– 2013 – July | தன்னம்பிக்கை

Home » 2013 » July (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

    7.தினம் தினம் தியானம்

    நம் தரமான உணவைத் தரமாக செரிக்கும்படி பார்த்துக் கொண்டால் நமக்கு திடப்
    பொருளிருந்து சக்தி கிடைக்கும். நாம் நம் தாகம் மற்றும் உடல் குளியலை சரியாக பார்த்துக்
    கொண்டால் நமக்கு நீரிருந்து ஆற்றல் கிடைக்கும்.

    Continue Reading »

    அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

    6. பிரணயாமம்

    யோக முறையில் மூச்சு பயிற்சியையே பிராணயாமம் என்று குறிப்பிடுவர்.
    பிராணயாமத்தில் முக்கியமான ஒன்று யாதெனில் நாம் நம் மூச்சை கவனிக்க வேண்டும். அப்படி
    மூச்சை விழிப்புணர்வோடு கவனிக்கும் போதுதான் நாம் இதுவரை சுவாசம் என்று ஏதோ
    செய்து வந்துள்ளோம் என்ற உண்மை புரியும்.

    Continue Reading »

    அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

    5. எளியமுறை உடற்பயிற்சி

    அன்பு நண்பர்களே! நாம் ஒரே மாதிரியோ அல்லது பல விதமாகவோ, இலகுவாகவோ
    அல்லது கடுமையாகவோ உழைத்தாலும் நாம் கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.காரணம் உடற்பயிற்சிதான் நம் உடன் அனைத்து பாகங்களையும் ஒழுங்கிற்கு கொண்டுவந்து இரத்தம், காற்று, சத்து மற்றும் ச க் தி ய ப் ப ய ச் ச ய் து உ ட ல.புத்துணர்வாக்குகிறது.

    Continue Reading »

    வேகமாய் வருகிறது வெற்றி

    வெற்றி பெறுதலுக்கான வழிமுறைகளாக நல்லவராக இருத்தல், தகுதிகளை திறமைகளை கூர்மைப்படுத்திக் கொள்ளல், அதன்பின் சரியான திட்டமிடுதல் என்று நமது பண்பு நலன்களை சீரமைத்துக் கொள்ளல் அவசியம் எனக் கண்டோம்.
    அடுத்தது திட்டமிட்டதை நிறைவேற்ற சீரான உழைப்பு. இதில் தான் பலபேர் கோட்டைவிட்டுவிடுகிறார்கள். அவர்கள் கற்பனை வானில் வண்ணக் கனவு காண்பவர்கள். எழுந்ததும் கலைந்து போவது இரவு கண்ட கனவு. அதுபோல நமது திட்டமிடுதல் ஆகிவிடக் கூடாது.
    திட்டம் என்பது நினைவுச் சித்திரம்; கனவுக்கோலம்; அதனை மெய்யாக்கிக்காட்டி உண்மை உருவகமாய் நிலைபெறச் செய்ய கடின உழைப்பு தேவை. கடின உழைப்பு என்பது கடினமானது அல்ல. இந்த வாக்கியம் உங்களுக்கு விநோதமாக தோன்றுகிறதா? கடின உழைப்பு என்று சொல்லிவிட்டு அது கடினமானது இல்லையோ, அதுபோல தொழிலகத்தில் கடின உழைப்பை கொட்டுதலும் கடினமானது அல்ல. உழைப்பு கடினமானதாக சளைக்காத உழைப்பாக இருக்க வேண்டும். ஆனால் அதை மேற்கொள்ளுதல் கடினமானதல்ல. அது தினசரி உழைப்பாக இடைவிடாத உழைப்பாக மாறிவிட்டால் எளிமையானதாகிவிடும்.
    ‘A Fool and His Money are Soon Parted’ என்பார்கள். ஒரு முட்டாளின் கையில் கிடைக்கும் பணம் விரைவில் போய்விடும். நல்லறிவு படைத்தவன் நல்லதொரு உழைப்பாளியாக இருப்பான். அறிவாற்றலில் மேம்பட்டவன் உழைப்புக்கு அஞ்சமாட்டான். அறிவும் உழைப்பும் இரு கண்கள் போன்றவை.
    ‘நீ உழைக்கும்போது நூறு ஆண்டுகள் வாழப் போகிறேன் என்ற நம்பிக்கையோடு உழைக்க வேண்டும்’ என்கிறார் பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் ‘வெற்றி என்பது 98 சதவிகிதம் வியர்வை சிந்தி உழைப்பதிலும் 2 சதவிதிதம் செயலை மட்டும் முடிக்க வேண்டும் என்ற ஊக்கத்திலும் தான் இருக்கிறது என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.
    வயதான தந்தைக்கு மூன்று மக்கள். உழைத்து பல லட்சம் சொத்துக்கு உரிமையாளர் ஆனார். அவரது கடைசி காலத்தில் தனது மூன்று மகன்களையும் அழைத்தார். ‘எனது நிலத்தில் பொற்கலத்தில் நிறைய தங்கக் காசுகள் வைத்திருக்கிறேன். நிலத்தைத் தோண்டி, உழுது பார்த்து, கிளறிப் பார்த்து தேடிய போதும் பொக்கிஷம் ஒன்றும் கிடைத்தபாடில்லை. உழுத நிலத்தை மென்மேலும் பதப்படுத்தி விதை விதைத்து பயிர்செய்து விடுவோம் என்று உழைப்பில் இறங்கினர். மூன்று ஆண்டுகளில் ஏராளமான சொத்து சேர்த்து பணக்காரர் ஆகிவிட்டனர். பழைய கதைதான். ஆனால் அதுதரும் படிப்பினை இன்றைய வாழ்வுக்கும் பொருந்துவது போல இருக்கிறது அல்லவா?
    ‘கடின உழைப்புக்கு இணை ஏதும் இல்லை’ என்ற வாசகம் இதைத்தானே அறிவுறுத்துகிறது. உழைப்பு, உழைப்பு, இடைவிடாத உழைப்பு என்று பாடுபடுவோர் எதையும் சாதிக்க இயலும். செல்வம் குவியும். வளம் நிறையும் வெற்றிகள் தேடி வரும். உறவுகள் பெருகும். மதிப்பு உயரும். நடப்பன எல்லாம் நல்லவை ஆக இருக்கும்.
    இந்த உழைப்பு தினசரி உழைப்பாக இருக்கட்டும். இன்று உழைப்பது நாளை தூங்குவது என்றிருக்கக் கூடாது. திட்டமிட்ட உழைப்பாக இருக்க வேண்டும். செக்குமாடு சுற்றிவருவது போல பயனற்ற உழைப்பாக இருக்கக்கூடாது. இடைவிடாத உழைப்பாக இருக்க வேண்டும். தோல்விகள், சறுக்கல்கள் வரும்போது உழைப்பை பாதியிலேயே நிறுத்திவிடக் கூடாது. இலட்சிய நோக்குடைய உழைப்பாக இருக்க வேண்டும். ‘எதற்காக உழைக்கிறோம்; எதனை அடைய உழைக்கிறோம்’ என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும்.
    அரசாங்கப் பணியாக இருப்பினும் தனியார் நிறுவனப் பணியாக இருப்பினும் சுயதொழிலாக இருப்பினும் உழைப்பு நேர்மையானதாகவும், தெளிவானதாகவும், நம்முடைய உயர்வுக்கும் பிற்காலத்தில் வழிவகுக்கக் கூடியதாகவும்’ இருக்க வேண்டும். நிர்வாகத்துக்காக உழைத்தாலும் நமக்கு நல்ல பெயர் வரவேண்டும்; நாளை பதவி உயர்வு என்று வரும்போது நம்மை அவர்கள் எடைபோட்டு பார்க்க உதவுவதாக இருக்க வேண்டும். இது சுயநலமானதாக தோன்றுகின்றதா? பரவாயில்லை. நிர்வாகத்தின் வளர்ச்சியையும் தனது வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே சீரான உழைப்பை நல்குங்கள். வெற்றி வரும்.
    ‘வேலை செய்தாலும் வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் வரும்’ என்ற நிலைமை சில அலுவலகங்களில் இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் சிலர் ஒழுங்காக வேலை பார்ப்பவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் அங்கும் சிலர் கடினமாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். உரிய நேரத்தில் பணிக்கு வருவார்கள்.
    கண்காணிப்பவர் இல்லாவிட்டடாலும் தனது கடமையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தே தீரும். உரிய நேரத்தில் அவர்களுக்கு பதவி உயர்வு தானே வரும். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தனது பணியைச் செவ்வனே செய்வோர்க்கு காலம் தனது பரிசுகளை தரத் தயங்காது. இதைத்தான் மகாகவி பாரதி,

