“சும்மா இருப்பதே சுகம்” என்பார்கள். நம்மால் சில வினாடிகள் கூட சும்மா இருக்க முடிவதில்லை. பரபரவென எதையோ செய்யத் துடிக்கிறோம். மனதில் ஓயாத எண்ண ஓட்டங்கள். தேவையில்லாமல் பிறர் விஷயத்தில் தலையிடுவது, வீணான கவலை, பயம், அவசரம், பதட்டம், டென்சன் என்று உணர்ச்சிக் கொந்தளிப்பால் தவிப்பு. முடிவு செய்ய முடியாமல் சிந்தனை தெளிவில்லாமல் படும் சங்கடம். இதனால் ஏற்படும் குழப்பம். இப்படிப் பல காரணங்கள்.
எங்கே அமைதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்? என்ற தவிப்பு. அமைதி என்பது கடைச்சாக்கல்ல, காசு கொடுத்து வாங்குவதற்கு. அந்த அமைதி உங்களிடமே தான் இருக்கிறது. அந்த உள்ளார்ந்த அமைதியை அனுபவிக்க முடியாமல் பல்வேறு காரணங்கள் திரையிட்டு மறைத்துள்ளன.
பித்தளை பாத்திரத்தில் களிம்பு ஏறியது போல உங்கள் மனதில் உள்ள அமைதியை உணர்ந்து அனுபவிக்க முடியாமல் மறைத்திருக்கும் திரையை விலக்கிவிட்டால், கதவைத் திறந்து வைத்தால் இதமான பூங்காற்று உள்ளே வருவது போல அமைதி பூத்துக் குலுங்குவதைக் காணலாம்.
உங்கள் சுமை வருவதற்கான வழிகளை அடைத்துவிடுங்கள். அப்போது அந்த அமைதியில் திளைத்து அனுபவிக்கலாம். அதற்கான வழிகள்.
மற்றவர் விஷயத்தில் வீணாக மூக்கை நுழைக்காதீர்கள். கருடா சௌக்கியமா? என்று நாகம் கேட்டது. கருடன் சொன்னது. அவரவர் இருக்குமிடத்தில் அவரவர் இருந்தால் அனைவருமே சௌக்கியம் என்றது. இது தான் உண்மை.
நாம் ஏதோ மற்றவர்களுக்கு ஆலோசனை கூறக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று நினைத்து, அவர் கேளாமலேயே ஆலோசனை கூற முற்படும்போது தான் பிரச்சனையே எழுகிறது. ஏன் தான் அவருக்கு யோசனை சொல்கிறோம் என்று நாமும் வருந்துகிறோம். அவருக்கும் எரிச்சல் வருகிறது. இது தேவையா?
ஒருமித்த கருத்து என்று எதுவும் இல்லை. அதனால் தான் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கூட்டம்போட்டு விவாதிக்கும்போது, பெரும்பான்மையாளரது (மெஜாரிட்டி ஒபினியன்) கருத்தை ஏற்றே தீர்மானம் போடுகிறோம்.
சில சமயங்களில் ஒரு முடிவிற்கு வர முடியாமல் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதும் உண்டு. Consensus என்று எதுவும் இல்லை. கணவன் மனைவிக்கிடையே ஒருமித்த கருத்து இல்லையே. அவரவர் வழி, அபிப்ராயம், சிந்தனை, முடிவு வேறு வேறாகத் தானே இருக்கிறது Let Us Agree to Disagree என்பதுவே சரியான அணுகுமுறை.
ஆண்களும், பெண்களும் அவரவர் கருத்துப்படி தான் நடக்கிறார்கள். என்னுடைய கருத்தே சரி என்று வலியுறுத்துவதாலேயே பிரச்சனை எழுகிறது. மாற்றுக் கருத்துக்கு மதிப்பு கொடுத்து, விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போனால் பிரச்சனையே கிடையாது.
மன்னிப்போம், மறப்போம். மன்னிப்பதும், மறப்பதும் தெய்வ குணம். யேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டபோது, “பரம பிதாவேÐ அவர்கள் செய்வது இன்னதென அறியமாட்டார்கள். அவர்களை மன்னித்தருள்வாயாகД என்று பிரார்த்தனை செய்தவர்.
அந்தத் துன்பத்தை அவர் அமைதியாக ஏற்றுக்கொண்டதால், தனக்கு தீங்கு இழைத்தவர்களையும் அவர் மன்னித்ததால் அவர் “நிம்மதி” குலையவில்லை. இதுதான் “சமத்துவம் யோக முச்யதே” என்பது. இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக ஏற்றுக்கெள்ளும் மனநிலையே அமைதிக்கான ஊற்றுக்கண்ணாகும்.
நம்மை யாராவது குறை சொன்னாலும், நமக்கு யாராவது தீங்கு செய்தால் அதனை நம்மால் எளிதில் மறக்க முடிவதில்லை. அவரை மன்னிப்பதும் சாத்தியமில்லை. இதுவே நமது மன உளைச்சலுக்குக் காரணம். அமைதி அதனால் பறிபோகிறது.
