத்தல், பேசுவதில் தாமதம், வலிப்பு மற்றும் எக்காரணம் இல்லாமலும் கற்றலில் குறைபாடுகள் என்பதெல்லாம் அறிகுறிகள் ஆகும்.

    இன்னும் சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே படிக்க முடியாத நிலை உருவாகும். போட்டி, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் மிகவும் ஈடுபாட்டோடு செய்வார்கள். ஆனால் படிப்பு என்று வரும்போது, ஈடுபாடு குறைவாக இருக்கும். பெற்றோர்களோ, ஆசிரியர்களோ சொல்லிக் கொடுக்கும்பொழுது நன்றாக சொல்வார்கள். தானாகப் படிக்கும் பொழுது அவர்களால் ஒரு வார்த்தையைக் கூட படிக்க முடியாது. மற்றமாணவர்களைக் காட்டிலும் எழுத்துப் பிழை மிகவும் அதிகமாக வரும். இதுபோன்ற காரணங்களே இக்குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிய உதவுகிறது.

    இவர்கள் தான் கற்றலில் குறைபாடு உள்ளவர்கள் என்பதை முதலில் ஆசிரியர்கள் அறிந்துணர வேண்டுமே? அதற்கு நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி குறித்து?

    நாங்கள் முன் கூட்டியே ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று நிர்வாகத்திடம் இந்த பயிற்சியின் நிலையைப் பற்றிக் கூறுகிறோம். இந்தப் பயிற்சியின் நிலையை அறிந்து நிர்வாகத்தினர் ஆசிரியர்களை அனுப்பி வைப்பார்கள். தனியார் பள்ளி நிறுவனத்தில் மட்டும் தான் நாங்களே நேரடியாக சென்று ஆலோசனைகள் கூறுகிறோம். அரசுப் பள்ளிகளில் அவர்களே வருடத்திற்கு ஒருமுறை அழைப்பார்கள்.

    ஒவ்வொரு வகுப்பிலும் 10 முதல் 12 சதவிகித மாணவர்கள் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கவனிக்கப்படாமல் இருப்பதன் மூலம் எதிர்காலத்தில் இவர்களால் பிரச்சனைகளை பெரிய அளவில் எதிர்கொள்ள முடியாமல், மாணவனுக்கும் மாணவனின் குடும்பத்திற்கும் சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. தங்களின் திறமைகளை வெளிக்காட்டுவதில் சிக்கல்கள், திறமை இருந்தும் தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டு, சமுதாய சட்டவிரோதமான செயல்களைச் செய்யவும் இக்குறைபாடு ஒருவரை ஆளாக்கும் என்பதை உணரத்தான் வேண்டும்.

    இந்தக் கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் தங்கள் கல்வி மையத்திற்கு வந்த பின்னர் சாதித்துள்ளார்களா?

    நான் 2001ல் இப்பள்ளியைத் தொடங்கிய அந்த முதல் வருடத்தில் வந்து சேர்ந்த மாணவர்கள் இப்பொழுது MBA, MCA போன்ற படிப்புகள் படித்து பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். எங்களது மாணவர்கள் இன்போசிஸ் நிறுவனங்களில் நல்ல பணியில் உள்ளார்கள். மும்பையில் IIT போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். இதுபோன்ற இன்னும் பல மாணவர்கள் பல நிறுவனங்களில் பணியில் உள்ளனர்.

    இயற்கை வேளாண்மை வகுப்பு, நாடகத் துறை போன்றவற்றையும் செய்து, நிறைய நினைவாற்றல் பயிற்சிகளை முதல் வகுப்பிலிருந்தே கொடுத்து வருகிறோம்.

    இக்கல்விக்கு வயது வரம்பு ஏதும் உள்ளதா?

