– 2013 – December | தன்னம்பிக்கை

Home » 2013 » December (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    “மனவெளி பயிற்சிகள்” Psycosmic Oscio Practices

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பி.என். புதூர், அறிவுத்திருக்கோயில்
    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்:22.12.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்:காலை 10.00 மணி

    இடம்:அறிவுத்திருக்கோயில்
    ஆனந்தாநகர், முல்லைநகர்பஸ்ஸ்டாப்
    மருதமலைரோடு, பி.என். புதூர்
    கோயம்புத்தூர்- 41

    தலைப்பு : “மனவெளி பயிற்சிகள்”

    Psycosmic Oscio Practices

    சிறப்புப் பயிற்சியாளர் : Dr. M.K. Shivaa
    Positive Mind Trainer
    Ph: 72000 88055

    தொடர்புக்கு:
    தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ்- 9842259335
    செயலாளர் திரு. A. சரவணகுமரன்- 9092092080
    பொருளாளர் திரு. ஆனந்தன்- 74026 10108

    அனுமதி இலவசம்!
    குடும்பத்துடன் வருக!!

    தன்னம்பிக்கை மேடை

    கிராமப்புறவிவசாயிகளுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது?

     பா.மா. வெங்கடாசலபதி

    பாப்பாங்காட்டூர்

    கிராமப்புற விவசாயத்தை நம்பித்தான் 124 கோடி மக்கள் வாழ வேண்டி உள்ளது. எனவே கிராமப்புறவிவாசயம் என்றென்றும் முக்கியம் உள்ளதாகத்தான் இருக்கும். ஆனால் கிராமப்புறவிவசாயத்தில் போதுமான வருமானம் கிடைப்பதில்லை என்பது உண்மையாகத்தான் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. இடைத்தரகர்கள் அடிக்கும் கொள்ளை ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

    ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொள்ளாச்சி விவசாயிக்கு ஒரு இளநீருக்கு 5 ரூபாய் தரப்படுகிறது. அதே இளநீர் கோவையில் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றி விவசாயிக்கு நியாயமான விலை கிடைக்க பல நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வெற்றி கிடைக்கும்போது விவசாயிக்கு நியாயமான விலை கிடைக்கும். வருமானமும் பெருகும்.

    விவசாயிகளுடைய உற்பத்தித் திறன் இன்று குறைவாகவே உள்ளது. ஒரு ஏக்கருக்கு 2 டன் நெல் என்ற முறையில் நாம் உற்பத்தி செய்யும்போது சீனநாட்டு விவசாயி 6 டன் உற்பத்தி செய்கிறார். இது நவீன விஞ்ஞான விவசாய முறைப்படி சாத்தியமாகிறது.

    கிராம விவசாயிகள் விஞ்ஞான விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட வேண்டும். சாமர்த்தியமாக திட்டமிட்டு காய்கறிகள், பலவகைகள் என்று அதிக விலை கிடைக்கும் பயிர்களைத் தேர்ந்தெடுத்து சரியான நேரத்தில் சரியான முறையில் சேதாரம் இல்லாமல் அறுவடை செய்து சந்தைக்கு அனுப்புவதாக இருந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஓர் உண்மையை ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்றமுறையிலும் விவசாய கல்வியை படித்தவன் என்ற முறையிலும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நுகர்வோருக்குத் தரமான விவசாயப் பொருளை உற்பத்தி செய்து தருவது, ஒரு விவசாயின் கடமையாகும். ஆனால் பல நேரங்களில் சில விவசாயிகள் அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்துடனோ அல்லது அறியாமை காரணமாகவோ, விளைபொருட்களை அவசரமாக அறுவடை செய்து சந்தைக்கு அனுப்புகிறார்கள். எடுத்துக்காட்டாக, பருவம் ஆகாத வாழைக்காய் அல்லது பருவத்திற்கு வராத மாம்பழம் போன்றவற்றை அறுவடை செய்து இரசாயன முறையில் பழுக்க வைத்து சந்தைக்கு அனுப்புகிறார்கள். இப்பழங்களை வாங்கி வாடிக்கையாளர்கள் சாப்பிட முடியாமல் அதை வீசி எறிவதோடு மீண்டும் இதுபோன்றபழங்களை வாங்கக்கூடாது, வாங்கி வீணாக்கக்கூடாது என்கிற முடிவிற்கு வருகிறார்கள். இது நாட்டுக்கே பேரிழப்பை ஏற்படுத்தும் தேச விரோதச் செயலாகும்.

    இதுபோன்றகுறைபாடுகளைக் களைந்து விஞ்ஞான முறையில் தீவிர விவசாயம் செய்து தரமான விளைபொருட்களை தரக்கூடிய சூழ்நிலை வரும் போது கிராம விவசாயம் தழைக்கும்.

    உங்களின் எதிர்கால இலக்கு குறித்து?

    என். மகேஷ், ஈரோடு…

    எதிர்காலத்தில் பல இலக்குகள் உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையில் சில இலக்குகள், குடும்ப வாழ்க்கையில் சில இலக்குகள், பணி வாழ்க்கையில் சில இலக்குகள், மாணவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பில் சில இலக்குகள், தன்னார்வ நூல் எழுதுவதில் சில இலக்குகள், இந்த நாட்டில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் சில இலக்குகள், அதுமட்டுமல்லாமல் உடல் நலம் பேணுவதில் சில இலக்குகள் என்று பல இலக்குகள் உண்டு.வர இருக்கும் சென்னை மாரத்தானில் 21 கிலோமீட்டர் ஓட வேண்டும் என்பது ஓர் இலக்காக உள்ளது. இருந்தாலும் ஒரு நாளுக்குள் உள்ள இலக்குகள் என்னவென்பதை வகுத்துக்கொண்டு அச்செயல்களில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டு இந்தவொரு நாளை முழுமையாக வாழ முயற்சிக்கிறேன்.

    அதாவது, நிகழ்காலத்தில் இன்று, இப்போது, இங்கே செய்வதில் அதிக கவனத்தைச் செலுத்தி வாழ்வது தான் முழுமையான வாழ்க்கை என்றே தோன்றுகிறது.

    கடந்த காலத்தை எண்ணி பெருமைப்படுவதோ அல்லது வருத்தப்படுவதோ அர்த்தமில்லாத ஒரு முயற்சியாகவே தெரிகிறது. அதேபோல எதிர்காலத்தை எண்ணி பயப்படுவதோ, இல்லையென்றால் நம்பிக்கை அடைவதோ பயனற்றதாக தெரிகிறது.

    இன்று என்ன சாதித்தோம் என்ற கேள்விக்கு பதில் தரும் வகையில் நிகழ்காலத்தில் முழு கவனத்தைச் செலுத்தி செய்யும் செயலை சிறப்பாகச் செய்துவிட்டால் இறந்த காலமும், எதிர்காலமும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. பிற்காலத்தில் பல இலக்குகளை வென்ற திருப்தியும் கிடைக்கும்.

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    செயலின் ரகசியம்

    மனித வாழ்க்கையின், ஒவ்வொரு கட்டத்தையும் நிர்ணயிப்பது, மனிதச் செயல்பாடுகளே, பெரும்பங்கு வகிக்கின்றது.

