உலகில் அரிதாகிய பிறவியினைப் பெற்றவர்கள் மனிதர்களே. ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் செயல்படும் ஆற்றல் இருக்கிறது. இவர்களில் மனிதனிடம் மட்டுமே சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் இருக்கிறது.
இந்த ஆற்றலை எவ்வாறு கண்டு உணர்ந்தனர் என்றால் ஏன்?… எப்படி?… எதனால்?… யாரால்?… என்ற கேள்விகளினால் விளைந்த சிந்தனையின் ஆற்றலில் தான் என்றால் அது மிகையாகாது. கேள்விகளின் விளைவால் தோன்றிய, எண்ணிச் செயல்படுத்தும் ஆற்றலின் மகத்துவத்தை ஈண்டு காண்போம்.
கேள்விகளின் தொடக்கம்:
கற்கால மனிதன் இன்று நிகழ்கால நவீன யுகம் வரை பரிணாம வளர்ச்சியின் விளைவாக, இயற்கையின் பேராற்றல் மகிமையினை மனிதன் உணரத் தொடங்கிய வேளையில், அறிவியலின் ஆற்றல்களை, மனிதன் ஆய்ந்து அறிந்து நடைமுறைப்படுத்தத் தலைப்பட்ட வேளையில் கேள்விகள் பிறந்தன.
கேள்விகளுக்கான விடைகளை அறிவியல் மூலமாக, ஆன்மீகம் மூலமாக அறிந்ததன் விளைவு தான் இன்றைய நவீன உலகம். ஆடம்பர வாழ்க்கையோடு, விண்ணிலும் மண்ணிலும் வியத்தகு அறிவியல் வினோதங்களாக, வியப்புகளாகக் கண்கூடாகக் கண்டு, களித்து வாழ்ந்து வருகின்றோம்.
கேள்வி ஞானத்தின் விளைவாக, கல்வியின் மீது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, வானொலி, தொலைக்காட்சி, கைபேசி, கணினிகள், நவீன இயந்திரங்கள், விண்முட்டும் கட்டிடங்கள், தொலைத்தொடர்பு வசதிகள், விண்ணிலே நிறைந்துள்ள விண்கோள்களின் அற்புதங்களை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உலகம் அறிந்து கொள்கின்றவாய்ப்புக்கள், அனைத்துத் துறைகளிலும் விரிந்து பரவிக் கிடப்பதனால் அதீத வளர்ச்சியடைந்துள்ளது உலகம்.
எண்ணத்தின்ஆற்றல்:
“உன்னையே நீ அறிவாய்!”, “ஆயிரம் இளைஞர்களை என்னிடம் கொடுங்கள், உலகையே மாற்றிக் காட்டுகிறேன்!” என்று சூலுரைத்த ஞானி விவேகானந்தரின் மந்திர வார்த்தைகள், எழுந்து நில்! தைரியமாக இரு! வலிமையுடன் இரு! உன் விதியைப் படைப்பவன் நீயே! இந்த வார்த்தைகளெல்லாம் சாதாரணமான வார்த்தைகளல்ல! வியத்தகு உலகின் சாதனைகளுக்கெல்லாம் அடித்தளமான அற்புத வார்த்தைகள் இவை என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர்களின் வெற்றி முழக்கங்களாகும் “எண்ணங்களின் வலிமையே செயலாக்கத்தின் ஆணிவேர்!” என்றஇனிய சொற்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
எந்த ஒரு செயலையும் திட்டமிடுதல் வேண்டும். திட்டமிட்டபடி செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தும் புதிய புதிய வழிகளைத் தானாகவோ, பிறரது அனுபவ மொழிகளால் கேட்டு, உணர்ந்து, பின்பற்றும்முறைமூலமாகவோ சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தும் திறனில் உள்ள வாய்ப்புக்கள், சூழ்நிலைகள் அனைத்தையும் ஆய்ந்து முடிவெடுத்துச் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
செயல்படுத்துவதில் உள்ள தடைகள் என்ன? அவற்றைஎவ்விதம் களைவது? இதற்கான வழிகளைச் சிந்தித்து தடைகளைத் தகர்த்தெரியும் போது குறிக்கோளை நோக்கிய பயணம் எளிதாக சிறப்பாக அமையும். அப்போது தான் வெற்றிக்கனியைப் பறித்துச் சுவைக்க முடியும். இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை,
“எண்ணித் துணிக கருமம்துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு!” (குறள் 467)
என்கிறார். மேலும்,
“அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்” (குறள் 461)
என்றும் வலியுறுத்திக் கூறுகின்றார்.
வெற்றிவாசல்களின்அடிச்சுவடுகள்:
“வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்”
என்றகவிஞர் கண்ணதாசனின் வைர வரிகள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையின் தேவையை வலியுறுத்துகின்றன.
“பொருள் கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச்செயல்” (குறள் 675)
என்றகுறள் மூலம் ஒரு செயலைச் செய்யுமிடத்துப் பொருள், கருவி, காலம், செயல், இடம் ஆகிய இவ்வைந்தையும் அய்யமுறஆய்ந்து செய்தல் வேண்டும் என வலியுறத்திக் கூறுகின்றார்.
ஒவ்வொரு செயல்பாடுகளிலும் திட்டமிடுதல், பரிசீலித்தல், செயல்படுத்துதல் என்றபல்வேறு வகையான வழிமுறைகளைச் சிந்தித்துச் சரியான முறையில் செயல்படுத்தும் போது, வெற்றி என்பது நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டிய செய்தியாகும்.
“மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்”
என வேண்டுகின்றார் பைந்தமிழ்ப் புலவன் பாரதி.
“என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
வரும் இன்ப நிலைவெகு தூரமில்லை!”
என்று பட்டுக்கோட்டையார் தன்னம்பிக்கைக்கு உரமூட்டுகின்றார்.
“திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்”
என்றபாரதியின் வரிகள், வள்ளுவரின் குறள்கள், தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தும் மனிதனை மனித நேயமுள்ள மனிதர்களாக மாற்றக்கூடிய சிந்தனைகளை, கல்லிலே செதுக்கிய சிற்பங்கள் போல, மண்ணிடை உலாவிட விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இவைகளை மனத்திட்பத்தோடு உறுதியாகப் பின்பற்றும் போதும், செயலாற்றும் போதும் தான் மனித வாழ்வு முழுமையடைகிறது. எனவே நாம் அனைத்துச் செய்கைகளிலும் எண்ணித் துணிவதால் எல்லாம் நலமாகும்!
இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click