– 2014 – January | தன்னம்பிக்கை

Home » 2014 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மனதில் உறுதி வேண்டும்

    நம் வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகளினால் மனம் மிகவும் கனமாகி மன அழுத்திற்கு ஆளாகிறார்கள். தாங்க முடியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கின்ற தயக்கம், எந்த செயலையும் செய்ய விடாமல் சோர்ந்து போகச் செய்யும் மன உளைச்சல் இவை அனைத்தும் மன அழுத்தின் அறிகுறிகளாகும்.

    நீங்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் சரி தைரியத்தையும் விடாமுயற்சியையும் கைவிடாதீர்கள். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் மிக அற்புதமான திட்டத்தை வைத்திருக்கிறார். அதை முறையே நடத்துவதற்கான வழி முறையும் அவருக்கு தெரியும். தேவையில்லாமல் நாம் அவரை நிந்திக்க வேண்டாம். சந்தோசமாக இருக்கும் போது நம் கைப்பிடித்துக் கொண்டு மிகவும் நல்ல முறையில் நடத்தி வந்த கடவுளுக்கு துன்பப்படும் போது அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கான வழியும் தெரியும். எனவே நமக்கு வரும் கஷ்டங்களை நுண்ணோக்கி வைத்து பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டு விட்டு வேறு வழியைத் தேடவும்.

    தற்பொழுது நாம் படும் கஷ்டத்திற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். இந்த கஷ்டங்கள் நம்மை மிகப்பெரிய கஷ்டத்திலிருந்து தடுத்து நம்மை காப்பாற்றி சிறு துன்பம் மட்டும் கொடுத்திருக்கலாம். ஆனால் நமக்கு இதுவே மிகப்பெரும் பாராமாக இருக்கலாம் அப்படியே பாராமாக இருந்தாலும் கடவுள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை வெகுவிரைவில் தருவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கவலை நாளையத் துயரங்களை அழிப்பதில்லை

    இன்றைய வலிமையை அழித்துவிடும் – என்பதை மறந்து விடாதீர்கள்.

    எவ்வளவு சிரமங்கள் வந்தாலும், எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் நாம் நினைத்து எதிர்மாறாக நடந்தாலும், எடுத்த காரியம் நடக்கவில்லை என்றாலும் துவண்டு விடாதீர்கள். ஏன் அடுத்த விநாடியிலேயே மாறலாம். எனவே ஒரே அடியாக மனதிற்கு அதிக சந்தோஷத்தையும் அதிக துக்கத்தையும் மனதில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். மனதை ஆல்பா நிலையிலே வைத்திருக்கவும். சந்தோஷம் எவ்வளவு வந்தாலும் வரவேற்புடன் ஏற்றுக்கொள்கின்ற நம்மால் சிறு தோல்வி வந்தாலும் ஏற்க மறுக்கின்றன. எனவே நம் மனது பக்குவப்பட வேண்டும். முதலில் இவை கடினமாக இருக்கும். பிறகு நம் மனது எல்லாவற்றையும் சமமாக பார்க்கின்ற பக்குவ நிலைக்கு வந்து விடும். இதுவே ஆல்பா நிலையாகும்.

    எந்த ஒரு வேலையும் தொடர்ந்து முயல்வோர்களின் விடாமுயற்சி வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்ப்படுத்துகிறது. இருந்தாலும் சில சமயங்களில் நமக்கு வெறுப்பும், அழுகையும் ஏற்படும்.

    “முடியும் வரை முயற்சி செய்

    உன்னால் முடியும் வரை அல்ல

    நீ நினைத்த செயல்

    முடியும் வரை”

    முயற்சி செய்து தோற்கும் செயல்களை தோல்வியாக கருதக்கூடாது முதல் முயற்சியில் கிடைத்த வேலை, முதல் பயிற்சியில் தேர்ச்சி போன்றவை சில நேரங்களில் ஆபத்தானவை. ஏனென்றால் அவர்களால் அந்த தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் அவர்களுக்கு முயற்சி செய்யும் எண்ணமே இருக்காது. நம்மால் மட்டும் தாங்கிக் கொள்ள முடியுமா என கேட்கலாம். சாதனை படைப்பவர்களிடம் மட்டுமே கடவுள் பல பெரும் பொறுப்புகளை ஒப்படைத்து இருக்கிறார். ஏனென்றால் கடவுள் உங்களை கண்மூடித்தனமாக நம்புகிறார். அப்படி கடவுளை நம்புகிறவர்களில் நீங்களும் ஒருவர் என பெரு மகிழ்ச்சிக் கொள்ளுங்கள்.

    பல பேர் கொடும் வார்த்தைகளால் நம் மனதை காயப்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் நாம் பொறுமையுடன் இருக்கவும்.  இதனால் நீங்கள் கெட்டுப் போவதும் இல்லை; உங்கள் நிலை தாழ்ந்து போவதும் இல்லை. மேலும் வாழ்வில் யாரையும் அதிக அளவு நம்பாதீர்கள். ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். நீதிக்கு புறம்பாக நடக்காதீர்கள். நீங்கள் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் சத்தியத்தை கடைபிடியுங்கள். நம் நாட்டு கலாச்சாரத்தோடு வாழப் பழகுங்கள். முடிந்தால் அதை பிறருக்கு கூறுங்கள்.

    கடவுளைத் தவிர யாரும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை உணருங்கள். எனவே எந்த ஒரு செயல் செய்வதற்கும் பிறரை நம்பி இருக்காதீர்கள். அவர்களால் வரமுடியாவிட்டால் தைரியமாக தாங்களே சென்று வெற்றிகரமாக செய்து முடியுங்கள்.

    சில சமயம் நாம் எவ்வளவு மன உறுதியுடன் இருந்தாலும் சில சம்பவங்களால் நம் மன உறுதியையும் சுக்கு நூறாக வெடிக்கின்ற நிலை ஏற்படலாம். மனம் வெறுத்தும் போகலாம். எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். எதற்கும் ஒரு நாள் உண்டு எல்லோருக்கும் வாழ்வு உண்டு என்பதில் உறுதியாக இருங்கள். உங்களின் வியத்தகு செயலினால் நாளை உலகமே உங்களை போற்றி புகழாரம் சூட்டலாம். முயற்சி செய்யுங்கள் அதை விரும்பி செய்யுங்கள்.

    லட்சியத்தில் ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டோம்னா, லட்சியத்தை தவிர மற்ற எல்லா சந்தோஷத்தையும் நாம் தியாகம் பண்ணியே தீரனும். அதுதான் அதனுடைய விலை. லட்சியவாதிகள் அனைவரும் அதிகப்படியான நேரங்கள் உழைத்தவர்களாக இருப்பார்கள். அதாவது மற்றவர்கள் உறங்கும் நேரத்தில் இவர்களை விழித்திருந்து உழைத்திருப்பார்கள்.

     யாரையும் தெரியாமல் கூட சபிக்காதீர்கள், மனசார வாழ்த்துங்கள். மற்றவர்களை மனசார வாழ்த்தும் போதெல்லாம், இறைவனும் உங்களை ஆசிர்வதிக்கின்றார். நமக்கு இடையூறு செய்பவர்கள் நம் வாழ்க்கை ஓட்டத்தை தடுத்து நிறுத்த நினைப்பவர்களிடம் மல்லுக்கு நிற்கக்கூடாது. வீண் வாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை விட நம் இலட்சியப் பாதையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் எதிரிகள் தான் உங்கள் எதிர்காலத்தை காட்டுகிறார்கள். அவர்கள் தான் உங்கள் சிகரத்தின் காவலாளிகள்.

    வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிற எவரும் செய்ய வேண்டிய முதல் காரியம் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து பிரமித்து நின்று விடக்கூடாது. தோல்வியில் துவண்டு விழவும் கூடாது.

    நம் மனதை உறுதியோடு வைத்துக் கொள்வதற்கான சில வழிகள். இவைகள் நம் வாழ்வை வளமாக்கி வெற்றிப்படியில் நிற்க வைக்கும்.

    நாளை நமக்காக

    காத்து இருக்கிறது

    சோர்வை அகற்றி

    நம்பிக்கை வளர்ப்போம்

    1. செயல்களை முறையாக திட்டமிட வேண்டும்

    2. இப்பொழுதே செயலில் ஈடுபட வேண்டும்

    3. ஆழமாக சுவாசியுங்கள, இதனால் உடலும் மனமும் தளர்வு அடைவதை உணரலாம்

    4. நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லாம் நன்மைக்கே என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள்

    5. முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்

    6. இசை கேளுங்கள் (அ) பாடுங்கள் எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு

    7. கடவுளை நம்புங்கள்

    8. வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம். பழகிப் பார்த்து முடிவு செய்யவும்

    9. குறைவாக பேசுங்கள் அதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ளுங்கள்

    10. பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள். அதேபோல் உங்களுடைய நேரத்தை பிறர் வீணாக்க ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்

    11. உங்களுக்கு ஒன்றை பற்றி தெரியாவிட்டால், உண்மையை சொல்லிவிடுங்கள் தெரியும் என்று நடிக்காதீர்கள்

    12. வெற்றி பெற்றால் எல்லோருடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்

    “மண்ணில் பிறப்பது ஒரு முறை

    வாழ்வது ஒரு முறை

    சாதிப்போம் பல முறை

    வாழ்த்தட்டும் தலைமுறை”

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருங்கள்

    காலையில் நீங்கள் உறக்கத்திலிருந்து எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் நீங்கள் என்ன செய்தீர்கள், எங்கு சென்றீர்கள், நீங்கள் ஆற்றிய பணிகள் என்ன என்பதைச் சிறிது நேரம் எண்ணிப் பாருங்கள்! அப்பொழுதுதான் உங்களுடைய செயல்பாடுகளின் வலிமை புரியும். செயல்பாடுகளின் வலிமை ஒரு மனிதனை உயர்வான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. செயல்பாடுகளை முற்றிலும் ஒதுக்கிய மனிதர்கள் உயர்ந்ததாகச் சரித்திரமே கிடையாது.
    சரித்திரத்தில் அவர்கள் இடம் பெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும், உண்மையான மகிழ்வை அவர்கள் பெற முடியுமா? எப்பொழுதும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, எந்தச் செயலும் செய்யாமல் ‘சும்மா’ அமர்ந்து கொண்டிருக்கும் சோம்பேறிகளுக்குக் கிட்டுமா?
    திருமணமாகிப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அந்தத் தம்பதிகள் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருக்க வேண்டியது தானே! அதுதான் இல்லை. கணவனுக்கு இரண்டு ஏகரா வயல் இருக்கிறது. சொந்தமாக ஒரு வீடு உள்ளது. கணவனோ எட்டாம் வகுப்பில் மூன்று முறை ‘பல்டி’ அடித்தவன். மனைவி பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவள். கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டான்.