    எங்கள் நிறுவனத்தில் 10ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. ஆனால் நாங்கள் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று கூறமாட்டோம். ரெமிடியல் ஒன்று, ரெமிடியல் இரண்டு என்று தான் சொல்வோம். அதாவது ரெமிடியல் ஒன்று என்றால் கற்றலில் மிகவும் பின்தங்கியவராக இருப்பார்கள். வயது அதிகம் இருந்தாலும் கூட அவர்களின் படிப்பு மிகவும் பின் தங்கியதாக இருக்கும். வாசித்தலிலும், எழுதுவதிலும் பிழைகள் அதிகமாக காணப்படும்.

    அந்த வயதில் அவனுக்கு எதைச் சொல்லிக் கொடுத்தால் அவன் மனநிலை ஏற்கிறதோ அதை மட்டுமே சொல்லிக் கொடுத்து விளக்குகிறோம். முதலில் ஒவ்வொரு குழந்தைகளின் “ஐக்யூ” தேர்வு, பிரச்சனைகள் என்ன, அவனின் நிலை என்ன என்பதை முதலில் ஆய்ந்து அவனுக்கு எது தலையாய பிரச்சனையாக இருக்கிறதோ அதிலிருந்து அவனுக்கு சொல்லிக் கொடுத்துப் புரிய வைப்போம்.

    பெற்றோர்கள் இக்குறைபாட்டை ஆறு வயதிலேயே இனம்கண்டு பயிற்சி நிலையத்தை அணுகினால் நிச்சயம் மற்ற பிள்ளைகள் போல் படிப்பை தொடர்ச்சியாக முடிக்க முடியும். அதன்பின்னர் வரும் குழந்தைகள் வயதுக்கு ஏற்றாற்போல் வகுப்பை முடிக்க முடியாது.

    16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இக்கல்வி பொருந்தாது. காரணம், அதற்கு மேல் இக்கல்வியைக் குழந்தைகள் ஏற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருக்கும். 16 வயதில் தொழிற்படிப்பை படிக்கும் சூழலுக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். இதனால் 16 வயதுக்குட்பட்டவர்களையே நன்றாக கவனித்து சிறந்தவர்களாக உருவாக்க முடியும்.

    இம்மாணவர்களுக்கான தேர்வு முறை பற்றிக் கூறுங்கள்?

    எங்கள் நிறுவனம் மனிதவள ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், புதுடெல்லியின் மேற்பார்வையின் கீழ் இயங்கக் கூடியது. இது ஒரு திறந்தநிலைப் பள்ளிக்கல்வி முறை. இருந்தாலும் மற்றகல்வியைப் போல இதிலும் அதே சமச்சீர் கல்விமுறையைத் தான் பின்பற்றி வருகிறோம். இந்நிறுவனத்திற்கென்று அரசாங்கம் பாடத்திட்டங்களைக் கொடுத்துவிடுகிறது. அந்தப் பாடத்திட்டத்தின் கீழ் பாடங்களை நடத்தி மாணவர்கள் தேர்வு எழுதிய பின்னர் அந்தத் தேர்வு தாள்களை டெல்லிக்கு அனுப்பி வைத்து விடுவோம். அவர்கள் எங்களுக்கு A, B, C என்ற முறையில் சான்றிதழ்களைக் கொடுப்பார்கள். C என்றால் மூன்றாம் வகுப்பு, B சான்றிதழ் என்றால் 5ம் வகுப்பு, A சான்றிதழ் என்றால் 8ம் வகுப்பு என பிரித்து வைத்துள்ளார்கள்.

    இப்பொழுது இந்தத் துறைசார்ந்த வளர்ச்சி போதுமானதாக உள்ளது என்று நினைக்கிறீர்களா?

    இப்பொழுது தான் இந்தத் துறையின் அடிப்படையை 20% மக்களிடம் புரிய வைத்திருக்கிறோம். அவர்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அப்படியிருந்தும் நிறைய படித்தவர்களுக்கே இது பற்றிய புரிதல் இன்னும் வரவில்லை. இதிலிருந்து கிடைக்கப்பெறும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்.

    ஒரு தனி மனிதனின் வெற்றிக்குக் காரணம் படிப்பறிவா? பட்டறிவா?