    திண்ணிய நெஞ்சம் வேண்டும்
    தெளிந்தநல் லறிவு வேண்டும்
    எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவே எண்ணல் வேண்டும்

    என்று வலியுறுத்தினார். நாம் எதைச் செய்ய நினைத்தோமோ அதைச்செய்து முடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் எதைச்செய்ய நினைக்கிறீர்களோ அது நல்லதாக, அனைவருக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். நல்லது செய்ய நினைத்து உழைப்பைக் கொட்டினால் அது வெற்றி தரும். கெட்டது செய்ய நினைத்து உழைப்பைக் கொட்டினால் வேதனை தான் வரும். எனவே நல்ல இலட்சியங்களை மனதிற்கொண்டு கடின உழைப்பை நல்கினால் வாழ்வு பூந்தோட்டமாகும்.

    இந்தியா ஆரோக்கியமாக இருக்கிறதா?

    பொதுவாக மனிதர்களுக்கு 50 வயதுக்கு மேல் தான் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும். ஆனால் இன்று ஆரோக்கியமற்ற பழக்கங்களால் 30 வயதிலேயே உடல்நலக் குறைபாட்டால் அவதியுறும் நிலை ஏற்பட்டுவிட்டது. இன்று ஆரோக்கியமாக இருப்பது என்பது பெரிய சவாலாகவே மாறிவிட்டது. காரணம் இளம் தலைமுறையினரின் மாறிவிட்ட வாழ்க்கை முறை.
    மாறிவிட்ட இந்தியர்களின் வாழ்க்கைமுறை 60 வயதுக்கு மேல் ஏற்படும் மாரடைப்பு 30 வயதில் இளம் மாரடைப்பு ஏற்படக் காரணமாகிவிட்டது. இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மாரடைப்பால் ஏற்படக்கூடியது என்பதில் இருந்து மாறி 20 – 30 வயதில் ஏற்படும் இளம் மாரடைப்பு என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடிய அபாயம் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
    இதற்கான காரணங்கள் என்று பார்க்கும்போது மாறிவிட்ட உணவுப்பழக்கம், அதிகரித்துவிட்ட பணிச்சுமை, பரபரப்பான வாழ்க்கை முறை, மனஅழுத்தம் என்று பல பிரச்சனைகளைக் கூறலாம். இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை முடக்கிப்போடும் மேற்கூறிய பிரச்சனைகளை ஒவ்வொன்றாகப் அலசுவோம்.

    ராஜசேகர், வயது 27, நிதி நிறுவனம் ஒன்றில் ரிசர்ச் அனலிஸ்ட். அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை கழுத்துவலி. தலையைத் தூக்க முடியாத அளவிற்கு வலி இருக்கக் காரணம் அவரது வேலைச் சூழல். நாற்காலியில் அமர்ந்து கொண்டு பல்வேறு உயரங்களில் உள்ள டி.வி மானிட்டர்களைப் பார்த்து , தகவல்களை சேகரித்து கணினியில் பதியப்படும் பணி. தொடர்ந்து மேல்நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும் நிலை காரணமாக அடிக்கடி கழுத்து வலியும், முதுகு வலியும் வருகிறது. சிறிய அளவில் வலி இருக்கும்போது வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார். அன்று ஓய்வில்லாமல் வேலை செய்ததால் நிலைமை மோசமாகி கழுத்து வலி அதிகரித்து விட்டதால் மருத்துமனைக்கு வந்திருக்கிறார்.
    ராஜசேகரைப் போலவே நம்மில் பலரும் டெக்ஸ்டாப், லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் கண்கள் பாதிக்கப்படுவதுடன் , நாம் அமரும் விதத்தையும் பாதிக்கிறது. தசைப்பிடிப்பு, முதுகு வலி, கழுத்து வலி போன்றவை அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஏற்படுகிறது.
    தசை, மூட்டு மற்றும் முதுகுப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் இந்த நிலைக்குக் காரணம் அவர்களின் தொழில்நுட்பம் சார்ந்த பணிசூழலே. தொடர்ந்து நாற்காலியில் அமர்ந்திருப்பதால் இடுப்புப் பகுதி மடிகிறது. இதனால் முதுகுத்தண்டு பாதிக்கப்படுகிறது. கணினி அல்லது டி.வி. மானிட்டரைப் பார்ப்பதற்கு கழுத்தை வளைக்கும்போது இந்த நிலை மிகவும் மோசமடைகிறது. இதே நிலை தொடர்ந்து நீடிப்பதால் முதுகுத்தண்டில் உள்ள தசைகளும், கழுத்தில் உள்ள எலும்புகளும் தேய்கின்றன. சரியாக உட்காராமல் இருப்பதே இவ்வாறான வலிகளுக்குக் காரணம். அதிலிருந்து மீளுவதற்கு சரியாக அமர்ந்து பணிசெய்யும் பயிற்சியும், விழிப்புணர்வும் தேவை.