    நாம் செயல்படச் செயல்படத்தான் விளைவுகள் அறுவடையாகின்றன.அறுவடையில் நிகழும் அனுபவங்கள்அறிவை கூர்மையாக்குகின்றன,அறிவு கூர்மை, ஆக, ஆக,தெளிவு பிறக்கின்றது.தெளிவு ஏற்பட, ஏற்படத்தான் முடிவுகளில் முதிர்ச்சி வெளிப்படுகின்றதுமுதிர்ந்த முடிவுகளின் அதிர்வுகளே,ஒருவரை உன்னதமானவராக,இந்த உலகுக்கு அடையாளப்படுத்துகிறது.

    எனவே செயலைப் பற்றிய சிந்தனையும், தெளிவும் ஒருவருக்குள் எந்த அளவு இருக்கின்றதோ அந்த அளவுக்கு அவர், உன்னதமானவராக ஒப்புயர்வு அற்றவராக, திகழ்கின்றார் என்பதனால் செயலைப் பற்றிய ரகசியத்தை, நாம் அறிந்து கொள்ள வேண்டியது, கட்டாயமான ஒன்றாகும்.

    செயலுக்கு தேவையானது எது?

    1.     உடல், மனம், உயிர்

    2.     உலகம்

    3.     பிரபஞ்சம்

    செயல்ஏன்தேவை?

    ஒரு செயலை முன்நிறுத்தித் தான், எதையும் தீர்மானிக்க முடியும். செயல் என்ற ஒன்று இல்லை என்றால், அங்கே சிந்திப்பதற்கு எதுவுமே இல்லை. சொல்லப் போனால், உயிர் உள்ளதை உறுதி செய்வதே செயல்தான்.

    செயல்எப்படிஉருவாகிறது?

    ஒன்றைச் சுற்றி அமைந்துள்ள பஞ்ச சக்தி, உயிரினம், காலநிலை இந்த மூன்றும் கலந்த கலவையான சூழ்நிலையைப் பொருத்து ஒன்றின் செயல் உருவாகிறது.

    செயலின்விளைவுதான்என்ன?

    ஒன்றைச் சுற்றி அமைந்துள்ள சூழ்நிலை ஏற்படுத்தும் கற்பனையும், எண்ணமும் ஒரு தேவையை ஏற்படுத்துகிறது. அந்தத் தேவையை ஒட்டிய முயற்சியே செயலாக வெளிப்படுகிறது. செயலின் விளைவே அதைச் செய்தவனை அடையாளம் காட்டி விடுகின்றது.

    தொடர், செயலின் விளைவு, அனுபவ அறிவாய் மாறி, அதிலே, ஆய்ந்து, தெளிந்த, முடிவாய் மாறிப் போகிறான் மனிதன்.

    எந்தச் செயலைச் செய்ய வேண்டுமோ, அது பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

    நாம்

    எதைச் செய்ய வேண்டும்

    எப்பொழுது செய்ய வேண்டும்

    எப்படி செய்ய வேண்டும்

    எந்த அளவு செய்ய வேண்டும்

    எங்கு செய்ய வேண்டும்

    எனத் தெளிவாக

    தெரிந்து கொள்ள வேண்டும்.

    எனவே  நீங்கள் செய்ய வேண்டிய செயல் பற்றிய அறியாமை உங்களிடம் இருக்கக் கூடாது. அதற்குத் தேவையான சரியான அறிவு உங்களிடத்திலே இருக்க வேண்டும்.

    இல்லை என்றால் செய்யும் செயலின் தரம் குறைவது மட்டுமின்றி, மன உறுதியும் இல்லாமல் போய் விடும். நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால், எதைக் கற்றுத்தர வேண்டுமோ அதுபற்றி நன்றாகத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இல்லை என்றால் பரம்பரை பரம்பரையாகத் தவறான விசயங்களும், அறியாமையும் தொடர்ந்து வரும்.

    நீங்கள் செய்யும் எந்தச் செயலையும் வெறுக்காதீர்கள். அதுபோல் செய்யும் எந்த செயலையும் ஒருபோதும் தயக்கத்துடன் செய்யக் கூடாது. அந்த செயல் நீங்கள் தேர்ந்தெடுத்ததாக இருக்கலாம். அல்லது உங்கள் மேல் திணிக்கப் பட்டதாகக் கூட இருக்கலாம் அல்லது நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியதாக இருக்கலாம்.

    ஆகையினால் விரும்பிப் புரியும் செயலாயினும் சரி, சூழ்நிலை அல்லது மற்றவர் காரணமாக நம்மீது திணிக்கப்படும் செயலாயினும் சரி, எந்தச் செயலையும், எந்தவித வெறுப்புமின்றிச் செய்ய வேண்டும். வெறுப்பின் அடையாளம் குறைகூறுதல். நீங்கள் செய்யவேண்டிய செயலைப் பற்றி குறைகூறுவதை நிறுத்துங்கள்.

    ஏனெனில் நீங்கள் வெறுக்கும் செயல்களை விரும்பிச் செய்வதற்குப் பலர் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    ஆக சரியான பாவனையை வளர்த்துக் கொள்வதன் மூலம் நாம் செய்யும் எந்தச் செயலையும் நாம் விரும்ப முடியும். விரும்பிச் செய்யும் பொழுது அது ஆனந்தமாகி விடுகின்றது. அதன் பலனுக்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. அது கிடைக்கவும்செய்யலாம். கிடைக்காமலும் போகலாம். அதன் ஆனந்தத்தை அனுபவித்தாலே அதற்கான பலன் அடைந்ததாக அர்த்தப்படுத்திக் கொள்வோம்.

    ஆர்வமின்மையைநீக்குவதற்குசிறந்தவழி

    ஒவ்வொரு செயலையும் செய்யும் முன்னர், அடுத்த செயலை மேலும் சிறப்பாக எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் ஆராய்ச்சிக்களனாகப் பயன்படுத்துவதுதான். ஆராய்ச்சி செய்து, அடுத்த முறைமுன்னேற்றம் அடைவதாகும் (Research and Development).

    நாம் ஆய்ந்து அறிந்ததை செயலாக்கம் செய்ய வேண்டும். அறிந்தவருக்கும், செயலாற்றுபவருக்கும் இடையே பிளவு இருக்கக்கூடாது.

    இல்லாதபட்சத்தில்எதுநடக்கிறது?

    முதலில் நான் எதிர்மறைவிளைவுகளைத் தவிர்த்து விடுகிறேன். இரண்டாவதாக அறிந்த படி செயலாற்றுவதில் முழுமையான திருப்தி கிடைக்கிறது (Love, Learn, Implement).

    முடிவாக நம்முடைய செயல்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு அதிகப்படியான அளவு பயன்படுவதாக அமையட்டும். நம்முடைய பார்வையை விசாலப்படுத்திக் கொள்ளுவோம். எனக்கு என்ன கிடைக்கும் என்று மட்டும் கேட்காமல் இந்த செயலால் எத்தனை பேர் பயன் அடைவார்கள் என்ற கேள்வியை எழுப்புவோம்.

