முனைவர்A.S. பிரபுகுமார், M.S., MBA., Ph.D.
தலைவர், SPK குழுமங்கள், திருச்செங்கோடு
- “சந்தர்ப்பங்கள் வரும் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். சந்தர்ப்பங்களை தேடிப் பெறுபவர்கள் தான் வாழ்க்கையில் பெற்றி பெறுகின்றார்கள்” என்பார் பெர்னாட்ஷா. அந்த வகையில் சந்தர்ப்பங்களைத் தேடித்தேடி ஒவ்வொன்றிலும் தன் முத்திரையைப் பதித்து வரும் இளம் சாதிப்பாளர் இவர்.
- நாம் வாழும் வாழ்க்கையை யாரோ ஒருவர் தீர்மானிப்பதல்ல, நம் வாழ்க்கை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்புரிந்து கொண்டிருப்பவர்.
- இளம் வயதில் SPK பள்ளிகளின் தலைவர் பதவி வகிப்பவர்.
- SPK கல்வி அறக்கட்டளையின் தாளாளராக அங்கம் வகிப்பவர்.
- “முடியும் என்றே முன்னேறினால். எல்லாம் முடியும்” என்கிற துடிப்புடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படும் இளைஞர்..
- ஆளுமைத் திறனுடனும் சாதித்து வரும் இளம் தொழிலதிபர்.
- தம்முடைய SPK பள்ளிக் கல்வியில் புதுமையைப் புகுத்தியவர். 32 உலக சாதனைகளைப் படைக்க வைத்தவர். இப்படி தம்முடைய கல்விப் பணியிலும், தொழில் முனைவிலும் தனித்துவத்தை நிலைநாட்டி வரும் SPK குழுமங்களின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் முனைவர் திரு. S. பிரபுகுமார் அவர்களை உலக சாதனையாளர் “எலைட்” Dr. K. பிரதீப்குமார் அவர்களுடன் நாம் நேர்முகம் கண்டபோது, “பன்முக சிந்தனையுடன் தானும் வளர்ந்து, தம்மைச் சார்ந்தவர்களையும் வளர்த்து, தன்னை சான்றோனாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை ஒவ்வொருவருக்குள்ளும் எழ வேண்டும்” என்றவருடன் இனி நாம்…
பிறந்தது… படித்தது…
நான் பிறந்தது திருச்செங்கோடு மாவட்டத்தில் உள்ள அனிமூர் என்கிற கிராமம். அப்பா திரு. செங்கோடன், அம்மா திருமதி. அங்கம்மாள். எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம் தான்.
ஆரம்பப் பள்ளிக்கல்வி திருச்செங்கோட்டிலும், 8ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை கல்வி கற்றது அருகிலிருக்கும் ஈரோடு நகரத்திலும் தான். தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பள்ளிக்குச் செல்வேன். பள்ளியின் பெயர் BVB மெட்ரிகுலேசன் பள்ளி. 10ம் வகுப்பில் முதல் நிலையில் (First Class) 2000ல் தேர்வானேன். அதே பள்ளியில் மேல்நிலை படிப்பையும் தொடர்ந்தேன். 2002ல் 12ம் வகுப்பிலும் முதல் நிலையில் (First Class) தேர்வானேன்.
பொதுவாகவே, தைரியமும், துணிச்சலும் இருந்ததால் பள்ளிகளில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் பங்குகொள்வேன். பரிசுகளும், சான்றிதழ்களும் கிடைக்கின்றதோ, இல்லையோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை. மேடைகளும், அனுபவங்களும் கிடைத்தால் போதும் என்ற காரணத்தினாலேயே அனைத்துப் போட்டிகளிலும் பங்கு கொள்வேன். அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக இருந்ததும் ஒரு காரணமாகும்.