    பணிச்சூழல் மூலம் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால் உணவுப்பழக்கம் அதைவிட மோசமான விழைவுகளை ஏற்படுத்துகிறது. பிரான்சிஸ், வயது 28, மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர். இவரது பிரச்சனை அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுவது. இடைவெளி இல்லாத வேலை, காலை உணவை தவிர்த்துவிடுவது, மதிய உணவின் போது அதிகமாக குளிர்பானங்கள் அருந்துவது, மாலை வேளையில் துரித உணவை எடுத்துக்கொள்வது என்று தன்னுடைய பழக்கமாகிவிட்ட உணவுமுறைகளைக் கூறியவர், தற்போது சாப்பிட்டவுடன் வயிறு கனமாக இருப்பதாக உணர்வதாகவும், அதனால் அடிக்கடி பாத்ரூம் போக வேண்டும் என்ற உணர்வுக்கு ஆட்படுவதாகவும் கூறினார்.
    இவரின் இத்தகைய பிரச்சனைகளுக்குக் காரணம் குடல். ஆரோக்கியமான குடல் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் காரணம். நமக்கு ஏற்படும் எல்லா நோய்களுக்கும், குடலில் ஏற்படும் பிரச்சனைகளே காரணமாகின்றன. மனிதரின் குடலில் 100 டிரில்லியன் பாக்டீரியாக்கள் இருக்கும். பலவகைப்பட்ட அந்த பாக்டீரியாக்கள் இடையே ஏற்படும் மோதல் தான் வயிறு சம்பந்தமான நோய் ஏற்படுவதற்கு முதல் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
    அதிக கலோரி உள்ள ஃபாஸ்ட் புட், மது ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்வதுடன், பச்சைக் காய்கறிகள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் ஆகியவற்றை குறைவாக எடுத்துக் கொள்வதும் இத்தகைய ஜூரணக் கோளாறை ஏற்படுத்துகிறது.
    மேலும் மனஅழுத்தம் இத்தகைய செரிமானப் பிரச்சனைகளை அதிகப்படுத்துகிறது. மனஅழுத்தம் உண்டாவதால் அட்ரினலின் சுரப்பியிலிருந்து அட்ரினலின் ஹார்மோன்கள் அதிகளவு சுரக்கின்றன. இது ஜூரண மண்டலம் முழுவதையும் எரிச்சல் படுத்துவதுடன், ஜூரணப் பாதை முழுவதையும் பாதித்துவிடுகிறது. மனஅழுத்தத்தால் குடல் எரிச்சல் மற்றும் வயிறு அல்சரும் ஏற்படும் நிலைக்கு அழைத்துச் செல்லும்.
    மேலும் ‘நம் நாட்டில் அதிகரித்துவரும் உடல் பருமன் அபாயகரமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் பித்தப்பை கற்கள், கல்லீரல் வீக்க நோய், வயிறு, குடல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
    ஜுரணக் கோளாறு நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க கொழுப்பு குறைந்த பால் பொருட்களையும், அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் பச்சைக் காய்கறிகளையும் உட்கொள்ள வேண்டும்.
    உடல் எடையை ஒரே சீராக பராமரிக்க நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடாமல் குறைவாக அடிக்கடி சாப்பிடலாம்’

    பணிச்சூழல், உணவுப்பழக்கம் எந்த அளவுக்கு இளம் தலைமுறையினருக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ, அந்த அளவுக்கு அவர்களின் பரபரப்பான வாழ்க்கையும் உருவாக்குகிறது. சுரேஷ் கிருஷ்ணா, வயது 26. நெஞ்சு மற்றும் தோள்களில் பாரம், மூச்சு விடுவதில் கடுமையான சிரமம் என்று அவதிப்படுவதாகக் கூறினார். பரிசோதனையில் அவருக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இளவயதில் இதய நோய் என்ற அதிர்ச்சியில் காரணங்களைத் தேடினால் கிடைக்கும் பதில் பரபரப்பான வாழ்க்கை முறை.
    பணிச்சுமை, ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கங்கள், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவை இன்றைய இளம் இந்தியர்களிடம் இதயநோய் அதிகரிப்பதை சுட்டிக் காட்டுவதுடன், இந்நோய் கிராமத்து இளைஞர்களை விட நகர்ப்புற இளைஞர்களை அதிகம் பாதிப்பதாகக் கூறுகிறது ஒரு புள்ளி விபரம்.
    இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார மாற்றங்களினால் அதிக நுகர்வுப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் இன்றைய நகர்ப்புற இளைய தலைமுறையினரின் உணவுப் பழக்கவழக்கங்களில் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை உண்கிறார்கள். கம்ப்யூட்டரில் வேலை, துரித உணவு உண்பது, வாயுக்கள் கலந்த குளிர்பானங்கள் போன்றவற்றை பருகுவது போன்ற பல ஒன்று சேர்வதால், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 30 – 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.
    சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடற் பயிற்சியின்மை, உடல் பருமன் போன்றவை இதய நோய்க்கான பாதிப்பை அதிகப்படுத்துகிறது. இதன் உச்சநிலையில் தான் நெஞ்சில் வலி, மூச்சு விடுவதில் கடுமை, தலை சுற்றல், பலவீனம் ஏற்படுவது என்று அதிகரித்து மாரடைப்பில் கொண்டுவந்து நிறுத்துகிறது.
    வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதில் நோயால் அவதிப்படும் நிலையைக் காணும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. சூழ்நிலை இப்படி இருந்தாலும் இளம் தலைமுறை தங்கள் வாழ்க்கைமுறை குறித்து அலட்சியமாகவே தான் இருக்கிறார்கள். நல்ல கட்டுமஸ்தான உடல் வேண்டும் என்று விரும்புபவர்கள் அதற்காக நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய தயாராக இல்லை. இது மாற வேண்டும்.
    இளம் தலைமுறையினரை இந்த நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க சரியான விழிப்புணர்வு தேவை. அதற்கான சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வேண்டும். இதை அலட்சியப்படுத்தாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே இளைய தலைமுறையைக் காக்க முடியும். இதுவே அதற்கு சரியான தருணம். ஆம், எதைச் சாப்பிடுகிறோமோ அதுதான் நாம் என்பதை மனதில் நிறுத்தும் நிலை வந்துவிட்டது.

