செல்வி. நித்தியா இராமச்சந்திரன்
துணைச் செயலாளர்,
சங்கரா கல்வி நிறுவனங்கள்,
கோயம்புத்தூர்
- எந்த ஒரு சாதனைக்கும் வயது தடையில்லை. அந்த வகையில் சிறிய வயதில் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பை ஏற்று அதைத் திறம்பட செயல்படுத்தி வருபவர்.
- வெளிநாட்டுக் கல்விபோல் செயல்முறைக் கல்வியுடன் கூடிய கல்வியை நமது நாட்டிலும் அமல்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம் உடையவர்.
- மாணவர்களின் எதிர்கால நலனை என்றும் கருத்தில் கொண்டு அவர்களது முன்னேற்றத்திற்குத் தேவையான செயல்பாட்டினை வழிநடத்த முன்நிற்பவர்.
- எண்ணங்கள், செயல்கள், சிக்கல்கள், தீர்வுகள் ஆகிய அனைத்தையும் குறுகியதாய் அல்லாமல் தனது பரந்துவிரிந்த பார்வையுடன் ஒவ்வொன்றிலும் சாதிப்பை எதிர்நோக்கி செயலாற்றி வரும் சங்கரா கல்வி நிறுவனங்களின் துணைசெயலாளர் செல்வி. நித்தியா இராமச்சந்திரன் அவர்களை திரு. ஜெ. விக்ரன், திரு. ப. நரேஷ், திரு. ரங்கபிரபு அவர்களுடன் சந்தித்தோம். “வாழ்க்கைக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுப்பது கடமையாகாது; அதைத் திறம்படச் செய்வதே கடமை” என்றவருடன் இனி நாம்…
சங்கரா கல்வி நிறுவனங்களின் தோற்றம் குறித்து?
ஒரு வளர்ந்த நாட்டின் வலிமை தேசத்தின் கல்வியறிவை முதன்மையாகச் சார்ந்துள்ளது என்கிற இந்தப் பார்வையுடன் “கல்விச்செம்மல்” ஸ்ரீ T.K.பட்டாபிராமன் அவர்கள் தரமான கல்வியை வழங்க “கோயம்புத்தூர் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையைத் தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் கீழ் சங்கரா கல்வி நிறுவனங்கள் 1983ம் ஆண்டு நிறுவப்பட்டது. நிறுவனத்திற்கு “ஆதிசங்கரர்” நினைவாக “சங்கரா” எனப் பெயரிடப்பட்டது. சங்கரா கல்வி நிறுவனங்களில் முதலில் 1983ம் ஆண்டு சங்கரா பாலிடெக்னிக் கல்லூரியும், 1992ம் ஆண்டு சங்கரா அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியும், 2002ம் ஆண்டு மேலாண்மை அறிவியல் சங்கரா நிறுவனமும் துவங்கப்பட்டது.
சங்கரா கல்வி நிறுவனங்களில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியின் துணைச்செயலாளர் பொறுப்பு தேடிவந்ததா? நீங்களாக முன்வந்து ஏற்றுக்கொண்டதா?
இந்தப் பொறுப்பை நான் எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்திக் கொண்டேன். நான் படித்தது முழுவதும் வெளிநாட்டில். அதனால் படிப்பு முடிந்ததும் அங்கேயே வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் என் பெற்றோர்கள் இந்நிறுவனத்தை நான் கவனிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவாக நிறைவேற்றவே இப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன். கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி வருகிறேன்.
பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது தங்களின் மனநிலை எப்படி இருந்தது?
ஆரம்பத்தில் தெரியாத ஒரு துறையில் நுழையப் போகிறோம் என்ற பயம் இருக்கத்தான் செய்தது. நிர்வாகத்தை கவனிக்க தேவையான அனுபவமும் இல்லை. நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள், முதல்வர்கள் என அனைவரும் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்களாகவே இருந்தார்கள். நிர்வாகத்தை கவனிக்கத் தேவையான தகுதிகளை முதலில் வளர்த்திக் கொள்ள நிறுவனத்தைப் பற்றி முழுவதுமாக தெரிந்து அறிந்து கொள்ள என்னைத் தயார்படுத்தினேன்.
முதலில் நிறுவன மேலாண்மை சார்ந்த பணிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பார்த்து கற்றுக்கொண்டேன். அதன்பிறகு சிறிது சிறிதாக ஆலோசனைகளை கூறினேன். அந்த ஆலோசனைகள் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தேன்.