புத்தகங்களில் படிப்பது மட்டுமல்லாமல் இயன்றளவு அனைத்தையும் செயல்படுத்தி பார்க்கவும் முயல்வேன். வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, வெளிவட்டாரத்திலும் கூட எனக்கு அதற்கு தடைகள் இருந்ததில்லை. அப்படி தடைகள் இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதும் இல்லை. ஆகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நான் எனதாக்கிக் கொண்டேன் என்றே சொல்லலாம்.
கல்லூரி வாழ்க்கை
12ம் வகுப்பு முடித்தவுடன் கோயம்புத்தூர், அவினாசி ரோடு, பீளமேட்டில் உள்ள கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Coimbatore Institute of Technology)-யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தேன். 3 வருடம் விடுதியில் தங்கி படித்தேன். அங்கு அண்ணா பல்கலைக்கழகப் பாடத்திட்டம், அதிலும் 2006ம் ஆண்டில் முதல் நிலையில் தேர்ச்சியடைந்தேன்.
தொடர்ந்து முதுகலைப் படிப்பிற்காக பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், அமெரிக்கா (University of Birmingham, UK)-வில் MS (Manufacturing Engineering and Management) படித்தேன். 2007ல் முதல் நிலையில் (First class) தேர்வானேன். அதைத் தொடர்ந்து 2010ம் ஆண்டில் மலேசியா சன்வே பல்கலைக்கழகம் / விக்டோரியா பல்கலைக்கழகத்தில் MBA (General Management) படிப்பை முடித்தேன். அதன்பின்பு இத்தாலியில் உள்ள Universita Popolare Degli Studi Di Milano பல்கலைக்கழகத்தில் Ph.D. தொழில் மேலாண்மை (Business Administration) முடித்து சமீபத்தில் 2014 பிப்ரவரியில் டாக்டர் பட்டமும் பெற்றேன்.
நீங்கள் எப்பொழுது SPK குழுமத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்கள்?
என்னுடைய இளங்கலைப் படிப்பு கோவை CIT-யில் முடிந்தவுடனேயே என்னையும் மேலாண்மை பங்குதாரராக SPK குழுமத்தில் என் அப்பா சேர்த்தார். SPK கல்வி அறக்கட்டளையின் தாளாளராகவும் என்னை இணைத்தார். அதற்கு பிறகு ஸ்ரீ SPK பப்ளிக் ஸ்கூல் எனும் CBSE பாடத்திட்டம் கொண்ட பள்ளியை 2007ல் துவங்கினோம். பள்ளி நிர்வாகத்தினையும் அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டு என்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்தேன். எல்லா வேலைகளையும் தொலைபேசியின் மூலமாகவே செய்துவந்தேன்.
MS-க்காக அமெரிக்காவிலும், பின்பு ஒரு வருடம் கழித்து MBA-விற்காக மலேசியாவிலும் நான் இருந்தேன். விடுமுறையில் இந்தியா வரும்பொழுது நேரில் சென்று பள்ளி தொடர்பான பணிகளைப் பார்ப்பேன். 2013ல் படிப்பு முடிந்து நிரந்தரமாக இங்கேயே தங்கி இப்பொழுது முழுநேரமும் மாணவர்கள், பள்ளி, கல்வி, வளர்ச்சி, முன்னேற்றம், சாதனைகள் என்று என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.
SPK பள்ளிகளின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இந்த ஒரு வருடத்தில் தாங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள்?
தலைசிறந்த கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் SPK பள்ளி என்ற பெயரினை ‘SPK GEMS’ என்று பெயர் மாற்றம் செய்தேன்.
GEMS என்பதற்கு,
G – Global, E – Education, M – Mentor, S – Structure
பள்ளி கட்டுமான வசதிகளை உயர்த்தினேன். கல்விப் பயிற்றுவிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் ஏற்றபடி சூழலை மாற்றினேன்.
மாணவர்களின் அறிவை உணரச்செய்யும் படி பயிற்றுவிக்கும் மிகவும் கற்றுத் தேர்ந்த ஆசிரியர்களை நியமித்தேன். கல்வித்திட்டத்துடன் பயிற்றுவிக்கும் திட்டம், ஆசிரியர் கூட்டங்கள், மாணவர் கூட்டங்கள் போன்றவைகளை நடத்தினேன்.