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    எண்ணித் துணிக!

    உலகில் அரிதாகிய பிறவியினைப் பெற்றவர்கள் மனிதர்களே. ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் செயல்படும் ஆற்றல் இருக்கிறது. இவர்களில் மனிதனிடம் மட்டுமே சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் இருக்கிறது.

    இந்த ஆற்றலை எவ்வாறு கண்டு உணர்ந்தனர் என்றால் ஏன்?… எப்படி?… எதனால்?… யாரால்?… என்ற கேள்விகளினால் விளைந்த சிந்தனையின் ஆற்றலில் தான் என்றால் அது மிகையாகாது. கேள்விகளின் விளைவால் தோன்றிய, எண்ணிச் செயல்படுத்தும் ஆற்றலின் மகத்துவத்தை ஈண்டு காண்போம்.

    கேள்விகளின் தொடக்கம்:

    கற்கால மனிதன் இன்று நிகழ்கால நவீன யுகம் வரை பரிணாம வளர்ச்சியின் விளைவாக, இயற்கையின் பேராற்றல் மகிமையினை மனிதன் உணரத் தொடங்கிய வேளையில், அறிவியலின் ஆற்றல்களை, மனிதன் ஆய்ந்து அறிந்து நடைமுறைப்படுத்தத் தலைப்பட்ட வேளையில் கேள்விகள் பிறந்தன.

    கேள்விகளுக்கான விடைகளை அறிவியல் மூலமாக, ஆன்மீகம் மூலமாக அறிந்ததன் விளைவு தான் இன்றைய நவீன உலகம். ஆடம்பர வாழ்க்கையோடு, விண்ணிலும் மண்ணிலும் வியத்தகு அறிவியல் வினோதங்களாக, வியப்புகளாகக் கண்கூடாகக் கண்டு, களித்து வாழ்ந்து வருகின்றோம்.

    கேள்வி ஞானத்தின் விளைவாக, கல்வியின் மீது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, வானொலி, தொலைக்காட்சி, கைபேசி, கணினிகள், நவீன இயந்திரங்கள், விண்முட்டும் கட்டிடங்கள், தொலைத்தொடர்பு வசதிகள், விண்ணிலே நிறைந்துள்ள விண்கோள்களின் அற்புதங்களை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உலகம் அறிந்து கொள்கின்றவாய்ப்புக்கள், அனைத்துத் துறைகளிலும் விரிந்து பரவிக் கிடப்பதனால் அதீத வளர்ச்சியடைந்துள்ளது உலகம்.

    எண்ணத்தின்ஆற்றல்:

    “உன்னையே நீ அறிவாய்!”, “ஆயிரம் இளைஞர்களை என்னிடம் கொடுங்கள், உலகையே மாற்றிக் காட்டுகிறேன்!” என்று சூலுரைத்த ஞானி விவேகானந்தரின் மந்திர வார்த்தைகள், எழுந்து நில்! தைரியமாக இரு! வலிமையுடன் இரு! உன் விதியைப் படைப்பவன் நீயே! இந்த வார்த்தைகளெல்லாம் சாதாரணமான வார்த்தைகளல்ல! வியத்தகு உலகின் சாதனைகளுக்கெல்லாம் அடித்தளமான அற்புத வார்த்தைகள் இவை என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர்களின் வெற்றி முழக்கங்களாகும் “எண்ணங்களின் வலிமையே செயலாக்கத்தின் ஆணிவேர்!” என்றஇனிய சொற்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    எந்த ஒரு செயலையும் திட்டமிடுதல் வேண்டும். திட்டமிட்டபடி செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தும் புதிய புதிய வழிகளைத் தானாகவோ, பிறரது அனுபவ மொழிகளால் கேட்டு, உணர்ந்து, பின்பற்றும்முறைமூலமாகவோ சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தும் திறனில் உள்ள வாய்ப்புக்கள், சூழ்நிலைகள் அனைத்தையும் ஆய்ந்து முடிவெடுத்துச் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

    செயல்படுத்துவதில் உள்ள தடைகள் என்ன? அவற்றைஎவ்விதம் களைவது? இதற்கான வழிகளைச் சிந்தித்து தடைகளைத் தகர்த்தெரியும் போது குறிக்கோளை நோக்கிய பயணம் எளிதாக சிறப்பாக அமையும். அப்போது தான் வெற்றிக்கனியைப் பறித்துச் சுவைக்க முடியும். இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை,

    “எண்ணித் துணிக கருமம்துணிந்தபின்

    எண்ணுவம் என்பது இழுக்கு!”       (குறள் 467)

    என்கிறார். மேலும்,

     “அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

    ஊதியமும் சூழ்ந்து செயல்” (குறள் 461)

     என்றும் வலியுறுத்திக் கூறுகின்றார்.

     வெற்றிவாசல்களின்அடிச்சுவடுகள்:

              “வாழ நினைத்தால் வாழலாம்

              வழியா இல்லை பூமியில்”

    என்றகவிஞர் கண்ணதாசனின் வைர வரிகள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையின் தேவையை வலியுறுத்துகின்றன.

    “பொருள் கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

    இருள் தீர எண்ணிச்செயல்” (குறள் 675)

    என்றகுறள் மூலம் ஒரு செயலைச் செய்யுமிடத்துப் பொருள், கருவி, காலம், செயல், இடம் ஆகிய இவ்வைந்தையும் அய்யமுறஆய்ந்து செய்தல் வேண்டும் என வலியுறத்திக் கூறுகின்றார்.

    ஒவ்வொரு செயல்பாடுகளிலும் திட்டமிடுதல், பரிசீலித்தல், செயல்படுத்துதல் என்றபல்வேறு வகையான வழிமுறைகளைச் சிந்தித்துச் சரியான முறையில் செயல்படுத்தும் போது, வெற்றி என்பது நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டிய செய்தியாகும்.

              “மனதில் உறுதி வேண்டும்

              வாக்கினிலே இனிமை வேண்டும்

              நினைவு நல்லது வேண்டும்

              நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

              கனவு மெய்ப்பட வேண்டும்

              கைவசமாவது விரைவில் வேண்டும்”

    என வேண்டுகின்றார் பைந்தமிழ்ப் புலவன் பாரதி.

            “என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

             வரும் இன்ப நிலைவெகு தூரமில்லை!”

    என்று பட்டுக்கோட்டையார் தன்னம்பிக்கைக்கு உரமூட்டுகின்றார்.

             “திண்ணிய நெஞ்சம் வேண்டும்

              தெளிந்த நல்லறிவு வேண்டும்”

    என்றபாரதியின் வரிகள், வள்ளுவரின் குறள்கள், தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தும் மனிதனை மனித நேயமுள்ள மனிதர்களாக மாற்றக்கூடிய சிந்தனைகளை, கல்லிலே செதுக்கிய சிற்பங்கள் போல, மண்ணிடை உலாவிட விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இவைகளை மனத்திட்பத்தோடு உறுதியாகப் பின்பற்றும் போதும், செயலாற்றும் போதும் தான் மனித வாழ்வு முழுமையடைகிறது. எனவே நாம் அனைத்துச் செய்கைகளிலும் எண்ணித் துணிவதால் எல்லாம் நலமாகும்!