    அவன் எந்த வேலைக்கும் செல்வதில்லை. படு சோம்பேறி! சொந்தமான வயலையே கவனிக்கத் தெரியாமல், சும்மா இருப்பவன். அவனோடு சேர்ந்து அவனுடைய அருமையான விளைநிலமும் சோம்பேறியாகிவிட்டது. அரசுப் பணிக்கோ, அல்லது தனியார் நிறுவனத்தின் பணிக்கோ எதற்கும் செல்லக் கூடாது என்று மனைவிக்கு உத்திரவிட்டிருந்தான். அவளுடைய அழகு அவனைச் சந்தேகப்பட வைத்து விடும் என்பதால் இம்முடிவுக்கு அவன் வந்திருந்தான்.

    குடித்துக் கும்மாளம் போடுவது, ஊரைச் சுற்றுவது என்று பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தானே ஒழிய தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் துளிக் கூட எழவில்லை. அவன் மனைவியோ தன் அம்மா கொடுத்த பணத்தில் கூடை நிறைய காய்கறிகளை வாங்கி, வீதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். இவர்களுடைய வாழ்க்கை கொஞ்சம் கூட சுவாரஸ்யம் இல்லாமல் இப்படி இயங்கிக் கொண்டிருந்தது.

    இப்படி மந்த கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கை என்றனும் ஒருநாள் சீர் குலைந்து போகலாம். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லலாம்.  இந்த நிலை வராமலிருக்க வேண்டுமானால், நீங்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். வலிமை வாய்ந்த உறுதியான இரும்பை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தால்தான், இரும்பு பயன்தரத்தக்கதான பொருளாக அமைந்து விடும்.

    அதே இரும்பைப் பயன்படுத்தாமல் இருந்தால், துருப்பிடித்துப் போய், இறுதியில் ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும். எனவே நீங்கள் சும்மா இருந்து கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்காமல், எதையாவது உருப்படியாகச் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால்தான் உங்களுக்கு அழகு! பூமியும் சூரியனும், சந்திரனும், மற்ற கோள்களும் ஒவ்வொரு விநாடியும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இவைகளின் இயக்கம் நின்று போனால் என்ன ஆகும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

    ‘பல கோடி ஆண்டுகள் நாங்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருக்கின்றோம். சிறிது நேரம் நாங்கள் இளைப் பாறுகிறோம்’ என்று அவைகள் நம்மிடம் கேட்டதுண்டா? இல்லை. இவைகள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

    எனவே மனம் தளராமல் நீங்களும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இயங்காமல் வாழ்க்கை இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! எந்த நிலையிலும் நீங்களும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். இயங்காமல் சும்மா இருப்பது சோம்பேறிகளுக்கு அழகாக இருக்கலாம். ஆனால் உழைக்கும் எண்ணம் உள்ள உங்களுக்கு உடலை இயக்காமல் இருப்பது என்பது அழகாக இருக்காது. இயக்கம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை.

    “என் அப்பா இறந்து விட்டார். என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. வயதுக்கு வந்த தங்கை இருக்கிறாள்” என்றெல்லாம் காரணங்களைச் சொல்லிக் கொண்டு சோர்ந்து போய் மூலையில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள்! சுமாராக இயங்கிக் கொண்டிருந்த நீங்கள் இப்போது அதிகமாக இயங்க வேண்டும். உங்கள் தங்கையின் வருங்கால வாழ்க்கைக்கு நீங்கள் கடுமையாக உழைத்தே ஆக வேண்டும்.

    அப்பா மறைந்து விட்டாரே! என்ற சோகத்தில் ஆழ்ந்து போய் எதையும் செய்யாமல் சும்மாவே நீங்கள் காலத்தைத் தள்ளினால் வானத்திலிருந்து திடீரென்று வந்து விடுவாரா? உங்கள் குடும்பத்தின் அவலநிலை மாறி விடுமா? சிந்தித்துச் செயல்படுங்கள்!

    நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் குடும்பத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும். இப்படி  உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டுமானால், ஒவ்வொரு நொடியையும் பாழ்ப்படுத்தாமல் நீங்கள் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

    குடும்பச் சூழ்நிலை காரணமாக ஒரு சிலர், தங்களுடைய இயக்கத்தை வேறு திசையில் திருப்பி அதை நோக்கிச் செல்வார்கள். “தாயையும், தங்கையையும் நான் ஏன் கவனிக்க வேண்டும்?” என்ற எண்ணம் கொண்டவர்களாக குடும்பத்தை விட்டே ஓடிப் போய் விடுவார்கள். “நான் எப்படியும் முன்னுக்கு வந்து விடுவேன்” என்ற வைராக்கிய நெஞ்சோடு இயங்கிக் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றியும் பெறுவார்கள். தன்னலத்தோடு இயைந்த உடல் இயக்கம் வாழ்க்கையில் மிக உயர்ந்த வெற்றியைத் தந்தாலும் அது மன நிறைவைத் தருமா?

    குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நலங்களைத் தராத உங்களுடைய இயக்கம், சுய நலத்தோடு இணைந்து விட்ட இயக்கம் அல்லவா? எனவே உங்களுடைய இடைவிடாத இயக்கம் உங்களுக்கு உயர்வைத் தருவதோடு, சமுதாயத்திற்கும் நலம் தருவதாக அமைய வேண்டும்.

    நாட்டுப்பற்றை உண்டாக்கி மக்களை இயக்குவதற்கு ஒரு இயக்கமும் அக்காலத்தில் தோன்றியது. தியாகிகளும், நாட்டுப் பற்றுடைய மக்களும் சுதந்திரம் வேண்டித் தங்களை இயக்கிக் கொண்டிருந்த காரணத்தால்தான் நம்முடைய நாடு வெள்ளையர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. எந்த இயக்கமும் இல்லாமல் சும்மா இருந்திருந்தால் நமக்குச் சுதந்திரம் கிடைத்திருக்குமா?

    உங்களை வறுமை வாட்டிய போதும், பிணிகள் உங்களைத் தாக்கிய போதும், முதுமை உங்களைத் தழுவிய போதும் நீங்கள் சற்றும் மனம் தளராமல்  இயங்கிக் கொண்டே இருங்கள். இயந்திரம் இயங்கிக் கொண்டே இருந்தால்தான் சிறப்பு. இயந்திரம் நின்று விட்டால் தொழிலாளர்களுக்குப் பரபரப்பு.

    நீங்களும் இயந்திரம் போன்று இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இறுதி வரை நீங்கள் இயங்கிக் கொண்டே இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு மிதமிஞ்சிய வலிமையும் , ஆற்றலும் ஏற்படுவதோடு, நாளுக்கு நாள் அது கூடிக் கொண்டே போகும்.

    விளைநிலங்களில் நாற்று நடுவதும், களையெடுப்பதும், அறுவடை செய்வதும்  என்று இயங்கிக் கொண்டே இருந்தால்தான், விளைநிலம் நல்ல விளைச்சலைத் தருவதோடு, நிலமும் பொலிவுடன் விளங்கும். ‘பயிர் வைக்காத நிலம் பாழ்’ என்பது உங்களுக்குத் தெரியாத பொன்மொழியா?

    மகாத்மா காந்தி இறுதிவரை இயங்கிக் கொண்டே இருந்தார். அவர் மட்டும் நாதுராம் கோட்சேவினால் சுடப்பட்டு மரணமடையா மல் இருந்திருந்தால் நூறு வயதினைக் கடந்திருப்பார். பெரியாரும், இராஜாஜியும் தொண்ணூறு வயதைக் கடந்தும், அந்தத் தள்ளாத வயதிலும் கொஞ்சம் கூடத்தளராமல் இயங்கிக் கொண்டே இருந்தார்கள்.

    பாரதப்பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் நூறு வயதைக் கடந்து, சாவின் விளிம்பில் இருந்த போதிலும் கூட, ஓயாமல் இயங்கிக் கொண்டிருந்தார். உடல் இயக்கம் சுறுசுறுப்பாக நடைபெறுகிற போது உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது. எனவே நாம் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். பாரதியாரும் இதனால்தான் ‘ஓடி விளையாடு பாப்பா!’  என்று கூறுவதோடு, மனிதா இயங்கு! இயங்கு!… ஓயாமல் இயங்கு!’ என்று முழங்குகிறார். இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளை நாம் பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆறு கடலைச் சென்று அடைவதற்குள், அது எத்தனை தடைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. அந்த ஆற்றிலே ஓடும் நீர், மிகவும் தெளிந்த நீராக இருக்கும். எப்பொழுதும் வற்றாமல் ஓடிக் கொண்டே, இருக்கும் நதியை ஜீவநதி என்று கூறுகிறோம்.

    கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி போன்ற ஆறுகள், புனிதமான நதிகள் என்ற பெயரைப் பெறுவதற்குக் காரணம், அவைகள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருப்பதுதான்! இயங்கிக் கொண்டிருக்கும் உடம்பு ஜீவனுள்ள உடம்பாகிப் பொலிவைப் பெறுகிறது.

    வேலைவாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற வெறுப்பு உணர்வினாலும், வேறு சில காரணங்களாலும், சமுதாயத்தின் மேல் ஏற்பட்ட கசப்புணர்ச்சியினாலும், மனம் நொந்து போய், “சே! இது ஒரு வாழ்க்கையா?” என்று விரக்தி அடைந்து, வீட்டிலோ, தெருமுனையிலோ எதையோ பறிகொடுத்தவர்களைப் போல – பித்துப் பிடித்தவர்களைப் போல – எதையோ நீண்ட நேரம் பார்த்த படி சில இளைஞர்கள் காட்சியளிக்கிறார்கள். இவ்வாறெல்லாம் இல்லாமல் நீங்கள் உங்கள் உடலையும், உள்ளத்தையும் இயக்கிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் இந்த உடல் கெட்டு விடும்.

    சுருக்கமாகச் சொன்னால் உங்கள் வாழ்க்கை என்ற திரைப் படத்திற்கு இறைவன் தான் தயாரிப்பாளர்! உங்களை இயக்கும் இயக்குநர் நீங்களே!