SPK பள்ளி மாணவ மாணவிகளை உலக சாதனையாளர்களாக்கி அவர்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தினேன்.
SPK குழுமத்தின் அனைத்து இலச்சினைகளையும் அரசாங்கத்தில் பதிவு செய்தேன். உடனேயே புதிதாக கட்டுமானத் தொழிலும் ஈடுபட்டு முதல் அடுக்குமாடி திட்டத்தை கோவையில் துவக்கி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறேன்.
தாய் தந்தையைப் பற்றியும், தந்தை காட்டிய வழிகாட்டுதல் பற்றியும் சொல்லுங்கள்…
அப்பா அம்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் மிகவும் சாதாரண விவசாயக் குடும்பம் தான். அப்பா விவசாயக் குடும்பத்தில் இருந்து நன்கு படித்து விவசாயக் கல்லூரியில் பொறியாளராகப் பணிபுரிந்தவர்.
1986ம் ஆண்டு திருச்செங்கோட்டில் “SPK போர்வெல்ஸ்’ என்கிற இந்நிறுவனத்தை தொடங்கினார். திருச்செங்கோடு என்றாலே போர்வெல்ஸ்-க்கு பெயர் பெற்ற ஊராகும். 1996ம் ஆண்டு வரை போர்வெல்ஸ் தொழிலை மட்டுமே அப்பா செய்து வந்தார். அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலைத் துவக்கினார். நில விற்பனையை தவணைமுறைத் திட்டமாக தமிழகத்தில் கொண்டு வந்தது என் அப்பா என்றே சொல்லலாம். இந்த ரியல் எஸ்டேட் மூலம் இதுவரை 80,000 வீட்டுமனைகளை மக்களுக்கு திருப்திகரமாகவும், நேர்மையாகவும் செய்து கொடுத்திருக்கிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த தவணைமுறைத் திட்டத்தை ஏற்படுத்தியதன் நோக்கமே ஏழை எளிய மக்கள் கூட இந்த தவணைத் திட்டத்தில் வீடு வாங்கும் நிலை பெறவேண்டும் என்ற எண்ணம் தான்.
2001ம் ஆண்டு SPK கல்வி அறக்கட்டளையைத் துவக்கி அதன் கீழ் SPK மெட்ரிக்குலேசன் பள்ளியைத் துவக்கினார். நன்கு படித்த ஆசிரியர்களை வைத்து தரமான கல்வியை கொடுத்து பள்ளியை படிப்படியாக மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தினார்.
கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு எந்த மாதிரியான பயிற்சிகள் வழங்கப்படுகிறது?
மாணவர்கள் அவர்களது பள்ளிக்கல்வி நேரத்திலேயே வீட்டுப்பாடங்களைச் செய்யுமாறு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். அதாவது வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கென்று கடைசி 45 நிமிட வகுப்பை ஒதுக்கி செய்துவிட்டு, அன்று பள்ளியில் நடத்திய பாடத்தை வீட்டில் முடித்துவரும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அன்றன்றையப் பாடங்களை அன்றே முடித்துவிட வேண்டும் என்பதற்காக இப்படி செயல்படுத்தப்படுகிறது. அந்தப் பாடமுறையை முறையாகப் பயன்படுத்தாத மாணவர்கள் தான் பின்தங்குகிறார்கள்.
வீட்டில் வீட்டுப்பாடங்களை முடிக்கமுடியவில்லை என்பதற்கு பல காரணங்களைக் கூறுவதைத் தடுப்பதற்காக இம்முறை கையாளப்படுகிறது. இப்படி செய்யும் பொழுதும் குழுமமாக செயல்படுவதன் மூலம் பின்தங்கிய மாணவர்களும், நன்றாக படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு அமைகிறது. இதனால் சகமாணவர்களுடன் படித்து தெரியும் பொழுது படிப்பது சுலபமாக அமைந்துவிடுகிறது. இதுவே எங்களது 100% தேர்ச்சியின் முக்கிய காரணம்.
