“இது என்னங்க புதுசா கதை விடறீங்க? சாதனையாளர் தான்னு சொன்னீங்கÐ அதுக்கான வழியைச் சொல்லலாம், எதையோ இழக்கனும்னு சொல்றீங்களே”. இது ஒரு வாசகரின் புலம்பல்.
இழப்பதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது? வாசக நண்பர்களேÐ நாம் தான் எல்லாவற்றையுமே இழந்துவிட்டோமேÐ இது பாமர இந்தியனின் உளம் திறந்த பேச்சு.
இனி இழப்பதற்கு உயிரைத்தவிர வேறு எதுவும் இல்லையென அவசரப்பட்டு எண்ணி விடாதீர்கள். நாம் இழக்க வேண்டிய, ஆனால் இழக்க விரும்பாத எத்தனையோ, நம் ஆழ்மனதில் நங்கூரம் இட்டு நன்றாக உறங்கிக் கொண்டுள்ளது.
அவ்வப்போது விழித்துக்கொண்டு, ஏடாகூடமாக ஏதாவது செய்து, நம்மை வம்பில் மாட்டி விடுகிறது. இப்போது தெரிகிறதா? ஆம். நீங்கள் நினைத்தது சரிதான்.
நாம் இழக்க வேண்டிய ஒன்றே ஒன்று… “எதிர்மறை எண்ணங்கள்” தான்.
நமது வெற்றியை சாதனையைத் தடைசெய்வதில் முதல் பங்கு, முக்கிய பங்கு வகிப்பது இந்த எதிர்மறை எண்ணங்கள் தான். சிறுவயது முதலே, நாம் கேட்ட, பார்த்த, அனுபவித்தவைகள் மூலம் இந்த எண்ணம் மேலோங்கிவிட்டது. “யானைக்கும் அடி சறுக்கும்” என்ற மொழியை இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம். சறுக்காமல், சரியாக அடிஎடுத்து வைத்து, தன் தாகம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் யானைகளை அல்லவா இப்போது நாம் பார்க்கிறோம்.
நம்புங்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். இதைத்தான் தன்னம்பிக்கை என்று சொல்கிறோம். ஒரு கையில் எழுதுவது, அதிலும் அழகாக எழுதுவது பலருக்கு கை வராத கலை.
ஆனால் இரு கையிலும் இரு மொழியில் சரளமாக எழுத முடியுமா?
முடியும் என சாதித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். சீனாவின் ஹெபெய் மாகாணப் பெண் சென்சியுவான். பள்ளிப்பருவத்தில் அதிகமாகக் கொடுத்த ஹோம் ஒர்க்கை, விரைவில் முடிக்க, விளையாட்டாக இரண்டு கைகளிலும் எழுதிப் பழகினார். பழக்கம் இன்று வழக்கமாகிவிட்டது.
சென் சியுவான் இரு கைகளாலும் எழுதுங்கள் என்று சொல்லவில்லை; எழுதும் எழுத்தை அழகாக எழுத முயற்சிக்கலாமே.
ஒப்பிடாதீர்கள்: பிறருடன் ஒப்பிட்டே நம்மில் பலர் தன்னால் முடியாது என முடங்கிவிட்டோம். எதற்காக, யாருடன் ஒப்பிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உள்ளது. நம்மிடமுள்ள திறமைக்கும் தனித்திறமை உள்ளது. நம்மிடமுள்ள திறமை என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
மற்றவர்களோடு ஒப்பிட்டு, அவர்களுக்கிருப்பது போன்ற வசதி, சூழ்நிலை, வழிகாட்டல் போன்றவை இல்லாததால் என்னால் முன்னேற முடியவில்லை என்பது நொண்டிச் சாக்கு.
ஒப்பீடு என்பது ஒவ்வொருவரும் தனது நேற்றைய நிலையுடன் இன்றைய நிலையையும், இன்றுள்ள நிலையுடன், நாளை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தான் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பிறருடன் ஒப்பிட்டால் சாதிப்பது கடினம்.
இதற்குத் தேவை. PSPEP – ஆம், பி எஸ் பெப்
Planning – திட்டமிடுதல்
Self-Confidence – தன்னம்பிக்கை
Punctuality – காலம் தவறாமை
Evaluation – மதிப்பீடு செய்
Patience – பொறுமையாய் இரு
ஒவ்வொருவரது உடல் ஆற்றல், அறிவு ஆற்றல் இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு, தன்னம்பிக்கையுடன் உரிய காலத்தில் செய்ய வேண்டும். இடையிடையே நமது செயல் சரியான பாதையில் தான் செல்கிறதா என மதிப்பீடு செய்வது முக்கியம். செயலை முடித்த பின், அதன் பலனைப் பெற பொறுமையாகக் காத்திருப்பதில் தவறில்லை.
“எல்லா முயற்சிக்கும் வெற்றி தராது; ஆனால் முயற்சியில்லாமல் வெற்றி வராது”
இதை மனதில் வைத்துக்கொண்டால் என்றுமே நாம் சாதனையாளர் தான்.
வாழ்க்கை சுடுமா?: கரூரை அடுத்த சூளபுரம் என்ற கிராமத்தில், குடும்பத்தில் மூன்றாவது மகன் சந்திரசேகரன் இன்று அவர் அகதீப ஒளி அறக்கட்டளையை நிறுவி சென்னையில் ரயில் நிலைய நடைபாதையில் வசிக்கும் பார்வையற்றோர்கள் சுயதொழில் செய்யவும், பார்வையற்ற மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகளும் நடத்திவருகிறார்.