    அமெரிக்க குடியரசுத் தலைவர் ஃபிராங்கிளின் ரூஸ்வெல்ட் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்ட நிலையிலும் சக்கர நாற்காலியில் இயங்கிக் கொண்டிருந்தார். உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர், பெர்னாட்ஷா தன் வாழ்நாள் முழுவதும் இயங்கிக் கொண்டே இருந்தார்.

    உங்களுக்குள்ளே  ஒரு மகத்தான சக்தி இருக்கிறது. இதை நீங்கள் வீணாக்காதீர்கள். எதையுமே செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்து உங்கள் சக்தியைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் சக்கையாக நீங்கள் ஆகிவிடாதீர்கள். எனவே உங்களுடைய ஆற்றலை வெளிப் படுத்துவதற்காக நீங்கள் எப்பொழுதும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேஇருங்கள்! உங்கள் வாழ்க்கை எப்பொழுதும் இன்ப மயமாக இருக்கும்!

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    சான்றோர் சிந்தனை

    வீட்டுச்செடிகளால்விளையும்நன்மைகள்

    உலகம் இனிமையானது; அதனினும் இனிமையானது வாழ்க்கை; வாழ்க்கை வாழ்வதற்கே; வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய ஆனந்தமே உலக இன்பம். நாம் நம்முடைய வாழ்க்கையை ஆனந்தமுடையதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

    வாழ்க்கை என்பது ஒரு கலை. வாழும் கலையைக் கற்றவர்கள் நீண்டநாள் வாழ்கின்றனர். வாழ்க்கையில் பெறப்படுகின்ற ஆனந்தத்தின் அளவே வாழ்க்கையில் கிடைக்கப் பெறுகின்ற வெற்றியின் அளவாகும்.

    உடலும் சரி, உலகமும் சரி, நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற ஐம்பெரும் சக்தியில் அடங்கியவை என்றும், இரண்டுக்கும் தொடர்பு உண்டு என்றும், இதனை,

    “அண்டத்தில் உள்ளதே பிண்டம்
    பிண்டத்தில் உள்ளதே அண்டம்
    அண்டமும் பிண்டமும் ஒன்றே”

    -என்று சட்டைமுனி சித்தர் விவரிக்கிறார்.

    உடல் இயங்கும் முறைக்கும் உலகம் இயங்கும் முறைக்கும் பெரும் தொடர்புண்டு என்றும் விளக்குகிறார்.

    ஒருவரின் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவரின் மனத்தை, குணங்களை, எண்ண ஓட்டங்களைக் கூற முடியும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் உடையவர்களாகவும், தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள் தளர்ந்த வளைந்த தோற்றமும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

    நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே நம் எண்ணங்களும் செயல்களும் அமைகின்றன. “நீ உண்ணும் உணவே நீ” என்ற நம் முன்னோர்களின் கருத்து உண்மை என்பதை அறிவியல் நிரூபித்து வருகிறது.

    இதன் அடிப்படையிலேயே வீட்டு வளாகத்தில் மரங்களை நட்டு வளர்ப்பதில் பெரியோர்கள் ஆர்வம் உடையவர்களாக இருந்துள்ளனர். அதனால் அவற்றை நடுவதற்கு பொருத்தமான இடங்கள் எது என்பதை கண்டறிந்துள்ளனர். இயற்கையின் சமநிலையை பாதுகாக்க மரங்கள் மிக அவசியம் என்ற கருத்தை இன்றைய தலைமுறை அங்கீகரித்துள்ளது. பூக்கும் மரங்களும், மருத்துவ மூலிகைச் செடிகளும் வீட்டின் கிழக்குப் பக்கம் நடுவது நல்லது. இளஞ்சிக்கனி, கொன்றைச் செடிகளைக் கிழக்குப்பக்கம் நடுவது நன்மைகள் அதிகம் உண்டாக்கும்.

    தெய்வீக அம்சம் கொண்ட செடிகளாக கருதப்பட்ட குவளை, துளசி, தெற்றி போன்ற செடிகளை வீட்டின் கிழக்குப்பக்கத்தில் நடவும், பராமரிக்கவும் நல்லது என்று நம்பினார்கள். இளங்காலை நேரத்தில் கிழக்குப் பக்கத்திலிருந்து வரும் சூரியக் கதிர்களோடு மருத்துவச் செடிகளின் மருத்துவ வாசனைகள் வீட்டுக்குள் வந்து சேரும். இந்த வாசனைகள் வீட்டில் உள்ளவர்களின் அனைத்து நோய் பாதிப்புகளையும் அறவே நீக்கும் என்பதும் அறிவியல் உண்மையாகும்.

    மகாலட்சுமியின்   அம்சம் துளசி செடி. ஐஸ்வரியத்திற்காக துளசி செடியை நட்டு வளர்க்கிறோம். தேவ, அசுரர்கள் பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த பொருள்களில்  துளசி செடியும் ஒன்று. எல்லா தேவதைகளும் துளசியில் வாசம் செய்கின்றனர்.  பாவத்தைப் போக்கும் சக்தி  துளசிக்கும் உண்டு. அவசியம் வீட்டில் இச்செடியை வைத்து வளர்க்க வேண்டும்.

    தங்கப் பூ மரம், நீலப்பூச்செடி என்பவை சூரிய கதிர்களில் இருந்து அந்தந்த நிறங்களை கிரகித்து  வீட்டின் முன்னும், வீட்டிற்குள்ளும்  பரவச் செய்கின்றன. இவை விஷக் கதிர் வீச்சின் பாதிப்பை  நீக்கும் என்றும் கண்டு பிடித்துள்ளார்கள்.

    பகல் நேரங்களில் சூரிய வௌல்ச்சம் இயற்கையாகவே  நமக்கு   நோய் எதிர்ப்பு  சத்தியை  தந்து  நம்மை  பாதுகாக்கிறது.  இரவில் பூக்கும் தாவரங்களின்  வாசனைகள்  இரவு நேரங்களில் நோய் எதிர்ப்பு  சக்தியை  அதிகப்படுத்தி நம்மை பாதுகாக்கிறது.

    ஓணம் பண்டிகையின் போது வீட்டு முற்றங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள சந்தன தரைகளில் ஒளியுடன் சிரித்துக் கொண்டிருக்கும் தும்பை பூவின் வசீகரமும், தூய்மையும்,   வீட்டுக்குள் தெய்வீக அம்சத்தை பரப்புகின்றன. தும்பைச் செடியின் அற்புதமான மருத்துவ குணத்தை ஆயுர்வேத நூற்கள் சிறப்பித்துள்ளன.

    வீட்டு வளாகத்தில் தும்பைச் செடி வளர்த்தால் தும்பை பூ போல வெண்மையான வாழ்வு அமையும். தும்பை  பூ போன்ற மணம், தும்பை பூ போன்ற நிலா, தும்பை பூ போன்ற உணவு, தும்பை பூவை போன்ற வெள்ளை உள்ளம் என்று  சொல்லப்படுகிற உவமானங்களில் இருந்து இவற்றை அறிந்து கொள்ளலாம். தும்பை பூவுக்குத் தெய்வ அம்சமும்  உண்டு.

    கிருமிகளினால் உண்டாகும் நோயை குணப்படுத்தும் சக்தியும் , ஜீரணசக்தியை அதிகப்படுத்தும் தன்மையும் தும்பைக்கு உண்டு. காய்ச்சல், மயக்கம், ஜன்னி போன்ற நோய்களுக்கு நிவாரணமாகக் கொடுக்கப்படும்   கோரோசின் மாத்திரையில் தும்பைப்பூவின் சாரும்  சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதும்  உண்மை.  கண்ணில்; ஏற்படும் சிறு காயங்களுக்குத் தும்பை பூவின் சாறு எடுத்துக் கண்ணில் விடுவது நல்லது என்பது பாட்டி வைத்தியம். வயிறு சம்பந்தமான எந்த நோய்  இருந்தாலும்  முழுநிவாரணம் பெற  தும்பை நல்ல மருந்தாகும்.

    பெண்களின் மகப்பேறுக்குப் பின்பு அளிக்கப்படும் சிகிச்சையிலும் தும்பைக்கு முழுப்பங்குண்டு. இயற்கை மருத்துவர்களும், தாய்மார்களும் பல நோய்களுக்குத் தும்பையை ஒற்றை மூலிகையாக பயன்படுத்துகின்றனர். கிருமியின் பாதிப்பால் குழந்தைகளுக்கு வரும் வாந்தி, பேதி இவைகளை குணப்படுத்த தும்பைப்பூவும், இலையும் சேர்த்து  அரைத்து  பாலில் கலந்து  கொடுப்பது நல்லது.

    வீட்டிற்கு அருகில் நடக்கூடாத மரங்களும் உண்டு. காஞ்சிரம், தாணி, பீளுவேம்பு, நறுவரி, கரும்பானை, கள்ளி, முள்கற்றாழை ஆகியவைகள் வீட்டுக்கு அருகில் வளர்ப்பதை  தவிர்க்க  வேண்டும்.  விளைச்சலைக் குறைத்தல், நோய்  கிருமி பாதிப்பு உண்டாக்குதல், ஊரும் பிராணிகளுக்கும், விஷப் பூச்சிகளுக்கும் இருப்பிடமாக அமைதல், சுற்றுச் சூழலைப்  பாதித்தல்  போன்ற காரணங்களால்  மேலே  குறிப்பிட்ட தாவரங்களை  வீட்டுக்கு அருகில் நடக்கூடாது.

    வீட்டுத் தோட்டத்தில் காய்கறிப் பயிர்களோடு மூலிகைப் பயிர்களையும் வளர்ப்போம்.  சுற்றுச்சூழல் இதனால் தூய்மையாகும். உடல் நலம் சீராகும். மன நலம் பெருகும். தன்னம்பிக்கை தானாக வளரும்.

     தன்னம்பிக்கை

    தானாக வளரும்

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    சுயமுயற்சி

    வெற்றிக்கோட்டைத் தொட ஒவ்வொருவருக்கும் தேவை “சுயமுயற்சி”.

    நன்கு கற்றறிந்த விஞ்ஞானி ஒருவர் வண்ணத்துப் பூச்சிகளை சேகரிக்கும் ஆர்வம் கொண்ட தனது நண்பரிடம் புழுநிலையில் உள்ள ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கொடுத்தார்.