மாணவர்களது படிப்பிற்கு கல்வி நிறுவனத்தின் பங்கைப்போல் பெற்றோர்களின் பங்கும் அவசியமானதே. பெற்றோர்களின் கவனக்குறை உள்ள பிள்ளைகளே கல்வியில் பின்தங்கி காணப்படுகிறார்கள். பெற்றோர்களுக்குப் பணிச்சுமை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அவர்களது பிள்ளைகளின் படிப்பிலும் அக்கறை செலுத்தி அவர்களையும் கவனிக்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பு எப்படி இருக்கிறது என்பதை நிச்சயம் பெற்றோர் தெரிந்து, அதை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
SPK பள்ளியின் தனித்தன்மைகள் சிறப்புகள் என்னென்ன?
படிப்பை மட்டுமல்லாமல் அறிவுப்பூர்வமாக மாணவர்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை செய்முறைப் பயிற்சிகளாக வழங்க வேண்டும் என்பதில் முயற்சிகள் பல செய்து வருகிறோம். ஆறாம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் தொழில் சார்ந்த பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதனால் பள்ளிப்படிப்போடு தொழில் படிப்புகளையும் செய்துகொள்ள முடிகிறது.
உதாரணமாக, மின்சாதனப் பொருட்களை சரிசெய்வது எப்படி என்பது போன்ற பல பயிற்சிகளை அவர்களாகவே கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். பொதுவாக, தன்னுடைய வேலைகளை அடுத்தவர் செய்யவேண்டும் என்பதை எதிர்பார்க்கும் மனப்போக்கை மாற்ற அவர்கள் பழக வேண்டும். அந்த மாதிரியான சுயவேலைகளைச் செய்யும் பொழுது தான் எதிர்காலத்தில் எந்த ஒரு முடிவையும் சரியாக, தனியாக எடுக்க முடியும் என்பது என் கருத்து.
பள்ளியின் பின்பகுதியில் வேளாண்மைக்கு என்று நிலம் ஒதுக்கியுள்ளோம். அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு அந்த நிலத்தில் வேளாண்மை எப்படி செய்ய வேண்டும், பயிரிடுவது எப்படி என்று அடுத்தடுத்த வழிமுறைகளின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். நமது நாட்டின் பாரம்பரியமான விவசாயத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுவே இம்முயற்சியின் நோக்கம்.
விளையாட்டுடன் சேர்ந்த கல்விமுறையை வழங்கிவருகிறோம். வெறும் படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டில் தனித்திறன் வாய்ந்த மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தனிப்பயிற்சி வகுப்புகள் நிறுவனத்தின் பொறுப்பிலேயே செய்து கொடுக்கிறோம்.
மழலையர் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சியாக ஓவியம் வரைதல், பெயிண்டிங் & வண்ணம் தீட்டுதல் போன்ற பயிற்சிகளை வழங்கி வருகிறோம். பள்ளி நேரங்களிலேயே சதுரங்கம் (Chess), கேரம், வாள் சண்டை, பெயிண்டிங், கால்பந்து, கைப்பந்து போன்ற போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் பிற்காலத்தில் விளையாட்டில் ஒரு சாதனையாளர்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்.