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    சான்றோர் சிந்தனை

    ஆரோக்கியம்

    ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஆனந்தமாக இருப்பார்கள். ஆனந்தமாக இருப்பவர்கள். நிச்சயம் ஆரோக்கியத்தோடு இருந்தே ஆக வேண்டும். இதுதான் ஆனந்த சூத்திரம். உங்கள் வீடு சொர்க்கமாகவும், உலகம் தெய்வீகமாகவும் நீங்கள் உணர்ந்தால் அதுவே நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடையாளம் எனலாம்.

    உடம்பில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு துளி வியர்வையும் நம் உடம்பில் இருக்கும் ரத்த சுத்திகரிப்பின் விளைவு என்றஆங்கிலப் பழமொழி நம் உடம்பைப் பராமரிப்பது என்பது ஆன்மீகத்திற்கு எதிரானது என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நம் மனத்தில் ஆண்டவனை இருத்தினால் நம் உடம்பு தானே அவனுக்கான ஆலயம்.

    புன்னகையும் – உற்சாகமும் இரட்டைப் பிறவிகள். ஒட்டிப்பிறந்த வெற்றியின் சகோதரத்துவ குணங்கள். உற்சாகம் – கடவுள் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையைப் போல. உற்சாகத்தோடு செயல்பட ஆரம்பித்து விட்டாலே அது மற்றவர்களையும் தொற்றிக் கொண்டு ஆரோக்கியமாய் மாற்றி விடும்.

    ஆரோக்கியம் குறைய ஆரம்பித்தால் நோய் உருவாக ஆரம்பிக்கிறது. நோய் திடீர் என்று தோன்றுவது இல்லை. ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வேதனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து எதிர்பாராத நேரத்தில் நோயாக வெடிக்கிறது. ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான மனது தேவை. மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடல் நிச்சயமாக ஆரோக்கியமாக இருக்கும்.

    இயல்புக்கு மாறான இயந்திரத் தனமான வேலை, தூய்மையற்றகாற்று, மாசுபட்ட நீர், இரசாயனம் கலந்த உணவு வகைகள், துரித உணவு வகைகள், இயற்கை சூழலிலே இருந்து முற்றிலும் மாறி ஓடும் நகர வாழ்க்கை, ஒரே மாதிரியான அலுப்பூட்டும் வேலைகள், பூச்சி மருந்துகள் கலந்த தானியங்கள், காய்கறிகள், என்ன செய்தாலும் திருப்தி அடையாத உறவுகள், என்ன நடந்தாலும் திருப்தி அடையாத மனம், தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் புதிய நோய்கள் – இப்படி மனிதன் தன்னுடைய இயல்புக்கு முற்றிலும் மாறான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறான்.

    பலருக்குத் தாங்கள் ஆரோக்கியமாக இல்லை என்ற உண்மையே தெரிவது இல்லை. நோய் என்பது பல நாட்களாக இருக்கும் ஆரோக்கிய கேட்டின் வெளிப்பாடு. நம் உடம்பில் இருக்கும் சக்தியின் அளவு குறையும் போது ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கிறது. இந்த நிலை தொடர்ந்து பல நாட்களாக நீடிக்கும் போது நோய் உண்டாக ஆரம்பிக்கிறது. உங்கள் உற்சாகம் சந்தோசம் குறைய ஆரம்பிக்கிறபோதே உங்கள் ஆரோக்கியத்தை இழக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.

    உடல் நலத்தைக் காக்க ஆரோக்கியமான உணவு தேவை. ஆரோக்கியமான உணவை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

    1.சாத்வீக உணவுகள் என்பது எண்ணெய், காரம், மசாலா, உப்பு

    ஆகியவற்றை மிகக் குறைவாகக் கொண்ட உணவுகள்.

    2.ராஜசீக உணவுகள் என்பது காரம், அதிக எண்ணெய், அதிக உப்பு, அதிக

    மசாலா கொண்டு சமைக்கப்படும் எல்லா உணவுகளும்.

    3.தாமசீக உணவுகள் என்பது அதிகம் வறுக்கப்பட்ட கொழுப்பு அதிகம்

    கொண்ட உணவுகள். எளிதில் கெட்டுப் போகும் உணவுகள். சக்தியில்லாமல் வெறும் சுவைக்காக மட்டும் எடுத்துக் கொள்ளப்படும் உணவு வகைகள்.

    சாத்வீக உணவுகள் உடலையும், மனத்தையும் இரம்மியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டவை. ராஜசீக உணவுகள் பதற்றத்தையும், கோபத்தையும் அதிகப்படுத்தும் தன்மை கொண்டவை. தாமசீக உணவுகள் மந்த தன்மையையும், தூக்கத்தையும் உடல் பருமனை அதிகப்படுத்தும் தன்மையும் கொண்டது. இனிமையான உணர்வையும் இலகுவான பருமன் இல்லாத உடலையும், ஆரோக்கியத்தையும் பெறவிரும்பினால் சாத்வீக உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இதனையே வள்ளுவரும்

    ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

    அற்றது போற்றி உணின்’ என்கிறார்.

    பலனைச் சில நாட்களில் உணர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியமான சுற்றுச்சூழல் தூய்மையான காற்று, மாசுபடாத நீரும் கொண்ட ஒரு அமைதியான சூழல்தான் மனிதன் வாழ்வதற்கு ஏற்றது. அதனால் தான் பண்டைய நாகரீகம் ஆற்றங்கரையினிலே உருவானது.

    ஆரோக்கியமான உறவுகள், ஆரோக்கியமான மனமும், உடலும் அமைந்தவரால் சோம்பி உட்கார முடியாது. சோகமான முகத்தைக் கனவிலும் அவரால் கொண்டு வர எப்போதும் முடியாது. எப்போதும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் மட்டுமே இருக்கமுடியும். மனதில் புண்பட்டு இருப்பவர்கள் மட்டுமே அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்துவார்கள்.

    உங்களுடைய அணுகுமுறைஆரோக்கியமாக இருக்கும் போது ஆரோக்கியமான உறவுகள் தானாக கிடைக்கும். ஆரோக்கியமாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.

    உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருக்கும்போது ஆரோக்கியமான சிந்தனைகள் தோன்றும். ஆரோக்கியமான சிந்தனை உருவாகும்போது ஆரோக்கியமான செயல்கள் உருவாகும்.

    ஆரோக்கியமான செயல்கள் நடைபெறும் போது ஆனந்தமும், தன்னம்பிக்கையும் தொடரும். வானம் வசப்படும்.

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    பார்வையற்றவரின் வார்த்தைகள்

    குமாரைச் சுற்றி எப்போதுமே நண்பர்கள் கூட்டம் இருக்கும். அவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவதிலும், ஊதாரித்தனமாகத் திரிவதிலும் அவனுக்கு அலாதி பிரியம். நண்பர்களுக்காக கண்மண் தெரியாமல் செலவு செய்வான். பெரும்பாலான இரவுகள் குடியும், கும்மாளமாகவே நகரும். அவனது தாய் எவ்வளவு தான் கண்டித்தாலும் அவளை ஒரு பொருட்டாகவே அவன் கருதுவதில்லை.

    கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை பாதி குடும்ப செலவுக்கும், பாதி குமாரின் குடி செலவிற்கும் செலவிடும்படியாகவே குமாரின் தாய்க்கு இருந்தது.

    குடிக்காதடா… ஒழுங்கா வேலைக்கு போடா… என்று குமாரின் தாய் சொல்லும் போதெல்லாம் இப்படி தொனதொனவென்று பேசிகிட்டு இருக்காத, அப்புறம் வீட்டவிட்டு கண்காணாத ஏதாவது ஊருக்கு ஓடிப் போயிடுவேன் என்று சொல்லியே மிரட்டுவான்.

    கணவனை இழந்து தவிக்கும் குமாரின் தாய் மகனையும் இழந்துவிடக் கூடாது என எண்ணி அவன் கேட்கும்போதெல்லாம் வேதனையை மனதில் சுமந்தபடி பணத்தைக் கொடுத்து அனுப்புவாள்.

    இப்படியே நாட்கள் ஓடின…

    ஒருநாள் குமாரின் தாய் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையானாள். போதிய சிகிச்சை பெறாததால் நோயின் தீவிரம் அதிகமாகி ஒரு வாரத்தில் இறந்து போனாள்.

    தாயை இழந்த குமார் பணம் இன்றி அல்லோலப்பட்டான். பணத்தைக் கண்டபடி செலவு செய்தவனுக்கு அப்போதுதான் பணத்தின் அருமையே தெரிய வந்தது. அவனிடம் பணமிருந்த போது அவனைச் சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டமெல்லாம் அவனிடம் பணமில்லை என்றதும் விலகிச் செல்ல ஆரம்பித்தனர்.

    தான் உதவி செய்த நண்பர்களிட மெல்லாம் சென்று அவர்களின் உதவியை நாடினான். ஒவ்வொருவரும் ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி பணம் இல்லை என்று கைவிரித்தனர்.

    பணம் இல்லாத காரணத்தால் தன்னை ஒரு பொருட்டாகவே எண்ணாத நண்பர் களை நினைத்து வேதனையில் வெம்பினான். பணம் இல்லாமல் இனி இந்த உலகில் வாழ்ந்து பயனில்லை என எண்ணி அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்றமுடிவிற்கு வந்தான். கிணற்றைநெருங்கி குதிக்கத் தயாரானான். அதற்குள் யாரோ நடந்துவரும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். அங்கே கண்பார்வையற்ற ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென… கல் தடுக்கி கீழே விழுந்த அந்த நபரை ஓடிச்சென்று தூக்கிவிட்டான் குமார்.

     “ஐயா, நீங்க எங்க போகனும்னு சொல்லுங்க நான் கூட்டிட்டு போயி விட்டுட்டு வரேன்” என்றான் குமார்.

    “வேண்டாம் தம்பி, நான் போக வேண்டிய இடம் பக்கமாகத்தான் இருக்கு. நானே நடந்து போயிடறேன்” என்றார் அந்த பார்வையற்றவர்.

     “ஐயா, நீங்க தடுமாறி தடுமாறி போறீங்களே… என்னோட உதவியோட வந்தா வேகமாகவும், பத்திரமாகவும் நீங்க போக வேண்டிய இடத்துக்கு போயிடலாம்” என்றான் குமார்.

    “தம்பி, நான் தடுமாறியபடி மெதுவா போனாலும் போக வேண்டிய இடத்துக்கு சரியா போய் சேர்ந்திடுவேன். இன்னிக்கு நீங்க என்ன கூட்டிட்டு போயிவிட்டா நாளைக்கு நான் இன்னொருத்தரோட உதவிய நாட ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் ஒவ்வொரு நாளும் நான் யாரையாவது நம்பி வாழுறமாதிரி ஆயிடும். அதனால என்ன விட்டுடுங்க தம்பி, நான் போக வேண்டிய இடத்துக்கு மெதுவா நானே போயி சேந்துடறேன்” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார் அந்த பார்வையற்றவர்.

    “சே… இத்தன நாளா மத்தவங்கள நம்பியே வாழ்ந்துட்டனே. அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டத்த குடுத்துட்டோம். இந்த பார்வையற்றவர் யாரையும் நம்பி வாழாம எவ்வளவு தன்னம்பிக்கையோடு இருக்கிறார். கை கால் எல்லாமே நமக்கு கடவுள் நல்லா படிச்சும், சொந்தமா உழைச்சு வாழாம அம்மாவுக்கு பாரமா இருந்துட்டமே” என்று வருந்தினான்.

    பார்வையற்றவரின் வார்த்தைகளில் உற்சாகமடைந்த குமார், இனிமேல் நல்லபடியா உழைச்சு பணத்த சேமிச்சு வச்சு தன்னை உதரித்தள்ளுன நண்பர்கள் முன்னாடி வாழ்ந்து காட்டனும் என்று உறுதிகொண்டு வேலை தேடி நம்பிக்கையோடு நடைபோட்டான்.

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    சர்க்கரை நோயைக் கட்டுப்படுத் துவதில் கேழ்வரகின் பங்கு

    கேழ்வரகை மாவாகத் திரித்து பல வகையில் உபயோகிக்கின்றனர். ரொட்டி, கூழ், கலி, புட்டு போன்ற உணவு பதார்த்தங்கள் செய்ய பயன்படுகிறது. அரிசி முற்றும் பயறு வகைகளுக்கு மாற்றாக, 50 சதம் வரை கேழ்வரகை பயன்படுத்தினால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் பெருமளவில் கிடைக்கிறது. இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த உணவாகும்.

    கேழ்வரகில் உள்ள சத்துக்கள்

    கேழ்வரகு சத்துகளின் மகத்துவம் எல்லோரும் அறிந்ததே இதன் மூலம் எண்ணில் அடங்கா சத்துகள் கிடைக்கிறது. இதன் மூலம் பல மதிப்பூட்டப்பட்ட ஆரோக்கிய உணவு தயார் செய்யப்படுகிறது. கேழ்வரகில் அதிக கால்சியம், கரையும் நார்ச்சத்து (Soluble Fibre), பாஸ்பரஸ் மற்றும் குறைந்த பூர்த்தியான கொழுப்பு உள்ளது. இதில் உள்ள ஒருவகையான மாவுச்சத்து மலச்சிக்கல்களைத் தவிர்க்க மிகவும் உபயோகப்படுகிறது. அவ்வாரான மாவுச்சத்து முளைகட்டிய (Malted) கேழ்வரகில் அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இது சிறந்த உணவாகும்.

    நகர் வாழ் மக்களிடையே காணப்படும் உணவு பழக்கவழக்கத்தினால் உடல் ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக நீரிழிவு மற்றும் மாரடைப்பு பெரிதும் காணப்படுகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர கேழ்வரகின் பங்கு மிக முக்கியமானதாகும். நீரிழிவு நோயாளியின் இரத்த குளுகோஸின் அளவை கட்டிற்குள் கொண்டுவர கேழ்வரகின் பங்கு இன்றியமையாததாக கருதப்படுகின்றது.