அங்கீகாரத்திற்காக நாம் ஏங்குவதாலும் நம் மன அமைதி பறிபோகிறது. பாராட்டும், பரிசும் எதிர்பார்க்கிறோம். அது கிடைக்காவிடில் துன்பப்படுகிறோம். ஏமாற்றத்தில் திளைக்கிறோம்.
பிறருடைய அங்கீகாரத்தை (Recognition) எதிர்பார்த்து நாம் ஏன் செய்ய வேண்டும். நம் பணியை கர்ம சிரத்தையுடன், நல்ல முறையில் நிறைவேற்றினால் அதற்குண்டான பலன் நமக்குக் கிடைக்கும் அல்லவா?
நமக்கு கிடைக்க வேண்டிய புகழை, கௌரவத்தை யாராலும் தட்டிப் பறிக்கவும் முடியாது.
பொறாமை எனும் தீயில் வெந்து மடிய வேண்டாம். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னா சொல் இவை நான்கும் இழுக்கா இயன்றது அறம் என்பது வள்ளுவர் வாக்கு.
பொறாமை உங்கள் அமைதியைக் குலைத்துவிடும் பெரிய அரக்கன். உங்களுடைய துரதிர்ஷடத்துக்காக மற்றவர்களைப் பழிக்க வேண்டாமே. என்ன கிடைக்க வேண்டுமோ, எப்படி கிடைக்க வேண்டுமோ அது உரிய நேரத்தில் உங்களுக்குக் கிடைத்தே தீரும். இதுதான் இயற்கை நியதி.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள். இங்கிதம் தெரிந்து பேசுங்கள், பழகுங்கள், மனதில் உள்ளதையெல்லாம் அப்படியே கொட்டிவிடாமல் சிந்தித்துப் பேசுங்கள்.
உங்களால் ஒருபோதும் இயற்கைச் சூழலை மாற்ற முடியாது. ஆற்றுப்போக்கோடு அனுசரித்துப் போனால் கரை சேரலாம். அனுசரித்துப் போகும்போது எதிரான சூழல்களும் கூட சாதகமானதாக அமையும்.
தீர்க்க முடியாத பிரச்சனைகளை மனப்பூர்வமாகக் கற்றுக்கொள்ளுங்கள். “God give me the wisdom to discriminate my problem whether it is soluable or not. If I can find the solution I can. If I can’t let me accept it” என்று யேசு பிரான் இறைவனிடம் பிரார்த்திக்கின்றார். இதுதான் உண்மை.
தீர்க்க முடியாத பிரச்சனைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டால் அது நம்மை பாதிக்காது. மன அமைதியும் கெடாது.
அதை மறந்துவிட்டு வேறு வேலைகளில் நம் கவனத்தைத் திருப்பினால் கவலைப்படத் தேவையில்லை. செய்ய முடியாத வேலைகளை வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொண்டு பின் வருந்துவானேன்.
தேவையில்லாத வேலைகளை இழுத்துப் போடாமல் இருந்தாலே அமைதியாக இருக்க முடியும்.
தியானம் பழகுங்கள். அன்றாடம் காலை, மாலை 10 நிமிடமாவது தியானத்தில் ஆழ்ந்திருப்பீர்களானால் உங்கள் மனம் அமைதியுற்று, எண்ண ஓட்டங்கள் குறைந்து நீங்கள் நிம்மதியாக இருக்க முடியும்.
உண்மையான ஆர்வத்துடன் தொடர்ந்து தியானம் செய்து வந்தீர்களானால் அதன் பலன் வெகுவாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்.
மனதை எப்போதும் நல்ல விஷயங்களில் திருப்புங்கள். அதனை வேண்டாத விஷயங்களைப் போட்டு வைக்கும் குப்பைத் தொட்டி ஆக்காதீர்கள்.
நமக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி நம்மை செயல்படுத்துகிறது என்பதை உணர்ந்து அறிந்து அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோமானால் அவை நமக்குத் தொல்லை தராது.
உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளைச் செய்யுங்கள். நம்பிக்கையே உயிர்நாடி பொறுமையும், நம்பிக்கையும், சகிப்புத்தன்மையும் அளப்பறிய நன்மை பயக்கும்.
மெல்ல முடியாததைக் கடிக்காதீர்கள். இயன்றது போதும் என்று நினைவில் கொள்ளுங்கள். வீணாக ஏன் சுமைகளை உங்கள் தோள் மீது சுமக்கிறீர்கள். உங்களால் செய்ய முடிந்ததைச் செய்யுங்கள்.
நல்லுணர்வு, நற்சிந்தனை, நற்செயல், இறைபக்தி, ஸ்வாத் யாயம் என்ற நல்ல நூல்களைப் படித்தால், நம்பிக்கை தரும் நல்ல விஷயங்களிலேயே கவனத்தைச் செலுத்தும்.