பள்ளியின் அடுத்தகட்ட வளர்ச்சியில் தற்போது உங்களது சிந்தனை என்பது…
கல்வி நிறுவனத்தைப் பொறுத்த வரையில், அடுத்த கல்வியாண்டில் மழலையர் கல்விக்காக “SPK கிட்ஸ்” என்ற பள்ளியைத் தனியாக தொடங்க உள்ளோம். இதில் Pre KG, LKG, UKG என்று மழலையர் மட்டுமே படிக்க தனிச்சிறப்புடன் கூடிய பள்ளியை வடிவமைக்க இருக்கிறோம். SPK கல்விக் குழந்தைகள் தங்களது மழலைக் கல்வி முடித்தவுடன் 1ம் வகுப்பை துவங்க, மெட்ரிக் கல்வியைத் தேர்ந்தெடுப்பதும், CBSE கல்வியைத் தேர்ந்தெடுப்பதும் அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு அமையவே இந்த தனிக் கல்வி நிறுவனத்தின் நோக்கம்.
நான் படித்தது இயந்திரம் சார்ந்தது என்பதால் இரும்பு சம்பந்தமான (Steel Industries) நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. இதை தொடங்க நிச்சயம் 2 ஆண்டுகள் தேவைப்படும். இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை இந்தியாவில் பயன்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல், நமது நாட்டுப் பொருள்களை நாமே தரமானதாக தயாரிக்க வேண்டும். இதன் மூலம் நம் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கப் பெறும். வேலை வாய்ப்பிற்காக அயல்நாட்டிற்கு செல்லாமல், அயல்நாட்டு இளைஞர்களையும் நம்மிடம் ஈர்க்கும் மந்திரத்தை நம்மவர்கள் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும்.
இளைய தலைமுறையினர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தான் நாம் ஒரு சிறந்த இடத்தை உலக நாடுகளின் முன்னிலையில் பெறமுடியும். இதுவே எனது எதிர்காலத் திட்டமும் ஆகும்.
தேர்வில் முதல் மதிப்பெண், விளையாட்டில் பதக்கம் பெறும் மாணவர்களுக்கும் எதுமாதிரியான ஊக்கங்களைக் கொடுத்து வருகிறீரர்கள்?
வருடத்திற்கு 50 லட்சம் முதல் 1 கோடி செலவில் மாணவர்களுக்கு இலவசக் கல்வியை எங்களது அறக்கட்டளையின் சார்பில் செய்து வருகிறோம். ஏழை எளிய மாணவர்களுக்கு மட்டுமே இது பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களின் பின்புலத்தை அறியும் பொருட்டு ஆவணங்கள் அடங்கிய சான்றிதழ்களைச் சரிபார்த்த பிறகே இந்த சேவை வழங்கப்படுகிறது
வறுமையைக் காரணம் காட்டி யாரும் படிப்பை நிறுத்திவிடக்கூடாது. நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெற்ற மாணவர்கள் எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் எங்களை அணுகி இந்த சேவையைப் பெறலாம்.
விளையாட்டில் தேசிய அளவில் தேர்ச்சி பெற்ற மாணவனுக்காக தனிக்கவனம் செலுத்தி பயிற்சியாளரை நியமித்துள்ளோம். மேலும் பயிற்சிகள் வழங்கி பதக்கங்கள் பெற எங்களால் இயன்றதை செய்கிறோம்.
ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனம் என்று இரு வேறுபட்ட தொழில்கள். அதிலுள்ள சவால்கள், தீர்வுகள் குறித்து?
நிச்சயமாக ரியல் எஸ்டேட் தொழிலுக்கும், கல்வி நிறுவனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத தொழிலில் இரு மாதிரியான தலைமைப் பொறுப்புகள். பிரச்சனைகள் இல்லாத தொழில்கள் என்று ஏதும் இல்லை. பிரச்சனைகளை எப்படி திறம்பட சமாளிக்கிறோம் என்பதில் தான் நின்று காட்டுகிறோம். அதில் சாதித்தும் காட்டுவோம். எந்த ஒரு தொழிலைச் செய்தாலும் அதிலுள்ள விதிமுறைகளைச் சரியாக கடைபிடிக்க வேண்டும். எதற்காகவும் வருத்தப்படுவதோ, நிலைதடுமாறுவதோ கூடாது. நம்மை நாடி வருபவர்களின் நம்பிக்கையை அவர்களுக்கு நிச்சயம் நல்ல நம்பிக்கையாகவே கொடுக்க வேண்டும்.