    இந்தப்புழு அரிய அழகான வண்ணத்துப்பூச்சியாக வளரும் என்றும், அதைத் தொந்தரவு செய்யாமல் கவனமாகக் கண்காணித்து அதனுடைய வளர்ச்சியால் பல்வேறு நிலைகளைக் கவனித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    நண்பரும் அந்தப் புழுவை நன்கு கவனித்தார்.

    சில நாட்களுக்குப் பிறகு அந்தப் புழுக்கூட்டின் ஓடு மெதுவாக, மிக மெல்லியதாகி, எளிதில் வெளியே தெரியக்கூடியதாகியது.

    அவரால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடிந்தது.

    உள்ளே இருப்பது மெதுவாக அசையத் தொடங்கியது. இது அப்படியே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நகரத்தொடங்கி, அது அந்தக் கூட்டை விட்டு வெளியே வர முயற்சித்தது. வெளியே வர முட்டி மோதியது. அதை அவர் நன்கு உணர்ந்தார்.

    அந்தக் கூட்டை உடைத்து உதவலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

    இறுதியாக, அடக்க முடியாத ஆர்வம் அவரைத் தூண்டியதால் அவர் ஒரு ஊசியால் அந்த ஓட்டின் மீது துளையிட்டார். சில விநாடிகளில், அவரது விஞ்ஞானி நண்பர் விவரித்திருந்ததைப் போலவே அழகான வண்ணத்துப் பூச்சி வெளியே வந்து காற்றில் பறந்து, பிறகு கீழே விழுந்தது. பிறகு ஒருபோதும் மறுபடியும் பறக்க முடியவில்லை.

    பலமுறை, தனது இறகுகளைத் தூக்குவதற்கு முயற்சி செய்தது. ஆனால் வண்ணத்துப்பூச்சியால் பூமியின் மீது தவழத்தான் முடிந்தது.

    வண்ணத்துப்பூச்சியை அதன் கூட்டில் இருந்து வெளியே கொண்டுவர உதவி செய்ததால் பறப்பதற்குத் தேவையான சக்தியை தனது இறக்கைகள் பெறுவதற்கான பலமான உறுதியினை அதற்குக் கிடைக்காமல் அவர் செய்துவிட்டதாக விஞ்ஞானி தன் நண்பரிடம் கூறினார்.

    இந்த அழகான உயிரினத்துக்கு உதவி செய்தது அதற்கு அழிவை ஏற்படுத்தும் படியாக அமைந்துவிட்டது. இந்த வண்ணத்துப் பூச்சியைப் போலவே மனிதனுடைய அபிவிருத்திக்கு அவசியமான சுயஉதவி ஒரு உன்னத வரம். இந்த சுயஉதவி தான் அவர்களை சிறந்த, உயர்ந்த மனிதனாக்குகிறது.

    ஆயிரக்கணக்கான இளைய சமுதாயத்தினரும் இன்று அந்த வண்ணத்துப்பூச்சிக்கு ஏற்பட்ட நிலையைப் போல ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். பெற்றோர்களோ, உற்றார்களோ என்று ஏதோ ஒருவகையில் உதவிகள் பெறப்படுவதால் முயற்சியின் நோக்கம் அறியாதவர்களாகவே வாழ்கிறார்கள்.

    பிறந்தது முதல் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள் இருப்பதால் எளிதாக வாழ்வை நடத்தி இனிதாக வாழ்ந்து வருகிறார்கள். இதுதான் பலரது வாழ்வின் தோல்விக்கு காரணமாக இருக்கின்றது. பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பதால் சுயமுயற்சியின் அவசியம் இளைஞர்களுக்குத் தெரியாமலே போய்விடுகிறது.

    நாம் ஒரு இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லும்போது தான் நமது உன்னதமான முயற்சியையும், கடினமான விடாமுயற்சியையும் மேற்கொள்கிறோம். இலக்கை எளிதாக எட்டிய போது வரும் பேரின்பத்தைவிட கடினப்பட்டு கிடைக்கும் பொழுதும், அதனால் பிறர் பயனடையும் பொழுதும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லைகள் இல்லை.

    ஒரு செல்வந்தரின் மகன், தனது தந்தை விட்டுச் செல்லும் ஆஸ்திகளை கண்காணிப்பதை மட்டுமே தன் கண்ணான பணியாக செய்துவருவார். தனது முயற்சிகளைப் போட்டு ஒன்றை இரண்டாகவும், இரண்டை நான்காகவும் பெருக்கி அதனால் வரும் செல்வத்தை தனது சொந்த குடும்பத்திற்கு மட்டுமே உபயோகித்துக் கொண்டால் அவர் ஒரு சிறந்த மனிதர் என ஊர் பேசும். ஆனால், அவரால் ஒரு சமுதாயம் பயனடைந்தால் அவருக்கு மட்டுமல்ல, அவர் குடும்பத்திற்கே அந்த சமுதாயம் தலை வணங்கும் என்பதை எவரும் மறுக்கமுடியாத உண்மை.

    இன்றும் கூட சில இளைஞர்கள் தனது முன்னேற்றத்திற்கு ஊக்குவிக்க யாராவது ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தனது வாழ்வைச் சோம்பலாகக் கழித்து வாழ்வை வீணடிக்கிறார்கள். அதே சமயம், மற்றவர்களால் வரும் பயனை அனுபவித்து காலம் தள்ளுகிறார்கள்.

    லட்சியத்துக்கான கதவுகள் கண்ணுக்குப் புலப்படாதது ஏதோ ஒரு விதி என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிர்ஷ்டக் கதவுகளை, தான்தான் திறக்க வேண்டும் என்று எவர் ஒருவர் முயற்சித்து முன்னுக்கு வருகிறார்களோ அவர்களையே சரித்திரங்கள் சித்தரிக்கும்.

    தங்களது லட்சியங்களை சிறு சிறு கூறுகளாக வகுத்துக் கொண்டு, இதற்குள் இதை முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு பிறர் தயவை நாடாமல் முன்னுக்கு வரும் மனம் வேண்டும்.

    அதிர்ஷ்டக் கதவிற்கு யாரும் இலவச நுழைவுச்சீட்டையோ, அனுமதியையோ தரத் தேவையில்லை. இளைஞர்கள் மட்டும் தான் அதற்கான விலையைத் தர வேண்டும். அந்த விலையை அவர்கள் தராவிட்டால் காலம் முழுவதும் வாயிலிலே காத்திருக்க வேண்டியது தான். சுயமுயற்சி என்னும் விலையை மட்டும் தந்தால் அதிர்ஷ்டக் கதவுகள் நிச்சயம் திறக்கும்.

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    வெற்றி உங்கள் கையில் – 1

    வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்

    “வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்” என்னும் எண்ணம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது.

    வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு “இவரின் உதவி வேண்டும். அவரிடம் சிபாரிசு பெற வேண்டும்” என்று நினைத்து, பிறரை மட்டுமே சார்ந்து வாழ்ந்து, வெற்றிக்காக காத்திருப்பவர்களும் உண்டு.

    “எனக்கு நல்ல பெற்றோர் அமைந்திருந்தால், நான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பேன்”

    “எனக்கு சிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தியிருந்தால், என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்”.

    “புகழ்பெற்ற பள்ளியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்திருந்தால், எனக்கு சிறந்த வேலை கிடைத்திருக்கும்”.

    “தரமான புத்தகங்கள் வைத்து படித்திருந்தால், நான் பல்கலைக்கழகத்தில் முதல் “ரேங்க்” எடுத்திருப்பேன்”.

    “எங்கள் குடும்பத்தில் வறுமை இல்லாத நிலை அன்று இருந்திருந்தால், இன்று பெரும் கோடீஸ்வரனாக மாறியிருப்பேன்”.

    என தங்களின் வாழ்க்கையை ‘மறு ஆய்வு’ செய்து, தாங்கள் தவறவிட்ட வாய்ப்புகளையும், இழந்த சூழல்களையும் எண்ணி பெருமூச்சு விடுபவர்களும் உண்டு.

    “வாழ்க்கையின் வெற்றி” என்பது வெளியில் இருந்து பிறர் தரும் ஆதரவினாலும் சாதகமான சூழலினாலும் மட்டுமே நிகழ்கிறது” என்னும் கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.

    உண்மையான ‘வெற்றி’ என்பது என்ன?

    “As a man thinketh” என்பது புகழ்பெற்ற எழுத்தாளரான “ஜேம்ஸ் ஆலன்” எழுதிய நூலாகும். இந்த அற்புதமான நூலை “மனம் போல் வாழ்வு” என்னும் தலைப்பில் கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அந்த நூலில் “மனிதனது நினைப்புக்குத் தக்கவாறு அவனுடைய வாழ்வு அமைகிறது. மனிதன் எவ்வாறு நினைக்கிறானோ அவ்வாறே அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும், நிலைமையும் அமைகின்றன. பூமியில் மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் வித்திலிருந்து மரம் உண்டாகிறது. அதுபோல மனிதனின் மனதில் மறைந்து கிடக்கும் நினைப்பிலிருந்து அவனது ஒவ்வொரு செயலும் உண்டாகிறது” எனக் குறிப்பிடுகிறார்.

    மனித மனத்திற்கும் வெற்றிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மனத்தில் உருவாகின்ற எண்ணங்கள் தான் மனிதனின் செயலை நெறிப்படுத்துவதால் அந்த எண்ணத்தை உருவாக்கும் காரணிகளைப்பற்றி தௌல்வாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மனதில் எண்ணங்களை உருவாக்கும் காரணிகளை 2 வகையாகப் பிரிக்கலாம். அவை

    1. புறக் காரணிகள் (External Factors)

    2. அகக்காரணிகள் (Internal Factors)

    ஆகும்.

    “புறக் காரணிகள்”  (External Factors) என்பது மனிதனின் வெளி உலகில் தோன்றும் காரணிகள் ஆகும். சரியான நட்பு, தரமான தகவல் தொடர்பு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுதல், இணைந்து பழகும் தன்மை, பொறுமை, அன்பை வெளிப்படுத்தும் தன்மை – போன்ற பல புற காரணிகள் (External Factors) ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இதைப்போலவே, உறவினர்கள், சகோதர – சகோதரிகள், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்ற உறவுகளும் ஒருவரின் வெற்றிக்கு பெருமளவில் துணை நின்கின்றன. பள்ளி – கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடன்பயிலும் மாணவ-மாணவிகள், நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள் என பலவிதமான புறக் காரணிகளும் ஒருவரது வெற்றிக்கு துணை நிற்கின்றன.