    பெட்டிச் செய்தி:
    நாற்காலியின் மேல்புறத்தில் நன்றாக சாய்ந்திருக்கும் வகையில் உட்காருங்கள்.
    உட்கார்ந்து கொண்டே கழுத்துக்கும், முதுகுக்குமான பயிற்சிகளை செய்யுங்கள்.
    வாய்ப்புகள் கிடைக்கும்போது கை, கால், முதுகு தசையை தளர்த்திக் கொள்ளவும்.
    குனிந்தோ, நிமிர்ந்தோ பார்க்காத வகையில் கம்ப்யூட்டர்கள், டி.வி. மானிட்டரை அமைக்கவும்.
    மேஜை உயரத்தை சரியான உயரத்தில் இருக்குமாறு மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். இதனால் தோள்கள் சமநிலையில் இருக்கும்.

    பெட்டிச் செய்தி:
    காரணம்: மது அதிகம் அருந்துவது, புகை பிடிப்பது, துரித உணவு உண்பது, மன அழுத்தம்
    தடுப்பு முறை: மது மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்த்தல், சத்துள்ள உணவு எடுத்துக் கொள்ளுதல், உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் செய்தல்

    மாறிவிட்ட உணவுப்பழக்கம், அதிகரித்துவிட்ட பணிச்சுமை, பரபரப்பான வாழ்க்கை முறை, மனஅழுத்தம் போன்றவை இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை முடக்கிப்போடுகிறது.

    ஹெல்த் அண்ட் வெல்னஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியாவின் தகவல்:
    71% இந்தியாவில் ஓட முடியாதவர்களாக உள்ளனர்
    53% இளம் இந்தியர்கள் உடல் பருமனாக இருக்கிறார்கள்
    32% இந்தியர்கள் மது மற்றும் புகைப் பழக்கம் உள்ளவர்கள்
    31% இந்தியர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்
    20% பேர் மனநலப் பிரச்சனை உள்ளவர்கள்
    63% இளைஞர்கள் கொழுப்பு அதிகமுள்ள உணவை உண்ணுகிறார்கள்

    தினமும் குறைந்தது 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்
    புகைப்பது, மது அருந்துவதைத் தவிர்க்கவும்
    சத்துள்ள உணவு உண்ணுங்கள். அதுவும் வேளை தவறாமல் ஒரே நேரத்தில் உண்ணுங்கள்

    சான்றோர் சிந்தனை

    ஒரு நல்ல சீடன் தன்னை உணர தயாராக இருந்தால் குரு சீடனைத் தேடி தானாகவே வருவார் எனச் சொல்வார்கள். ஒருவனது அறியாமையைப் போக்கி தன்னை யாரென்று அறிய வைப்பதுவே குருவின் வேலை.

    இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயே முதல் குரு. தாய் தான் குழந்தைக்கு தந்தையை அடையாளம் காட்டும் முதல் குரு. ‘அம்மா’ என்ற அற்புத வார்த்தையைச் சொல்லித்தரும் முதல் குரு. மாதா பிதாவைக் காட்ட, பிதா குருவிடம் சேர்க்க, குரு தெய்வத்திடம் சேர்க்கிறார்.

    குரு ஒரு கடல். கடல் நிலத்தில் ஓடும் நதிகளை வாÐ என்று அழைப்பதில்லை. நதிகள் தான் கடலைத் தேடி ஓடி கலக்கின்றன. எல்லா நதிகளும் கடலில் கலந்து தன் தனித்தன்மையை இழந்து, கடலின் தன்மையைப் பெறுகிறது. சீடர்களும் அதுபோல குருவைத் தேடி ஓடி குருவின் தன்மையை அடைகிறார்கள். நதிகள் எத்தனை கலந்தாலும் கடல் பொங்குவதில்லை. எத்தனை சீடர்கள் சேர்ந்தாலும் குருவுக்குத் தலை கணப்பதில்லை. குரு நிறைகுடம் அதனால் என்றும் தளும்புவதில்லை.

    குரு ஒரு சூரிய ஒளிக்கதிர். சூரிய ஒளிக்கதிர் மாளிகையின் மீதும் ஒரே மாதிரி ஒளியை வீசுகிறது. மண் குடிசை மீதும் அதே ஒளியை மாறுபாடில்லாமல் தருகிறது. எல்லா சீடர்களுக்கும் தரம் பார்க்காமல் ஒரே போதனையைத் தருகிறார். ரோஜா மலர் அதை வாங்கியவருக்கும் ஒரே மணத்தைத் தருகிறது. சூடிக்கொண்டவருக்கும் அதே மணத்தைத் தருகிறது. அதுபோல் குருவும் சீடர்களைத் தனித்தனியாக பிரித்துப் பார்த்துப் போதிப்பதில்லை.

    சாதாரண மனிதன் தான் சாதி, மதம், இனம், நிறம் எனப் பிரித்துப் பார்க்கிறான். அனைவரையும் சமமாக பாவிக்கும் பெருங்குணம் கொண்டவர் குரு.

    மாமரம் பழத்தைத் தனக்கென வைத்துக்கொள்வதில்லை. தன்னைப் பாதுகாத்து வளர்ப்பவர்களுக்கும் சரி, அடித்து பறிப்பவர்களுக்கும் சரி ஒரே மாதிரி பழத்தைத் தான் தருகிறது.

    குருவும் குழந்தையும் ஒன்று. குழந்தை எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும். வேற்றுமை பாராட்டுவதில்லை. பிறருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதுபோலத்தான் குருவும் பேதம் பார்ப்பதில்லை.

    குருவும் பசுவும் ஒன்று. பசு அமைதியின் அடையாளம். பாலைத் தன் கன்றுக்குப் போக மீதியை நமக்கும் அளிக்கிறது. பசுவின் முகம் அசைபோடும்போது ஞானியின் முகத்திற்கு ஒப்பாக இருக்கும். கண்கள் மேலேபோய் அமைதியோடு தியானம் செய்வதைப் போல இருக்கும். அதுபோல் குருவும் தனக்கென ஏதும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு அள்ளி ஞானத்தை வழங்கும் ஞான தான வள்ளல் ஆகிறார்.

    குரு கைகாட்டி போன்றவர். கைகாட்டி இந்த இடத்திற்குப் போகலாம் என்ற வழியை மட்டுமே காட்டும்; அந்த இடத்திற்குக் கொண்டு போய் சேர்க்காது. அதுபோல குருவும் வழிகாட்டுவார். நாம் தான் நமது முயற்சியால் உயர்வை அடைய வேண்டும்.