மேலாண்மை சார்ந்த படிப்பு தற்போது தங்கள் “நிர்வாக பொறுப்பிற்கு” எவ்விதத்தில் துணைபுரிந்து வருகிறது?
வெளிநாட்டில் வெறும் புத்தகக் கல்வியை மட்டும் படிப்பாக கற்றுக்கொடுப்பதில்லை. எந்த ஒரு கல்வியாக இருந்தாலும் அது செய்முறைப் பயிற்சியுடன் கூடிய பாடங்களாகவே கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்ட அந்த செய்முறைப் பயிற்சிகள் தற்போது எனக்கு நிர்வாக மேலாண்மைக்கு பெரிதும் துணையாக இருக்கிறது.
பல்கலைக்கழகத்தில் படித்த போது, மேலாண்மை சார்ந்த ஏதேனும் ஒரு பிரச்சனையை நம்மிடம் கொடுத்துவிடுவார்கள். அதை நாம் எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை முதலில் கற்றுக்கொடுப்பார்கள். தவறுகள் ஏதேனும் நடந்தால் அதைப்பற்றி கவலைக் கொள்ளாமல் எப்படி பிரச்சனைகளைத் திறமையாக சமாளிப்பது என்பதை கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அம்முறைக் கல்வி அமைந்தது. அந்த அனுபவங்கள் இங்கு பெருமளவில் உபயோகமாக இருக்கிறது.
உங்களுக்கென்று இருக்கும் நிர்வாகத் தனித்திறமையை கல்லூரிப் பொறுப்பில் அமர்ந்தவுடன் வெளிப்படுத்துதல் எளிதானதாக இருந்ததா?
என்னுடைய ஆலோசனைகள் எனது பெற்றோருக்கும், பேராசிரியர்கள், முதல்வர் போன்றவர்களுக்கும் முற்றிலும் வேறுபட்டு இருந்தது. அவர்களின் கருத்தாலோசனைகள் வேறுவிதமாக இருந்தது. இன்றைய சூழலில் ஒரு நிறுவனத்தை மேம்படுத்த வேண்டுமென்றால் விளம்பரம் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.
இப்பொழுது புற்றீசல் போல் வளர்ந்து வரும் கல்வி நிறுவனங்களின் மத்தியில் ஏதேனும் ஒரு புதுமையைப் புகுத்த வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு விளம்பரம் மற்றும் பாடங்களைக் கற்பிப்பதில் மாறுதல் தேவை என்பதை உணர்ந்தேன். அதற்கு நேர்மறையான எண்ணங்களையும் பெற்றேன்
பொறுப்பு வகித்த இரண்டரை ஆண்டுகளில் ஆசிரியர்களிடம் ஊக்குவித்தல் தொடர்பான கருத்துக்களை எவ்விதம் எடுத்துச் சென்றீர்கள்?
மாணவர்களின் எதிர்கால நலனில் ஆசிரியர்கள் அக்கறையும், பொறுப்பும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறினேன். ஆசிரியர்கள் சமுதாய முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிப்பவர்கள். வருங்கால சமுதாயத்தை உருவாக்குபவர்கள். முதலில் ஒவ்வொரு ஆசிரியரும் சமுதாயத்தில் தனது பங்களிப்பு என்னவென்பதை தானாகவே உணர வேண்டும். ஆசிரியர் பணியை வெறும் கடமையாக மட்டும் கொள்ளாமல் சமுதாயத்திற்கு தம்மால் எந்த அளவிற்கு அர்ப்பணிப்பைக் கொடுக்க முடியும் என்பதை எண்ணுபவர்களாக பணியாற்றவேண்டும் என்று எனக்கு தெரிந்தவரை ஆசிரியர் தொழிலின் சிறப்புகளை எடுத்துக் கூறினேன்.
கல்லூரிகளின் பெருக்கத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
கல்வி அளிப்பதை பலர் வியாபார உத்தியாக பார்ப்பதே கல்லூரிகளின் பெருக்கத்திற்குக் காரணம் என்று சொல்லலாம். எங்கள் நிறுவனம் தொடங்கி இன்றளவும் கல்வியை சேவையாகவே செய்து வருகிறோம். என் தாத்தா, அப்பாவிற்கு பிறகு இப்பொழுது நான், கல்விச் சேவைக்கு ஒரு வாய்ப்பாகவே பொறுப்புகளைப் பயன்படுத்தி வருகிறோம்.