    “அகக் காரணிகள்”  (Internal Factors) என்பது ஒருவரின் மனதில் உள்ள காரணிகள் ஆகும். இந்தக் காரணிகள் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, குறிக்கோள்கள் (Goals)> தன்னம்பிக்கை (Self Confidence)> புத்தாக்க சிந்தனை (Creativity)> முடிவெடுக்கும் திறன் (Decision Making Skill)> தலைமைப்பண்புகள் (Leadership Qualities)> தன் மதிப்பு (Self Esteem) போன்ற பல காரணிகளும் ஒருவரின் வெற்றிக்கு பெருமளவில் உதவுகின்றன.

    ‘வெற்றி’ என்பது ஒரே நாளில் கட்டி முடிக்கப்படும் கட்டிடம் அல்ல. அது நாள்தோறும் நல்ல செயல்களால் உருவாக்கப்படும்  ‘மாளிகை’ ஆகும். ஒருவர் செய்யும் செயல்களின் அடிப்படையில்தான் ஒருவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

    மனித வாழ்க்கையில் பிறப்புமுதல் இறப்புவரை உள்ள காலத்தை 6 நிலைகளாக பிரித்துக் கொள்வார்கள். கருவறைப் பருவம் (Prenatal Stage)> குழந்தைப் பருவம் (Infancy Stage)> சிறுபிள்ளைப் பருவம் (Childhood Stage)> ‘டீன் ஏஜ்’ எனப்படும் குமாரப்பருவம் (Adolescence Stage)> முதிர்நிலைப் பருவம் (Adult Stage) மற்றும் முதுமைப் பருவம் (Old Stage) என்னும் இந்த நிலைகள் ஒவ்வொன்றிலும் ஒருவரின் வெற்றி அமைந்துள்ளது. எனவே வாழ்வில் எல்லா நிலைகளிலும் வெற்றிக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

    “எண்ணங்களையெல்லாம்  நல்ல செயலாக்கும் ஆற்றல்தான் வெற்றியாக வளர்ச்சி பெறுகிறது” என்பது ‘வால்டேர்’ என்பவரின் கருத்து ஆகும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் எண்ணங்களை செம்மைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது வெற்றிக்கான வழியாகும்.

    ஒவ்வொரு ‘வெற்றி’யும் வித்தியாசமானவை ஆகும். இதனால் வெற்றியின் தன்மைக்கு ஏற்ப, அந்த வெற்றியை அடையும் காலமும் மாறுபடுகிறது.

    வெற்றியை குறுக்கு வழிகளில் பெறுவதற்கு சிலர் முயற்சி செய்வதுண்டு.

    புகழ்பெற்ற ‘ஜென்’ கதை ஒன்று வெற்றியைப்பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது.

    சீனாவிலுள்ள ஒரு மன்னன் உலகத்தின் வரலாறு முழுவதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்பினான். “உலக வரலாறு  அனைத்தையும் தெரிந்து கொண்டால் ஞானியாகிவிடலாம்” என்றும் நினைத்தான்.

    அவனது அமைச்சரவையிலிருந்து அறிஞர்களையும், புலவர்களையும் அழைத்தான். உலக வரலாற்றை எழுதித் தரும்படி கட்டளையிட்டான்.

    சில ஆண்டுகள் கழிந்தன.

    ஆயிரக்கணக்கான பக்கங்களில் உலக வரலாற்றை எழுதிக்கொண்டு பல அறிஞர்களும், புலவர்களும் வந்தார்கள். நூற்றுக்கணக்கான குதிரை வண்டிகளில் விரிவாக எழுதப்பட்ட உலக வரலாற்றுச் சுவடிகள் கொண்டுவரப்பட்டன.

    அரண்மனை மண்டபம் முழுவதும் நிரம்பும் அளவுக்கு வரலாற்றுச் சுவடிகள் குவிந்தன.

    மன்னன் அதிர்ச்சியடைந்தான்.

    “உலக   வரலாறு இவ்வளவு  பெரியதா? இவற்றை என்னால் படித்து முடிக்க முடியாது. மிகவும் சுருக்கமாக எழுதித்தாருங்கள்” என்றான் மன்னன்.

    “உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளை சுருக்கமுடியாது. அதிகமாக சுருக்கினால் உண்மைகளைத் தெரியமுடியாது” என அறிஞர்கள் சொன்னார்கள்.

    “எப்படியாவது  நீங்கள் சுருக்கித் தாருங்கள்” என விடாப்பிடியாக விரட்டினான்.

    பயந்துபோன அறிஞர்களும், புலவர்களும் ஒரு ஜென் குருவை சந்தித்து ஆலோசனை கேட்டார்கள். ஜென் குரு மன்னனை சந்திக்க நேரில் வந்தார்.

    “உலக வரலாற்றை  மிகவும் சுருக்கமாக நான் எழுதித்தருகிறேன்” என்று ஜென் குரு கூறினார்.

    மறுநாள், மன்னனை சந்தித்த ஜென் குரு ஒரு ஓலையை அவனிடம் நீட்டினார். அந்த ஓலையில்உலகில்மனிதர்கள்பிறந்தார்கள். வாழ்ந்தார்கள். இறந்துபோனார்கள்என எழுதப்பட்டிருந்தது.

    மன்னன் ஆச்சரியமாகப் பார்த்தான். “உலக வரலாற்றை  மிகவும் சுருக்கமாக இப்படித்தான் எழுத முடியும்” என்று சொன்னார் ஜென் குரு.

    மன்னனுக்கு உண்மை புரிந்தது.

    “எந்த வெற்றியைப்  பெறுவதற்கும் முறையான வழிமுறையும், தேவையான கால அவகாசமும் தேவை” என்பதை மன்னன் புரிந்து கொண்டான்.

    குறுக்கு வழியில் கிடைக்கும் ‘வெற்றி’ நிரந்தரமானதல்ல என்பதையும், தெளிவானது அல்ல என்பதையும் புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெறலாம்.

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    பாடுபட்டுக் கொண்டே படிக்கும் பாட்டாளி மாணவன்

    குடும்ப கஷ்டங்களை நினைத்து படிக்கும் குழந்தைகள் படிப்பில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவார்கள். அதுபோல் தான் இளைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழும் நம் முஹமது ஹூசைன் (19). இவரின் குடும்ப சூழ்நிலையின் காரணமாக பள்ளிப்பருவத்திலேயே குடும்ப கஷ்டத்தைப் புரிந்துகொண்டு செய்தித்தாள்களை வீடு வீடாக போடும் தொழிலை செய்து வருகிறார். கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கலெக்டர் வீடு முதல் 300 வீடுகளுக்கும் மேல் நேரம் தவறாமல் செய்தித்தாள்களைப் போடும் வேலையை செய்து கொண்டும், படித்துக் கொண்டும் வருகிறார். இவருடன் இனி நாம்…

    “எனது தந்தை மன்சூர் அலிகான், ஆட்டோ டிரைவர். தாய் ரெஜினா, வீட்டு வேலை செய்து வருகிறார். என் உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி. அண்ணன் 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார். அக்கா சபினா, பி.காம் (கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ்) படித்துக் கொண்டிருக்கிறார்.

    நான் பத்தாம் வகுப்பு வரை புளியகுளம் அந்தோனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். வீட்டில் மூவரும் படித்து வந்ததால் அம்மா, அப்பாவின் வருமானம் படிப்பு செலவுக்கு போதுமானதாக இல்லை. அதனால் நான் 8ம் வகுப்பு படிக்கும் போது முதல் இப்போது வரையிலும் 7 ஆண்டுகளாக தொடர்ந்து செய்தித்தாள்களை வீடுகளுக்குப் போடும் தொழிலை செய்து கொஞ்சம் குடும்பச் சுமையைப் பகிர்ந்து வருகிறேன். விடியற்காலை 4 மணிக்கே எழுந்து வேலை செய்ய வேண்டும் என்பது ஆரம்பத்தில் கடினமாகத் தான் இருந்தது. போகப்போக பழகிவிட்டது.

    பள்ளியில் திரு. அந்தோணி ஜெயராஜ் என்ற எனது தமிழாசிரியர் தமிழ் இலக்கணங்களையும், பாடங்களையும் நன்கு கற்றுக் கொடுத்தார். தமிழ் மீது பற்றுதல் வர இவரும் ஒரு காரணமாக இருந்தார். இவர் பள்ளிப்பாடங்களை மட்டுமல்லாது, வாழ்க்கை சம்பந்தமான பல கதைகளையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் இயல்பாக எடுத்துக் கூறுவார். பள்ளியிலேயே கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பாடங்களை படிப்பேன். எனது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அக்கா, அண்ணா அவர்களின் ஊக்கத்தால் நன்கு படித்தேன். எனது அக்கா நன்றாக படிப்பார். மாலைப் பொழுதுகளில் எனக்கு பாடங்களைக் கற்றுக்கொடுத்தார். 10ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றேன். மதிப்பெண் வந்ததும் எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் எனக்கு மட்டும் படிப்பைத் தொடர முடியுமா? முடியாதா? என்ற கவலை தொடர்ந்தது.

    எனினும் என் அம்மா, என்னைப் படிக்க வைக்க வேண்டும் என்று முயற்சிகள் கொண்டு பாலிடெக்னிக்கில் சேர்த்துவிட்டார். அதே சமயத்தில் எனது அக்காவும் கல்லூரியில் சேர்ந்தார். நான் ராமகிருஷ்ணா வித்யாமந்திர் கல்லூரியில் தொழில்நுட்பக் கல்வி பயின்றேன். இருவரும் கல்லூரியில் சேர்ந்ததும் பணச்சுமை இன்னும் அதிகமாகக் கூடியது. நுழைவுக்கட்டணமாக ரூ.10000-ஐக் கடனாகப் பெற்று எனது அம்மா கல்லூரியில் கட்டினார்.

    கல்லூரி ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக அம்மாவிற்கு திடீரென ஒரு விபத்து ஏற்பட்டது. இதனால் கல்வியைத் தொடர முடியாத நிலை. கட்டிய பணத்தை திரும்பக் கேட்கலாம் என கல்லூரிக்குச் சென்றேன்.

