எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
கவியரசு கண்ணதாசன் பேனாமுனை பிரசவித்த ஜீவனுள்ள வரிகள் இவை. தமிழ் கூறும் நல் உலகம் உள்ளவரை உச்சரிக்கப்படும் வாழ்வின் கீதம் அவை. ஆம், அந்த நான்கெழுத்து மந்திரம் இல்லாது போனால் எவ்வளவுதான் பெரிய பதவி, செல்வம் இருந்தாலும் வாழ்க்கை நரகமாகும், உலகமே சூன்யமாகிப் போகும். ஆகவே தான் அந்த நிம்மதியைத் தேடி ஒவ்வொருவரும் அலைகிறோம். ஆனால் அது நம் காலடியில் கிடப்பதை உணராமல். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இந்த நிம்மதி எப்போது தொலைந்து போகிறது?
நினைத்தது நினைத்தபடி நடக்காத போது
கேட்டது கேட்டபடி கிடைக்காத போது
மொத்தத்தில் ஆசைகள் நிராசைகளாகும்போது. அந்த ஏமாற்றத்தின் எதிரொலியாக கவலை நம் நெஞ்சில் தஞ்சமாகிறது. அப்போதே நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆயுளை முடித்துக் கொள்கிறது. இதற்கு யார் காரணம்? யார் யாரை நொந்து கொள்வது. தீதும் நன்றும் பிறர்தரவாரா. நாம் இருக்கும் நிலைக்கு நாமே காரணம். எப்படியெல்லாம் நாமிருக்க வேண்டுமென நினைக்கிறோமோ அப்படியே நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நமக்குள்ளே தான் இருக்கிறது.
மதியின் பதிவுகளே விளைவுகள். அவரையை விதைத்துத் துவரையை அறுவடை செய்ய முடியாது. இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, எல்லாமே நமக்கு நாமே தேடிக் கொண்டவைகள் தான். பால் பழங்கள் உண்டு, பஞ்சனைகள் உண்டு. படுத்தால் உறக்கம் மருந்துக்கும் இல்லை. ஆனால் பழைய சோறு பச்ச வெங்காயம் தான் கட்டாந்தரையிலும் உறக்கம் மரக்கட்டை போல். இப்போது சொல்லுங்கள் நிம்மதி என்பது பணத்தாலா? இல்லை மனத்தாலா? பணம், பணம், பணமென்று பணத்தைத் தேடினால் மட்டும் நிம்மதி வந்துவிடாது. அதற்காக பணமே தேட வேண்டாம் என்பதல்ல. வாழ்க்கைக்குப் பணம் தேடத்தான் வேண்டும். ஆனால் பணம் தேடுவது மட்டுமே வாழ்க்கையாகிவிடக் கூடாது என்பது தான். “வாழப் பொருள் வேண்டும். வாழ்வதிலும் பொருள் வேண்டும் அல்லவா??”
மனத்தின் மாண்பே மனிதனின் மாண்பு
மனம் எவ்வழியோ மார்க்கமும் அவ்வழி
உடைந்த மணியிலே ஒருபோதும் ஒழுங்கான ஓசை வராது. தெளிந்த மனத்திலே தான் நல்ல சிந்தனைகள் பிறக்கும். நல்ல சிந்தனைகளே நற்செயல்களை உருவாக்கும். அத்தகைய நற்செயல்கள் தான் நிம்மதியைத் தருமேயன்றி வேறு எத்தகைய செயல்களாலும் நிம்மதியைக் காண முடியாது. வஞ்சம், பொறாமை, கோபங்களெல்லாம் நோய் கொண்ட மனத்தின் புறஅடையாளங்கள். நல்ல நெஞ்சையும் கொல்லும் நஞ்சுகள். ஆகவே தான் பராசக்தியிடம் பாரதி கேட்டான்,
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் இனி
என்னைப் புதியவுயிராக்கி – எனக்
கேதுங் கவலையறச் செய்து மதி
தன்னை மிகத் தெளிவு செய்து என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்
, மதி அது தெளிவானால் மகிழ்வது தஞ்சமாகும். இதுதான் பாரதியின் கூற்று.
காரணம் நரகத்தை மனதில் வைத்துக்கொண்டு சொர்க்கத்தைப் பார்த்தாலும் சொர்க்கமும் நமக்கு நரகமாகத்தான் தெரியும். அதுபோலவே, நிறைமனம் கொண்டவர்க்கே நிறைகள் தென்படும். குறைசூழ்ந்த மனத்தவர்க்கோ எவரிடத்தும் குறைகளே தோன்றும். ஆகவே நற்குணங்களும், நல்ல பண்புகளும் மற்றவரிடம் இருக்கிறதா என்று தேடும்முன் அவைகள் யாவும் நம்மிடமிருக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும். ஏனெனில், நாம் பிறரை எந்த அலகால் அளக்கிறோமோ, அதே அலகால் தான் நாமும் ஒருநாள் அளக்கப்படுவோம் என்பதை மறத்தலாகாது.
தன்னை அறிய தனக்கோர் கேடில்லை
தன்னை அறியாதவன் தானே கெடுவான்
தன்னை அறிந்த அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத்தா னிருந்தானே
என்கிறார் திருமூலர்.