    குரு தோணி போன்றவர். தோணி மற்றவர்களை அக்கரைக்கு அனுப்பிவிட்டு எப்போதும் இக்கரையிலே நிற்கிறது. அதுபோல குருவும் வாழ்க்கை கடலைக் கடக்கும் வழியையும், சாதிக்கும் வழியையும் மற்றவர்களுக்குக் காட்டிவிட்டு மாற்றம் இல்லாமல் நின்று கொள்கிறார்.

    குருவும் ஏணியும் ஒன்று. மற்றவர்கள் உயரே செல்ல ஏணிப்படிகள் உதவுகிறது. ஆனால் ஏணி இருக்கும் இடத்திலேயே இருந்து விடுகிறது. அதுபோல் குரு மற்றவர்களை உயரத்திற்கு ஏற்றிவிட்டு தான் இருந்த இடத்திலேயே இருக்கிறார்.

    குரு துடைக்கப் பயன்படும் துடைப்பானைப் போன்றவர். துடைப்பான் தன் மீது அழுக்கைப் படிய விட்டுக்கொண்டு, இடத்தைச் சுத்தம் செய்கிறது. அதுபோல் குரு மற்றவர்களின் மன அழுக்கை நீக்கி, மனிதனை ஒளிரச் செய்கிறார்.

    உண்மையான ஆன்மீக குருவுக்கு விளம்பரம் தேவையில்லை. ‘என்னிடத்தில் தேன் இருக்கிறது; என்னிடம் வாருங்கள்’ என்று மலர் தேனீக்களுக்கு அழைப்பு கொடுப்பதில்லை. பூக்கள் மலரும்போது தேனீக்கள் தானாக மலரை நாடிவந்து சேரும். மரத்தில் பழம் பழுத்துத் தொங்கும்போது பறவைகளுக்கு அழைப்பு அனுப்புவதில்லை. பழத்தைத் தேடித்தான் பறவைகள் வரும். குளத்தைத் தேடித்தான் கொக்குகள் வரும்.

    நல்ல வாழ்க்கைக்கு நல்ல நெறியோடு வாழ நல்ல குருவை நாம் தான் தேடிச் செல்ல வேண்டும்.