    அந்தக் கல்லூரியின் நிறுவனர் திரு. மகாராஜா அவர்களைச் சந்தித்தேன். அவர் ‘80 சதவிகித மதிப்பெண் பெற்ற நீ கல்வியை தொடர வேண்டும். உன்னுடைய படிப்புச் செலவைப் பாதியாக குறைத்துவிடுகிறேன். நீ இங்கேயே தொடர்ந்து படிக்கலாம்’ என்று ஆதரவாகச் சொன்னார். அவரது உந்துதல் என் கல்வியின் ஆர்வத்தை அதிகமாக்கியது. பாலிடெக்னிக்கில் 90% மதிப்பெண்களைப் பெற்று ‘கேம்பஸ் இன்டர்வியூ’விலும் தேர்வானேன்.

    பிறகு ஒரு வார காலம் ஒரு வேலைக்குச் சென்றேன். அப்பொழுது கலைஞர் கருணாநிதி கல்லூரியில் பி.இ. படிப்பை படிக்க வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. என் குடும்ப சூழ்நிலையால் எனது கல்வியைத் தொடர முடியாது என்று சொன்னேன். கல்விக் கட்டணத்தை கட்டவேண்டாம் என்றும், புத்தகச் செலவுக்கு மட்டும் பணம் கட்டுங்கள் என்றும் கூறினார்கள். கட்டணப்பணம் ரூ.20000-ஐ பல பக்கம் சரிசெய்து எப்படியோ கட்டினேன்.

    கடன் பிரச்சனை அதிகமாகவே மாலை நேரம் பகுதி நேர வேலைக்குச் செல்லலாம் என முடிவு செய்தேன். எனது நண்பர்களுடன் சேர்ந்து ‘ரெசிடன்சி ஹோட்டலில்’ இரவு வரை பணி செய்தேன். காலையில் பேப்பர் போடுதல், மாலை நேரப் பணி என்று எனது இரவு நேரத் தூக்கம் மொத்தம் 5 மணி நேரம் தான். வருகின்ற வருமானத்தில் எனது குடும்பத்திற்கும் சிறிது உதவி வருகிறேன்.

    இப்பொழுது தான் ஒரு செமஸ்டர் தேர்வு முடிந்திருக்கிறது. அடுத்த தேர்விற்குள் எனது கல்விக் கட்டணத்தை கட்ட வேண்டியும் இருக்கிறது. மேலும் மேலும் உழைக்க வேண்டிய கட்டத்தில் தான் இப்பொழுது இருக்கிறேன். எந்த நிலை வந்தாலும் கல்வியின் மேலுள்ள ஆர்வத்தை தளர்த்திவிடக் கூடாது என்ற முடிவுடன் தான் படித்து வருகிறேன்” என்று கூறிய முஹம்மது ஹூசைன் தன்னுடைய எதிர்கால இலக்காக கூறியது, “என் பெற்றோருக்கு என்றும் உதவ வேண்டும். தன்னைப் போல் படிப்பிற்காக ஏங்கும் மாணவர்களுக்கு கல்விக்கு உதவ வேண்டும். சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்பட வேண்டும்” என்று வளரும் இளைஞர்களின் முன்னோடியாக முன்பொழிகிறார்.

     இக்காலத்தில் சில இளைஞர்களுக்கு கல்விச் செலவு மட்டும் அல்லாது, ‘பாக்கெட் மணி’ என்ற பெயரில் இதர செலவுகளுக்கும் சேர்த்து பெற்றோர் கொடுக்கின்றனர். எனவே பணத்தின் அருமையை மட்டுமல்லாமல், உழைப்பின் சுகத்தையும், நம் வளரும் இளைய சமுதாயத்திற்கு தெரியாமலே போகும் வாய்ப்பு ஏற்படுகிறது.

    இடைவிடாத உழைப்பைக் கொடுத்து கல்வியைக் கற்கும் முஹமது ஹூசைன் போன்ற மாணவச் செல்வங்களை வளர்க்க ‘உதவிக்கரம்’ நீட்ட வேண்டும் நல்லோர்கள் என்பதே ‘தன்னம்பிக்கையின்’ எதிர்பார்ப்பு…

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    எப்போதும் நல்லவனாயிரு

    ஒரு முனிவரை நேர்மையாளன் ஒருவன் சந்தித்தான்.

    “முனிவரே!” நான் நல்வழியில் தான் நடக்கிறேன். ஆயினும் வாழ்க்கையில் படும் கஷ்டங்கள் அதிகம். நன்மை செய்வதும், நல்லதையே நினைப்பதுமான எனக்கு ஏன் இத்தனை துன்பம்?” என்று கேட்டான்.

    முனிவர் சிரித்தார்.

    “அது உன் முற்பிறவியிலான பயன். போன ஜென்மத்தில் நீ பெரும் கொடுமைக்காரனாக இருந்திருக்கலாம். அதன் விளைவு இப்போது தெரிகிறது” என்றார்.

    பதிலுக்கு அவன், “”அந்த ஜென்மத் தவறுக்கு தண்டனையை, அப்போதே அல்லவா தர வேண்டும்….! நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இப்போது தீயவனாய் இருந்தாலும், நன்றாய் வாழ்பவர்கள், போன ஜென்மத்தில் நன்மை செய்தவர்கள் என்றல்லவா அர்த்தமாகி விடும்… இது நியாயமா?” என்று கேட்டான்.

    “உன்  வாதம் ஒரு வகையில் வாஸ்தவம்,” என்ற முனிவர் தொடர்ந்தார்.

    “மகனே! மனிதனுக்கு பல பிறவிகள் உண்டு. அவனது மனம் நிலையற்றது. முதல் சில பிறவிகளில் நன்றாய் நடப்பவன், அடுத்து வரும் பிறவிகளில் நல்லவனாயிருக்க உத்தரவாதமில்லை. ஆக, தண்டனைகள் மாறி மாறி வரும். ஆனால், எந்நிலையிலும் எப்பிறவியிலும், நல்லவராய் இருப்பவர் மிகச்சிலரே. அவர்களுக்கு மறுபிறப்பு கிடையாது. அவர்கள் பரமனின் பாதமடைவர். இது என்னையும் சேர்த்து எல்லோருக்கும் பொருந்தும்” என்றார்.

    நேர்மையாளருக்கு இப்போது தெளிவு பிறந்தது.

    உங்களுக்கு….?

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    நீங்கள் சாதனையாளரே!

    “விரும்பியது கிடைக்காவிட்டால்,
    கிடைத்ததை விரும்பு” – இது ஆக்கபூர்வமான சிந்தனையின் அடித்தளம்.

    தொழில்:

    இந்தச் சிந்தனை தொழிலுக்கு மிகவும் பொருத்தமானது. படிப்புக்கும், பார்க்கும் பணிக்கும் சம்பந்தமில்லாத நிலையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    சாதனையாளர்கள் எப்படி ஒரு செயலைச் செய்ய வேண்டுமென கீழக்கண்டவாறு வள்ளுவம் வழிகாட்டுகிறது.

    இலாபம் – நட்டம் ஆராய்ந்து செய்தல்;
    முதலுக்கு மோசமின்றி செயல்படுதல்;
    தவறான செயல்களைச் செய்யாதிருத்தல்;

    இவைகள் சுலபமாகச் செயல்படுத்தக் கூடியது தான்.

    நோக்கம்:

    தொழில் செய்வதன் நோக்கம் பொருளீட்டுதல்; பொருளீட்டுவதன் நோக்கம் ‘வாழ்க்கையை வாழ்வதற்கே!’ ஆனால் பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கை என ஒரு சாரார் – அதிலும் குறிப்பாக ஆட்சி மற்றும் அதிகாரப் பொறுப்பிலுள்ளோர் செயல்படுவதால் பொதுமக்களும் அவர்களது செயல்களால் பாதிக்கப்படுகின்றனர்.

    பாதிப்பு சாதாரணமானதல்ல. இந்தப் பூவுலகில் வாழவும் வேண்டுமா? எனத் தவறான முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளபடுமளவுக்கு பாதிப்பு.

    காலால் நடந்தால் காத தூரம் செல்லலாம்,

    கையால் நடந்தால்…??

    தவறான வழியில் சேர்க்கும் பொருள், நிச்சயமாகத் துன்பத்தைத் தான் தரும்.

    “பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்

    இருள்தீர எண்ணிச் செயல்” – குறள் 675

    பலமுறை யோசித்து, மயக்கமில்லாமல், அவசரப்படாமல் – என்ன தொழில் (பணி) செய்யப் போகிறோம்; அதனைத் தொடங்க வேண்டிய காலம்; அதைச் செயல்படுத்தும் (பணிபுரியும்) இடம்; அதற்கான கருவிகள் (இயந்திரங்கள்); இந்தத் தொழில் துவங்கத் தேவையான முதலீடும், அதனால் கிடைக்கும் வருமானமும் என்ற ஐந்தையும் ஒன்றுக்குப் பலமுறை ஆலோசித்து, முடிவு செய்து துவங்கினால், அதனால் எதிர்பார்க்குமளவு சம்பாதிப்பதுடன், அது இன்பத்தையும் தருவதாக அமையும். ஓர் உதாரணம் பார்ப்போம்.

    பருக்கை:

    இது ஒரு புத்தகத்தின் பெயர். மனிதன் உயிர் வாழ இறைநிலை வழங்கிய அடிப்படைத் தேவைகள் பசியும், தூக்கமும். வாழ்க்கையை இனிமையாக வாழ வழங்கியது தான் மறதி. இதில் முக்கியமானது பசி. பசியே இல்லாத நிலையை நினைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் பிடிப்பே இருக்காது. இந்தப் பசியைப் போக்கவும், இதர தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவுமே இன்று எல்லோரும் பணி / தொழில் செய்கிறோம்.

    மாணவப் பருவத்தில், பகுதி நேர வேலை (Part Time Job) பார்த்துக் கொண்டு படிக்கும் பழக்கம் இப்போது பரவலாகிவிட்டது. பொருள் வசதியில்லாதவர்கள் தான் இப்பணிகளை நாடிச்செல்கின்றனர். படித்துப் பட்டம் வாங்கி நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் எதிர்நீச்சல் போடும் இவர்களின் சாய்ஸ் – பெரும்பாலும் திருமண கேட்டரிங்; காரணம் சம்பளத்துடன் சாப்பாடும் கிடைப்பது தான்.

    இந்தப் பகுதிநேரப் பணியை மேற்கொண்டு பி.எச்.டி. (Ph.D.)  தமிழ் பாடத்தில்,  சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றவரின் அனுபவம் தான் பருக்கை எனும் இந்த நூல்.