    ஒருவர் தன் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு, அந்த படிப்போடு மட்டுமே தன்னை தொடர்புபடுத்திக் கொண்டு தன்னை தயார்படுத்துவதன் மூலம் இந்த சமூகத்தில் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. படிப்பறிவோடு பட்டறிவு சேரும் பொழுதுதான் வெற்றி பெறமுடியும். பட்டறிவு என்பது அனுபவம் தான். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு இது மிகவும் அவசியம்.

    உங்களின் எந்தச் செயல்பாடு ‘சாதிக்க வைத்தது’ என்று நினைக்கிறீர்கள்?

    ஒரு செயலை எடுத்துக்கொண்டு இச்செயலை என்னால் தான் சாதிக்க முடியும் என்று எவன் ஒருவன் முனைப்போடு செயல்படுகிறானோ அந்த முனைப்பு தான் அவனின் முதல் வெற்றி.

    ஒருமுறை நான் மும்பை சென்றிருந்தேன். அங்கிருந்த பிச்சைக்காரர்களுடன் 15 நாள் தங்கி அவர்களைப் பற்றிய ஒரு ஆய்வு மேற்கொண்டேன். அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டவை தான் என் வெற்றியாக கருதுகிறேன்.

    • க்ஷி  பிச்சைக்காரர்கள், மழையானாலும் வெயிலானாலும் தங்களது செயல்பாடான பிச்சை எடுப்பதில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். தொடர்ந்து ஓடிக்கொண்டே தான் இருப்பார்கள்.
    • மற்றவர்கள் தன்னை நிச்சயம் திட்டுவார்கள், ஏளனமாய் பேசுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் அவர்களது தொழிலான பிச்சை எடுப்பதைத் தொடர்ந்து செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
    •   பிச்சை எடுக்கும்பொழுது எல்லா மனிதர்களையும் நன்றாக கூர்ந்து கவனிக்கிறார்கள். மனிதர்களின் மனநிலையை அறிந்து கொள்கிறார்கள்.

    இம்மாதிரியான முனைப்பை நான் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம் தான் என் வாழ்க்கையை திசைதிருப்பியது என்று கூட சொல்லலாம்.

    நீங்கள் ஒரு சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் என்ற வகையில் ஒரு சுயமுன்னேற்றப் பயிற்சியின் மூலம் ஒரு மனிதனை எந்த அளவிற்கு மாற்றமுடியும்? அந்த மாற்றத்தின் மூலம் நடந்த மறக்க முடியாத நிகழ்வு?

    ஒரு பயிற்சியின் மூலம் ஒரு மனிதனுக்கு 7 முதல் 10 சதவீதம் மட்டுமே மாற்றம் கொடுக்க முடியும். தொடர்ச்சியாக பயிற்சி கொடுப்பதன் மூலம் வேண்டுமென்றால் மேலும் மாற்றத்தைக் கொடுக்க முடியும். ஒரு ராக்கெட் மேலே பறக்க வேண்டுமென்றால் கீழிருந்து உந்துசக்தி கொடுத்தவுடன் மறையும் ‘இனர்ஷயா’ என்ற இயந்திரத்தைப் போல் அவர்களுக்கு பயிற்சியின் மூலம் உந்துதல் கொடுக்கப்படுகிறது. மேலே ஏறுவது அவரவர் கையில் தான் இருக்கிறது.

    நான் சேலத்தில் ஒரு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் நிகழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்த பொழுது சண்முகம் என்பவர் என்னிடம் தினமும் தொலைபேசியில் பேசுவார். சாதாரண சைக்கிள் கடையில் வேலைபார்த்து வந்த அவர் இப்பொழுது கடையின் உரிமையாளராக உயர்ந்துள்ளேன் என்றார். இப்படிப் பலர் அவர்களது வாழ்க்கையில் உயர்ந்துள்ளார்கள்.