தன்னை அறிதல் என்பது தன்னிடம் எவ்வளவு சொத்து சுகம் இருக்கிறது என்று சொல்லித் திரிவதல்ல. அது தம்பட்டம். தற்பெருமை. மாறாக தன்னிடம் உள்ள குறைகளை அறிவதேயாம்.
“இன்பம், துன்பம்,
விருப்பு, வெறுப்பு,
எல்லாமே நமக்கு நாமே
தேடிக் கொண்டவைகள்
தான்.”
நன்றின்பால் உய்ப்பது அறிவு. அதாவது ஐம்புலன்களும் அது போகிறபோக்கில் போகவிடாமல் முறைப்படுத்துகிறஆற்றலே அறிவு. அத்தகைய அறிவின் துணையோடு அலைபாயும் மனத்திற்கோர் அணை போடுங்கள். பேராசையின் கூடாரமாய் மனமது மாறக்கூடாது. நமது ஆசைகள் நியாயமானதாகவும் எவரையும் எந்த விதத்திலும் பாதிக்காத வகையிலும் இருத்தல் வேண்டும். கோடிகோடியாய் கொட்டிக் கிடந்தாலும், மாடிமாடியாய் கட்டிவைத்தாலும் உண்பது கால்படி, உடுத்துவது நாலு முழம், படுப்பது ஆறடி தான். கொண்டு வந்தவருமில்லை. எதையும் கொண்டு போவோருமில்லை. முடிவில் ஒத்த ரூபாயை நெற்றியில் ஒட்டிவிட்டாலும் அதையும் வெட்டியான் எடுத்துக் கொண்டுதான் இறுதிச் சடங்கை முடிப்பான் என்பதை உணர்ந்தால் பொருட் செல்வங்கள் யாவும் கானல் நீர் என்பது தெளிவாகும். “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”. நமக்கும் மேலே உள்ளவர்களைப் பார்த்து ஏங்குவதை விடுத்து நமக்கு கீழே உள்ளவர்கள் கோடி என்பதை நினைத்து ஈன்ற தாய்க்கு நன்றியை சொல்லுங்கள்.
பறக்கத் தெரியாத பறவைக்கு சிறகும் ஒரு சுமை தான். விதி என்றும், நேரமென்றும் இயலாமைக்கு முலாம் பூசாதீர்கள். வெற்றி என்பது வெறுமனே வருவதில்லை. வியர்வைத் துளிகளின் விளைச்சல் அது. ஆனாலும் விதைத்த மறுகணமே வித்து மரமாவதில்லை. அதுபோலத்தான் உயர்வு என்பதும் ஒரே நாளில் வந்துவிடாது. பல துளிகள் சேர்ந்துதான் கடலானது. பல துகள்கள் சேர்ந்துதான் மலையானது. உழைப்பின்றி சேரும் செல்வம் ஒருபோதும் நிலைப்பதில்லை. இது இறைநீதி. பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள்களெல்லாம் பெற்றவன் பன்மடங்கு வருந்துமாறு செய்து போய்விடும். நல்வழியில் வந்த செல்வம் இழந்தாலும் பின் நன்மையே வந்து சேரும். ஆக இலக்கு மட்டும் முக்கியமல்ல. அதை அடையும் வழியும் நல்லதாய் இருத்தல் வேண்டும். அதைவிடுத்து தனது தவறான பாதையை யார் அறிவார் என்பது அறியாமை. காற்றுள்ள பந்தை கடலுக்குள் மறைத்தாலும் அது கரைக்கு வந்துவிடும். அதுபோலத்தான் நாம் செய்யும் பாவங்களும்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று
இது வள்ளுவம் கூறும் வாழ்க்கை நெறி அல்லவா.
“சத்தியமேவ ஜெயதே” நமது தேசத்தின் கீதமது. சத்தியத்தை நாம் காத்தால், சத்தியம் நம்மைக் காக்கும். உண்மைக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை இழக்கக் கூடாது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு என்பது உண்டு. அது தன்னையோ, பிறரையோ எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் நெறிப்படுத்துவதே ஒழுக்கம். அத்தகைய ஒழுக்கமே நம் அமைதிக்கும் அதன்பாற்கொண்ட நிம்மதிக்கும் வித்தென்று தெளிதல் வேண்டும். மேலும் எதிர்மறை இல்லாத ஒன்று உலகில் ஏதுமில்லை. இரவும் பகலும் போல் இன்பமும் துன்பமும் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கங்கள். அவமானம் இல்லாமல் வெகுமானம் இல்லை. ஆக துன்பத்தைக் கண்டு துவண்டு விடக்கூடாது. ஏனெனில் அஸ்த்தமனம் என்பது முடிவல்ல, அது விடியலுக்கு அஸ்திவாரம் தான்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
பொதுமறையின் கூற்று.