    கேழ்வரகில் உள்ள மாவுசத்தில் அமைலோபெக்டீன் அதிகமாக உள்ளது. இதைத்தவிர பிறமாவுச்சத்துக்களும் (Non-starchy Polysacharides) அதிகமாக உள்ளது. இதனால் செரிமானம் நிதானமாக நடைபெறுகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு விரைவில் உயர்வதில்லை. இதன் காரணமாக நீரிழிவு கட்டுக்குள் வருகிறது.

    கேழ்வரகின்மாவுச்சத்துவகைகள்

    மாவுச்சத்துஅளவு (சதவிகிதத்தில்)

    அமைலோஸ்                           15     16

    அமைலோ பெக்டீன்             84     85

    கரையும் சர்க்கரை                 1       3

    கேழ்வரகில் உள்ள புரதத்தில் குளுட்டலின் எனும் வகையில் புரதம் பெரிதும் காணப்படுகிறது. இதைத்தவிர கந்தகம் உள்ள அமினோ அமிலங்கள் பாலில் உள்ளதற்கு இணையாக காணப்படுகிறது.

    கேழ்வரகில் பூர்த்தியடையாத கொழுப்பும், உடலுக்குத் தேவையான கொழுப்பும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே இது மாரடைப்பைத் தடுக்க தகுதியான உணவாகக் கருதப்படுகிறது.

    செரிமானத்திற்குஉதவும்நார்ச்சத்து

    செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து என்பது செரிமானத்தின் பொழுது, முழுமையாக செரிமானமாகாத ஒரு வகையான மாவுச்சத்தாகும். இவை இரண்டு வகைப்படும்.

    1. கரையும் தன்மையுடையது

    2. கரையா தன்மையுடையது

    கெமிசெல்லுலோஸ், பெக்டீன், பசை போன்றவை கரையும் தன்மையுடையது. லிக்னின், செல்லுலோஸ் போன்றவை கரையாத்தன்மையுடையது. இவ்வகையான செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்துகள், காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், வெந்தயம் போன்றவற்றில் உள்ளவை கரையும் தன்மையுடையது. தானியங்களில் உள்ளது கரையா தன்மையுடையது. இவ்வகையான செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்துக்களை உட்கொண்டால் இரத்தத்தின் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. இது மலச்சிக்கலையும் குறைக்கும். இது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் பருமன், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்றநோய்களை கட்டுக்குள் வைக்கப் பயன்படுகிறது. ஒருவரின் சராசரி உணவில் 25 லிருந்து 38 கிராம் வரை செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து இருத்தல் அவசியமாகும். அதிக நார்ச்சத்து, குறைந்த சக்தி, குறைந்த கிளைசிமிக் இன்டக்ஸ் உள்ள உணவு வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

    செரிமானத்திற்குஉதவும்நார்ச்சத்தும்சர்க்கரைநோயும்

    கேழ்வரகில் செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து 18.6 கிராம்  100 கிராம் என்ற அளவில் காணப்படுகிறது. இந்த அளவு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைக்க போதுமான அளவாகும். இவ்வாறான நார்ச்சத்து குளுக்கோஸ் உறிஞ்சும் மற்றும் பரவும் தன்மையை குறைப்பதன் மூலம் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.

    அரிசி போன்ற உணவுகளை உட்கொள்ளும்போது இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை உடனே உயர்த்துகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகமாகிறது. ஆனால் கேழ்வரகு போன்ற உணவினை உட்கொள்ளும்போது இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு உடனே உயர்வதில்லை. இதன் காரணமாக இன்சுலின் அளவு குறைகிறது. முடிவில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வருகிறது. மேலும் இன்சுலின் சார்ந்த நீரிழிவு குறைபாடு உள்ளவர்களின் இன்சுலின் தேவை பல மடங்கு குறைகிறது.

    இவ்வாறு சீரும் சிறப்பும் மிக்க கேழ்வரகினை உட்கொண்டால் நீரிழிவு நோயின் பாதிப்பு குறைவு என்பது திண்ணம்.

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    என் பள்ளி

    கு. பாலமுருகன்

    PAMZ 3D DESIGNS

    டோக்கியோ, ஜப்பான்

    எழில் கொஞ்சும் பவானிசாகர் அணைக்கு அருகிலுள்ள ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில் தாசப்பகவுண்டன் புதூரில் தான் நான் பிறந்தேன். எங்களின் குடும்பத்தொழில் நெசவு செய்வது. என் தந்தை குணசேகரன், தாய் நாகமணி, மனைவி திவ்யா, மகள் ஐஸ்வர்யா, தம்பி ஆனந்தகுமார். இதுதான் என் குடும்பம்.

    இருபது வருடங்கள் சென்றுவிட்டன. இருந்தாலும் என் பள்ளி வாழ்க்கை ஒரு வடுவாக என் கண்முன்னே தெரிகிறது. தார்சாலையே இல்லாத பகுதியில் தான் என் பள்ளி. நெ.4, வீரபாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. மழை பெய்தால் அந்த ரோட்டில் நடக்கவே சிரமமாக இருக்கும். ஆனால் ஒருநாளும் பள்ளிக்கு விடுமுறை எடுத்ததே கிடையாது.

    அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டாக்டர். இராமகிருஷ்ணன். மிகுந்த கோபக்காரர். எந்நேரமும் கையில் பிரம்புடன் தான் இருப்பார். எனக்கு மட்டுமில்லை. இங்கு படிக்கும் அனைவருக்கும் அவரைக் கண்டால் மிகுந்த பயம். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்று சொல்வார்கள்.

    எனக்கு தமிழ் பாடத்தின் மீது மிகுந்த ஆர்வம். பள்ளியில் மாதம் ஒருமுறைமாவட்ட அளவில் தமிழ் மன்றம் வைப்பார்கள். தொடர்ந்து மூன்று முறைமுதல் பரிசு வாங்கி இருக்கிறேன். இதனால் பள்ளி ஆசிரியர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும். எனது ஆங்கில ஆசிரியர் திருமதி. காளியம்மாள் பாடத்தை நடத்தும் விதம் மிகவும் எளிமையாக இருக்கும்.வகுப்பில் எங்கள் அனைவரையும் ஆங்கிலத்தில் பேச வைப்பார். தவறுகளை உடனுக்குடனே, அந்தந்த இடத்திலே திருத்தும் ஆற்றல் கொண்டவர். அந்த விதத்தில் அவரை எனது முன்னோடியாக வைத்திருக்கிறேன்.

    நான் 10ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்தேன். அப்பொழுது டாக்டர் ஜெயவர்த்தனன் அருகில் மிகப்பெரிய மருத்துவமனை நடத்திவந்தார். அவரின் கையால் பரிசு வாங்கினேன். இது எனது பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருந்தது.