    குடும்பம் குறித்து…

    ஒவ்வொருவரின் வெற்றிக்கும் அவர்களின் குடும்பம் ஒரு காரணமாக இருக்கும். அந்த வகையில் என் வெற்றிக்கு என் குடும்பமே முக்கிய காரணம். எனது மனைவி திருமதி தேவிப்பிரியா இந்நிறுவனத்தின் செயலாளராக இருந்து எனக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறார். இவர் உளவியல் படித்ததால் பள்ளியின் மேலாண்மைகளை சரியாக கவனிக்க முடிகிறது. மேலும் கற்றலில் குறைபாடு சம்பந்தமாக 4 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

    இக்கல்வி சம்பந்தமான தமிழ்நாடு சிறப்பு ஆய்வுக்குழுவில் உறுப்பினராக இருக்கிறார். எனக்கு இரு குழந்தைகள் உபநிஷா, சைந்தவி.

    எனது மனைவியின் பெற்றோர்கள் திரு. வெங்கட கிருஷ்ணன் அவர்களும், திருமதி. சந்திரிகா அவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

    எதிர்கால இலக்கு?

    இந்தச் சமுதாயத்தில் குழந்தைப்பருவம் முதலே சமுதாய உணர்வை மாணவர்களுக்கு உட்புகுத்த வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் இப்பொழுது இருக்கும் வளங்கள் முற்றிலும் அழிந்துவிடும் என்பதனை இப்பொழுது உள்ள குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்வரும் விளைவுகளை அறிவுறுத்தி என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.

    அவரவர் பிரச்சனைகளோடு அல்லாமல் சமுதாய பிரச்சனைகளுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்பது பற்றி அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இப்படி நிறைய கனவுகள் உண்டு.

    பெற்றவிருதுகள்…

    பல சமூக நிறுவனங்கள் எனக்கு பல விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது. அதில் குறிப்பாக, 2013ம் ஆண்டு டெல்லியிலிருந்து தன்னார்வ நிறுவனம் ஒன்று “National Educationalist Award” என்கிற விருதை வழங்கி சிறப்பித்தது.

    “நேர நிர்வாகம்” உங்களிடம் எப்படி?

    என் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்தது என்பது மிகவும் குறைவு. இந்த ஒரு வருட காலமாகத்தான் என்னால் குடும்பத்தினரிடம் நேரத்தை சரியாக செலவிட முடிகிறது.

    என்னிடம் 18 பேர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் இயக்குனர்களாகிய பாலாஜி மற்றும் குமரகுரு ஆகியோரும், பங்கீட்டாளர்களாகிய (Partners) சசிகலா, ராஜலட்சுமி ஆகியோரும் சமுதாய அக்கறையோடு வந்தவர்கள் தான். இதனால் என் வேலைப்பளுவை இவர்கள் வெகுவாக குறைத்திருக்கிறார்கள். எனவே இப்போது என்னால் எல்லா வேலைகளையும் சரியாக பிரித்துப் பார்க்க முடிகிறது.

    நன்றிக்குரியவர்கள் என்று நீங்கள் சொல்ல விரும்புபவர்கள்?

    Dr. சுரேஷ்குமரன், ஜான் பிரிட்டோ, அருப்புக்கோட்டை ஜெயவிலாஷ் நிறுவனம், பார்னி ஜார்ஜ், துவாரங்கநாதன், ஆத்தூர் ராஜகோபால், லலிதா ராமானுஜம் (சென்னை), திரு. கார்மேகம், R.K.G. நிறுவனம், ரோட்டரி கேலக்ஸி, JCI சேலம் மெட்ரோ, பாபு, சங்கர், பொறி. மோகன்ராஜ், NSIT சேலம், ஹரி, நிர்மலா பாலாஜி, ராஜா, காசி மாயாண்டி ஆகியோருக்கு இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தன்னம்பிக்கை குறித்து?

    எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்தது “தன்னம்பிக்கை இதழ்” தான். நான் பயிற்சியாளராக இருந்தபோது எல்லாதரப்பு மக்களையும் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது. தன்னம்பிக்கை மாத இதழ் மூலம் என் பேச்சாற்றல் சமூக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைந்ததை எண்ணி மனமகிழ்ச்சி கொள்கிறேன்.