    முயற்சிகள் பலவிதம்

    மதுரை கிருஷ்ணகுமாரும், தாராபுரம் பழனிச்சாமியும், தன்னம்பிக்கை மே மாத இதழில் முயற்சியே வளர்ச்சிக்கு வேர் என்ற எனது கட்டுரையைப் படித்துவிட்டு போன் செய்தார்கள்.
    “அது என்ன சார், விதவிதமாக முயற்சிப்பது, வீரியமாக முயற்சிப்பது, வீரியமாக முயற்சிப்பது, வித்தியாசமாக முயற்சிப்பது. அவைகளைப் பற்றி சற்று விளக்கமாக எழுதக்கூடாதா?”
    அவர்கள் எனது பல நூல்களின் வாசகர்கள். அவர்களுக்காகவும், அதே கேள்வியை மனதில் கொண்ட மற்ற வாசகர்களுக்காகவும் இந்தக் கட்டுரை.
    1. விதவிதமாக முயற்சிப்பது:
    குதிரையின் கண்களுக்கு சேனம் கட்டியது போல், ஒரே மாதிரியான முயற்சியையே எப்போதும் எடுத்துக் கொண்டிருப்பது வெற்றிக்கு அவ்வளவாக உத்திரவாதம் அளிக்கும் என்று சொல்ல முடியாது.
    ஏன்?
    நம்மைவிட நமது போட்டியாளர்கள் வெற்றி குறித்து மிகத்தீவிரமாக சிந்திக்கிறார்கள். மிகத்தீவிரமாக செயல்படுகிறார்கள்.
    அப்படியென்றால், நாமும் அப்படியெல்லாம் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அல்லவா இருக்கிறோம்.
    ஆகவே, நமது முயற்சிகள் விதவிதமாக இருக்க வேண்டும். புரியவில்லையா? ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
    பொதுத்தேர்வில், நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைக் குறிவைக்கும் மாணவர்கள் எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்கள்?
    • அன்று நடந்த பாடங்களை அன்றே “படித்துப்” பார்க்கிறார்கள்.
    • படிக்கும் போதே வாய்விட்டுச் “சொல்லிப்” பார்க்கிறார்கள்.
    • சொல்வதோடு நில்லாமல், முக்கியமான கேள்விகளுக்கான பதில்களையும், முக்கியமான பகுதிகளையும் ஒரே கேஸட்டில் “பதிவு செய்து” கொள்கிறார்கள்.
    வீட்டில் மற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் நேரங்களிலும், உறங்கப்போகும் சமயங்களிலும் அந்த கேஸட்டைப் போட்டு “கேட்டுக் கொண்டே” இருக்கிறார்கள். மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்கிறார்கள்.
    ஒரு தடவை ரிக்கார்ட் பண்ணினா
    நூறு தடவை படிச்சதுக்குச் சன்ம்
    • படிப்பதோடு நின்றுவிடாமல், பாடத்தின் முக்கியமான பகுதிகளை “எழுதிப்” பார்க்கிறார்கள்.
    • கடினமான சொற்கள், சமன்பாடுகள், சூத்திரங்கள் ஆகியவற்றை வீட்டிலேயே ஒரு “போர்டில் எழுதி” வைத்துக்கொள்கிறார்கள். போகும் போதும் வரும் போதும் நின்று, பார்த்து மனதில் வாங்கிக் கொள்கிறார்கள்.
    • கற்றவை இன்னும் ஆழமாக மனதில் பதிவதற்காக, கற்ற பாடங்களை தங்கள் நண்பர்களுக்கு “கற்பிக்கிறார்கள்”.
    • முக்கியமான பகுதிகளையும், கேள்வி பகுதிகளையும், திரும்பத் திரும்பப் படிக்கிறார்கள் ( )
    • சென்ற வருடங்களின் கேள்வித்தாள்களை சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள். நண்பர்கள் சிலரோடு சேர்ந்து, வீட்டிலேயே நிஜப்பரீட்டை போன்ற உணர்வோடு எழுதிப்பார்க்கிறார்கள் ( ).
    தாங்கள் எழுதியவற்றை மற்றவர்களிடம் கொடுத்து, திருத்தி, மதிப்பெண் போட்டுக் கொள்கிறார்கள். எங்கே தவறு? என்ன தவறு? என்று ஆய்ந்து பார்க்கிறார்கள்.
    – போதுமா?
    இதுதான் அதிக மார்க் வாங்க ஆசைப்படும் மாணவன் எடுக்கின்ற விதவிதமான முயற்சிகள்.
    2. வீரியமாக முயற்சிப்பது:
    • உடல் ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சி செய்பவர்கள், பூமிக்கு வலிக்குமே என்று பொடிநடை போடக் கூடாது என்பார் வைரமுத்து. வியர்வை வரும் அளவுக்கு கைகளை வீசி நடக்க வேண்டுமாம். நடையில் வீரியம் வேண்டுமாம்.
    • ஒரு மரத்தையோ, மரத்தின் கிளையையோ வெட்டும்போது கோடலியால் மரத்துக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பீர்களா?
    • காய்ச்சிய இரும்பை, கொல்லன், சுத்தியலால் தட்டிக் கொடுப்பானா? சம்மட்டியால் ஓங்கி அடித்து நசுக்குவானா?
    • உங்கள் வீட்டுச் சுவற்றில் ஆணி அடிக்கிறீர்கள். ஒவ்வொரு அடியிலும் வேகமும் வீரியமும் இருக்குமா, இல்லையா?
    • டென்னிஸ், பாட்மிண்டன், வாலிபால் போன்ற விளையாட்டுகளில், ஆளில்லாத இடமாக பந்தைப் போடுவது ஒரு யுக்தி என்றால், அடிவயிறு கலங்குகிற மாதிரி, அம்பு போல் பந்தை வீரியமாய், வலிமையுடன் இறக்குவதும் வெற்றிக்கு உதவும் ஒரு யுக்தி தானே.
    வெற்றிக்கான முயற்சிகளில் வீரியம் இல்லையென்றால், வெற்றி ஆடி அசைந்து தான் வரும். வராமலேயும் போகும்.
    3. வித்தியாசமாக முயற்சிப்பது:
    கடும் போட்டி நிலவும் போது, ஜெயிக்க விரும்புகின்ற ஒருவன், சற்றே வித்தியாசமாகவும் செயல்பட்டுத்தான் ஆக வேண்டும். தனது தனித்துவத்தை, ஸ்பெஷாலிட்டியை காட்டித்தான் ஆக வேண்டும்.
    • ஒரு மாம்பழத்துக்காக, பிள்ளையாருக்கும் முருகனுக்கும், சிவபெருமான் வைத்த போட்டியில் பிள்ளையார் எப்படி ஜெயித்தார்? சற்றே வித்தியாசமாய் முயற்சித்ததால் தானேÐ
    • ஒரு நேர்முகத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு இடம் தான் காலி. ஆனால் வந்திருந்ததோ இருபதுக்கும் மேற்பட்டவர்கள்.
    அதில் ஒரு விசித்திரம்.
    முதலில் வந்தவரை முதலில் கூப்பிடாமல், ஏ, பி, ஸி, டி வரிசையில் பெயர்களை அழைத்தார்கள்.
    நம்ம ஆள் பெயர் வீரராகவன். கடைசி ஆள். இவனுக்கு பயங்கர சந்தேகம்.
    தேர்வு செய்பவர்கள், பசியின் காரணமாகவோ, அலுப்பின் காரணமாகவோ, மற்ற வேலைச் சுமையின் காரணமாகவோ, நம்மைக் கூப்பிடுவதற்கு முன்பாகவே யாரையாவது தேர்வு செய்துவிட்டால்…?
    யோசித்தான். ஒரு துண்டுப் பேப்பரை எடுத்தான்.
    “சார், என் பெயர் வீரராகவன். உங்கள் அழைப்பு வரிசைப்படி நான் கடைசி ஆள். இந்தப் பதவிக்கான எல்லாத் தகுதிகளும், திறமைகளும், அனுபவமும் உண்டு. என்னை அழைப்பதற்கு முன்பாக, தயவு செய்து யாரையும் செலக்ட் செய்து விடாதீர்கள்”.
    இதை எழுதிப் பியூனிடம் கொடுத்து உள்ளே அனுப்பினான்.
    அவர்கள் இதைப் படித்தார்கள். கண்களில் வியப்பு. இதழ்களில் புன்னகை.
    பலே, பையன் கொஞ்சம் ஸ்மார்ட் தான். வரட்டும் பார்ப்போம்.
    அவனும் அழைக்கப்பட்டான். கேள்விகளுக்கெல்லாம் மிகச்சரியான பதிலளித்தான். பாராட்டுப் பெற்றான். பதவியும் பெற்றான்.
    சரியான பதில்களை பலரும் அளித்திருப்பார்கள். ஆனால்…
    துண்டுபோட்டு பஸ்ஸில் சீட் பிடித்த அந்த வித்தியாசமான முயற்சியல்லவா வேலை கிடைக்க உதவியது.
    உங்கள் முயற்சிகளும், விதவிதமாக, வீரியமாக, வித்தியாசமாக இருந்தால், வெற்றி நிச்சயம்.

    நீங்கள் சாதனையாளரே

    “இது என்னங்க புதுசா கதை விடறீங்க? சாதனையாளர் தான்னு சொன்னீங்கÐ அதுக்கான வழியைச் சொல்லலாம், எதையோ இழக்கனும்னு சொல்றீங்களே”. இது ஒரு வாசகரின் புலம்பல்.

    இழப்பதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது? வாசக நண்பர்களேÐ நாம் தான் எல்லாவற்றையுமே இழந்துவிட்டோமேÐ இது பாமர இந்தியனின் உளம் திறந்த பேச்சு.

    இனி இழப்பதற்கு உயிரைத்தவிர வேறு எதுவும் இல்லையென அவசரப்பட்டு எண்ணி விடாதீர்கள். நாம் இழக்க வேண்டிய, ஆனால் இழக்க விரும்பாத எத்தனையோ, நம் ஆழ்மனதில் நங்கூரம் இட்டு நன்றாக உறங்கிக் கொண்டுள்ளது.

    அவ்வப்போது விழித்துக்கொண்டு, ஏடாகூடமாக ஏதாவது செய்து, நம்மை வம்பில் மாட்டி விடுகிறது. இப்போது தெரிகிறதா? ஆம். நீங்கள் நினைத்தது சரிதான்.

    நாம் இழக்க வேண்டிய ஒன்றே ஒன்று… “எதிர்மறை எண்ணங்கள்” தான்.

    நமது வெற்றியை சாதனையைத் தடைசெய்வதில் முதல் பங்கு, முக்கிய பங்கு வகிப்பது இந்த எதிர்மறை எண்ணங்கள் தான். சிறுவயது முதலே, நாம் கேட்ட, பார்த்த, அனுபவித்தவைகள் மூலம் இந்த எண்ணம் மேலோங்கிவிட்டது. “யானைக்கும் அடி சறுக்கும்” என்ற மொழியை இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம். சறுக்காமல், சரியாக அடிஎடுத்து வைத்து, தன் தாகம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் யானைகளை அல்லவா இப்போது நாம் பார்க்கிறோம்.