எங்கள் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்களில் ஏழை மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்கு இலவசமாகக் கல்வி கொடுத்து வருகிறோம். இப்பொழுது 150 மாணவர்கள் இலவசக் கல்வியில் பயனடைந்து வருகிறார்கள்.
மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கலாம் என்று தொடங்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது எதிர்கால ஆற்றல் மிக்க சமுதாயம் உருவாவது தடைபட்டுப் போகக்கூடும்.
கல்லூரிகளில் கூட ‘ஆடம்பரம்’ அத்தியாவசியமாகிவிட்டது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
வானளாவிய கட்டிடங்களைப் பார்த்தும், நிலப்பரப்பளவு விரிந்து கிடக்கும் நிறுவனங்களையே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். பிள்ளைகளை சேர்க்கும் கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பற்றி கவனிப்பதே இல்லை. கட்டிடங்களையும், நிலப்பரப்பையும் பார்த்து கண்மூடித்தனமாக பிள்ளைகளைக் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறார்கள். நல்ல தேர்வு முடிவுகள் கொடுக்கும் கல்வி நிறுவனங்களைப் பார்த்து சேர்த்துவிட வேண்டும் என்ற அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லாமல் இருப்பது தான் வருத்தமான ஒன்றாக இருக்கிறது.
புதிய மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்க, ஏற்கனவே பயின்ற, பயின்றுவரும் மாணவர்களைப் பயன்படுத்துவது சரிதானா?
இந்த மாதிரியான முயற்சிகள் மாணவர்களின் மத்தியில் பிற்போக்கான எண்ணங்களைத் தூண்டிவிடும். பணம் சேர்க்க இம்மாதிரியான வழிமுறைகள் சரிதான் என்பது போலாகிவிடும். கல்வி என்பது ஒரு உன்னதமான பணி. அதில் சிலர் குறுக்கு வழியில் சாதாரண பாதையைத் தேடிப்போகிறார்கள். இதை அரசு அறிந்து தடைபோட்டால் மட்டுமே இந்நிலை மாறும். இல்லையென்றால் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக கல்லூரிகளே மாறிவிடும்.
எதிர்காலத்தில் ஒரு கல்வி நிறுவனம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
வெறுமனே கல்வியை மட்டும் கற்றுக்கொடுக்காமல் மாணவர்களின் எதிர்கால நலனிலும் அக்கறைகொண்டு அவர்களின் தேவையை அறிந்து கற்பிக்க வேண்டும். இப்பொழுது பட்டம் என்பது யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது. அந்தமாதிரியாக அல்லாமல் ஒவ்வொரு மாணவனையும் சிறந்த குடிமகனாக உருவாக்க கல்லூரிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கல்லூரியை முடித்து வெளியே சென்றாலும் தனிமனித ஒழுக்கம் தேவை என்பதை உணர்த்த வேண்டும். வெறும் பாடத்திட்டத்தில் இருக்கும் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்காமல் வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக்கொடுத்தால் எதிர்காலத்தில் மாணவர்கள் நேர்மையானவர்களாக வருவார்கள்.
தீயபழக்கத்தில் ஈடுபடும் மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கென்று ஏதேனும் ஊக்குவித்தல் தொடர்பான கல்வியைக் கொடுக்க முடியுமா?
மாணவர்களிடம் தீய பழக்கங்கள் உடல்நலத்திற்கு கெடுதல் விளைவிக்கும் என்று அறிவுரைகள் சொன்னால், ஒரு சிலர் வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்வார்கள். சிலர் அப்பழக்கத்திற்கு அடிமையாகி சொல்லுதலின் அறிவுறுத்தலை உணராமல் தடம் மாறித்தான் சென்றுவிடுகிறார்கள். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டால் கவனித்து நல்வழியில் செலுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அவர்களின் போக்கிலே விட்டுவிட்டால் அப்புறம் அவர்களையும் விட்டுவிட நேரிடும்.
வெளிவட்டார நண்பர்களால் மாணவர்கள் தீயவழியில் செல்லும் வாய்ப்புகளும், மிகச்சில சமயங்களில் தீய நண்பர்களுடனான பழக்கங்களும் தீயவழிக்கு அழைத்துச் சென்று விடுகிறது. நாங்கள் கல்லூரிகளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுயஉந்துதல், சுயமுன்னேற்றம், சுயமதிப்பு போன்ற பயிற்சிகளை எடுக்கவும், தவறுகளை தவிர்க்க சரியான வழிமுறைகளைக் கையாளத் தேவையான பயிற்சிகளைக் கொடுக்கவும் செய்கிறோம்.