    இதோ அவர் பேசுகிறார்:

    “திருவண்ணாமலை  அருகில் அத்தனூர் கிராமம் சொந்த ஊர்; அப்பா பட்டறைத் தொழிலாளி. நான்கு குழந்தைகளில் நான் கடைக்குட்டி. படிப்பின் மீது ஆர்வம். நன்றாகவும் படிப்பேன். பள்ளிக்குப் பேருந்தில் செல்ல வசதியில்லாமல் நடந்து சென்று படித்தேன்.

    மேற்கொண்டு படிக்க விரும்பியபோது வீட்டில் தடுத்தார்கள் – என் மூலமாக வரும் வருமானம் நின்றுவிடும் என்பதால். என் கனவை விட்டுக்கொடுக்க தயாராயில்லாமல், சென்னைக்கு வந்தேன்.

    சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் தங்க இடமும், உணவும் கிடைக்கவில்லை. கடற்கரை, பூங்கா எனப் பல இரவுகள் உறங்கினேன். எனது கஷ்டத்தைப் பார்த்த உடன் படிக்கும் மாணவன் தனது அறையில் எனக்கு இடம் கொடுத்தான்.

    விடுதி ஆய்வாளர் கண்களில் படாமல் அறையில் தங்கும் போதும், விடுதி உணவைச் சாப்பிடும் போதும் மனதில் ஏற்பட்ட வலியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

    எவ்வளவு காலம் தான் இப்படி மறைந்து வாழ்வது? தேவைகளைப் பூர்த்தி செய்ய பகுதிநேர வேலை பார்க்க முடிவு செய்தேன். சாப்பாடும் கிடைக்கும் என்பதால் கேட்டரிங் வேலையைத் தேர்வு செய்தேன். இது சந்தோஷம் தான். ஆனால் அனுபவிக்கும்போது தான் பல சிரமங்கள் புரிந்தது.

    கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை தான். கல்லூரி மாணவன் என்றாலும், ஏஜென்டுகளைப் பொறுத்தவரை நான் கூலியாள் தான். மாட்டைவிடக் கேவலமாக விரட்டுவார்கள். ஏதாவது பேசினால், அடுத்த முறை வேலை கொடுக்கமாட்டார்கள்.

    கிரிக்கெட்:

    கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கர். சிறுபிழை என்றாலும் அவுட் தான். அம்பயர்களது தவறான கணிப்பால், இவர் பலமுறை ஆட்டமிழந்துள்ளார். மிகமிக எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.

    சாதனை:

    ஆனால், வாழ்க்கை எனும் விளையாட்டில் நாம் எப்படி விளையாடினாலும், இயற்கை எனும் அம்பயர் பலவிதமான வாய்ப்புகளைத் தந்து கொண்டே இருக்கும். வாய்ப்புகள் வரும்போது கட்டாயம் பயன்படுத்திச் செயல்பட்டால் சாதிக்க முடியும். மூச்சுக்காற்று நமக்குச் சொல்வது, எல்லா மனிதர்களும் சாதிக்கவே பிறந்துள்ளார்கள்.

    எந்த அளவு வெயில், குளிர், மழை என்றாலும், உடலுக்குள் செல்லும் மூச்சுக்காற்று நமக்குத் தேவையான பிராண சக்தியைத் தந்து கொண்டே இருப்பதன் மூலம், நாம் எந்தச் சூழ்நிலையிலும் நமது கடமையை வேண்டா வெறுப்பாகச் செய்யக் கூடாது என்ற பாடத்தைப் போதிக்கிறது.

    “செய்வன திருந்தச் செய்”  இது சாதனைக்கான தொடர்படி, என்ன செய்தாலும் சுயதிருப்தி (Self Satisfaction) முக்கியம். மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ? விமர்சனம் செய்வார்களோ? எனக் குழம்பவே கூடாது.

    எண்ணித் துணிந்து செய்யும் செயல்கள் என்றும் நமக்கு ஏற்றத்தை மட்டுமே – அதாவது முன்னேற்றத்தை மட்டுமே தரும். இப்போதைய நிலைக்கு வருத்தப்படுவதால் பயன் ஏதுமில்லை. கிடைத்ததை ஏற்பதும், அதனை விரும்புவதும் மட்டுமே சாதனைக்கு நம்மை இட்டுச் செல்லும்.

    மற்றவர்கள் நம்மை சாதனையாளர் எனப் பாராட்ட வேண்டும் எனக் காத்திருக்கக் கூடாது. உங்கள் ஈடுபாடு உங்களுக்கு மட்டுமே தெரியும். உங்களிடமுள்ள அபரிமிதமான, அளப்பரிய, அற்புத மனசக்தியின் மூலம் எதையும் சாதிக்க முடியும். அந்த மனசக்தி தான் ஆழ்மனம் என்பது. இதை உபயோகியுங்கள்.

    ஆழ்மனக் காட்சிகள் அற்புதங்களை நிகழ்த்தும். நீங்கள் நம்புங்கள்! நீங்கள் சாதனையாளர் தான். மீண்டும் ஒருமுறை படியுங்கள். உங்களாலும் சாதிக்க முடியும். சாதிப்பதற்காகவே பிறந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    வெற்றி மனிதனின் அடையாளம்

    ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமான தனிப்பட்ட திறன்களும், செயல்பாடுகளும் கொண்ட ஆளுமைகளின் அடையாளம் ஆவர். அதனால் தனி மனிதத்திறன் என்பது மிகவும் வேறுபட்ட ஆற்றல்களும், அறிவுத் திறன்களும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும். தனி மனிதனை உருவாக்கும் பண்புகளைப் பற்றியோ, அவ்வாறு ஒவ்வொரு மனிதனை உருவாக்குவதில் குடும்பங்களின் பங்கு பற்றியோ அல்லது தனி மனிதனை அடையாளப்படுத்துவதாகக் கணக்கிடப்படும் தனி மனிதனுடைய உடல் அழகைப் பற்றியோ இல்லை இங்கு கூறப்போவது.

    சக்தியுடைய தனி மனிதர்களை வார்த்தெடுக்கும் சில பண்புகள் இருக்கின்றன. தன்னம்பிக்கை, குறிக்கோள், ஒருமுகத்தன்மை, சிதறாத கவனம், முடியும் என்கிற உள்ளுணர்வு (Will Power), தளராத உற்சாகம் போன்றவை எல்லாம் தனி மனிதனுடைய ஆற்றலை வெளிப்படுத்தும் வெற்றி மனிதனின் அடையாளங்கள் ஆகும். மிகச்சிறந்த தனி மனிதனை வெளிப்படுத்துவது அவனுக்குள் இருந்து ஒளிவிடும் தன்னம்பிக்கையால் அவன் மற்றவர்களோடு பழகும்விதமே. மேற்கொண்ட செயலை செய்து முடிக்க தன்னால் முடியும், அதற்கான காரியங்களைச் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்து முடிக்கக்கூடிய திறமை தனக்கு உண்டு, செயல்படும் போது இடையிடையே குறுக்கிடும் வெற்றி தோல்விகளை சமமாகக் கருதும் மனம் தனக்கு இருக்கின்றது என்கிற மனப்பான்மை உள்ளவனுக்கு இருப்பதுதான் இந்த அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் அடையாளம்.

    ஆனால் அதே நேரத்தில் அளவுக்கதிகமாக தன்னைத்தானே நம்பிக்கொள்வதும் சில சமயங்களில் ஆபத்தில் முடியும். பல தடவை தோற்று ஓடிய குரூஸ் அரசனுக்கு கடைசியாக வெற்றி பெற முடிந்ததும், வாய் பேச முடியாத, விழித்திறனை இழந்த, காது கேட்காத ஹெலன் கெல்லர் கல்வித்துறையிலும், புத்தகங்கள் எழுதுவதிலும் புகழ் பெற்றதும், செவித்திறன் இல்லாத பீட் ஓவன் சங்கீதத்தில் பிரசித்தி பெற்றதும் உறுதியான தன்னம்பிக்கையால் தான்.

    தனிமனித ஆளுமையை அடையாளப்படுத்தும் இன்னொரு குணம்தான் லட்சியம். குறிக்கோள். தீர்க்கமான குறிக்கோள் ஒன்றை கொண்டிருப்பதும், அதை உறுதியாக பசு மரத்தில் பதிந்த ஆணிபோல பதித்துக் கொள்வதும், வெற்றி ஆளுமையின் பாகம் ஆகும். படிக்க வேண்டும், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகளை வளர்க்க வேண்டும், வீட்டையும் காரையும் வாங்க வேண்டும். இதற்கு மேல் லட்சியம் என்று எதுவும் இன்று பெரும்பாலோருக்கு கிடையாது.

    வேலை கிடைப்பதைக் காட்டிலும் மாற்று லட்சியம் இல்லாதவர்கள் கிடைத்த வேலையை உந்தித்தள்ளியும், விரட்டியடித்தும் மாதங்களையும், வருடங்களையும் கடத்துகிறார்கள். லட்சியத்துக்கு உரிய படிக்கட்டாக வேலையை கருதும்போது வேலையில் நிறைவு பெற முடியும்.

    உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் அவரை போற்றுவார்கள். எங்கே போக வேண்டும் என்று உறுதியான திட்டம் இருக்கும்போது நம் திறமைகள் எல்லாவற்றையும் அதை நோக்கிமற்றவர்கள் நடந்து நடந்து போட்ட பாதையில் இல்லை நாம் பயணிக்க வேண்டியது. நமக்கு என்று சொந்தமாக ஒரு பாதையை நாமே போட்டுக் கொண்டு அதில் நடக்க வேண்டும். உறுதியான குறிக்கோள் என்ற ஒன்று இருந்தால்தான் மூளையும் செயல்திறன் கொண்டதாக மாறுகிறது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

    லட்சியத்துக்குரிய பயணத்தில் நம் கால்கள் பல வழிகளிலும் சென்றால் நம் ஒருமுகமான கவனத்தை நாம் இழந்துவிடுவோம். துரோணாச்சாரியார் அம்பை எய்யச் சொன்னபோது, அர்ஜூனன் தன் இலக்கை மட்டுமே குறி பார்த்து அம்பை எய்தான். அவரவர்களுடைய திறமைக்கு ஏற்றவாறு நேரத்தை நிர்வாகம் செய்து லட்சியத்தை நோக்கிப் பயணப்படுவதே சிறந்தது ஆகும்.