    முடியாது இது என்பதையெல்லாம் முடித்துக் காட்டுவது “தன்னம்பிக்கை” தான். தொழிற்படிப்பு முடித்து தொழில் சார்ந்து செல்ல மனமில்லாமல் “சமூகவியல்” படிப்பை முடித்து தனிமனிதப் போராட்டம் தொடர்ந்த போது உன்னால் முடியும் முன்னேறு என என்னை முன்னோக்கி அழைத்துச் சென்றது என்னிடம் இருந்த “தன்னம்பிக்கை” தான். தன்னம்பிக்கை உள்ள மனிதன் என்றும் “ஜெயிப்பவன்”.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நான் என் அச்சத்தைப் போக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

    ரம்யா, சேலம்

    அச்சத்தைப்போக்க ஆறு வழிகள்

    1. இதற்குமுன் வெற்றிகரமாகச் செய்து முடித்த செயல்களை எண்ணு, அப்போது உன்னால் முடிந்தது என்றால் இப்போது மட்டும் ஏன் முடியாது என்று எண்ணு.

    திருப்புதல் தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்கிய நீ பொதுத் தேர்விலும் வாங்கமுடியும் என நம்பு. மற்றவரால் முடியும் என்றால் என்னாலும் முடியும். மற்றவரால் செய்ய முடியாதது, என்னால் முடியும் என்று உரக்கச் சொல்; நிமிர்ந்து நில்; வெல்.

    2. அச்சம் அகல அதையே செய்.

    புரியவில்லையா? நாயைக் கண்டாலே பயம் என்றால் அப்பாவிடம் சொல்லி ஒரு சிறிய நாய்க்குட்டியை வாங்கி வளர்த்து, தொட்டு, தூக்கி நாயைப் பற்றிய பயத்தைப் போக்கு.

    முதல்நாள் பள்ளியில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தில் பேச முடியாமல் தடுமாற்றமா? விடாதே அடுத்தடுத்த நாளும் பேசு. பயம் தன்னால் நீங்கும். நான்கு வரிப்பாடல் மனப்பாடம் ஆகவில்லையா? விடாதே. நாள் முழுவதும் படி, அப்புறம் பார். நூறு வரிகளை நொடிப்பொழுதில் மனப்பாடம் செய்ய இயலும்.

    3. வெற்றியாளரைப் பற்றிக்கொள்.

    சென்ற ஆண்டு பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவரிடம் . ( பேசு (IIT – JEE)-ல் வென்ற மாணவரிடம் அவர்கள் தேர்வு பயத்தை எப்படி விரட்டினார்கள் என்பதைத் தெரிந்துகொள்.

    4. மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப்படி.

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ஆப்ரகாம் லிங்கன், நெப்போலியன், சர் ஐசக் நியூட்டன், தாமஸ் ஆல்வா எடிசன், ஹெலன் கெல்லர், லூயிஸ் பாஸ்டர், பீத்தோவன், லூயி பிரெயில் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் பயம் எனும் உணர்வு உன்னைவிட்டு அகலும்.

    5.பகுத்துச் செயலாற்று.

    ‘பையத் தின்றால் பனை மரத்தையும் தின்னலாம் என்பது மலையாளப் பழமொழி’. பாடங்களைப் பகுத்துப் பருவம் தோறும் படித்தால் பயமின்றி முழுவதையும் படித்து முடிக்கலாம்.

    6.நோய் முதல் நாடு.

    பயம் என்பது நோய். அந்நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் களைய வேண்டும். தானாக ஏணியில் ஏறி சறுக்கி விழுந்தவர் அடுத்த முறை ஏணியில் ஏறபயப்படுகிறார். அடுத்த முறை ஒருவரை ஏணியை ஆடாமல் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு அச்சமின்றி ஏறவேண்டும்.