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மாணவர்களுக்காக செய்துவரும் புதுமைகள் குறித்து…
எங்கள் நிறுவனத்தில் கல்வியில் நிறைய தொழில் நுட்ப முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எங்கள் கல்லூரியில் myclassroom.com என்ற ஒரு இணையதள வசதி செய்து தரப்பட்டுள்ளது. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இணையதளத்தில் மின் அடையாள குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தினமும் வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை ஆசிரியர்கள் இணையதளத்தில் பதிவுசெய்து விடுவார்கள். எல்லா மாணவர்களும் இந்த இணையதளத்தின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்லாமல், ‘ஆன்லைன் அசைன்மெண்ட்’ போன்ற முறையை புதியதாகக் கொண்டுவந்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், விடுதிகளை செயல்படுத்துவதிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம். அதிகளவு பெண்கள் எங்கள் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே மேற்கல்வியைப் படிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. இங்கு படிக்கும் மாணவர்களில் 60 சதவீதம் மாணவர்கள் தமிழ் வழியில் படித்து வந்தவர்கள். அவர்களுக்கென்று தனிக்கவனம் செலுத்தி ஆங்கில அறிவுக்காக தனிவகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்களின் பெரும்பங்களிப்புடன் “Executive Committee Meeting” நடத்தப்பட்டு மாணவர்களின் நலனுக்காக ஆலோசனைகளைப் பெற்று அதை உடனடியாக செயல்படுத்தி வருகிறோம். மேலும் மாணவர்களுக்கு நாள்தோறும் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. வாகனத்தில் வருகின்ற மாணவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மற்ற கல்லூரியை விட உங்கள் கல்லூரிக்கென்று உள்ள தனிச்சிறப்பு என்று நீங்கள் கூறுவது?
தேச நலனுக்கான நிகழ்வுகள் நடத்த ஊக்குவிக்கப்படுகிறது. ‘பூமி மாத தினம்’ வருடந்தோறும் ஜூலை 31 அன்று கொண்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நாங்கள் கல்லூரியை சேவை மனப்பான்மையோடு நடத்தி வருகிறோம். வியாபார நோக்கத்தோடு செயல்படுத்துவது இல்லை. இங்கு பயிலும் அனைத்து மாணவர்களைப் பற்றியும் எனது அம்மாவிற்குத் தெரியும். அந்த அளவிற்கு மாணவர்களோடு ஒன்றிணைந்து, அவர்களை அக்கறையுடன் கவனித்து வருகிறோம். ஒவ்வொரு நிலையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தான் நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறோம்.
சங்கரா கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியில் தாத்தா, அப்பா, அம்மா இவர்களின் பங்களிப்பு அதிகம். அவர்களைப் பற்றிய உங்கள் நினைவுகள்…
தாத்தா “கல்விச் செம்மல்” ஸ்ரீ பட்டாபிராமன் அவர்கள் சங்கரா பாலிடெக்னிக்கைத் தொடங்கும் பொழுது அவரின் வயது எழுபது. அந்த வயதிலும் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும், அதன் மூலம் கிராமப்புறமாணவர்களுக்கு கல்வியில் உதவ வேண்டும் என்ற மனப்பான்மையைப் பெற்றிருந்தது ஆச்சரியமான விசயம்.
தாத்தாவிற்குப் பிறகு முழுப்பொறுப்பையும் அப்பா திரு. ராமச்சந்திரன் அவர்கள் ஏற்றுக்கொண்டார். அப்பாவின் செயல்பாடுகள் முழுவதும் புதியதாக இருந்ததாகக் கருதுகிறேன். எதையும் விடாப்பிடியாகவும், ஈடுபாட்டுடனும் பொறுப்புடன் செய்வார். அது அவரிடம் எனக்கு பிடித்த ஒன்று. அதுமட்டுமல்லாமல் புதியதாக கல்லூரியைத் தொடங்குவது என்பது பெரிய விசயம் அல்ல. ஆனால் தொடங்கிய கல்லூரியை அடுத்த தலைமுறையினர் எப்படி சிறப்பாகக் கொண்டு செல்கின்றனர் என்பது தான் மிகவும் முக்கியம். இப்பொழுது எங்களின் மீது நம்பிக்கை வைத்து இப்பொறுப்பை ஒப்படைத்துள்ளார் எனது அப்பா. அந்த பொறுப்பை உணர்ந்து நாங்கள் சிறப்பாக இதைச் செயல்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். அம்மா திருமதி. சந்தியா ராமச்சந்திரன் அவர்கள் எனக்கு எல்லாமும் அவர் தான்.