“சோர்ந்துவிடாதே பிறை நிலவே, உன்னுள்தான் பூரண சந்திரன் புதைந்து கிடக்கிறான்; மாதம் ஒருமுறை பவுர்ணமியன்று வெளிப்படுகிறான்” இந்த வரிகள் இவருக்கு மிகவும் பிடிக்கும். படித்துப் பட்டம் பெற்று, தமிழில் எம்.ஏ., எம்.பில்., பி.எட். முடித்து, தகுதித் தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் ஆவதற்காகத் தன்னைத் தயாரிபடுத்திக் கொண்டுள்ளார்.
இவர் பிறப்பிலேயே பார்வையின்றிப் பிறந்தவர். புறப்பார்வை மட்டுமே குறைவு; ஆனால், அகப்பார்வையை நாளும் அதிகரித்துக் கொண்டார்; தன்போன்றோருக்கு உதவும் வகையில் தான் அகதீப ஒளி அறக்கட்டளையை ஆரம்பித்தார். பெயரே நன்றாக இருக்கிறதேÐ
ரயிலில் பொருட்கள் விற்கும் பணியைச் செய்து, சம்பாதித்து, படித்துக் கொண்டிருக்கும் போதே அறக்கட்ட மூலம் மற்றவர்களுக்கும் உதவி செய்கிறார். பல சமயங்களில் பயணிகளின் உதாசீனமும், வெறுப்பான பேச்சும் சில சமயங்களில் ரயில்வே போலீசாரின் பொருள்பறிப்பும் இவருக்கு ஆக்கபூர்வமான சிந்தனையைக் கொடுத்துள்ளன.
“மனசு வலித்தாலும் எந்தத் தொழிலில்தான் இடைஞ்சல் இல்லை” எனத் தன்னைத் தேற்றிக் கொள்வாராம். வாழ்க்கை வாழ்வதற்குத்தான்; நெருப்பு சுடத்தான் செய்யும். சுட்டுவிடாத அளவிலே, வாழும் கலையைக் கற்றுக்கொண்டால் சாதனையாளர் தான். இது இவரின் தாரக மந்திரம்.
மன உறுதியால் எளிதில் வெற்றி: 2012ல் சென்னையில் 23 நாடுகளைச் சேர்ந்த, சர்வதேச வீரர்கள் பங்கேற்ற சதுரங்க ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தியவர். 1995ல் இமயமலையில் 17 ஆயிரம் அடி உயரமுள்ள ‘ஷிட்டிதார்’ சிகரம் ஏறி சாதனை புரிந்தவர். எதிர்மறை எண்ணங்களை எடுத்தெறிந்து, விருப்புடன் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. கணினியில் நெட்ஒர்க்கிங் செக்யூரிட்டி சர்டிபிகேட் முடித்து தற்போது டி.சி.எஸ். நிறுவனத்தில் சென்னையில் பணிபுரியும் திரு. சாருதத்தா சொல்வதைப் படியுங்கள்.
பள்ளியில் படித்தபோது வலது கண்ணில் மின்னல் போன்ற ஒளிக்கீற்று தெரிந்தது. பரிசோதித்த கண்மருத்துவர், வலது கண்பார்வை போய்விட்டது. இடது கண்ணை அதிகம் உபயோகித்தால், அந்தக் கண்ணும் பார்வையை இழந்துவிடும் என எச்சரித்தார்.
பார்வை இருக்கும் வரை படிப்பேன் என அம்மாவிடம் அடம்பிடித்து பள்ளிப்படிப்பை முடித்தார் இடது கண்பார்வையால். கல்லூரியில் படிக்கும்போது இடது கண்பார்வையை இழந்து முழு குருடானார். பிறவியிலேயே பார்வையற்றவர்களுக்கு அதிகச் சிரமம் இருக்காது. பிறந்து 20 வருடங்கள் பார்த்து ரசித்த வாழ்க்கை, அதன்பின் பார்க்கவே முடியாது என்ற நிலையில் மனம் எப்படி இருக்கும்?
திடீரென பார்வை இழப்பது ஒருபுறம். ஆனால், இதோ, விரைவில் நான் முழுமையாகப் பார்வையை இழந்துவிடுவேன் என ஒவ்வொரு நாளும் பயந்து, பயந்து வாழ்வது நினைக்கவே கஷ்டமாக இருக்கிறதல்லவா?
சாருதத்தா கஷ்டப்படவில்லை. திட்டமிட்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டார். இதோ அவர் சாதனைகள் சில:
2000 2004 முடிய தேசிய செஸ் சாம்பியன்
2001 பிரெய்லி ஆடியோ, புத்தகம் பத்தின் ஆசிரியர்
பார்வையற்றோர் விளையாட புதிய எளிய செஸ்போர்டு கண்டுபிடிப்பு
ஜனாதிபதி விருது
பார்வையற்றோருக்கான இந்திய செஸ் சங்க செயலர் மற்றும் சர்வதேச துணைத்தலைவர்
இவரால் முடியும்போது, நம்மால் முடியாதா? முடியும்Ð… காத்திருங்கள்.
-தொடரும்