    இத்தனை வழிகளிலும் உன்னுடைய பயம் குறையாவிட்டால் ஒரு நல்ல மனநல ஆலோசகரை அணுகுவது நல்லது.

    தகுதி வாய்ந்த மருத்துவரை அல்லது மனநல மருத்துவரை நாட வேண்டும். போலி மருத்துவர்களிடம் சென்றால், ‘முதுகு வலி போய் திருகு வலி வந்தது’ என்ற கதையாக மாறிவிடும்.

    சிலர் பேய் ஓட்டிகளிடம் செல்வதுண்டு. அவர்கள் செய்யும் கொடுமை அளவற்றது. முற்றிய தேங்காயை தலையில் அடித்து உடைக்கிறார்கள். தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் தான்! மண்டை உடைந்து மரணம் ஏற்படுவதற்கான மதிகெட்ட செயல்தான் இது.

    வேகமாக தவழ்ந்து செல்லும் குழந்தை, திண்ணையின் ஓரத்தில் சென்றால் தவழ்வதை நிறுத்தும். விழுந்து விடுவோம் என அஞ்சும்; அழும். வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது தாயைப்பிரிந்து ஓர் அடி கூட எடுத்து வைக்காது குழந்தை. காரணம் பயம். எனவே பய உணர்வு என்பது மனித இனத்துக்கு உரிய அடிப்படையான உந்துணர்வாகும்.

    “”மற்றவரால் முடியும்

    என்றால் என்னாலும்

    முடியும்.

     மற்றவரால் செய்ய

    முடியாதது,

    என்னால் முடியும் என்று

    உரக்கச் சொல்”

    இன்னொரு கோணத்தில் சொல்வதென்றால், துணிச்சல் என்பது பயமில்லை அன்று, மாறாக பயத்தை விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு செயல்படுவது தான் துணிச்சல்.

    சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்வதற்கு அஞ்ச வேண்டும். “வாள் கொண்டு பிளந்தாலும், தாள் வீழ்ந்து பணிந்தாலும் பொய் சொல்லக்கூடாது” என்பார் பாரதிதாசன். சட்டத்திற்குப் புறம்பாகத் தினையளவு தவறு செய்தாலும் பனையளவாகக் கொள்வார்  அவர் நல்லவராக இருந்தால்.

    ஒருவன் தன் திறமையை சந்தேகிப்பதுதான் மிக மோசமான பலவீனம். அது உன்னை முடக்கிப்போட்டுவிடும். திறமைக்குறைவு வருத்தத்திற்கு உரியது அல்ல; உழைப்புக் குறைவு தான் வருத்தத்திற்குரியது.

    வரலாற்று ஏடுகளைப் புரட்டிப்பார்த்தால் தெரியும். வெற்றியாளர்கள் பெரிய பலசாலிகளாகவோ, பாக்யசாலிகளாகவோ இருந்ததில்லை. தம் பலவீனங்களைப் புறந்தள்ளிவிட்டு தம்மிடம் இருந்த திறமைகளை வைத்துக் கொண்டு முயற்சியால் முன்னேறியவர்கள் அவர்கள். தன்னம்பிக்கை ஒன்றுதான் அவர்களின் முதலீடாக இருந்தது.

    உன்னிடத்தில் நம்பிக்கை வை. தோல்வி கண்டு அஞ்சாதே. உன்னால் மலையைக் கூட நகர்த்த முடியும் நம்பு.

    இந்த இதழை மேலும்

     

    உள்ளத்தோடு உள்ளம்

    ஓர் இளைஞன் தன் நண்பர்களிடம் ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சொல்லுங்கள் எனக் கேட்டான்.

    சிலர் சொன்னார்கள், எங்களுடனேயே செலவிடலாமே என்று. இன்னும் சிலர் திரைப்படத்திற்குப் போகலாம் என்றார்கள். மேலும் பல தரப்பட்ட யோசனைகளைச் சொன்னார்கள்.

    இளைஞனுக்குத் திருப்தி இல்லை. நேர நிர்வாகவியல் நிபுணரைக் கேட்டால் நல்ல ஆலோசனை கிடைக்கும் என்று அவரிடம் சென்று கேட்டான்.