    நம்புங்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். இதைத்தான் தன்னம்பிக்கை என்று சொல்கிறோம். ஒரு கையில் எழுதுவது, அதிலும் அழகாக எழுதுவது பலருக்கு கை வராத கலை.

    ஆனால் இரு கையிலும் இரு மொழியில் சரளமாக எழுத முடியுமா?
    முடியும் என சாதித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். சீனாவின் ஹெபெய் மாகாணப் பெண் சென்சியுவான். பள்ளிப்பருவத்தில் அதிகமாகக் கொடுத்த ஹோம் ஒர்க்கை, விரைவில் முடிக்க, விளையாட்டாக இரண்டு கைகளிலும் எழுதிப் பழகினார். பழக்கம் இன்று வழக்கமாகிவிட்டது.

    சென் சியுவான் இரு கைகளாலும் எழுதுங்கள் என்று சொல்லவில்லை; எழுதும் எழுத்தை அழகாக எழுத முயற்சிக்கலாமே.
    ஒப்பிடாதீர்கள்: பிறருடன் ஒப்பிட்டே நம்மில் பலர் தன்னால் முடியாது என முடங்கிவிட்டோம். எதற்காக, யாருடன் ஒப்பிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உள்ளது. நம்மிடமுள்ள திறமைக்கும் தனித்திறமை உள்ளது. நம்மிடமுள்ள திறமை என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

    மற்றவர்களோடு ஒப்பிட்டு, அவர்களுக்கிருப்பது போன்ற வசதி, சூழ்நிலை, வழிகாட்டல் போன்றவை இல்லாததால் என்னால் முன்னேற முடியவில்லை என்பது நொண்டிச் சாக்கு.

    ஒப்பீடு என்பது ஒவ்வொருவரும் தனது நேற்றைய நிலையுடன் இன்றைய நிலையையும், இன்றுள்ள நிலையுடன், நாளை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தான் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பிறருடன் ஒப்பிட்டால் சாதிப்பது கடினம்.

    இதற்குத் தேவை. PSPEP – ஆம், பி எஸ் பெப்
    Planning – திட்டமிடுதல்
    Self-Confidence – தன்னம்பிக்கை
    Punctuality – காலம் தவறாமை
    Evaluation – மதிப்பீடு செய்
    Patience – பொறுமையாய் இரு

    ஒவ்வொருவரது உடல் ஆற்றல், அறிவு ஆற்றல் இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு, தன்னம்பிக்கையுடன் உரிய காலத்தில் செய்ய வேண்டும். இடையிடையே நமது செயல் சரியான பாதையில் தான் செல்கிறதா என மதிப்பீடு செய்வது முக்கியம். செயலை முடித்த பின், அதன் பலனைப் பெற பொறுமையாகக் காத்திருப்பதில் தவறில்லை.

    “எல்லா முயற்சிக்கும் வெற்றி தராது; ஆனால் முயற்சியில்லாமல் வெற்றி வராது”
    இதை மனதில் வைத்துக்கொண்டால் என்றுமே நாம் சாதனையாளர் தான்.

    வாழ்க்கை சுடுமா?: கரூரை அடுத்த சூளபுரம் என்ற கிராமத்தில், குடும்பத்தில் மூன்றாவது மகன் சந்திரசேகரன் இன்று அவர் அகதீப ஒளி அறக்கட்டளையை நிறுவி சென்னையில் ரயில் நிலைய நடைபாதையில் வசிக்கும் பார்வையற்றோர்கள் சுயதொழில் செய்யவும், பார்வையற்ற மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகளும் நடத்திவருகிறார்.

    “சோர்ந்துவிடாதே பிறை நிலவே, உன்னுள்தான் பூரண சந்திரன் புதைந்து கிடக்கிறான்; மாதம் ஒருமுறை பவுர்ணமியன்று வெளிப்படுகிறான்” இந்த வரிகள் இவருக்கு மிகவும் பிடிக்கும். படித்துப் பட்டம் பெற்று, தமிழில் எம்.ஏ., எம்.பில்., பி.எட். முடித்து, தகுதித் தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் ஆவதற்காகத் தன்னைத் தயாரிபடுத்திக் கொண்டுள்ளார்.

    இவர் பிறப்பிலேயே பார்வையின்றிப் பிறந்தவர். புறப்பார்வை மட்டுமே குறைவு; ஆனால், அகப்பார்வையை நாளும் அதிகரித்துக் கொண்டார்; தன்போன்றோருக்கு உதவும் வகையில் தான் அகதீப ஒளி அறக்கட்டளையை ஆரம்பித்தார். பெயரே நன்றாக இருக்கிறதேÐ

    ரயிலில் பொருட்கள் விற்கும் பணியைச் செய்து, சம்பாதித்து, படித்துக் கொண்டிருக்கும் போதே அறக்கட்ட மூலம் மற்றவர்களுக்கும் உதவி செய்கிறார். பல சமயங்களில் பயணிகளின் உதாசீனமும், வெறுப்பான பேச்சும் சில சமயங்களில் ரயில்வே போலீசாரின் பொருள்பறிப்பும் இவருக்கு ஆக்கபூர்வமான சிந்தனையைக் கொடுத்துள்ளன.

    “மனசு வலித்தாலும் எந்தத் தொழிலில்தான் இடைஞ்சல் இல்லை” எனத் தன்னைத் தேற்றிக் கொள்வாராம். வாழ்க்கை வாழ்வதற்குத்தான்; நெருப்பு சுடத்தான் செய்யும். சுட்டுவிடாத அளவிலே, வாழும் கலையைக் கற்றுக்கொண்டால் சாதனையாளர் தான். இது இவரின் தாரக மந்திரம்.

    மன உறுதியால் எளிதில் வெற்றி: 2012ல் சென்னையில் 23 நாடுகளைச் சேர்ந்த, சர்வதேச வீரர்கள் பங்கேற்ற சதுரங்க ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தியவர். 1995ல் இமயமலையில் 17 ஆயிரம் அடி உயரமுள்ள ‘ஷிட்டிதார்’ சிகரம் ஏறி சாதனை புரிந்தவர். எதிர்மறை எண்ணங்களை எடுத்தெறிந்து, விருப்புடன் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. கணினியில் நெட்ஒர்க்கிங் செக்யூரிட்டி சர்டிபிகேட் முடித்து தற்போது டி.சி.எஸ். நிறுவனத்தில் சென்னையில் பணிபுரியும் திரு. சாருதத்தா சொல்வதைப் படியுங்கள்.
    பள்ளியில் படித்தபோது வலது கண்ணில் மின்னல் போன்ற ஒளிக்கீற்று தெரிந்தது. பரிசோதித்த கண்மருத்துவர், வலது கண்பார்வை போய்விட்டது. இடது கண்ணை அதிகம் உபயோகித்தால், அந்தக் கண்ணும் பார்வையை இழந்துவிடும் என எச்சரித்தார்.

