உனக்குள்ளே உலகம்
தனது மகனை காணவில்லை என்று பெற்றோர்கள் தேடினார்கள். விடிந்ததும் மணிகண்டனின் பிணத்தைத்தான் அவர்களால் பார்க்க முடிந்தது. மோப்ப நாய் வரவழைத்து மாடசாமிதான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டான் என போலீசார் உறுதிசெய்தபின் மாடசாமியை கைதுசெய்தார்கள்.
இந்தச் சம்பவம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான நிகழ்வாக அமைந்துவிட்டது. பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாது என்று அரசு உத்தரவு இருந்தபின்பும் அதனைமீறி பள்ளிக்கு செல்போனை கொண்டுவந்ததால்தான் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது.
ஒரு தகவலை ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரிமாறுவதற்கு இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக ‘செல்போன்’ மாறிவிட்டது. ஆனால் 14 வயது நிரம்பிய அந்த இரண்டு சிறுவர்கள் தினந்தோறும் அப்படி என்னதான் தகவல்களைப் பரிமாறிக்கொண்டார்கள்? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
செல்போன் வைத்திருப்பதால் தனது மரியாதை அதிகரிக்கும் என்றும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்றும் நம்பி செல்போனை தூக்கிக்கொண்டு அலைந்து திரியும் சில இளவட்டங்கள் எதற்காக செல்போன் வைத்திருக்கிறோம்? என்பதை புரிந்துகொள்வதில்லை. கண்டபடி எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அனுப்புவதும், தேவையில்லாத புகைப்படங்களை எடுத்து செல்போனுக்கு சேமித்து வைப்பதும், ஆபாச காட்சிகளை அங்கொன்றும், இங்கொன்றுமாக செல்போனுக்குள் அடுக்கி வைத்துக்கொள்வதும் நல்ல மாணவர்களுக்கு அழகல்ல என்பதை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் தௌல்வாக புரிந்துகொள்ள வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பருவம் இனிமையான இளமைப் பருவம். இந்தப் பருவத்தில்தான் பணத்தை சம்பாதிக்காமல் தாராளமாக செலவு செய்ய இயலும். இதனால் “வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே” என்று கல்வி நிலையங்களில் பயிலும் காலத்தை ஒரு திரைப்படப் பாடல் விளக்குகிறது. அந்தப் பாடல் –
பசுமை நிறைந்த நினைவுகளே; பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே; பறந்து செல்கின்றோம் குரங்குகள் போலே மரங்களின் மேலே ; தாவித் திரிந்தோமே
குயில்களைப்போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே வரவில்லாமல் செலவுகள் செய்து; மகிழ்ந்திருந்தோமே வாழ்க்கை துன்பம் அறிந்திராமல்; வாழ்ந்திருந்தோமே
– என்று கல்வி பயிலும் காலத்தின் மகிழ்வை படம்போட்டுக் காட்டுகிறது.
இளமைப் பருவத்தில்தான் வாழ்க்கையின் துன்பத்தை அறியாமல் வாழ இயலும் என்பதை அந்தப் பாடல் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் தற்போது நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி படித்த மாணவன் மதூர்ஜியா. இவர் 22 வயது இளைஞர். அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவரான இவர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவந்தார்.
இவருக்கும் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள இவரது ஊரைச்சேர்ந்த நவஜோத்தங்காடி என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை உருவாகிறது.
நவஜோத்தங்காடி நன்றாகப் படிக்காமல் அரியர்ஸ் வைத்திருந்தார். அவர் அரியர்ஸ் தேர்வை எழுதி வருவதைப்பார்த்து மதூர்ஜியா கேலி செய்ததார். இதனால் அவரை பழிவாங்கத் திட்டமிட்டான் நவஜோத்தங்காடி. தீபாவளிக்கு முந்தைய தினம் மது நன்றாக அருந்தி போதையில் இருந்த நவஜோத்தங்காடி தனது ஊர்க்காரரான மதூர்ஜியாவை சண்டைக்கு இழுத்து வாக்குவாதத்தை உருவாக்கினார் முடிவில் கைகலப்பு ஏற்பட்டது. தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் மதூர்ஜியாவின் மார்பு உட்பட பல இடங்களில் குத்தினான் நவஜோத்தங்காடி. துடிதுடித்து இறந்துபோனான் மதூர்ஜியா. இந்த திடுக்கிடும் சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததுதான் வேதனையான தகவலாக இருக்கிறது.
தன்னோடு படிக்கும் மாணவர் கேலி செய்தார் என்பதற்காக அவரது உயிரைப்போக்க திட்டமிடுவதும், அதற்காக அதிகமாக மது அருந்திவந்து நிலைத்தடுமாறி கொலைசெய்வதும் இளைஞனுக்கு அழகல்ல.
தனக்கு பிடிக்காத எந்த செயல் நடந்தாலும் வன்முறையில் ஈடுபட்டு அதற்கு தீர்வுகண்டுவிடலாம் என்கின்ற மனோபாவத்தோடு சில இளைஞர்கள் இருப்பது வேதனைக்குரிய விஷயமல்லவா!
நல்லொழுக்கங்களை வளர்க்கவேண்டிய கல்வி நிலையங்களில் அவ்வப்போது நடக்கும் சில நிகழ்வுகள் இளைய சமுதாயத்தின்மீது படிந்த கறையாக அமைந்துவிடுகிறது.
“இன்றைய இளைஞர்கள்தான் நாளைய மனித வளங்கள்” – என்று இந்திய நாட்டைச்சேர்ந்த இளைஞர்களை அனைவரும் நம்புகிறார்கள். நல்ல ஒழுக்கங்களோடுகூடிய கல்விதான் மனித வளத்தை நாட்டில் உருவாக்குகிறது. “நாட்டின் அமைதிக்கு நல்லொழுக்கம்தான் அடிப்படை” என்பதை உணர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் “நல்லொழுக்கம்” குறித்து குறிப்பிடும் கவிதை இதுதான்.
எங்கே இதயத்தில் அறவொழுக்கம் இருக்கிறதோ
அங்கே செயல்பாட்டில் அழகு இருக்கும்.
எங்கே செயல்பாட்டில் அழகு இருக்கிறதோ
அங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கும்.
எங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கிறதோ
அங்கே தேசத்தில் ஒழுங்கு இருக்கும்.
எப்போது தேசத்தில் ஒழுங்கு இருக்கிறதோ
அப்போது உலகில் அமைதி நிலவும்.
டாக்டர் அப்துல்கலாமின் நினைவுகளை நனவாக்க இன்றைய இளைஞர்கள் அனைவரும் சபதம் எடுத்து நிறைவேற்றவேண்டியது இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகும்.
0 comments Posted in Articles