    அதேசமயம், அவனுக்குள் நல்ல புத்தகங்களைப் படி, நல்ல செயல்கள் பல செய் என்று தான் நிபுணர் சொல்வார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் நேர நிர்வாகவியல் நிபுணர், உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள். அதுவே பயனுள்ள வாழ்வை உனக்குப் பெற்றுத் தரும் என்றார்.

    நம்மை திசைதிருப்பி தவறுகள் பக்கம் இழுத்துச் செல்ல தீய சக்திகள் இங்கு பல ரூபத்தில் காத்துக்கிடக்கவே செய்கிறார்கள் என்பதை உணர்ந்து நமக்கான நேரத்தை பயனுள்ள வழிகளில் பொழுதுபோக்கவே விருப்பம் கொண்டால் விரும்பிய வாழ்க்கை நம்மோடு.

    வேளாண்மைப் படிப்புக்கு ஏன் இவ்வளவு போட்டி?

    தமிழகத்தில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு வேளாண்மைச் சார்ந்த படிப்புகளுக்கு அதிக ஆர்வம் மாணவர்களிடையே காணப்படுகிறது. வேளாண்மை கல்வி படிக்க வேண்டும் என்றஆர்வம் எதனால் இந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்பதை வேளாண்மை வல்லுனர்கள் பல ஊகங்களை வகுத்துக்கொண்டு ஆராய்கிறார்கள்.

    பல்வேறு ஊடகங்கள், கல்வியியல் வல்லுனர்கள், வேளாண்மை விஞ்ஞானிகள் ஆகிய அனைத்து தரப்பு வாதங்களையும் உற்றுநோக்கினால் சில உண்மைகள் தெளிவாக புலப்படும்.

    தற்போதைய பொருளாதார மந்தநிலையின் காரணமாக IT எனப்படும் மென்பொருள் துறையில் போதிய அளவு வேலைவாய்ப்பு இல்லை என்று அனைத்து தரப்பு மக்களும் உணர ஆரம்பித்துவிட்டனர். இதனால் பொறியியல் துறையைப் பெரும்பாலும் நாடிச்சென்ற மாணவர்கள் பலர் இதில் பெருகி வரும் வேலைத் தட்டுப்பாடுகளைக் கண்டு மற்றதுறைகளில் தனது கவனங்களைத் திசைதிருப்பி வருகின்றனர்.

    மாற்றுத் துறை என்று தேர்வு செய்யும் போது மருத்துவப் படிப்பு, அதுவும் தற்போது நிலவுகின்ற போட்டிகளில் மிகவும் குறைந்த மாணவர்களுக்கே மருத்துத் துறையில் இடம் கிடைக்கின்றது.

    மருத்துவத்திற்கு அடுத்ததாக சிறந்த துறையாக வேளாண்மை உள்ளது. அதற்குக் காரணம், வேளாண்மைப் பட்டதாரிகள் தற்போது அதிக அளவில் IAS, IPS போன்ற ஆட்சிப் பணிக்கு பெருமளவில் தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் பெரும்பாலான துறைகளில் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் 1980ம் ஆண்டுகளில் இந்திய ஆட்சிப் பணிக்குச் சேர்ந்த ஐஅந அதிகாரிகளான டாக்டர் இறையன்பு, டாக்டர் V.K. சுப்புராஜ், டாக்டர் அருள்மொழி, திரு. சண்முகம் போன்றஆட்சியாளர்கள் திறமையான IAS அதிகாரிகளாக தற்போது வலம்வந்து கொண்டு இருப்பது, தமிழக மாணவர்கள் மத்தியில் வேளாண்மைப் படிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

    டாக்டர் சைலேந்திரபாபு ADGP போன்றமூத்த IPS அதிகாரிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் IAS / IPS பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். இந்த மாணவர்கள் தங்களை இந்திய ஆட்சி பணிக்கு தயார் செய்ய வேண்டும் என்றால் வேளாண்மைக் கல்லூரிகள் தான் சிறந்த இடம் என்று எண்ணுகிறார்கள்.