சங்கரா கல்வி நிறுவனங்களின் அடுத்த இலக்கு?
எங்களது கல்வி நிறுவனங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதற்கு முதலில் முதல்வர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
இந்தக் கல்லூரியை தலைசிறந்த பல்கலைக்கழகமாக உருவாக்க வேண்டும் என்பதே அடுத்தகட்ட இலக்கு. அது மட்டுமல்லாமல் பள்ளிகள், பொறியியல் படிப்பு நிறுவனங்கள் போன்றவற்றைத் தொடங்கி கல்வி வழங்குவதில் விரிந்த கண்ணோட்டம் ஏற்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்.
பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் நிர்வாகத் திறன் கொண்டவர்களாக நீங்கள் இருந்ததுண்டா?
நான் பள்ளிக்காலங்களில் படிக்கும்பொழுது ஏதேனும் குறைகள் இருப்பின் நேரடியாகவே ஆசிரியரையோ அல்லது முதல்வரையோ சந்தித்து பேசிவிடுவேன். என்னுடன் இருக்கும் மற்ற மாணவர்கள் இதற்கு பயப்படுவார்கள். கல்லூரியில் Project செய்யும் பொழுது அதற்கு தலைமை பொறுப்பேற்று செய்திருக்கிறேன். அந்த மாதிரியான தலைமைப் பொறுப்புகள் இப்பொழுது எனக்கு துணையாக இருக்கிறது என்றும் சொல்லலாம்.
படித்து முடித்தவுடன் பொறுப்பு. எப்படி நீங்கள் எதிர்கொண்டீர்கள்?
முடியுமா? இப்படி நினைக்கவே மாட்டேன். முடியும் என்றே முன்னேறு… வெற்றிக்கு நீயே வரலாறு. நம்பிக்கை ஊட்டும் வாசகங்களோடு பயனிக்க விரும்புகிறவர் வரிசையில் நான். எதையும் பிரச்சனைகளாக, இயலாததாக நான் பார்ப்பதே இல்லை. ஒரு பிரச்சனையை மட்டும் நினைத்துக் கொண்டிருந்தால் மனஅழுத்தம் காரணமாக, மற்ற எந்த வேலைகளையும் செய்ய முடியாது. முதலில் பிரச்சனைகளைத் தாங்கிக் கொள்ளும் மனநிலையை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அதைத் திறமையாக எதிர்கொள்ள வேண்டும்.
இளம் வயதில் முக்கிய பொறுப்புக்கு வருபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
முதலில் அவரவர் மீது அவரவர்களுக்கு நம்பிக்கை வேண்டும். எந்த ஒரு வேலைக்கும் வயது தடையில்லை என்பதை உணர வேண்டும். கிடைத்த வாய்ப்பினைச் சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும். நேர்மையும், ஈடுபாடும் இருந்தாலே ஒரு நிறுவனத்தை சிறந்த முறையில் மேலாண்மை செய்யலாம். சிறு வயதில் சாதனை படைத்த பலரை நினைவுபடுத்திப் பார்த்தால் புரியும், வயது எதற்கும் தடையல்ல என்பது.
ஒரு பொறுப்பிற்கு வந்துவிட்டால் எதை எல்லாம் விட்டுக்கொடுக்க நேரிடும்?
என்னைப் பொறுத்தவரையில் ஒரு பொறுப்பிற்கு வந்துவிட்டால் எதையும் விட்டுக் கொடுக்கக்கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் அனைத்தையும் தாங்கிக்கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒன்றை அடைந்தால் மற்றதை இழக்க நேரும் என்ற கருத்தை முதலில் விட்டுவிட வேண்டும். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை பற்றி…
தன்னம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கையில்லை. தன் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றியோ, திருப்தியோ பெறமுடியாது. தன்னம்பிக்கை எதற்கும் அடிப்படை.
உங்களுக்குள் “தன்னம்பிக்கை” எப்பொழுது உணர்ந்தீர்கள்?
ஒரு செயலை செய்ய ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக முடிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு இருக்கும் தன்னம்பிக்கையை நான் உணர்ந்திருக்கிறேன். இது எனது வாழ்வில் பலமுறை நிகழ்ந்திருக்கிறது.
தனியொரு மாணவனின் திறமையை நீங்கள் எவ்வாறு ஊக்குவிக்கிறீர்கள்?