    வாழ்க்கையில் சந்திக்கும் தோல்விகளில் சிக்கி அகப்பட்டுப் போகாமல் மனதுடைய ஆற்றலை வலிமையாக்கி, ஒரு அடி பின்னால் செல்லும்போது இரண்டு அடி முன்னோக்கி நடக்க மனதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும. மனதின் ஆற்றல் ஆளுமையை வலிமையுடையதாக்கும். சோம்பேறிக்கு எந்தத் திறமையும் கைவராது என்பது நிதர்சனமான உண்மையாகும். சோம்பேறிக்கு கல்வி மட்டும் இல்லை எந்த ஒரு முன்னேற்றமும் வாழ்க்கையில் ஏற்படாது.

    தளராத உற்சாகம் இருந்தால் எல்லாவற்றையும் கைப்பற்றலாம். உற்சாகம் உள்ளவர்கள் அதை தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் இனிமையான பூவின் நறுமணத்தைப்போல பரவச் செய்துவிடுகிறார்கள். அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியரை வீறுகொண்டு விடுதலையுணர்வு பெற்று எழச்செய்த காந்திஜி தளராத உற்சாகத்தின் சின்னமாக இருந்தார். எதிலும் திருப்தியடையாமை, துக்கம், கோபம், வெறுப்பு, கௌரவம், அலட்சிய மனப்பான்மை, பொறாமை இவைகள் எல்லாம் சர்வசதா காலமும் வெளிப்படுத்துபவர்களை எந்த மனிதரும் நெருங்குவது இல்லை. திறந்த மனதுடன் பேசும் பேச்சு அடுத்தவர்கள் அதிகமாக விரும்புகிறார்கள். எல்லையில்லாத அறிவு சிறந்த ஆளுமையின் சிறப்பு அம்சம் ஆகும். நல்ல ஒரு கேட்பவராவதும், விசாலமான மனதுடையவராக இருப்பதும், அற்புதமான மனிதருடைய அடையாளம் ஆகும். மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்றால் நாம் மற்றவர்களை விரும்ப வேண்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் கண்கள், அருவிபோல மனம் திறந்த பேச்சு, மாறாத புன்னகை போன்றவையும் மகாத்மாக்களின் அடையாளங்கள் ஆகும். ஆக தன்னம்பிக்கை, லட்சியம், தளராத உற்சாகம், முடியும் என்ற நம்பிக்கை ஆகியவை பிரகாசிக்கும் தனிமனித ஆளுமை வெற்றியின் சின்னமாக ஆகிறது.

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    உன்னையறிந்தால்

    ஒருவன், கிணறு ஒன்றைத் தோண்ட துவங்கினான். மாதக்கணக்கில் தோண்டியும், தண்ணீரைக் காணவில்லை.இருபது அடிகள் தோண்டியும் நீர் இருப்பதன் அறிகுறியையே காணாத போதிலும், அவன் முயற்சியைக் கைவிடவில்லை.

    அந்த வழியாக சென்ற ஒரு வழிப்போக்கன், தோண்டுபவனைப் பார்த்து, “ஐயா, நான் பல நாள், நீங்கள் தோண்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். அங்கு தண்ணீர் வரவில்லையே, வேறு இடத்தில் தோண்டிப் பார்க்கக் கூடாதா?”என்றான்.

    அதற்கு அவன், “இல்லையில்லை. நான் என் முயற்சியைக் கைவிடமாட்டேன். இங்கு தண்ணீர் இருக்கும்” என்றான்.

    சில நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் அந்த வழிப்போக்கன், அம்மனிதனைப் பார்த்து, கோபமாக, “அட, நீ என்ன முட்டாளா? இந்த இடத்தில் நிச்சயம் தண்ணீர் உனக்குகிடைக்காது. ஏன் தோண்டிக் கொண்டே இருக்கிறாய்?” என்றுகேட்க, அதற்கு அவன், “நான் முதலில் தோண்ட ஆரம்பித்தபோது, என் மனைவி எதிர்த்தாள். அவளை நான் பொருட்படுத்தவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு, என் உறவினர்கள் தடுக்கும் வகையில் அறிவுரைகள் கூறினார்கள். அவர்களையும் அலட்சியம் செய்தேன். அதன்பிறகு, கிராம மக்கள் என்னைத் தடுத்தனர். அவர்களையும் நான் பொருட்படுத்தவில்லை.

    என் முயற்சிகள் எல்லாம் வீண் என்றும், எனக்கு தண்ணீர் கிடைக்காது என்றும், எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், நான் இதை நிறுத்தினால், மற்றவர்களின் விமர்சனத்தைக் கேட்க வேண்டியிருக்கும். நான் தோற்றவனாகிவிடுவேன். அதற்கு எனக்கு தைரியமில்லை. இப்போது நிறுத்தினால், என்னை அவர்கள் ‘முட்டாள்’ என்பார்கள்.

    வாழ்க்கையில் என் முயற்சிகள் அனைத்தும் தண்ணீரைக் கண்டுபிடிக்கவே சரியாக இருக்கும். இதை நிறுத்தினால், என் வாழ்க்கையில் ஓர் அர்த்தமும் இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னைப் பற்றியே நான் கீழ்த்தரமாக நினைத்து விடுவேனோ எனப் பயமாக உள்ளது” என்றானாம்.

    நாமும் பல சமயங்களில், இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டிருப்போம் அல்லவா?நமக்கு விருப்பமே இல்லாத ஒரு தொழிலில் நாமாகவே சிக்கியிருப்போம்.நம்மால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஏனென்றால், முதலில் மனைவி அதற்கு தடை விதித்திருக்கலாம்.

    இப்போது கைவிட்டால், மனைவி கூறியது சரியாகிவிடும். கோபமான மனைவியை எதிர்கொள்வதை விட, விருப்பமில்லாத தொழிலைச் செய்வது மேலானது எனத் தோன்றும். பிடிக்காத உறவு முறையில் சிக்கிக்கொண்டு, வெளிவரவும் முடியாமல் இருக்கிறோம் என்றால், எதிர்காலத்தில் தனிமையை எதிர்கொள்ள பயம். ஏதேனும் ஓர் அபிப்ராயத்தையோ, கொள்கையையோ பற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உள்ளார்ந்த உண்மை.

    ஏனென்றால், அதை விட்டுவிட்டால், நாம் சின்னாபின்னமாகி விடுவோம் எனும் எண்ணம். கல்லூரியில் நமக்கு பிடிக்காவிட்டாலும், நம் மனம் வேறு ஏதோ துறையை நாடிய போதும் அதில் பிடிவாதமாக தொடர்கிறோம். காரணம் நம் தந்தையின் அறிவுரைக்கு மாறாக அதில் சேர்ந்திருப்பதுதான்.

    பயம் தான் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்படுத்துகின்றது. அது தொழில், செல்வம், ஆரோக்யம் அல்லது உறவுமுறைகள் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    நமக்கு தெரிந்த, பழக்கமான, சுகங்களை இழக்க விருப்பம் இல்லை. மாற்றத்தைக் கண்டு பயப்படுகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பற்றி நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள பலவீனமான உருவகம் அல்லது நம் முகமூடி உடைந்துவிடுமோ என்ற பயம்.

    நாம் நம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவாறு நாம் இல்லை என்ற உண்மையை, எதிர்கொள்ள நேரிடுமோ என்ற பயம். இந்த பயம் நம் வளர்ச்சியைத் தடுக்கின்றது. முயற்சிக்கும், பிடிவாதத்திற்கும், அகங்காரத்திற்கும் வேறுபாடு தெரியாமல் செய்ய வைத்து தன்னம்பிக்கையை மட்டுமல்ல மனிதனுக்கு இயல்பாக இருக்கின்ற, இருக்க வேண்டிய நம்பிக்கையைக் கூட அழித்துவிடுகிறது.

    இதை ஆழமாக ஆராய்ந்தால் தான் உண்மையைக் காண முடியும். புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கவோ, கற்கவோ வேண்டும் என்றால், நம்மை ஆட்கொண்டுள்ள பயத்திலிருந்து வெளிவர வேண்டும். பயத்தை விட்டுவிட வேண்டும் என்று காலம் காலமாக கூறி வருகின்றனர். அதற்காக ‘பாஸிட்டிவாக’ (Positive) எண்ணுவதற்கு முயற்சி செய்கிறோம்.

    ஒவ்வொரு முறை நாம் ‘பாஸிட்டிவாக’ எண்ணுவதற்கு முயற்சி செய்கின்றபோதும், நமக்குள்ளிலிருந்து ஓர் ஆழமான குரல், “அதைச் செய்யாதே, அப்படி நடக்காது” என்றுகூறுகின்றது. அந்தக் குரல் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.அப்படியென்றால், மனிதன் தான் சிக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளிலிருந்து எப்படிவெளிவர முடியும்?

    மாற்றங்களுக்கு ஏற்றவாறு அவன் எப்படி மாறமுடியும்? அதாவது,

    ‘பாஸிடிவ்’  எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பது மேலும், நிலைமையை மோசமாக்கும். ஒவ்வொருமுறைஒரு எதிர்மறை(நெகடிவ்) எண்ணத்திற்கு மாறாக, எதிராக, ‘பாஸிடிவ்’ எண்ணத்தை வளர்த்துக் கொள்ளும் போதும் நம் மனதோடு நாம் போராடுகிறோம். மனதுடன் அதிகமாக போராட, போராட அது மேலும் சக்தி பெறுகிறது.

    கடல் அலையை எதிர்த்து செயல்படும்போது, பலமாக அடி விழுவதைப்போல ஆகிவிடும்.

    இதற்கு ஒரே தீர்வு, “நாம் சிக்கிக் கொண்டோம்” என்றும், “அந்த பயம் தான் நம்மை கட்டுப்படுத்துகிறது” என்றும் உணர்ந்து, அதே உண்மையில், அப்படியே நிற்க வேண்டும். நம்மால், நம்மையே நேரடியாக பார்க்க முடியவில்லை என்றஉண்மையை, நம் முகமூடிகிழித்துவிடும் என்ற உண்மையை எதிர்கொள்ளவேண்டும்.

    இதுவே மாற்றத்தின் முதற்படியும், கடைசிப்     படியுமாகும். இந்த உண்மையில் அப்படி உறைந்து போனால், மாற்றத்தில் கதவுகள் திறப்பதையும், வளர்ச்சி என்பது எளிதாக இருப்பதையும், தன்னம்பிக்கை வளர்வதையும் காண முடியும். இது பலமடங்காக நமக்கு சக்தியை அளிக்கும்.

    “அதுவே  நிரந்தர வளர்ச்சியைக் கொடுக்கும்.”

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click