SPK என்ற நிறுவனத்தை நம்பினால் நிச்சயம் பலன் உண்டு என்று முதலீடு போடும் மக்களுக்கு நிச்சயம் நல்ல பலனைத் திருப்பிக் கொடுத்தாலே போதும். உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பவர்களுக்கு அதற்கான பலன் கிடைக்கும்.
“விரும்பி வருபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது தான் ஒரு சிறந்த தொழில் தர்மம்”.
வளரும் தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. “பிறந்து விட்டோம் எப்படியும் வாழ்ந்து விடுவோம்” என்று மட்டுமே சிலர் நினைக்கிறார்கள். அது மிகப்பெரிய தவறு. பிறந்தால் பிறப்பின் பலனை இந்த நாட்டிற்கு ஏதேனும் ஒரு வகையில் செலுத்த வேண்டும். நீங்கள் செய்யும் செயல் சிறியதாக இருந்தாலும், அதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம். நிச்சயம் அதற்கும் பலன் கிடைக்கும்.
ஒரு புதிய முயற்சி செய்து அதை யாரும் பாராட்டவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை என்றாலும் மனம் தளராது, முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். நிச்சயம் எதிர்காலத்தில் பலன் அமையும்.
“மாற்றங்கள் ஒவ்வொரு நொடியும் நிகழும். ஆனால் மாறும் மாற்றம் ஒரு சாதனையாக இருக்க வேண்டும்” என்பதை ஒவ்வொரு இளைஞனும் நிச்சயமாக எண்ணி நடைபோட்டால் போதும்.
ஒருவரை ஒருவர் எப்போதும் வேறுபடுத்திப் பார்க்கவே கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். அந்த திறமையை வெளிக்கொணர எவ்வித தடைகளையும், முட்டுக்கட்டுகளையும் அடுத்தவர் போடவோ, நாம் போட்டுக் கொள்ளவோ கூடாது.
எனது ஊரையும், எனது சமுதாய மக்களையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற நிலையை இளைஞர்கள் உணர்ந்தாலே ஊரும், நாடும், சமுதாயமும் தனித்தன்மை பெற்று உயர்ந்து வளரும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
பெற்றவிருதுகளும், பட்டங்களும்…
120 ஆண்டுகாலம் பழமைபெற்ற மிலானா (இத்தாலி) பல்கலைக்கழத்தில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றேன். இப்பல்கலைக்கழகத்தில் இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்றமைக்கான பெருமையைப் பெற்றேன்.
என் திறமையைப் பாராட்டி மிலானா பல்கலைக்கழகம் எனக்கு “கல்விக்குழு உறுப்பினர்” என்ற சிறப்பைக் கொடுத்தார்கள். உலக அளவில் இதற்கு 5 பேர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் நானும் ஒருவன் என்பதில் நமது நாட்டின் சார்பிலும் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.
நான் பள்ளியில் பொறுப்பேற்ற பின்னர் பள்ளி மாணவர்களை வைத்து உலக சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணி 5 நாட்களில் 32 உலக சாதனைகளைப் படைத்திருக்கிறேன். உலகிலேயே அதிகமுறை உலக சாதனை நிகழ்த்திய பள்ளி என்றால் அது SPK பள்ளி மட்டுமே என்று பெருமையாகச் சொல்வேன்.
எனக்கு இவர்கள் “வழிகாட்டிகள்” என்று நீங்கள் குறிப்பிட விரும்புபவர்கள்…
எல்லா மகன்களுக்கும் போலவே எனக்கும் “”எனது தந்தை தான் முதல் வழிகாட்டி”.
ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் இந்ந உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார் என்றால் அது சாதாரண காரியம் அல்ல. அவர் சந்தித்த இடர்பாடுகளையும், தடைகளையும் சாமர்த்தியமாக சமாளித்து தான் இந்நிலையை அடைந்துள்ளார். இதுவே அவர் மேல் மரியாதையையும், மதிப்பையும் எனக்கு ஏற்படுத்தி அவரை எனக்கு ஒரு முன்னோடியாக ஆக்கியது.
எந்த ஒரு செயலையும் முழுமையாகவும், ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் செய்பவர். கடுமையான உழைப்பாளி. என்னைப் பொறுத்த வரையில் நேர்மைக்கு அவர் தான் சிறந்த உதாரணம். யாரும் எந்த நிலையிலும் எங்களுடைய நேர்மையின் மேல் குறை சொல்ல முடியாத அளவில் தான் நடந்து வருகிறோம்.
“எந்த ஒரு தொழிலையும், செயலையும் செய்வதற்கு முன்னர் நன்றாக யோசி. தொடங்கிய பின்னர் யோசிக்காதே” என்பது அவரின் அறிவுரை. அதன்படி தான் இன்றும் நான் நடந்துவருகிறேன்.
பிறகு சச்சின் டெண்டுல்கர், நாற்பது வயதிற்கு மேலும் தனது சாதனைகளை நிகழ்த்தியது அவரின் தனிப்பெரும் சாதனை. நிறைய சோதனைகளையும், நிறைய சாடல்களையும் சந்தித்த அவர் அதற்கான பதில்களை மைதானத்தில் காட்டியவர். யாருக்கும் எப்பொழுதும் நாம் நின்று விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் அதற்கு மட்டும் தான் சரியாகப் போகும். யார் என்ன சொன்னாலும் நமது முயற்சிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று உணர்த்தியவர் அவர்.
ரத்தன் டாட்டா, அப்துல்கலாம், ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்கேல் ஜோர்டன் போன்றவர்களும் எனது விருப்பத்திற்கு உரியவர்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு விசயத்தை எனது வாழ்நாளில் கடைபிடித்து வருகிறேன். இதில் பெரிதும் நான் மதிப்பது எளிமையைத் தான். எவ்வளவு தான் பெற்றிருந்தாலும் மற்றவர்களுடன் சரிசமமாக பழகும் பொழுதுதான், எளிமையுடன் இருக்கும் பொழுது தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கப் பெறுகிறது.
ஒரு நிறுவனம் மேன்மை பெறவேண்டும் என்றால் எப்படிப்பட்ட உத்திகளைக் கையாள வேண்டும்?
ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பில் உள்ளவர் முதலில் நேர்மையானவராக இருக்க வேண்டும். ஒரு மேலாளரின் திறமையைப் பொறுத்து தான் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் செயல்கள் அமையப் பெறும். அவர்களின் செயல் ஈடுபாட்டின் வெளிப்பாட்டில் தான் நிறுவனத்தின் மேன்மை தென்படும். வேலையாட்களுக்கு சம்பளங்களும், சன்மானங்களும், பாராட்டுக்களும், பதவிகளும் உரிய நேரத்தில் கிடைத்தாலே ஒவ்வொரு பணியாளரும் சிறப்பாக பணியாற்றுவார்கள்.
புதிய புதிய கண்டுபிடிப்புகள், புதிய தேடல்கள், புதிய முயற்சிகள் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். மாற்றங்கள் மாறமாறத் தான் விருப்பங்களும், எண்ணங்களும் மாறும்.
தன்னம்பிக்கை வாசகர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது?
எவ்வளவு பெரிய தோல்விகள் வந்தாலும் தன்னம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் எக்காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது. மனதில் தோன்றிய நிகழ்வுகளையும், செயல்களையும் உடனுக்குடனே செயல்படுத்தி விட வேண்டும். எதனையும் காலம் தாழ்த்தி செய்யக் கூடாது. இறக்கும் தருவாயிலும் தன்னம்பிக்கையுடன் இருக்கும் மனிதர்களைத் தான் வரலாறு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.
இந்த மாத இதழை