    நானும், என் தம்பியும் படித்ததால் எங்களின் பொருளாதாரத்தில் நெருக்கடி நிலை வந்தது. பள்ளியில் முதல் மாணவனாக தேர்வு பெற்றாலும், கல்வியை  தொடர முடியாத நிலை. நான் நன்றாக படித்து பல பரிசுகளை வாங்கியதால், என் தம்பி தனது கல்விப்படிப்பை நிறுத்திக்கொண்டு எனக்காகவும் சேர்த்து வேலை செல்வதாக சொன்னான். நானும், ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்பதைப் போல குடும்பத்தின் கஷ்ட நிலையையும், தம்பியின் தியாக உணர்வையும் பார்த்து எனது கவனம் முழுவதையும் படிப்பிலேயே செலுத்தினேன்.

    மேற்படிப்பைத் தொழிற்படிப்பாக படிக்க வேண்டும் என்று விரும்பி ‘ராமகிருஷ்ணா வித்யாலயா’ கல்லூரியில் டிப்ளமோ படித்தேன். என் மதிப்பெண் என் மதிப்பைக் கூட்டியது. குறைந்த பணத்தில் படித்தேன். டிப்ளமோ முடித்ததும் மேற்படிப்பான இன்ஜினியரிங் படிப்பை கோவை ஜி.சி.டி. தொழில்நுட்ப கல்லூரியில் படித்தேன். இதற்கு பணம் அதிகம் தேவைப்பட்டது. அந்நேரத்தில் தான் எனது தாய்க்கு விபத்து ஒன்று ஏற்பட்டது. அதற்கும் ஒரு லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. கஷ்டப்படும் பொழுது எவர் முன்நின்று உதவி செய்கிறார்களோ, அவர்களே உண்மையான நண்பர்கள். என்னுடைய கஷ்டத்திற்கும் தோள் கொடுக்க எனது கல்லூரி நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவி செய்தனர். பிறகு குடும்ப சூழ்நிலையின் காரணமாக, பகுதி நேர வேலைக்கும் சென்றேன். நிறைய நாட்கள் இரவு நேரங்களில் உண்ணாமலும், தூக்கமில்லாமலும் இருந்திருக்கிறேன். கல்லூரியிலும் கூட தூங்கியிருக்கிறேன்.

    எனக்கும், என் நண்பர் உதயகுமாருக்கும் இடையே ‘இலட்சியப் போட்டி’ ஒன்றை எப்பொழுதும் வைத்துக் கொள்வோம். அதாவது, இந்த நாளுக்குள், இந்த நேரத்திற்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என்று போட்டி வைத்துக் கொள்வோம்.

    பி.இ. முடித்தவுடன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதுபோலவே 2004ம் ஆண்டு ஜப்பானில் ஒரு நிறுவனத்தில் ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். ஆனால் ஜப்பான் செல்ல வேண்டும் என்றால் நிறைய பணம் தேவைப்படும். அப்பொழுதும் என் நண்பர்கள் தான் உதவிக்கரம் நீட்டினார்கள். ஊர் மணியக்காரர் மிகுந்த உதவி செய்தார்.

    அதன் பின்னர் ஜப்பானிற்கு வேலைக்குச் சென்றேன். ஜப்பானியர்கள் அதீத உழைப்பாளிகள். அவர்களுக்கு இணையாக வளர வேண்டும் என்றால் அதிகமாக உழைக்க வேண்டும். எனது அடுத்த லட்சியமாக எனது மனதில் அதை நிறுத்திக்கொண்டேன். எனது கடின உழைப்பை பார்த்து வியந்த ஜப்பானிய செய்தித்தாள் என் புகைப்படத்தையும், செய்தித் தொகுப்பையும் வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியது.

    இப்பொழுது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ‘PAMZ 3D DESIGNS’ என்ற மல்டிமீடியா, கிராஃபிக் டிசைனிங் நிறுவனத்தை சொந்தமாகத் தொடங்கி நடத்தி வருகிறேன். எங்கள் நிறுவனத்தில் ஜப்பானிய நிறுவனங்களே போட்டி போட்டு ஆர்டர்களைக் குவித்து  வருகிறது. என்ன தான் வெளிநாட்டில் இருந்தாலும் தமிழர்கள் மீதுள்ள பற்றுதல் காரணமாக பல தமிழக இளைஞர்களை இந்த நிறுவனத்தில் பணியில் அமர்த்தியுள்ளேன். தமிழனான எனக்கு இதைவிட பெருமை வேறில்லை என்று சொல்லும் திரு. பாலமுருகன் அவர்கள் “தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!” என்று நிமிர்ந்து நின்று சொல்கிறார்.

     “தேடுதலும் கடின உழைப்புமே… வெற்றிக்கு தாராக மந்திரம்”

                                      நன்றி – திரு. ந. ரமேஷ்

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    தயாராகுதல்

    அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்-1

    இரண்டு நண்பர்கள் மரம் வெட்ட காட்டிற்கு போனார்கள். ஒருவர் போனதும் மரத்தை வெட்ட ஆரம்பித்தார். இன்னொருவர் அதோ இதோ  என்று போக்கு காட்டிக்கொண்டிருந் தார். முதலாமவர் பாதி மரத்தை வெட்டிய பிறகு இரண்டாமவரைப் பார்த்து ‘என்ன இன்னும் வெட்டவே ஆரம்பிக்கவில்லையே, பொழுது போய்விடும் போ’ என்றார். ஆனால் இரண்டா மவர் கோடாறியை எடுத்தார். ஒரே போடாய் மரத்தை வெட்டி சாய்த்தார். முதலாமவர் அசந்து போனார். “எப்படி இதைச் செய்தாய் என்று அதிசயமாகக் கேட்டார்.” இரண்டா மவர் சொன்னார், நீ வெட்டிக் கொண்டிருந்த  நேரத்தில் நான் என் கோடாறியைக் கூர் தீட்டினேன் . அப்போதுதான்  முதலாமவர் தன் புத்தியைத் தீட்டாதது புரிந்தது. அன்பு நண்பர்களே! ஐந்தறிவு புலி கூட பாய்வதற்கு முன் பதுங்கித் தயாராகிறது. ஓரறிவு இலவம் பஞ்சு மரம் பூத்து காய்ப்பதற்கு முன் தன் இலைகள் முழுவதையும் உதிர்த்துவிடுகிறது. இரைக்காக மானை விரட்டும் சிறுத்தை கூட மானை நன்றாக ஓடவிட்டுதான் பின்னர் ஒரேபோடாக சாய்க்கிறது. பகல் முழுக்க ஓடும் டவுன் பஸ் கூட இரவில் பழுது பார்த்தால்தான் அடுத்த நாள் ஓட்ட முடிகிறது. ஒரு வீடு கட்ட வேண்டுமாயின் அதன் வரைபடம் தயாராக வேண்டும். ஒரு புத்தகம் எழுத வேண்டு மென்றால் அது நம் சிந்தனையில் கருகொள்ள வேண்டுமல்லவா? அதே புத்தகத்தைப் படிக்க வேண்டுமாயின் அதற்கான முன்னுரையை முதலில் படிக்க வேண்டுமல்லவா? ஆக, எந்த ஒரு செயலைச் செய்வதாக இருப்பினும் அதற்கு நாம் தயாராக வேண்டும் என்பது தெரிகிறதுதானே?