திறமையுள்ள மாணவர்களை இனங்கண்டு மாதம் ஒருமுறை பதக்கங்களும், பட்டங்களும் வழங்கி ஊக்குவிக்கிறோம். படிப்பில் முதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கும், விளையாட்டுத் துறையில் தனித்திறன் பெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புகள் செய்யப்படுகிறது.
எங்கள் கல்லூரி மாணவர்களின் திறமைகள் எங்கள் கல்லூரிகளில் மட்டுமல்லாமல் வெளிக்கல்லூரிகளிலும் வெளிப்படுத்த, போட்டிகளில் கலந்து கொள்ள, எவ்வித தடைகளும் போடாமல் ஊக்கப்படுத்தி வருகிறோம். அவர்களின் திறமை கல்லூரிக்குள் மட்டுமல்லாமல் மற்ற பிறஇடங்களிலும் சென்று பிரகாசிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
கோயம்புத்தூர் கல்லூரிகளில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு எங்கள் கல்லூரியில் என்னவென்றால், இங்கு காது கேளாதோர் மற்றும் கண்பார்வையற்றோருக்கென சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றது. ஊனமுற்றோர்க்கான மாணவர்களுக்கென்று தனியாக ஒரு துறை சிறப்புடன் இயக்கப்பட்டு வருகின்றது என்பதையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.
நமது கல்வியில் மேலைநாட்டுக் கல்வியின் மோகம் எந்தவகையில் இருக்கிறது?
மேலை நாட்டின் தாக்கம் இன்றைய கல்வி சூழலில் அதிகமாகவே இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இங்கிருந்து வெளிநாடுகளில் கல்விகற்கும் மோகம் எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் இருந்து வருகிறது. அதற்குக் காரணம் நமது கல்விமுறையில் எந்தவிதமான மாற்றங்களும் பெரிதாக இருப்பதில்லை. அங்கு எதைச் சொல்லிக் கொடுத்தாலும் செய்முறைப் பயிற்சியுடன் தான் கற்றுக்கொடுக்கப்படும். அம்முறை எல்லா மாணவர்களுக்கும் பிடித்த முறையாக இருக்கிறது. விரிந்த அனுபவ அறிவு பலரையும் பலபேருக்கு வேலை கொடுப்பவர்களாக உருவாக்குகிறது.
மேலைநாட்டு கல்விமுறையைப் போலவே நம் நாட்டு கல்விமுறையும் இருக்க வேண்டுமென்றால் எந்தமாதிரியான திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்?
எதைக் கற்றுக்கொடுத்தாலும் செய்முறையுடன் கற்றுக்கொடுக்க வேண்டும். “வெறுமனே படி, மனப்பாடம் செய்” என்றால் கல்வியின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும். செய்முறையில் ஈடுபடும்பொழுது அவர்களது மனமும் அதனுடன் செயல்படும். புரிதல் எளிதாகும். உதாரணமாக, வங்கி சம்பந்தப்பட்ட படிப்பு படிக்கும் மாணவர்களை நேரடியாக வங்கிக்கே கூட்டிச்சென்று பாடம் எடுக்க வேண்டும். மேலாண்மை படிக்கும் மாணவர்களை நேரடியாக தொழில்சார்ந்த நிறுவனங்கள், மில் போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்று காண்பித்தால் தான் செய்யும் முறைகள் புரியும். புரிந்தால் தான் பாடங்களும் எளிதாக இருக்கும். கண்ணோடு கருத்தும் சேர்ந்த பயிற்சிதான் சிறந்தது. இதுபோன்ற பாடத்திட்டங்கள் கொண்டு வந்தால் கல்விமுறை இனியதாக மாறும்.
குடும்பப் பின்னணி…
அப்பா திரு. ராமச்சந்திரன், நிறுவனச் செயலாளர். அம்மா திருமதி. சந்தியா ராமச்சந்திரன், நிறுவனச் செயலாளர் அண்ணா திரு. கல்யாண ராமன் அவர்கள் MBA இன்ஸ்டிடியூட் பொறுப்பாளர். அக்கா திருமதி. ஆர்த்தி. மாமா திரு. வருண் அவர்கள் அமெரிக்காவில் வேலைபார்த்து வருகிறார்கள். எனது உறவின் வழி சகோதரர் திரு. ஷாகேத் அவர்கள் பாலிடெக்னிக்கின் பொறுப்பாளர்.
இந்த மாத இதழை