ஒன்றைச் செய்யுமுன் சிந்திப்பவன் அறிவாளி. செய்தபின் வருந்துபவன் ஏமாளி. எதையும் ஒருமுறைக்குப் பலமுறையோசித்துத் தொடங்குங்கள். தொடங்கியபின் யோசிக்காதீர்கள். நிம்மதி தொலைந்து போகும். தெரியாத பாதையில் விரைவாக ஓடுவதைவிட, தெரிந்த பாதையில் மெதுவாக செல்வதே மேல். நமக்கு முன்பிறவி இருந்ததா? இல்லையா? அதில் என்னவாய் பிறந்தோம். எப்படியிருந்தோம் தெரியாது. மறுபிறவி என்பதும் உண்மையா? பொய்யா? அதில் என்னவாய்ப் பிறப்போம், எப்படி இருப்போம், அதுவும் தெரியாது. ஆனால் இப்பிறவி மட்டும் ஐயமில்லாத உண்மை. அதிலும் கிடைத்தற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற நாம் கடந்த கால இழப்புகளையே கடைபரப்பிக் கொண்டு நிகழ்காலத்தில் கொட்டிக்கிடக்கும் கோடான கோடி இன்பத்தைத் தொலைத்துவிடக் கூடாது. கறந்த பால் மடி புகாது. காலமும் அப்படித்தான் ஆக, ஒவ்வொரு நொடியும் இன்பமாய் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து விரக்தி, வெறுப்பு, கவலை இப்படியே வாழும் காலத்தைத் தொலைத்துவிட்டு அந்திமலை காலத்தில் அமைதியைத் தேடி அலைவதில் பயனேதுமில்லை. வெளிச்சம் இருக்கும்போதே விளக்கைத் தேடி வைத்துக் கொள்ள வேண்டும். முடியாது என்பதெல்லாம் முயலாதது மட்டும் தான். முயன்றால் முடியாதது ஏதுமில்லை. தன்னம்பிக்கை தான் வாழ்க்கை. விடியும் என்ற நம்பிக்கையில் உறங்கச் செல்லும் நாம் முடியும் என்ற நம்பிக்கையோடு எழ வேண்டும்.
வேகும் சோறு பானைக்குச் சொந்தமில்லை
சுற்றும் மேகம் வானுக்குச் சொந்தமில்லை
விளையும் பயிர் மண்ணுக்குச் சொந்தமில்லை
அலையும் காற்று யாருக்கும் சொந்தமில்லை
வாழும் காலமோ கொஞ்சம் தான். அதற்குள்ளாகத்தான் நான் எனது என்பதெல்லாம். விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை. நான் என்ற அகந்தையை விட்டொழியுங்கள். உறவுகள் மேம்படும். உங்களை யாராவது குறைகூறின் உண்மை அதில் இருந்தால் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள். பொய் என்றாயின், மௌனத்திற்கு மகுடம் சூட்டுங்கள். அந்த மௌனம் அவர்களுக்கு ஆயிரம் பதிலைச் சொல்லும். எவரையும் பழி தீர்க்க நினையாதீர்கள். அது மன உளைச்சலை தந்து நிம்மதியைத் தொலைத்துவிடும். மாறாக உங்களது மனச்சுமையை இறைவனிடம் வைத்துவிட்டு அமைதியாய் பயணத்தை தொடருங்கள். தக்க நேரத்தில் உரிய பலனை அவர்களுக்கு அவன் தந்து வைப்பான். பிறப்பால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவருமில்லை. உயர்வு, தாழ்வு என்பதெல்லாம் அவரவர் செய்யும் செயலின் விளைவுகளேயாம். முதல் தரமான மனிதராக வேண்டுமெனில் முதலில் நாம் எல்லோரையும் முதல் தரமாக மதிக்கப் பழக வேண்டும். இருக்கும் வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது. இறந்த பின்னால் யாரும் மறக்கக்கூடாது. இதுதான் வாழ்வின் நியதி. மனித நேயமே மானுடத்தின் ஜீவநாடி. ஆம் சொல்லாலும், செயலாலும் பிறரை வருத்தாமல் தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்வாய் வைத்திருக்கத் தெரிந்தவன் எவனோ, அவனே உண்மையான மனிதனாகிறான்.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்
இது நான்முகனார் உத்தரவேதம்.
எவ்வளவு பெரிய அறிவுடையவராயினும் மக்களை மதிக்கும் நல்ல பண்பு இல்லையாயின் அவர்கள் மரத்திற்கு ஒப்பானவனே என்று கடிந்துரைக்கிறார் வள்ளுவர். பண்பட்ட நிலமே பலனைத் தரும். அதுபோல மனமும் பண்பட வேண்டும். அன்பு ஒளியும், அறவொளியும் மனித நேயத்தின் இரு கண்கள். சுவாசிக்கும் வரை நேசி, நேசிக்கும் வரை சுவாசி என்கிறது வேதம். உப்பு நீரையும் தன்னகத்தே கொண்டு நன்னீரை வழங்குகின்றமேகம் போல் இன்னா செய்தாற்கும் இனியவையே செய்யுங்கள். எதிரியே ஆனாலும், எள்ளளவும் கேடு நினையாதீர்கள். வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருந்தால் போற்றுதற்குரிய மனிதராய் இப்புவியில் உயர்ந்து நிற்போம்.
இந்த மாத இதழை