    ஒவ்வொரு நாளும்  நாம் வெற்றிக ரமாகச் செயலாற்ற வேண்டுமாயின், நாம் ஒவ்வொரு நாளும் அதற்கான தயாரிப்பைச் செய்ய வேண்டும். “எனக்கெங்கே அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது? என் அன்றாட வேலை பளுவே எனக்குப் பெரும் சுமையாக இருக்கிறது.

    இதில் நான் தயாராவதற்கு எங்கே போவேன்” என்று நீங்கள் கூறுவது புரிகிறது. உண்மையில் நாம் நம்மைத் தயார் படுத்தாமல் செய்யும் ஒவ்வொரு நாளின்  10 முதல் 14 மணி உழைப்பு நேரங்களின் உண்மையான உற்பத்தித் திறன் (Productivity) வெறும் நான்கு அல்லது ஐந்து மணி நேரமாகத்தான் இருக்கும். ஆனால், அதுவே நாம் நம்மைத் தரமாகத் தயார்படுத்தி செயல்படும்போது  நம் உழைப்பு நேரத்தின் உற்பத்தி திறனானது இரு மடங்காக அதாவது 10 மணி நேரமாக ஆகும் என்றால் நாம் நம்மை முறையாக தயார் படுத்திக்கொள்வோமல்லவா?

    சரி, நாம் நம்மை தயார் செய்து கொள்ள நேரத்தை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்பது  நம் அடுத்த கேள்வியாக இருக்கிறதா? நாம் தயாராகாமல் செய்த முந்தைய நாளின் வேலை பாரத்தால் நாம் இன்றைய காலைப் பொழுதை ஓய்வு என்ற பெயரில் சற்று கூடுதலாகத் தூங்கித்தான் கழிப்போம். ஆகவே, நாம் முறையாகத் தயாராகி செயல்படுவோமேயாயின் நம் உற்பத்தி திறனால் நாம் விரைவாகச் செயல் முடிப்போம். ஆகையால், நமக்கு போதிய ஓய்வு கிடைப்பதால் மறுநாள் காலையில் முன்னதாக எழ முடியும். நாம் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் உழைக்க வேண்டுமாயின் நாம் குறைந்தது இரண்டு மணி நேரமாவது நம்மைத் தயார்படுத்த வேண்டியிருக்கும். “ஆஹா! காலையில் இரண்டு மணி நேரமா? அப்படியெல்லாம் காலையில் ஹாயாக கால் ஆட்டிக்கொண்டு இருக்க நாங்கள் ஒன்றும் வேலையற்று இல்லை’ என்று நீங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது. நீங்கள் காலை எழுந்தவுடன் சுடுநீரைக் காலில் ஊற்றிக்கொண்டு பறப்பதுபோல் நீங்கள் பரபரப்பாக வேலைக்குத் தயாராவது எனக்கும் தெரியும். இருப்பினும் நான் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்து கேட்பீர்களேயாயின் நீங்களும் என்னைப்  போல் தரமாகத் தயாராகி பின்னர் தரமாக செயலாக்கமும் செய்து ஒவ்வொரு நாளும் ஆனந்தமாகவும் வெற்றிகரமாகவும் வாழ முடியும். அதாவது ஒவ்வொரு நாளும் நாம் ஆரோக்கியமாக வாழத் தயார் செய்து கொண்டால் நாம் தரமாகச் செயல்பட முடியும். ஆக, நாம் தயாராவதற்கு காரணமும் நேரமும் கண்டுபிடித்தாயிற்று. அடுத்து நாம் எப்படித் தயாராவது? அது பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

    ஒவ்வொருநாளும்நாம்சிறப்பாகச்செயலாற்ற

    வேண்டுமாயின்நாம்

    ஒவ்வொருகாலையும்நம்மைநாம்தரமாகத்

    தயார்படுத்தவேண்டும்

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

    நம்பிக்கை!

    ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தார். அந்தக் குதிரையும், ஆடும் மிகச்சிறந்த நண்பர்களாகவே வாழ்ந்து வந்தன.

    ஒருநாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்.

    மருத்துவர் அந்தக் குதிரையின் நிலையைப் பார்த்து, “மூன்று நாட்களுக்கு நான் மருந்து தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதைக் கொன்றுவிட வேண்டியது தான்” என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச் சென்றார்.

    இவர்கள் இருவரின் உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டு இருந்தது.

    விவசாயியும் அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தார். அப்போதும் குதிரை எழுந்திருக்கவில்லை.

    மறுநாள் வந்த மருத்துவர், குதிரையைப் பார்த்துவிட்டு அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தார் அந்த விவசாயி. அப்போதும் அந்தக் குதிரை எழவில்லை.

    சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஆடு, அந்தக் குதிரையிடம், “நண்பா, நீ எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்காவிட்டால் அவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று கூறி குதிரை எழுவதற்காக ஊக்குவித்தது.

    மூன்றாம் நாளும் மருத்துவர் வந்தார். அவர் குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசா யியிடம், “நாளை குதிரை நடக்கவில்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட் டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் நோய் பரவிவிடும்” என்று சொல்லிவிட்டு சென்றார்.

    இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆடு, மருத்துவர் சென்றதும், குதிரையிடம் வந்து, “நண்பா, எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது. அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக அந்தப் பக்கம் வந்த விவசாயி அசந்து போகும்படியாக குதிரை ஓடியது.

    மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்துவந்து குதிரையைக் காண்பித்தார். அவன் மருத்துவரிடம், “என் குதிரை நன்றாக குணமடைந்துவிட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கிவிட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த மருந்து தான் காரணம். என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த ஆட்டை வெட்டி பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம்” என்றான்.

    குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று விவசாயி நினைத்தான். இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது என்பதை உணராமல், பலரும் உண்மையைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சில நேரங்களில் உண்மை தான் பலியாகிறது…

    நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டு இருந்தன. மெலிதாய் காற்று வீசிக்கொண்டு இருந்தது. காற்றைக் கண்டதும் ‘அமைதி’ என்றமுதல் மெழுகுவர்த்தி ‘ஐயோ, காற்று வீசுகின்றது. நான் அணைந்து விடுவேன்’ என்று மிகவும் பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

    ‘அன்பு’ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் ‘காற்றைஎதிர்க்க முடியாது’ என்று அதுவும் அணைந்துவிட்டது.

    ‘அறிவு’ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்று வீசிய சில நொடிகளில் அணைந்துவிட்டது.

    நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறைக்குள் ஒரு சிறுவன் நுழைந்தான். ‘அடடா, மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே’ என்று கவலையுடன் சொன் னான். அதற்கு எரிந்து கொண்டிருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது, ‘வருத்தப்படாதே, நான் இருக்கிறேன். என்னை வைத்து மற்றமூன்றையும் பற்றவைத்துக்கொள்’ என்றது.

    சிறுவன் அந்த மெழுகுவர்த்தியிடம் ‘உன் பெயர் என்ன?’ எனக் கேட்டான்.

    “நம்பிக்கை!” என்றது அந்த மெழுகுவர்த்தி.

    ஆம்… நாம் எப்போதும் நம் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால் எந்த பிரச்சனைகளையும் சந்தித்து சாதித்து வெளிவரலாம்.

    இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click