    பார்வை இருக்கும் வரை படிப்பேன் என அம்மாவிடம் அடம்பிடித்து பள்ளிப்படிப்பை முடித்தார் இடது கண்பார்வையால். கல்லூரியில் படிக்கும்போது இடது கண்பார்வையை இழந்து முழு குருடானார். பிறவியிலேயே பார்வையற்றவர்களுக்கு அதிகச் சிரமம் இருக்காது. பிறந்து 20 வருடங்கள் பார்த்து ரசித்த வாழ்க்கை, அதன்பின் பார்க்கவே முடியாது என்ற நிலையில் மனம் எப்படி இருக்கும்?

    திடீரென பார்வை இழப்பது ஒருபுறம். ஆனால், இதோ, விரைவில் நான் முழுமையாகப் பார்வையை இழந்துவிடுவேன் என ஒவ்வொரு நாளும் பயந்து, பயந்து வாழ்வது நினைக்கவே கஷ்டமாக இருக்கிறதல்லவா?

    சாருதத்தா கஷ்டப்படவில்லை. திட்டமிட்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டார். இதோ அவர் சாதனைகள் சில:
    2000 2004 முடிய தேசிய செஸ் சாம்பியன்
    2001 பிரெய்லி ஆடியோ, புத்தகம் பத்தின் ஆசிரியர்
    பார்வையற்றோர் விளையாட புதிய எளிய செஸ்போர்டு கண்டுபிடிப்பு
    ஜனாதிபதி விருது
    பார்வையற்றோருக்கான இந்திய செஸ் சங்க செயலர் மற்றும் சர்வதேச துணைத்தலைவர்
    இவரால் முடியும்போது, நம்மால் முடியாதா? முடியும்Ð… காத்திருங்கள்.
    -தொடரும்

    மாற்றங்களின் வலிமையும் மாறும் தெருக்களும்..

    ஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில்
    முடையும் பொருளில்
    தோல்வி வெற்றி கொள்கிறது, அல்லது
    வெற்றிஅவசியமற்றும் போகிறது;

    கூடைகளே வாருங்கள்-
    கோழிகளின் இறப்பையும்
    இறகுகளின் வெற்றியையும்
    இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம்!

    மாட்டு வண்டி உருண்டோடுகையில்
    அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி
    பிள்ளைகள் கீழே விழ
    முடியாமல் சுமந்து கொண்டு ஓடிய மாடு
    நின்று ஓய்வெடுக்கத் துவங்கியது;

    மாடுகளே ஓடிவாருங்கள்
    நீங்கள் வாங்கிய சாட்டையடிகளைச் சேகரித்து வையுங்கள்
    ஊர்அவனைஅடிக்க வருகையில்
    தப்பித்து ஓடினால் அந்த சாட்டையடிகள்அவனைப்
    பிடித்துத்தர உதவும்!

    தேர்வுகள் முடிகிறது
    முதலும் இரண்டுமாய் மதிப்பெண்களும்
    சில குழந்தைகளின்
    மகிழ்ச்சிப் பூரிப்பும் குவிகின்றன,
    ஆங்காங்கே சாக்கடையும்
    சில முனைமடங்காத புத்தகங்களும்
    மூச்சு திணறி சில பிள்ளைகளும் இறந்துக்கிடந்தன;

    பிள்ளைகளே எழுந்து வாருங்கள்
    சேற்றில் புதைந்த மரணத்தின்உயிரை
    கண்ணீரில் சுமந்து சிவக்கும்
    பெற்றோர்களின் ஈர விழியைப் பாருங்கள்- உங்களின்
    வெற்றி மீண்டும்
    பெற்றோரின் முயற்சியால் மாற்றியெழதப்படலாம்!

    தேயிலைத் தோட்டதிலும்
    தீக்குச்சி மருந்துக்குள்ளும்
    பட்டாசுகளோடு சேர்த்தெரித்த மனசுமாய்
    மனிதம் கொன்று
    பணத்தை அள்ளிக் கொள்கிறான் மனித மூடன்,

    ஒரு பணக்கட்டினை மிதித்துக் கொண்டு
    நகர்ந்து செல்கிறதொரு ஆடு,

    ஆட்டிறைச்சி தின்போரே; மனிதர்களே வாருங்கள்;
    நம்மைச் சுற்றியொரு கூடாரம்
    கட்டிக் கொள்ளுங்கள்
    நாளை நம்பிள்ளைகள்
    நமைக்கூட கொன்றிட நேரிடும்; இறைச்சிக்காய்!!

    மதிப்பெண் உலகம்

    வாழ்வாங்கு நீ வாழ்வாய் என்று
    வாஞ்சையுடன் உன்னை ஈன்றெடுத்த
    தாய்க்கு நீ என்ன செய்தாய்?
    வியர்வை, இரத்தத்தை காசாக்கி
    உன் எதிர்காலம் மட்டுமே – உலகம் என
    வாழ்ந்த உன் தந்தைக்கு
    நீ என்ன செய்தாய்?
    இவ்வளவு காலம் – உன்னை
    சுமந்த மண்ணுக்கு
    நீ என்ன செய்தாய்?
    மதிகெட்ட மதிப்பெண்களுக்கு
    விலை – உன் உயிரா?
    பாடப் புத்தகத்தோடு – என்று
    நீ பகுத்தறிவைப் படிக்கப் போகிறாய்?
    வேதியியல், உயிரியல், விலங்கியளோடு
    வாழ்வியல் பாடத்தை என்று நீ தெரிந்து கொள்ளப்போகிறாய்?
    புத்தகத்தை விட்டு – தலை
    நிமிர்ந்து பார்;
    உன்னைச் சுற்றியுள்ள
    அழகான, அற்புதமான,
    அர்த்தம் செறிந்த – இந்த
    உலகத்தைப்பார்…
    வாழ்வியல் பாடத்தில் என்று நீ
    நூறு மதிப்பெண்கள் பெறுகிறாயோ
    அன்று
    உன்னைவிட வலிமையானவர்
    உலகில் எவருமில்லை