    இந்திய ஆட்சி பணிக்கு ஒரு குறிப்பிட்ட சதம் தேர்வு பெற்றால் மட்டும் வேளாண்மைப் பட்டப்படிப்பு அதிக கவனத்தை ஈர்க்காது. இந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் மற்றமாணவர்களுக்கும் இருப்பதால் தான் நிறைய மாணவர்கள் இந்தத் துறையை நோக்கி வருகிறார்கள்.

    தற்போது பெரும்பாலான தேசிய வங்கிகள், வங்கி மேலாளர்கள் ஆகியோரும் வேளாண்மைப் பட்டதாரிகளாக உள்ளனர். இன்றும் வங்கிப் பணிகளில் வேளாண்மை பட்டதாரிகளுக்கு பெரும் அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

    பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி போன்ற முன்னணி வங்கிகளில் மூத்த மேலாளர்களாக நிறைய வேளாண்மை பட்டதாரிகள் திறம்பட நிர்வாகம் செய்து வருகிறார்கள். பெரும்பாலான வேளாண்மை சார்ந்த துறைகளில் முதலீட்டுகளை ஊக்குவிக்கும் வகைகளில் வேளாண்மை பட்டதாரிகள் பணிபுரிகிறார்கள்.

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள வேளாண்மைப் பல்கûலைக் கழகங்களுக்கு முன்னோடியாக திகழ்வதும், இதில் உள்ள விஞ்ஞானிகள் உலக வேளாண்மை விஞ்ஞானிகளுக்கு நிகராக ஆராய்ச்சிகள் செய்வதும் மாணவர்களை ஆராய்ச்சிப் பணிக்கு வரத் தூண்டுகிறது.

    மேலும் வேளாண்மை சார்ந்த தொழில்கள் தற்போது அதிக அளவில் வளர்ந்து வருவதும், வேளாண்மையை ஒரு தொழிலாக தற்போது பெரும் முதலீட்டாளர்கள் பார்க்கத் தொடங்கி இருப்பதும் இந்தத் துறையில் வல்லுனர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது என்று கூறலாம்.

    பண்டைய கால வேளாண்மை முறைகள் தொன்றுதொட்டு பாரம்பரிய முறையில் விவசாயம் என்பதாக இருந்தது.. தற்போது Corporate Forming, Hi-Tech Agriculture அதிக தொழில்நுட்பங்களுடன் கூடிய வேளாண்மை என்று லாபகரமாக இருப்பதால், அதற்குத் தேவையான வல்லுனர்கள், தனியார் மற்றும் அரசாங்கப் பணிகளுக்கு பெருமளவில் தேவைப்படுவதும் வேளாண்மைப் படிப்பின் மீது அதிக ஆர்வத்தை மாணவர்களிடமும், பெற்றோர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல் (Rank List) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnau.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. இதில் வரலாறு காணாத அளவு மிகவும் அதிக கட்-ஆப் இருந்தால் தான் வேளாண்மை படிப்புக்கு வாய்ப்பு இருக்கும் என்றசூழ்நிலை உருவாகிஉள்ளது. முந்தைய ஆண்டுகளில் 195.00 கட்-ஆப் மதிப்பெண்களில் தான் மாணவர் சேர்க்கை ஆரம்பமாகும். ஆனால் தற்போது 195.00 கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு கோவை வேளாண்மை கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்குறி உள்ளது. ஏனெனில் 195.00 கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு மேல் நான்காயிரம் மாணவர்கள் உள்ளனர். இவர்களின் பார்வை வேளாண்மைப் படிப்பின் மேல் உள்ளது. இந்த ஆண்டின் பெரும்பாலானவர்களின் தேர்வு வேளாண்மைக் கல்வியாக தான் இருக்கும் என்பதை திடமாக சொல்லலாம்.

    இந்த இதழை மேலும்